முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

நினைவாற்றலைப் பெருக்குக

ஒவ்வொரு நாளிலும் எண்ணற்ற காலசக்திகள், ஞானசக்திகள், பக்தி குணங்கள் தோன்றுகின்றன. இவற்றை அடைந்து பயன் பெறும் நல்மார்கத்தை உரைப்பவரே சத்குரு ஆவார். உங்களுடைய சத்குரு எங்கிருந்தோ உறைந்து உங்களுக்குத் தினமுமே பலர் மூலமாக, பல்துறைகள் மூலமாக ஏன் ஒரு கிளி மூலமாக, ஒரு மாமர இலை மூலமாகக் கூட நல்வழி காட்டித்தான் வருகின்றார். ஆனால், நீங்கள்தான் பேராசை, மாயை, பாசம், தீய வழக்கங்களுக்கு ஆட்பட்டுப் பாதை மாறி, அவரிடமிருந்து அடிக்கடி விலகிச் சென்று விடுகின்றீர்கள்!
உலகில் உள்ள அனைவருக்கும் சத்குரு உண்டென்றும், ஒவ்வொரு உலக மனிதனின் வாழ்க்கையின் மூல அம்சமே சத்குருவைத் தேடுவதேயாம் எனப் பன்முறை சக்திப் பூர்வமாக, சத்தியமான உரைகள் மூலமாக உணர்த்தி வருகின்றோம். (சத்குருவைத்) தேடுவது எனில் ஒரு பொருளைத் தேடுவது போலன்று! எவ்வாறு ஒரு தாய்ப் பசுவை விட்டுப் பிரிந்த கன்றானது, மருகி, மருகி, ஓடி, ஓடித் தன் தாய்ப் பசுவைத் தேடுகின்றதோ, இதைப் போலவே சத்குருவைத் தேடும் அன்புப் படலம்தான் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஆகும். இதனால்தான் பிரேமை, பக்தி, அன்பு என சத்குருவின் அருளமுதத்தைக் குறிக்கின்றார்கள்.
ஆனால், கலியக மனிதன் இந்த லட்சியத்தில் இருந்து அடிக்கடி விலகிச் சென்று, சுக போகங்களை நாடியும், மாயை, பாசம், அதர்மம், பேராசை, பொய்மைக்கு ஆட்பட்டு, தம் மூல லட்சியத்தில் இருந்து பலரும் விலகிச் சென்று விடுவதால், பூஜைகள், ஆலய வழிபாடு, உத்தமர்களின் தரிசனம் மற்றும் ஆசிகள், ஆத்ம விசாரம் போன்றவைதாம் சத்குருவை நாடும் லட்சிய இறைப் பாதையில் நிலை நிறுத்தும்.

வீணையில்லா ஞானசரஸ்வதி
கோயம்பேடு சிவத்தலம்

ஆனால் உலக மக்கள் பல மதங்கள், ஜாதி, இனங்களைச் சார்ந்து இருப்பதால் அவற்றில் சத்குருத் தத்துவார்த்தமே பிற மதங்களில், பிற நாடுகளில் இருப்பதாக, நிறைவதாகத் தெரியவில்லையே, என்ற எண்ணம் ஏற்படக் கூடும். உண்மை அதுவல்ல! கடவுள் தரிசனத்தை உணர்த்தும் மதங்களில் மூலமுதல் போதகராக ஒருவரை வைத்து, அதனதன் சித்தாந்தங்கள் அமைவதும், சத்குருவை இறைவனின் தூதுவராகப் போற்றி, சத்குருவின் மேன்மையை உணர்த்துவது தாமே!
கடவுள் நம்பிக்கை கொள்ளாதோரும் தம் வழிமுறைக்கு என ஒரு தலைவரின் வழிகாட்டுதலை ஏற்பதால், இங்கும் நல்வழிகாட்டி என்ற வகையிலான சத்குரு மார்கமே புலப்படுகிறது. மேலும், ஒருவரை கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என வெறுத்து ஒதுக்கலாகாது. அவரவர் மனதில் ஆயிரமாயிர எண்ண, கருத்துப் போக்குவரத்துகள் ஒவ்வொரு விநாடியும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். எந்நேரத்திலும், வாழ்க்கையின் எந்தத் தருணத்திலும் ஒருவரிடம் நல்மாற்றங்கள் ஏற்படக் கூடும். உள்ளூரக் கடவுளை வழிபட்டும், வெளிச் சூழ்நிலைகளுக்காக நம்பிக்கை இன்மை போல் தோன்றுவதும் உண்டு. ஆனால், எவராயினும் சரி எத்தனை கோடிப் பிறவிகளுக்குப் பிறகும் சன்மார்கம் மூலமாகவே பிறவித் தளையில் இருந்து விடுபட முடியும் என்பதே உண்மை.
உலக மக்கள் அனைவருக்கும் வாழ்க்கையின் பல சமயங்களிலும், நமக்கு இவ்வளவு கஷ்டங்கள் ஏற்படுகின்றனவே! இதற்குக் காரணமே புலப்படவில்லையே! என்ன காரணம் என அறிந்தால் தக்க தீர்வுகளைப் பெறலாமே என்று புலம்புவது உண்டு. இந்தப் புலம்பலின் உட்புறம் ஒரு நல்வழி காட்டியின் தயவை நாடுகின்ற தொனி தென்படுகின்றது அல்லவா, இதுவே சத்குருவைத் தேடும் படலமே அனைத்து ஜீவன்களின் வாழ்க்கை என்பதை உரைப்பதாகும்.
கடவுளை வழிபடுவோரும், பிறரும் தக்க சத்குருவைப் பெற்று நல்வாழ்வினை அடையத் தம் பிரார்த்தனைகளைத் தினமும் எழுப்புதல் வேண்டும். கலியுலகத்தில் அன்னதானமே அனைத்துத் தானங்களிலும் தலைசிறந்தது என உரைக்கக் காரணமே, இதில் பல பொது நலப் பிரார்த்தனைகள் சுயநலமின்றித் தியாகமயமாக எழும்புவதாகும். “எனக்குத் தக்க சத்குரு கிட்டி, நான் மோட்ச நிலைகளைப் பெற வேண்டும்,” என்பதினுள் சற்றுப் புகுந்து பார்த்தால் சுயநல வாசனை பீடித்திருப்பது நன்கு புலப்படும். ஏனெனில், முக்தியோ, மோட்சமோ, ஒரு ராமசாமியோ, கோவிந்தனோ தனிப்பட்ட மனிதனாக அடையும் நிலையல்ல! ஒருவர் எந்த அளவிற்குப் பிற ஜீவன்களின் நல்வாழ்விற்காக உழைத்து வாழ்கின்றாரோ அவருக்குத்தான் மோட்ச நிலைக்கான பாதை புலப்படும்.
மேலும் மோட்சமோ, முக்தியோ தக்க சத்குருவால் அடையப் பெறுவது அல்லவா! “டேய் கண்ணா! உனக்கு சத்குரு வாய்த்து இறையருளால் முக்திக்கான மார்கஙகளை அடைந்துள்ளாய்! இதே போல உன் கணக்கிற்கு நீ 35476 ஜீவன்களைக் கடைத்தேற்ற வேண்டும் என்ற நியதி உள்ளது. இதற்காக நீ மேலும் 16330 முறைப் பூவுலகில் பிறக்க வேண்டும்!'' என்று சத்குரு நிர்ணயித்தால் ....
எனவே, சத்குரு ஆணையாக முக்தி, மோட்ச நிலை அடைந்தோரும் மீண்டும், மீண்டும் சத்குரு ஆணையாகப் பூவுலகில் பிறப்பதும் உண்டு. எனவே, பிறருக்கும் முக்தி, மோட்ச நிலைகளைப் பெற்றுத் தரும் வகையில், சத்குருவோடு மீண்டும், மீண்டும் பூவுலகிற்கு வந்து இறைச் சமுதாயப் பணிகளை ஆற்றுவது தானே சிஷ்யரின் உத்தம தெய்வீக லட்சணம்! இதற்காகவே நாம் பூவுலகில் பிறந்துள்ளோம் என்பதும் உத்தம எண்ணமே!
எனவே ஞானசக்திகள் நிறைந்த புனர்பூசம்  வியாழன் கூடும் நாட்களில் சிந்தனா சக்திகள் பூவுலகில் பூரிப்பதால் இந்நாட்களில் தட்சிணா மூர்த்தி, ஹயக்ரீவர், ஞானசரஸ்வதி, ஞானாம்பிகை போன்ற ஞானசக்தி மூர்த்திகளை வழிபட்டு, வெண்டைக்காய், முந்திரி, பாதாம் பருப்பு, வல்லாரைக் கீரை போன்ற வேத சக்தி, ஞானசக்தி, ஞாபகசக்தித் திரவியங்கள் கலந்த உணவினைக் குழந்தைகளுக்குத் தானமாக அளித்திடுக! கிளிகளில் ஞானக் கிளிகளும் உண்டு. கிளிகளுக்குத் தேனில் தோய்த்த கிஸ்முஸ் எனும் சிறு (உலர்) திராட்சைகளை அளித்து,

ஸ்ரீதுங்கபால ஸ்தனாம்பிகை
கஞ்சனாகரம்

வலக் கையில் கிளியைத் தாங்கும் மதுரை மீனாட்சி,
இடக் கையில் கிளியைத் தாங்கும் - மயிலாடு துறை அருகில் உள்ள கஞ்சனாகரம் துங்கபால ஸ்தனாம்பிகையை (மானசீகமாகவேனும்) வணங்கி,
கீரவேத சம்ரக்ஷகாயை நம:
வேதஉரைச் சார கீரவதன மாவேத கஞ்சனாகர வேத மாந்துறைத் தாயே போற்றி போற்றி போற்றி
என 1008 முறை ஓதி,
தட்சிணா மூர்த்தி, ஹயக்ரீவர், ஞானசரஸ்வதி, ஞானாம்பிகை போன்ற ஞானசக்தி மூர்த்திகளைத் திராட்சையால் அர்ச்சித்து வழிபட ஆத்ம விசார சக்திகளும் நினைவாற்றலும் நன்கு மேம்படும்.
நால்வேத சக்திகளும் கிளி வடிவில், கஞ்சனாகரம் கிராம சிவாலயத்தில், துங்க ஸ்தனாம்பிகையின் இடது தோளில் அமர்ந்திருக்கும் வடிவில், அம்பிகை அருளும் கஞ்சனாகரம் சுயம்பு லிங்கத் திருத்தலப் பெருமையைப் பலரும் அறியாமையால், கோயில் சிதிலமடைந்துள்ளது. தடைபட்டுள்ள இக்கோயிலின் திருப்பணிகளை ஏற்றி நடத்தித் தர பக்தர்கள் முன் வர வேண்டும். வேதசக்திகள் பொங்கிப் பொழியும் அபூர்வமான ஆலயம்! வேதசாரமே கிளியாய் அம்பிகையின் தோளில் அமர்வதெனில் இவ்வற்புதமான கோயில் சீரமைப்புத் திருப்பணிகள், கலியுலகில் மறைந்து வரும் வேதசக்திகளையும், தமிழ் மற்றும் தேவ, கிரந்த வழிபாடுகளையும் புனரமைத்துத் தருமன்றோ! சந்ததிகளுக்கும் சாசுவதமான வேதசாரப் புண்ய சக்திகளை அளித்திட வல்ல அற்புதமான தலம். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தோர் வழிபட வேண்டிய தலம். கார்த்திகை, புதன், புனர்வசு, நவமி நாட்களில் இங்கு வழிபட்டு வருதல் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி ஞானத்தைத் தரும். திருமண சக்தித் தலம். திருஞான சம்பந்தர், உலகன்னையிடம் ஞானப்பாலமுதம் பெற, சம்பந்தரின் பெற்றோர்களுக்கு அருளிய திவ்யமான திருத்தலம்.

திடீர் மாற்றங்களால் கலங்க வேண்டாம்

விடிவெள்ளி என்பது விடியற்காலையில் சூரிய உதய நேரத்தில் சூரியனுக்கு மேற்புறம் கிழக்கில் பிரகாசிக்கும் சுக்கிர கிரகத்தைக் குறிப்பதாகும்.
சுக்கிர கிரகம் ஆயில்ய நட்சத்திர முதல் பாதத்தில் சஞ்சரிக்கும் நாள் ஆரோக்ய வளத்திற்கான சுக்ர மருந்து சக்திகள் நன்கு வளம் தர வல்ல நாளாகும். பொதுவாக, சுக்கிரர் பூஜித்த மூர்த்தியே வெள்ளீஸ்வரர் ஆகின்றார். தீய குணமுடையவர்களாக மாறிய அசுரர்களை, அரக்கர்களைத் திருத்திடவே, சுக்கிராச்சாரியார் அசுரர்களுக்குக் குருவாக ஆனார்.

சுக்ர சக்திகள் பொலியும்
வெள்ளியங்கிரி தரிசனம்

சுக்ர சக்திகள் - ஞானவளம், அறிவு வளம், செல்வ வளம், உலோக வளம் என்பதாகப் பல வளங்களையும் குறிப்பதாகும். மனித உடலிலும், பல்வகை உலோக சக்திகள் உள்ளன. மேலும், மருத்துவ ரீதியாகவும் தங்க பஸ்பம், தாம்பூல வெள்ளி பஸ்பம், தாம்ர அன்னபேதி சிந்தூரம், நாவல் அயச்சத்து போன்ற வகைகளில் உடலுக்குத் தேவையான தங்க, வெள்ளி, தாமிர, இரும்புச் சத்துக்கள் சேர்கின்றன. இவ்வாறாக, மனித உடலுக்கு அந்தந்தக் காலப் பருவத்தில் வெள்ளி, தாமிரம், தங்கம், நவரத்ன சக்திகள் உடலில் நன்கு சேர்தல் வேண்டும்.

ஸ்ரீஅநூபமஸ்தனி அம்பிகை
திருநீலக்குடி

எவ்வாறு பல்வகை சத்துப் பொருட்கள் உணவு மூலமாக உடலை அடைகின்றனவோ, ஆரோக்யமான பிராண வாயு சக்திகள் சுவாசம் மூலமாக உடலை அடைகின்றனவோ, இதே போலப் பல்வகை உலோக, ரசாயன சக்திகளும் உணவு, நீர், மருந்துகள் மூலமாகவும், நகைகள் மூலமாக ஸ்பரிசமாக, தொடு பாவனமாகவும் உடலில் சேர்கின்றன.
ரசாயன சக்திகள் என்றால் விஞ்ஞானப் பூர்வமான நச்சுத் தன்மைகள் நிறைந்த ரசாயனப் பொருட்கள் என எண்ணக் கூடாது. ரசாயனம் எனில் கூட்டு அனூப வகை எனப் பொருளாகும். இதனால்தாம் உலகியல் பொருட்களில் உள்ள இறைத் தன்மைகளை உணரவே அனூபமஸ்தனீ என்ற பெயரில் அம்பிகையின் அவதாரமும் உண்டு.
உதாரணமாக, கொத்தவரங்காயில் பொன் சக்திகளும், நாவல் பழத்தில் இரும்பு சக்திகளும், தாம்பூலத்தில், மொச்சையில் வெள்ளி சக்திகளும் உண்டு. அகஸ்திய ரசாயனம் போன்ற மிகவும் சக்தி வாய்ந்த சித்த மருத்துவ, ஆயுர்வேத மருத்துவக் கலவைகளும் உண்டு.
நம் உடலிலும் பல உலோக சக்திகளையும் நன்கு நிரவிடவே, எந்த வளர்பிறை, தேய்பிறை நாளில் கொத்தவரங்காய், இரும்பு சக்திகள் நிறைந்த முருங்கைக் காய் மற்றும் கரும்பு போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும் என்பதான உணவுப் பட்டியல் முறைகளையும் நம் பெரியோர்கள் அளித்துள்ளனர். ஸ்ரீநிகமாந்த தேசிகர் இதைப் பற்றிய அற்புதமான விளக்கங்களை, அருமையான, அதியற்புதமான தமிழ்த் துதிகளில் அளித்துள்ளார். இதில் உள்ளவை கடைபிடிப்பதற்குக் கடினம் எனினும், உணவுப் பண்டங்களின் தெய்வீக ஆற்றலை நன்கு ஆத்ம விசாரம் செய்து, சிறிது, சிறிதாகக் கடைபிடித்து வர இத்துதிகள் நன்கு உதவும்.
தங்கம், வெள்ளிக் கவசமிட்ட ருத்ராட்சம், தங்க, வெள்ளி ஆபரணங்கள், மோதிரங்களை வருடக் கணக்காக அணிகையில், அவை உடலில் உராய்ந்து உராய்ந்து தோல், நாள நரம்புகள் மூலமாக உடல் நாளங்களை அடைந்து நல்ஆரோக்ய சக்திகளை அளிக்கின்றன.
நவகோள்களுக்கு உரித்தான உலோகங்கள் உண்டு என நாமறிவோம். வெள்ளிக் கிழமைகளில் வெள்ளி சக்திகள் நிறைந்த பொருட்கள், திரவியங்கள் அபிஷேக ஆராதனைகள் செய்வது மிகவும் விசேஷமானதாகும்.  
எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும் பலவிதமான மன பீதிகள், மரண பயம் போன்ற அச்சங்களோடு வாழ்வோர், தங்களுடைய தேவையற்ற மனபீதிகள் நிவர்த்தியாக, வெள்ளி தோறும் வெள்ளீஸ்வரரை வழிபட்டு, தொன்னையில் பாயச தானம் அளித்து வர வேண்டும்.
வசதியுள்ளோரும், ஏனையோர் சத்சங்கமாகப் பலருடன் சேர்ந்தும் ஆலயங்களில் தங்க ரத உற்சவத்திற்கு ஆவன செய்து, பாமரர்களும் ஏனையோரும் கண்டு களித்து வழிபடும் வண்ணம் தங்க ரதம் உள்ள ஆலயங்களில் தங்க ரத உற்சவத்திற்கு ஏற்பாடு செய்தல் அற்புதமான சமுதாய இறைப்பணி ஆகும். தன் பெண் பிள்ளையிடம் ஏற்படும் மனமாற்றங்களைக் கண்டு மனபீதியடையும் தாய்மார்களின் மனக்குறைகள் நீங்கிட, பால் பாயச தானத்துடன் கூடிய, தங்க ரத உற்சவத் திருப்பணி உதவும்.
வெள்ளி அன்று ரத வடிவில் உள்ள ஆலயத் தரிசனம் (சூரியனார் கோயில், கும்பகோணம் திருநாகேஸ்வரர் ஆலயம்), பூரி போன்ற ரத சக்தித் தலங்கள், வெள்ளியங்கிரி மலை தரிசனம், வெள்ளீஸ்வரர் தரிசனத்துடன் வெள்ளி மெட்டி, வெள்ளி மோதிரம், வெள்ளிச் சங்கு என அவரவர் வசதிக்குத் தகுந்தவாறு (முப்பது ரூபாய்க்கும் வெள்ளி மெட்டி கிடைக்கிறது) வெள்ளி வகைப் பொருட்களைத் தானமாக அளித்து வழிபடுதலால்,
குடும்பத்தில், உற்றம், சுற்றத்தில் திடீரென ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாதிக்கப்பட்டு மனம் வருந்துவோரின் மனத் தாங்கல்கள் தணிய உதவும்.

ஞாயிறில் சதுரம்

உண்மையில், சந்ததி தழைக்கவும், அறவழிச் செல்வமான சந்தானச் செல்வம் நிறைவு பெறவும், ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஓர் ஆண், ஒரு பெண் சந்ததி - இரண்டு வகையிலும் நிரவி இருத்தலே - ஆன்மீக ரீதியாகவும் உரைக்கப் பெற்றச் சிறப்புடையதாகும். இதில் முதற் குழந்தை, பெண்ணாய் அமைதல் உத்தமமானதாகும்.
ஒரு குடும்பத்தில் ஆண் அல்லது பெண் சந்ததி மட்டும் வந்தமைவதற்கும் நிறைய காரணங்கள் உண்டு. இவற்றை அறிந்து தக்க பூஜைகளை ஆற்றி வருதல் வேண்டும். ஆன்மீகத்தில் கருத்தடை, சிசுத் தடை, கருக் கலைப்பு போன்றவற்றை ஏற்பதில்லை. இதனால்தாம், உலகியல் மதங்கள் பலவும் கருத்தடை, சிசுத் தடை, கருக் கலைப்புகளை அதர்மமாகவும், பாவச் செயல்களாகவும் உரைக்கின்றன.
கணவன், மனைவி என்ற புனிதமான உறவு, பூர்வ ஜன்ம காரணங்களால் வந்தமைவதால், ஒரு தம்பதியர் பேணி வளர்க்க வேண்டிய குழந்தைகள் எத்தனை என்பதும் இதே வகையில் பூர்வ ஜன்ம ரீதியாகவே நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை மனதில் கொண்டால், நிறையக் குழந்தைகளை நம்மால் வைத்துக் காப்பாற்ற முடியாது, நிறைய குழந்தைகளைப் பெறுதல் சமுதாயத்தில் அவலமானது போன்ற மிகவும் தவறான எண்ணங்கள் ஒரு போதும் எவருக்கும் ஏற்படாது.
ஒரு தம்பதியர் பேணி வளர்க்க வேண்டிய சந்ததிகளைப் பெற்று அவர்களை ஆளாக்கும் நற்பணி நிறைவுறும் வரை, அவர்களே மீண்டும் மீண்டும் தம்பதியராகப் பூமியில் பிறந்தாக வேண்டும் என்பதும் பலரும் அறியாத வகையில் அமைந்துள்ளப் பிறவி நியதிகளேயாம்!

திருநாகேஸ்வரம்

ஞாயிறன்று ஆற்றும் பூஜைகள் பலவும் சந்ததி தழைக்க மிகவும் உதவுகின்றன. எனவே, சமயபுரம் மாரியம்மன், பன்னாரியம்மன் போன்ற அம்மன் வழிபாடுகள், ஞாயிற்றுக் கிழமைக்கு உரித்தானவை ஆகின்றன. இத்தகைய அம்மன் வழிபாடுகள் தாம், சந்ததிகளைக் காலம், காலமாகக் காப்பாற்றுகின்றன. எனவே, ஞாயிறு தோறும் அம்மன் ஆலயத்தில் நிறைய அடிப் பிரதட்சிணங்களை ஆற்றி வலம் வருதல் வேண்டும். பாதசக்திகள், அடிப்பாத ரேகைகள் வலுப் பெறுதலும், சந்ததி தழைக்க, ஆன்மீக ரீதியாகவும் மிகவும் உதவுவதாகும். இதனால்தான் பண்டையக் காலத்தில், பிரசவ நேரத்தில், தாயின் வலது கட்டைவிரல்களில் சீந்திலைக் கொடியைக் கட்டி வைக்கும் சித்த வைத்தியத் தற்காப்பு முறை நிலவியது.
ஒரு பெண்ணை வளர்த்து ஆளாக்கி, கன்னிகா தானம் என்பதாகத் திருமணம் செய்வித்தல் பல ஆண்டுகள் நிரவி விரியும் மகத்தான குடும்ப யாகம் ஆகும். இதில் தம்பதியர்க்கு, நிறைய ஆன்ம அனுபூதிகளும் கிட்டி, புனிதமான மனித சந்ததித் தழைப்பிற்கான அறப் பணியுமாக அமைவதோடு, வலுவான புண்ணிய சக்திகளும் நிறைந்து, பல வகையான கர்ம வினைக் கழிப்புகளும் தாமாகவே நிறைவடைந்து, குடும்பத்தையும் காத்து, சமுதாயத்தையும் தெய்வீக ரீதியாகவும் வளம் பெறச் செய்கின்றன.
சதுர்த்தி கூடும் ஞாயிறன்று, நான்கு சூரிய மூர்த்திகள் தரிசனம், சதுர்முக சண்டேஸ்வரர் தரிசனம் (சென்னை திருக்கச்சூர்), சதுர்முக முருகன் தரிசனம் (சின்னாளப்பட்டி), நான்கு நிலைகளில் கணபதி தரிசனம் (நின்ற, அமர்ந்த, நடன, சயனக் கோலங்கள்), நான்கு கோபுரங்கள் கூடிய ஆலயத் தரிசனம் மிகவும் சக்தி வாய்ந்த பலாபலன்களைத் தர வல்லவையாம்.

ஸ்ரீபரிதியப்பரை வழிபடும் சூரிய
பகவான் பரிதிநியமம்

மூலத் தானத்தில் பெருமாளை வழிபடும் நிலையில் உள்ள சூரிய மூர்த்தி, நவகிரக சூரிய மூர்த்தி, சுவாமிக்கு முன் மண்டபத்தில் இரு புறமும் அருளும் சூரிய, சந்திர மூர்த்தி, தனித்துச் சன்னதி கொண்டருளும் சூரிய மூர்த்தி ஆகிய நான்கு வகை நிலைகளில் அருளும் சூரிய மூர்த்திகளையும் இந்நாளில் வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். பல வருடங்களாக மனதை அரித்துக் கொண்டிருக்கும், மன வடுவை ஏற்படுத்திய நிகழ்வின் விளைவுகளில் இருந்து மீள சங்கல்ப நிவர்த்திச் சதுர்த்தி திருநாளில் வழிபட வேண்டிய தலமொன்று உண்டு.
பதவி பலம், அதிகாரம், ஆணவம், ஆள் பலம், பண பலம், இளமைத் துடிப்பு, காமாந்தக எண்ணங்கள் காரணமாகப் பிறருக்குச் செய்த பெரும் தீமை, வல்வினை, பெரும் பாவச் செயலின் வலுத்த கர்ம வினைவுகள் ஓரளவேனும் நீங்கிட முதலில் பாதிக்கப்பட்டோருக்குத் தக்க நிவாரணமளித்தல், நன்கு மனந் திருந்தி வாழச் சங்கல்பித்துத் திருந்தி வாழ்தல் இவை இரண்டும் வந்து சேர்ந்தால்தான் பரிகார வழிகளே கிடைக்கும்.
இத்தகையப் பரிகாரங்களை முறையாக ஆற்றி வந்தால்தான் மன வடுக்கள், மேற்கண்ட பழிபாவச் செயலில் இருந்து ஓரளவேனும் மீள முடியும். இதற்கான தக்கப் பரிகார வழிகளை, நிவாரணங்களை அளிக்க வல்லதே பட்டுக் கோட்டை - மதுக்கூர் அருகில் உள்ள அண்டமி கிராமத்தில் உள்ள சதுர வடிவ ஸ்ரீஅருணாசலேஸ்வரர் சிவாலய வழிபாடு ஆகும்.

ஸ்ரீவிநாயகர் அண்டமி

இங்கு, வட்டம் மற்றும் சதுர வடிவிலான உணவுப் பண்டங்கள், இனிப்பு வகைகள், திண்டு தோசை படையல் / தானத்துடன் ஆற்றும் வழிபாடு மிகவும் உதவும். மிகவும் சக்தி வாய்ந்த சதுர்த்தி திதி வழிபாட்டுத் தலம். பல அரிய கோள்கள், நட்சத்திரத் தரிசனங்களைப் பண்டைய காலத்தில் மாமுனிகள் இத்தலத்தில் இருந்து பெற்றனர்.
வட்டத்துக்குள் சதுரம் என்பது பன்னெடுங்காலக் கணிதப் புதிர். பாணினி, வராகமிஹிரர் போன்ற ஞானமுதிர்வு கொண்ட விண்ணியற் பேரறிஞர்கள் அண்டமி சிவத்தலத்திற்குச் சூக்குமமாக வந்து அரிய பல விண்ணியல் தரிசனங்களைப் பெற்ற சிவத் தலம். திருப்பணிகளை நாடி இருக்கும் சதுர்த்தித் திதித் தலம்.
சதுரம் என்பது அனைத்திலும் பூரணமுடையது. எனவே காரிய சித்திக்கு இங்கு சதுர்த்தித் திதி தோறும் முறையான பூஜைகள் ஆற்றப் பட வேண்டிய அற்புதத் தலம்.அனைத்தும் இங்கு ஒரு யுகத்தில் சதுரமயமாகவே காட்சி அளித்தன.

பசித்துப் புசித்தால் என்ன பயன் ?

சில குடும்பங்களில் எப்போதும் உறவு, சுற்றம் பற்றிய பிரச்னைகள் எழுந்து கொண்டே இருக்கும். பூர்வீகச் சொத்துக்கள், சொத்துப் பராமரிப்பு, தலைமுறை வழிவகை, நிலபுலன்கள் மற்றும் தலைமுறை தலைமுறையாக வரும் ஆஸ்திகள் - போன்ற பற்பல பற்றியும், கடன் வாங்கிக் கட்டிய வீடு பற்றியும் அவ்வப்போது ஏதேனும் பிரச்னைகள் வெடித்துக் கொண்டும், கிளைத்துக் கொண்டும் இருக்கும். இதனால் வளரும் இளம் சந்ததிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுக்கெல்லாம் மூலமுதற் காரணம், முறையாகப் பித்ரு வழிபாடுகளை ஆற்றாமையேயாகும். இவற்றுக்குப் பரிகாரம் அருள வல்ல சக்தி வாய்ந்த படையல் தினங்களுள் ஒன்றே பூரத்துடன் கூடி வரும் வ்யதீபாதத் தர்ப்பண நாளாகும்.
ஒரு நாளின் 60 நாழிகையும் பூரிக்கும் பூர நட்சத்திரத்தில் வாரண அம்பாதீ எனும் விசேஷமான அக்னி சக்திகள் பூரிக்கின்றன. இவை பகைமை, தோஷக் கதிர்களைக் களைய வல்லவை! மேற்கண்ட வகையில் குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் கூட்டுக் குடும்பத் தகராறுகள், பகைமைப் பிரச்னைகள், வாக்கு வாதங்கள், வாய்ச் சண்டைகள் தணியவும் அகலவும் இந்நாளின் பூஜா பலன்கள் உதவும்.
இவ்வாறு 60 நாழிகைப் பூரமும், வ்யதீபாதத் தர்ப்பண, படையல் நாளும் சேர்ந்து வரும் நாளில் பகல் 12 மணிக்குள் 6 அகல் தீபங்கள் சாட்சியாக, தாய், தந்தை வழி ஒவ்வொன்றிலும் 36 தலைமுறைகளுக்கும் தர்ப்பணம் அளித்து பூர சக்திகள் நிறைந்த பட்டை வகைக் காய்கறிகள் கலந்த உணவு வகைளை நான்கு பெரிய வாழை இலைகளில் வைத்துப் பித்ருக்களுக்குப் படைத்துப் பிறகு,
முதல் வாழை இலை உணவைக் கன்றுடன் கூடி பசுவிற்கு அளித்திடுக! பசு உண்ணும் வரை அருகிருந்து, பித்ரு சூக்தம், ஆயுஷ்ய சூக்தம் போன்ற பித்ரு சக்தி மந்திரங்களை (அல்லது காரைக்கால் அம்மையாரின் மூத்தத் திருப்பதிகப் பாக்கள், மாணிக்கவாசகரின் மூத்தத் திருப்பதிகப் பாக்களை) ஓதிப் பிறகு,
மூன்று பெரிய வாழை இலைகளிலும் முழுமையாக உள்ள உணவினை, ஏழைகளுக்கு அளித்த பின்னரே, சற்றுப் பசி உணர்வு பொங்கும் நிலையில்தான் குடும்பத்தார் உணவேற்றல் வேண்டும்.
இதுவே பசித்த பசிப்பிணி தணித்த பசுபதி பித்ரு வழிபாடு.
கலியுகத்தில் பலருக்கும் ஏற்பட்டுள்ள, எதையேனும் தின்று கொண்டே இருக்கும் பழக்கத்தால் ருசிக்கு, நொறுக்குத் தீனிக்கு மனிதன் அடிமையாகி வருவதால், பசியில் கிளைக்கும் நல்வகைப் பசும்பாத நாள நீரோட்டங்கள் எழாமல் அழுந்தி விடுகின்றன. பசியில் கிளைக்கும் ஆத்ம விசார அனுபூதிகளும் நிறைய உண்டு.
பசி என்றால் என்ன என உணர்ந்தால்தான், ஏழைகளின் பசிக் கொடுமைத் துன்பங்கள் பற்றிய உணர்வு வந்து அன்னதானத்தின் தெய்வீக சக்திகள் புலனாகும். அப்போதுதான் தனக்கு எவ்வித பக்தி அம்சமும் இல்லாவிடினும் மூன்று வேளையும் இறைவன் படியளக்கும் காருண்யத்தை உணர முடியும்.
பூரம் என்பது பசியாக்னியில் பரிமள வர நல்சக்திகளை அருள்வதாகும். இதனால்தான் பெரிய வாழை இலை நிறைய உணவளிக்கும் பரந்த மனப்பான்மையைப் பூர நட்சத்திர நாளிலாவது பெற வேண்டியே இவ்வகையில் மிகவும் அபூர்வமான பித்ரு சக்தி நாட்கள் வந்தமைகின்றன.

ஓங்கார மங்களம்

மிகவும் அபூர்வமாக முருகனுக்குரிய செவ்வாயும், சஷ்டியும், உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வருவது உண்டு.
இத்தகைய கால அம்சங்கள் நிறைந்த நாளில்தாம் முருகனுக்கு ஓங்கார உபதேசப் பொருள் தானாகக் கிட்டியது. எனவே, இந்நாளில் நாள் முழுதும் ஓங்கார மங்கள நமஹ என ஓங்காரத்தையே மங்கள சக்தியாகப் போற்றி ஜபித்தல் நல்ல மனஅமைதியைத் தரும்.
மேலும் ஓங்காரமே கலியுகத்தில் கொன்றை மர வடிவில் தோன்றுவதால், இந்நாளில் கொன்றை விருட்ச தரிசனமும் நல்ல தியான சக்திகளை மேம்படுத்தும். இயன்றால் கொன்றையடியில் முருகனை ஓங்காரநாதனாக பாவித்துத் தியானம் ஆற்றுங்கள்!
செவ்வாய்க் கிழமையைப் பொதுவாக சுபமுகூர்த்த நாளாக வைப்பதில்லை, ஆனால் இதற்கு மங்கள வாரம் எனப் பெயர் வரக் காரணமென்ன?
* எத்தகையத் திருமணத் தடங்கல்களையும் போக்க வல்ல ராகு கால ஸ்ரீதுர்க்கை பூஜை,
* எத்தகைய நோய்ப் பிணிகளையும் நீக்க வல்ல ஸ்ரீவைத்யநாத சுவாமிக்கான விரத பூஜை நாள்,
* நிலபுல சக்திகளை அளிக்க வல்ல செவ்வாய் மூர்த்திக்கான நல்வழிபாட்டு நாள்,
* நல்ல வீடு அமைவதற்காக, தாமே கொடுத்த அரளி மாலைகளை ஆறுமுகனுக்கு அணிவித்து வழிபட வேண்டிய நாள் -
என்றவாறாக, பெறுதற்கரிய மங்கள சக்திகளைத் தோற்றுவிக்க வல்ல பூஜைகளை ஆற்றக் கூடிய நாளாக செவ்வாய்க் கிழமை விளங்குவதோடு, செவ்வாய் கிரகத்திற்கு உரிய அதிதேவதா, பிரத்யதி தேவதா மூர்த்திகளாக ஸ்ரீதுர்க்கை தேவியும், ஸ்ரீசுப்ரமண்ய சுவாமியும் விளங்குவதுமாகும்.

இடையாற்றுமங்கலம் லால்குடி அருகே

மங்களேஸ்வரர், மங்கள நாயகி போன்று மங்கள நாமம் பூண்டு இறைவன் அருளும் ஆலயம் (மூர்த்தி)
மங்கள சக்தித் தீர்த்தம் என்பதாக மங்கள சக்திகளைப் பொழியும் தன்மை (தீர்த்தம்)
மங்கள சக்திகள் பூரிக்கும் வகையில் புராண அனுபூதிகள் நிறைந்த பூமி (தலம்) - என்ற வகையில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் மங்கள அம்சங்கள் பொலியும் தலங்களில், செவ்வாய்க் கிழமை அன்று விரதம் பூண்டு வழிபட்டு வருவதுடன்,

ஸ்ரீமுருகப் பெருமான்
திண்ணியம்

கொடிமரம் என்பது மங்கள ஸ்தூபியாக அனைத்து ஜீவன்களுக்கும் மங்களக் கிரணங்களைப் பொழிவிக்கும் மங்களக் கம்பம் ஆதலால், கொடி மரம் இல்லாத தொன்மையான சிவாலயத்தில், பெருமாள் ஆலயத்தில் கொடிக் கம்பம் ஸ்தாபிக்க ஆவன செய்ய சங்கல்பம் பூண்டு செயலாற்றுவதால்,
குடும்பத்தைப் பன்னெடுங் காலமாக, பரம்பரை, பரம்பரையாக வாட்டும் நோய்கள், சந்ததிக் குற்றங்கள் தீராப் பழிகள் தீர நல்வழி பிறக்கும்.
ஸ்ரீகும்பேஸ்வரர் ஆலயம், கும்பகோணம் - சூரியனார் கோயில் அருகில் உள்ள சிவாலயம், தேனி மலை, திருச்சி- லால்குடி அருகே இடையாற்று மங்கலம் போன்றவை மூர்த்தி, தீர்த்தம், தலச் சிறப்புகளைக் கொண்ட மங்கள சக்தித் தலங்களாகும்.
பிள்ளைப் பேறு வேண்டுவோர்தாம் சஷ்டி விரதம் இருக்க வேண்டும் என்பதில்லை! சந்ததிகள் நன்கு தழைக்கவும், பெற்ற பிள்ளைகள் நன்கு மங்களகரமாக வாழவும், வீடு சம்பந்தமான பிரச்னைகள் தீரவும், செவ்வாயும், சஷ்டியும் பிணையும் நன்னாளில் மகத்தான மங்கள சக்திகளை நல்க வல்லதாம்.
நல்ல வீடு அமைய வேண்டுவோர் இந்நாளில் விரதமிருந்து தாமே தொடுத்த அரளிப் பூக்களை ஆறுமுகப் பெருமானுக்குச் சார்த்தி வழிபட வேண்டும். இதனைச் செவ்வாய் தோறும் ஆற்றுதல் நற்பலன்களைத் தரும்.
ராகு கால நேரத்தில் ஆறு வகைத் தைலங்களால் தீபம் ஏற்றி, அமர்ந்த கோல முருகன், அமர்ந்த கோல துர்க்கை, குமரன் எனப் பெயர் தாங்கி அருளும் முருகன் வழிபாடு சிறப்புடையதாகும்.
முருகனுக்குரிய செவ்வாய், சஷ்டி, உத்திர நட்சத்திரம் மூன்றும் இணைந்து வருவதால்
* குடும்பத்தோடு நாள் முழுதும் நல்விரதம் பூணுவதும்,
* விரதம் பூண இயலாதோர், முருகனின் மலைத் தலத்தை வலம் வருதல், (இயன்றால்) மூன்று முறை கிரிவலம் வருவதும், 12 வயதுக்கு உட்பட்ட ஏழைப் பிள்ளைகளுக்குத் தேவையான உதவிகளை ஆற்றுவதும் நன்று.
இந்நாளில் மங்கள துர்க்கை, மங்களேஸ்வரர், மங்களாம்பிகை என மங்கள நாமம் தரித்து அருளும் இறைமூர்த்திகளை வழிபடுதல் ஸ்கந்த பூரண சக்திகளை நிறைவாக்கித் தரும்.

குடும்பத்தில் சாந்தம் நிலவ ...

14 மனுக்கள் அதிஅற்புதமாக மகத்தான தர்ம நெறிகளுடன் பூவுலகை ஆண்டார்கள். பூலோக மக்கள் யாவரும் இந்த 14 மனுக்களின் வழி வந்தவர்களே ஆவர். இதனால் தாம் 96 வகைத் தர்ப்பண நாட்களில், 14 மனுக்களுக்கு உரியத் தர்ப்பண அர்க்யமும் அமைகிறது. உலக மக்கள் அனைவருடைய தலைப் பீட மூல முதல் (வம்சா)வளி வகையினர் ஆவதால், 14 மனுக்களின் பெயரையாவது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். எவரெவர் எந்த மனு வழி வந்தார்கள் என்பது அவரவருக்கு உத்தமர்கள் மூலம் புலப்படுத்தப் பெறும். எனவே, உலக மக்கள் யாவரும் - ஜாதி, மத பேதமின்றி - சகோதரத்துவ அன்புடன் பகை உணர்வின்றி வாழ்தல் வேண்டும்.
தற்போது உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளிலும், கிருதயுகம் போலான தர்ம நெறிகள் நிறைந்த ஆட்சி நடைபெறவில்லை என்பது நாமறிந்ததே. எங்கும் வன்முறையும், தீய நெறிகளும் பரவி, லஞ்சம் நிரவி, உழைக்காது சம்பாதித்தல், மக்களிடையே ஒற்றுமையின்மை, ஜாதி, சமய, மதப் பிரிவுப் பிரச்னைகள், நாடுகளிடையே போர், இனக் கலவரங்கள் பெருகி வருவதும் அதர்மத் தீய சக்திகளின் ஆக்ரமிப்பையே குறிக்கின்றன. அதாவது, கிருத யுகத்தில் இருந்த தர்ம நிலை மங்கி, தற்போது அதர்மம் பூதாகாரமாகப் பெருகி வருகிறது.

சிவபுரம் கும்பகோணம்

இவற்றிலிருந்து தம்மையும், குடும்பத்தையும், சமுதாயத்தையும், நாட்டையும் காத்துக் கொள்ளும் வகையில் பாமரர்களும் கடைபிடிக்க வல்ல எளிமையான வழிபாடு என்ன?
அனைவரும் ஸ்ரீகாலபைரவ மந்திரம், ஸ்ரீசுதர்சன மந்திரங்களைத் தினமும் காலை, பகல், மாலையிலும் 1008 முறை ஓதி வர வேண்டும். தினமும் ஸ்ரீகாலபைரவரையும், சக்கரத்தாழ்வாராகிய ஸ்ரீசுதர்சனரையும் 36 முறை வலம் வந்து வணங்கிட வேண்டும்
மீண்டும் கிருத யுகம் போல தர்மத்தை நிலை நிறுத்துவது தனிப்பட்டவர்களால் இயலாது. பெருகி வரும் அதர்மத் தீவினை சக்திகளை சத்சங்கப் பூஜைகள், நற்காரிய இறைப் பணிகள் தான, தர்மங்கள் மூலம் இதிலும் ஓரளவே தணித்திடலாம்.
தினமும் நம் தலைமை மூதாதையர்கள், பதினான்கு மனுக்களுக்கும் தர்ப்பண அர்க்யம் அளிப்பதால் குடும்பத்திலும், உற்றம், சுற்றத்திலும், சமுதாயத்திலும் மன வேறுபாடுகள் குறைந்து, பகைமை தணிந்து நல்ல ஒற்றுமை பெருக உதவுவதாகும்.
ரெளச்ய மனு, பெளச்ய மனு, சாட்சுச மனு, அக்னி சாவர்ணி மனு, சூர்ய சாவர்ணி மனு, தாமச மனு, சுவாயம்புவ மனு, சுவாரோட்சிஷ மனு, இந்திர சாவர்ணி மனு, ரைவத மனு, வைவஸ்வத மனு, பிரம்ம சாவர்ணி மனு, ருத்ர சாவர்ணி மனு, உத்தம சாவர்ணி மனு - என்ற 14 வகையான மனுக்களே, உலக மக்கள் அனைவருக்குமான மனுராஜ மூர்த்திகள் ஆவர்.
அமாவாசையில் மட்டுமே தர்ப்பணம் என்றில்லாது, ஓர் ஆண்டில் வரும் மாதப் பிறப்பு நாட்கள், அமாவாசைகள், வைதிருதி மற்றும் வ்யதீபாத யோகநாட்கள், யுகாதி நான்கு தினங்கள், மாளய பட்ச நாட்கள், அஷ்டகத் திவசப் படையல் நாட்கள், போன்றவை கூடிய 96 வகை தர்ப்பண நாட்களைப் (ஷண்ணாவதி) பஞ்சாங்கம் மூலம் நன்கு அறிந்து கொண்டு இந்நாட்களிலும் 36 தலைமுறைகளுக்கும் தர்ப்பணம் அளித்து வாருங்கள்.
வைவஸ்வத சப்தமி என்பது, விண்ணில் சூரிய ஒளியில் இருந்து எழும் ஏழு ஒளிக் கிரணங்களில் தோன்றும் ஏழு விதமான சப்தங்கள் ஆகும். ஆம், ஒளியில் இருந்தே ஒலி பிறந்தது. இவை ஒளி, ஓலி இழைகளாக மனித உடலில் சூரியக் கோள சக்திகள் உள்ள இடங்களில் நன்கு பரிணமிக்கின்ற ஒன்பது இடங்களை அடைகின்றன.

இதனைத்தான் மருத்துவ ரீதியாக,
* மணிக்கட்டு நாடிகளைப் பார்த்துக் கேட்டல்,
* ஸ்டெதாஸ் கோப்பினை மார்பு, முதுகு, முதுகின் கீழ்ப் பகுதியில் வைத்துப் பார்த்துக் கேட்டல்
* கண்களுக்குள் கீழே பிதுக்கிப் பார்த்தல்
* உள்நாக்கைப் பார்த்தல்
* நகங்களைப் பார்த்தல்
- என்பதாக ஏழு வகை ஆரம்ப மருத்துவ சோதனைகளாக அமைகின்றன. காரணம், இவை சூரிய சக்திகள் மிகுந்த இடங்களாகும்.
வைஸ்வத மனு, சூரியனின் பிள்ளைதாமே! எனவே வைவஸ்வத சப்தமித் திதி அன்று மட்டுமல்லாது, சப்தமித் திதி தோறும் -
ஏழு விதமான பீஜாட்சர சக்திகள் ஒலிக்கும் மந்திரங்களை ஓதி, சூரிய பகவானைத் துதிக்க வேண்டும். சப்த மாதர்கள், சப்த கன்னியர்களைச் சப்தமித் திதி தோறும் வஸ்திரம் சார்த்தி வழிபடுதல் விசேஷமானது.
விபீஷணர் சப்திமித் திதி விரத பூஜையில் வல்லவர். எனவே சப்தமி அன்று விபீஷணருக்கும் தர்ப்பண அர்க்யம் அளித்திடுக!
அவரவர், தினமும் தங்கள் உள்ளங்கைகளைத் தரிசித்தே, காலையில் எழுதல் வேண்டும் என்பது நாமறிந்ததே. மேலும் ஒவ்வொருவரும் நாள் முழுதும், உள்ளங்கை ரேகைகளை அடிக்கடி தரிசித்தல் வேண்டும் என உரைக்கக் காரணம், உள்ளங் கைகளைப் பார்த்தாலே நவகிரக தரிசனமும் ஆகிறது என்பதுமாம்.

சப்த லிங்கங்கள் திருகோகர்ணம்

உடலில் பல இடங்களிலும் நவகிரக அம்சங்கள் நிறைந்துள்ளன அல்லவா! எனவே, இவ்வகையிலும் அடிக்கடி உள்ளங்கைத் தரிசித்தலும் உன்னதமான, எளிமையான நவகிரக வழிபாடும் ஆகின்றது. முதலில் அவரவர் தம்முடைய உள்ளங்கை உள்ரேகை அமைப்புகளையும், உடலில் நவகிரகங்கள் அம்சங்கள் உள்ள இடங்களையும், ஜாதகத்தில் ராசிமானமாகவும், நவாம்ச ரீதியாகவும் கிரக சஞ்சாரங்களையும், கோசார ரீதியாக அதாவது தினமும் வானில் கிரக நிலைகளையும் பஞ்சாங்கம் மூலமாகவும் தெரிந்து கொள்ளுங்கள்.
தினமும் அவரவர் தம் கைரேகைகளைப் பார்த்துப் பார்த்து, நாளடைவில் உள்ளங்கையைப் பார்க்காமலேயே தங்கள் கைரேகைகளை வரைந்து பார்க்கும் திறனைப் பெறுதல் வேண்டும். அவரவர் ஜாதகத்தை தினமும் கட்டம் போட்டு எழுதிப் பார்த்தும், உள்ளங்கை ரேகைகளை வரைந்து பார்ப்பதும் நவகிரக வழிபாடுகளே. இதில் சிறிது சிறிதாகப் பழகிக் கொண்டு வந்தால், தினமும் வானில் கிரகங்களின் சஞ்சார நிலையும் வரைந்து பார்த்து வந்தால், அவரவர் ஜாதகத்திலும், வானிலும் எந்த கிரகங்கள் எங்கு இருக்கிறது, இவற்றோடு எப்படி இயைந்து பூஜைகளை ஆற்றுவது என்ற கிரக உணர்வுகள், ஹோரை வழிபாடுகளுடன் உடலில், மனதில் நன்கு பூரித்து,
வாழ்க்கை நிகழ்ச்சிகளை ஒட்டியவாறு, எப்போதும் எந்நேரமும் நவகிரக வழிபாட்டு உணர்வில் உடலும், மனமும் ஒன்றும். இதனால், கர்ம வினைகளின் பளு நாளடைவில் தணிந்து, பரிபூரண இறைச் சிந்தனையாக மலரும்.
இதற்காக சப்தமித் திதி வழிபாடும், குறிப்பாக வைவஸ்வத சப்தமித் திதி நாளில் வைவஸ்வத மனுவிற்கு ஏழு முறைத் தர்ப்பண அர்க்யம் அளிப்பதும்,
* ஏழு விதமான சப்த ஸ்வர சப்தங்கள் ஏற்படும் ஏழு தூண்கள் உள்ள ஆலயங்களில் வழிபடுவதும் (மதுரை, பெரம்பலூர் அருகே செட்டிகுளம்)
* புதுக்கோட்டை - திருக்கோகர்ணம் ஸ்ரீபிரஹதாம்பாள் ஆலயத்தில் உள்ள சப்த (ஸ்வர) லிங்கங்களுக்கு ஏழு விதமான அபிஷேக ஆராதனைகளை ஆற்றுவதும், குடும்பத்தில், கூட்டுத் தொழிலில் சாந்தம் நிலவிட உதவும்.
* இசைத் துறையில் உள்ளோர்க்கு, விரதத்துடன் கூடிய, மேற்கண்ட வகையிலான சப்தமித் திதி விரதப் பூஜைகள் மேன்மை அளிக்கும்.
* வாய் தவறிப் பேசி வாக்குக் குற்றங்களால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள், மன வேற்றுமைகள், உறவு முறிவு, பகைமை தீர்ந்திடவும் சப்தமி விரத பூஜைகள் உதவும்.

புத்தியும் சுத்தமாக வேண்டும்

சந்திர மூர்த்தியும், ஞான சக்திகளைப் பேணித் தரும் கேது மூர்த்தியும், குருவருளைத் தரும் வியாழ மூர்த்தியும் மிகவும் அரிதாக ஞான சக்திகளை அபரிமிதமாக அளிப்பதுண்டு.
உதாரணமாக, குரு கிரகம், ஹஸ்த நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சஞ்சரிக்கும்போது, சந்திர மூர்த்தியும் ஹஸ்த மண்டலத்தில் உறைந்திட, கேது மூர்த்தியும் ஹஸ்த நட்சத்திரத்திற்கான கன்னி ராசியில் அமர்வதுண்டு.
மனமே நீள் வானம் என உள்மனதை வானத்துக்கு ஈடாக வைப்பதாலும், வானத்தில் ஏற்படும் கிரக, நட்சத்திரச் சலனங்கள் அனைத்தும் மனித உடலிலும் ஏற்படும். அப்படியானால், அனைவருக்கும் உடலில் ஒரே மாதிரியான கிரக சலனங்கள் அல்லவா ஏற்பட வேண்டும்!
எவ்வாறு அவரவருடைய ஜாதகச் சக்கரத்தில் கிரகங்கள் அமையும் 12 ராசி ஸ்தானங்கள் பிறந்த நேரத்தைப் பொறுத்து, ஒவ்வொருவருக்குமாக மாறுகின்றனவோ, இதே போல அவரவருடைய உடலிலும் மாறுபாடடைகின்ற கிரக ஸ்தானங்களும் உண்டு. இவைதாம் உலக மக்களிடையே மாறுபடும் கை ரேகைகளாகவும் புலப்படுத்தப்படுகின்றன. உள்ளங்கை ரேகைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக அமைவதில்லை அல்லவா! காரணம், அவரவருடைய பூர்வ ஜன்ம வினைகளுக்கும் கை ரேகைகளுக்கும் பிணைப்புகள் உண்டு.

திருநல்லூர்

இத்தகைய ஞான சக்தி நாட்களில் மூன்று விதமான கிரகச் சக்கரங்களை வைத்து வழிபட வேண்டும்.
* முதலாவது உங்களுடைய பிறந்த நேரத்தை வைத்துக் கணிக்கப்படும் ஜாதக (ராசிக்) கட்டம்
* இரண்டாவதாக, இன்றைய நாளில் வானில் கிரகங்கள் உள்ள இடங்கள் உள்ள நித்திய கிரக ராசி சஞ்சாரக் கட்டம் (பஞ்சாங்கத்தில் அந்தந்த மாதப் பக்கத்தில் காணப்படுவது)
* மூன்றாவதாக, பிறந்த நாள் ஜாதகத்திற்கு ஏற்ப அமையும் அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ற நவாம்ச ஜாதகக் கட்டச் சக்கரம்
-ஆகிய மூன்று கிரகச் சக்கரங்களையும் வைத்துக் கை கூப்பி கிரக அமைப்புகளை வணங்கி, ஆத்ம விசாரம் செய்திடுக! நம் ஜாதகத்தை நாமே வழிபடலாமா என்று எண்ணாமல், மற்றொரு வகையான நவகிரக வழிபாடாக இது ஆகின்றது என உணர்க!
உதாரணமாக, குரு கிரகம் இம்மூன்று கிரகச் சக்கரங்களிலும் அமைந்திருக்கும் இடத்தைக் கண்டு,
ஜாதக ராசிச் சக்கரத்தில் துலாவில் வீற்றிருக்கும் குரு மூர்த்தியே போற்றி!
ஜாதக நவாம்சச் சக்கரத்தில் மிதுனத்தில் உறைந்திருக்கும் குரு பகவானே போற்றி
இன்றைய தினத்துக்கான கோசார கிரகச் சக்கரத்தில் கன்னி ராசியில் அமர்ந்து அருளும் குரு மூர்த்தியே போற்றி

என்ற வகையில் ஒன்பது ராசிகளின் ராசிமான உறைவிடங்களை வைத்து அனைத்து கிரகங்களையும் குரு ஹோரை நேரத்தில் வழிபடுதல் விசேஷமானது. இதனால் அவரவர் உடலில் பல இடங்களிலும் உள்ள கிரக ஸ்தானங்கள் நன்கு ஆக்கம் பெறும். இதன் மூலம் ஆறாம் நிலைப் பகுத்தறிவு நன்கு ஆக்கம் பெறலாகிறது.
இவ்வாறான மூன்று ராசிக் கட்டங்களை வைத்துத்தான் ஜாதகப் பலன்களைக் கணித்தல் வேண்டும். திருமணத்திலும் வெறுமனே பத்துப் பொருத்தங்கள் மட்டுமல்லாது, ஜாதக ரீதியாகவும் வரன்களின் திருமணப் பொருத்தங்களைப் பார்த்தல் வேண்டும். இத்தகைய நாளில் வான் மண்டலத்தில் கன்னி ராசியில் குரு, கேது, சந்திர மூர்த்திகள் நட்பு இடங்களில் அமைந்திருந்தாலும் பல்வேறு கிரகப் பார்வைகளும் இவற்றின் மீது படியும் அல்லவா!
தீய பழக்கங்களில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள்,
* வாழ்க்கையின் ஒரு கட்டக் காலத்தில் வெளியில் சொல்ல முடியாதபடி பல தவறுகளைச் செய்தோர்
* தாம் செய்த பெருந்த தவறுகளை எண்ணி வருந்தி நன்கு மனம் திருந்தி வாழ விழைவோர்
இத்தகைய நாட்களில் தன் தாய், தாய் வழிப்பாட்டியை அழைத்துக் கொண்டு ஆலயத்திற்குச் சென்று, ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் பட்டு வஸ்திரத்தில் கிரீடம் சார்த்திப் பாதங்களுக்கு நறுமலர்களாலான பாத ரட்சைகளை ஆக்கி வைத்து,
அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் சென்னி தீட்சை, அதாவது ஆதிசிவனே தம் திருவடிகளைத் திருநாவுக்கரசரின் சிரசில் வைத்து, ஆசியளித்த காட்சியை மனதினுள் ஆத்ம விசாரம் செய்து தட்சிணா மூர்த்தியை வழிபடுக!
குரு பகவானுக்கு உரிய வண்ணமான மஞ்சள் நிறத்தில் அமையும் எலுமிச்சை அன்னத்தில், கொத்துக் கடலைச் சுண்டலைக் கலந்து முதலில் பசு, காக்கைகளுக்கு அளித்துப் பிறகு அன்னதானமாக அளித்திடுக!
கன்னி ராசியில் சந்திர கிரகம் உறையும்போது மாதாகாரக சக்திகள் மேன்மை பெறுதலால் தாய், பாட்டி என மாதாவர்கத்தினருடன் சேர்ந்து குரு மூர்த்தியை வழிபடுதலும் ஒருவகை அற்புதத் தியான நிலையே ஆகும். இதனால் மாதாவர்க மூதாதையர்கள் ப்ரீதி அடைகின்றனர்.  
நாள் முழுதும், குறிப்பாக, குரு ஹோரை நேரம் முழுதும் தட்சிணா மூர்த்திக்கான இறைத் துதிகளை ஓதுதல், பூத்தொடுத்தல், ஆழ்வார்கள், நாயன்மார்கள், மஹாபக்த விஜயர்களின் சரிதங்களைப் படித்தல் என்று நல்ல விதமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  

சக பணியாளர்கள் தொல்லை நீங்க

ஒவ்வொரு திதி சங்கமத்திற்கும் மகத்தான சக்திகள் உண்டு. அஷ்டமியும், நவமியும் இணையும் நாளில் புனிதமான திதி சங்கம நேரத்தில் நவாஷ்டக சக்திகள் பரிமளித்துத் துலங்குகின்றன. நவாகம் என்ற வகையில் அக்காலத்தில் புராணக் கதைகளை ஒன்பது நாட்களுக்கு ஓதுவர், அதாவது ஒன்பது நாட்களும் தொடர்ந்து புராண விரிவுரை, பூஜைகள் நவராத்திரி போன்று நடைபெறும். பத்தாம் நாள் நிறை பூஜை நடைபெறும்.  
அஷ்டமி நவமி கூடும் நாட்களில் ஒரு சேரத் தோன்றி அருளும் ஸ்ரீதுர்க்கா, ஸ்ரீலக்ஷ்மி,ஸ்ரீசரஸ்வதி மூர்த்திகளுக்கு மலர் கிரீடங்கள் சார்த்தித் தரிசித்தலும் மூன்று வகை ருசிப் பணடங்களைத் தானமாக அளிப்பதாலும் (இனிப்பு, காரம், உப்பு), தறுதலையாக கூடவே இருந்து கொண்டு துன்பங்களைத் தரும் சக பணியாளர்களின் தொல்லைகளில் இருந்து நிவாரணம் பெற நல்மார்கம் கிட்டும்.
நவமி திதி தோறும் வித்யா விருத்தி தைலத்தால் ஒன்பதின் மடங்காக அகல் விளக்குகளை ஏற்றுதல் மிகவும் விசேஷமானதாகும். ஸ்ரீதுர்க்கா, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீசரஸ்வதிக்கு மூன்று விதமான நறுமலர்களினால் ஆன கிரீடங்களை வைத்து அலங்கரித்து, குறைந்தது, முப்பது முழப் பூக்களையாவது சார்த்தி இதனைப் பிரசாதமாக ஏழைப் பெண்களுக்குத் தானமாக அளித்தலால், பெற்ற தாய்க்கு, தந்தைக்கு ஆற்றாமல் விட்ட கடமைகள் நினைவுக்கு வந்து அவற்றை நிறைவேற்றிடத் தக்க உத்தமர்கள் மூலம் தீர்வுகள் கிட்டும்.
இந்த லோகத்திலோ, ஏனைய லோகத்திலோ, பெற்றோர்கள் மனங் குளிர்ந்தால்தான் குடும்பம் அபிவிருத்தி அடையும். இதற்கான அபிவிருத்தி சக்திகளைப் பெற நவமித் திதி நாளில் ஆற்றும் மூன்று தேவிகளுக்கான ஒருங்கிணைந்த பூஜைகள் உதவும்.

அமோகமான ஆண் சந்ததிகள்

சூரிய மூர்த்தி கடக ராசியில் பிரவேசிக்கும்போது தட்சிணாயனப் புண்ய காலம் தொடங்குகிறது. மாதப் பிறப்பிற்கு முன்னிரவே அகோராத்ரத் தீர்த்தத் தலம் எனப்படும் தலங்களில் தீர்த்தவர வாரிப் பித்ருக்கள் வந்து சேர்கின்றனர்.
தட்சிணாயனப் புண்ய காலத்தை எதிர் கொள்ளும் வண்ணம், பல்வகைப் பித்ரு மூர்த்திகள் பூமிக்கு வந்து, இத்தகைய அகோராத்ரத் தீர்த்தத் தலங்களில் நீராடி வழிபட்டு, தட்சிணாயனப் புண்ய காலத்திற்கான உத்தராங்க ஆரம்ப நிலைப் பூஜைகளை ஆற்றுவதால், ராமேஸ்வரம், உப்பிலியப்பன் ஆலயம் போன்ற தலங்களில் உள்ள அகோராத்ரத் தலத் தீர்த்தத்தங்களில் மூன்று வேளையும் நீராடுதல் மிகவும் விசேஷமானதாகும்.

தட்சிணாயன படிகள்
திருவெள்ளறை

உத்தராயண படிகள்
திருவெள்ளறை

கும்பகோணம் சக்கரபாணி, திருவெள்ளறை ஆலயங்களில், வைணவத் தலங்களில் தட்சிணாயனப் புண்யகால வாசல், உத்தராயணப் புண்யகால வாசல் எனப் பெருமாள் ஆலயங்களில் இரு வாசல்கள் இருக்கும். ஆடி முதல் நாளில் தட்சிணாயன புண்ய கால வாசல் திறக்கப் பெறும். தை மாத முதல் தேதியில் உத்தராயணப் புண்ய கால வாசல் திறக்கப் பெறும்.
பெருமாளை வரம் வேண்டி, பெருமாள் கோயிற் படிகளாகச் சித்தர்களும், மஹரிஷிகளும், உத்தம பாகவதோத்தமர்களும் கிடப்பதால், இதற்காகவே தட்சிணாயனப் புண்யகாலத் திறப்பிற்கானப் படிப் பூஜைகளை உத்தராங்க ரீதியாக ஆரம்ப நிலை வழிபாடுகளை ஆற்றிடவும், கருடாழ்வார் பூவுலகிற்கு ஏகிப் பூஜிக்கின்றார்.
இத்தகைய இரு அயன ஆலயங்களில் இத்தலங்களில் படிகளுக்குக் கோலமிட்டுச் செங்காவி பூசி வழிபடுதல் மிகவும் பாக்கியமானதாகும். உத்தமர்களைப் பற்றி அறிந்தோ அறியாமலோ தவறாகப் பேசிய வாக்கு அவல தோஷங்கள் ஓரளவேனும் தீர அதே உத்தமர்களை நாடிச் சரணடைந்தால் தக்க பரிகார வழிமுறைகள் கிட்ட இதன் மூலம் நல்வழி பிறக்கும்.
(நாச்சியார் கோயில்) கல் கருடர் உள்ள தளம், கருடாழ்வாரின் அமர்ந்த (ஸ்ரீரங்கம்) கோலம், அமிர்தக் கலசம், நாகம் தாங்கிய கருட மூர்த்தி (சிவகாசி அருகே) திருத்தங்கல் போன்ற கருடசக்தித் தலங்களில் வழிபடுதல் மிகவும் சிறப்பான பலன்களைத் தரும்.
புனர்பூசத்தின் முதல் மூன்று பாதங்களும் மிதுன ராசியில் அமைகின்றன. நான்காம் பாதம் கடகத்தில் அமைய, இதில்தான் சூரியப் பிரவேசமாகிய சங்கராந்தி நிகழ்கிறது.

அகோராத்ர தீர்த்தம் ஒப்பிலியப்பன் கோவில்

சங்கராந்தியாகிய மாதப் பிறப்பில் சூரியக் கோள்களின் கிரணங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். சூரியனின் வெப்பம், உஷ்ணம், சூரியக் கதிர்களோடு ஆதவத் தன்மைகள் முடிவதில்லை! அடுத்து வரும் மாதத்தில் அமையும் பூவுலக ஜீவன்களின் மொத்தக் கூட்டுக் கர்ம வினைத் தன்மைகளுக்கு ஏற்பச் சூரியக் கிரணத் தன்மைகள் ஏற்படும். எனவே இரவு, பகல் நேர அமைப்புகள் பூவுலக ஜீவன்களின் அன்றைய தினசரிக் கர்மவினை அம்சங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
மாதப் பிறப்பின் சூரியக் கதிர் நிர்மாண சக்திகள் சிருஷ்டிக்கப் பெற்று, நிர்ணயிக்கப் பெறும் தலங்களில் ஒன்றே திருத்துறைப் பூண்டி அருகே உள்ள சங்கந்திச் சிவத்தலமாகும். மிகவும் சிதிலமடைந்துள்ள கோயில். இதனை நன்கு எடுத்துப் பராமரிப்போர்க்கு நற்சந்ததிகள் தழைக்க தந்தை வழி பார்சுவப் பராதீயப் பித்ருக்கள் அருள்வழி காட்டுவர்.
யாக்ஞவல்கிய மாமுனி பூலகில் சூரியப் பிரகாசத் தன்மைகளைப் பற்றி நிறைய விளக்கி உள்ளார். உலகெங்கும் அல்லது ஒரே பகுதியில் (வசிப்பவர்களும்) ஒவ்வொருவரும் (அருகருகே இருந்தால் கூட), விதவிதமான வகைகளில்தாம் சூரியக் கிரண சக்திகளைப் பெறுகின்றனர். அருகருகே நின்று கொண்டிருப்பவர்களும் ஒரே மாதிரியான சூரிய வெப்பத்தைப் பெறுவதில்லை. இது மனிதருக்கு மனிதர் மாறுபடும்.
அதாவது பூவுலகமெங்கும் 800 கோடி மக்களில் ஒவ்வொருவரும் அவரவருடைய பூர்வ ஜன்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப அவரவருக்குச் சூரிய கிரணத் தன்மைகள் வந்தமையும். அதாவது, தினமும் அவரவர் உணரும் சூரியக் கிரணத் தன்மைகளைக் கொண்டு, அவரவருடைய வினைத் தன்மைகளைத் தாமே அறிந்து கொள்ளலாம். இதற்கேற்ப, தினமுமே கண் பார்வை சக்திகளிலும் துல்லியமான மாற்றங்கள் ஏற்படும்.
இந்நாளில் அனைவரும் சூரிய பூஜைகளை ஆற்றிட வேண்டும். குறிப்பாக சாக்ஷுச சூக்த மந்திரங்களை ஓதி வழிபடுதல் மிகவும் சிறப்புடையதாகும். நல்ல கண் பார்வைக்கு தினமும் இதனை ஆதித்ய ஹிருதய மந்திரங்களுடன் ஓதி வருதல் நல்ல சிறப்பான பலன்களைத் தரும்.
சூரியப் பாதையில் மாற்றம் ஏற்படுவதும் தட்சிணாயனம் ஆகிறது. சூரியப் பாதையில் மாற்றம் ஏற்படுகையில், உடலில் உள்ள சூரிய அம்சப் பகுதிகளிலும் மாற்றம் ஏற்படும். இதனால் தந்தை வழிப் பித்ருக்களுக்காக விசேஷமான பூஜைகளை ஆற்றிட வேண்டும். தர்ப்பணம் அளிப்பதோடு, வேறு பல பித்ரு வழிபாடுகளும் உண்டு. பித்ரு ஹோமம், காக்கைகளுக்கு உணவளித்தல், அன்னதானம், அன்னப் பிண்டத் தர்ப்பணம், அன்னத் திவசம் போன்ற பல பித்ருவள வழிபாடுகள் உள்ளன. இவற்றை அறியாதோர், செய்வதற்கு வசதியும் நேரமும் இல்லாதோர் எள், பிரண்டை, வெல்லம், பாகற்காய், புடலங்காய், இஞ்சி போன்ற பித்ரு சக்திப் பொருட்கள், திரவியங்கள், தானியங்கள், காய்கறிகள் நிறைந்த உணவுப் பண்டங்களை (சுய்யம், எள் உருண்டை, எள்ளோதரை எனும் எள் சாதம், அதிரசம், வடை, பஜ்ஜி தயிரன்னம் போன்றவை) தானமாக அளித்த பின், பகல் உணவை ஏற்றல் நல்லது.
சூரிய வழிபாடு நிகழும் தலங்களில் சிறப்பான அபிஷேக ஆராதனைகளை மேற்கொள்தல், சாயைச் சரீரத்தில் மேன்மையும், வேறு பிறவியும் கிட்டாது அவதியுறுவோர்க்கு நன்மைகளை அளிக்க உதவும்.
இல்லத்தில் இந்நாளில் சூரியக் கோலம் வரைந்து, சூரியனின் கடக ராசிப் பிரவேச நேரத்தில், கடக ராசியில் கும்பம், கலசம், பூக்கள், கோதுமை தானியங்களை வைத்துக் கடக ராசியில் சூரிய மூர்த்தியை வரவேற்றுப் பூஜித்தல் மிகவும் விசேஷமானது.  

கண் தரிசன சக்திகள் மேம்பட ...

ஏகாதசியில் வரும் கரிநாளில் ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தில் வழிபட்டுப் பிறகு சனீஸ்வரரை ஆராதித்தல் மிகவும் விசேஷமானதாம். ஸ்ரீகிருஷ்ணனுக்குக் கருநீலப் பட்டாடை சார்த்தி, கருநீல வஸ்திரத்தால் ஸ்ரீகிருஷ்ணருக்குக் கிரீடமும், மயிலிறகு வைத்து, முதலில் பாதத்தில் இருந்து தரிசனத்தைத் தொடங்கி, பாதாதி கேசமாக, நெடுநேரம் கண்ணாரக் கண்டு தரிசித்திடுக!
கண்ணாரக் கண்டு, கண்டு ஆனந்தித்துத் துலங்குகையில் பக்தியை அளித்துக் காப்பதால்தான், அன்பைப் பொழியும் கண்ணபிரான் ஆனான் ஸ்ரீகிருஷ்ணன். இத்தகைய நாட்களில் ஆலயத்திலோ, வீட்டிலேயோ நெடுநேரம் சரீரப் பூஜைகளை ஆற்றி, நிறைவில் கண்ணாரக் கண்ணபிரானைத் தரிசித்துக் கண்களாலேயே மானசீகமாக அபிஷேக, ஆராதனைகளை, அலங்காரப் பூஜைகளையும் நெடுநேரம் நிகழ்த்திடுக! நாள் முழுதும் வாயாரவும், மனதினுள்ளும் ஸ்ரீகிருஷ்ணத் துதிகளை ஓதி, ஓதியே நாளைச் செலுத்திடுக!

ஸ்ரீகரியமாலீஸ்வரர் கரூர்

ஞாயிறன்று வரும் கரிநாளில் சூரியக் குடும்ப மூர்த்திகளை வழிபடுவது சிறப்பான பூஜா பலன்களைத் தரும். சூரியக் குடும்ப மூர்த்திகள் யாவர் தெரியுமா? எம மூர்த்தி, சனீஸ்வரர், யமுனா தேவியும் சூரியக் குடும்பத்தில் அமைவர்.
தேவசக்திகள் நிறைந்த கரிநாளில், சனி மூர்த்தி வழிபட்டு அருள் பெற்றப் பெருமாள் அவதாரமே ஸ்ரீகரியமாலீஸ்வரர் ஆவார். ஸ்ரீகரியமாலீஸ்வரர் பூஜித்த சிவாவதாரமே ஸ்ரீகரீயமாலீஸ்வர லிங்க மூர்த்தி ஆகின்றது. (கரூர்)
* தாம் கறுப்பாக இருக்கின்றோமே, தன்னைத் திருமணம் செய்து கொள்ள யார் முன் வருவர்?
* தான் சரியாகப் படிக்கவில்லையே, தனக்கு சரியான, நிரந்தரமான வேலை இல்லையே, தான் ஒல்லியாக / குண்டாக இருக்கிறோமே, தனக்கு எப்படித் திருமணம் நடக்கும்?
- என்று வருந்துகின்ற இளைஞர்கள், கன்னிப் பெண்கள் கலியுகத்தில் நிறையவே உண்டு. இவர்களுடைய தாழ்வு மனப்பான்மைகள் அகன்று, நல்வாழ்வு பெற,
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் ஆலயத்தில் அனுஷம், துவாதசி, வெள்ளிக் கிழமைகளிலும்,

* கரூர் ஸ்ரீகரியமாலீஸ்வரரையும், கரூர் அருகே உள்ள சித்தலவாய் ஸ்ரீதிருக்கண்மாலீஸ்வரரையும் கரிநாட்களிலும், அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபட்டு வருதல் வேண்டும்.
* கரிநாளில் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் சனீஸ்வர மூர்த்திக்குச் சங்குப் புஷ்ப கிரீடம் சார்த்தி, எள் சாதம் படைத்து, காக்கைக்கு நெய் ஊற்றிய அன்னம் வைத்து, எள்ளோதரை, எள்ளுருண்டை, எள் சேர்ந்த முறுக்குகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வழிபடுவதால், நல்ல காரியத்திற்காக ஒருவரை நம்பிட, அவரோ இதோ, அதோ என்று இழுத்தடிக்கும் நிலைமை மாறி நல்முறையில் உதவிகள் கை கூடி, நற்காரியங்கள் சித்தி பெற உதவும்.

ஜயபுரம் ஸ்ரீபுரம் சிவபுரம்

மனிதன் நாள் தோறும் மனதாலும், உடலாலும் சேர்க்கும் கர்ம வினைகளை அன்றன்றே கழித்திட, தினசரி ஆலயத் தரிசனங்களும், மூன்று வேளை சந்தியா பூஜைகளும், நித்தியத் தர்ப்பணமும்,
இவற்றைத் தினசரி செய்ய இயலாதோர்க்கு, வாராந்திர ராகு காலத் துர்க்கை பூஜைகள், அவ்வப்போது வரும் திதி, நட்சத்திரப் பண்டிகைகளும், இவற்றையும் விட்டு விட்டால், பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி போன்ற (15 நாளைக்கு ஒரு முறை வருவதான) பட்சப் பூஜைகளும்,
இவற்றையும் கூட இயலாமையால், அறியாமையால், விட்டு விட்டால், மாதந்தோறும் வருவதான சங்கட ஹர சதுர்த்தி, மாதாந்திர நட்சத்திர, யோக, மூன்றாம் தரிசனப் பூஜைகளும் வந்தமைகின்றன என்றால்,
திருந்தி வாழ்வதற்கும், தீவினைகளை, பாவங்களைக் களைவதற்குமாக, எவ்வளவு நல்வாய்ப்புகளை அனைவருக்கும் வாழ்நாள் முழுதும் தரும் காருண்ய மூர்த்தியாக இறைவன் துலங்கி அருள்கின்றார்! இதற்கான நன்றி காட்டும் பூஜையுமாக மலர்வதே பிரதோஷ பூஜை!

ஸ்ரீபிரதட்சிணேஸ்வரர் ஸ்ரீபுரந்தான்

ஸ்ரீபிரகன் நாயகி ஸ்ரீபுரந்தான்

ஜய சக்திகள் எனப்படுபவை வெற்றிக்கான மூல சக்திகளைத் தருபவை ஆகும். ஜயம் எனும் வெற்றியானது, வெறுமனே ஏதாவது போட்டிகளில், வெற்றி அடைவதைக் குறிப்பிடுவதல்ல. இவை எல்லாம் சாசுவதமான வெற்றிகள் ஆகா. தீமைகளை, தீய சக்திகளை, தீவினைகளை வெல்வதே உண்மையான ஜயம் என்பதாகும். நற்காரிய சித்தியில் கூடத் தடங்கல்கள் முதலில் வெல்லப்பட வேண்டும். இதற்கான ஜயசக்திகள் பரிணமிக்கும் நேரமே சங்கட ஹர சதுர்த்தி, செவ்வாய் ராகு காலம், பிரதோஷப் புண்ய காலம் போன்றவையாம்.
உலகில் உள்ள அனைத்து ஜீவன்களின் வாழ்க்கை முறைகளுமே, தீவினைகளை ஜயித்து, ஜீவ சக்திகளைக் காப்பதற்கான ஆன்ம சாதனமே! ஆம், மனித வாழ்க்கையுமே இறைவன் அளித்த ஆன்ம சாதனம்தானே! பெறுதற்கரியதே பிறவி என இதனால்தாம் இந்த மானுடப் பிறவி போற்றப் பெறுகின்றது.
கோடானு கோடி பிறவிகளைப் பிணி என்றும், இவற்றைக் கடந்து, பிறவிப் பிணி நீக்குவதே மோட்சம் என்று சொல்ல காரணம் என்ன ?
பிறவிகள் எப்போது ஏற்படும்? ஒருவருடைய வன்மையான கர்ம வினைகளால், மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதே பிறவிப் பிணி ஆகும். ஆனால், உத்தம நிலைகளுடன், இறையாணையால் நற்காரியங்களை ஆற்றிடப் பூவுலகிற்கு வருவது என்பது பிறவிப் பிணி ஆகாது. சத்குருமார்கள் இவ்வகையில்தாம் இறையாணையாகப் பூவுலகிற்குப் பல வடிவுகளில் ஜீவன்களைக் கடைத்தேற்ற வருகின்றனர்.
எனவே, தன் கர்ம வினைகளின் அழுத்தத்தால் பிறவி எடுப்பதே பிறவிப் பிணி ஆகும். இப்படியான விளக்கத்தில், பிறவியையே பிணி எனும் போது, பெறுதற்கரியதே மானுடப் பிறவி என்பது எப்படி நல்அர்த்தமாகி வரும் என்ற அடுத்த கேள்வி எழும். இதற்கான விளக்கங்களைத் தெளிவுடன் அறிய, பிறவிப் பிணி அகல்தல் மற்றும் மோட்சம், முக்தி அடைதலைப் பற்றி ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
கர்ம வினைகள் கரைந்தால்தாம் பிறவிப் பிணிகள் அகலும், இதற்கு ஒரு ஆன்ம சாதனமே வாகனமே, பிறவிக் கடலைக் கடக்கும் கப்பலே மனிதப் பிறவி! எனவேதான் நற்கருமங்கள் மூலம் வல்வினைகளைக் களைய நல்ல மானுடப் பிறவியானது, எளிமையான முறையில் பிறவிகளைக் களையும் மார்க்கமுமாகிறது.
ஒருவர் தனக்கு முக்தி கிடைக்க வேண்டும் என எண்ணிடில், இந்த எண்ணம் உத்தமமான உயர்ந்த எண்ணமே! ஆனால் குடும்பத்தில், சமுதாயத்தில் தனக்கு மட்டும் முக்தி வேண்டும் என எண்ணுதல் சுயநலம் கூடியதே! ஏனெனில், முக்தி என்பது தனியொரு உடலுக்காக வந்தமைவது கிடையாது. உதாரணமாக, டாக்டராக ஆகிட வேண்டும் என்று எண்ணமுள்ள அனைவரும், உடனே டாக்டராக ஆகிவிட முடிகிறதா?
இதே போல, முக்தி வேண்டும் என எண்ணுவோர் அவருடைய இந்தப் பிறவியில் தான் பெற்ற உடலுக்கு முக்தி கிட்ட வேண்டும் என மட்டுமே எண்ணுகின்றார். இது அறியாமையால் ஏற்படுவது. ஏனெனில், அவருடைய உடலைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பிறவிகள் அனைத்திலும் அவர் சேர்த்த கர்ம வினைகள் கழிந்தால்தாம், இவை எல்லாம் ஒட்டு மொத்தமாகத் தற்போது வந்துள்ள மனிதப் பிறவியில் முக்தி நிலைக்கான தகுதிகள் ஏற்படும் என அறிதல் வேண்டும்
எனவே முக்தி வேண்டும் என்ற பிரார்த்தனையை விட, இறைவா முக்திக்கு ஏற்ற சேவைகளை, தகுதிகளை அளித்திடு, என்பதே நியாயமான பிரார்த்தனை ஆகும். முக்திக்கான எளிய மார்கம், கலியுகத்தில் சத்சங்கமாகப் பலரும் ஆற்றக் கூடிய ஜீவநலச் சேவைகள் என்பதால், இதற்கு வயது வரம்பும், ஆண், பெண் இன வேறுபாடும், ஜாதி, மத, இன, குல வேறுபாடும் கிடையாது.
முக்திக்கான ஆரம்ப நிலைத் தகுதிகளில், இறைவனின் மீது ஆழ்ந்த நம்பிக்கையே முதல் தகுதி! சத்குருவின் வழிகாட்டுதல் இரண்டாவது தகுதி, இரண்டாவது படி. இறைப் பரம்பொருளே, இந்த இரண்டாவது படியை, முதற்படியாக வைத்து அளிப்பதால் சத்குரு இறைத் தூதுவர் ஆகின்றார்.
மூன்றாவதான தகுதியே, பிற ஜீவன்களில் மேல் அன்பு கொண்டு, சத்சங்கமாகப் பலருடன் தான, தர்ம, பூஜை சேவைகளை, ஆற்றுதல். இவைதாம் சத்குருவையும் அடைய வைக்கும். தியாக உள்ளம், அன்பினையும் பெறச் சத்சங்கங்க மார்கமாகப் பலருடன் சேர்ந்து, அன்னதானம், ஹோமம் போன்ற நற்காரியங்களில் ஈடுபடுதல் வேண்டும்.
தக்க சத்குருவை பெறும் வரையில் தாம் மிகவும் ஈடுபாடு கொண்டு உள்ள படேசாஹிப் சித்தர், காஞ்சிபுரம் போடா ஸ்வாமிச் சித்தர், குழந்தையானந்தா சுவாமிகள், சேஷாத்ரி சுவாமிகள், ஷிர்டி சாயிபாபா போன்ற மாமமறை இறைத் தூதுவர்களிடம், தக்க சத்குருவைப் பெற்றுத் தருமாறு வேண்டி வருதல் வேண்டும். இத்தகைய ஜீவசமாதி வழிபாடு தக்க சத்குருவைப் பெற உதவும். இவர்களின் மேல் பெரிதும் ஈடுபாடு உள்ளமையால், இவர்களே சத்குரு எனப்பொருள் கொள்தல் கூடாது. இவர்களே சத்குருவாகவும் அமையலாம் அல்லது தக்க சத்குருவிடமும் கொண்டு சேர்த்திடலாம்.
செவ்வாய் அன்று கூடும் அங்காரக பிரதோஷம் இந்த உடலுக்கும், பிறவிகளுக்கும் சாசுவதமான மகத்தான ஆன்ம சக்திகளைப் பொறுப்பாக, சித்திகளின்பால் மனதைச் செலுத்தாமல் அமைத்துத் தர உதவும். இதனையே ஜயசக்திகள் கூடும் ஜயபுரப் பிரதோஷமாகச் சித்தர்கள் உணர்த்துகின்றனர்.
தீயதை வெற்றிக் கொள்ளும் மனதை ஜயபுரம் என்பர். ஸ்ரீவித்யா சக்கரத்தில், ஜயபுரம், ஸ்ரீபுரம் என்றெல்லாம் உண்டு. தீய வழிச் செல்லும் மனதை வெற்றி கொள்ள, அங்காரகப் பிரதோஷத்தில் கிட்டும் ஜயசக்திகளின் மூலம் கிட்டும் நல்ல மனோசக்தி, மன வைராக்யம் உதவும். எனவே தீயதின்பால் மனம் செல்லாவிடில் மனதை அடக்குபவர் ஜயபுரவாசி அந்தந்தத் தருணத்தில் ஆகிறார். இதில் சாசுவதம் பெறுதல் வேண்டும். மீண்டும் தீயதின்பால் மனமே செல்லாது எப்போதும் நல்லவற்றின்பால் செல்வது ஸ்ரீபுரம் ஆகும். எப்போதும் சிவச்சிந்தனையில் செழிப்பது சிவபுரம் ஆகும்.
ஸ்ரீபுரந்தான் என்ற ஒரு அரிய தலம் அரியலூர் அருகே உள்ளது. சிதிலமடைந்த இத்தலத்தில் தக்கத் திருப்பணிகளை ஆற்றி, முறையான பூஜைகள் தினமும் நிகழும் வகையில் சேவைகளை ஆற்றி உதவுவோர்க்கு, நல்ல வகையில் சந்ததிகள் அமையும்.

தலைமுறைகளைத் தாண்டும் தர்ப்பணம்

பஞ்சாங்கம் என்பது உலகில் அனைவருடைய இல்லத்திலும் இருக்க வேண்டிய மிக மிகப் புனிதமான காலசக்தி சாதனம்! மகத்தான கால சக்திகள் நிறைந்தது. காலத்தை ஒட்டியே மனித வாழ்க்கை அமைவதால், காலத்தைப் பற்றிய உணர்வுடனேதான் மனிதனுடைய ஒவ்வொரு நிமிட வாழ்க்கையும் அமைதல் வேண்டும். இதற்குப் பஞ்சாங்க தரிசனம் மிகவும் உதவும். கால உணர்வோடு வாழ்தல் எனில், இதற்காக அடிக்கடிக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருத்தல் என்று பொருளல்ல! ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு விநாடி வாழ்வதும் இறையருளால்தான் என்பதைத் தெளிந்து புலப்படுத்திக் கொள்தலே கால உணர்வு ஆகும்.
ஆம், காலபைரவ மூர்த்தியின் அருளால்தான் ஒவ்வொரு வினாடிக் காலமும் சங்கல்பிக்கப்படுகின்றது. (கவனிக்கவும் "காலம் கழிக்கப்படவில்லை''). காலத்தை விரயமாக்கிக் கழிப்பது மனித குலமே! ஏனைய உயிரினங்கள் அனைத்தும், காலத்தில் நிறைந்துள்ள காலசக்திகளை ஒவ்வொரு விநாடியும் நன்கு பயன்படுத்துகின்றன. எனவே, காலமானது வாழ்க்கையில் கழிக்கப்படுவதற்காக மனித குலத்திற்கு வந்தமையவில்லை! மனித அளவீட்டில் ஒரு நிமிடம் என்பது தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் வெவ்வேறு வகைகளில் அமையும்.

தினசரி அமையும் கால வகைகளை எந்த வருடம், எந்த மாதம், திதி, கிழமை, நட்சத்திரம், யோகம், கரணம் இவற்றைக் கண்டிப்பாக ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும். ஏனெனில், இவற்றில் ஏனைய உயிரினங்களுக்கான கால அளவைகளும் சூக்குமமாக உள்ளன. தாவரம், விலங்குகள், பறவைகள், காய்கறிகள், பழங்கள் போன்று தாவர, விலங்கினக் கூட்டு வகையில்தானே மனித வாழ்வமைகிறது. உதாரணமாக, கரண அளவீடு தாவரங்களுக்கு உரியதாகும். கரிசலாங் கண்ணிக் கீரை வகைகள் காலத்தை நன்கு விருத்தி செய்யும். இதில் மென்மேலும் எண்ணற்ற காலவிளக்கங்கள் உள்ளன. தக்க சத்குரு மூலமாக அறிந்தால்தான் இவை மனித மூளைக்கு நன்கு புலப்படும்.
மேலும் ஒவ்வொருவரும் தினந்தோறும் தன் ஜாதகத்தின் ராசி மற்றும் நவாம்ச ஜாதகக் கட்டங்களையும்,
பஞ்சாங்கத்தில் உள்ளபடி அந்தந்த நாளுக்கான (கோசார ரீதியான) கிரக அமைப்புகளையும் தினமும் காணுதல் வேண்டும். இதுவும் காலஉணர்வு வழிபாடே!

இவற்றோடு, அவரவர் தினமுமே தன் இரு கரங்களிலும் உள்ள ரேகைகளையும், விரல் கணுக்களையும் பார்த்து, முடிந்தால் தினமும் வரைதலும் உள்ளங்கையில், விரல்களில் கிரகங்கள் அமைவதால் இதுவும் கிரக ரேகை வழிபாடே!
மணிக்கட்டில் உள்ள கங்கண ரேகைகளும் பலவிதமான கிரகங்களின் கிரஹண சக்திகளைக் குறிப்பவையாம். மேலும், உள்ளங்கால் ரேகைகளையும் தினமும் காணுதல் வேண்டும். இதில் பல காலசக்திச் சூக்குமங்கள் உள்ளன.
பூஜையிலோ, மேஜையிலோ, அடிக்கடி நீங்கள் பார்க்கும் டி.வி. கம்ப்யூட்டர் போன்ற இடங்களின் அருகிலோ, ஒரு கல் சிலேட்டில் அந்தந்த நாளில் அமையும் கிரக சஞ்சாரக் கட்டத்தை எழுதி வைப்பது நல்லது. இதனால், ஒரு சில நாட்களிலேயே ஜாதக, அந்தந்த நாளைய கிரக அமைப்புகள் நன்கு மனப்பாடம் ஆகி விடும். இவ்வாறு பெறப்படும் கிரக சஞ்சார உணர்வுகள் மூலம், வானியல் கிரக சக்திகளை உடலியல் கிரக சக்திகள் வழியாக, ஆகர்ஷித்துக் கொள்ள முடியும்.

ஸ்ரீசோமநாதர் பெருமகளூர்

பொதுவாக, பெளர்ணமி அன்று ஷண்ணாவதித் தர்ப்பண நாள் அமைவது மிகவும் அபூர்வமானதாகும். இவ்வாறு பெளர்ணமியோடு கூடி வரும் வைதிருதி தர்ப்பண நாள் பூஜை இந்திர லோகத்திற்கு அருகில் இருக்கும் பிஞ்சாலப் பித்ருக்கள் மேன்மேலும் உத்தம நிலைகளைப் பெற உதவும். ஆம், வைதிருதித் தர்ப்பண நாளுக்கான பூஜா சக்திகள், பித்ருக்களுக்கும் முக்தி நிலைகளை அளிக்க வல்லவையே!
எனவே, தர்ப்பணம் என்பது பூவுலகமும், பூவுலக வாழ் ஜீவன்களும் நன்மைகளைப் பெறவும் அன்றி மேலுலகப் பித்ருக்களிடமிருந்து ஆசிகளைப் பெற்றும்,
பூவுலகில் சந்ததிகள் நிகழ்த்தும் பூஜைகளில் எழும் பூஜா சக்திகளைக் கொண்டு பித்ருக்களும், சாயைச் சரீரத்தினரும் நற்கதியையும் அடைகின்றனர்.
தர்ப்பணத்தில் எண்ணற்ற அற்புதங்கள் நிகழ்கின்றன, நீங்கள் எண்ணுவது போலல்லாது, நீங்கள் தர்ப்பணம் அளிக்கையில், நீங்களே தர்ப்பணம் அளிப்பதாக அன்றி, உங்களுடைய முன்னோர்கள் பலரும் உங்களுள் சேர்ந்தே தர்ப்பணம் அளிக்கின்றனர் என்பதே உண்மையாக நிகழ்வதாகும்.
கலியுகத்தில் கடந்த 300 ஆண்டுகளாகத் தர்ப்பண சக்திகள் மிகவும் குறைந்து வருவதால், இதில் கடந்துள்ள நான்கைந்து தலைமுறைகள் முறையாகத் தர்ப்பணம் அளிக்கவில்லை என்பதே பொருளாகும்.
எனவே, தலைமுறைகளைத் தாண்டிக் கடக்கும் ஆன்ம சக்திகளுடன், தர்ப்பணப் பூஜைகளை ஆற்ற வேண்டிய கடமை தற்போதைய தலைமுறையினருக்கு உண்டு. அதாவது, எண்ணற்றத் தலைமுறைகளைத் தாண்டிச் சென்று, நல்வர சக்திகளை அளிப்பதே தர்ப்பணப் பூஜையின் மஹிமையாகும்.
ஐந்திர யோகபாதத் தர்ப்பணம் எனில், ஐந்து விரல்களால் தர்ப்பணம் அளிக்கும் பாக்யத்தைப் பெறுதலாகும். மாகேந்திர யோகமாகிய ஐந்திர யோகம், பெளர்ணமி நாளில் சேர்ந்து வருகையில், இது வைதிருதி யோகத்துடன் இணையும் தருணத்தில் சூரியநாராயண சுவாமியைத் துதித்துப் பிறகு ஸைவதிருதி யோக நேரத்தில் தர்ப்பணம் அளிக்க வேண்டிய தலங்களில், மாகேந்திர சக்தி முக்தித் தலங்களும் அடங்கும்.
புதுக்கோட்டை - பேராவூரணி அருகில் உள்ள பெருமகளூர் ஸ்ரீசோமநாதர் (தாமரைத் தண்டு லிங்க வடிவில்) உள்ள ஆலயத் தீர்த்தக் கரையில் ஐந்திர யோகமும் வைதிருதி யோகமும் பெளர்ணமியுடன் வரும் நாளிலும், அல்லது வைதிருதி யோகக் காலை நேரத்திலும், தாமரை இலையில் தர்ப்பணம் அளித்துத் தேங்காய் அன்னம் தானம் அளித்தலால், மிருத்யு தோஷங்கள் காரணமாக,

* அதாவது இளவயது மரண சம்பவிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள்
* இருக்கின்ற ஒரே சந்ததியையும் இழந்து வாடுவோர்
நன்முறையில் மேன்மை பெற உதவும். குருவி ராமேஸ்வரம், நெடுங்குடி, நவபாஷாணம் போன்ற தலங்களும் பெளர்ணமியில் இணையும் ஷண்ணாவதித் தர்ப்பணத்திற்குச் சிறப்புடையதாகும்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam