முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

மனோ சக்திகளை பலப்படுத்துங்கள்

சதுர்த்தியும், சதுர்த்தசியும் விநாயகருக்கு உரியவை என நாமறிவோம். அனத்துப் பூஜைகளிலும் முதன்மை ஸ்தானம் வகிக்கும் கணபதிக்கு, நாலாவது திதி சிறப்பாக அமைவதேன்? நான்கும் தெரிதல் எனில் சகலமும் அறிந்தவன் எனப் பொருள்படுகின்றது அல்லவா! எனவே அனைத்தையும், அனைவருக்கும் குறிப்பாகப் பாமரருக்கும் எளிதில், மிக, மிக எளிமையான வழிபாடுகளால் புலர வைக்கின்றமையால், நாலாம் திதி நற்கணபதிக்கு உவப்பானதாயிற்று! மேலும் முதல் திதி, இரண்டாம் திதி என்ற எண் பகுப்பானது நமக்குப் புரிவதற்காகவே! உண்மையில் திதி என்பது சூரிய, சந்திரக் கோள வானியல் இருப்பு நிலைகளைக் கொண்டே அமைவதாகும்.

ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி
உய்யக்கொண்டான்மலை

கோளங்களின் இயற்கையான அசைவுகள், பிற கோள ஈர்ப்பால் ஏற்படும் மாற்றங்கள் போன்ற நான்கு வகை கிரக சஞ்சார அம்சங்கள் (சதுர்த்த கிரஹ சங்கல்ப வதீயம்) கலியுக மக்களுக்கு மிகவும் முக்கியமானவை! விநாயகரின் துதிக்கைக்குள் அண்ட சராசரப் பிரபஞ்சமே அடங்கி உள்ளது! கலியுக ஜீவன்களுக்கான மேற்கண்ட சதுர்த்த கிரஹ சங்கல்ப வதீயம் எனப் பெறும் கிரகங்களின் நான்கு வகைக் கோள மாறுபாடுகளுக்கான நியதிகள், நான்கு மஞ்சள் வண்ண, வெற்றிலைப் பீடவசிகளான காலபைரவ லோக மூர்த்திகளால் விநாயகரின் துதிக்கை மண்டலத்துள் இயக்கப் பெறுகின்றன. எனவேதான் இவ்வுலகில் எந்தக் காரியத் தொடக்கத்திலும் முதன் முதலில் வெற்றிலையில் மஞ்சளில் பிள்ளையாரைப் பிடித்து வைத்துப் பூஜிக்கின்றோம்! இதனால்தான் நான்கு என வரும் சதுர்த்தியும் விநாயகருக்கு உரித்தானதாயிற்று. நீரை புனிதமான மஞ்சள் திரவியத்தில் கலந்து நான்கு முறை பக்திப் பூர்வமாகப் பிடித்து வைத்த நிலையில் மேரு வடிவில் உற்பவிப்பவரே மஞ்சள் பிள்ளையார்!
எனவே, சதுர்த்தித் திதி தோறும் வெற்றிலையில் மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து, 64 வகையான பூக்கள், திரவியங்களால் அர்ச்சித்தல் மிகவும் விசேஷமானதாகும். தேய்பிறைச் சதுர்த்தியில் சங்கடங்களை அகற்றப் பிள்ளையாரை வழிபவது போல, வளர்பிறைச் சதுர்த்தியில் சங்கடங்கள் வாரா வண்ணம் காத்தருள வேண்டி, ஏதேனும் நான்கு நற்காரிங்களை, தான, தருமங்களை, பூஜைகளை இன்று ஆற்றச் சங்கல்பித்து ஆற்றுதல், நல்ல மனோதிடம், மனோ தைரியம், மனோ சக்தி, மனோ வீரத்தைத் தரும். குறிப்பாகக் கலியுகப் பெண்களுக்கு இவை நான்கும் தினசரி வாழ்க்கைக்குத் தேவையாகிறது.
வளர்பிறைச் சதுர்த்தியில் விமானம், கொடிக் கம்பத்துடன் அருளும் நான்கு பிள்ளையார் சன்னதிகளில் வழிபட்டு, அவரவர் வசதிக்கு ஏற்ப நான்கு நற்காரிங்களை, தான, தருமங்களை, நான்கு வகைப் பூஜைகளை ஆற்றச் சங்கல்பித்து ஆற்றுவது, நால்வகை மனயோக சக்திகளைப் பெற்றிட உதவும்.
வெற்றிலை வடிவத்தில் அமைந்துள்ள காலபைரவ லோக மண்டலம் ஒன்றுண்டு. இதுவே ஆஞ்சநேயர் தினசரி சிவபூஜை ஆற்றும் மண்டலப் பீடமாதலின், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபடுகிறோம்! சதுர்த்தி திதிகளில் துளசி, வில்வம் போல 24 வெற்றிலைகளை சாட்சியாக வைத்து வழிபடுதல் பித்ருக்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும். வாரம் ஒரு முறையாவது முழுச் சாப்பாட்டைப் பொட்டலங்களாகக் காட்டித் தாம்பூலங்களுடன் (வெற்றிலை + பாக்கு + சுண்ணாம்பு) ஏழைகளுக்கு தானமாக அளித்தல் சங்கடங்கள் வாராது தணித்தும், தடுத்தும் காத்துக் கொள்ளவும், பித்ருக்களின் ஆசிகளோடு பெற்றிடவும் உதவும்.

எட்டா சக்திகள் எட்டும்

எட்டு என்பது ஆயுள் சக்தி நிறைந்த மேன்மைகளைப் பூண்டு இருப்பதால்தான், 108, 1008 என என எட்டில் நிறையும்படி, அர்ச்சனைகள், தான தர்மங்கள் நிகழ்கின்றன.  
பலருக்கும் ஜாதக ரீதியாகவும் எண் எட்டு ஏற்று வருதலையே அறியாமல் வாழ்வில் இதனைத் தவிர்த்து வருகின்றார்கள். மேலும் எட்டு, 13 என்றாலே பீதியாகி, இந்த வகை எண்களைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டு, உலகெங்கும் பலரும் எட்டு, 13 எண்களையே தவிர்த்து வருவதால், எண் எட்டின், பதின்மூன்றின் சக்திகள் பலருக்கும் எட்டாமல் போய் விடுகின்றன.
எண் வகை சாஸ்திர நியதிகள் ஜாதக இலக்கணங்களைச் சார்ந்து வருபவையே! ஒவ்வொரு யுகத்திலும், பல்வேறு கல்ப காலங்களிலும், பல்வேறு விதமான கால அம்சங்கள் சக்தி பெற்றுப் பூரிக்கும். பரசுராம கல்பத்தில், திதிகளும், வாதூல கல்பத்தில் வாரங்களாகிய கிழமைகளும், சந்திர பூஷணக் கல்ப காலத்தில் நட்சத்திரங்களும் விசேஷமானப் பூர்வ சக்திகளைப் பெறுகின்றன.
எண்கள் கலியுக மனித சமுதாயத்தில் பல்வேறு துறைகளிலும் தினசரியுமே பங்கு பெறுவதால், கலியுக ஜாதகக் கணித அம்சங்களில், எண்களும், பிற யுகங்களை விட சிறப்பான முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே, எண் வகை சாஸ்திர நியதிகளை, ஜோதிடத்துடன் பிணைத்துக் கணிப்பதே முழுமையானதாகும்.
கலியுக மனித வாழ்க்கையில் கல்வி, அலுவலகம், யாத்திரை என அனைத்துத் துறையிலுமே, தினசரி வாழ்க்கையின் பலவேறு அம்சங்களிலும் எண்கள் பயனாகின்றன தாமே! நேரம், வங்கிக் கணக்கு, வண்டி எண், பணத்தில் கூட எண்ணிக்கை என்பதாக, எண்தானே தினசரி மானுட வாழ்க்கையில் மிகவும் பயனாகின்றது. ஒருவருடைய ஜாதகத்தை கணித்துத் தர வேண்டுமெனில் பிறந்த நேரம், பிறந்த திதி, பிறந்த இடம் ஆகிய மூன்றுமே மிகவும், இம்மூன்றும் தேவை ஆவதால்- இதுவே எண்களின் ஜீவ வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த பிரதான ஆன்மக் காலவர்ஷ சக்திகளைக் குறிக்கின்றன.

மச்ச சாஸ்திரம் என்ற அற்புதமான உடற்பாங்கு பற்றிய பழமையான சாஸ்திர நியதிகள் உண்டு. இதில், ஒருவருடைய உடலில் எவ்வளவு மச்சங்கள் உள்ளன, உடலில் வல ஓட்டத்தில், இட ஓட்டத்தில் எவ்வளவு உள்ளன என்பனவற்றை கொண்டும் அமைந்து, எண்களின் சக்திகளை சகுன சாஸ்திர நியதிகளுடன் பிணைத்து நிர்ணயித்துத் தருகின்றன. வானத்தைப் போல உடலிலும் கிரக சக்திகள் அமைந்திருக்கும் இடங்களை வைத்து, மச்ச கேந்திரங்களை நிர்ணயித்து மச்ச சாஸ்திரக் கணிப்புகள் அமைவதால், இவை மிகவும் துல்லியமான கணிப்புகளாகும். குறிப்பாக உடலில் உள்ள குறைகளை, நோய்களை, குணங்களைப் பற்றிக் குறிப்பதாகும். சாமுத்திரிகா லட்சணங்களில் இவை முக்கியத்வம் பெறுகின்றன.
சோளி சாஸ்திரத்திலும், சோளிகளை உருட்டி ஒரு யந்தரச், சக்கரக் கோலத்தின் மேல் விடுகையில், எத்தனைச் சோளிகள், எந்தெந்தத் திசையில் திறந்த நிலையில் வான் பார்த்து விழுகின்றன என்பதற்கு ஏற்ப, எண்ணைப் பகுத்துத் தொடுத்துத் தரும் அற்புதச் சாஸ்திர முறையும் உண்டு. இதுவும் எண் நியதிகளை வழிவகைத்து அமைவதே!
இவ்வாறாக ஜோதிடம் மட்டுமல்லாது, ஜோதிடத்தின் உப சாஸ்திரங்களிலும் எண் சக்திகள் தாம் கலியுகத்தில் மிகவும் பரிணமித்து அருள்கின்றன. எண் சக்திகள் பரிணமிக்கும் தலங்களும் பல உண்டு. ஒவ்வொரு எண்ணுக்கும் உரிய சக்தித் தலங்களும் உண்டு. இவற்றில் சஹஸ்ர நாம அர்ச்சனை (1008, 108 என்ற வகையிலான போற்றித் துதிகள்) ஆற்றுதல் மிகவும் விசேஷமானதாகும்.
ஒரு மனிதன் தினமுமே எண்களுள் பழகி, மருகி, அணைத்தாட வேண்டி உள்ளது. எண்களுடன், சூது, பேராசை கொண்டு போராடுதல், விளையாடுதல் அதர்மமானது, பாவகரமானது. இதனால்தான் குதிரைப் பந்தயம், லாட்டரிச் சீட்டில் வரும் பணம் வேதனைகள் மலிந்ததாய் வந்து வாழ்நாளில் வந்து வருத்தும்.
தெரிந்தோ, தெரியாமலோ வாழ்வில் எண்களைத் தவறான வகையில் லாட்டரிச் சீட்டு, சூதாட்டம் போன்ற வகையில் தவறாகப் பயன்படுத்தி இருந்தால், 8, 13 எண்களைத் தேவையற்ற வகையில் தவிர்த்து இருந்தால், எண் சாஸ்திர நியதிகளைக் கடைபிடிக்காமல் இருந்திருந்தால் இவற்றுக்கான பரிகாரங்களைப் பெறவும், எண் சக்திகளை வாழ்வில் அடையும் முறைகளைப் பெறவும், எண் சக்திகளைப் பற்றி உணரவும்

தானியங்கள், நாணயங்கள் என அவரவருடைய வசதிக்கு ஏற்றபடி, காலையிலும், மாலையிலும் ஆலயத்திலும், இல்லத்திலும் 1008 முறை வலம்புரிப் பிள்ளையார், பாண லிங்கம், திருப்பதிப் பெருமாளை, சனீஸ்வரரை அர்ச்சித்து வழிபடவும்!
பிட்சாடனர், சோமாஸ்கந்தர் என்றவாறாக, 36 மூர்த்திகளுக்கு மேல் அருளும் ஆலயங்களில் வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். 24 கோபுரக் கலசங்களுக்கு மேல் அமைந்துள்ள ஆலயங்கள், எட்டு விமானங்களுக்கு மேல் உள்ள கோயில்கள், எட்டுப் பசுக்களுக்கு மேல் உள்ள கோசாலைத் தலங்களில் சனிக் கிழமைகளில் 1008 சஹஸ்ரநாமப் போற்றித் துதிகளுடன் வழிபடுதல் ஆயுள் பற்றிய பீதிகளைத் தணித்திட உதவும். இத்தலங்களில் 1008 முறை அர்ச்சித்தலுடன் நாள் முழுதும்,

ஸ்ரீநடராஜப் பெருமான்
பாபநாசம்

காணாபத்யம் சிவாபரம்,
ஹரிபூரணம், பிரம்ம குணம்,
அம்பசுதாம், ஸ்கந்தமால்யம்,
நவகிரகபாவனம், சனைஸ்சரப் பூச கடாட்சம்,
சர்வதேவ சாட்சாத்கார சஹஸ்ரமால்யப் படே ஸ்துத்யம்
கணபதி யாங்குண கச்சிஏ கம்பராசன்
குணத்திரு மாலே ஸ்வாமி! கூர்மதி பிரம் மராயன்
ஆதி பராசக்தி அழகுடை முருகப் பெம்மான்
நவதேவ நற்கோள் பீடம், சனிஈசப் பூசதேவம்,
சர்வதேவப் பணிதல் கூட்டி சகஸ்ர பூசை ஆற்றலானோம்!
எனக் குறைந்தது 1008 முறையாவது ஓதி வரவும். நாள் முழுதும் சஹஸ்ரநாமத் துதுகளை ஓதி நாளைச் செலுத்துவது வாழ்வில் எண் கடாட்ச விருத்திக்கு சஹஸ்ரசிவபாத மண்டலி உறைப் பித்ருக்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும். மேலும் சஹஸ்ர லிங்க (1008) தரிசனம், 108 லிங்க தரிசனம் (பாபநாசம்) விசேஷமானவை!

மகா சம்பத் கௌரீ விரதம்

ஆதிகாலத்தில் சூரியனை ஒரு கோள் என்பதை விட ஒரு நட்சத்திரமாகவே பாவித்தமையால், செவ்வாய், புதன், குரு (வியாழன்), சுக்கிரன் (வெள்ளி), சனி ஆகிய ஐந்து கோள் வழிபாடுகளும், பஞ்ச கிரகக் கோள்களாக வைத்தே ஜாதகக் கணிப்புகளும் நிகழ்ந்தன. காரணம், அச்சமயத்தில் தர்ம யுகக் கற்பமாக, மிக, மிகப் புனிதமான தர்ம சமுதாயமாகத் திகழ்ந்தமையால், கோள் வகை வழிபாடுகள் அவ்வளவாகத் தோன்றிட இறைநியதிகள் சங்கல்பிக்கவில்லை!
மேலும் அத்தகையப் புனிதமான கற்ப காலங்களில், ஜாதகத் துறையை விட, சமுதாயத்தில் உத்தமச் சத்குருமார்களை மதிக்கும் தெய்வீக மாண்பினை நன்கு பெற்று மனித குலம் உலகெங்குமாகப் பிரகாசித்தமையால், சத்குருமார்களும் ஜாதக நியதிகள் இன்றி, அவரவர்களுடைய தலையொளிப் பட்டையை வைத்தே அனைத்தையும் தெளிவுரைக்கலாயினர்.

ஸ்ரீசகஸ்ரலிங்கம்
நெல்லையப்பர் ஆலயம்

இதன் பிறகான யுகங்களில், மனிதன் சுக போகத்தை நாடிக் கர்ம வினைகளைப் பெருக்கிக் கொள்ளத் தொடங்கியமையால், யுகங்கள் மாற மாற, உலக சமுதாயத்தில் தர்ம சக்திகள் மங்கத் தொடங்கிடவே, சத்குருமார்களும் நேரில் வந்திறங்குவதை, உறைவதைத் தணித்து, இலை மறை கனியாய் மறையலாயினர். ஜாதகத் துறை மீண்டும் நவகிரக பரிபாலனச் சட்டப் பெட்டகமாக சமுதாயத்தில் பூக்கலாயிற்று! ஜீவன்களின் கர்ம வினைப் பெருக்கத்தால், ஜாதகக் கலை நன்கு மலர்ந்து, நவகிரக மூர்த்திகளாலான கர்மப் பரிபாலன நியதிகளும், கலியுகக் காலப் பூர்வமாக அமைந்து, சூரிய, சந்திர கோள்களின் பங்கும் ஜீவ வாழ்வில் முக்கியத்துவம் பெறலாயின.
அன்றும் இன்றும் என்றுமே, சூரிய, சந்திர சாட்சிப் பூர்வமாகவே இப்பூவுலகில் அனைத்தும் நிகழ்கின்றன என்ற மறைவாக்கியமும் சத்தியப் பூர்வமானதே! இதனால்தாம் ஏனைய கிரங்கங்களை விட, சூரிய, சந்திரக் கோள்களின் உதயம், அஸ்தமன நேரங்கள் பஞ்சாங்களில் மிகவும் முக்கியத்துவம் அளித்துக் குறிப்பிடப்படுகின்றன. வானியற் பூர்வமாக சந்திர மூர்த்தி, எந்த நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கின்றாரோ, அது அன்றைய நட்சத்திரமாகிறது என்பது பலரும் அறியாததாகும். எனவே, சந்திரத் தரிசனம் என்பது அன்றைய நட்சத்திர மண்டலத் தரிசனமாகிறது அல்லவா! எனவே இனியேனும் சந்திர உதய, அஸ்தமன நேரங்களையும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
சந்திரன் உதிக்கும் நேரத்தில் உங்களால் சந்திரக் கோளத்தைக் காண முடியாவிட்டாலும், சந்திர உதயம், மறையும் நேரத்தை அறிந்து கொண்டு
சந்திரப் பிரபாச சாதவாசுதா! ஆதமதி சாட்சியதாய்
ஆமனத்துறைப் பொருளே! ஆமதியதன் மாவதன மாத்துறை தேவா!
ஆதவ வளியாய் வந்துறைந்து ஆவலீய சக்தி ஈவாய்!
என ஓதி, சந்திர மெளீஸ்வாரா போற்றி! போற்றி! போற்றி! என ஓதி வணங்குதல் வேண்டும். சஞ்சலப்படுகின்ற மனம் இதனால் கட்டுப்பட்டு நன்னெறியைச் சாரும் பயிற்சியாக இது அமையும், தினந்தோறும் அமைந்துதவும்.

கடம்பர்கோயில் குளித்தலை

பலரும் வான்வெளியை வெட்டவெளி என்றே விளிக்கின்றனர். இவ்வுலகில் காடுகள் இருப்பது போல, விண்ணிலும் வனங்களாகிய ஆரண்யங்கள் உண்டு. நம் கண்களுக்குப் புலப்படாத எத்தனையோ கோடித் திரவியங்கள், பொருட்கள், ஒலி, ஒளிக் கற்றைகள், வானியல் விருட்சங்கள் நிறையவே உள்ளன. இவற்றுள் பலவற்றுக்கு ஆரண்ய மண்டலங்கள் (வான்வெளி வனங்கள்) என்று பெயர். இவை சாதாரணக் கண்களுக்குப் புலப்படா! இவற்றில் அடர்ந்த காடுகளும் உண்டு.
எவரும் அடைய இயலாத பல வானியல் ஆரண்ய மண்டலங்களையே எண்ணற்ற சித்தர்களும், மஹரிஷிகளும் தவம் புரியத் தேர்ந்தெடுப்பர். ஒவ்வொரு மனிதனும் தினமும் 72 வகை மரங்களையும், 108 வகை செடி கொடிகளையும் தினமும் பார்த்து வந்தால்தான், உடலில் ஆரண்ய சக்திகள் நன்கு திரண்டு, தீர்கமான கண் பார்வை, நன்கு நிமிர்ந்து நடத்தல், அமர்தல், நல்ல ஜீரண சக்தி, தலை தொங்காது நிமிர்ந்து இருத்தல் போன்ற முக்கியமான அவயத் துறைகள் ஆரோக்யமாக இருக்கும்.
பூலோக மக்கள் இவ்வகையில் ஆரண்ய சக்திகளைத் தினமும் பெற்று வந்தால்தான் உடல், உள்ளம், மனதில் நல்ல ஆரோக்ய சக்திகளை நன்கு பெற்று இறைவனைச் சிந்தனையில் இருத்துவர், இல்லையேல் நோய்த் துன்பங்கள், வாழ்க்கை கஷ்டங்களில் உழன்று, உழன்றே இறைவனை மறப்பர் என்பதால்தான், அம்பிகையே பூவுலக, விண்ணுலக ஆரண்யங்களிலும் விரதமிருந்து பூவுலகிற்கு வந்து, வேதாரண்யம், கடம்பாரண்யம் (குளித்தலை) போன்ற தலங்களில் தம் ஆரண்ய விரத சக்திகளை நிலை நிறுத்தினாள்.
மகா சம்பத் கௌரீ விரத நாள் அன்று காலை சூரிய உதய நேரத்தில், ஆலய நந்தவனத்தை வலம் வந்து, நாள் முழுதும் உண்ணா நோன்பிருந்து,
"கெளரீ மஹா மாயீ நமோஸ்துதே! கெளரீ மஹா மாதா நமோஸ்துதே! கெளரீ மஹா தேவீ நமோஸ்துதே!
கெளரீ மாதா! உலகன்னையே! உய்யவந்த நாயகியே! காத்தருள்வாய்! காத்தருள்வாய்! காத்தருள்வாய் அம்மா !
- என நாள் முழுதும் கெளரீ மஹாமாயிச் சிந்தனையில் உறைக!
ஆலயத்தில் அரசு, ஆல், வேம்பு, வன்னி, புரசு, மந்தாரை, மகிழம் போன்ற தல மரத்திற்குப் பூஜைகளை ஆற்றிட்டு, மாலையில் நான்கு மணி அளவில் ஆலயங்களில் தாம் காலையில் பூஜித்த தலமரத்தில் நோன்பை நிறைவு செய்தல் வேண்டும். கெளரீ, சம்பத் கெளரீ போன்ற பெயர்களை உடைய அம்பிகையைத் தரிசித்து விரதத்தை நிறைவு செய்தல் மிகவும் விசேஷமானது. பணக் கஷ்டங்களுக்கு பித்ருக்களின் ஆசிப் பூர்வமாக நிவர்த்திகளைத் தர வல்லதாகும்.
மஹா சம்பத் கெளரீ என்று பெயருடைய அம்பிகையைத் தரிசித்தல் மிகவும் விசேஷமாது. இயலாவிடில் அல்லது குறைந்த பட்சம் எட்டு அமர்ந்த கோல ஆலய அம்பிகையரைத் தரிசிக்க வேண்டும்.

எண் சக்திகளை எப்படி பெருக்குவது ?

அங்காரக சப்தமி அன்று ஒன்பதிற்கு உரிய செவ்வாயும், ஏழிற்குரிய சப்தமியும் பிணைந்து வருகின்றன. இதில் எந்த ஹோரை நேரத்தில் ஏழும் (திதியும்), எந்த ஹோரை நேரத்தில் ஒன்பதும் (கிரகமும்) பலம் வாய்ந்தவையாகத் துலங்குகின்றன என்றறிய இந்த கோள் காட்டுக் குணங்களிடையே பரிமளிக்கும் பகை, நட்பு, சமம் கூறுபாடுகள் உதவும்.
எந்த நாளில் எந்த நேரத்தில் அந்நாளின் வார (கிழமை) சக்திகள், திதி சக்திகள், யோக சக்திகள், கரண சக்திகள், நட்சத்திர சக்திகள் வலிமை பெறுகின்றன என்றறிந்து காரியங்களை ஆற்றுவது காலபல சந்தி தேவ பூஜை முறைகளாகும். மிகவும் சக்தி வாய்ந்தவை! வெறுமனே கேட்பதை விட முறையாக ஆற்றுபவர்களுக்கே இவை உணர்த்தப் பெறும்.
ஒவ்வொரு கிரஹமும் விசேஷமான எண் சக்திகளைப் பூண்டுள்ளன. அந்தந்த கிரஹ எண்ணை வைத்தும் கோள்வாரியான பகை, நட்பு, சமம் குணக் கூறுகளை வைத்தும் அந்நாளின் எண சக்திகளை அறியலாம். எனவே, ஒரு நாளின் - வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்பதான ஐந்து காலசக்திகள், கோள் சக்திகள், எண் சக்திகளைக் கொண்டு, பலாபலன்களை ஹோரை வாரியாக - அதாவது காலை 6 - 7 மணி -செவ்வாய் ஹோரை, 7 -8 மணி சூரிய ஹோரை என்றவாறாக -அளிப்பதே துல்லியமாக இருக்கும். சில சமயங்களில் ஹோரையிலும் , ராகு கால, குளிகை கால, தியாஜ்ய கால சக்திகள் பல மாற்றங்களையும் ஏற்படுத்துவது உண்டு.
மேலும், ஒரு ஹோரை நேரத்தில் எண்ணும், இன்னொன்றில் திதியும், மற்றொன்றில் நட்சத்திரமும் அல்லது இவற்றின் பல்வேறுக் கூட்டமைப்புகளும் வலுவுள்ளதாக இருக்கும் அல்லவா! இதில் அவரவர் ஜாதகப்படி, ராசிமான (பிறந்த நேர)க் கோளமைப்புகள், அந்தந்த நாளுக்கான (கோசாரக்) கோளமைப்புக் கணிப்புகளும் சேர்ந்தால்தான் அவரவருக்கான தினசரிப் பலன்களைக் கூற முடியும். எனவே தினசரிப் பலன்கள், ராசி வாரியாக, நட்சத்திரவாரியாகப் பொதுவாகக் கூறுதல் சரியாக இருக்காது. சிறிதளவு அனுமானித்துக் கூற முடியும்.

திருநல்லூர் சப்தசாகர தீர்த்தம்

அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளது, மிகவும் சந்தோஷமே! ஆனால் இறையருளால்தான் அனைத்தும் நிகழ்கிறது என்று பரிபூரணமாக நம்பும் அளவில் இது வினாடிக்கு வினாடி வாழ்வில் பரிபூரணம் பெறுதல் வேண்டும். இதற்குத் தினமுமே நவகிரக மூர்த்திகளைக் காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும் 108 முறை ஆழ்ந்த நம்பிகையுடன், பக்தி மிளிர வலம் வந்து வணங்கிட வேண்டும்.
செவ்வாய்க்கு உரிய எண் 9, சப்தமித் திதிக்கு உரிய எண் ஏழு. எண் சாஸ்திரத்தில் நாம் எதிர்பார்ப்பது போல் 1, 2, 3, 4, 5 என்று வரிசையாக வராது. ஞாயிறு (சூரியன்) -1, சந்திரன்-2, செவ்வாய்-9, புதன்-5, வியாழன்-3, வெள்ளி-6, சனி-8 என்று கோள் சக்திகள் எண் சாத்திர ரீதியாக அமைகின்றன. இதில் எந்த நட்சத்திரம் எந்த கிரகத்தைச் சார்ந்தது (உ-ம் பூசம் - சனி) என்பதன் மூலமாகவும், நட்சத்திர கிரகத் தத்துவ வாரியாக ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எண் சக்திகளை அளிப்பதும் உண்டு.
உதாரணமாக, மிருகசிரிஷ நட்சத்திரம், நட்சத்திர எண்படி ஐந்தாவது நட்சத்திரமாக இருந்தாலும், செவ்வாய் கோளத்தைச் சார்ந்த நட்சத்திரம் என்பதால், ஒன்பதின் அம்சங்களைத் தழுவி வரும். எண் சக்திகள், கிரக சக்திகள், நட்சத்திர சக்திகள், வார சக்திகளோடு பிணைக்கும் ஆன்மீக முறைகளை நன்கு அறிந்து கொண்டால், கால சக்திகளோடு, வானியல் கோள, தாரா சக்திகளையும் இணைத்து, எத்தகைய இன்ப, துன்பங்களின் ஊடேயும், சாந்தமும், நல்அறிவும், மன அமைதியும் நன்கு நிறைந்து வரும் வண்ணம் மனோவைராக்யும் துளிர்க்கும். எனவே, துன்பங்கள் தீர்ந்தால்தான் மன அமைதி கிட்டும் என்ற எண்ணம் தவறானது.
கிரக பரிபாலனத்தைக் கலியில், நவகிரக மூர்த்திகள் ஆற்றுவதால், கர்ம வினை விளைவுகளை ஏற்று அனுபவித்திடச் சித்தமாக இருத்தலே நன்று. வாழ்வில் அமைகின்ற இன்ப, துன்பங்களின் பிணைப்புகள் இடையே மன சாந்தத்தை, இதே நவகிரக மூர்த்திகள் மூலமாகப் பெற்றிடலாம். அதாவது செய்த வினைகளுக்கான கர்ம வினைகளை அனுபவித்துக் கழித்தால்தான் அவை முழுமையாகக் கழியும்.
ஆனால் இவை படிப்பதற்குத் தத்துவார்த்தமாக இருந்தாலும், இவைதாம் உண்மையாகவே ஒவ்வொரு விநாடியும் நிகழ்வதென அறிந்தால்தான் நடப்பது எல்லாம் பூர்வ ஜன்மப் பூர்வமாக அமைவதே என்ற எண்ணம் நன்கு வலுப் பெறும்.
இவற்றை நன்கு அறிய இயலாவிடினும், காலசக்திகளுடன், எண் சக்திகளைப் பாமரரும் பெற்று பயன் பெற பல எளிய மார்கங்கள் உண்டு! அறியாமல் அறிந்துணர் என்பதாக, மூதாதையர்களே வந்துதவி உணர வைக்கும் வண்ணம், சித்தர்கள், உத்தமப் பெரியோர்கள் அளிக்கும் பஞ்சாங்கப் பூர்வமாகவும், குருவாய் மொழியாகவும் அளிக்கப் பெறும் அந்தந்த நாளுக்கான எளிய பூஜைகளை, விரதங்களை, பண்டிகைகளை தனியாக இயலாவிடில், சத்சங்கமாகப் பலருடன் ஒன்று சேர்ந்தும் ஆற்றி வந்திடில், அனைத்துக் கால சக்திகளும், எண் சக்திகளும் தாமே பகுத்து வந்துதவும்.

அங்காரக சப்தமி நாளான்று,
* மருந்தீஸ்வரர், வைத்யநாதர், அருமருந்து நாயகி, தன்வந்த்ரீ மூர்த்திகள் அருளும் மருத்துவ சக்தி நிறைந்த தலங்களிலும்,
* ஏழின் எண் சக்தி மிகுந்த தலங்களிலும், ஏழு தலைமுறைகளின் பெயர்களைச் சொல்லி அர்ச்சனை செய்து பூஜிப்பது மிகவும் விசேஷமானதாகும்.
* ஏழு கடல்கள் ஒன்று சேர்ந்த திருநல்லூர் சப்தசாகரத் தீர்த்தம், சப்த ரிஷிகள், சப்த மாதர்கள், சப்த கன்னியர்கள் அருளும் தலங்களில் 27, 36, 63 தீபங்களை ஏற்றி வழிபடுதலால்,
பித்ருக்களின் ஆசிகளைப் பெறவும் உதவும்.

கரு காக்க

பெருமாளுக்குரிய புதனும், ஸ்ரீகிருஷ்ணருக்கு உரிய அஷ்டமித் திதியும் இணையும்போது ஜீவசக்தி பெருகும்!
ஸ்ரீஅகஸ்திய மஹரிஷி தம் பத்தினியாம் ஸ்ரீ லோபாமாதாவுடன் இணைந்து நிதமும் பூஜிக்கும் தலங்களுள் ஒன்றே கும்பகோணம் - மருதாநல்லூர் அருகே உள்ள கருவளர்ச்சேரி சிவத் தலமாகும். ஜீவ உற்பத்தி நிகழும் கருப்பையைப் புனிதமான கருவறை என உரைப்பர். ஜீவார்த்தக் கருவறைகளுக்கெல்லாம் மூலக் கருவறைத் தலமே கருவளர்ச் சேரித் தலம் ஆகும். அகிலத்தையே காக்கும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கருவளர் நாயகியாக, கரு காக்கும் நாயகியாக இங்கு ஸ்ரீஅகஸ்தீஸ்வரருடன் அருள்கின்றாள்.
இங்கு மிக, மிக அபூர்வமாக ஸ்ரீஅகஸ்திய மஹரிஷி தம் பத்தினியாம் ஸ்ரீ லோபாமாதாவுடன் தரிசனம் தருகின்றார். இருவருமே தினமும் பூஜிக்கும் சிவத்தலம் அல்லவா!

ஸ்ரீகருகாக்கும்நாதர்
மருதாநல்லூர்

இத்தலத்தில், கருவறைச் சிசுக்களை ரட்சிப்பது மட்டுமன்றி, கலியுகத்தில் பெருக இருக்கும் கர்பப்பை சம்பந்தமான நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஜகன்மாதாவாகத் துலங்கிட அம்பிகையை வேண்டினர் அகஸ்திய மஹரிஷி தம்பதிகள்.
கர்பப்பை சம்பந்தமான நோய்கள், கருக் குற்றங்கள், கருச் சிதைவு, கரு நழுவுதல், கருப்பைப் புற்று நோய், வயிற்றில் பலத்த பிணிகள் போன்ற கர்ப நாளம் சம்பந்தமான துன்பங்களை, பிணிகளை அகற்றி அருளவும் விசேஷமாகக் கருவைக் காக்கும் அன்னையாகவும் அருளிட வேண்டி அகஸ்திய மாமுனி நமக்காகப் பெற்றுத் தந்த அபூர்வமான சிவத்தலமிது!
கரு நன்முறையில் உருவாவதற்கு அருளிடவும், கருவைக் காக்கவும், அதர்மமான கருச்சிதைவைத் தடுக்கவும், சுகப் பிரசவத்தில் தாயும் சேயும் நலம் பெற்று வாழவும் விசேடமான முறையில் அருளைப் பொழிந்திட, ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்பிகை விசேஷமான அவதாரிகையாக விளங்க வேண்டும் என்று வேண்டி ஸ்ரீலோபாமாதா சமேத அகஸ்தியரும் அம்பிகைக்குச் சீந்தில் கொடி எனும் விசேஷமான மூலிகைப் பாவாடை சார்த்தி வழிபட்ட தலம். சுகப் பிரசவத்திற்காகப் பிரசவ நேரத்தில் தாயின் கால் விரல்களில் சீந்தில் கொடியைக் கட்டுவது பண்டையச் சித்த வைத்ய முறையாகும்.
இங்கு ஸ்ரீலோபாமாதா சமேதராய் அகஸ்தியரே அருள்வது கலியுக மக்களுக்குப் பெரும் பாக்யமே!
புதனும் அஷ்டமியும் கூடும் நாள் வயிறு, கர்பப்பை நாளங்கள் நன்கு விருத்தி அடைய உதவும் நாளுமாகும்.  
இந்நாளில் தனி விமானத்துடன் துலங்கும் எட்டுத் திருமால் அவதார மூர்த்திகளை வழிபடுதல் விசேஷமானது. எட்டுத் துறைத் தீர்த்தம், எண் கிணறுத் தீர்த்தத்தால் தர்ப்பணம் அளித்தலால், சரியான முறையில் வாழாது இறந்த முன்னோர்கள் ஓரளவேனும் நல்மார்கம் பெற உதவும். இதற்காக, பழமையான ஆலயத் தீர்த்தங்களில் குறைந்தது எட்டுத் தலைமுறைகளுக்கேனும் பலா இலையில் தர்ப்பணம் அளித்தல் வேண்டும். பலா இலையில் எட்டு முக்கியமான ரேகைகள் உண்டு. இவை பித்ரு லோகப் பாதையைக் குறிக்கும்.

காலச் சக்கரம்

வாழ்வில் எவ்வளவோ வியாழக் கிழமைகள் வந்து செல்கின்றனவே, இதில் எந்த மாற்றமும் புலப்படவில்லையே என்றுதான் சர்வ சாதாரணமாக கால ஓட்டத்தைப் பற்றிப் பலரும் இப்பூவுலகில் எண்ணுகின்றனர். பைரவ மஹாசக்திகள், காலவேத சக்திகள், வேதகால சக்திகள் எனப் பலவும் பொங்கிப் பூரிக்கும் குருவாரமாகிய வியாழக் கிழமையில், நேரம், கோள்கள் போன்ற கால சாதனங்களுக்கும், மனித உடலுக்கும் இடையே உள்ள பரிணாமத்தை விளக்க வல்லதாகும்.
ஞானம் என்றால் நமக்கு இது வராது என எண்ணல் வேண்டாம். ஞானம் எனில் சாசுவதமானது, சத்தியமானது, மாறாதது எனப் பொருளாகும். இதர ஆறு நாட்களில் தோன்றாத பல வகை ஞான விளக்கங்கள் வியாழனன்று புலனாகும்.

பிரயோகச் சக்கரம் தாங்கிய
பெருமாள் மூர்த்தி திருவக்கரை

வியாழனன்று தோன்றும் ஞான விளக்க சக்திகளை அறிய வேண்டுமானால், ஓர் ஆன்மீகக் கேள்வியை எடுத்து வைத்துக் கொண்டு, (உ-ம் பூமி ஏன் சுழல்கின்றது? ஒருவருடைய மனம், புத்தி எங்கு நிலை பெறுகிறது? மனம், உள்ளம், உடல் மூன்றுக்குமான விளக்கங்கள் என்ன? பூமியின் ஆகர்ஷண சக்தி என்றால் என்ன?) அதற்கான விடையை அறிய முற்படுங்கள். உலகில் அனைத்துமே தக்க காரணங்களுடன்தான் நிகழ்வதால் மிகவும் லெளகீகமான கேள்விக்கும் காரணமறிவதும் ஆத்ம விசாரமே?
உதாரணமாக, “இன்று பஸ், ரயில் ஏன் தாமதமாக வந்தது?” என எண்ணி ரயிலில் /பஸ்ஸில் பயணம் செய்தவர்கள், அவர்களைக் காண வந்தவர்கள், ரயில் பஸ் வந்த பாதையில் நிகழ்ந்தவை என ஆயிரக் கணக்கான சம்பவங்கள், மனிதர்கள் இந்தச் சிறு கேள்விக்கான விடையில் பிணைந்திருப்பதை உணரலாம். இத்தகைய ஆத்ம விசாரமும் மனவகைப் பூஜையே, மனம் விலகாது இதில் ஓரளவு நிலை நிற்பதால் தியானப் பயிற்சியும் ஆகிறது!
இவ்வகையான கேள்விகளுக்கு உரித்தான விடையை, விளக்கத்தை உங்களுக்குள்ளேயே தேடுவதே ஆத்ம விசாரமாகும். இதே கேள்விக்கு, ஒவ்வொரு கிழமையிலும் உங்களுக்குள் கிடைக்கும் விளக்கத்தை எழுதி வைத்து வாருங்கள்! இதில் வியாழனன்று கிடைக்கும் விடைகள் நன்கு ஆழ்ந்ததாக, வித்யாசமானதாக, உங்களாலேயே நம்ப முடியாத அளவிற்கு உங்களிடமா இத்தகைய அற்புதமான விளக்கங்கள் தோன்றின என்று எண்ணி வியக்கும் அளவிற்கு விசேஷமான அர்த்தங்கள் தோன்றுவதைக் கண்டு ஆனந்தமடைந்திடலாம். இதற்குக் காரணம் குருவாரத்தில் பூமியில் பரிணமிக்கும் நிலையான இறைப் பகுத்தறிவு அறிவு சக்திகள் ஆகும்.
புத்தக அறிவும், கல்வி அறிவும் சாசுவதமாகாது! இவ்வாறு ஆத்ம விசாரத்தால் அடையும் அறிவே மனம், உள்ளம், உடலில் நன்கு, நிலையாகச் செறிவதாகும். இத்தகைய ஆத்ம நிலை முன்னேற்றங்கள், மறு பிறவிகளிலும் நன்கு வந்து சேர்ந்து, ஆன்மீகத்தில் அடுத்த பிறவியில் அடுத்த வகையான உத்தம நிலையைப் பெற உதவும். ஆனால் உடலை வருத்திப் பெற்ற கல்வி அறிவோ, இந்த உடலோடு முடிந்து, மறுபிறவியில் மீண்டும், மீண்டும் ஆரம்பக் கல்வி நிலையாக தொடரும்!   
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் ஏற்கனவே நிர்ணயிக்கப் பெற்றவையே! சித்தர்கள் அளிக்கும் மஹாகால வாக்கியமான இதனை வைத்துக் கொண்டு நன்கு ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்! வியாழக் கிழமை காலச் சக்கரச் சக்திகள் நன்கு பரிணமிப்பதால் சக்கரங்கள், யந்திரங்கள், மேருக்கள் பதிக்கப் பெற்ற ஆலயத்தில் தட்சிணா மூர்த்திக்கு வட்ட வடிவில் எட்டு கொத்துக் கடலை மாலை சார்த்தி வழிபடுக!
சக்கரம் தாங்கிய பெருமாள் ஆலயத்தில் பெருமாளின் திருப்பாதங்களுக்கு வட்ட வடிவில் பூச்சக்கர மாலை சார்த்தி வழிபடுதலால், தான் பிறர் போற்றும் வகையில் இல்லாது எல்லாவற்றிலும் சராசரியாக இருக்கிறோமே என வாழ்க்கை முழுதும் உள்வேதனையுடன் தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்வோரின் மனத் தாங்கல்கள் சிறிது சிறிதாக அகல் உதவும். நல்ல மனோவைராக்யம் பெற உதவும். பிள்ளைகள் புத்திசாலித்தனமாக இருக்கவும் துணை புரியும்.

சாந்தமான திருமண வாழ்வு

புத்தி, அறிவு, ஞான விஷயங்களுக்கு புதன், குரு, சந்திர, கேது கிரக சக்திகள் மிக மிக முக்கியமானவை. தீர்கமான இறைஞானத்தை அருளும் குரு மூர்த்தி, மனதை ஆட்சி செய்பவர் மதிகாரகாகிய சந்திரன், ஞானகாரகராகிய கேது மூர்த்தி, புத்தியை நிர்மாணிப்பவரான புத மூர்த்தி இவர்கள் ஒருவருடைய ஜாதகத்தில் இயங்கும் அம்சங்களைப் பொறுத்தே, ஒருவருடைய வித்யை, கல்வி, புத்தி, தீர்க தரிசன அம்சங்கள் அமைகின்றன.
ஒரு நாளில் பல்வகைக் கோளங்களும் வானியல் ரீதியாகப் பல ராசிகளில் இருந்தாலும், ஒன்றாம் இடம், மூன்றாம் இடம், திரிகோணம், எட்டாம் கோணம் எனப் பலவிதமான கூட்டு அமைப்புகளில் இவை இயங்குகின்றன. இவற்றில் கோளக் கூட்டு அம்ச அமைப்புகளும், ஆயிரக் கணக்கில் அமைந்து, பலாபலன்களும் நிமிடத்திற்கு நிமிடம் மாறுபாடு அடையும்.

கருப்பத்தூர் சிவாலயம்

இவை எல்லாம் ஜாதக, ஜோதிட அம்சங்களாயிற்றே, நாம் ஏன் இவ்வளவு விளக்கங்களைக் கேட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டும் என எண்ணாதீர்கள். ஒவ்வொரு மனிதனின் சில அவயங்களிலும், கை, கால் ரேகைகளிலும், விரல்களிலும் (உ-ம் ஆள் காட்டி விரல் - குருவிரல், கைளில் சந்திர மேடு, செவ்வாய் மேடு, இடது கண் - சந்திரன்) கோள் அமைப்புகள் உண்டு. எனவே, வான்வெளியின் கோள அமைப்புகள், ஒவ்வொரு நொடியும் நகர்வது போல, இவை யாவும் ஒவ்வொரு மனிதரிடம் அவருடைய உடலில் நிறைந்திருக்கும் கோள நாடிகளிலும், ஒவ்வொரு விநாடியும் மாற்றங்களை ஏற்படுத்தித் தரும்.
ஆகையால், “வானில் ஏதோ கிரகங்கள் நகர்கின்றன, இயற்கையாக நடப்பது தானே! இதிலென்ன நமக்கு இருக்கிறது!'' என்று எண்ணக் கூடாது. உண்மையில் தியானம் என்பது உடலில் உள்ள கோள அம்சங்களை, வானியற் கோளங்களோடு சாந்தமாகப் பிணைப்பதும் ஆகும். ஆனால் மேற்கண்ட வகையில் ஆயிரக் கணக்கான கோள் பிணைப்புக் கணித முறைகள் இருப்பதால்தான் கோள் இணையமும் கடினமாகி, தியானமும் அவ்வளவு எளிதாக வந்தமைவதில்லை!

ஸ்ரீமனோன்மணி அம்பாள் திருநாவலூர்

ஒருவர் கர்ம யோகம், ஞானவழி, யோகமுறை, தியானம், வைணவம், கணபதி உபாசனை, சைவம் எனப் பல நல்வழிகளில் இறைவனை அடைய முடியும். எவருக்கு எது ஏற்று வருகின்றதோ அந்த இறை மார்கத்தைப் பற்றிக் கொண்டு இறுதி வரை கடைபிடிக்க வேண்டும். மேற்கண்ட அனைத்தும் நன்கு ஒன்றுபட்டு இணைந்து வருவது அம்பாள் உபாசனையில்தாம். இதனால்தாம், முக்தி நிலை அடைய, அம்பாள் உபாசனையையே மிகவும் எளிமையானதாகப் பெரியோர்கள் உரைக்கின்றனர்.
வெள்ளியராகிய சுக்கிர கிரகம், அயன, சயன, சுக போக அம்சங்களையும், செல்வத்தையும் குறிப்பதாகும். நாய் பெற்ற தெங்கம் பழம் என உரைப்பது போல, புத்தி, அறிவு, உள்ளம் சரியாக அமையாவிடில், அயன, சயன, சுக போகங்கள், செல்வக் குவியல் அனைத்தும் விரயமாகி, வீண் வழிச் செல்லுமன்றோ !  
வெள்ளிக் கிழமைகளில் கன்யாகுமரி, சப்த கன்னிகள், இறைவனின் வலப்புறம் அம்பாள் சன்னதி உள்ள திருமணக் கோல ஸ்தலங்கள் (திருமுல்லைவாயில், திரைலோக்கி, கருப்பத்தூர்) என்றவாறாக, கன்யா அம்சங்களுடன் அருளும் அம்பிகையரை விரதம் பூண்டு வழிபடுதல் நல்ல ஸ்திரமான புத்தி, நல்ஒழுக்கம், மங்கள பாக்யம், செளபாக்ய வரங்கள் போன்றவற்றைப் பெற்றிட மிகவும் உதவும்.
குறிப்பாக கன்யாப் பெண்களாகிய எட்டு வயது முதல் மணமாகும் பருவத்தில் உள்ள தம் புதல்வியரை மனோன்மணி அம்பாள் (உ-ம் உத்திரமேரூர், கும்பகோணம் அருகே கூகூர், திருநாவலூர்) எனும் பெயருடன் அருளும் அம்பிகையை, வியாழன் தோறும் விரதமிருந்து, வெள்ளியன்று மனோன்மணி அம்பிகையைத் தரிசித்து, விரதத்தை நிறைவு செய்து ஏழைக் குடும்பப் பெண்களுக்கு வளையல்களை நிறைய அளித்து வருவதால், நல்ல ஒழுக்கமான, மங்களகரமான, செளபாக்ய வரங்கள் நிறைந்த வாழ்க்கையைப் பெற உதவும்.
புதல்விகளுக்காகப் பெற்றோர்களும், புதல்வியர் ஒரு சிறிது நிலையிலாவது விரதம் பூணுதலும் ஆற்றிடலாம். பெண்கள் செவ்வாய், வெள்ளி தோறும் மனோன்மணி அம்மன் ஆலயத்தில் அம்பாளின் திருப்பாதங்களுக்கு, பக்தியுடன் மந்திரங்களை ஓதி, தாமே அம்மியில் அரைத்த மஞ்சளைச் சார்த்தியும், நிறைய வளையல்கள் கூடிய மாலையைச் சார்த்தியும் வழிபடுதல்,
* கன்னிப் பெண்கள் தக்க வயதில் பருவம் அடையவும்,
* மாதவிலக்குக் கோளாறுகள், மாத விலக்கு நாளில் வயிற்று வலி, வயிற்றுப் பிணிகள் இல்லாது காக்கவும்,
* கர்பப் பைப் பிணிகள் வாராது காக்கவும்,
* தக்க வயதில் நன்முறையில் திருமணம் நடைபெறவும்,
* திருமண வாழ்வு சாந்தமாக இறையருளால் நடைபெறவும் உதவும்.

அனைத்தையும் நல்கும் ஆலய வலம்

கலியுகத்தில் நிரவி வரும் வல்வினைகளைப் பார்க்கையில், ஒவ்வொருவரும் தம்மைத் தற்காத்துக் கொள்ள, தினசரியும் மூன்று வேளைகளிலும் ஆலய தரிசனம் செய்து வருதல்தான் நல்ல தற்காப்பு சக்திகளைத் தரும் என்பதை மனதில் நன்கு இருத்திக் கொள்ளல் வேண்டும். காலை, உச்சி வேளை, மாலை ஆகிய மூன்று வேளைகளுமே சந்தியா வேளைகள் ஆவதால், அதாவது இரு பொழுதுகளின் சங்கமக் காலம் ஆவதால்தான், ஆலயம் தொழுவது சாலவும் நன்று ஆகிறது.

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
திரைலோக்கி

ஸ்ரீசுந்தரேஸ்வரர்
திரைலோகி

அதாவது, மூன்று கால வேளைகளுக்கு இடையிலும் ஒவ்வொரு மனிதனும் மனம், உடலால் பலவற்றை எண்ணியும், தகாதன செய்தும், ஒன்றுமே செய்யாது காலத்தை விரயம் செய்து கிடந்தும் பற்பல வினைகளைச் சேர்த்துக் கொள்வதால், மூன்று வேளை ஆலயத் தரிசனமே அவ்வப்போது தினமுமே கர்ம வினை விளைவுகளைத் தணிக்கும்.
தினமும் காலையில் கோபுர தரிசனம், கோபுரக் கலச தரிசனம், ஆலய நந்தவன விருட்சங்கள் தரிசனம் எனப் புண்ணிய தரிசனங்களால் கண் நாளங்களை நன்கு ஆன்மப் பூர்வமாக விருத்தி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் கண்களால் உந்தப் பெற்றே மனிதன் பல தவறான எண்ணங்களுக்கு ம், அதர்மமான காரியங்களுக்கும் ஆட்படுவதால், கண் நாள நாடிகள் சுத்தமடைய ஆலய தரிசனமே சிறந்த வழியாகும். ஆலய தீபங்கள் ஒவ்வொன்றும் விதவிதமான ஆரோக்ய சக்திகளைக் கண்களுக்கு அளிக்க வல்லவை!
ஆலயத்தில் கோபுரம், கலசம், கொடிமரம், ஆலய மூர்த்திகள் போன்று இறைப் பூர்வமாகத் தரிசிக்கையில் கண்கள் நன்கு யோகப் பூர்வமாக நிரவி, நல்ல நேத்ர யோக பாவனமாகவும் ஆகின்றது. ஆலயத் தரிசனத்தில் மட்டும்தாம் மனித உடலில் உள்ள 72000 நாளங்களும் ஆக்கப் பூர்வமாக நன்கு பயனாகின்றன. தினமும் காலையிலும், மாலையிலுமாவது, விடுமுறை நாட்களில் கூடுதலாகவும், 21, 36, 64 எனும் வகையில் ஆலய கோபுர கலச தரிசனங்களையோ அல்லது 108 பிரதட்சிண, 12 முறை அடிப்பிரதட்சிணம் எனும் முறையில் ஆலய தரிசனம் மேற்கொள்வதால் நல்வைராக்யச் சித்தம், மனோதிடம் கிட்டும்.
குடும்பத்தில் ஒவ்வொருவராக அனைவருமே அனைத்துப் பிரகாரங்களிலும் வலம் வருதல், ஏழைக் குடும்பங்களை அருகில் உள்ள பழமையான சுயம்பு மூர்த்திகளின் தலங்களுக்கு அனுப்பிச் செலவை ஏற்றுக் கொள்ளல் போன்ற மங்களகரமான பணிகளால் கடுமையான நிகழ்ச்சிகளால் ஏற்பட்டுள்ள மனவடு, மனப் புண்களை சிறிது சிறிதாக ஆற்றிட உதவும். இதற்குக் காரணமானவர்கள் மனம் திருந்தி நல்லுறவை மேம்படுத்த முன் வருவர்.

வேண்டுதல் வேண்டாமை வேண்டும்

இறைவழிபாட்டில் நான் எதையும் வேண்டுவதில்லை எனப் பலரும் சொல்வதுண்டு! ஆனால் இவை வெறும் வாய் வார்த்தைகளே, உண்மையாகவே உள்ளத்தில் இருந்து வருவதல்ல! ஒரு சிறிது விருப்பம் உள்ளத்தில் இருந்தாலும், அதனை இறைவனிடம் பிரார்த்தனையாக வைக்காவிடினும், இதுவும் மெளனமான வேண்டுதலாகவே ஆகின்றது.
மேலும் உண்மையாகவே இறைவனிடம் எதையும் வேண்டாதோர், தாம் எதையும் இறைவனிடம் வேண்டவில்லை என வெளியே எதனையும் அப்பட்டமாக உரைக்காது சாந்தமாகவே இருந்திடுவர்! வெளியே இவ்வாறு சொல்ல வேண்டிய அவசியமும் அவர்களுக்குக் கிடையாது! எனவே, அவரவருக்கே உள்ளூறத் தெரியும் எதை வேண்டுகிறார்கள் என்று!
மேலும், இன்றையப் பொழுதில் எவரும் எதையும் வேண்டாவிடினும் நாளை குடும்பத்தார் எவரேனும் வேண்டிடில் இதற்கும் குடும்பத் தலைவரும், தலைவியும் தாமே பொறுப்பாகின்றனர்! ஆகையால் வேண்டுதல் வேண்டாமை என்பது உத்தமத் தெய்வீக நிலையாதலின், இதனைப் பெறும் வரையில், நியாயமான ரீதியில், இறைவனிடம் நல்லதை வேண்டுவதில் தவறு கிடையாது என உணர்க!

ஸ்ரீவல்வில்ராமர் ஆலயம்
புள்ளபூதங்குடி

இஷ்ட தெய்வ வழிபாடு ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானதாகும். அதாவது, ஒவ்வொரு மனிதரும் தனக்கு இஷ்டமான தெய்வ வடிவைத் தேர்ந்தெடுத்து, வாழ்நாள் முழுதும் தினந்தோறும் வழிபட்டு வர வேண்டும். குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, தான் வசிக்கும் இடத்தின் எல்லை தெய்வ வழிபாடு ஆகிய மூன்றும் கலியுக மனிதனுடைய தினசரி வாழ்வில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.
ராம லக்ஷ்மண துவாதசி என்பதற்கு நிறைய புராண அனுபூதி விளக்கங்கள் உண்டு. ராமாயண அனுபூதிகளில், முழுமையான ஏகாதசி விரதம் பூண்ட நிலையில், சபரியின் ஆஸ்ரமத்தை அடைந்தனர் ராமபிரானும், லக்ஷ்மணரும்! ஸ்ரீராமபிரான் தரிசனத்திற்கு ஆங்கே சபரி மூதாட்டிப் பல்லாண்டுகளாகக் காத்திருக்கின்றார், சபரி மூதாட்டி, ராமாயண வைபவங்கள் ஏதுமே அறியாதவர், அவருக்குத் தேவையான ராமாயண ராம அவதார ஞானத்தை மட்டும் மாதங்க மாமுனி அளித்திருந்தார். ஸ்ரீராமரின் தரிசனத்திற்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் தவமே பெருந்தவமாகி அவருக்கு அமைந்து, சபரிக்கு ராமரின் தரிசனத்தைப் பெற்றுத் தந்தது.
ஏகாதசி விரதம் முடிந்து, துவாதசி பாரணைக்காக, ஸ்ரீராமர் காத்திருக்க, சபரி தான் ராமருக்கென வைத்திருந்த கனிகளைச் சிறிது சுவைத்து ராமரிடம் அளித்திட, ஸ்ரீராமரும் சிறிது உண்டு திவ்யப் பிரசாதமாக லக்ஷ்மணரிடம் அளித்திட, லக்ஷ்மணனும் சிறிது உண்டிட, ராம லஷ்மணத் துவாதசியாகக் கனிந்தது! இதன் பிறகு இருவரும் அன்றைய நேரத்திற்கான விஷ்ணு, சிவபூஜைகளை ஆற்றினார்.
ராமருடைய தினசரி பூஜைகளில், வம்ச தெய்வமான சூரிய நாராயண சுவாமி பூஜையும், ஸ்ரீரங்கநாதர் பூஜையும், சிவலிங்கப் பூஜையும் உண்டு. எனவே ராம லட்சுமண துவாதசி அன்று இம்மூன்று பூஜைகளையும் ஆற்றுதல் மிகவும் விசேஷமானதாகும்.
முழுமையான ஏகாதசி, துவாதசி விரதத்தில், வைகுண்ட ஏகாதசி போல ஏகாதசி நாள் மட்டும் என்றில்லாது, தசமித் திதி முடிவில் இருந்து தொடங்கி, ஏகாதசித் திதி நேரம் முழுதும் விரதமிருந்து, இரவு முழுதும் பெருமாள் துதிகளை ஓதி, மறுநாள் காலை துளசித் தீர்த்தம் அருந்தி, சிறிது துவாதசிப் பாரணைக்குப் பிறகு துவாதசித் திதி நாள் முழுதும் விரதம் இருந்து, துவாதசி இரவிலும் உறங்காது விழித்திருந்து, விஷ்ணு, மகாலக்ஷ்மித் துதிகளை ஓதி, இரு நாள் விரதமிருத்தலால் நன்முறையில் செல்வ கடாட்சம் பெருக உதவும்.

எத்தகைய பகை, விரோத, குரோத நாச சக்திகளையும், இதனால் ஏற்படும் எண்ணற்ற கஷ்டங்களையும் முழுமையாகப் போக்கித் தருவதும் ஆகும். ராமலக்ஷ்மணத் துவாதசி நாளில் கூர்ம மூர்த்தி தரிசனம் மற்றும் ஸ்ரீராமரின் நின்று இருந்த கிடந்த கோலங்களைத் தரிசிப்பதும் (செங்கல்பட்டு அருகே பொன் விளைந்த களத்தூர், புள்ளபூதங்குடி), நெல்லி கலந்த உணவினை உண்ணுதல், மலைத் தேனில் ஊறிய பத்துப் பெரிய நெல்லிக் காய்களைத் தானமளித்தலும், மிகவும் விசேஷமானது. லக்ஷ்மணரே ஆதிசேஷனாகவும், ராமரே கிருஷ்ணராகவும் வந்தமையால், நெல்லி வகை உணவுத் தானத்திற்குப் பிறகு ஸ்ரீகிருஷ்ணர், லக்ஷ்மணர், ஆதிசேஷனைத் தரிசிப்பதும் விரத மகத்துவத்தை முழுமைப் படுத்தித் தருவதாகும்.

எதிர்காலத்தைப் பற்றி அஞ்ச வேண்டாம்

சந்திர மதி, சூரிய மதி, சுக்கிர மதி என்ற ஒன்பது விதமான (கிரஹ பாவன) வேத குணமதி சக்திகள் உண்டு. அதாவது, தினமும் சந்திர மூர்த்தி எந்த ராசியில், எந்த கிரஹத்துடன், எத்தகைய கிரஹப் பார்வைகளுடன் உறைகின்றாரோ, அதைப் பொறுத்துச் சந்திர மதி, சூரிய மதி, சுக்கிர மதி போன்றவை அமையும். இவ்வாறு கிரகமதி குணங்களால் நல்ல எண்ணங்களும், நற்காரியங்களும், போக எண்ணங்களும் தோன்றி கிரக சஞ்சார நிலைகளுக்கு ஏற்ப மதி குணங்கள் அமையும். மொத்தத்தில் இங்கு நாம் அறிய வேண்டியது, வானத்தில் உள்ள கிரஹ சஞ்சார, சலனங்களுக்கு ஏற்ப ஒவ்வொருவர் உடலிலும் மனதிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதேயாம்.
உதாரணமாக, சுக்ர மதி வலுவாக அமையும் நேரத்தில், நாளில் போக எண்ணங்கள் மிகுதியாக உண்டாகும். இன்று ஹோட்டலில் போய் நன்றாகச் சாப்பிட வேண்டும், சினிமாத் தியேட்டருக்கு, பீச்சுக்குப் போக வேண்டும், என்ற வகையான எண்ணங்கள் வந்தால், அது சுக்ர மதியின் விளைவாகும்.
பிறர் மேல் மிகவும் கோபப்பட்டு அவருடன் சண்டை போட வேண்டும் என்று எண்ணினால் அன்று அது சூரிய மதியின் குணமாகும். இதற்காக நல்லன அல்லாதவையே தோன்றலாகும் என எண்ணாதீர்கள்! இரு வகைகளிலும் மதி குணப்பாடங்கள் அமைவதுண்டு.
பொதுவாக, கரிநாளில், சந்திர மூர்த்தியின் ஆட்சிக்கு உரித்தான கடக ராசியில், நட்பு அம்சக் கிரக மூர்த்திகள், வளர்பிறையில் அமர்ந்தால், சந்திர மதி, சத்யமதி குணமாக அமையும். அதாவது, இன்றேனும் உண்மையே பேச வேண்டும், உண்மையாக வழிபட வேண்டும்! என்றெல்லாம் தோன்றும். இவ்வாறு மதிகளுக்கான கிரக பாவன அம்சங்களைப் பற்றி, சந்திர கிரகத்தைப் பற்றியே
சந்திரன் + சூரியன்,
சந்திரன் + சுக்கிரன்
சந்திரன் + ராகு + சுக்கிரன்
என்றவாறான பல்வேறு கிரஹக் கூட்டு அம்சங்களுடன் சந்திர மூர்த்தி அமைகையில் இதற்கான வகையில், ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு கிரக பாவன விளக்கங்கள் இருக்கின்றன என்றால் ஜோதிடம் என்பது என்னே அற்புதமான தெய்வீகக் கலையாகப் பொலிகின்றது. ஜோதிடம் என்பது பலன்களை அளிப்பது மட்டுமல்ல! வானசாஸ்திரக் கண்ணாடியே ஜோதிடக் கலை ஆகும்.
ஒரு ராசியில் சந்திரன் உறைகையில், அந்த ராசி ஸ்தானத்தை ஏனைய கிரஹங்கள் ஒன்று முதல் 11ம் இடம் வரையான பத்து பாவனங்கள் சந்திரனை நோக்கும் கிரஹப் பார்வைகளாக அமைகின்றன அல்லவா! இதன் கூட்டமைப்புக்கு சந்த்ர சசீயம் என்று பெயர். பெளர்ணமி சமயத்தில் இவை உச்சம் பெறும். இதனை முறையாக நற்பூஜைகள் மூலமாக நன்கு பயன்படுத்திக் கொண்டால், அளப்பரிய மனோசக்திகளைப் பெற்றிடலாம்.
இதில் சந்திர ஆட்சிப் பீடமான கடகத்தில் சனி கிரகம் அமைய வரும் கரிநாள் நல்ல மகத்துவங்களைக் கொண்டு அமைகிறது. மனசஞ்சலங்களுக்கு ஆட்பட்டு, கெட்ட வழியில் செல்வோர் திருந்திட, இத்தகைய கரிநாள் கூடும் திங்கட் கிழமையில் வெண்மையும், கறுப்பும் கலப்பதான எள் பொடிச் சாதம் படைத்துத் தானமாக அளித்தல் மனப் பேரலைகளைத் தணிக்க உதவும்.
திங்களாதலின் சந்த்ர சக்திகள் வலுப் பெருகின்றன. கரிநாளும் ஆவதால் சனி கிரக சக்திகளும் வலுவடைகின்றன. இத்தகைய சனி மதி சக்திகள் ஆயுள் பற்றிய பீதியை, அச்சத்தை, மன சஞ்சலங்களைப் போக்கிட உதவும். குறிப்பாக ஒரு முறை ஹார்ட் அட்டாக்கிற்கு ஆட்பட்டவர்களுக்குத் தோன்றும் மனபீதிகள் அகல, இத்தகைய சனி மதி நாளில் ஆயுள் விருத்தி சக்தித் தலங்கள், மருத்துவ சக்தித் தலங்களில் சந்திர, சனீஸ்வர பூஜைகளை ஆற்றுதல் வேண்டும். உண்மையான காரணங்களால், இத்தலங்களுக்குச் சென்று வழிபட இயலாதோர், எள் பொடிச் சாதமாக்கிப் பிரண்டையில் மிளகு வைத்துத் துவையல் அரைத்து வீட்டில் இறைவனுக்குப் படைத்து முதலில் காக்கைகளுக்கு வைத்து, அவை உணவை எந்தத் திசையில் நின்று ஏற்கின்றன எனப் பார்த்து அதே திசையை நோக்கிப் பூஜையறையில் இறைவனை வணங்கி எள்ளோதரைத் (எள் சாதம்) தானமளித்து, மிளகுக் குழம்பு சாதத்தை உணவாக ஏற்றல் நன்று.
சனிக் கிழமைகள், கரிநாட்களில் கறுப்பும் வெள்ளையும் கலந்த பசுக்கள், பட்சிகள், நாய்களுக்கு உணவளிப்பதும், நல்ல ஆரோக்யமான மன எண்ணங்களைப் பெற்றிட உதவும். பலருக்கும் கனவில் கழிப்பறை, குப்பைகள் பற்றிய காட்சிக் கனவுகள் வந்தால் அந்நாளில் கர்மக் கழிவிற்கான வாய்ப்புகள் வரும், இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பொருளாகும். கரிநாளில் தீவினைக் கர்ம வினைகள் கழிய நிறைய வாய்ப்புகள் வரும், நன்கு பயன்படுத்திக் கொள்க! கரிநாள் தோறும் 88 உணவுப் பொட்டலங்களையேனும் தானமளித்தலைக் கைக்கொள்க.
இவ்வளவு விளக்கங்களையும் அறியாத பாமரர்கள் அல்லது படித்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?  சந்திர மூர்த்திக்கு 64 புஷ்பங்களால் ஆன மாலை அணிவித்து வழிபட்டு, அறிந்தோர் வேதோ ஹரீஸ்வரத்துத்யாம் எனும் துர்க்கா சந்திரகலாத் துதிகளை ஓதிடுக.
பிறகு 64 புஷ்பங்களாலான மாலை சனீஸ்வரருக்குச் சார்த்தி அறிந்தோர் தசரதர் சனீஸ்வரரைப் பற்றித் துதித்த மந்திரங்களை ஓதிடுக! ஏனையோர் தாமறிந்த வேயுறு தோளிபங்கன் போன்ற எளிய துதிகளை ஓதிடுக!
இத்தகைய பூஜா பலன்களாக,
* மரணம், எதிர்காலம் பற்றிய பீதி தணியும்
* அன்புடன் பழகாது, காழ்ப்புணர்ச்சி, விரோதம், பகைமை உணர்வுகளுடன் குறித்த சிலரிடமும் அலுவலகத்திலும், உற்றத்திலும், சுற்றத்திலும் நெடுங்காலம் எரிச்சலாகப் பழகி வருபவர்கள், தம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள உதவும். பகைமை உணர்வுகளோடு இறந்தால் அடுத்த பிறவிகளிலும் இது தொடர்ந்து வந்து பகைமைப் புனலாக வந்து வாட்டும். பகைமையோ, பாசமோ அனைத்துமே அந்தந்தப் பிறவியில் புனிதமான அன்பாக மாறுதல் வேண்டும். அன்பு வேறு, பரிவு, வேறு, பாசம் வேறு! பெற்று வளர்க்கும் கடமைக்காகப் பாசம் கொள்வதில் தவறில்லை! ஆனால் பாசத்திற்கு அடிமைப்பட்டால் வேதனைகளே மிஞ்சும்.

பொய்க்கும் பரிகாரம்

வாழ்வில் எவற்றில்தாம் எந்த ஒரு மனிதரும் பரிபூரணமாகப் பரிணமிக்கும் நிறைவைக் காண முடியும்? ஏனைய கல்வி, செல்வம், வீரம் போன்ற எதிலுமே மாற்றங்கள் ஏற்பட்டு, மன நிறைவும் மாறி, மாறி அமைவதால், இவற்றில் பரிபூரணத்தைக் காண இயலாது. பூரணம் என்றால் எல்லா இடத்திலும் குறைவற நிறைந்திருப்பதாகும். உதாரணமாக, இனிப்புக் கொழுக்கட்டை, போளிக்கான வெல்லப் பூரணத்தில், இனிமையானது பரிபூரணமாக எல்லா இடத்திலும் நிறைந்திருக்கும். பூரணத்தில் ஒரு பகுதியைக் கிள்ளி எடுப்பதால், அதன் இனிமை குறைவு அடைவது கிடையாது. இதனால்தான் வெல்லத்தால், சர்க்கரையால் ஆக்கப்படும் எதனையும் எளிமையாகப் புரியும்படி பூரணம் என்று மங்களகரமாகப் பெயரை வைத்தார்கள்.
சத்தியப் பூரணர் எனும் மகரிஷி, தாம் ஆற்றும் எந்த விரதத்தையும் பரிபூரணமாகக் கடைபிடித்து, அதில் நிறைவைக் கண்டு இதன் பலாபலன்களை பல விரதத் தலங்களிலும் பதித்துத் தந்துள்ளார். தமக்கென எவ்வித பலாபலன்களையும் வைத்துக் கொள்ளாதத் தியாக மாமுனி ஆவார். சத்திய லோகத்தில் உறைபவர். சத்தியத்தில் இருந்து சற்றும் பிறழா மகரிஷி. ஹரிச்சந்திரனுக்குக் குரு வாரம், குரு ஹோரை நேரந்தோறும் தரிசனம் தந்து, உண்மையின் தாத்பர்யத்தை முழுமையாக விளக்கித் தந்தவர்.
உண்மையில், வாழ்வில் பொய் கூறாது இருப்பது மட்டும் சத்தியம் ஆகாது. உண்மையாக வாழ்தலும் வேண்டும். நம்பிக்கையைக் காப்பாற்றுதல், நாணயம் போன்றவையும் கூடியதே உண்மையாக வாழ்தலாகும். இறைவனிடம் இருந்தே தோன்றிய ஜோதி வடிவே சத்தியம் என்பதால், சத்திய ஜோதி அனைவரிடமும் நிச்சயமாகப் பொலிகின்றது. தெய்வத்தின் குரல் மற்றும் குருவின் வாக்கியங்கள் யாவுமே எப்போதும் சத்திய சக்திகளை உடையவையே. இவ்வகையில்தாம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியே ஸ்ரீகிருஷ்னரின் லீலையால் போதாயன அமாவாசைத் திதி ஆயிற்று. இதனால்தாம் அபிராமி பட்டருக்காக அமாவாசையே பெளர்ணமி ஆயிற்று. குருவின் வாக்கில் கொள்ளும் சத்தியப் பற்றில் இருந்தும் ஆழ்ந்த நம்பிக்கை உண்டாகின்றது.
சத்திய ஜோதியில் சூரிய, சந்திர, குரு போன்ற கோள் வகை ஜோதிகளும், நட்சத்திர ஜோதிகளும் கலந்து வருவதால்தான் சத்திய ஜோதிப் பிரமாணமும் சிறப்பு அடைகின்றது. உண்மையைப் பேசுதல் வேறு, உண்மையாக நடத்தல் வேறு. உலகில் நடப்பது அனைத்தும் பூர்வ ஜன்மப் பரிபாலன நியதிப்படி உண்மையாக நடப்பதே. இதைத்தான் நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்று சொல்கின்றோம்.
உத்தமத் தெய்வ நிலைகளில், உண்மையாக நடப்பதை உணர இயலாததையே மாயை என்று உரைப்பர். அதாவது, எதுவுமே நிரந்தரம் அல்ல, இறைவனைத் தவிர. மற்ற எல்லாமே உண்மை அற்றவையே, மாயையே என்பதும் சத்தியத்திற்கான ஒரு விளக்கமாகும். பாமரர்களும் புரியும் வண்ணம் உண்மை என்று சொல்வது நடந்ததை, நடந்தபடியே உரைப்பது என்பதாகும். ஆனால், இது முழுமையான விளக்கம் அல்ல. ஜீவன்களுடைய நலன்களுக்காக உண்மையின் விளக்க நிலை சற்றே மாறுபடும்.  
உத்தம தேவ நிலைகளில் கலியுக நியதிகளுக்கு ஏற்ப உண்மைக்கான உரைக்கின்ற விளக்கமே, உலகில் நடப்பது அனைத்தும் பூர்வ ஜன்ம பரிபாலன நியதிப்படி நடப்பதே என்பதாகும். சற்று உத்தம ஆன்மீக நிலையில் உண்மையைப் பற்றி உரைப்பது, உலகில் நிகழ்வது அனைத்தும் நிலையற்ற மாயையே என்பதாகும். இவ்வாறு பாமரர்களுக்கும் உத்தம தெய்வீக நிலைகளை அடைந்தவர்களுக்கும் இடையில் பாலமாக அமர்ந்து இரு சாராருக்கும் உதவிய மாமுனியே சத்திய பூரண மகரிஷி ஆவார்.
தேன், விளக்கு தீபம், தினை மாவு, மஞ்சள் போன்றவற்றில் சத்திய சக்திகள் மிகுந்துள்ளன. வியாழக் கிழமையான சத்திய பூரணத் தாத்பர்ய நாளில், தினை மாவில் தேன் கலந்து மா விளக்கு செய்து, மஞ்சள் தடவிய திரியால் மாவிளக்கு தீபம் ஏற்றி காரைக்கால் அம்மையாரின் மூத்தத் திருப்பதிகம் பாடலை ஓதி வழிபடுதல் மிகவும் விசேஷமானது.
பையனோ, பெண்ணோ நிறைய பொய் பேசி, தகாத வழக்கத்திற்கு ஆளாகின்றனரே, என்று தங்கள் பிள்ளைகளைப் பற்றிப் பள்ளிப் பருவத்திலும், கல்லூரி மாணவ நிலையிலும், ஏன், திருமணம் ஆன பின்னரும் கூட எண்ணி வருந்துகின்ற பெற்றோர் மேற்கண்ட தினைமாவு விளக்கு தீபம் ஏற்றி,
சத்ய பூரண, சத்ய வாரண, சத்ய காரண பாஹிமாம் தேஹி மே ஸ்வதாம்
என 12 முறை ஓதி, 12 முறை சாஷ்டாங்கமாக தம்பதிகள், குழந்தைகள் சகிதம் மாவிளக்கு தீபத்தை வணங்கி, மாவிளக்கைத் தான் ஒரு சிறிதும் உண்ணாது காக்கை, பசு, எழைக் குழந்தைகளுக்கு அளித்தலால், குடும்பத்தினர் வாக்கு சக்தியில் நல்ல மாற்றங்களைப் பெறலாம். பிள்ளைகளும் திருந்துவர்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam