ஏழை வயிற்றில் போடும் உணவே ஒருவருடைய உண்மையான நிரந்தர வைப்பு !!

அடியார்
மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்களைக் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று சொல்வதன் காரணம் என்ன, குருதேவா?

சற்குரு
ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இறைவன் படைத்த 27 நட்சத்திர தேவியர் அனைவருமே புனிதமானவர்கள். மக்கள் சமுதாயத்திற்குத் தொண்டாற்ற அல்லும் பகலும் அயராது உழைப்பவர்கள், மூர்த்தி, தீர்த்தம், தலங்களை முறையாக தரிசித்து அந்த பூஜா பலன்களை எல்லாம் நம்முடைய முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்பவர்கள். சுயநலம் ஒரு சிறிதும் அற்ற உத்தம தெய்வங்களே நட்சத்திர தேவியர் என்பதை உணர்ந்தால் உங்கள் கேள்விக்குரிய பதிலை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். 63 நாயன்மார்கள், பன்னிரு ஆழ்வார்கள், சித்தர்கள், மகான்கள், யோகிகள், உத்தம மனிதர்கள் எல்லா நட்சத்திரங்களிலும் பிறந்திருக்கிறார்கள். அவர்கள் விரும்பியிருந்தால் நல்ல நட்சத்திரங்கள் என்று நீங்கள் நினைக்கும் நட்சத்திரங்களில் மட்டும் பிறந்திருக்கலாமே? இதை யோசித்துப் பார்த்தீர்களா?

பெருமாள் ஆலயங்களில் துவார பாலகராக அருள்புரியும் தெய்வமே ஸ்ரீவிஷ்வக்சேனர் என்றழைக்கப்படும் சேனை முதலியார் ஆவார். திருமகளைக் கொடியில் ஏந்திய இவரைத் தரிசித்து பெருமாள் பிரசாதமான துளசித் தீர்த்தத்தை அருந்தி வந்தால் விந்து குற்றங்கள் நீங்கும்.

மக்களின் அறியாமைக்குக் காரணம், ’... பெண் மூலம் நிர்மூலம்’ என்ற பழமொழியை வழக்கம்போல் தவறாகப் புரிந்து கொண்டதுதான். ’நிருத்தி திக்கில் இருக்கும் மூலப் பிரபுவை வணங்கிய பெண் நலம் பெறுவாள்,’ என்பதே இந்தப் பழமொழியின் உண்மைப் பொருள். நிருதி திக்கு என்பது தென் மேற்கு திசை, இது கன்னி மூலை என்றும் வழங்கப்படும். தென் மேற்கு திசையில் குடிகொண்டிருப்பவர் யார்? எல்லாவற்றிற்கும் முதன்மையாக வழிபட வேண்டிய முழுமுதற் கடவுளான மூலப் பிரபு கணபதியே கன்னி மூலை கணபதியாக எல்லா சிவாலயங்களிலும் எழுந்தருளியுள்ளார். மணமாகாத கன்னிப் பெண்கள் இந்தக் கன்னி மூலை கணபதியை வணங்கினால் அவர்களுக்கு எளிதில் திருமணம் கை கூடும்.

மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் காரிய சாதனைகள் புரிவர். அடியேனுக்குத் தெரிந்த பல பெண்கள் மிகச் சிறந்த குழந்தை மருத்துவர்களாகவும், பெண்ணியல் உடல் மருத்துவர்களாகவும், கர்ப்பிணி சிசிச்சை வல்லுநர்களாகவும் சிறந்து விளங்கி புகழுடன் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களே. மூல நட்சத்தில் பிறந்தவர்களின் குணாதிசயத்தை, அவர்களின் எதிர்காலத்தை அறிய வேண்டுமானால் அவர்கள் எந்த நட்சத்திரப் பாதத்தில் பிறந்தார்கள், அந்த நட்சத்திர பாதம் எந்தக் கிரகங்களின் பார்வையைப் பெற்றுள்ளது, அதன் நவாம்ச வீடு என்ன, திரேகாணம், துவிதாம்சத்தில் எந்த வீடுகளில் உள்ளது போன்ற விவரங்களை எல்லாம் கணித்துப் பார்க்க வேண்டும். வெறுமனே மூல நட்சத்திரத்தில் பிறந்ததை மட்டும் பார்த்து ஒரு முடிவுக்கு வருவது சரியான ஜோதிட அணுகு முறை ஆகாது.

மூல நட்சத்திரத்தில் நிறைவேற்றும் நற்காரியங்கள் பன் மடங்காக விருத்தியாகும் தன்மை உடையன. உதாரணமாக, மூல நட்சத்திரத்தில் ஒரு தங்கக் காசு வாங்கினால் மூன்று காசு வாங்க வசதி வரும்.
‘மூலத் தங்கம் முழு முதற் பொருளாய் ஆகி
காலத் தாமதத்தைக் கவினுறக் கழித்திட வழி செய்யும் பாரேன்‘
என்று அகத்திய நாடி உரைக்கிறது.

120 ஆண்டுகள் மனித உடலில் வாழ்ந்து, உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்பும் மற்றவர்களுக்காக தன் உடலைப் பாதுகாத்து அருள்புரியும் உடையவர் என்னும் ராமானுஜர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவரே. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அதில் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். காரிய சாதனைகள் பல புரியவல்லவர்கள் மூல நட்சத்திரக்காரர்கள்.

மூல நட்சத்திர தினத்தன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருதல் சிறப்பாகும். ‘குத்துச் செடி‘ என்று அழைக்கப்படும் ஒரு அற்புதமான மூலிகை உண்டு. சதுரகிரி மலை, திருஅண்ணாமலை, ஜவ்வாது மலை, சுருளி மலை, மருந்துவாழ் மலை, திருக்குற்றால மலை போன்ற மலைத் தலங்களில் மட்டுமே வளரக் கூடிய மூலிகை. இதன் குணம் கருதி இதை ’பங்காளிச் செடி’ என்றும் சொல்வது உண்டு. மூல நட்சத்திரத்தில் மட்டுமே இந்தச் செடி வளரும், மூல நட்சத்திரம் முடிந்தவுடன் பூமியின் அடியில் சென்று மறைந்து விடும். நிலம் புரண்டி என்ற ஒரு தெய்வீக மூலிகையைப் பற்றி அடியேன் உங்களுக்கு ஏற்கனவே விளக்கி உள்ளேன்.. அதைத் தொட்டாலே சிவபெருமான் பிரத்யட்சியமாக அதைத் தொட்டவர் கண் முன்னே நிற்க வேண்டும் என்பது இறை நியதி. அப்படிப்பட்ட அற்புத ஆற்றல் படைத்த நிலம்புரண்டிக்கு மூலமாக இருப்பதாலும், மூல நட்சத்திரம் அன்று மட்டுமே தோன்றுவதாலும் பங்காளிச் செடியை ‘மூல நிலம்புரண்டி‘ என்றும் சொல்வது உண்டு. இதன் காற்று மனிதர்கள் மேல் பட்டால் பங்காளிச் சண்டைகள், சொத்துத் தகராறுகள் மறையும்.

கான்சர், ஆஸ்துமா, பக்கவாதம் போன்ற கடுமையான வியாதிகளால் அவதியுறுவோர் தாங்கள் ஏற்கும் மருந்துகளைக் கையில் ஏந்தி மூல நட்சத்திரம் அன்று திருஅண்ணமலையைக் கிரிவலம் வந்து பின்னர் அவற்றைப் பயன்படுத்துவதால் நோயின் கடுமை படிப்படியாகக் குறைவதைக் கண்கூடாகக் காணலாம். புதிய மருந்துகள், விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள், கம்ப்யூட்டர் ப்ராஜக்ட்டுகள் போன்றவற்றை மூல நட்சத்திர தினத்தில் தொடங்குவது நலம். சில மருந்துகள் மூல நட்சத்திரத்தில் மட்டுமே செய்யப்படுகின்றன. மூல நட்சத்திரத்தன்று மருந்துகளின் வீரிய சக்தி அதிகரிக்கிறது.

Sulpha drugs என்று அழைக்கப்படும் கந்தக மருந்து வகைகளை மூல நட்சத்திரத்தன்று தயாரிப்பது விசேஷம். குளிகைகள் தயாரிக்க, பிரதிஷ்டை செய்ய மூல நட்சத்திரம் உகந்தது. மார்கண்டேய மகரிஷி திருஅண்ணாலையைச் சுற்றி குளிகைகளைப் பூமி அடியில் பதித்து வைக்கும் புனித பூஜைகளை மூல நட்சத்திர தினத்தில்தான் றிறைவேற்றினார். இன்றும் ஆஞ்சநேய மூர்த்தி ஒவ்வொரு மூல நட்சத்திரம் அன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து அற்புதமான குளிகைகளை திருஅண்ணாமலை கிரிவலப் பாதை எங்கும் மக்களின் நலனுக்காக நிரவி வருகிறார் என்பது பலரும் அறியாத இரகசியம். இதனால்தான் திருஅண்ணாமலையில் எங்கு சென்றாலும் பாதணிகள் அணியாமல் வெறுங்காலுடன் செல்லுதல் சிறப்பு என்று சித்தர்கள் வலியுறுத்துகிறார்கள்.

வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்களை மூல நட்சத்திரத்தன்று வாங்கலாம். மருத்துவர்கள், மருந்துகள் தயாரிப்போர், மருந்து கம்பெனிகளில் பணிபுரிவோர், பெண்ணியல் நோய் வல்லுநர்கள், குழந்தை மருத்துவர்கள் போன்றோர் மூல நட்சத்திர தினத்தன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருவதால் நல்ல கைராசியுடன், தங்கள் தொழிலில் சிறந்து விளங்கி பேரும் புகழும் எய்துவர். மூல நட்சத்திரத்தில் தொடங்கும் வியாபாரம், தொழில் முயற்சிகள் நன்முறையில் வளர்ச்சி பெற்று சிறப்படையும்.

அடியேனுக்குத் தெரிந்த ஒரு தொழிலதிபர் இதை நடைமுறையில் செயல்படுத்தி நன்மை அடைந்து வருகிறார். அவர் ஒரு முறை 150 விமானங்களை வாங்கினார். முதலில் ஜெர்மானிய விமானங்களை வாங்க நினைத்த அவர், பிறகு தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு பிரான்ஸ் நாட்டு விமானங்களை வாங்கினார். இதனால் பல கோடி ரூபாய் அந்நியச் செலாவணி அவருக்கு மிச்சமாயிற்று. அவர் தன் முடிவை திடீரென மாற்றிக் கொண்டதற்குக் காரணம் பிரான்ஸ் நாட்டு விமானங்களின் தயாரிப்பு மூல நட்சத்திரம் அன்று தொடங்கப்பட்டது என்பதை கம்பெனியின் ஆவணங்களிலிருந்து தெரிந்து கொண்டதுதான்.

அடியார்
குருதேவா, வீட்டில் மீன் வளர்க்கலாமா?

சற்குரு
உன்னுடைய சந்தேகம் நியாயமானதே. பச்சைக் கிளி, புறா, மயில் போன்றவற்றை கூண்டில் அடைத்து வைத்து வீட்டில் வளர்த்தால் அவ்வாறு அடைத்தவர்கள் எதிர்காலத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதை நாம் வசுதேவர் வாசுகியின் வரலாற்றிலிருந்து அறிகிறோம். ஒரு கிளியை ஒரு வருட காலம் ஒருவர் கூட்டில் அடைத்துவைத்தால் அவர் ஒரு வருட காலம் சிறையில் அடைக்கப்படுவார் என்று கணக்குக் கிடையாது, ஒரு வருடம் என்பது இரண்டு வருட ஆயுள் உள்ள கிளிக்கு பாதி ஆயுள் காலமாக அமைவதால், அவருடைய பாதி ஆயுட்காலம் சிறையில் அடைக்கப்படுவார் என்பதே இறை நியதி. ஆனால், கிளிகள், குருவிகள் சுதந்திரமாக வந்து அமர்ந்து, உணவு, நீர் அருந்தும் வகையில் மரக்கூடுகள், பரண்கள் அமைப்பதில் தவறில்லை. உண்மையில் அத்தகைய கூடுகள் மக்களிடம் மன ஒற்றுமையை வளர்த்து, குடும்பத்தில் அமைதியை நிலை நாட்டும். குடும்பத்தில் பண வரவும் ஏற்படும்.

மீன் வளர்ப்பு என்பது குடும்பத்தில், சமுதாயத்தில் அமைதியை நிலைநாட்ட உதவும் அறப் பணியே. மீன் வளர்ப்பதற்கு முன் அவற்றின் தெய்வீகத் தன்மைகளைப் பற்றி ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். மிகவும் சுத்தமான ஒரு ஜீவன் என்று சொன்னால் மீனைச் சொல்லலாம். உப்பு நீரிலேயே இருந்தாலும் அதன் உடம்பில் உப்பு சேர்வதில்லை. அதன் தெய்வீகத் தன்மை பற்றியே சிவபெருமானும் செம்படவனாக வந்தார், அன்ன பராசக்தியும் மீனாட்சியாக மதுரையில் தோன்றினாள். பெருமாளும் மச்ச அவதாரம் கொண்டு பூவுலகைக் காத்தருளினார்.

பல மகான்களும் மீன்களின் நல்வாழ்விற்காக அருந்தொண்டாற்றி வந்துள்ளனர். காசி ராஜனின் மகள் உருபதி என்பவள் மீன் குலத்தின் நன்மைக்காக அரும் பெரும் பூஜைகள் செய்தவள். மீன்கள் முக்தி பெற வேண்டும், தண்ணீருக்குள் கண் சிமிட்டாமல் காட்சி பெற வேண்டும், கடல் வளம் பெருக வேண்டும். அது மட்டுமல்ல உலகம் உய்வடைய உத்தம மகனைப் பெற வேண்டும் என்று இவ்வாறு பல உத்தம பிரார்த்தனைகளுடன் வாழ்ந்த உருபதியே மச்சகந்தி என்னும் பெயருடன் கங்கையில் படகோட்டியாய் வந்தாள். அப்போது பராசர மகரிஷி அப்படகில் ஏறி வரவே அவர் மூலம் புனித கங்கையின் சாட்சியாக மச்சகந்தி வியாச மகரிஷியைக் குழந்தையாகப் பெற்றாள். பராசரரும், மச்சகந்தியும் கால நேரம் எதையும் செய்யும், எத்தகைய தெய்வீகப் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றும் என்ற இறை நியதிக்கு கருவியாய்ச் செயல்பட்டவர்களே. பராசரர் புதல்வரான வியாசர் நான்கு வேதங்களைத் தொகுத்ததோடு மட்டுமல்லாமல் மக்களின் காமத்தை முறைப்படுத்தும் காமசூத்திரங்களையும் உலகிற்கு அளித்துள்ளார்.

மீன் கண்களையுடைய மீனாட்சியாய் மதுரையை ஆட்சி செய்த பராசக்தியின் வல்லமை நீங்கள் அறிந்ததே. கண்களாலேயே ஆட்சி செய்தவள் மீனாட்சி. இன்றைக்கும் உண்மையான ஆளுமைத் திறன் உள்ளவர்கள் தங்கள் பார்வையாலேயே அனைத்தையும் சாதித்துக் கொள்வார்கள். அக்கம்பக்கத்து நாட்டு மன்னர்கள் மீனாட்சி தேவியின் மகிமை அறியாது ஒருமுறை மதுரை மீது படை எடுத்து வந்தபோது அம்மை போர்க்களம் கொண்டு போர்க்களத்திற்குச் சென்றாள். அப்போதிருந்த போர் யானைகளின் உயரம் குறைந்தது 200 அடி இருக்கும். அப்படி 200, 300 அடி உயரம் கொண்ட போர் யானைகள் எல்லாம் குதிரை மேல் பாய்ந்து வரும் தேவியைப் பார்த்தவுடன் தரையில் மண்டி இட்டு வணங்கின. பராசக்தியைப் பார்த்த மன்னர்கள் எல்லாம் தங்கள் தேரிலிருந்து இறங்கி தரையில் வீழ்ந்து வணங்கினர். கண்களால் அனைத்துப் பகைவர்களையும் வென்று வெற்றி வாகை சூடினாள் மீனாட்சி.

மீன்களில் சாத்வீக குணமுள்ள மீன்களையே வளர்க்க வேண்டும். கோல்ட், ஏஞ்சல், மூன் லைட் போன்ற பெயருள்ள மீன்களைத் தேர்ந்தெடுத்து வளர்ப்பது சிறப்பு. பைட்டர் போன்ற பெயருள்ள மீன் வகைகளைத் தவிர்க்கவும். திருமாலின் திருமார்பில் லட்சுமி உறைவதால் திருமால் அவதாரமான மீனிலும் லட்சுமி கடாட்சம் பெருகி மீன் வளர்ப்போரின் வறுமை நீங்க ஏதுவாகிறது. மீன் தொட்டியில் மீன்கள் நன்கு வெளியில் தெரியுமாறு பச்சை, ஆரஞ்ச், மஞ்சள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கலாம். இரண்டு, மூன்று மின் மோட்டர்களை வைத்து மீன் தொட்டியில் எப்போதும் காற்று சுழற்சி இருக்குமாறு மின் விசிறி வசதி செய்யவும். 24 மணி நேரமும் மீன்களுக்கு ஆக்ஸிஜன் காற்றோட்டம் நிறைந்திருப்பது முக்கியம். மீன் தொட்டிக்குள் சிவலிங்கம், நந்தி, கோயில் கோபுரங்கள், மான், மயில், தவளை, ஆமை போன்ற கடவுள் நினைவுகளை ஏற்படுத்தும் பொம்மைகளை வைத்திருத்தல் நலம்.

மனதில் குழப்பம் ஏந்படும்போதெல்லாம் இந்த மீன்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் பல குழப்பமான சந்தர்ப்பங்களில் நல்ல முடிவுகளை எடுக்கும் மனத்தெளிவு கிட்டும். மீன்கள் பல சமயங்களில் நாம் சந்திக்க இருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி நம்மிடம் தெரிவிக்கும். தொடர்ந்து மீன்களுடன் பழகி வந்தால் நாளடைவில் அவை நம்மிடம் தெரிவிக்கும் செய்திகளை மனோரீதியாகத் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக, ஒரு மீன் அதே இனத்தைச் சேர்த்த மற்றொரு மீனைத் துரத்திச் செல்வதைப் பார்க்க நேர்ந்தால் உனக்கு எதிராக உன் எதிரிகள் ஏதோ திட்டமிடுகிறார்கள் என்று அர்த்தம். மீன் உன்னைப் பார்த்து வாயை அகலத் திறந்து மூடினார் நீ பிறரிடம் வாக்குக் கொடுப்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். மீன் உன்னைப் பார்க்கும்போது கண்ணைத் திறந்து மூடினால் உன்னுடைய மகனோ, மகளோ அவர்கள் மணம் முடித்துச் சென்ற இடத்தில் ஏதோ பிரச்னையை எதிர்நோக்கி உள்ளார்கள் என்பது குறிப்பாகும்.

அடியார்
குருதேவா, தந்திர சாஸ்திரத்தைப் பற்றி பலவிதமான குழப்பங்கள் தற்போது நிலவுகிறதே. அதன் உண்மையான விளக்கத்தை அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

சற்குரு
மிகவும் துரிதமாக இறைவனைக் காட்டும் மார்கமே தந்திர மார்கமாகும். ஆனால், புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமான வித்தையும் அதுவே. அடியேனுடைய ஆசான் இடியாப்ப சித்தர் அடியேனிடம் கடைசியாக தெரிவித்த குருவாய் மொழியான, ‘பாரு பாரு நல்லா பாரு‘ என்ற மாமந்திரத்தை ஆழ்ந்து ஆத்ம விசாரம் செய்து வந்தால் தந்திர மார்கத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நீ உத்தமன், நல்லவன். உன்னுடைய பிரதிபலிப்புதான் இந்த உலகம். அப்படியானால் இந்த உலகத்தில் நீ நல்லவர்களையும், உத்தமர்களையும்தானே பார்க்க வேண்டும். உண்மையில் நீ பார்ப்பது என்ன? உன்னைச் சுற்றி கள்வர்களும், நயவஞ்சகர்களும், ஏமாற்றுக்காரர்களும் இருப்பதைத்தானே தினமும் பார்க்கிறாய். இதற்குக் காரணம் என்ன? உன்னை நீ முதலில் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. உன்னைச் சரியாகப் புரிந்து கொள்ளாததற்குக் காரணம், உன்னுடைய எந்தச் செயலிலும் மனம் குவிவது கிடையாது. மனம் ஒருமித்த நிலை என்பது உங்களுக்கு ஏட்டுச் சுரைக்காய் அளவிலேயே இருக்கிறது.

கலியுக மனிதனின் மனதை ஒருமைப்படுத்தும் பல வழிமுறைகளுள் சக்தி வாய்ந்த வழிபாட்டு முறையே குறிபாதுகாப்புப் பூஜைகளாகும்.

சூரியனார் கோவில்

எவன் ஒருவன் தன்னுடைய குறியைப் பாதுகாக்கிறானோ அவனுடைய விந்து கெட்டிப்படும். விந்து கெட்டிப்பட்டால் மனம் ஒரு விஷயத்தில் குவியும். குவிந்த மனம் அவனை தியானத்தில் செலுத்தும். தியானத்தில் ஈடுபட்டால் அவன் கடவுளை அடைவான். ஒரு பொருளை அல்லது விஷயத்தைத் இடைவெளியின்றித் தொடர்ந்து 12 வினாடி நேரம் நினைக்க முடிந்தால் அது மனம் குவிதல் எனப்படும், அதாவது கான்சென்ட்ரேஷன். 12ன் 12 மடங்கான 144 விநாடிகள் மனம் ஓரிடத்தில் குவிந்தால் அப்போது தியானம் கை கூடும். 144ன் 144மடங்கான 20736 விநாடி நேரம் தியானத்தில் ஆழ்ந்தால் அதுவே சமாதி நிலையாகும்.

அடியார்
குருதேவா, முறையான குறி பாதுகாப்பு கடவுளைக் காட்டும் என்றால், குறியைப் பாதுகாப்பது எப்படி என்ற இரகசியத்தையும் எடுத்துரைக்க வேண்டுகிறேன்.

சற்குரு
குறியைப் பாதுகாக்க ஆண்கள் கோவணம் அணிய வேண்டும். கோவண இரகசியத்தைப் பற்றி மட்டுமே அகஸ்தியரின் பிரதம சீடரான போகர் 300,000 லட்சம் பாடல்களை எழுதியுள்ளார். இதில் என்ன விதமான துணியில் கோவணம் கட்ட வேண்டும், யார் யார் என்ன நீள அகல அளவுகள் உள்ள கோவணத்தை அணிய வேண்டும், எப்படி அதன் ஓரத்தைத் தைக்க வேண்டும், எப்போது ஈர கோவணம் கட்டலாம் போன்ற பல அற்புத விஷயங்கள் எல்லாம் அவருடைய கோவண கீதையில் அடங்கியுள்ளன. கோவண இரகசியங்களைப் பற்றி நீங்கள் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமானால் பழநி முருகன் திருக்கோயிலில் ஜீவ சமாதி கொண்டு அருளும் போகர் சித்தரை அடிக்கடி வழிபட்டு வாருங்கள். கலியுகத்தில் கண் கண்ட தெய்வமான பழநி முருகனும், கலியுக மக்களைக் கரையேற்ற வந்த எம் ஈசன் இடியாப்ப சித்தரும் கோவணாண்டிகள்தான் என்பது நீங்கள் அறிந்ததே.

ஆண்கள் புதன், சனிக் கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குறைந்தது மூன்று மணி நேரமேனும் எண்ணெய் தலையில் ஊற வேண்டும். தேங்காய் எண்ணெய் தேய்த்தால் தண்ணீரிலும் (குளிர்ந்த நீர், சாதாரண நீர்), நல்லெண்ணெய் தேய்த்தால் வெந்நீரிலும் நீராட வேண்டும். எண்ணெய்க் குளியல் பகல் நேரத்தில்தான் அமைய வேண்டும்.

நாம் எடுக்கும் முடிவுகளைப் பொருத்தே நம் வாழ்க்கை அமைகிறது. மனிதனின் முடிவுகளை தீர்மானிப்பதே நம் தலையில் உள்ள கபால சூடு என்னும் ஒரு வகைச் சூடாகும். இந்தக் கபாலச் சூட்டை சரியானை நிலையில் வைத்திருப்பதே எண்ணெய்க் குளியலாகும். வேறு எந்த முறையாலும் இந்தக் கபாலச் சூட்டை சீரமைக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வானங்கள் ஓட்டும்போது நாலா பக்கங்களிலும் பார்த்து, பார்த்து உடனுக்குடன் பல முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதால் வாகனம் ஓட்டுபவர்களின் மூளை அதிகம் வேலை செய்து கபாலச் சூடு அதிகரிக்கிறது. வாகனம் அதிகம் ஓட்ட வேண்டிய நிலையில் இருப்பவர்களும், கம்ப்யூட்டரில் பணி புரிபவர்களும் கட்டாயம் எண்ணெய்க் குளியலை மேற்கொண்டாக வேண்டும்.

துடையூரில் இரு பத்தினிகளுடன்
எழுந்தருளியிருக்கும் சூரிய பகவான்

உடல் சூட்டை மூன்று வகையாக சித்தர்கள் பிரிக்கிறார்கள். அவை உள்சூடு, நடுசூடு, வெளிசூடு என்பவையாகும். பெண் யோனியும், ஆண்குறியும் நடுசூடு தத்துவத்தில் அமைகின்றன. ஆண்களின் உன்னங் கை வெளிசூடு தத்துவத்தில் அமைகிறது. இதனால் கைமைதுனத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு சூட்டு பேதத்தால் குறி நரம்புகள் சீர்கேடு அடைகின்றன.

ஆண்களின் விந்துப் பையில் மட்டும் மூவாயிரம் நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் விந்தைச் சுத்திகரிப்பதற்கும், விந்தைக் குறித்த இடத்திற்கு அனுப்புவதற்கும் பயன்படுகின்றன. இவ்வாறு 3000 நரம்புகளால் தூய்மையாக்கப்பட்ட விந்து, மனிதனின் மூன்று இதழ்கள் உடைய சூக்கும முக்கோணச் சக்கரம் வழியாக வெளியேறும்போது மேலும் அது தூய்மை அடைகிறது. கைமைதுனத்தால் விந்து வெளியேறும்போது உடல் நரம்புகள் பலமிழந்து போவதோடு, சூக்கும யோகச் சக்கரங்களும் பலவித தோஷங்களுக்கு உள்ளாகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிவலிங்கம் மட்டும் அல்லாது கோயில் கோபுரங்களில் உள்ள ஆண் பெண் புணர்ச்சி காட்சிகளும் ஆண் பெண் குறி பாதுகாப்பைப் பற்றிய இரகசியங்களைத் தெரிவிக்கின்றன.

அடியார்
குருதேவா, கோபுரத்தில் உள்ள புணர்ச்சி காட்சிகள் மக்கள் மனதில் விரசத்தைத் தூண்டுவதாகச் சொல்கிறார்களே?

சற்குரு
விரசம் உன் மனதில்தான் இருக்கிறது. கோபுரக் காட்சிகளில் விரசம் இல்லை. அந்தக் காட்சிகள் எல்லாம் குறி பாதுகாப்பு முறைகளையே விளக்குகின்றன. அந்தக் காட்சிகளைக் கூர்ந்து கவனித்து வந்தால் இந்த உண்மை நாளடைவில் விளங்கும். சந்தியா வந்தன வழிபாடுகளிலும் குறி பாதுகாப்பு இரகசிய மந்திரங்கள் உண்டு. இவற்றைத் தக்க குருமார்கள் மூலம் அறிந்து கடைபிடித்து வருதல் நலம். தினந்தோறும் ரிஷிகளுக்கு தேவர்களுக்கு அர்க்ய ஆராதனைகள் அளிப்பது போல தன்னுடைய குறிக்கும் அர்க்யம் அளித்து வருவதும் ஒரு வழிபாட்டு முறையே.

முறையாகத் தன்னுடைய குறியை வழிபடத் தெரிந்தவன் கோயிலுக்குக் கூட செல்லத் தேவையில்லை. கோயிலுக்குக் கொடிமரம் அமைவது போல மனித உடலின் கொடி மரமாக விளங்குவது குறியாகும் என்பது சித்தர்கள் சொல்லும் இரகசியம். இந்த உண்மையை உலகிற்கு எடுத்துக் கூறியவரே உமாபதி சிவாசாரியார் என்னும் உத்தமர் ஆவார். உமாபதி சிவாசாரியார் அருளிய கொடிக்கவி துதியை தினமும் ஒதி வந்தால் குறி பாதுகாப்பு இரகசியங்கள் நல்லோர்கள் மூலம் தெரிய வரும். குறி பாதுகாப்பிற்குத் துணை புரியும் பல யோகாசன வழிபாட்டு முறைகள் உண்டு. இவற்றைத் தக்க குருமார்கள் மூலம் அறிந்து நிறைவேற்றி வருதல் நலம்.

சூரியனை தரிசனம் செய்ய உதவும்
பாசாங்குலி முத்திரை. இந்த முத்திரையைத்
தவிர வேறு எந்த உபகரணங்களினாலும்
சூரியனைப் பார்க்க கூடாது என்பதை
நினைவில் கொள்ளவும்
சற்குருமார்களின் வருகை கலியுகத்தில் அருகி விடும் என்பதைத் தன் தீர்க தரிசனத்தால் அறிந்த அகஸ்திய மகாபிரபு காமத்தை முறைப்படுத்தி இறைவனை அடையும் மார்கமாக அருளிய சூரிய நமஸ்கார வழிபாட்டு முறையை உங்களுக்கு விளக்குகிறேன். நம் உடலில் இட நாடி, பிங்கள நாடி, சுசும்னா நாடி (சூரிய, சந்திர, சுழுமுனை நாடி) என மூன்று முக்கிய நாடிகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் அப்பு, வாயு, பிருத்வி, தேயு பூதங்களுடன் தொடர்பு கொள்ளும்போது 12 நாடிகளாகப் பரிணமித்து, அந்த 12 நாடிகளும் ஒன்பது சூக்கும தேகத்தில் நிலை கொள்ளும்போது 108 நாடிகளாக கணக்கிடப்படுகின்றன. இதனால்தான் சுவாமிக்கு அஷ்டோத்திர சத நாமாவளி என்று 108 போற்றிகளைச் சொல்லி வழிபடும்போது மனித உடலில் உள்ள 108 நாடிகளும் தூய்மை அடைந்து அவன் இறைவனை நோக்கி முன்னேறுகிறான்.

யார் ஒருவர் ஸ்ரீஅகஸ்தியர் அருளிய சூரிய நமஸ்கார வழிபாட்டைத் தொடர்ந்து 12 வருடங்கள் நிறைவேற்றி வருகிறாரோ அவருக்குக் கடவுள் தரிசனம் கிட்டும் என்பது உறுதி. 12 ஆசனங்களை, 12 முறை, 12 வருடங்களில் நிறைவேற்றி வந்தால் அது எப்படி தியான, சமாதி நிலைகளைத் தந்து கடவுளிடம் உங்களை இட்டுச் செல்லும் என்ற தத்துவம் ஏற்கனவே உங்களுக்கு விளக்கப்பட்டது.

விடியற்காலை ஆரம்பித்து சூரிய உதயத்திற்குள் இந்தச் சூரிய நமஸ்கார வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும் என்பது விதிமுறை. அவரவர் உடல் நிலையைப் பொறுத்து இந்த வழிபாட்டை நிறைவேற்ற குறைந்தது மூன்று மணி நேரம் ஆகும் என்பதால் அதற்குத் தக்கவாறு தங்கள் தூக்க நேரத்தை அமைத்துக் கொள்ளவும். காலையில் எழுந்து நீராடி, நெற்றிக்கு அணிந்து நல்ல காற்றோட்டமான இடத்தில் இந்த ஆசனங்களை செய்வது நலம். ஒரு நாளைக்கு ஒரு முறை இந்த வழிபாட்டைச் செய்து வந்தாலே போதுமானது. இங்கே 12 ஆசனங்களும் அதற்குரித்தான மந்திரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த 12 ஆசனங்களையும் 12 முறை நிறைவேற்றி வருவது ஒரு நாளைக்குரிய வழிபாடாகும். தங்கள் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு முதலில் ஒரு முறை இந்த 12 ஆசனங்களையும் இட்டுப் பழகி, அல்லது ஒவ்வொரு ஆசனங்களையும் 12 முறை இட்டுப் பழகி, பிறகு படிப்படியாக 12 முறை ஆசனங்களை இட்டு வழிபடுவது நல்லது. எல்லா ஆசனங்களையும் கிழக்கு நோக்கி இட்டு வழிபடவும்.

ஒரு கெட்டியான போர்வை அல்லது ஜமுக்காளத்தை விரித்து அதன் மேல் ஆசனங்களை இடவும். வெறுந் தரையில் எவ்விதமான இறை வழிபாட்டையும் மேற் கொள்ள வேண்டாம். வழிபாட்டிற்கு முன் பிள்ளையார், பெற்றோர்கள், இஷ்ட தெய்வம், குரு இவர்களை மனதில் தியானித்து பின் வழிபாட்டைத் தொடங்குதல் நலம்.

சூரிய நமஸ்கார ஆசனம் ஒன்று
இரண்டு கால்களையும் நேரே நீட்டி அமரவும். பத்மாசனம் இடவும். வலது காலை இடது தொடையின் மேல் வைத்து அல்லது இடது காலை வலது தொடையின் மேல் வைத்தோ பத்மாசனம் இடலாம். இரண்டு கைகளையும் உள்ளங்கைகள் பூமியைப் பார்க்குமாறு பக்க வாட்டில் நீட்டிக் கொள்ளவும். மெதுவாக மூச்சை உள்ளே இழுக்கவும். நன்றாக மூச்சை உள்ளே இழுத்த பின், மூச்சை நிறுத்தி வைக்கவும். மெதுவாகக் குனிந்து தலையால் தரையைத் தொடவும். உள்ளங்கைகள் தரையைத் தொடாமல் தரையிலிருந்து சுமார் ஒரு அங்குல உயரத்தில் வைத்துக் கொள்ளவும். மூச்சை வெளியே விடாமல் நிறுத்தி வைத்துக் கொண்டு ‘ஓம் மித்ராய நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள் சொல்லவும். மெதுவாக தலையைத் தூக்கி நிமிர்ந்த நிலைக்கு வரவும். மெதுவாக மூச்சை வெளியே விடவும். சகஜமான நிலையில் ஓய்வெடுத்துக் கொண்டு இரண்டாம் ஆசனத்திற்குத் தயாராகவும்.

சூரிய நமஸ்கார ஆசனம் இரண்டு
பத்மானம் இட்ட நிலையில் அமரவும். மூச்சை மெதுவாக, நன்றாக உள்ளிழுக்கவும். கைகளை கால்களுக்குள் நுழைத்து குக்குட்டாசன நிலையில் நிற்கவும். நிமிர்ந்து நேரே பார்க்கவும். மூச்சைக் காற்றை வெளியே விடாமல் நிறுத்தி வைத்துக் கொண்டு ‘ஓம் ரவியே நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள் கூறவும். குக்குட்டாசன நிலையிலிருந்து தரையில் அமரவும். மெதுவாக மூச்சை வெளியே விடவும். சகஜ நிலைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

சூரிய நமஸ்கார ஆசனம் மூன்று
பத்மாசனம் இட்டு அமரவும். மெதுவாகப் பின்னால் சாய்ந்து தரையில் படுக்கவும். கைகளை மடக்காமல் பக்கவாட்டில் உள்ளங்கை வானத்தைப் பார்க்குமாறு வைத்துக் கொள்ளவும். மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும். மூச்சுக் காற்றை வெளியே விடாமல் வைத்துக் கொண்டு ’ஓம் சூர்யாய நமஹ’ என்று 12 முறை மனதிற்குள் கூறவும். மூச்சை மெதுவாக வெளியே விடவும். சகஜ நிலைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

சூரிய நமஸ்கார ஆசனம் நான்கு
பத்மாசனம் இட்டு அமரவும். மெதுவாகப் பின்னால் சாய்ந்து தரையில் படுக்கவும். மெதுவாக மூச்சை உள்ளே இழுக்கவும். கால்கள், இடுப்பை மேலே தூக்கி வைத்துக் கொண்டு கைகளால் இடுப்பை பிடித்துக் கொள்ளவும். உடல் பகுதி நேராகவும். தலைக்கு 90 டிகிரி கோணத்தில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும். மூச்சுக் காற்று வெளியே போகாமல் வைத்துக் கொண்டு ‘ஓம் பாணவே நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள் கூறவும். மெதுவாக இடுப்பு, கால்களை கீழே இறக்கவும். மூச்சை மெதுவாக வெளியே விடவும். சகஜ நிலைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

சூரிய நமஸ்கார ஆசனம் ஐந்து
சுகாசனத்தில் அமரவும். கைகளைப் பின்னால் கட்டிக் கொள்ளவும். நேரே பார்க்கவும். மூச்சை மெதுவாக உள்ளே இழுக்கவும். நன்றாக மூச்சை இழுத்து, மூச்சுக் காற்று வெளியே போகாமல் வைத்துக் கொண்டு ’ஓம் ககாய நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள். கூறவும். மூச்சை மெதுவாக வெளியே விடவும். சகஜ நிலைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

சூரிய நமஸ்கார ஆசனம் ஆறு
சுகாசனத்தில் அமரவும். கைகளைப் பின்னால் கட்டிக் கொள்ளவும். நேரே பார்க்கவும். மூச்சை மெதுவாக உள்ளே இழுக்கவும். மெதுவாக குனிந்து தலையால் தரையைத் தொடவும். மூச்சுக் காற்று வெளியே விடாமல் வைத்துக் கொண்டு ’ஓம் பூஷ்ணே நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள் சொல்லவும். மெதுவாகத் தலையைத் தூக்கி நேரே பார்க்கவும். மெதுவாக மூச்சை வெளியே விடவும். சகஜ நிலைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

சூரிய நமஸ்கார ஆசுனம் ஏழு சாதாரணமாக அமரவும். வலது கையால் வலது காலை சுற்றி வளைத்து வலது கை சனி விரலால் வலது கால் கட்டை விரலைப் பிடித்துக் கொள்ளவும். வலது கால் கட்டை விரலைப் பார்க்கவும். வலது கால் பூமிக்குச் சமமாக இருக்கும்படி வைத்துக் கொள்ளவும். மெதுவாக மூச்சை உள்ளே இழுக்கவும். மூச்சை வெளியே விடாமல் வைத்துக் கொண்டு ’ஒம் ஹிரண்யகர்ப்பாய நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள் சொல்லவும். மெதுவாக மூச்சை வெளியே விடவும். காலை விடுவித்து சகஜ நிலைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

சூரிய நமஸ்கார ஆசனம் எட்டு
தண்டால் எடுப்பது போன்ற நிலையில் கை, கால்களை வைத்துக் கொள்ளவும். மூச்சை மெதுவாக உள்ளே இழுக்கவும். மெதுவாக தண்டால் எடுப்பது போன்ற நிலைக்கு வந்து, மூச்சை வெளியே விடாமல் வைத்துக் கொண்டு ‘ஓம் மரீசயே நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள் சொல்லவும். பழைய நிலைக்குத் திரும்பவும். மூச்சை மெதுவாக வெளியே விடவும். சகஜ நிலைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

சூரிய நமஸ்கார ஆசனம் ஒன்பது
கால்களுக்கு இடையில் சுமார் ஆறு அங்குலம் இடைவெளி இருக்குமாறு வைத்துக் கொண்டு நேரே நிற்கவும். இரு கைகளையும் மெதுவாக தலைக்கு மேலே உயர்த்தி உள்ளங்கைகள் கிழக்கு திசையைப் பார்க்குமாறு வைத்துக் கொள்ளவும். கைகளை உயர்த்தும்போதே, மூச்சை மெதுவாக உள்ளே இழுக்கவும், மூச்சை இழுத்துக் கொண்டே மெதுவாக முடிந்த வரை பின்னே சாயவும். மூச்சை வெளியே விடாமல் வைத்துக் கொண்டு ‘ஓம் ஆதித்யாய நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள் சொல்லவும். மெதுவாக உடலை நேர் நிலைக்குக் கொண்டு வரவும். மெதுவாக மூச்சை வெளியே விடவும். கைகளைத் தொங்கும் நிலைக்குக் கொண்டு வரவும். சகஜ நிலைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

சூரிய நமஸ்கார ஆசனம் பத்து
இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து வைத்துக் கொள்ளவும். மெதுவாக மூச்சை உள்ளே இழுக்கவும். மெதுகாவக் குனிந்து இரண்டு கைகளால் தரையைத் தொடவும். இரண்டு உள்ளங் கைகளும் தரையில் சமமாக படும்படி வைத்துக் கொண்டு முடிந்தால் தலையால் முழங்கால்களைத் தொடவும். மூச்சை வெளியே விடாமல் வைத்துக் கொண்டு ‘ஓம் சவித்ரே நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள் சொல்லவும். மெதுவாக தலையைத் தூக்கி நேரே பார்க்கவும். மெதுவாக மூச்சை வெளியே விடவும். சகஜ நிலைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

சூரிய நமஸ்கார ஆசனம் பதினொன்று
இரண்டு கால்களுக்கு இடையில் சுமார் ஒன்பது அங்குலம் இடைவெளி இருக்குமாறு நேரே நிற்கவும். கைகளை மெதுவாக தலைக்கு மேலே உயர்த்தி, உள்ளங்கைகள் கிழக்கு திசையைப் பார்க்குமாறு வைத்துக் கொள்ளவும். கைகளை உயர்த்தும்போதே மூச்சை மெதுவாக உள்ளே இழுக்கவும். போதுமான அளவு மூச்சை இழுத்தவுடன் மூச்சை நிறுத்தி இடது உள்ளங்கை தெற்கு திசையைப் பார்க்குமாறு அமைத்துக் கொள்ளவும். அதே சமயம் வலது கையை பக்கவாட்டில் தரைக்கு இணையாக தோள் உயரத்தில் நீட்டிக் கொண்டு வலது உள்ளங்கை தரையைப் பார்க்குமாறு வைத்துக் கொள்ளவும். இந்நிலையில் மூச்சை உள்ளே நிறுத்தியபடியே மெதுவாக வலது பக்கம் உடலை முடிந்த மட்டும் வளைக்கவும். மூச்சை வெளிவிடாமல் நிறுத்திக் கொண்டு ‘ஓம் அர்க்காய நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள் சொல்லவும். பின்னர் மெதுவாக நின்ற நிலைக்கு வரவும். கைகளை இறக்கிக் கொள்ளவும். மூச்சை மெதுவாக வெளியே விடவும். சகஜ நிலைக்கு வந்து ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

சூரிய நமஸ்கார ஆசனம் பன்னிரெண்டு
இரண்டு கால்களுக்கு இடையில் சுமார் ஒன்பது அங்குலம் இடைவெளி இருக்குமாறு நேரே நின்று கொள்ளவும். கைகளை மெதுவாக தலைக்கு மேலே உயர்த்தி உள்ளங் கைகள் கிழக்கு திசையைப் பார்க்குமாறு வைத்துக் கொள்ளவும். கைகைளை உயர்த்தும்போதே மூச்சை மெதுவாக உள்ளே இழுக்கவும். போதுமான அளவு மூச்சை இழுத்தவுடன் மூச்சை நிறுத்தி வலது உள்ளங்கை வடக்கு திசையைப் பார்க்குமாறு அமைத்துக் கொள்ளவும். அதே சமயம் இடது கையை பக்கவாட்டில் தரைக்கு இணையாக தோள் உயரத்தில் நீட்டிக் கொண்டு இடது உள்ளங்கை தரையைப் பார்க்குமாறு வைத்துக் கொள்ளவும். இந்நிலையில் மூச்சை உள்ளே நிறுத்தியபடியே மெதுவாக இடது பக்கம் உடலை முடிந்த மட்டும் வளைக்கவும். மூச்சை வெளி விடாமல நிறுத்திக் கொண்டு ‘ஓம் பாஸ்கராய நமஹ’ என்று 12 முறை மனதிற்குள் சொல்லவும். மெதுவாக நின்ற நிலைக்கு வரவும். கைகளை இறக்கிக் கொள்ளவும். மூச்சை மெதுவாக வெளியே விடவும். சகஜ நிலைக்கு வந்து ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

இங்கே குறிப்பிட்ட 12 ஆசனங்களையும் தொடர்ந்து செய்வது ஒரு சுற்றாகும். இவ்வாறு 12 சுற்றுகள் செய்தால் சூரிய நமஸ்கார பூஜை நிறைவு பெறுகிறது. இந்த 12 சுற்று ஆசனப் பூஜைகளை நிகழ்த்த சுமார் மூன்று மணி நேரம் ஆகும். ஆசனங்களை இட்ட பின் உங்கள் மூச்சு வலது நாசியில் வருவதை உணர முடிந்தால் உங்களுடைய ஆசன முறை சரியாக அமைந்துள்ளது என்று அர்த்தமாகும். அவ்வாறு மூச்சுக் காற்று வலது நாசியில் வரா விட்டால், நீங்கள் சரியான முறையில் ஆசனங்களை இடவில்லை என்பதைப் புரிந்து கொள்ளவும். இந்நிலையில் நீங்கள் ஆசனங்களைத் தொடர்ந்து செய்வது உசிதமல்ல. உடனே எமது ஆஸ்ரமத்தைத் தொடர்பு கொண்டு விளக்கங்களைப் பெற்று சரியான முறையில் ஆசனங்களை இட்டுப் பழகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

முக்கிய குறிப்புகள்

ஜாதி, மத, இன பேதமின்றி அனைவரும் நிறைவேற்றக் கூடியவையே இங்கு அளித்துள்ள சூரிய நமஸ்கார பூஜை முறைகள்.

ஓரளவு யோகாசனம் தெரிந்து, அதை முறையாகப் பழகியவர்கள் எளிதில் மேற்கண்ட ஆசனங்களை கற்றுக் கொள்ளலாம். யோகாசனம் பற்றி எந்த முன் பயிற்சியும் இல்லாதவர்கள் எமது ஆஸ்மர அடியார்களைத் தொடர்பு கொண்டு நேரடிப் பார்வையிலேயே ஆசனங்களைப் பயிலுமாறு கேட்டுக் கொள்கிறோம். இங்கு குறிப்பிட்ட 12 ஆசனங்களையும் முதலில் ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டு, பின்னர் எல்லா ஆசனங்களையும் ஒரே சமயத்தில் பயிற்சி செய்யலாம்.

ஆரோக்ய நிலையில் உள்ள அனைவரும் இந்தப் பயிற்சிகளால் நன்மை அடைவர். வயது வரம்பு எதுவும் இந்த சூரிய நமஸ்கார பூஜைகளுக்கு விதிக்கப்படவில்லை. குறிப்பாக, இளைய சமுதாய மக்களுக்கு இது அபரிமிதமான பலன்களை அளிக்கக் கூடியது.

12 ஆசனங்களையும் 12 சுற்றுகள் பயில்வதால் பூரண பலன்கள் கிடைக்கும் என்றாலும் அலுவலகம், பள்ளி, இயற்கை சூழ்நிலை இவற்றால் 12 சுற்றுகள் பயில முடியாதவர்கள் முடிந்தவரை 3, 6, 9 சுற்றுகள் ஆசனங்கள் இடுவதால் நல்ல உடல் ஆரோக்யம், மனத் தெளிவு, உன்ன வலிமையைப் பெறுவார்கள் என்பது உறுதி. இவ்வாறு 12 ஆசனங்களையும் பழக முடியாதவர்கள் அவர்கள் விரும்பும் ஏதாவது ஒன்றிரண்டு ஆசனங்களை இட்டு சூரிய நமஸ்கார மந்திரங்களை ஓதி வந்தாலும் அதற்குரித்தான உடல், மன, உள்ள ஆரோக்யத்தைப் பெறுவார்கள் என்பதும் உண்மையே.

குளியல், நெற்றிக்கு இடுதல், கடுக்கன், பூணூல், தீட்சை போன்ற காப்புச் சாதனங்கள் சூரிய நமஸ்கார பூஜைகளின் பலன்களை பன்மடங்காக விருத்தி செய்யும். முடிந்த மட்டும் இறைச் சின்னங்களை அணிந்து கூடுதல் பூஜா பலன்களைப் பெற்று நலம் அடைய கேட்டுக் கொள்கிறோம்.



சூரி்ய நமஸ்கார ஆசனம் 1
”ஓம் மித்ராய நமஹ”



சூரிய நமஸ்கார ஆசனம் 2
”ஓம் ரவியே நமஹ”



சூரிய நமஸ்கார ஆசனம் 3
”ஓம் சூர்யாய நமஹ”



சூரிய நமஸ்கார ஆசனம் 4
”ஓம் பாணவே நமஹ”



சூரிய நமஸ்கார ஆசனம் 4
(பின்புறத் தோற்றம்)




சூரிய நமஸ்கார ஆசனம் 5
”ஓம் ககாய நமஹ”



சூரிய நமஸ்கார ஆசனம் 5
(பின்புறத் தோற்றம்)




சூரிய நமஸ்கார ஆசனம் 6
”ஓம் பூஷ்ணே நமஹ”



சூரிய நமஸ்காரம் 7
”ஓம் ஹிரண்ய கர்ப்பாய நமஹ”



சூரிய நமஸ்கார ஆசனம் 8
(ஆரம்ப நிலை)



சூரிய நமஸ்கார ஆசனம் 8
”ஓம் மரீசயே நமஹ”



சூரிய நமஸ்கார ஆசனம் 9
”ஓம் ஆதித்யாய நமஹ”



சூரிய நமஸ்கார ஆசனம் 10
”ஓம் சவித்ரே நமஹ”



சூரிய நமஸ்கார ஆசனம் 11
”ஓம் அர்க்காய நமஹ”



சூரிய நமஸ்கார ஆசனம் 12
”ஓம் பாஸ்கராய நமஹ”

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam