பகலும் இரவும் உன் கையில் இருக்கிறது !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் குருவே சரணம்

பைரவர் வழிபாடு

கலியுகத்திற்கு உகந்த முக்கியமான வழிபாடாகக் கருதப்படுவதே கால பைரவர் வழிபாடாகும். பூவுலகம் என்பது காலம் இடம் என்று இரு தத்துவங்களுக்கு உட்பட்டு விளங்குவதால் காலத்தை உரிய முறையில் வழிபடும் முறையை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். அத்தகைய வழிபாடுகளில் ஒன்றே கால பைரவர் வழிபாடு.

இறைவனுடன் இயைந்து தோன்றியதே குருவின் அவதாரமும், இறைவனை அந்தந்த உயிர்களின் வெளித் தோற்றத்தில் வணங்கி வழிபடுவதற்காக இறை ஆணையால் உலகில் தோன்றியவர்களையே குருமார்கள் என்று அழைக்கிறோம்.

அப்பெருமான்கள் இறைவனைப் பற்றியும் அவன் லீலைகளைப் பற்றியும் அந்தந்த காலங்களில் எடுத்துரைத்து மக்களுக்கு நல்வழி காட்டி வருகின்றனர். எனவே குருகுலம் என்பது என்றென்றும் நிலைத்து நிற்கும் இறைமார்கமாகும். இம்மரபில் வழி வந்த நம் குரு மங்கள கந்தர்வா, ஸ்ரீ வெங்கடராமன் அவர்கள் திருஅண்ணாமலையில் குருகுல வாசம் அமைத்து அன்னதான வைபவத்திற்கிடையே அற்புத ஆன்மீகப் பாடங்களையும் கற்றுக் கொடுத்து வந்தார்கள்.

ஒரு முறை அன்னதானத்திற்கு தேவைப்பட்ட முந்திரிப் பருப்புகளை அடியார்களுடன் சேர்ந்து உடைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு அடியார், “வாத்யாரே, காலம் நேரம் என்றால் என்ன? இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறு அர்த்தம் உடையதா? என்று கேட்கவே, அதற்கு குருநாதர், காலம் என்றால் விதியைக் குறிக்கும், நேரம் என்பது நாள், கிழமை, பகல், இரவு என்று காலத்தின் அளவைக் குறிக்கும்,” என்றார்,

சற்று நேர அமைதிக்குப் பின்னர், சுவாமிகள் தொடர்ந்து, “இந்தக் கேள்வியை நீ கேட்பதற்குக் காரணம், உன் கையில் உள்ள முந்திரிப் பருப்புதான். ஒவ்வொரு முந்திரிப் பருப்பும் தன்னுள் நான்கு வார்த்தைகளைச் சேர்த்து வைக்கும் சக்தி உடையது. சென்ற மாதம் இதே நாள் தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு முந்திரிக் கிடங்கில் இருந்த உள்ள பல பெண்கள் முந்திரிப் பருப்புகளை உடைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் இருந்த கன்னி ஒருத்திக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் மிகவும் மன வருத்தத்துடன் இருந்தாள். என்னுடைய கால நேரம் சரியில்லை, அதனால்தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை போலிருக்கிறது, என்று அவள் நினைத்துக் கொண்டே முந்திரிப் பருப்புகளை உடைத்ததால், காலம் நேரம் சரி இல்லை, என்ற நான்கு சொற்கள் மட்டும் அவள் உடைத்த முந்திரிப் பருப்பில் பதிந்து இப்போது உனது கைக்கு அது வரும்போது அவளுடைய மனதில் விளைந்த சொற்கள் உன்னுடைய வார்த்தைகளாகி அதை அடியேனிடம் கேள்வியாகக் கேட்கிறாய்,” என்றார்,

கால தோஷங்களைக் களையும்
பைரவ மூர்த்தி

இதைக் கேட்ட அனைத்து அடியார்களும் பிரமித்துப் போய் விட்டனர்.

குருநாதர் தொடர்ந்து, “இதுவே இறைவனின் திருவிளையாடல். இவ்வாறு நம்முடைய அன்னதானத்திற்காக வரும் ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் ஒரு பெரிய புராணமே பொதிந்திருக்கிறது. இப்போது இதில் எங்களுடைய பணி என்னவென்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களைப் பொறுத்த வரையில் இந்த முந்திரிப் பருப்புகளை உடைத்து விட்டு அடுத்த வேலைக்குச் சென்று விடுவீர்கள்.”

“ஆனால், நாங்கள் அந்த முந்திரிப் பருப்பில் பதிந்த ஏக்கத்தை, பிரார்த்தனையைப் பற்றி ஆத்ம விசாரம் செய்வோம். முதலில் அந்த பிரார்த்தனை நியாயமானதா என்பதைப் பற்றி ஆராய வேண்டும். இப்போது நமக்கு வந்த பிரார்த்தனை நியாயமானதுதான் அதில் சந்தேகமில்லை. அப்படியானால் அந்தத் திருமணம் நிகழ்வதில் உள்ள இடையூறுகள், பிரச்னைகள் இவற்றைப் பற்றி ஆராய்ந்து அதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம். நாங்கள் செய்யும் பணிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவ்வளவு முக்கியமல்ல,”

“உங்களைப் பொறுத்த வரையில் இவ்விஷயத்தில் உங்கள் பங்கு என்ன என்பதை தெரிந்து கொள்வதுதான் அவசியம். சந்தியா வந்தனம், கோயில் வழிபாடு, தீர்த்த நீராடல், மந்திர ஜபம் போன்ற நற்காரியங்களை நீங்கள் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால் இவ்வாறு அன்னதானத்தில் அடியேனுடன் பங்கு கொள்ளும்போது உங்களுடைய வழிபாட்டுப் பலன்களை நாங்கள் இவ்வாறு எங்களிடம் வரும் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்திக் கொள்வோம். அதனால் உங்களுக்குக் கிட்டும் பலன்களை வாய் விட்டுக் கூற இயலாது.”

“உதாரணமாக, நீங்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் காயத்ரீ மந்திரங்களை ஜபிப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் அலுவலகம், வெளியூர் என்று வெளியே செல்லும்போதும், வாகனங்களை ஓட்டும்போது அபரிமிதமான காயத்ரீ மந்திர பலன்கள் உங்களைக் காப்பதற்காகவே செலவழிந்து விடும். மிஞ்சியுள்ள மந்திர சக்தி புண்ணிய சக்தியாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு சேர்ந்த புண்ணிய சக்தி நீங்கள் இறுதி காலத்தில் உயிரை விடும்போது உங்களுடைய அடுத்த பிறவிக்கு மாற்றப்பட்டு உங்களுடைய அபரிமிதமான புண்ணியத்தால் நீங்கள் ஒரு பணக்காரராகவோ அல்லது ஏதாவது ஒரு துறையில் சிறந்த நிபுணராகவோ பிறக்க வாய்ப்புண்டு.”

“ஆனால், நீங்கள் ஒரு சற்குருவைப் பெற்று அவர் காட்டும் வழியில் நற்காரியங்களை செய்ய ஆரம்பித்தால் உங்களுடைய புண்ணிய சக்தியானது சேர்த்து வைக்கப்படாது. அது அவ்வப்போது சற்குருவால் பல நற்காரியங்களுக்கு மாற்றப்பட்டு விடும். இந்த முந்திரிப் பருப்பு விஷயத்தை எடுத்துக் கொண்டால் இந்த அடியாருடைய புண்ணிய சக்தியை அந்தக் கல்யாணமாகாத பெண்ணிற்கு மாற்றி நாங்கள் அந்தப் பெண்ணிற்கு திருமணத்தை நிகழ்த்தி விடுவோம். ’

“இதனால் இந்த அடியார் இறக்கும்போது அவர் கணக்கில் எந்த புண்ணிய சக்தியும் பாக்கி நிற்காது. அதனால் அவருக்கு மறுபிறவி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பாவம் செய்தால்தான் மறுபிறவி என்று கிடையாது, புண்ணியம் செய்தாலும் அதை அனுபவிக்க பிறவி எடுத்தாக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சற்குரு ஆற்றும் இந்தக் கர்ம பரிபாலனத்தை கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் ஒருவரால் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியுமா என்று உங்க.ள் நெஞ்சத்தைத் தொட்டுக் கேட்டுக் கொள்ளுங்கள். ”

“இதுவே ஒருவர் தானாக செய்யும் நற்காரியத்திற்கும் சற்குருவின் மூலமாகச் செய்யும் காரியத்திற்கும் உள்ள வேறுபாடு. ஒருவர் தன்னிச்சையாகச் செய்யும் காரியம் பிறவியை வளர்க்கும், குருவின் மேற்பார்வையில் செய்யும் காரியங்கள் பிறவியை வேரறுக்கும். ”

இவ்வாறு முந்திரிப் பருப்பின் அற்புத ஆற்றலைப் பயன்படுத்துவதற்காக முந்திரிப் பருப்புகளை நான்காக உடைத்து அதை அன்னதானத்திற்காக தயாரிக்கப்படும் பொங்கல், பாயசம், கிச்சடி போன்ற பதார்த்தங்களில் சேர்க்கிறோம். முந்திரிப் பருப்பு வெறும் நான்கு சொற்கள் மட்டும்தானே கிரகிக்கின்றன என்று நினைக்கலாம். ஆனால், அதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால்தான் அதன் மகத்துவம் புரியவரும். ஒரு முறை கிருஷ்ண பகவானுக்கு இணையாக எந்தப் பொருளை வைக்க முடியும் என்ற விவாதம் எழுந்த போது சத்தியபாமா ஒரு துளசி தளத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை எழுதி வைத்தாள் அல்லவா? அது போல ஒரு வார்த்தையை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தாலே உங்களுக்குத் தேவையான அனைத்தையும் முந்திரிப் பருப்பின் மூலமாக நீங்கள் பெற்று விடலாம் அல்லவா?

அதனால்தான் கால பைரவர் வழிபாட்டிற்கு உகந்ததாக முந்திரிப் பருப்பு பயன்படுத்தப்படுகிறது.

பைரவர் கால பைரவர்

எம்பெருமான் சிவபெருமானின் ஒரு அம்சமாக எழுந்தவரே ஸ்ரீபைரவ மூர்த்தியாவார். நாம் முன்பே கூறியதுபோல காலம், தேசம் என்று இரண்டு தத்துவங்களை அடிப்படையாக வைத்து நமது பூலோகம் இயங்குவதால் கால தத்துவத்தின் வெளிப்பாடாக அருளும் மூர்த்தியே கால பைரவ மூர்த்தியாவார். பூலோக ஜீவன்களைப் பொறுத்தவரை கால பைரவ வழிபாடும், பைரவ மூர்த்தியின் வழிபாடும் ஒரே விதமான பலன்களை அளிக்கக் கூடியதே. தேசம் அல்லது இடம் என்ற தத்துவத்தின் வெளிப்பாடாக அருளும் மூர்த்தியே க்ஷேத்திர பாலக மூர்த்தியாவார்.

கால பைரவ மூர்த்தியைப் போலவே க்ஷேத்திர பாலகரின் வழிபாடும் எதிர் காலத்தில் வளம் பெறும் என்பது சித்தர்களின் வாக்கு.

கால பைரவரின் வழிபாடு கால தேசங்களைக் கடந்த அனுகிரக சக்திகளை அளிக்க வல்லது என்னும் கோட்பாட்டை வலியுறுத்தவே சிவபெருமான் நான்கு நாய்களுடன் காசித்தல கங்கைக் கரையில் ஆதிசங்கரருக்கு காட்சி தந்தார். ”பெத்த மனம் பித்து ….” என்றபடி பிள்ளைகள் பெற்றோர்களை மறந்து நன்றி இல்லாதவர்களாக எதிர்காலத்தில் மாறுவார்கள் என்பதை உரைப்பதற்காக நாய்களுடன் காட்சி தந்தார் எம்பெருமான்.

ஸ்ரீபைரவ மூர்த்தி கரிவலம்வந்தநல்லூர்

இதற்காகவே கால பைரவ மூர்த்தியும் நாயை வாகனமாகப் பெற்று நன்றி கெட்ட நிலை வராதிருக்க இறைவனை என்றும் மறக்காதிருக்க வரம் தரும் மூர்த்தியாக திருக்கோயில்களில் எழுந்தருளி உள்ளார். நாய்கள் நன்றி மறவாத பிராணிகள் என்பதோடு மட்டும் அல்லாமல் விதியை முன் கூட்டி உரைக்கும் வல்லமையும் இறையருளால் படைத்துள்ளன. நமக்கு வரக் கூடிய ஆபத்துக்களையும் பிரச்னைகளையும் மூன்கூட்டியே அறிந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வழிகாட்டுவதே கால பைரவர் வழிபாடாகும்.

சமீப காலத்தில் கால பைரவ வழிபாட்டை முறையாக நிறைவேற்றி மக்களுக்கு நல்வாழ்வு அளித்த மகானே பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் ஆவார்கள். சித்த மரபில் வந்த இப்பெருமான் நாய்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காணாதவர். நாம் மனிதர்களுக்கு உணவிடுவதைப் போலவே இவர் நாய்களுக்கு முழு வாழை இலையைப் போட்டு சாதம், சாம்பார், ஸ்வீட், அப்பளம், பாயசம் என அனைத்து உணவு வகைகளையும் அன்புடன் பரிமாறி அனைத்து நாய்களையும் அழைப்பார்.

அவருடைய வழிபாட்டில் நிகழ்ந்த அதிசயம் என்னவென்றால் இவர் உணவு பரிமாறும் வரை எந்த நாயும் அன்னதானம் நிகழும் இடத்தில் தென்படாது. வாழை இலையில் உணவு பரிமாறி முடிந்தவுடன் இவர் கால பைரவரை பிரார்த்தித்த பின் ஒவ்வொரு நாயாக வந்து மனிதர்களைப் போலவே இலையின் முன் அமர்ந்து கொள்ளும். ஒவ்வொரு முறையும் குறைந்தது 300 நாய்களுக்குக் குறையாமல் அன்னதானம் அளிப்பது வழக்கம். இவ்வாறு அனைத்து இலைகள் முன்பும் நாய்கள் அமர்ந்த பின் சுவாமிகள் அன்புடன்  உணவை ஏற்குமாறு அந்த நாய்களை வேண்டுவார். அதன் பின்னரே இவர் அழைத்த பைரவ மூர்த்திகள் உணவை அமைதியாக ஏற்பர். அதன் பின்னர் வரும்போது வரிசையாக வந்த அதே பாணியில் வரிசையாக ஒவ்வொரு நாயாக வெளியே சென்று விடும்.

எங்கிருந்து அத்தனை நாய்கள் வந்தன, மீண்டும் அந்த நாய்கள் எங்கு சென்றன என்பது இன்று வரை எவருக்கும் புரியாத ஆன்மீக ரகசியம். மேலும் ஓரிடத்தில் இரண்டு நாய்கள் சேர்ந்தாலே அவை ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டு அங்கு கூச்சலும் சண்டையும் வந்து விடும். ஆனால், ராமலிங்க சுவாமிகளின் பைரவ பூஜையில் குறைந்தது 300 நாய்கள் இருந்தாலும் ஒரு சிறு சப்தம் கூட எழாது என்பதே பேரதிசயமாகும்.

இவ்வாறு மகான்கள் பைரவ மூர்த்தியின் வாகனமான நாய்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதிலிருந்து நாய்கள் மனித குலத்திற்கு எத்தகைய அற்புத பாடங்களை போதிக்க வல்லவை என்பது தெளிவாகின்றது அல்லவா? இதை மக்களுக்கு மௌனமாக எடுத்துரைக்கவே பைரவ மூர்த்திகள் நாய் வாகனத்தில் எழுந்தருளி உள்ளனர் என்பது அவர்களுடைய பற்பல அவதார ரகசியங்களுள் ஒன்றாகும்.

பைரவ மூர்த்தியின் வாகனமாய் எழுந்தருளியுள்ள நாயின் வாலை மட்டும் எடுத்துக் கொண்டு ஆத்ம விசாரம் செய்தாலே அதன் இரகசியத்தை உணர ரிஷிகளுக்கே எட்டு சதுர்யுக காலம் தேவைப்படும் என்றால் சாதாரண மனிதர்கள் அந்த ரகசியத்தை உணர எத்தனை யுகங்கள் ஆகும்?

பைரவ முகூர்த்தம்

24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை. இவ்வாறு நான்கு நாழிகைகள் சேர்ந்ததே அதாவது ஒன்றரை மணி நேரமே ஒரு முகூர்த்தம் எனப்படும். இது பொதுவான கணக்கு. மேலும், முகூர்த்தம் என்பது புனிதமான காலம் என்றும் பொருள்படும். இடத்தைப் பொறுத்தும், காரியத்தைப் பொறுத்தும் முகூர்த்தத்தின் கால அளவு மாறுபடும் என்பது உண்மையே. உதாரணமாக, சன்னியாசி என்பவர் ஒரு பசு மாடு பால் கறக்கும் நேர அளவிற்குத்தான் ஒரு வீட்டின் முன்பு பிச்சை யாசிப்பதற்காக நிற்கலாம் என்பது சன்னியாச முகூர்த்தம். கோதூளி முகூர்த்தம் என்பது பசு மாடுகள் காலையில் புல் மேய்வதற்காக செல்லும் நேரமாகும். எனவே இத்தகைய முகூர்த்தங்களுக்கு இத்தனை மணி, நிமிடம் என்ற கால வரையறையை நிர்ணயிக்க முடியாது.

சித்தர்கள் கணக்கில் பிரம்ம முகூர்த்தம் என்பது விடியற் காலையில் மூன்றரை மணி முதல் ஐந்தரை மணி வரைக்கும் உள்ள நேரமாகும். அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் நேரமாகும். இதுவும் கால தேச மாறுபாடு உடையதே. 

இத்தகைய முகூர்த்த நேரத்தின் இடையில்தான் சித்தர்கள் கணக்கிடும் அமிர்த நேரம் என்ற சித்த முகூர்த்தங்கள் அமைகின்றன. சித்தாமிர்த நேரம் ஒரு நிமிடம் மட்டுமே அமையும்.

அதுபோல பைரவ முகூர்த்தம் என்ற அற்புதமான முகூர்த்த நேரம் உண்டு. சித்தர்களின் கிரந்தங்களில் மட்டுமே காணப்படும் இந்த அற்புத அமிர்த நேரத்தை முதன்முதலாக உலகிற்கு வழங்கியவரே நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார்கள்.

சூரிய உதயத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நான்கு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று வழங்கப்படுகின்றது. உதாரணமாக, ஒரு நாள் காலை சூரிய உதயம் 6 மணி 12 நிமிடம் என்று வைத்துக் கொண்டால் சூரிய உதயத்திற்கு முன்னால் உள்ள நான்கு நிமிடங்களும் சூரிய உதயத்திற்குப் பின் உள்ள நான்கு நிமிடங்களும், அதாவது 6 மணி 8 நிமிடத்திலிருந்து 6 மணி 16 நிமிடம் வரை உள்ள எட்டு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று சித்தர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.

திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற எந்த நற்காரியத்திற்கும் முகூர்த்தம் லக்ன நேரம் குறித்துதான் காரியங்களை நிகழ்த்த வேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், போதிய ஜோதிட ஞானம் இல்லாதோரும் சூழ்நிலை காரணங்களால் இத்தகைய முகூர்த்த லக்னங்களில் நற்காரியங்களை நிகழ்த்த இயலாதபோது மேற்கூறிய முகூர்த்தங்கள் நற்காரிய சித்தி அளிக்கவல்லதாய் அமைகின்றன. சூன்ய திதி, அசம்பூர்ண நட்சத்திரங்கள், பகை ஹோரைகள் போன்ற பற்பல பஞ்சாங்க தோஷங்களைக் களையக் கூடிய சக்தியை உடையதே அபிஜித் போன்ற விசேஷ முகூர்த்தங்கள் ஆகும்.

இவ்வாறு பைரவ முகூர்த்த நேரத்தில் இயற்ற வேண்டிய வழிபாடுகள் ஏராளமாக உண்டு. அவ்வழிபாடுகள் நாம் காலத்தை முறையாகப் பயன்படுத்தாத தோஷங்களுக்கு ஒரளவு பரிகாரமாக அமைகின்றன. சித்தர்கள் அருளிய பைரவ முகூர்த்த நேரத்தைக் குறிப்பதே பைரவ மூர்த்திகளின் வாகனமாய் எழுந்தருளியுள்ள நாய்களின் வால் பகுதியாகும். எந்த அளவிற்கு பைரவ மூர்த்திகளின் வாகனங்களின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகளை மேற்கொள்கிறோமோ அந்த அளவிற்கு பைரவ முகூர்த்தத்தைப் பற்றிய ரகசியங்களை நாம் தெரிந்து உணர்ந்து அதை நற்காரிய சித்திக்குப் பயன்படுத்த முடியும் என்பது சித்தர்களின் அறிவுரை,

பைரவ வாகனத்தின் வால் பகுதியில் அப்படி என்ன விசேஷம் விரவி உள்ளது? பைரவ வாகனம் என்பது தர்ம தேவதையே. எம்பெருமானின் வாகனமான நந்தி மூர்த்தியாகவும் தர்ம தேவதை எழுந்தருளி உள்ளது நாம் அறிந்ததே. கிருத யுகத்தில் நான்கு கால்களில் திரமாக நின்ற தர்ம தேவதை தற்போதைய கலியுகத்தில் ஒரே ஒரு காலில் மட்டும்தான் நிற்கின்றது. எனவேதான் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற தகாத நிகழ்ச்சிகளையே நாம் சந்திக்கிறோம்.

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்
செவலூர்

இத்தகைய தகாத நிகழ்ச்சிகள் நம்மைத் தாக்காது நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் தர்ம தேவதையின் ஆசீர்வாத சக்திகளை நாம் பெற்றாக வேண்டும். கலியுகத்தில் பூமியில் நிலை கொண்டிருக்கும் தர்ம தேவதையின் நாலாவது கால்தான் பைரவ வாகனத்தின் வால் பகுதியாகும். நாம் பைரவ வாகனத்தின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகள் இயற்றும் அளவிற்கு நாம் தர்ம தேவதையின் அனுகிரக சக்திகளைப் பெற்றவர்கள் ஆகிறோம்.

பைரவ வாகனத்தில் வால் பகுதியைப் பொறுத்து பைரவ மூர்த்திகளின் அனுகிரக சக்திகளும் பலவிதமாய் பரிமாணம் கொள்கின்றன.

உதாரணமாக,


  1. பைரவ வாகனத்தின் வால் பகுதி சுருட்டிக் கொண்டு வட்ட வளையம் போல் இருக்கும். இந்த பைரவ மூர்த்திகள் தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்றழைக்கப்படுகின்றனர். பூமி சூரியனைச் சுற்றும் கால அளவை இந்த பைரவ மூர்த்திகள் நிர்ணயிப்பதால் இரவில் செய்ய வேண்டிய காரியங்கள், பகலில் செய்ய வேண்டிய காரியங்கள் போன்றவற்றில் ஏற்படும் குழப்பங்கள், அவற்றால் ஏற்படும் கால தோஷங்கள் இவற்றை இத்தகைய பைரவ மூர்த்திகள் களைகிறார்கள்.

  2. கணவன் மனைவி இவர்களுக்கு இடையே உள்ள தாம்பத்திய உறவிற்கு இரவு நேரமே ஏற்றது. பகல் நேர புணர்ச்சி நரம்புக் கோளாறுகளையும் சந்ததிகளின் அவயவ குறைபாடுகளையும் தோற்றுவிக்கும்,

    அதே போல பகலில் தூங்குவதும் உட்கார்ந்த, நின்ற நிலையில் தூங்குவதும் உடல் நலத்திற்கு உகந்ததன்று. இரவு நேர எண்ணெய்க் குளியலும் ஆரோக்கியத்தை அளிக்காது.

    இரவு நேரப் பயணங்களும், இரவில் நெடு நேரம் கண் விழித்லும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

    இது போன்ற பகலிரவு கர்ம மாறுபாடுகளில் ஏற்படும் தோஷங்களை ஓரளவு நிவர்த்தி செய்வதே தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் வழிபாடாகும்.

  3. பைரவ வாகன மூர்த்திகளின் வால் பகுதி கொடியைப் போல் மேல் பகுதியில் வளைந்திருக்கும். இத்தகைய வாகனங்களை உடைய பைரவ மூர்த்திகள் தர்மக் கொடி பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். பதவி, செல்வாக்கு, பணம், ஆரோக்கியம் போன்ற நிலைகளில் உயர் நிலையிலிருந்து விதி வசத்தால் தாழ்ந்த நிலையை அடைந்தவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே தர்மக் கொடி பைரவ மூர்த்தி ஆவார்.
  4. நீதிபதிகள், ஆட்சியாளர்கள், மந்திரிகள் திடீரென்று பல்வேறு காரணங்களால் தங்கள் பதவியை இழந்து வாடும்போது அவர்களை இதுவரை அண்டியிருந்த நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் மறைந்து விடுவார்கள். இது அன்றாடம் நடக்கக் கூடிய நிகழ்ச்சியாகும். ஆனால், இத்தகைய துன்பங்களால் பாதிக்கப்படும்போதுதான் அதன் உண்மை வேதனை புரிய வரும். இத்தகைய எதிர்பாராத துன்பங்களைச் சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே, தர்மக் கொடி பைரவர் ஆவார், மன அமைதியையும் தன்னம்பிக்கையையும் அளிக்க வல்லதே தர்மக் கொடி பைரவ மூர்த்தியின் வழிபாடாகும்.
  5. பைரவ மூர்த்திகளின் வாகனங்கள் வலது புறம் நோக்கியும் இடது புறம் நோக்கியும் பார்த்தவாறு அமைவதுண்டு. பைரவ மூர்த்திக்கு இடது புறம் பார்க்கும் வண்ணம் வாகனம் அமைந்த மூர்த்தி ஆடபீஜ பைரவ மூர்த்தி என்றும், பைரவ மூர்த்திக்கு வலப் புறம் பார்க்கும் வண்ணம் அமைந்த வாகனத்தை உடையவர் மகபீஜ பைரவ மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். எண்ணிக்கை குறைவு, அடர்த்திக் குறைவு போன்ற விந்துக் குற்றங்களால் அவதியுற்று குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் மகபீஜ பைரவ மூர்த்திகளை செவ்வாய், வியாழக் கிழமைகளில் வழிபடுவதால் நற்சந்ததிகள் இறைப் பிரசாதமாக கிட்ட வாய்ப்புண்டு. இரத்தச் சோகை, கர்பப்பை கோளாறுகள் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட தம்பதிகள் ஆடபீஜ பைரவ மூர்த்திகளை வெள்ளிக் கிழமைகள் தோறும் வணங்கி வழிபடுவதால் நற்குணம் மிக்க குழந்தைகளைப் பெற இறைவன் அருள் புரிவார்.
  6. வாகனம் ஏதுமின்றி அருள்புரியும் பைரவ மூர்த்திகளும் உண்டு. இவர்கள் சுதர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். எவ்வளவோ படிப்பு, புத்திசாலித்தனம் போன்ற நல்ல தகுதிகளைப் பெற்றிலிருந்தாலும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிட்டாமல் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோர் இத்தகைய பைரவ மூர்த்திகளை வணங்கி வழிபடுவதால் படிப்பு, அறிவுத் தகுதிகளுக்கு ஏற்ற நல்ல வேலைகள் அமையும்.
காலத்தைக் கணிக்கும் வழி

ஒரு மனிதன் எப்படிக் காலத்தைக் கணிக்க வேண்டும். கேட்பதற்குச் சாதாரணமாகத் தோன்றும் இக்கேள்வியின் பின்னால் ஆழ்ந்த கருத்து உண்டு. எல்லோரும் கடிகாரத்தை வைத்துத்தானே காலத்தைக் கணக்கிட வேண்டும் என்று பதில் கூறுவர். உண்மையில் கடிகாரம், மர நிழல், சூரியனின் இயக்கம் போன்ற எந்த வெளிப்படையான உபகரணங்களை வைத்தும் காலத்தை கணக்கிடுவது உண்மையான ஆன்மீகம் அல்ல என்பதே சித்தர்களின் கூற்று. நமது முன்னோர்கள் காலத்தை எப்படிக் கணக்கிட்டனர்.

ஒரு நாளின் பகல் பொழுதை எட்டு முகூர்த்தங்களாகவும் இரவு நேரத்தை எட்டு முகூர்த்தங்களாகவும் கணக்கிட்டனர். ஒரு முகூர்த்தத்திற்கு ஒன்றரை மணி நேரம் என்றால் 16 முகூர்த்த நேரத்திற்கு 24 மணி நேரமான ஒரு நாள் அமைந்தது. இந்த ஒன்றரை மணி நேர முகூர்த்தத்தை அவர்கள் அளப்பதற்கு எந்தக் கருவியை வைத்திருந்தார்கள்?

ஒவ்வொருவரும் தங்கள் மூச்சின் அளவைக் கொண்டுதான் அக்காலத்தில் கால அளவைக் கணக்கிட்டார்கள். இதுவே உண்மையான கால அளவு கோல். நாம் உறங்கினாலும் உறங்காவிட்டாலும் நின்றாலும் நடந்தாலும் சுவாசித்துக் கொண்டேதான் இருக்கிறோம், இந்த சுவாசம் காலையில் நாம் எழுந்தவுடன் பொதுவாக வலது நாசியில் ஆரம்பிக்கும். ஒரு முகூர்த்த நேரம் கழித்து அதாவது ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் இடது மூக்கிற்கு மாறும். அடுத்த முகூர்த்தத்தில் வலது நாசிக்கு மாறிவிடும்.

அக்காலத்தில் நமது முன்னோர்கள் ஒரு நாளின் நேரத்தை இவ்வாறு தங்கள் நாசியில் ஓடும் சுவாசத்தின் போக்கை வைத்துதான் நேரத்தைக் கணக்கிட்டார்கள். மேலும் ஒவ்வொரு முகூர்த்தத்திலும் நான்கு பூதக் கலைகள் மாறி மாறி சுழன்று வரும். அதாவது பிருத்பி, அப்பு, அக்னி, வாயு என்ற வரிசையில் ஒவ்வொரு பூதக் கலையுடைய சுவாசமும் ஒரு நாழிகை நேரத்திற்கு அதாவது 24 நிமிடங்களுக்கு நிரவி நிற்கும்.

ஒவ்வொரு சுவாசக் கலையிலும் செய்ய வேண்டிய காரியங்களை நம் முன்னோர்கள் தங்கள் சற்குரு நாதர்கள் மூலம் தெளிவாக தெரிந்து வைத்திருந்தனர். உதாரணமாக, வலது நாசி சுவாசத்தில் மலம் கழிப்பதும், இடது நாசி சுவாசத்தில் சிறுநீர் கழிப்பதும், நீர் அருந்துவதும் நலம், ஆண்கள் வலது நாசி சுவாசத்திலும், பெண்கள் இடது நாசி சுவாசத்திலும் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது ஆரோக்கியமுள்ள சந்ததிகளைத் தோற்றுவிக்க வழி வகுக்கும்.

ராம பாணத்தைத் தடுக்க எவராலும் இயலாது என்பது அனைவரும் அறிந்ததே. காரணம் ராம பிரான் தன்னுடைய ஒவ்வொரு பாணத்தையும் வலது சுவாசத்தில் பிருத்வி பூதம் நிலை கொள்ளும்போது விடுத்ததே ஆகும்.  சூரிய கலையில் பிருத்வி பூதம் நிலை கொண்டால் அப்போது எழும் பாணத்தை யாராலும் தடுக்க இயலாது என்று தனுர் வேதம் உறுதி அளிக்கிறது.

இவ்வாறு நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையை நம்முடைய சுவாசத்துடன் ஐக்கியப்படுத்திக் கொள்வதுதான் உண்மையான கால பைரவ வழிபாடாகும். பைரவ மூர்த்தங்கள் அஷ்ட பைரவ மூர்த்திகள் என எட்டு வடிவங்களில் திகழ்கிறார்கள் அல்லவா? சீர்காழி, திருக்குற்றாலம் சித்திரசபை, திருஅண்ணாமலை போன்ற திருத்தலங்களில் இத்தகைய அஷ்ட பைரவ மூர்த்திகளின் திருஉருவங்களைத் தரிசிக்கலாம்.

துடையூர் திருத்தல
தர்ம சக்கர பைரவ மூர்த்தி

பகலிலும் இரவிலும் நிரவி நிற்கும் எட்டு முகூர்த்தங்களுக்கும் ஒவ்வொரு முகூர்த்தத்திற்கும் ஒரு மூர்த்தியாக இந்த அஷ்ட பைரவ மூர்த்திகள் அதிபதியாகத் திகழ்கின்றனர். அந்தந்த முகூர்த்தத்திற்கு உரிய பைரவ மூர்த்தியை முறையாக வழிபட்டு வந்தால் அதுவே சிறந்த அஷ்ட பைரவ வழிபாடாக மலரும்.  

மேலும் எந்த அளவிற்கு கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைக் கணக்கிடும் பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய ஆயுள் குறையும் என்பது உண்மை. கேட்பதற்கு விந்தையாகத் தோன்றினாலும் இதுவே உண்மை என்பதை நீங்கள் ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து கொள்ளலாம். நாம் தினசரி காலை 10 மணிக்கு அலுவலகம் செல்வதாக வைத்துக் கொள்வோம். அதற்காக ஒருவர் 9 மணிக்குள் பஸ்சை பிடித்தால்தான் சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியும் என்றிருந்தால் அவர் காலை எழுந்ததிலிருந்து பல் துலக்குதல், குளித்தல், பூஜை செய்தல், உணவு ஏற்றல் என்ற ஒவ்வொரு காரியத்தையும் செய்யும்போது கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே செய்யும்போது அவரையும் அறியாமல் அவருடைய மூச்சின் வேகம் அதிகரிக்கிறது.

இதனால் ஒரு நிமிடத்தில் விடும் மூச்சுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அவருடைய ஆயுள் ஓரளவு நாளடைவில் குறைந்து விடும். வருடம், மாதம் என்ற கணக்கில் நமது ஆயுள் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஒவ்வொருவருடைய ஆயுளும் இத்தனை ஆயிரம், லட்சம் சுவாசம் என்ற கணக்கில்தான் இறைவனால் நிச்சயிக்கப்படுவதால் எந்த அளவிற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழும் நம் சுவாசத்தின் எண்ணிக்கை குறைகிறதோ அந்த அளவிற்கு நமது ஆயுளும் வளரும் என்பது இப்போது உங்களுக்குப் புரிகிறது அல்லவா?

மனிதன் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 15 முதல் 20 மூச்சுகள் விடுகிறான். ஆனால், நான்கு நிமிடத்திற்கு ஒரு முறையே சுவாசிப்பதால் அது ஆயிரம் வருடத்திற்கு அமைதியாக உயிர் வாழ்கிறது.

சில வகை ஆமைகள் பத்தாயிரம் வருடங்கள் கூட உயிர் வாழும் தன்மை உடையவை. அவை தங்கள் தலையை வெளியே இழுப்பதற்கு இரண்டு ஆண்டுகளும், தாங்கள் கால்களை வெளியே வைப்பதற்கு ஐந்து ஆண்டுகளும் எடுத்துக் கொள்ளும் என்றால் அவைகளின் சுவாசம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு ஒரு நாளில் நாம் நிறைவேற்ற வேண்டிய காரியங்களை வைத்து மட்டும் நமது காலத்தை அளக்க, வாழ்வை நடத்த பழகிக் கொண்டால் சுவாசம் சீராக இயங்கும், அதனால் ஆயுள் வளரும் என்பதே சித்தர்ளின் அறிவுரை,

அதாவது, காலை ஆறு மணிக்கு எழ வேண்டும், ஏழு மணிக்கு குளிக்க வேண்டும், எட்டு மணிக்கு சாப்பிட வேண்டும், ஒன்பது மணிக்கு பஸ் பிடிக்க வேண்டும் என்ற மணிக் கணக்கு வாழ்க்கையை விடுத்து, காலையில் சூரிய உதய நேரத்தில் எழ வேண்டும், அதன் பின் குளித்து, பூஜை செய்து விட்டு, உணவருத்திய பின் பஸ் பிடித்து அலுவலகம் செல்ல வேண்டும் என்ற காரிய அட்டவணையை மட்டும் நாம் கருத்தில் கொண்டு செயல்பட்டால் எந்த வித ஆர்ப்பாட்டம், ஆரவாரமின்றி நமது வாழ்க்கை ஒரு தெளிந்த நீரோடைபோல் தவழும் என்பது நமது பெரியோர்கள் கண்ட உண்மை. ஆரம்பத்தில் இது நடை முறைக்கு ஒத்து வராததுபோல் தோன்றினாலும் விடாமுயற்சியுடன் இம்முறையை மேற்கொண்டு செயல்படுத்தினால் நிச்சயம் அமைதி தவழும் உலகம் உங்களுக்காக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த காரிய அட்டவணையை கருத்தில் கொண்டு செயல்படுத்திய பின் நமது சுவாசக் காற்றை ஆதாரமாக வைத்து நமது காரியங்களைச் செயல்படுத்தும் வித்தையை எளிதாகக் கற்றுக் கொண்டு விடலாம். இந்த முகூர்த்தத்தில் இந்த பூத தத்துவத்தில் இந்தக் காரியத்தை நாம் செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து அக்குறிப்பிட்ட காலத்தில் அதை நிறைவேற்றி விடலாம். அவ்வாறு காரிய அட்டவணையை சுவாச சுழற்சியின் அட்டவணையின் பின்னணியில் நீங்கள் செயல்படுத்தும் முறையை அறிந்து கொண்டால் அப்போது காலம் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். அதாவது நீங்கள் காலத்தைக் கட்டுப்படுத்தலாம், காலம் உங்கள் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாது,

இந்த அற்புதத்தை நடைமுறையில் நடத்திக் காட்டியவர்களே நமது ரிஷிகளும் யோகிகளும். மகாபாரத யுகத்தில் திதி என்னும் காலக் கோட்பாடான அமாவாசையை ஸ்ரீகிருஷ்ண பகவான் இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் மாற்றி அமைத்தார்.

இவ்வாறு காலத்தின் கட்டுப்பாட்டைக் கடந்தவர்களே காலத்தை உருவாக்க முடியும், பகல் இரவை மாற்றி அமைக்க முடியும். இந்த வித்தையை அறிந்ததால்தான் பராசரர் பகல் நேரத்தில் இரவு காலத்தைத் தோற்றுவித்து தன்னுடைய தபோ பலனை வியாச பகவான் உருவத்தில் உலகிற்கு தாரை வார்த்துக் கொடுத்தார். 

தற்போது நம்மிடையே இமயமலைச் சாரலில் இன்றும் இளமையுடன் உலவும் அவதூது பாபாவும் காலத்தைக் கடந்த யோகியே. பகல் இரவைத் தோற்றுவிக்கக் கூடியவர், கால சுழற்சியை மாற்றும் வல்லமை படைத்தவர்.

இவ்வாறு காலத்தைக் கட்டுப்படுத்தும் வித்தை கேட்பதற்குச் சுவையாக, எளிமையாகத் தோன்றினாலும் நடைமுறையில் மிகவும் கடினம் என்று பலரும் கருதுவதால் கால பைரவ வழிபாட்டை உலகிற்கு ரிஷிகள் அளித்துள்ளனர். தர்ம தேவதையான நாயை வாகனமாகக் கொண்ட பைரவ மூர்த்தியை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் காலத்தை வெல்லும் வித்தையை நமக்கு சுவாமி அறிவுறுத்துவார்.

நமது வெங்கடராம சுவாமிகள் மட்டும் அல்லாது பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், மாயம்மா, விசிறி சுவாமிகள், கசவனம்பட்டி சித்தர், சுவாமி சிவானந்தா போன்ற பலரும் நாய்களுக்கு உணவிட்டு காலத்தை வெல்லும் வித்தையை அவ்வப்போது தமது அடியார்களுக்கு உணர்த்தி வந்தனர்.

மேலும் விரைவாக அருகி வரும் வேத சக்திகள் தழைப்பதற்கு உறுதுணை செய்வதும் பைரவ வழிபாடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லோருக்கும் வேதம் ஓதுதல் என்பது சாத்தியமானது கிடையாது. ஆனால், யாராக இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் பைரவ மூர்த்தியை வழிபடுவதும நாய்களுக்கு உணவிடுவதும் சாத்தியமானதே. இதனால் வேத சக்திகள் பெருகி உலகில் தர்மம் கொழிக்கும். இவ்வுண்மையை உணர்த்தவே வேதநாயகனான சிவபெருமான் நான்கு வேதங்களை நான்கு நாய்களாக்கி ஆதி சங்கரருக்கு காசியில் வேதத்தின் உண்மைப் பொருளை விளக்க வந்தார்.

குழஅழகு பைரவ பூஜை

கலியுலகில் அனைவரையும் ஆட்டிப் படைக்கும் கருவியே பணம் என்னும் மாயையாகும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த மாயையை எவராலும் வெல்ல முடியாது என்பதை அறிந்த சித்தர்கள் பணம் என்னும் மாயையை வெல்ல முடியாவிடினும் அந்த மாயையை வைத்து நற்காரியங்களை செயலாற்றும் வித்தையை தங்களை அண்டி வரும் அடியார்களுக்கு போதித்து வருகின்றனர்.
இம்முறையில் கால பைரவ வழிபாடு பணத்தை முறையாக சம்பாதிக்கும் வழிமுறையையும் அவ்வாறு முறையாக சம்பாதித்த பணத்தை முறையான தெய்வீக காரியங்களில் செலவு செய்யும் மார்கத்தையும் புகட்டுகிறது. அந்த அற்புத மார்கத்தையே சித்தர்கள் குழஅழகு பைரவ பூஜையாக அளித்துள்ளார்கள்.

தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரின் பூஜை மகத்துவம் பெற்றுள்ளது போல் வளர் பிறை அஷ்டமி திதியில் மக்கள் நிறைவேற்ற வேண்டிய பூஜையே குழஅழகு பைரவ பூஜையாகும். மக்கள் அனைவருக்கும் பணம் என்பது அத்தியாவசியமான ஒரு பொருளாக இருந்தாலும் வியாபாரிகளுக்கு பணம் என்பது மிகவும் அவசியமானதுதானே? அதனால் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடையும் சில குறித்த தேவதை தெய்வங்களை உபாசித்தல் நலம்.

வியாபாரம் என்பது செல்வ விருத்தி என்னும் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதால் தன விருத்திக்கு சக்தி வழிபாடே அதாவது பெண் தேவதைகள் தெய்வங்களின் வழிபாடே உகந்ததாகும். அதிலும் குறிப்பாக துணி வியாபாரம் செய்பவர்களும், தறி உரிமையாளர்களும் ஐஸ்வர்ய லட்சுமியை உபாசனை செய்வது நலம்.

துணி நெய்யும் நூல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களும், கைத்தறி ஜவுளி தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களும் பேச்சியம்மன் என்னும் பத்தினி தெய்வத்தை வழிபடுதல் நலம். பேச்சியம்மன் என்பது வெறும் காவல் தெய்வம், எல்லை தெய்வம் என்னும் எண்ணத்தை விடுத்து பராசக்தியின் வாக்தத்துவமாக விளங்கும் தெய்வமே பேச்சியம்மன் என்பதை உணர்ந்தால்தான் வழிபாட்டின் பலன் பூர்ணத்துவம் பெறும்.

திருநெல்வேலியை அடுத்துள்ள இசக்கி அம்மன் என்னும் தெய்வம் புளி வியாபாரிகளுக்கு உரிய தேவதையாக போற்றப்படுகிறாள். புளி மண்டி உரிமையாளர்களும் புளி உற்பத்தி தொழிலாளர்களும் வணங்க வேண்டிய தேவதையே இசக்கி அம்மன் ஆவாள்.

பலரும் மனைவி, குழந்தைகளுக்காக அல்லும் பகலும் உழைத்து தங்களுக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாது அனைத்தையும் தங்கள் குடும்பத்திற்காகவே செலவிட்டு விடுவர். இத்தகையோரில் பலரும் கடைசி காலத்தில் ஆதரவற்ற நிலையில் உண்ண உணவும், இருக்க இடமும் கூட இல்லாமல் பரிதவிக்கும் நிலையில் வாட நேரிடும்போது இவர்களை அரவணைக்கும் தெய்வமே இசக்கி அம்மன் ஆவாள்.

கடைசி காலத்தில் நிராதரவான நிலையில் உள்ள முதியவர்களும் நோய்வாய்ப்பட்டவர்களும் வாய் திறந்து இசக்கி அம்மனை நோக்கி கதறி அழுதால் அவர்கள் எங்கிருந்து அழைத்தாலும் அவர்கள் குறையை உரியவர்களை அனுப்பி குறை தீர்க்கும் தெய்வமே இசக்கி அம்மன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு பத்தினி தெய்வங்களையும் பெண் தெய்வங்களையு வழிபட உகந்த திதியே வளர்பிறை சப்தமி திதியாகும். வளர்பிறை சப்தமி திதியில் சக்தி வழிபாட்டை முடித்து வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவ வழிபாட்டை நிறைவு செய்வதே குழஅழகு பைரவ வழிபாடு என்று வழங்கப்படுகிறது.

குழஅழகு பைரவ வழிபாட்டை கலியுக மக்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்த பெருந்தகையே பகலவ முனிவர் ஆவார். இப்பெருமான்தான் இரவு ராகு கால நேரத்தையும் நம் நல்வாழ்விற்காக அறிவித்தவர். பகல் ராகு கால நேரத்தில் துர்கா தேவியின் வழிபாடும், சரபேஸ்வரரின் வழிபாடும் சிறப்புறுவதுபோல இரவு நேர ராகு காலத்தில் பேச்சியம்மன், இசக்கி அம்மன் போன்ற பத்தினி தெய்வங்களின் வழிபாடும் பைரவ வழிபாடும் சிறப்பு பெறுகிறது.

திருச்சி குளுமாயி அம்மன்

பத்தினி தெய்வங்களில் உயர் நிலையில் சித்தர்களால் போற்றப்படுவதே திருச்சி உய்யக் கொண்டான் அருகில் உள்ள குழுமாயி அம்மன் என்னும் தேவியாகும்.

குழுகட்டி ரகசியத்தை ஒழுகட்டி எழுகட்டி காத்து நின்ற
கன்னி தேவதை
என்று குழுமாயி அம்மன் அவதார இரகசியத்தை சித்த கிரந்தங்கள் புகழ்ந்து பாடுகின்றன. வளர் சப்தமி திதியில் குழுமாயி அம்மனுக்கு இளநீர், மஞ்சள் பொடி, பால், தயிர் இவற்றால் அபிஷேகம் செய்தல் நலம்,

குழுமாயி தேவிக்கு பஞ்ச தீபம் மிகவும் ப்ரீதியானதாகும். பஞ்ச தீப ஆராதனைக்குப் பின் அரிசி மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுதல் நலம். அம்மனுக்கு மிளகு, முழு முந்திரி கலந்த வெண் பொங்கல் நைவேத்யம் சிறப்புடையது.

சிவப்பு அல்லது மஞ்சள் வண்ண கதர் ஆடையையும் மணமுள்ள இரண்டு மாலைகளையும் அம்மன் அலங்காரத்திற்குப் பயன்படுத்தலாம்.

குழுமாயி அம்மன் கன்னி தேவதையாக உலகத்தவர் கண்களுக்குத் தோன்றினாலும் இந்தத் தாய் முழு முதற் கடவுளாய் அனுகிரக சக்திகளை அளிப்பதால் இரண்டு மாலைகளை தேவிக்கு சூட்டுகிறோம் என்பது தேவ ரகசியம்.

தானே சிவனாய் ஆகி நின்றாள்
தன் வழி தானாய் பூண்டு நின்றாள்

என்று குழுமாயி அம்மனை குழுகட்டி ரகசியம் என்னும் சித்த இரகசிய கிரந்தம் குறிப்பிடுகிறது.

பஞ்ச தீபத்திற்கும், மாவிளக்கு தீபத்திற்கும் பசு நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியமாகும்.

அபிஷேகத்திற்கு அரைத்த மஞ்சளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில் விதி விலக்கு கிடையாது. மஞ்சளை அம்மியில் அரைக்கும் முன் குளித்து விட்டு தூய ஆடைகள் அணிந்து கொண்டு உடல் சுத்தி, மன சுத்தியுடன் அரைக்க வேண்டும் என்பது முக்கியம்.

ஆண்களும் மஞ்சள் அரைத்து அம்மன் அபிஷேகத்திற்கு அளிக்கலாம். ஆண்கள் மஞ்சள் அரைக்கும்போது மஞ்சள் நீரில் நனைத்த நூல் வேஷ்டியையோ அல்லது மஞ்சள் வண்ண வேஷ்டியையோ பஞ்ச கச்சமாக அவசியம் அணிந்து கொள்ள வேண்டும். உடல் சுத்தி முக்கியம். இவை அவசியமான நியதிகள்.

அஷ்டமங்கள தோத்திரம்

குழுமாயி அம்மனுக்கு கீழ்க் கண்ட எட்டு நாமங்களைக் கூறி அர்ச்சனை செய்தல் நலம்.

 
ஓம் ஸ்ரீம் க்லீம் குழ அழகு கிளத்தீசாயை நமஹ
ஓம் ஸ்ரீம் க்லீம் குழ அழகு திரிபுர சுந்தரீயாயை நமஹ
ஓம் ஸ்ரீம் க்லீம் குழ அழகு திரிதர்சன ப்ரியாயை நமஹ
ஓம் ஸ்ரீம் க்லீம் குழ அழகு வடிவாக்னி ப்ரியாயை நமஹ
ஓம் ஸ்ரீம் க்லீம் குழ அழகு பஞ்சபூத அக்னி ப்ரியாயை நமஹ
ஓம் ஸ்ரீம் க்லீம் குழ அழகு பாதக நாசின்யாயை நமஹ
ஓம் ஸ்ரீம் க்லீம் குழ அழகு வடிவாம்பிகாயை நமஹ
ஓம் ஸ்ரீம் க்லீம் குழ அழகு குலதேவதாயை நமஹ
 

 குழுமாயி அம்மனுக்கு மட்டுமன்றி எந்தத் தெய்வத்திற்கு அர்ச்சனை செய்யும்போதும் மலர்களை இறைவன் மேல் தூக்கி எறியக் கூடாது. ஒவ்வொரு மலரையும் பொறுமையாகக் கையில் எடுத்து இறை மூர்த்திகளின் திருப்பாதங்களில் அன்புடன் சமர்ப்பிக்க வேண்டும். மணமுள்ள மலர்களை மட்டுமே இறைவனை அர்ச்சிக்கவும் அலங்கரிக்கவும் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வண்ண வண்ண மலர்களால் இறைவனுக்கு அலங்காரம் செய்யும்போது ஒவ்வொரு வண்ணத்திற்கும் உரிய நாமங்களைக் கூறி அலங்காரம் செய்வதால வழிபாட்டின் பலன் பல மடங்காய்ப் பெருகும். மேலும் ஒவ்வொரு பூவையும் பறிக்கும் முறைகள் நேரம், காலம் உண்டு. அவற்றை அறியாமல் பறிப்பதால் ஏற்படும் தோஷங்களையும் கீழ்க் காணும் மந்திரங்கள் ஓரளவு நிவர்த்தி செய்யும். மலர்களை அர்ச்சனைக்காகக் கையில் எடுக்கும்போது அவை வானத்தை நோக்கி இருக்கும் வண்ணம் சில நொடிகள் வைத்திருந்து இறைவனுக்கு அர்ப்பணித்தல் நலம். இதனால் பூக்களில் படிந்துள்ள சில தோஷமுள்ள தீர்த்தங்கள் நம் விரல்களில் படிந்து தூய்மையான மலர் மட்டுமே இறைவனை அடைய ஏதுவாகும்.

   
மலர் நிறம் ஓத வேண்டிய மந்திரம்
   
மஞ்சள்  ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ
வெண்மைஹரி ஓம் சோமாய நமஹ
சிவப்பு  ஓம் கார்த்திகாய நமஹ
பவளமல்லி ஓம் ஈஸ்வராய நமஹ
   

இவ்வாறு குறிப்பிட்ட மந்திரங்களை ஓதி இறைவனுக்கு மலர்களை அர்ப்பணிப்பதால் அவற்றில் குடி கொண்டுள்ள தேவதைகள் தங்கள் பூரண ஆசீர்வாத சக்திகளை நமக்கு அளிக்கின்றன. 

இவ்வாறு சப்தமி பூஜைகளையும் அஷ்டமி பைரவ பூஜையையும் பைரவ முகூர்த்தத்தில் நிறைவேற்றுதால் பலன்கள் பன்மடங்காய்ப் பெருகும். இறை உணர்வை பூரணமாய் அளிக்கக் கூடியதே பைரவ வழிபாடாகும். மனிதர்கள் மட்டும் அல்லாது சாதாரண செடி கொடிகளுக்குக் கூட இறை உணர்வு உண்டு. தொட்டாற்சிணுங்கி, பூனை வணங்கி என்ற செடிகள் தொட்டவுடன் தலை வணங்குவதன் காரணம் அவை தன்னைத் தொடும் பிராணிகளிடம் குடி கொண்ட இறைவனை வணங்குவதே காரணம் ஆகும். இத்தகைய உன்னத உணர்வை மனிதர்களிடம் வளர்ப்பதே பைரவ வழிபாடாகும். காரணம் தாவரங்களைப் போல் விலங்குகளில் இறை உணர்வு மிக்கதே நாய். அதனால்தான் நாயை வாகனமாக உடைய பைரவரை வணங்கி இறை உணர்வை விருத்தி செய்து கொள்கிறோம்.

மேலும், நாம் அறிந்த சப்தமி ரிஷிகள், நவநாத சித்தர்கள் மட்டும் அல்லாது அஷ்ட மங்கள ரிஷிகள் என்று எட்டு ரிஷிகளின் குழுவும் தெய்வீக உலகில் உண்டு. இவர்களின் திருநாமங்கள் சித்தர்களால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த அஷ்ட மங்கள ரிஷிகளின் அனுகிரக சக்திகளைப் பெறும் முறைகளை நமது குருமங்கள கந்தவர்வா அவர்கள் இந்த குழஅழகு பைரவ பூஜை மூலம் கலியுக மக்களுக்குப் பெற்றுத் தர திருவுள்ளம் கொண்டதால் அற்புதமான இந்தப் பூஜை முறையை இங்கு அளித்துள்ளோம்.

எனவே, வளர் பிறை சப்தமி திதியில் குழுமாயி அம்மன் போன்ற பத்தினி தெய்வங்களின் பூஜையையும் வளர் அஷ்டமி திதியில் பைரவரின் பூஜையையும் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால் இதுவே குழஅழகு பைரவ பூஜையாக மலர்ந்து பெறற்கரிய அஷ்ட மங்கள ரிஷிகளின் அபூர்வ அனுகிரக சக்திகளைப் பெற்றுத் தரும் என்பது உண்மையே. பைரவ முகூர்த்தத்தில் இவ்விரு பூஜைகளையும் நிறைவேற்றுதலால் பலன்கள் பன்மடங்காய்ப் பெருகும் என்பதை நினைவில் கொள்ளவும்.

காரணம், அஷ்ட மங்கள ரிஷிகள் எட்டு பேர் கொண்ட குழுவாக எழுந்தருளி அனுகிரக சக்திகளை அளித்தாலும் பைரவ லோகங்கள் எட்டிலும் ஒவ்வொரு பைரவ லோகத்திலும் ஒருவராக அவர்கள் தலைமை வகிப்பதால் பைரவ முகூர்த்தம் நிலவும் எட்டு நிமிடங்களில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ரிஷியின் அனுகிரக சக்தி நிரவி நிற்கும் என்பதே இந்த வழிபாட்டின் பின்னணியில் உள்ள தெய்வீக ரகசியமாகும்.

மேலும் சித்தர்கள் அருளும் அமிர்த நேரம் ஒரு நிமிடம் மட்டுமே பூவுலகில் நிரவி நிற்கும் என்ற இறை நியதி இருப்பதால் தொடர்ந்து எட்டு நிமிட அமிர்த நேர சக்திகளைப் பெற பைரவ முகூர்த்தம் ஒன்றுதான் நமக்குக் கிடைத்த சித்த பிரசாதம் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வளர் பிறை அஷ்டமி திதியில் நிறைவேற்றும் பைரவ பூஜை நமது சஞ்சித கர்மங்களை களையும் தன்மை கொண்டது. பொதுவாக, பைரவ மூர்த்திகள் ஆடையின்றி அவதூத நிலையிலே காணப்படுவர். இந்த அவதூத நிலையின் இரகசியத்தை மனிதர்கள் புரிந்து கொள்வது மிக மிகக் கடினம். அதுவும் கலியக மனிதர்களால் தெய்வங்களின் அவதூத நிலையையோ மகான்களின் அவதூத நிலையையோ புரிந்து கொள்ள முடியாது என்பதால்தான் அத்தகைய மகான்களின் வாசம் பூமியில் அரிதாகி விட்டது.

காம சூத்திர கிரந்த யோகத்தில் பைரவ மூர்த்தங்களின் அவதூத தாத்பர்யங்கள் விளக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் வளர் பிறை அஷ்டமி திதியில் அவதூத பைரவ மூர்த்திகளை வழிபடும் முறைகளை சித்தர்கள் வெளியிட்டுள்ளனர்.

இவ்வழிபாட்டை நிறைவேற்றும்போது கை விரல்களில் தர்ப்பையால் ஆனால் பவித்திரங்கள் அதாவது தர்பை மோதிரங்களை அணிந்து கொள்ள வேண்டும்.

வலது மோதிர விரலில் பவித்திரம் அணியும்போது,

மந்திரங்கள் ஏற்கும் தந்திரக் கருவே
இயந்திரம் பலன் அளிப்பதுபோல்
என் மோதிரக் கையினுள் அமர்ந்து
மந்திரம் உருச் சக்தி பெற்றிடவே
தந்திரமாய் நான் அணிந்து கொண்டேனே

என்னும் பவித்திர துதியை ஓதி அணிதல் நலம். இவ்வாறு பவித்திரம் அணிந்த விரல்களால் பூஜையை நிறைவேற்றினால்தான் எழுகடல் மணலில் ஒரு துளியைப்போல் பைரவ அவதார இரகசியம் புரிய வரும் என்று சித்தர்கள் அறிவுறுத்துகின்றனர். பைரவ ரகசியம் அத்துணை சிறப்பானது, புனிதமானது, மனம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

அதே போல பைரவ பூஜைகளை இடது கால் தரையில் பாவாமல் நிறைவேற்றுவதாலும் பல அற்புத அனுகிரக சக்திகளைப் பெறலாம். அர்ச்சனை, தோத்திரங்கள் ஓதுதல், முந்திரிப் பருப்பு மாலை கட்டுதல் போன்ற பூஜைகளை இவ்வாறு நிறைவேற்றுவதால் கிட்டும் பலன்கள் அளப்பரியவை.

வளர்பிறை அஷ்டமி பூஜைகளை சமீப காலத்தில் நிறைவேற்றி மக்களுக்கு அருந் தொண்டாற்றியவரே ஷீரடி சாய்பாபா ஆவார்கள்.

ஒவ்வொரு வளர் அஷ்டமி திதி அன்றும் பைரவ பூஜையை நிறைவேற்றும்போது பக்தர்கள் ஷீரடி சாய்பாபாவிற்கும் அவருடன் வரும் அடியார்களுக்கும், நாய்களுக்கும் விருந்தளிப்பது வழக்கம். அவ்விருந்தில் நாய்களுக்கும் மனிதர்களைப் போல இலை போடப்பட்டு பதார்த்தங்கள் படைக்கப்படும்.

ஒரு முறை ஒரு கிராமத்தில் உள்ள பாழடைந்த கோயில் மண்டபத்தில் இத்தகைய பைரவ பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லோரும் அமைதியாக உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த மண்டபம் இடிந்து விழ ஆரம்பித்தது. சாய்பாபாவுடன் இருந்த அனைத்து அடியார்களும் மண்டபத்தை விட்டு வெளியே ஓடி விட்டனர்.

ஸ்ரீபிட்சாடனர்
திருப்பாற்றுரை

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர மூர்த்தி
திருவைகாவூர்

ஆனால், சாய்பாபாவோ எந்த வித சலனமும் அடையவில்லை. இரண்டே இரண்ட அடியார்கள் மட்டும் அவர் அருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் பாபாவைப் பார்த்தனர். அவர் எதையுமே கண்டு கொள்ளாததுபோல் உணவருந்திக் கொண்டார். அவரைப் பார்த்தவுடன் அவர்களும் மனம் அமைதி அடைந்து இலையை விட்டு எழாமல் தொடர்ந்து விருந்தை உண்ண ஆரம்பித்தனர்.

ஆனால், அதிசயமாக பாபாவுடன் பைரவ பூஜையில் கலந்த கொண்ட எந்த நாயும் சிறிதளவு கூட சலனம் அடையாது அமைதியாக விருந்தைச் சுவைத்துக் கொண்டிருந்தன. மண்டபத்தை விட்டு வெளியே ஓடிச் சென்ற பக்தர்களுக்கு அவமானமாகப் போய் விட்டது. அவர்கள் ஒவ்வொருவராக மீண்டும் வந்து பாபாவுடன் உணவருந்த ஆரம்பித்தனர். ஒருவாறாக அனைவரும் உணவருந்திய பின் பாபா கடைசியாக எழுந்து வெளியே சென்றார். அவரைத் தொடர்ந்து நாய்களும் மண்டபத்திற்கு வெளியே சென்றன. அதன் பின்னர்தான் அந்த மண்டபத்தின் பாக்கிப் பகுதிகள் ஒவ்வொன்றாக விழ ஆரம்பித்து பின்னர் மண்டபம் முழுவதுமே இடிந்து விழுந்து விட்டது.

அப்போது அந்த அடியார்களைப் பாபா பார்த்த விதமே அவர் சொல்லாத வார்த்தைகளை அவர்கள் உணர வைத்தது.

” இந்த நாய்களுக்கு உள்ள நம்பிக்கை கூட உங்களுக்கு என் மேல் ஏற்படவில்லை, பார்த்தீர்களா? ”

அப்போதுதான் பாபாவுடன் கடைசி வரை இருந்து உணவருந்திய இரு அடியார்களிடம் எப்படி அவர்களுக்கு தங்கள் குருவின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்டது என்று கேட்டபோது அவர்கள் தொடர்ந்து பைரவ பூஜையை நிறைவேற்றி வந்ததால் குரு பக்தி பல்கிப் பெருகியது என்று பதில் அளித்தனர்.

குருவின் மீதும் இறைவனின் மீதும் நம்பிக்கைக் குறைய காரணம் என்ன? மனிதன் பணம், பெண், மண்ணாசை என்னும் மாயையால்தான் மனம் தடுமாறி இறைவனை மறக்கிறான், குருவை மறுக்கிறான். மிருகங்களுக்கு மாயை கிடையாது. எனவே, நாயை வாகனமாக உடைய பைரவ மூர்த்தியை வழிபடும்போது மாயைகளிலிருந்து மனித மனம் விடுபடுவதால் இறை நம்பிக்கை பெருகுகிறது, குரு நம்பிக்கை வலுப் பெறுகிறது.

இறைவனுக்கு வாகனமாக அமைந்த மூர்த்திகள் பக்தர்களின் குறைபாடுகளைத் தாங்கள் சுமந்து கொண்டு அனுபவித்து பக்தர்களை அத்துன்பங்களிலிருந்து விடுவிக்கின்றன என்பதும் உண்மையே.

தெருக்களில் நாய்கள் புணரும் காட்சிகளைக் காண்கிறோம். இத்தகைய காட்சிகள் நாம் சந்திக்கப்போகும் தவறான சூழ்நிலைகளை முன் கூட்டியே தெரிவிக்கின்றன. அத்தகைய காட்சிகளை நாம் காண நேர்ந்தால் அவை நம் வாழ்வில் சம்பவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளின் முன்னறிவிப்பே என்பதை உணர்ந்து தவறான சூழ்நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு தெளிந்த அறிவுடன் செயல்பட வேண்டும்.

அதே போல தெருக்களில் நாய்கள் குரைத்துக் கொண்டு ஒன்றையொன்று சண்டையிட்டு கடித்துக் கொள்வதையும் நாம் காண்கிறோம். இவை அனைத்துமே அத்தகைய நாய்களைச் சுற்றியுள்ளோர் அனுபவிக்க வேண்டிய ஆசைப் புயல்களின் முன்னறிவிப்பாகும் என்பதை உணர்ந்து கொண்டால் அப்புயல்களின் சீற்றங்களிலிருந்து எளிதில் விடுபடலாம். இதற்கு உறுதுணையாய் அமைவதே பைரவ வழிபாடு.  

பைரவ பூஜைகளுக்கு எல்லா தலங்களும் உகந்தது என்றாலும் திருக்கோயில்களில் கோஷ்டத்தில் (மூலவரைச் சுற்றியுள்ள பிரகாரம்) பிக்ஷாடனர் எழுந்தருளியுள்ள சிவத்தலங்கள் பைரவ பூஜைக்கு சிறப்பானதாகக் கொள்ளப்படுகிறது. காரணம், பைரவ மூர்த்தியைப் போல பிக்ஷாடன மூர்த்தியும் அவதூத கோலம் உடையவர் என்பது மட்டும் காரணம் அன்று.

சிவத்தலங்களைப் பொறுத்தவரை கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரரோ பிக்ஷாடனரோ எழுந்தருளியிருந்தால் அத்தகைய தலங்கள் கோஷ்டத்தில் லிங்கோத்பவர் எழுந்துருளிய தலங்களை விட புராதனம் உடையவை என்பது பொருளாகும்.

நாம் ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முயலும்போது அதை நிறைவேற்ற விடாமல் நமது மனமே பல எதிர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது அல்லவா? எனவே, நல்ல எண்ணத்திற்கும் அதற்கு எதிரான எண்ணத்திற்கும் உள்ள போராட்டம் இந்த பூலோகத்தைப் பொறுத்தவரை நிரந்தரமானது. இதைத்தான் மகாபாரதமும் விளக்குகிறது. ஒளி உலகத்தை ஒரு ஜீவன் அடையும்போதுதான் இந்த நல்ல சக்திகளுக்கும் அதற்கு எதிரான சக்திகளுக்கும் இடையே போராட்டம் என்பது கிடையாது. இத்தகைய ஒளி உலகங்களுடன் நேரடி தொடர்பு உடைய திருத்தலங்களே கோஷ்டத்தில் பிக்ஷாடனரோ அர்த்தநாரீஸ்வரரோ எழுந்தருளியுள்ள திருத்தலங்கள்.

எனவே இத்தகைய திருத்தலங்களில் நிறைவேற்றும் பைரவ வழிபாடு நாம் எளிதில் ஒளி உலகங்களை அடைந்து எந்த வித எதிர்மறை சக்திகளாலும் பாதிக்கப்படாத உன்னத நிலையை அடைய வழி வகுக்கிறது.

ஜீவ நதி தீர்த்தம்

எல்லா நதிகளுமே புண்ணிய சக்தியால் விளைந்த நதிகள்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால், நதிகளின் தோற்றத்தில் ஏற்படும் சில ரகசியங்களை வைத்து அதைப் புனித நதிகள், ஜீவ நதிகள் என்று அழைப்பதுண்டு. உதாரணமாக, வடகாவிரி (கொள்ளிடம்), நூபுர கங்கை பல்குனி, காயத்ரீ போன்ற நதிகளை ஜீவ நதிகள் என்று அழைக்கின்றனர். காரணம், இத்தகைய நதிகளின் ஜீவ சக்திகள் அவை தோற்றம் கொள்ளும் இடத்திலிருந்து (கோமுகம்) மட்டும் அல்லாது அவை பாயும் இடம் எங்கும் புண்ணிய சக்தியால் நிரப்பப்படுகின்றன என்பதே இதுவரை நீங்கள் அறியாத தேவ இரகசியம்.

எனவே இத்தகைய ஜீவ நதிகளால் பைரவ மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றி வந்தால் எத்தகைய கால தோஷங்களையும் எளிதில் களையலாம் என்பது பெரியோர்கள் கண்ட உண்மை.

மேலும் கடவுளைக் காண பெரியோர்கள் பல மார்கங்களை உபதேசித்துள்ளனர். பக்தியால் கடவுளை அடையலாம், சேவையால் கடவுளை அடையலாம், ஞானத்தால் கடவுளை அடையலாம் என்று இறை தரிசனத்தை நல்கும் பல மார்கங்கள் இருந்தாலும் நமது குருநாதர் பணிவால் இறைவனை அடையலாம் என்பது வலியுறுத்தி உள்ளார். பணிந்தவனே பக்தன்.

அதுபோல உண்மை எப்படி கடவுளைக் காட்டும் என்பதை உணர்த்துபவையே ஜீவ நதிகளாகும். காவிரி தீர்த்தத்தையும் மர நிழலையும் பற்றி தியானித்தால் இந்த உண்மை விளங்கும். அதிலிருந்து கிட்டும் உபதேசமே சோற்றைப் போடு சித்தனாவாய் என்ற சித்த குரு மொழி.

கழிப்பாலை க்ஷீரதீர சித்தர்

சிதம்பரம் அருகே உள்ள திருக்கழிப்பாலை திருத்தலத்தில் சடையப்பன் என்ற ஒரு உத்தமர் வாழ்ந்து வந்தார். இத்தலம் அருகே உள்ள கொள்ளிட ஜீவ நதியிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து தினமும் இத்திருத்தலத்தில் உள்ள கால பைரவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்து வந்தார்.

இத்தல பைரவ மூர்த்தி காசி காலபைரவரைப் போல் அனுகிரக சக்திகளை அளிக்கக் கூடியவர், இம்மூர்த்தியின் தோற்றமும் காசி பைரவரைப் போன்றே இருக்கும். எத்தகைய காம தோஷங்களையும் களைய வல்ல அற்புத அனுகிரக மூர்த்தி.

மிகவும் அற்புதமாக அவர் இயற்றிய வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன் அவர் கனவில் தோன்றி, ”நீர் அருந்தும் நான் பால் அருந்த மாட்டேனோ?” என்று கேட்டார்.

உலகிலேயே சிறந்த ஆலய மணி
சிதம்பரம் நடராஜர் சன்னதி

மறுநாள் காலையில் விழித்தெழுந்தவுடன் அக்கனவைப் பற்றி யோசிக்கத் தொடங்கினார். அப்போது அவருக்கு இறை அடியார்களுக்கு பால் அளிக்க வேண்டும் என்பதைத்தான் இறைவன் நமக்குச் சுட்டிக் காட்டுகிறான், என்று தெளிந்து நேரே சிதம்பர திருத்தலத்தை அடைந்தார்.

சிதம்பர திருத்தலத்தில் இறைவனை வழிபட வந்த ஒரு பக்தரின் பாதங்களில் கறந்த பசும்பாலைக் கொண்டு அபிஷேகம் நிறைவேற்றினார். அவ்வாறு அபிஷேகப் பிரசாதமாகப் பெற்ற பாலின் சில துளிகளை மட்டும் உண்டு விட்டு தன்னுடைய ஊருக்குத் திரும்பி விட்டார்.  

நாளாக நாளாக இதையே தன்னுடைய ஒரே வழிபாடாக மாற்றிக் கொண்டு விட்டார். தினமும் சிதம்பரத்திற்குச் சென்று அங்கு வரும் பக்தர் ஒருவருக்கு பாலால் அபிஷேகம் செய்து அந்த பாலின் சில துளிகளை மட்டும் உண்டு வாழ்க்கையை நடத்தி வந்தார்.

ஆரம்பத்தில் சடையப்பனைக் கண்ட அனைவரும் அவரைச் சாதாரணமாக எண்ணி தங்கள் பாதங்களில் அவர் பால் அபிஷேகம் செய்ய அனுமதித்தனர். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவர்களுக்கு தங்களைப் பற்றியும் சடையப்பனின் பக்தி நிலை பற்றியும் புரிய வந்ததால் அவருடைய திருக்கரங்கள் தீண்டும் அளவிற்கு தாங்கள் எந்தத் தகுதியும் உடையவர்கள் அல்ல என்று உணர்ந்து அவரிடமிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தனர்.

இதனால் அவர் பால் அபிஷேகம் செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டது. சில நாட்கள் நடைசாத்தும் நேரம் வரை இருந்து பார்த்தாலும் யாருமே அபிஷேகத்திற்கு முன் வராத சோதனை காலமும் வர ஆரம்பித்தது. ஒரு கால கட்டத்தில் தொடர்ந்து 21 நாள் எவருமே சடையப்பனிடம் அபிஷேகம் நிறைவேற்றிக் கொள்ள முன் வரவில்லை. சடையப்பனும் அபிஷேகம் செய்யாமல் எந்த உணவையும் ஏற்பதில்லை, என்ற வைராக்யத்தையும் விடாப் பிடியாக வைத்திருந்தார்.

அதனால் சடையப்பனின் உடலில் வலிமை குன்றியது. தொடர்ந்த பட்டினியால் அவர் கண் பார்வை மங்கியது. நடை தள்ளாடியது. கை, கால்கள் தளர்ந்து போய் விட்டன. இந்நிலையில் 22வது நாள் சிவபெருமான் தானே தன்னுடைய நாடகத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர விழைந்தவராய் சிதம்பரத்திற்கு எழுந்தருளினார். ஒரு தாழ்ந்த குலத்தவரின் தோற்றத்தில் சிதம்பரம் திருக்கோயிலை அடைந்தார்.

கைகளில் நரிப் பல், புலித்தோல், மான் தோல், திறந்த உடம்பு, காவி படிந்த பற்கள், தலையில் சிவப்பு நிற முண்டாசு, கையிலும், கழுத்திலும் முடிச்சு, முடிச்சாக பல வண்ண கயிறுகள், உடல் எங்கும் புலால் நாற்றம், மாதக் கணக்தில் தண்ணீரைப் பார்க்காமல் அழுக்கேறிய உடம்பு இத்தகைய தோற்றத்தில் அவர் திருக்கோயிலினுள் பிரவேசிக்க முற்பட்டார். இந்த கோலத்தைக் கண்ட அர்ச்சகர்கள் அவரை கோயிலினுள் அனுமதிக்கவில்லை. அப்படியானால் அவருடைய தோற்றம் எப்படி இருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்,.

நமக்கு சோதனை என்றால் சிவனிடம் முறையிடலாம். சிவனுக்கே சோதனை என்றால் ??

எனவே, அனுமதி மறுக்கப்பட்டதால் சிவபெருமான் கோயிலினுள் செல்லாமல் கோயில் வெளிப் பிரகாரத்திலேயே வலம் வந்து கொண்டிருந்தார். சடையப்பன் கோயிலின் உட்புறத்திலிருந்து எவராவது பக்தர்கள் வருகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். அவரும் காலையிலிருந்து நூற்றுக் கணக்கான பக்தர்களைக் கேட்டு, மன்றாடிப் பார்த்து விட்டார். எவரும் அவரிடம் பால் அபிஷேகம் செய்து கொள்ள முன் வரவில்லை.

அத்தருணத்தில்தான் வெளிப் பிரகாரத்தில் சிவபெருமான் வலம் வந்து கொண்டிருந்தார். அவர் மேல் இவர் பார்வை பட்டது. இறைவனின் மேல் உள்ள அதீதமான பக்தியால், குழந்தை தாயை இனங் கண்டு கொள்வதுபோல சிவபெருமானின் மேல் தன்னையும் அறியாமல் ஒரு தெய்வீக ஈர்ப்பு ஏற்படுவதைக் கண்டு வெளிப் பிரகாரம் நோக்கி விரைந்தோடினார் சடையப்பன்.

ஓடிச் செல்லும்போது கால் தடுக்கி கீழே விழுந்து மயக்கமானார். மீண்டும் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தால் சிவபெருமான் பிரகாரத்தின் மறுகோடியில் வேகமாகச் சென்று கொண்டிருந்தார். சடையப்பன் விடாது அவரைத் தொடர்ந்து தள்ளாடி தள்ளாடி ஓடி இறுதியில் சாஷ்டாங்கமாக விழுந்து அவர் இரண்டு பாதங்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

“சுவாமி, பல நாட்களாக அடியேன் நிறைவேற்றும் பால் அபிஷேகத்தை எவரும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அடியேனுக்கு கடவுள் பக்தி மிகவும் குறைந்து போய் விட்டது போல் தெரிகிறது. நீங்களும் அடியேனின் பக்திக் குறைவைக் காரணம் காட்டி அபிஷேகத்தை நிராகரித்து விடாதீர்கள்,” என்று கதறி அழுதார்.

சிவன் வேண்டுமென்றே பிடிவாதம் பிடிப்பது போல், “சுவாமி, இது என்ன அபச்சாரம், நானோ தாழ்ந்த ஜாதிக் காரன். என்னுடைய காலை நீங்கள் தீண்டலாமா? எந்தத் தகுதியும் இல்லாத இந்த சண்டாளனை நீங்கள் தொட்டால் உங்களைத்தான் பாவத் தொற்றிக் கொள்ளும்,” என்று கூறி சடையப்பனின் பிடியிலிருந்து நழுவ முயன்றார். ஆனால், சடையப்பன் உடும்புப் பிடியாக சுவாமியின் திருப்பாதங்களைப் பற்றிக் கொண்டு தன்னுடைய குடுவையில் இருந்த பசும்பாலை எம்பெருமானின் திருப்பாதங்களில் வார்த்தார்.

அடுத்த விநாடி கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒளி ஆலயம் எங்கும் ஒளிர்ந்தது. ஆலயமணி தானாக ஒலிக்க ஆரம்பித்தது. சங்கு, பேரிகை வாத்தியங்கள் வானத்திலிருந்து எழுந்தன. திருக்கோயிலில் இருந்த அனைத்து பக்தர்களும் இந்த அதிசயத்தைக் கண்டு சடையப்பனைச் சூழ்ந்து கொண்டு ஆரவாரித்தனர். சடையப்பன் என்னும் மனிதர் க்ஷீரதீர சித்தர் என்னும் பெருஞ் சோதியாய் தில்லைப் பரவெளியில் கலந்தார்.

க்ஷீரதீர சித்தரின் திருஉருவத்தை சிதம்பரம் திருத்தலத்தில் இன்றும் தரிசித்து மகிழலாம். சுத்தமான பசுவின் பாலால் அபிஷேக ஆராதனைகள் செய்து இவரை வழிபட்டால் அனைத்து விதமான கால தோஷங்களும் நிவர்த்தியாக எம்பெருமான் அருள்புரிவார்.  

கடவுள் உண்டு, கடவுள் உண்டு, கடவுள் உண்டு என்று நமது வெங்கடராம சுவாமிகள் ஆணித்தரமாக முழங்குவதோடு மட்டும் அல்லாமல் பல சமயங்களிலும் இறை தரிசனத்தை தன்னை நம்பிய அடியார்களுக்கு நேரிடையாகவே அளித்திருக்கிறார் என்பது உண்மையே.

சில வருடங்களுக்கு முன் நமது சுவாமிகள் சிதம்பரம் திருத்தலத்திற்கு தரிசனத்திற்காக சென்றபோது மேற்சொன்ன அதே அங்க அடையாளங்களுடன் சிவபெருமான் எழுந்தருள அவருக்கு நமது சுவாமிகள் அமுது படைத்ததை அவருடன் அப்போது கூடி இருந்த அடியார்கள் தரிசனம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றனர்.

எனவே குருவருளும் திருவருளும் ஒருங்கே அளிப்பதே பைரவ வழிபாடு என்பதற்கு மேலும் சான்று வேண்டுமா?

காலம் தோன்றுவது காலபைரவரின் திருவடிகளில்

ஓம் குருவே சரணம்
om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam