முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஆயுள் விருத்தி தரும்
அற்புத பூஜைகள்

முருகனுக்கு உகந்த ஷஷ்டியும், பூசமும் சேர்கையில் ஸ்கந்த பூசவார வரகுண சக்திகள் பூவுலகில் பூரித்து நிற்கும். இவை ஆயுள் சக்திகளை மேம்படுத்தும்.
பலரும் அறியாத வண்ணமாக உள்ள மிகவும் சக்தி வாய்ந்த சனி மூர்த்தித் தலங்களுள் ஒன்றான, விளங்குளத்தில் மிகவும் அபூர்வமாகப் பத்னியருடன் அருளும் சனீஸ்வரரை, ஆயுஷ்ய சூக்த மந்திர ஹோமப் பூஜையுடன் வழிபட்டு வருதல், பெற்றோர்கள், கணவன், மனைவியின், ஆயுள் நிலை பற்றிய அச்சங்களைத் தீர்த்திட உதவும். ஆயுள் ஸ்திரம் என்றாலே மனம், உள்ளம், உடல் நல்ல தெம்பைப் பெறுமே!
சுப முகூர்த்த நட்சத்திரங்களுள் ஒன்றான பூசம், நல்வள வரங்களைத் தருவதுடன், பல துன்பங்களுக்கும் தீர்வைத் தர வல்லதாகும். குறிப்பாக, பிறருடைய கோபம், பகைமை, குரோதம், விரோதம், பொறாமை காரணமாக எழுந்துள்ள குடும்ப மனஸ்தாபங்கள், பிரிவுகள், கோர்ட் வழக்குகள் தீர, பூச நாள் தோறும் தேனி மலை முருகன் தலத்தில் கிரிவலம் ஆற்றி வர வேண்டும்.
விளங்குளம் பூசத் தீர்த்தத்தில் சனிக் கிழமை தோறும் நீராடி, இத்தலத்தில் வழிபட்டு வர, ஆயுள் சம்பந்தமாக உடலை வருத்தும் அநாவசியமான மனக் குழப்பம், கவலைகள் அகல உதவும்.

விளங்குளம் திருத்தலம்

கோலங்களின் நடுவில் விளக்குகளை வைத்து பூச யந்த்ர தீபப் பூஜையாக வழிபடுதல் மிகவும் விசேஷமானது. கோலத்தின் நடுவில் தோன்றும் தீபப் பிரகாசம், இல்லத்திற்கு சுபிட்சத்தைத் தரும். யாவரும் இதன் பலாபலன்களைப் பெற, ஆலயத்தில் பெரிய கோலங்களை இட்டு இடையில் தீபங்களை வைத்துப் பலரும் தரிசிக்கும்படி அற்புதமான சமுதாய இறைப் பணியாக ஆற்றிடுக! கோலம் இடுவதிலும் ஒரு வகை சாந்தமான அக்னி உண்டாகிறது. எவ்வாறு?
பச்சரிசி மாவால் 24, 36 புள்ளிகள் எனக் கோலம் இடுகையில், அதில் நிறையச் சக்கரங்களும், யந்திரங்களும் உருவாகி, இந்த யந்திர, சக்கர சக்திகளால் அக்னிப் பூர்வமான அருளாசிகள் பன்மடங்காகப் பெருகி எழுகின்றன. இவ்வாறு, மகர ஜோதி போலத் தாமாக, சுயம்புவாக உருவாகும் அக்னி சக்திகள் மகத்தான ஆயுள் விருத்திக்கான நல்வரங்களைத் தருகின்றன. எனவே சஷ்டியோடு 24 மணி நேரமும் பூச நட்சத்திரம் துலங்கும் நாட்களில்
* முருகப் பெருமான் சன்னிதியில் மிகப் பெரிய கோலங்களை இட்டு, நூற்றுக் கணக்கானோர் பார்த்து மகிழும்படி அறப் பணிகளை ஆற்றிட, இதனால் பட்சிகள், எறும்புகளின் ஆசிகளும் கூடி முருகனே ஆனந்தமடைந்து அருள்கின்றார்.
* சனீஸ்வரர் தனக்குரிய பூச நாளில் முருகப் பெருமானுக்கு யந்திர வழிபாடுகளை ஆற்றுவதால், கோலமே, யந்திர, தந்திர, மந்திர, சக்கரமாக அமைந்து அருள் சக்திகளைப் பொழிவதால், சனீஸ்வரர் சன்னதி முன் பெருங் கோலமிட்டுச் சங்குப் பூக்களால் அலங்கரித்து வழிபட, சனி மூர்த்தியின் நல்ஆயுட் திற சக்திகளும் விருத்தியாகி வரும்.

சூரியப் பூக்கள்

பானு சப்தமி என்பதாக, ஞாயிறு கூடும் சப்தமி திதி நாட்களில் பானு எனும் நல்வகைச் சாந்தக் கிரணங்கள் சூரிய ஒளியில் பூரிக்கின்றன.
எனவே சூரிய ஒளியில் மலரும் பூக்களால் பானு சப்தமி அன்று சூரிய மூர்த்தி, சூரிய நாராயண சுவாமியை அர்ச்சித்தல் நன்று. சந்த்ரமதி, பானுமதி, சுக்ரமதி, குருமதி என சந்திர ஒளியில், சூரிய ஒளியில், சுக்ர கிரக ஒளியில், குரு கிரக ஒளியில் மலரும் புஷ்ப வகைகள் உண்டு. உதாரணமாக, பவள மல்லிப் புஷ்பம் பிரம்ம முகூர்த்தத்தில் சந்திர ஒளியிலும், சுக்ர கிரக ஒளியிலும், குரு கிரக ஒளியிலும் மலர்வதாகும். சில வகை அல்லிகள், தாமரைகள் சூரிய ஒளியில் மலரும்.
சூரிய ஒளியில் மலரும் புஷ்பங்களின் சாட்சியாகத் தர்ப்பணம் அளித்திடல் நலம் அல்லது ஒரு பாத்திரத்தில் நீரூற்றி, மலர்களைப் போட்டு, சூரிய ஒளியில் ஏழு நிமிடங்கள் வைத்து பானு சப்தமி சக்திகளை நிரவி, எடுத்து இவற்றின் சாட்சியாகத் தர்ப்பணம் அளித்தல் விசேஷமானதாகும்.

இனியாவது உங்களுடைய குடும்பத்தில் 24 தலைமுறைகளுக்கும் தர்ப்பணம் அளிக்கத் தொடங்கிடுக! தலைமுறைகளின் பெயர் தெரியா விட்டால், 24 + 24 நெல்லிக் கனிகளுக்குச் சந்தனப் பொட்டு வைத்து, இவற்றில் 24 தலைமுறையினரையும் ஆவாஹனம் ஆக வேண்டி, ஒவ்வொன்றாக எடுத்து வைத்து தலைமுறைக் கணக்கு விட்டுப் போகாமல், தாய், தந்தைத் தலைமுறைகளில் 24 + 24 பேருக்குத் தர்ப்பணம் அளித்திடுக!
நெல்லியின் மேல் உள்ள ஏழு பட்டைகள் சுயம்பாகத் தோன்றிய பட்டைகள்! சப்தமித் திதி தோறும் பட்டை லிங்கங்கள் உள்ள தலங்களில், சூரிய மூர்த்தி வழிபட்டுத் தம் கிரணங்களைப் பரிசுத்தப் படுத்திக் கொள்வதால், இந்நாளில் லிங்கத்தின் மேல் பட்டை உள்ள தலங்களிலும், நெல்லி மாலை சார்த்தி, நெல்லி தல மரமாக உள்ள இடங்களிலும் (சித்துக்காடு) நெல்லிக்காய் துவையல், நெல்லிப் பச்சடி, நெல்லிக்காய் ஊறுகாயுடன் அன்னதானம் அளித்தலால், கண் நோய்கள் தீர நற்பரிகாரங்கள் கிட்டும். கண் பார்வை விருத்தி ஆகவும் உதவும். மேலும் தம் பிள்ளைகள், தம் பெண்களால் பலவிதங்களில் அவமானம் அடைந்தோர், நன்முறையில் மீட்சி பெற்று நல்லுறவு மலர துணை புரியும்.

கனவால் களையாத
தூக்கம் வேண்டுமா ?

உறக்கத்தில் உண்டாகும் உடற் சூடு பரணி அக்னி வகையைச் சார்ந்தது. கிரக சஞ்சாரங்கள் இன்றி மானுட வாழ்க்கை ஒரு விநாடிக் காலம் கூட நகராது என்பதை அறிதல் வேண்டும். உறக்கம் என்பது கால நிலைகளைக் கடந்ததாகத் தோன்றுகிறது அல்லவா! உறக்க நிலைகளில் பல்லாயிரம் வகைகள் உண்டு. ஓய்வு, களைப்படைந்து உறங்குதல், இரவு வந்தால் உறங்குதல், கண்கள் சுழன்று உறக்கம் வந்து உறங்குதல் போன்ற வகைகளில்தாம் மக்கள் செயற்கையாக தற்போது கலியுகத்தில் உறங்கத் தலைப்படுகின்றனர். ஆனால் உறக்கம் என்பது யோக வகைகளில் ஒன்று, இதனை முறையாகப் பெற வேண்டும் என்ற உத்தம நோக்கில் உறக்கத்தைக் கையாளுபவர்கள் ஒரு சிலரே!
எப்போதும் தெய்வீகச் சிந்தனைகளில், அறப் பணிகளில் திளைப்போர்க்கு உறக்க யோக நிலைகள் தாமாகவே வந்தமையும்.

சயனக்கோல ஸ்ரீராமர்
புள்ளபூதங்குடி

ஆனால் தூங்கும்போது இத்தகைய யோக உணர்வுகளே ஏற்படுவதாகத் தெரியவில்லையே! இவற்றை எல்லாம் அறியாது கோடிக் கணக்கான மக்கள் வாழவில்லையா? என்று எண்ணிடாதீர்கள்! தக்க சத்குருவை நாடும் மனப்பான்மையைப் பெறாமையால்தான், வாழ்வில் பலரும் இவ்வாறான எளிமையான யோக சக்தி முறைகளையும் இழந்து விடுகின்றனர்.
இறைவன் யோக சக்திகளை எளிதில் பெற ஒரு நல்வழி மார்கத்தை உறக்கம், தியானம் போன்ற வகைகளில் அளித்திருக்கும்போது, அதனை நன்கு பயன்படுத்திட வேண்டும் அல்லவா! இல்லையெனில் இறைவன் அளித்துள்ள ஆறறிவுப் பகுத்தறிவை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வில்லை என்பதாகிறதே!
எனவே, கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும், கருப்பை உயிருக்குமாக அனைவருக்கும் இறைவன் உணவளிக்கின்றான் என்ற வேத சத்திய வாக்கியத்தில், உணவு என்பது உடற் குடல் நிரம்பும் உணவுத் திரவியங்கள் மட்டுமல்ல! பிராண சக்தி, தியான சக்தி, யோக சக்தி, யோகமார்க உறக்க சயன சக்தி, உணவு சக்தி எனப் பல வகைகளிலும் இறைவன் உணவளித்து வருகின்றான் என்பதே இதன் உண்மைப் பொருளாகும். உறக்கம் முடிந்ததும் களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சி வரக் காரணமே, உறக்கத்தில் கிட்டும் யோகமார்கமான உணவு, அக்னி, தியான சக்திகளாகும். எனவே உறக்கம் என்பது யோகமார்கமாக பல்வகை சக்திப் பூர்வமான உணவை ஏற்கும் யோகபாவனக் காலமும் ஆகும்.
மேலும், உறக்கத்தில்தாம் பலவிதமான சூக்கும வான்மார்கப் பயணங்கள் (astral travel) ஏற்படுகின்றன. உறக்கம் என்பது இவ்வகையில் அற்புதமான யோகமார்கமே என்பதைப் பன்முறை எடுத்துரைத்து வருகின்றோம் அல்லவா! உறக்கத்தின் சில நிலைகளில், உலக மக்கள் யாவருமே பிற வகைச் சரீரங்களில், பிற லோகங்களில் வாழ்ந்து வருகின்றனர் என்பதே யோக உறக்க நிலை ரகசியங்களில் ஒன்றாகும். ஆனால், உறக்கம் என்பது வெறும் ஓய்வு நிலை என்றே ஆங்கில மருத்துவத் துறையில் உரைத்து ஒதுக்கி, இதன் தாத்பர்யங்ளை, வானசாத்திரக் கூறுகள் போல் முறையாக உண்மைகளை அறிய இயலாது விட்டு விடுகின்றார்கள்.
ஆங்கில மருத்துவக் குறிப்புகளையே தற்போது உலக அரசாங்கங்களும் மானுட சமுதாயமும் பெரிதும் ஏற்று, அங்கீகரித்தும், நம்பியும் வருவதால் ஆங்கில மருந்துகளின் விபரீதமான பக்க விளைவுகளையும் வேறு வழியில்லாமல் ஏற்க வேண்டிய கட்டாயம் உலக மக்கள் சமுதாயத்திற்கு வந்து விட்டது. இவற்றை ஓரளவேனும் அகற்ற, உறக்க நிலைகளில் யோக சக்திகளைப் பேணுதல் வேண்டும். இதற்காகவே சயனக் கோல மூர்த்திகளை மூலிகை வகை அபிஷேக, ஆராதனைகளுடனும், பாதங்களில் மூலிகைக் காப்பிட்டும் வழிபட்டு வருதல் வேண்டும்.

சயனக்கோல ஸ்ரீராமர்
திருப்புல்லாணி

புளூட்டோ, நெப்டியூன், யுரேனஸ் ஆகிய மூன்றும் தற்கால வான சாஸ்திரம் மற்றும் ஜோதிடக் கணிப்புகளிலும், ஆன்மீகப் பூர்வமாகவும் இடம் பெற்று, உறக்க நிலை, வானயோக சாத்திரக் கூறுகள் பற்றிய கோள் குணங்களைக் கொண்டும் வருகின்றன. தொன்மையான பாரத ஜோதிடத் தத்துவங்களில் இவை குறிக்கப் பெறவில்லை, இவை அயல்நாட்டவரால் சமீப காலங்களில் கண்டுபிடிக்கப் பெற்றவை என்றெல்லாம் கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் அனைவரும் பூர்வ ஜன்மத்தில் பாரதச் சனாதன நாட்டவர்தாமே! இங்கு வானசாத்திரத்தில் பூர்வ ஜன்மங்களில் வல்லுநர்களானவர்களே தற்போது இவற்றைக் காண்கின்றார்கள்.
புனிதமான பாரத நாடே சனாதன தர்ம நாடாக, கிருத யுகத்திற்கும் முந்தைய யுகந் தொட்டு உலகளாவிய பாரதத் திருநாடாகப் பொலிந்தது அன்றோ! முந்தைய திரேதா யுகத்தில், ராம ராஜ்யமாக தற்போதைய பூமி, ஆப்பிரிக்க, ஐரோப்பாவையும் கடந்து விரிந்து, நிறைந்து, சிறந்து பொலிந்தது. தற்போதைய ஐந்து கண்டப் பகுதிகள் பின்னால் விளைந்தவையே! எனவேதான் பூவுல ஜீவ நலன்களுக்காக, இறைக் கடமையாக, ஆலயங்களில் ஆறு வேளை பூஜைகள் அகில உலக ஜீவசமுதாய நலவள பூஜையாக நிகழ்கின்றன.
எனவே இன்று ஸ்ரீரங்கநாதர், சுரட்டப்பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் போன்று சயனக் கோல மூர்த்திகளை, குறிப்பாக, ராமராஜ்யம் நிறுவிய ஸ்ரீராமரின் சயனக் கோலத் திருஉருவைப் பூஜித்து (கும்பகோணம் அருகில் புள்ளபூதங்குடி, செங்கல்பட்டு அருகே பொன் விளைந்த களத்தூரில் ஸ்ரீராமரின் சயனக் கோலங்கள்) உறக்க நிலை யோக சக்திகளைப் பூவுலக மக்கள் பெற வேண்டிப் பொதுச் சமுதாயப் பூஜைகளை ஆற்றிடுங்கள்!
கொத்துக் கொத்தாகப் பூக்கும் பூக்களை, காய்களைச் (சமைத்து), பழங்களைத் தானமாக அளித்தல் விசேஷமானது. தூக்கம் வராமல் அவதியுறுவோர் நல்ல நலம் பெற இது உதவும். கெட்ட கனவுகளால் அபசகுனம் அடைவோர் தக்கத் தீர்வுகளைப் பெறுவர்.

மனக் கிலேசங்கள் எப்படி உருவாகின்றன ?

நட்சத்திரங்கள், கோள் மூர்த்திகளின் அருள் நற்பார்வை இல்லாது, பூவுலகில் ஜீவ வாழ்வு நடைபெறாது. நாம் ஒளியைப் பார்ப்பது இருக்க ஒளிக் கிரணங்கள் நம்மைப் பார்ப்பதால்தான் கிரகப் பார்வை எனச் சொல்கிறோம். அதாவது பூமியில் மனிதர்களின், அனைத்து ஜீவன்களின் வாழ்க்கை, வெறும் பூமி சம்பந்தமான வாழ்க்கைக் காரியங்களோடு மட்டும் அமைவது கிடையாது. வானப் புவி அம்சங்களுடன் பின்னிப் பிணைந்ததாகும். ஆம், வானத்தையும் வாழ்க்கைப் பூர்வ விளக்கங்களில் வானப் புவி என்றே சித்தர்கள் அழைக்கின்றனர். இவ்வாறு வானியல் தாரைகள், நட்சத்திரங்கள் புவி வாழ்க்கை அம்சங்களை இயக்குவதையே, சூக்குமமாக, பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம், நடப்புத் தசை, புக்தி, அந்தரம் என ஜாதகப் பூர்வமாக ராசிச் சக்கரமாக விளக்கப்படுகின்றது.
அதாவது வானியல் அம்சங்கள் பலவும் மனித உடலிலும் பதிந்துள்ளன. உதாரணமாக, ஒருவருக்குக் கால் கட்டை விரலில் காயம் ஏற்படுகிறது என்றால், கட்டை விரல் சுக்ர கிரக அம்சம் ஆதலின், இந்த கிரக சக்திகள் அன்று கோசாரப் பூர்வமாக, நீச்சமாக உள்ளன, அவர் சுக்ர கிரக வழிபாடுகளைக் கூடுதலாக மேற்கொண்டு கடைபிடித்திட வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது.

ஸ்ரீஅகஸ்தியர் திருப்புறம்பியம்

எனவே, மனிதன் தினமுமே தாம் ஆன்மப் பூர்வமாக எங்கு இருக்கிறோம் என்பதை உணர கிரக சஞ்சார நிலைகள் மிகவும் உதவும். மனித மனமும் ஒரு கோள் வகையே! இது பிரதட்சிணமாகவும், அப்பிரதட்சிணமாகவும் இறைவனைத் தவிர எதையாவது சுற்றி வந்து கொண்டு இருக்கும்! இவ்வாறு தினமுமே தன் நிலையைத் தானே அறிந்து கொள்ள, ஒவ்வொரு விநாடியும் தன்னைச் சுற்றி ஏற்படும் மாற்றங்களை மனிதன் நன்கு கவனித்தல் வேண்டும்.
ஒரு இலை அசைவிற்கும் கூட ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு. காரண, காரியமின்றி எதுவும் உலகில் நிகழ்வதில்லை என்பதை உணர்த்துவதாயும் கோள் (கிரகச்) நகர்வுகள் அல்லது சலனங்கள் அமைகின்றன! சலனம் என்றால் மாறுவது, அசைவது ஆகும். இதைத்தான் மாயை என்கிறோம். மாறிக் கொண்டே இருப்பதே மாயை! மாறாமல் சாசுவதமாக இருப்பதே பரம்பொருளாம் இறைவன்!
ஒவ்வொரு கண் இமைக்கும் நேரத்திலும், ஒவ்வொரு நொடியிலும், விநாடியிலும் (நொடி வேறு, விநாடி வேறு), நிமிடத்திலும் பூவுலகில் வானில், மண்ணில், வளியில், ஒளியில், ஒலியில், நீரில், நெருப்பில் ஏற்படும் மாற்றங்கள், சுற்றுப் புறச் சூழ்நிலைச் சலனங்கள் பற்றிய நிறையக் குறிப்புகள், பஞ்சாங்கம் மூலமாகவும் ஒவ்வொருவருக்கும் கோள் மூர்த்திகளால் மனித குலத்திற்கு நிறையவே அளிக்கப் பெறுகின்றன.
இவ்வகையில் செவ்வாயும், நவமியும் இணையும் நாட்களில் துர்காக்னி சக்திப் பிரவாகம் ஏற்படும்.  இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள தேங்காய் கொப்பறையில் பசு நெய் ஊற்றித் தீபம் ஏற்றி வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். தேங்காய் என்பது பிரபஞ்சத்தின் பிருத்வி வடிவாகும்.
பூமியிலும், வானிலும், நீரிலும், நெருப்பிலுமாய் எங்கும் தோன்ற வல்ல, சித்தர்கள், மகரிஷிகளே ஜீவன்களுக்கு வான்-புவி நல்மார்கங்களை அளிக்க வல்லவர்கள். எனவே, இந்நாளில் ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீதுர்வாசர் போன்ற சித்தர்கள், மகரிஷிகளின் வடிவங்கள் உள்ள ஆலயத்தில் உள்ள துர்க்கை மூர்த்திக்கு எலுமிச்சைக் கனி உறை தீபங்களுடன் தேங்காய்க் கொப்பறையில் தீபம் ஏற்றுதல் மிகவும் சிறப்புடையதாகும். இதனால் மனக் கிலேசங்கள் எனப்படுவதான, இதுவா, அதுவா, இப்படியா, அப்படியா? என நற்காரிய முடிவில் ஏற்படும் சலனங்களைத் தீர்த்து, தீர்கமான முடிவு எடுக்க உதவும்.

எது பகுத்தறிவு ?

தசமூலாரிஷ்டம் என்பது தசமூலிகா திரவியங்களால் ஆகும் அதியற்புத ஆயுர்வேத மருந்து. தச வாயுக்களும் மூளையை இயக்கும் பிராணாக்னி சக்திகளுக்குத் துணை புரிவதால், தசவாயு சக்திகளும் பகுத்தறிவைத் திறம்பட இயக்க உதவுகின்றன. பிற ஜீவன்களிடம் இருந்து மனிதன் பத்து விதமான ஆன்மீகப் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். இதனைத் தவறாகவோ, இழிநிலையாகக் கொள்ளக் கூடாது. இதனைத் தான் தத்தாத்ரேயரின் தெய்வீக அனுபூதிகள் புலப்படுத்துகின்றன.
தற்போதையக் கலியுக மனித சமுதாயம், தனக்கு இறைவன் அளித்துள்ள ஆறு வகை அறிவுகளை முழுமையாகப் பயன்படுத்தி வாழவில்லை! எனவே, பிற ஜீவன்களுக்கு நற்பாடம் புகட்டி, அவற்றைக் கரையேற்ற வல்ல பலத்த ஆன்மீக சக்திகளை உடைய மனிதன், கலியுகத்தில் பிற ஜீவன்களிடமிருந்தே நிறையப் பாடங்களை அறிய வேண்டிய நிலையில் உள்ளான்.
அறிவு முடக்கம், அறிவு மயக்கம், அறிவுச் சுணக்கம், அறிவுச் சுருக்கம், அறிவுக் குறுக்கம், அறிவுக் கலக்கம் போன்ற ஆறு வகைப் பகுத்தறிவு மறையும் நிலைகளுக்குத் தினந்தோறும் மனிதன் ஆட்படுகின்றான். இவற்றைப் பொதுவாக, பகுத்தறிவை இழக்கச் செய்யும் அறிவு மயக்க நிலைகளாக உரைக்கின்றார்கள். மது, புகை, புகையிலை, பகைமை, குரோதம், விரோதம், கோபம், பொறாமை, முறையற்ற காம நோக்குகள், அதர்மமான எண்ணங்கள் போன்ற பத்தும் அறிவு மயக்க நிலைகளைத் தருபவையாகும். சித்தர்கள், மஹரிஷிகளின் ஜீவசமாதிகளில் அடிக்கடி வழிபட்டு வந்தால், இவ்வாறு அறிவு மயக்க நிலைகளுக்கு ஆட்படாமல் தற்காத்துக் கொள்ளலாம். மேலும், அறிவுப் புலன்களும் நன்கு மேம்படும்.

திருவஹிந்தி

உண்மையில் குறைந்த அறிவுடைய யாவையும், மேற்கண்ட பல அறிவு மயக்க நிலைகளுக்கு ஆட்படாது இருக்கின்றன. மனிதனைப் போலத் தனக்குரிய அறிவு நிலையில் இருந்து கீழிறங்காது, தாவரங்களும், விலங்குகளும் தமக்குரிய குறைந்த அறிவு நிலைகளிலும், தத்தம் அறிவு நிலைகளில் பரிபூரணமாக எவ்வித அறிவு மயக்கத்திற்கும் ஆட்படாது வாழ்கின்றன. பெறுதற்கரிய ஆறறிவை மனித குலம் பெற்று இருப்பதால், இவை, மனித குலத்தைப் பெரிதும் மதித்துப் போற்றுகின்றன. மேலும், அவை தம் தவ சக்திகளை ஈந்து, மனிதகுலம், இறைப் பகுத்தறிவோடு தழைக்கவும் துணை புரிகின்றன.
இதோடு, பல தாவரங்களும், பறவைகளும், விலங்குகளும் பல மூலிகா சக்திகளைப் பூண்டவையாகவும், மூலிகா வகை உணவு, திரவியங்களை ஏற்பதாலும், பிற ஜீவன்கள் மூலமாகவும் மூலிகா ஞானப் பூர்வமாக மனிதன் அறிய வேண்டுபவை நிறைய உள்ளன. மேலும், அவரவருடைய பூர்வ ஜன்ம உறவினர்களே, உற்றம், சுற்றமே தாவரங்கள், விலங்குகளாய்ப் பிறப்பெடுப்பதால், பலர் வீட்டில் வளரும் தாவரங்கள், மிருகங்கள் இவ்வாறு பூர்வத் தொடர்பு கொண்டவையே!
இதனை எவ்வாறு உணர்வது, அறிவது? அடுத்த முறை ஒரு குருவியோ, காக்கையோ, அணிலோ, நாயோ வந்து, அதனதனுடைய குரலில் சொல்வதை சற்று உன்னித்துக் கேட்டுப் பாருங்கள்! நாளடைவில் அவற்றுடன் உங்கள் மனதில் இயற்கையாகவே ஓர் உரையாடல் இழைவதை நன்கு உணரலாம். இவை எல்லாம் வானியல் ஞானப் பாடங்களில் அமைவதாகும்.
ஈஸ்வரி, இறைவனின் திருக்கண்களைப் பொத்திட, உலகமே ஒளியை இழந்து அனைத்து உலக வஸ்துக்களும் ஸ்தம்பித்துப் போயின என்பதன் மூலம் இறைவனளித்த நற்பாடம் யாதோ? இறைவன் படைத்தளிக்கும் கிரக, நட்சத்திரங்கள் யாவும் உலக ஜீவன், ஜடமற்றவை என யாவர்க்கும், யாவைக்கும் துணை புரிபவை, வானியல் தரிசனங்கள் இல்லையெனில், உலக வாழ்வென்ன, பிரபஞ்ச வாழ்வே ஸ்தம்பித்து விடும் என்பதை அம்பிகையே நமக்கு உணர்வித்த அனுபூதிதானே இது!

மேலும், இதன் மூலம் அம்பிகையும், பூலோக ஜீவன்கள் எத்தகைய அறிவு மயக்கத்திலும் சிக்காது தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை ஜீவன்களுக்காகப் பெற்றுத் தந்திடும்படி இறைவனிடம் கேட்டிடவே, ஈஸ்வரனும், “உலகம்மையே! இப்பூவுலகில் நட்சத்திர லிங்கங்கள், நட்சத்திர விருட்சங்கள், நட்சத்திர மரங்கள், புண்ணிய விருட்சங்கள், ஜோதி விருட்சங்கள் எனப் பலவும் கலியுகத்தில் வான சாத்திர சக்திகளைப் பெறுவதற்காக அளிக்கப் பெறும். இவற்றை முறையாக வழிபட்டு வந்து, தக்க அனுகிரகங்களைப் பெற்று வந்தால், வானியல் தவசக்திகளும் தக்க சத்குரு மூலமாக அளிக்கப் பெறும். இவற்றை மேம்படுத்துவதற்கான அருட்தலங்கள் ஏற்படும்!'' என அருளினார்.
ஆனால் இவற்றை எல்லாம் அம்பிகை பெற்றளித்தும், இவற்றைத் தக்க சத்குரு மூலம் உணர முடியாமல் மனிதன், அஞ்ஞானமாகிய பலத்த அறியாமைக் கூடத்தில் சிக்கி, பகுத்தறிவின்மை, பகுத்தறிவு சக்திகளைப் பயன்படுத்தாமை, நம்பிக்கையின்மை, சிரத்தையின்மை, நல்ஒழுக்கம் இன்மை போன்றவற்றுக்குள் சிக்கிக் கொண்டு, வெறும் ஜடமாகவே, வாழ்ந்து வருகின்ற நிலையே நிலவுகிறது! இதற்காகவே எப்போதும் சிவஜோதிப் பிரகாசத்தைப் பொழியும் திருஅண்ணாமலையில், நாளொரு மேனியாகச் சித்தர்களும், மஹரிஷிகளும் அருணாசல கிரிவலத்தை, எப்போதும், எந்நேரமும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.

விளக்கெண்ணெய் தசவாயு சுத்தி மூலிகா சக்திகளைக் கொண்டதாகும். ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீஞானசரஸ்வதி, ஸ்ரீஞானாம்பிகை, ஸ்ரீஞானேஸ்வரர், ஸ்ரீதீபப் பிரகாசப் பெருமாள், ஸ்ரீவேதபுரீஸ்வரர், ஸ்ரீவிளக்கொளிப் பெருமாள், ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் என்றவாறான, புத்திப் பிரகாச நல்வர மூர்த்தி ஆலயங்களில், விளக்கெண்ணெய்த் தீபம் ஏற்றி வழிபடுதல் விசேஷமானதாகும். மந்தபுத்தி எனப் பலராலும் இகழப்படுவோர், மேற்கண்ட ஞான தெய்வ மூர்த்தி ஆலயங்களில் புத ஹோரை நேரத்தில் விளக்கெண்ணெய்த் தீபம் ஏற்றி வழிபட்டு வருதல் நற்பலன்களைத் தரும்.

எண் நஷ்டங்கள் இனியில்லை

ஏகம் என்பதற்குத் தனித்து இருத்தல், முதலாக இருத்தல் என்று பொருளாகும். முதல் பத்துத் திதிகளும் ஏகமுக தசம் எனப்படும். சத்குருவின் அருள் கூடினால்தான், அனைத்து இறை சக்திகளோடும் இணைந்து சாசுவதமாக, அருட்பூர்வமாக எப்பிறவியிலும் இருக்க முடியும். இல்லையெனில் ஏகம் பிரிந்து விடும். ஜாதி, மத வேறுபாடின்றி சத்சங்கப் பூர்வமாகப் பலருடன் சேர்ந்து பூஜை ஆற்றுதலே, கலியுகத்தில் சிறப்பானது எனும்போது, தனித்து இருத்தலாகிய ஏகப் பூர்வம், எப்படி ஆன்மீக ரீதியாக ஆகி ஒத்து வரும் எனக் கேட்கலாம்! இதற்கான பதிலைத் தான் காலசந்தி விளக்கங்களாகச் சித்தர்கள் நன்கு தெளிவாக உரைக்கின்றார்கள்.
நட்சத்திரங்கள், கோள்கள் வானில் தனித்து இருந்தாலும், அவை பல அம்சங்களில் சேர்ந்து வருவதே விநாடி, நொடி, திதி, யோகம், கரணம், மணி, நாள் எனும் காலசந்தி வகை ஆகின்றது அல்லவா! விரதங்களும், பண்டிகைகளும் மாத - திதி- நட்சத்திரக் காலசங்கமம் தாமே!

இதே போலத்தான் ஏகம் என்ற ஒன்று தனிப்பட்டதல்ல, அனைத்தும் சேர்ந்து ஒன்றாகி வருவதே ஆகும்! எனவே, ஏகத்தில்தான் சத்சங்க சக்திகள் நிறைகின்றன. இதனால்தான் அனைத்தையும் உள்ளடக்கியதாக, திருஅண்ணாமலையில் பத்தாக, பலவாக விரிந்த அருணாசலத் தரிசனங்கள் பலவும் ஒரே முகமாகிட, ஏகமுக தரிசனப் பகுதியில்தாம் ஸ்ரீரமண மஹரிஷி தம் பூஜ்ய நிலையை அடைந்தார். அதாவது அனைத்தையும் பெற வல்ல, தர வல்ல தியான, யோகப் பரல்களில் துய்த்து, அருணாசல ஜோதியில் ஐக்யம் கொண்டார்.

ஏகமுக லிங்க தரிசனம்
திருஅண்ணாமலை

ஆம், ரமணரின் ஆஷ்ரமம் அருகே இருந்து அருணாசல மலையைத் தரிசனம் செய்தால், மலையின் அனைத்து முகங்களும் ஒன்றாகி ஏக முகமாகத் தெரியும். ஏகாதசித் திதியில் விரதமிருந்து, இந்த ஏக முகத் தரிசனப் பகுதியில் கிரிவலம் தொடங்கி, இதிலேயே நிறைவு செய்து, பூஜ்ய வடிவிலான பல்வகைப் பண்டங்களைத் தானமாக அளித்தலால், மனம் ஒருமித்துத் தியானிக்க வழி பிறக்கும். ஆனால் இது ஏக தடவையில் அல்லது ஒரே தடவையில் வந்தமைவதன்று!
உண்மையில் ஏகமாகிய ஒன்று என்பது, முதன்மையானது அல்ல, பூஜ்யம்தான் முதல் ஆகும். எவ்வாறு விரிந்து கிடக்கும் வானப் பரவெளியை, விஞ்ஞானத்தால் கூட, அரைக்கால் வீச சதவிகிதம் கூட அறிய முடியவில்லையோ, இதே போல, எவ்வகை அறிவாலும், பூஜ்யத்தைப் புரிந்து கொள்ள இயலாமையால்தான், ஏனைய வடிவங்கள் மூலம் பூஜ்யத்தின் சக்திகளை ஓரளவேனும் அறிகின்றோம்.

பூஜ்யத்தில் இருந்துதான் அனைத்து சக்திகளும் பிறந்தன. எனவே, புனிதமான இறைதரிசனம் கண்ட உத்தம இறைப் பெரியோர்களையே பூஜ்யஸ்ரீ எனப் போற்றுகின்றனர். பல எண் வடிவங்களும், பூஜ்யத்தின் சக்தி வடிவங்களே ஆகும். எவ்வாறு அனைத்து நட்சத்திரங்கள், கோள்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தின் அளவையோ, வடிவையோ, பிரமாணத்தையோ எதனாலும், எப்படியும் விண்டுரைக்க இயலாதோ, இதே போல பூஜ்யத்தின் எல்லையில்லா விரிவையும், குருவருளின்றிப் பகுத்துரைக்க இயலாது என்று தெளிவதே பகுத்தறிவாகும்.
பூஜ்ய சக்திகள் அளப்பரியன. இதனால்தான் பூஜ்யத்தில் தொடங்கி, 1 முதல் 10 வரை தசத்தில் முடித்து, மீண்டும் 11ல் தொடங்குவது போல, மீண்டும் மீண்டும் பூஜ்ய சக்திகள் தொடங்குவதாக, ஏகாதசி ஆகின்றது.  குறிப்பிட்டது போல, 10, 20, 30, 40 எனப் பூஜ்ய சக்திகள், 0 ல் முடிந்து, 11, 21, 31, 41 என மீண்டும் தொடங்கி, மீண்டும், மீண்டும் பூஜ்ய சக்திகள் பிறந்து கொண்டே இருக்கும். இதனால்தான் ஜீவவாழ்க்கை தொடர்ந்து நிகழ்கின்றது. மேலும் கம்ப்யூடர் துறையின் மூலாதார சக்திகள் கூட, 01, 10 என்று மாறி, மாறி வந்து கொண்டே இருக்கும்.

ஞான சக்திகள், வேத சக்திகள், தியான சக்திகள், யோக சக்திகள், பூஜை சக்திகள் பூவுலகில் மறைந்து கொண்டே வருவதால், எண் சக்திகள் மூலமாக ஜீவன்களுக்கு இவற்றை ஓரளவேனும் அளித்திடவே, கம்ப்யூட்டர் துறை பிறந்தது. எந்த எண் சக்திகளை விருத்தி செய்திட, வித்யைத் துறையாகக் கம்ப்யூடர் பிறந்ததோ, அதே கம்ப்யூடரைக் கொண்டு எண் சக்திகளை தவறாகப் பயன்படுத்தி, விஞ்ஞான உலகம், ஆயுதங்களைக் கையாளவும், உளவுத் துறைக்குமாக பல தவறான வழிமுறைகளில், எண் சக்திகளைத் துஷ்பிரயோகம் செய்கிறது.
எனவே எண் சக்தி நாட்களில் அஷ்டோத்திரம், சஹஸ்ரநாம அர்ச்சனைகளாக, எண் வகைகளில் பன்மடங்கு அர்ச்சனை, அபிஷேக, ஆராதனைகளாகவும், மதுரை அருகே பேரையூர், திடியன் மலை போன்ற எண் சக்தித் தலங்களிலும், நிறைய மூர்த்திகள் உள்ள தலங்களிலும் வழிபடுதலால், எண் வகையில் ஏற்பட்ட நஷ்டங்கள் தீர ஓரளவேனும் வழி பிறக்கும்.

மயில் நீக்கும் தோஷங்கள்

சில தருணங்களில் குப்பையையும் ஒரு செல்வமாகக் கொள்வர். ஸ்ரீஜேஷ்டா தேவி துடைப்பத்தைத் தாங்கி, தரித்திரத்தை நீக்குகிறாள். மாலையில் விளக்கேற்றியவுடன் குப்பையை வெளியே கொட்டுவதும் கிடையாது. குப்பைச் சித்தரும் அன்றும், இன்றுமாய்க் குப்பையுள் மாணிக்கமாய் எப்போதும் குப்பை அருகேதான், நறுமண மல்லிகை மணத்துடன் துலங்கித் தரிசனம் தந்து அருள்வார்.
மயில் பீலிகைக்குப் பல வகையான தரித்திர தோஷங்களை நீக்க வல்ல சக்திகள் உண்டு. மயிற் கழுத்து நீல வண்ணம், மயில் தோகையில் இணையும் மயூரப் பச்சை, மயூர நீலமும் கண்களுக்குக் குளுமை தர வல்லவை! மனக் கொந்தளிப்புகளைச் சிறிது நேரமேனும் மாற்றித் தந்து நல்ல தருணங்களை அருள்வதே அழகு மயிலின் தோகை விரி தரிசனமாகும்.
முருகப் பெருமானின் வாகனமாகவும், ஸ்ரீகிருஷ்ணனின் தலைக் கிரீடமாகவும் அமைவதால், பலவிதமான தெய்வானுகிரகங்களை அளிக்க வல்லதே மயிற் பீலிகை! ஆனால், மயிலின் உடலில் இருந்தே, தானே கீழே உதிர்ந்து விழும் இறகுகளையே தெய்வ மூர்த்திகளுக்கானப் பூஜை சாதனங்களாகப் பயன்படுத்துதல் வேண்டும். சித்தர்கள், மஹரிஷிகளின் ஜீவ சமாதிகளில், ஜீவாலயங்களில் மயிற் பீலிகையால் ஆலவட்டம் வீசும் கைங்கர்யந்தனை ஆற்றி வருதலானது, வறுமைப் பீடிப்பு அகல உதவும்.
இஸ்லாமிய மஹான்களின் ஜீவாலயங்களிலும், சந்தனக் கூடு வைபவங்களிலும், மயிற் பீலிகையால் சாம்பிராணி தூபம் விசிறப் பெறுவதற்கான அற்புத ஆன்மீகக் காரணங்களுள் ஒன்றே, மயில் இறகுகள் பலவிதமான தெய்வ சக்திகளை நிரவ வல்ல சக்திகளைப் பூண்டிருப்பதும் ஆகும்! விண்ணுக்கும், மண்ணுக்கும் நற்கதிர்களை விரவிப் பரவெளியைச் சுத்திகரிக்கும் ஆன்ம சக்திகளைக் கொண்டதே மயிற் பீலிகையாகும்.

ஸ்ரீஞானாம்பிகை குடவாசல்

முற்காலத்தில், சித்தர்களும், மஹான்களும் மயில் பீலிகை கொண்டு எண்ணற்ற அற்புதங்களை ஆற்றி, ஜீவன்கள் நன்கு வாழ அருட் பூர்வமாக உதவினர். இவற்றில் இருந்து அற்புதமானக் காயகல்ப மருந்துகள் ஆக்கப் பெறுகின்றன. இயற்கையாக உதிரும் பீலிகைகளில் இருந்து மயிற் பீலித் தைலம் தயாரிக்கப்படுகிறது. தூய வெண்ணிறத்தில் அமைந்த மயிற் பீலிக் கத்தையை, ஸ்ரீகபாலீஸ்வரர், குடுமீஸ்வரர் எனவாக, சிரசு பரிபாலன அனுகிரக சக்திகளை அருள்கின்ற சுயம்பு மூர்த்திகளின் பாதங்களில், சிரசில் வைத்துப் பெற்றுக் காதில் வைத்துச் செருகிய நிலையில், நந்தியாவட்டைப் புஷ்பங்களால் அர்ச்சித்துப் பூஜித்து வந்தால், காது மந்தம், தலைவலி, நரம்பு வலி, ஒற்றைத் தலைவலி சம்பந்தமான நோய்கள் தீர உதவும்.
மருந்துத் திரவியங்களின் நோய் நிவாரண சக்திகள் நன்கு விருத்தியாக, மருந்துகளை குறித்த காலத்திற்கு மயில் இறகுகளுக்குள், பீலிகைகளின் மேல் வைப்பதும் உண்டு. மயிலிறகால் அமையும் அஞ்சன (மை) வகைகளும் உண்டு. இத்தகைய அஞ்சனங்களை மயில் இறகுகளாலான விசிறியில் பூசி, சாம்பிராணி தூபத்தை விசிறிட, இந்த அஞ்சனக் காற்று பட்டு வருகின்ற தூபக் காற்றானது, பலவிதமான பகை, தோஷ, விரோதத் துன்பங்களையும் நிவர்த்தி செய்யும். அனைத்துக் கடைகளிலும், வியாபாரத் தலங்களிலும், செவ்வாய், வெள்ளி தோறும் செய்து வர வேண்டும்.
பசுஞ்சாணி விபூதி, பசுஞ் சாணி வறட்டி போல, எவ்வகைத் தோஷங்களும், தீட்டுக்களும் அண்டாததே மயிற் பீலிகை என்பதால்தான், இயற்கையாக உதிர்ந்த மயில் இறகு விசிறியால், ஆலயத்தில், வீட்டில், பூஜையில் அனைத்து மூர்த்திகளுக்கும் மெதுவாக, பணிவாக, சரணாகதி பாவனையுடன் விசிறி, மயூர சதகத் துதிகளை ஓதியவாறு வழிபடுதலால், அதிகமான அளவில், அளவுக்கு மீறிய வகையில், வாய் தவறியும் அறிந்தோ அறியாலேயும் எதிர்த்துப் பேசியதால் வந்த பகைமை, பயங்கர விளைவுகள், உறவு முறிவுக்குத் தக்க நிவர்த்திகள் கிட்டும்.
மயிற் பீலிகையை ஸ்ரீகிருஷ்ணன் தாங்கக் காரணமென்ன? காவிரி, கங்கை போல, மக்களுடைய தோஷங்களையும், பகைமை எண்ணங்களையும் அகற்றித் தூய்மையைப் பெற, மயில் இறகு சாதனங்கள் பெரிதும் உதவுவதால், ஆண்டவனாகிய ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே, மயிற் பீலிகையைத் தன் தலையில் ஏற்றி, ஜீவன்களுடைய அனைத்து விதமான கஷ்டங்களையும் தீர்க்கின்றார். அடியார்களின் தூய அன்பிற்காக, எதையும் தாங்குபவர்களே தெய்வ மூர்த்திகள்! பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டவர் அன்றோ சிவபெருமான்!
ஒரு அற்புதமான மயில் வடிவில் திலகுமரேஸ்வரச் சித்தர் பூவுலகிற்கு வந்தார். மயில் வடிவு தாங்கி, மலர்களைப் பறித்து, அர்ச்சித்துத் தன் தோகைகளால் இறைவனுக்கு விசிறிப் பூஜிப்பார். மானுட வடிவிலும் வந்து பூஜிப்பதும் உண்டு. பல வருடங்களுக்கு முன், இவருடைய பாரம்பரியத்தினர் மதுரை ஆலயத்தில் ஒரு பெரிய விசிறி கொண்டு, பக்தர்கள் அனைவருக்கும் கை சளைக்காமல் ஓலை விசிறிகளால் வீசுகின்ற அற்புதமான இறைப் பணிகளை, கைங்கர்யங்களை நன்கு ஆற்றி வந்தனர். இவர் பெயரை வைத்தே குமரேசன் என்ற பெயரும் நடைமுறைக்கு வந்தது.
திலகுமரேஸ்வரச் சித்தர் பரிசுத்தமான ஏகாதசி நோன்பு பூண்டு, ஆலயத்தில் ஒரு நிமிடம் கூட இடைவெளி விடாது, இறைவனுக்கும், இறையடியார்களும் மயில் பீலிகை மற்றும் ஓலை விசிறிகளால் காற்று வீசி, துவாதசியில் சிறிது நெல்லி முள்ளி, அகத்திக் கீரை உணவு உண்டு, விரத நிவர்த்தி செய்து, மீண்டும் தன் பணியைத் தொடங்குவார். இதனால் துவாதசி அன்று விரத பலன்கள் பூரித்து, இவருடைய விசிறியில் அதியற்புதச் சந்தன மணமானது முகிழ்த்து, ஆலயம் முழுதும் தெய்வீக நறுமணமாய்க் கமழும். இதனை நுகர்வதையே பெரும் பாக்யமாகக் கொண்டு, துவாதசியில் ஆயிரக் கணக்கானோர் திரளுவர். அனைவருக்கும் இதன் அதன் அனுபூதிகள் கிட்டி, ஆலய வளாகம் முழுதும் சந்தன நறுமணம் கமழ்ந்து நிரவி அருள் தரும்.
துவாதசி நாட்களில் திலகுமரேஸ்வரச் சித்தரை நினைந்து, சிவபாத பூஜை, பிரகார வலம் போன்ற தருணங்களில், மயிற் பீலிகையால் இறைவனுக்கு, இறைமூர்த்திகளுக்கு விசிறும் பாக்யத்தைப் பெறுதலும், ஸ்ரீமயூரநாதர், ஸ்ரீமயூர வல்லியாய் இறைவன், இறைவி அருளும் ஆலயங்கள், மயில் உள்ள ஆலயங்கள், மயில் பூஜித்த ஆலயங்களில் மற்றும் வீட்டில் பூஜையில் அனைத்து மூர்த்திகளுக்கும் மயிலிறகால் அல்லது வெண் சாமரத்தால் வீசி, வழிபடுதல் இல்லத்தில், உற்றம், சுற்றம், வியாபாரம், அலுவலகத்தில் உள்ள பகைமை தோஷங்கள் தீர உதவும்.

பிரதோஷ நாயகர் தரிசனம்

மஹாப் பிரதோஷ உற்சவ நாளாகிய சனிக் கிழமை அன்று, அதுவும் பரிபூரணத் திரயோதசித் திதியில் அமையும் பிரதோஷத்தில், ஈஸ்வரனின் உற்சவத் திருமேனியானது ஆலயத்தில் திருவலம் வருகையில், எத்தனையோ கோடி அற்புதங்கள், நல்வரங்கள், அனுபூதிகள் விளைகின்றன. ஆலயத்தில் அர்ச்சனை செய்து வழிபடுதல் மட்டுமல்லாது, சுவாமிக்குப் பல்லக்குத் தூக்குதல், வெண் சாமரம் வீசுதல், மறைத் துதிகளை இடைவிடாது ஓதுதல், பிரதோஷ நேரத்தில் பூக்களைத் தொடுத்தல், தீபங்களை ஏற்ற உதவுதல், பெரிய, பெரிய கோலமிடுதல், உணவுப் பிரசாத தானம் மற்றும் பல்வகைத் தானங்கள் என எத்தனையோ எளிமையான விதங்களில் பிரதோஷ வழிபாடுகளை ஆற்றிடலாம்.
உடலில் வலிமையும், தெம்பும் இருக்கும் போதே சனிப் பிரதோஷ உற்சவம், சிவபாத சேவை போன்றவற்றில் சுவாமிப் பல்லக்கைத் தூக்கும் பெரும் பாக்யத்தைப் பெற்றிங்கள்! காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது, சனிப் பிரதோஷம் போன்ற பெரும் உற்சவங்களில் திரளும் மக்களோடு மக்களாய்ச் சித்தர்களும், மஹரிஷிகளும் இலைமறை கனியாக வந்து வழிபடுவதால், அவர்களுடைய தவத் திருமேனிகளில், அவர்கள் ஒலிக்கும் திருமந்திரங்களைத் தழுவும் காற்றை, பக்தர்கள் நன்கு சுவாசித்து சித்சுத்திகளைப் பெறுதல் என்பதும் பொருளாகும்.

ஸ்ரீசதாதபஸ் சித்தர் பிரான்
திருக்கண்டியூர்

எவ்வாறு ஆயிரம் பேருக்கு அன்னமிட்டால் ஒரு சித்தர் பிரான் ஆங்கே எவ்வடிவிலும் தோன்றுதல் வேண்டும் என்ற நியதி உள்ளதோ, இதே போல, ஆயிரம் பேர் ஒரு இறைஉற்சவப் பாங்கில் குழுமுகையிலும், ஆங்கே குறித்த அளவில் மஹரிஷிகளும், சித்தர்களும் எவ்வடிவிலும் வந்து தோன்றியாதல் வேண்டும் என்ற நியதி உண்டு. எனவே "அப்பப்பா, கோயிலில், கிரிவலத்தில் ஒரே கூட்டமப்பா! கூட்டம்னாலே எனக்கு அலர்ஜி!'' எனச் சொல்லி பலரைப் போல் ஒதுங்கிடாதீர்கள்!  

சின்னபாபுசமுத்திரம்

நான்கு லட்சம் பேர்களுக்கு மேல் அருணாசலக் கிரிவலத்தில் இலைமறை கனியாகச் சிறப்பான பூஜைகளை ஆற்றும் சித்தர்களின், மஹரிஷிகளின் அருட்காற்றை கூட்டமோடு கூட்டமாகத் தானே பெற்றாக வேண்டும். நீங்கள் எத்தனை கோடிப் பிறவிகள் எடுத்தாலும் இவ்வகையில் வேறெங்கும் பெற இயலாதே!
மேலும் நித்தியப் பிரதோஷ வழிபாட்டிற்காக, தாம் எங்கிருந்தாலும், தினமும் மாலையில், தினசரிப் பிரதோஷ நேரமான மாலையில், காளஹஸ்தித் தலத்திற்கு வந்து வழிபடும் ஸ்ரீசதாதபச் சித்தர் (தஞ்சாவூர் அருகே கண்டியூர் தலத்தில் இச்சித்தர்பிரானைத் தரிசிக்கலாம் - சதாசர்வ காலமும் தவத்தில் திளைப்பவர்), இதற்காக விண்ணில், மண்ணில் விரைகையில், ஆங்காங்கே ஏதேனும் ஆலயத்தில் நித்தியப் பிரதோஷ வழிபாடு கொள்வோர்க்கு இவருடைய அருட் காற்று பட்டு, அனுகிரகங்கள் திரளும் அன்றோ! எனவே இன்றிலிருந்து ஒரு பட்சம், ஒரு மாதம், ஒரு பட்சம் தினசரிப் பிரதோஷ நேரத்தில் வழிபட்டிட, சதாதபசித்தரின் ஆசியை வேண்டிச் சங்கல்பம் பூண்டு தினசரி மாலை வழிபாடுகளை, நித்தியப் பிரதோஷ வழிபாடுகளாக, பழமையான ஆலயத்தில் ஆற்றி வாருங்கள்! நற்காரியங்களுக்கு, கை மேல் நற்பலன்களைச் சதாதபச் சித்தரிடம் பெற நித்தியப் பிரதோஷ வழிபாடு நன்கு உதவும். இல்லத்திலும் ஆற்றி ஆலயத்தில் நந்தீஸ்வரரைத் தரிசித்திடுங்கள்!
பிரதோஷ நேரத்தில் அருகில் உள்ள கோயிலுக்கு செல்லுதல், மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்குச் செல்லுதல் என்று மட்டும் அல்லாது, - சென்னை - குன்றத்தூர் அருகே சிறுகளத்தூர், திருச்சி அருகே துடையூர், புதுக்கோட்டை அருகே பேரையூர், மதுரை அருகே திடியன்மலை, திருநெல்வேலி அருகே கார்க்கோடக நல்லூர், தஞ்சாவூர் அருகே மகிமாலை, விழுப்புரம் அருகே விக்ரவாண்டி, பாண்டிச்சேரி அருகே சின்னபாபு சமுத்திரம் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் என்றவாறான மிகப் பழமையான கோயில்களுக்குச் சென்று வழிபட்டு அருமையான, அரிதான பலாபலன்களை உங்கள் குடும்பத்திற்குப் பெற்றுத் தருக!
வருடத்தில் ஒரு முறையேனும் பிரதோஷ நேரம் முழுதும் அருணாசல கிரிவலத்தை ஆற்றும் நல்பாக்யத்தையும் பெற்றிடுக!
பிரதோஷ நாயகருடன் இறைத் துதிகளை ஓதி வந்து 64 திக்குகளிலும் பிரதோஷ நாயக தரிசனத்தைப் பெற்றிடுக!

உத்தம குணம் தரும் ஜயந்தி

ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியைத் தவிர, நரசிம்ம ஜயந்தி, வாமன ஜயந்தி, பரசுராம ஜயந்தி போன்ற பல அவதார ஜயந்தி நாட்களை, மனித சமுதாயம் முறையாகக் கடைபிடிக்காது மறந்தும், அற்புதமான பூஜா பலன்களையும் இழந்தும் வருகிறது. இதனால்தான் நரசிம்ம பூஜைகள் பலவும் இப்பூவுலகிற்குக் கிட்டாமல் போய், இவற்றால் மட்டுமே களைய வல்ல வன்முறை, பயங்கரவாதத் தீய சக்திகள் பெருத்து வருகின்றன. இனியேனும் பஞ்சாங்கத்தின் மூலம் இவற்றை அறிந்து வைத்துக் கொண்டு, பெரியோர்களிடம் தக்க பூஜை முறைகளுக்கான விளக்கங்களைப் பெற்றிடுங்கள்
தன் பிறந்த நாளைப் படாடோபமாகக் கேக்கை வெட்டி, ஹோட்டல், சினிமா, பீச் எனக் கொண்டாடும் கலியுகமனிதன், பிறந்த நாள் என்பது இறைவனை நோக்கி ஓராண்டு முன் செல்லும் நினைவுறுத்து நாளென்பதை உணர்வதில்லை! நல்ல நாளாகிய பிறந்த நாளில் ஊதி (மெழுகுவர்த்தி) விளக்கை அணைத்தல், கேக்கை வெட்டுதல், பலூனை உடைத்தல் என்ற வகையிலான அபசகுன நிகழ்ச்சிகள் இல்லாது, மங்களகரமாக விளக்கேற்றுதல், கேக் தானம் என்று அமைதலே நன்று.
நரசிம்ம ஜயந்தி என்பது ஹிரண்யனை சம்ஹரிக்க மட்டுமே என எண்ணுதல் கூடாது. ஹிரண்யனிடம் இருந்த தீய குணங்கள், தீய சக்திகளில் எதுவெல்லாம் தற்போதைய கலியுக வாழ்வில் அவரவருக்குள் இருக்கிறது என்பதை மனசாட்சிப் பூர்வமாக உணர்ந்து, அவற்றைக் களைந்திட நரசிம்மரின் திருவருளைப் பெற்றிட நல்வழிபாடுகளை ஆற்ற வேண்டிய நன்னாள்!
ஹிரண்யனை சம்ஹரித்தல் என்றன்றி, நரசிம்ம உக்ரத்துடன் பிரபஞ்சமெங்கும் உலா வந்து, அரக்கத் தீய சக்திகளினால் மாசுற்றுக் கிடந்த பிரபஞ்சத்தின் பல பகுதிகளையும் பூரணமாகச் சுத்திகரித்து அருளினாரன்றோ பரம்பொருளாம் ஸ்ரீமன் நரசிம்ம மஹா விஷ்ணுப் பிரபு மூர்த்தி! கலியிலும், தீய சக்திகள், வன்முறை, கொள்ளை, போர், கலவரம், பயங்கர வாதம் என்பதாகப் பல இடங்களிலும் தீய சக்திகள் வெகுவாகப் பரவி, நிரவி விரவிக் கிடக்கையில், இவற்றை நரசிம்மரின் அருளால் களைவதற்கு உதவுவதான நரசிம்ம வழிபாடுகளை மேம்படுத்திடவுவே, நரசிம்ம ஜயந்தி தொன்று தொட்டுக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

எனவே, தெய்வாவதாரத் தோன்றல்கள் நம்மை உய்விக்கவே என்ற செழுமையான இறைமண மனப் பக்குவத்துடன் நரசிம்ம ஜயந்தி போன்ற கடவுளரின் ஜெயந்தி நாட்களைக் கொண்டாடுதல் வேண்டும். அவரவர் தம்முடைய, குடும்பத்தாருடைய, பிறந்த நாளை விட, அவதாரத் தோன்றல் நாட்களில் மனம் முழுமையாக ஈடுபடுகின்றதா என அவரவரே தம்மை நன்கு பரிசோதித்துக் கொள்ளலாம்!
கராவலம்பத் தோத்திரம் முதல் ஆழ்வார்கள் நரசிம்மத் திருத்தலங்களில் பாடியுள்ள நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள் வரை, நிறைய வகைகளில் நரசிம்மத் துதிகள் உள்ளன. இவற்றைப் பலரும் தம் வாழ்வில் தொட்டுக் கூடப் பார்ப்பதில்லை! கேட்டிட முனைவதும் இல்லை! நாள் முழுதும் நரசிம்மத் துதிகளோடு உங்கள் நேரம் செலுத்தப் பெற்று, உங்களுக்குள் நிலவும் அரக்க குணங்களை, தீய சக்திகளை அகற்றிட இன்றிலிருந்து சங்கல்பம் பூண்டு, புதன், சனிக் கிழமை, திருவோண நாட்களில் ஸ்ரீநரசிம்ம வழிபாடுகளை ஆற்றி வாருங்கள்!
பல தலங்களிலும் ஸ்ரீசரபேஸ்வரருக்கு முன் ஸ்ரீநரசிம்மரின் திவ்யமான ரூபம் அமைந்திருக்கும். இரு மூர்த்திகளுக்கும் வெண்ணெய்க் காப்பிட்டு, சாம்பிராணி தூபத்தில் அத்தர், புனுகு, ஜவ்வாது கலந்த (கைகளால் அரைத்துக் காய்ந்த) சந்தனத் துகள்களை இட்டு நன்கு மனதார நறுமண தூபம் காட்டி, வழிபட்டு வருவதுடன், நரசிம்மருக்கு மிகவும் ப்ரீதியான பானக தானமும் ஆற்றி, உடல் சுத்தி, மன சுத்தி, உள்ள சுத்திக்காக மனதார வேண்டி வருக!
நீங்கள் மிகவும் நல்லவராக இருந்தாலும், உங்கள் உற்றம், சுற்றமும் நல்லோராக வாழ்ந்து, சமுதாயத்தில் தீய குணங்களை உடையோரும் திருந்தினால்தானே, சமுதாயத்தில் திருட்டுப் பயம், வன்முறைகள் மற்றும் ஏனைய பீதிகள் இல்லாது அனைவருமே ஜாதி, மத பேதங்களின்றிச் சாந்தமாக வாழ முடியும்!
மிகவும் புனிதமான சமுதாயச் சாந்தம் என்பது ஆன்மீக சக்திகளால்தான் வந்தமையுமே தவிர, அதிகாரம், சட்டம், காவல் துறைப் பணிகளால் பரிபூரணமாக வந்தமையாது. இவ்வாறான சமுதாய நலப் பூஜைகளை ஆற்றியாக வேண்டியதைப் பிறவிக் கடமை, பிறவி லட்சியமாக ஏற்று, ஒவ்வொரு பாரதவாசியும் ஆற்றி வந்தால்தான், நல்லவர்களும் நல்ல குணங்களில் இருந்து பிறழாமல் இருக்கவும், மென்மேலும் உத்தம குணங்களைப் பெற்றுப் பிரகாசிக்கவும், தீயவர்களும் திருந்தி நல்வாழ்வு பெறவும் நன்கு துணை புரியும்!

சுத்தம் சுகம் தரும்

பவித்ரமான உள்ளம், மனம்தனைப் பெற வேண்டும் என்றால், கலியுகத்தில் உடல் வாரியாக சித்சுத்தியைப் பெறுதல் வேண்டும். இதைத்தான் புத்தர்பிரான் மகான் அதியற்புத யோக, தியான முறைகளாகப் பகுத்து அளித்துள்ளார். திபெத்தியப் பகுதிகளில் இன்றும் புத்தர் பிரான் போதித்தபடி, பவித்ரமான சுற்றுப்புற சூழ்நிலைகளை அமைத்திட, நறுமணத் தூபம், நறுமலர் மணம், சந்தடியற்ற அமைதியான சூழ்நிலை அல்லது சிறுமணி சப்தங்களின் நுணுக்கமான, நேரப்படியான முறையான அதிர்வுகள் போன்றவை மூலம் மனதைப் பக்குவப்படுத்தும் முறைகளைக் கடைபிடித்து, தேர்ச்சிபெற்று உலகிற்கும் புத்த பிட்சுக்கள் உணர்த்தி வருகின்றார்கள்.
புனிதத்தின் உறைவிடமாய்த் துலங்கியவர் புத்தர் பிரான். சில விஷ்ணுத் தத்துவங்களில் தசாவதாரங்களில் புத்தரையும் இணைத்து வழிபடுகின்றனர். வைகாசிப் பெளர்ணமி முருகனுக்கு உரித்தான தினம் என நாம் அறிவோம். முருகப் பெருமானைத் தூய புருஷார்த்த குண தெய்வம் என்று போற்றக் காரணமே, ஆதி சிவனின் பவித்ரமான ஜோதியிலிருந்து நேரடியாகத் தோன்றியதாகும். இதனால்தான் வைகாசிப் பெளர்ணமியில் இணையும் புத்த பூர்ணிமா நன்னாளில், அக்னியில் ஸ்புடம் போட்டது போல, தூய சக்திகள் நன்கு பரிணமிக்கின்றன.
கருட மூர்த்தியும், தம்முடைய பரிசுத்தமான விஷ்ணு சேவையின் மூலமாகத்தானே கருட மூர்த்தியாய் அவதாரிகையைப் பெற்றார். கருடர் தோன்றியபோது கூடவே ஆயிரக் கணக்கான மூலிகைகள் தோன்றின. எனவே, நோய்களை நீக்கி உடல் மனம், உள்ளம் மூன்றையுமே சுத்திகரிக்கும் மூலிகைகளுக்கும் பவித்ரமான சக்தி, வைகாசிப் பெளர்ணமியில்தான் இறைவனால் அளிக்கப் பெற்றது.

ஸ்ரீஅப்ரதீஸ்வரர் திருத்தலம் நகர்

அகத்தியப் பிரான் எவ்விடத்தில் சென்றாலும் அங்கிருக்கும் மூலிகைகள் யாவும் எழுந்து நின்று கை கூப்பி வணங்கிடும். ஏனெனில், ஆதிசிவனே சித்த வைத்தியத்திற்கு மூல கர்த்தாவாக, அகத்தியரை நிர்மாணித்துள்ளார் அல்லவா! கும்பகோணம் அருகே இன்னம்பூர் சிவத்தலத்தில் மூலத் தானத்திலேயே அமர்ந்து இறைவனிடம் தமிழ் இலக்கணப் பாடங்களைக் கற்ற அகஸ்தியர் மகரிஷி, ஈசனிடமிருந்தே மூலிகைச் சக்திப் பாடங்களைப் பெற்ற தலம் சென்னை திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் அருளும் வளாகம் எனப் பலரும் அறியார்.
எனவே, எந்த மூலிகை மருந்தை வாங்கினாலும் உடனே மருந்தீஸ்வரராக இறைவன் அருளும் ஆலயத்திற்குச் சென்று, மருந்துகளை இறைவனின் திருவடிகளில் வைத்து அர்ப்பணித்துப் பிரசாதமாகப் பெற்று, மருந்தை ஏற்று வருதலே சிறப்புடையது.
சித்த வைத்தியர்களும், தம்முடைய மருந்துகளுக்கான மூலிகைகளைப் பெறுவதற்கான பிரயாணம் தொடங்குவது முதல் கஷாயம் பஸ்மம், குளிகை, மாத்திரை, லேகியம் என ஒவ்வொரு வகைக்கும் உரித்தான மருந்தீஸ்வர மூர்த்திகளைத் தக்க சற்குரு மூலம் அறிந்து பயன்படுத்தத் தொடங்குதலே மருந்துகளுக்கு நோய் நிவாரண சக்திகளை நன்கு விருத்தி செய்து தருவதாகும்.
பவ ஒளஷதீஸ்வரர், ஒளஷதீஸ்வரர், மருந்தீஸ்வரர், அருமருந்து நாயகி, வைத்தியநாத சுவாதி, வைத்தீஸ்வரர், தன்வந்த்ரீ, ஆயுர்தேவி, கருட மூர்த்தி என வைத்திய நல்வர சக்திகளை அருளும் ஆலயங்களில் மருத்துவர்கள் விசேஷமாக வைத்துக் கொண்டு தம் வாழ்நாள் முழுதும் வழிபட்டு வருதல் வேண்டும்.
கண்ணாயிர மூர்த்தி, கண்ணாத்தாள், கரபுரீஸ்வரர், பிராணேஸ்வரர், அப்ரதீஸ்வரர், அங்கவள நாயகி என அந்தந்த அங்கங்களில் ஏற்படும் நோய்களை நிவர்த்தி செய்வதற்கான வைத்தியப் பூரணமான சக்திகளை அளிக்க வல்ல ஆரோக்கியச் சக்தித் தலங்களும் உண்டு. பொதுவாக, பெளர்ணமியில்தாம் மூலிகைச் சக்திகள் சந்திர மண்டலம் மூலமாகப் பல்கிப் பெருகுவதால் மேற்கண்ட அனைத்து வழிபாடுகளையும் பிரம்மாண்டமான சக்திகளையும் ஒன்று திரட்டித் தருவதே அருணாசலப் பெளர்ணமி கிரிவல சக்தியாகும்.
ஒளஷதாதிபதி அதாவது மூலிகை முத்து மூர்த்தி என்று போற்றப் பெறும் சந்திர மூர்த்திதாம் இறை ஆணையாகத் தம்முடைய அமுதக் கிரணங்களால் மூலிகைகளுக்கு மாமருந்து சக்திகளை அளிக்கின்றார்.
வைகாசி விசாகப் பெளர்ணமியில் அவரவர் தம் இல்லத்தில் தயாரித்த இனிப்பு உணவு வகைகளை, மூலிகை தேவதைகளின் நல்வரங்களை வேண்டிப் பிரார்த்தித்து அன்னதானமாக அளித்திடுதல் விசேஷமானது. அகஸ்திய மகரிஷி அருளும் ஆலயங்களில் இறைவனை வேண்டி, மக்களுக்கு நோய்கள் மூலமாக வாழ்வில் எவ்வித வெறுப்பும் தோன்றாமல், அவரவருடைய கர்ம வினைகளின் விளைவுகளாலேயே நோய்களுக்கு ஆளாகின்றனர் என்பதை உணர்ந்து ஆன்மீகப் பூர்வமாகவும், தக்க மருந்துகள் மூலமும், தான தர்ம சக்திகளோடும் நல்ஆரோக்கியத்தைப் பெற வேண்டி இறைப் பொது வழிபாட்டினை நிகழ்த்துதல் சிறப்புடையது.
திருஅண்ணாமலை, தேனிமலை, குன்றக்குடி, குன்றத்துர், போன்ற முருக தேவ மருத்துவச் சக்தித் தலங்களில் கிரிவலத்துடன் வழிபடுதல் விசேஷமானது.

விளக்கில் விளையும் வினைகள்

பகுள நாள் பிரதமைத் திதி நாளாகும். எழுகதிர் ஏற்ற சக்தி நாள் எனச் சித்தர்கள் உரைக்கின்றனர். இச்சக்திகள் ஒவ்வொரு பிரதமையிலும் உதிப்பதாகும். அமாவாசை, பெளர்ணமிக்குப் பிறகு முறையே, வளர்பிறை, தேய்பிறையின் அம்சங்கள் தோன்றும் முதல் திதித் தினமாதலால், பிரதமைத் திதியில் பல அபூர்வமான வேத சக்திகள் சித்திக்கின்றன.
எழுகதிர் ஏற்ற சக்தி நாளாகிய, பகுளம் எனும் பிரதமையில், சூரிய, சந்திரர் இரு கிரகக் கதிர்களும் ஏற்றம் கொள்கின்றன. வானில் சூரிய, சந்திர கிரகங்களின் கதியை ஒட்டித் தாமே திதிக் காலம் பஞ்சாங்கக் கணிதத்தில் நிர்ணயமாகிறது. இச்சக்திகளே, சித்சுத்தியைப் பவித்ரமானதாக, புனிதமானதாக ஆக்கித் தருவதாகும். சித்சுத்தி என்பது மனம், உடல், உள்ளம் மூன்றுமே பரிசுத்தமாக விளங்குவதாகும்.
புதிதாக ஆக்குதல், பழையதைப் புதிதாக ஆக்குதல் என்ற இருவிதமான புதிய சக்திகள் உண்டு. பகுள சக்திகள் நிறைந்த பிரதமை நாளில், பழையதைப் புதியதாக்கும் பவித்ரமான எழுகதிர் சக்திகள் தோற்றுவிக்கப்படுகின்றன. பழையதைப் புதியதாக்குவதால் மாசு பட்டதைச் சுத்திகரிக்கின்றோம் என்று பொருளல்ல. உதாரணமாக, நெடுங்காலமாக இருக்கும் பழைமையான தேனுக்கு அதிபலத்த மருத்துவ சக்திகள் உண்டு. இதனால்தான் தேன் கலந்து ஆக்க வேண்டிய லேகியங்கள், மருந்து வகைகள் பிரதமை அன்று ஆக்கப் பெறுகின்றன. பழமையான தேன் புதிய மருத்துவ சக்தியாக ஆக்கம் பெறுகிறது.
பொதுவாக, அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு மறுநாள் பிரதமைத் திதி அமைந்து வந்தாலும், பெளர்ணமியை அடுத்து வரும் பிரதமையில், பகுள சக்திகள் மருத்துவ சக்திகளாக, நன்கு நிறைந்து வருகின்றன. அதாவது, பிரதமைத் திதியிலிருந்து சதுர்த்தசி வரை 14 திதிகளானவை வளர்பிறையிலும், தேய் பிறையிலும் வருவதுண்டு அல்லவா. இதில் தேய்பிறைத் திதிகளில் மருத்துவ குண சக்திகள் நன்கு வீரியமும், விருத்தியும் பெறுகின்றன. கர்ம வினைக் கழிவடைய உதவும் சுத்திகர சக்திகள் தேய்பிறையில்தான் நன்கு ஆக்கம் கொள்கின்றன.
எனவேதான், பரிகாரம், பிராயச் சித்தம் சம்பந்தப்பட்ட வழிபாடுகளைப் பலரும் தேய்பிறையில் வைத்துக் கொள்வார்கள். சில பைரவ மூர்த்திகளுக்கு, பகுள மார்த்தாண்ட சக்திகள் நிறைந்த மரத்தாலான தண்டத்தை ஆயுதமாக வைப்பது உண்டு. ஆயுளையே தகர்க்கின்ற அளவிற்குப் புற்று நோய், விஷக்கடி நோய் போன்றவற்றிற்கு ஆட்படுவோர், இறப்பின் வாயிலிருந்து மீள்வதற்காகவும், அவர்கள் ஸ்திரமான ஆயுள் கால சக்தியைப் பெறவும், பைரவருக்கு மரத் தண்டம் சார்த்தி வழிபடுவதாக நேர்த்தி வைத்துக் கொள்வார்கள். இதனால்தான் தேய்பிறையில் வரும் அஷ்டமியும் பைரவருக்கு உரித்தான விசேஷமான பூஜை நாட்களாக அமைகின்றது.
செவ்வாயும் பகுளமான பிரதமைத் திதியும் சேர்வது மருத்துவ சக்திகளை நன்கு விருத்தி செய்து தரும். செவ்வாய் தோறும் ஏழைகளுக்குத் தேவையான பொது மருந்துகள், டானிக்குகள், ஊட்டச் சத்து லேகியங்கள், ஏழை கர்ப்பிணிகளுக்குத் தேவையான மருந்துகள், டானிக்குகள், உள் ஆடைகளைத் தானமாக அளித்தல், பிள்ளைப் பெறு பெற்ற ஏழைத் தாய்மார்களுக்குத் தாய்ப்பால் நன்கு சுரக்கத் தேவையான ஊட்டச் சத்து உணவு வகைகளை அளித்தல் போன்றவை குடும்பத்தை அடிக்கடி வருத்தும் சிறு சிறு நோய்த் துன்பங்களைப் போக்கிட உதவும்.

ஸ்ரீஅக்னிபுரீஸ்வரர் திருத்தலம்
திருக்காட்டுப்பள்ளி

இவ்வாறாகத் தேய்பிறையில் அமையும் பலவிதமான மருத்துவ சம்பந்தமாக தான தர்மங்கள் யாவும், மிக எளிய வகையில் பலவிதமான கர்ம வினைகளைக் கழித்துத் தருகின்றன. அங்காரக பகுளம் என்பது செவ்வாய் மண்டலத்தில் அக்னியையே புனிதப் படுத்துகின்ற விசேஷமான அக்னி சக்தி மண்டலத்தைக் குறிப்பதாகும். எனவேதான், பிரதமைத் திதிதோறும் அக்னி மூர்த்தியை வழிபடுகின்ற விசேஷமான வழிபாட்டு முறை ஏற்பட்டது.
ஒரு சில ஆலயங்களில்தாம் அக்னி மூர்த்தி சிலா ரூபத்திலும், கோபுரங்களிலும் நிலை கொண்டு அருள்கின்றார். அங்காரக பகுள நாளாகிய செவ்வாயும், பிரதமைத் திதியும் கூடும் நாளில், அக்னி மூர்த்திக்கு எட்டு விதமான மூலிகா திரவியங்களை, அஷ்ட கந்த மூலிகைகளால் அபிஷேக, அர்ச்சனை, ஆராதனைகள் ஆற்றுவது, தீ சம்பந்தமான விபத்துகள், ஆலயத்திலும், குடும்பத்திலும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள உதவும்.
ஒருவரைச் 'சுள்' என்று பேசி மனதைப் புண் படுத்துதல், பிறரால் ஏசப் பெற்று மனப் புண்ணுக்கு ஆளாகுதல் போன்றவற்றிலிருந்து நிவர்த்தி பெற, அங்காரக பகுள நாளில், அக்னி மூர்த்தியை வழிபடுதல் வேண்டும். அக்னீஸ்வரர், தீப்பாய்ந்த நாச்சியார் மூர்த்தி போன்று அக்னி வகைப் பெயரைத் தாங்கி வரும் மூர்த்திகளை வழிபட்டு, வாழ்வில் நெருப்பைத் தவறான முறைகளில் பயன்படுத்திய தோஷங்களுக்கு, நெருப்பை மிதித்த தோஷங்களுக்கு, முறையாக விளக்கை ஏற்றாதது, முறையாக விளக்கைச் சாந்தப்படுத்தாதது போன்ற தோஷங்களிலிருந்து தீர்வுகளைப் பெற பிரதமைத் திதியில் அக்னி மூர்த்தி வழிபாடு விசேஷமான பலன்களைத் தரும்.
இந்நாட்களில்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேணிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே!
என்ற அப்பர் சுவாமிகளின் தேவாரப் பாடலை, விளக்குத் தீபத்தைத் தரிசித்தவாறு, 1008 முறை ஓதுதல், அக்னி பகவானைப் பூஜித்த பலாபலன்களைப் பித்ருக்களின் ஆசியாக ஓரளவு பெற்றுத் தரும். மேலும் தக்க வான சாத்திர முறைகளுடன் செவ்வாய்க் கிரகத்தையும் வானில் தரிசிக்க முயற்சி செய்யுங்கள்.

எல்லோரும் அறிவாளி ஆகலாம்

புத்தி சக்திகள், அறிவை நன்கு விருத்தி செய்யும் வித்யாரண்ய சக்திகள் பரிணமிக்கும் தினமே புதன் கிழமையாகும். புதன் தோறும் ஸ்ரீசரஸ்வதி தேவியையும், ஸ்ரீஹயக்ரீவப் பெருமளையும் வழிபடுதல் நல்அறிவுக்கு வழிவகுக்கும்.
கல்வி, ஞானம், படிப்பு இவை ஒன்றொக்கொன்று தொடர்வு உடையவையா? கல்வியாகிய வித்யா சக்திகளை அளிப்பவர் புத மூர்த்தி. அறிவுக்கு சரஸ்வதி தேவி. ஞானத்திற்கு ஹயக்ரீவர். அப்படியானால் படிப்புக்கு அருள்வது எந்த மூர்த்தியோ? படிப்பு என்பது என்ன? படிப்பினால் அறிவு விருத்தி ஆகுமா? இவை எல்லாம் அவரவர் தினமும் ஆத்விசாரம் செய்தாக வேண்டியதாகும். ஒவ்வொருவருக்கும் வித்யாசமான நல்விளக்கங்கள் உள்ஞானப் பூர்வமாகக் கிடைக்கும்!
தினசரி வாழ்க்கையில் கிரக நகர்வு (சஞ்சார) சக்திகள் ஒவ்வொரு ஜீவனிடமும் பலவிதமான மாற்றங்களை, விளைவுகளை ஏற்படுத்துவதால், நவகிரக ரீதியாக தினசரி அறிவுப் பூர்வமாகக் காரியங்களை நடத்திட, புத மூர்த்தியே, புத்தி, அறிவு, கல்வி போன்றவற்றுக்குத் துணை புரிபவர் எனப் பொதுவாக உரைக்கின்றோம்.

ஸ்ரீவீணா ஞான தட்சிணா மூர்த்திகள்
திருத்தவத்துறை லால்குடி

கேது மூர்த்தி ஞானகாரகர் ஆகின்றார். புதன் கிழமை தோறும் ஜீவன்களுடைய புத்தியை விருத்தி செய்வதான ஒளி, ஒலி மார்கமான, தியான, யோக, மந்த்ர, தந்த்ர ரீதியான சக்திகள் புத மண்டலங்களில் இருந்து பூவுலகிடை அடைவதற்காகத் தோன்றுகின்றன. இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை அறிந்துகொள்ள வேண்டுமே! பொதுவாக, துளசி, வில்வம், வன்னி போன்ற பச்சை வண்ணத் தளங்களால் புதன் தோறும் விநாயகரையும், ஹயக்ரீவப் பெருமாளையும், சரஸ்வதியையும் பூஜித்து வருதல் விசேஷமானதாகும்.
கை விரல்களில் கிரக கார சக்திகள் நன்கு நிறைந்துள்ளன. சுண்டு விரலில் புதன் கிரக சக்திகள் மிளிர்வதால், சுண்டு விரலைப் பயன்படுத்தும் வண்ணம் அமைந்துள்ள வழிபாடுகளையும், தெய்வீக சாதனங்களையும் கொண்டு பூஜித்தலால், புத்தி நன்னிலையில் செறிந்து நிற்கும். புத்தி மாற்றத்தால்தானே மனிதன் தீய பழக்கங்களின் பால் ஈர்க்கப்பட்டு தன் வசத்தை இழக்கின்றான்.  
பிற ஜீவன்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள மிகவும் முக்கியமான வித்தியாசம் என்னவெனில், மனிதனோ தன்னுடைய ஆறாம் நிலைப் பகுத்தறிவு நிலையிலிருந்து கீழும் மேலுமாக மாறி மாறி வாழ்ந்து கொண்டிருக்க. ஏனைய ஜீவன்கள் தமக்குரித்தான ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு போன்ற அதனதற்குரித்தான அறிவு நிலையில் முழுமையாக பரிபூரணமாக வாழ்வதாகும். இவ்வாறு எந்த ஒரு ஜீவன் தனக்குரித்தான அறிவு நிலையில் பரிபூரணமாக வாழ்ந்து, அடுத்த அறிவு நிலைக்கு சாசுவதமாகத் தயாராகின்றதோ அதற்கு உச்சிப் புலம் என்று பெயர்.
பூலோகத்தில், நம் புனிதமான பாரதத்தில் நம் கண்களுக்கு நன்கு புலனாவதாக, 64 விதமான உச்சிப் புலசக்திகள் நிறைந்த தலங்களை அளித்துள்ளார்கள். அறிவின் முதிர்ச்சிக் குன்றுகள் இவை. இவற்றின் அருகில் நின்று வானத்தை நோக்கினால், வானமும் பூமியும் ஒன்றாய் இணையும் ஞானக் கோடும் புலனாகும். இதனுடைய திரிபாகத்தான் உச்சிப் புளி என்ற கிராமமும் ராமநாதபுரம் அருகே அமைந்துள்ளது. இங்குக் கிட்டும் சில அபூர்வமான பூமியடி மூலிகைகள், கபாலத்தில் மூளையை விருத்தி செய்பவையாகும்.
தற்காலத்தில் genius என்பது போல, பண்டைய காலத்தில் அறிவில் கனிந்து முதிர்ச்சி பெற்றவர்களை, இத்தகைய உச்சிப் புலத் தலங்களில் வசிக்கச் செய்து, பலவிதமான அறிவு விருத்தி சாதனங்களை உற்பத்தி செய்து, ஆன்மீகப் பூர்வமாக மக்களுடைய அறிவு விருத்திக்காக அர்ப்பணிப்பதற்கான இறைச் சமுதாயப் பணிகள் இத்தகைய தலங்களில் நிகழ்ந்து வந்தன. பல்துறை அறிஞராம் பாணினி, இத்தகைய 64 வகை உச்சிப் புலத் தலங்களையும், சாதாரணக் கண்களுக்குப் புலப்படாத இவற்றுக்கு மேலான பலவற்றையும் தரிசித்து வழிபட்டுள்ளார்.
பொதுவாக, புத கிரக தரிசனம் எவ்விடத்தில் நன்கு கிட்டுகின்றதோ அல்லது வானத்தில் ஞான மண்டலங்களில் தரிசனங்கள் கிட்டுகின்றனவோ அவ்விடத்திற்கும் உச்சிப் புலங்கள் என்று பெயர். எனவே, உச்சிப்புலக் கபால சக்திகள் நிறைந்த தலங்களில்தான் மூலிகைகள், நீர்ச்சுனைகள், நீரோட்டங்கள், பிருத்வி சக்திகள் நிறைந்திருக்கும்.
சுண்டு விரல் புத கிரகத்தை உணர்த்துவது அல்லவா! சுண்டு விரலில் பச்சைக் கல் மோதிரம் அணிதல், மனதில், காற்றில், பச்சைப் பயறு தானியங்கள் மேல் சுண்டு விரல் கொண்டு,
புத்திமதாம் வரிஷ்டாய புத பூர்வச் சின்மயாய
பூர்த்வ தேவம் மாச்ரயமாம் தேஹிமே!
என்று ஓதி பூர்வ சுதச் சக்கரம் வரைந்து, இதில் சுண்டு விரலால் விளம்புவது புத்தியை மேம்படுத்தும்.
மன வளர்ச்சி குன்றியோர் சுண்டு விரல், ஆள்காட்டி விரல் கூடிய சில விதமான முத்திரைகளைச் செய்து வந்தால், மூளைத் திறன் ஓரளவேனும் விருத்தியாகும். எனவே, மன வளர்ச்சி குன்றியோரும், புதன் கிழமை தோறும் விசேஷமான புத்தி விருத்தி ஹோமங்களை ஆற்றுவதற்கும், பூஜைகளைக் கடைபிடிப்பதற்கும் உதவி புரிதல் விசேஷமானது. புதன் கிழமையில் தோன்றும் துதிசேகர தூவம் என்ற விசேஷமான சக்திகளைப் பெறும் வகையில் நாள் முழுவதும் மூன்று வேளைகளிலும் வாழை இலை, மந்தார இலை, தாமரை இலை, பூவரச இலை என இலைச் சோறு உண்ணுதல் புத்திக் கிரணங்களை நன்கு விருத்தி செய்யும். ஞான சரஸ்வதி, ஞான தட்சிணா மூரத்தி, ஹயக்ரீவர் மூர்த்திகளை வழிபடுதல் மிகவும் விசேஷமாகும்.

சிறு சண்டையால் வரும்
பெரும் பகைகள்

கலியுகத்தில் நற்காரியங்களை நிழ்த்த விடாமல் தடுக்கும் சங்கடங்களுக்குக் காரணமான தீவினைகளை அகற்றுவதற்கான தவ சக்திகளைப் பெற்று ஜீவன்களுக்கு அளித்திடச் சித்தர்களும், மஹரிஷிகளும் தாங்களே அற்புதமான வகைகளில் பல தலங்களில் தேய்பிறைச் சதுர்த்தி நாளில் விரதம் பூண்டு, நன்கு கடைபிடித்து, இதன் பலாபலன்களை விரதம் பூண்டு வழிபடுவோர் நன்கு எளிதில் பெற்றிடும் வண்ணம் சதுர்த்தித் திதிப் பாதையில் செலுத்துகின்றனர். இவ்வாறு தேய்பிறைச் சதுர்த்தி நாளான, சங்கட ஹரச் சதுர்த்தி தோறும் விரதமிருந்து பூஜிப்போர்க்கு, இவை வந்தடைந்து நன்கு உதவுகின்றன.

ஸ்ரீநந்தி மூர்த்திகள்
கொறுக்கை சிவாலயம்

கும்பகோணம் - பட்டீஸ்வரம் சாலையில் இடையே கொறுக்கைக் கிராமத்தில் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரருக்கான அற்புதச் சிவாலயம் அமைந்துள்ளது. அகஸ்தியர் பிரான் தம் பத்னியாம் லோபா முத்திரா தேவியுடன் தேய்பிறைச் சதுர்த்தி முதல் வளர்பிறைச் சதுர்த்தி வரை விரதமிருந்தும், இடையில் வரும் பிரதோஷப் பூஜையையும் - ஒரே நந்தி மண்டபத்தில் இரு நந்திகள் அபூர்வமாக அமைந்திருக்கும் இத்தலத்தில் – கொண்டாடியும் சிறப்பைப் பெற்றுள்ள இத்தலத்தில் பூஜித்து, மருதாநல்லூர் அருகே உள்ள கருவளர்ச்சேரியில் சிவலிங்க பூஜைகளை ஆற்றி, கருவளர்ச்சேரியில் அகஸ்தியர் பிரான் தம் பத்னியாம் லோபா முத்திரா தேவியுடன் சதுர்த்தி விரத சக்திகளுடன் தரிசனம் தருகின்ற காட்சியைச் சங்கட ஹரச் சதுர்த்தி நாளில் பெற்று வருவதால், சந்ததிகள் நன்கு தழைக்க உதவும்.  

ஸ்ரீகருக்குடி நாதர்
மருதாநல்லூர்

அதாவது சங்கட ஹரச் சதுர்த்தி நாளில் இவ்விரண்டு ஆலயங்களிலும் ஒரே நாளில் தரிசிப்பது மிகவும் விசேஷமானதாகும்.
இவ்வாறு பல ஆலயங்களும் பாரதப் புண்ணிய பூமியில் பலரும் அறியாவண்ணம் பல தெய்வீக பொக்கிஷங்களைத் தம்முள் கொண்டுள்ளன. பண்டைய யுகமொன்றில், 33 முக்கோடி தேவர்களும், பிரம்ம தேவருடனும் ஒன்றாகத் தேய்பிறைப் பிரதோஷ நாளில் வழிபட்ட தலம்! பிரம்ம தேவருக்கும் ஞானம் புகட்டிய சர்வேஸ்வரன் இன்று அமைதியாக, அடக்கமாக, எளிமையாக, பணிவாக இவ்வுலகே அறியாவண்ணம் கொறுக்கையில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். பிரம்மபுரீஸ்வரர், பிரம்மஞான புரீஸ்வரர், அம்பிகை புஷ்பாம்பிகை சமேத மூர்த்தியாக அருள்பாலிக்கின்றாள்.
பிரம்ம மூர்த்திக்கும் சங்கட ஹரச் சதுர்த்தி நாளில் சில வகை ஞான சக்திகளை அருளிய மூர்த்தி! பல கற்ப காலம் பிரம்ம மூர்த்தி ஒவ்வொரு வகை ஞானத்தையும் ஒவ்வொரு நாளில் பெற்றுச் சிறப்படைந்த தலம்.

ஸ்ரீசாகம்பரி தேவி பல்வகைப் புஷ்பங்களைப் படைத்த போது சாகம்பரி தேவிக்குத் துணை புரிந்த அம்பிகை!
பருவம் அடைந்த பெண்கள் புனிதமான மஞ்சள் நீராட்டல் முடிந்த பின் தம் கரங்களாலேயே 12 விதமான நறுமணப் புஷ்பங்களைத் தொடுத்து பருவம் அடைந்த நங்கையாய் புதுப் பாவாடை, தாவணி தரித்து முதன் முதலில் வழிபட வேண்டிய அம்பிகை! தக்க வயதில் பருவம் அடையாத பெண்களின் உடற் குறைகளை நீக்கித் தக்க வயதில் பருவமடைய அருளும் அற்புதமான அம்பிகை!
சங்கடஹர சதுர்த்தி அன்று பிரம்மா வணங்கிய விநாயகத் தலங்களில் சதுர்த்திப் பூஜையை நிகழ்த்துதல் நன்று. சில ஆலயங்களில் காலை அல்லது மாலையில் சங்கட ஹர சதுர்த்திப் பூஜையை ஆற்றுகின்றார்கள். விசாரித்துச் செய்யவும். கையில் பழம் தாங்கி அருளும் ஞான விநாயகரைப் பூஜித்தலால் அநாவசியமான சிறு வாக்குவாதம், சிறு சண்டைகளால் உற்றம், சுற்றத்தில் ஏற்பட்ட பெரிய பகை தீர உதவும்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam