முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

மனக் கசப்பை மாய்ப்போம்

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப காரியங்களில், உடல் நிலை சரியில்லாமல் போதல், பணத் தட்டுப்பாடு, உறவினர்கள் முறுக்கிக் கொள்தல், சத்திரம் மற்றும் லீவு கிட்டாமை, அபசகுனங்கள் போன்ற பலவும் ஏற்பட்டு, சுப முகூர்த்த காரியங்களில் பலத்தத் தடங்கல்களை ஏற்படுத்தி விடும். இவை நேராமல், சுப முகூர்த்த காரியங்கள், அந்தந்த சுப முகூர்த்த நாளில், காரிய சித்திகளுடன் நன்கு நடைபெறுவதற்காகவே, தேய்பிறையில் வந்தமையும் சுபமுகூர்த்த அம்சங்கள் நிறைந்த வகையில் பல அற்புதமான, பண்டிகைகளும், பூஜைகளும் வந்தமைகின்றன.
சிரவண நட்சத்திரம் எனப்படும் திருவோண நட்சத்திரம், சிவனுக்கும் திருமாலுக்கும் உரித்தான திவ்யமான நட்சத்திரம். பெருமாளுக்குரிய தசாவதார சக்திகளும், விஷ்ணு பூஜைக்குரிய திருவோணமும் கூடும் திருநாள். சஷ்டி விரதம் போல பஞ்சாங்கத்திலும் சிரவண நட்சத்திர நாளை சிரவண உபவாசம் அதாவது திருவோண விரதநாள் என்று குறித்திருப்பார்கள்.
திருவோண நாளில், அனைவரும், குறிப்பாக ராமன், கிருஷ்ணன், லக்ஷ்மி போன்ற பெருமாள் வகைப் பெயர்களை உடையோர், நன்முறையில் விரதமிருந்து, பெருமாளை வேண்டி வந்தால், குடும்ப வாழ்வில் நல்ல மன அமைதி ஏற்படும். குறிப்பாக, கூட்டுக் குடும்பம், வியாபாரம், நட்பு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள பிளவுகள் நீங்க, திருவோண விரதம் நன்கு உதவும்.
திருவோண விரத நாள், காலம் சம்பந்தப்பட்ட பலவிதமான தோஷங்களையும் நீக்க வல்லதாகும். தேவாதி தெய்வ மூர்த்திகளாலேயே வணங்கப் பெற்றவர் வரதராஜப் பெருமாள் ஆதலின், திருவோண விரத நாளில் தமிழகத்தின் பல பெருமாள் ஆலயங்களிலும் அருளும் வரதராஜப் பெருமாள் யுகங்களைக் கடந்த ஆலயங்களைக் கடந்த காலதீத மஹாவிஷ்ணுவாய் அருளிப் பிரகாசிப்பதால், எத்தகைய கால தோஷங்களையும் திருவோண விரதம் நிவர்த்தி செய்து தரும்.
திருவோண நாள் தோறும் துளசிச் செடிக்கு நீலம் அல்லது பச்சை நிறப் பட்டு வஸ்திரம் சார்த்தி, தொண்டரடிப் பொடியாழ்வாருடைய பச்சை மாமலை போல் மேனி என்ற பாசுரத்தை 25 முறை ஓதி, பச்சை வண்ணப் பெருமாள் ஆலயத்தில் வழிபடுதல் மிகவும் விசேஷமானது. இதன் பிறகு பச்சை / நீலப் நிறப் பட்டு வஸ்திரத்தைத் தானமாக அளித்திட வேண்டும்.
பெருமாளுடைய சிரசிலிருந்து பாதம் வரை வரும்படியான பெரிய நெல்லிக் கனிகளால் ஆன முழு நீள நெல்லி மாலையைச் சார்த்தி, விரதமிருந்து வழிபடுதலால், குடும்பத்தில் உள்ள மனக்கசப்புகள், மனவேறுபாடுகள் அகல நன்கு உதவும்.

நல்லதே செய்யும் ராமபாணம்

குளிகன் கிரகம் என்ற ஒன்று உண்டு. மாந்தி என்றும் அழைப்பர். சனீஸ்வருடைய புத்திரர். ஜாதகக் கட்டத்தில் குளிகாதி நால்வரையும், தூமாதி ஐவரையும் நவகிரகங்களின் ஒன்பது உபகிரகங்களாக, ஜாதகக் கட்டத்தில் வைத்துக் கணிக்கும் உத்தம ஜோதிடப் பாங்கும் உண்டு. கேரளப் பகுதியில்தாம் மாந்தி உப கிரக சுத்தக் கணிப்பு இன்றும் நிகழ்கின்றது. ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் தங்கள் ஜாதகத்தில் மாந்தியின் இருப்பைத் தெரிந்து கொண்டாக வேண்டும்.
மாந்தி மூர்த்தி ஸ்ரீகாலபைரவ உபாசனையில் வல்லவர். நவகிரக மூர்த்திகளை ராவணன் வதைக்க முற்படுகையில், அவனுடைய வேதமோதிய அதீத சக்திகளுக்காகவும், அவனுடைய சிவபூஜா சக்திகளுக்கும் ஆட்பட்டே நவகோள மூர்த்திகளும் கட்டுப்பட்டு இருந்தனரே அன்றி, ராவணனுக்கு பயந்து அல்ல! சனி மூர்த்தி அன்றி ஏனைய எட்டு மூர்த்திகளும் குப்புற இருக்க, சனி மூர்த்தி மட்டும், ராவணன் புரட்டியதால் மல்லாந்து இருக்க, சனிப் பார்வைக்கு ஆளானான் ராவணன். இதற்குச் சற்று முன்னே மாந்தி கிரகம் தோன்றியமையால் பத்தாவது கிரகமாக மாந்தி ராவணனின் ஜாதகத்தில் வந்தமர்ந்த விதத்தை ராவணன் அறியவில்லை! ராவணனுடைய அபரிமிதமான வேத சக்திகளும் மாந்திப் புலம் காரணமாகவும் அவனுடைய அதர்மச் செயல்களாலும் மறைவுபட, மாயையால் மறைபட்டு இன்னல்களுக்கு அவன் ஆளானான்.

வில்லேந்திய முருகன், திருவையாறு

சனீஸ்வரரின் காலபைரவ பூஜை மஹிமையால்தான் மாந்தி கிரகம் தோன்றியமையால், குளிகை நேரம் ஸ்ரீகாலபைரவ உபாசனைக்கு, பூஜைக்கு மிகவும் உத்தமமானதாகும். மாந்தி தோன்றுவதற்கு முன் வரை ராவணனுடைய மாரக ஸ்தானம் சுத்தமாக இருந்தது. அந்த மாரக ஸ்தானத்தில் குளிகன் அமர்ந்தார். இவ்வாறு குளிகன் ராவணணின் மாரக ஸ்தானத்தில் அமர்வதை, அகஸ்தியர் பொதிய மலையில் தன்னுடைய தியானத்தில் உணர்ந்து, ராவணனுக்கு முடிவு காலம் வந்து விட்டதை ஸ்ரீராமருக்கு உணர்விக்கும் காலத்தை நோக்கிக் காத்திருந்தார். ஸ்ரீராமருக்கு ஆதித்ய ஹ்ருதய மந்திரங்களை உபதேசிக்கையில் இதைப் பற்றி அறிவிக்கின்றார்.
பிற்பாடு, ராவணனை வெல்ல தக்க தருணம் மாந்திக்குரிய குளிகைக் காலம் என்பதையும், ஸ்ரீராமபிரானிடம் அகத்தியர் ரகசியமாகத் தெரிவித்தார். இந்த ரகசியத்தைப் பூவுலகில் முதலில் சித்தர்களுக்கும் அறிவித்தவர்களே நவநாதச் சித்தர்கள். எவ்வளவோ முயற்சித்தும் ராவணனால் ஒரு நவநாதச் சித்தரைக் கூடத் தரிசிக்க இயலவில்லை! இந்த ஒன்பது சித்தர்களுக்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு. ஆனால் தனித்தனியாக அவர்களை அழைப்பதையோ, வழிபடுவதையோ அவர்கள் விரும்புவதில்லை. அவர்களைக் கூட்டாகவே நவநாதசித்தர்கள் என்று அழைக்கப்படுவதையே ஆதிசிவனும் விரும்புகின்றார்.
எத்தனையோ சிவமூர்த்திகளுக்கான பூஜைகளை ஆற்றிய ராவணன், தான் காலவகை மரணத்திற்கு அப்பாற்பட்டவன் என அகம்பவத்தால் எண்ணியமையால், காலபைரவ உபாசனையின் மஹிமையை ஒரு சிறிதும் அறியவில்லை! அவனுடைய மாரகத்தை நிர்ணயித்துத் தந்தது அவன் முறையாகக் காலபைரவரையும், குளிகனையும் அறிந்து வழிபடாததே!
குளிகைக் காலத்தில் குறித்த சில நல்ல காரியங்களையே ஆற்ற வேண்டும், பிரேத தகனம், மயானக் கிரியைகள் போன்றவற்றை குளிகையில் ஆற்றக் கூடாது என நாமறிவோம். பூவுலகையே தீவினைகளால் ஆட்டிப் படைத்து வந்த ராவணனை, ஸ்ரீராமர், ஆதித்ய ஹ்ருதய மந்திர சக்தியால்தாம் வென்றார். எனவே குளிகை நேர ஸ்ரீகாலபைரவ பூஜை எத்தகைய பகைமையையும் வென்று தரும்.
குளிகனே இராம பாணத்தில் வந்து அமர்ந்ததால், குளிகை நேரமானது நம்முடைய தீவினை, பகைமை, எதிரிகள், குரோதம், விரோதம் அனைத்தையுமே மாய்க்கும் சக்தி வாய்ந்ததாகும். குளிகை நேரத்தில் சுவாமியின் அபிஷேகத்திற்காக நாம் ஊற்றும் பால், தேன், தயிர், இளநீர், நெய் போன்ற அனைத்துப் பொருட்களிலும் குளிகன் அமர்வார். இந்த அபிஷேக திரவியங்கள் ஸ்ரீகாலபைரவ சுவாமி மீது படும்போது, இப்புண்ய சக்திகளே ஆயுதங்களாகி, குளிகன் நம் தீவினைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார். நமது வாழ்க்கை, ஆயுள் எல்லாமே நிர்ணயிக்கப்படுவது நமது புண்ணிய, பாவத்தால்தான்.
உலகில் எதையுமே ஆக்குதல் மிகவும் கடினம். எனவே, ஒரு சிறு இலை, பூவைக் கூட அநாவசியமாகக் கிள்ளக் கூடாது. இதுவும் பிற ஜீவன்களை வதைத்தலுக்குச் சமமே! இவ்வாறு செய்தால், இது மாந்தி தோஷத்தைத் தரும். அநாவசியமாக மரத்தை வெட்டுபவர்கள் பெரும் மாந்தி தோஷத்திற்கு ஆளாவர். இதனால் குடும்ப சந்ததிகள் மிகவும் அதிக அளவில் பாதிக்கப் பெறும். எனவே எதையும் அழிப்பதற்காக எந்தத் தீவினைகளையும் செய்யக் கூடாது. நல்லதற்காகவே எதையுமே பயன்படுத்த வேண்டும். இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தவே ஸ்ரீராமர், ராம பாணத்தைப் பிரயோகம் செய்தார்.
ராம பாணம் நல்லதே செய்யும். ராவணனை மாய்த்த பிறகு, ராமர் தம் ராம பாணத்தை எப்போதுமே தொட்டதில்லை. இதனால்தான் ஒரு வில், ஒரு சொல், ஒரு அம்பு என்று ஸ்ரீராமரின் பெருமையை இன்றும் போற்றுகின்றோம்.
குளிகை நேரத்தை இறைவனுக்காக ஒதுக்கி, இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவ வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும்.  .

தென்னையின் தெய்வீகச் சிறப்பு

எப்போதும் எந்த லோகத்திலும் சுபமங்கள சக்திகள் பொழியும் மஞ்சள், குங்குமம், புஷ்பம், பொன் (மாங்கல்யம்), மஞ்சள் பூசிய தேங்காய் ஆகியவை பஞ்ச சுபசக்தி வஸ்துக்களாகும்.
பாட்டனார், தாத்தா தாய், தந்தை எனக் குலவம்சமே வித்யா சக்தி நிறைந்தவர்களாக, சிறந்த கல்விமான்களாக, இசை மற்றும் பல துறைகளில் வல்லவர்களாக விளங்கிட, வம்சாதிப் பிள்ளைகள் கல்வியில் மந்தத்துடனும், கெட்ட வழக்கங்களுடனும் இருந்து குலப் பெருமை தாழ்வது கண்டு வேதனையுறும் தாய்மார்களின் வருத்தத் தோய்வுகள் தீர அமிர்தயோகம் கூடும் பிரதோஷ நாளில், வடக்கு நோக்கி சிவன் அருளும் ஆலயங்களில் (மூலவருக்குப் பின்புறம் தட்சிணா மூர்த்தி அமையும் கோயம்பேடு- மயிலாப்பூர் ஸ்ரீவீரபத்ரர் ஆலயம் போன்றவை) பிரதோஷ வழிபாடுகளை நிகழ்த்தி மேற்கண்ட ஐந்து பொருட்களையும் நிறையவே தானம் செய்து வர வேண்டும்.
மிக மிகப் புனிதமான சுபசக்திப் பொருளான இளநீர், தேங்காயில் இருக்கும் தீர்த்தம், எவர் கண்ணும், கையும் படாத மிக மிகப் புனிதமான தீர்த்தமாகும் என்பதோடு, இதில் எண்ணற்றப் படைப்பு ரகசியங்களும் அடங்கி உள்ளன. பூமியில் உள்ள அமிர்தப்புல நீர், அவ்வளவு உயரத்திற்கு ஏறுகின்ற அளவிற்கு அற்புதமான ஆகர்ஷணப் பூர்வமான அரிய ஆன்ம சக்திகள் நிறைந்ததே தென்னை மரமாகும்.

ஸ்ரீஅமாவாசை சித்தர் அமரும்
தென்னைமரம் காருகுடி

இதனால்தான் சமீப காலம் வரைக் கலியுகத்தில் மானுட தேகத்தில் பூவுலகில் அருளுலா வந்துலவிய அமாவாசைச் சித்தர் எனும் அற்புதச் சித்தர்பிரான், எப்போதும் ஒரு உயரமான மரத்தில் குறிப்பாகத் தென்னை மர உச்சியில்தான் அமர்ந்திருப்பார். அமாவாசை தோறும் மட்டும் தென்னை மரத்திலிருந்து கீழிறங்கி வந்து, சித்தர்களுக்கே உரித்தான வகையில் பல அற்புதமான மூலிகைகளால் அபிஷேக, ஆராதனை வழிபாடுகளை ஆற்றுவவார். அப்போது பலரும் அவருக்கு உணவிடக் காத்துக் கிடப்பர்.
ஒட்டிய வயிற்றுடன், மெலிந்த சரீரத்தவராய்த் திகழ்ந்த அவர், தென்னை ஓலைகளால் பின்னிய ஒரு சிறு இலை அல்லது சிறு நுனி வாழை இலை முன் அவர் வந்தமர்ந்திட, அனைவரும் அவருக்கு உணவைப் பரிமாறிடுவர். எவ்வளவு உணவு வகைகளை இலையில் வைத்தாலும், இட்ட உணவைப் போதுமென்று ஒரு போதும் சொல்லாது, உணவளிப்பவர்களே பரிமாறி. பரிமாறிக் களைக்கும் வண்ணம், சளைக்காமல் அனைத்தையும் உண்பார். இலையில் எதையும் மீதம் வைப்பதில்லை! புதிதாக வைத்த இலையைப் போல் பளிச்சென்று இருக்கும்!
அவரைச் சோதிப்பதற்காகவே பலரும் மாட்டு வண்டி நிறைய உணவு வகைகளைக் கொண்டு வந்து அவருக்கு உணவிட்டு, அவரைக் கிண்டல் செய்தவர்களே அயரும் வண்ணம் அனைத்தையும் குனிந்த தலை நிமிராது, மிகவும் சாந்தமாக உண்பார். இதன் பின், சித்தரை வருத்தியவர்களுடைய வீட்டில், தோட்டத்தில் இருந்த அனைத்து வண்டிச் சக்கரங்களும் மண்ணில் புதைந்து விட, கேலி செய்தவர்களும், சோதனை செய்தவர்களும் என்னே அபச்சாரமிது எனப் பதறிப் போய், அவருடைய கால்களில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டிட, ஏழைகளுக்கு ஐந்து வண்டி நிறைய உள்ள உணவைத் தானமாக அளித்தால்தான் இயற்கையான பரிகார நிவர்த்தி எனத் தீர்ப்பளித்தவரே அமாவாசைச் சித்தர்!
உணவிட்டவர்களே மிகவும் களைத்துப் போய், “சுவாமி! பரிமாற இனி உணவு வகைகளே இங்கு இல்லை! இனி சமைத்தால்தான் உண்டு! பொறுத்தருளும்!'' என்று மனதார வேண்டிச் சரணடைந்த பின்னரே, அமாவாசைச் சித்தர் மெல்ல எழுந்து, மீண்டும் தென்னை மரத்தில் ஏறி உச்சியில் போய் அமர்ந்து கொள்வார். அடுத்தது அவர் மரத்தை விட்டு இறங்குவது அதற்கடுத்த அமாவாசை நாளில்தாம்!

ஸ்ரீஅகோரவீரபத்திரர் காருகுடி

தென்னை மர உச்சியில் அவர் உட்கார்ந்திருக்கும் காட்சியைக் கண்டாலே போதும், பலருக்கும் வல்வினைகளும், தோஷங்களும், தீவினைக் கர்மங்களும் தாமாகவே கரைந்து, நற்காரியங்கள் கை கூடி, நல்வரங்கள் கனிந்தன. அவர் ஏன் இவ்வளவு உணவை மெலிந்த உடலில் ஏற்க வேண்டும்? மல, ஜலாதிகளைக் கடந்தவராய் தென்னை மர உச்சியில் யோகநிலை பூண்ட சித்தர்பிரானுடைய யோகப் புலத்தை மெச்சி, சாட்சாத் அன்னபூரணியே அன்னமிடக் காத்திருக்கையில், அமாவாசைச் சித்தர் பூவுலகில் இவ்வளவு உணவை ஏன் உண்ணுதல் வேண்டும்?   
உணவின்றி, நீரின்றி, நல்வகை ஆரோக்கியச் சத்தின்றி உலகெங்கும் ஆங்காங்கே அல்லற்படும் எண்ணற்ற ஜீவன்களுக்கும், இவ்வகையில் ஜீவாம்ருத உணவு சக்தியை ஆகாச மார்கமாக அர்ப்பணித்த அன்னபூரணி லோகச் சித்தரே அமாவாசைச் சித்தர் ஆவார்!
இத்தகைய என்றும் வாழும் ஏகாந்த ஜோதிச் சித்தர்கள் பலரும் பரிமளிக்கும் அற்புதத் திருநாடே நாம் வாழும் பாரதப் புண்ணிய பூமி! எனவே, தினமுமே காலையில் எழுந்தவுடன், தென்னை மரங்களின் தரிசனம் பெற்று, அதில் அமாவாசைச் சித்தர் அமர்ந்திருப்பதாக பாவனை செய்து, நன்கு வணங்கி,
அமாவாசைச் சித்தகுருவரத்தோய்!
உமாவேத, சமாராதன, குமார போஜனாம்ருத
வந்தித சரணம், சரணம், சரணம் சரணம் பிரபத்யே'
என்ற ஓதி வணங்குதல் விசேஷமானதாகும். இதனால், உண்ணும் உணவு ஆன்மப் பூர்ணமாய் செறிந்(த்)திட உதவுவதோடு, பூவுலகில் உணவுப் பஞ்சம் வராது காக்கும் மானசீக பூஜைகளுள் இதுவும் ஒன்று. ஒவ்வொருவரும் அமாவாசைச் சித்தரின் சிந்தனையுடன் தினமும், குறைந்த பட்சம் ஒரு மனிதர், தாவரம், பறவை, பசு, நாய் ஆகிய ஐவருக்கும் உணவிட வேண்டிய தார்மீகக் கடமை உண்டு.
எவருக்கும் புரிபடா வண்ணம், மனிதப் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட நிலையில், இளநீருக்குள், தேங்காய்க்குள், தென்னைத் தண்டு வழியாய், பூமியிலிருந்து அமிர்த நீரேறும் பிரம்ம ரகசியத்தை அறிந்த சித்தர்களுள் ஒருவரே நாரிகேளச் சித்தராவார்.
ஒவ்வொரு தாவரத்திற்கும் உரிய சத்குருமார்கள் உண்டு. இதே போல அந்தந்தத் தாவர விருத்திக்கும், வளர்ச்சிக்கும் படைக்கப்பட்டுள்ள தேவதைகளும் உண்டு.
தற்காலத்தில் இயந்திர பம்ப் மூலம்  தண்ணீர்த் தொட்டிக்கு நீரேற்றுவது போல, பூமியிலிருந்து,  இளநீருக்கு அமிர்த நீரேற்றுவதற்கான தெங்கப் பரியோக சக்திகளைத் தம் தபோ பலன்களாக அளிக்கின்ற விசேஷமான சித்தர்களும், மஹரிஷிகளும் உண்டு. இவர்களுடைய அற்புதமான அருட்பணிகளுக்குச் சிறு கருவியாய்த் துணை புரிவது போல, அமிர்த யோக நேரத்தில், ஒவ்வொரு குடும்பத்தினரும் வாரந் தோறும், மூன்று தென்னை மரங்களுக்காவது பாத்தி கட்டி, இயற்கை உரம் சார்த்தி, நீரூற்றிப் பேணி வருகின்ற இறைப் பணிகளை ஆற்றி வருவதால், சந்ததிகள் நன்கு தழைப்பதற்கான ஜங்கம வளப் புண்ய சக்திகள் திரளும்.
இயற்கையாகவே அமிர்த சக்திகள் நிறையும் புனிதமான திரவியங்களுள் பால், தேன், தாய்ப் பால், கரும்பு, அதிமதுரம் போன்றவற்றோடு, இளநீர், தேங்காய் நீரும் சேர்ந்து தெய்வீகத்தில் சிறப்பிடம் பெறுகிறது. பஞ்சாங்கத்தில் பரசுராம ஜெயந்தி என வரும் நாளே தென்னை விருட்சம் பூவுலகிற்குப் பிறிதொரு யுகத்தில் வந்த விசேஷமான தினமாகும். எனவே, இந்நாளிலும், முழுமையாக நாள் முழுதும் அமிர்த யோகம் இருக்கும் நாளிலும், மேற்கண்ட அமிர்தவகைத் திரவியங்கள் கலந்த உணவை, தசாவதாரப் பெருமாள் மூர்த்திகள் அல்லது நின்று, இருந்து, கிடந்து, நடந்த ஆகிய நானிலை வகைப் பெருமாள் மூர்த்திகளுக்குப் படைத்தலும், குடும்பத்தில் பெண் பிள்ளைகளுக்கு நல்ல இல்லற வாழ்வை, நல்சந்ததி வளத்தை அளித்திட உதவும்.
ஸ்ரீவீரபத்ர சுவாமிக்குக் கொப்பறைத் தேங்காய்களாலான மாலை சார்த்தி வழிபட்டு வருதலால், உறவினர்களின் பகைமைச் செயல்களால் துன்புறுவோர் நல்ல நிவர்த்தி பெறுவர்.
தேங்காயில் இருக்கும் பகுதிகள் பலவும் மனித அங்கங்களைக் குறிக்கின்றன. தேங்காய்  இருக்கும் ஓடு, நார் எல்லாம் மனிதக் கபாலம், நரம்புகள், நாளங்கள் மற்றும் பலவற்றைக் குறிக்கின்றன. வாழை போல, தேங்காயில் மனித சமுதாயத்திற்குப் பயன்படாத பகுதிகளே கிடையாது. எனவே, தியாகமயமான இத்தகைய தாவரங்களைப் பார்த்தவாறும், இவற்றின் கீழும் யோகம், தியானம், முத்திரைகள் பயில்வது தியாகம் நிறைந்த மனவளத்தையும் சேர்த்துத் தரும்.
தென்னை மரம் தனக்கென எதையும் கொள்ளாது, பூலோக மக்களுக்காக எதையுமே அளித்துத் தியாகம் புரிவதால்தான், தெய்வ காரியங்கள், சுப காரியங்கள் அனைத்திற்கும், வாழைப் பழம், வாழை இலை, வாழை நார் போலத் தென்னைக் கீற்றாலான இலையில், தொன்னையில் உண்ணுதலும், இவற்றில் அன்ன தானமளித்தலும், மாரக தோஷங்களையும், மரண பயத்தையும் போக்கிடவும் ஓரளவு உதவும்.
தென்னையைப் பூவுலகிற்கு அளித்த மகரிஷிகளுள் ஒருவரே பரசுராம மஹரிஷி ஆவார். வாழை இலை, வாழைத் தொன்னை போல் தென்னை மரக் கீற்றாலான இலை, தொன்னையில் உண்ணுவது, அருந்துவது, தானமளிப்பது நல்ல யோக சக்திகளை அளிக்கும்.
சாம்பிராணி தூபம் கூடத் தேங்காய் நார் சேர்த்து உருவான அக்னியில் சாம்பிராணி தூபத்தில் விசேஷமான அக்னியோகக் கிரணங்கள் பிரகாசிக்கின்றன. இதனால்தான் தியாகமயமான வஸ்துக்களில் தியாக சக்திகள் பரிமளிக்கின்றன.
பிரதோஷ நேரத்தில் இளநீர், தேங்காய் மற்றும் மேற்கண்ட ஐந்து வகை சுபசக்திப் பொருட்களைத் தானமளித்திடல் அற்புத பலன்களை வர்ஷிக்கும்.

உப்பையே உள்ளமுற நினை

மீன ராசியில் சந்திர மூர்த்தி அமையும் நாள், சமுத்ர பூபதி சக்திகளைப் பெற்றுத் தருவதாகும். மீன ராசியில் அமரும் சந்திர மூர்த்தி, மச்ச மூர்த்திக்குப் பூஜைகளை ஆற்றி, கடல்வாழ் ஜீவன்களுக்கு இதன் பலாபலன்களை அர்ப்பணிக்கின்றார். மனித குலமும் மழை, உப்பை நம்பி வாழ்வதால், மனிதனும் கடலை நம்பி வாழும் ஜீவனாகின்றான். ஆம், உப்பு இல்லாமல் மனித வாழ்க்கை ஒரு நாளேனும் நகருமா?
ஒவ்வொரு கடலிலும் பலவிதமான உப்பு வகைகள் தோன்றும். ஒவ்வொன்றிலும் வித விதமான விதமான உப்பு சக்திகள் இருக்கும். உப்பில் இருந்து கிட்டுவதே பல்வகை ரசாயனங்களும்! ஒரு கிருமி நாசினியாகவும், பலவற்றையும் புனிதப்படுத்தும் சாதனமாகவும் உப்பு விளங்குவதால்தான், சுபகாரியங்களில் உணவு பரிமாறுகையில், இலையில் இனிப்பிற்கும் முந்தையதாக, முதலில் உப்பு வைப்பதும், முதன் முதலில் சம்பளப் பணத்தில் பொங்கி விருத்தியாகும் வளமான தன்மைகளை உடைய உப்பு, பூக்களை வாங்கும் புனிதமான நற்பழக்கம் நிலவுகின்றது.
எனவே நடப்புலகப் பொருட் துறை ரீதியாக மட்டுமன்றி, ஆன்மீக ரீதியாகவும் உப்பு வளமையான, விருத்தியாகும் சக்திகளைக் கொண்டதாகும். உப்பின் தனித் தன்மையுடைய வெண்மை நிறம், சந்திர மண்டலத்திலிருந்து பெறப்படும் விசேஷமான ஸ்வேத சக்திகளைப் பூண்டதாகும். இந்த ஆன்மவள வெண்மை தன்மையே உப்பைத் தரிசிக்கின்ற பாங்கே, பலவற்றையும் புனிதப்படுத்த வல்ல அபூர்வமான சித்சுத் சக்திகளையும் பெற்றுள்ளது. திருமணத்திற்குப் பின் தம்பதியர் உப்பளங்களைத் தரிசித்து உப்பளத்தை வலம் வந்து உப்பள பூஜை ஆற்றுதலால் தம்பதியர் இடையே ஒற்றுமை நன்கு பெருகும்.

ஸ்ரீமச்சப் பெருமாள்

பலத்த விஷமுடைய கழிவுகள் மற்றும் மலஜலக் கழிவுகளின் நச்சுத் தன்மைகளையும் உப்பு அகற்றுவதுடன், அவற்றில் ஊறியுள்ள தீவினைக் கழிவுகளில் இருந்து நல்சக்திகளையும் பிரித்து வளப்படுத்தித் தர வல்லதாகும். உப்பின் குலத்தைச் சார்ந்த இந்துப்பு, மிகவும் சக்தி வாய்ந்த சித்த மருத்துவ, ஆயுர்வேத மருத்துவத் திரவியமாகும். பல நோய்களுக்கு, அறுவை சிகிச்சையின்றி நல்ல குணத்தைத் தருகின்ற கல்நார்ப் பாறை உப்பு வகையும், நத்தை பஸ்பம், ஆமை ஓட்டு பஸ்பம் போன்ற மருத்துவ உப்பு வகைகளும் உண்டு.
கடல், நிலம், ஆறு, குளம், பாறை எனப் பலவற்றிலிருந்து பெறப்படும் உப்பு வகைகள் உண்டு. சாக்கடல் (Dead Sea) எனத் தற்போது தவறாக அழைக்கப்படும் - லெபனான் நாட்டை ஒட்டி அமையும் - கடலில் பல சுப்ரவர சக்திகள் நிறைந்துள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பகோணத்தின் மஹாமக நீரோட்ட சக்திகளும், இக்கடல் நீரில் ஆன்ம ரீதியாகப் பிணைகின்றது. இதன் பிரதிபலிப்பாக, கடந்த மஹாமகத் திருவிழா பற்றி ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் உரைக்கப் பெற்றதைச் சித்தர்களின் அருளாணையாக ஏற்று, சமீபத்தில் சில இறையடியார்கள், கும்பகோணத்தில் மஹாமக நாளில் பெற்றத் தீர்த்தத்தை, லெபனானில் இக்கடலில் சேர்க்கின்ற மிகவும் கடினமான இறைக் காரியத்தை, உலகச் சமுதாய இறைப் பணியாக ஆற்றித் தந்துள்ளனர். ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் அளிக்கப் பெறும் சித்தர்களின் இத்தகைய அருள்மொழி வாக்கியங்களை, உலகில் எம்மூலையிலும் ஒருவரேனும் ஆற்றி வருவது பேரானந்தம் அளிப்பதாகும். ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஆற்றுவோர்க்கு அனைத்தும் கை கூடி வருமே!
கடலில்தாம் பல வகை அணு சோதனைகளும் நிகழ்வதால், இத்தகைய பல உப்பு வகைகள்தாம், அணு ஆயுதங்களின் கொடுமையான விளைவுகளைத் தாங்கி, பூவுலக ஜீவன்களைக் காக்கின்றன. மேலும், சில வகை உப்புகள் கடலில் ஏற்படுத்தும் தீமை பயக்கும் அணுப் பரிசோதனைகளின் தன்மைகளைச் சரியாக அறிய முடியாதபடியும் தடுத்துப் பூவுலக ஜீவன்களைக் காக்கின்றன.
ஆண்டவன் கடலில் ஒரே ஒரு வகை உப்பை மட்டும் படைக்கவில்லை. கடலில் உணவுக்கு ஒரு வகை உப்பு, கடலில் கலக்கும் அசுத்தங்கள், கடலை மாசுபடுத்தாமல் காப்பதற்கு ஒரு வகை உப்பு, கடலில் அணுகுண்டுகள், ஆயுதங்கள் வெடித்தால் அதை கட்டுப்படுத்த ஒரு வகை உப்பு என்று பல்வேறு வகையான உப்பு வகைகளை இறைவன் படைத்துள்ளான். உப்பை வைத்துப் பலவிதமான மந்திர சித்திகளையும் பெறும் முறைகளும் உண்டு.
மனித குலம் அறியா வகையில் பலவிதமான பொக்கிஷங்களையும், யாரும் அறியாத புதையல்களையும் இறைவன் கடலில் வைத்துள்ளான். தங்கம், வைரத்தை விட விலை மதிப்பற்ற பல திரவியங்களும், ஹேமவர்ணத் தங்கம் எனும் அற்புதத் தங்கமும் கடலில் பதிந்துள்ளன.
மனித சமுதாயம் கடலில் அளவுக்கு மீறியதாக அசுத்தங்களை, கழிவுகளைக் கலந்து மாசுபடுத்தினால், இதுவே பலத்த தோஷங்களாக மாறி, சூறாவளியாக வந்து சமுதாயத்தைப் பாதிக்கிறது. எனவே, கடலுக்கு உரிய நன்றிப் பூஜைகளை மனித சமுதாயம் அவ்வப்போது ஆற்றுதல் வேண்டும்.
சந்திர பகவான் மீன ராசியில் நிலைகொள்ளும் காலத்தில் பெருமாளின் மச்சாவதார வழிபாடும், ஏழை மீனவர்களுக்கு ஆன உதவிகளை ஆற்றுதலும், உப்புமா, உப்புக் கொழுக் கட்டை போன்ற உப்பு + மாவு கலந்த பண்டங்களைப் படைத்துத் தானமளித்தலும், மீன்களுக்குப் பொரி இடுதலும் சமுத்திர மூர்த்திகளை ப்ரீதி செய்வதாகும்.
உறவிலும், வியாபாரத்திலும் செய்ந்நன்றி மறந்து, அடிக்கடி விரோதம் செய்வோர் திருந்திட, மேற்கண்ட பூஜைகள் உதவும்.

அரிசி கூறும் ஆன்மீக ரகசியங்கள்

அரிசிக்கு ஆயுளை விருத்தி செய்யும் சக்திகள் உண்டு. நல்ல அரிசியைத் தக்க முறையில், இயற்கை உரங்களைக் கொண்டு விளைவித்து, குறிப்பிட்ட அளவைக் கோயிலுக்கு அளித்து, குறித்த சதவிகிதத்தை அன்னதானத்திற்கு ஒதுக்கி வைத்து, அரிசி உணவை ஏற்று வந்தால் ஆயுள் விருத்தியாகும். அரிசி உணவால் சர்க்கரை வியாதி பெருகும் என்ற மாயையும் அகலும். இயற்கைத் தழை உரங்களில், நீண்ட காலப் பயிராக விளைந்த அரிசி உணவை இறைவனுக்கு நைவேத்யம் செய்து, இவ்வாறு ஆண்டவனுக்குப் படைத்த அரிசி அன்ன உணவையே ஏற்று வந்தால், சர்க்ககரை நோயும் கர்ம வினையாகப் பற்றாது, சர்க்கரை நோய் பற்றிய மன பீதியும் அகலும்.
பீகார் போன்ற பகுதிகளில் தினமும் காலையில் எழுந்த உடனேயே குடும்பமாக அமர்ந்து ஒரு வீசை, இரண்டு வீசை என இனிப்பு வகை உணவுகளை சிறு, பிராயத்தில் இருந்தே உண்டு வருகின்றனரே! எனவே அவரவர் நிலப் பகுதிக்கு ஏற்ற உணவு வகை முறைகளையே நம் முன்னோர்கள் அளித்துள்ளனர். வெறும் அரிசி உணவாலோ, பாரம்பரியத்தாலோ மட்டும் சர்க்கரை நோய் வந்து விடாது. சர்க்கரை வியாதி வருவதற்கு எத்தனையோ பூர்வ வினைக் காரணங்கள் உண்டு! யானைக்குத் தினமும் கரும்புகளை அளித்து வந்தால் சர்க்கரை வியாதியே வாராது தற்காத்துக் கொள்ளலாம்.
அரிசியைக் கடையில் வாங்கி உண்பவர்களும், பூமாதேவி பூஜை, தான்ய லக்ஷ்மீ பூஜை, சாகம்பரீ பூஜைகளை முறையாக ஆற்றி வருதல் வேண்டும். ஒவ்வொரு அரிசியிலும் ரேகைகள் இருக்கும். இதில்தான் எவரெவர் உடலில் எந்த அரிசி சேர்தல் வேண்டும் என்ற விதிப் பாடங்கள் பொறிக்கப்பட்டு இருக்கும். அரிசிக்கு ஆயுளை விருத்தி செய்யும் ஆன்ம சக்திகள் இருப்பதால் தானே, “தீர்க்காயுசு பவ:, வளமோடு நெடிது வாழ்க!'' என ஆசிர்வதிக்கையில், மஞ்சள் பூசிய முழு அரிசி மணிகளை ஆசீர்வாத நல்வர சாதனமாகப் பயன்படுத்துகின்றோம். எனவே ஆயுளை விருத்தி செய்யும் சக்தி அரிசிக்கு நிறைய உண்டு. என்னதான் பாஸ்ட் புட், மசாலா வகைகள் வந்தாலும் ஒரு பிடி அரிசி அன்னம் உண்டால்தானே வாயும், மனமும், வயிறும் நிறைகிறது!
கலியுலகில் தற்போது செயற்கை ரசாயன மருந்துகளுடன் நிறையப் பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தியும், குறைந்த மாத காலத்தில் விளையும் நெல் ரகங்களைப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய அரிசியை உண்பதால் நமது ஆயுள் குறையவே செய்யும், ரசாயன விளைவுகளாக, சில வகை நோய்களும் ஏற்படும். அரிசியின் ஊட்டச் சத்துத் தன்மையும் குறையும். பழங்காலத்தில் இயற்கை உரங்கள், இயற்கைத் தழைகளை வைத்து ஆறு மாதத்திற்குக் குறையாமல் நீண்ட கால நெற் பயிரை வளர்த்தார்கள். அந்தக் கால அரிசிக்கு இருந்த ஊட்டச் சக்தி, ஆன்ம சக்தி, வைராக்ய சக்திகள் தற்போது குறைந்த காலத்தில் விளையும் அரிசிக்குக் கிடையாது.
ஆறு மாதம் நிலத்தில் இருந்து விளைந்த அரிசியை உண்டால், ஆயுள் ஒரு நாளைக்கு ஆறு விநாடிக் கால ஆயுள் கூடுகிறது. ஐந்து மாதம் விளைந்த அரிசி உணவைச் சாப்பிடுபவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று விநாடிகள் நல்ஆயுள் கூடுகிறது. நான்கு மாதம் விளைந்த அரிசியில் சமைக்கும் இயற்கை உணவிற்கு ஒரு நாளைக்கு 2.5 விநாடிகள் நல்ஆயுள் கூடுகிறது. நான்கு மாதத்திற்குக் குறைவாக விளையும் அரிசியை உண்பதால் ஆயுள் குறைவு படும். ஆயுள் வெறுமனே விரிந்தால் போதாது. நல்ல ஆயுள் சக்திகளுடன் விருத்தியாதல் வேண்டும்.
இதிலும் தினமும், நன்முறையில், வாழை இலையில் அரிசி உணவைக் கடவுளுக்குப் படைத்து, பெளர்ணமி தோறும் இறைமூர்த்திகளுக்கு அன்னாபிஷேகம் செய்து, எவர்சில்வர் தட்டில் அல்லாது, வாழை இலை, மந்தாரை, சங்கு வகை திரவியத் தட்டு போன்றவற்றில் உணவு உண்டு, தினமும் சிறிதளவேனும் அன்னதானத்துடன், காக்கை, நாய், கோழிகளுக்கும் அன்னம் இட்டு வருதலால், ஆயுள் சக்தி இன்னமும் கூடுதலாகும்.
ஜாதகத்தில் காலச் சக்கர தசைப் பாங்கு என்ற ஒன்று உண்டு. இதன் வழியே ஜாதகத்தைக் கணிப்பவர்கள் தற்காலத்தில் மிக மிகக் குறைவே! இது மிகவும் துல்லியமானது. ஆனால் கணிப்பதற்குக் கடினமானது. இதில்தான் உணவு மூலம் ஆயுள் விருத்தியாகும் எட்டாமிட மற்றும் ஒன்றாமிட ஜீவன சக்தி ஸ்தானங்கள் நன்கு புலனாகும்.
இவ்வாறு செயற்கை உரங்களினால் கலியுகத் தானிய உற்பத்தி அமையும் என அறிந்தே, இயற்கையாகவே பல தான்ய விருத்தி அம்சங்கள் தோன்றுகின்றன. நாகசம்ரட்சண கோமுகி என்ற ஒரு விசேஷமான கோமு(க)கி வழிபாடு உண்டு. கோமுக பூஜையில், கோமுகத்தின் வழியே இறைவனுக்கு அபிஷேகமான அனைத்துத் திரவியங்களும் பிரசாதமாக வருவதால், தினமும் மூலத்தானத்திலிருந்து வெளி வரும் (கோமுகம்) அபிஷேக நீரைப் பிரசாதமாக அருந்தி வருவோர்க்கு நல்ஆயுள் விருத்தியாகும். பல்வகை நோய்களும் வாராது தற்காத்தும் தரும்.
சில கோமுகங்களின் மேலோ கீழோ நாக தேவமூர்த்திகள் இருப்பதுண்டு. அவைகளுக்கு நாக சம்ரட்சகக் கோமுகி என்று பெயர். சென்னை அருகே உத்திரமேரூர் பெருமாள் ஆலயத்தில், கோஷ்ட மூர்த்தியாக உள்ள நாகசம்ரட்சண மூர்த்தி, நோய்களை, குறிப்பாக சர்க்கரை வகை நோய்களைத் தீர்க்க வல்ல மூர்த்தி. இத்தலத்தில் நாகமூர்த்திக்குத் தேன் கலந்த இனிப்புகளைப் படைத்து வழிபடுதல் விசேஷமானது.
நாகங்கள் புழங்குவது நமது பூமிக்கு நிறையவே தேவை. குறிப்பாக, அரிசி விளையும் நிலங்களில் நாகங்கள் நிறைய உலாவுதல் நன்று. நாகசக்திகள்தாம் தான்யங்களில் உள்ள பல விஷ சக்திகளைத் தணிக்கும். ஜனமேஜயனின் யாகத்தில் நாக வம்சமே பூண்டோடு அழியும் சூழ்நிலை வந்த போது சித்தர்களின் பாரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீஅஸ்தீக சித்தர் யாக சாலைக்கு எழுந்தருளி, நாக குலத்தையே காப்பாற்றினார். இதனால்தான் ஸ்ரீஅஸ்தீக சித்த மகராஜ் கீ ஜெய்! அஸ்தீகா போற்றி என்று அஸ்தீக சித்தரின் பெயரை பக்தியுடன் சொன்னால், எந்த நாகமும் தீண்டாது.
அஸ்தீக சித்தர் நாக குலத்தை ஏன் காப்பாற்றிக் கொடுத்தார்? இதற்குக் கோடானு கோடி காரணங்கள் உண்டு. நாகங்கள் பூவுலக ஜீவன்களின் வாழ்க்கைக்குப் பலவிதங்களில் உதவுகின்றன. எனவே நாகங்களின் நடமாட்டம் நமக்கு மிகவும் தேவையே! பூமி பூஜையின்போது அஸ்திவாரம் தோண்டுகையில் கிட்டும் பொருட்களைக் கொண்டு அறியும் சகுன சாஸ்திர விதிகளை அமைத்துள்ளனர். இதில் நாக சம்பந்தமான வஸ்துக்கள் கிட்டுவதைக் கொண்டு பூமியின் நாகதோஷப் பாங்கினை அறிவர்.
நாகப் புற்றுக்களை ஒரு போதும் இடித்தல் கூடாது. இதுவே நாகதோஷமாகி, சந்ததிகளை மிகவும் பாதிக்கும். பூமியில் உள்ள பல விஷ சக்திகளை அழிப்பதற்கு, நாக விஷமே மாற்று மருந்தாக உள்ளது. எனவே நாகநடமாட்டம் விஷசக்திகளைப் போக்கும். நமது உடலில் சில வகைச் செல்கள் புற்றுக் கிருமிகளால் அழிந்து, மற்ற செல்களுக்கும் நோய் பரவி உயிரையே மாய்க்கும் நிலை ஏற்படுவதுண்டு. இத்தகைய நோய்களுக்கு நிவாரணம் அழிப்பதற்கு நாக விஷமே மருந்தாக பயன்படுகிறது. நாகங்களில் எண்ணற்ற பிரிவுகள் உண்டு. பொதுவாக, நாகப் புற்றுகளுக்கு அரிசிப் பால் ஊற்றி வர, தான்ய விருத்தி நன்கு கிட்டும்.
அமாவாசை அன்று நாகாபரணங்களை அணிந்த மூர்த்திகளைத் தரிசித்தல், நாகவாகனத் தரிசனம் பித்ருக்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும்.  

நவகிரகச் சக்கரங்கள் வழிபாடு

ஒவ்வொருவரும் தினமும், மிகவும் எளிமையான வகையில் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால சக்திகளுக்கான வழிபாடுகளை ஆற்றி வருதல் வேண்டும். மூன்று காலமும் நடப்பது ஸ்ரீகாலபைரவரனின் காலசக்திகளால்தாம். இதற்காகவே பூதலிங்கம், பவிஷ்ய லிங்கம், வர்தமான லிங்கம் ஆகிய மூன்று லிங்கங்கள் சேர்ந்து அருளும் தலங்கள் (திருப்புகலூர்) அமைந்துள்ளன. இவை மூன்று காலங்களையும் உணர்த்துவதால், அனைவரும், குறிப்பாக ஜோதிடர்கள் இவற்றைக் காலசக்தி வித்யைக் காலங்களான  ஸ்ரீகாலபைரவருக்குரிய குளிகை நேரம், புதன் நவமி, அஷ்டமி, புனர்பூச நட்சத்திர நாட்களில் முந்திரி மாலை, பாதாம் பருப்பு மாலை, பிஸ்தாப் பருப்பு மாலை சார்த்தி வழிபட்டு இவற்றால் அர்ச்சித்தும் வழிபட்டு வருதல் வேண்டும். சனிக்கிழமை தோறும் சனீஸ்வரரே மூன்று கால லிங்க வடிவுகளையும் பூஜிக்கின்றார்.

ஸ்ரீபவிஷ்யத் லிங்கேஸ்வரர்
திருப்புகலூர்

ஸ்ரீபூதலிங்க மூர்த்தி
திருப்புகலூர்

காலச் சக்கர தசை என்ற கணித முறை ஒன்று உண்டு என்று நம்முள் பலரும் அறிவதில்லை! இதில் மூன்று காலக் கணித நியதிகள் துல்லியமாக இருக்கும். இதில் ராகு, கேது அம்சங்கள் இடம் பெறா! பூஜைப் பூர்வமாக இவ்விரண்டும் கூடுதலாக அமைதல் வேண்டும். எனவே தக்க சத்குரு ஜோதிடப் பெரியோர்கள் மூலம் இதனை அறிந்து, மேற்கண்ட பூதலிங்கம், பவிஷ்ய லிங்கம், வர்தமான லிங்கம் ஆகிய மூன்று லிங்க வழிபாடுகளை ஆற்றி வந்தால், ஜோதிடத்தில் வளம் பெறலாம். மரண பயம் அண்டாது தற்காத்துக் கொள்ளலாம்.
சாதாரணமானவர்கள் எவ்வாறு இதனைக் கடைபிடிப்பது?
ஒரு நோட்டுப் புத்தகத்தையோ, பழைய டயரியோ எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் உங்கள் ஜாதகத்தின்
1. ராசிச் சக்கரம்
2. நவாம்சச் சக்கரம்
3. அன்றைய தினத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலையான கோசார கிரகச் சக்கரம் (இதனைப் பஞ்சாங்கத்திலிருந்து அறியலாம் - சில பஞ்சாங்கங்களில் 365 நாளுக்குமான தினசரி கோசார கிரக நிலைகளை உணர்த்தும் படங்களை அளித்துள்ளனர்)
இந்த மூன்றையும் தினமுமே நோட்டுப் புத்தகத்தில் தன் கைப்படத் தினமுமே வரைந்து, எழுதி, தினமுமே மஞ்சள் குங்கும் இட்டு, நவகிரகத் துதிகள், வேயுறு தோளி பங்கன் துதிகளை ஓதி வழிபட்டு வருதல் வேண்டும். நாளடைவில் இவை நன்கு மனப்பாடமாகி விடும். மூன்றாவது சக்கரத்தில் கிரக நிலைகளை அவ்வப்போது பஞ்சாங்கத்தைப் பார்த்தும் தெரிந்து கொள்ள வேண்டும். நன்கு மனப்பாடம் ஆனபின் வலது கை மோதிர விரலால் வானில், காற்றில்,  தளத்தில் எழுதுதலும் ஒரு வகைச் சூக்கும நவகிரகச் சக்கர வழிபாடே!

ராசி சக்கரம் திருவதிகை

சனிக்கிழமை அன்று ஒரு தாம்பாளத்தில், நறுமணப் பூக்களால் அந்தந்த நாளுக்கான கோசார கிரகச் சக்கரத்தை அமைத்து, அந்தந்தக் கிரகம் உள்ள கட்டத்தில், அந்தந்த கிரகத்திற்குரிய தானியம், உலோகம், வண்ணத் துணி போன்றவற்றை வைத்து வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். ஈஸ்வரப் பட்டம் பெற்ற நவகிரக மூர்த்தி ஆதலின், சனிக் கிழமை அன்று அனைத்துக் கோள மூர்த்திகளும் சனீஸ்வரரைப் பூஜிக்கின்றனர்.
ஒவ்வொரு கிரகத்திற்குமான சக்கரங்களும் உண்டு. அதனைப் பெறும் வரையில் அந்தந்த கிரகத்திற்குரிய தானியம், உலோகம், வண்ணத் துணி போன்றவற்றுடன் வழிபட்டு வருதல் வேண்டும். இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில், அவரவருக்கு என்னென்ன தசை, புக்தி, அந்தரம் நடக்கின்றது என்பதை மிகவும் நன்றாகத் தெரிந்து கொண்டு, உதாரணமாக குரு தசை, சுக்கிர புக்தி, சந்திர அந்தரக் காலம் எனில்,
தசாநாத குருமூர்த்தியே!
புக்திநாதச் சுக்கிர மூர்த்தியே போற்றி
சந்திர அந்தரக் கால மூர்த்தியே போற்றி!
என்று தினமும் 1008 முறையாவது ஓதி வந்தால்தான், தசா, புக்தி, அந்தரக் கால உணர்வுகளுடன் நன்முறையில் வாழ முடியும். கஷ்டங்கள் வந்தால்தான் ஜோதிடத்தை நாடுதல் என்றல்லாது, தினமுமே இவ்வாறு பக்திப் பூர்வமாக வழிபட்டு வந்தால் அந்தந்த கிரக தேவதைகளே மனமுவந்து அருள்வர்.
ஒருவருக்கு எந்த கிரகத்தின் மகா திசை நடக்கிறதோ அந்த கிரகத்தின் சக்கரத்தை வைத்து வழிபடுவதால் கண்கூடான பலன்களைக் காணலாம். இந்தச் சக்கரத்திற்குத் தினமும் திருநீறு, மஞ்சள், குங்குமம், சந்தனம், சிந்தூரம் இட்டுத் தினமும் வழிபட வேண்டும். சிலருக்குச் சுக்கிர தசை நடந்தாலும் கடனாளியாக இருப்பதைக் காணலாம். காரணம் புக்தி, அந்தரக் கிரகங்களின் வலுவும் ஆகும். மேலும் சுக்ர தசை நடந்தும் செழிப்பும், வனப்பும், வளமையும் வரவில்லை என்றால், பூதலிங்கம், பவிஷ்ய லிங்கம், வர்தமான லிங்க வழிபாடுகளைச் சனிக் கிழமை தோறும் ஆற்றி, நவகிரகச் சக்கரத்தைத் தினமும் வில்வம், மற்றும் துளசி, வன்னி தளங்களின் வைத்து வழிபட்டால், சக்கரத்திலுள்ள அட்சரங்களின் பலன்களால் துர்வினை அழுத்தங்கள் குறைந்து நல்அனுகிரகமும் கிட்டும்.
தினமும், நவகிரகத் துதிகளை ஓதாது ஒரு போதும் வாழ்க்கையை ஓட்டக் கூடாது. உலகில் எல்லாருமா தினமும் ஓதி வருகின்றார்கள் என்று எண்ணாதீர்கள்! இதுவும் துர்எண்ணமே! தினமும் ஓதாதவர்களுக்கும், நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் சேர்த்து ஓதுதலே தன் கடன்! என எண்ணி இவ்வாறு தினமும் நவகிரக வழிபாட்டினை ஆற்றுதலே, புனிதமான பாரத இறைத் தமிழ்ப் பகுத்தறிவுப் பண்பாடாகும்.
நவகிரக வழிபாடு இல்லாமல் நம் தினசரி வாழ்க்கை இல்லை என்று ஆக்கிக் கொள்ளுங்கள். நம்மையும் அறியாமல் தினமும் எவ்வகையிலேனும் நவகிரக வழிபாட்டினை ஆற்றித் தான் வருகின்றோம். அரிசி, நிலக்கடலை மற்றும் தான்ய வகை உணவை உண்ணுதல், வண்ண ஆடைகளைத் தரித்தல், புனிதமான தல மரங்களின் தரிசனம் போன்ற பல்வகை நவகிரக வழிபாடாகின்றது.

ஸ்ரீகைலாசநாதர்
சோழபுரம்

உதாரணமாக, உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். சந்திராஷ்டமம் இரண்டே கால் நாளைக்குத்தான் இருக்கும். ஆனால் சந்திராஷ்டமத்தின் (மனோ)வேகம் மூன்று நாட்களுக்கு இருக்கும். ஆனால் சந்திராஷ்டம விளைவுகளாக, அந்த மூன்று நாட்களுக்குள், 30 நாட்களின் பிரச்னைகளும் சேர்ந்தே வந்திடலாம், 300 நாட்களுக்குக் கூட சேர்ந்து வரலாம். அதே சமயம், நீங்கள் சந்திர மூர்த்தியை முறையாக இந்நாட்களில் பக்தியுடன் வழிபட்டு வந்தால், சந்திர மூர்த்தியின் கருணையால், அந்த பிரச்னையைக் குறைத்து, மூன்று மணி நேரத்திற்கான, ஏன் மூன்று நிமிடத்திற்கானதாகக் கூடக் குறைத்துத் தந்திடலாம். பிரச்னைகளே வரக் கூடாதென எண்ணுவது பேராசையே! செய்ததற்கு அனுபவித்தல்தானே தர்மமாகிறது!
சனிக் கிழமைகளில் அனைவரும் சத்சங்கமாக ஆலய வளாகங்களில் அன்றைய நாளின் கிரக சஞ்சாரச் சக்கரத்தைப் பூக்களால், பச்சரிசி மாவால் பெரிதாக வரைந்து, அந்தந்தந்த கிரகக் கட்டத்தில் அந்தந்த கிரகத் தானியங்களை நிரப்பிப் பக்தர்களைக் கிரகச் சக்கரத்தை வலம் வரச் செய்தல் அரிய, அற்புதமான வழிபாடு அன்றோ!
சந்திராஷ்டம நாளில் சந்திரச் சக்கரத்தைப் பச்சரிசி மாவால் வரைந்தும், சந்திரச் சக்கரம் வைத்தும், ரோஹிணிச் சந்திரச் சக்கரம் வைத்தும், சூரிய உதயத்திலிருந்து பூஜைகள் செய்தால் சந்திராஷ்டம விளைவுகள் பெரிதும் தணியும்.
எனவே, அவரவருக்கு நடக்கும் மகா தசை, புக்தி, அந்தரத்தை அறிந்து கொண்டு, அதற்கு உரித்தான நவகிரக சக்கரத்தை வைத்து வழிபடுவதால் மிகவும் விசேஷமான பலன்கள் கிட்டும். சந்திர கிரக சக்திகள் வளர் பிறையில் சுப பலன்களையும், தேய் பிறையில் வினைகளின் விளைவாக வரும் அசுப பலன்களையும் தருவது இயல்பு. தேய்பிறையில் வினைகளின் தீய விளைவுகள் நம்மைத் தாக்காமல் இருக்க வேண்டுமென்றால், சந்திரச் சக்கரத்தைத் தேய்பிறையில் நன்கு வழிபட வேண்டும்.
எல்லாவற்றையும் சேர்த்து, சனிக் கிழமை அன்று சனீஸ்வரரே வழிபடும் சிவலிங்கத்தை (கும்பகோணம் அருகே சோழபுரத்தில் உள்ளது) சனிக்கிழமை தோறும் அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபடுதல், தசா, புக்தி, அந்தர கிரகப் பூஜா பலன்களை ஒரு சேர அளிக்கின்றன. இங்கு மேற்கண்ட வகையில் சனிக் கிழமைதோறும் ஆலய வளாகத்தில் அன்றைய நாளின் கிரக சஞ்சாரச் சக்கரத்தைப் பூக்களால், பச்சரிசி மாவால் பெரிதாக வரைந்து அந்தந்த கிரகக் கட்டத்தில் அந்தந்த கிரகத் தானியங்களை நிரப்பிப் பக்தர்களைக் கிரகச் சக்கரத்தை வலம் வரச் செய்தல் அரிய, அற்புதமான வழிபாடு அன்றோ!

பைரவ தந்திரம்

தந்திரம் என்றால் மாய, மந்திர விளையாட்டுக்கள், சாகசம் எனத் தவறாகத் தற்காலத்தில் தவறாகப் பொருள் கொள்ளப்படுகின்றது. உண்மையில் தந்திரம் தோன்றும் தாந்த்ரீகம் என்பது அற்புதமான உத்தமத் தெய்வீக நிலைகளை அளிக்க வல்ல அரிய யோகமும், மந்திர சக்திகளும் பிணைந்த தெய்வீக சாதனைகளைக் குறிப்பதாகும். ஸ்ரீகிருஷ்ண பரமாத்வா இதற்கான நல்வரங்களை அருள வல்லவர்.
உதாரணமாக, ஸ்ரீவித்யா தாந்தரீக சக்திகளில் கரை கண்டவரே கலியுக மஹரிஷியான ஸ்ரீபாஸ்கரராயர் ஆவார். ஆனால், தற்போது தாந்த்ரீகம், மாந்த்ரீகம் என்றாலே இவற்றைப் பற்றித் தவறாக அபிப்பிராயங்களே நிலவுகின்றன. இதற்குக் காரணம், அரைகுறையாகப் பலரும் சிலவிதமான மந்த்ர சக்திகளைக் கற்றுக் கொண்டு, தவறான முறையில் பயன்படுத்தி வருவதாகும். மந்திரப் பிரயோகம் தவறானால், பிரயோகிப்பவர் மீதே சாப வினைகளாகப் பாய்ந்து விடும்.
பைரவ தந்திரம் என்பது மிகவும் அரிய தெய்வீக மார்கமாகும். கடினமானதெனினும், அளப்பரிய உத்தம நிலைகளை, நல்வரங்களாக அள்ளித் தருவதாகும். இதனைப் பைரவ பூமி எனப்படும் (காரைக்குடி அருகிலான) திருப்பத்தூர், காசி போன்ற தலங்களில், பைரவ மஹரிஷி, கால மஹரிஷி வழிவந்தவர்களால்தாம் உபதேசப் பூர்வமாகப் பெற்றுப் பயில முடியும். பைரவ தந்த்ர சக்திகளில் ஒன்றே மல, மூத்ராதிகளைக் கடந்த தேக நிலையாகும். பூண்டி மஹான் பைரவச் சித்த நெறிகளில் வல்லவர்.  

கருப்பத்தூர் அஷ்டலட்சுமி திருத்தலம்

நம் உடலை யோகப் பூர்வமாக, தண்டம் என உரைப்பர். சில பீடாதிபதிகள் அரிய சில (வேதசக்தி) விருட்சங்களால் ஆன மரத்தாலான தண்டத்தைத் தாங்கியே நடத்தல் வேண்டும் என்ற ஆசார நியதி உண்டு. உத்தமப் பீடாதிபதிகள் தம் தண்டத்தைக் கீழே சார்த்தினாலே தேகப் பூர்வமான நமஸ்கார சக்திகளைத் தர வல்லதாகும்.
தண்டமாகிய தேகத்தைச் சுத்திகரித்து, புனிதப்படுத்தி, சிவானுபவத்தை அளிப்பதால், காசியில் பைரவருக்குத் தண்டபாணி என்று பெயர். தமிழகத்தின் தண்டபாணித் தெய்வமான முருகப் பெருமானும், ஸ்ரீகால பைரவரை வழிபட்டே பல அற்புதமான (கந்த) புராண லீலைகளை அன்றும், இன்றும், என்றுமாய் ஆற்றி அருள்கின்றார். தண்டபாணியாக முருகன், திருத்தண்டம் தாங்கி அருள்வதில், இத்தண்டத்தை மால்மருகனுக்கு அருளியவர் பைரவ மூர்த்தியே! இதனால்தான் தண்டபாணி வடிவ முருகன், ஞானதண்ட சக்திகளை அருள வல்லவராவார்.

ஸ்ரீதண்டபாணி திருச்சுழி

ஒரு கோயில் வளம் பெற, உற்சவங்கள், பூஜைகள் நிலைத்து நடைபெற, நிலபுலச் சொத்துக்களை நம் மன்னர்கள், முன்னோர்கள் தான, தர்மமாக அளித்துள்ளனர். அதாவது தண்டம் நிலைத்து நிற்பது போல, கோயில் பூஜைகள் நிலைத்து, சாசுவதமாக நடைபெற்றிட, ஸ்ரீகாலபைரவ வழிபாடு மிகவும் அத்யாவசியமானது. இதனால்தான் ஆலயங்களில் முதல் வழிபாடும், அர்த்தஜாம இறுதி வழிபாடும் ஸ்ரீகாலபைரவருக்கு உரியதாகிறது. எனவே, கோயில் நிலங்கள், வீடுகள், நந்தவனங்கள் இவை நன்கு பாதுகாப்புப் பெற ஸ்ரீகாலபைரவ பூஜைகளை நன்கு ஆழ்ந்த சிரத்தையுடன் ஆற்றி வருதல் வேண்டும்.
கோயில் சொத்தக்களை அனுபோகம் செய்வோர் முதலில் கோயில் நிலதேவதைகளின் அனுகிரக சக்திகளை பெறுதல் வேண்டும். ஏனெனில், நிலதேவதைகளுக்குக் கோயில் நிலங்களைக் காக்கும் தேவ பொறுப்புகள் உண்டு. இவற்றையும் மீறி, கோயில் சொத்துக்களுக்கு முறையான, நியாயமான வார நெல் அளிக்காது, குடக்கூலி, வாடகை தராது ஏமாற்றுபவர்கள், முதலில் இத்தகைய தேவதைகளின் சாபங்களுக்கு ஆளாகி, சந்ததிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப் பெறுவர்.
நகர, கிராமக் கோயில்களில், கோயில் நிலங்களை, இடங்களை ஆக்ரமித்து ஏமாற்றுபவர்கள் எத்தனை காலம்தான் ஏமாற்ற முடியும்? எல்லாவற்றிற்கும் ஒரு வரம்பு உண்டு அல்லவா! பூர்வ ஜன்மங்களில் அதே ஆலயங்களில் எதையும் எதிர்பாராது அறப் பணி ஆற்றியவர்களே, பெரும்பாலும் இவ்வகைக் கோயில் சொத்துக்களை வாடகைக்கு, குத்தகைக்கு எடுப்பதாகிறது. அவர்கள் கோயிலுக்குப் பூர்வ ஜன்மங்களில் ஆற்றிய திருப்பணிகளின் புண்யசக்திகள் கரையும் வரை இவர்களுடைய வாழ்க்கை சுகமாக ஓடும், அதுவரையில் ஆலய நிலதேவதைகள் இவர்களுடைய பூர்வ ஜன்ம புண்ய சக்திக்கு மதிப்பு கொடுத்து விட்டு வைப்பார்கள். புண்யசக்தி சக்தி கரைந்தாலோ, உடனடியாக தேவதா சாபங்கள் பலிதமாகி, சொல்லொணாத் துயரங்கள் சூழலாகி, வம்சத்தையே வருத்தலாகும். அடுத்த ஜன்மங்களில் அதே கோயிலில் பலத்த பிணிகளுடன், பிச்சைக்காரர்களாகக் கையேந்தி நிற்கின்ற நிலை ஏற்படும்.
இவற்றிலிருந்து மீள, ஸ்ரீகாலபைரவ வழிபாடுகளை ஆற்றி, ஒன்றுக்குப் பன்மடங்காக எவ்வகையிலேனும் ஆலய பாக்கிகளைச் செலுத்திப் நல்ல திருப்பணிகளாயும் பன்மடங்காயும் ஆற்றித் தர வேண்டும்.
அக்காலத்தில் தினமுமே பைரவரின் முன் ஆலயக் கணக்குகளைப் படிப்பார்கள். இதனை மீண்டும் நடைமுறைப் படுத்திட வேண்டும். இவ்வகையில்தான் ஆலயச் சொத்துக்களைப் பற்றிய அக்கறை, கவனம் பயபக்தியாக வந்து சேரும். எனவே ஆலயச் சொத்துக்களை அதர்மமான முறையில் அனுபவிப்பவர்கள் காலபைரவரின் சினத்திற்கு ஆகி விட்டால் காலச்சக்கரத்தில் சிக்கித் தவிக்க வேண்டியதுதான்.
பல மஹரிஷிகளும் தவமிருந்து காலபைரவரின் வாகனமாகின்றனர். வாகனமில்லாது அருளும் பைரவர் ஆதிமூர்த்தி பைரவராவார். பைரவ மூர்த்தி போல அவருடைய வாகனத்திற்கும் பெயர் உண்டு.
தற்போதைய கலியுகத்தில் பைரவ வழிபாடுகள் மிகவும் மங்கியுள்ளமையால்தாம் காலத்திற்கு எதிரான மிருத்யு தோஷங்கள், வன்முறை, தற்கொலை, பயங்கரவாதமாகப் பெருகி வருகிறது.
பைரவர் சிவனுடைய பரிபூரண அம்சம். சென்னை திருமயிலைக் கபாலியில் அருள்பவர் அஷ்டாங்க ருத்ர பைரவ மூர்த்தி.
நாய் வடிவு பைரவருடைய வாகனமாக விளங்குவதால், பல இடங்களிலும் நாயை தேவமரியாதை நிமித்தம் பைரவர் என்றே சொல்வர். அதாவது பல இடங்களில் பைரவ வாகனமாகிய நாய்க்கு பைரவர் என்ற பெயரும், பைரவருக்கு அஷ்டாங்க ருத்ரர், காபாலர் என்றுமாகப் பெயர்கள் அமையும். பைரவருடைய வாகனமாக நாய் வடிவு பூண்டு அமைபவர்கள் அரும்பெரும் சித்தர்களும், மஹரிஷிகளும் ஆவர் எனப் புரிந்து கொண்டால்தான், பைரவ வாகன மகத்துவம் பரியலாகும்.
குடும்பம் சகிதமாக ஸ்ரீகாலபைரவரை வணங்கக் கலியுகத்தில், தெய்வீக காரணம், லெளகீகக் காரணம், ஆன்மீகக் காரணம், பவித்ர ரகசியக் காரணங்கள் என நான்கு விதமான காரணங்கள் உண்டு.
ஆன்மீகக் காரணமெனில், கோயிலை வலம் வந்து வணங்குகையில், இப்பிறவியிலும், தற்போதும் கோயிலின் சொத்தை நான் ஒரு போதும் அனுபவிக்கவில்லை, அனுபவிக்கத் துணை போகவில்லை, எனச் சங்கல்பமாக உரைத்தலாகும். இதில் மேலும் பல விளக்கங்கள் உண்டு.

அடுத்ததாக லெளகீகக் காரணம். கோயிலுக்கு வருகையில் எத்தனையோ ஆசைகள், பார்வைகள், எண்ணங்களுடன் வந்திருக்கலாம். அவை நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். ஆனால் முறையான விருப்பங்கள் அமைவதில் தவறு கிடையாது. அது நிறைவேறுவதும், நிறைவேறாததும் கடவுளுடைய இஷ்டம், நம்முடைய முன்வினைக் கர்மங்களை அறியாததால், சுவாமியிடம் பொதுவாகக் கேட்கிறோம். உதாரணமாக, “எனக்கு ரொம்பவும் பணக் கடனாக இருக்கே! கடன் தீரணுமே சுவாமி!'' என்று கடவுளை வேண்டுகிறோம். இதில் ருணக் கடன் தீர்வுக்கான பிரார்த்தனைகள் பைரவரை அடையும். இதிலும் எண்ணற்ற விளக்கங்கள் உண்டு.
அடுத்தது ரகசியக் காரணங்கள். ஒருவருக்குத் துரோகம் செய்து விட்டு, வெளியில் சொல்ல முடியாது, உள்ளேயும் வைத்துக் கொள்ள முடியாத நிலை வரும். இது மனதைக் கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கும். அப்போது பைரவரிடம் மட்டும் வந்து, “இந்த மாதிரித் துரோகம் பண்ணி விட்டேன், இதற்கான தண்டனைக்கும் தயாராக இருக்கிரேன். இதுக்குப் பிராயச்சித்தம் தந்து ஏதாவது ஒரு விதத்தில் கருணை செய்வாயாக!'' என வேண்டி வர, அவரவர் சரணாகதி நிலைக்கு ஏற்ப, வாழ்வின் ஒரு மூலையில் அதற்கு ஏதாவது ஒரு வழி பிறக்கும்!
அடுத்தது தெய்வீகக் காரணம். இதனை அறிய வேண்டிய முறையில் அறிதல் நலம்.  

மூன்றாலாவது மூவுலகு

காலசக்தியின் பாதமாகவும் திரிதியை விளங்குவதோடு, திதிகளுக்குள் பாத சக்திகளுடன் விளங்குவதால், திரிதியைத் திதி மிகச் சிறமந்த சுபமுகூர்த்தத் திதிகளுள் ஒன்றாகவும் பரிமளிக்கின்றது. ஸ்திர லக்னம் கூடிய திரிதியைத் திதி முகூர்த்த நேரமானது, சுபஹோரைகளான சுக்கிர ஹோரை, புத ஹோரை, வளர்பிறைச் சந்திர ஹோரை சூழ அமைவது பிரமாதமான இல்லற வாழ்வைத் தர வல்லது.
திரிதியைத் திதிகளில் மூன்று, மூன்றாகத் துலங்குகின்ற முப்பரிணாமங்கள், முக்குணங்கள் சிறப்படைகின்றன. எனவே, முக்கனிகளாலான மாலை, முக்கனி நைவேத்யம், பஞ்சாமிர்தம் போன்று திரித்யாமிர்தம் (தினை மாவு, சர்க்கரை, நெய்) படைத்தலும் முக்குணங்களையும் சீராக்கித் தரும். கோப உணர்ச்சிகளும் தணியும். கோபத்தால் ஏற்பட்ட தகாத விளைவுகளை அகற்றும்.

ஸ்ரீபஞ்சமுகத்தோன் ஓதிஆண்டவர்
ஓதிமலை

ஆந்த்ரம் என்றால் அழகானது, தெய்வீகமாக மிளிர்தல் எனப் பொருள். திதிகளில் அழகு வாய்ந்தது ஆந்தோளனத் திரிதியை ஆகும். கலியுகத்தில் அழகு என்பது முக அழகாக, உடலை ஒட்டியதாகத் தவறாக அர்த்தம் கொள்ளப்படுகின்றது. முக அழகு நிறைவான நிலைத்த அழகாகாது. இதில் திருமகள் கடாட்சமும் நிறைய வேண்டும். இதனால்தான் கிருத்திகையில் தோன்றிய முருகனை அழகுத் தெய்வம் எனப் போற்றுகின்றனர். பாரதியாரும் ஆந்திர மொழியைச் சுந்தரத் தெலுங்கு என்று போற்றுகின்றார்.
சுந்தர வதனம், சுகுந்த குந்தளாம்பிகை, சுந்தரேஸ்வரர், சுந்தர வல்லி என்ற பெயரில் அருளும் மூர்த்திகளைத் திரிதியைத் திதித் தோறும் வழிபடுதலால், தான் அழகாக இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்வோர், தக்க முறையில் மனத் தீர்வுகளைப் பெறுவர். தன் பிள்ளைகள் அழகாக இல்லையே, திருமணம் எப்படி ஆகுமோ தெரியவில்லையே என ஏங்குவோர் மனம் சாந்தமடைய நல்வழிகளும் கிட்டும்.
சுக்கிர மூர்த்தியும், சந்திர மூர்த்தியும் ஜாதக ரீதியாக அழகுத் தன்மைகளை அளிக்கின்றவர்களாவர்.   
கலியில் அழகு என்பது ஆபத்தைத் தருவதாக உள்ளதால், அழகாக இருப்பவர்கள் திரிதியைத் திதி தோறும், சுந்தர வதனம், சுகுந்த குந்தளாம்பிகை, சுந்தரேஸ்வரர், சுந்தர வல்லி போன்ற மூர்த்திகளுக்குப் பட்டு வஸ்திரம் சார்த்தியும், பஞ்சாமிர்தக் காப்பு இட்டு வழிபட்டும் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்ரீசந்திர பகவான்
மானாமதுரை

கார்த்திகைத் தினங்களில் முருகன் வேதகாத்ர சக்திகளுடன் இனிமையாக அருள்வதால், இந்நாளில் பஞ்சாமிர்த அபிஷேகம் நல்ல பலன்களைத் தருகின்றது. தெய்வீகப் பேரழகு நிறைந்த கிருத்திகை தேவி, திரிதியை திதி தோறும் சந்திர மூர்த்தியுடன் சேர்ந்து பலவிதமான வடிவுகளில் முருகனைப் பூஜிப்பதால், திருமுருகனின் ஐந்து வகை வடிவுகளைப் பஞ்சாமிர்தக் காப்புடன் தரிசித்தல் மிகவும் விசேஷமானதாகும். (தண்டபாணி, வள்ளி, தேவானை சகிதம், ஒரு முகத்தோன், நாலு முகத்தோன், அறுமுகத்தோன், சோமாஸ்கந்தன் என்றவாறாக).
மேலும் திரிதியைத் திதி தோறும், (இத்திதியில் அபூர்வமாக மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாள் அமையும்) ரோஹிணி கார்த்திகைத தேவியருடன் சந்திர மூர்த்தி அருளும் தலங்களில் (மதுரை, மானாமதுரை) வழிபடுதல் தம்பதியரிடைய நல்ல மன ஒற்றுமையை பேணித் தரும்.
முருகன் என்றால் இனிமையான், அமிர்தம் போன்ற என்ற பொருளும் உண்டு. பாற்கடலில் திரண்ட அமிர்த சக்திகளில் மூன்று வகை அமிர்தங்கள் பூவுலகிற்கென ஆந்தோளனத் திரிதியை எனும் நாளில் மத்ஸ்யப் பெருமாள் மூர்த்தி மூலம் ஒரு பானையில் பராசரரிடம் அளிக்கப்பட்டது. இதனை பவானித் தலத்தில் பெருமாளே பராசரரிடம் அளித்தார்.
எனவே, திரிதியைத் திதியில் மலைத் தேன், பாறைத் தேன், பூத்தேன் என்று மூன்று வகைத் தேன் வகைகளால் மச்ச மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுதலும், மால் மருகனின் அருளையும் சேர்த்துத் தரும். குறிப்பாக, நிறைய பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் இதனை ஆற்றி வருதல் விசேஷமானதாகும்.
மும்மூர்த்தி விநாயகர், மூன்று பைரவர்கள், சந்திரர் - ரோஹிணி-கார்த்திகை, பூமாதேவி, நீளாதேவி சமேதப் பெருமாள் போன்று மூன்று மூர்த்திகள் சேர்ந்தருளும் தலங்களில், திரிதியைத் திதி தோறும் பூஜிப்பதால், உத்தமம், மத்திமம், அதமம் ஆகிய மூன்று நிலைகளையும் உணராமல், தவறாகப் பூஜித்தலுக்கும், தவறாகக் காரியங்களை ஆற்றியதற்கும் தக்க பரிகாரம் கிட்டும்.

ஸ்ரீசீதாதேவி ராமச்சந்திர மூர்த்தி ஜனன ஜாதகங்கள்

திருமணப் பொருத்ததங்களில் மிகவும் முக்கியமான 10 வகைப் பொருத்தங்கள் உண்டு. இதன் பிறகு ஜாதக ரீதியாவும் பொருத்தம் பார்த்தல் வேண்டும். 108 வகைப் பொருத்தங்களுடன் அமைந்ததே ஸ்ரீராமர், சீதா தேவி திருமணமாகும். ஸ்ரீராமரின் ஜாதகத்தைப் பலரும் தரிசித்திருப்பார்கள். சீதா தேவி ஜாதகம் கிடைப்பதற்கு அரிதே! ஸ்ரீராமருடைய ஜாதகத்தை ஒரு முக்காலி, முக்கனிகள், முக்கோண வகைப் பச்சரிசி கோலங்கள் ஆகிய மூன்று வருவதான எண்வகைத் தளத்தில் வைத்துப் பூஜிப்பது விசேஷமானதாகும்.

திருகோகர்ணம், புதுக்கோட்டை

மூன்று வீதிகள் சேரும் இடத்தில் வீடு அமைவதில் முச்சந்தி தோஷங்கள் உள்ளன என்பது உண்மையே. இதற்குப் பரிகாரமாக முச்சந்தியில் வெறுமனே பிள்ளையாரை வைத்து விட்டால் போதுமா? விநாயகரைப் பட்டினியாகக் கிடக்க வைக்கலாகுமா? தினமும் உணவு படைத்துப் பூஜிக்க வேண்டாமா? முச்சந்தியில் அமையும் விநாயகரைத் தினந்தோறும் பூஜிப்பதுடன், திரிதியைத் திதி தோறும் முக்கனிகளால் மாலை சார்த்தி, குங்கிலியம், சாம்பிராணியுடன், முப்பது மூலிகைகள் கலந்த, சந்தன நறுமணப் பவுடர் சேர்த்துத் தூபமிட்டு வழிபடுதல் வேண்டும்.
ஆந்தோளனத் திரிதியை நாளில், மும்மூர்த்திப் பிள்ளையார் மூர்த்திகள், துர்க்கா லட்சுமி, சரஸ்வதி, மூன்று விநாயகர் சந்நதி உள்ள தலங்களில் மூன்று வேளைகளிலும் வழிபடுவதால், கண், காது, மூக்கு சக்திகள் நன்கு நிலை பெற்றுத் துலங்க அருள் கிட்டும். கூவம், அட்சரப் பாக்கம், திருகோகர்ணம், மற்றும் காமதேனு வழிபட்ட தலங்களான திரிபுராந்தக சக்தித் தலங்களில் தரிசிப்பது விசேஷமானது. பிறரிடம் கொண்டுள்ள துவேஷங்கள் நீங்கிட உதவும்.
திரிதியை அன்று மீன்கள் நிறைந்த தடாகத்தில், உத்தம மனுவிற்கு 3, 21, 30, 30 என்ற மூன்றின் எண்ணிக்கையில், நின்ற நிலையில் அர்க்யம் அளித்து, மீன்களுக்குப் பொரியிட்டு வணங்குதல் விசேஷமானது. முருகத் தலங்களிலும், திருமால் தலங்களிலும், மீன்களுக்கு உணவிடுதலாலும், பிறரைப் பழிவாங்க வேண்டும் என்ற துர்எண்ணம் தணியும்.

அருள் தரும் அட்சர சக்திகள்

"கோ'' என்ற எழுத்து மனித சமுதாயத்திற்கு அருள் புரியும் அற்புத பீஜாட்சர சக்திகளைக் கொண்டுள்ளது. மனித வாழ்வில் தினமும் உலகெங்கும் நிச்சயமாகப் பயன்படுத்த வேண்டிய சப்தத்தில் "கோ'' வகை தினமுமே நிச்சயமாக அமையும். தமிழில் உள்ள பண்டைய வார்த்தைகள் யாவும் அற்புத பீஜாட்சர சக்திகளைப் பெற்றுள்ளன. இவைதாம் தேவார மறைகளில் இறையொளியை, மறையொலியாக அளிக்கின்றன.
கோயில் தரிசனம், கோ பூஜை, கோமுக பூஜை போன்றவை தினமுமே ஆற்றப் பெற வேண்டியவை! கோமுகம் என்பது நாகவளிப் பூஜைப் பாங்கும் ஆகும். திருப்பதியில் கோமுகம் பல அற்புதப் புராண வரலாறுகளைக் கொண்டது.
சில ஆலயங்களில் கோமுகத்தில் பல அற்புத வடிவுகள் பொறிக்கப்பட்டு இருக்கும். இவை தினமுமே தேவர்களால் பூஜிக்கப் பெறுபவையாகும். நாகங்கள் நமது பூமியில் தினமுமே சஞ்சரித்தாக வேண்டும். நாகங்களை அநாவசியமாகக் கொல்லக் கூடாது. வேறு எந்த விலங்கினத்திற்கும் இல்லாத வகையில், இறந்த நல்ல பாம்பிற்கு மனிதனே பால் ஊற்றிப் புதைக்கும் பூஜை நிகழ்வதே நல்ல பாம்பின் தெய்வீகத் தன்மைகளைக் குறிப்பதாகும்.

ஸ்ரீஅஸ்தீக சித்தரே நாக வம்சக் குலகுரு ஆவார். முற்காலத்தில் புதிதாகத் தோட்டம், நிலப் பயிர் அமைப்பவர்கள் முதலில் நாகபூஜை நிகழ்த்தி, நிலத்தில் நாக நடமாட்டத்திற்காகச் சில காலம் விட்டு வைப்பார்கள். இதற்கு நாகவிரதம் என்று பெயர். எனவே நாகங்களின் நல்வாழ்வே நமக்கு நல்வரங்களைத் தரும். வருடத்திற்கு ஒரு முறையாக, நாகபஞ்சமி நாளில் மட்டுமே என்றல்லாது, இருவாரத்திற்கு ஒரு முறை வரும் பஞ்சமித் திதி தோறும் நாகப் பூற்றுப் பூஜை, புற்றுத் தரிசனம் ஆற்றிட வேண்டும்.
செவ்வாயன்று வரும் அங்காரகச் சதுர்த்தியில் சில வகை நாகங்கள் நான்கு தலைகளுடன் பிள்ளையாரைப் பூஜிக்கின்றன. இதன் பலாபலன்கள் பிள்ளையார் சந்நதியின் கோமுக சக்திகளாக வெளிப்படும். எனவே அங்காரக சதுர்த்தி அன்று விரதமிருந்து விநாயகர் சந்நதியில் அபிஷேகப் பூஜைகளை ஆற்றி, கோமுகத் தீர்த்தத்தை அருந்தி, விரத நிறைவு கொள்வது விசேஷமானது. மேலும் புற்று வகை மூர்த்திகளை வழிபடுதல் நாகேஸ்வர தரிசனப் பலன்களைத் தரும். இதனால் மனதில் எழுந்த, எழும் விஷத்தனமான எண்ணங்கள் மாறுபடத் தக்க ஜபவழிமுறைகள் தக்க பெரியோர்கள் மூலம் கிட்டும்.

ஐந்து வகை பண தோஷங்கள்

ஒரு போதும் பணத்தால் துன்பம் வருவது கிடையாது. பணம் வரும், வந்த விதத்திலும், பணத்தைச் செலவழிக்கின்ற விதத்திலும், பணத்தால் செய்த காரியங்களில் விளையும் வினைப் பலன்களாலும் ஏற்படும் துன்பங்ளே பணத்தால் வருவன போல் தோன்றுகின்றன.
பண வகைக் கஷ்டங்கள் தீரும் முன்னர், முதலில் இவற்றுக்கான கர்ம வினை பாக்கிகள் தீர்தல் வேண்டும். இவற்றை முதலில் தீரப் பட வேண்டியதாக உணர்விப்பதே லக்ஷ்மீ ஸ்ரீபஞ்சமி தினப் பூஜையின் தாத்பர்யமாகும்.
ஐந்து திருமகள் அவதாரங்கள் ஒருமித்து அருளும் தாயார் அம்சமே சென்னை திருநின்றவூரில் அருளும் என்னைப் பெற்ற தாயார் எனும் திவ்யமான, மதுரமான, அமிர்தமயமான, இனிமையான பெயரில் அருளும் தாயார் ஆவாள்! தாயைத் தெய்வமாகப் போற்றி வாழ்வோர் இங்கு பஞ்சமித் திதி தோறும் பூஜித்து வர, பெற்ற தாய் மனங் கனிந்து இச்சன்னதியிலேயே (சூக்குமமாக, தூலமாக) வந்து வாழ்த்திடுவாள்.

தாயைத் தெய்வமாகப் போற்றி வாழும் தெய்வீக வாய்ப்பினை இப்பிறவியில் இழந்தோறும்,
இத்தகைய அரிய பாக்யத்தைப் பெறாதோர், இக்குறைகள் தீரும் நல்வழிமுறைகளை இப்பிறவியில் ஓரளவேனும் பெறவும்,
தம் பிள்ளைகள் தந்தையும் தாயும் முன்னறி தெய்வம் எனப் போற்றுமளவு, உத்தமப் பெற்றோர்களாக இனியேனும் துலங்கிட விழைவோரும்,
திருமகளாகிய லக்ஷ்மீ எப்போதும் சாசுவதமாக நிலைத்து நின்று "என்னைப் பெற்றத் தாயாராக'' அருளும் திருநின்றவூரில், பஞ்சமித் திதி தோறும் அபிஷேக, ஆராதனைகள் ஆற்றி, இயன்ற தான, தர்மங்களுடன் வழிபட்டு வருதல் வேண்டும்.
இத்தலத்தில் பஞ்சமித் திதி வழிபாடு, மேற்கண்ட ஐவகைப் பணவகைக் கஷ்டங்கள் ஏற்படக் காரணமான மூலக் கர்ம வினைகளையும் நிவர்த்தி செய்து தருவதாகும்.
லக்ஷ்மீ ஸ்ரீபஞ்சமி விரதம், இவ்வாறாக, பணவினைக் கர்ம வினைகள் தீர உதவும்.
பணம் என்பது மாயையாகவும், புண்யத்தால் கிட்டுவதாகவும், நல்வினைகளின் (நற்காரியங்களின்) புண்ணியப் பலனாகவும் விளக்கப்படுகின்றது. பணச் செல்வத்தை லக்ஷ்மி கடாட்சமாகப் பெற்றால்தான் செல்வமானது நிலைத்து நிற்கும். இதற்கு உதவுவதும் லக்ஷ்மீ ஸ்ரீபஞ்சமி விரதம்.
சூது, பேராசை, ஆடம்பரச் செலவுகள், அதர்மமான முறையற்ற கேளிக்கைச் செலவுகள், ஆபாசமான திரைப் படத் தயாரிப்பு, குதிரைப் பந்தயம், ஏமாற்றுதல், லாட்டரி போன்ற தீயனவற்றின் காரணமாகப் பணக் கடன் ஏற்பட்டால் தீர்ப்பது கடினமே! நியாயமான செலவுகள், மருத்துவ சிகிச்சை, கல்வி, முறையான வியாபாரத் துறைக் காரியங்கள் போன்ற வகையில் ஏற்படும் கடன்களே தக்கப பரிகாரங்களால் தீர்க்க வல்லவையாகும்.
லக்ஷ்மீ ஸ்ரீபஞ்சமி அன்று அஷ்ட லக்ஷ்மிகளின் தரிசனம் விசேஷமானது. சிவாலயங்களில் ஐந்து லக்ஷ்மீ மூர்த்திகளைத் தரிசித்தல் அஷ்ட லக்ஷ்மிகளின் தரிசனப் பலன்களைத் தரும்.
குளித்தலை அருகே கருப்பத்தூர் சிவாலயம், சிறுகமணி சிவத்தலம், உடையாளுர் போன்ற தலங்களில் அஷ்ட லட்சுமிகளின் தரிசனத்தைப் பெறலாம்.

நாக தோஷமா
அஞ்ச வேண்டாம்

நாக சம்ரட்க கோமுகி என்று ஒரு வகை நாக மூர்த்திகள் பற்றி நாம் பல விளக்கங்களை அளித்து வந்துள்ளோம். சூரிய மூர்த்தி மேஷ ராசியில் சஞ்சரிக்கையில் சூரியத் தேரோடு அவை பூமிக்கு வருகின்றன. இவை கோமுக வழிபாடுகளில் வல்லவை! இவைதாம் அம்பிகையரின் விரல் மோதிரங்களாக அமைந்துள்ள நாகதேவ மூர்த்திகள் ஆவர்.
பொதுவாக, மேஷ லக்னத்தில் சுப முகூர்த்தங்களை வைப்பதில்லை. மேஷ லக்னமானது சில வகை பூமி சம்பந்தப்பட்ட நாகதோஷங்களை நீக்க வல்ல பூஜைகளுக்கு ஏற்றதாகும். மேஷ லக்ன நேரத்தில் நாகலிங்கப் புஷ்பத்தால் பூஜிக்க வேண்டும். இதற்கு அக்னியாகிய பசியை எழுப்பும் குணம் உள்ளதால், ஒவ்வொரு நாகலிங்கப் புஷ்பத்தைச் சார்த்தும் போதும் குறைந்தது ஒருவருக்காவது அனனதானம் அளித்துப் பசிப் பிணி தீர்க்க வேண்டும்.
எவ்வாறு விஷத்தை எடுப்பதற்காக, விஷமுறிவு மருந்திற்காக, நாகவிஷம், ஊமத்தை, வைரம் போன்று பல்வகை விஷங்கள் பயன்படுகின்றனவோ, இதே போல, பூமியில் அவ்வப்போது ஏற்படும் விஷசக்திகளை முறிக்கவே, நாகசம்ரட்சக குல நாகங்கள் பூமிக்கு குறித்த மேஷ லக்ன காலங்களில் வருகின்றன. இவை தங்கும் புனிதமான இடங்களும் உண்டு. எவராலும் இந்நாகங்களையும் தொடவோ, ஸ்பரிசிக்கவோ முடியாது. சூரியத் தேரோடு சேர்ந்து வருவதெனில் என்னே இவற்றின் உஷ்ணம்! இவை பூமிக்கு வந்தால் எவரையும் தீண்டுவதில்லை! ஏனெனில் தீண்டாத் திருமேனிகளை உடையவை! ஆனால் நாக வடிவில் இருப்பதால் இவை எவரையும் தீண்டா என்று சொன்னாலும் எவரும் நம்ப மாட்டார்கள். அவற்றை மக்கள் அறிந்தால், அவற்றின் அருகே செல்ல மாட்டார்கள் என்பதால் இவை தங்கும் இடத்தை உரைப்பதில்லை! .
அம்பிகையின் திருவிரல்களில் இருந்து நேரே சூரியத் தேரை இவை அடைந்து வானப்பூர்வமாக பூமிக்கு வரும். ஆலய கோமுகம் போன்ற குறித்த இடங்களில் தங்கும். இவை பறக்க வல்லவை! மரத்தில், நீரில், நெருப்பில், பூமியினுள் எங்கும் புக வல்லவை! பொதுவாக முதுகுத் தண்டை நாக வடிவாக, யோகத்தில் கூறுவதால், உத்தம யோகியர்க்கு இவற்றின் தரிசனம் கிட்டும். யோகியர்க்கு இவை உதவும். ஏனெனில் யோகப் பூர்வமாகக் கர்ம வினைகளை பஸ்மம் செய்யும் வழிமுறைகள் உண்டு. நாகாசனம் என்ற ஒன்று உண்டு. இது நாகலிங்க மரத்தின் அடியில் ஆற்றப் பெறுவது.

நாகலிங்கம்

இயற்கையாக நாக வடிவும், லிங்க வடிவும் இருக்கின்ற நாகலிங்க மரம் ஓர் அற்புதப் படைப்பு. நாகலிங்க மரத்தில் நல்ல நாகதேவதா மூர்த்திகள் வந்து தங்குவர். நாகவிஷத்தை முறிப்பதற்கு நாகத்திலிருந்தே விஷமுறிவு மருந்தை எடுக்கும் போது, நாகலிங்கப் பூக்களை வைத்து அன்னதானம் செய்து, நாக தேவதைகளை வழிபட வேண்டும்.
இதே போல தீய எண்ணங்கள், தீய செயல்கள் காரணமாக, மனித உடலில் ஏற்படுகின்ற, பரவுகின்ற விஷப் படிவுகளை நீக்கிட, நாக வழிபாடு அனைவருக்கும் தேவையே! விடமுள்ள பாம்பு, விடமில்லாப் பாம்பு என்பதை பாம்பு வருகையில் மந்திரப் பூர்வமாக, வாசனை மூலமாகவே அறிந்திடலாம். இதனையும், நாகவிடத்தை நோய் நிவாரணங்களுக்கும் பயன்படுத்துகின்ற மருத்துவக் கலையையும் மலைவாழ் மக்கள் நன்கு அறிவர். ஆனால் இவை மூலிகா ரகசியங்களுக்குள் அடங்கும். எளிதில் வெளி வராது.  
நாகாபரணம். நாகப் பூணல், நாக ஒட்டியாணம், நாகக் கொண்டை போன்ற தேவ ஆபரணங்கள் உண்டு. இவை நாகங்களை நன்முறையில் வாழ வைக்கும். நாக தோஷங்களை அகற்றி, சந்ததிகளைப் பெற வைக்கும். ரங்கநாதப் பெருமாள் பாம்பணையில் பள்ளி கொள்பவர் தாமே! எனவே மேஷ சக்திகள் நிறைந்த நாகபாண நாளன்று பாம்பணை மூர்த்திகள் தரிசனம் விசேஷமானது.
சிவபெருமான் திருமேனியில் ஒவ்வொரு நேரத்தியிலும் தவழ வேண்டிய நாக வகைகள் உண்டு. இவை கரண நேரத்தை ஒட்டி மாறும். எனவே நாக வழிபாட்டிற்குக் கரணமும் மிகவும் முக்கியமானதாகும்.
ஒளவையாரின் பரியோகப் பாடலான விநாயகர் அகவலில் மூலதாரத்தின் வழியாய் மூண்டெழு கனல் மூலம் காலால் எழுப்பிக் கருத்து அறிவித்து ... ' என்பதில் எண்ணற்ற யோகப் பாடங்கள் அடங்கி உள்ளன. நாகயோக சக்திகளும் இதில் அடங்கும். நல்ல பெரியோர்கள் மூலம் இதன் விளக்கங்களைப் பெறுதலால் அறிந்தோ அறியாமலேயே "உன்னைப் பாம்பு புடுங்க!'' என்ற வகையில் வாயில் விஷந் தெரிக்கப் பேசிய பகைமைத் தீவினை அகல நல்வழி கிட்டும்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam