முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

இரத்தம் சுத்தியாக வழிபாடு

பஞ்சமி திதியன்று வானியற் பூர்வமான சக்திகள் நன்கு விருத்தி ஆகும் நாளாதலின், மரங்கள், செடிகள், கொடிகளில் இருந்து சந்திர ஒளஷதாம்பதி சக்திகள் உற்பத்தியாகும். எனவே இந்நாளில் தாவரங்கள், மரங்கள் நிறைந்த ஆலய நந்தவனத்தையும் சேர்த்து ஆலயத்தையும் வலம் வருதல் நலம.
ஒளஷதம் என்றால் நன்மருந்து என்ற பொருள் அல்லவா! கிரகங்களில் மனசக்திக்கு அதிபதியான சந்திர மூர்த்தியே, ஒளஷத மூர்த்தியாகவும் போற்றப் பெறுகின்றார். சந்திர மண்டலத்தில் மூலிகைகள் நிறைய உண்டு. இவற்றின் சக்திகள் சந்திர ஒளிக் கிரணங்கள் மூலமாக பூமியை அடைகின்றன. சந்திர ஒளியில் மலரும் பூக்கள், மூலிகைத் தாவரங்கள் நிறையவே உண்டு. சந்திரத் தரிசனத்தைத் தினந்தோறும் பெறுதல் வேண்டும்.

ஸ்ரீஆகாசபுரீஸ்வரர் திருத்தலம் கடுவெளி

சிருஷ்டி காலத்தின்போது ஸ்ரீபிரம்ம மூர்த்தி, நாரதர் போன்று மானசீக புத்திரர்களைக் கர்த்தமப் பிரஜாபதிகளாக உருவாக்கினார் அன்றோ! இவர்கள் பிரம்மருக்குத் துணையாக இருந்து சிருஷ்டி பரிபாலனத்தை தொடர வேண்டும் என்பது பிரம்ம சிருஷ்டியின் நியதியாகும். ஆனால் இறைஞானத்தை பகிர்ந்து கொண்டிருந்த அவர்கள், இல்லறத்தில் நாட்டம் காட்டாது, முழுமையான, பரிபூரணமான தெய்வீகத்தில் ஈடுபடவே விரும்பினர்.
இவர்களுக்குப் பஞ்சமி கூடிய வெள்ளியில், மகத்தில் பிரவேசித்த சந்திர மூர்த்தியே நேரில் வந்து உபதேசம் அளித்தார். பிரஜாபதிகளுடன் வாக்குவாதம் கொண்டமையால், பிரம்மருக்கும் சிறிது பிரம்ம ஞானம் மறையலாயிற்று. எத்தனையோ கோடி லோகங்களில் அமிர்த கலயத்தில் பூரித்திருந்த ஜீவ அணுக்கள் யாவும், பிரம்ருடைய ஞானமயக்கத்தால் சில வகைச் சக்திகளை இழந்தன. இதன் பிறகு சூரிய, சந்திர மூர்த்திகள் அவற்றை தென்னை, அசோக மரம், பனை போன்ற உயரமான வானியல் தாவரங்களில் வைத்து, பூமியின் ஆகர்ஷண விசைக்கு ஈடாக வைத்துப் பூஜித்தனர்.
இவ்வாறு பூமியின் ஆகர்ஷண விசை மயங்குவது ஆகர்ஷண மயக்கமாகும். தென்னை, பனை சக்திகள்தாம் இவற்றை ஈடு செய்யும். ஆகாய யோகினிப் பூர்வ நாட்களில் மகச் சந்திர வைபவத்தில் இவை பூரிப்பதால், தென்னை, பனை போன்ற உயரமான தல மரங்கள் உள்ள ஆலயங்களிலும், ஸ்ரீஆகாசபுரீஸ்வரர், ஸ்ரீஆகாச விநாயகர் சிதம்பரம் போன்ற ஆகாச சக்தி ஆலயங்களிலும், தென்னை, பனை மர வஸ்துக்களால் (தேங்காய், இளநீர், நுங்கு, பனை வெல்லம்) மகம் திங்கள் கிழமை கூடும் நாட்களில் பூஜித்து, நன்கு உயரமாக இருக்கும் ஏழைகளுக்குத் தேவையான ஆடைகள், காலணிகளை அளிப்பது விசேஷமானது.
அசுத்தமான ரத்த வகை நோய்களால் பாதிப்படைந்திருப்போர் நல்ல நிவாரணம் பெற இவ்வழிபாட்டுப் பலன்கள் உதவும். அகங்காரம், ஆணவம் எனும் மாயையால் அல்லல்படுவோர் பணிவு பெறவும் உதவும்.

வாழையில் வளரும் அக்னி சக்திகள்

கத்ரி என்பது விசேஷமான கதிரவடிகா எனும் அக்னிக் கதிர்கள் பூரிக்கும் உஷ்ண தட்ப வெப்ப நிலைக் காலமாகும். இதனால்தான் ஆதவ மஹா பிரபுவான பாஸ்கரனெனும் சூரிய மூர்த்தி, கதிரவன் ஆனார். சூரிய மூர்த்தி, துர்க்கா தேவியை வேண்டி, ஆதிசிவனுக்கு ஆஹூதி அளியாத தட்ச யாகத்தில் பங்கு பெற்றமையால் சூரிய மூர்த்தி மாசுண்ட தம் கிரணங்களைப் பரிசுத்தமாக்கிக் கொண்ட தலங்களுள் ஒன்றே கதிராமங்கலம் ஆகும். வனதுர்க்கை அருளும் தலம். துர்வாசர் துர்க்கா தரிசனம் பெற்ற தலம். கத்ரி காலத்து கதிரவடிகா சக்திகள் மங்கள சக்திகளாக ஆகும் அற்புதத் தலமாக கதிரமாங்கலம் எனவும் ஆயிற்று. கும்பகோணம் அருகே உள்ள சுக்கிர ஸ்தலமான கஞ்சனூர் அருகே கதிராமங்கலம் உள்ளது. கத்ரி நாட்களில் இங்கு மும்மூன்றாக வாழை இலைகளில் படையல் பூஜை நடத்துதலால், கண் பார்வை மங்கி இறந்த மூதாதையர்களுக்கு நன்னிலை கிடைக்கப் பரிகாரம் கிட்டும்.
அக்னி வகை நட்சத்திரங்களில் பூரம், விசாகம், கார்த்திகை, ரோஹிணி, பரணி, அஸ்வினி போன்ற அக்னி மண்டல நட்சத்திரங்களும் உண்டு. குறித்த அக்னி மண்டல நட்சத்திரங்களில், கதிரவ மூர்த்தி சஞ்சரிக்கும் காலமே கத்ரி ஆகும்.
இத்தகைய விசேஷமான அக்னிக் கிரணங்களில் பூரித்து நிறையும் அக்னி சக்திகளை ஜீவ வாழ்க்கைகளில் பயன்படுத்தும் முறைகளும் உண்டு. பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம் போன்றவை பலத்த அக்னி சக்திகளை பூண்டவை ஆகும். பொதுவாக கத்ரி நாட்களில் தாம் இத்தகைய அக்னி பூர்வமான பாணப் பயிற்சிகள் நடைபெறும், தகிக்கும் வெயிலில் வெற்றுக் கால்களுடன் பாறை, கட்டாந் தரை, களிமண், செம்மண், போன்ற பல்வகை பூமிகளில் நின்று இவ்வகை பாணப் பயிற்சிகளைக் கத்ரி காலத்தில் ஆற்றுவர்.
இவை யாவும் பண்டைய யுகங்களுக்கானவை ஆயிற்றே, கலியுகத்திற்கு நடைமுறைக்கு ஏற்பு இல்லாத விளக்கங்களை அறிந்து யாது பயன்? என்று எண்ணிடலாம். அக்னி எவ்வகையில் கலியுகத்தில் எல்லாம் வாழ்க்கை முழுதும் பயனாகிறது என ஓரளவேனும் அறிந்தால்தானே, கலியுகத்திற்கான இவற்றின் பலன்களை உணர்தல் முடியும்.
கலியுகத்தில் நாகாஸ்திர சக்திகள் பலவும் நாக தோஷங்கள், கால சர்ப்ப தோஷங்களை நீக்க உதவுவதாகும். எனவே கத்ரி காலத்தில், நாக லிங்க சக்தி ஆலயங்களில் வழிபட்டு வருவதால் இவற்றில் திரளும் அருட் பலன்கள் நாக தோஷ நிவர்த்திக்கு நன்கு உதவும்.  
பலவிதமான தாவரங்களுக்கும் பல்வகை அக்னி சக்திகள் உண்டு. உணவு சீரணம் அடைவதும் அக்னி சக்திகளால்தானே! சித்த, ஆயுர்வேத முறைகளில் உஷ்ணம், சீதளம் (குளுமை) என்ற இரு பகுப்பு உண்டு. ஒரே நாளில் மூன்று நட்சத்திரங்கள் வந்தமையும் நாளில் அபூர்வமான நட்சத்ராக்னி சக்திகள் வானில், உடலில், மனதில் பூரிப்பதை நன்கு உணரலாம். இந்நாளில் நாடிகளும் மாறுபடும். எனவேதான் மூன்று நட்சத்திரங்கள் வரும் நாளை நாடி மயக்க நாள் என மருத்துவத் துறையில் உரைப்பர்.
கத்ரியின் நிறைவில் மூன்று நட்சத்திரங்களை ஒரே நாளில் காணுவது நல்ல விசேஷமான பலன்களைத் தருவதாகும். இந்நாளில் அக்னீஸ்வரர், அக்னி வீரபத்திரர், அகோரேஸ்வரர், தீப்பாய்ந்த நாயகி , ரெளத்ர துர்க்கை, அக்னி மூர்த்தி, தீயத்தூர், அக்னீஸ்வரம் போன்ற அக்னி சம்பந்தமான தெய்வ ஆலயங்களில், தலங்களில் பசு நெய் விளக்குத் தீபங்கள் ஏற்றி, வாழை இலை மேல் வைத்து வழிபடுதல் மிகவும் விசேஷமாகும், வாழை இலைக்குக் குறித்த வகை அக்னி சக்திகளை ஈர்த்துக் கிரகிக்கும் தன்மைகள் நிறைய உண்டு.
கத்ரி நிறைவில் மூன்று முழு வாழை இலைகளில் நிறைய அன்னம் படைத்து சுவாமிக்கு, பித்ருக்களுக்கு, பசுமாதாவிற்கு எனப் படைத்து, முதலிரண்டை பசு, ஏழைக்கு அளித்து, மூன்றாவதை பிரசாதமாக குடும்பத்தார் உண்ணல் வேண்டும்.

மாங்கல்ய தோஷங்கள் மறைய ...

ஞாயிறன்று சூரிய பகவானுக்கு உரிய சப்தமித் திதி கூடும்போது மிகவும் சக்தி வாய்ந்த கிரண ஆகர்ஷண சக்திகள் நிறையும் என்பது உண்மை.
புவி ஈர்ப்புப் போல, சூரிய கிரணங்களுக்கும் மகத்தான ஈர்ப்பு சக்திகள் உண்டு. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள (பூலாங்குறிச்சி) காஞ்சாத்து மலை, இப்பூவுலகில் அபூர்வமான சூரிய சக்திக் கிரணங்களைப் பெறும் தலமாகும். அபூர்வமான சூரிய கிரணங்கள் படியும் தலம். காசிக்கு நிகரான தர்ப்பணச் சக்தித் தலம். அபூர்வமான தர்பைகள் விளையும் தலம். சூரிய, சந்திர ஒளி படாத அற்புதமான மலைச் சுனைத் தீர்த்தம் உள்ள தலம்.
ஞாயிறு மற்றும் அமாவாசை தோறும் இங்குள்ள சூரிய, சந்திர ஒளி படாத அற்புதமான மலைச் சுனைத் தீர்த்தத்தில், தாமரை இலை மேல் தர்ப்பணச் சட்டம் அமைத்துத் தர்ப்பணம் அளிப்பது, வாழ்வில் பெறுதற்கரிய அற்புதமான பலன்களைத் தருவதாகும். இது தந்தை வழி மூதாதையர்களின் மேன்மைக்கும் மிகவும் உதவும்.
சூரிய மாயை சக்திகள் நிறைய உண்டு. மாயை எனில் தவறாகப் பொருள் கொள்ளலாகாது. இது இப்படியே என அனுமானிக்க முடியாத இறைப் படைப்புகளில் சூரிய கிரணங்களும் அடங்கும். சூரிய கிரணங்கள் வளையுமா? நிச்சயமாக! ஒளிக் கதிர்கள் நேர்கோட்டில்தான் செல்லும் என்பது, வழக்கம் போல், விஞ்ஞானத்தின் தவறான (தடுமாறும்) தத்துவமாகும். இதுவே விஞ்ஞானத்திற்கான மாயை! வருங்காலத்தில் விஞ்ஞானிகள் ஒளிக் கிரணங்கள் வளையும் என உரைப்பார்கள். இதனை உத்தமச் சித்தர்கள் பல கோடி யுகங்களுக்கு முன்னேயே உரைத்து விட்டார்கள். வீட்டினுள், பாத்திரத்திற்குள் எப்படி வெளிச்சம் வருகிறது? எனவே, வளைந்து செல்லும் ஒளிக் கிரணங்களும் உண்டு.

ஸ்ரீஜகதீஸ்வரர் ஆலயம்
மணமேல்குடி

ஞாயிறு முழுதும் சூரிய பூஜைகளை ஆற்றுதல் கண் சக்திகளை நன்கு விருத்தி ஆக்கும். ஞாயிறு, தலைஞாயிறு, கதிராமங்கலம், சூரியனார் கோயில் மற்றும் சூரிய கிரணங்கள் லிங்கத்தின் மேல் படியும் சூரிய சக்தித் தலங்களிலும், சப்தமி கூடும் ஞாயிறன்று, சூரிய நமஸ்கார யோகப் பயிற்சிகளுடன் வழிபடுதல், அபூர்வமான தீர்க தரிசனப் பார்வை சக்திகளைப் பெற்றிட உதவும். ஒரு மைல் தூரத்தில் இருந்தே தொலைவில் வரும் எதனையும் அறிய உதவும். தொலை தூர வண்டி நம்பரைக் கூட எளிதில் உரைத்திடலாம். ஆனால் இத்தகைய சக்திகளை, சுயநலமாக, விளம்பரத்திற்காக அன்றி, உத்தம சத்குருவின் அருளுடன் வாழ்வில், நன்கு ஆன்மீகப் பூர்வமாகப் பயன்படுத்திடும் வழிமுறைகளைப் பெற்றுப் பயனுற வாழ வேண்டும்.

மேலும் தந்தை வழிப் பித்ருகாரகத்துவராக ஞாயிறு மூர்த்தித் துலங்குவதால், வாரத் தர்ப்பணமாக, ஞாயிறன்று ஒரு தாமரை இலையை ஒரு பாத்திரத்தில் நீரில் வைத்து ஏழு நிமிடங்கள் சூரிய ஒளி இதில் படுமாறு வைத்துக் கொண்டு இதில் தர்ப்பணம் அளிப்பது, வாழ்வில் கண் பார்மை மங்கி அவதியுறும் நிலை வாராது தற்காக்கும்.
மேலும், சற்று வெயில் கிரணங்கள் உடலில் படுமாறோ, வெட்ட வெளியில், பலகை, வஸ்திரம், தர்ப்பைப் பாய், கம்பளி, ஆரஞ்சு நிறத் துணி வகைகள் போன்ற ஏழு வகை ஆசனங்களை வைத்து, இவற்றின் மேல் அமர்ந்து, தாமரை இலையில் தர்ப்பச் சட்டம் வைத்து, 24 தலைமுறைகளுக்கு, ஏழு இளநீர்களைச் சாட்சியாக வைத்துத் தர்ப்பணம் அளித்தல் மிகவும் விசேஷமானது. ஏழு இளநீர்களையும் பிள்ளைகளுக்குத் தானமாக அளித்து, ஆலயத்தில் சப்தமாதர்களை வணங்கிப் பிறகு, தனித்துச் சந்நதி கொண்டருளும் சூரிய மூர்த்தியையும் ஏழு முறை வலம் வந்து வணங்குவதால், அதர்மமான முறையில் வாழ்ந்து அபவாதங்களுடன் இறந்த தந்தை வகைத் தலைமுறையினர் ஓரளவு பரிகார வழிகளைப் பெற உதவும்.

ஒளிபடா தீர்த்தம்
வள்ளிமலை

திருமணங்களில் தாலி கட்டும் வைபவம் ஆலயத்தில் இறைவனின் திருச்சன்னதியில் நிகழ்வதுதான் சிறப்பானது. ஏனெனில், முறையான மந்திரங்கள், ஹோமங்கள் நிகழாது அல்லது இவை குறைந்த நிலையில் நடைபெறும் திருமணங்களில் ஏற்படும் அனைத்து விதமானத் தோஷங்களையும் நிவர்த்தி செய்யவும், நல்ல நேரத்தில் பொன் உருக்கப் பெறாது, நன்முறையில் பூஜிக்கப்படாத மாங்கல்யத்தில் நிறைந்திருக்கும் பலவிதமானத் தோஷங்களை நிவர்த்தி செய்யவும் இறைத் திருச்சந்நதியின் முன் நிகழும் திருமணத்தில்தான் நன்முறையில் பரிகாரம் பெற இயலும்.
*மேலும் பித்ரு மூர்த்திகளும், மஹரிஷிகளும், யோகிகளும், சித்புருஷர்களும் எப்போதும் வலம் வருகின்ற புனிதத் தலங்களாக ஆலயங்கள் நிகழ்வதால், ஆலயத்தில் திருமணம் நடைபெறும்போது, இறைப்பெரும் பாக்கியமாக ஏதேனும் ஒரு மஹரிஷியின் திருப்பார்வை பெற்றால் கூடப் போதுமே, மகத்தான ஆசீர்வாதங்களும், தெய்வீக சக்திகளும் வாழ்வில் பெருகி வருமல்லவா! இத்தகைய ஆசிகளைப் பெற சூரிய பூஜைகள் உதவும்.
சூரிய மண்டலத்திலேயே நிலை நின்று, சூரிய பகவானிடம் இருந்து நேரடியாக வேத மந்திரங்களின் உபதேசங்களைப் பெற்ற ஸ்ரீயாக்ஞவல்கிய மாமுனிக்கு ஞாயிறு தோறும் 24 முறை அர்க்யம் அளித்து, 24 தலைமுறைகளுக்கும் மேற்கண்டவாறு தர்ப்பணம் அளித்து, சிட்டுக் குருவிகளுக்கு உணவளித்து, நல்வகையில் பித்ரு ஆசிகளைப் பெற்று ஞாயிறைப் போற்றுங்கள்!

மனோ தைரியம் பெறுக

  எட்டு என்ற தேதியில் மட்டுமே சனீஸ்வரருக்கு உரிய எட்டின் சக்திகள் பரிணமிக்கலாகும் என்பதன்று. எட்டாவது திதியான அஷ்டமி மற்றும் கரிநாள், பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற சனி கிரகத்திற்கான நட்சத்திரத் தினங்களிலும் எட்டின் சக்திகள் எட்டுத் திக்குகளிலும் பரிமளிக்கும் வண்ணம் சிறப்படைவதும் உண்டு. இவை எல்லாம் தக்க சத்குரு மூலமாக அறியப் பெற வல்லனவாம். நீங்கள் இதனை அறிவதும் எங்கோ உறையும் உங்கள் சத்குருவின் மூலமாகத்தான்!
அடியேனுக்குரிய சத்குரு யாரென்று தெரியவில்லையே! எனப் பலரும் சொல்லிக் கொண்டு இருப்பதுண்டு. இவ்வாறு எண்ணம் வந்திடில், தங்களுக்கு உரிய சத்குருவை அறியும் தருணம் வந்து சேரவில்லை என முதலில் அறிக! இவ்வற்புதமான தருணத்தை எவ்வாறு துரிதப்படுத்துவது!
அவரவருக்கு உரிய சத்குரு எந்த லோகத்திலும் இருந்து வழிகாட்டிடலாம். அவரவருக்குரிய சத்குருவைக் கலியுகத்தில் சுட்டிக் காட்டினால், அவர் எல்லோரும் எண்ணுவதான துறவி வடிவில் மட்டுமல்லாது, பசு, கிளி, ஆமை என்பதோடு, சம்சாரி, பாடகர், உபந்யாசகர், வியாபாரி, பிச்சைக்காரர் என எத்தகைய மனித வடிவில் வேண்டுமானாலும் வந்திடலாமே! இதனை மனம் ஏற்குமா?  
சத்குருவிடம் பலாபலன்களையே நாட வேண்டும் என்றில்லாது, இன்ப, துன்பங்கள், கஷ்ட, நஷ்டங்கள் என அனைத்திற்கு ஊடேயும், மனித வாழ்வில் நம்மை வழி நடத்திச் செல்பவரே சத்குரு என்பதாக, சத்குருவிடம் ஆழ்ந்த நம்பிக்கை வலுப் பெறுகையில்தான் சத்குருவின் அரவணைப்பு தானே வந்தடையும். அதுவரையில், சத்குருவின்றிக் கடைத்தேற இயலாது எனும் வேத சத்தியம் உடல், மனம், உள்ளத்தில் ஊறி நன்கு வலுப் பெற வேண்டும்.  
பிரதோஷ நாள் தோன்றக் காரணங்கள் கோடி கோடியாய் உண்டு. ஆனால் புராணங்கள் மூலம் நாமறியும் சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு இவைதாம் பிரதோஷ வைபவம் ஏற்படக் காரணமெனக் கொண்டுள்ளோம். பகுத்தறிவு விரிய, விரிய, மலர, மலரப் பலவும் பித்ருக்களின் ஆசியால் ஆத்ம விசாரப் பூர்வமாகப் புலனாகும். தக்க சத்குரு மூலம் அனைத்துமே உணரலாகும்.  
எட்டுத் திக்குகளிலும் சுழல்கின்ற சங்கு கிருஷ்ணருக்கு மிகவும் பரீதியானதாகும். அஷ்டமி திதி தினங்களில் ஸ்ரீகிருஷ்ண தரிசனம், மாலையில் நித்தியப் பிரதோஷத் தரிசனம், எட்டு முறை ஆலயத்திற்குச் சென்று சனைஸ்சரரரை வலம் வந்து வணங்குதல், இல்லத்தில் சந்தனம், அத்தர், ஜவ்வாது, புனுகு, கோரோஜனை, கஸ்தூரி, பச்சைக் கற்பூரம், குல்கந்துப் பன்னீர் ஆகிய எட்டும் கலந்த திரவியங்களால், மாலையில் நித்தியப் பிரதோஷ நேரத்தில் (4.30 மணி முதல் 6.30 மணி) அபிஷேக, ஆராதனைகளை ஆற்றி, குறைந்த பட்சம் எட்டுத் தொன்னைகள் நிறையவாவது அன்னதானமளித்தலால், கெட்ட செய்திகள் வருமோ என்ற பீதி அகலும். நமக்கு, நம் குடும்பத்திற்கு, நம் வேலைக்கு, நம் வருமானத்திற்கு ஏதேனும் ஆகி விடுமோ, என்ற பீதிகளுடன் வாழ்வோர் மனோ தைரியம் பெறவும் உதவும்.

நரம்புத் தளர்ச்சி நோய்களுக்கு நிவாரணம்

ஒவ்வொரு நொடியும் இறையருளால்தான் வாழ்கின்றோம் என்ற உத்தம எண்ணத்தோடு ஒவ்வொரு நொடியும் வாழ்வதே உண்மையான கடவுள் நம்பிக்கை!
அபிஷேக ஆராதனைகள் என்பவை, சுவாமியின் உருவங்களுக்காக மட்டுமல்ல, அவரவர் உள்ள சுத்திக்கானவையும் ஆகும். அபிஷேக ஆராதனைகளில், இவற்றுக்காக நீங்கள் செலவழிக்கும் தொகை, வாங்கும் திரவியங்கள், மூலிகைகளின் தன்மைகள் போன்ற அனைத்திலும் அபிஷேக, ஆராதனைகளின் பலன்கள் பல கோணங்களிலும் வந்து இணைகின்றன. எனவே, வாரம் ஒரு முறையாவது, வீட்டிலும், (பழமையான) ஆலயங்களிலும் அபிஷேக, ஆராதனைகளை ஆற்றி வாருங்கள்! இவற்றில் நிறைய மூலிகைகளைச் சேர்ப்பது மிகவும் விசேஷமானதாகும். மாதம் ஒரு முறையேனும் 108 மூலிகைத் திரவியங்களால் இறைமூர்த்திகளை ஆராதித்து, மூலிகா சக்திப் பலன்களைப் பலரும் பெறும்படி இறைச் சமுதாயப் பணிகளை ஆற்றிடுக!

சலசாரல் கோமுகம் திருநல்லூர்

முற்காலத்தில் அபிஷேகத் தீர்த்தம் ஆலயக் குளத்தை வந்தடையும் வகையில் நீர்த் தாரை வழிகள் அமைக்கப் பெற்று, ஆலயக் குளத்தை வந்தடையும்படி வைத்தமையால், இதில் நீராடுவோர்க்கு மூலிகா சக்திகள் அருட் சக்திகளாக வந்து கை கூடும். (கோமுகம் எனப்படும் அபிஷேக நீர்த் தாரை மூலம்) பூமியில் வந்து படியும் அபிஷேகத் தீர்த்த சக்திகள், பூமியடி நீரோட்டங்கள் மூலமாக ஊர், உலகை அடைகின்ற தெய்வீக ரகசியங்களைப் பலரும் அறியார். இவ்வாறு ஒரு சிறு அபிஷேக, ஆராதனை கூட, மகத்தான அகில உலக சேவையாக அமைவதைப் பலரும் அறியார்.
அதாவது நீங்கள் செய்கின்ற அபிஷேக, ஆராதனைகளின் பலாபலன்கள் பலரையும் சென்றடைகின்ற தியாகமயமான, சமுதாய இறைப் பணிகளால்தாம் உங்களுடைய குறைகள் தீர நல்வழி பிறக்கும். அதாவது, எந்த அளவிற்கு உங்களுடைய வசதிக்கு ஏற்ற அளவில் தொண்டு செய்கின்றீர்களோ, இவற்றால் எந்த அளவிற்கு யார், யாரோ எங்கெங்கோ பலன்களை அடைகின்றார்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய பிரச்னைகள் தீருவதற்கும் உதவும்.
கண், மனம், காது, வாய், நாக்கு, கை, வயிறு எனப் பல பகுதிகளும் இணைந்து செயல்பட வேண்டும் அல்லவா! வாய்ப் புண், வயிற்று வலி, கை நரம்பு இயங்காமை, சர்க்கரை வியாதி  இவ்வாறாகப் பலவற்றால் ஒரு கவளம் உணவு உட்செல்வதில் தடங்கல்கள் ஏற்படும் அல்லவா! உதாரணமாக, வாய்ப் புண் அல்லது நரம்பு நோயால் கை சரியாக இயங்காவிடில், உணவேற்பதில் துன்பங்கள் உண்டாகும். இவ்வாறு உடல் அவய ஒத்துழைப்பில் தடங்கல்கள் வருவதையே அந்தந்த உடல் அவயத்துக்கு உரிய கிரக அம்சங்கள் சரியாக இணைந்து செயல்பட முடியாமல் இருப்பதையே, கிரக நட்பு, பகை, சம அம்சங்கள் குறிக்கின்றன. எனவே கிரகங்களிடையே நட்பு, பகை, சம அம்சங்கள் கிடையாது என உணர்க!
அங்காரகக் கரிநாள் என்பதாக, செவ்வாய் கூடும் கரிநாளில் உடலில், சமுதாயத்தில் செவ்வாய் மற்றும் சனீஸ்வரருக்கான கிரகத் தன்மைகள் இணைந்து சிறப்புப் பெறுவதற்கான வழிபாடுகளை ஆற்ற வேண்டிய நாள். ஜாதக ரீதியாக செவ்வாய்க்குச் சனி சமமாகவும், சனிக்குச் செவ்வாய் பகையாகவும் காட்டப் பெறுகிறது. இவற்றுக்குப் பல அர்த்தங்கள் உண்டு. அந்தந்த நாளில் அந்தந்த கிகத் தன்மைகள் கூடிய அவயங்களில் அவரவருடைய ஜாதக, கோசார கிரக ரீதிகளுக்கு ஏற்ப, அந்தந்த நாளில் எந்த நேரத்தில் எந்த கிரக சக்திகள் ஆக்கம் கொள்கின்றன என்பதைப் பொறுத்துத் தன்மைகள் மாறும்.
செவ்வாய் பூமிகாரகர், சனி ஆயுள்காரகர். சனி கூடும் கரிநாட்களில் பூமீஸ்வரர், பூமிநாதர், ஜகதீஸ்வரர் போன்ற பூமி சக்தித் தலங்களில் மூலவரையும், சனீஸ்வரரையும் செவ்வாய் மூர்த்தியையும் அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபடுதல் விசேஷமானது. இதே போல, சனீஸ்வரர் தனித்துச் சந்நிதி கொண்டருளும் தலங்களில், பூமிக்குக் கீழே விளையும் திரவியங்கள், பொருட்களால் (வெட்டிவேர், நன்னாரி, கிழங்கு வகைகள்) அபிஷேக, ஆராதனைகள், அன்னதானம் ஆற்றுவது விசேஷமானது. மனம் ஒத்துப் போகாத வகையிலான குடும்பப் பிரச்னைகள், உடல் அவயக் கூட்டு ஒத்துழைப்பு இல்லாத வகையில் உள்ள வாதம், நரம்புத் தளர்ச்சி வகையான நோய்கள் போன்றவற்றுக்குக் காரணங்களை அறியும் தன்மை புலப்பட வழி பிறக்கும். காரணம் அறிந்தால் பரிகாரப் பிராயச் சித்தவழிகளைப் பெறுதலுக்கான மார்கமும் கிட்டுமன்றோ!

நற்காரியங்களை இனிதே முடியுங்கள்

புத்தி தெளிவுடன் துலங்க, புராணங்களைத் தினந்தோறுமே படித்து வர வேண்டும். இதுவும் ஒரு வகை வழிபாடே! புத்திப் பராமரிப்பிற்காக மிகவும் உதவுவதாகும். இதிலும் குறிப்பாக, புத்திகாரகராகிய புதன் மூர்த்திக்கு உரிய புதன் தோறும், உலக ஜீவன்களின் நலன்களுக்காக, நிச்சயமாகப் புராணங்களைப் படித்து வர வேண்டியது ஒவ்வொரு பாரதக் குடும்பத்தினரும் சர்வதேச, சர்வ ஜன நலத்திற்காக ஆற்ற வேண்டிய கடமையாகும். பாரதத் திருநாடு பூவுலகின் தெய்வீக மையம் என்பதை அடிக்கடி நினைவு கூர்ந்து உணர்ந்திடுக!

குடும்பத்தார் ஒன்றாக அமர்ந்து புராண அனுபூதிகளைப் பற்றிச் சிந்தித்துப் பேசிட வேண்டும். உங்கள் பிள்ளைகளையும் இதில் பழக்குங்கள். ஏனெனில் வருங்கால சந்ததிகளும் புராணத்தைப் பற்றி அறிந்து, இவைதாமே அவர்களைக் காப்பாற்றிட வேண்டும்! தம்முள் பூரிக்கும் அபரிமிதமான தெய்வீக சக்திகளால்தாமே, ராமாயணம், மஹாபாரதம் போன்றவை காலங் கடந்தவையாய் அருளமுதமாய்ப் பூரித்து நிலை நிற்கின்றன.
புராணங்களுடன் மிகவும் தொடர்பு கொண்டவையே சங்குகள் ஆகும். ஏனெனில், ஒவ்வொரு சங்கும் பல்லாயிரக் கணக்கான வயதுடையதாக, பல புராணங்களைக் கண்டவையாக, மனித வாழ்விற்கு எக்காலத்தும் புனிதம் தருபவையாகும்! ஆனால் சங்குகளைப் பயன்படுத்தினால்தானே, அவற்றுள் பூரிக்கும் தெய்வ வல்லமை வாய்ந்த புனிதங்களைப் பெற முடியும்! தானாக அவை வந்து நிற்குமா, சொல்லுங்கள் பார்க்கலாம்! எனவே, தினமும் வீட்டுப் பூஜையில் சங்காபிஷேகம் செய்து பழகி வாருங்கள்!
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகக் கடலினுள் இருந்து கொண்டு, கோடிக் கணக்கான நட்சத்தித்திரங்கள், கோள்களைத் தரிசித்து, தியானித்தவை அன்றோ அனைத்துச் சங்குகளும்! தம் தவ, யோக, ஒளி, ஒலிச் சக்திகளை எல்லாம் பிற ஜீவன்களுக்காக அர்ப்பணிக்கும் சங்குகள் யாவும் தியாகத்தின் புனிதச் சின்னங்களாகும். தியாகம் என்றால்தான் இறையருள் பரிபூரணமாக நெருங்கி வரும். சங்குகள் வீட்டில் இருப்பதே பெரிதும் மங்களகரமானது, தெய்வீக ரீதியாகத் தற்காப்பு சக்திகளை அளிப்பது, தோஷங்களை நிவர்த்தி செய்பவையுமாகும்.

வாஸ்து சக்தி தீர்த்தம்
பொன்னகரம், மணமேல்குடி

சங்குகளின் மஹிமையைச் சித்தர்களே நன்கு விளக்கி உள்ளனர். சித்தர்கள் யாவரும் எப்போதும் தம்முடன் சங்கைத் தாங்கி இருப்பவர்களே! சங்குத் தீர்த்த அபிஷேகம், சங்கு ஊதுதல், சங்குகளாலான மாலைகளைச் சார்த்துதல் போன்ற வகையில், சங்குகளைத் தினமுமே பயன்படுத்தி வந்தால், குடும்பத்தில் நல்ல ஒற்றுமையும், உறுதிப்பாடும் ஏற்படும்.
பாற்கடலில் தோன்றிய விஷத்தைக் கோளமாக்கி ஒரு சங்கில் வைத்தே ஆதிசிவன் உண்டார். பாற்கடலின் விடமானது வாயு, திரவம், திடம் எனப் பல பாங்குகளாய் இருந்தது. பூமியை விடப் பெரிய கோள வடிவில் தேவர்களையும், அசுரர்களையும் துரத்தி வந்தது. ஆனால், இறையருளால் இவை யாவும் சிறு கோளமாகி, சஙகில் வைத்து இறைவனிடம் அளிக்கப் பெற, ஈஸ்வரனும் நஞ்சை உண்டு நீல நிறமாகி, நஞ்சுண்டேஸ்வரர் ஆனார். ஆனால், விடத்தைத் தாங்கி வந்த சங்கின் வண்ணம் ஒரு சிறிதும் மாறவில்லை. மகாசக்தியாய் ஈஸ்வரி, ஆதிசிவனின் கழுத்தைப் பற்றிய இடமும் கருநீலகண்டம் ஆகியது. ஆனால் சங்கோ வண்ணம் மாறாதிருந்தது. காரணம் இறைவன் சங்குகளான மாலைகளை அணிந்திருந்ததும், இறைவனின் திருக்கரங்களை ஸ்பரிசித்ததும் ஆகும்!
தசமித் திதியில் தாம் தேவர்களும், அசுரர்களும் அமிர்தத் தத்துவத்தைப் பற்றி அறிந்தனர். எனவே அமிர்த சக்திகள் பூரிப்பதே தசமி கூடும் புதனாகும். இறவாப் பெரும் பேறு பெற்றவையே சங்குகள்! சங்குப் பூச்சி மறைந்தாலும், அவற்றின் திருமேனிகள் சாகாவரம் பெற்ற அருட் சங்குகளாய்ப் பொலிகின்றன. தேவர்களும், அசுரர்களும் இறவாப் பெரும் பேறு பெறத் தானே அமிர்தத்தை நாடினர். எனவேதான், சாகாவரம் பெற்ற சங்கின் வண்ணமும் இறைவனனின் நஞ்சுண்ட வைபவத்தில் ஒரு சிறிதும் மாறவில்லை! மேலும் விடமுண்ட கண்டனாய் முதன் முதலில் இறைவன் ஆற்றிய அருட்செயல் யாதோ, தெரியுமா? யாவரும் இறவாப் பெரு வாழ்வடையும் மார்கத்தை உணர்விப்பதாக, இறைவனே சங்கு பிடித்து ஓ(ஊ)தினார்.

ஸ்ரீஆகாச விநாயகர்
மழையப்பநல்லூர் கும்பகோணம்

சங்கு சாதகராய்ப் பொலிந்தவரே அருட் திருமறையாளரான ஸ்ரீராமலிங்க சுவாமிகள்! அமிர்தத்தினும் இனிய அருட்பா தந்த ஆண்டவத் திருவடிப் பொடி! முருகத் தரிசனத்தில் முகிழ்த்த நான்மறை ஜோதி சக்தியாளர். ஸ்ரீஇராமலிங்க அடிகளாரும், சாதகப் பெருவாழ்வு தருகின்ற ஜெயஒலிச் சங்கு என உரைத்துள்ளார். தசமி தோறும் சங்குப் பூஜைகளை ஆற்றிய அருட்பெருவள்ளல்.
தசமித் திதியில் பத்து வாயு சக்திகளும் பூரித்து வரும். இயற்கையிலேயே ஓங்கார உள்நாதப் பொலிவு கொண்டதே சங்கு ஆகும். ஆனால் தற்காலத்தில் சங்கொலியைப் பற்றித் தவறாகக் கலியுகத்தில் பொருள் கொள்வது வேதனை தருவதாகும். இறைவனுக்கே சங்கொலி, மனிதனுக்கு அல்ல!
தசமி அன்று சங்கு தாங்கிய பெருமாளை, முருகனை (அழகாபுத்தூர்), தேவதைகளைத் தரிசித்தல் மிகவும் விசேஷமானதாகும். ஆலய மதில்களின் மேல் பல்வகைச் சங்குகளை ஊதும் தேவதைகளைத் தரிசித்திடலாம். சிதம்பரம் ஆலயத்தில் மிகவும் அற்புதமான வகையில் சங்கூதி அம்மன் அருள்கின்றாள். பலரும் அறியாதது! விடமுண்ட கோலத்தில் இறைவன் சங்கு ஊதியபோது, அம்மன் தேவியர் பலரும் சங்குகளை முழங்கிட, இந்த சங்கு நாதத்திற்குத் தலைமை பூண்டவளே சங்கூதி அம்மன். தசமி அன்று சங்கூதும் கோலத்தில் அருளும் மூர்த்திகளை, தேவதா மூர்த்திகளைத் தரிசித்தல் மிகவும் விசேஷமானதாகும். மேலும் சங்குகளை ஊதிப் பூஜித்தல், சங்கு மாலை சார்த்தி வழிபடுதல், சங்கால் அபிஷேகித்தல் சிறப்புடையதாகும். தன் வரம்பு, வசதிக்குக்கு மீறிய நற்காரியங்களில் இறங்கித் திணறுவோர் நன்கு நற்காரியங்களை இனிதே முடிக்க, சங்கு வகைத் தரிசனங்கள், பூஜைகள் உதவும்.

அனைத்து ஞானங்களும்
அற்புதமாய் கூடும்

ஞான புருஷராகிய ஜனக மஹாராஜா, யாக்ஞவல்கியரிடம் பயின்றவர். கால சக்திகளை உணர்ந்தவர் ஆதலின் அவருக்கென விசேஷமான நித்திய மார்கம் அமைந்தமையால், ஒரே நாளைப் பதினைந்து திதிகளாகப் பிரித்து, நித்தியத் திதிப் பூஜைகளை ஆற்றிப் பெரு வரங்களை அடைந்தவர். திதி நித்யாப் பூஜைகளில் தலை சிறந்தவரெனப் போற்றப் பெறுபவர்.
ஜனக மஹாராஜா, ஸ்திதப் பிரக்ஞர் எனவும் போற்றப்படுபவர். முக்காலத்தையும் அறிந்தவர்! நடக்க இருப்பதை அறிந்தால் நல்லதுதானே, இதிலென்ன கஷ்டம்? நடக்க இருப்பதை அறிந்தும் மனம் சற்றும் கலங்காது, அனைத்துத் துன்பங்களையும் ஏற்று, மனமும், உடலும் ஸ்திரமாய் இருப்பது பெரும் யோகம் அன்றோ! ஒரு முறை, ஒரு பெரும் தீ விபத்து நிகழ இருப்பதை அறிந்தும், விதிப் பூர்வமாக அதனைத் தடுக்க இயலாது என்பதால் குருவின் திருப்பாதங்களில் ஜனகர் அமர்ந்து மதிப் பூர்வமாக, மாயா விநோதமாக்கித் தீர்வைத் தந்தவர். இதற்காகத் தம் உடலில் தாங்கொணா வேதனைகளையும் சிறிது காலம் அவர் அனுபவிக்க நேர்ந்தது.
ஜனகர், ஏகாதசி கூடும் குருவார விரத மகத்துவத்தால், திதி - நட்சத்திர - வார இணைப்புகளின் மகத்துவத்தை நன்கு அறிந்தவர். சூரிய மூர்த்தியின் அருகில் இருந்தே, வேதோபதேசங்களை நேரடியாகப் பெற்றவரே யாக்ஞவல்கியர் ஆதலின், அவரருகே இருந்து பாடம் பெறுவதும் அக்னிப் பூர்வமானதே! யாக்ஞவல்கியர், ஞாயிறும் சப்தமியும் கூடும் நாள் மற்றும் குருவார ஏகாதசி நாளில், காலம் கடந்த நிலையில் ஜனக மஹாராஜாவிற்குப் பல அற்புதமான மந்திரங்களை போதித்திட்டார். மாபெரும் வேந்தரான ஜனகர் தன்னுடைய கடுமையான அரசு பரிபாலனக் காரியங்களுக்கு ஊடேயும், குருநாதரின் பர்ணசாலையைத் தினமும் நாடிப் பல அற்புதமான குருகுலவாச அனுபூதிகளைப் பெற்றார்.
வியாழனும், ஏகாதசியும் இணையும் நாள் குருகுலவாச அனுபூதிகளை விருத்தி செய்து தருபவை! பர்ணாசாலையை நிர்மாணித்துத் தரும் கர்த்தாக்களுக்கு நன்மைகளைத் தரும்.    
பல்லாயிரக்கணக்கான செல்கள் உள்ள மூளைப் பகுதியில், சராசரிக் கலியுக மனிதன் 20, 30 செல்களைக் கூட முழுமையாக பயன்படுத்துவது கிடையாது. தற்போதையக் கம்ப்யூட்டர் துறையில் காணப் பெறும் 3ஈ, 4ஈ மற்றும் 0, 1 எண் சக்தி முறைகளுக்குமான முன்னேற்றங்களுக்காக ஆன்மீக ரீதியாக, கபாலச் செல்களை நன்கு நன்கு விருத்தி செய்ய வெண்டைக் காய் மிகவும் உதவுவதாகும். காரணம், வெண்டைக் காயின் உள்ளே உள்ள விதைச் செல்கள், கபாலச் செல்களின் பவன சக்திகளே ஆகும். இவற்றை நன்கு விருத்தி செய்து கொண்டால், ஒரு சுவற்றுக்கு அப்பால் துலங்கும், நடக்கும் நிகழ்ச்சிகளையும் எடுத்துரைக்க முடியும், நெடுந் தொலைவிற்கு அப்பால் உள்ள எண்களையும், எழுத்துகளையும் நன்கு உணர முடியும். பலவகை தீர்க தரிசன சக்திகளை கபாலச் செல்களில் நன்கு விருத்தி செய்து கொள்ளவும், ஞாயிறு + சப்தமி, ஏகாதசி + வியாழன் கூடும் நாட்களில் ஆற்றும் ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீசரஸ்வதி பூஜைகள் நன்கு உதவும்.
இந்நாட்களில் வெண்டைக்காய் வகை உணவுகளைப் படைத்துத் தானமாக அளித்திடுக! ஒவ்வொரு பொருளுக்கும் எட்டுக் கோளத் தன்மைகள் உண்டு. இவைதாம் தற்காலக் கம்ப்யூடர் துறையில் 3D, 4D என்பதாகின்றன. ஒரே இடத்திலிருந்து ஒரு பொருளை அனைத்து கோள்களிலும் காண்பதே அஷ்டப் பூர்வ சக்திகள் ஆகும். இதில் ஆறு நிலைகளைப் பெற உதவுவதே மனிதப் பகுத்தறிவு ஆகும். ஏழாம் நிலையில் ஞான சூரிய சக்திகளும், எட்டாம் நிலையில் ஞான சக்திகளும் அடையப் பெறுவதாகும். இவ்வாறு பல்வகை ஞானங்களையும் தக்க பூஜை, விரதங்களால் ஏகாதசி கூடும் குருவாரத்தில் பெறும் வாய்ப்புகள் நிறைய உண்டு.

பணமும் துன்பமா ?

வெள்ளியன்று சுக்ர சக்திகள் நன்கு பரிமளித்துப் பூவுலகை நிறைத்து வருகின்றன. மனித வாழ்க்கைக்கான பல்துறை வளங்கள் பெருகி வரும் நன்னாள். வெறும் உணவும், நகைச் செல்வம் மட்டும் வாழ்க்கையில் இருந்தால் போதுமா, அயன, சயன, சுக போகங்களும் கொண்டதுதானே வாழ்க்கை! படுத்தால் தூக்கம் வரவில்லை என்பது ஆரோக்யச் செல்வக் குறைபாடு அல்லவா! ஜாதகப் பொருத்தத்தில் அயன, சயன, சுக போக அம்சங்களும் கணிக்கலாகின்றனவே! எனவே, அனைத்து வகைச் சுக வளங்களையும் தேவையான அளவில் அடைய வெள்ளிக் கிழமைப் பூஜை நன்கு உதவும். இதனால்தான் உலகின் பல மதங்களிலும் வெள்ளிக் கிழமை சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

வெள்ளியன்று அனைத்து வகை வழிபாடுகளிலும் பல்வகை சக்திகள் அபரிமிதமாகப் பெருகுகின்றன. மேலும் சத்சங்க வழிபாடு எனப்படுவதான - ஜாதி, மத, குல, இன பேதமின்றிப் பலரும் பங்கு கொள்வதான - கூட்டு வழிபாட்டிற்குப் பன்மடங்குப் பலன்கள் உண்டு. மேலும், இந்துக்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், பெளத்தர்கள் எனப் பல மதத்தினரும் உலகெங்கும் வழிபடுவதால், இந்நாளில், வானில், விண்ணில், மண்ணில், நீரில், நெருப்பில் வழிபாட்டுப் பலன்கள் அபரிமிதமாய்த் திரள்கின்றன. யாவருக்கும் இவை வந்தடையும் வண்ணமாகவும், மஹரிஷிகளும், சித்தர்களும் பொதுச் சங்கல்ப வகைப் பூஜைகளையும் ஆற்றுகின்றனர். இதில் நீங்கள் உலக ஜீவன்களின் நலவளத்திற்காக எவ்வளவு முயற்சிகளை எடுத்து ஆக்கப் பூர்வமாகச் செயல்படுகின்றீர்களோ, அந்த அளவிற்கு உங்களுக்கும் பல்துறை வளங்கள் வந்தடையும்! அதாவது கொடுத்ததே திரும்பி வரும்!

சூரிய வில்வம் நகர்

வெள்ளிக் கிழமைகளில் சிவாலயம், பெருமாள் ஆலயங்களில் சுக்கிரருக்கு உரிய ஆறாம் எண் வகையில் தீபம், பூக்கள், தீர்த்தம், பழம், பிரசாதம், சப்த மார்கம் (மறைகள், பாடல்கள் ஓதுதல்) போன்ற ஆறாறு வகைகளில் வழிபடுதல் மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு குடும்பத்திலும் இவ்வகையில் ஆறு வழிகளில் பூஜிக்க வேண்டும். வெள்ளி தோறுமாவது ஆலயங்களில் ஆறு வேளைப் பூஜைகளிலும் பங்கு பெறுதல் வேண்டும்.
மேலும் வில்வ மரம் உள்ள பெருமாள் தலங்கள், திருமகள் வழிபட்ட சிவத் தலங்கள், மார்பில் லக்குமி துலங்கிடத் திருமால் அருளும் தலங்கள், லட்சுமித் தீர்த்தம் உள்ள தலங்களில் வில்வ தள அர்ச்சனை, சர்க்கரைப் பொங்கல் பிரசாதம், தாமரை மலர் மாலை சார்த்துதல், யானையைக் கொண்டு இறைவனைப் பூஜித்தல், பசு, யானைகளுக்கு உணவளித்தல் போன்றவற்றுடன், 12 இலைகளுக்கு மேல் உள்ள வில்வ தரிசனம் மிகவும் விசேஷமானதாகும். பணமில்லாத வகையில் ஏற்படும் துன்பங்கள் பணமிருந்தும் பலருக்கும் வரும். இவற்றைக் களையவும் வெள்ளி, துவாதசி கூடும் நன்னாளில் ஆற்றும் மேற்கண்ட ஆறு துறை பூஜைகளும் உதவும்.
திருச்சி -லால்குடி அருகே நகர் தலத்திலும், சென்னை - போரூர் அருகே உள்ள கோவூர் ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் மிகவும் அபூர்வமான வில்வ தள மரங்கள் உள்ளன. வில்வ இலைகளைத் தேவை இன்றி விளையாட்டாகப் பறித்தல் கூடாது. இங்கு வெள்ளி தோறும் வில்வ மரங்களை வலம் வந்து அர்ச்சித்தப் பூஜைகளை ஆற்றுதலும், பசு, கன்றுடன் ஆலயத்தை வலம் வருதலும், வறுமைத் துன்பங்களைத் தணிக்கவும் உதவும். பல்துறை வளமும் மேம்படவும் உதவும்.

தொடர் மூர்த்திகள் நீக்கும் தோஷங்கள்

நடுப் பகல் நேரமான அபிஜித் முகூர்த்த நேரம், விடியற் காலையிலான பிரம்ம முகூர்த்த நேரம், இதிலும் கோ தூளி லக்ன நேரம் போன்றவை தோஷங்களற்ற நேரமாகும். பல்வேறு கால வகைகளில் அமையும் இவற்றின் கால சக்திகளை ஒருமித்துத் திரட்டித் தந்து, அனைத்து வகைத் தோஷங்களுமற்ற நேரமாக, பூஜைக்கு மிகவும் உகந்த நேரமாக அமைவதே சனிப் பிரதோஷ நேரமாகும்.
எனவே, பிரதோஷ நாளில் எங்கிருந்தாலும் பிரதோஷ நேரத்தில் சிவ பூஜையைச் சுயம்பு லிங்க மூர்த்தித் தலங்களில் ஆற்றி வருதலின் மூலம் அபரிமிதமான பலாபலன்களைப் பெற்றிடுக! கலியுகத்தில் புண்ணியம் நிறையவே பலவழிகளில் விரயம் ஆவதாலும், வன்முறைத் தீய சக்திகள் கலியுகத்தில் பெருத்துக் கிடப்பதாலும், இவ்வகையில் இத்தகைய அற்புதமான நாளில் சேரும் புண்ய சக்திகள்தாம் அபரிமிதமாகப் பெருகி, விருத்தியாகி நின்று உதவும்.

ஸ்ரீநித்ய பிரதோஷ நந்தீஸ்வரர்
திருஅண்ணாமலை

தோஷங்களற்ற நேரமே பிரதோஷ நேர காலமெனில், சுப காரியங்களை இதில் அமைத்திடலாமே என எண்ணத் தோன்றும்! இதுவும் சுயநலமான எண்ணமே! வல்வினைகள் பெருத்துக் கிடக்கும் கலியுகத்தில், தோஷங்களற்ற நேரமே அமைவதே பெரும் பாக்யமாக இருக்க, இதனைப் பூஜைக்கு மட்டுமே விசேஷமானதாக, இறைவனுக்கே இறைப் பூஜைக்காகவே, இந்நேரத்தை தெய்வீகமாக அர்ப்பணித்திட்டால், சுபசக்திகள் அனைவர்க்கும் வாழ்வில் பன்மடங்காய்ப் பெருகி வருமல்லவா! இதை விடுத்துச் சுயநலமாகப் பயன்படுத்துவதால் யாது பயன்? சுப மங்கள வரையறைகள் வேறு, இறைவனே சுயம்புக் கால சக்தியாய் அளித்துத் தரும் தோஷமமற்ற நேர நியதிகள் வேறு!
மேலும், இதிலும் இரண்டு சனிப் பிரதோஷங்களும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் தொடர்ச்சியாக அமைந்து வருதல் மஹா விசேஷமானதாகும். தொடர் கணபதி, தொடர்த் தென்முகத்தார் எனத் தொடர் மூர்த்திகள் உண்டு. பிரயாணங்களிலும், வீட்டை விட்டு வெளிச் செல்லும் போதும் நம்மைக் காப்பவர்களே தொடர் மூர்த்திகள்! பிரதோஷ நேரத்தில் நந்தியெம்பிரானின் திருக் கொம்புகளில் நடனமாடியபடிப் புவனமெங்கும் சர்வேஸ்வரன் வலம் வருவதால், இந்நேரமே தொடர் மூர்த்திகள் உற்பவிக்கும் நேரமுமாகும்.
பிரயாணம் எனில் வெளியூர்தான் செல்ல வேண்டும் என்பதில்லை! வீட்டை விட்டு வெளிச் சென்றாலே அது உள்ளூர்ப் பிரயாணம்தான்! கலியில் வீட்டை விட்டுக் கிளம்பிச் சென்று ஒழுங்காக, பத்திரமாகத் திரும்பி வருவதற்கே பலத்த புண்ய சக்திகள் நிரம்பத் தேவைப்படுகின்றன. எனவேதான், காரணமில்லாமல் பொழுது போக்கிற்காக வெளிச் செல்லலாகாது. மேலும், எப்போதும் வெளிச் செல்கையில் தொடர் கணபதி போன்ற மூர்த்திகள், சமித்துக் குச்சி போன்றவற்றைத் தற்காப்பிற்காக எடுத்துச் செல்ல வேண்டும்.
நந்தியெம்பிரானின் திருக்கொம்புகளின் ஊடே, ஆதிசிவனார் திருநடனம் ஆடிய நாளான சனிக் கிழமை அன்று அமையும் பிரதோஷ நேரமெனில் எவ்வகைத் தோஷங்களும் அற்ற நேரமாவதுடன், எவ்வகைத் தோஷங்களும் புக முடியாதக் காப்புக் காலமாகவும் அமைகின்றதன்றோ! எனவே, சனிப் பிரேதோஷப் பூஜை நேரத்தில் ஆலயத்தில் தொடர் மூர்த்தி பிம்பங்களைத் தாங்கி வலம் வந்து, இவற்றில் தற்காப்பு ரட்சா சக்திகளை நன்கு விருத்தி செய்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு சனிப் பிரதோஷத்திற்கும் பூவுலகிற்கு வருகை தரும் பித்ரு மூர்த்திகள், அவர்களுடைய உத்தம லோக நிலைகளுக்கு ஏற்ற வகையில் பிரதோஷ மண்டலக் காலப் பூஜைகளை ஆற்றுவதால், சனிப் பிரதோஷ நாளில் ஆலயத்தில் சிவ தரிசனம், சிவ பூஜைகள், சிவச் சிந்தனைகளில் துய்த்தலை நிகழ்த்தி, இதற்குப் பிறகு,
ஸ்ரீநந்தீஸ்வரர் எனப் பெயர் தாங்கி இறைவன் அருளும் ஆலயங்களில் (சென்னை - திருவொற்றியூர் ஆலயத்திற்குப் பின்புறம்) அபிஷேக, ஆராதனைகளை நிகழ்த்துதலும்
மூன்று நாட்களுக்குத் தினமும் தர்ப்பணம் அளித்தல்,
தினமும் மூன்று நாட்களுக்காவது, மாலையில் நித்தியப் பிரதோஷ வேளையில் சிவாலய தரிசனம், நந்தி மூர்த்திக்கான பூஜைகளை ஆற்றலும்,
சனிப் பிரதோஷ வழிபாட்டுப் பலன்களைப் பரிபூரணமாக்க உதவும்.
இதனால் தன்னைப் பிறர் புரிந்து கொள்ளவில்லையே என வேதனையில், மனஉழற்சியில் அல்லற்படுவோர்க்கு நல்ல தீர்வுகள் கை வரப் பெறும்.

அட்சதையின் அருள் சக்தி

அட்சதா சக்திகள், குறிப்பாகப் புது மணத் தம்பதிகளுக்கு, பிள்ளைகளுக்கு கலியுகத்தில் நிறையத் தேவையே! கலியுகத்தில் ஆலயங்களில் திருமணம் நிகழ்வதே சிறப்புடையது. தற்காலத்தில் கோயிலில் திருமணம் செய்தலை மிகவும் கெளரவக் குறைவாக எண்ணுவோரும் உண்டு. இந்த எண்ணம் தவறானது. அக்காலத்தில் வேத, யந்த்ர, மந்த்ர, அக்னி வழிபாட்டுச் சடங்குகளுடன் திருமணங்கள் நிகழ்ந்தமையால், பல்வகையான தோஷங்களும், சாபங்களும் நன்குத் தீர்வு பெற்றன. ஆனால் தற்போது இவை பெரிதும் மறைந்து வருவதால், இறைச் சன்னதியில், தாலி கட்டும் புனிதமான சடங்கான திருமண மாங்கல்ய வைபவம் நிகழ்தலே சிறப்புடையதாகும்.

லால்குடி அருகே நகர் சிவாலயம்

உற்றம், சுற்றம் நிறைய இருப்பின், தாலி கட்டும் வைபவத்தை இறைவனின் திருச்சந்நதியில் வைத்துக் கொண்டு, ஏனையத் திருமணச் சடங்குகளைச் சத்திரத்திலோ, இல்லத்திலோ நிகழ்த்திக் கொள்ளலாம் அன்றோ! தாலி கட்டிய பின்னர்தான் தம்பதிகள் ஒரு சேர அமரும் வரவேற்பு நிகழ்தல் வேண்டும். தம்பதி எனும் புனிதமான உறவு, தாலி கட்டிய பின்னர்தான் மலர்வதால், தம்பதிகள் ஒரு சேர அமரும் வரவேற்பு நிகழ்ச்சியானது, தாலி கட்டும் வைபவத்திற்கு முன்னரோ, முதல் நாளோ அமைதல் மிகவும் தவறானதாகும்.
மாமறைகளை ஓதுதல், ஹோமம் மூலமான அக்னி வழிபாடு, அன்னதானம், ஏழைச் சுமங்கலிகளுக்கு மங்களப் பொருட்களை வழங்குதல் போன்றவற்றுடன் திருமண வைபவம் நிகழ்தலே, மாங்கல்யம், திருமண நேரம், ஜாதகம் போன்றவற்றில் உள்ள தோஷங்களை ஓரளவேனும் போக்கிட உதவும்.
மாசற்ற தங்கத்தால் ஆகும் மாங்கல்யத்தில் தோஷங்கள் எப்படி வரும்? பொன் மாசற்றது என்பது உண்மையே! ஆனால் மரண யோகம் போன்ற சுபமற்ற வேளையில் உருக்கப் பட்ட தங்கம், பிணத்தின் மேல் இருந்து எடுக்கப்பட்ட நகைத் தங்கம், திருடி வந்த தங்கம், அதர்மமான முறையில் சொத்துப் பிரிவினையில் வந்த தங்கம், ஆயுள் பங்கம் உள்ளோர் அணிந்த தங்கம், சுமங்கலித்வம் இல்லாது மாங்கல்ய தோஷம் சேர்ந்துள்ள தங்கம் - போன்று மாங்கல்யத்தில் பிற வகைச் சொல்லொணாத் தோஷங்களாகச் சேருமன்றோ!
பொன் தாலி என்பது நூலாலான மஞ்சள் வண்ணச் சரடில்தான் இணைக்கப் பட வேண்டும். தங்கச் செயினிலேயே மாங்கல்யத்தைப் பொறுத்துவது தவறு. சகல தோஷங்களையும் நீக்க வல்லதான, மந்திர சக்திகளையும், சுபசக்திகளையும் ஈர்க்க வல்லதான நூல் வகையிலான மாங்கல்யச் சரடில்தான், பொன்னாலான மாங்கல்யத்தைச் சேர்த்தே பெண்கள் தாலியை அணிதல் வேண்டும்.
வருடந் தோறும் ஓர் ஏழைக்காவது பொன் மாங்கல்யத்தைத் தானமாக அளித்து வந்தால் கணவனுக்கு ஆயுள் பங்கம் ஏற்படாது தற்காத்துக் கொள்ளலாம்.

ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆலயம்
பொன்னகரம், மணமேல்குடி

மாங்கல்யத்திற்கான பொன்னை, நல்ல நேரத்தில்தான் உருக்க வேண்டும். கடைகளில் வாங்கப்படும் மாங்கல்யத்தைச் செய்வதற்கான பொன்னானது, தேய்பிறை நாள், சூன்யத் திதி நாள், தியாஜ்ய விஷ நேரம், சந்திராஷ்டம நேரம், மரண யோக நேரம் போன்ற அசுப நேரங்களில், அசுபமான நாளில் உருக்கப்பட்டுச் செய்யப்பட்டால், பல்வகைக் காலசந்தித் தோஷங்கள் மாங்கல்யத்தில் வந்து படிகின்றன.
மேலும், கடைகளில் உள்ள மாங்கல்யமானது, பலருடைய கண்ணும், கைகளும் படுவதால் அவரவருடைய கர்ம வினைப் படிவுகளும் வந்து சேரும். உதாரணமாக, ஒழுக்கமற்ற, தீய குணங்களை உடைய, நன்னடத்தை இல்லாதோர் மாங்கல்யத்தை எடுத்துப் பார்த்திடில், அதில் தீவினைக் கர்மப் படிவுகள் வந்து சேரும். இவற்றை நீக்கிடப் பல பரிகார வழிகள் உண்டு.
வறுமை காரணமாக, தாலிச் சரடை மட்டும் அணிந்திருக்கும் ஏழைப் பெண்மணிகளுக்கு, ஜாதி, மத பேதமின்றி பொன் தாலிகளைத் தானமாக வருடந் தோறுமாவது, அல்லது தன் குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நிகழும் போதாவது அளித்து வந்தால், இந்தப் பொன் தானப் புண்ய வசத்தால் மாங்கல்ய தோஷங்களை ஓரளவு தணித்திடலாம். இதற்காகவே, மாங்கல்யத்தைக் கடைகளில் வாங்காமல், பொன்னை உருக்க வேண்டிய நாளை முன்னரேயே கணித்து, புனிதமான பொற்கொல்லர்களிடம் தனிப்பட்ட முறையில், அவரவர் குடும்பப் பாரம்பரியத்திற்கு ஏற்ப மாங்கல்யத்தைச் செய்து வைத்துக் கொண்டு தினமும் பூஜித்து வர வேண்டும். இதனால் புனிதமான பொற்கொல்லர் துறையையும், நாட்டின் ஓர் அற்புதமான கலாச்சாரத் துறையாக நன்கு பேணிடலாம் அன்றோ!

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்
செவலூர் புதுக்கோட்டை

பொன் மாங்கல்யத்தைச் செய்தவுடன் / வாங்கியவுடன் குலதெய்வம், இஷ்ட தெய்வம், எல்லை தெய்வத்திடம் வைத்துப் பூஜித்து, உத்தமப் பெரியோர்களிடம் மட்டுமே காண்பிக்க வேண்டும். பொருட் காட்சிப் பொருளாக அனைவரிடமும் காட்டுவதைத் தவிர்க்கவும். பிறகு ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர், ஸ்ரீஸ்வர்ணவல்லி, ஸ்ரீஸ்வர்ணேஸ்வர், ஸ்ரீபொன்னியம்மன் போன்ற பொன் வகை நாமம் உடைய மூர்த்திகளில் அருளும் ஆலயங்களில் வைத்துப் பூஜிக்க வேண்டும்.
எந்த இறைத் திருவருளால் ஒவ்வொரு வினாடியும் வாழ்கின்றோமோ, அந்தக் கடவுளின் பேராண்மை நிகழும் இறைவளாகத்தில் திருமணம் நடப்பதுதானே முறையானது! இதனை மறந்து கோயிலில் திருமணத்தை நடத்துவது என்பது பிச்சைக்காரத் தனமானது என்று பலரும் பச்சையாகவே எண்ணுவதுதான் இழிவானதாகும். ஆலயத்தில் திருமணம் நடத்துவதுதான் மிக, மிகப் புனிதமானதாகும். திருஞான சம்பந்தப் பெருமானே, அனைத்து ஊர் மக்களையும் அழைத்து, சிதம்பரம் அருகே ஆச்சாள்புரத்தில்தானே தம் திருமண பைவத்தை, இறையருளால் அமைத்த்துக் கொண்டார். எனவே, சத்திரம், சாப்பாடு, ஆடம்பரங்கள் அனைத்தையும் திருமண மண்டபங்களில் செய்தாலும், மாங்கல்ய தாரணம் எனும் புனிதமான தாலி கட்டும் வைபவம் மட்டுமேனும் இறைத்திருச் சந்நதியில் மட்டுமே அமையுமாறு வைத்துக் கொள்ளுங்கள்.
ஆச்சாள்புரத்தில் திருமணம் நிகழ்தல் வாழ்வில் பெறுதற்கரிய பாக்கியமாகும்.
திருமணப் பத்திரிக்கையும் மிகவும் பவித்ரமானதே! திருமணப் பத்திரிக்கை என்பது தெய்வீக இல்லறத்திற்கு வழிவகுக்கும் திருப்பத்திரம் மட்டுமின்றி, உத்தமமானதாகத் திருமண வைபவப் புனித நேரத்தை அறிவிக்கின்ற மகத்தான அருள் அறிவிப்புப் பெட்டகமாகவும் விளங்குகின்றது. இந்நாள், யோக, நட்சத்திரம், ஹோரை என மிக மிகப் புனிதமாக கால அள வீடுகளைக் குறிப்பதால், திருமணப் பத்திரிக்கையில் அனைத்துக் கால தேவதா மூர்த்திகளுமே பிரசன்னம் ஆகின்றனர்.
சிவன், பெருமாள், பார்வதி என்று ஈசனின் பல அம்சங்களாக எத்துணையோ இறைமூர்த்திகளைத் தரிசித்து இருந்தாலும், யோக கால தேவதை, மூர்த்தி, யோக, கரண மூர்த்தி, சுப லக்ன கால மூர்த்தி, நட்சத்திரத் தேவதா மூர்த்தி, ஹோரை தேவதா மூர்த்தி போன்ற பல கால தேவதா மூர்த்திகளை தரிசித்ததில்லை, இவர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளவுமில்லை அல்லவா! இவர்கள் அனைவருமே ஒருமித்து ஆசீர்வதிக்கின்ற வடிவே காலபைரவராவார். இவர்கள் வந்து கூடும் புனித நேரமே சுப முகூர்த்த நேரமாகும். இச்சுப முகூர்த்த நேரத்தை அறிவிக்கின்ற திறவு கோலாகத் திருமணப் பத்திரிக்கை விளங்குகின்றது. மேலும், காலதேவதா மங்கள மூர்த்திகளுடைய ஆசீர்வாதம் பெற்றதாகவும் திருமணப் பத்திரிக்கை விளங்குகிறது.
இதனால்தான் திருமணப் பத்திரிக்கையை குலதெய்வம், இஷ்ட தெய்வம், எல்லைத் தெய்வம், குலகுருவிடம் சமர்ப்பிப்பதுடன், மதுரை அருகே திருவேடகம் சிவத் தலத்தில் பத்திரிக்கா பரமேஸ்வரர் என்ற பெயரை ஆண்டவன் தாங்கி அருள்வதால், இத்தலத்தில் நேரடியாகச் சென்று திருமணப் பத்திரிக்கையைச் சமர்ப்பிப்பதாலும் விசேஷமான பலன்கள் திரள்கின்றன. இதற்காகத்தான் அக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடியாகச் சென்று, கல்யாணப் பத்திரிக்கையின் மேல் மங்கள அட்சதைகளை வைத்துத் தருவார்கள். அந்த அட்சதைகளைப் பத்திரமாக வைத்துப் பூஜித்து அவற்றைத் திருமணத்தன்று எடுத்து வந்து தம்பதிகளை ஆசீர்வதிக்க வேண்டும். ஆனால் இந்நடைமுறைப் பழக்கத்தைப் பலரும் மறந்துவிட்டனர். அட்சதைகளுடன் திருமண இதழை வைத்து அழைப்பதும் கிடையாது. எனவே, இனியேனும் - ஜாதி, மத பேதம் பாராது - பழுத்த 80 வயது நிறைந்த சுமங்கலிகளின் கரங்களால் சேகரிக்கப் பெற்ற அட்சதைகளை இல்லத்தில் வைத்துக் கொண்டு பலருக்கும் அளித்து பல சுப வைபவங்களிலும் பயன்படுத்தி வாருங்கள்.

நஞ்சுண்ட எண்ணங்களை நசித்திடுக

செவ்வாய் கூடிய மிருகசீரிஷ நட்சத்திர நாளில்தாம் பூவுலகில் விலங்குகள் படைக்கப் பெற்றன. சிருட்டிப் படைப்பு நிகழ்ந்த காலத்தில், நட்சத்திர, கிழமை கால அமைப்பு இருந்தனவா என எண்ணிடலாம். இறைஅனுபூதிகளை வைத்தே பல காலஅமைப்புகளும் தோன்றின என்பதையும் இதன் மூலம் அறிக! மருத்துவ சக்திகளையும் பூண்ட செவ்வாய் தோறும், மிருக இனங்கள் பலவும் பல்வகை விரதங்களைப் பூண்கின்றன. நாய், பூனை, பறவைகளைப் பழக்குவோர், செவ்வாய் மற்றும் மிருகசீரிஷ நட்சத்திர நாட்களில் அவற்றிடம் பல ஆன்மீக ரீதியான சாத்வீகப் பண்பலைகள் மிளிர்வதை காணலாம். எனவே, தன் பகுத்தறிவு கொண்டு சகல ஜீவன்களின் நல்வாழ்விற்காக காருண்யத்துடன் வாழ வேண்டிய நற்கடமை மனித குலத்திற்கு உண்டு.  அசைவ உணவிற்கு அடிமைப்பட்டவர்கள் செவ்வாய், வெள்ளி தோறுமாவது சைவ உணவை ஏற்றல் நன்று! இதுவே ஒரு நல்விரதமாகவும் அமைகிறது.

ஆச்சாள்புரம் சீர்காழி அருகே

செவ்வாய்க் கிழமையன்று பூவுலகில் நாகங்கள் விசேஷமான பூஜைகளை நிகழ்த்துகின்றன. இதனால்தான் செவ்வாய், வெள்ளியன்று நாகங்களை எங்கும், எவரும் சற்றே விரட்டுவதற்குக் கூடத் தயங்குவர். அம்பாளின் திருவிரல்களில் உள்ள மோதிரங்கள் யாவும் நாக மூர்த்திகளே! ஆதிசிவனாரின் திருமேனியிலோ கோடிக் கணக்கான நாகங்கள் பொலிகின்றனவே! ரங்கநாதப் பெருமாள் சயனித்திருக்கும் பாம்பணையின் தெய்வீக மகத்துவத்தை ஆழ்வாராதியரே பரிபூரணமாக நன்கு அறிவர்.
* கலியுகத்திலும் கூட, பல வகையான விண்ணுலகங்களில் இருந்தும், பல நவகிரக மண்டலங்களில் இருந்தும் பூமிக்கு வழிபாட்டிற்காக வருகின்ற உத்தம நாகங்களும் உண்டு. பூமிக்கு அடியில் வாழும் மண்ணுளி நாகங்கள் நிறையவே உண்டு. இவற்றுள் பலவும் மின்மினிப் பூச்சி போல இயற்கையாகவே ஒளி தரும் நாளங்களைக் கொண்டவையாகும். உண்மையில் பூமியடி வாழ் நாகங்கள் பல பட்சங்கள் விரதமிருந்து அவற்றின் பலாபலன்களை உலக மக்கள் பெறவே பூமியில் இழைந்து, இழைந்து நகர்ந்து பூமி மண் மூலமாகவும், பூமியடி நீரோட்டம் மூலமாகவும் பரப்புகின்றன.
பலரும் எண்ணுவது போல பூமிக்குள் இருப்பது கல்லும், மண்ணும், நீரும் பருப் பொருளும் மட்டும் அல்ல! பூமிக்கு அடியிலும் அதள, பாதாள லோகங்கள் உண்டு. இவற்றில் இருந்து வெளி வருபவையே குடகு நாகங்களாகும். இவற்றின் புற்றுக்கள் ஆறடி உயரத்திற்கு மேல் இருக்கும். திருஅண்ணாமலையில் இவை நிறைய உண்டு என்றாலும், கலியுகத்தில் தற்போது ஒரு சில மட்டுமே பாக்யமுள்ளோருக்குத் தரிசனமாகக் கிட்டும்.

நல்லூர் நாகர்கள்

புதுக்கோட்டை - பொன்னமராவதி மார்கத்தில் உள்ள பேரையூர் (மதுரை அருகில் உள்ள பேரையூர் வேறு) பலரும் அறியாத மஹாநாக சக்தித் தலமாகும். அஷ்ட மஹா நாகங்களும் தினமும் சிவ பூஜை ஆற்றும் உத்தமத் தலம். எத்தகைய நாகதோஷங்களையும் நிவர்த்தி செய்ய வல்ல அற்புத நாக சக்தித் தலம். சம்வத்ர நாகம், சம்ஸ்தித நாகம், சம்ரட்சக நாகம் போன்ற மூல நாக மூர்த்திகள் மிருகநட்சத்திர நாளில் பூவுலகிற்கு வந்து நாக தோஷங்களை நிவர்த்திப்பதற்கான அருட் சக்திகளைப் பொழியும் தலங்களில் திருநாகேஸ்வரம், கீழ்ப் பெரும் பள்ளம், பேரையூர், நாகர்கோயில், நயினார் கோயில், நாகப்பட்டினம், நாகாத்தம்மன் சன்னதிகள் போன்றவையும் உண்டு.
நமக்கு ஜாதக ரீதியாகவோ, வேறு வகையிலோ நாக தோஷஙகள் இல்லையே என எண்ணாதீர்கள்! கலியுகத்தில் விஷத்தனமான எண்ணங்கள், செயல்களைச் செய்வோரும் உண்டு. அவரவர் மனசாட்சிக்கே எது நச்சுத் தனமான எண்ணம், செயல் என நன்கு தெரியும். உதாரணமாக, பிறருடைய பொருட்களை, சொத்துக்களை (ஆபீஸ் பொருட்கள் உட்பட) அதர்மமாகப் பயன்படுத்துதலும், பிற பெண்டியரைத் தவறாக நோக்குதலும் நச்சுடை எண்ணங்களே, செயல்களே! எனவே, இவற்றிலிருந்து மீளும் வழி வகையறிய, 60 நாழிகையும் மிருசீரிஷ நட்சத்திரம் செவ்வாயோடு கூடி நிறையும் நாளின் நாக பூஜைகள் உதவும்.
மேலும், நாகங்களைக் காக்கின்ற தவசக்திகளைப் பூண்ட நாககுல குருவான ஸ்ரீஅஸ்தீக சித்தரின் திருநாமத்தை 5000 முறைக்கும் மேலாக ஓதிடும் சங்கல்பத்தை செவ்வாய், மிருகசீரிஷ நாட்களில் ஏற்று நடத்தி, நாகதோஷ நிவர்த்திக்கு நல்வழி காண்க! தெய்வத் திருமேனியில் நாகந் தாங்கிய மூர்த்தி தரிசனம் மிகவும் விசேஷமானதாகும்.

குண்டலினி மகா சக்தி

குண்டலினியின் உறைவிடத்தை நாகப் புற்றுக்கு ஒப்பிட்டு உரைப்பதுண்டு. நாகப் புற்று வடிவில்தான் குண்டலினியின் பல சக்திகளும் ஈர்த்தெழும்பும். புற்று நோய் என்று சொல்கையில் மூலத்தோடு உரைந்தது, மூலத்தை வைத்தே தீர்வைப் பெறுதல் நலம் பயக்கும் என்றுணர்த்தும் பொருளில்தான் வருகின்றது. அதாவது பல்லாயிர ஜன்மங்களில் ஒரே விதமான வல்வினைகளே தொடர்ந்து, தொடர்ந்து வந்து தீர்வு பெறப்படாமல், பலத்த, வலுத்த நோய்ப் பூர்வமாக வந்தமைந்துள்ளது எனப் பொருளாகும்.

புதன் கிழமையோடு கூடி வரும் மூன்றாம் பிறை சந்திர தரிசனத்தை தந்தையும், புதல்வரும் சேர்ந்து பெறுதல் மிகவும் விசேஷமானது. புத்திர காமேஷ்டித் தீர்த்தம், புத மூர்த்தியும், நாகப் புற்றுத் தலங்கள், சந்திர மூர்த்தியும் தனித்துச் சன்னதி கொண்டருளும் தலங்கள், புத சக்தித் தலங்கள், சந்திர சக்தித் தலங்கள், சந்திர தீர்த்தத் தலங்களில் வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். புற்று நோயால் வாடுவோர் இவ்வழிபாடுகளை மேற்கொண்டு தம் வல்வினைகள் தீர ச்யவன மஹரிஷியின் அருளாசிகளை வேண்டி வருதல் நல்லது.

திருவேடகம்

எந்த யோகியர்க்கும், தம்மைப் பரிபூரணமாக நம்பிச் சரணடைபவர்களுக்குத் தம் குண்டலினி சில அம்சங்களையாவது காட்டி அருள்தல் வேண்டும் என்பது யோகியர்களுக்கான நியதியாகும். இது பெரும்பாலும் வித்யா சக்தி நாட்களில்தான் நன்கு அமையும். குண்டலினி சக்தியைத் தாங்கி வரும் திரவியங்கள், தீர்த்தங்கள் சிலவும் விசேஷமானதாக உண்டு.  
எல்லாருக்குமே குண்டலி சக்திகள் உண்டு. ஆனால் இவற்றை ஆக்கப் பூர்வமாக்கும் முறைகளைப் பலரும் அறிந்து கடைபிடித்திட முனைவதில்லை! தினமும் குனிந்து ஆலயத்தில் குப்பைகளைப் பொறுக்கி சுத்திகரித்து வருதலும் எளிமையாகச் சில குண்டலினி சக்திகளை விருத்தி ஆக்கும் யோகாபத்ய முறையாகும். குண்டலினி சக்திகள் வாழ்வில் பலவிதங்களில் பயனாகின்றன. சுயநலமின்றித் தியாகமய, பிற ஜீவன்களின் நல்வாழ்விற்கு இவை பயன்படுத்தப் பெற்றால் இவை நன்கு விருத்தியாகி வளம் பெறும். சுயநலமாகப் பயன்படுத்தினால் விரைவில் கரைந்து விடும். மீண்டும் பெறுதல் கடினமோ கடினம்.
குண்டலினி சக்திகள் ஆக்கம் பெறுகையில் நற்காரியங்கள் தாமாகவே சித்தி ஆகும். உதாரணமாக, நிறையத் தடங்கல்கள் வந்து தடுக்கும் ஒரு நற்காரியத்தை நடத்திட, ""கடவுளே! இந்தக் காரியம் ஆகணும்!'' என்று கதறி வேண்டி மனமுருகி வேண்டிச் செல்கையில், பலரும் வியக்கும் வண்ணம், அந்த நற்காரியம் டக்கென்று முடிந்தால் ஆங்கே மூதாதையர் அருளால் குண்டலினி சக்தி சித்தியாக்கித் தந்துள்ளது என அறிதல் வேண்டும். தக்க அளவில் தான, தர்மப் புண்ய சக்திகள் இல்லாத போது இத்தகைய சித்சக்திகள் வந்துதவும். ஆனால் எப்போது வந்துதவும் எனச் சாதாரணமாகப் பகுத்துணர இயலாது.
யோகப் பூர்வமான குண்டலினி சக்திகள் வேறு! இவை பெறுதற்கரியவை! நற்காரிய சித்திக்கு உதவுபவையே குண்டலினி சித்சக்திகளாகும். எனவே தகுந்த அளவு புண்ய சக்தி இல்லாது, நற்காரியத் தடங்கல்கள் பெருத்துப் போய் வாழ்க்கையே ஸ்தம்பிக்கும் போது, குண்டலினிச் சித்சக்திகளால் நற்காரியத்தை நிறைவேற்றி வைக்க வேண்டுமானால், குண்டலினி சக்திகள் பூண்ட மகான்கள், சமாதி பெற்ற வளகாகத்தில் தக்க சத்குருவின் ஆசியுடன், வழிமுறைகளுடன் மணல் எடுத்து வைத்துப் பிருத்வி பூஜைகளை ஆற்றி வர வேண்டும். பொதுவாக பல்லாயிரம் ஆண்டுகளாக விருத்தியாகி வரும் புற்றுகளின் அருகேதான் மஹான்கள், சித்தர்கள் ஜீவசமாதி பூணுவர்.
துவிதியைத் திதி 60 நாழிகையும் வந்தமையும் நன்னாள் புற்று வகை ஆலயப் பூஜைக்கு உரித்தான நாளாகும். இந்நாளில் புற்றுகள் உள்ள ஆலயங்களில் வழிபடுதலால், பலருடைய அதர்மமான, அநாவசியமான பேச்சு, ஏச்சுக்களால் ஆழமான மனப் புண்ணை அடைந்தோர் நல்ல நிவாரணம், தீர்வுகளைப் பெற்றிட உதவும்.

ஆன்ம அழகே அழகு

திரிதியைத் திதி அழகு சக்திகளை ஆன்மீக ரீதியாக அளிக்க, உணர்த்த வல்லதாகும். தான் அழகாக இல்லையே, கருப்பாக, ஒல்லியாக இருக்கிறோமே,' என்ற வகையிலான தாழ்வு மனப்பான்மையை அகற்றி, நல்ல மனோதைரியம் பெற்று வாழ, திரிதியை நாள் தோறும் இறைமூர்த்திகளை அலங்கரித்து, மலர் கிரீடம் சார்த்தி, ஏழைப் பெண்களுக்கு பூ, மாங்கல்யச் சரடு, கண்ணாடி, வளையல் போன்ற மங்களப் பொருட்களைத் தானமாக அளித்து வர வேண்டும்.
திரிதியைத் திதி, அலங்கார வகைப் பூஜைகளுக்கு உரிய நன்னாள். இந்நாளில் நிறையப் பூக்களால் பூப் பாவாடை, மலர் கிரீடம், அலங்கார வளைவுகள் ஆக்கி ஆலயத்தில் வழிபட்டு வருதலால் அழகின்மையால் தடைபட்டுள்ள திருமண தோஷங்கள் அகல வழி பிறக்கும். திருச்சி - லால்குடி அருகே உள்ள கூகூரில் ஸ்ரீகல்யாண சுந்தரி அம்பிகையை மலர்களால் அலங்கரித்தும், பல்வகைக் காப்புகளை இட்டும் வழிபட்டு வர, வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் நிச்சயமாகக் கிட்டலாகும்.
அழகு என்பது என்ன? உள்ளமும் மனமும் களங்கமில்லாது ஒன்றும் பொருளே அழகுடைப் பொருளாகும். முருகன் என்றால் அழகு என்றும் திவ்யமான பொருளுண்டு! உண்மையில் அழகிற்கு, முருகன் என்ற பொருளைத் தவிர வேறு எந்தப் பொருளும் சாசுவதமாகாது. எளிமையான பக்திக்கு அணிகலனாக, திவ்யமான திருமேனியுடன் நேரில் தோன்றி எளிதில் ஆட்கொள்பவனே இறைவன் முருகன்! எனவே, அழகு என்பது அவயங்கள் திருத்தமாக அமைந்திருப்பது என்ற பொருளில் மட்டும் வருவதல்ல!

ஸ்ரீகல்யாண சுந்தரி அம்பாள்
கூகூர், லால்குடி

*சிவலிங்கத்தின் அழகு சீர்மையானது, சாசுவதமானது. ஸ்ரீராமரால் வழிபடப் பெற்ற மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர், இடும்பாவனம், மந்திரபுரீஸ்வரர், குருவி ராமேஸ்வரம் போன்ற தலச் சிவலிங்க மூர்த்திகள் எத்தனையோ லட்சாதி லட்சம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் திவ்யமான அழகுடன் துலங்குகின்றன. எனவே, இறைவனே சாசுவதமான அதாவது நிரந்தரமான அழகினை உடையவன் என உணரத் தொடங்கினால் தான் அழகாக இல்லையே என வருந்துதல் அடங்கி, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான நல்வழிகள் கிட்டும்.
உலகெங்கும் மனிதர்கள் யாவருமே, குறிப்பாகப் பெண்கள், எப்போதும் இளமையுடனும், அழகுடனும் துலங்கவே துடிக்கின்றனர். மனித அவயங்களில் அனைத்துமே காலப் போக்கில் மாறுதல்களை அடையக் கூடியவை என்று நன்றாகத் தெரிந்தும் தன்னை அழகுபடுத்தி, இளமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற செயற்கையான பல வகைகளில் பலரும் தினமும் முயற்சிக்கின்றனர். வயதுப் பருவங்கள் மாறி மாறி வரும் என்று நன்கு தெரிந்து, அறிந்து, உணர்ந்தும், பலரும் தம்மை இளமையாகப் புதுப்பித்துக் கொள்ள முயல்கின்றனர். தலைமுடிக்குக் கறுப்பு ரசாயன வண்ணச் சாயம் பூசுதல், இறுக்கமான உடைகளை அணிதல், முகத்தில், உடலில் பவுடர் போன்ற சாயப் பூச்சுகளை அப்புதல் போன்றவற்றில் பெரும்பாலான மனிதர்கள் கலியுகத்தில் பணம், நேரத்தைத் தினமுமே பெரிதும் விரயம் செய்கின்றனர்.
இவ்வாறு விரயம் ஆகும் நேரத்தை எவ்வாறு ஈடு செய்வது? நேரத்தை விரயமாக்குதலும் பாவச் செயலே! திரிதியைத் திதி தோறும் குறைந்தது 12 தெய்வ மூர்த்திகளை மூன்று மணி நேரமாவது கண்களால் நன்றாகக் கண்டு தரிசித்து வருதலே, மன அழகு, உள்ளத்திற்கு அழகைத் தந்து வாழ்வில் நேரத்தை விரயமாக்காது சீர்மை பெற உதவும். இறைவனைக் கண்டு தரிசிக்கும் நேரம், நேரத்தையே விருத்தி செய்து நேர விரயத்திற்கும் மாமருந்தாகிறது.

ஸ்ரீஉரோமச ரிஷி திருக்காட்டுப்பள்ளி

உதிர்கின்ற ஒவ்வொரு தலைமுடியும் புண்ணியத்தின் இழப்பே! எனவே, ஒரு முடி உதிர்ந்தால் புண்ணியமானது' பல வகைகளில் விரயமாகிறது என அறியலாம். உதிர்ந்தாலும் ஜீவசக்தி பூண்டதே உரோமமாகும். உரோமத்தில் கோடி, கோடியாய் ரகசியங்கள் உள்ளன. இவற்றை உரைக்க வல்லாரே உரோமச மகரிஷி! உரோமத்தில் ஒன்பது பகுதிகள் உண்டு. ஒவ்வொருவரிடமும் உள்ள ஒன்பது சரீர வகைளை உரோமம் மூலம் அறியும் தவசக்திகளை உரோமச மஹரிஷி, திருநெல்வேலிப் பகுதியில் ஒன்பது சிவாலயங்களின் வழிபாட்டுத் தரிசனப் பலன்களாக அமைத்துத் தந்துள்ளார். (நவகயிலாய சக்தி ஆலயங்கள்).
உரோமச மாமுனியின் உருவத்தைக் கும்பகோணம் அருகே கூந்தலூரிலும், திருக்காட்டுப்பள்ளி தலத்திலும் தரிசிக்கலாம். வழுக்கைத் தலை, இளநரை காரணமாக பலத்தத் தாழ்வு மனப்பான்மைகளுடன் வாழ்வோர், திரிதியைத் திதியில் கூந்தலூரில் இவருக்குத் தைலக் காப்பிட்டு வழிபட்டு, இறைவனுக்குத் தர்பை + மலர் கிரீடம் சார்த்தி மலர்களால் அலங்கரித்து வழிபடுதலால், நல்ல மனோதிடத்தைப் பெற்றிடலாம். தாழ்வு மனப்பான்மையும் அகலும்.
பில்லி, சூனிய, ஏவல் மந்திரங்களை, உதிர்ந்த முடி மூலம் அந்த முடிக்குரிய மனிதர் மேல் தீய விதத்தில் செலுத்தி விட வாய்ப்பு உண்டு ஆதலால் உதிரும் முடியை பூமியில் போட்டு விடாது மிகவும் கவனமாக, ஒரு மர டப்பாவில் போட்டு வைத்து, எவர் கண்களும் படாமல் பூமியில், கடலில் சேர்த்து விடுங்கள்.
பூர்வ ஜன்மங்களில் இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் ஆற்றியவர்களே, இப்பிறவியில் அழகுடன் பிறக்கின்றனர். தேஜோமயம் வேறு, வசீகரம் வேறு, அழகு வேறு! இப்பிறவியில் அழகு படைத்தவர்கள் இதனை நன்கறிதல் வேண்டும்.
இறைவனே சாசுவதமான அதாவது நிரந்தரமான அழகினை உடையவன். அழகு கிட்டக் காரணமே பூர்வ ஜன்மங்களில் இறைமூர்த்திகளை அலங்கரித்துச் செழுமையாக வழிபட்டதே என உணர்ந்து, அழகுடையோர் பண்பாடு பிறழாது, தெய்வீகப் பூர்வமாக வாழ்தல் வேண்டும். எக்காரணம் கொண்டும் தம் அழகால் அகங்காரம், ஆணவம், கர்வம், ஏற்பட்டு, குணச் சீரழிவடைந்து, அதல பாதாளத்தில் வீழ்ந்து விடாது தற்காத்துக் கொள்வதற்காக நிறையப் பூஜைகளை, குறிப்பாகத் திரிதியைத் திதி தோறும் ஆற்றி வர வேண்டும். குறிப்பாக அழகு நாச்சியாம்பாள், நாச்சியார் கோயில், சோமசுந்தரர், சுந்தரர், அழகு, சுந்தரி போன்ற அழகுப் பெயரை உள்ள இறைமூர்த்திகளைத் திரிதியைத் திதி தோறும் பட்டாடை, மலர்கீரிடம் சார்த்தி வழிபட்டு வருதல் வேண்டும்.
அழகுடன் துலங்கும் தம் ஆண், பெண் பிள்ளைகளின் அழகு பற்றிப் பல தாய்மார்களுக்கு சந்தோஷம் எனினும், கலியுகத்தில் அழகு எனில் ஆபத்துகளும் உண்டு என்று அஞ்சி, அஞ்சி, அவர்களுக்கு திருமணம் ஆகும் வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ்வது போல் வாழ்கின்றனர். அல்லவா! இத்தகைய தாய்மார்கள், முருகப் பெருமானுக்கு வாரந்தோறும் புதனன்று செவ்வந்திப் பூக்கள் கீரிடம் சார்த்தியும், சனிக் கிழமை தோறும் ஏழு முழம் பூக்களைத் தம் கரங்களாலேயே முறை தொடுத்துக் கட்டிச் சப்த கண்னியர்களுக்கு, சப்தமாதர்களுக்குச் சார்த்தி வழிபட்டு வருதலால், அழகால் ஆபத்தின்றித் தற்காத்துக் கொள்வதற்கான ரட்சா சக்திகள் கூடும். பொதுவாகத் தாமே தொடுத்த பூக்களை இறைவனுக்குச் சார்த்தி, சாதி, மத பேதமின்றி ஏழைப் பெண்களுக்கும் மங்களப் பொருட்களுடன் தானமாகஅளித்து வருதலால் அழகால் மனம் பேதலிப்படைவது அகலும்.
செவ்வாய்க் கிழமை தோறும் பூமீஸ்வரர், பூமிநாதர், ஜகதீஸ்வரர், பூலோகநாதருக்குக் கரும்பு மாலைகளைச் சார்த்தி,
அமுதக் குடச் சாரல் ஆராவமுதப் பிள்ளை
அபிடேக ஆரா தனை செய்த வாக்குளமே
அழகுடை இறைமறை அம்பிகை அருட்சாரல்
அச்சூலச் சுடராலே அம்ப சுத புதச் சோதி
அரஅரிஅம்பாதம் அழகுச் சுடரோங்கும்
அரன் பாதத் தழகாய் அறமாய்ச் செறிவதாம்!
என்று ஓதி வழிபட்டு வருதலால், அழகுடை நற்குணங்கள் பொலிய உதவும்.
எக்காரணம் கொண்டும் பணம் சம்பாதிப்பதற்காக, பத்திரிக்கைகளின் அட்டைப் படம், விளம்பரங்கள், போர்டுகள், சினிமா, நாடகம் போன்றவற்றில் தம் அழகுடை உருவத்தைப் போட்டு, அழகினைத் தவறாகப் பயன்படுத்துதல் கூடாது. ஆபாசமாக, வன்முறைத் திகிலாக நடித்து, கதை எழுதி பல்லாயிரக் கணக்கானோரின் மனதில் தவறான சஞ்சலங்களை ஏற்படுத்துவோர், தம்மால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் திருந்தி சீரடையும் வரை, கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு ஆவிகளாக அலைய வேண்டிய இழி நிலை ஏற்படும் என்பதை நன்றாக உணர வேண்டும்.
ராமாயணம், மஹாபாரதம் போன்ற அற்புதப் புராணப் பிரச்சாரத்திற்காகவே அழகானது ஆக்கப் பூர்வமாக நாடக, சினிமாப் பாத்திரங்கள் பண்போடு பயன்படுதலாக அமைதல் வேண்டும். தயவு செய்து அழகான குழந்தைகளை தவறான முறைகளில் புகழ், செல்வத்திற்கு ஆசைப்பட்டு சினிமா, நாடகத்தில் தவறான முறைகளில் அழகை வெளிக் காட்டி ஈடுபடச் செய்யாதீர்கள். தம் குழந்தைகள், பிள்ளை, பெண்களின் படங்களைப் பத்திரிக்கைகளின் அட்டைப் படம், விளம்பரங்கள், போர்டுகளில் போட்டு வைத்திடச் செய்வது பலத்த தோஷங்களையே சம்பாதித்துத் தரும்.
விளம்பரங்கள், அட்டைப் படம், சினிமா, நாடகத்தினை எல்லோரும் பண்போடு பார்ப்பார்கள் எனச் சொல்ல முடியாது அல்லவா. ஆயிரக் கணக்கானோர் காமம், பொறாமை, பேராசை எண்ணங்களுடனும் பார்ப்பதால், வேறு தவறான அணுகுமுறைகளிலும் இவை பார்க்கப் பெற்றாலும் இவை யாவும் சொல்லொணாத் துன்பங்களாக, அதிபயங்கர தோஷங்களாக படத்துக்கு உரியவர்களையும் அவர்களுடைய பெற்றோர்களையும், குடும்பத்தாரையும் தாக்கும். இவை எல்லாம் நிகழாது தற்காத்துக் கொள்ளப் பெற்றோர்களே துணை நிற்க வேண்டும். இதற்கு திரிதியைத் திதி நாளில் இறைவனுக்கு ஆற்றும் ஆலய அலங்கார பூஜைகள் உதவும். திரிதியைத் திதியில் (லட்ச) விளக்கேற்றி ஆலயத்தை அலங்கரிப்பது, அழகினைத் தவறாகப் பயன்படுத்தி பலருடைய மனதையும் மாசுபடுத்தியப் பாவ வினைகள் ஓரளவேனும் தணிய உதவும்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam