முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

கிட்டாதது கிட்டும்

சங்கு வடிவத்தில் உள்ள யாவுமே ஓங்கார சக்திகள் நிறைந்தவை ஆவதோடு இறை வழிபாட்டுப் பலன்களை அபரிமிதமாக பெற்றுத் தருபவை ஆகும். மேலும் சங்கு வடிவத்தில்தான் சில அபூர்வமான சக்திகளை கிரகித்து நிலைத்து வைத்திருக்க முடியும். வான்வெளி மண்டலத்தில் இருந்து கிரகிக்கப்படுகின்ற மந்திரங்களை பூவுலகில் குறித்த அளவில், குறித்த காலத்தில் பயன்படுத்தாவிடில் அவை மீண்டும் வான் மண்டலத்திற்கே சென்று விடும். எவ்வாறு வெண்ணெயை வெளியில் வைத்திருந்தால் உருகி விடுமோ அதைப்போல சிலவிதமான மந்திரங்களை அதற்குரிய இடங்களில் திரவியங்களில் நீர்நிலைகளில் ஜடப் பொருட்களில் நிறைத்து வைத்தால்தான் அவை பூவுலகத்தில் தங்கிடும். இல்லையெனில் அவையவை தத்தம் லோகங்களுக்குச் சென்றுவிடும். இவற்றில் கண்ட சூர சக்தி மந்திரங்கள் எனப்படுபவை சங்கு வடிவ ஓங்கார ஒலி பிரதிபலிக்கும் வடிவங்களில்தான் நிறைந்திருக்கும்.

காரைக்குடி அருகே உள்ள மானகிரி ஸ்ரீதிருக்கண்டீஸ்வரர் ஆலயத்தில் சங்கு வடிவத்தில் ஒரு அபூர்வமான திருக்குளம் அமைந்துள்ளது. எந்தச் சங்கையும் காதில் வைத்துப் பார்த்தால் ஓங்கார பீஜாட்சரம் உள்ஆத்ம ஒலியாக எப்போதும் ஓங்கார ரீங்காரம் இட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் நன்றாகக் கேட்க முடியும். ஓங்கார பீஜாட்சரங்களிலும் வலஓட்டு, இடஓட்டு சக்திகள் உண்டு. வலம்புரிச் சங்கில் முதன் முதலாக ஓங்காரம் வலஞ் சுழியாகத் தோன்றியமையால் ஆதிமூல கணபதி ஓங்காரத்தின் முதல் வலஞ் சுழி தந்த ஆதி மூல வலம்புரி கணபதி என்பதால் வலஞ் சுழிச் சங்கை வலது காதில் வைத்து காலையில் தினந்தோறும் வலவோட்ட ஓங்கார ரீங்காரத்தையும் இடது காதில் இடம்புரிச் சங்கினால் ஓங்காரத்தின் இடவோட்டு ஓங்கார ரீங்காரத்தையும் கண்களை மூடிய நிலையில் அமர்ந்து கேட்டலால் எத்தகைய குழப்பங்களிலிருந்தும் சற்றுத் தெளிவுடன் பிரச்னைகளை சீராய்வு செய்கின்ற முதிர்ந்த மனோ நிலை கிட்டும்.
சப்த கன்னியர்கள் ஒரு புறம், சப்த மாதர்கள் ஒரு புறம் நின்று அம்பிகைக்கு வலம்புரி, இடம்புரிச் சங்குகளால் சங்கு வேத முழக்கம் இட்டு பூஜிக்கின்ற திருநாளே மகா சிவராத்திரித் திருநாளாகும். இதனால்தான் மாத சிவராத்திரியிலும் மகா சிவராத்திரியிலும் சங்கால் அபிஷேகம் செய்வது விசேஷம் பெறுகின்றது.
வீட்டில் சங்கை வைத்திருக்காதவர்களும் நல்ல வலம்புரி அல்லது இடம்புரிச் சங்குகளை நல்ல இடங்களில் வாங்கி சிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு 108 முறை சங்கால் அபிஷேகம் செய்து வழிபட்டு மகாசிவராத்திரி தினத்திற்குள் மானகிரி ஸ்ரீகண்டீஸ்வரரை சங்கு தீர்த்த அபிஷேகத்தோடு வழிபடுவதற்கான சங்கல்பத்தை மேற்கொள்ளுங்கள்.
சிவராத்திரி அன்று கோதுமை மாவு, அரிசி மாவு, வெல்லம் போன்று ஒவ்வொரு இல்லத்திலும் பல வகையான லிங்க வடிவுகளைச் செய்து, அபிஷேக ஆராதனைகளைச் செய்து, பூஜித்து மகிழ்வதால் தனக்குக் கிட்டாமல் பல வருடங்களாக ஏங்கி ஏங்கி வருகின்ற நற்பொருள் கிட்டுதல், நற்காரியம் நடைபெறுதலுக்கு ருத்ர பூமி பித்ருக்களின் ஆசீர்வாதம் பெருகி வரும்.

மூங்கில் தரும் முன்னேற்றம்

மாக அமாவாசையில் தோன்றியதே மூங்கில் தாவரமாகும். சதுரகிரி போன்ற மூலிகை மலைப் பகுதிகளில், மேலிருந்து 300 அடி ஆழத்தில் குஞ்சம் கதிர் என்ற மூங்கில் இனம் வளர்கின்றது. இந்த மூங்கிலில்தான் பண்டைய காலத்தில், ஆலயத்தில் சுவாமிக்குப் பல்லக்குகளைச் செய்வார்கள். இறைவனுக்காகவே படைக்கப்பட்டு வளர்வதால் வேறு எதற்கும் இதனைப் பயன்படுத்துவது கிடையாது. இந்தக் குஞ்சம் கதிர் மூங்கில் பல்லக்கில் மூங்கில் மாத்திரம் எப்படி வேண்டுமானாலும் வளையும், எவ்வளவு எடையையும் தாங்கும். சுவாமிக்கு பல்லக்குக்கு செய்வதற்கு, அம்பாரி செய்வதற்கு என வளையும் தெய்வப் பாங்கு உற்சவங்களுக்கு இது மிகவும் உதவும்.
இந்த மூங்கிலுக்கு மட்டும் எவ்வகையிலும் வளையும் தன்மை அபரிமிதமாக, அற்புதமாக வந்ததேன்? காரணம், அஷ்டதிக்குப் பாலகர்கள் பூஜிக்கும் பூமிப் பகுதியில் அவர்களுடைய ஆசீர்வாதத்துடன் விளைவதே ஆகும். இதனால்தான் இதற்கு விசேஷமான வளைவு சக்திகளைப் பெறுகிறது. இதில் இருக்கிற மூங்கில் அரிசியை மட்டும் இறைப் பிரசாதமாக உண்ணுகிறார்கள். இது கை, கால் மூட்டு சம்பந்தமான நோய்களுக்கு நிவர்த்திகளைத் தருவதாகும்.

லட்சுமி தீர்த்தம் திருநின்றியூர் சீர்காழி அருகே

இந்த மூங்கிலை அனைவராலும் பார்க்கவோ, எடுத்து வரவோ முடியாது, பூர்வ ஜன்ம முருக வழிபாட்டுப் புண்ய சக்திகள் நிறைந்த ஆதி மலைவாசிகள்தாம் நன்கு பக்தியுடன் வழிபட்டு, தக்கப் பூஜைகளை நிகழ்த்தி இவ்வகை மூங்கில்களை எடுத்து கொண்டு வந்து நன்கு பதனப்படுத்தித் தருவார்கள். இறைவனுடைய பல்லக்கு ஆக்குவதற்கான சுவாமி கைங்கர்யம் என்பதால் அவர்கள் இதற்காகப் பணம் எதையும் பெறுவதில்லை!
எனவே, அரிசி, கேழ்வரகு, எண்ணெய் போன்றவற்றைத் தான, தர்மமாக அவர்களுக்கு அளித்துத்தான் இவற்றைப் பெறுதல் சிறப்பானதாகும். இவ்வகை மூங்கில் வகைகளால் ஆவதே சில அரிய பூஜை சக்திகள் நிறைந்த மூங்கில் தம்ளர்கள் ஆகும். இவற்றால் அபிஷேகம் செய்தல், தர்ப்பணம் அளித்தல், நீர் அருந்தி வருதல் மிகவும் விசேஷமானதாகும். மூங்கில் தம்ளரில் நீர் அருந்தி வருதல் நல்ல ஆரோக்யத்தையும், குறிப்பாகச் சுமங்கலித்வத்தையும் தர வல்ல மிகவும் விசேஷமான சக்திகளைக் கொண்டதாகும்.
இத்தகைய மூங்கில் காட்டில் நாகங்கள் வாசம் அதிகம். எனவே அனைவராலும் போய் எடுத்து வர முடியாது. இவற்றைக் காணவே ஒரு மண்டல சூரிய பூஜையை ஆற்றிட வேண்டும்.

மூங்கில் தம்ளரை வைத்து சூரிய பூஜை நடத்துவது மிகவும் விசேஷமானது. கண் சம்பந்தமான நோய்களுக்கு நிவர்த்திகளைத் தர வல்லது. எனவே கண் டாக்டர்கள் தினமும் மூங்கில் தம்ளரால் அபிஷேக, ஆராதனைகளைச் செய்து வழிபட்டு வருவதால் நல்ல திறமையான சக்திகளைப் பெற முடியும்.
சூரிய மண்டலத்தில் ஞாயிறு தோறுமாக, நூறு நாழிகைகள் தொடர்ந்து மண்டல சூரிய பூஜை நடக்கும். சூரிய மண்டல நாள் கணக்கு வேறு. யுகத்துக்கு யுகம் நாள் கணக்கு மாறும். ராமாயணக் காலத்தில் சுமார் 180 நாழிகைகள் கொண்டது ஒரு நாளாகும். மேலும் வாஸ்து தோஷம் தீர மூங்கில் அம்சப் பூஜைகளை நிகழ்த்த வேண்டும். பூஜையில் எப்போதும் மூங்கில், சந்தனக் கட்டை, சங்கு சம்பந்தப்பட்ட ஒரு பொருள் இருந்தாக வேண்டும். இதில் தினமும் கங்கை, காவேரி அல்லது சப்த நதிகள் நீரை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

அமாவாசை திதி மூங்கில் சக்திகள் பூவுலகில் அபரிமிதமாகப் பரிணமிக்கும் நன்னாள். தர்ப்பணம், அபிஷேகம், மூங்கில் அரிசி ஆஹூதி, மூங்கில் தல மரமாக உள்ள ஆலயத்தில் பூஜை, கோயிலுக்கு மூங்கில் கட்டை தானம் என்பதாக இந்நாள் மூங்கிலை எவ்வகையிலேனும் பயன்படுத்திடுக!
இந்நாளில் மிகவும் முக்கியமான மூங்கில் வகைப் பூஜையை எவ்வகையிலேனும் ஆற்றிடுக! ஆலயத்தில் சுவாமியைச் சுமந்தாவது இதனை நிறைவேற்றிடுக!
மூங்கில் வகைப் பூஜைப் பலாபலன்களாக இனித் திருந்த முடியாது என்று நினைத்தோர், ஓரளவேனும் திருந்திடவும், இனித் திருத்திக் கொள்ள முடியாது என்ற வகையிலும் இருக்கும் கெட்ட வழக்கமும் ஓரளவேனும் அகலவும் நல்வழிகள் பிறக்கும்.

பற்களுக்குப் பாதுகாப்பு

முப்பத்திரண்டு பற்களும், 32 விதமான அறங்களை குறிக்கின்றன. பற்களுக்குரிய தந்த தேவதைகளும் உண்டு. அஷ்ட திக்கு தேவதைகள், நவகிரக தேவதைகள், பஞ்ச பூத தேவதா மூர்த்திகள், தசவாயு தேவதைகள் ஆகியவற்றையும் 32 பற்களும் குறிக்கின்றன. 32 பற்களில், ஒருவருக்கு எந்தப் பல் பாதிக்கப்பட்டுள்ளதோ, அதற்குரிய ஆன்ம சக்திகள் அவரிடம், மங்கியும் குறைவாகவும் உள்ளன என்பது பொருளாகும்.
மேலும் கீழுமாக 16, 16 ஆக இருப்பது ஈரெட்டு இருவோட்டு லோகங்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு பல்லும் வாழ்விற்கு மிகவும் முக்கியமானதே! 32 பற்களுடன் இறுதி வரை முழுமையாக வாழ்வதும், ஒரு நல்ல அனுகிரகமே! 32 பற்களுடன், 80 வயதைக் கடந்து நன்கு ஆரோக்யத்துடன் வாழ்வோரிடம், ஆயுள்காரக நாளான சனிக் கிழமை அன்று ஆசி பெறுவது சிறப்புடையதாகும்.
பற்களுக்கென இயற்கையான யோக சக்திகள் உண்டு. பத்மாசனம் இட்டு உடலுக்கு ஆகர்ஷண சக்திகளைப் பெறுவது போல, திருப்புகழைத் தினமும் ஓதி வருதல், வாய், நாக்கு, பற்களுக்கான அக்னி யோக சக்திகளைப் பெற்றுத் தரும்.

ஸ்ரீவலஞ்சுழி விநாயகர்
அவளிவநல்லூர்

தண்ணீரை நன்றாகக் காய்ச்சி வடிகட்டி ஆற வைத்து, வாரத்தின் ஏழு நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தினமும் துளசி, வில்வம், வன்னி, வேப்பிலை, விபூதிப் பச்சிலை, மா, வாத நாராயண இலை ஆகிய ஏழில் தினமும் ஒன்றை இட்டு, வசதி இருப்போர் உடலில் தங்க பஸ்ம சக்திகள் சேர, தங்க நாணயம் அல்லது மோதிரமும் இதனுள் வைத்து ஒரு நாள் ராத்திரி முழுதும், இதனை உத்தராணி மரத் தாம்பாளம் அல்லது தேக்கு மனை, மாமர மனையில் வைத்து அரிசி மாவினால் கோலம் போட்டு அதில் வாழை இலை வைத்து இதன் மேல் அரிசியை பரப்பி,
ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய என எழுதி அதன் மேல் தீர்த்தம் வைத்து,
மறுநாள் தீர்த்தம் அருந்தி வருவது பற்களுக்கும் உடலுக்கும் நல்ல ஆரோக்யம் தருவதாகும்.
வாயால் வருவது வல்லீய தேகம் என்பது போல நாக்கு, பற்களை வைத்துத்தான் மருத்துவர்களும் உடலின் மொத்த ஆரோக்யத்தைக் கணிக்கின்றனர்.
அனைத்து வகை மருத்துவத் துறையிலும், குறிப்பாக, பிஸியோ தெரபித் துறையிலும், கை, கால், மூட்டு வலி நிவாரணத்திற்கு இதனைத்தான் குறிப்பிடுகின்றார்கள். இதில் நீர் அருந்தும் முன் ஆற்ற வேண்டிய குந்தள முத்திரை, சாந்தக முத்திரைகளும் உண்டு.
ஜெம்மாலஜி எனப்படுவதான நவரத்தினத் துறையிலும் எந்த நாளில் எந்த வகைக் கல்லை நீரில் மேற்கண்டவற்றுடன் வைத்து அருந்தி வர வேண்டும் என்ற முறைகளும் உண்டு. இதனால் அபூர்வமான மனபலம், தேகபலம் உண்டாகும். நல்ல மன அமைதிக்கு இது வழி வகுக்கும். ஆங்கிலம் மருத்துவ மாத்திரைகளில் உருவாகும் பக்க விளைவுகள் வாழ்நாள் முழுதும் தொற்றிக் கொள்வதால் ஏற்படும் குந்தகங்களையும் ஓரளவு போக்க இது உதவிடும்.
மூதாதையர்கள், பிதுர் தேவதைகள் சாந்தி அடைவதற்கு இத்தகையத் தீர்த்த அர்க்யம், தர்ப்பணம் உதவும். இத்தீர்த்தத்தின் வழியாய் தர்பைச் சட்டம் இட்டு, அர்க்கியம், தர்ப்பணம் திவசங்கள் அளித்தால் அவர்கள் பெரு மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.
வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் வெளிப்புறப் பற்களுடன் காட்சி தரும் காளி போன்ற மூர்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் ஆற்றுவது அருகில் இருந்தே துரோகம் செய்வோரிடம் இருந்து காத்துக் கொள்ள உதவும்.
எனவே ஏழைகள் பற்களால் நன்கு கடித்து உண்ணக் கூடிய அளவில் கரும்பு, முறுக்கு, தேன்குழல் பேன்ற பண்டங்களையும் அளித்தல், பொக்கைவாய் அல்லது பல பற்களை இழந்தவர்களிடம், அவர்களுக்கு விருப்பமானவற்றைக் கேட்டு, அதனை வாங்கித் தருதல், பொடி செய்து தருவதும் விசேஷமான தர்ம சக்திப் பலன்களைத் தரும்.
பிறருடைய வசவுகளால் தினமும் அல்லல்படுவோர் மீண்டு நன்னிலை பெற இவ்வகை தருமங்கள் மிகவும் உதவும்.

காதருகே கருப்பை

காதில் மட்டும் ஆன்மப் பூர்வமாக, ஏழு ஆயிரம் நரம்பு நாளங்கள் உள்ளன. மிகவும் முன்னேறி உள்ளதாகக் கருதப்படும் மருத்துவத் துறையில் உள்ள மனித உடல் பற்றிய மருத்துவக் கல்வி விளக்கங்கள் மிகவும் சொற்பமே! மருத்துவக் கருவிகளுக்குப் புலப்படாத நுண் உறுப்புகள் நிறையவே உண்டு. தற்காலத்தில் எல்லாவற்றிற்குமே, உடல் பகுதிகளை ஸ்கேன் செய்கின்றார்கள். கர்பந் தரித்து ஓரிரண்டு வாரங்களே ஆன கர்ப்பிணிக்கும் கருப் பையை அடிக்கடி ஸ்கேன் செய்கின்றார்கள். இது மிகவும் தவறானது. கரு அமைப்பு, கரு வளர்ச்சி ரகசியங்கள் கோடி, கோடியாக உள்ளன. இவற்றில் ஒரு அரைக்கால் சதவிகிதத்தைக் கூடத் தற்கால மருத்துவம் அறியவில்லை!

ஸ்ரீஅகத்தீஸ்வரர் மருதாநல்லூர்

ஸ்ரீமுருகப் பெருமான்
மருதாநல்லூர்

கர்ப்பிணியின் கருப் பையை அடிக்கடி, நிறைய ஒளியைப் பாய்ச்சி ஸ்கேன் செய்வது கருவில் வளரும் சிசுவை மிகவும் துன்புறுத்துவதாகும். ஆன்மீக ரீதியாகக் கரு வளரும் தன்மைகள் வேறு, மருத்துவ ரீதியாக அளிக்கப்படும் விளக்கங்கள் வேறு. மெல்லிய ஒளி, சப்தம் முதல் அதிகடுக ஒளி, சப்தம் என ஸ்கேனில் புகும் பல ஒளி, ஒலி மாற்றங்கள் எதையும் கருச் சிசுவால் தாங்க இயலாது.
காதுக்கும், கருப்பைக்கும் நிறையத் தொடர்புகள் உண்டு. காதில் கடுக்கன்கள் அணிவது ஒலி மாண்பிற்கு மிகவும் உதவும். கடுக்கனை இழுத்துப் பார்ப்பது, திருகாணியை முடுக்குவது, காதின் மெல்லிய கீழ்ப் பகுதியைத் தொட்டுப் பார்ப்பது போன்ற பலவும் காதுகளுக்கான யோகப் பயிற்சிகள் ஆகும். கர்பிணிப் பெண்களுக்கென சில வகைக் காது யோகப் பயிற்சிகள் உண்டு. இவை சிசு வளர்ச்சியை மேம்படுத்தும். எந்த நாளில் காதுகளில் குச்சிகள், தங்கத் தோடு, ஜிமிக்கி, கல் தோடு, ஒரு கல் தோடு, நவரத்தினத் தோடு அணிதல் வேண்டும் என்ற வகை முறைகள் உண்டு. இவை எல்லாம் காதுகள் மூலம் சிசு பரிபாலனத்தை மேம்படுத்த உதவும்.
கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி ஸ்கேன் எடுப்பதைத் தவிர்த்தல் நலம். இதற்காகத்தான் கருவளர்ச்சேரி அம்பாள், கரு காத்த அம்மன், துளிர் காத்தம்மன், இளந்தண்டம்மன், பேச்சியம்மன், கரு காத்த நாயகி போன்ற அம்பிகையரை இடைவிடாது வணங்கி வந்தால் ஸ்கேன் எடுக்கும் நிலைகளே வராது தற்காத்துக் கொள்ளலாம். திருப்புகழில் உள்ள பல பாடல்களும் சிசுவின் நல்வளர்ச்சிக்கு ஒலியோகப் பூர்வமாக உதவுபவை ஆகும்.

மூன்றாம் பிறை சக்திகள்
பொலியும் மகிமால

இதிலும் ஆணா, பெண்ணா என அறிவதற்கான ஸ்கேன் எடுத்தல் மிகவும் அபத்தமானது. சிசு ரகசியம் பிரம்ம ரகசியமாகவே இறுதி வரை போற்றப் பட வேண்டும். தேவையில்லாத பரிசோதனைகள் மூலம் இனவிருத்தி அணுத் தத்துவங்களில், கருச் செல் பிரம்ம ரகசியங்களில் மருத்துவ விஞ்ஞானம் தேவையற்ற ஆராய்ச்சிகளில் இறங்கினால், உலக மனித சமுதாயத்திற்கே பலத்த சாபங்கள் ஏற்படும். இவற்றைத் தடுத்திடச் சங்கல்பம் செய்து கொண்டு, ஆன்மப் பூர்வமாக ஒவ்வொருவரும் கும்பகோணம் - மருதாநல்லூரில் உள்ள ஆலயத்தில் ரோஹிணி, சப்தமி நாட்களில் வழிபட்டு வர வேண்டும். அக்ஸ்தியர் தம் பத்னியுடன் காட்சி தரும் தலம்.
இவ்வாறு பல சித்திகளை, சிசு விருத்தி முறைகளில் தவறாகப் பயன்படுத்திய லெமூரியாக் கண்டத்தின் அதிபயங்கர ஆராய்ச்சி விளைவுகளால்தான், அக்கண்டமே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நீரில் முழுகி விட்டது என்பது நினைவிருக்கட்டும். அவர்களுடைய சிசு அணு ஆராய்ச்சிகளினால் மனிதர்களையே கொன்று தின்னும் விலங்கு-மனித-விஷ ஜந்து ராட்சச உருவங்கள் ஏற்பட்டு, சித்திகள் தவறாகப் பயனாகி, ஒரே நாளில் ஆயிரக் கணக்கான மனிதர்களைக் கொன்று தின்னும் ராட்சசப் பிறப்புகள் தோன்றி, மனித வர்கமே அழிவுக்கு ஆளாகி, பல நிலக் கண்டங்களும் நீரில் மூழ்கின.
கடுக்கனின் அமைப்பு, பொன், கற்களின் தெய்வீகக் குணங்களுக்கு ஏற்ப அறிவுக் கூர்மை ஏற்படும். கேட்கும் சக்தி கூர்மை ஆகும். காதுக்கும், தொண்டைக்கும் இணைப்பு உண்டு. தொண்டை நாள விருத்திக்கும் காதுப் பராமரிப்பு அவசியமானது. இதனால்தான் அனைத்து ஆண்களுமே அக்காலத்தில் கடுக்கன்கள் அணிந்திருந்து, நடுவில் மறைந்து போய், மீண்டும் பேஷனாக மேற்கு நாடுகளில் இருந்து திரும்பி வந்துள்ளது. உலகம் உருண்டை! இல்லையில்லை, சித்தர்களின் தத்துவப்படி, உலகம் லிங்கம் போல உலக்கை வடிவே!
முதுமையில் கண்கள் பாதிப்புக்கு ஆளாகும் போது, காதுகளும் பாதிக்கப்படும். அப்போது கடுக்கன்கள்தாம் இந்த பாதிப்பை ஓரளவு தடுக்கும். இதற்காக இளவயதில் இருந்தே கடுக்கன்களை அணிதல் வேண்டும். காதுகளுக்குள் உடலை சரிசமன் பண்ணும் நாளங்கள் உண்டு. இதனை நன்கு சீராக்கி இயக்கும் இயற்கை யோகச் சாதனமாகவும் கடுக்கன் துலங்குகின்றது.
தோடுடைய செவியன் என்று சிவபெருமானே காதில் கடுக்கண் அணிந்திருக்கும் தன்மையை மாமுனிகள் உரைக்கின்றனர்.  பேச்சியம்மன், தட்சிணா மூர்த்திகளின் திருக்காதுகளுக்குத் தங்கத் தோடுகள் அணிவித்துப் பூஜித்தல் விசேஷமானது. ஏழைகளுக்கு வெள்ளி அல்லது தங்கத் தோடு, கடுக்கன் தானம் அளிப்பதால் சிசு நன்கு வளர உதவும்.
சிறு வயதில் இருந்தே கடுக்கன்கள் அணிந்து வந்தால் காது சம்பந்தமான பல நோய்களை அறவே தவிர்த்திடலாம். மேலும் மனமானது நிதானமாக, சமநிலையுடன் செயல்படவும் இது உதவும். மது அருந்தும் பழக்கத்திற்கு ஆட்பட்டோர், தம் காதுகளில் வில் வடிவக் கடுக்கன் அணிந்து, கைகளில் நந்தியா வட்டைப் பூக்களைச் சுமந்து, செவ்வாய் தோறும் பகலில் அருணாசல கிரிவலம், மாத சிவராத்திரியில் இரவில் கிரிவலம் வந்திடில், வாழ்வில் நல்ல மாற்றங்களைப் பெற்றிட முடியும்.
நாம் சரியாகப் படிக்கவில்லையே, நாம் மக்காக இருக்கின்றோமே, நம்மைப் பலரும் கிண்டல் செய்கின்றார்களே எனப் பல வருடங்களாக வேதனையுடன் வாழ்வோர், இத்தகைய தாழ்வு மனப்பான்மை உணர்வுகள் அகன்று மனோ தைரியத்துடன் நன்கு செயல்பட, அனைவருக்கும் பெளர்ணமி கிரிவல மஹிமை, மூன்றாம் பிறைச் சந்திர தரிசன மஹிமையை உணர்த்தி அவர்களும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தைப் பெற உதவிடுக! சிவபெருமானின் சிரசு தரிசனமே மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமாகும்!

மண்ணின் மகா சக்தி

மண்ணின் ஆன்ம சக்தி மஹிமை என்ற ஆன்மீகப் பகுதி ஒன்று உண்டு. மண்ணில் நிறைந்திருக்கும் மனித வாழ்க்கைக்குத் தேவையான பிருத்வி சக்திகளைப் பெறும் வழி முறைகளைப் பற்றி விளக்குவதே இது. பிருத்வி சக்திகளை நிறையப் பெற்றிருக்கும் திருஷ்டி தோஷ நிவாரண விளக்கானது, காவிரியாற்று மணலில் குறித்த அக்னி சக்தித் தலத்தில் சுதைப் பூர்வமாக ஆக்கப் பெறுவதால், இதில் ஏற்றப்படும் தீபத்திற்குத் திருஷ்டித் தோஷங்களைப் பஸ்மம் செய்யும் சக்திகள் நிறையவே உண்டு.

மண்ணின் மைந்தன்
கஞ்சனூர் சிவாலயம்

குல தெய்வப் பூஜை எனும் போது, மூதாதையர் வாழ்ந்த மண் பூமி என்பதால், ரத்தப் பூர்வமாக அந்தந்த மண்ணின் பிருத்வி சக்திகள் வம்சாவளியாகப் பூரித்து வரும். இவற்றை முறைப்படுத்தி, ஆக்கம் பெறச் செய்யவே, ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது குல தெய்வப் பூஜையை ஆற்றி வருதல் வேண்டும்.
குலதெய்வப் பூஜை குறித்த காலத்தில் ஆற்றப் பெறாது தாமதம் ஆகும் போது வராக்னிச் சுதை மண்ணாலான திருஷ்டி தோஷ நிவாரண விளக்குப் பூஜையே தக்க நிவர்த்திகளைத் தரும். ஆனால் இதற்குப் பிறகாவது சற்றுத் தாமதம் ஆனாலும், குலதெய்வப் பூஜையை ஆற்றியாக வேண்டும்.

தீப வழிபாடு

சுக்கிர ஸ்தலமான கஞ்சனூரும் மகத்தான பிருத்வி அக்னிப் பிணைப்பு சக்திகளுள் ஒன்றாகும். கஞ்சம் எனில் மண்ணும், நெருப்பும் கலந்த அம்சமாகும். பழங்காலத்தில் விளக்குகள் தயாரிப்புத் தொழிலில் கஞ்சனூர் சிறப்பிடம் பெற்றிருந்தது. இரும்பு அணுக்கள் நிறைந்த புண்ணிய பூமி!
ஆலயத் தலங்களில் உள்ள மண் துகள்கள் அனைத்தும் அதியற்புதமான கர்ம வினைக் கழிப்புச் சக்திகளைக் கொண்டவை. கஞ்ச வகை பிருத்வி -அக்னிப் பிணைப்பு மண்ணால் ஆக்கப் பெறும் சுதை வடிவுகள், சுதை விளக்குகள் சிறப்பான வகையில் கர்மங்களைக் கழிப்பதுடனும், தோஷங்களை நிவர்த்தி செய்வதுடனும், நல்ல காரிய சக்திப் பலன்களையும் அளிப்பனவாகும். பிருத்வி, அக்னி சக்திகள் நிறைந்த சுதை வடி விளக்குகளில் தோன்றும் ஒளிக் கிரணங்களைச் சற்று நேரம் தரிசித்தாலே கண்களுக்கு மகத்தான யோக சக்திகள் கிட்டுவதால், கண்களால் பார்த்து உந்தப் பெற்றுச் செய்யும் தவறுகள், பாவச் செயல்கள் பெரிதும் தணியும்.
வெளியே சென்று வந்தாலே எத்தனையோ பிரச்னைகளைக் கடந்து சென்று, வர வேண்டியதாக உள்ளது. கார்களும், வாகனங்களும் சாலையில் பறக்கின்ற இக்காலத்தில் எந்த நேரத்தில் எது நடக்கும் என்று சொல்ல இயலாத நிலையில், பொதுவாக, வெளியே போய் விட்டுப் பத்திரமாகத் திரும்புவதே பெரிய யோகமாக ஆகின்றது. எது, எவர் வந்து  மோதுவார் என்பதறியாத நிலையில், சிறு ஆபத்தில் இருந்து பெரிய ஆபத்து வரை நம்முடன் கூடவே காப்பதே விளக்கு தீபக் கிரணங்களாகும். இவைதாம் கண்களில், உடல் நாளங்களில் நிறைந்து, தக்க சமயத்தில் உடனிருந்து காக்கும். எனவேதான் தினமும் குறைந்தது 5 மணி நேரமாவது இல்லத்தில் தீப விளக்குப் பிரகாசம் நிறைந்தாக வேண்டும் என்ற கலியுக நியதியும் உண்டு.
திருஷ்டி தோஷ நிவாரண தீபத்தில் உள்ள நவசாளரங்கள் வழியே கிரணங்கள் பரிணமித்துப் பெருகுவதால் இதன் தீபக் கிரண சக்திகள் நன்கு பரவி, விருத்தியாகி நன்கு நிறையும்.
எப்போதும் பணத்தைப் பற்றியே மனம் சுற்றிச் சுற்றி வந்து மனம் அலைக்கழிவதைத் தடுத்து ஓரளவேனும் மன அமைதி பெற, அடிக்கடி திருஷ்டி தோஷ நிவாரண தீபப் பூஜைகளை, குரு ஹோரை, சுக்ர ஹோரையில் வடக்கு, கிழக்கு, மேற்கு முகமாக தீபக்கதிர்கள் இருக்குமாறு விளக்கு முகங்களை ஏற்றி வழிபட்டு வர வேண்டும்.

வியாபாரம் பெருக்கும்
விநாயக வழிபாடு

ஏகாதச ருத்ர கவசம் (தமிழில் அப்பர் ஸ்வாமிகளின் திருத்தாண்டகம்) படித்துப் போற்றித் துதிக்க வேண்டியவரே ஸ்ரீரத்ன கர்ப கணபதி! ஸ்ரீஅகஸ்திய விஜய இதழில் ரத்தின தன சக்திகளுக்கான விளக்கங்களை அளித்துள்ளோம்.
12 என்ற எண், தன சக்திகள் நிறைந்தது. இதனால்தான் 12ஆம் திதியான துவாதசி, திருமகளுக்கு உரியதாகிறது. மேலும், 12 வருவதற்கு மூல காரணமாக இருக்கும் எண் 11, தனமூல எண்ணாகவும் போற்றப்படுகின்றது. எண் இரண்டுக்குரிய சந்திர மூர்த்தியும், எண் மூன்றுக்குரிய குரு மூர்த்தியும் சேர்ந்தருளும் சில வகைத் தன சம்பத்துகள் உண்டு. இவை எத்தகைய பண நஷ்டங்களையும் போக்க வல்லதாகும். ஏகாதசியில் ஸ்ரீரத்ன கர்ப கணபதியையும், துவாதசியில் ஸ்ரீவாஞ்சா கணபதியையும் வழிபடுவோர்க்குப் பண நஷ்ட வினைகள் கழிந்து, தன லாபம் விருத்தியாக, தனசஞ்சயப் பித்ருக்கள் துணை புரிகின்றனர். இவர்கள் தாமரை மலர்களில் தங்கள் ஆசிகளைப் பதிக்கின்றனர்.
11 ஏகாதச ருத்ரர்களுக்கும் ஸ்ரீரத்ன கர்ப கணபதி மூல தெய்வம். தசம் (பத்து) முடிந்து, அடுத்து வரும் எண்ணான 11ல் காரிய சித்திக் கதிர்கள் நன்கு கனிவதால், ராமேஸ்வரம்  ஆலயத்தில் அருளும் 11 ஏகாதச ருத்ர லிங்க மூர்த்திகளை, ஏகாதசித் திதியில் 11 விதமான அபிஷேக, ஆராதனைகளுடன், 11விதமான உணவுப் பண்டங்களைப் படைத்தும், தானமளித்தும் வழிபடுவதால், நற்காரியங்கள் நன்கு நிறைவேறும்.

ஸ்ரீதனலாப பிள்ளையார் செட்டிக்குளம்

இதே போல, 16 கரங்களுடன் அருளும் விநாயகர் பெரும் பேற்று விநாயகர் ஆவார். 16 கரங்களுடன் அருள்வதாலும், 16 பேறுகளையும் பெறுவதே உத்தம மானுட வாழ்க்கை ஆதலாலும், தன விஜய கணபதியாக, தனத்தை விஜயமாகுமாறு, ஆக்குபவரே பெரும் பேற்று விநாயகர்!
சங்கு சக்கரத்தோடு துலங்கும் பிள்ளையாருக்குத் தனவித்யை கணபதி என்று பெயர்! இவர் துர்மரணப் பாவ வினைகளையும் போக்கி, தனசக்தி வம்சத்தில் தொடர்ந்து விருத்தியாகுமாறு மிகவும் துணை புரிகின்றார். மிகவும் அற்புதமான மூர்த்தி! காஞ்சீபுரத்தில் சங்குபாணிப் பிள்ளையார் அருள்கின்றார். வளர்பிறைச் சதுர்த்தியில் இவருக்கு 108 சிறு வெள்ளிச் சங்குகளாலான மாலை சார்த்தி, 108 சங்கு முழக்கங்களுடன் வழிபடுவதால், குடும்பப் பாரம்பரியத்தில் ஏற்படும் விபத்து, கொலை, தற்கொலை போன்ற துர் மரண தோஷங்கள் ஓரளவு நிவர்த்தியாகி, வம்சத்தில் தனசக்திகள் தொடர உதவும்.
பிள்ளையார் துண்டு என நாம் மிகவும் எளிமையாகச் சார்த்துகின்றோம். ஒற்றை வஸ்திரம் அல்லாது, கீழொன்று, மேலொன்றாக, இரண்டாகச் சார்த்துவதே நன்று. 48 நாட்கள் கூடிய ஒரு மண்டலத்தில் கும்பகோணம் - பாபநாசம் - உத்தமதானபுரம் அருகே உள்ள மாளாபுரம் மும்மூர்த்தி (மூன்று விநாயகர் சேர்ந்து அபூர்வமாக அருள்வது) பிள்ளையார் மூர்த்திகளுக்கு, தினமும், புதுப் பூணூல், புது வஸ்திரம்தனைத் தொடர்ந்து சார்த்தி வழிபட்டு வந்தால், கணவன், மனைவி இடையே உள்ள மனப் பிணக்குகள் தீர உதவும்.
இதே போலச் சுயம்புப் பிள்ளையார் மூர்த்திகளுக்குத் தேவர்கள் சார்த்தும் வஸ்திரத்திற்கு நவரத்ன கீர்த்தி (கீத்து) ஆபரணம் என்று பெயர், நவரத்ன கீத்துப் பீதாம்பரமும் உண்டு.
கையில் கனி வைத்திருக்கும் பிள்ளையார் தன லாபப் பிள்ளையார்! இவருக்குத் தினமும் பழங்களாலான மாலைகளைச் சார்த்துவது மிகவும் விசேஷமானதாகும்.

ஸ்ரீஏகாதச ருத்ர மூர்த்திகள்
ராமேஸ்வரர்

பிள்ளையார் அமர்ந்திருக்கும் தேவ பீடமே சங்க பாலத் திரிபுர அம்சத்வனிப் பீடம்! இதில் தங்கப் பாளக் கோலச் சக்கர, யந்திரங்கள் நிறைய இருக்கும். கோலமும், செல்வ விருத்திக்கு உதவும். தன விருத்திக்கான தாமரை போன்ற பூ வகைகள் சிலவும் உண்டு. இத்தகைய பூக்களில் 1008 எண்ணிக்கையில் அர்ச்சிக்கையில், மாலை சார்த்துகையில், தேவர்களே தன புஷ்பம் ஒன்றை 1009 ஆவதாகச் சேர்த்து நிறைவு செய்கின்றனர்.
தன வர்ஷ சக்திகள் நிறைந்த அனுஷ நட்சத்திர நாள், திருமகளுக்கு உரிய துவாதசியில், ஆவுடையார் கோயில் அருகே உள்ள தீயத்தூரில் அருளும் ஸ்ரீவாஞ்சா கணபதிக்கு, 1008 தாமரைப் புஷ்பங்களால் மாலை சார்த்தியும், அர்ச்சித்தும், அடிப் பிரதட்சிணம் செய்தும்,  தன சக்திகள் நிறைந்த ஏலக்காய், தேன், முந்திரி, சிறு திராட்சை, குங்குமப் பூ ஆகிய ஐந்தும் கலந்த சர்க்கரைப் பொங்கலைப் படைத்தும், 1008 தொன்னைகளில் தானம் அளித்தும் வழிபட்டு வருதலால், நஷ்டத்தில் ஓடும் வியாபாரம் நிமிர்ந்து, ஸ்திரமாக இருக்க உதவும்.
இவ்வாறு 1008 புஷ்பங்களால் அர்ச்சிக்கையில், தனமாத்ரயத் தேவர்கள் 1009வது புஷ்பமாக, தனஸ்ரீவாரிப் புஷ்பத்தை அருளாசியுடன் இட்டுச் செல்வதால் இது எவருக்குக் கிட்டுகின்றதோ அவருடைய பணக் கஷ்டங்கள் தீர வழி பிறக்கும். அதே சமயத்தில் 1008 புஷ்பங்கள் வந்து சேர உதவியோர்க்கும் நஷ்டங்கள் தீரவும். தன லாபம் கிட்டவும் உதவும். எனவே பிறருடைய பணக் கஷ்டங்கள் தீர உதவினால்தான் தன் பணக் கஷ்டம் தீர வழி பிறக்கும் என்பதே இதில் நாம் பெறும் விநாயகப் பாடமாகும்.

அமைதியான குடும்பம்

முருகனுக்கு உரிய சஷ்டி, கார்த்திகை, செவ்வாய் அனைத்துமே வளர்பிறையில் கூடி வருவது மிகவும் சிறப்பானது, அபரிமிதமான பலன்களையும் அளிக்க வல்லது, வாழ்வில் மிகவும் அரிதாக அமைவது. சித்தர்கள் தூய புருடத் தெய்வமாக ஆறுமுகப் பெம்மானைப் போற்றுகின்றனர். எனவே, இந்நாளில் சித்தர்களின் ஜீவ சமாதிகளில் திருப்புகழ் பாடல்களை ஓதித் தரிசித்தல் மிகவும் விசேஷமானதாகும்.

பூக்களின் உட்பகுதியில் நிறை ஸ்கந்த யந்திர, சக்கர வடிவுகள் இருக்கும். இதழ்களில் காணப் பெறும் வரிவரியான கோடுகளும் நீளாங்கித யந்திர சக்திகளைத் தருபவையாகும். இவ்வகை அருள் சக்திகள் நறுமணம் மூலமாகவும், பூக்களைத் தொடுக்கையில் ஸ்பரிசம் படும் கை விரல் ரேகைகள், கை விரலில் உள்ள வளையங்கள், கணுக்கள் போன்றவை மூலமாக உடல் நாளங்களை அடைகின்றன. எனவே ஸ்கந்த சக்திகள் நிறைந்த - முருகனுக்குரிய சிகப்புச் செம்பருத்தி, ஷண்பகம், செவ்வரளி போன்றவற்றைக் கரங்களால் தொடுத்து, அர்ச்சிப்பது நல்ல வீடு, நில பாக்யம் பெற உதவும். தினமும் பூத்தொடுத்தலே பெண்களுக்கு மகத்தான யோக சக்திகளைத் தருவதாகும்.
ஸ்ரீராமரே வழிபட்ட ஸ்கந்த மூர்த்திகளுள் ஒருவரே சென்னை - மயிலை ஸ்ரீகபாலீஸ்வர ஆலய முருகப் பெருமான்! இவ்வாறு அவதார புருடர்கள் வழிபட்ட முருகப் பெருமானை இத்தகைய நாட்களில் வழிபடுதலும், முருகப் பெருமான் சிவ, சக்தி, பெருமாள், விநாயகப் பெருமானை வழிபட்ட தலங்களில் வழிபடுதலும் நல்ல வாஸ்து சக்திகளை இல்லறத்திற்குப் பெற்றுத் தரும்.

காரைக்குடி சாக்கோட்டை சிவத்தலம்

செவ்வாயன்று அமையும் வாஸ்து நாட்களில் அவரவர் ராசிக்குரிய வாஸ்துப் பூஜைகளை ஆற்றுவது விசேஷமானதாகும். குன்றக்குடி, தேனிமலை, திருப்பரங்குன்றம் போன்ற முருக மலைத் தலங்களில் கிரிவலம் வருதல், பலவிதமான மனக் கஷ்டங்களையும் போக்க வல்லதாகும். தனி விமானம், கலசம், கொடிமரத்துடன் இருக்கும் முருகன் அருளும் தலங்களில் அடிப் பிரதட்சிணமாக ஆறு முறையேனும் வலம் வருதல், குடும்பத்தில் சாந்த சக்திகளைப் பெற்றிட உதவும்.
ஆலயத்தில் மூலவர், அம்பாள் மற்றும் தெய்வ மூர்த்திகளின் சிலைகளைச் சுற்றி அமையும் திருவாசியில் சூரிய, சந்திர, யாளிப் பிறைகள் இருக்கும். ஸ்கந்த சக்திகள் நிறைந்த நட்சத்திரத் திருவாசியும் உண்டு. இவை அமைந்துள்ள தலங்களில் வழிபடுதலும் மஹா விசேஷமானது. இவை யாவும் கிருத்திகா சக்திகளை நிரவுவதால், இல்லறத்திற்குரிய மிகவும் நன்மை பயன்படுவதாகும்.
இத்தகைய ஸ்கந்த சக்தி நாளின் மஹிமை யாதெனில் அனைத்து நட்சத்திரக்காரர்களுக்கும் சரிசமமாகப் பல அம்சங்களில் அனுகிரகம் செய்யக் கூடியதாகும். நாளுக்கே இவ்வளவு மகத்துவம் எனில் நாளுக்குரிய நாயகரான முருகப் பெருமானின் அருட் பிரவாகம் சொல், பொருளுக்கு அப்பாற்பட்டதன்றோ!.
இந்நாட்களில் வாஸ்து படத்தை வைத்துப் பூஜித்தல், நட்சத்திர மண்டலங்கள் (பூந்தமல்லி, திருக்கோகர்ணம்) விதானத்தில் அமைந்துள்ள தலங்களில் வழிபடுதல், துவார பாலக மூர்த்தி ஸ்தானத்தில் முருகன், பிள்ளையார் அமைந்துள்ள தலங்களில் (தவசிமடை) வழிபடுதலும் வாஸ்து சக்திகளை நன்கு விருத்தி ஆக்கி, வாஸ்து வகை தோஷங்களை நீக்கிட மிகவும் உதவும்.

பிள்ளைகளுக்கு நல்லறிவை ஊட்டுங்கள்

திருவாசி என்பது இறைமூர்த்திகளைச் சுற்றி அமையும் மரப் பீதாம்பரம் என்பது சித்த கிரந்தங்களின் விளக்கமாகும். அஷ்டதிக்குப் பாலகர்களும் பூவுலகைத் தாங்குவது போல, துவாரபாலகர்கள் போன்றும், இறை மூர்த்திகளைச் சுற்றி அஷ்ட பூபால மூர்த்திகள் அமைவர். பூபாலம் என்பது அனைத்து பூமிகளும் சேர்வதாகும். அனைத்து லோகங்களையும் தாங்குபவர்கள் பூ வாஸ்துப் புல மூர்த்திகள் ஆவர். இவர்களுடைய அருட்சக்தியைப் பூரணித்து அருள்வதே திருவாசி தரிசனமாகும்.
பூமிக்கு மட்டுமல்லாது நட்சத்திரங்கள், கோளங்கள் போன்று அனைத்திற்குமே வாஸ்து சாஸ்திர நியதிகள் உண்டு. அசுரர்கள் வாஸ்து சாஸ்திர நியதிகளை மீறியமையால் தாம், அவர்களுடைய லோகங்கள் அழிவுற்றன. இவற்றைச் சரபேஸ்வரரும், நரசிம்மருமே அக்னியில் ஸ்புடம் போட்டுச் சீராக்கித் தந்தனர்.
திருந்த வாய்ப்பளிப்பதுதானே மனித ஆயுளின் காரணத் தத்துவம். எனினும் சீர் திருந்துவதாக வாக்களித்து, சத்தியத்தை மீறி அதர்மக் காரியங்களில் இறங்கிய அசுர சக்திகள் சிலவும், அக்னியில் பஸ்மமாகாது நின்றது. இதுவும் இறை லீலையே! இல்லையெனில் கலியுக மனித வாழ்க்கையில் மனித சமுதாயத்தில் ஏற்படும் துன்பங்களுக்கான காரணங்கள் எவ்வாறு புலனாகும்? தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதே இதன் அடிப்படைத் தத்துவமாகும்.

திருவாசி சிவத்தலம்

தினமுமே தவறிழைக்கும் மனப்பான்மையில்தானே மனிதன் கலியில் வாழ்கின்றான்! இவ்வாறு அசுர சக்திகள் தங்கிப் போன இத்தகைய ஓரிரு பூமிப் பகுதிகளில்தாம் இன்றும் பயங்கரமான தீவினை சக்திகள் ஆக்ரமித்து, ஜீவன்களை வதைக்கின்றன. இவ்விடங்களில் சரபேஸ்வர, நரசிம்ம வழிபாடுகளை ஆற்றிப் பூவுலகைத் தூமையாக்க வேண்டிய கடமை, நடப்பு மனித சமுதாயத்திற்கு உண்டு. இதனால்தாம் சமீப காலங்களில் ஞாயிறு ராகு கால நேரத்தில் சரபேஸ்வர வழிபாடு சிறப்பிடம் பெற்று, உலகெங்கும் நன்கு பரவி, நிரவி வருகின்றது.
திருவாசியில் சிம்மவாகனம், நாக்கைத் தொங்க விடும் யாளிகளின் அமைப்பு, கண் விழிகள் பிதுங்கி இருக்கும் தேவதா அமைப்பு, 27 நட்சத்திர மண்டல அமைப்புகள் போன்ற பலவும் அமையும். இவை அனைத்திற்கும் தேவ காரணங்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் இவை ஒவ்வொரு விதத்தில் காட்சி தரும். அனைத்து நட்சத்திரக்காரர்களுக்கும் பயனாகும் வண்ணம் ஆலயப் பூஜா சக்திகளை, நேத்ர சக்திகளாக அமைத்துத் தருவதும் திருவாசி மஹிமையே! இதனால்தான் மூர்த்திகளை ஆலயத்தில் தரிசிக்கும் போது கண்கள் தாமாகவே திருவாசியையும் நோக்கும்.
குறிப்பாக, மனித சமுதாயத்தை வருத்தி வரும் பற்றாக் குறை வகையான துன்பங்களுக்கான தீர்வுகளைத் தர உதவுவதே திருவாசி வழிபாடு! தினமும் இரவில் உறங்கும் முன் தனக்குப் பிடித்தமான தெய்வத்திற்குத் திருவாசியை மானசீகமாக அமைத்து வழிபடுவதும் விசேஷமான வழிபாடாகும்.

ஸ்ரீவாஞ்சா கணபதி
தீயத்தூர்

ஸ்ரீவித்யா கணபதியே திருவாசி தேவதா மூர்த்திகளுக்கு மூல அனுகிரகம் அளிக்க வல்லார். வெறும் அறிவு பக்தியைத் தராது. அறிவு ஆன்மப் பூர்வமாக நன்கு பயன்பட வேண்டும். அறிவை ஞானமாகக் கனியச் செய்பவரே ஸ்ரீவித்யா கணபதி!
பெருமாள் மூர்த்தி வேத சக்திகளின் பரிபூரணமாகத் தோன்றி வந்ததே வாமன அவதாரமாகும். வாமன மூர்த்தி தாங்கும் குடையே வேதச்சாரச் சாதனமாகும். எனவே வாரந்தோறும் ஒரு முறையாவது உலகளந்தப் பெருமாளை தரிசித்தாக வேண்டும். திருவிக்ரமப் பெருமாளே வழிபட்ட மூர்த்தியே ஸ்ரீவித்யா கணபதி ஆவார்.
வாமன வடிவிற்கு ஞான பூஷண சக்திகளை உரைத்தவரே ஸ்ரீவித்யா கணபதி! புதன் கிழமை, வித்யாகாரகராகிய புத மூர்த்திக்கு உரியது! புத மூர்த்தியோ புதன் கிழமைகளில் ஸ்ரீவித்யா கணபதியையும், வாமன மூர்த்தியையும் விசேஷமாக வணங்குவதால் புதன் கிழமை அன்று இவ்விரு மூர்த்திகளையும் வழிபடுதல் அறிவை முறையாகப் பயன்படுத்தாத தோஷங்களைப் போக்க நன்கு உதவும்.
மேலும் குடை தாங்கிய வடிவில் அருளும் வாமன கணபதியை, ஸ்ரீவித்யா கணபதியாக பாவனை செய்து பூஜிப்பது பிள்ளைகளுக்கு நல்அறிவைப் பெற்றிட மிகவும் உதவும்.

பிறர் நலமே பெருநலம்

சனாதன தர்மமாக ஆதியுலகில் தற்போது உள்ளது போலான நாட்டுப் பிரிவுகள் இன்றி ஜாதி, மத பேதமின்றி உலகெங்கும் ஒரே நாடாகத் துலங்கியது. இவ்வாறு சொல்வது கூடத் தவறே, ஏனெனில், தத்தம் நாடு எனும் சுயநல எண்ணமே தோன்றாது, மக்கள் பவித்ரமான எண்ணங்களுடன் வாழ்ந்தமையால், தற்போது எழுந்துள்ள நாட்டுப் பிரிவினை எண்ணங்களே அந்த யுகங்களில் எழவில்லை! மனிதாபிமானம் தர்மப் பூர்வமாக நிகழ்ந்த காலம்.
ஸ்ரீராமருடைய ராம ராஜ்யமும் உலகெங்கும் மேரு சக்திகள் நிறைந்த தற்போதைய ஆல்ப்ஸ் மலை (ஆலப்பரஸ்திரம் என அழைக்கப் பெற்ற மலைத்தலம் - இன்றும் சித்தர்கள் தேவப் பறக்குந் தட்டுக்களில் வந்திறங்கும் மலைத் தலம்), இந்தோனேஷியா, தற்போது கடலடியில் மறைந்துள்ள லெமூரியாக் கண்டம் உட்பட, பல இடங்களுக்கும் நிரவி இருந்தது. போகர் சித்தரும் புஷ்பக விமானத்தில்தாம் தற்போதை சீனப் பகுதியில் சென்று அதியற்புதச் சித்சக்திகளைப் போதித்தார்.

ஸ்ரீமும்மூர்த்தி விநாயகர் உத்தமதானபுரம்

பண்டைய யுகங்களில் புஷ்பக விமானம் எனும் யந்திர மந்திர வாகனங்கள் வானில் எங்கும் செல்லப் பயன்படுத்தப்பட்டன. இதற்கான யோக ரீதியான மந்திர, தந்திரப் பாடங்கள் சிறு வயதில் குருகுலத்திலேயே யாவருக்கும் பயிற்றுவிக்கப் பெற்றன. ஆசிரியர்களைத் தெய்வத்துக்குச் சமானமாக மதித்த காலமது.
புனிதமான மன்னர்கள் தம் மக்களுடன், உத்தமமாக ஆட்சி புரிந்த தர்மசக்திப் பேரரசர்களிடம் தாமாகவே பரிபூரணமான அன்பினால் இணைந்து, தர்ம சாம்ராஜ்யம் நிகழ்ந்த யுகங்களும் உண்டு. அவற்றை எல்லாம் நாம் பல கற்ப காலங்களிலும் கண்டு வந்தே தற்போது பூவுலகில் பிறப்புக் கொண்டுள்ளோம்.
இத்தகைய ஆத்ம விசாரங்களை வியாழன் தோறும் நிகழ்த்தி வருவதும் ஒரு ஞான யோகப் பயிற்சியே! இவை வெறும் கற்பனைக் கடல் அல்ல! எவ்வாறு பூவுலகில் தர்மம் செழித்தது என ஆத்ம மனச் சிந்தனை வடிவில் பார்த்தலும் யோகப் பூர்வமான ஆத்ம சக்திகளை அளிப்பதாகும்.
எனினும் தற்போது நாடு வகை அரசு அமைப்பு நடைமுறைக்கு வந்து, ஜாதி, மத, மொழி, இன, குலப் பிரிவுகளோடு, நாட்டுப் பிரிவுகளும் வந்து மனித குல சாந்த சக்திகளைத் தடுத்து அடைக்கின்றன. மனிதாபிமானம் கூடிய நாட்டுப் பற்று தற்போது மிகவும் முக்கியமானதாக உள்ளது. குரு பக்திதான் நாட்டைப் பாதுகாப்பதற்கான பூர்ண அனுகிரகத்தைக் கொடுக்கக் கூடியதாகும். தற்போது உலகில் எதிரி நாடாகக் கருதுகின்ற நாட்டிலும் அவரவருடைய மூதாதையர்கள் பிறந்திருக்கக் கூடும் என்ற எண்ணம் சத்தியப் பூர்வமாக எழுந்தால்தான் மனிதாபிமானம் அன்பாக மலர்ந்து நாடுகளிடையே பிரிவினைகள் அகலும். ஆனால் இது கலியுக சமுதாய அமைப்பில் சாத்தியமானதல்ல. எனவே இருக்கின்ற சூழ்நிலையில் அந்தந்த நாட்டுச் சமுதாயச் சூழ்நிலைக்கு ஏற்ப தர்ம சக்திகள் தழைக்கும்படி தான, தர்மப் பண்பாட்டுடன் வாழ்வதே உத்தமமானது எனச் சித்தர்கள் போதிக்கின்றனர். இத்தகைய தர்ம ஞானம் தழைக்கும் நாளே வியாழக் கிழமை,
இத்தகைய தர்ம ஞானச் சிந்தனை விருத்தியாகும் புண்ணிய பூமியே நம் புனிதமான பாரதப் பூமியாகி உலகத்திற்கே தெய்வீக மையம் என்பதால் ஒவ்வொரு பாரதவாசிக்கும் ஏனைய உலக ஜீவன்களின் நலன்களுக்காக இறைவழிபாடுகளை தினமும் இல்லறப் பூஜையாகவும், ஆலய தரிசனமாகவும் ஆற்ற வேண்டிய தெய்வீகக் கடமைகள் உண்டு. இதனால் பாரதத் திருநாட்டில் உதித்திருப்பதே பெரும் பாக்யம் உடையதாகும். வியாழக் கிழமை தோறும் இந்த குரு பரத தர்ம வாக்கியங்களைப் படித்து உங்களுடைய தர்ம சக்திகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்!
அனைத்து நாட்டு நலன்களுக்கும் குரு பக்தி உரித்தானதே! ஏனெனில் அனைத்து நாடுகளிலும் மாமுனிகள், சித்தர்கள், யோகியர், ஞானியர் சத்குருவாக நல்லோர்க்கு அருட்பரிபாலனத்தை இன்றளவும் ஆற்றித்தான் வருகின்றார்கள். ஆனால் பெரும்பான்மையான மாமுனிகள், சித்தர்கள், யோகியர், ஞானியர் சத்குருமார்கள் உலவும் புண்ணியத் தாயகமே பாரதமாகும்.
வியாழனன்று தட்சிணா மூர்த்தியின் திருவடிகளுக்கு முழுத் தாமரை மலர்களைச் சார்த்தி, சுயநலமின்றி, அனைத்து உலக ஜீவன்களின் நலத்திற்காக, "இறைவா என்னை சிறு துரும்பாகவாவது பயன்படும்படி வாழச் செய்வாயாக!''  என்ற ஒரே பிரார்த்தனையுடன் நாளைச் செலுத்தி இதற்கு சூரிய, சந்திர சாட்சியாய் ஏதேனும் ஒரு தான, தர்மத்தையாவது நிகழ்த்திடுக!

குப்பையில் கிட்டும் மாணிக்கம்

தினமுமே ருத்ர மந்திரங்கள் ஒரு சிலவற்றையாவது ஓதி வந்தால்தான், இவை நல்ல கவசமாய் உடலிலும், மனதிலும் அமைந்து, எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்கும். நமக்கென அப்படிப்பட்ட பகைவர்கள் யாரும் இல்லையே, ஏன், பகை, பகை என நாம் அஞ்ச வேண்டும் எனப் பலரும் எண்ணிடலாம். ஆனால், வெளியில் இருந்து வரும் பகையைத் தவிர, சோம்பேறித்தனம், முறையற்ற காம எண்ணங்கள், அதர்மமான காம இச்சைகள், பிறன் மனை நோக்குதல், குரோதம், விரோதம், பொறாமை, தீய வார்த்தைகளைப் பேசுதல் போன்ற பலவும் அவரவரிடமே, அவரவர் குடும்பத்திலும் உள்ள பகைமை சக்திகளாகும். எனவே, பகைமை என்றால் வெளி இடத்திலிருந்து வருவது மட்டுமே எனப் பொருளாகாது!
ருத்ர மந்திரங்கள் என்றால் தேவமொழியில் உள்ளவை மட்டுமே என எண்ணாதீர்கள்! திருமந்திரம். திருவாசகம். தேவாரம், திருப்புகழ், திவ்யப் பிரபந்தம். அருட்பா போன்ற பலவற்றிலும் ருத்ர சக்தி மந்திரங்கள் நிறைந்துள்ளன. தினமுமே இவற்றுள் சில பாக்களை ஓதி வருதல் பலவிதமான வேத சக்திகளைத் தினமுமே நம்மையும் அறியாமல் பெற்றுத் தருவதாகும்.
படை பலம் உள்ள அனைத்து நாடுகளிலும் படை சக்தியை, தன் நாடும், தன் மீது பிற நாடும் அதர்மமான முறையில் தவறாகப் பயன்படுத்தாது இருக்கவும், ருத்ர சக்திகள் தேவையே! உயிர்க்குத் துன்பம் வராமல் காக்கவும் இவை உதவும். ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தில் உள்ள 24 வகை அட்சரங்களில் ரகர வகை பீஜாட்சரங்கள் ருத்ர சக்திகளைக் கொண்டவையே!
ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண, தமிழ் மாமறை ஓதுவாரான நல்வேதிகளை வைத்து, ராணுவ முகாம்களில், அலுவலகங்களில் அடிக்கடி, குறிப்பாக வியாழனும், வெள்ளியும் பிணையும் இரு குரு சக்திகளின் பரிணாமத்தில் (வெள்ளி சூரியோதயத்திற்கு முன்பு ஒன்றே கால் நாழிகை, சூரியோதயத்திற்குப் பின்பு ஒன்றரை நாழிகை) ஓமம் வளர்த்து வந்தால், பகைமை நிலவும் எல்லைப் பகுதிகளில் சாந்தம் உண்டாக வழி பிறக்கும். சாந்தம் கூடிய சுபிட்சமே, வீட்டுக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் நல்லது.

ஸ்ரீவிஷ்ணு துர்கையும் கோஷ்ட துர்கையும்
இணைந்து அருளும் ஆவூர் திருத்தலம்

ருத்ர சக்திகள் நிறைந்த ஒரு தேவாரத் தமிழ் மறைத் துதி
அன்னவன் எங்கள் பிரான் முதல்காண் பரிதாயபிரான்
சென்னியின் எங்கள் பிரான் திருநீலமிடற் றெம்பிரான்
மன்னிய எங்கள் பிரான் மறைநான்குங் கல்லால் நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள் பிரான் பழமண்ணிப் படிக் கரைக்கே
ருத்ர சக்திகளை நிரவிட மிகவும் உதவுவது காணாபத்யம் என்று சொல்லக் கூடிய வேத கணபதி வழிபாடு ஆகும். கணபதியே, விஷ்ணு மூர்த்திக்குக் காக்கும் கடவுள் எவ்வகையில் அர்ச்சாவதாரம் கொள்தல் வேண்டுமென உணர்த்திக் காட்டியவர். இதனை அபிநயம் பிடித்துப் பெருமாளுக்குக் காட்டிய தேவியே ஸ்ரீவிஷ்ணு துர்க்கை!
இவ்வரிய புராணக் காட்சியைக் காணும் பேறு பெற்றவரான ஸ்ரீவிபாண்டக மஹரிஷி, விஷ்ணு துர்க்கை ஆலயங்களில் வெள்ளிக் கிழமைகளில் வழிபட்டு இதன் பலாபலன்களை இலுப்பைத் தீப எண்ணெயில் பெய்விக்கின்றார். இலுப்பை மரத்திற்கு ருத்ர சக்திகள் நிறைய உண்டு. எனவே வெள்ளிக் கிழமைகளில் இலுப்பை மரம் உள்ள தலங்களில் வழிபடுவதும், இலுப்பை எண்ணெயுடன் பிற வகைத் தைலங்களைச் சேர்த்து 11 விளக்குகளை ஏற்றுவதும் ஏகாதச வகையில் ருத்ர மந்திரங்களை ஓதி வழிபட, அடுத்து ஒரு மண்டல காலத்தில் வர இருக்கின்ற நற்காரியங்கள் நன்கு நடைபெற, ருத்ர மண்டலப் பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத் தரும்.
பெருமாள், சக்தி அம்ச அனுகிரக சக்திகளும் பூண்டவர் என்பதால், இடது கையில் (இட அம்சம் சக்தி அம்சம்) சக்கரத்துடன் பல இடங்களில் பொலிவார்.  .
ஹரிவதன ருத்ர சக்திகள் பரிமளிக்கும் நாட்களில் வெயிலும் சற்று அதிகமாகவே இருக்கும். வெயிலில் காயும் வகை பொருட்களாலான உணவுப் பண்டங்களைத் (புளி - புளியோதரை, வடாம், நாரத்தை) தானமாக அளித்தல் ருத்ர சக்திகளைக் காப்பு சக்திகளாகப் பெற்றுத் தரும். குறிப்பாக நல்ல நெருங்கிய உறவு, நட்பாக இருந்து பகையானவர்கள் திருந்தி, திருத்தங்களுடன் மீண்டு தீர்வுகள் தர உதவும்.
காக்கும் கடவுளாம் ஸ்ரீவிஷ்ணுவிற்கும் உதவும் இறைமாண்பு நிறைந்ததே ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்சமாகும். கர்பம் ஆவது முதல், வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் காப்பவர் விஷ்ணு மூர்த்தி! இதனை மனிதன் உணர உதவுவதே ருத்ர சக்திகள் மற்றும் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை வழிபாடு. பிரயோக முறை, நிலைதாங்கி முறை எனப் பலவிதங்களிலும் ஸ்ரீமஹாவிஷ்ணு சக்கரத்தைத் தாங்கி அருள்கின்ற ஆலயங்களில் சங்கு தேவஒலி சாற்றுதல், சங்காபிஷேகம், சங்கு மாலை வழிபாடு விசேஷமானது. .
குப்பையில் மாணிக்கம் எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள். குப்பையையும், சிலந்தி வலையையும் பல இடங்களில் திருமகள் கடாட்சமாகக் கொள்கின்றார்கள். இதனால்தான் மாலையில் விளக்கேற்றியவுடன் குப்பையை வெளிக் கொட்ட மாட்டார்கள். ஆலயத்தில் தினமும் குப்பைகளைப் பொறுக்கி வருதல், குப்பை பொறுக்கின்றவர்களையும் குபேரன் ஆக்கும் எளிய இறைப் பணியாகும். கூபகுள வெள்ளிக் கிழமைகளில் இயன்ற வரை மூன்று ஆலயங்களிலாவது, குப்பைகளை எடுத்துச் சுத்தம் செய்தல் விசேஷமானதாகும். வைத்தியச் செலவுகளினால் ஏற்பட்ட கடனடைய நல்வழிகளைப் பெற இதனைத் தினந்தோறும் ஆற்றி வர வேண்டும்.

அழுந்திய தேரையும் மீட்டிடலாம்

எமதர்ம ராஜ மூர்த்தி வைத்திருக்கும் வஸ்துக்களில் ஒன்றே பாசக் கயிறு ஆகும். பலரும், எம மூர்த்தி பாசக் கயிற்றை வீசி, உயிரைக் கவர்கின்றார் என்று தவறாகச் சொல்கின்றனர்.
பாசக் கயிறு என்பது பற்றுக்களை அறுத்து இறைவனிடம் சேர்ப்பது! பாசத்தை வடிகட்டி உண்மையான அன்பாக மாற்றுவது! மேலும் இறைமூர்த்திகளின் ஒவ்வொரு அம்சமும், கருவியும் (ஆயுதமல்ல) சித்தர்களின், மஹரிஷிகளே என உணர்ந்தால்தான், அவை அழிக்கும் ஆயுதங்கள் என்ற தவறான அர்த்தங்கள் மாறும்.
எம தெய்வ மூர்த்தியைத் தர்மராஜா என்று அன்புடன் பெயரிடுகையில், அவரா உயிரைப் பறிப்பவராவார்? சிவ, சிவா! இவ்வாறு எண்ணுவதும், சொல்வதும் அபச்சாரமே! இத்தகைய வாக்கு அபச்சாரங்கள் தீர, மிகவும் அபூர்வமாக அமையும் நவமி, புனர் பூச தின இணைப்பு நாளில் ஆற்றப் பெறும் சந்தன வகைப் பூஜை உதவும்.

தேரழுந்தூர்

பிள்ளையார் பக்தர்களை எமன் தீண்டுவதும் கிடையாது என்பதும் உண்மையே! காரணம், பிள்ளையாரப்பனே, தான் வைத்திருந்த பாசக் கயிற்றை புனர் பூச நாளில் எம மூர்த்திக்கு அளித்தமையால், எம மூர்த்தி விநாயக பக்தர்களைக் கண்டால் ஆயுள் விருத்தியைத் தருகின்றார் என்பதே பிள்ளையார் பக்தர்களை எமன் அண்டுவது கிடையாது என்பதில் பொதியும் உண்மையான அர்த்தமாகும்.
ஆனால் உண்மையாகவே பிள்ளையார் பக்தர்களாக இருப்பவர்கள், தம் ஆயுள் முடிந்தவுடன், பூவுலகை நீத்திடவே வேண்டுவார்களே தவிர, “ஆயுளை விருத்தி செய்து தா!'' என ஒரு போதும் வேண்டார். எனவே ஆயுள் விருத்தி என்பது எம மூர்த்தியே மனமுவந்து அளிப்பதாகும். இதனையே எளியோருக்கும் புரியும் வகையில், "பிள்ளையார் பக்தர்களை எமன் அ(தீ)ண்டுவது கிடையாது!'' என உரைக்கின்றோம்!
உண்மையில் திருக்கடவூரில் எம மூர்த்தி மார்கண்டேயர் தவறாக வீசிய பாசக் கயிறு மீண்டும் பிள்ளையாரப்பனையே அதாவது அது தோன்றிய இடத்தையே அடைந்தது! இதனை எம மூர்த்தி மீண்டும் பெற்று எம ஜ்யோதியாய், ஜோதி ரூபத்தில் சுயச் சிவபர ஜோதியை அடைக்கலம் அடைந்தது ராமநாதபுரம் - பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் தலத்தில் ஆகும்.
எனவே, எப்போது இறப்பு வந்து விடுவோமோ என்று அஞ்சி, அஞ்சி மரண பயத்தால் அல்லல்படுகின்றவர்கள், இங்கு எமனேஸ்வரம் சிவாலயத்தில் சதயம், மற்றும் துவிதியை, மகம் நாட்களில் எமனேஸ்வரருக்கு எள் சாதக் காப்பு இட்டு வழிபட்டு வந்தால், மரண பயம் அகல வழி பிறக்கும். மானுட வாழ்வின் தெய்வீகத் தன்மை புலப்படலாகும்.
ஒரு புறம் பலருக்கும் மரண பயம் இருக்க, மறுபுறம் "என் பணிகள் முடிந்தன! நான் இப்போதே இறக்கத் தயார்!'' என்றும்,
"கடவுளே நான் சாகக் கூடாதா? என்னை உடனே கூப்பிடக் கூடாதா? நான் எத்தனை நாள் இந்த உடலில் அவதிப்படுவது? எத்தகைய அவமதிப்புகளை எல்லாம் நான் பார்த்து வேதனைப்படுவது?'' என்றெல்லாம் புலம்புபவர்கள், உரைப்பவர்களும் கலியில் உண்டு.
இவை எல்லாம் மனதார வருகின்ற வாக்கியங்கள் ஆகா! சுயநலத்தில், கர்ம வினை அழுத்தங்களால் பேசப்படுபவை! இவை முறையான, தர்மமான வாக்கியங்களும் அல்ல! பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்று விட்டு, அதில் ஆற்ற வேண்டிய கடமைகளை ஒழுங்காக ஆற்றாமல் சுருக்கிக் கொண்டு விட்டு, "எல்லாவற்றையும் செய்து விட்டேன்! இனிப் புறப்பட வேண்டியதுதான்!'' என்று தவறாக எண்ணியே பலரும் வாழ்கின்றனர்.
சரீரம் தானாக வீழும் வரை இறைநாமத்திலேயே உடலின் ஒவ்வொரு நாளமும், நாடியும், நரம்பும் செறிதல் வேண்டும். இதற்காக அந்திமக் காலத்தில் எத்தகைய உடற் பிணிகள் ஊடேயும் இறைபக்தியை விருத்தி செய்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் பலரும் சொத்து, பணம், பாசம் இவற்றைப் பற்றிய சிந்தனைகளிலேயே அந்திமக் காலத்தைக் கழிப்பதால், இருக்கின்ற ஓரளவு தெய்வீகமும் இவற்றிலேயே கரைந்து விடுகின்றது. இதற்காகத்தான் கஷ்டங்களுக்கு நடுவேயும், இளவயது, நடுத்தர வயதிலேயே, உடலால் சரீர சேவை மற்றும் தான, தர்மங்களை ஆற்றி வந்தால்தான், முதுமையில் ஓரளவு தெளிவு பிறக்கும்.
இத்தகைய ஆரம்ப நிலைப் பாடங்களை அளிப்பவரே சந்தனப் பிள்ளையார். கையில் பாசம் கருவியைத் தாங்கி இருக்கும் பிள்ளையாரை வழிபடுதல் விசேஷமானதாகும். எம தூதுவர்களுக்கும் விநாயகரே பாடம் எடுத்து, "உயிர்களைத் துன்புறுத்தி உயிர் பிரிதல் அமையக் கூடாது. கயிறு போட்டு கிணற்று நீரில் வாளி நீரைச் சுமையின்றி எடுப்பது போல, உயிர் பிரியும் வகை நிகழ்தல் வேண்டும்!'' எனச் சந்தன மரத்தடியில் விநாயகர் நிறைய ஜீவதர்மப் பாடங்களைப் போதித்தார். எனவேதான் சந்தன மரப் பிள்ளையார் வழிபாடு மிகவும் விசேஷமாகப் போற்றப்படுகின்றது.
சந்தனத்தை அரைத்துப் பிள்ளையார் வடிவில் ஆக்கியும் வழிபடுதலால், வீட்டில் இருக்கும் முதியவர்கள் "எப்போது மரணம் வரும்?'' என்ற வகையில் துன்பமாகப் பேசுகின்ற போக்கு மாறவும் உதவும். மேலும் பலவிதமான இறப்புகளால், மிருத்யு தோஷங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்திலும் சாந்தம் நிகழ,
* சகோதரர்களான எம மூர்த்தியும், ஆயுள்காரகரான சனி மூர்த்தியும் ஒன்றாக புனர் பூச நாட்களில், சந்தனம் தல விருட்சமாக உள்ள ஆலயங்களில் (தேரழுந்தூர்) வழிபடுதலுடன்,
* பிள்ளையாருக்குச் சந்தன மாலை இட்டுப் பூஜித்தலாலும்,
* சந்தன மரத்தை வலம் வந்து வழிபடுதலும்,
* வாழ்க்கையில் ஏற்படும் விரக்திகளையும்,
* பெற்றோர்களுக்குப் பிள்ளைகளிடமும், பிள்ளைகளுக்குப் பெற்றோர்களிடம் ஏற்படும் எரிச்சல் கலந்த விரக்தியும் தணியவும் உதவும்.
* ஏன்தான் வாழ்கின்றோமோ தெரியவில்லையே! என்ற வகையான தவறான மனநிலைப்பாடும் அகலவும், புனர்பூசம் தோறும் தேரழுந்தூரில் சிவன், விஷ்ணு ஆலயங்களில் வழிபட்டு வர வேண்டும்.
* மனம் என்பது தேர் போல! இது அழுந்தி நின்று விட்டால் வாழ்வில் விரக்தி ஏற்படும். சந்தன வகை வழிபாடு உரக் கட்டை போல அழுந்திய தேரை மீட்டிட உதவும்.

அனைத்து கண்டங்களுக்கும் ஆன்மீகத் தீர்வு

 அதிகண்டம் என்பது 27 வகை யோகங்களுள் ஒன்று. தற்காலத்தில் நன்கு ஜோதிடத்தை அறிந்த பலரும், சுப நேரத்தைக் கணிக்கையில், சுப யோகம், சுப கரணத்தை விட்டு விடுகின்றார்கள் என்பது வேதனை தருவதாகும்.
சுப யோக, சுப கரண ஏவங்குண விசேஷம் என அமையும் அந்தந்த நாளுக்கான சங்கல்ப மந்திரமானது, பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்து, யோக, கரண கால அம்சங்களின் முக்கியத்துவத்தைப் பெரிதும் வலியுறுத்துவதாகும். மேலும் யோக, கரண கால அம்சங்கள் காலபைரவரின் திருமார்பு மற்றும் திருப்பாத அம்சங்களைக் குறிப்பதும் போற்றத் தக்கதாகும். தற்காலத்தில் கரண கால அம்சம் விவசாயத்திற்கு மட்டுமே என்றும் தவறாகக் கொள்கின்றனர்.

கரணம் தவறினால் மரணம் என்பது ஆன்மப் பூர்வமாக, சுபநேரத்தில் நற்காரியங்களைத்  துல்லியமாக நடத்தாவிடில் ஏற்படும் துன்பங்களை உணர்வித்து, கரணத்தின் சுப நேர அம்சத்தின் முக்கியத்வத்தையும் குறிப்பதாகும். மேலும் வாழ்க்கையில் ஜாதகப் பூர்வமாக உரைக்கப் பெறும் - உயிருக்கும் ஆபத்தைத் தரும் கண்டங்களைத் தீர்த்திட, குறித்த கரண நேரத்தில் ஆற்றப் பெறும் பரிகார, பிராயச்சித்த வழிபாடுகளே, பூஜைகளே மிகவும் உதவுவதாகும்.
பவம், பாலவம், கெளலவம், தைதுலை, கரம், வணிசை, பத்ரம் ஆகிய 7 சர கரணங்களும், சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் ஆகிய நான்கு ஸ்திர கணங்களும் உள்ளன. இவற்றின் மஹிமைகளை எடுத்துச் சொல்வதும் உபந்யாசகர்களின், ஜோதிடர்களின் பொறுப்பும், கடமையும்  ஆகும்.
வாழ்க்கையில் எப்போதுமே ஏதேனும் கண்டங்கள் இருந்து கொண்டிருக்கும். கண்டம் என்பது என்ன? உதாரணமாக, வியாபாரத்தில் பலத்த நஷ்டங்களில் இருந்து வியாபாரமே நொடித்துப் போகாது, ஓரளவேனும் மீள்வது ருணக் கண்டம், நீரில் தவறி விழும் ஒருவர், நீச்சல் தெரியாது தட்டுத் தடுமாறிக் கரையேறி வருவது நீர்க் கண்டம்.

ஸ்ரீமார்கண்டேயர்
திருநீலக்குடி

இவ்வாறு கடுமையான வினைகளின் விளைவுகளை, குறித்த வகைப் புண்ய சக்திகளால் ஓரளவு தணிக்கப்படுவதே கண்டத்தில் இருந்து தப்பித்தல் ஆகும். மேலும் கண்டம் என்பதற்குக் கழுத்து என்ற அர்த்தமும் உண்டு அல்லவா! துன்பங்கள், கடன் சுமைகள் பற்றிக் குறிக்கையில், கழுத்தளவு சுமை என்றே குறிப்பிடுவர். சனி, செவ்வாய் கிரக அமைப்புகளை வைத்தும், சுப கிரகப் பார்வை சரியாக அமையாததை வைத்தும், ஒருவருக்கு ஜாதகப் பூர்வமாகக் கண்ட நிர்ணயம் அமையும். முதலாம் இடமாகிய ஜீவ ஸ்தானத்தில் அமையும் கிரகம், கிரகப் பார்வையை வைத்தும் கண்ட நிர்ணயம் அமையும்.
ஒரு குடும்பத்தில் அடிக்கடி மரணங்கள், இள வயது மரணங்கள் ஏற்படுவதும், பலத்த மிருத்யு தோஷங்களின் விளைவான கண்டங்களைக் குறிப்பதாகும். விபத்துகளில் பலத்த அடிபடாது, சிறு காயத்துடன் தப்பிப்பதும் கண்டத்திலிருந்து மீள்வதே! ஆபத்துக் காலத்தில் பிறருக்கு உதவும் நற்காரியங்களில் விளையும் மானகிரிப் புண்ய சக்தி என்ற ஒன்று உண்டு. இதுதான் எத்தகைய கண்ட ஆபத்துக்களிலிருந்து ஒருவரைத் தக்க சமயத்தில் காக்கவும், கண்டங்களில் இருந்து தப்பிக்கவும் உதவும்.
பொதுவாக அதிகண்ட நேரத்தில் அமையும் பிரதோஷ பூஜையில் பங்கு கொண்டு வந்தால், பிரதோஷ நேரத்திலேயே வறுமை காரணமாக வெறும் மாங்கல்யச் சரடை அணிந்திருக்கும் ஏழைப் பெண்களுக்கு மாங்கல்ய தானம் அளித்தல், கிராமத்தில் விவசாயிகளின் பசுக்களுக்கு, காளை மாடுகளுக்குக் கருப்புக் கயிற்றில் சங்குகளைக் கோர்த்த மாலைகளை அளித்தல் தக்க கண்ட நிவர்த்திக்கான வழிமுறைகளைத் தருவதாகும்.
குரு மற்றும் சனி கிரக பல சக்திகளை நன்கு விருத்தி செய்வதின் மூலமும் கண்டத்திலிருந்து தப்பிக்கும் நல்வழிகள் கிட்டும். பொதுவாக, ஜாதகத்தைப் பார்த்துக் கண்டத்தை அறிந்து கொள்ளலாம் எனினும், இதை அறிந்தால் மனமும் மிகவும் வேதனைப்படும் அல்லவா! ஆனால் அதே சமயத்தில் ஜாதகம் மூலமாகக் கண்டத்தை அறிந்தால்தான் கூடுதலாகப் பூஜைகளை ஆற்றும் மனப் பக்குவமும் வரும்.
ஜாதகத்தால் அறியப்படுவது மதியறி கண்டம் என்றும், ஜாதகத்தால் காணப்படாததாக மறைபொருளாக இருக்கின்ற கண்டப் பகுதிக்கு அதீத கண்டம் என்றும் பெயர். பலத்த கண்டம் எனில் உயிர்ச் சேதம் மட்டுமல்லாது எதிர்பாராத விதமாக உடல் ஆரோக்ய இழப்பு, சொத்து இழப்பும் ஏற்படும்.
இவ்வாறு சிறு கண்டங்கள் முதல் பெருங் கண்டங்கள் வரை வாழ்வில் அமைந்து வரும் பலவிதமான கண்ட விளவுகளைத் தீர்க்க, அதிகண்ட யோகம் அமையும் நாட்களில், கண்டீஸ்வரர், நீலகண்டர் எனப் பெயர் வழங்கும் ஆலயங்களில் (உ-ம் திருநீலக்குடி, காரைக்குடி அருகே மானகிரி) தேனபிஷேகம் செய்து தேன் கலந்த சர்க்கரைப் பொங்கல் காப்பு இட்டுத் தானமாக அளித்து வழிபட்டு வருதல் வேண்டும்.

இரத்த அழுத்தம்
குறைக்கும் யோகம்

பத்தோடு பதினொன்றாக! என்ற சொல் வழக்கு அலட்சிய மனப்பான்மையை, முக்கியமான விஷயத்தை வேடிக்கையாக, மிகவும் சாதாரணமாகக் கையாள்வதை நடைமுறையில் குறிப்பதாகும். ஆனால் இதற்கான உண்மையான பொருள் வேறு! பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பதற்கும் பத்தோடு பதினொன்றாக! என்ற முதுவாக்கியத்திற்கும் நிறைய நாளநாடி வாக்கியப் பிணைப்புகள் உண்டு.
பத்து என்பது நிறைவையும், பதினொன்று மீண்டும் தோன்றுவதையும் குறிப்பதால், தசமித் திதி, ஏகாதசித் திதி இரண்டுக்கும் இடையே உள்ள ஒரு நாழிகை நேரமே பிரளயப் பெருஞ் சுடராழி எனப் போற்றப் பெறுகின்றது. இத்திதிகளின் இணைப்பில் ஆற்றப் பெறும் பெருமாள் தரிசனம், பூஜைகளுக்கு மகத்தான மனசாந்தம் தரும் சக்திகள் உண்டு. இந்த இணைப்பையே பசித்த பசி என யோகமார்கமாய்க் குறிப்பர். ஏனெனில் பசி என்பது நிறைய இருப்பதற்கும், நிறைந்து முடிந்ததற்கும் உள்ள இடைவெளிதானே! அதாவது பசிதானே நிறைவுக்கு ஆதாரமாகிறது.
தானாகப் பசித்தல், சரியாக உண்ணாது பசித்தல், உணவு சக்தி குறைந்து பசித்தல், விரதமிருந்து ஏற்படும் பசி எனப் பசிக்குப் பல காரண, காரிய, யோகப்புல குணங்கள் பல உண்டு. எனவே பசி என்பதும் சில வகை யோக சக்திகளைத் தருவதாகும். எனவேதான் பசியை உணர வைத்து, பக்குவமான யோக சக்திகள், காரிய சித்திகளைத் தரும் வகையிலான விரத வகை நோன்புகள், பண்டிகைகள் பலவும் நம் பெரியோர்களால் அளிக்கப்பட்டுள்ளன.

இரு மூர்த்திகளின் இணைந்த தோற்றம்
அவளிவநல்லூர் சிவத்தலம்

பசியோடு இருக்கையில்தான், தினசரி ஒரு வேளை உணவுக்கே வழியற்ற ஏழைகளின் பசி மற்றும் வறுமைத் துன்பங்கள் புரியலாகும். ஏழைகள் மிகுந்த பசியால் வாடினால், அப்பசியில் கிளம்பும் வடவாக்னி எனும் நெருப்பு சக்திகள், கிராம, நகர, மாநில, நாடு என அந்தந்தத் துறை ஆட்சியாளர்களை மிகவும் பாதிக்கும். இதுவே மக்கள் செய்வது மன்னன் தலையில் என்ற முதுமொழியின் ஆன்மீகப் பொருளாகும்
எனவே பொது வாழ்வுத் தொண்டிற்காக அரசியல் துறையில் இருப்பவர்கள், மிகுந்த புண்ணிய சக்திகளைத் தரும் நல்ல பொதுப் பணிகளை ஆற்றுவதோடு, மக்கள் சமுதாயத்தின் பொதுப் பணத்தை நிர்வகிக்க வேண்டிய மிக, மிகப் பொறுப்பான நிலையில் உள்ளமையால், தீய கர்ம வினைகளைச் சேர்த்துக் கொள்ளா வண்ணமும், தீவினைகள் சேரா வண்ணமுமாய், மிகவும் ஜ ாக்கிரதையாக வாழ்ந்து, அவ்வப்போது, வேள்வி வழிபாடுகளை, தான, தர்மங்களை ஆற்றித் தீவினைக் கர்ம விளைவுகளை பஸ்மம் செய்தும், கழித்தும் மிக, மிக கவனமாக வாழ்தல் வேண்டும்.
சமுதாயப் பொது வாழ்வில் இருப்போர்க்கு, ராஜராஜ சோழன், கரிகால் வளவன் போன்ற - இறைவனோடு நேரிடையாக உரையாடும் வண்ணம் இறைபக்திச் செழுமை பெற்ற - தர்மமிகு நம் பண்டையத் தமிழ் மன்னர்களின் வரலாறு நல்ல வழிகாட்டுதலாகும்.
வறுமையால், நோன்பால், நோயால், விரதத்தால், உடலால் ஏற்க இயலாமையால் ....  எனப் பசித் தோன்றலிலும் பல வகைகள் உண்டு. நோயால், வேலை பளுவால் ஏற்க வேண்டிய நேரத்தில் உணவை ஏற்க முடியாமல் போவதும் பசி முடக்கப் பசி வகையைச் சார்ந்ததாகிறது.
பவதி பிட்சாந் தேஹி! என்பதாக, உடலில் உறையும் அன்னமாத்ரய தேவதைகள் ஏற்கும் பிட்சாக்னிப் பூஜை வகையே பசி என்பதும், ஆன்மீகப் பூர்வமாகப் பசிக்கு அளிக்கப் பெறும் விளக்கமுமாகும்.
பசித்துப் புசி! என்பதை, பசித்தவுடனேதான் புசிக்க வேண்டும் என்பதாக மட்டுமல்லாது, பசியை ஒரு வகை யோகாக்னியாகவே, நம் முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். ஏகாதசி விரதம் என்பது வயிற்றைப் பட்னி போடுவது என்பதை விட, ஒடுங்கி அடங்கும் அடக்க ஒடுக்க யோகமாகச் சித்தர்கள் விளக்குகின்றனர்.

ஸ்ரீஉலகளந்த பெருமாள்
காஞ்சிபுரம்

திதி என்பது விண்ணில் சூரிய, சந்திர கிரகங்கள் இருக்கும், இடத்தை, தூரத்தைக் குறிக்கும் அளவீடென நாமறிவோம். மேலும் சூரியன் பித்ருகாரகராகவும், சந்திரன் மாத்ருகாரகராக, மதிகாரகராகவும் பொலிகின்றார் அல்லவா! எனவே, வானியலில் ஏற்படும் சூரிய, சந்திர கிரக அசைவுகள், மனித உடலிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இவ்வகையில் பதினோரு வகையிலான வயிற்றுப் பகுதி நாள சக்திகள் ஆக்கம் பெறும் நாளாக ஏகாதசி தினம் அமைகின்றது. இந்நாளில் குடல், வயிற்றுச் சுரப்பிகளில் பல மாற்றங்கள் ஏற்படும். இவற்றை அனுசரித்தே ஏகாதசி நாளுக்கான விரதம், உணவு அமைப்பு நம் பெரியோர்களால் அளிக்கப் பட்டுள்ளது.
தசமித் திதி அன்று பத்து வகை நாளங்களில் ஆக்க சக்திகள் பெருகுவதால்தான், இவற்றை ஆன்மப் பூர்வமாகப் பயன்படுத்தும் வகையில் தசமித் திதி நாளில் பாத யாத்திரை, கூடுதல் வகையான அடிப் பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம், நடைப் பிரதட்சிணம் போன்றவை பகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இவற்றை நம் முன்னோர்கள் தசமித் திதியில் கடைபிடித்தமையால், உடல் களைப்புற்றுத் தசமித் திதியில் உண்ணும் உணவின் அளவும் மிகவும் அதிகமாக இருக்கும். இதை அனுசரித்தும், உணவு நாளங்களுக்கு ஓய்வு தரும் வண்ணமுமாய், தசமிக்கு அடுத்த நாளான ஏகாதசியில் நல்விரதமும் அமைந்தது.
ஏகாதசித் திதியன்று ஏகபாதச் சிவமூர்த்தி, ஏகபாத விஷ்ணு மூர்த்தி (வாமனர், திரவிக்ரமர், உலகளந்தப் பெருமாள்) தரிசனம் மிகவும் விசேஷமானதாகும். தினமுமே ஒற்றைக் காலில் சற்று நேரம் நின்று பழகி வந்தால், குறிப்பாக, ஏகாதசித் திதி நாளில் பயின்று வந்தால், உடல் உப்புதல், ரத்த அழுத்தக் குறைவு, அதிக ரத்த அழுத்த வகை நோய்கள் வராது தற்காத்துக் கொள்ளலாம்.
மனித உடலில் வலது கண் சூரிய சக்திகளையும், இடது கண் சந்திர சக்திகளையும் உணர்விப்பதாகும். மார்பிலும் வலம்புரி ஓட்டம், இடம்புரி ஓட்டம் எனவும் உண்டு. வரணை, அசி எனும் இரண்டு நதிகள் சஙகமிக்கும் தலமே காசி! இங்கு ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது பன்மடங்குப் பலன்களைத் தரும். எனவே ஏகாதசியில் அசி என்பது இரண்டு வகை சக்திகளைப் பிணைத்துத் தருவதால், குடும்பத்தில் கணவன், மனைவி இடையே பரிபூரண அன்பு மலர, இருவருமே ஏகாதசி விரதம் இருத்தல் நன்று.
தோப்புக் கரணத்தில் வலது, இடது காதுகளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து எழுகையில் உடலில் ஒரு வகை யோக ஈர்ப்பு சக்தி ஏற்படுகின்றது. இது மார்பில் துலங்கும் வலம்புரி ஓட்டம், இடம்புரி ஓட்ட சக்திகளைச் சீர் செய்கின்றது. தினமுமே 108 முறை தோப்புக் கரணம் இட்டு வந்தால் இருதய நோய்கள், மூட்டு நோய்கள், சுவாச, கப நோய்கள் அண்டாது தற்காத்துக் கொள்ளலாம். தசமித் திதியன்று பலரும் ஒன்று சேர்ந்து பத்துத் திசை (எட்டுத் திசை + கீழ் நோக்கு, மேல் நோக்கு) கூட்டுத் தோப்புக் கரணம் இட்டு, நர்தன விநாயகரை வணங்குதல் மகத்தான சமுதாய வள வழிபாடு ஆவதுடன், உற்றம், சுற்றம், அலுவலகத்தில் உள்ள மனவேறுபாடுகளைக் களைய உதவும்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam