அத்தோணம் இத்தோரணம் எத்தோரணம் முத்தோரணம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

மூன்றாம் பிறை முத்தோரணம்

குருமங்கள கந்தர்வ லோகத்திலிருந்து இந்த பூவுலகை தூய்மைப்படுத்தி அதில் நல்ல ஜீவன்களையும், நல்ல ஜீவ சக்திகளையும் உருவாக்கும் திருவுள்ளம் கொண்டு தோன்றிய நம் குருமங்கள கந்தர்வா 2008ம் ஆண்டு தம் யதாஸ்தானமான குருமங்கள கந்தர்வ லோகத்தை அடைந்தார் என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.
தன்னுடைய தெய்வீக பொறுப்பாக இப்பூவுலகில் 51 ஜீவ சமாதிகளை உருவாக்கி எழுந்தருளி பூலோக ஜீவன்களுக்கெல்லாம் 32 அறப் பலன்களையும் இனிதே முழுவதுமாக அருளியவரே நம் சற்குரு. பிள்ளையார் பூவுலகில் தோன்றிய ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியை எப்படி கணேச மூர்த்தியின் பிறந்த நாளாக கொண்டாடி நாம் அனைவரும் மகிழ்கிறோமோ அதே போல் நம் சற்குரு மீண்டும் குருமங்கள கந்தர்வ லோகத்தில் எழுந்தருளிய திருநாளே மூன்றாம் பிறை முத்தோரண நாள் என்பதாகும்.

ஆனந்தம் ஆனந்தமே!

கிருத யுகம், கலியுகம் போன்ற லோகங்கள் லட்சக் கணக்கான ஆண்டுகள் வியாபித்து இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு யுகமும் தோன்றிய சுபமுகூர்த்த நாளை நாம் கொண்டாடி பலன் அடைவது போல நம் சற்குரு குருமங்கள கந்தர்வ லோகத்தை அடைந்த நன்னாளை பூலோக வாசிகள் கொண்டாடி பெரும் பலன் பெறலாம் என்பதே நம் சற்குரு நமக்காக அருளும் இனிய சித்த அனுகிரகமாகும். வரும் ஆடி மாதம் மூன்றாம் பிறை தினமே நம் சற்குரு முதன் முதலாக குருமங்கள கந்தர்வ லோகத்தில் எழுந்தருளிய தினமாகும்.
இதைப் பற்றி பல வருடங்களுக்கு முன் குறிப்பிடும்போது நம் சற்குரு, “பூமியைப் போல் அல்ல குருமங்கள கந்தர்வ வாசிகள், அண்ணன் எப்போ சாவான் திண்ணை காலியாகும், என்ற எண்ணத்தில், கற்பனையில் மிதப்பவர்கள் அல்ல அடியேனுடைய லோக வாசிகள். எத்தனை யுகங்கள் ஆனாலும் அடியேன் வரும் வரை அந்த சீட் அருகிலேயே காத்திருந்து அந்த சீட்டை சுத்தமாக துடைத்து துடைத்து வைத்து, கண்களில் ஒற்றிக் கொண்டு, அடியேன் வரவுக்காகக் காத்திருப்பவர்களே குருமங்கள கந்தவர்வ லோகத்தைச் சேர்ந்தவர்கள்...அடியேன் மேல், அடியேனுடைய வார்த்தைகளில் அசையா நம்பிக்கை கொண்டவர்கள்...”, என்றார்.

ஸ்ரீஅகத்திய பிரான்
கரிவலம்வந்தநல்லூர்

அப்போது ஒரு அடியார், “வாத்யாரே, தங்கள் லோகத்திலிருந்து வந்த யாராவது தற்போது நமது ஆஸ்ரமத்தில் இருக்கிறார்களா?” என்று கேட்டார். நம் சற்குரு ஒரு புன்முறுவலுடன், “அடியேன் லோகத்தைச் சேர்ந்த எவருமே இந்த ஆஸ்ரமத்தில் இல்லை என்பது மட்டுமல்ல, இந்த பூமியிலேயே அடியேன் லோகத்தைச் சேர்ந்த எவரும் இல்லை என்பதே நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி. அந்த அளவு குரு பக்தி உடையவர்கள் குருமங்கள கந்தர்வ லோக வாசிகள்.”
“வானத்தைச் சுட்டிக் காட்டி அதோ தெரிகிறது பார் வெள்ளைக் காக்கை என்றால் காக்கை எப்படி வெள்ளையாக இருக்க முடியும் என்று யோசிக்க மாட்டார்கள். ‘சுவாமி, அந்த காக்கைகளுக்கு தற்போது என்ன உணவிட வேண்டும்?’ என்று கேட்பார்கள். அருகில் இருக்கும் ஐந்து நாற்காலிகளைப் பார்த்து இந்த ஆறு நாற்காலிகளையும் அந்த அறையில் வைத்து விடு என்று சொன்னால் எந்த அறை என்று கேட்பார்களே தவிர இங்கே இருப்பவை ஐந்து நாற்காலிகள்தானே என்று கேட்கவே மாட்டார்கள். அந்த அளவு குரு நம்பிக்கை அவர்களுடையது ...”, என்றார் நம் சற்குரு தொடர்ந்து.
வரும் 30.7.2022 சனிக் கிழமை அன்று மக நட்சத்திரம், அமிர்த யோகம் கூடும் சுபதினத்தில் நம் சற்குரு குருமங்கள கந்தர்வ லோகத்தில் எழுந்தருளும் நாள் அமைவது நம் பூலோக மக்களின் பெரும் பேறே. இந்த சுப முகூர்த்த நாளையே மூன்றாம் பிறை முத்தோரணம் என்று சித்தர்கள் அழைக்கின்றனர். சனிக் கிழமையில் பிரகாசிக்கும் இந்த அமிர்தயோக சக்திகளை பெறும் முகமாக அமைந்த சில வழிபாடுகளை மட்டும் அடியார்கள் இங்கு அறிந்து பயன்பெறலாம். மூன்றாம் பிறையை சிவபெருமான் தன் ஜடாமுடியில் சூடி சந்திர மௌலீஸ்வரராக அருங்காட்சி அருள்கின்றார் என்பது கோடிக் கணக்கான சிவானுகிரகங்களில் ஒன்றே.
நமது பூலோகத்தில் ஒரே ஒரு சூரியன், ஒரே ஒரு சந்திரனை மட்டுமே நாம் தரிசிக்க இயலும். குருமங்கள கந்தர்வ லோகத்திலோ 108 சூரியன்களும், 108 சந்திரன்களும் பிரகாசிக்கின்றனர் என்றால் இதன் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியுமா ? எனவே சிவபெருமான் நிமிர்புன் சடையை அலங்கரிக்கும் சந்திர பகவானின் ஒளிக் கிரணங்களில் நம் குருமங்கள லோகத்தில் எழுந்தருளிய நம் சற்குருவின் அனுகிரக கிரணங்களும் ஒளி வீசும் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் சித்த இரகசியமாகும்.

சோழி சுவை சந்திர சுவையே !

இத்தகைய சந்திரமௌலீஸ்வர கிரணங்களின் சக்தியைப் பெற நாம் கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் உள்ள அனைத்து வாயில்களையும் மூன்று தோரணங்களால் அலங்கரித்தல் மிகவும் சிறப்பாகும். வாழைக் கன்றுகள், முதிர்ந்த வாழை மரங்கள், பாக்கு, ஈச்சம் பழங்கள், தேங்காய், இளநீர் குலைகள், தேங்காய் குருத்து, தென்னம்பாளை, தென்னை மட்டைகள் போன்ற பல தாவரங்களாலும் அலங்கரித்தலால் நாம் இத்தகைய முத்தோரண சக்திகளைப் பெறலாம். முத்தோரணம் என்பது மூன்று தோரணம், முத்து ஆரணம், முன்னிலை அலங்காரம் என்றெல்லாம் விளங்குவதால் இந்த அனைத்து அலங்காரங்களையும் இறை மூர்த்திகளுக்கு நிறைவேற்றுதல் சிறப்பாகும்.

கரி சத்யத்தை வணங்கும்
காட்சி கரிவலம்வந்தநல்லூர்

முத்தோரண வழிபாட்டிற்கு உகந்த திருத்தலமாக கரிவலம்வந்தநல்லூர் விளங்குவதற்கு பல சுவையான ஆன்மீக காரணங்கள் உண்டு. கரிவலம்வந்தநல்லூர் என்ற திருத்தல நாமத்தில் நான்கு மெய்யெழுத்துக்களுக்கு மீதம் உள்ள எட்டு உயிர்மெய் எழுத்துக்கள் குசாவாக அமையும். நல்லூர் என்ற திருத்தல நாமத்தின் மூன்று மடங்கே குருவிற்கு உரிய மூன்று எழுத்துக்கள் அல்லவா, கரிவலம்வந்தநல்லுர் என்ற 12 எழுத்தும் குரு சக்திகளுடன் திகழ்வதுதானே. இந்த குரு சக்திகளைப் பெறவே முத்தோரணம் என்ற பிரதட்சிண முறை சித்தர்களால் அருளப்பட்டுள்ளது. அதாவது முதலில் பிரதட்சிணமாக திருக்கோயிலை வலம் வந்து ஒரு சுற்று பிரதட்சிணம் நிறைவேறிய பின், திரும்பி அப்பிரதட்சிணமாக மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வருவதே ஒரு சுற்று முத்தோரண பிரதட்சிணமாகும். பிரதோஷ தினங்களில் நிகழ்த்தும் சோம சூக்த பிரதட்சிணம் போன்றதே இது. இவ்வாறு தொடர்ந்து மூன்று பிரதட்சிணங்களை மூன்றாம் பிறை நாட்களில் நிகழ்த்துவதே மூன்றாம் பிறை முத்தோரண வழிபாடாகும்.
ஒரு முறை நம் சற்குரு ஸ்ரீபிரகதீஸ்வரர் நந்தி திருப்பணிக்காக தஞ்சாவூர் சென்றிருந்தார். அப்போது நம் அடியார் ஒருவர் இல்லத்தில் தங்கியிருந்தார் நம் சற்குரு. அந்த அடியார் வீட்டில் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அந்த படத்தில் ஸ்ரீசாய்பாபா அமர்ந்திருந்த கோலத்தைப் பற்றிக் கூற முடியுமா என்று அந்த அடியார் கேட்டபோது நம் சற்குரு அதற்கான விளக்கத்தை அளித்தார்கள். ஆனந்த தியானம், ஆனந்தாதீத தியானம் என்றெல்லாம் அழைக்கப்படும் பாபாவின் தியானத்தைச் சுட்டுவதே அப்படம். தன்னுடைய தூல உடலை அணுவிலும் சிறிய அளவில் சுருக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் தன்னுடைய சூட்சும சரீரத்தை ஒரு லட்சம் மைல்கள் விஸ்தீரணத்திற்கு பெருக்கிக் கொள்ள வேண்டும்.

விரல் அமைப்பை இங்குள்ள வீடியோ படத்தில் இருப்பதுபோல் அமைத்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் பாபா ஆனந்த தியானத்தை ஆரம்பிக்கும்போது இந்த பூலோகத்தில் மட்டும் அல்ல, இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களுமே பாபாவின் சுண்டு விரல் என்னும் புதவிரலை அடைந்து அங்கிருந்து மேலே ஏறி இரு குரு விரல்கள், சுக்கிர விரல்களின் இடையே அமையும் ஆனந்த புட்குழி என்னும் அமிர்த சாகரத்தில் மூழ்கி, குளித்து, எல்லையில்லா ஆனந்தத்தை அனுபவித்து மீளும். அவரவர் இறை நம்பிக்கையைப் பொறுத்து, கர்ம வினைகளின் படிவுகளைப் பொறுத்து இந்த ‘பரம ஆனந்தத்தின்’ அளவும் கால அளவும் மாறுபடும். சுமார் பத்தாயிரம் மைல்களுக்கு மட்டுமே பூலோகத்தில் நாம் அறிந்த உயிர்கள் வியாபித்து இருக்கும் என்றாலும் ஒரு லட்சம் மைல்கள் விஸ்தீரணத்தில் வாழும் கண்ணுக்குத் தெரியாத, நாமறியா உயிர்கள் எத்தனை கோடி இருக்கும் என்பதை நாம் உணர்ந்தால்தான் பாபாவின் அருமை பெருமை தெரியவரும். இவ்வளவு பிரம்மாண்டமான தியான நிலையில், உயிர்களுக்கு எல்லாம் அளிக்கும் அனுகிரகத்திற்கு பாபா எடுத்துக் கொள்ளும் நேரமோ பூலோக கணக்கில் சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே.

சிந்துப்பட்டி

நம் சற்குரு அளித்த மேற்கண்ட விளக்கத்தைக் கேட்ட அனைவரும் மெய்மறந்து நின்றனர் என்பதைக் கூறவும் வேண்டுமோ. அந்த அடியாரும் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு படத்தை நம் சற்குருவிடம் அர்ப்பணிப்பதே முறை என்ற நோக்கில் அந்த பாபா படத்தை சற்குருவிடம் அளித்து விட்டார். அனைத்து இறை தூதுவர்களின் மகிமைகளை எல்லாம் உள்ளங்கை நெல்லிக் கனியாக காணும் திறம் பெற்ற நம் சற்குரு அந்தப் படத்தை வைத்து என்ன செய்யப் போகிறார் என்று நீங்கள் நினைக்கலாம்.
துரும்பையும் பிரம்மா ஆக்குபவர்தானே சற்குரு ?
நந்தி திருப்பணி இனிதே நிறைவேறி நம் சற்குரு சென்னை புறப்படும் சமயம் அந்த படத்தை நம் சற்குருவிடம் அந்த தஞ்சை அடியார் அளிக்க நம் சற்குருவும் தன்னுடன் தன் பெட்டியை தூக்கிக் கொண்டு வந்த அடியாரிடம் அதை அளித்து, “இந்தப் பெட்டிக்குள் இந்த படத்தை வைத்து விடு...”, என்று கூறினார். அந்த அடியாருக்கு ஒன்றும் புரியவில்லை. காரணம் மனிதக் கணக்கில் அந்தப் பெட்டியை விட அந்தப் படத்தில் நீளம் அதிகமாகவே இருந்தது. சற்குரு, முடியாத காரியத்தை நமக்கு அளிக்க மாட்டாரே என்ற நம்பிக்கையில் அந்த பெட்டிக்கு மேல் படத்தை வைத்து நேரடியாகப் பார்த்தபோது அந்த படத்தின் நீளம் பெட்டியின் நீளத்தை விட அதிகமாகத்தான் இருந்தது. நம் சற்குரு தனக்கு அளித்த இந்த பாடத்தைப் பற்றி அந்த அடியாரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எவ்வளவு நாட்களுக்கு ? சுமார் 25 ஆண்டுகள் ஆயின ... சற்குரு அளித்த இந்த உபதேசத்தின் மகத்துவத்தை அறிந்து கொள்வதற்கு. அது என்ன ? அதை நீங்களும் அறிந்து கொள்ளுங்களேன்.

உடலுக்குள் உயிர் இருக்கிறதா ? உயிருக்குள் உடல் இருக்கிறதா ? உயிருக்குள்தான் உடல் இருக்கிறது என்பதே சித்தர்கள் அளிக்கும் விளக்கம். இந்த விளக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடிந்தால்தான் தூல சரீரத்திற்கும் சூட்சும சரீரத்திற்கும் உள்ள தொடர்பை மனிதர்கள் அறிந்து கொள்ள முடியும். பாபாவின் ஆனந்த தியானமும் இந்த தத்துவத்தை, உண்மையை விளக்குவதே. அனைத்து உயிர்களும் பாபாவின் உடலில் புகுகின்றன எனும்போது நாம் தூல சரீரத்தை நினைத்துக் கொள்வதால்தான் ஆனந்த தியானம் அளிக்கும் பரமானந்தத்தை நம்மால் உணர முடிவதில்லை. மேலே கூறிய அடியாரைப் போல் நீங்கள் ‘சோம்பேறி’ அடியாராக இருக்க மாட்டீர்கள் அல்லவா ? நீங்கள் விரைவிலேயே அதாவது இந்த சுபகிருது ஆண்டு இறுதிக்குள் தூல சரீரத்திற்கும், சூட்சும சரீரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள வழிசெய்வதே மூன்றாம் பிறை தரிசனங்களின் மகத்துவமும், சிறப்பாக கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் மேற்கொள்ளும் மூன்றாம் பிறை முத்தோரண வழிபாட்டின் மகிமையும்.

ஸ்ரீசக்கரம்
கரிவலம்வந்தநல்லூர்

சுபகிருது என்னும் இவ்வருடத்தைக் குறிக்கும் ஐந்து எழுத்துக்களுக்கு உரியதாக அமையும் இம்முத்திரையில் சுக்கிர விரல் என்ற சுபவிரல் ஆள்பவரை நோக்கியும் மற்ற நான்கு விரல்களும் (சு பகிருது) எதிர்த்திசையிலும் அமைவதால் இந்த ஆனந்தாதீத முத்திரை இவ்வருடத்திற்கு உரிய முத்திரையாக நம் சற்குருவால் அங்கீகரிக்கப்படுகிறது. ஸ்ரீசத்யசாய் பாபாவின் ஆனந்த தியானத்தை நிறைவேற்றும் அளவிற்கு அடியார்கள் உயரவில்லை எனினும்
ஓம்
பூர் புவ சுவஹ
தத் சவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ ப்ரசோதயாத்
என்றவாறு காயத்ரீ மந்திரத்தை ஐந்து பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு கட்டை விரல்கள், ஆள்காட்டி விரல்கள், நடுவிரல்கள், மோதிரவிரல்கள், சுண்டுவிரல்கள் என்ற ஐந்து ஜோடி விரல்களுக்கும் காயத்ரீ மந்திரத்தின் ஐந்து பகுதிகளையும் அர்ப்பணிப்பதாக, கீழிருந்து மேலும், மேலிருந்து கீழும் சுழல்வதாக தியானித்து வருவது என்பது அனைவராலும் நிறைவேற்றக் கூடிய ஒரு சுபலட்சண தியான முறைதானே. திருத்தலங்களில் அல்லது அவரவர் இல்லங்களில் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து இந்த மந்திர ஜபத்தை கைக்கொள்ளலாம்.
கீழிருந்து மேலே எண்ணம், மந்திரம் சுழல்கையில் பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் மனக் கிலேசங்களும், குழப்பங்களும், பெண் உறவு முறைகளால் ஏற்படும் வேதனைகளும் தணியும். மேலிருந்து கீழாக மந்திரம் தவழ்கையில் ஆண்களுக்கு ஏற்படும் கொடுமையான பிரச்னைகளும், பெண்கள் மேல் ஏற்படும் அதீத மோகங்களும், காம எண்ணங்களும், ஆண் உறவு முறைகளில் ஏற்படும் சீர்கேடுகளும் நயமடையும்.

சிறுவயதிலிருந்தே இத்தகைய காயத்ரி ஜபமுறையைக் கையாண்டு வந்தால் ஆண்கள் எள்ளைக் கையால் பிழிந்து எண்ணெய் எடுக்கும் உடல் வலிமையையும், பெண்கள் பார்வையால் சூரியனையும் நிறுத்தும் மன வலிமையையும் பெறுவர்.
காயத்ரீ மந்திரம் போன்று ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியார் அருளிச் செய்த கொடிக்கவித் துதியின் ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு விரல் தொகுதிக்கும் கீழிருந்து மேலாக, மேலிருந்து கீழாக நினைவை விரவி, ஓதி வழிபாடு செய்தலும் அற்புத பலன்களை வர்ஷிக்க வல்லதே.
கடல் சோழிகள் என்பவை கடலோரத்தில் இயற்கையாக ஒதுங்கும் சோழிகளே. இவற்றையோ அல்லது நம் ஆஸ்ரமம் போன்று உத்தம குருமார்கள் நடத்தும் ஆஸ்ரமத்திலிருந்து பெறப்பட்ட சோழிகளையோ குழந்தைகளிடம் அளித்து அதைக் கொண்டு அவர்கள் விதவிதமாய் தெய்வீக உருவங்களை அமைக்கும்படி, வரையும்படி ஊக்குவித்து வர வேண்டும். இதனால் அவர்களின் தூல சூட்சும சரீரங்கள் உன்னத நிலை பெறும். அனைவரும் ஸ்ரீசத்யசாய் பாபா அளவிற்கு உன்னத நிலையை அடைவார்களோ இல்லையோ, ஆனால், அனைவரும் தங்கள் உடல் மன வளங்களை நிச்சயமாய்ப் பெருக்கிக் கொள்வர் என்பது உறுதி.

வெண்கொற்றக் குடையில்
பவனி வரும் மாதா அமிர்தானந்தா

மூன்றாம்பிறை தரிசன நாட்களில் மேற்கண்ட சோழிகளை சந்திர பகவானிடம் அர்ப்பணித்து வணங்குவதால் சிறுவர்கள், பெரியோர்கள் என அனைவரும் மன வளக் கலையில் சிறந்து திகழ்வார்கள். தாம்பத்ய உறவில் ஏற்படும் ஆனந்தம் ஒரு சில நிமிடங்களே என்றாலும் இதை பல மணி நேரங்களுக்கு நம் மனமானது சூட்சும சரீரத்தில் பதித்து தொடர்ந்த ஆனந்தத்தைப் பெருக்கிக் கொள்ளும். இதனால் மனித மனம் வஜ்ரம் போன்ற மன உறுதியைப் பெறுவதுடன் எத்தகைய சமூக கேடுகளையும், சமுதாய துன்பங்களையும் நாம் எதிர்நோக்கி வெல்லலாம் என்பதே மனிதர்கள் பெறும் நிரந்தர அனுகிரகமாகும்.
யானையின் தோல் கருமை நிறம் உடையதாக நாம் எண்ணுகிறோம். இது சாதாரண கருமை நிறம் அன்று, எத்தகைய எதிர்மறை சக்திகளையும், வினைகளையும் களையும் இயல்பு கொண்டதே யானையின் ஈருரி ஆகும். இதனால்தான் அப்பர் பெருமான் ஈருரி போர்த்த இறைவனின் புகழைப் பாராட்டி, இறைவனின் தியாகத்தை வானளாவ வர்ணிக்கிறார். இவ்வாறு இறைவன் போர்த்தும் ஈருரியை மனிதர்கள் ஒரு விநாடி கூட போர்த்த முடியாது என்பதே யானைத் தோலின் சிறப்பாகும். ஒரு சில நொடிகளிலே மனிதனின் உடல் பஸ்பமாகி விடும்.
நம் சற்குரு திருக்கோஷ்டியூர் திருத்தலத்திற்கு சென்றிருந்தபோது சற்குருவை வரவேற்க ஒரு யானையை ஏற்பாடு செய்திருந்தனர் அங்கிருந்த அடியார்கள். யானையின் துதிக்கையில் ஒரு மலர் மாலையைக் கொடுத்து அதை நம் சற்குருவிற்கு அணிவிக்குமாறு யானையிடம் அதன் பாகன் கூறியபோது யானை மறுத்து விட்டது. யானைப் பாகன் மிரட்டியும், கூக்குரல் இட்டும், யானையை ஓட்டும் குச்சியால் அடித்துத் துன்புறுத்தியும் அந்த யானை வலியைப் பொறுத்துக் கொண்டதே தவிர, அந்த மாலையை கடைசி வரை நம் சற்குருவிற்கு அணிவிக்கவே இல்லை. நம் சற்குருவும் அந்த யானையை வற்புறுத்தாது விட்டுவிடுங்கள் என்று அந்த யானைப் பாகனிடம் இதமாக கேட்டுக் கொண்டார்.
அந்த யானை, மலர் மாலையில் பதிந்திருந்த தீய எண்ணங்களை எல்லாம் பஸ்மம் செய்வதற்காக தானே வைத்துக் கொண்டது, அந்த தீய சக்திகள் நிறைந்த மலர் மாலையை ஒரு உத்தமருக்குச் சூட்ட அந்த யானை தயாராக இல்லை, இதுவே யானையின் கூரிய அறிவுத் திறன் கொண்ட தியாகச் செயலாகும்.
இது போன்றதே நீங்கள் இங்கு காணும் ஸ்ரீசத்ய சாயியை வணங்கும் யானையின் காட்சியுமாகும். பாபா அணிந்திருக்கும் தூய வெண்ணிற பட்டு வஸ்திரம் நம் பூலோகத்தில் கிடைப்பது அல்ல, சத்ய சாய் லோகத்திலிருந்து பிரத்யேகமாக பராங்குசம் என்னும் வஸ்திர தேவதைகளால் தினமுமே கொண்டுவரப்படும் உடைகளே அவை. இங்கு நீங்கள் காணும் வெண்பட்டு வஸ்திரங்கள் எத்தகைய தீய சக்திகளையும் களையக் கூடிய இயல்பு உடையவை. அதை தன்னை பணிந்து வணங்கும் யானைக்கு பரிசாக அளிப்பவரே ஸ்ரீசத்ய சாய் பாபா.
சூரியன், சூரிய சக்தி என்பவை நாம் நினைப்பதுபோல் ஒன்றே ஒன்று அல்ல. உதாரணமாக,
• பூமியில் கிழக்கே உதிக்கும் சூரியன்
• சூரிய மூர்த்தி, சூரிய நாராயணன், கோடி சூரிய பிரகாசர் என்ற நாமங்களில் எல்லாம் எழுந்தருளிய இறை மூர்த்திகள்

ஸ்ரீசூரிய பகவான் துடையூர்

• நவகிரக மூர்த்தியாக திருத்தலங்களில் எழுந்தருளிய சூரிய மூர்த்திகள்
• துவார பாலகர்களாய் திருத்தலங்களில் எழுந்தருளிய மூர்த்திகள்
• சிவ சூரியன் நாமத்தில் எழுந்தருளிய தெய்வ மூர்த்திகள்
• மனிதர்கள் விரல்களில் மோதிர விரல் என்ற சூரிய சக்தி விரல்கள்
• சூரியனுக்கு உரிய நவதான்யமான கோதுமை, தாமரை மலர்கள்
• சூரிய சக்திகளை உடைய, சூரிய சக்திகளைப் பிரதிபலிக்கும் திருத்தல தீர்த்தங்கள்
• சூரியன், பாஸ்கரன், உதய சூரியன், ரவிச்சந்திரன் போன்ற சூரிய சக்தி நாமங்கள்
• அவரவர் ஜாதகத்தில் எழுந்தருளிய சூரிய கிரகம்
• எண் ஒன்றிற்கு உரிய சூரிய பகவான்
என்றவாறு எல்லையில்லாது பிரகாசிப்பவை சூரிய சக்திகளாகும்.
அதே போல் கருப்பு என்ற வண்ணத்தைக் குறிக்கும் சக்திகளும் உண்டு
• காளி தேவி, கிருஷ்ண பகவான், மூத்த திருமகள் போன்ற கருநிற தெய்வங்கள்
• கருப்பண்ண சுவாமி, சங்கிலிக் கருப்பு, ஒண்டிக் கருப்பு போன்ற கருப்பு தெய்வ மூர்த்திகள்
• கருநீல வடிவுடைய சனி கிரகம்
• கரிய மேகம்
• நடுவிரல் என்னும் சனிவிரல்
• அனைத்து வண்ணங்களும் சேர்ந்த கலவை
• தலை முடி
• யானையின் தோல்
• உளுந்து, எள் போன்ற கரிய நிறமுடைய தான்யங்கள்
• கரிய நிறமுடைய மலர்கள்
• எண் எட்டைக் குறிக்கும் சனி பகவான்
• ஜாதகத்தில் எழுந்தருளிய சனீஸ்வரன்
என்றவாறு கரிய நிறமுடைய, கரிய நிறத்தைக் குறிக்கும் சக்திகளும் கோடி கோடியே. தலை முடி என்பது கரிய நிறத்தைக் குறிப்பதாகக் கொண்டாலும் கண் புருவம், மீசை, தாடி, உடலின் மற்ற பகுதிகளில் உள்ள ரோமங்கள், மார்பகங்களில் உள்ள ரோமங்கள், அக்குள் பகுதி ரோமங்கள் என்றவாறு இந்த ரோமங்களும் வெவ்வேறு வண்ணங்களை, சக்திகளை உடையவையே.

ஸ்ரீசனீஸ்வர பகவான்
முசிறி

ஏன், கருப்பு, வெள்ளை என்ற வண்ணங்களுக்கு இத்தகைய ஒரு நீண்ட விளக்கத்தை அளிக்கிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். இத்தகைய நீண்ட பட்டியலை அளித்தாலும் வெள்ளை, கருப்பு என்பதை நாம் எந்த மானுட சிந்தனையாலும் பகுத்துணர முடியாது என்பதே இந்த நிறங்களின் பிரத்யேக சக்தியாகும். உதாரணமாக, வைரம் என்று நாம் அறிந்த இரத்தினக்கல் கரிய நிறமுடைய கரிதானே. கிருஷ்ணன் என்ற கரிய நிறமுடைய கடவுள் பொன்னிறமாய்ப் பிரகாசிப்பவர்தானே. ஐராவதம் என்ற யானை கண்ணைக் கூசச் செய்யும் பிரகாசத்துடன் பவனி வருவதுதானே ?
கரியான வைரத்தில் total internal reflection என்றவாறு பிரதிபலிக்கும் ஒளி சக்திகளே வைரத்தின் பளபளப்பிற்கு காரணம் என்பது நீங்கள் அறிந்ததே.
மனிதனின் கர்ம வினை என்ற ஒன்றே இத்தகைய வண்ண பேதங்களை உருவாக்க வல்லது. இந்த கர்ம பேதமே நம் பார்வையையும் எண்ணத்தையும் மாற்றுகிறது என்றால் மிகையாகாது. இதை உணர்த்தியவரே ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியார் ஆவார். இந்த மகோன்னத சித்தர் திருஅண்ணாமலை திருக்கோயிலின் கொடிமரத்தடியில்தான் எப்போதும் அங்கு தோன்றும் கொடி மர நிழலில் அமர்ந்திருப்பார். சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு அவர் ஏதோ கொடி மர நிழலில் இளைப்பாறுவதுபோல்தான் தோன்றும். நம் சற்குரு போன்று தெய்வீக கண்கள் படைத்தவர்களுக்கு மட்டுமே அந்த உத்தம சித்தர் கொடி மர நிழலில் தோன்றும் எத்தகைய கர்மங்களை எல்லாம் பஸ்மம் செய்து கொண்டிருக்கிறார் என்ற இரகசியம் தெரிய வரும். கர்ம வினையை உடைய மனிதர்களுக்கு மட்டுமே நிழல்கள் பூமியின் மேல் படியும். வள்ளலார் சுவாமிகள் போன்ற உத்தமர்களுக்கு நிழல் பூமியில் படியாது.
அதே போல் திருஅருணாசல புனித பூமியில் திகழும் கொடி மரத்திற்கும் நிச்சயம் நிழல் கிடையாதுதான். ஆனாலும் மனிதர்கள், மற்ற உயிரினங்களின் கர்மங்களையும் திருஅருணாசல கொடி மரம் தாங்கி அருள்வதால் அதுவும் நிழலுடன் திகழும், அந்த நிழலில் தோன்றும் கர்ம வினைகளை ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியார் அந்த கொடி மர நிழலில் தங்கி, ஊர்ந்து சென்று மக்களின் கர்ம வினைகளை எல்லாம் பஸ்மமாக்கினார் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய உமாபதி மகாத்மியமாகும். உமா பதி என்பது சிவ சக்தி ஐக்யமாக அனைத்து பிரபஞ்ச ஜீவன்களையும் குறிக்கும் ஒரு காரணப் பெயரே.

எப்படி விலை மதிப்பே இல்லாத ஒரு கரித் துண்டும் ஒளியை தன்னுள் பிரதிபலிக்கும் சக்தியைப் பெறுவதால் அது விலை மதிப்பற்ற வைரமாகிறதோ அது போல் மனித இதயமும் தன் உள்ளத்துள் இறை சக்தியைத் தொடர்ந்து பிரதிபலிக்கச் செய்தால் மனிதன் விலை மதிப்பற்ற வைரமாகப் பிரகாசிப்பான் என்று உணர்த்துவதே ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியார் அருளிய கொடிக்கவித் துதியாகும்.

குருமங்கள் சக்திகள் பொலியும்
வெண்கொற்றக்குடை

இதை உணர்த்துவதே அடியார்கள் உணர்ந்த ஒரு அடிமை கண்ட ஆனந்த அனுபவமாகும். சமீபத்தில் 21.5.2022 அன்று கஜாரண்யேஸ்வரர் திருத்தலத்தில் நம் சற்குருவின் பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது குருமங்களகந்தர்வ சக்திகள் பொலியும் யானை சாணத்தை நம் அடியார்கள் பெற்று ஹோமத்திற்காக தங்கள் இல்லங்களில் வைத்திருந்தபோது அந்த சாணத்திலிருந்து வெண் காளான்கள் தோன்றி பிரகாசித்ததையே இங்குள்ள சித்திரத்தில் நீங்கள் தரிசிக்கிறீர்கள்.

குடை என்பதற்குப் பல பொருட்கள் உண்டு. கொற்றம் என்பதற்கும் பல அர்த்தங்கள் உண்டு. வெண் கொற்றக் குடை என்றால் வெற்றியை நல்கும், பாதுகாப்பை அளிக்கும், வீரத்தை வர்ஷிக்கும் சாதனம் என்று பொருள். இத்தகைய அனுகிரகத்தைத்தானே இறை வழிபாட்டை மேற்கொள்ளும் அடியார்களும், சற்குருமார்களைத் தரிசனம் செய்யும் பக்தர்களும் வேண்டுவது, விரும்புவது.
மழை வெயிலிலிருந்து பாதுகாப்புப் பெறவே குடையைப் பயன்படுத்துவார்கள். இறை மூர்த்திகள், மகான்கள், வேந்தர்கள் இவர்கள் பவனி வரும்போது குடையைப் பிடித்து வருகிறார்கள் அல்லவா ? இதுவே வெண் கொற்றக் குடை என்பதாகும். இந்த வடிவத்தில்தான் காளான் என்ற தாவரமும் திருஆனேஸ்வரர் திருத்தலத்தில் யானைகளின் அனுகிரகமாக, கஜ குடைகளாக அளித்தன. சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் நிகழ்த்தும் கணபதி ஹோமத்தில் இந்த வெண்காளான் குடைகளையும் ஆஹூதியாக அளித்தலால் கிட்டும் பலன்கள் அளப்பரியவையே. குறிப்பாக, பாதுகாப்பு இல்லாதோர்க்கு பாதுகாப்பும், வசதி வாய்ப்பு இல்லாதோர்க்கு அரிய வாய்ப்பை அளிப்பதும், அனைத்து துறைகளிலும் வெற்றியை நல்குவதும் இத்தகைய ஹோமத்தின் பலன்களாகும்.

சுவேதாரண்யம் என்றால் வெண் காடு என்று பொருள். சுவேதாரண்ய ஈசனாக, பால் வண்ண நிறத்தில் அருள்பவரே கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் அருள்புரியும் ஈசன் ஆவார். ஸ்ரீசக்கரம் என்ற யோக சக்கரத்தைப் பற்றி பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். 43 முக்கோணங்கள் அமைந்ததே ஸ்ரீசக்கரமாகும். கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் தொடர்ந்து வழிபாடுகள் இயற்றி வந்தால் சுவேதம் ஆரண்யம் என்ற இரு வார்த்தைகள் சுட்டும் பொருள் ஒன்றில் ஒன்று லயமாகி இரண்டும் ஒரே இறை சக்தியாக பரிணமிக்கும். அப்போது 43 கோணங்கள் என்பது மறைந்து (14 x 3 = 42 + 1 = 43) ஒரே சக்தியாக பரிணமிக்கும். இந்த அற்புதத்தையே இங்குள்ள திருத்தலத்தில் திகழும் ஸ்ரீசக்கரம் உணர்த்தும் தெய்வீகப் பரிசாக நீங்கள் தரிசிக்கிறீர்கள்.

அன்பு நிறைந்த உள்ளம்
இறைவன் நிறைந்த இல்லம்

சுவேதம் என்றால் வெண்மை என்றும், சுயம்பாக ஒலிக்கும் வேதம் என்றும் பொருள் உண்டு. அதாவது தன் உள்ளில் ஒலிக்கும் வேத ஒலியை கேட்க வல்லவனே, உணர வல்லவனே சுவேதன். ஒவ்வொரு மனிதனுமே ஸ்வேதன்தான், இந்த உண்மையை உள்ளங்கை நெல்லிக் கனியாக உணர உதவும் திருத்தலமே கரிவலம்வந்தநல்லூர் ஆகும். ஸ்வேதர்களே வருக, வருக !
நாய்க்குடை என்றும் காளான்களை சிலர் அழைப்பதுண்டு. நம் சற்குருவோ தன்னை நாய் என்று அழைப்பதைப் பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். தாங்கள் ஸ்வேதம் ஆரண்யம் என்ற சொற்கள் சுட்டும் பொருளை உடனடியாக அறிய முடியாவிட்டாலும் தங்களை நாய் என்ற, இறைவனின் நன்றி மறவா ஜீவன் என்ற, குருவின் அடிமை என்ற, பணிவுத்தன்மையை உருவாக்கிக் கொள்வதும் ஸ்வேதாரண்ய இறைவனை உணரும் ஒரு மார்க்கமே. ஸ்வேதம் ஆரண்யம் என்ற இணைப்பு சிவ சக்தி ஐக்யத்தின் ஒரு அம்சமாக இருப்பதால் இதன் மகிமையை சொல்லவும் வேண்டுமோ ?
உதாரணத்திற்காக 32 மண் அகல்களை வைத்து ஸ்வஸ்திக் ஜோதி தீபங்களை ஏற்றி வழிபடும் முறை இங்கு அளிக்கப்பட்டுள்ளது. திருத்தலங்களில் அல்லது இல்லங்களில் இம்முறையில் இவ்வருடம் முழுவதும், அடியார்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமே இத்தகைய தீப வழிபாடுகளை தாராளமாக கடைபிடித்து பயன்பெறலாம். நம் சற்குரு எழுந்தருளிய குருமங்களகந்தர்வ லோகத்திலிருந்து குரு சக்திகளை தீப கிரணங்களாக ஈர்த்து அடியார்களுக்கு அளிக்கும் வல்லமை இந்த ஸ்வஸ்திக் சக்கரத்திற்கு உண்டு.
மஞ்சள், களி மண், தங்கம், வெள்ளி, பசுஞ்சாணம், யானை சாணம் போன்ற எந்த புனிதப் பொருட்களால் உருவான பிள்ளையார் மூர்த்தியையும் இந்த சக்கரத்தின் நடுவே எழுந்தருளச் செய்து தீப ஆராதனையை நிறைவேற்றலாம்.
இந்த தீப வழிபாட்டுடன் 15, 16 அகல் விளக்குகள் அமைந்த சந்திர பிறையையும், சிறப்பாக மூன்றாம் பிறை தரிசன நாட்களில் சேர்த்துக் கொள்வதும் சிறப்புடையதே.
15 அகல் தீபங்களுக்கு ஒரு சிறப்பும், 16 அகல் விளக்கு தீபங்களுக்கு மற்றோர் சிறப்பும் உண்டு.

பிறையும் ஸ்வஸ்திக் தரிசனமும்

15 அகல் தீபங்களை பிறையாக ஏற்றி ஸ்வஸ்திக் சக்கரத்துடன் இணைக்கும்போது 32 + 15 = 47 என்ற கணக்கில் சந்திரனுக்கு உரித்தானதாக, பால் வண்ண பவளப் பிறை என்ற நாமத்துடன் அமைகிறது. இது ராகு கேது மூர்த்திகளுக்கு உரித்தான 4, 7 என்ற எண் சக்திகளைக் கொண்டிருப்பதால் காலசர்ப்ப யோக விளைவுகளைத் தணிக்கும் இரட்சையாக இது செயல்படுகிறது.
16 தீபங்கள் அமைந்த சந்திர பிறையை இணைக்கும்போது அது 32 + 16 = 48 என்ற குரு சக்தி பொலியும் இயந்திரமாக, முத்தோரண முழுத்தாரை என்ற நாமத்துடன் மலர்கிறது. இது மூன்றாம் பிறையை அலங்கரிக்கும் ஒரு எண் கணித சூத்திரமாகவும் பொலியும்.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போட்டி நடத்தியபோது தங்கள் இல்லத்தை மங்கள பொருட்களால் அலங்கரித்து தீபங்களை ஏற்றி அதை அன்பால், பண்பால் நிறைத்த பாண்டவர்களின் மேன்மையைப் பற்றி உணர்வீர்கள். இது போலவே நம் இல்லங்களையும் அன்பால், பண்பால் நிறைக்கும் பல வழிபாடுகளில் ஒன்றே ஸ்வஸ்திக் ஜோதி வழிபாடாகும்.

நம் சற்குருவின் இல்லத்தில்
* நல்லதை நினை
* நல்லதை பேசு
* நல்லதை செய்
என்ற செயல்பாடுகளைக் குறிப்பதாக
* Think Good
* Tell Good
* Do Good
என்ற வாசகங்கள் அமைந்த மூன்று மர பீரோக்கள் இருக்கும். இந்த பீரோக்களில் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், புத்தகங்கள், அன்னதானத்திற்கு தேவையான பணம் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டிக்கும். இவ்வாறு குழந்தைப் பருவத்திலிருந்தே நல்ல விஷயங்களைப் பற்றி நினைத்து, பேசி வந்தால்தான் நாட்கள் செல்லச் செல்ல நல்ல காரியங்களை செயல்படுத்தும் அளவிற்கு நம் மனமும் விரியும் பொருளாதாரமும் பெருகும். அடிக்கடி நம்முடைய உரையாடல்களிலும் இந்த நல்வார்த்தைகளே அமைவதால் அது சமுதாயத்திற்கும் நலம் பயக்கும் ஒரு வாயு வியாபகமாகவும் அமையும். நம் சற்குரு தன் மனைவியிடம் ஏதாவது பணம் எடுத்து வர வேண்டும் என்றால், “அம்மா, Do Good பீரோவிலிருந்து 300 ரூபாய் எடுத்து வா...”, என்று சாந்தமாக கேட்பார்கள். இதுவே இல்லங்களில் அன்பை விதைக்கும், பரிமாறும் முறைகளில் ஒன்று.

உதயமார்த்தாண்ட தரிசனம்
திருஅண்ணாமலை

இம்முறையில் நீங்கள் இங்கு காண்பதுதான் LOVE என்ற நான்கு ஆங்கில எழுத்துக்களை தாங்கி அமர்ந்துள்ள ஒரு அன்பு குடும்பம். LOVE என்பது 21 எண்ணைக் குறிக்கும் குரு சக்திகளுடன் திகழ்வதே.
நாம் என்னதான் கவனமாக இருந்தாலும் எதிர்மறை சக்தி என்பது நம்மை ஏமாற்றி நம்முள் குடி புகுந்து விடும் என்பதால் நம் வாழ்க்கையை நடத்துவதில் கவனமாக இருக்க இத்தகைய நற்சக்திகளைப் பரப்பும் பொருட்களால் நம் இல்லங்களை நிரப்பி வைத்திருக்க வேண்டும்.
வீணை என்பது சிவபெருமானையே மகிழ்விக்கும் இசையைக் கூட்ட வல்லதுதான். ஆனால், இங்குள்ள வீடியோவில் வீணை வாத்தியத்தின் வால் பகுதியில் யாழி உருவம் அமைந்திருப்பதை நீங்கள் கவனிக்க வாய்ப்பில்லைதான். அப்படியே கவனித்தாலும் அதன் தீய விளைவுகளைப் பற்றி அறிந்திருக்கும் வாய்ப்பு அதை விடக் குறைவே. நம் சற்குரு இத்தகைய யாழி உருவத்தை முடிந்த மட்டும் தவிர்க்கும்படி அறிவுறுத்துவார். நம் ஆஸ்ரமத்தில் ராம லட்சுமணர்கள் அமர்ந்திருக்கும் ஆசனம் யாழி அமைந்த திருவாசியால் அலங்கரிக்கப்பட்டுள்ளதை பலரும் பார்த்திருக்கலாம். அந்த யாழியை நாம் அகற்ற முடியாது என்றாலும் அந்த உருவத்தின்மேல் ஓம் சக்கரத்தை பொருத்தி இருப்பதை இன்றும் நீங்கள் காணலாம். இவ்வாறு நம்முடைய ஒவ்வொரு காரியத்திலும் நற்சக்திகளையே உருவாக்க, இணைக்க பாடுபட வேண்டும். இங்குள்ள வீணையில் யாழியை அகற்றி அதில் அன்னம், தாமரை, சங்கு போன்ற நல்ல உருவங்களை அமைத்துக் கொள்வது சிறப்பாகும்.

சனி பணம் துணை போகும்

நம் பாரதமெங்கும் சில பழமொழிகள் தவறாக பொருள் கொள்ளப்படுகின்றன. அவற்றில் ஒன்றே சனி பணம் துணை போகும் என்பதாகும். நடைமுறையில் இது சனி பிணம் துணை போகும் என்பதாக, அதாவது யாராவது ஒருவர் சனிக் கிழமையில் இறந்தால் அதைத் தொடர்ந்து பல மரணங்கள் அக்குடும்பத்தில் நிகழும் என்றவாறு பல அனர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. இவ்வாறே பல்லி விழுதல், கனவுகள் போன்ற பல விஷயங்களைப் பற்றி நம் அடியார்களே பலவிதமான குழப்பத்துடன் நடமாடுகின்றனர் என்பது நாம் அறிந்ததே.

கால் மாறினாலும் கால்
மாறா ஸ்ரீநடராஜர்

இவை அனைத்தும் மனம் பற்றிய விஷயங்களாக இருப்பதால் கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் மேற்கொள்ளும் மூன்றாம் பிறை தரிசன வழிபாடுகள் எத்தகைய மனக் குழப்பங்களுக்கும் ஒரு மாமருந்தாக அமையும். வரும் 30.7.2022 மூன்றாம் பிறை நாள் சனிக் கிழமையில் அமைவதால் இது மேற்கண்ட குழப்பத்தை எப்படி தீர்க்கும் என்பதை நாம் அறிந்து கொள்வோம்.
எதற்கும் இறுதி முடிவு என்பது நம் சற்குரு அளிப்பதுதானே ? குரு மங்கள கந்தர்வ சக்திகளைக் குறிக்கும் குரு பகவானும், செவ்வாய் பகவானும் ஆட்சி பெற்று விளங்க கந்தர்வத்தை குறிக்கும் சுக்ர பகவான் மிதுனத்தில் எழுந்தருளி உள்ளார். மிதுனத்திற்கு உரிய புத பகவானோ கடகத்தில் எழுந்தருளிய சூரிய பகவானுடன் யோக நிலையில் வீற்றிருக்கிறார். பரிவர்த்தன யோகத்தில் சூரியனும் சந்திரனும் திகழ்வதால் கடக ராசியை வக்ர சக்தியுடன் நோக்கும் சனீஸ்வரரின் பார்வையால் தீய சக்திகள் செயலிழக்க, நற்காரியங்கள் பெருகும் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய சுவையான ஜோதிட அம்சங்களாகும். அதனால் எந்த அளவிற்கு 30.7.2022 அன்று தான தர்மம் போன்ற சுயநலமற்ற காரியங்களில், நற்காரியங்களில் பணத்தையும் பொருளையும் உடலையும் மனத்தையும் செலவிடுகிறோமோ அந்த அளவிற்கு இவை அனைத்தும் நம்முடன் துணை போகும், நமக்கு நல்லதையே வர்ஷிக்கும், பெருக்கும் என்பது பொருள்.

ஸ்ரீகாளிதேவி லால்குடி

மார்த்தாண்டம் என்றால் சூரியன், உதய மார்த்தாண்டம் என்றால் உதய சூரியன் என்பது ஒரு மேலோட்டமான பொருளே. ஸ்ரீஉதயமார்த்தாண்டம் என்ற நாமத்தில் ஈசன் கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். உதயமார்த்தாண்டம் என்ற சூரிய மூர்த்திக்கு அருள் புரிந்ததால் ஈசன் இத்தகைய ஒரு சிறப்புப் பெயரைப் பெற்றார். ஒவ்வொரு கிரகத்திற்கும் அனுகிரகம் அளிக்கும் காலம், சக்தி பெருகும் காலம், வலிமை பெறும் காலம் என்று உண்டு. இம்முறையில் சூரியன் ஒரு ராசியில் பிரவேசிக்கும் நேரத்தில் மிகவும் சக்தி உடையதாகத் திகழும், இதுவும் உதய மார்த்தாண்டமே.
ஸ்ரீபாஸ்கரராயர் அருளியது போல் சூரியனின் கதிர்கள் ஏழு நிமிடங்களுக்கு மாறி அமைவதால் 30.7.2022 அன்று நம் சற்குருவின் பிரார்த்தனையால் அபூர்வமான குருமங்கள உதயமார்த்தாண்ட சக்திகள் பொங்கிப் பெருகுகின்றன. இந்த உதயமார்த்தாண்ட சக்திகளை அடியார்கள் பெருமளவில் பெறவே இங்கு பல வழிபாடுகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நல்ல ஆயுளையும், நோயில்லாத உடல் ஆரோக்கியத்தையும், என்றும் மானம் இழக்காத, பறிபோகாத நிலையையும் அளிப்பதே உதய மார்த்தாண்ட சக்திகளின் சில பலன்களாகும். ஏழு நிமிடங்கள் மட்டுமே இந்த உதய மார்த்தாண்ட சக்திகள் பூமியில், குறிப்பாக கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் நிரவும் என்றாலும் இந்த அபூர்வ சக்திகள் நம்மை, நம் பாரம்பர்யத்தை ஏழேழ் பிறவிகளுக்கும் தொடர்ந்து வந்து உறுதுணையாக அமையும்.

ஸ்ரீஆருத்ரா மகரிஷி பெற்ற
ஆருத்ரா தரிசனம் திருஅண்ணாமலை

லால்குடி திருத்தலத்தில் ஸ்ரீநடராஜ மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீகால்மாறிய நடராஜப் பெருமான் உதயமார்த்தாண்ட பிறையுடன், திருவாசியுடன் திகழ்வதை நீங்கள் இன்றும் தரிசித்து மகிழலாம். இவ்வாறு கால் மாறி ஆடும் நடராஜ நாட்டியத்தைப் பற்றி ஒரு புராணமே எழுதலாம் என்றாலும் இங்கு சில சுவையான சித்த இரகசியங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறோம்.
வளர்பிறை சந்திரனும் சூரியனும் இணைந்ததே இங்குள்ள உதயமார்த்தாண்ட திருவாசியாகும். லால்குடி திருத்தலத்தில் உள்ள ஸ்ரீநடராஜர் மண்டபத்தில் ஏழு நடராஜ வடிவங்களும் ஒரு நடனகாளி தேவியின் உருவமும் அமைந்துள்ளன. நாம் கண்ணாடியைப் பார்க்கும்போது அதில் நம்முடைய வலது கால் இடது காலாக மாறி அமைவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதுவேதான் இங்கு நீங்கள் காணும் நடராஜ தத்துவ விளக்கமும். “ஆர் ருத்ரன்?” என்று ஆருத்ர மகரிஷி நடராஜ மூர்த்தியை நோக்கி கேட்டபோது ஸ்ரீருத்ர ஈசன் மிகவும் மகிழ்ந்து தான் யார் என்பதை அம்மகரிஷிக்கு “காட்டி” அருளியதே ஆருத்ரா வழிபாடாக மலர்ந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். சுருக்கமாகச் சொன்னால் நாம் அனைவரும் இறைவனின் பிரதிபலிப்பே. இந்த பிரதிபலிப்பைச் சுட்டிக் காட்டுவதே லால்குடி, மதுரை போன்ற திருத்தலங்களில் அமைந்த கால் மாறி அமைந்த நாட்டியக் கோலமாகும்.
கால் மாறினாலும் நடராஜப் பெருமான் நம்மை அரவணைக்கும் கருணை என்றும் மாறாது என்பதைக் காட்டுவதாகவே இங்குள்ள சந்திரப் பிறையும் சூரியனும் இணைந்த மார்த்தாண்ட திருவாசி அமைந்துள்ளது.

ஸ்ரீவீணா தட்சிணாமூர்த்தி
லால்குடி

லால்குடியில் அருளும் கால்மாறிய நடராஜர் வடக்கு திசையான குபேர திசையை நோக்கி எழுந்தருளி உள்ளார். தெற்கு திசையை நோக்கி எழுந்தருளிய நடராஜப் பெருமானின் பிரதிபலிப்பாக, ஜீவன்களின் தொகுதியாக இவர் துலங்குகின்றார் என்பது ஒரு பொருளானாலும் செல்வத்தை நாடும் ஜீவன்களுக்கு உற்ற துணை, பிரதிபலிப்பாக, துணையாக அருள்வதே காளி சக்தியாகும் என்பதை உணர்விக்கவும் ஸ்ரீகாளி தேவி உக்ர நடன அம்ச தேவியாக அருகிலேயே வடக்கு திசை நோக்கி எழுந்தருளி உள்ளாள். இந்த நடராஜ நடன மண்டபம்
• சப்தபடி நாட்டிய மண்டபம்
• சப்தநிலை குரு சக்தி குசா சக்தி மண்டபம்
• சப்தரிஷி மண்டபம்
• சப்தபதி மண்டபம்
• சப்தமுறை மண்டபம்
• அவரவர் தரிசன மண்டபம்
• ஆருத்ரா தரிசன மண்டபம்
என்றெல்லாம் சித்தர்களால் புகழப்படும். இதில் உள்ள அவரவர், அதாவது அவர் அவர், உதாரணமாக கணவன், மனைவி என்ற சக்திகள், எந்த ஜீவனாக இருந்தாலும் அதற்கு தன்னிலையை அறிவித்து தகைசார்ந்த தகைமையைப் புகட்டும் வழிகாட்டி மண்டபமாகத் திகழ்கின்றது என்பதே இவ்வருடம் லால்குடி நடராஜ மண்டபத்தில் வழிபட்டு நாம் பெறக் கூடிய சக்திகளாகும். ஒருவர் தான் யார் என்று அறிந்த பின்தான் இறைவன் யார் என்பதை அறிந்து கொள்ள இயலும். இதை உணர்த்துவம் இந்த வழிபாட்டின் மகிமையாகும்.

மூன்றாம் பிறை மூவலம்

மூன்றாம் பிறை முத்தோரணம் என்பது போல மூன்றாம் பிறை மூவலம் என்ற ஒரு அபூர்வமான மூன்றாம் பிறை வழிபாட்டு முறையையும் லால்குடி திருத்தலத்தில் பக்தர்கள் மேற்கொள்ளலாம். நடராஜப் பெருமான் மட்டுமல்லாது கன்னிமூலை கணபதி, தட்சிணா மூர்த்தி போன்ற தெய்வ மூர்த்திகளும் பக்தர்கள் வலம் வரும் வகையில் அமைந்துள்ளதே லால்குடி திருத்தலத்தின் முக்கியமான சிறப்பாகும். இக்காரணம் பற்றியே இது திரு தவத்துறை என்று பாராட்டப்படுகிறது. சப்தரிஷிகளும் மூல மூர்த்தியான ஸ்ரீசப்தரிஷீஸ்வரரிடம் ஐக்கியம் கொள்ளும் முன் இந்த முத்தோரண வழிபாட்டை நிறைவேற்றி இனி வரும் பக்தர்களுக்கெல்லாம் வழிகாட்டியாய் அமைந்தனர், அமர்ந்தனர் என்பதும் இந்த வழிபாட்டின் மற்றோர் சிறப்பம்சமாகும்.
கன்னிமூலை கணபதி, நடராஜ மண்டபம், தட்சிணா மூர்த்தி மண்டபம் என்ற வரிசையில் ஒவ்வொரு மூர்த்தியையும் 21 முறை வலம் வந்து வழிபடுதலே மூன்றாம் பிறை மூவலம் என்பதாகும். கற்பனைக்கு எட்டாத பலன்களை வர்ஷிக்கக் கூடியதே இந்த வலமாகும். இறை மூர்த்திகளின் பின்புறமும், நீரின் மேலும், கோலத்தின் அடியிலும் சக்திகள் படியும். இவ்வகையில் ஸ்ரீநடராஜ பெருமானின் பின்னழகை தரிசனம் செய்து பக்தர்கள் பலன் பெறக் கூடிய முறையில் இந்த வலம் அமைந்திருப்பது எத்தகைய சிறப்பிற்கும் ஈடாகாதே. சுவாமியின் பின்னழகை தரிசனம் செய்யும் அதே சந்தர்ப்பத்தில் கால் மாறிய நடராஜ பெருமானையும், அல்லது தத்துவமாக நம்மை நாமே, நம் சுய சிருஷ்டி உருவத்தை தரிசிக்கும் ஒரு அரிய வாய்ப்பும் கிட்டுகிறது என்பதை பக்தர்கள் நினைவில் கொள்ளவும்.

சதுர்த்த மோன நிலை

காயத்ரீ மந்திரத்தை ஜபிக்கும்போது
ஓம்
பூர் புவ சுவஹ
தத் சவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்
என்று ஐந்து பகுதிகளாகப் பிரித்து ஓதும்போது இந்த ஐந்து மந்திரத் தொகுதிகளுக்குள் மந்திரம் ஓதாத நான்கு கால இடைவெளிகள் தோன்றுகின்றன அல்லவா ? இந்த நான்கு இடைவெளிகளை மனிதர்கள் சாதாரணமாக நினைத்தாலும் காலப் போக்கில் இவை பெரும் கர்ம வினை மலையாய்ப் பெருகி பல பிறவிச் சுமைகளை மனிதனுக்கு அளித்து விடும் என்பதால் நம் சற்குரு போன்றோர் இந்த கால விரயத்திற்குப் பரிகாரமாகவும் லால்குடி திருத்தலத்தில் அமைந்துள்ள மேற்கூறிய மூர்த்திகளை 21 முறை வலம் வந்து வணங்கும்படி அறிவுறுத்துகிறார்கள்.

21 x 3 = 63 என்ற மூன்றாம் பிறை மூவலம் அக்னி அம்சங்களுடன் பொலிவதால் எத்தகைய கால விரய தோஷத்தையும் இந்த வழிபாடு பஸ்மமாக்கி விடும். இத்தகைய கால விரயத்தை நீக்கும் வழிபாட்டு முறையையே நாம் சிதம்பரம் திருத்தலத்தில் விளங்கும் நிருத்த கண்டா மணி ஓசையில் இணைத்து அளித்தோம் என்பதை அடியார்கள் அறிவார்கள்.
இதே போல திருக்குற்றாலத்தில் பொழியும் பழைய குற்றால அருவி, ஐந்தருவி என்ற இரு அருவிகளிலும் தீர்த்தம் பெற்று இந்த அருவித் தீர்த்தத்தால் கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் ஸ்ரீஅகத்திய பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றுவதும் கால விரய தோஷங்களுக்கு அற்புத பரிகாரத்தை அளிக்கும். நம் சற்குரு மேற்கூறிய அருவிகளில் நீராடியபோது அளித்த சக்திகளையே இங்கு பக்தர்கள் புனருத்தாரணம் செய்து பெறுகிறார்கள் என்பதே எக்காலத்தும் பெருகும் சித்த சாம்ராஜ்யத்தின் செல்வமாகும். நம் சற்குருவின் 51 ஜீவ சமாதிகளில் பொலியும் ஆதித்ய (சூரியன், 1) சூட்சும (புதன், 5) சக்திகளின் இணைப்பாக 30.7.2022 அன்று கடக ராசியில் பொலியும் சதுர்த்த மோன நிலை அனுகிரகம் அளிக்கின்றது என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் ஆனந்த வர்ஷமாகும்.

திருக்குற்றால திருத்தலத்தில்
வாத்ய இசை !

ஒரு முறை சென்னையிலிருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள ஊத்துக்கோட்டை திருத்தலத்தில் உழவாரப் பணிகள் நிறைவேற்ற நம் சற்குரு அடியார்களுடன் ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்கள். வழக்கம்போல் பஸ்சில் உள்ள டீவியில் மிகுந்த சப்தத்துடன் ஒரு திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் படத்தை சுவாரயஸ்யமாகப் பார்ப்பதுபோல் நம் சற்குருவும் அமர்ந்திருந்தார்கள். அதைப் பார்த்த ஒரு அடியார், “வாத்யாரே, எப்படி உங்களால் இவ்வளவு சப்தத்திற்கு இடையில் இந்த திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது?” என்று கேட்கவே நம் சற்குருவோ, “ஏன் சார், படம் பார்த்து பொழுதுபோக்கும் நிலையிலா அடியேன் இருக்கிறேன், நாங்கள் ஒவ்வொரு வினாடியும் நிறைவேற்ற வேண்டிய பணிகள் ஆயிரமாயிரமாக எங்கள் தலைமேல் குவிந்து உள்ளன. உங்கள் கண்ணுக்கு அடியேன் படம் பார்ப்பது போல் தோன்றும் அவ்வளவே...,” என்றார். “இந்த தியான நிலையை அடியார்கள் மேற்கொள்ள முடியுமா ?” என்று அந்த அடியார் கேட்டபோது இதற்கு விடையாக நம் சற்குரு அளித்த தியான முறையே, யோக நிலையே சதுர்த்த மோன நிலை ஆகும். உதாரணமாக, திருக்குற்றாலம் திருத்தலத்தில் ஒலிக்கும் மேள தாள வாத்யங்களின் ஓசை இங்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் திருக்குற்றால அருவி ஓசையும் ஓங்கார நாதமாக ஒலிக்கின்றது. இந்த ஓங்கார நாதத்தை தெளிவாக உங்களால் கேட்க முடிந்தால் நீங்கள் சதுர்த்த மோன நிலையில் இலயித்து விட்டீர்கள் என்று அர்த்தம். இதற்கு உறுதுணையாக அமைவதே லால்குடி, கரிவலம்வந்தநல்லூர் போன்ற திருத்தலங்களில் நிகழ்த்தும் வழிபாடுகளாகும்.

சக்திபர ஊர்த்துவ தாண்டவ ஸ்ரீநடராஜப் பெருமான்

சதுர்த்த மோன நிலையின் மற்றோர் சிறப்பான அனுகிரகம் ஒளியையும் ஒலியையும் இணைக்கும் பாங்காகும். நடராஜப் பெருமான் ஊர்த்துவ தாண்டவம் நிகழ்த்துகையில் பெருமானுக்கு எதிராக ஆடிய காளி தேவி தன் கால்களை தலைக்கு மேல் தூக்க முடியாத பெண்ணின தன்மையால் தலை குனிந்து தோல்வியைத் தழுவினாள் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். உண்மையில், இதன் பின்னணியில் பல சுவையான நிகழ்ச்சிகள் உள்ளன. ஒலியையும் ஒளியையும் இணைப்பதே ஊர்த்துவ தாண்டவம். இதை இணைப்பதாகவே சிவபெருமான் தன் காலில் இருந்து கழன்று விழுந்த கழலை தன் கட்டை விரலாலும் அடுத்த குருவிரலாலும் மின்னல் வேகத்தில் எடுத்து தன் காதில் அணிந்து கொண்ட சிவ லீலை சுட்டிக் காட்டுகின்றது.

ஸ்ரீஅக்னீஸ்வரர் நல்லாடை

இந்த உண்மைக்கு சான்றாகவே திருக்குற்றாலத்தில் பொலியும் சித்திரசபையும் குற்றால அருவிகளில் இணையும் ஓங்கார நாதமும் ஒலியும் ஒளியுமாய் இறைவனின் படைப்பிற்கு, எம்பெருமானின் நாட்டிய சுவைக்கு மெருகூட்டுகின்றன. ஊர்த்துவம் என்றால் மேலே எழுதல் என்று பொருள். சிவபெருமான் காலை மேலே தூக்கி கழலை காதில் மாட்டும்போது தோன்றும் ஓங்கார நாத ஒலியை காளி தேவியால் உருவாக்க முடியாது என்பதும் காளி தேவியின் ‘தோல்விக்கு’ காரணமாகும். ‘ஒலியாகி ஒலிக்குள் ஒளிந்தவன் தானே சிதம்பரத்தான்’, அப்படியானால் அந்த சிதம்பரத்தானைத் தவிர ‘வேறார்’ ஒலியை உருவாக்க முடியும் ?!
பொதுவாக, நடராஜப் பெருமான் அக்னி அம்சமான தன் வலது காலைத் தூக்கி ஆடும் தாண்டவக் கோலக் காட்சியைத் தான் அடியார்கள் பலரும் தரிசித்து இருப்பார்கள். இதற்கு விதி விலக்காக மாயவரம் அருகே நல்லாடை திருத்தலத்தில் எம்பெருமான் தன் இடது காலைத் தூக்கி ஆடும் தாண்டவ கோலத்தை தரிசிக்கலாம். நல்லாடை என்பது அக்னி சக்திகள் பொலியும் பரணி நட்சத்திர தலமாகப் பொலிவதால் எம்பெருமானின் வலது கால் ஊர்த்துவ தரிசன சக்திகளை சாதாரண மானிடர்களால் தாங்க முடியாது என்பதே இதன் முக்கிய காரணமாகும். இதற்காகவே மூன்று மண்டபங்களுக்கு வெளியிலிருந்து மூலவரைத் தரிசிக்கும்படியாக இத்தலம் அமைந்துள்ளது. இந்த ‘குளிர் சக்தி’ தரிசனமும் பக்தர்களால் ‘தாங்கும்’ அளவிற்கு இருப்பதற்காக அம்பாளின் நேர் முகப் பார்வையில் இணையுமாறு இங்கு சுவாமியைத் தரிசித்தல் நலம்.

அரிதரிதாய் அமர்ந்தாரே

ஆணும் பெண்ணும் இணைந்த கோலத்தை அர்த்தநாரீஸ்வரக் கோலம் என்று அழைக்கிறோம். சிவபெருமானின் தோற்றங்களில் தட்சிணாமூர்த்தியின் உருவத்தைத் தவிர அனைத்து சிவ கோலங்களுமே நின்ற கோலத்தில்தான் அமைந்துள்ளன. இதற்கு விதி விலக்காக நல்லாடை திருத்தலத்தில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி உள்ளார் என்பதே வேறெங்கும் காண முடியாத அபூர்வ காட்சியாகும். ‘சிவ’ என்பதே எழுச்சி மிக்க கோலம்தான். இந்த எழுச்சி மிக்க கோல வர்ணனையை இன்றும் நீங்கள் காதார கேட்டு மனதார உணர வழிவகை செய்வதே நம் சற்குருவின் தெய்வீக உரைகளாகும்.

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் நல்லாடை

இத்தகைய எழுச்சி மிக்க வழிபாட்டில் எழும் அக்னி சக்திகளை சாதாரண ஜீவன்களால் கிரகித்துப் பயன்பெற முடியாது என்ற காரணத்தால் சுவாமியே அமர்ந்த கோல அர்த்தநாரீஸ்வர சொரூபத்தில் பிரகார, கோஷ்ட மூர்த்தியாய் எழுந்தருளி உள்ளார். ஸ்ரீஅகத்திய பெருமான் சுவாமியைக் காணும்போதெல்லாம், “தனியே எம்பெருமானை மட்டும் தரிசிப்பது கிடையாது. அடியேன் ஏதாவது ஏடாகூடமாகக் கேட்டு விட்டால், சுவாமி கோபித்துக் கொண்டு ஒரு சினப் பார்வையே சற்றே வீசினாலும் போதுமே, அந்த ருத்ராக்னியில் அடியேன் பஸ்மமாகி விடுவேனே. ஆனால், அன்னை பார்வதி உடன் இருக்கும்போது அடியேன் சுவாமியைப் பார்த்தால் அடியேன் என்ன அபத்தமான வேண்டுகோளை இறைவன் முன் வைத்தாலும் அன்னை அதை பெரிதுபடுத்தாமல், நம் குழந்தை ஏதோ தெரியாத்தனமாய்க் கேட்கிறது, கோபித்துக் கொள்ளாதீர்கள், என்று நம் சுவாமியிடம் வினயமாய்த் தெரிவிப்பாள் அல்லவா?” என்று கூறுவார்.

ஸ்ரீசுந்தராம்பிகை நல்லாடை

இவ்வாறு சுவாமியும் இறைவியும் மக்களுக்காக பக்தர்களுக்காக அருளும் வினயக் கோலமே அமர்ந்த கோல ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரக் கோலமாகும். மேலும் அக்னி அம்சங்கள் பொருந்திய துர்கை தேவிக்கு அருகில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி உள்ளதால் பக்தர்கள் துர்கையின் அக்னி சக்திகளால் புனிதமாக்கப்பட்டு சிவ சக்திகளைத் தாங்கும் வல்லமையைப் பெறுவார்கள். மேலும் துர்கையின் தாய்மை சக்திகளும் எதிரில் எழுந்தருளி உள்ள குழந்தை சண்டேஸ்வர மூர்த்தியால் சிறப்புப் பெறுகிறது என்பதும் நல்லாடை திருத்தலம் சுட்டிக்காட்டும் இறை லீலைகளாகும். இத்தகைய ஈருரி சக்திகளைப் பெறவே இந்திரனின் யானை வாகனமான ஐராவதம் நல்லாடை திருத்தலத்தை வலம் வந்து பல யுகங்கள் வழிபட்டது என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சித்த சுவையாகும். இந்த ஈருரி அக்னி சக்திகளும் கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் வழிபாடு இயற்றும் பக்தர்களுக்கு அனுகிரகமாக கிட்டுகின்றன.
நல்லாடை அல்லது கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் பல யுகங்கள் வழிபட்டு மனிதர்கள் பெறும் பலனை ஒரே வழிபாட்டில் நம் சற்குரு அளிக்கவல்லவர் என்றால் சற்குருவின் கருணைதான் என்னே என்னே !
எந்தப் பொருளையும் தூய்மைப்படுத்தும் இயற்கையான இயல்பு அக்னிக்கு உண்டு. நீர் என்பது அடுத்தபடியாக வருவதுதான். ஆனால், அனைத்துப் பொருட்களையும் அக்னியால் தூய்மைப்படுத்துவது என்பது இயலாததுதானே. எனவே பெரும்பாலான வழிபாடுகளில் மந்திரங்களில் தோன்றும் அக்னி சக்திகளே உடலையும் மனதையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்துவதாக அமைகின்றன. இவ்வாறு நல்லாடை என்பது அக்னி சக்தியால் தூய்மைப்படுத்தப்பட்ட ஆடை என்பதும் ஒரு பொருளாகும்.

மீனாட்சி தேவிக்கும் சோமசுந்தரப் பெருமானுக்கும் மதுரையம்பதியில் திருமணம் நிகழ்ந்தது அல்லவா ? இந்த திருமணத்திற்கு தம்பதிகள் அணிய வேண்டிய ஆடைகளை நல்லாடை திருத்தலத்தில் நிகழ்ந்த ஹோமத்தில் ஆஹூதியாக இட்டு, அந்த ஆடைகளை இறைப் பிரசாதமாக இறைத் தம்பதிகளுக்கு அளித்தவரே மிருகண்டு மகரிஷி ஆவார். இவ்வாறு தம்பதிகளுக்கு அளித்த கூரை புடவை ரகங்களை தயார் செய்த ஊர்தான் அக்காலத்தில் மாயவரம் அருகில் உள்ள கூரைநாடு ஆகும். இதையொட்டி இன்று நாமும் கூரைநாட்டுப் பகுதிகளில் கிடைக்கும் சுத்த பருத்தியாலான மஞ்சள் நிற ஒன்பது கஜ புடவைகளையும், எட்டு அல்லது பத்துக்கு ஆறு என்ற நூல் வேட்டிகளையும் நல்லாடை இறை மூர்த்திகளுக்கு அணிவித்து மற்ற ஜோடி புடவை வேட்டிகளை இத்தல ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருவடிகளில் சமர்ப்பித்து அந்த ஆடைகளை கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் தம்பதிகளுக்கு தானமாக அளித்தலால் கிட்டும் பலன்கள் அமோகமே.

முருகவேளின் அருட்கைவேல்

நமசிவாய, ராம ராம என்ற மந்திரங்களை கைவிரல்களால் ஜபிப்பதுபோல் முருக மந்திரத்தையும் கைவிரல்களால் ஜபிக்க முடியுமா என்று நம் சற்குருவிடம் வினவியபோது நம் சற்குரு அளித்த விடையை இங்கு அளித்துள்ளோம். மனித ஆரோக்யத்திற்கு இன்றியமையாதது வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடிகள் ஆகும். உண்மையில் இந்த மூன்று நாடிகளால் மனித ஆரோக்யம் அமைகிறது என்பதை விட மனித உடல், மனம், உள்ளத்தின் ஆரோக்ய நிலையையே இந்த மூன்று நாடிகளும் சுட்டிக் காட்டுகின்றன. புற்று நோய்களின் தன்மையை உறுதி செய்ய தற்காலத்தில் கிர்லியன் போட்டோ முறை (Kirlian photography) கையாளப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். இறந்த மனித செல்லிலிருந்து கதிர்கள் வராதபோது அது புற்று நோயின் அறிகுறியாக கொள்ளப்படுகிறது.

உண்மையில் இறந்த உடல் செல்களுக்குள் ஒளிக் கதிர்கள் செல்வதில்லை என்பதே நம் முன்னோர்கள் சூக்கும சரீரம் குறித்து தெரிவித்த தெய்வீக உண்மையாகும். ஒரு முறை திண்டுக்கல் அருகில் உள்ள ஸ்ரீகள்ளியடி சித்தரைத் தரிசிக்க ஒரு அடியார் தன்னுடைய நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு சென்றபோது, சுவாமி அந்த அடியாரைப் பார்த்து, “என்னப்பா செத்துப் போன ஆளை எல்லாம் நண்பன் என்று கூட்டிக் கொண்டு திரிகிறாயே?” என்று கேட்டாராம். அந்த அடியாருக்கு ஒன்றும் புரியவில்லை. அடுத்த நாள் அந்த நண்பர் இறந்து விட்டார் என்று அறிந்தபோதுதான் சுவாமிகள் இவ்வாறு சூட்சும சரீரத்தின் இயல்பைப் பற்றி தெரிவித்தார்கள் என்று புரிந்து கொண்டாராம்.
மனித ஆரோக்ய நிலையைக் குறிக்கும் இந்த மூன்று நாடிகளைப் பற்றி அறிய பன்னெடுங்காலம் கை தேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் பயில வேண்டும். நடைமுறையில் இது சாத்தியாமாகக் கூடியதா ? அப்படியே இந்த நாடிகளைப் பற்றி அறிந்தாலும் அவற்றை சமன் செய்வது என்பது கைதேர்ந்த வைத்தியர்களால் மட்டுமே இது சாதிக்கக் கூடியது அல்லவா? சூடு, குளிர்ச்சி என்ற சாதாரண விஷயத்தையே மனிதனால் புரிந்து கொள்ள முடியாது. உதாரணமாக, தயிர் உண்ணுதல் சூட்டை அளிக்கும் என்பதை நாம் அறிவோம். அதற்காகவே தயிரில் நீரை ஊற்றி கடைந்து பின்னர் அந்த தயிரை உபயோகித்தால் அது உடல் நலத்திற்கு குளிர்ச்சியை அளிக்கும். இந்த கடைந்த தயிரை இரவில் கூட சாதத்தில் ஊற்றி உணவருந்தலாம் என்று கூறுவதே சித்த வைத்தியம்.

ஸ்ரீகுறுகு முருகன்
திண்ணியம்

இவ்வாறு இந்த மூன்று சித்த வைத்திய நாடிகளைப் பற்றி அறிவது தற்கால மனிதர்களுக்கு சாத்தியம் இல்லை என்பதால் நம் சற்குரு போன்ற மகான்கள் முருக மந்திரத்தை அளித்து இந்த மூன்று நாடிகளின் தெய்வீக சக்தியை சாதாரண மனிதர்களும் பெறும் வழிபாட்டு முறையை அளித்துள்ளனர். மனிதனின் உள்ளங்கைகளில் ஆயுள் ரேகை, புத்தி ரேகை, இதய ரேகை என்ற மூன்று முக்கிய ரேகைகள் உண்டு. மூளை, இதயம், மற்ற உடல் உறுப்புகளுக்கும் தொடர்பை உடையதே இந்த மூன்று ரேகைகளாகும்.
இடது கையில் உள்ள இந்த மூன்று ரேகைகளின் மேல் வலது ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல்களை வைத்து வள்ளி முருகா தேவானை என்று ஜபிப்பதே முருக நாம மந்திர ஜபமுறையாகும். ஒவ்வொரு ரேகைக்கும் ஒரு நாமமாக வள்ளி, முருகா, தேவானை என்றோ அல்லது வ ள் ளி, மு ரு கா, தே வா னை என்று மூன்று ரேகைகளுக்கும் ஒரு முருக நாமத்தை ஓதி ஜபிப்பதும் ஏற்புடையதே. இவ்வாறு குறைந்தது ஒரு நாழிகை நேரமான 24 நிமிடங்களுக்கு ஜபித்து பின்னர் வலது ஆள் காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல்களை ஒன்று சேர்த்து இடக் கை மணிக்கட்டின்மேல் வைத்து மூன்று நாடிகளை தொட்டு சரவணபவமுருகா என்று ஓதி இடது மணிக்கட்டில் நாம் இரத்தத் துடிப்பாக. நாடித் துடிப்பாக குறைந்தது ஒரு நிமிடம் ஸ்பரிசித்து, உணர்வதே ஒரு சுற்று முருக நாம ஜபமுறையாகும்.
அவரவர் சூழ்நிலை வசதியைப் பொறுத்து எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த ஜப முறையைக் கையாளலாம். ஓரிடத்தில், இல்லத்தில், திருத்தலங்களில் அமர்ந்தோ அல்லது ஆலயங்களை, மலைத் தலங்களை வலம் வரும்போதோ கூட இம்முறையில் முருக நாமத்தை ஜபிக்கலாம். படுக்கையில் படுத்தபடி, இரவில் தூங்கும் முன் இவ்வாறு ஜபித்தபடியே உறங்குவது கூட தவறு கிடையாது. நல்ல உடல், மன ஆரோக்யத்தை அளிக்கக் கூடிய அற்புத வழிபாடு இது.
புற்று நோயைக் கண்டறிந்து இறந்த செல்களை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தி ஓரளவு ஆரோக்யத்தை அளிப்பதாக தற்போதைய விஞ்ஞானம் கூறுகின்றது. இவ்வாறு இறந்த செல்களுக்கும் உயிரை, ஜீவ சக்தியை அளித்து முழுமையான ஆரோக்யத்தை அளிக்க வல்லதே மேற்கூறிய முருக நாம ஜப முறை என்றால் எத்தனை பிறவிகள் ஓடாய்த் தேய்ந்தாலும் நம் சற்குருவிற்கு நம்மால் நன்றிக் கடன் அளிக்க முடியுமா?

திண்ணன் வழி குறுகு

ஆன்மீக வரலாற்றில் மிக மிகக் குறுகிய காலத்தில் இறைவனை அடைந்த பெருமையை உடையவரே கண்ணப்ப நாயனார் ஆவார். மூன்றே நாட்களில் இரவு பகலாக இறைவனுக்காக ஏங்கி கண்ணீர் சிந்தியதால் இறைவனை அடைந்தார் என்பது நாம் அறிந்ததே. கலியுகத்தில் மூன்று நாட்கள் அழுது புலம்பினால் நிச்சயம் இறைவனை அடையலாம் என்ற ராமகிருஷ்ண பரமஹம்சரின் கூற்றை மெய்பிப்பதாக கண்ணப்ப நாயனாரின் வரலாறு நிச்சயம் வழிகாட்டும் என்றாலும் இத்தகைய ஆழ்ந்த பக்தியை வளர்த்துக் கொள்ள அப்பெருமான் மேற்கொண்ட வழிபாடுகளை சித்தர்களே அறிவர்.

ஸ்ரீகோஷ்டீஸ்வரர் திண்ணியம்

கண்ணப்ப நாயனார் தன் முற்பிறவிகளில் வழிபட்ட தலமே லால்குடி அன்பில் அருகிலுள்ள திண்ணியம் சிவத்தலமாகும். வயலூர் போன்று தந்தையையும் விஞ்சி முருகன் சிறப்பைப் பெற்றுள்ளதால் இத்தலம் தற்போது திண்ணியன் முருகன் கோயில் என்றே பிரசித்தி பெற்றுள்ளது. சிறு வயதில் கண்ணப்ப நாயனார் இறைவன் மீது அசையா, திடமான பக்தியைப் பெற்றிருந்ததால் அவர் திண்ணன் அதாவது, திடமான மனதை உடையவர் என்றே அழைக்கப்பட்டார். குறுகு என்றால் குறுகிய காலத்தில் பலன் தருவது என்று பொருள். குறுவை நெல் என்பதைப் பற்றி நீங்கள் அறிவீர்கள்தாமே. இவ்வாறு குறுகிய காலத்தில் பலன் தரக் கூடிய தெய்வமாக திண்ணியன் முருகப் பெருமான் பொலிவதால் காஞ்சி கனி பரமாச்சாரியார் இத்தல முருகப் பெருமானை குறுகு முருகன் என்றே சிறப்பித்துப் போற்றுகிறார். திருச்சி மலைக்கோட்டை விநாயகப் பெருமானை கருணை பொலியும் காருண்ய மூர்த்தி என்று பாராட்டுவார்கள். காரணம் வலது கையே வேண்டாம், இடது கையால் சுவாமிக்கு வணக்கம் தெரிவித்தால் கூட அதையும் பக்தர்களின் உத்தம வழிபாடாக ஏற்று அருள்புரியும் தெய்வமே மலைக்கோட்டை விநாயகர் ஆவார். இந்த வள்ளலின் தம்பி மட்டும் இதற்கு சளைத்தவராகவா இருப்பார். அதனால்தான் இந்த அற்புத வள்ளல்பெருமானை திண்ணன் வணங்கி மிகக் குறுகிய காலத்தில் இறைவனை அடையும் அனுகிரகத்தைப் பெற்றார்.
ஒருவன் தான் மட்டும் இறைவனை அடைவது என்பது சுயநலமாக ஆகும் என்பதால் தன்னுடன் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் தன் மனைவியும் இறைவனை அடைய வழிவகுப்பதே திண்ணியம் திருத்தலம் ஆகும். இதை வெளிப்படையாகவே உணர்விப்பதாக இத்தல முருகனும், வள்ளி, தெய்வானை என்ற மும்மூர்த்திகளுமே மயில் வாகனத்தில் எழுந்தருளிய அரிய காட்சியை நாம் தரிசித்து பலன் பெறலாம். ஒரேயொரு அனுகிரகத்தை மட்டுமா அளிப்பவன் குறுகு முருகன். இத்தலத்தில் வில்வ மரத்தின் அடியில் உள்ள புற்று மிகவும் பழைமை வாய்ந்ததாகும். சுக்ரன் என்ற நாகம் இந்த புற்றில் பன்னெடுங்காலம் வழிபட்டு அருள் பெற்றது. சுக்ர நாகத்தை முருகன் திருவடிகளில் இன்றும் பக்தர்கள் தரிசனம் செய்து அருள் பெறலாம். இந்த உண்மையை ஸ்ரீஆயுர்தேவி மகிமையாக நம் சற்குரு தன்னுடைய உரையில் குறித்துள்ளார்கள். இதில் நம்மை பிரமிக்க வைக்கும் அதிசயம் என்னவென்றால் வில்வ மரத்தடி நாகப் புற்றில் நாம் மேற்கொள்ளும் வழிபாடு நம்முடைய தீய குணங்களை அழித்து, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அவர் அகந்தையை வேருடன் அறுத்து உத்தம குடும்ப ஒற்றுமையையும் அதன் வழி இறை பக்தியை வளர்க்கும் என்பதாகும்.

சுக்ரன் வழிபடும் வில்வ
மரப் புற்று திண்ணியம்

எனவே அடியார்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை நன் முறையில் பயன்படுத்திக் கொண்டு இத்திருத்தல வில்வ மரத்திற்கு தங்கள் கையால் அரைத்த மஞ்சளைப் பூசி, நல்ல குங்குமத்தால் பொட்டிட்டு வழிபடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த 2.7.2022 அன்று வடமாகறல் திருத்தலத்தில் வழிபட்டு ஆறு கிரகங்கள் ஆட்சியாக இருப்பதால் தோன்றும் முருக சக்திகளை அடியார்கள் பெறும் வழிபாட்டு முறையை அளித்திருந்தோம். அன்று திண்ணியம் திருத்தலத்திலும் இத்தகைய குறுகு முருகு சக்திகள் தோன்றிப் பொலிந்தன என்பது உங்களுக்கு சொல்லாமலே விளங்கும். ஆனால், அந்த அனுகிரகத்தையும் நம் அடியார்கள் பெறவே இங்கு 2.7.2022 அன்று முருகப் பெருமான் திண்ணியம் திருத்தலத்தில் பொழிந்த குருகு முறுகு சக்திகளே இங்குள்ள சித்திரங்களில் பொலிகின்றன என்பதே நம் சற்குரு நம் அடியார்களுக்காக வழங்கும் முருகப் பஞ்சாமிர்த சுவையாகும்.
இந்த சுவையை தொடர்ந்து பெற விரும்பும் அடியார்கள் கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் 30.7.2022 அன்று வழிபட்டும் இந்த சுவையை பெருக்கிக் கொள்ளலாம் என்பதும் சித்தர்களின் வழிகாட்டுதலே. 30.7.2022 அன்று குரு கிரகம் வக்ர கதியில் இருப்பதால் வக்ர கதியை அடைந்த சுப கிரகங்கள் தாங்கள் வர்ஷிக்கும் பலன்களை பன்மடங்காகப் பெருக்கும் என்பது நீங்கள் அறிந்த ஜோதிட விதிதானே. அதே போல் மூன்றாம் நட்சத்திரமான கிருத்திகை, அதன் குசாவான் திருவாதிரை நட்சத்திரம், மக நட்சத்திரம் போன்ற தினங்களில் திண்ணியம் திருத்தலத்தில் வழிபடுவதும் சிறப்பே.
அடியார்கள் வழிபாட்டிற்காகச் செல்லும்போது மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மயில்களின் தரிசனம் வழிபாட்டு பலன்களை பன்மடங்காக்கும். இதற்கு உதாரணமாக விளங்குவதே மேற்கண்ட புகைப்படங்கள் என்பதும் நம் சற்குரு வர்ஷிக்கும் கருணா மகாத்மியமாகும்.
கோஷ்டம், கோட்டம் என்றால் பிரத்யேகமான, சிறப்பான திருத்தலம், வக்ரம், வளைந்திருத்தல் என்றெல்லாம் பொருளுண்டு. கந்த கோட்டம் என்றால் முருகப் பெருமான் தன் பூரண அனுகிரக சக்திகளை பக்தர்களுக்கு வழங்கும் திருத்தலம் என்று பொருள். அது போல், குருவின் சக்திகள் பூரணமாய்ப் பொலியும் குரு கோட்டம் திண்ணியம், உத்தம சீடர்களின் மனக் கோட்டங்கள் அனைத்தையும் மாய்க்கும் திருத்தலம் என்றால் அது மிகையாகாது.

ஸ்ரீபிருகந்நாயகி அம்பாள்
திண்ணியம்

இதற்காகவே திண்ணியம் திருத்தலத்தில்

* சிவபெருமான் கோஷ்டீஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார்
* முருகப் பெருமான், வள்ளி தெய்வானை என்ற மூன்று முருக சக்திகளை வர்ஷிக்கும் முகமாக எழுந்தருளி உள்ளார்.
* முருகப் பெருமான், அம்பாள் மூர்த்திகள் குரு சக்திகளை வர்ஷிக்கும் தட்சிணா மூர்த்தி கோலத்தில் எழுந்தருளி உள்ளனர்

இந்த அமர்வின் இரகசியம்
என்னவோ ?

* சிவலோகநாதர் போன்ற மூன்று சிவ மூர்த்திகள் எழுந்தருளி இருக்க இவர்களில் ஒப்பிலாம்பிகை தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ளாள்.
* சூரிய பகவானை அனைத்து நவகிரக மூர்த்திகளும் நோக்க ஸ்ரீசூரிய மூர்த்தியும் மூவராய், மூன்று கலசங்கள் உடைய குரு மண்டபத்தில் எழுந்தருளி உள்ளார்.
* நல்லாடை, நறையூர்சித்தீச்சரம் போன்ற திருத்தலங்களில் இறைவனையும் இறைவியையும் ஒரே நோக்கில் தரிசிக்கும் முகமாக எழுந்தருளி இருப்பது போல திண்ணியம் திருத்தலத்தில் முருகப் பெருமானையும் ஸ்ரீகோஷ்டீஸ்வரரையும் ஒரே நோக்கில் தரிசித்து அருள் பெறலாம்.
அதே போல் அம்பாளையும் சிவனையும் ஒரு சேர தரிசித்து பலன் பெறுவதும் இங்குதான். இத்தகைய தரிசனத்தால் பிள்ளைகள், பெற்றோர்கள் இடையே சொத்துத் தகராறு, மனத்தாங்கல்கள் போன்றவை சீர்பெறும்.

வில்வங்களில் பலவகை உண்டு. மகா வில்வம் என்பது 7, 11, 13 என்றெல்லாம் இலைகளை உடையது. முள்ளில்லா வில்வம் லால்குடி நகர் திருத்தலத்தில் அருள்வதை நீங்கள் அறிவீர்கள். இவ்வகையில் திண்ணியம் திருத்தலத்தில் உள்ள வில்வமே சமீகரணம் என்பதாகும். தெய்வத்தின் மேல், குருவின் திருவடிகளில் அசையா நம்பிக்கையை அளிக்கக் கூடிய வில்வம். கண்ணப்ப நாயனார் இத்தலத்திற்கு வந்து இந்த சமீகரண வில்வத்தை வணங்கியதும் அவருக்கு அசையா நம்பிக்கையை அருளியது எனலாம்.

ஸ்ரீதட்சிணா மூர்த்தி
திண்ணியம்

அது மட்டுமல்ல, இந்த வில்வ மரத்தில் அமர்ந்த பட்சிகளையே காளஹஸ்தியில் கண்டார். அவைகளை சிவபெருமானுக்கு உணவாக பரிமாறவே அந்த பட்சிகள் அனைத்தும் உய்வு அடைந்து மேல் நிலைகளைப் பெற்று சிவலோகத்தை அடைந்தன. அதற்கு சாட்சியாக விளங்குபவரே இத்தலத்தில் விளங்கும் ஸ்ரீசிவலோக நாதர் ஆவார்.
பொதுவாக, புறா போன்ற பட்சிகள் பிரகாரத்தில் இருக்கும் தெய்வ மூர்த்திகளின் மேல் அமர்வது உண்டு. ஆனால், இத்தகைய பட்சிகள் கூட தலவிருட்சங்களில் அமர்வதில்லை. இது பக்தர்கள் ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமே.
சமீகரண வில்வத்தின் பல சிறப்புகளில் ஒன்றே இத்தலத்தில் பக்தர்கள் நிறைவேற்றும் வழிபாட்டை ஆயிரம் மடங்கு பெருக்கித் தருவதாகும். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று மனதார எண்ணுபவர்கள் அவரவர் வசதிக்கேற்ப 6, 60, 600 என்ற எண்ணிக்கையில் முழு வாழை இலையில் பலவிதமான பட்சணங்களுடன் பக்தர்களுக்கு அளிக்கலாம்.
இந்த விருந்தோம்பலை திண்ணியம் திருத்தலத்திலோ அல்லது தங்கள் ஊரில் எந்த திருத்தலத்தில் வேண்டுமானாலும் நிறைவேற்றி பயன்பெறலாம்.

ஸ்ரீவலஞ்சுழி விநாயகர்
திருவலஞ்சுழி

சமீகரண வில்வத்தின் மற்றோர் அரிய குணாதிசயம் குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்துவதாகும், பலப்படுத்துவதாகும். ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் இடம் மனைவியைக் குறிக்கும் களத்தர ஸ்தானமாகும். இந்த இடத்தில் நல்ல கிரகங்கள் இருந்தால் குடும்ப வாழ்க்கை பசுஞ் சோலையாக மலரும்.
இங்கு பகை கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலோ, அல்லது எந்த கிரகங்களுமே இல்லாவிட்டாலும் அத்தகையோர் சமீகரண வழிபாட்டால் நற்பலன் பெறுவார்கள். சமீரம் என்றால் போர். குடும்பத்தில் போர் நிகழாதவாறு தடுப்பதே சமீகரண வில்வ வழிபாடாகும்.

ஒரு முறை நம் சற்குருவிடம் ஒரு அடியார் வந்தபோது, “சார், உங்கள் மனைவியுடன் மிகவும் ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். ரொம்ப sensitive ஆக இருப்பவர் அவர். அதனால் கவனக் குறைவால் ஒரு சிறு தவறான வார்த்தையை நீங்கள் கூறி விட்டாலும் அவர்கள் மனத்தில் தோன்றுவது W A R என்பதாகும். டபிள்யூ ஏ ஆர்...” என்று தெளிவாக, தாயினும் சாலப்பரிந்து குறிப்பிட்ட நம் சற்குருவின் வழிகாட்டுதலை நாம் தற்போது நேரடியாகப் பெற முடியாவிட்டாலும் சமீகரண வில்வ வழிபாட்டில் நம் சற்குருவின் குரு கடாட்ச சக்திகள் பூரணமாய்ப் பொங்கிப் பொலியும்.

மேற்கு நோக்கி அருளும்
ஸ்ரீகர்த்தம பைரவர் திண்ணியம்

பிள்ளயார் சுழி என்பதற்கு ஆயிரமாயிரம் விளக்கங்கள் இருந்தாலும் நம் சற்குரு அருள்வதோ அ இ உ என்ற மூன்று அட்சரங்களின் சக்திகளே ஒருங்கிணைந்து பிள்ளையார் சுழி ஆகின என்பதே. இந்த சுவையான வரலாறு அரங்கேறிய திருத்தலமும் திண்ணியம்தான். தான் வள்ளியை மணம் புரிய யானையாய் வந்து உதவி புரிந்த யானைமுகனின் அருஞ்செயலுக்கு கைமாறாக பிள்ளையார் சுழியை முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை என்ற மூவரும் ஆண் பெண் சக்திகளை தாண்டிய மயில் வாகனத்தில் அமர்ந்து பிள்ளையார் சுழி சக்திகளை திண்ணியம் திருத்தலத்தில் அடியார்களுக்காக அருளினர். எனவே பிள்ளையார் சுழியில் பிள்ளையார் சக்தி மட்டுமன்றி, முருகப் பெருமானின் குரு கடாட்ச சக்திகளும் நிரவி பொலிகின்றன என்பதே நம் சற்குரு அருள்வதாகும்.
பாலவ கரணம் சமீகரணம் என்று அழைக்கப்படுவதால் 11 வியாழக் கிழமைகளிலோ, அல்லது பாலவ கரணம் திகழும் 11 கரண நாட்களிலோ இத்தலத்தில் வழிபாடுகளை நம்பிக்கையுடன் நிறைவேற்றி வந்தால் கோர்ட் வரை சென்ற குடும்ப பூசல்களும் நிவாரணம் பெறும். இத்தகைய பூஜை நாட்களில் கட்டாயம் முழு வாழை இலை விருந்தோம்பலை நிறைவேற்றியாக வேண்டும். இவ்வளவு சிரமப்பட்டு கணவன், மனைவி, குடும்பத்துடன் நல்லுறவை வளர்க்க வேண்டுமா என்று நீங்கள் கேட்பது காதில் விழத்தான் செய்கிறது. ஆனால், கணவன், மனைவி, குடும்பத்தாருடன் நல்லுறவை வளர்க்காமல் நீங்கள் தெய்வீகத்தில் ஒரு “இஞ்ச்” கூட முன்னேற முடியாது என்பது நினைவிருக்கட்டும்.
இன்று உலகம் முழுவதும் உள்ள ஒரே பிரச்னை என்னவென்றால் யாரும் பெரியோர்களின், சற்குருவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து செயல்படுவது கிடையாது. ஆனால், தங்கள் வார்த்தையை பிறர் கேட்க வேண்டும், செயல்படுத்த வேண்டும் என்று அலையாய் அலைகிறார்கள். அதிலும் மாமியார் மருமகள் என்ற உறவில் இத்தகைய “அதிகார” பிரச்னைகள் ஏராளமாய் வருவது உண்டு. ஒரு முறை ஒரு மாமியார் நம் சற்குருவிடம் வந்து தன் மருமகள் மேல் டன் கணக்கில் குறைகளை சுமத்த ஆரம்பித்தார். நம் சற்குரு அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்து விட்டு, “ஏம்மா, நீங்கள் இறை வழிபாட்டிலேயே எஞ்சிய காலத்தை கழிக்கும்படி என்னதான் தெளிவாக கூறினாலும், பெரியோர்களின் அறிவுரைகளை நீங்கள் கேட்கத் தயாராக இல்லை. ஆனால், உங்கள் மருமகள் மட்டும் நீங்கள் கிழித்த கோட்டைத் தாண்டக் கூடாது என்று எதிர்பார்க்கிறீர்களே, இது என்னம்மா நியாயம்?” என்ற ஒரு அர்த்தமுள்ள கேள்வியைக் கேட்டார்கள். இவ்வாறு தங்களை திருத்திக் கொண்டு தங்கள் வாழ்வை இறுதிக் காலத்திலாவது இறை மார்க்கத்தில் நிலை நிறுத்த உதவுவதே ஸ்ரீகர்த்தம பைரவரின் வழிபாடாகும்.

சிவசாயுஜ்ய முக்தி

சாயுஜ்யம் சாயுச்சியம் இரண்டும் ஒன்றே. முக்தி என்பது மிக மிகச் சாதாரணமான ஒரு பதமே. முக்தியில் பல்வேறு நிலைகளும், படித்தரங்களும் உண்டு. இவற்றைப் பற்றி பூரணமாக விளக்கவல்லவர்கள் நம் சற்குரு போன்ற சித்தர்கள் மட்டுமே. எம்பெருமான் கண்ணப்ப நாயனாருக்கு அளித்ததே சிவசாயுஜ்ய முக்தி நிலையாகும். இதன் பலவித பரிமாணங்களில் ஒன்று, இருந்த இடத்திலிருந்தே எதையும் ஊடுருவிச் சென்று பார்ப்பதாகும்.

கற்றது கை மண் அளவு என்பது போல் மனித வாழ்க்கையில் நாம் புதுப்புது பாடங்களை கற்றுக் கொண்டே இருக்கிறோமோ அது போல்தான் முக்தி நிலை என்பதும். தொடர்ந்து பெருகி, விருத்தி ஆகிக் கொண்டே இருப்பதும் முக்தி நிலையின் சிறப்பாகும். இங்கு கண்ணப்ப நாயனார் பெற்ற சிவசாயுஜ்ய முக்தியை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பெற்றவரே அன்னை அரவிந்தமாதா ஆவார்.

ஸ்ரீகண்ணப்ப நாயனார்
காளஹஸ்தி

லட்சுமி தேவிக்கு இத்தகைய சாயுஜ்ய முக்தியை, அதாவது திருஅண்ணாமலையையும் ஊடுருவிப் பார்க்கும் இறை சக்தியை, கண்ணனின் திருவிளையாடலாக வழங்கியதை நாம் ஏற்கனவே விவரித்துள்ளோம். திருஅண்ணாமலைக்கு வெளியே பூரணமாய் பார்க்கக் கூடியது ஒரு முக்தி நிலை என்றால் திருஅண்ணாமலைக்குள் பார்க்கும் சக்தியே சாயுஜ்ய முக்தியால் கிட்டுகிறது. இதுவே சிவசாயுஜ்ய முக்தி நிலை. இவ்வாறு கண்ணப்ப நாயனார் அடைந்த முக்தி நிலையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளதே காளஹஸ்தி திருத்தலத்தில் அமைந்துள்ள நந்தி கொடி மரம் ஆகும். இந்த கொடிமரத்தை தரிசிப்பதற்கு திருக்கோயிலினுள் உள்ளே ஒரு இடத்தை தற்போது பெயிண்டால் குறித்து வைத்திருக்கிறார்கள் என்பதே இந்த கொடி மர நந்தியின் முக்கியத்துவத்தைக் குறிக்கின்றது.
சிவசாயுஜ்ய முக்தி நிலையை அடைந்தவரே ஹஜ்ரத் மொஹமத் அலி ஷா ஆவார். அலாகாபாத் ரயில் நிலையத்தில் ஜீவ சமாதி கொண்டு அருள்புரியும் இம்மகான் லைன் பாபா என்றும் அழைக்கப்படுவார். கடவுளையும் பக்தனையும் நேராக இணைக்கும் நேர்கோடாய் இவர் திகழ்வதால் இவர் லைன் பாபா ஆனார் என்பதே நம் கோவணாண்டி பெரியவர் கூறும் பெயர் விளக்கமாகும். இத்தகைய மகான்களின் ஜீவ சமாதிகளில் நாம் வழிபாடுகளை இயற்றும்போது இங்குள்ள ஜன்னல்களில் இரு கன்னங்களையும் மாறி மாறி ஒற்றி வழிபடுவது சிறப்பாகும். இதைத் தொட்டுக் காட்டிய வித்தையாக தம் சீடர்களுக்கு அனுகிரகமாக வழங்கியவரே நம் சற்குரு ஆவார். ஜன்னல்கள் இல்லாத இடங்களில் தரையில் மண்டியிட்டு இரு கன்னங்களை மாறி மாறி வைத்து ஒற்றியும் வணங்கி அருள் பெறலாம்.

நந்தி கொடிமரம் திகழும்
ஸ்ரீகாளஹஸ்தி

இவ்வாறு இரு கன்னங்களையும் மாறி மாறி வைத்து வழிபடுவது சாயுஜ்யஜீவ முத்திரை என்று வழங்கப்படும். எப்படி திருத்தலங்களில் நாம் வழிபடும்போது இறைவனுக்கு ஸ்வஸ்தி நமஸ்காரம் நிறைவேற்றி அருள் பெறுகிறோமோ, அது போல் சாயுஜ்யஜீவ முத்திரையை இயற்றி நாம் ஜீவ சமாதிகளில் வழிபாடு மேற்கொள்ளலாம். துவரங்குறிச்சியில் உள்ள ஸ்ரீஒளியுல்லா சுவாமிகளின் ஜீவ சமாதி, சின்னபாபு சமுத்திரத்தில் உள்ள ஸ்ரீபடே சாகிப் சித்தர் ஜீவ சமாதிகளிலும் இவ்வாறு வழிபாடுகள் இயற்றி நலம் பெறலாம். சிறப்பாக இந்த வருடம் 2022 என்று மூன்று இரண்டுகள் இணைந்த வருடமாக இருப்பதால் ஹஜ்ரத் மொஹமத் அலி ஷாவின் ஜீவ சமாதியில் இத்தகைய வழிபாடுகளை இயற்றுதல் நலமே. இதனால் நாமும் சிவசாயுஜ்ய முக்தி நிலையை அடைய நம் சற்குரு அருள் புரிகின்றார்.
பெருமாள் தன் தேவியான லட்சுமி சிவசாயுஜ்ய முக்தி நிலையில் திளைக்க வேண்டும் என்று அதற்காக ஒரு திருவிளையாடலையும் புரியும்போது நம் வெங்கடராம பெருமாள் தன் சீடர்கள் உத்தம சிவசாயுஜ்ய முக்தி நிலையை அடைய வேண்டும் என்று துடிப்பாக இருக்க மாட்டாரா என்ன ?
கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் மூன்றாம்பிறை முத்தோரண வழிபாட்டை மேற்கொள்ளும் முன்னோ, அல்லது அதைத் தொடர்ந்தோ திண்ணியம் திருத்தலத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதால் அடியார்களும் சிவசாயுஜ்ய முக்தி நிலையில் திளைக்கலாமே ?

மனித உடல் மறைந்த பின், அதாவது இறந்த பின் கிட்டுவதே முக்தி என்று பலரும் தவறாக எண்ணுகின்றனர். உடலுடன் திகழும்போதே முக்தி நிலையை அடைந்த உத்தமர்கள் ஏராளம், ஏராளம். இவ்வாறு தாங்கள் முக்தி நிலையை அடைந்து விட்டோமா என்ற அறிய உதவும் ஒரு எளிமையான வழிபாட்டு முறை ஒன்று உண்டு. தினமும் திருத்தலங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள கொடிமரத்தின் முன் வழிபடும்போது கோயிலின் மூலத்தானத்தில் உள்ள இறைவனின் தரிசனம் தெளிவாகத் தெரிகிறதா என்று அறிய முயன்று பாருங்கள். இறை தரிசனம் உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் முக்தி அடைந்ததற்கு இதுவே சான்று. இவ்வாறு தன்னுடைய முக்தி நிலையை உறுதி செய்து கொண்டவரே படிப்பறிவில்லாத நந்தனார் முதலில் இறைவனை மறைத்த நந்தியை தரிசித்தாலும் இறுதியில் கொடி மரம், பலி பீடம், நந்தி மூர்த்தி இவர்களைக் கடந்த, இவர்கள் மறைக்க முடியாத முக்தி தரிசனத்தைப் பெற்றார் என்பதே நம் சற்குரு கூறும் மகாத்மியமாகும்.
திருஅதிகை, திருகோகர்ணம், ஊட்டத்தூர் போன்று கொடி மரம் முன்பு விதானத்தில் நவகிரகங்கள் எழுந்தருளி இருப்பது நம்முடைய வழிபாட்டுப் பலன்களை துரிதமாக்கும்.

சௌபாக்ய சனாதனம்

திருச்சி உய்யக்கொண்டான்மலை திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள சிவமூர்த்தி உஜ்ஜீவம், சஜ்ஜீவம், சனாதனம் என்ற மூன்று ஆதிசிவ சக்திகளால், அமிர்தபூசித கிரணங்களால், சிரஞ்சீவ சிவபர சக்திகளால் உருவான மூர்த்தியாவார். சுவாமி எழுந்தருளிய உஜ்ஜீவ புள்ளி இரகசியங்களைப் பற்றி நாம் ஏற்கனவே அண்டமி திருத்தல மகிமையில் விவரித்துள்ளோம்.

ஸ்ரீஉஜ்ஜீவநாதர்
உய்யக்கொண்டான்மலை

இத்தகைய திருத்தலத்தில் தம் அடியார்களைக் கொண்டு இங்குள்ள ஓங்கார பிரகாரத்தில் பல வருடங்கள் உழவாரத் திருப்பணிகள் நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் தாமே இங்கு பல அடியார்களுடன் உழவாரத் திருப்பணியையும் நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. சீதா மாமி என்று நம் அடியார்களால் அழைக்கப்பட்ட ஒரு சென்னை அடியாரின் சதாபிஷேக நிகழ்ச்சியும் இங்கு நம் சற்குருவின் தலைமையில் கொண்டாடப்பட்டதையும் ஒரு சில அடியார்கள் நினைவு கூறலாம். இவ்வாறு மூன்று முறை இத்தலத்திற்கு எழுந்தருளி உஜ்ஜீவ சக்திகளை நிரந்தரமாக நிரவிய பெருமை நம் சற்குருவையே சாரும்.
இதன் பெருமையை விளக்குவதே இங்கு நீங்கள் காணும் நிகழ்ச்சி.
சீதா மாமியின் சதாபிஷேக நிகழ்ச்சி நிறைவில், சதாபிஷேகத்திற்கென பிரத்யேக ஹோமங்களை ஒரு சத்திரத்தில் நிறைவேற்றிய பின்னர், மாங்கல்ய தாரணத்தை சிவாலயத்தில் இறைவன் முன்பு நிகழ்த்துமாறு கூறியிருந்தார் நம் சற்குரு. மிகவும் பலவீனத்துடன் நம் சற்குரு துலங்கியதால் இந்த வைபவத்தில் தூல வடிவில் நம் சற்குருவால் கலந்து கொள்ள முடியவில்லை, இல்லை நம் சற்குரு நிகழ்த்திய திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றா என்பதை உஜ்ஜீவ நாதரே அறிவார் !
மாங்கல்ய தாரணத்திற்காக கோயிலுக்கு சென்றடைந்த பின்னர் மாங்கல்ய தாரண நிகழ்ச்சி நிறைவேற்றும் அந்த தருணத்தில்தான் அடியார்கள் ஒன்றை கவனித்தனர், ஆம், மாங்கல்யத்தை யாரும் எடுத்து வரவில்லை, அதை ஏதோ காரணத்தால் மறந்து விட்டனர். தற்போது என்ன செய்வது ? திரும்பவும் மாங்கல்யம் வைத்திருந்த சத்திரத்திற்கு சென்று திரும்புவது என்றால் காலம் கடந்து விடும். கோடி கோடியாய்க் கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத அமிர்த நேரம் அல்லவா நம் சற்குரு அளித்த சதாபிஷேக மாங்கல்ய தாரண முகூர்த்தம். ஒரு சில நிமிடங்களே, குறிப்பாக கூறுவதானால் ஒரு நிமிட நேரம் மட்டுமே நிரவி நிற்கக் கூடியதே இந்த சுபமுகூர்த்தம். எனவே வேறு வழியின்றி கோயிலில் கிடைத்த ஒரு மஞ்சள் துண்டை மாங்கல்ய சரடில் இணைத்து மாங்கல்ய தாரண வைபவத்தை இனிதே நிறைவேற்றினர்.

இதுவே நம் சற்குருவின் சொல்லாமல் சொல்லி, கேளாமல் தந்த குரு அனுகிரகம்.
உஜ்ஜீவம், சஜ்ஜீவம், சனாதானம் என்ற மூன்று சிவபர சக்திகளும் பூரணமாய்ப் பொலிவதே மஞ்சள் தாவரமாகும். எப்படி திருத்தலங்களில் இறைவனுக்குப் படைக்கும் நைவேத்ய உணவுப் பொருட்களில் கூட தீய சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் புகுந்து விடும் வாய்ப்பு உள்ளதால் இவற்றை ஓரளவு நிவர்த்தி செய்ய பித்தளை தாம்பாளங்களில் வைத்து, பித்தளை மூடிகளால் அவற்றை மூடியே வைத்திருக்கிறார்களோ அது போல் புனிதமான மஞ்சள் கிழங்கையும் ஆக்கிரமிக்கும் தீய எண்ணங்களையும் எதிர்மறை சக்திகளையும் விலக்கவே நாம் செருகுடி போன்ற திருத்தலங்களில் மஞ்சள் கிழங்குகளை இறைவனிடம் வைத்து ஆராதித்து இந்த மஞ்சள் கிழங்குகளை சுமங்கலிகளுக்கு சுமங்கலி தானமாக அளிக்கிறோம். செருகுடி திருத்தலத்தில் தனித்து அருளும் ஸ்ரீசெவ்வாய் பகவான் எத்தகைய தீய சக்திகளையும் களையவல்லவராவார்.
சீதா மாமி சதாபிஷேக நிகழ்ச்சி என்றோ நடந்த வைபவம் என்றாலும் இன்றும் அடியார்களுக்கு பல நற்செய்திகளை அளிப்பதாக உள்ளது. திருப்பராய்த்துறை, திருச்சி பஞ்சவர்ணேஸ்வரர் போன்ற திருத்தலங்களிலும் நாம் சிவனையும் அம்பாளையும் ஒரே நோக்கில் தரிசனம் செய்யலாம் என்பதும், இவ்விரு சிவத்தலங்களுமே நம் சற்குருவால் புனருத்தாரணம் நிறைவேற்றப்பட்டவையே என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், தட்சிணா மூர்த்தி குரு பகவான், அம்பாள் இருவரையும் ஒரே நோக்கில் பார்த்து தரிசிக்கக் கூடிய திருத்தலமே உய்யக்கொண்டான்மலையாகும். மேலும், இங்குள்ள ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மன் திருத்தலத்தில் 16 மங்களத் தூண்கள் எழுந்தருளி இருப்பதும் நம்மை பிரமிக்க வைப்பதாகும். இந்த தூண்கள் ஒவ்வொன்றிற்கும் மஞ்சள் குங்குமப் பொட்டுகள் இட்டு ஒவ்வொரு தூணையும் மூன்று முறை வலம் வந்து வணங்குவதும் உஜ்ஜீவ சக்திகளை பெறும் ஒரு வழிபாட்டு முறையாகும்.

15, 3 என்ற சுக்ர குரு மூர்த்திகளைக் குறிக்கும் படிகளை ஏறி இத்தல ஆஞ்சநேய மூர்த்தியை தரிசிப்பதால் இவர் குருசுக்ர மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். இம்மூர்த்தியின் மற்றோர் சிறப்பாக வேறு எந்த திருத்தலத்திலும் காண முடியாத வகையில் தன் இரு கரங்களிலும் இரு கற்களை சுமந்து கொண்டு இருக்கிறார் என்பதாகும். சற்றே கூர்ந்து கவனித்தாலும் ஆஞ்சநேய மூர்த்தியின் பெருமையையும், அறிவுத் திறனையும் ஞானப் பிரகாசத்தையும் நாம் கண்டு இன்புறலாம். ஆஞ்சநேய பிரபு ஆண் தத்துவத்தைக் குறிக்கும் வலது தோளில் ராமபிரானையும், பெண் தத்துவத்தைக் குறிக்கும் இடது தோளில் சீதா தேவியையும் சுமக்கும் சித்திரத்தை நாம் பல திருத்தலங்களில் தரிசித்து இருக்கலாம்.
சீதா தேவி இலங்கையில் அரக்கிகள் சூழ வேதனையில் துடித்தபோது, சீதை தன் தோளில் அமர்ந்து கொண்டால் அவளை பத்திரமாக ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் சேர்த்து விடுவதாக ஆஞ்சநேயர் கூறியபோது, அதை திடமாக மறுத்து விட்டாள் சீதை. அதற்கு சீதை கூறிய பல காரணங்களில் ஒன்று, என்னதான் ஆஞ்சநேய மூர்த்தி சீதையை தாயாக மதித்துப் போற்றியது உண்மையே என்றாலும் ஆஞ்சநேயருடையது ஆண் உருவம், எனவே எந்த ஒரு ஆணின் தோளிலும் தான் அமர மாட்டேன் என்றாள் கற்புக்கரசியான சீதா பிராட்டி. இதைக் குறிப்பதாகவும் பெரிய கல், சிறிய பத்தினிக் கல் என்ற வடிவைத் தாங்கி ஆஞ்சநேய மூர்த்தி அருள்கின்றார்.
அடியார்களின் பக்தி, சிரத்தையைப் பொறுத்து இத்தலத்தில் தொடர்ந்து வழிபடுவதால் தங்கள் இரு தோள்களிலும் பெருமாள் லட்சுமி, சிவன் பார்வதி, முருகன் தேவிகள் அமர்ந்திருப்பதை அறிந்து, உணர்ந்து பேருவகை பெறலாம். இதுவே கல்லில் எழுந்தருளிய கடவுளை நிரூபிக்கும் ஒரு வழிபாடு.

தங்கமன தரணிபாலன்

பொன்மனச் செம்மல், தங்கமன தரணி பாலன் என்றெல்லாம் நம் சற்குருவை அழைத்து பேருவகை கொள்கிறோம் அல்லவா ? இதை நாம் ஓரளவு வெளிப்படுத்த உதவுவதே தங்கச் சல்லடை சபரி பொழிவாகும். 30.7.2022 அன்று கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் ஸ்ரீஅகத்தியருக்கு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தும்போது குற்றால அருவி தீர்த்தங்களால் அபிஷேகம் நிறைவேற்றுகிறோம். இந்த அபிஷேக தீர்த்தத்தை ஒரு தங்கம், வெள்ளி, பித்தளை அல்லது செம்பால் ஆன ஒரு சல்லடை வழியாக நிறைவேற்றுதலே தங்கச் சல்லடை சபரி பொழிவு என்னும் வழிபாடாகும்.

தங்கக் காசுகள், தங்கம் அல்லது வெள்ளி ஆபரணங்களையும் இந்த சல்லடையில் சேர்த்து அபிஷேகம் நிறைவேற்றலாம். அபிஷேகம் நிறைவேற்றிய பின் இந்த வெள்ளி, தங்க ஆபரணங்கள் அனைத்தையும் தானம் அளித்து விட வேண்டும் என்பது முக்கியம். தானத்திற்கு அல்லாத ஆபரணங்களை இந்த சபரி பொழிவில் சேர்க்கக் கூடாது என்பதை நினைவில் கொள்க. பிளாஸ்டிக், இரும்பு சல்லடைகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம். திருவலஞ்சுழியில் காவிரி வலம் சுழித்துச் செல்வதைப் போல் ஸ்ரீகாளஹஸ்தி திருத்தலத்தில் பொன்முகலி ஆறு என்னும் ஸ்வர்ணமுகி வலம் சுழித்துச் செல்கிறது. இந்த தீர்த்தத்தால் அல்லது எந்த வலம் சுழித்த தீர்த்தத்தாலும் அபிஷேகம் நிறைவேற்றுவது சிறப்புடையதே.
30.7.2022 அன்று குரு கிரகம் வக்ர கதி கொள்வது சபரி பொழிவிற்கு உரிய ஜோதிட அம்சமாகும். 60, 70, 80 என்ற வயது நிறைவு வைபவங்களை முறையாகக் கொண்டாட முடியாமல் போவது குறித்து பல தம்பதிகளும் மனம் வருந்துகின்றனர். கடும் நோய்கள், வறுமை, திருமணம் ஆகாத மகன்கள் அல்லது மகள்கள் இல்லத்தில் இருத்தல் போன்ற சிலவும் இதற்கு காரணங்களாக அமைவதுண்டு. இந்த சபரி பொழிவைக் கண்ணாரக் காண்பதால், அல்லது இது நிறைவேற உரிய உதவிகளைச் செய்வதால் அத்தகைய தம்பதிகளின் மன வருத்தம் அகலும் என்பதும் இதன் பலன்களில் ஒன்றாகும். மேற்கூறிய குறைபாடுகள் இன்னும் தொடர்ந்தால் அவை நிவாரணம் பெறவும் வாய்ப்புகள் தேடி வரும். சபரி பொழிவு என்று அழைக்கப்படுவதால் பம்பை நதியின் தீர்த்தத்தையும் இந்த அபிஷேகத்தில் சேர்த்துக் கொள்ளலாம். பல இல்லங்களில், தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் பொதிந்துள்ள வாஸ்து தோஷங்களும், திருஷ்டி தோஷங்களும் இத்தகைய அபிஷேகங்களால் தீர்வடையும்.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பது பழமொழி. இந்தப் பழமொழியின் விளக்கங்கள் 16 x 16 என்பதாக விரியும். இதில் ஒன்றே சபரி பொழிவில் தோன்றும் நீர்த்தாரைகளின் மகிமையாகும். சென்னை அருகே திருமால்பேறு, காங்கேயம் அருகே வட்டமலை, திருச்சி உய்யக்கொண்டான்மலை போன்ற பல திருத்தலங்களிலும் 16 தூண்கள் அமைந்த முகூர்த்த மண்டபங்கள் உண்டு. இத்தலங்களில் இத்தூண்களை வழிபட்டு தம்பதிகள் உரியவர்கள் மூலம் இந்த சபரி பொழிவு அபிஷேகத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். குறைந்தது 16 வகை முன்னோர்களின் ஆசீர்வாதம் நீர்த்தாரை ஒழுக்கு போல் தங்கு தடையின்றி கிட்டும் என்பது ஒரு அபூர்வமான வரப்பிரசாதமே.

அருணகிரி வழங்கும் அற்புதம்

அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது அனைவரும் அடிக்கடி தங்கள் “வசதிக்காக” கூறிக் கொள்ளும் ஒரு பிரயோகமாக மாறி விட்டது. உண்மையில் இந்த தேவ வார்த்தைகளின் மகிமைகளை உணர்ந்து விட்டால் ஆழம் காண முடியா அருங்கடல் அமைதியை மனித உள்ளம் பெறும். அது மட்டுமல்ல இந்த அணுத்துளி அசைவும் நம் நன்மைக்காகவே, மேன்மைக்காகவே.

முருகப் பெருமான் மீது மாறாக் காதல் கொண்ட அருணகிரிநாதர் அந்த நாட்டு மன்னனின் நோயைத் தீர்க்க தன் உடலை மறைத்து விட்டு பரகாயப் பிரவேசம் கொண்டு கிளி வடிவத்தில் இமயமலைக்குச் சென்று விட்டார். இதை அறிந்த சம்பந்த ஆண்டான் என்ற தீய எண்ணம் கொண்ட சக்தி உபாசகன் அருணகிரி நாதரின் உடலை தீயிலிட்டு எரித்து விட்டான். உடலை இழந்த அருணகிரி நாதரை மதுரை ஸ்ரீமீனாட்சி தேவி தன்னுடைய கரங்களில் நிரந்தரமாக ஏற்றுக் கொண்டாள். இது அனைவரும் அறிந்த நிகழ்ச்சியே.
அகிலாண்ட நாயகன் சக்தி பரனான சோமசுந்தர பெருமானுக்கும், அன்புக் குழந்தைகளான முருகப் பெருமான், பிள்ளையாருக்கும் கிட்டாத ஒரு அபூர்வ அனுகிரகம் அல்லவா இது ? அருணகிரியைத் தவிர வேறு யார் அன்னையுடன் எப்போதுமே துணை இருக்க முடியும் ?
ஒருவனை உயிரோடு எரித்து சாம்பலாக்குதல் என்பதைப் போன்ற ஒரு கொடிய செயலுக்கு இணையானது வேறு எதுவுமே கிடையாது, இத்தகைய ஈடு இணையில்லாத கொடிய செயலையும் ஈடு இணையில்லாத ஒரு அனுகிரகமாக மாற்றவல்லவரே இறைவன் என்பதே இறை பெருங்கருணையின் மகிமையாகும்.
இறைவனின் இந்த தியாகராஜ வைபவத்தை மேற்கூறிய சபரி பொழிவு அபிஷேகத்திற்கு பின்பு அடியார்கள் சில நிமிடங்களாவது அமைதியாக இருந்து, மனதில் சிந்தித்து தியானித்துப் பார்த்தல் நலமே. இதுவே தங்க மனம் ! இத்தகைய தங்க மனத்தை உடைய அனைவருமே தங்க மன தரணி பாலன்தான் !

ஆச்சிராமவல்லி

“நீ இறைவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால் இறைவன் உன்னை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பார், குரு உன்னை நோக்கி ஆயிரம் அடி எடுத்து வைப்பார்,” என்பது ஆசானின் அனுபவ மொழி. இதன் விளக்கமாக வருவதே லால்குடி அன்பில் ஆச்சிராமவல்லி திருத்தலத்தில் உள்ள சப்தகன்னிமார் ஆலயம் ஆகும்.

வனவாசத்தின்போது ராமபிரான் சீதையை இழந்து வருந்தியபோது சுக்ரீவனின் துணையோடு குரங்குகள் மூலம் சீதையைத் தேடும் பணியில் ஈடுபட்டார். அப்போது ராமபிரானின் பராகிரமத்தை பரிசோதிப்பதற்காக ராமபிரான் ஆச்சாமரங்களை தன் அம்பால் துளைக்க முடியுமா என்று வினவிய நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். ராமபிரானோ சுக்ரீவன் காட்டிய வரிசையாக அமைந்த ஏழு ஆச்சாமரங்களையும் ஒரே அம்பால் வீழ்த்தி ராமபாணத்தின் மகிமையை நிலைநாட்டினார்.
இந்த நிகழ்ச்சி பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த தலமே ஆச்சிராமவல்லி ஆகும்.
தந்தை சொல்லை தட்டாமல் நிறைவேற்றும் தனயன்
தன் மனைவியைத் தவிர வேறு எவரையும் மனதாலும் தீண்டாத பத்தினித் தன்மையைப் பூண்டவன்
தன் குடி மக்களுக்காக உயிர், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கவல்ல வேந்தன்
என்ற மூன்று தகுதிகளை உடையவர்களே ஒரு ஆச்சாமரத்தை அம்பால் துளைக்க முடியும் என்பதே ஆச்சாமரத்தின் தன்மையாகும். அப்படியானால் ஏழு ஆச்சாமரங்களையும் ஒருவன் ஒரே அம்பால் துளைக்க முடியும் என்றால் அந்த மாவீரனின் பராக்கிரமம் எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அது மட்டுமல்ல, அம்பால் துளைக்கப்பட்ட ஒரு மரம் உடனே தன் பிராணனை விட்டு விடும். இது சாதாரண மரத்தின் தன்மை. ஆனால், ராமபிரானின் ராமபாணத்தின் ஸ்பரிசம் பட்டே மரமோ, ராம பாணத்தால் துளைக்கப்பட்ட எந்த ஜீவனும் முக்தி அடைந்து விடும் என்பதே ராமபாணத்தின் மகிமை ஆகும்.

ஆச்சிராமவல்லி சக்கரம்

இவ்வாறு ராமபாணம் அளிக்கும் முக்தியின் நாமமே ஆச்சிராமவல்லி என்ற எட்டு எழுத்து நாமமாகும். இதைக் குறிப்பதாக இன்று நாம் பல திருத்தலங்களிலும் தரிசிக்கக் கூடியதே ஆச்சிராமவல்லி சக்கரமாகும். இந்த சக்கரத்தின் நடுவே உள்ள எட்டு இதழ்களே ஆச்சிராமவல்லி என்ற எட்டு எழுத்து முக்தி நிலையை சூட்சுமமாக குறிக்கும் அமைப்பாகும்.
இலங்கையிலிருந்து வான மார்க்கமாக வந்த விபீஷணன் ராமரைச் சரணடையத் தயாராக இருப்பதை தன் அமைச்சர் மூலம் தெரிவித்தபோது விபீஷணனின் சரணாகதியை ஏற்பதா வேண்டாமா என்று தன் நெருங்கிய நண்பர்களான சுக்ரீவன், ஜாம்பவான், ஆஞ்சநேயர் போன்றவர்களிடம் ஆலோசனை கேட்டபோது ஒவ்வொருவரும் தங்கள் எண்ணத்தை தெரிவித்தனர். அவை அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட ராமபிரானோ இறுதியில் விபீஷணனின் சரணாகதியை மனதார ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அவனை இலங்கையின் சக்கரவர்த்தியாக பட்டம் சூட்டி, கௌரவித்த வரலாற்றை நாம் அறிவோம்.
பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டேஸ்வரி என்ற எழுவரையும் நாம் சப்த கன்னிகள் என்று அழைக்கிறோம். திருமணமாகாது பொலிபவர்கள் சப்த கன்னியர்கள் என்றும் திருமணமாகி திகழ்பவர்கள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுவது உண்டு. இம்முறையில் ஆச்சிராமவல்லி திருத்தலத்தில் பொலியும் சப்தகன்னிமார்களே சப்தகன்னிமார்களுக்கெல்லாம் ஆதி தெய்வ மூர்த்திகளாய் சிறப்பு பெறுகிறார்கள். ஆச்சிராமவல்லி திருத்தலமே நம் பாரதத்திற்கு மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்திற்கே ஆதியான சப்த ஒளி, சப்த ஒலித் தலம் என்றால் மிமையாகாது.

ஆச்சிராமவல்லி ஜபவிதானம்

இத்தகைய பெருமை உடைய தலத்தின் மகிமையை நம் அடியார்கள் பெறும் முகமாக நம் சற்குரு ஆச்சிராமவல்லி சக்கர வழிபாட்டை அருளியுள்ளார்கள். படத்தில் காட்டியபடி சக்கரத்தை வரைந்து கொண்டு அதன் மேல் வலது கை ஆள் காட்டி விரலால் ஆ ச் சி ரா ம வ ல் லி என்று தொட்டு ஜபிப்பதே ஆச்சிராமவல்லி சக்கர வழிபாடாகும். பெண்களுக்கு, குறிப்பாக இளம் பெண்களுக்கும், தனித்திருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பை அளிப்பதோடு மட்டுமல்லாமல் திருமணமாகாத பெண்களுக்கு உரிய கணவரைத் தேடித் தருவதும் இந்த வழிபாட்டின் மகிமையாகும். 360 டிகிரி உடைய வட்டத்தை எட்டு பங்காக பிரிக்கும்போது ஒவ்வொரு பிரிவும் (மலர் இதழும்) 45 டிகிரி உடைய பூர்ண பாகமாய் பொலிந்து முக்திக்கும் இந்த வழிபாடு வழிகாட்டும் என்பதும் ஆச்சிராமவல்லி சக்கரத்தின் அரும்பலனாகும்.
வலது ஆள்காட்டி விரல், சனி விரல், மோதிர விரல்களால் ஆச்சி என்றும், ஆள்காட்டி விரல், மோதிர விரலால் ராம என்றும், மீண்டும் வலது ஆள்காட்டி விரல், சனி விரல், மோதிர விரல்களால் வல்லி என்றும் சக்கரத்தில் உள்ள அட்சரங்களைத் தொட்டு ஜபிப்பதே ஒரு சுற்று ஆச்சிராமவல்லி மந்திர ஜப முறையாகும். ராம என்று ஜபிக்கும்போது அதில் நடுவில் உள்ள சனிவிரல் சக்திகள் வர்ஜிதமாக அமைவதால், இந்த சனி சக்திகள் இல்லாததுபோல் தோன்றும் மாயை எண்ணமே சனிவர்தம் ஆகும். இவ்வாறு பெருகும் சனிவர்த சக்திகள் ஜாதக ரீதியாக ஏற்படும் சனி வக்ரம், சனி புத்தி, சனி அந்தரம் போன்ற துன்பங்களிலிருந்து அடியார்களைக் காக்கும். சனி பகவானின் உண்மை அருளை அவர்கள் உணரும் உயர்ந்த ஞானத்தை அளிக்கும். நீண்ட ஆயுள் கூடிய நிறைந்த ஞானந்தை அளிப்பதே சனி வர்த சக்திகள்.

திருஞானசம்பந்தரின் தந்தை சிவபாதஹ்ருதயர் ஆவார். உத்தம சிவ பக்தர். தன் அருமைச் செல்வன் மூன்று வயதில் ஞானப் பால் அருந்தி ஆயிரக் கணக்கில் தேவாரப் பாடல்களை மடை திறந்த வெள்ளமாய்ப் பொழிய அதனால் பேருவகை உற்றார் சம்பந்தப் பெருமானின் தந்தை. அதே சமயத்தில் சம்பந்தர் அருளிய பாடல்கள் அனைத்தையும் தன்னால் பாட முடியுமா என்று சந்தேகம் எழ தன் தனயனிடமே இந்த கேள்வியைக் கேட்க சம்பந்தரோ தன் தந்தைக்கு அளிக்கும் ஆறுதல் மொழியாக, மற்றோர் தேவார சுவையாக எழுகூற்றிருக்கை என்ற பாடலைப் பாடினார் என்பதை நாம் அறிவோம்.

சனிவர்தம்

தந்தையே கேட்டதால் தந்தையை விட மகன் உயர்ந்தவர் என்று நாம் கருதி விடக் கூடாது. ஓம்காரத்திற்கு பொருள் தெரியாமல் குமரனிடம் சிரம் தாழ்த்தி வாய் பொத்தி வணங்கி கேட்டபோது, “அப்பா அப்பா அப்பா என்று முறை கூவினானே தமிழ்க் கடவுள்!” என்று முருகப் பெருமானின் ஞானப் பிரகாசத்தை உலகறிய வெளிப்படுத்துகிறார் அல்லவா ஸ்ரீஅகத்திய பிரான்.
எழுகூற்றிருக்கைப் பாடலில் இறைவனின் சக்திகள் ஒன்றிலிருந்து ஏழிற்கு விரிந்து பின்னர் ஏழிலிருந்து ஒன்றுக்கு இறங்கி வருவதாக அமைந்திருக்கும். இந்த எழுகூற்றிருக்கை தேவாரப் பாடலை சம்பந்தர் எதிர்பார்க்கும் முறைப்படி பாட முடிந்தவர்கள் தங்கள் ஏழேழ் பிறவி நிலைகளையும் கடந்து சென்று தேரில் பவனி வரும் எம்பெருமானின் தரிசனத்தைப் பெறுவர் என்பது உறுதி. இத்தகைய தகுதியை சம்பந்தர் காலத்தில் பெற்றிருந்த ஒரே உத்தமர் அவருடைய தந்தை சிவபாதஹிருதயர் என்பதால்தான் தந்தையும் மகனும் சேர்ந்து நடத்திய நாடகமாக இந்த எழுகூற்றிருக்கை தேவாரப் பாடல் அமைந்தது. இப்போது ஞானப்பால் ஞானம், ஓங்கார விளக்கம், தேரில் பவனி வரும் சிவஞானம் இவை அனைத்தையும் இணைத்துப் பார்த்தால் கிட்டுவதே என்றும் திகட்டாத தேவார சுவை.
இந்த எழுகூற்றிருக்கை சுவையை தம் அடியார்களுக்கு ஆச்சிராமவல்லி சுவையாக அளித்தவரே ராமபிரான்.
எப்படி ?
ஆச்சிராமவல்லி சக்கரத்தில் உள்ள மந்திரத்தை விரல்களால் தொட்டு ஜபிக்கும்போது ராம என்ற சொல்லில் சனி விரல் பிரயோகம் கொள்ளாமல் இருந்து விடுகிறது அல்லவா ? இது சனி வர்த அனுகிரகம் என்று அழைக்கப்படும். ஆச்சி ராம வல்லி என்ற சொற்களில் முதலும் கடைசியுமாகப் பொலியும் சொற்களின் இடையாக ச், ல் என்ற அட்சரங்கள் மெய்யெழுத்தாகத் துலங்குகின்றன, உடல் மெய் இல்லாதவரே ராம பிரான். ஆனால், மக்களுக்கு அருள்புரியவே மனித உடல் எடுத்து நம்மைக் கடைதேற்ற இப்புவியில் எழுந்தருளினார். அதனால் இது ராமவர்தம் என்றும் அழைக்கப்படும்.

இந்த அனுகிரகத்தை ராமபிரானுக்கு அளித்தவரே அன்பில் ஸ்ரீரெங்கநாதர் ஆவார். அன்பு ஆலம் துறை என்று ஆதிகாலத்தில் பொலிந்த திருத்தலமே அன்பாலந்துறையாக மாறி, தற்போது அன்பில் என்று மட்டுமே நின்று விட்டது. அன்பு, ஆல மரங்கள் பெருகிய சோலையாக பெருகிய தலமே அன்பில். காயத்ரீ, கொள்ளிடம், சாவித்ரி என்ற புனித முக்கூடல் சங்கமத்துறை. ஏழு ஆச்சாமரங்களையும் ராமபாணத்தால் துளைக்கும் முன் அன்பில் ஸ்ரீரெங்கநாதரிடம் வணங்கி உத்தரவு பெற்றார் ராமபிரான். ராமரின் ரகுகுலத்திற்கே குல தெய்வமாக விளங்கியவர் அல்லவா ஸ்ரீரெங்கநாதர்.
அபூர்வமான சுதை மூர்த்தி ஸ்ரீரெங்கநாதர். ராமபிரான் வணங்கிய ரெங்கநாதர் காலத்து தேர் இன்றும் இத்திருத்தலத்தில் ஓடுவது நம்முடைய பாக்கியமே. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் ராம மகாத்மியம் என்றும் குறையாது, பெருகிக் கொண்டே, வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதற்கு அன்பில் தேரும் பறைசாற்றும் உண்மையாகும். எனவே எழுகூற்றிருக்கை தேவாரப் பாடலை ஆச்சிராமவல்லி திருத்தலத்தில் பாடி மகிழ்வது என்பது எத்தகைய பேறு.

சிவபெருமானின் இதயத்தில் இறைவன் மீது பேரன்பு கொண்ட ராமரைத் தவிர வேறு யார் வீற்றிருக்க முடியும் என்ற உண்மையைப் பறை சாற்றுவதே இங்கு நீங்கள் தரிசனம் செய்யும் மற்றோர் மயிற்பீலி.
மதுரை பாண்டிய மன்னனின் அருந்தவப் புதல்வனான உக்கிரவழுதி ஒரு முறை அழகர்கோயில் அருகில் உள்ள காட்டில் வேட்டையாடச் சென்றார். அங்கு ஒரு இரகசியப் பகுதி உண்டு. யார் அங்கு காலடி வைத்தாலும் அவர்கள் பெண்ணாக மாறி விடுவார்கள் என்பது இறை நியதி. இந்த உண்மையை அறிந்தவன் உக்கிரவழுதியின் மெய்க்காப்பாளன் மதுரை வீரன். ஆனால், இந்த இரகசியப் பகுதியை உணராமல் குதிரையில் விரைந்து கொண்டிருந்தார் உக்கிரவழுதி. மதுரை வீரனுக்கும் உக்கிரவழுதிக்கும் இடையே உள்ள தூரம் குறைந்தது பத்து மைல் இருக்கும். அறியாமல் இந்த பெண்டிர் பகுதியை மிதித்து விட்டால் மன்னன் பெண்ணாகி விடுவாரே, ராஜா இல்லாத ஒரு நாட்டின் நிலை என்னவாகும் ? இதை எல்லாம் ஒரு விநாடி நேரம் சிந்தையில் சுழற்றிய மதுரை வீரன் மறு விநாடி தன்னுடைய வாளை எடுத்து தன் கழுத்தை நோக்கி சுழற்றினான்.

ஆம், மதுரை வீரனின் தலை மண்ணில் விழுந்து புரண்டது. உடல் இல்லாமல் சூக்கும பிரவேசம் கொண்ட மதுரை வீரனின் சூக்கும சரீரம் மட்டும், விரைந்து சென்று கொண்டிருந்த உக்கிரவழுதியின் முன்னால் சென்று வணங்கி நின்றது. திடீரென்று தன் முன் தோன்றிய தன்னுடைய மெய்க்காப்பாளனின் சூக்கும சரீரத்தை இனங்கண்டு கொண்ட உக்கிரவழுதி குதிரையின் லகானை இறுக்கிப் பிடித்து நிறுத்தினார். தன்னுடைய உயிர் பிரிந்தாலும் மக்களிடமிருந்து மன்னனைப் பிரிக்காத ஒரு நற்செயலை நிறைவேற்றினோம் என்ற பெருமிதத்தில் மிதந்தான் மதுரை வீரன்.
நடந்ததை மெதுவே மெதுவே அறிந்து கொண்ட உக்கிரவழுதி, மதுரை வீரனின் ஒப்பற்ற தியாகத்தை மெச்சி தன் தந்தை சோமசுந்தர பாண்டியனையும், அனைத்துயிர்களின் தந்தையான எம்பெருமானையும் வேண்ட மதுரை வீரனை சப்தகன்னிமார்களைக் காக்கும் காவலனாக, பெண்குலத்தவர்கெல்லாம் கற்பு காவலனாக நியமித்து மதுரை வீரனை ஆச்சிராமவல்லி திருத்தலத்தில் காவல் தெய்வமாக ரட்சைத் தேரில் ஏற்றி கௌரவித்தார் சோமசுந்தர ஈசன். ஆச்சிராமவல்லி திருத்தலத்தில் வெள்ளையம்மாள் பொம்மியம்மாள் துணையின்றி அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு காவல் தெய்வமாய், கன்னிமாடக் காப்பாளனாய் அருள்புரிகின்றார் மதுரை வீரன்.
ஆச்சி என்றால் தன் கணவன் மீது ஆழ்ந்த காதல் கொண்ட பத்தினி தெய்வம். வல்லி என்றால் தன் காதலனைக் கொம்பாய், கொடியாய்ச் சுற்றி துலங்குபவள். ஆச்சி ராம வல்லி இறைவனை இவ்வாறு மாறாக் காதலுடன் ஆழ்ந்த பக்தி கொண்டு விளங்கியவர்களே ஆச்சிராமவல்லி சப்தகன்னிகள். ராம என்பது இங்கு பரம்பொருளை வர்ணிப்பதாகும்.

பிரளயம் காத்தார்

பொதுவாக பிரளயம் என்றால் முழுவதுமாக அனைத்தும் அழிவது என்றே நாம் பொருள் கொள்கிறோம். உண்மையில் இறைவனுடைய படைப்பில் எதுவும் அழிவதில்லை, எதுவும் புதிதாகத் தோன்றுவதும் இல்லை. இறைவன் படைப்பில் மாற்றமே உண்மை, மாற்றமே என்றும் நிரந்தரம். இந்த மாற்றமானது உலகளாவிய நிலையில் தோன்றும்போது அதை பிரளயம், மிகப் பெரிய மாற்றம் என்று நாம் கூறுகிறோம்.
பிரளயம் காத்தார், பிரளயம் காத்த அம்மன், பிரளயநாதர், பிரளகால நாதர், பிரளயம் காத்த விநாயகர் என்றெல்லாம் நாம் வணங்கும் மூர்த்திகள் அனைவருமே இவ்வாறு நாம் அறிந்த பிரளய இரகசியங்களை மக்கள் உணரும் வகையில் நல்முறையில் பயன்படுத்த வழிகாட்டுபவர்களே.

சீர்காழி, திருச்சுழி, திருஅண்ணாமலை போன்ற பல தலங்களும் பிரளய காலத்தில் மறையாது பிரளயத்தையும் மிஞ்சி, விஞ்சி நிற்கும் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். அப்படியானால் பிரளயத்தால் உலகம் அழியும் சமயத்தில் இத்தகைய திருத்தலங்களை நாம் அடைக்கலம் கொண்டு விடலாமே என்று மனித மனம் எண்ணுவது இயற்கையே. ஆனால், ஜலபிரவாகத்தில் உலகம் பிரளயத்தைச் சந்திக்கப்போவதாக வைத்துக் கொண்டால் அப்போது ஒரு நொடிக்குள் 300 அடி உயரத்திற்கு உலகம் முழுவதும் நீர் சூழ்ந்து விடும் என்றால் மனிதனின் இந்த சுயநலம் எண்ணம் எப்படி நிறைவேறும் ?

பல லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு ஒரு முறையோ நிகழும் பிரளயத்தைக் காப்பதற்காக மட்டும்தானா இறை மூர்த்திகள் பல திருத்தலங்களிலும் எழுந்தருளி உள்ளனர். பிரளயம் என்பது பிரபஞ்சம், உலகம், நாடு, சமூகம், இனம், குடும்பம் என்று மட்டுமல்லாது ஒரே ஒரு மனிதனின் மனத்திலும் கூட தோன்றி அலைக்கழிக்க வல்லதே. மது, மாது, வறுமை மயக்கத்தால் மனதில் பிரளயத்தை சந்திக்கும் மனிதர்கள் எத்தனை எத்தனை பேர். இத்தகைய பிரளய எண்ணங்களை மாய்ப்பதற்காக அல்லும் பகலும் ரிஷிகளும், மகான்களும், குருமார்களும் பூமியில் தோன்றி பல பல பூஜைகளை இயற்றி நம்மைக் காத்து வருகின்றனர். இம்முறையில் குருவித்துறை திருத்தலத்தில் தோன்றிய மரத்தில் தீய எண்ணங்களை ஈர்த்த இலைகளைப் பறித்து வீசி எறிவதாகவும், உண்டு கழிப்பதாகவும் உள்ள ஒரு வானரத்தின் செயலை இங்குள்ள வீடியோவில் நீங்கள் கண்டு இரசிக்கலாம்.

ஸ்ரீஉதயமார்த்தாண்ட லிங்கம்
கரிவலம்வந்தநல்லூர்

குருவித்துறையில் ஸ்ரீசெண்பகவல்லி தாயார் சன்னதியில் உள்ள சாளரமும் இவ்வாறு தீய சக்திகளைக் களைந்து நல்ல சக்திகளை மட்டும் திருச்சன்னதியில் உலவ விடுவதாக, நிரவி அருள் புரியும் தன்மையையும் நீங்கள் கண்டு இரசிக்கலாம். இத்தகைய சாளரங்கள் பலவும் நம் திருத்தலங்களில் ஏராளமாக உள்ளன. இத்தகைய சாரளங்களின் பணியை உணர்ந்தால் சாதாரண ஜடப்பொருட்கள் என்று நாம் நினைக்கும் இறை சாதனங்களும் இறைவன் படைப்பில் எவ்வளவு உயர்ந்த பணியை ஆற்றுகின்றன என்பதை உணர்ந்து கொள்வோம்.
இறைவன் கருணை எல்லையற்றது என்பதை உணர்த்துவதே எண்ணில் பதியும் ஏற்றமிகு தெய்வீக சக்திகள். மூன்று என்பது குருவிற்கு உரிய எண் கணித இலக்கணமாகும். இந்த எண்களின் தெய்வீக சக்தியே பல பிரளயங்களைத் தடுத்து மனித மனதில் நல்லெண்ணங்களை வேரூன்றச் செய்யும் சக்தி பெற்றது என்றால் இத்தகைய திருத்தலங்களில் நிகழ்த்தும் வழிபாடுகளின் மற்ற தன்மைகள் எப்படி இருக்கும்?

ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர்
சோழபுரம்

சாளரங்கள் மட்டும் அல்ல திருத்தலங்களில் உள்ள அனைத்துத் தூண்களும் கட்டிட அமைப்புகளுமே மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் வழிகாட்டியாய் அமைகின்றன. இதில் ஏதோ ஒன்றிரண்டில் தெய்வீக சக்திகளைப் பற்றி மட்டுமே அவ்வப்போது பூமியில் உலா வரும் நம் சற்குரு போன்ற மகான்கள் மக்களுக்குத் தம் அடியார்கள் மூலம் தெரியப்படுத்துகிறார்கள். மக்கள் இறை தூதுவர்களின் செய்திகளைப் புரிந்து கொண்டு இவ்வாறு திருத்தலங்களில் இருக்கும் சிறு மண், துகள தூசி கூட பூமிவாழ் ஜீவன்களின் வாழ்க்கையை மேம்படுத்தவல்லவை என்பதைப் புரிந்து கொண்டால் போதுமே ?
பிரளயம் காத்தார் என்று இறை மூர்த்தியை அழைக்கிறோம். பிரளயத்தைக் காப்பது என்றால் என்ன ? பிரளயம் ஏற்படுத்தும் அழிவு சக்திகளை வேரூடன் களைவதே பிரளயம் காத்தல் என்பதன் ஒரு பொருள். உதாரணமாக, உலகம் முழுவதும் ஒரு நொடியில் மலையளவு உயர்ந்த நீர் வெள்ளத்தை ஒரு சிறு சுழிக்குள் சென்று மறையச் செய்வதாக திருச்சுழி திருத்தலத்தில் இறைவன் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார் அல்லவா ? உலகளவு வெள்ளத்தை தன் திருச்சுழியில் மறைத்த இறைவன் அதற்குப் பின் வேறு தொழில் இல்லாமல் திகழ்ந்தாரா என்பதும் நம் ஆத்மவிசாரத்திற்கு உரியதே. பிரளயம் என்பது ஏற்கனவே கூறியது போல் ஒவ்வொரு ஜீவனின் உள்ளத்திலும் மனதிலும் தோன்றும் ஒரு பெரும் புரட்சியே. சதா சர்வ காலமும் தோன்றும் இந்த மாற்றங்களால், புரட்சிகளால் உயிர்கள் அழிந்து விடாது அவர்களைக் காப்பதே இத்தகைய கரிவலம்வந்தநல்லூர், திருச்சுழி போன்ற திருத்தலங்களில் எழுந்தருளிய தெய்வ மூர்த்திகளின் அருள்பாங்காகும்.
பிரளய சுழி சக்திகளை சமன்படுத்துவதாக அமைந்ததே கஜேந்திரனின் வலமும், மார்த்தாண்ட லிங்க மூர்த்தியின் முன் அமைந்துள்ள ராமதனுசுவும், 30.7.2022 அன்று ஸ்ரீஅகத்திய பிரானுக்கு நிறைவேற்றும் அபிஷேக ஆராதனைகளும். ஸ்ரீஅகத்திய பிரானுக்கு தங்கச் சல்லடை வழியாக குற்றால அருவி தீர்த்தத்தை தாரையாக வார்க்கும்போது அதில் தோன்றுவதும் உதய மார்த்தாண்ட அருட் கிரணங்களே என்பதும் கரிவலம்வந்தநல்லூர் மகாத்மியங்களில் ஒன்றாகும்.
சீதை ராமருடன் சேர்ந்து இருவரும் கையால் சந்தனம் அரைத்து இங்குள்ள ராமதனுசிற்கு பொட்டிட்டு உதயமார்த்தாண்ட சக்திகளை புனருத்தாரணம் செய்ததும் கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில்தான். இந்த புண்ணிய வைபவம் நிகழ்ந்ததும் ஒரு ஆடி மாத மூன்றாம் பிறை முத்தோரண நன்னாளில்தான். இதை பக்தர்கள் இன்றும் நிறைவேற்றி பயன்பெறலாமே ?
ஸ்ரீஉதய மார்த்தாண்ட லிங்கம் எழுந்தருளிய மண்டபத்தில் உள்ள ஒன்பது துவாரங்கள் உடைய சாளரத்தை நாம் மார்த்தாண்ட பலகணி என்கிறோம். சூரியனிடமிருந்து வரும் சூரிய கதிர்கள் பூமியை அடைய கிட்டத்தட்ட ஒன்பது விநாடிகள் எடுத்துக் கொள்கின்றன. அதே போல் நாம் நம்முள் திகழும் சூரிய நாராயணனை தரிசனம் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரமும் ஒன்பது விநாடிகள் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் சித்தர்கள் கூறும் ஆத்ம விசார விந்தையாகும். இதைக் குறிப்பதாகவே பல திருத்தலங்களிலும் நவதுவார சாளரங்கள் அமைந்துள்ளன.

ஒரு மனிதனின் உடலை உயிரோடு தீக்கு இரையாக்குவதைப் போன்ற ஒரு கொடுமையான செயல் வேறு எதுவும் கிடையாது. அத்தகைய செயலையும் தன் கருணை விழியால் நோக்கி தன் அருகில் கிளியாக தங்கி வாழ அருணகிரிநாதருக்கு அனுகிரகம் அளித்த அன்னை மீனாட்சியின் கருணைக்கு ஈடு இணைதான் உண்டோ !

சம்பந்த ஆண்டானுக்கும் அருணகிரிநாதருக்கும் நடந்த போட்டியில் சம்பந்த ஆண்டானின் ஏவல் சக்தியால் அன்னை பராசக்தி குமரனை தன் மடியில் வைத்துப் பிடித்துக் கொண்டதால் அருணகிரிநாதரின் பிரார்த்தனைக்கு இணங்கி முருகப் பெருமானால் அருணாசல கம்பத்தில் தோன்றி அருள்புரிய முடியவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இதை அறிந்த அருணகிரிநாதர் அன்னையை மனமுருகி வேண்ட அன்னையும் மனமிளகி முருக வேளை விடுவிக்க முருகப் பெருமான் கம்பத்து இளையனாராக காட்சி அளித்த அற்புதத்தை நாம் அறிவோம்.

திருமேற்றளிநாதர்
திருமேற்றளி

அவ்வாறிருக்க அருணகிரிநாதர் உடலை இழந்து தவித்தபோது அவர் முருகப் பெருமானிடம் ஏன் அடைக்கலம் கொள்ளவில்லை என்று நீங்கள் கேட்கலாம். முருகப் பெருமானின் மேல் உள்ள காதலால் அருணகிரிநாதர் முருகப் பெருமானாக மாறி விட்டதால் சேயை அணைப்பதுதானே தாயின் கடமை?! இதனால்தான் என்னவோ மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இன்றளவும் தாய் சேய் இனிய அன்பை சித்தரிக்கும் உலகப் பொது மறைக் கோயிலாக உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த இனிய அன்பை நம் சற்குரு அகத்தியர் மூலமாகப் பெற விரும்பும் அடியார்கள் இன்றே கரிவலம்வந்தநல்லூருக்குப் படை எடுங்கள் !

ஸ்ரீசபலை தேவி
திருமேற்றளி

பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் குருவும் சுக்ரனும் களத்திர தானத்தில் இணைந்திருந்தால் பல திருமணமான பெண்களுடன் அத்தகைய ஜாதகர் தொடர்பு கொள்வார் என்பது ஜோதிட விதி. அந்த களத்திர தானம் சங்கமமாகும் ராசி அதிபதியின் தசை காலத்தில் இத்தகைய தவறுகள் செயல்படும். நம் சற்குருவின் ஜாதக சேவையில் வந்திருந்த ஒரு ஜாதகரின் அமைப்பு இவ்வாறு இருந்ததை தம்முடன் கூட இருந்த அடியார்களிடம் காண்பித்து அதற்கான பிராயசித்த முறைகளையும் அருளினார் நம் சற்குரு. விதி வலியது என்பதால் இத்தகைய உறவுகளை அந்த ஜாதகதாரர் தவிர்க்க முடியாது என்றாலும் அவ்வப்போது மனதில் தோன்றும் தவறான எண்ணங்களை செயல்படுத்தாமல் அவற்றை மனதளவிலேயே நிறைவேற்றி வருமாறு சற்குரு பணித்தார். இது அந்த குறிப்பிட்ட ஜாதகருக்கு மட்டும்தான் என்று கிடையாது. நம் சற்குருவை நம்பி இருக்கும் அனைவருக்குமே இந்த வழிகாட்டுதலின் பலன் உண்டு.
அதாவது ஒருவர் தன் மனதில் தோன்றும் எந்த விதமான தீய எண்ணங்களுக்கும், கெட்ட பார்வைகளுக்கும் வடிவு கொடுத்து எண்ணமாக மட்டும், கவனிக்க அந்த எண்ணங்களை செயல்படுத்த சற்றும் முயற்சிக்காமல், அந்த ஆசைகளை எல்லாம் மனதளவில் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதே நம் சற்குரு நம் அடியார்களுக்காக அளிக்கும் குரு அனுகிரகமாகும். இதனால் ஒரு அடியாரின் புண்ணியக் கணக்கு சற்றும் பாதிக்கப்படாது. தீய எண்ணங்கள் அனைத்து திசைகளிலிருந்தும் வந்து தாக்குவதால் பட்டை லிங்க மூர்த்திகள் அருளும் செவலூர், திருநாவலூர், திருமேற்றளி போன்ற திருத்தலங்களில் இயற்றும் அபிஷேக ஆராதனைகள் நாம் அறியாமல் செய்த பல தவறுகளை நமக்கு சுட்டிக் காட்டுமே தவிர இவை ஒருகாலத்தும் பரிகாரத்தை நல்காது. குறிப்பாக திருத்தளியில் அருள்புரியும் ஸ்ரீசபலை தேவி வெளியில் சொல்ல முடியாத எந்த வித மனச் சபலங்களுக்கும் உரிய வடிகால் பெற வழிகாட்டுவாள் என்பது உறுதி.
இதே போல கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் 30.7.2022 அன்று நிறைவேற்றும் வழிபாடுகள் நம் பூர்வ ஜன்ம தவறுகளை மறைமுகமாக சுட்டிக் காட்டுவதோடு மட்டும் அல்லாமல், அத்தகைய தவறுகளுக்கு உகந்த பரிகார வழிபாடுகளையும் பெற்றுத் தரக் கூடியதே. பல லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே கிட்டும் விஜயேந்திர கோசர அம்சங்களுடன் குரு பகவானும், சுக்ர பகவானும் ஒளிர்வதால் இந்த சங்கம பலன்களை மேற்கண்ட வழிபாடுகளை நிகழ்த்தி நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்ரீதட்சிணா மூர்த்தி
நல்லாடை

வெள்ளிக் கிழமைகளில் தங்களால் இயன்ற அளவு தேங்காய்களை பெற்று அவற்றிற்கு மஞ்சள் பூசி, தங்கள் கையால் அரைத்த சந்தனம், குங்குமத்தால் பொட்டிட்டு தேங்காய்களின் மூன்று கண்களும் மேலே பார்க்குமாறு வைத்து கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தை மேற்கூறியவாறு சோமசூக்த பிரதட்சிண முறையில் வலம் வர வேண்டும். வழிபாடு முடிந்த பின் இந்த தேங்காய்களோடு மங்கள பொருட்களை வைத்து தானமளிப்பது சிறப்பு. அல்லது அவரவர் தங்கள் இல்லத்திற்கு திரும்பி அந்த தேங்காயை துருவி சர்க்கரை சேர்த்து கோயில்களில் தொன்னைகளில் வைத்து தானம் அளித்தலும் சிறப்புடையதே. இதனால் குடும்ப ஒற்றுமை ஓங்கும், கணவன் மனைவி ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் வீண் சந்தேகப் பூசல்கள் மறையும்.

திருமேற்றளி சிவாலயத்தின் தலவிருட்சம் தளிசாமரம் என்பதாகும். இது ஒரு வகையான தென்னை மரமாகும். தற்போது திருமேற்றளி திருத்தலத்தை தூங்குமூஞ்சி மரம் அலங்கரிப்பதால் ஞாயிற்றுக் கிழமை ராகு கால நேரத்தில் இந்த தூங்குமூஞ்சி மரத்திற்கு பொட்டிட்டு வலம் வந்து வணங்குவதால் நற்காரியங்களில் ஏற்படும் சோம்பேறித்தனம் மறையும்.

திருமேற்றளி

தொடர்ந்த வழிபாட்டால் தளிசாமரம் தல விருட்சத்தை இனம் கண்டு கொள்ளும் அனுகிரகமும் கனியும். தளிசாமர தென்னையை திருமேற்றளி தலத்தில் வளர்த்து பராமரித்தால் அத்தகையோரின் பரம்பரைகள் என்றுமே கபால நோய்களால் பாதிக்கப்படாது என்பதே ஸ்ரீஅகத்திய பிரான் அளிக்கும் அனுகிரகமாகும். தூங்குமூஞ்சி மரத்தின் நிழலும் கரி என்று அழைக்கப்படும். இது நாம் நினைக்கும் கருப்பு என்ற பொருள் தருவது கிடையாது. அமைதி, எண்ணமற்ற நிர்சலமான நிலை என்பதெல்லாம் இதன் பொருளாகும். இந்த கரியை அளிப்பதே “கரி” வலம் வந்த நல்லூர் ஆகும்.
பூர்வ ஜன்ம புண்ய வசத்தால் அல்லது இந்த பிறவியில் தொடர்ந்து நிறைவேற்றும் வழிபாடுகளால் தளிசாமரம் தென்னையை இனங்கண்டு கொள்ளும் திறன் பெற்றவர்கள் இந்த தென்னையை மற்ற திருத்தலங்களிலும் நீரூற்றி வளர்க்க ஏற்பாடுகள் செய்து வருதலால் கிட்டும் அனுகிரகம் அமோகமே.
தேங்காய் மேல் இருப்பது மூன்று கண்கள், உள்ளே இருப்பது ஆறைக் குறிக்கும் சுக்ர சக்திகள் கூடிய பருப்பு. இத்தகைய தேங்காய்களைத் தாங்கி மூன்றாம் பிறை தரிசன நாளன்று சோமசூக்த பிரதட்சிணத்தை மேற்கொள்கிறீர்கள். இப்போது இந்த சமன்பாட்டைக் கவனியுங்கள். 3 = 6 = மூன்றாம்பிறை = கரிவலம்வந்தநல்லூர் = திருமேற்றளி. இந்த சமன்பாடு அளிக்கும் குசா சக்தி சுவையை விளக்க யுகங்கள் போதாது என்பதால் அடியார்கள் தாங்களே இதை நன்கு ஆத்மவிசாரம் செய்து அவரவர் விரும்பும் வண்ணம் மூழ்கித் திளைக்கலாம்.

நள்ளிருளில் நட்டமிடும்
ஸ்ரீமுருக லீலை நல்லாடை

எண் ஆறு முழுமையான எண், பரிபூரணமான எண் என்று அழைக்கப்படும். எண் ஒன்பது எண் சக்திகளின் எல்லையைக் குறிப்பது. ஒன்பதிற்கு மிஞ்சிய எண் இல்லை என்பது இதன் சிறப்பு. இந்த இரு எண்கள் சுட்டும் சக்திகளை தன் சந்தானங்களாக பரம்பொருள் பெற்றிருக்கிறார் என்பதே இறைவனுக்கு ஆருயிர்கள் மீது கொண்டுள்ள அன்பைப் பறைசாற்றுவதாகும். இந்த அன்பை நாம் பகிர்ந்து கொள்ளவே கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் கணபதி மூர்த்தி முன் சோமசூக்த பிரதட்சிணத்தை ஆரம்பித்து முருகப் பெருமான் தரிசனத்தோடு இதை இணைக்கிறோம்.
மனித மூளையின் சக்தியைக் கடந்த இந்த இரு எண்களின் தன்மையைப் பற்றி தெய்வீகமாகவே புரிந்து கொள்ள முடியும் என்பதால் அது பற்றிய விளக்கத்தை இங்கு அளிக்கிறோம். சூரபத்மன் பஞ்ச அக்னிகளின் நடுவில் பல யுகங்கள் தவம் புரிந்தான். காலங் கடந்த, யுகங்கள் கடந்த அந்த தவத்தின் இடையில் பல பிரம்மாக்களும், பெருமாள் மூர்த்திகளுமே வந்து, சென்று மறைந்தனர் என்னும் அளவிற்கு அகோரமாகத் திகழ்ந்தது சூரபத்மனின் தவம். இறுதியில் எம்பெருமான் ஒரு துளி நீர் வடிவில் சூரபத்மனுக்கு தரிசனம் நல்கினார். இறைவனின் தரிசனம் பெற்ற சூரபத்மன் மிகவும் மகிழ்ந்து, “பரம்பொருளே, தாங்கள் எனக்கு தங்கள் ஒளி வடிவிலான தங்கள் தரிசனத்தை அளிக்கக் கூடாதா?” என்று கேட்டபோது இறைவனோ, “சூரபத்மனே, நீ என்னதான் யுகங்கள் கடந்த தவத்தை இயற்றினாலும் என்னுடைய அக்னி வடிவை, ஒளி ரூப தரிசனத்தை காணும் அளவிற்கு தூய உடலை நீ பெறவில்லை. அதனால்தான் நான் உனக்கு அந்த தரிசனத்தை அளிக்கவில்லை. அந்த அக்னி வடிவான ருத்ர ரூப தரிசனத்தை நீ ஒரே ஒரு நொடி பெற்றாலும் அதைத் தாங்க இயலாது உன்னுடைய உடம்பு பஸ்மமாகி விடும்,” என்ற கருணை ததும்பும் வார்த்தைகளைக் கூறி அருளினார்.
இத்தகைய மகாதபஸ்வியான சூரபத்மனே முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனத்தைக் கண்டபோது அப்பிரதட்சிணாமாக வலம் வந்து வணங்கினான். இத்தகைய ஒரு அபூர்வமான, காணக் கிடைக்காத, கனவிலும் நம் அடியார்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு தரிசனத்தை அளிக்கவே நம் சற்குரு அடியார்கள் அனைவரும் சோமசூக்த பிரதட்சணத்தை மேற்கொள்ளுமாறு பணிக்கிறார். மனிதர்கள் எத்தனை கோடி யுகங்கள் தொடர்ந்து மந்திரங்கள், வேத சூக்தங்களை ஓதினாலும் ஒரு துளி நீரை நம்மால் பூரணிக்க முடியாது, அதை இறைப் பரம்பொருளாக முழுமையாக்க முடியவே முடியாது என்பதே ஒரு துளி நீரில் அடங்கிய தெய்வீக சக்தியாகும். இந்த அணுகிரகத்தை, அணுவிலும் அணுவாக, அதில் சத கோடி அணுவிலும் ஒரு துளியாக நாம் பெறவே குற்றாலம் நீர்வீழ்ச்சி தீர்த்தத்தை திண்ணியம் திருத்தலத்தில் வலம் வந்து வழிபட்டு கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் ஸ்ரீஅகத்திய பிரானுக்கு அபிஷேகமாக நிறைவேற்றுகிறோம்.

சமீபத்தில் நிறைவேறிய நம் சற்குருவின் பிறந்த நாள் வைபவத்தை திருக்காட்டுப்பள்ளி ரெங்கநாதபுரம் திருத்தலத்தில் கொண்டாடியபோது அதில் யானைகளுக்கு தீனியாக நிறைய கரும்புகள் அளிக்கப்பட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் பல கரும்புகளும் யானைகளால் உண்ணப்படாமல் “வீணாகியது” போல் உங்களுக்குத் தோன்றலாம். உண்மையில் ஒரு யானை தன் வாழ்நாளில் அளிக்கும் “பொன் விகிதம் (Golden ratio)” என்ற தத்துவத்தில் மிளிரும் தெய்வீக சக்திகளை ஒரு மனிதன் தன்னுடைய நூறு பிறவிகளிலும் அளிக்க முடியாது என்பதே இவ்வாறு யானை கரும்பு, அருகம்புல் போன்ற தாவரங்களை உண்ணும் காட்சியை கவனித்தால் நாம் உணரக் கூடிய உண்மையாகும். யானைகளின் தும்பிக்கை ஒரு பொருளைப் பற்றும்போது அதில் உண்டாவதே கோல்டன் விகிதம் என்ற விகிதாசார தத்துவமாகும். எனவே யானைகள் தங்கள் தும்பிக்கையால் ஒரு பொருளைத் தொட்டாலே போதும் அதை உண்ண வேண்டிய அவசியமே இல்லை என்பதைக் குறிப்பதே இந்த தத்துவமாகும்.

இன்று போய் நாளை வா

பெருமாள் அவதாரங்களில் புரிந்து கொள்ள மிக மிகக் கடினமானது பகவான் கிருஷ்ணனுடைய அவதாரம் என்பார் நம் சற்குரு. “பாவம்யா, கிருஷ்ணன் அவனைப் பற்றி யாருமே சரியாக புரிந்து கொள்ளவில்லை...”, என்பது அடிக்கடி நம் சற்குரு உதிர்க்கும் விலைமதிப்பில்லா முத்துக்கள். இராவணன் தன்னுடைய ஆயுதங்கள் அனைத்தையும் இழந்து போர்க்களத்தில் நிராயுதபாணியாக நின்றிருந்தபோது ஒரே அம்பில் அவனை ஸ்ரீராமர் வீழ்த்தி இருக்க முடியும். ஆனால், அப்படிச் செய்யாமல் இன்று போய் உன்னால் முடிந்த அளவு படையைத் திரட்டிக் கொண்டு மீண்டும் நாளை போருக்கு வா...”, என்று அருளியவரே ராமபிரான்.

பகவான் கிருஷ்ணர்
திருவதிகை

இது என்றோ ராமபிரான் அளித்த உபதேசம் கிடையாது, இன்றும் நம் சற்குரு போன்ற உத்தமர்கள் தம்மை அண்டி வந்தவர்களுக்கு அளிக்கும் ஆறுதல் மொழிகளே அவை. சுயநல எண்ணம் கொண்ட ஒரு அடியார் தன்னுடைய அடியார்களை திருஅண்ணாமலை கார்த்திகை தீப அன்னதான கைங்கர்யத்தில் பங்கு கொள்ள முடியாதவாறு செய்து விட்டார். இதனால் மிகவும் மனம் வருந்திய நம் சற்குரு, உண்ணாமல் உறங்காமல் மற்ற அடியார்களைக் கொண்டு அந்த கார்த்திகை வைபவத்தை சிறப்பாக நிறைவேற்றி விட்டார். சில நாட்கள் கழித்து நம் சற்குருவிடமிருந்து இறுதியாக விடைபெற்றுக் கொள்ள அந்த அடியார் வந்தபோது நம் சற்குரு தமக்கே உரிய பாணியில், “போய் வா, உன் நல்ல மனதுக்கு நீ எங்கிருந்தாலும் நலமாக இருப்பாய்!” என்று கூறி வழி அனுப்பினார்.
இந்த தாய் அன்பே நாம் எங்கு தேடினாலும் கிட்டாத அருஞ் செல்வம், அந்தக் கடைசி நொடியில் சற்றே மனம் மாறி தான் செய்த “காட்டிக் கொடுத்த” தவறை அந்த அடியார் ஒருவேளை உணர முடிந்தால் இன்றும் அவர் நம் சற்குருவின் திருவடி நிழலில் ஹாய்யாக இளைப்பாறிக் கொண்டு இருப்பார் அல்லவா? ஆனால், விதி வலியது என்பதை பறைசாற்றும் வண்ணம் அந்த அடியார் நம் சற்குருவின் தேடக் கிடைக்காத அன்பை புறக்கணித்து விட்டு சென்...றே விட்டார்.
இவ்வாறு இன்று போய் நாளை வா என்ற பரம வாக்கியத்தின் உத்தம பொருளை மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாததால்தான் பகவானே ஸ்ரீகிருஷ்ணராகத் தோன்றி இந்த எட்டு எழுத்துக்களின் தெய்வீக பொக்கிஷத்தை பதினெட்டு அத்தியாயங்களில் பகவத்கீதையாக வடித்தார். அதோடு மட்டுமல்லாமல் இந்த பகவத்கீதையின் அரும்பொருளை மக்கள் புரிந்து கொள்ளவே சற்குருமார்களின் வடிவங்களில் தொடர்ந்து பூலோகத்தில் தோன்றிக் கொண்டே இருக்கிறார் என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய பெருமாள் மகாத்மியம், வெங்கடராம மகாத்மியம் ஆகும்.
இந்த மகாத்மியம் ஒளிரும் தினமே வரும் 30.7.2022 சனிக் கிழமை ஆகும். திர கிரகமான சனி வக்ர கதியில் ஆட்சி பெற்று விளங்குவதால் இன்று இத்திருத்தலத்தில் பெறும் முக்தி நிலை நிரந்தரமாய் நம்முடன், நம்முள் தங்கி அருள் புரியும் என்பதில் ஐயமில்லை. 6 என்ற எண் தனியாகவோ, 1+2+3, 3+3, 1+5, 2+4, 5+1 என்றவாறாக எத்தனையோ விதங்களில் உருவாகலாம் என்றாலும் நம் சற்குருவின் 51வது ஜீவ சமாதி அருளும் நிலையான கந்தர்வம் என்ற முக்தி நிலையை தம் அடியார்களுக்கு குருபிரசாதமாக அளிக்கும் நாளே 30.7.2022 ஆகும். இந்த ஒரே ஒரு முக்தி நிலையைப் பற்றி நம் அடியார்கள் தினமும் ஆறு நிமிட நேரம் தொடர்ந்து ஆத்ம விசாரம் செய்து வந்தாலே போதும் அவர்கள் வாழ்வு பூரணம் அடையும், பரிபூரணம் அடையும், சத் சித் ஆனந்த நிலையை எளிதில் எட்டிப் பிடிக்கலாம். இங்குள்ள சிலை வடிவத்தை நாம் கூர்ந்து கவனித்தால் இந்த சத் சித் ஆனந்த நிலையை நாம் அடைவதற்கு தடையாக உள்ள ஆசாபாசங்களை புரிந்து கொள்ளலாம். தவறுகள் புரிந்தால் அவைகளைத் திருத்திக் கொள்வதில் சிரமம் இருக்க முடியாதே.

ஒரு முறை ராம லட்சுமணர்கள் கங்கை நதியில் இறங்கி குளிக்கச் சென்றனர். குளிக்கும் முன் வழக்கம்போல் தன்னுடைய அம்பை கரையோரத்தில் உள்ள ஈரமணலில் குத்தி வைத்து விட்டுச் சென்றார் ராமர். நீராடி, அர்க்ய பூஜைகள் நிறைவேற்றிய பின்னர் கரைக்கு வந்து தன்னுடைய அம்பை எடுத்தபோது அந்த அம்பின் நுனியில் இரத்தம் சற்றே தோய்ந்திருப்பதைக் கண்ட ராமர் திடுக்கிட்டார். உடனிருந்த லட்சுமணனிடம், “தம்பி, இந்த இடத்தைத் தோண்டிப் பார், அம்பில் ஏதோ இரத்தக் கறை தோய்ந்திருக்கிறதே...”, என்றார். அந்த இடத்தை மெதுவாக அகழ்ந்து பார்த்த லட்சுமணன் அங்கு ஒரு தவளை இரத்தக் காயத்துடன் உயிர் துறக்கும் தருவாயில் இருந்ததைக் கண்டார். ராமர் மிகவும் மனம் நெகிழ்ந்து அந்தத் தவளையிடம், “தவளை பகவானே, நான் அம்பை மண்ணில் குத்தி வைக்கும்போதே ஏன் நீ இருப்பதைத் தெரிவிக்கவில்லை. அது தெரிந்திருந்தால் உடனே உன்னை வெளியே எடுத்து காப்பாற்றி இருக்கலாமே?” என்று கேட்டார்.
அதற்கு தவளையோ, “சுவாமி, யாராவது என்னைத் தாக்க வந்தால் ராமா, ராமா என்று சொல்லி அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வேன். ஆனால், அந்த பரம்பொருள் ராமரே என்னைத் தன் ராமபாணத்தால் தாக்கினால் நான் என்ன செய்வது?” என்று திருப்பிக் கேட்டு தன் உயிரை ராமபிரான் திருவடிகளில் அர்ப்பணித்ததாம். அனைத்தும் அறிந்த ராமர் மௌனமாக அந்த தவளை ஜீவனுக்கு முக்தி அளித்தார், அல்லது ராமபாண ஸ்பரிசம் பெற்ற அந்தத் தவளை முக்தியை அடைந்தது என்றும் கூறலாமே.

வள்ளிமலை

காலச் சக்கரம் சுழன்றது...
கிருஷ்ணாவதாரம் தோன்றியது ...
பஞ்சபாண்டவர்கள் அதே கங்கைக் கரையில் ஒரு ஊரில் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருந்தபோது அங்கு வந்த கிருஷ்ண பகவான், “ரொம்பவும் அசதியாக இருக்கிறது. குளிக்க சிறிது சுடுதண்ணீர் கொடுத்தால் நன்றாக இருக்கும்...”, என்றார். பாண்டவர்கள் உடனே ஒரு தவலையில் தண்ணீரை ஊற்றி காட்டில் கிடைக்கும் விறகுகளைக் கொண்டு எரித்து சுடுதண்ணீர் அளிக்க முயன்றனர். ஆனால், என்ன ஆச்சரியம். அவர்கள் என்னதான் முயன்று விறகுகளைப் போட்டு எரித்தாலும் அந்த தண்ணீர் சிறிதளவு கூட சூடு ஏறியதாகத் தெரியவில்லை. காத்து, காத்துக் கிடந்த பகவானும் அமைதி இழந்து விட்டார். இறுதியில் வேறு வழியின்றி பகவான் கூறியவண்ணம் அந்தத் தவலையைச் சாய்த்து அதில் உள்ள நீரைக் கீழே கொட்டியபோது அதிலிருந்து ஒரு குட்டித் தவளை கிருஷ்ணா, கிருஷ்ணா என்று ஆனந்தத்துடன் கூவியவாறே அங்கிருந்து ஓடிச் சென்று மறைந்ததாம்.
பகவான் அனைவரையும் நோக்கி ஓர் அர்த்தமுள்ள புன்னகையை வீசினாராம். “உங்களுடைய பக்தி அனைத்தும் சேர்ந்தாலும் ஒரு குட்டித் தவளையின் பக்திக்கு ஈடு கொடுக்க முடியவில்லையே...”, என்பதே பகவானின் பார்வை சொல்லாமல் சொல்லிய கிருஷ்ண கீதையாகும்.

பெருமாள் நிழலில் சிவசக்தி
லால்குடி

வேலூர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவேறியபோது அங்கிருந்த மூலவரை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் எவ்வளவோ முயன்றும் சுவாமியை நகர்த்த அவர்களால் முடியவில்லை. அப்போது சென்னை மயிலையில் இருந்த ஸ்ரீசுந்தரராம் குருஜி அவர்கள் எட்டே எட்டுப் பேரை வைத்துக் கொண்டு சுவாமியை மூங்கில் குச்சிகளில் கட்டி வேறு இடத்திற்கு மாற்றி, கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவேறிய பின் மீண்டும் சுவாமியை யதாஸ்தானத்திற்கு எழுந்தருளச் செய்து திருப்பணியை சிறப்பாக நிறைவேற்றினார் என்பதை ஒரு சிலர் அறிந்திருக்கலாம்.

இங்கு சுவாமியை நகர்த்த ஸ்ரீகுருஜி பயன்படுத்தியதே தவள சித்து, தவளை சித்து என்ற அபூர்வமான சித்தியாகும். உலகம் அனைத்திலும் இந்த சித்தி கைவரப் பெற்ற ஒரே மகான் சுந்தரம் என்ற சிவ சக்தியையும் ராம் என்ற விஷ்ணு அனுகிரகத்தையும் ஒருங்கே பெற்ற ஸ்ரீசுந்தரராம் குருஜி ஆவார். யுகயுகமாய் ராம பக்தியை பெருக்கிய மேற்கூறிய தவளைதான் தவளசித்தியைப் பெற்ற மகான் வடிவில் தோன்றியது என்பதை நீங்கள் இப்போது ஊகித்து உணர்ந்திருக்கலாம்.
உங்களுடைய அடுத்த ஊகம் ... ?
இந்த தவள சித்திக்கு இணையான கந்தர்வம் என்ற முக்தி அனுகிரகத்தை நம் அடியார்களுக்கு அளிக்க காத்திருக்கிறார் 30.7.2022 அன்று கரிவலம்வந்தநல்லூரில் நம் சற்குரு வெங்கடராம குருஜி...
இதை விட இனிய செய்தி உங்களுக்கு கிடைக்குமா என்ன ?

“பழசும் புதுசும்”
ஸ்ரீதட்சிணாமூர்த்தி சோழபுரம்

மகான் சுந்தரராம் குருஜியைப் போன்ற மகான்கள் தங்கள் சேவையைத் தொடர்ந்து ஆற்றிக் கொண்ட வண்ணம்தானே இருப்பார்கள். உதாரணமாக, லால்குடி திருத்தலத்தில் வெகுகாலத்திற்கு முன் காற்றில் விழுந்த ஒரு வில்வமரம் பிரகாரத்தில் வெறுமனே கிடந்தது. ஆனால், நம் சற்குரு தோன்றிய ரோகிணி தினத்தன்று இந்த வில்வ மர சக்திகள் உயிர்பெற்று சிவலிங்கமாய் காட்சி அளித்த விந்தையையும் இதற்கு மரங்களில் நான் அஸ்வதம் (அரசமரம்) என்பதை உறுதி செய்யும் கீதை நாயகனின் நிழலே வில்வ லிங்கத்திற்கு குடை பிடிக்கும் அதிசயத்தையும் இங்குள்ள வீடியோவில் நீங்கள் கண்டு இரசிக்கலாம்.
காய்ந்த வில்வமும், வீழ்ந்த தவளையும் இணையும் லீலையை சித்தரிப்பதே இந்த வீடியோ. இது சுந்தர ராம் குருஜியின் லீலைதான் என்பதை உறுதி செய்யும் விதமாக மண்டூக நாதமும் இதன் பின்னணியில் ஒலித்ததே நம்மை பிரமிக்க வைக்கும் திருவிளையாடலாகும்.

ரோகிணி நட்சத்திர தினத்தன்று ஈசான்ய திசையில் இந்த லிங்க மூர்த்தி எழுந்தருளியதால் இவரை ஸ்ரீரோகிணி ஈசான்ய லிங்க மூர்த்தி என்று அழைப்பதும் பொருத்தமே.
பலாச் சுளையிலிருந்து விதையை நீக்கி விட்டால் அது மரமாக வளராது. ஆனால், விதை இல்லாமல் மரத்தை உருவாக்கக் கூடியது இறையருள் மட்டுமே. இந்த தத்துவத்தை மனிதர்கள் உணர முடிந்தால் உலகமே ஒரு அமைதிப் பூங்காவாக, ஆனந்தச் சோலையாக மலரும். திருத்தவத்துறையில் தன் திருக்கரங்களால் உழவாரப் பணி ஆற்றிய நம் சற்குரு தியானத்துடன் இத்திருத்தல பிரகாரத்தை வலம் வந்தால் இங்குள்ள ஈசான்ய லிங்கத்தின் மகிமையை நாம் ஓரளவு புரிந்து பலன் பெற முடியும். இதற்கு உறுதுணையாக அமைவதே பழைய பின்னமடைந்த தட்சிணாமூர்த்தி விக்ரஹத்தை அகற்றாமல் புதிய மூர்த்தியை அங்கு நிர்மாணித்ததே சோழபுரத்தில் இன்றும் நீங்கள் இரசிக்கக் கூடிய இறைலீலையாகும். இன்றும் சாலையோரத்தில், கடைகளில் விற்கும் பலாச்சுளைகளை அதன் விதைகளை நீக்காமல் மக்களுக்கு விற்பனை செய்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆழ்ந்த பொருள் பொதிந்த அர்த்தம் செறிந்தது இந்த சிரஞ்சீவி தத்துவம்.
நம் சற்குரு குருமங்களகந்தர்வ லோகத்தில் எழுந்தருளியபோது நம் சற்குருவை வரவேற்று மங்கள இசையுடன் சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்த இனிய வைபவத்தை நினைவு கூர்வதாகவே இங்கு நீங்கள் கேட்கும் மங்கள இசை அமையும். செவிகள் கண்கள் ஆகட்டும், கண்கள் குளமாகட்டும், மனம் எல்லையில்லாத சிறகுகள் உடைய சித்த பறவை ஆகட்டும் !

விகாரம் ஆகாரம் சுகாரம்

கரிவலம்வந்தநல்லூரில் வழிபாடு இயற்றும்போது ஸ்ரீசௌபாக்ய விநாயகர் சன்னதியில் ஆரம்பித்து கோயிலைச் சுற்றி பிரதட்சிணமாக வலம் வந்து அந்த வலத்தை ஸ்ரீமுருகப் பெருமானிடம் நிறைவு செய்து மீண்டும் வந்த வழியே திரும்பி ஸ்ரீசௌபாக்ய கணபதியை அடைவதை ஒரு சுற்று மூன்றாம்பிறை முத்தோரண வலம் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இவ்வாறு வலம் வருகையில் பிள்ளையாருக்கும் முருகப் பெருமானுக்கும் இடையே ஒரு சிறு “இடைவெளி” வருகிறதே என்று ஒரு அடியார் ஐயம் தெரிவித்திருந்தார்.
இது போன்ற “இடைவெளி” நாம் திருஅண்ணாமலையை கிரிவலம் வரும்போது ஸ்ரீஇரட்டை பிள்ளையாருக்கும் ஸ்ரீபூதநாராயணருக்கும் இடையேயும் அமைகிறதே. இதைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ள உடைய அடியார்கள், தங்கள் மூளையைக் கசக்கிக் கொள்ளத் தயாராக இருந்தால் அவர்கள் மட்டும் மேற்கொண்டு படிக்கலாம்.

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்
நல்லாடை

ஆர்க் வெல்டிங் என்பது இரண்டு உலோகங்களை ஒன்றாக சேர்ப்பதாகும். இதில் ஏற்படும் அதிக வலிமையான மின்சார சக்தியால் உண்டாகும் ஆர்க் வெப்பத்தில் உலோகம் உருகி இரண்டு உலோகங்களையும் சேர்க்கும். அவ்வாறு வெல்ட் செய்யும்போது எலக்ட்ரோடுக்கும் உலோகத்திற்கும் இடையே கிட்டத்தட்ட மூன்று மில்லி மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். இதுவே ஆன்மீக தத்துவமாக சுழிபிலம் என்று அழைக்கப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த அனுகிரக சக்திகளை அளிக்கக் கூடியது. இந்த அனுகிரக சக்திகளையே விகாரம் ஆகாரம் சுகாரம் என்று அழைக்கிறோம். திருச்சுழி, கும்பகோணம், ஹரித்துவாரமங்கலம் போன்ற திருத்தலங்களிலும் இத்தகைய சுழிபிலங்களை நாம் தரிசனம் செய்யலாம்.
காரைக்கால் அம்மையார் சிறு வயதில் மிகவும் அழகு கூடிய பெண்ணாக இருந்தார். இல்லறத்தை துறந்து வெளியேறிய அவர்களுடைய அழகு தன்னுடைய இறை பக்திக்கு இடைஞ்சலாக இருக்கும் என்ற காரணத்தால் ஒரு பேயின் உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றார். அன்னை பார்வதி தேவியே அந்த உருவத்தைப் பார்த்து பயந்து விட்டாள் என்றால் அது எந்த அளவிற்கு கொடுமையாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். குமரி மாயம்மாவின் உருவமும் இத்தகையதே. முதலில் கொடுமையாக, விகாரமானதாகத் தோன்றும் உருவத்தின் தன்மை புரிந்து விட்டால் அதன் பின் மனதில் தோன்றுவது ஆகாரம், அதாவது அழகு அழகின்மை என்பதைக் கடந்த நிர்சலமான எண்ணம். இதையும் கடந்து அந்த மகான்கள் உயிர்கள் மேல் கொண்டுள்ள கருணையை நாம் அனுபவிக்கும்போது நம் மனதில் தோன்றும் எண்ணமே சுகாரம், சுகத்தை அளிக்கும் வடிவம், என்ற சுகமளிக்கும் உருவமாகும்.
இத்தகைய விகார ஆகார சுகார தத்துவங்களை மனிதர்கள் எப்படிப் பயன்படுத்துவது ? ஒருவர் கழித்த மலத்தை நாம் பார்த்தால் நம் மனதில் தோன்றுவது விகார எண்ணமே. காலையில் அவர் உண்ட வட்ட வடிவ ஜிலேபியோ, வடிவமற்ற காபியோ, முக்கோண வடிவ சம்சாவோதான் இப்போது மலமாக உருவெடுத்துள்ளது என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தால் அப்போது மனதில் தோன்றுவது ஆகாரம். அந்த மலத்தைப் பார்த்து ஒரு சில காயத்ரீ மந்திரங்களை ஓதினால் அந்த மலத்திலிருந்து உண்டாகும் துர்நாற்றம் பரவெளியைப் பாதிக்காமல் ஓரளவு காக்கப்படுவதுடன் அடுத்து அதை உண்ணும் பன்றிக்கு ஒரு “சுவையான” உணவாக மாறும் அல்லவா ?
அதேபோல் ஒரு இளம்பெண்ணைப் பார்க்கும்போது அந்தப் பெண்ணை எப்படி அடையலாம் என்று நினைப்பது விகாரம், அந்த பெண்ணைப் போல் நம் தாயும் ஒரு பெண்தானே என்று நினைப்பது ஆகாரம், இப்போது அந்தத் தாய்க்கு, பெண்ணிற்கு அல்ல, எப்படி உதவலாம் என்று நினைத்து இறைவனை வேண்டுவது சுகாரம். இதுவே திருமணம் என்ற இனிய உறவு உணர்த்தும் உண்மை என்று பறைசாற்றுவதே மாதா அமிர்தானந்தாவின் அருளுரை.

ஸ்ரீஅகத்திய பிரான்
கரிவலம்வந்தநல்லூர்

இத்தகைய விகார ஆகார சுகார சக்திகளே நாம் மேற்கொள்ளும் முத்தோரண வலத்தில் குரு பிரசாதமாக, சற்குருவின் கனிந்த அனுகிரகமாக அளிக்கப்படுகின்றன. எதையும் முழுமையாக, பூரணமாக அளிப்பவர்தானே நம் சற்குரு. அப்படியானால் இந்த வலத்தினாலும் நாம் பூரணத்தை அடைய முடியுமா என்பது உங்கள் ஐயம் என்றால் அதற்கும் வழிகோலுகிறது காலம் தேசம் கடந்த இந்த வழிபாட்டின் பலன்கள். பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டேஸ்வரி என்ற சப்த கன்னிகள் அனைவரும் ஒரே சக்தியாக இணைந்து மனித உடலில் எழுந்தருள்வதையே நாம் குண்டலினி சக்தி என்கிறோம். இவ்வாறு காலம், தேசம் என்றல்லாது நான் ஆண், பெண், ஏன் மனிதன் என்ற ஜீவ பேதத்தையும் கடந்து இறைப் பரம்பொருளுடன் ஒன்ற வழிகாட்டுவதே மூன்றாம் பிறை முத்தோரண வலம்.

பல அடியார்களும் தங்களால் 30.7.2022 அன்று நிகழ்ந்த வைபவத்தில் கரிவலம்வந்தநல்லூரில் முத்தோரண வலத்தை நிறைவேற்ற இயலவில்லை. இதற்கு ஏதாவது ஒரு மாற்று வழிபாடு உண்டா என்று வினவியுள்ளனர். இதே விளைவுகளை, பலன்களை மீண்டும் உருவாக்க முடியாது என்றாலும் ஓரளவிற்கு இதன் பலன்களைப் பெறும் முகமாக நம் சற்குரு அளிப்பதே ஆடி 18ம் பெருக்கு அன்று நிகழ்த்தக் கூடிய தீப வழிபாடாகும். நம் சற்குரு பூத உடலை விடுத்த பின் அடியார்கள் கண் கலங்கி நின்றபோது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த சற்குருவின் சிதையிலிருந்து வலது கரம் எழுந்து அடியார்களுக்கு ஆறுதல் அளித்த செய்தியை ஏற்கனவே பல முறை தெரிவித்து உள்ளோம். இது என்றோ நிகழ்ந்த ஆறுதல் வரலாறு அல்ல என்பதை உறுதிப்படுத்துவதே இந்த மூன்றாம்பிறை அனுகிரகத்தையும் அடியார்கள் பெறும் முறையாகும்.

ஸ்ரீஆதிவிநாயகர் ஆலயம்
பேரூர்

பாடல் பெற்ற தலங்களில் அல்லது ஜீவ சமாதிகளில் மேற்கூறிய முறையில் கையில் ஒரு பாக்கு மட்டைத் தட்டில் குறைந்தது ஆறு தீபங்களை ஏற்றி வைத்து மெதுவாக வலம் வந்து மீண்டும் அந்த தீபங்களை ஓடும் நீர் உள்ள ஆற்றின் கரையில் வைத்து ஏற்றி நீரில் மிதக்க விடுவதே மூன்றாம் பிறை முத்தோரண வழிபாடாக மலரும் என்பதே ஸ்ரீஆரண்யர் என்ற ஆடி 18ம் பெருக்கு தினத்தன்று நமக்கு அருள்புரியும் மகரிஷி ஆவார். ஸ்ரீஅகத்திய பிரானின் குருவருளால் குருமங்களகந்தர்வ லோகம் வரை இந்த தீபங்களின் ஒளி பிரகாசிக்கும் என்பதே நம் சற்குரு நமக்காக உவந்தளிக்கும் குரு கருணையாகும். கரிவலம்வந்தநல்லூரில் ஸ்ரீஅகத்திய பிரானுக்கு நிறைவேற்றிய சந்தனக் காப்பு பிரசாதத்தை இந்த தட்டில் வைத்து வழிபாட்டை நிறைவேற்றுவதும் அற்புத பலன்களை வர்ஷிப்பதே. இவ்வாறு நிறைவேற்றிய வழிபாட்டின் காட்சிகளை இங்கு நீங்கள் கண்டு இரசிக்கலாம்.

தெய்வீகச் சிறப்புகள் மலையளவு பல்கிப் பெருகும் மூன்றாம்பிறையை கரிவலம்வந்தநல்லூர், நம் சற்குருவின் 51வது ஜீவ சமாதி அமைந்த திருஅண்ணாமலை சிவசக்தி ஐக்ய தரிசனப் பகுதி போன்ற சில குறிப்பிட்ட தலங்களில் மட்டுமே தரிசிக்க முடிந்தது என்றாலும் இந்த அபூர்வ மூன்றாம்பிறை தரிசனத்தின் பலன்களை ஓரளவு மற்ற அடியார்களுக்கும் பகிர்ந்தளிக்க உதவியதே காவிரி, நொய்யல் போன்ற புனிதத் தலங்களில் மிதந்த பஞ்சகவ்ய தீபங்களாகும்.

இந்த சுபகிருது வருடம் முழுவதுமே ஜீவ சமாதிகளில் முத்தோரண வலத்தை வியாழக் கிழமை, ரோகிணி நட்சத்திர நாட்கள், 21ந் தேதி போன்ற சுபதினங்களில் நிறைவேற்றி பலன் பெறலாம்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam