ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
அடிமை கண்ட ஆனந்தம் |
நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடமிருந்து பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!
அந்த வான் தேவதை வந்து சென்ற காட்சி சிறுவனின் மனதில் அப்படியே பதிந்து இருந்தது!
வெள்ளியங்கரிப் பயணத்தின் ஆரம்பக் கட்டத்தில், சிறுவன் பூண்டி விநாயகரையும், வெள்ளியங்கிரி அப்பனையும், மனோன்மணி அம்மையையும் வணங்கிய பின்.. வெட்ட வெளியில் பெரியவருடன் சற்றே அமர்ந்திருக்கையில் நிகழ்ந்த உரையாடல் அவனுக்கு நினைவுக்கு வந்தது.
அந்த உரையாடல் நடந்த போது கிட்டாத விளக்கங்கள், இப்போது ஒவ்வொன்றாகப் புரிய வருவதாக அவன் நன்றாகவே உணரத் தொடங்கினான்!
மண்டுவுக்கும் (சிவத்)தொண்டு தந்தானே ஐயா?
“ஒன்றும் புரியாத என்னை மாதிரி முட்டாளுக்கே, வெள்ளியங்கிரி மண்ணில் ஏதேதோ புரிய ஆரம்பித்து விட்டது என்றால், மண்டுவையும் (சிவத்) தொண்டுக்கு உரிமை ஆக்குவது வெள்ளியங்கிரியான் மஹிமை தானே!”.
அப்படி என்ன, அந்த விசேஷமான தெய்வீகமான உரையாடலில் பதிந்திருக்கிறது? சற்று எட்டித்தான் பார்ப்போமே!
கோபியரின் உள்ளங்களை
கொள்ளை கொண்டவா !
உள்ளுள் ஒளியாய் உள்ளேயே ….
“ஏன் வாத்யாரே! கோயம்புத்தூர்லேந்து இருபது, இருபத்தஞ்சு மைல் நடந்து வந்துட்டோமே, மெட்ராஸ்லேந்து இதை அப்படி விழுந்து, விழுந்து தேடிக்கிட்டு வர்ற மாதிரி, அப்படி என்ன விசேஷமா வெள்ளிமலையில கொட்டிக் கிடக்குது? நமக்கு இருக்கற ஒரு திருஅண்ணாமலை போதாதா? அதுல இல்லாதது வேற என்னதான், எங்கதான் இருக்கு வாத்யாரே?”
வழக்கம் போல், அறியாமையால் சிறுவன் கேட்டான்.
ஏதோ பட்டிமன்றத்துக்கு பத்து நிமிஷம் வாய்ப்பைக் கொடுத்து அதற்குள் அவன் முடித்தாக வேண்டும் என்பது போலான அவசரத்தில் வெகு வேகமாகக் கொட்டித் தீர்த்தான்! அவனதிர்ஷ்டம், பெரியவர் அப்போதும் சற்றும் கோபக் காற்றைத் தழுவவில்லை!
“ஏழுமலை சேர்ந்ததுதானேடா திருப்பதி! திருப்பதி மலை உண்மையாகவே வைகுண்டத்திலேந்து வந்த மலைதான்! இங்கே வெள்ளியங்கிரியிலேயும் ஏழு மலை இருக்குடா கண்ணு! ஆனா இது எங்கேந்து வந்ததுன்னு நாங்க சொன்னா வெறுமனே தலையை ஆட்டிக் கேக்கறதை விட, குருவோட இங்கே வந்து குருகுலவாச அனுபூதியாத் தெரிஞ்சுக் கிட்டா உலகத்துல எல்லாமே தானாகவே எல்லாம் தெரியவரும்கற ஒரு வெள்ளியங்கிரிச் சட்டம் இருக்குடா கண்ணு!”
தப்புக் கணக்கு! தப்பாத கணக்கு!
“இதுல அருணாசலத்தை எப்படி வைக்கறாங்க வாத்யாரே!”
“நீ இந்த மாதிரிக் கேக்கறதுக்குக் காரணம் என்ன? இது பெரிதா, அது உயர்ந்ததான்னு உலகப் பொருள்ளுக்கு வைக்கற கணக்கை கலியுக மனுஷன் தெய்வத்துக்கும் வச்சுப் பார்க்கறான்! இது தப்பு! உத்தம தெய்வீகத்துல எதுவுமே தப்பாகாது”
“பெருமாள் பக்தர்கள் கண்டிப்பா திருப்பதி போயாகனும்கறது மாதிரி, உலகத்து ஜனங்கள் எல்லாரும் ஏதாச்சும் ஒரு பிறவியிலயாவது கண்டிப்பா திருஅண்ணாமலைக்குப் போயாகனும்! அருணாசலத்துல செய்ய வேண்டிய தான தர்மங்களை ஒருத்தர் செஞ்சு முடிச்ச பிறகு, அவரு பார்க்க வேண்டிய முக்கியமான தரிசனம் ஒண்ணு இருக்குடா ராஜா! அதுதான் வெள்ளியங்கிரி நவகோடி சித்தர் தரிசனம்! இதுவும் அண்ணாமலையார் கருணையினாலத் தாண்டா கிடைக்கும்!”
“ஏன் இந்த தரிசனம் அண்ணாமலையில கிடையாதா வாத்யாரே?”
“இந்த மாதிரி அவசரக் குடுக்கைக்கு அண்ணாமலையில இந்த தரிசனம் கிடைக்காது!”
சிறுவன் வாயை மூடிக் கொண்டான்!
“அண்ணாமலையில எதுதான் இல்லைடா கண்ணு! ஆனா எல்லாத்தையும் அண்ணாமலையில பார்க்கணும்னா சிவனோட ஐக்யம் ஆகணும்டா ராஜா!”
“இதெல்லாம் ஏன் சொல்றேன்னா, தெய்வீகத்துல உத்தம நிலைன்னா, இதுதான் முக்தி, இதுதான் மோட்சம்னு finalஆ நினைக்கக் கூடாது! தெய்வீகத்துல உத்தம நிலைகள்னா மேல், மேல போய்க்கிட்டே இருக்குமங்கறதைக் காட்டறதுதான் வெள்ளியங்கிரி மலை மஹிமை!”
வெள்ளியங்கிரியில் நவகோடிச் சித்தர்களின் உத்தம தரிசனம்! இதற்கு மேலான உத்தம நிலையும் உண்டு!
“நவகோடிச் சித்தர்களைத் தரிசனம் பண்ணனும்னா, இந்த வெள்ளியங்கிரிக்கு வந்தாகணும்! இதனாலத்தான் வெள்ளியங்கிரியை கோடி ரகசிய மலைன்னு சொல்லுவாங்க! இதோட கோடானு கோடி ரகசியங்களைத் தெரிஞ்சவங்கள்ல ஒருத்தர்தான் புரவிக்காடு கோடிச் சித்தர்! உத்தம யோகி! இங்க நாம பார்க்கப் போற தெய்வீக ரகசியங்கள் எல்லாம் எந்த விஞ்ஞானக் கருவினாலேயும் கண்டுபிடிக்க முடியாது! நோபல் பிரைஸ் வாங்கின விஞ்ஞானிக்கே இங்க நடக்கற ஒரு சிறு சம்பவம் கூட விஞ்ஞான விதிகளுக்கு முரணா நடக்கறது எல்லாமே ஆச்சரியமா இருக்கும்!”
“அப்ப ஒரு நோபல் பிரைஸ் விஞ்ஞானியை இங்க கூட்டிக் கிட்டு வந்து காண்பிச்சு, இதைப் பத்தி எழுதி உலகம் புல்லா நம்ப தமிழ் நாட்டுத் தெய்வீகத்தைப் பரப்பிடலாமே!”
“ஏண்டா இங்க வர்றதுக்கே கோடிப் புண்யம் செஞ்சுருக்கணுமே! நோபல் பிரைஸ் என்னடா நோபல் பிரைஸ்! தெய்வீகத்துல இதைச் சுண்டைக்காய்னு கூடச் சொல்றது கிடையாது!”
சிறுவனுக்குச் சிரிப்புப் பிய்த்துக் கொண்டு வந்தது! பெரியவரோ மிகவும் சீரியஸ் ஆனார்!
“அப்படி நோபல் பிரைஸ் வாங்கின விஞ்ஞானி இங்கே வர்ரான்னு வச்சுக்கோ! அவனோட அபார மூளையினால, இங்க வெள்ளியங்கிரியில் இருக்கற மெய்ஞான விஞ்ஞானம்தான் உண்மைன்னு தெரிஞ்சுக்கிட்டு, தன்னோட விஞ்ஞானத் துறைக்கே, முழுக்கப் போட்டுட்டு இங்கேயே கோமணத்தைக் கட்டிக் கிட்டுத் தியானத்துல பெர்மனன்டா உக்கார்ந்துடுவானே!”
ஸ்ரீபரசுராமர் முழையூர்
சிறுவன், “ஆமாம், ஆமாம்!” என்று படுவேகமாகத் தலையை ஆட்டினான்!
“அதனால, நல்லா தெய்வீகத்துல ஊறின உத்தமர்கள்தான் இங்கே வந்து தெய்வீகத்தை உணர வைக்க முடியும்! மத்தவங்க கண்ணுக்கு இது வெறும் கல் மலைதான்!”
தெய்வமும் கல்லே!
அப்போது பேச்சு வாக்கில் யதேச்சையாகக் சிறுவன் கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்துப் பார்த்தான்! கும்பகோணம் அருகே உள்ள முழையூர் ஸ்ரீபரசுராம லிங்க மூர்த்தி போல, நீண்ட பலப்பம் போல் இருந்தது!
“பல சதுர் யுகமா இந்த மலை இங்கே இருக்குடா ராஜா! இதோட வயசை எல்லாம் கால்குலேடர்ல கூடக் கணக்குப் போட்டுச் சொல்ல முடியாது! நீ கையில் வச்சுருக்குற ஒரு சின்னக் கல்லு கூட, முழையூர்ச் சுயம்பு லிங்கத்துக்கும் முந்தைய காலம்னா.. என்ன சொல்வே இந்த மலையைப் பத்தி!”
சிறுவன் பயத்தில், பயமல்ல... தெய்வீக அழுத்தத்தில் ... அந்தக் கல்லை டக்கென்று கீழே போட்டு விட்டு,
“தான் கல்லை எடுத்தது, முழையூரைப் பற்றி எண்ணியது.. எல்லாம் இவருக்கு எப்படித் தெரியும்?” சிறுவன் எண்ணி, எண்ணி அதிசயித்தான்!
பெரியவர் சிரித்தார்!
“கல் அப்படீன்னா தமிழ்ல கற்றுத் தெளிதல்னு சொல்வாங்க!! அதுதான் தெய்வமும் கோயில்ல கல்லா நிக்குது! ஆமாம் தெய்வமும் ஒரு கல்தான்! சாக்கிய நாயனார்தான் இதைச் சொன்னவரு!”
பரிசு என்றால் இறைவனே அளிப்பதே!
சிறுவன் அவரைத்தான் நோபல் பரிசு என்ன, மெய்ஞானத்தில் எந்தப் பரிசுக்கும் உரியவர் என உணர்ந்தான்! ஆனால் இதையும் பெரியவர் விட்டு வைக்கவில்லை!
“தெய்வீகத்துல எல்லாமே கடமைதான்! பரிசே கிடையாதுடா! அது கடவுளா பார்த்துக் கொடுக்கறதுதான்” என்று சொல்லிப் பெரியவர் அவனைத் தட்டிக் கொடுத்தார்.
“இந்த மலையில ஏறணும்னா முன் ஜென்மத்துல காமதேனுவை உபாசனை பண்ணி இருக்கணும்! அடுத்ததா அகத்தியர், ஆதிசேஷன், நவநாத சித்தர்கள் மாதிரி பெரிய பெரிய சித்தர்களோட வழித் தோன்றலா இருக்கணும். இதோட பட்டி முனி, கோமுனி, ஏகபாத சித்தர் இவங்களுக்குச் சேவை செஞ்சவங்களா இருக்கணும். இவங்க ஆசீர்வாதம் இருந்தாத் தான் வெள்ளியங்கிரி மலை மேல் ஏறி, சிவனோட அனுகிரகத்தை முழுசா வாங்க முடியும். இவங்களை எல்லாம் நல்லா மனசார நெனைச்சுக்கோ! இந்த மலையேறித் திரும்பி வர்ற வரைக்கும் நீ பாக்கற எக்கச்சக்கமான அற்புதமான அதிசயங்கள்ல ஏதோ கொஞ்சத்தை மட்டும் புஸ்தகத்துல எழுதிப் போடு! இதுக்குன்னு எதிர்காலத்துல உனக்கு நாங்க சந்தர்ப்பம் கொடுப்போம். அப்ப கொஞ்சம் மட்டும் எழுது, அதையே நிறையப் பேரால ஜீரணிக்க முடியாது!”
சிறுவன் நடப்பு உலகிற்கு மீண்டான்.
அந்த வான் தேவதை வந்து சென்ற காட்சி சிறுவனின் மனதில் அப்படியே பதிந்து இருந்தது!
கண்டதே தேவ காட்சி!
அந்தக் குடிசையை நோக்கிப் பெரியவர் மெதுவாக நடந்தார். அருகில் செல்லச் செல்ல...
“மனோன்மணித் தாயே! வெள்ளியங்கிரி அப்பா!” என்று சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.
பெரியவர் இப்போது மீண்டும் சிறுவனைப் பிடித்து இழுத்து ஒரு ஓரமாக ஒதுங்கினார்.
“இந்த பாருடா! இனிமே நீ இங்க நான் பார்க்கச் சொல்றதை மட்டுந்தான் நீ பார்க்கணும். மத்த சமயங்கள்ல கண்ணை நல்லா இருக்கி மூடிக்கணும்! புரியுதா? வேற எதையுமே சும்மாச் சும்மா நீ கண்ணைத் திறந்து பாக்கக் கூடாது!”
பெரியவரின் அதட்டலான ஆன்மீகக் கட்டளை இது! “மீறினால்” என்ன விளைவுகள் எனச் சிறுவன் அறியாததா என்ன?
ஆங்கே... அந்தக் குடிசையின் வாசலில் ... வாசல் மர உத்திரத்தில் இருந்து.... திடீரென இரண்டு நாகங்கள் ஒன்றை ஒன்று படமெடுத்து ஆட ஆரம்பித்தன!
சிறுவனுக்கு வெலவெலத்து விட்டது!
மஞ்சளும் கருப்பும் கலந்த நிற நாகங்கள் அவை! மிகவும் அழகாக நடனமாடின! யாரோ கூட இருந்து “நட்டுவாங்கம்” போட்டு, கனகச்சிதமாக அவை தாளம் பிசகாது நாட்டியம் ஆடுவது போலிருந்தது!
நீத்தாரப்பப் பெருவிழா |
மாளய பட்ச நீத்தாரப்பப் பெருவிழா!
பித்ரு கோலங்களின் பிரம்மோற்சவ பூஜையே பூலோகத்தின் மாளய பட்சம் அதாவது நீத்தாரப்ப படையல் பூஜை! நீத்தாரப்பர்கள் (பித்ருக்கள்) இளைய தலைமுறைக்கு அருளாசிகளை வழங்கக் காத்துக் கிடக்கின்றனர்!
இளைஞர்களே! ஜடமாயிராது ஆன்மீக ஆக்கத்துடன் புறப்படுங்கள், சமுதாய இறைப்பணிகளை மாளயபட்சத்தில் நிறைவேற்றிடவே!
நீத்தாரப்பர்களின் தேவ முக்தி இலக்கணம்
இறந்தவர்கள் அனைவருமே பித்ருக்கள் ஆவதில்லை! ஆத்ம சாந்தி அடைவதெனில் பித்ரு நிலையை அடைவதேயாகும்! உயிர் நீத்த பின், ஆவியாய் அலையாது, மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்காது, பிறப்பு, இறப்பு நிலையற்ற தர்பசுதப்ரகாச ஒளிச் சக்தி நிறைந்த, பிரகாசமான உத்தம தெய்வீக சரீரம் கூடிய நிலைகளை அடைவதே பித்ரு தேவ நிலையாகும்!
எனவே, நம் முன்னோர்களில் இவ்வகையான ஒளிச் சரீரத்துடன் உத்தமமான தேவாதி தேவ தெய்வீக நிலைகளை அடைந்தவர்களே, பித்ருக்கள் அதாவது நீத்தாரப்பர் எனப் போற்றப்படுகின்றனர்! இதிலும் பித்ரு பத்னிகள், பித்ரு கணங்கள், பித்ரு தேவர்கள், பித்ரு மூர்த்திகள், வசு, ருத்ர, ஆதித்யர்கள் எனப் பல உத்தம பித்ரு நிலைகளும் உண்டு.
ஒவ்வொரு தமிழ் வருடப் புரட்டாசி மாத அமாவாசைக்கு முந்தைய ஒரு பட்ச (15) நாட்கள், மாளய பட்சம் என்பதாகும். இதுவே நீத்தார் நெடும் பூஜையாக பூலோகத்திலும் பித்ருக்களின் தலைமைப் பூஜை மண்டலத்தில் ஸ்ரீசூரியநாராயண மூர்த்திக்கான பிரம்மோற்சவமாகவும் ஆகின்றது.
ஒரு வருடத்தில் ஆற்ற வேண்டிய மூதாதையர்க்கான பித்ரு பூஜைகளை முறையாகச் செய்யாதோர், இந்த 15 நாட்களிலுமாவது தினசரித் தர்ப்பணம், தீர்த்த நீராடல், படையல், அன்னதானம் செய்து, பித்ருக்களின் ஆசியுடன் குடும்பத் துன்பங்களுக்கு நல்ல நிவர்த்தி காண வேண்டும்.
நற்பணிகளை ஆற்ற வைப்பதும் நீத்தாரப்பர் பூஜையே!
தர்ப்பணம், திவசம் என்றால் குடும்பப் பெரியவர்கள், குடும்பத் தலைவர்கள் மட்டுமே செய்ய வேண்டியது என எண்ணாதீர்கள். இளைஞர்கள் ஆற்ற வேண்டிய தெய்வீகப் பங்கும் மாளயபட்சத்தில், அமாவாசைத் திதியில், பௌர்ணமியில் நிறையவே உண்டு. வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், செயற்பாடுகளை இழந்த நோயாளிகள் போன்றோரும் பாமரரும் தர்ப்பண பூஜைகளை நன்கு ஆற்றிடத் தேவையான தர்பை, எள் போன்றவற்றை வாங்கித் தருதல், அவர்களை ஆறு, குளம், தர்ப்பணப் பூஜை நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்தல், அன்னதானம் செய்திடப் பல வகைகளில் உதவுதல், திருவள்ளூர், ராமேஸ்வரம் போன்ற கூட்டம் நிறைந்த இடங்களில் மாளய அமாவாசை நாளில், பலருக்கும் ஆத்மார்த்தமாக உதவுதல் போன்ற நீத்தாரப்ப (பித்ரு) சக்திப் பணிகள் யாவும் இளைஞர்கள் தம் வாழ்க்கையில் நல்ல வேலையுடன் சிறப்பான திருமண வாழ்வையும் பெற உதவும்! பித்ருக்களின் நல்ஆசிகளையும் பரிபூரணமாகப் பெறவும் உதவும்.
விண்ணுலகில் பித்ரு மண்டலங்களில், மாளயபட்சமானது மகத்தான பிரம்மோற்சவமாக, பித்ருக்களின் நாயகரான ஸ்ரீசூரிய நாராயண மஹாவிஷ்ணுவிற்கு அபிஷேக ஆராதனைகளுடன் நிகழ்த்தப் பெறுகின்றன. இந்நாட்களில் ஸ்ரீமன்நாராயண மூர்த்தியே பித்ரு லோகங்களில் நேரில் பிரசன்னமாகி, அனைத்து விதமான அபிஷேக, ஆராதனைகளையும் ஏற்று, பித்ருக்களின் வம்சாவளிகளைக் காத்திட, குறிப்பாகக் கலியுக இளைஞர்களுக்கு நல்வரங்களை அளிக்கின்றார்.
அக்கோலத்து அவ்வுருவே ஆமாகுகவே!
“எக்கோலத் தெவ்வுருவே
எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே ஆம்!
-என்பது அம்மையின் தேவ வாக்கு! அவரவர் விரும்பும் வடிவில் ஆண்டவன் தரிசனம்!
பூவுலகில் தெய்வ மூர்த்திகள், சித்தர்கள், மகரிஷிகள், யோகியர், ஞானியர் போன்றோர், மானுட வடிவில் வந்து ஆலயங்களில் பூஜிக்கின்றார்கள் என்று அறியும்போது நம் மனம் எவ்வளவு சந்தோஷப்படுகின்றது! இதே போல, எறும்புகள் குலத்திற்கும் அருளும் வகையில் சர்வேஸ்வரன் தேவாதி, தேவ, தெய்வ மூர்த்திகளை, சித்தர்களை, மாமுனிகளை எறும்பு வடிவில் அனுப்பி வைத்து, எறும்புகள் குலத்திற்கும் பரமானந்தத்தை அளிக்கின்றார்! என்னே இறைவனின் பெருங்கருணை!
இதே போல, பித்ருக்கள் லோகத்திற்கு ஸ்ரீமஹாவிஷ்ணு வருகின்ற போது, ஆறறிவிற்கும் அப்பாற்பட்ட ஞானப் பிரகாச அறிவைப் பூண்டு விளங்கும் பித்ருக்களின் வடிவில், அவர்களுக்கென விசேஷமாகத் தோற்றமளிக்கையில் நீத்தாரப்பர்கள் (பித்ருக்கள்) அவர்கள் பரமானந்தம் கொள்கின்றனர். சில தருணங்களில், திருமால், பித்ருக்களுக்கென விசேஷமான விஸ்வரூப தரிசனமும் தருவதும் உண்டு.
சத்சங்கக் கூட்டுப் பூஜையே சாசுவதமான பலன்களைத் தரும்!
ஜனவரி 2004 மாதத்தைய ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில், 2004 ஆண்டிற்கான கர்ம பரிபாலன நியதியாக, இவ்வாண்டில் கூட்டு மரணங்கள் (Group Karmic events) நிகழ இருப்பதைக் குறித்துள்ளோம். இதுவரையில் இந்த ஆண்டில் நிகழ்ந்துள்ள தீ விபத்து, வாகன விபத்து, பூகம்பம் போன்றவற்றில் நிகழ்ந்துள்ள கூட்டு மரணங்களில், கொத்துக் கொத்தாக உலகெங்கும் மொத்தமாகக் கூட்டாக இறந்தவர்களுடைய சாயைச் சரீரங்கள் நன்னிலை பெறுவதற்கும், அவர்களுடைய ஆத்ம சாந்திக்கும், வரும் தாரண ஆண்டில் மாளய பட்சத்தில் தினந்தோறும், அக்னிப் பூர்வமாக, தீர்த்தப் பூர்வமாக, கனிகளின் சாட்சிப் பூர்வமாக, பல வகைகளில் 15 தினங்களிலும் கூட்டுத் தர்ப்பணம், கூட்டுப் பூஜைகளை சாதி, மத, குல வேறுபாடின்றிப் பலருடன் சத்சங்கமாகச் சேர்ந்து நிகழ்த்தியாக வேண்டும்.
குறிப்பாக ஸ்ரீரங்கம், கும்பகோணம் போன்ற தலங்களில் சமீபத்தில் நிகழ்ந்த கூட்டுக் கர்ம மரணங்களுக்குப் பரிகாரப் பூர்வமாக, ஆன்மீக ரீதியாக சாதி, மத, இன பேதமின்றி நாம் ஆற்ற வேண்டிய இறைமயத் தியாகமயச் சேவையும் பூஜையும் யாதோ?
ஹரிஹரசுத ஜீவபல பூஜை
இந்த மாளயபட்சத்தின் 15 நாட்களிலும், ஒரு மரப் பலகையில் நடுவில் சிவலிங்கம் அல்லது திருஅண்ணாமலை, வலப்புறமாகப் பெருமாளுக்குரிய சங்கு, இடப்புறமாகச் சக்கரம் வரைந்து அல்லது கோலமிடுதல் வேண்டும். பலகையின் வலப்புறத்தில் சூரியக் கோலம், இடப்புறம் சந்திரக் கோலமிட்டு, சூரிய, சந்திர சாட்சியாகத் தர்ப்பணம் அளித்தலானது கூட்டாக மரணம் அடைந்தோர், ஆத்ம சாந்தத்திற்கான நல்வழிகளை அடைய உதவும்.
இளைஞர்கள் கனிந்த உள்ளத்துடன் மேற்கண்ட வகையிலான சாதி, மத பேதமின்றிப் பலரும் ஒன்று சேர்ந்து கூட்டாக அளிக்கின்ற காருண்யத் தர்ப்பண பூஜைக்குத் துணை புரிதலும் அருளார்ந்த சமுதாய நற்கடமையாகும்.
கூட்டுக் கர்ம வினைகள்
பல ஜீவன்களும் கூட்டாகத் துன்புறுதல், கூட்டாக மடிதல் என்பதான இத்தகையக் கூட்டுக் கர்ம வினைகள், பொதுவாக ஏனைய ஜீவன்களுக்கு உள்ள நியதி. ஆனால், கலியுகத்தில் சுயநலம், பேராசை, லஞ்சம், நாணயமின்மை, அசத்யம், ஆலயச் சொத்துக்களை அதர்மமாக அனுபவித்தல்/கைப்பற்றுதல், ஆலய நிலங்களில் இறைவனுக்குக் காணிக்கை அளிக்காது ஏமாற்றுதல், பிறரை ஏமாற்றி வாழ்தல், முறையற்ற காமத் தீவினைகள் போன்றவை பெருகி வருகின்றன. இதனால் பக்தி, நேர்மை, உண்மை, நாணயம், புனிதம் போன்ற தெய்வீகச் செல்வங்கள் பலவும் சமுதாயத்தில் மங்கி வருகின்றன.
மேலும் சுயநலமான அக்கிரமச் செயல்களால் வன்முறை, திருடு, கொள்ளை, உயிரைப் பறித்தல் போன்றவை விஞ்சி அதர்மச் சூழ்நிலையே பெருத்து வருகின்றது. இதனால்தான் பிற ஜீவன்களுக்கு உரிய கூட்டுக் கர்ம வினை விளைவுகள், மனித சமுதாயத்தையும் தொற்றிக் கொண்டு பல ஜீவன்கள் கூட்டாக பலியாகும் நிலை உள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியதே.
அக்னியை முறையாக வழிபடாத, மதியாத தோஷங்கள்!
மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான சூரியன், சந்திரன், அடுப்பு, சுவாசத்தில் உள்ள புனிதமான அக்னி சக்தி போன்ற நெருப்பு, ஒளி வகையிலானவை மிகவும் பவித்ரமாகப் போற்றித் துதித்துப் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், பீடி, சிகரெட், சுருட்டு போன்ற லாகிரி வஸ்துக்களில் புனிதமான அக்னியை எச்சில்படுத்தி, பிராண வாயுவும் உணவும் மட்டுமே செல்ல வேண்டிய சுவாசக் குழாய், உணவுக் குழாயில் நச்சுப் புகையைச் செலுத்துவதாலும், கை குவித்துப் போற்றி வணங்க வேண்டிய அக்னியை எச்சில் படுத்தி அலட்சியமாகப் புகையாக ஊதுவதாலும், பீடி, சிகரெட்டைக் காலால் மிதித்து அக்னி பகவானைக் கேவலப் படுத்துவதாலும் அக்னி சாபங்களே கலியுக மனித சமுதாயத்தை, குறிப்பாக இளைய சமுதாயத்தைப் பற்றிக் கொண்டு, அக்னி தோஷங்களாகி சமுதாய விளைவுகளாகக் கூட்டு மரணங்களுக்குக் காரணமாகவும் ஆகின்றது.
இளைஞர்கள் இத்தீவினைகளின் வலையில் சிக்காது தற்காத்துக் கொள்ள, மாளயபட்ச அறப் பணிகள் நன்கு உதவும். மனித சமுதாயம் உலகெங்கும் ஆற்றும் அக்னிக் குற்றங்களைக் களையவே, இவற்றை ஓரளவேனும் நிவர்த்தி செய்திடவே, இவ்வாண்டில் மாளய பட்சத்தில் கூட்டு அக்னிகள் அடங்கிய வழிபாடுகள், கூட்டுத் திரவியங்களின் சாட்சியாகத் தர்ப்பணம், திவசம் மற்றும் அக்னி வகைப் பூஜைகளை ஆற்றிட வேண்டும். இந்த ஆண்டிற்கும் மட்டுமல்லாமல் தம்முடைய வருங்காலச் சந்ததியினரும், தீய வழக்கங்களுக்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்ளவும், மேற்கண்ட அக்னி வகைத் தோஷங்களைச் சேர்த்துக் கொள்ளாமல் இருக்கவும், தாரண ஆண்டின மாளய பட்ச பூஜைகள் உதவுகின்றன.
28.9.2004 மாலை 6.40க்குப் பௌர்ணமித் திதி நிறைவுற்று, மாளய பட்சப் பிரதமைத் திதி துவங்குகின்றது. பொதுவாக, காலையில் தர்ப்பணப் பூஜைகளை ஆற்றுவதே உத்தமமானது.
பௌர்ணமித் திதியானது மாலை 6.39 மணிக்கு முடிவடைந்து மாளய பட்சம் எனப்படும் மூதாதையர் முக்கூட்டு உற்சவம் 6.40 மணிக்குத் தொடங்குகின்றது. இது பூலோக மணிக் கணக்காக இருந்தாலும் பித்ரு மண்டலத்தின் பிரம்மோற்சவ ஆராதனை தொடக்கக் காலத்தையும் குறிப்பதாகும். மாலை சந்தியா வேளைக்குப் பிறகு மாளய பட்சம் தொடங்குவதாக இருந்தாலும், பொதுவாக மாலை நேரத்தில் தர்ப்பணம் அளிப்பது கிடையாது. மேலும் மாளயபட்சம் என்பது நாள், கிழமையை விட, திதியை அனுசரித்து வருவதாகும்.
எனினும் இன்றே பிரதமைத் திதித் தொடக்கத்திலேயே பித்ரு மண்டலங்களில் பிரம்மோற்சவ கொடிக் கம்ப ஆராதனை நிகழ்வதால், இல்லத்தில் மரப்படி, அல்லது வெண்கலப் படியில் இரண்டு கோலாட்டக் குச்சிகளை ஊன்றி, கொடிக் கம்பமாக பாவனை செய்து, படிக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு கோலாட்டக் குச்சிகளை நடுவில் சொருகி மாத்ரு மண்டல, பித்ரு மண்டல, கொடிக் கம்ப ஸ்தூபிகளாகப் பாவனை செய்து, படியின் இருபுறமும் சுத்தமான நல்லெண்ணையில் விளக்கு தீபம் ஏற்றி
“மாளய பிரம்மோற்சவ மதுசூதன மங்களா
மங்களம் மந்திரம் மங்களம் மாதவ மங்களம்
வாதூல மங்களம் வர வர மங்களம்!”
என்று 108 முறை ஓதி குறைந்தது 12 முதல் 24 முறையாவது சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கிட வேண்டும்.
இளைஞர்கள் மேற்கண்ட மாளய பட்சத் துவக்க நேரத்தில் இருந்து தொடங்கி குறைந்தது 12 ஆலயங்களில் கொடிக்கம்ப ஆலய தரிசனத்தைப் பெறுதல் வேண்டும்.
ஆலய கொடிக் கம்பத்தின் உச்சியில் “விஸ்வ நந்தீஸ்வரர்” அமர்ந்திருப்பார். பலரும் இதனைக் கவனித்திருக்க மாட்டார்கள். ஆலயத்தின் ஒரு ஓரத்தில் நின்றோ அமர்ந்தோ கொடிக்கம்ப விஸ்வ நந்தீஸ்வரரைத் தியானித்து வணங்குதல் வேண்டும். இன்று ஒவ்வொரு மூர்த்தியின் மண்டலத்திலும் அந்தந்த தெய்வ மூர்த்தியின் மண்டலத்திலும் அந்தந்த தெய்வ மூர்த்தியின் விஸ்வரூப தரிசனம் கிட்டும். ஆதலால் இன்று நின்று, இருந்து, கிடந்து, நடந்த ஆகிய நான்கு நிலைப் பெருமாள் மூர்த்திகளின் தரிசனத்தைப் பெறுதல் இளைஞர்களுக்கு நல்ல மனோதிடத்தைத் தந்திடும்.
ஆதிசங்கரர், விவேகானந்தர், திருஞானசம்பந்தர், ஸ்ரீமகா அவதூது பாபா போன்ற இளம் பூரணச் சித்தர்கள், மகான்கள், யோகியர்களின் சரிதைகளை இன்று இளைஞர்கள் படித்துத் தங்களுக்குள் கலந்து உரையாடுதல் நல்ல சாந்த கிரணங்களைப் பரப்பிட உதவும் சேவையாகும்.
28.9.2004ல் தொடங்கும் மாளயபட்ச முதல் திதி பூராக்னி தேவதைகளுக்கு உரித்தானதாகும். அதாவது, இன்று பூவுலகில் எங்கு ஹோமம், அக்னி பூஜை, ஊதுவத்தி, சாம்பிராணி தூபம், விளக்கு ஜோதி என எந்த அக்னி பூர்வத்திலும் பூராக்னி தேவதைகள் தாம் முதல் அக்னியைத் தோன்றுவிக்கின்றனர்.
29.9.2004
இன்று ஆலயத்திலோ, அல்லது வீட்டிலோ, குறைந்தது 21 செங்கற்களை வைத்து (ஆலயமாயின் 72 செங்கற்கள்) ஹோம குண்டத்தை, “பூ” என்ற தமிழ் எழுத்தின் வடிவில் அமைத்து வைத்திட வேண்டும். இதன் இருபுறமும் மேடையில் இரண்டு புதுப் பானைகளை வைத்து, வெட்டி வேர் சேர்ந்த நன்னீர் வைத்து மூடி, இரு பானைகளின் முன் அமர்ந்தும் இதன் முன் அமர்ந்து 1008 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்த பின்னர் இதில் ஹோம பூஜை ஆற்றிட வேண்டும்.
ஹோமம் நடக்கும் போதே அக்னி, ஜலதேவதா மூர்த்தி சாட்சியாகத் தர்ப்பணம் அளித்திட வேண்டும். ஆலயத் தீர்த்தம், குளம், சுனை முன் அமர்ந்தும் தர்ப்பணம் அளித்திடலாம். இளைஞர்கள் இன்று பசு, கன்றுகளுக்கு நீராட்டி, மஞ்சள் குங்குமம் வைத்து வலம் வந்திட, நாட்டின் இளைய சமுதாயம் தறிகெட்டு அலைந்திடாது, நல்புத்தியுடன் வாழ்ந்திட, ச்ராவணப் பித்ரு மண்டல மூர்த்திகள் அருள்கின்றனர்.
எருக்கு, பலா சமித்துகள் மிகவும் முக்கியமானவை, ஹோம குண்ட சாட்சியாக, ஹோம குண்டத்தின் முன் தர்ப்பணம் அளிப்பதுடன், ஹோமத்தில் முழு அச்சு வெல்லங்களையும் ஆஹூதியாக அளித்திட வேண்டும். இதனால் தீ விபத்தில் இறந்தோர்க்குத் தக்க தாக சாந்தியாகவும் அமையும்.
ஆலய சுத்தியே மனசுத்தியைத் தரும்!
இளைஞர்கள் திருவள்ளூர், ராமேஸ்வரம், பவானி போன்ற பித்ரு முக்தித் தர்ப்பணத் தலங்களில் இடுப்பில் வேட்டி, மேல் துண்டு மட்டும் அணிந்து, ஆலயத்தில் கீழே கிடக்கும் தேங்காய் மட்டை, வாழைப்பழத் தோல் போன்றவற்றை எடுத்துச் சுத்திகரித்தலால் மனம் நன்கு தூய்மை பெறும். பீடி, சிகரெட், மது போன்றவற்றில் மனம் நாட்டம் அடையாது, இத்தகைய சேவைகளை ஆற்றுவோர்க்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு மனப் புனிதம் கிட்டும் நல்வழி முறைகளை வாமன கணப் பித்ருக்கள் அளித்து உதவுகின்றனர்.
ஏழ்மை நிலையில் உள்ள ஊனமுற்றோர்க்கு இன்று வேண்டிய உதவிகளை ஆற்றிடுக! எவருக்கும் பணமாக அளிக்காதீர்கள்! ஊனமுற்றோரையும், வறுமையால் ஊரைச் சுற்றி, ஆலயத்தைச் சுற்றி, சுற்றி வருபவர்களையும் அமர வைத்துத் தர்ப்பணம் அளிக்க உதவிடுக! இதற்காக நீர், செம்பு, தர்பை, பவித்ரம், எள் அனைத்தையும் அளித்தும், தர்ப்பணம் பற்றி எதுவுமே அறியாதோரையும் தர்ப்பணம் ஆற்றிடச் செய்தலும் மகத்தான சமுதாய அறப்பணியாகும். இளைஞர்கள் நல்ல மன அமைதியைப் பெற இது உதவும்.
30.9.2004
இன்று காலையில் இருந்து சூரிய, சந்திர சாட்சியாகத் தர்ப்பணம், இன்றைய ஹோமத்தில் குறைந்தது 72 ஆஹூதிகளை அக்னியில் அளித்து, 72 தெய்வங்களின் பெயர்களை ஓதி ஹோம பூஜை ஆற்றிடுக!
தந்தை வகையினருக்குத் தர்ப்பணம்
இன்று 21 இளநீர்களைச் சீவி வைத்து இளநீர் தேவதைகளை சாட்சியாகக் கொண்டு தந்தை வகையினருக்குத் தர்ப்பணம், மாளய பட்சத்தின் இத்திதி சன்னியாசிகளுக்கும் உத்தம பிரம்மசாரிகளுக்கும், இளைஞர்களுக்கும் நன்னெறி அமைவதற்கு மிகவும் பயன்படுவதாகும். பொதுவாக அனைத்துப் பழங்களையும் “முதிர்ந்த துறவிகள்” என்று குறிப்பிடுவார்கள்.
தாய் வகையினருக்குத் தர்ப்பணம்
இன்று 21 வகைப் பழங்களை ஆலயத்திலோ, இல்லத்திலோ, ஆற்றங்கரையிலோ, தீர்த்தக் கரையிலோ வட்டமாக அடுக்கி வைத்து இவற்றின் நடுவில் அமர்ந்து கொண்டு
“பழப்பாரப்பா! பழப்பாரப்பா
பழுத்த பூதன மூத்தாரப்பா!
விழுத்த சாதன வரதாரப்பா!
வழுத்தும் வரநிலை தருவாயப்பா!”
-என்று ஓதித் தர்ப்பணம் அளித்திடல் வேண்டும். பழங்களை, பழுத்த சுமங்கலிகளாக பாவனை செய்து, அவற்றிற்கு (சிலவற்றிற்கேனும்) இயன்றால் தங்க மாங்கல்யம் அல்லது வெள்ளி மாங்கல்யம் அல்லது மாங்கல்யச் சரடு அணிவித்து, புடவை, ரவிக்கைத் துணி சார்த்தி, மஞ்சள், குங்குமம் வைத்து, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்துப் படைத்து, தன்னைத் தானே ஆத்மப் பிரதட்சிணமும் செய்து கொண்டு பழங்களையும் சுற்றி வந்து வணங்கி, பழங்களின் சாட்சியாய்த் தர்ப்பணம் அளித்த பின் இளைஞர்கள் பல ஆலயங்களுக்கும் நெடுந்தூரம், நடந்து சென்று ஏழ்மை, உடல் இயலாமை, முதுமை, நோய், ஊனம், குருடு போன்ற காரணங்களால் எழுந்து வர இயலாது இருக்கும் ஏழைகளுக்கு அளித்துச் சேவை ஆற்றிட வேண்டும்.
இதனால் முதியோர்களின் ஆசி, உடலால் இயலாதவர்களின் மனதால் ஆசி, மூத்தாரப்பர்களாகிய ஆதித்ய மூதாதையர்களின் ஆசியும் நன்கு கனிந்து, இளைஞர்களுக்கு வேண்டுகின்ற கல்வி அறிவும், வேண்டுகின்ற நல்ல பணியும் கிட்டிட நல்வாய்ப்புகளும் கூடி வரும்.
மொத்தத்தில் பழங்களின் சாட்சியாகத் தர்ப்பணம் செய்யும் போதும், நற்காரியங்களை ஆற்றும் போதும் பழங்கள் தோன்றிய தூய மரங்கள் அவை எங்கிருந்தாலும் பெற்ற தாய் போல இருந்த இடத்தில் இருந்தே அனைத்து இலைகள், கிளைகள், தண்டுகள், வேர்கள் மூலமாக ஆசிகளை அளிப்பார்கள்.
குறிப்பாக துறவியர்கள், சன்னியாசிகள், இல்லறத்தைத் துறந்தவர்கள், இந்தக் கனி தர்மத்தை இன்று கட்டாயமாக கடைபிடித்தாக வேண்டும்.
சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் |
பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும் ஆதிமூலப் பீடமூர்த்தியாம் ஸ்ரீபைரவேஸ்வர லிங்கம் அருளும் மிகவும் அபூர்வமான தலம்! பைரவ தோஷங்களுக்கு அவ்வளவு எளிதில் பரிகாரம் பெற இயலாது. ஆனால் குருவருளால் அனைத்து விதமான பைரவ தோஷங்களுக்கும் நிவர்த்திகளைப் பெற்றுத் தரவல்ல அதியற்புதத் தலம்!
வாழ்வில் , தொழிலில் எந்த முன்னேற்றமும் இல்லாது இருப்பது பலத்த பைரவ தோஷங்களால் தாம்.
சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயம், கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள சோழபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயம் அருகில், பலரும் அறியாத வகையில், மேற்கண்ட பைரவர் ஆலயம், பலத்த இடிபாடுகளின் ஊடே பதிந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து (பஸ் எண் 34, எண் 44) அணைக்கரை, திருப்பனந்தாள், பந்தணைநல்லூர் செல்லும் பஸ்கள் யாவும் செல்வது சோழபுரம் வழியாகும். சென்னை, விழுப்புரத்தில் இருந்து வரும் பஸ்கள் சோழபுரம் வழியாகக் கும்பகோணத்தை அடையும்.
ஸ்ரீசிவபூரணி அம்பாள்
சோழபுரம்
சோழபுரம் ஸ்ரீசிவபூரணி சமேத கைலாசநாதர் சிவாலயம் அருகே மிகவும் சிதிலமடைந்த நிலையில் ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயம் உள்ளது. பல ஆண்டுகளாக பூஜையே இல்லாமல் போய் விட்டமையால் பலருக்கும் இதைப் பற்றித் தெரியவில்லை! பழங்காலத்து “பைரவர்” கோயில் என்று சொன்னால்தான் ஒரு சிலருக்குத் தெரிகின்றது.
முற்காலத்தில் மிகப் பெரிய ஆலய வளாகத்துடன் பொலிந்த சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் சிவாலயம், தற்போது இடிபாடுகளுடன், மூலத்தானத்திற்குக் கதவு கூட இல்லாது, பூஜைகள் இல்லாது இருப்பது வேதனைக்குரியது, இந்த இதழின் பின்பக்க அட்டைப் படத்தைப் பார்த்தாலே தெரியும், எவருக்குமே கண்கள் கலங்குமளவிற்கு மிகவும் ஜீரணமாகிச் சிதிலமடைந்து உள்ள ஆலயம் இது!
இதை விட மிகவும் தூளாகிக் கிடந்த (கும்பகோணம் – கஞ்சனூர் இடையே துகில் – திரைலோகி அருகில் உள்ள) கீழ்சூரியமூலை கிராம ஸ்ரீசூர்யகோடீஸ்வரர் ஆலயம் கடந்த ஆண்டில் கும்பாபிஷேக நிலை கொண்டது அரிய இறைப் பெருங்கருணையால் தாம்!
சோழபுரத்தின் பழமையான இந்த “பைரவர்” ஆலயமும் நன்கு சீர் பெற்று, குடமுழுக்கு உற்சவம் கண்டு, பண்டைய யுகங்களில் விளங்கியது போல, இப்பூவுலகின் மகத்தான பைரவ ஆலயமாக மீண்டும் பிரகாசித்து விளங்கிட, இனியேனும் பக்த கோடிகள் நன்கு கடுமையாக உழைத்து அரும்பாடுபட வேண்டும்.
பைரவ தோஷங்களைக் களையும் பைரவபுரம்!
ஒரு யுகத்தில் ஐந்து பெரிய ஆலயங்களுடன் துலங்கிய சோழபுரம், பைரவேஸ்வரம், பைரவபுரம் போன்ற “பைரவப்” பெயர்களையும் பெற்றிருந்தது.
பொதுவாக, பைரவ தோஷங்களை அகற்றுவது மிக மிகக் கடினமே! உடலெங்கும் கருப்பு நிறம் மட்டுமே கொண்டு வேறு எந்த நிறத்தையும் கொண்டிடாத நாய்களுக்கு “கருத்தபைரீ” என்ற பெயருண்டு. இவ்வகை நாய்கள் மிகவும் அபூர்வமானவை! இதன் தரிசனமும் நல்ல சகுணங்களைக் கொண்டதாகும். இதற்கு உணவிட்டு வருதலால் பலவிதமான பைரவ தோஷங்களையும் எளிதில் போக்கிடலாம்.
கலியுக மனித சமுதாயம் உலகெங்கும் பலத்த பைரவ சாபங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. தனி மனிதனுக்கு பைரவ சாபம் ஏற்படுவது போல, மனித சமுதாயத்திற்கும் பலத்த பைரவ சாபங்கள் ஏற்பட்டால் சமுதாயத்தில் பல தீவினைகள், வன்முறைகள், விபத்துகள், நஷ்டங்கள் ஏற்படும்.
ஸ்ரீபைரவேஸ்வரர் சோழபுரம்
கலியுக பைரவ தோஷக் காரணங்கள்
இவை போன்ற இன்னமும் பல சமுதாயக் குற்றங்களும் பலத்த பைரவ சாபங்களுக்குக் காரணமாகின்றன!
பைரவ தோஷத் துன்பங்கள்
இவற்றால் ஏற்படும் கீழ்க்கண்ட வகைத் துன்பங்களோ மிகவும் வேதனை தருபவையாகும்.
Stray dogs capture என்ற பெயரில் தெரு நாய்களை, வதைத்து, அடித்து, சுட்டு, நெருப்பில் வதைத்து, மின்சாரம் பாய்ச்சிச் சாகடித்தல், உல்லாசப் பயணத்தில் நாயை அழைத்துச் சென்று, மறந்து போய் காரில் வைத்துப் பூட்டி விட்டு அது மூச்சுத் திணறி இறத்தல் – இவ்விரண்டும் கொடிய பைரவ தோஷப் பாவங்களாகும். இது அறியாமலோ, அறிந்தோ ஒருவர் வாழ்க்கையில் ஏற்பட்டுவிட்டால், இவற்றிற்குப் பிராயச்சித்தம் பெறுதல் மிக மிகக் கடினமே! தக்க சற்குருவை நாடி முறையான பரிகார வழிகளை நாடிட வேண்டும்.
ஓரளவு பரிகாரமாக இறந்த நாயின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி அஷ்டமி, வியாழன், குளிகை நேரத்தில் நாய்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகளைச் செய்து தர வேண்டும்.
இளவயதிலோ, நடுவயதிலோ கணவனை அல்லது மனைவியை இழத்தல், குழந்தையைப் பெற்றவுடன் தாய் இறத்தல், தந்தை இறத்தல், ஒரே விபத்தில், ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று குழந்தைகளை விபத்தில் இழப்பது, நீரில் மூழ்கி இறத்தல் போன்றவை யாவும் பைரவ சாபத்தால், தோஷத்தால் ஏற்படுவதே.
இவ்வாறு பூவுலகில் எவ்வளவு வகையான பைரவ தோஷங்கள் உள்ளனவோ, அவை அனைத்தையும் தீர்க்க வல்ல சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயமே, தற்போது ஒரு சிறிதும் பூஜையின்றி மிகவும் உடைந்து போன கட்டிட அமைப்புகளுடன் கருவறை மூலத்தானமே இடிந்து விழும் நிலையில் உள்ள நிலை மிகவும் வேதனையானது.
பூமிக்கே உரித்தான ஆதிமூல பைரவேஸ்வரர்
பக்த கோடிகள் அனைவரும் ஒன்று கூடி, பூவுலகிற்கே பைரவ சக்திகளை அளிக்கும் சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயத் திருப்பணிகளை உடனடியாக ஏற்று நடத்தி, பாரதத்தையும், உலக நாடுகளையும் பீடித்திருக்கும் ஆயிரக்கணக்கான பைரவ சாபங்களுக்கும் நல்ல முழுமையான நிவர்த்தி காண வேண்டும்.
தேய்பிறை அஷ்டமிப் பூஜை நாளில் இங்கு மகத்தான அளவில் நாள் முழுதும் 24 மணி நேரமும், 60 நாழிகையும் அகண்டாகார ஹோம பூஜையாக, அறுபத்து நான்கு பைரவர்களுக்குமான 64 பிரும்மாண்டமான யாகசாலைகளுடன் பொலிந்த சோழபுரம் பைரவ பூமி, இன்று கவனிப்பாரற்றுக் கிடப்பதே நம் பாரத (மானுட) சமுதாயத்தைப் பீடித்திருக்கும் கொடிய பைரவ சாபத்தைக் குறிக்கின்றது. மேற்கண்ட பல பைரவ சாபங்கள் அகன்றிட, இங்கு அஷ்டமித் திதி, பைரவ சக்திகள் நிறைந்த வியாழன், மிருகசீரிஷம், திருவாதிரை, மூலம் நாட்களிலும், குளிகை நேரத்திலும் பைரவ பூஜைகளை ஆற்றி வருதல் வேண்டும்.
ஸ்ரீபைரவேஸ்வரி அம்பாள்
சோழபுரம்
தற்போது ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயத்தில் பூஜைகளே இல்லாமையால் பக்தர்கள், தக்க அனுமதியுடன் பொது மக்களின் துணையுடன் சிறு பூஜைக் குழு அமைத்து, முதலில் சிறு அளவில் பூஜைகளைத் தொடங்கி குளிகை நேர பூஜை, சனிக்கிழமை பைரவ பூஜை, அஷ்டமித் திதி பூஜை என்பதாகப் படிப்படியாக விருத்தி செய்து, கும்பாபிஷேகத் திருப்பணிகளைத் தொடங்கிட வேண்டும். தற்போது இங்கு அம்பாள் திருஉரு அமையவில்லை. தக்க சான்றோர்கள் மூலமாக இதற்கான தேவ ஆணை கிட்டும். உடனடியாக ஆலயத் திருப்பணிகளைத் துவங்குதல் நன்று.
இவ்வாலயத்தில் பின்னற் பிறையல் என்ற வகையிலான விசிறி தட்டு அகல் போன்ற அபூர்வமான தீபப் பிறைகள் ஒரு காலத்தில் இருந்தன. இதில் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு இடைவிடாது தீபம் ஏற்றி வந்தால், எத்தகைய நற்காரியங்களும் நன்கு சித்தி பெறும். அஷ்ட நாகங்களும் எட்டுத் திக்குகளிலும் நின்று நடனமாடி ஸ்ரீபைரவேஸ்வரரைப் பூஜித்தத் திருத்தலம். நாக தோஷங்களை நீக்கும் தலம்.
64 பைரவ மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து எட்டுத் திக்குகளிலும் அமர்ந்து பூஜித்து அருளிய ஸ்ரீபைரவேஸ்வர சிவலிங்கம்! ஸ்ரீபைரவேஸ்வரர் என்ற பெயர் தாங்கி பைரவ மூர்த்தி, லிங்க வடிவில் அமைகின்ற தெய்வத் தலம். பைரவ மஹரிஷி தூல, சூக்கும வடிவுகளில் தினமும் வழிபடும் அற்புதத் தலம். பைரவ யோகத்தில் தலைசிறந்த சித்புருஷரான பாடகச்சேரி ஸ்ரீராமலிங்க சுவாமிகள் பைரவ யோக நிலையில் வழிபட்ட தலம்! 1008 வகையான பைரவ சித்திகள் கைவரப் பெற வல்ல திருத்தலம்.
ஜாதி, இன, குல, பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் சத்சங்கமாய், சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வர ஆலயத் திருப்பணிகளை நன்கு ஏற்று நடத்திட வேண்டும். இங்கு எவர் மூலம் ஸ்ரீபைரவேஸ்வரி அம்பாள் தோன்றுதல் ஆக வேண்டுமோ, அத்தருணத்தில் இறையருளால் நடந்தேறும்.
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும் ஆதிமூலப் பீடமே சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர்! 64 பைரவ மூர்த்தங்களும் உற்பவித்த அற்புத பைரவ பூமி!
பைரவ லோக சக்திகள் பூமியில் பூரிக்கும் திருத்தலம்! பைரவ சக்தி நீரோட்டங்களை 64 துறைகளாகப் பூவுலகிற்குப் பிரித்தளிக்கும் பைரவத் தளித்தலம்!
ஸ்ரீஅகோரவீரபத்திரர்
சோழபுரம்
ஸ்ரீபைரவேஸ்வரர் என்ற நாமம் தாங்கிய சிவலிங்கத்தைக் காணுதல் அரிதிலும் அரிதாம். பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியாக பைரவேஸ்வராகச் சர்வேஸ்வரர் தோன்றிய தலம் இதுவே! வடுக உபாசனை என்று போற்றுப் பெறும் பைரவ உபாசனை வழிபாடு வராஹ உபாசனை வழிபாடு போல மிகவும் கடினமானது, தக்க சற்குரு மூலம் அறிந்து கடைபிடிக்கப் பெற்றால் உத்தம நிலைகளைத் தரவல்லது. பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ உபாசகச் சித்தர்களும், மகரிஷிகளும் யோகியரும் ஒவ்வொரு அஷ்டமித் திதியிலும் தூல, துரீய வடிவுகளில் பூஜிக்கும் அற்புதத் தலமிதுவே! பைரவ மஹரிஷி, வடுகச் சித்தர், பைரவிணி, மஹரிஷினி, கரலாக் கட்டைச் சித்தர் போன்ற உத்தம பைரவ உபாசகர்கள் பைரவ தண்டத்தைச் சுமந்து பூஜித்து குளிகை நேர பைரவ பூஜையைப் பூவுலக ஜீவன்களுக்கென அளித்த உத்தம பைரவத் தலமும் இதுவே! கரலாக் கட்டை என்று நமக்குப் புரிவதற்காக, உடற்பயிற்சி சாதன மரக் கட்டையைக் குறித்தாலும் தண்டபாணித் தண்டம், பைரவ உருக்கை, மரத்தோளம் என்ற பல பெயர்கள் இதற்கு உண்டு. பைரவ தண்டத்தைத் தோளில் தாங்கியவாறு இங்கு வலம் வருதலால் சந்தான தோஷம், செவ்வாய் தோஷம், பித்ரு தோஷங்கள், பித்ரு கடன்களால் பாதிக்கப்பட்டுப் பல ஆண்டுகளாகச் சற்றும் முன்னேற்றம் அடையாமல் இருக்கும் தொழில், குடும்பம் முன்னேற வழி பிறக்கும்.
லங்கோடு எனப்படும் பழங்கால இடுப்பு வஸ்திரம் மட்டும் அணிந்து ஆண்கள் இந்தத் தண்டத்தைச் சுமந்து 64 முறை ஆலய வலம் வந்து இந்த மர தண்டத்தை வீட்டில் வைத்துப் பூஜிப்பதால் பில்லி, சூனிய, ஏவல், மந்திர தோஷங்கள் தாக்காது தற்காத்துக் கொள்ளலாம். பூஜையறையில் இந்த பைரவ தண்டத்தை வைத்திருந்து தினமும் சந்தனம், மஞ்சள், குங்குமம், செந்தூரம், திருநீர் ஆகிய பஞ்ச பைரவத் திலகங்களை இட்டு வழிபட்டு சனி, அஷ்டமி, தேய்பிறை அஷ்டமியில் இந்த ஆலயத்திற்கு எடுத்து வந்து 64 முறை வலம் வந்து பூஜித்து மீண்டும் இல்லத்திற்கு எடுத்துச் சென்று பூஜித்தலே விபீஷண தண்ட போதம் எனும் பூஜையாகும். தற்போது எவ்விதப் பூஜையும் இல்லாது அடர்ந்த மரஞ்செடி கொடிகளுடன் மிகவும் சிதிலமடைந்து கிடக்கும் இந்த ஆலயத்திற்கான திருப்பணிகளை உடனடியாக ஏற்று நடத்துவது பக்த கோடிகளின் முதற்கடமையாகும்.
பூஜை முறைகளுக்கு நான்கு திசைகள் உண்டு. மனிதன் வசிப்பதற்கும், யாத்திரை செல்வதற்கும் எட்டுத் திசைகள் உண்டு. ஆதிமூல வாஸ்து பகவானுடைய பூமாந்திர லோகத்தில் பதினாறு திசைகள் உண்டு. இவற்றில் எட்டு மனிதர்களுடைய தரிசனத்திற்காகவும், ஏனைய எட்டு தேவ தரிசனத்திற்காகவும் மறைக்கப் பட்டுள்ளன. தீர்த்த சக்திகளுக்கும், தண்ணீரில் வாழும் ஜீவன்களுக்கும், 24 வகைத் திசைகள் உண்டு. அறிந்தோ அறியாமலோ இவைதாம் தற்போதைய பூமியின் ஒரு நாள் நேரக் கணக்கான 24 மணி நேரமாக உள்ளது, உண்மையில் கடல் பயணத்தின் மூலமாகத்தான், இரவு, பகல் நேரம் தெரியாமையால், 24 திசைகளிலும் சுழன்று, சிக்குண்டு, பரிதவித்து 24 மணி நேரக் கணக்கினை, திசைகளை மனிதன் வழக்கில் கொண்டு வந்தான்.
ஸ்ரீதழுவக் குழைந்த நாயகி
சோழபுரம்
பைரவ பூமியாக உள்ள தலங்களில் 64 வகைத் திசைகள் உண்டு. இவற்றைத் தக்க சற்குரு மூலமாக வாஸ்து யந்த்ரமாக வரைந்தால் அற்புதமான வாஸ்து பைரவ யந்திரச் சக்கரம் கிட்டும். இவை பூமியிலும், பூமிக்கு அடியிலும், தலைக்கு மேல் விண்ணுலகம் எட்டியதற்குமாக மூன்றிலும், இவ்வகையான 64 திசைகள் அமைகின்றன. உத்தம பைரவ பூமியான சோழபுரத்தில் ஒரு காலத்தில் பிரம்மண்டமாக விளங்கிய சிவாலயத்தில் 64 திக்குகளுக்கான பலி பீடங்கள் துலங்கி தற்போது பூமியில் மறைந்துள்ளன. இதே போல முற்காலச் சோழபுர ஸ்ரீபைரவேஸ்வர ஆலய விமானத்தில் 64 பைரவ கலசங்கள் விளங்கின.
பைரவ தண்ட பூஜை |
ஸ்ரீபைரவ மூர்த்தி தாங்கி இருப்பது “பைரவ தண்டம்” ஆகும். பைரவ கதாயுதம் என்றும் கூறுவர். கரலாக் கட்டை போல் இருப்பதாகும். தண்டபாணித் தண்டம், பைரவ உருக்கை, மரத்தோளம் போன்ற பெயர்களும் உண்டு. இங்கு படத்தில், நாம் காண்பது சிவகங்கை அருகே திருமலைச் சிவாலயத்தில் ஸ்ரீபைரவ மூர்த்தி தாங்கியுள்ள பைரவ தண்டம் ஆகும். பைரவருக்குக் காணிக்கையாகக் குறித்த மரங்களால் ஆன தண்டங்களை நேர்த்தியாக அளிப்பதால், திருஷ்டி தோஷங்களால், தீவினை மந்திரங்களால் விளையும் தீய விளைவுகளை அறவே போக்கிடலாம். பலவிதமான பைரவ தோஷங்கள், சந்தான தோஷம், செவ்வாய் தோஷம், பித்ரு தோஷங்கள் தீர்ந்திட, தேக்கு மரத்தில் பைரவ தண்டம் செய்து சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயத்தில் ஆண் சந்ததியினர், குடும்பத் தலைவர்கள் இதனைத் தோளில் தாங்கியவாறு வலம் வந்து ஸ்ரீபைரவேஸ்வரரை வழிபட்டு வருதல் வேண்டும். மேலும், படையல், திவசம், தர்ப்பணம் போன்ற காரியங்களையும் முறையாக ஆற்றி வருதல் வேண்டும். இதனால் பல்லாண்டுகளாக ஏற்படும் பணக் கடன்களை முறையாக நீக்கிட உதவும். பல ஆண்டுகளாகச் சற்றும் முன்னேற்றம் அடையாமல் இருக்கும் தொழில், குடும்பம் முன்னேறவும் வழிபிறக்கும்.
பழங்காலத்திய லங்கோடு எனப்படும் இடுப்பு வஸ்திரம் மட்டும் அணிந்து, ஆண்கள் தேக்கு மரத்தாலான இந்த மர தண்டத்தைச் சுமந்து, சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயத்தில் 64 முறை வலம் வந்து வழிபட்டு, பிறகு இல்லத்திற்கு எடுத்துச் சென்று வீட்டில் வைத்துப் பூஜிப்பதால், பில்லி, சூனிய, ஏவல், மந்திர தோஷங்கள் தாக்காது தற்காத்துக் கொள்ளலாம். பூஜையறையில் இந்த பைரவ தண்டத்தை வைத்திருந்து தினமும் சந்தனம், மஞ்சள், குங்குமம், செந்தூரம், திருநீறு ஆகிய பஞ்ச பைரவத் திலகங்களை இட்டு வழிபட்டு, சனி, அஷ்டமி, தேய்பிறை அஷ்டமியில் இந்த ஆலயத்திற்கு அவ்வப்போது எடுத்து வந்து 64 முறை வலம் வந்து பூஜித்தலே விபீட போத வைரவ பூஜை ஆகும். ஸ்ரீவிபீஷண மஹாராஜா அனைத்து அசுரர்கள் தந்த துன்பங்களுக்கு இடையேயும் இலங்கையில் அற்புதச் சிவ பூஜைகளை ஆற்ற உதவியது இந்த பைரவ தண்ட பூஜைப் பலன்களாலேயே ஆகும். இத்தகைய போத பைரவ தண்ட பூஜையே அவரை யாங்கணும் காத்தது. விபீஷணர் பூஜித்த போத பைரவ தண்டம் இன்றும் ஸ்ரீலங்காவில் பைரவ ஆலயம் ஒன்றில் மறைந்துள்ளது.
விநாயகச் சதுர்த்தி |
இளைஞர்களின் நல்விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் விநாயகச் சதுர்த்தி, பிள்ளையாருக்குப் பூணூல் அணிவிப்பதும் ஒரு நேர்த்தி இறைப் பணியே!
ஸ்ரீவிநாயக மூர்த்தி பூலோக ஜீவன்களுக்கு அருளிட அவதாரம் கொண்ட தினமே விநாயகர் சதுர்த்தித் தினமாகும். அப்படியானால் விநாயகருக்கு முந்தியே சதுர்த்தித் திதி தோன்றியதா என்று மனதினுள் கேள்வி எழும்!
விநாயகர் தோற்றத்தின் காலமானது மனித அறிவிற்கு அப்பாற்பட்ட தெய்வீக விஷயமாகும். கடவுளின் தோற்றங்கள் மனிதப் பகுத்தறிவால் ஒரு போதும் உணர்ந்தறிய இயலாதது. ஏனென்றால், பிரபஞ்சத்தின் உள்ளும் உடலுமாக, அனைத்திலும் ஐக்கியமாகி இருக்கின்ற இறைவனுக்குத் தோற்றம் ஏது? முடிவு ஏது?
கலியுக மனிதன் பிறப்பு, இறப்பு என்று இரு கடிவாளங்களுக்குள் வாழ்வதுடன், அனைத்தையும் கண்ணால் கண்டு, செயல்படுவதாகவுமே வாழ்கின்றான். இதனால்தான் இறை அவதாரத்திற்கான தோற்றத்தை, தனக்குப் புரியும் வகையில் ஒரு காலக்கணக்கை வகுத்து கற்பித்துக் கொண்டும் வாழ்கின்றான். குருகுல வாசங்கள் மூலமாக, செவி வழியாகக் கேட்டுக் கேட்டு, மனித அறிவு, பண்டைய யுகங்களில் விரிந்து பரந்தமையால், ஆங்கே நம்பிக்கை நட்சத்திரம் சுடர் விட்டுப் பிரகாசித்தது, சமுதாயமும் சாந்தமாக இருந்தது.
ஸ்ரீஅகத்தியபிரான் திருக்கோழம்பம்
விஞ்ஞானமும் அஞ்ஞானமும்
ஆனால் காலப் போக்கில் குருகுலவாசக் கல்வி மறைந்து, செவி வழிப் புலனாகும் மாமறை அறிவு மறையலாயிற்று! அறிவானது, எழுத்து வடிவில் ஓலைச் சுவடி, பிறகு புத்தக நிலைக்குத் தற்போது வந்து விட்டமையால் ஒருவரைப் பரிபூரணமாக நம்பிப் பெறும் இறையறிவும் நம்பிக்கைச் சுடரும் கலியுகத்தில் தளர்ந்து விட்டது. எதையுமே படித்துப் பார்த்து, பார்த்துப் படித்து அறியும் முறை வழக்கிற்கு வந்து விட்டது. இதனால்தான் கலியுலகில் விஞ்ஞானம் என்பதாக புத்தக அறிவையே மனிதன் நம்புகின்றான். மருத்துவத்திலும் கூட விஞ்ஞானக் கருவிகள் காட்டுவதையே மருத்துவர்கள் நம்பி வைத்தியம் செய்கின்றார்கள். இதனால் அனைத்தும் இறைவன் செயலே என்ற ஆழ்ந்த நம்பிக்கை தளர்ந்து போய், மனிதன் தான் கண்டுபிடித்தவைகளுக்கே அடிமையாகி, கலியுகத்தில் கண்ணால் பார்த்தவற்றையே நம்பி வாழத் தொடங்கிவிட்டான். வாக்சக்தி மறைந்து வருகிறது.
இந்தப் படிப்பறிவில் உள்ள நம்பிக்கைதான், விநாயகர் தோன்றியது சதுர்த்தி என்றால் சதுர்த்தித் திதி விநாயகருக்கு முந்தையதா என்று கேட்க வைக்கின்றது. கலியுக மனித குல நலத்திற்காகவே, பார்த்து, தரிசித்து, உணர்ந்து, அறிந்து, மனிதன் நன்கு தெளிவு பெற, ஈஸ்வரனும் பல வடிவுகளைப் பூண்டார். எனவே ஆதியும் அந்தமும், இல்லாத விநாயகத் தோற்றத்தை, பார்த்தறிவதாய், மனித குலம் அறிந்த நாளே சதுர்த்தித் திதியாகும்.
அரு(உரு)வான மூர்த்தி!
தாரண ஆண்டில் வரும் விநாயகச் சதுர்த்தி அறுபுலச் சதுர்த்தி என்றும் அருபுலச் சதுர்த்தி என்றும் இரண்டு விதமாக அழைக்கப்படுகின்றது. முதலில் தோன்றும் அறுபுலம் என்பது அறுவகை மனிதப் பகுத்தறிவிற்குப் புலனாகும் வண்ணம், ஆழ்ந்த நம்பிக்கையால் கிட்டும் விநாயக தரிசனம் என்று பொருள்.
இரண்டாவதான அருபுலத்தில், அரு(உரு)வாய் இருக்கின்ற விநாயகரை, உருவத்தில் கண்டு, ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு பூஜிப்பதாகும். ஆயிரமாயிரம் கோடி மந்திர, எந்திர, வேத, தந்திர சக்திகளைத் தன்னுள் அருவமாய்க் கொண்டு எளிமையாகக் காணப்படுகின்ற அருகம்புல்லால் மிக மிக எளிமையான முறையில் அர்ச்சித்து விநாயக தரிசனம் பெறுகின்ற புலமையை அளிப்பதும் விநாயகச் சதுர்த்தியே!
ஸ்ரீகோழம்பநாதர் திருக்கோழம்பம்
அறுபுல இழை, அருபுல இழை என்றால் என்ன?
முக்கிய மங்களம்
மூதுரை பக்தி
முற்றிய அன்பு
முப்புரியாமே!
(முப்புரி = பூணூல்)
என்பது திருமணம் ஆகும் முன் முப்புரியாய்ப் பூணூலை அணிவதன் புனிதத் தன்மையைக் குறிக்கின்றது.
அறுபுல இழையது
மூன்றுடை முக்தி
மோட்சம், பிரம்மம்
ஆமே! ஆமே! ஆமே!
(அறுபுல இழை – பூணூல்)
இவை பூணூலின் தெய்வீக மகத்துவத்திற்குச் சித்தர்கள் அளிக்கின்ற அற்புதமான விளக்கும் ஆகும்.
பூணூலின் மகத்துவம்!
திருமணமாகும் வரை, பிரம்மச்சரிய இளைய வயது நிலையில் இருப்பவர்கள் மூன்று பருத்தி நூல் இழைகளாலான, முப்புரி நூலாகிய பூணூலை அணியத் தகுதி பெறுகின்றார்கள். திருமணம் ஆன பின், ஆறுபுரிகளாலான பூணூலை அணிதல் வேண்டும். இவ்வாறு மூன்று, ஆறு, ஒன்பது, பன்னிரெண்டு, 24 புரிகள் வரை பூணூல் அணியும் வழக்கம் பண்டையக் காலத்தில், தினமுமே தர்ப்பண பூஜை செழித்த யுகத்தில் நிலவியது.
கணபதிக்கு மூன்று புரி அல்லாது, ஆறு இழைகள் கொண்ட பூணூலையே சார்த்திட வேண்டும். தாரண ஆண்டின் விநாயகச் சதுர்த்தி நாளில் ஒவ்வொரு இளைஞரும், அரச மரத்தடி, ஆல மரத்தடி, என ஆங்காங்கே உறையும் குறைந்தது 36 பிள்ளையார் மூர்த்திகளுக்கு ஆறு புரிகள் உடைய பூணூலைச் சார்த்துதல் என்ற சங்கல்பத்தை ஏற்று நிறைவேற்றிட வேண்டும். இதனை முறையாகத் தொடர்ந்து மாதச் சதுர்த்தி, சதுர்த்தசி நாளில் ஆற்றி வந்தால், இளைஞர்களுக்கு கல்விச் செலவுகள், வேலை இன்மை, நேர்மை இன்மை, லஞ்ச முறை கண்டு சமுதாயத்தின் மேல் ஏற்படும் வெறுப்பு, விரக்தி தணிந்து ஆன்மீக ரீதியான வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நல்வழி கிட்டும்.
“கோள இழை
கோல இழை
கோளச் சுழியாய்
கோழம்பப் புழியது
பூணூல் என அதைச் செப்புதல் தாமே”
-என ஆண்கள் யாவருமே அணிய வேண்டிய பூணூலின் மகிமையைச் சித்தர்கள் விளக்குகின்றார்கள்.
திருக்கோழம்பம்
கோள(ல)ச் சுழியாம் பூணூல்!
இதில் பூணூலைக் கோளச் சுழி என்று சொல்லும் போது சூரியப் பாதை, சந்திரப் பாதை போல நீள் வட்ட வடிவிலான பூணூலின் வடிவம் குறிக்கப்படுகின்றது. எவ்வாறு ஒவ்வொரு கிரகத்தையும் சுற்றி நீள் வடிவ உபகோள் (Satellite) இருக்கின்றதோ, இதைப் போலவே, இறைவன் உறைகின்ற ஆத்மச் சுடரைத் தாங்கியதாக இந்த உடலைச் சுற்றி இருக்கும் கோள வளையமே பூணூல்.
கோழம்பம் என்ற தேவாரப் பாடல் பெற்ற தலமும் உண்டு. இங்கு புதுப் பூணூலை அணிந்த பின் அங்கப் பிரதட்சிணமாகவும், சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி வரும் நமஸ்காரப் பிரதட்சிணமாகவும் வலம் வருதலால் பிள்ளைகளின் துர்நடத்தைகளால் வருந்தும் பெற்றோர்களின் வேதனைகள் தணிய நல்வழி பிறக்கும்.
ஒவ்வொரு பூணூலுக்கும் உள்ள தாய் முடிச்சு பிரம்ம முடிச்சு ஆகும். இந்த பிரம்ம முடிச்சில் ஏற்படும் (பிரம்ம கிரந்தி) ஒளிப் பிரவாகமே, கோழம்பம் எனப்படுவது. இந்தக் கோழம்பச் சுடர் உற்பவித்தத் தலமே கும்பகோணம் அருகே உள்ள கோழம்பம் ஆகும். நல் உடலைச் சுற்றிப் பருத்தி இழைகளால் வரையப் பெற்ற கோலம் என்றும் பூணூலின் மகத்துவத்தைச் சித்தர்கள் உணர்த்துகின்றார்கள். இவ்வாறு பூணூல் மஹிமையை உணர்த்துகின்ற சித்தரே “கோழம்பச் சித்தர்!” இவர் தினமும் சூக்கும, தூல வடிவில் பூஜிக்கின்ற தலமே திருக்கோழம்பம் ஆகும்.
ஸ்ரீசௌந்திரநாயகி திருக்கோழம்பம்
சுமங்கலியாக உயிர் துறக்கும் பாக்யம் பெற்ற இல்லறப் பெண்மணியின் கழுத்தில் இருந்து, திருமாங்கல்யத்தை அல்லது மாங்கல்யச் சரடை (தாலி) கழுத்தை விட்டு அகற்றுவது கிடையாது. தீர்க்க சுமங்கலியாக அவர் ஏனைய லோகங்களுக்கு யாத்திரை கொள்கின்றார் என்பது இதன் பொருளாகும். மாங்கல்யம் போன்றதே பூணூல் ஆகும். இதே போல, ஒருவர் இறக்கும் போது உயிர் பிரிந்த அந்த உடலில் இருந்து பூணூலையும் கழற்றுவது கிடையாது. காரணம், பூணூலில் இருக்கும் பிரம்ம சக்திகள், பிரம்மாவால் சிருஷ்டிக்கப்பட்ட உடலோடு செல்வதே முறையாகும்.
இளைய சமுதாயத்திற்கான விநாயக பூஜை!
விநாயக சதுர்த்தியில் இன்று அரச மரத்தடி, ஆல மரத்தடி, வேப்ப மரத்தடி, கொன்றை மரத்தடி, வன்னி மரத்தடி, குளத்தங்கரை, நெடுஞ்சாலை ஓரம் போன்று வெட்ட வெளியிலும், சின்னஞ்சிறு மண்டப சன்னிதியிலும் இருக்கின்ற அனைத்துப் பிள்ளையார் மூர்த்திகளுக்கும் 21, 51, 108, 1008 பிள்ளையார்கள் என்று சங்கல்பம் செய்து கொண்டு, ஆறு புரிகள் (இழைகள்) கொண்ட பூணூலைச் சார்த்தி வருதல் இளைய சமுதாயத்திற்கான மகத்தான விநாயகச் சதுர்த்திப் பூஜையாகும்.
வாரந்தோறும், புதன்கிழமை பிள்ளையாருக்கும், இரட்டைப் பிள்ளையாருக்கும், குறிப்பாக திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம், திருச்சி அருகே வல்லம் ஸ்ரீயோக நரசிம்மர் ஆலயத்தில் உள்ள இரட்டைப் பிள்ளையாருக்கும் புதுப் பூணூல் சார்த்துகின்ற பழக்கத்தை ஆயுள் முழுதும் இளைஞர்கள் ஆற்றி வந்தால் சிறப்பான நல்ல வேலையுடன் சீரான வாழ்க்கை அமையும். மேலும் தினசரி சிறப்பாக பூஜை நடக்கின்ற ஆலயங்களில் தினமே, ஆறு வேளையிலுமே சுவாமிக்குப் புதுப் பூணூல் சார்த்துகின்ற பூஜைப் பழக்கம் உண்டு. ஆனால் தகுந்த எண்ணிக்கையில் பூணூல்கள் இல்லாமையால் மூல மூர்த்திக்கும், உற்சவ மூர்த்திக்கும் மட்டுமே பூணூல் சார்த்துகின்றார்கள். கோஷ்ட மூர்த்தி, பிரகார மூர்த்திகளுக்கு பூணூல் சார்த்தாமல் விட்டு விடுகின்றனர். இது முறையல்ல, ஆலயத்தில் அனைத்து மூர்த்திகளுக்குமே பூணூல் சார்த்துகின்ற கைங்கர்யத்தை நிகழ்த்துகின்ற வைபவத்திற்குப் பலரிடமும் பெற்று நிறையப் பூணூல்கள் தானமாக அளித்திடும் தர்மத்தை இளைஞர்கள் ஏற்றுச் செய்ய வேண்டும். மற்றொரு வகையில் இது ஆயிரக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களுக்கு நல்ல வருமானத்தைத் தந்து புனிதமான நெசவுக் கைத்தொழிலைக் காப்பாற்றவும் உதவும், ஆகவே, தாரண வருட விநாயகச் சதுர்த்தி வைபவம் நன்முறையில் நடப்பதற்கு இளைஞர்கள் வைராக்கிய சங்கல்பத்தை மேற்கொள்ள வேண்டும்.
தெய்வீகக் கடமைகள் |
ஆலயப் பூஜகர்களுக்கான தெய்வீகக் கடமைகள்
இறைவனை அருகில் இருந்து பூஜிக்கும் பாக்யம் பெற்ற ஆலய பூஜகர்கள், சமுதாயத்தில் பக்தி, கடமை, நாணயம், கட்டுப்பாடு, நேர்மை, கண்ணியம், சத்தியம் போன்ற பல தேவ பொக்கிஷமான குணங்களுடன் சிறந்து விளங்க வேண்டும். தற்போதைய கலியுக மனித சமுதாயம் பூஜகர்களிடம் நிறைய தெய்வீக இலக்கணங்களை எதிர்பார்க்கின்றது என்பதை நினைவில் கொள்க!
“ஏனையோர் மட்டும் சுகபோகமாக நிறைய வாழ்க்கை வசதிகளுடன் வாழ்கின்றார்களே? நாம் ஏன் அவ்வாறு வாழக் கூடாது?” என்று ஒப்பு நோக்கும் எண்ணம் ஒருபோதும் பூஜகர்களுக்கு வரக்கூடாது. ஏனென்றால் இறைவனைப் பூஜிக்கின்ற பாக்யம் அனைவருக்குமா கிட்டுகின்றது? இதைவிடப் பெரும் தெய்வ பாக்யம் உலகில் ஏதேனும் உண்டா என்ன?
சோழபுரம்
“பூர்வ ஜன்மப் புண்ய வசத்தால், பித்ருக்களின் அரிய நல்வரங்களால் கிட்டுகின்ற இந்த அரிய பாக்யத்தைப் பூஜகர்கள் ஆன்மீகப் பூர்வமாக தம் வாழ்க்கையில் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, இளைய சமுதாயத்தைச் சேர்ந்த பூஜகர்கள், திருமணம் ஆகும் வரை, நல்ல திடமான மனோ வைராக்யம் நிறைந்த பிரம்மச்சர்ய விரதத்தைப் பக்திப் பூர்வமாகப் பூணுதல் வேண்டும்.
பேண்ட், கோட், டை போன்ற மேலை நாட்டு பாணியிலான ஆடைகளை ஒரு போதும் பூஜகர்கள் அணிதல் கூடாது. உண்மையில் பேண்ட், கோட் என்பது நம் பாரத நாட்டின் தட்ப வெட்ப நிலைகளுக்கு ஏற்றவை அன்று. பேண்ட் வகை ஆடையை அணிவதால், சுவாசத்தில் சுழற்சிகள் மாறுவதால், மன அமைதியின்மைதான் அடிக்கடி ஏற்படும்.
பூஜகர்கள் எப்போதும் பருத்தி அல்லது கதரால் ஆன வேட்டி, துண்டு, சட்டையையே அணிதல் வேண்டும். பூஜிக்கும் நேரத்தில் ஆண் பூஜகர்கள் மேல் சட்டையை நிச்சயமாக அணிதல் கூடாது.
கோயில்களில் பூஜிப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக குடுமி வகைச் சிகை வைத்திருக்க வேண்டும். குடுமி வகைச் சிரசே ஆன்மீகப் பூர்வமாக, கர்வம், ஆணவம், ego வகை அகங்காரங்களைக் களைந்து, தெய்வீக ரீதியாகத் தற்காப்பு சக்திகளை அளிக்க வல்லதாகும். குடுமி வகை முடி அமைப்பால் கபாலச் செல்கள் பிரகாசமாகி, அபாரமான நினைவாற்றல் உண்டாகும். பூஜகர்கள் அனைவரும் பூணூல், மணி கங்கண், ருத்ராட்சம் போன்ற ஆன்மீக சாதனங்களைக் கண்டிப்பாக எப்போதும் அணிந்திருக்க வேண்டும்.
தினமும், காலை சூரிய உதயத்திற்கு முன்னும், மதியத்தின் உச்சிப் பொழுதான அபிஜித் முகூர்த்த நேரத்திலும், மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னும் ஆகிய மூன்று வேளைகளிலும் நேரம் தவறாது – ஆம், கண்டிப்பாக நேரம் தவறாது – சந்தியா வந்தன பூஜைகளையும், ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபத்தையும் ஒரு நாள் கூடத் தவறாது ஆற்றிட வேண்டும். தவறினால் மூன்று நாள் உபவாசம் இருந்து தக்க பெரியோர்களிடம் பரிகாரம் பெறுதல் வேண்டும். பொதுவாக சந்தியா வந்தனப் பூஜை தவறுதலுக்கு எவ்விதப் பிராயச்சித்தமும், எந்த லோகத்திலும் கிடையாது. மதிய நேரத்திற்கும் சேர்த்துக் காலையிலேயே இரு சந்தியா வந்தன பூஜைகளைச் செய்வது தவறான அணுகு முறை! இரு வேளை உணவை ஒரே வேளையில் உண்ண முடியுமா?
எவர் வீட்டிலேனும் இறப்பு நடந்து, சடலம் அந்த வீட்டில் இருக்கும் போது கூட சந்தியா வந்தன பூஜைகளை ஆற்றியாக வேண்டும் என்ற மறைநியதி உண்டு. தந்தை, பிள்ளை, அண்ணன், தம்பி, பெரியப்பா, சித்தப்பா என ரத்த சம்பந்தமான நெருங்கிய உறவுகளின் மரண நேரத்தில் கூட, மூன்று வேளை, சந்தியா வந்தனப் பூஜைகளையும் முறையாக நிறைவேற்றிடலாம் என்ற வேத சாஸ்திர நியதி உள்ளது. எனவே சந்தியா வந்தனப் பூஜையானது, எந்த விதத் தீட்டும் கிடையாது என்ற அற்புதமான தெய்வ நியதியைத் தாங்கிப் பிரகாசிப்பதால், தோஷங்கள், மரண, மயானத் தீட்டுகளைக் கடந்ததாகத் துலங்கும் சந்தியா வந்தன வழிபாட்டின் தெய்வீகச் சிறப்பினைப் பூஜகர்கள் நன்கு உணர்ந்து தினமும் மூன்று வேளைகளிலும் கடைபிடிக்க வேண்டும்.
அந்தணர்களுக்கு மட்டுமே சந்தியா வந்தன பூஜை என்றில்லை! யாவருக்கும் உரித்தானதே சந்தியா வந்தன பூஜை! அந்தணர்களுக்கு உரிய உடல், மன, உள்ள ஒழுக்கமான பக்தி இலக்கணங்களை நன்கு கடைபிடிப்பவர்களே அந்தணர்கள் என்று போற்றத் தகுந்தவர்கள் !
சங்குகள் |
இளைஞர்கள் தினமும் பூஜையில் சங்கு ஊதிப் பூஜிப்பது நல்ல பிராணாயாம யோகப் பயிற்சியாகும். இதனால் புகை பிடிக்கும் எண்ணமே வராது தற்காத்துக் கொள்ளலாம். எண்ணங்களைப் புனிதப்படுத்த வல்ல ஓங்கார சப்த சக்திகள் நிறைந்ததே சங்குகளாகும்.
வீடுகள், அலுவலகங்களில் இயற்கைப் பொருட்கள் செறியட்டும்!
தற்கால வீடுகளில் சர்வமும் பிளாஸ்டிக் மயமாக உள்ளது. இதனால் பல வகை மரங்களால், உலோகங்களால் பெற வேண்டிய ஆன்மீக சக்திகளை, மானுட சமுதாயம் பெரிதும் இழந்து வருகின்றது. 24 மணி நேரமும், இல்லம், அலுவலகத்திலேயே கலியுக மனிதன் உறைந்து வாழ்வதால், இவற்றில் ஆன்மீகம் நன்கு செறியும் வண்ணம் இயற்கையான (மரம், குறித்த உலோகம், பூச்செடிகள், தெய்வீக விருட்சங்கள் போன்ற) திட, திரவிய, வாயுப் பொருட்களின் ஊடே வாழ்வதே, மனிதனைத் தூய்மையான உடல், மனம் , புத்தி , உள்ளத்தோடு நிலைக்கச் செய்யும்.
பிளாஸ்டிக் என்பது ஒரு ஜடமான, எளிதில் வசப்படாத திட வஸ்து வகையாகும். அன்னதானம், இலவச மருத்துவ பணிகள் போன்ற இறைச் சமுதாயப் பணிகளில் மட்டுமே, தக்க முறையில் வண்ண மூலப் பூஜைகளை ஆற்றி, ஜீவ நலன்களுக்காகப் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்திடலாம். எந்தப் பிளாஸ்டிக்கை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற படைப்பு என்று விஞ்ஞான உலகம் மார் தட்டித் தற்புகழ்ச்சி கொண்டதோ, அதே விஞ்ஞானமே, இன்று சுற்றுப் புறத்தின் தூய்மைக்கு முதல் விரோதி, நோய்ப் பரப்பி, மனிதக் கொல்லி பிளாஸ்டிக்தான் என்று அறிவிக்கின்றது.
விஞ்ஞானத்தின் அஞ்ஞானம் ஆன்மீகத்தில் சீர் திருந்துவதாக!
இவ்வாறு நிலையில்லாத, நம்ப முடியாத விஞ்ஞானத்தை நம்பியே தற்போதைய உலக மனித சமுதாயம் வாழ்கின்றது என்பது மிகவும் துர்பாக்யமே! வாழ்வின் ஒவ்வொரு கண் இமைப் பொழுதிலும் நம்பி வாழ வேண்டியது இறைப் பரம்பொருளே! இதுவே சாசுவதமானது, நிலையானது ஆனந்தமயமானது!
சமுதாய இறைப் பணிகளில் தோன்றும் தான, தர்மப் புண்ய சக்திகள், பிளாஸ்டிக்கின் மாசுகளை, குறைபாடுகளை ஆன்மீகப் பூர்வமாக ஓரளவு தணித்திடும். பக்க விளைவுகள் இல்லாது ஜீவன்களுக்கு நல்வகையில் உதவும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் யாவும் ஏற்புடையவையே! பிளாஸ்டிக் போன்று செயற்கையான, ரசாயன மாற்றக் கூட்டுகளால், உருவாகும், நவீன விஞ்ஞானப் பொருட்கள் தோன்றுமானால், அவற்றை எவ்வாறு பக்க விளைவுகள், தீங்குகள், இன்றி ஆன்மீக பூர்வமாகப் பயன்படுத்துவது என்பதற்கான நல்வழி முறைகளைத் தக்க சான்றோர்கள் மூலம் அறிந்து வகைப்படுத்துதல் வேண்டும்.
வண்ணங்கள் யாவும் ஆன்மீக சக்திகள் நிறைந்தவையே, பூலோகத்தில் நாம் காணுவதோ ஏழே ஏழு வண்ணங்களே! ஆனால் தேவ லோகங்களிலோ, நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவிற்கு வண்ணமும், நறுமணமும் நிறைந்துள்ளன. ஒரே ஒரு தேவலோகப் பவளமல்லி அல்லது மகிழம் பூ நறுமணம், ஒரு பூமி முழுதும் மணம் பரப்ப வல்லது எனில், என்னே தெய்வீகத்தின் மஹிமை! எனவே இயன்ற வரையில் பிளாஸ்டிக்கைத் தவிர்த்தும், கம்ப்யூட்டர், வாகனங்கள் போன்ற தவிர்க்க முடியாத பிளாஸ்டிக் வகை உபயோகப் பொருட்களில் பிளாஸ்டிக்கின் பல்வண்ண அம்சங்களை வைத்து, பக்க விளைவுகளைத் தணிக்கும் வகையில், மந்திர ரீதியாக, ஆன்மீகப் பூர்வமாகப் பயன்படுத்தும் முறைகளையும் அறிதல் வேண்டும்!
பூஜையில் இயற்கைத் திரவியங்களே செறியட்டும்!
பூஜைகள், வழிபாடுகளில் இயன்ற வரையில் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்தல் நலமாகும். இவ்வாறு பல விஞ்ஞான மயமான ரசாயனக் கலவைப் பொருட்கள், ஆலய, வீட்டு உபயோகங்களுக்காக வந்து சேரும் போது, சங்குகள், ருத்ராட்சம், இயற்கை வகைக் கண்ணாடிப் பொருட்கள், மணிகள், மூலிகைத் திரவியங்கள், சந்தனக் கட்டை / கல், மரத்தாலான பூஜைப் பொருட்கள் போன்ற இயற்கைப் பூர்வமான வஸ்துக்கள்தாம், இவற்றில் தோன்றும் தீய சக்திகளை மாய்த்து, நற்கிரணங்களை உருவாக்கி, நம்மைக் காக்கின்றன, உதாரணமாக, விளக்கிற்கான திரி, எண்ணெயைப் பிளாஸ்டிக் பாட்டிலில் அல்லாது, கண்ணாடி பாட்டில் , மண் அல்லது பீங்கான் ஜாடியில் இருப்பதே நல்லதாகும்.
எனவே எந்த அளவிற்கு ஆலயத்தில், வீடுகளில், அலுவலகங்களில் சங்குகள், மரத்தாலான பலகைகள், பீடங்கள், பூஜைப் பெட்டிகள், மணிக்ள் போன்றவை உள்ளனவோ, அந்த அளவிற்குத் தற்காப்பு சக்திகளும், வாஸ்துப் பூர்வமான ரட்சா சக்திகளும் நன்கு விருத்தி ஆகும். எப்போதும் நீரினுள் யோகப் பூர்வமாகப் பிராணாயாம சக்திகளுடன் அமிழ்ந்து இருக்கும் சங்குகள், தினந்தோறும் கோடிக்கணக்கான நட்சத்திர, சூரிய, சந்திர ஒளிச் செழுப்பில் விருத்தி அடைபவை.
எனவே தினமும், வெண்மை நிறத்திற்கு உரிய சந்திர மூர்த்திகளை சந்திர ஹோரை நேரத்தில், சங்குகளை நன்கு துடைத்து வைத்து, கங்கை, காவிரி, போன்ற புண்யத் தீர்த்தங்களை நிரப்பி, ஸ்பரிசித்து (தெளித்து) பலவிதமான பூஜைகளுக்கும் பயன்படுத்திட வேண்டும். ஆலயங்களுக்கும் நன்கு பூஜிக்கப் பெற்ற சங்கை அபிஷேகம் மற்றும் சங்கு வாத்யத்திற்காகவும் தானமாக அளிப்பது சந்ததிகள் நல்ஒழுக்கத்தில் வளர்ந்து சீர்மை பெற உதவும்.
இதற்காகவே சங்கு, மணி, சிப்பிகளால் ஆன தோரணங்கள், மாலைகள், ஊதுபத்தி ஸ்டாண்டுகள், பேனா ஸ்டாண்டுகள், சிறு பூஜைப் பெட்டிகள் போன்றவற்றை இல்லத்தில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்திட வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் தினமும் பூஜைச் சங்கொலி முழங்க வேண்டும்!
சங்குகளைப் பற்றி ஒன்றுமே அறியாது, பாமரர்களால் பூஜையில் வைக்கப்படும் சங்குகளுக்கும் புண்ய சக்திகள் உண்டு. சடல ஊர்வலத்தில் மட்டுமே சங்கொலி என்ற அவலமான எண்ணம் தமிழகத்தில் நிலவுவது வேதனை தருவதாகும். சங்கைப் பற்றித் தவறான எண்ணங்கள் வழக்கில் நிலவுவதைத் தகர்க்க வேண்டும். சிவபெருமானுக்கும், சங்குச் சக்கரதாரியான பெருமாளுக்கும் மிகவும் ப்ரீதியான, புனிதமான, தெய்வீகமான சங்குகளின் மஹிமை பற்றி இனியேனும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். பலரும் உணரும்படி இறைப் பிரச்சாரம் ஆற்றுதல் வேண்டும்.
தினசரி வாழ்வில் சங்கு தரும் அருட்பலன்கள்!
வாயால் “ஓம்” என ஓங்காரம் ஓதுதல், சங்குகளை ஊதி சங்கோங்காரம் ஓதுதல் எனப் பல வகையான ஓங்கார சக்தி வகைகள் உண்டு. இவை அனைத்தும் இல்லத்தில் சாந்த சக்திகள் நிலவத் துணை புரிவதாகும்.
கர்பிணிப் பெண்கள் தினமும் சூரிய ஹோரையில் வாயாலும், சந்திர ஹோரையில் மனத்தாலும் ஓங்காரம் ஓதுதல் வேண்டும். இதனால் பிள்ளைகள் நல்லொழுக்கத்துடன் வளர்வதற்கான ஒழுக்க வித்துக்கள் நன்கு பதிக்கப் பெறும்.
பவானி சிவாலயம்
சங்கு என்பது புனிதமான வாத்யம் என்பதால்தான் ஆலய பூஜைகளில் சங்கொலி முழங்கப்படுகின்றது. பவானியில் ஸ்ரீசங்கமேஸ்வரர் என்ற நாமத்தை இறைவன் பூண்டு அருள்கின்றார். காஞ்சிபுரத்தில் ஸ்ரீஉலகளந்தப் பெருமாள் ஆலயம் அருகே அருளும் ஸ்ரீசங்குபாணிப் பிள்ளையாருக்கு அமிர்த யோக நேரமும், சதுர்த்தி திதி அனுஷம் கூடும் நாளில், 1008 சங்குப் பால் அபிஷேகம் செய்தல் ஓங்கார சக்தியால் தனவளம் பெற உதவிடும்.
மிக்ச் சிறிய வடிவிலான, எண்ணற்ற லகுச் சக்கரச் சக்திகளை உடைய சர்வலகு “சுதர்சனச் சங்கு” என்பது பெண்களுக்கு எங்கும், எப்போதும், தற்காப்பு சக்திகளைத் தருவதாகும். சங்கு மூலம் அர்க்யம், தர்ப்பணம் அளிப்பது மிகவும் விசேஷமானது. திருஷ்டிகளை நிவர்த்தி செய்யவும், பில்லி, சூன்ய, மந்திர ஏவல்களை முறிவு செய்யவுமான விசேஷமான ஓங்கார மகிஷச் சங்குகளும் உண்டு.
திருஷ்டிக் கருவலரிச் சங்கு என்ற அபூர்வமான சங்கை, வீட்டின் நிலைப்படி முன் வைத்து உரிபோல் கட்டித் தொங்க விடுவதால் காத்து, கறுப்பு, பில்லி, சூன்ய, தோஷங்கள் வாராது, வீட்டில் நுழையாது தற்காத்துக் கொள்ளலாம்.
காது மந்தமாக உள்ளவர்கள் அடிக்கடி சங்குகளை வைத்துப் பூஜித்து வருதல் விசேஷமானது. அலுவலகங்களிலும் மேஜையின் மேல் பலவிதமான சங்குகளை வைத்திருத்தலும், கண் திருஷ்டி தாக்காமல் இருக்க உதவும். கர்பிணிப் பெண்கள், பெரிய சங்குகளில், “ஓம் ஓம் ஓம்” எனச் சங்கினுள் 108 முறை ஓதி, சங்கினை வயிற்றில், கர்பப்பை மேல் மிகவும் லேசாக வைத்து, ஓங்கார ரீங்காரந்தனைக் கருச் சிசு கேட்குமாறு செய்தல் மிக, மிகப் புனிதமான ஓங்காரப் பூஜையாகும். இயற்கை முறையில் சுகப் பிரசவம் ஆக இது உதவும். பல மருத்துவக் காரணங்களால் கருத்தரிக்க இயலாதவர்கள். தினமும் இவ்வாறு செவ்வாய் ஹோரையில் ஓங்கார சப்தப் பிரசாத பூஜை ஆற்றி வந்தால், கருப்பை வலுவடைந்து கருத்தரிக்க ஏதுவாகும். பசு மடிக் காம்பு சங்கினால் பூஜித்துத் தர்ப்பணம் அளித்தல் மிருத்யு தோஷங்களை நீக்கும்.
சங்கொலியா?
பைரவ முழக்கமா?
இவ்வாறு சங்குகள் இல்ல(ற)த்திற்கு நிறையப் புனித சக்திகளை அளிக்கவல்லன, இவற்றைப் பெற்று பயன்படுத்தும் முறைகளை சென்னை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவில் அறிந்து கடைபிடித்துப் பிறருக்கும் உணர்த்தும் அரிய சேவையை ஆற்றி அரிய பலாபலன்களைப் பெற்றிடவும்.
சங்குகள் அற்புதமான சகுன அம்சங்களையும் பூண்டவையாகும். உதாரணமாக, ஒரு அடியார் திருஅண்ணாமலையைச் சுற்றி கிரிவலம் வருகையில் சூரிய லிங்கத்தில் அவர் சங்கொலி எழுப்பி பூஜை நிறைவேற்றியபோது இரண்டு மூன்று நாய்களும் அவர் எழுப்பிய சங்கொலியில் சேர்ந்து கொண்டன. சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு ஏதோ நாய்கள் அந்த அடியாரைச் சுற்றி வருவது போல் தோன்றினாலும் அந்த அடியாரைச் சூழ்ந்த குடும்பச் சுமை வினைகளே இவ்வாறு பைரவ உருவத்தில் தோன்றி தாங்களும் அந்த அடியார் வழிபாட்டில் சேர்ந்து கொண்டன என்பதே பைரவ மூர்த்தி நமக்காக இயற்றும் சூரிய பூஜை வழிபாடாகும்.
இவ்வாறு நம் வழிபாட்டில் மயில், சேவல், நாய், கழுதை, குதிரை, பாம்பு என எந்த உயிரினங்கள் சேர்ந்து கொண்டாலும் அந்த ஜீவன்கள் கூறும் உள்ளர்த்தங்களை நம்மால் உணர முடியாது என்பதால் உடனடியாக திருஅண்ணாமலை பித்ரு முக்தி தீர்த்தத்தில் தர்ப்பண வழிபாடுகளை இயற்றி, நமது மூதாதையர்களுக்கு நன்றி தெரிவித்து, குறைந்தது 12 கிரிவல அடியார்களுக்கு அவர்கள் வயிறு நிறையும் வண்ணம் உணவிடுவதால் நம்முடைய பிரார்த்தனைகளை கூரமால்ய பித்ருக்கள் ஏற்று அவை நன்முறையில் நிறைவேற அருளாசி வழங்குவார்கள். ஒரு வேளை திருஅண்ணாமலை கிரிவலத்திற்குப் பின் இந்த செய்தியை நீங்கள் அறிந்து கொண்டால் சுயம்பு லிங்க மூர்த்திகள் அருளும் எந்த தீர்த்தக் கரையிலும் 12 வெண் தாமரை மலர்கள் மேல் தர்ப்பைச் சட்டம் வைத்து தர்ப்பணம் அளித்து 12 அடியார்களுக்கு வயிறார உணவு படைத்தல் நலமே.
சீதா சப்தமி விரதம் |
ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதைப் பிராட்டி, அங்குள்ள அரக்கிகள் அளித்த பல்வகைத் துன்பங்களால் மனவேதனை அடைந்து, தினமும் கண்ணீர் விடுகின்றாள். புனிதவதியாம் கண்ணகியின் கண்ணீரால் மதுரைக்கு ஏற்பட்ட விளைவுகளை நாமறிவோம்! பதிவிரதையின் கண்ணீர் பூமியில் படலாகாதே! எனவே, சீதையின் கண்ணீர்த் துளிகளை, பூமா தேவி தன்னுடைய ஜலகணபுலச் சங்கில் பெற்றுக் கொண்டாள்.
விபீஷணனின் மகளாகிய திரிசடை ஜகன்மாதாவாகிய சீதாதேவிக்குப் பல விதங்களிலும் உதவி புரிகின்றாள். அரக்கிகள் சீதா தேவியின் தலை முடிகளைப் பிடித்து இழுத்தும், காதுகளைத் திருகியும் பலவிதங்களில் துன்புறுத்துகின்றனர். அந்த வேதனைகளைத் தாங்காது சீதா தேவி தினமும் வருந்திக் கண்ணீர் உகுக்கின்றாள். சீதையின் துயரினைப் போக்க எண்ணிய திரிசடை, சீதாதேவியிடம் சப்தமித் திதியின் மகத்துவத்தையும், சப்தமி விரதத்தைப் பற்றியும் விளக்கிக் கூறுகின்றாள். திருமகளின் அவதாரிகையான சீதா தேவி அறியாதது யாதுளது? எனினும் அவதார மூர்த்திகள், மனித வடிவில் பூவுலகிற்கு வந்து, ஆற்ற வேண்டிய நல்விரதங்களை, நல்பூஜைகளை, நற்பணிகளை ஆற்றி மக்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்கிப் பாடம் புகட்டுகின்றனர்.
அரக்கர்கள் தடுக்கா வண்ணம், இவ்விரதத்தினை நன்கு நடத்திட, திரிசடை சீதாதேவிக்குப் பலவிதங்களிலும் உதவிபுரிகின்றாள். இவ்வாறு சீதாதேவியும் சப்தமி விரதத்தை நன்கு முடித்திட “ராம்! ராம்!” என ஓதிக் கொண்டே ஸ்ரீஆஞ்சநேயர் வந்து சேர்ந்திட, இவ்வாறாக சப்தமி விரத மஹிமையாலும், சீதா தேவியின் துயரங்களுக்கும் தீர்வு கிட்டின..
வாக்குக் குற்றங்களை அகற்ற உதவும் விரதம்!
சீதை துயர் தீர்த்த
ஆஞ்சநேய மூர்த்தி லால்குடி
கலியுகத்தில் பெண்களுடைய எத்தகைய துன்பங்களுக்கும் விடிவு தருவது சப்தமி திதி விரதமாகும். சீதா தேவியே இதனைக் கடைபிடித்தமையால் இது சீதா சப்தமியுமாக ஆயிற்று. பொதுவாக, பெண்களுக்கு, எதிர்த்துப் பேசுதல், கட்டுக் கடங்காது பேசுதல், அநாவசியமான வார்த்தைகளை உதிர்த்தல் போன்ற சப்தமாகிய வாய் வார்த்தைகளாலேயே பெரும்பான்மையான துன்பங்கள் ஏற்படுகின்றன. இவற்றால் அதிபயங்கர விளைவுகளும் குடும்பத்தில் ஏற்படுவதுண்டு. இவற்றை மிக எளிதில் நிவர்த்தி செய்ய வல்லதே சப்தமி தோறும் ஆற்ற வேண்டிய சப்தமி திதி விரதமாகும்.
சீதா சப்தமி விரதம் என்றால் அன்றைய விரதத்தில் ஒரு நற்காரிய சங்கல்பத்தை எடுத்துக் கொண்டு அன்றே அனுஷ்டித்து முடித்திட வேண்டும். ஸ்ரீராமர் பொன் மானைத் தேடச் செல்கையில், தான் லக்குவனை ஏசியமையால் தனக்கு ஏற்பட்ட வாக்குத் தோஷம்தான் இந்நிலை தனக்கு ஏற்படக் காரணம் என உணர்ந்தாள் சீதா தேவி! எனவே, சீதா சப்தமி அன்று மேற்கூறியவாறு விரதத்தை அனுஷ்டித்து ஸ்ரீஆஞ்சநேயரைத் தரிசனம் செய்வதால் வாழ்க்கையில் வாக்கு தோஷத்தால் ஏற்படும் பலவித இன்னல்கள் அகல ஜகன்மாதாவாகிய சீதாதேவி அனுகிரஹம் செய்கின்றாள்.
தினந்தோறும் கண்ணீர் சிந்திய வண்ணம் இருந்த ஸ்ரீசீதா தேவியானவள் சப்தமி விரதத்தன்றுதான், விரத மஹிமையால் எவ்வித அழுகையும் ஏற்படாமல் இருந்தாளாம். எனவே பெண்களின் கண்ணீரைப் போக்க வல்ல சப்தமித் திதி விரதம் இது!
சப்தமித் திதி விரத முறை
சப்தமித் திதி துவங்கும் நேரத்தில் கண்டா மணி, ஜால்ரா, சங்கு, மிருதங்கம், நாதஸ்வரம், கஞ்சிரா, கடம் போன்ற ஏழு வகையான சப்தங்களுடன் விரத சங்கல்பத்தைப் பூணுதல் வேண்டும். 70 முறை விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம், 70 முறை சிவ சகஸ்ரநாமம், 7 படி சர்க்கரைப் பொங்கல் அன்னதானம் என்பதாக ஏழின் மடங்கில் ஏதேனும் இறை நற்பணிக்கான ஒரு சங்கல்பத்தை மேற்கொண்டிடலாம் அல்லது அவரவர் விருப்பப்படி நல்ல சங்கல்பத்தை மேற்கொண்டு, சப்தமித் திதி முடிவதற்குள் நிறைவேற்றிட வேண்டும். இதற்கு சங்கல்ப சீதா சப்தமி என்று பெயர்.
இன்று விரதமும், சங்கல்ப நற்காரியமும் நிறைவேறிய பின், அசோக மரத்திற்குச் சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு,
“சோகநாசன விரத பூர்த்திதம்
சீதா வல்லப சிங்கார தரிசனம்
தர்ம கைங்கர்ய கார்ய சித்திதம்“
-என்று ஓதி வலம் வந்து வணங்குதல், விரத நல் பூர்த்திக்கு உதவும்.
பிறகு ஸ்ரீசீதா தேவி சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், ஸ்ரீஆஞ்சநேயரையும் தரிசித்து, நன்றி கூறி வணங்கிட வேண்டும். பிறகு சப்த மாதர்கள், சப்த கன்னியர்களையும் ஏழு வஸ்திரங்களைச் சார்த்தி வழிபடுதலால், மனதில் தொக்கி நிற்கும் பெருங்குறைகள் தீர அருள் கிட்டும்.
இயற்கையாகவே பெண்கள், ஆண்களை விட ஏழு மடங்கு மனோசித்திபலம் வாய்ந்தவர்கள் ஆதலின், இல்லறப் பெண்மணிகளே! இவ்விரதத்தைப் பக்தியுடன் கடைபிடித்து நல்அருள் பெறுங்கள்!
தானதர்ம சக்திகள் |
இளைஞர்களே! என்றும், எங்கும் காக்கும் தான தர்ம சக்திகளை ஆக்கப்படுத்திடுங்கள்!
தானதர்மம் என்றாலே நிறையச் செலவாகும் என்று எண்ணுவதும் தவறான எண்ணமே! வெற்றிலை, பாக்கு, புகையிலை, பீடி, சிகரெட், மது, கேபிள் டீவி, அநாவசியமான ஹோட்டல் சாப்பாடு, டிபன், சினிமா, டிராமா போன்ற கேளிக்கைச் செலவுகள், அளவுக்கு மீறீய ஆடைகள் என்றவாறாக அவரவர் செலவுக் கணக்கைப் போட்டுப் பார்த்தால், ஒரு நாளைக்கு ரூ 20 அல்லது ரூ 10ஐ தான தர்மத்திற்காக எடுத்து வைப்பது ஒரு பொருட்டல்ல என்பது புலப்படும்.
தினமும் ஒரு பசுவிற்குக் கொஞ்சம் வாழைப்பழம், காக்கைக்குச் சிறிது உணவு, ஓர் ஏழைக்கு ஒரு நாளில் மூன்று இட்லிகளைக் கொண்ட ஒரு எளிமையான உணவுப் பொட்டலம் என ஏதேனும் ஒன்றை நித்தியக் கடமையாக ஆற்றுவது என்பது ஒவ்வொருவருடைய தினசரித் தெய்வீகக் கடமை அன்றோ! அவரவருக்கான எளிமையான இத்தகைய தினசரிக் கடமையையே சரியாக ஆற்றாத போது, தான தர்மக் காரியத்தையே தான் இன்னமும் செய்யத் தொடங்க வில்லை என்பதை அவரவர் மனசாட்சிக் கணக்குப்படி உணர்தல் வேண்டும்.
புண்ணியத்தை விருத்தி செய்க! புண்ணியத்தைக் கரைத்து வாழாதீர்கள்!
மனித குலத்திற்கான நித்தியக் கடமையை ஒரு சிறிதே செய்து விட்டு, “தான, தர்மம் செய்தேன்!” என்று மார்தட்டிக் கொண்டால் இறைவனிடமே பொய் பேசுதல் என்றாகின்றதே! மேலும் தினந்தோறும் தவறான செய்கை, அதர்மமான எண்ணங்கள், முறையற்ற செய்கைகள், அவலமான காம மனஓட்டம், ஆபீஸ் போனை, பொருளைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற தவறான காரியங்களைத் தினமுமே செய்வது நிகழ்கின்றது. தினமும் ஒவ்வொரு மணி நேரமும் புதிது, புதிதாகக் கர்ம வினைகளைச் சேரும் கர்ம வினைகளைக் கழிக்கவே, தினசரி தர்மக் காரியப் புண்ய சக்திகள் சரியாகி விடுமே! இதனால் புண்ய சக்திப் பற்றாக்குறை ஏற்பட்டு, தீவினைகளின் பாலன்ஸ் பெருகியே வாழ்க்கையே பெரிய கர்ம மூட்டையாகப் பலருக்கும் ஆகி விடுகின்றதே!
மேலும் அருணாசல கிரிவலம், காசி யாத்திரை, சபரி மலை விரதம் போன்றவற்றில் திரளும் அபரிமிதமான புண்ய சக்திகள், மேற்கண்ட வகையில் தினசரியே சேரும் கர்ம வினைகளில் விரயமாக்கப்படும்போது எங்கே, எவ்வகையில் சந்ததியைக் காக்கும் வகையில் கூடுதல் தான தர்மப் புண்யம் வந்து சேரும்?
குடும்பத்தின், சமுதாயத்தின் நற்பெரியோர்கள், மூதாதையர்கள் ஆற்றிய தான தர்மக் காரியங்களின் சக்திகளைக் கொண்டுதான், பலருடைய வாழ்க்கைச் சக்கரம் ஓடிக் கொண்டிருக்கின்றது என்பதை இனியேனும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தினமும் ஆலயக் குப்பைகளை முடிந்த மட்டும் அகற்றுதல், ஆலயங்களில் பச்சரிசி மாக்கோலம் இடுதல், ஒரு பசுவை நீராட்டிட, ஐந்தாறு வாளி நீர் அளிப்பது போன்றவை மிகச் சிறந்த மிகவும் எளிமையான தர்மக் காரியங்கள் ஆகின்றன எனில், பணச் செலவு இல்லாத தானதர்மக் காரியங்களும் உண்டு என்பது புலனாகின்றது அல்லவா!
புரட்டாசி மாதம் வரும் மாளய பட்ச அமாவாசையில், ஐம்பது, அறுபது பேர்கள் ஒன்று சேர்ந்து உணவுப் பொருட்களைச் சமைத்து ஆயிரத்தெட்டு பொட்டலங்களாகத் தயாரித்துத் தானம் அளிக்க முடிவதும், ஜாதி, மத, இன, குல பேதமில்லாத சத்சங்கத்தின் பெரிய தான தர்மச் செயல் ஆகின்றது அல்லவா! இதனால் ஒட்டு மொத்தமாகத் தினமும் ஒருவருக்கு அன்னமிட்ட பலா பலனை மாளயபட்ச அமாவாசை அன்னதானத்தில் பெற இயலும் அல்லவா! எனவே கலியுகத்தில் தனித்துச் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று கூடிச் செய்கின்ற நற்காரியங்களில் புண்ய சக்திகள் அதிகம் வந்து சேரும்.
அன்னதான தர்ம சக்தியே, பிற நற்காரியங்களை ஆற்ற வல்ல நற்புண்ய சக்திகளையும் பெற்றுத் தருவதாகும். ஆம் நற்காரியம் செய்யவும் குறித்த புண்ய சக்தி தேவையே! எனவே, நற்காரியங்களை நிறைவேற்றிட, பலரும் ஜாதி சமய வேறுபாடின்றி ஒன்று கூடி, வாரந்தோறுமாவது அன்னதான தர்ம காரியங்களை நிறைவேற்றி வருதல், பரம்பரையாகப் பாரத நாட்டில் நிலவுகின்ற தான தர்ம சக்தியை நன்கு விருத்தி செய்து, நிலை நிறுத்திட உதவும் முறையாகும். இதில் இளைஞர்களின் பங்கே மிகவும் முக்கியமானது. எனவே இளைய சமுதாயத்தையும் நன்கு அரவணைத்துச் செல்ல வேண்டும்.
சதுர்வேதமங்கலம் |
சதுர்வேதமங்கலம் ஸ்ரீருத்ர கோடீஸ்வரர்
வேதசக்திகளைப் பெற்றுத் தரும் அறப்பணிகளை இளைய சமுதாயத்தினர் ஆற்றுதல் பக்தியையும், நல்ஒழுக்கத்தையும், நல்வாழ்க்கையையும் பெற உதவும்! ஜாதி, மத, குல பேதமின்றி யாவரும் வேத சக்திகளைப் பெற உதவுதலும், அற்புத இறைச் சமுதாயப் பணியே!
ருத்ர மந்திரங்கள் கோடி மடங்காய்ப் பெருகும் சதுர்வேத மங்கலம் ஸ்ரீருத்ரகோடீஸ்வரர்
சதுர்வேதமங்கலம்
(சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்குக் கிழக்கே ஆறு கி.மீ தொலைவில் சதுர்வேத மங்கலம் கிராச் சிவத்தலத்தில் ஸ்ரீருத்ர கோடீஸ்வரர் அருள்புரிகின்றார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்தும், புதுக்கோட்டை, பொன்னமராவதி மூலமாகவும் சிங்கம்புணரியை அடையலாம்.!)
பலருக்கும் தேவமொழி மற்றும் தமிழ் மறைகளை ஓதி, அவற்றின் பலாபலன்களைப் பெற இயலவில்லையே என்ற ஏக்கம் தொக்கி நிற்பது உண்டு. இறைவனின் வலக்கண் சூரியனாகவும், இடது கண் சந்திர அம்சங்கள் நிறைந்ததாகவும் பிரகாசிக்கின்றன. மேலும் ஆதி மூல மொழிகளாக, இறைவனின் இருகண்களாக தமிழ் மற்றும் தேவமொழியும் (சமஸ்கிருதமும்) பொலிவதால், உலக மொழிகள் அனைத்திற்குமே தமிழும், தேவமொழியுமே தாயும், தந்தையுமாய் அருள்புரிகின்றன. இவற்றிலிருந்து பிறந்தவையே ஏனைய உலக மொழிகள் யாவுமாம்!
கயிலாயத்தில் பிறந்த கவின்மிகு தெய்வத் தமிழ்
ஏனைய மொழிகளை விட, தமிழுக்குள்ள அருஞ்சிறப்பு, ஆதி சிவனே அருந்தமிழ்ப் பாடல்களை இயற்றி ஓதியுள்ளதேயாம்! இதனால்தான் ஆத்ம ஸ்வரூபம் உள்ள ஆத்ம மொழியாகத் தென்னாடுடைய சிவனுக்கு உரித்தானதாகத் தமிழ் மொழி ஒளிர்கின்றது. ஆம், இறைவனே, தாமே தமிழைத் தோற்றுவித்தார்! இதுவே அருட் தமிழாம்! இறைவனுடைய நேரடித் திருவாய் மொழி சப்த உரை அம்சங்களே வேத சப்தங்கள் ஆகும். வேத சப்தங்களில் இருந்தே மைதிலி, பிராக்ருதம், பாலி போன்ற தொன்மையான மொழிகளும் பிறந்தன.!
ஆம், இவ்வாறாக சர்வேஸ்வரனின் அருள்மொழியே அருந்தமிழாம், தண்டமிழின் மாமறைகளான தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திவ்யப் பிரபந்தம், திருமந்திரமும் இன்னமும் பலவும், பலவிதங்களில் வேத சக்திகளைப் பொழிந்து அருள்கின்றன. அனைவருக்கும் உரித்தான ஸ்ரீகாயத்ரீ மந்திரம், கலியுகத்தில் நான்கு வேதங்களின் சப்தஒளித் திரட்சியாகப் பொலிகின்றது. சத்சங்கமாக, ஜாதி, மத, குல பேதமின்றி, மூத்தாரும், இளைய சமுதாயமும் இவற்றை ஓதி, ஓதுவித்து வேதசக்திகளைப் பெற்று சமுதாயத்தில் சாந்தத்தை உருவாக்க அயராது உழைத்திட வேண்டும், ஆன்மீக ரீதியாகத்தான், அதுவும் பாரதப் பண்பாட்டிற்கு உரித்தான வேத சக்திகள் மூலமாகத்தான் உலகின் எந்த நாட்டிலும் உள்ள சமுதாயப் பிரச்னைகளைப் பரிபூரணமாகத் தீர்க்க முடியும்., நாடுகளிடையே உள்ள பகைமை, விரோதம், குரோதம் தீரவும் இந்த வேத சக்திகள்தாம் உதவும்.
ஸ்ரீருத்ரகோடீஸ்வரர்
சதுர்வேதமங்கலம்
வேத சக்திகள் திரளும் பிறதுறைகள்!
வேத சக்திகள் தமிழ் மற்றும் தேவ மொழிகளில் மட்டுமல்லாது ஸ்ரீவேதபுரீஸ்வரர் என வேதப் பெயர் கொண்டு அருளும் ஆலய தரிசனங்கள், வேத சக்திகள் நிறைந்த கொன்றை மர மூர்த்தி வழிபாடு (அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகர்), தீர்த்த நீராடல், குருவாய்மொழி நற்பணி ஆற்றல், திருஅண்ணாமலை, திருவள்ளூர் போன்ற குறித்தத் தலங்களில் தான, தர்மங்கள் ஆற்றல் மூலமாகவும் பெற்றிடலாம்.
வேத மந்திரங்கள் என்றாலே தற்காலத்தில் தேவ மொழியில் (சமஸ்கிருதத்தில்) உள்ளதாகப் பலராலும் தவறாக அர்த்தம் கொள்ளப்படுகின்றது. உண்மையில், வேதம் அநாதியானதாக, கால எல்லைக்கெல்லாம் அப்பாற்பட்டதாகும். இறைவனிடம் இருந்து சப்த வடிவில் வந்ததே வேதமாகும். இதனை அட்சர வடிவில் மக்கள் பெற உதவுவதே தேவமொழி!
ஒரு விதத்தில், பூலோக மக்களாகிய பாரதப் பெருமக்களான நாமனைவரும் பல கோடி முந்தையப் பிறப்புகளில் ஆதிமொழிகளான இம்மொழிகள் அனைத்திலும் “நா உலா” வந்தவர்களே! கலியுகத்தில் பெரிதும் மறைந்து வரும் மாமறை வேத சக்திகளை, வேத மந்திர அம்சங்களைத் தினந்தோறும் மக்கள் பெறும் பொருட்டுத்தான், எளிமையான தமிழ் மறைகளை ஆலயத்தில் ஓதுதல் சமயக் குரவர்களால் அளிக்கப் பெற்றுத் தோன்றியது. மேற்கண்ட தமிழ் மாமறைப் பாக்களைத் தினந்தோறும் ஆலயங்களிலும், இல்லங்களிலும் ஓதுவதன் மூலம் வேத சக்திகளில் பல அம்சங்களை இளைஞர்கள் மிக எளிதில் பெற்று விடலாம்.
ஸ்ரீதட்சிணாமூர்த்தி
சதுர்வேதமங்கலம்
சதுர்வேத மங்கலம் ஸ்ரீருத்ர கோடீஸ்வரர்!
சுவாமி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு அருகே உள்ள சதுர்வேத மங்கலம் சுவாமி கிராமச் சிவத்தலத்தில் ஸ்ரீருத்ர கோடீஸ்வரராக அருள்புரிகின்றார். இங்கு, தனிச் சந்நிதி கொண்டவராய், வேதபாஸ்கரன் என்ற நாமம் தாங்கிய சூரிய மூர்த்தி இங்கு பூலோக ஜீவன்களின் நலன்களுக்காக தினமும் ருத்ர மந்திரங்களைக் கோடி முறை தூல, சூக்கும வடிவுகளில் ஓதிப் பூஜிக்கும் அற்புதத் திருத்தலம் இதுவே! தேவாரத்திலும் ஸ்ரீஅப்பர் சுவாமிகள் ருத்ர மந்திரத்திற்கு ஈடான தமிழ் மறைப் பதிகங்களைச் சிவனருளால் இயற்றி உள்ளார். இவற்றையும், ருத்ர, சமக மந்திரங்களையும் இத்தலத்தில் ஸ்ரீருத்ர கோடீஸ்வரர் முன்னிலையில் ஓதுதல் அதியற்புதப் பலாபலன்களைத் தந்தருளும், ருத்ர சக்திகள் 60 நாழிகையும் பரிணமிக்கும் மகத்தான சிவத்தலம்!
பிள்ளைகள் இறுதிவரை காப்பாற்ற உதவும் தலம்!
இங்கு ஒவ்வொரு குடும்பத்தினரும் தம் பிள்ளைகளுடைய மூன்று, ஐந்து, எட்டு, பத்து, பன்னிரெண்டு, பதினாறு, பதினெட்டாம் (வயது) ஆண்டுகளிலும், பிறந்த நட்சத்திர நாளிலும், ருத்ர சக்திகள் பூரிக்கும் ரோகிணி, திருவாதிரை, மகம், திருவோணம், மாத சிவராத்திரி நாட்களிலும் சதுர்வேத மங்கலம் ஆலயத்தில் வழிபடுதலால் பிள்ளைகளின் வாழ்வு ஒழுக்கப் பூர்வமானதாக, பெற்றோர்களை அன்புடன் இறுதி வரை நன்கு காப்பாற்றுவதாக அமைய அருள்சுரக்கும்.
சதுர்வேதமங்கலம் ஸ்ரீருத்ர கோடீஸ்வர சுவாமிக்கு, ஐந்து வகை எண்ணெய்கள் கூடிய பஞ்சத் தைலக் காப்பு, பஞ்சாமிர்தம், ஐந்து வகை வண்ணப் பட்டாடைகள் சார்த்தி, ஐந்து வகை சித்ரான்னங்களைப் படைத்து வழிபடுவதால், இளைஞர்கள் நல்ல ஒழுக்கம், நல்ல அறிவு, நல்ல வேலை, நல்ல திருமண வாழ்வு பெற அருள்புரிகின்றார். மாதந்தோறும் அனைவரும் தத்தம் பிறந்த நட்சத்திர நாளில் வழிபட வேண்டிய அற்புதத் தலம்!
சுவாச பிரம்ம சக்திகள் சுரக்கும் தலம்!
ஸ்ரீகாலபைரவர் சதுர்வேதமங்கலம்
வேத சக்திகள் நிறைந்த முழு முந்திரிகளால் தொடுக்கப் பெற்ற நீண்ட நெடும் மாலைச் சரத்தை ஸ்ரீருத்ர கோடீஸ்வரரின் பாண லிங்க பகுதியைச் சுற்றி சகஸ்ரலிங்கம் போல் சுற்றிச் சார்த்தி வைத்து அலங்கரித்து வழிபட்டு, முழு முந்திரியைப் பிரசாதமாக, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கலில் சேர்த்துத் தானமளிப்பதால், மூச்சுத் திணறல், சுவாசக் குழாய்ப் புற்றுநோய், கடுமையான நுரையீரல் நோய்களால் வாடுவோர் நலம் பெற ருத்ர பூஜா பலன்கள் துணை புரியும்.
“ஸோ+அஹம்” என்பது நம் சுவாசத்தின் சாமவேத சக்தி அம்சமாகும். இது அனைவருக்கும் உண்டு. அதாவது ஸோ, ஹம் என்பது சுவாசம் உள்ளும், வெளியும் வரும் போது ஏற்படும் ஆத்ம ரீதியான சாம ருத்ர வேத சப்தமாகும். இந்த சோ + அஹ யோகத்தில் திளைத்துச் சிறந்தவளாக, சுவாச சக்திகளை அளிப்பவளாக இத்தலத்தில் ஸ்ரீஆத்ம நாயகியாக அம்பாள் அருள்கின்றாள்.
இங்கு, சுப முஹூர்த்த நாட்களில் வேத விற்பன்னர்களைக் கொண்டு ருத்ரம், சமக மந்திரப் பாராயணங்களும், ஓதுவார்களைக் கொண்டு தமிழ் மறைகளையும் ஓத வைத்து, அவர்களுக்குத் தக்க உதவிகளையும், ஏழைகளுக்கு வேத சக்திகள் நிறைந்த முழு முந்திரிகள் நிறைந்த சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கலைத் தானமாக அளித்து வழிபடுதல் மிகவும் விசேஷமானது.
குடும்பத்தில் ஒன்று மாற்றி ஒன்றாக ஏற்படும் துர்மரணம், துக்க சம்பவங்கள், விபத்து, பெரும் நஷ்டங்களில் இருந்து குடும்பத்தைக் காக்க ஒன்றுக்குக் கோடியாய் இத்தலத்தில் பெருகும் ருத்ர மந்திர சக்திப் பலாபலன்கள் பெரிதும் உதவும்.
பெண்களுக்கான காப்பு சக்திகள் |
கடந்த இதழில், கலியுகப் பெண்கள் செய்கின்ற சில தவறுகளை உணர்த்தி, நிவர்த்தி செய்யும் முறைகளையும் விளக்கி இருந்தோம். இத்தொடரை வரவேற்றுப் பலரும் எழுதி உள்ளனர்.
பெண்கள் அறிந்தோ, அறியாமலோ தினமும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொண்டால் பணக் கஷ்டங்கள், நோய்த் துன்பங்கள், குடும்பப் பிரச்னைகள் பலவும் தாமாகவே விலகி விடும்.
கலியுகப் பெண்கள் செய்யும் தினசரித் தவறுகள்!
இல்லறப் பெண்கள், கைகளில் வளையல்கள் இல்லாது இருத்தல் அல்லது வலது, இடது கையில் ஒரு தங்க வளையலை மட்டும் அணிந்திருப்பது தவறானதாகும். நன்கு கலகலவென்று ஒலிக்குமாறு கை நிறைய கண்ணாடி அல்லது இயற்கையான ரப்பர் வளையல்களை அணிந்திருத்தல் வேண்டும். பிளாஸ்டிக்கைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
கண்ணாடி வளையல்கள் இயற்கையாக வருவதாலும், வட்டப் பொருட்களில் திரளும் இயற்கை ஒலிகள் நல்ல ஆன்மீகச் சக்திகளைப் பெற்று இருப்பதாலும், கண்ணாடி வளையல்களை அணிவதே சிறப்பானது, கண்ணாடி வளையல்களை அணிந்து, அவை உடைந்தால் அபசகுனம் ஆகுமே என்று எண்ணாதீர்கள். கண்ணாடி வளையல் அணிந்திருக்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்ற இயற்கையான கவனமும், ஞாபக சக்தியும் மனதில் நன்கு பதிவதற்காகவே கண்ணாடி வளையல்கள் அணிதல் தெய்வீக நியதியாகவே அமைந்துள்ளது.
மேலும் வளையல்களுக்கு தோஷங்களை ஈர்த்து, நற்சக்திகளை நிரவும் தன்மைகள் உண்டு. தோஷங்கள் நிறையச் சேர்ந்தால் தாங்க இயலாது வளையல் தானாகவே உடையும். ஆண்டிற்கு 100, 200 என வளையல்கள் நிறைய வாங்கி வைத்து, மாதப் பூர நாளில் அம்பிகைக்குச் சார்த்திப் பிரசாதமாக வளையல்களை வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு, அவ்வப்போது அணிந்து வாருங்கள். வெள்ளி, செவ்வாய் மற்றும் பண்டிகை தினங்களில் கை நிறைய வளையல்களை அணிந்து பூஜித்து ஆலய தரிசனம் செய்வதாலும், ஏழைச் சுமங்கலிகளுக்கு அளித்தலாலும், வளையல்களில் காப்பு ரட்சா சக்திகள் பதிந்து, அவ்வப்போது துணையாகக் காத்து நின்று வந்து உதவுகின்றது.
ஒவ்வொரு பூர நட்சத்திரத்திலும் அம்பிகைக்கு வளையல் சார்த்துவதுடன், பால் விருட்சங்கள், புன்னை போன்ற மரங்களிலும் பூர நட்சத்திர நாளில், வளையல்களைக் காணிக்கையாகக் கட்டுதலால், கற்பு ரட்சா சக்திகள் பெருகும்.
ஒவ்வொருவரும் எதெதற்கோ எவ்வளவோ செலவு செய்கையில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று ஏழைச் சிறுமிகளுக்கு, ஏழைச் சுமங்கலிகளுக்கு வளையல்களைத் தானமாக அளிப்பது எளிமையான இறைப்பணியாக, அபரிமிதமான புண்ய சக்திகளைப் பெற்றுத் தரக் கூடிய நற்காரியம் அல்லவா!
ஸ்ரீஆடிப்பூர அம்மன்
பட்டீஸ்வரம்
திருப்பாற்கடல் ஸ்ரீநிறைவளையாம்பிகை அம்பாள்!
சென்னை – வேலூர் மார்கத்தில், காவேரிப்பாக்கம் சந்திப்பில் இருந்து 2 கி.மீ உள்ளே உள்ள திருப்பாற்கடல் ஸ்ரீதிருவாலீஸ்வரர் ஆலயத்தில் அம்பிகை ஸ்ரீநிறைவளையாம்பிகை (ஸ்ரீஸ்வர்ண கங்கணாம்பிகை) என்ற பெயரைத் தாங்கி அருள் புரிகின்றாள். இங்கு அம்பிகைக்குச் சார்த்திய வளையல்களைக் கர்பிணிகளுக்கு சீமந்தம், வளைகாப்பு போன்ற சுபகரமான விசேஷங்களில் அணிவித்து நடத்துவதால், நல்ல சந்ததிகள் தழைக்க அருள் சிறந்து பூரிக்கும்.
ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திரம் தோறும் இங்கு அம்பிகைக்கு 1008 வளையல்கள் சார்த்தி, ஜாதி, மத, குல, இன பேதமின்றி ஏழைச் சுமங்கலிகளுக்கு வளையல்களைத் தானமாக அளித்து வருவதால், பெண் பிள்ளைகள் நல்ஒழுக்கத்துடன் வாழ்ந்து, புனிதமான கற்புக்கரசியாய் நல்ல சாந்தமான திருமண வாழ்வைப் பெற்றிட அருள்சுரக்கும் தலமிது!
கன்னிப் பெண்கள் தக்கப் பருவத்தில் பூப்படைந்து கற்புக் காப்பு சக்திகளைப் பெற்றிடவும் உதவும் தலம். பெண் பிள்ளைகளைப் பற்றிக் கவலையுடன் வாழும் தாய்மார்களின் கவலைகள் தணியவும் துணை புரியும் மகத்தான அம்பிகைத் தலம்.
பெண்களுக்குக் காப்பு சக்திகள் தரும் ஆன்மீக சாதனங்கள்!
இயற்கையிலே பெண்களுக்கு இறைவன் நிறையத் தற்காப்பு சக்திகளைப் பெற்றுத் தரக் கூடியதாகப் பல ஆன்மீகச் சாதனங்களை அளித்துள்ளான்.
நெற்றித் திலகம்
நெற்றி முன் வகிட்டுத் திலகம்
மாங்கல்யத் திலகம் – ஆகிய முத்திலக முக்திச் சுடர் வழி
மாங்கல்யச் சரடு
காதுகளில் தோடுகள், மூக்குத்தி
கைகளில் வளையல்கள்
மணிக்கட்டுகளில் காசிக் கயிறு, மணி கங்கண், கருப்புக் கயிறு
பாதங்களில் கொலுசு
கால் விரல்களில் மெட்டிகள்
கைவிரல்களில் மோதிரங்கள்
இடுப்பில் அரை ஞான்கயிறு,
தலையில் நறுமணப் பூச்சரம்
-இவையனைத்தும் பெண்களுக்கு ஒவ்வொரு விநாடியும் தற்காப்புச் சக்திகளைத் தந்திடுவனவாகும்.
ஆன்மீக சக்திகளை அளிக்கும் புடவை ஆடை
பாவாடை, தாவணி, புடவை யாவும் புனிதமான பண்டைய பாரத, தமிழ்ப் பண்பாட்டு ஆடைகளாகும். பருத்திப் புடவை அணிவதில் தாம் நிறைய ஆன்மீக சக்திகள் கிட்டுகின்றன.!
ஏழு கஜம், எட்டு கஜம், ஒன்பது கஜம் போன்று மடிசார் பாணியில் நீளமான புடவைகளைக் கட்டுகையில் நிறைய ஆன்மீக ரீதியான சக்திகள் திரள்கின்றன. இதனால் சுவாசமும் சீர்படும். தினமும் பருத்திப் புடவையைத் தோய்த்து, உலர்த்தி அணிவது தெய்வீக சக்திகளை ஊட்டுவிக்கும், பருத்தி புடவையின் ஒவ்வொரு நூல் இழையிலும், தறி, க்னா போன்ற தேவதைகள் உறைகின்றனர். இவற்றை விளக்கும் வேதமந்திரங்களும் நிறைய உண்டு.
புடவை அணிதலும் ஒருவகை யோக முறையே! மற்ற வகை ஆடை முறைகளில் உடலை இறுக்கும், முறையான பிராணாயாம சுவாசத்தைத் தடுக்கும் வகையில் தான் அமைந்துள்ளன. நல்ல தாராளமாகத் துணி விட்டுத் தைக்கும் ஆடைமுறையும் மாறி, உடலை இறுக்கும் ஆடை முறைகளே நடைமுறைக்கு வந்துள்ளன., இவை சுவாச தோஷங்களையும், தோல் நோய்களையுமே தந்து உடல் நாளங்களைப் பாதிப்பதால் பலத்த தோல், நாசி, இருதய நோய்களுக்குக் காரணமாகின்றன.
பருத்தி இழையில் உறையும் தேவதைகள் சிரஞ்சீவித்வ சுமங்கலித்வம் பெற்றவை. இவற்றிற்கு மறைவு என்பதே கிடையாது. துவைப்பதாலோ, உலர்த்துவதாலோ, அக்னியில் இடுவதாலோ இவை என்றும் மறைவதில்லை. எனவே வட பாரத பாணியில் ஆடைகள் அணிந்திட்டாலும் வெள்ளி, செவ்வாய் மற்றும் பண்டிகைகள், அவரவர் நட்சத்திர நாட்களிலும், பூஜை நேரங்களிலும், புடவை, தாவணி அணியும் நற்பழக்கத்தைக் கை கொள்ள வேண்டும்.
ஸ்ரீபன்னீர்ப்பழச் சித்தர் |
பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி அருணாசல கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே!
திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம்!
காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில் நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!
பன்னீர் இலை, பன்னீர்ப் புஷ்பம், பன்னீர்ப் பழம் மூன்றுமே விசேஷமான தெய்வீக சக்திகளைக் கொண்டவை. இதில் சிறியதாக இருக்கும் பன்னீர்ப் பழம், மலைத் தலங்களில் நன்கு காணப்படக் கூடியதாகும். “பசியாப் பழம், சின்முத்திரைக் கனி” என்றும் இதற்குப் பெயர்.
ஸ்ரீஅன்னபூரணி அம்பாள்
திருச்சோற்றுத்துறை
விண்ணுலகங்களில், அருந்தவ யோகத்தில் தமக்குக் கிட்டிய பசியா நல்வரம்தனை, பல மஹரிஷிகளும் தம் தபோ பலத்துடன் ஸ்ரீசாகம்பரி தேவியிடம் அர்ப்பணித்திட்டனர். இதனால், தேவியும் ஓதவனேஸ்வரர் (சோற்றுத்துறை நாதர்) அருளால், அவற்றைக் கொண்டு பன்னீர்ப் பழத் தாவரத்தைத் தோற்றுவித்தாள். இதனால் இது “பசியாப் பழம்” எனவும் ஆயிற்று!
ப(பு)சியாச் சித்தர்
இவ்வாறு சிருஷ்டியின் போது உருவாக்கப் பெறும் ஒவ்வொரு பொருளும் இறைவனிடம் அர்ப்பணிக்கப் பெறும், பன்னீர்ப் பழத்தை ஸ்ரீசாகம்பரி தேவி தோற்றுவித்த உடனேயே, இறைவனே நேரில் தோன்றி, சின்முத்திரை போல் ஆன, கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால் அக்கனியை எடுத்திட்டார்., இதனால் சின்முத்திரைக் கனி எனவும் இது புகழ் பெற்றது. பல கோடி யுகங்களாகப் பசியா, புசியாத் தவமிருந்த ஓர் அற்புதச் சித்தர் பிரானின் கரங்களில் ஈஸ்வரன், அக்கனியை இட்டு ஆசிர்வதித்தார். அவரே பன்னீர்ப் பழச் சித்தர் ஆனார். கட்டை விரல் அளவே உள்ள சித்தர் பிரான்! இறைவனே சோற்றுறை நாதராக எடுத்தளித்த பன்னீர்ப் பழ பிரசாத மேன்மையால் அவர் வருடம் ஒரு முறை மட்டுமே ஒரே ஒரு பன்னீர்ப் பழம் உண்டு. “பசியாச் சித்தராய், புசியாச் சித்தராய்ப்” அருணாசலப் புண்ணிய பூமியில் உறைந்தார்.
இவ்வாறு பன்னீர்ப் பழம் தோன்றி, ஈஸ்வரனின் திருக்கரங்களால் அதியற்புத இறைப் பிரசாதமாகச் சித்தர்பிரானை அடைந்த நாளே ஒரு யுகத்தின் தாரண ஆண்டு ஆவணி மாத சிவராத்திரி தினமாகும். இந்நாளில் பன்னீர்ப் பழச் சித்தர் கட்டைவிரல் அளவான தம் மானுட வடிவோடு பன்னீர்ப் பழத்தைத் தாங்கி, அருணாசலத்தைக் கிரிவலம் வந்து அருள்கின்றார். கட்டை விரல் அளவான அவருடைய உருவிற்கு, பன்னீர்ப் பழம் என்பது ஒரு பாறை போலானதாகும். பாக்யம் உள்ளவர்களுக்கு கிரிவலத்தில் இவர் தரிசனம் கிட்டும், ஆனால் இன்னார்தான் சித்தர் என அறிதல் கடினம், எனினும், பூர்வ ஜன்மப் புண்ய வசத்தால் சித்தர்களைத் தரிசிக்கும் பாக்யம் கிட்டினால், அவர்களைத் தொந்தரவு செய்யாது, தூர இருந்து வணங்கிச் செல்வதே அவர்களுடைய பரிபூரணமான ஆசிகளைப் பெற்றுத் தரும். மாறாக, அவர்களைத் துரத்தி, துரத்தித் தொடர்ந்து சென்று, “அது வேண்டும், இது வேண்டும்” என்று பிய்த்துப் பிடுங்குதல் கூடாது. ஆசிகள் தாமாகப் பொழிபவை! கேட்டு வலியுறுத்திப் பிடுங்குவதல்ல!
நீறு பூத்த ந(நி)லம்
பன்னீர்ப் பழச் சித்தர் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகையில், கிரிவலம் வருவோர் அருகில் திருநீற்றைக் கையில் வைத்து ஊதிடுவார். இத்திருநீற்றின் ஸ்பரிசம் பெறுவோர்க்கு நோய் நிவாரணம், துன்பங்களுக்கான விடிவு, தோஷ நிவாரணங்கள் கிட்டும். ஆனால் இச்சித்தரின் தரிசனத்தைப் பெறுதல்தான் அரிதிலும், அரிதாம். இவர் எப்போதும் கிரிவலம் வந்து கொண்டே இருப்பார். ஒவ்வொரு முறையும் ஒரு பகுதியில் தென்படுவார். அவரவருடைய பக்தி நிலை, ஆழ்ந்த நம்பிக்கை, முன்வினைத் தன்மைகள், பூர்வ ஜென்மப் புண்ய சக்திகளைப் பொறுத்து அவருடைய தரிசனமும், அனுகிரகமும் கிட்டும்.
பல மந்திரவாதிகளும் அவரைப் பார்த்து பலவந்தமாக பல சித்திகளைப் பெற முனைந்து, இருந்த சித்திகளையும் இழந்தனர். அஷ்டமா சித்திகளில் சிலவற்றை அபூர்வமாகப் பெற்ற மந்திரவாதிகளாலும் அவரைக் காண இயலவில்லை. அவர்கள் நன்கு மனம் திருந்தி கிரிவலம் வந்தபோது தான் பன்னீர்ப் பழச் சித்தரின் தரிசனம் கிட்டியது.
தானே தந்த தனம்!
ஆனால் அருணாசல கிரிவலத்தில், சிலருக்காக இவரே வலியப் போய்த் தரிசனம் தந்து ஆசிர்வதித்தலும் உண்டு. மஹாராஜாக்களும், பேரரசர்களும் பல நாடுகளில் இருந்தும் தேடி வருவார்கள். உத்தமப் பேரரசர்கள் இவரிடம் ஆசிகளைப் பெற்றுத் தர்மப் பூர்வமாக ஆட்சியை நடத்தினர். சுயநலமின்றி இவரை நாடி தம் நாட்டு மக்களின் நலன்களுக்காக மன்னர்கள் நாடினால் தான், இவர் அவர்களுக்குத் தரிசனம் தருவார். பல மாமன்னர்களையும் திருத்தி நல்லன்பு காட்டியவர்.
ராஜா தேசிங்கு இச்சித்தரைத் தரிசித்து அனுகிரகம் பெற்றுள்ளார். சரித்திர ரீதியாக ராஜா தேசிங்கு பற்றிய பல சம்பவங்கள், கதைகள் இருந்தாலும், அருணாசலத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட அரசர்களுள் ராஜா தேசிங்கும் ஒருவர். சரித்திரம் மூலம் பலரும் அறியாத ராஜா தேசிங்கின் ஆன்மீகப் பேரனுபவங்கள் பல உண்டு. தக்க சற்குருமார்களால் உலகிற்கு அவை புலப்படுத்தப்படும்.
ஸ்ரீசபலதேவி அம்பாள்
திருமேற்றளி
அஸ்வ ரேகை முத்திரை
பன்னீர்ப் பழச் சித்தர் மிகவும் கனிந்த கனியாய், கலியுக மஹான்கள் பலருக்கும் அருள்பாலித்துள்ளார். இவர் அருளியதுள் ஒன்றே அஸ்வ ரேகை முத்திரை. வலது கையின் நடு மூன்று விரல்களை இடது கையின் உள் ரேகைகளின் மேல் வைத்து வீணை போல் மீட்டி, குதிரை ஓடுவது போல் ஓட்டி, நகர்த்தி குருநாமம் ஜபிப்பதே அஸ்வ ரேகை முத்திரை.
கனிந்த கனிச் சுடராய்ப்
பணிந்த பரப் பிரம்ம
வைத்துளம் ஆற்றுவதாம்
பன்னீர்ப் பழச் சித்தம்
பரிசுத்தம் ஆற்றுவதாம்!
போற்றுவதாம்! போற்றுவதாம்
சித்போதம் போற்றுவதாம்!
-என்று ஓதி உள்ளங்கை ரேகைகள் முழுவதிலும் முப்போத மூன்று நுனி விரல்களால் ரேகைகளுள் உழுதவாறே திருஅண்ணாமலையை தரிசித்தவாறே, இம்மாத சிவராத்திரி கிரிவலம் வருதலால் நல்ஒழுக்கம் சித்திக்கும்.
பொதுவாக, சிறுவர்கள், சிறுமியர்கள், பள்ளி, கல்லூரிப் பருவத்தினர், இளையவயதினர் தம் பெற்றோர்கள் , பெரியோர்களுடன் அஸ்வ ரேகை முத்திரை இட்டுக் கிரிவலம் வருதல் விசேஷமானது.
மூத்தவர்களுடன் ஏற்பட்டுள்ள மனத்தாங்கல்கள், மனஸ்தாபங்கள், பகைமை தீர உதவும் மாத சிவராத்திரி கிரிவலம்!
கணவன், மனைவி இருவருமே நன்கு படித்தவர்களாக, நல்ல வேலையில் இருப்பவர்களாயின் பலத்த Ego பிரச்னைகள் அடிக்கடி ஏற்பட்டுப் பல நாட்களுக்குப் பேச்சு வார்த்தை இல்லாமலேயே போய்விடும். இத்தகைய Ego பிரச்னைகள் தீர, நிறைய விட்டுக் கொடுக்கும் கனிந்த மனம் தேவையாகும். இதை உணர்விக்கும் கிரிவலமும் இதுவே! மனஸ்தாபங்களுடன் இருப்போரை அழைத்துத் துணையாகக் கூட உற்றவர்களும் வந்து கிரிவலம் புரிந்திட, எத்தகைய மனப் பகைமையையும் ஆற்றவல்ல மாத சிவராத்திரி கிரிவலம்.
கனிந்த கனி முனி
“கனிந்த கனி” எனச் சித்தர்களால் போற்றப் பெறும் பரமாச்சார்யாள் ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி சுவாமிகளின் பக்தர்கள், அனைத்து மதங்களிலும், அனைத்து வகைகளிலும், அனைத்துக் கட்சிகளிலும் உலகெங்கும் ஆயிரமாயிரம் உண்டு. பரமாச்சார்யாள் எங்கும் நடந்தே சென்றவர். பாத யாத்திரையாகவே பாரதமெங்கும் புனிதப் பயணம் பூண்டு பல்லாயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், யோகியர்கள், மும்மூட்சுக்களின் அற்புத தரிசனங்களைப் பெற்றவர்.
சித்தர்களின் மகிமையைப் பரப்பிச் சித்த ஞானிகளால் “கனிந்த கனி” எனப் போற்றப் பெறுபவர். சித்தர்களின் சிவச் செல்வத்தைத் தம் பாதயாத்திரை மூலம் பரப்பியவர். ஆலயங்களில் உள்ள எண்ணற்ற சித்தர்களின் மஹிமையை உணர்த்தியவர். “கனிந்த கனியாம்” பரமாச்சாரியாளின் ஏட்டில் வராத சித்தர் தரிசன இறையனுபூதிகள் ஆயிரமாயிரம் உண்டு. இவையாவும், “அடிமை கண்ட ஆனந்தம்” போல உளப்பூர்வமாகச் சித்தானுபூதியாகவே உணரப் பெற வேண்டியவை! பன்னீர்ப் பழச் சித்தரின் பரிபூரண அருளைப் பூண்டவர். தம்மைத் தரிசிக்க வந்தோர்க்கு பழங்களை அளித்துப் பரமாச்சார்யாள் கூட்டிய “கனிந்த கனியான” தெய்வீக ஆசீர்வாத ரகசியங்களை, அனுபூதிகளைத் தக்க சித்த சற்குரு மூலமே அறிதல் சாத்தியமாகும்.
பரமாச்சார்யாள் ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி சுவாமிகளின் மீது இருதயப் பூர்வமாக ஈடுபாடு கொண்டவர்கள் யாவரும், இம்மாத சிவராத்திரியில் அருணாசல கிரிவலம் வந்து, பன்னீர்ப் பழச் சித்தரின் கனிந்த கனியருட் பொருளால் குருவருள் திரளப் பிரார்த்திக்க வேண்டும். இன்றைய அருணாசல கிரிவலத்தில், மூங்கில் கூடை அல்லது மஞ்சள் நிறப் பையில் நிறையக் கனிகளை (பழங்களை)ச் சுமந்து,
“சிவக் கனியே,
கனிந்த மணிச் சிவமாய்,
கனிந்த பன்னீர்க் கனியாய்,
கனிந்த கனிச் சிவமாய்ப்,
பணிந்தார் பரமம் துணை!”
என்று ஓதியவாறு, இம்மாத சிவராத்திரியில் அருணாசல கிரிவலம் வந்து, கனிகளை ஏழைகளுக்கும், பசுவிற்கும் அளித்தலால், “கனிந்த பித்ரு மூர்த்திகளின், உத்தமப் பெரியோர்களின் ஆசிகள் கிட்டிடவும், பன்னீர்ப் பழச் சித்தரின் அருளாசிகளாய்க் கனியவும் துணை புரியும்.
சோழபுரம் ஸ்ரீசிவபூரணி |
சிவனைப் பூஜிக்கும் நிலையில் உள்ள சனீஸ்வரரைப் பூஜித்து சனீஸ்வரரின் சிவபூஜாப் பலன்களைப் பெறுதல் வேண்டுமா? சோழபுரம் வாருங்கள்!
ஈஸ்வரப் பட்டத்தைச் சிவனருளால் அடைந்த சனீஸ்வரருக்குக் கிட்டிய முதல் அம்பிகை தரிசனமே சோழபுரம் ஸ்ரீசிவபூரணி அம்பாள் வடிவாகும்.
ஸ்ரீசிவபூரணி அம்பாள்
சோழபுரம்
ஸ்ரீசந்தோஷி மாதாவின் பரமானந்த மூலவடிவே ஸ்ரீசிவபூஷணி அம்பாள்!
துன்பங்களுக்கு இடையிலும், நிவாரண சக்திகளைத் தந்து, ஒப்பிலா சந்தோஷத்தைத் தரும் சோழபுரம் ஸ்ரீசிவபூஷணி அம்பிகை!
சோழபுரம் ஸ்ரீசிவபூரணி (ஸ்ரீசிவபூஷணி) அம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதர் கோயில் மஹிமை!
சிவனே சிவமாய்ச் “சிவாநீ”யெனச் சிரித்து “உவந்த” சிவபூரணியே சிவபூஷணி!
சந்தோஷி மாதாவைத் தோற்றுவித்தபோது இரண்டு கரங்களுடன் சிவபூஷணி ஆனாள். எனவே சிவபூரணியே சிவபூஷணி என்ற நாமத்துடன் சந்தோஷி மாதா அவதாரத்திற்குக் காரணமானாள். சிவ பூரணத்தில், சிவானந்தத்தில், சிவாட்சயப் பரமானந்தத்தில், தாமே சுயமாய், இங்கு சோழபுரத்தில் சிவபூஷணி தேவி அவதாரிகையைத் தோற்றுவித்தவரே கயிலாயப்பதியாராம் ஆதிசிவ மூர்த்தி! பண்டைய யுகங்களில் மகிழ்ச்சிநாதர், சந்தோஷ லிங்கர் போன்ற நாமங்களைப் பூண்டு அருள் பாலித்த ஆனந்த வள்ளல் பெருமான் இவ்வாறு பரமானந்த சந்தோஷப் பரிமாணத்தில் பரம்பொருளாம் சிவபெருமானே சுயம்புவாய்த் தோற்றுவித்த சிவபூஷணி அம்பிகையே, சந்தோஷி மாதா அவதாரத்திற்கு மூலகுரு அம்பிகையாகவும், கலியுகத்தில் பொலிகின்றாள். ஆம், சந்தோஷி மாதா தோன்றியதே சோழபுரம் சிவபூஷணி அம்பிகையிடம் இருந்தேயாம்! “சிவாநீ” என்ற மூலிகை வகைக் கல்ப ஊதுவர்த்திகள் உண்டு, இவை சிவபூஷணிக்கு மிகவும் ப்ரீதியானவை!
சிவபூஷணி தேவியின் பரமானந்த வடிவே சந்தோஷிமாதா!
“சிவபூஷணம்” என்பது சிவத்தின் பரிபூரணத்தில் இருந்து பரிணமித்துத் தோன்றிப் பரிமளிப்பதாகும். சிவம் என்பது ஈடு இணையில்லாத, எல்லையற்ற பரமானந்தத்தைக் குறிப்பதன்றோ! பார்த்தால், நினைத்தால், எண்ணினால், தரிசித்தாலே உள்ளொளியாய்த் தோன்றும் நிலையான சந்தோஷத்தைத் தருகின்ற உலக அன்னையே சோழபுரம் ஸ்ரீசிவபூஷணி அம்பாள், ஸ்ரீசிவபூஷணியிடமிருந்து தோன்றிய அம்பிகை அம்சமே ஸ்ரீசந்தோஷி மாதா! ஆம், ஸ்ரீசந்தோஷி மாதா தோன்றிய மூல அம்பிகை வடிவே சோழபுரம் ஸ்ரீசிவபூஷணி தேவி! எனவே ஸ்ரீசந்தோஷி மாதாவின் பக்தர்கள் அனைவருமே, உலகில் எங்கு வசித்திடினும், வாழ்வில் ஒரு முறையேனும் தரிசித்தாக வேண்டிய அம்பிகையே சோழபுரம் ஸ்ரீசிவபூரணி (ஸ்ரீசிவபூஷணி) தேவி!
ஸ்ரீதுர்கா தேவி சோழபுரம்
சோழபுரம் சனீஸ்வரரின் பூஜையில் நாமும் கலப்போம்!
ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஸ்ரீசனீஸ்வரர், முதலில் ஸ்ரீசிவபூரணி தேவியின் பேரொளிப் பிரகாச தரிசனத்தை பெற்ற இடமே சோழபுரம்! பிறகு அம்பிகையிடமிருந்தே கயிலாய லிங்க தரிசன பூஜை முறைகளையும் அறிந்து, இங்கேயே கீர்த்தி ஸ்திர வாசம் பூண்டு, சோழபுரத்தில் இன்றும், என்றுமாய், சனீஸ்வரர் எந்நேரமும் சூக்கும, காரண வடிவில் ஸ்ரீகைலாசநாதரைப் பூஜித்து வருகின்றார்.
ஆம், சிவலிங்கத்தைப் பூஜிக்கும் வடிவில் சனீஸ்வர மூர்த்தி, சோழபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் மட்டுமே காட்சி தருகின்றார். அதாவது மற்ற தலங்களில் உள்ள சனீஸ்வரரை விட, இவருக்கென விசேஷமாக அமைந்திருக்கும் மகத்துவம் யாதெனில், ஈஸ்வரப் பட்டம் பெற்ற சாட்சாத் சனீஸ்வரரே இங்கு நேரில் வந்து ஸ்ரீகைலாசநாதரைப் பூஜிப்பதாகும், அதாவது (சிவனைப்) பூஜிக்கும் சனீஸ்வரரை, நாம் இங்கு, சோழபுரம் சிவாலயத்தில் பூஜிப்பதால், சனீஸ்வரரின் சிவபூஜைப் பலாபலன்களையும், அவரவர் பக்தி நிலைக்கு ஏற்பவும் கூடுதலாகப் பெறுவதாகும்.
கைலாசபதியாம் ஆதிசிவனே பரவசம் பூண்டு, பரமானந்தம் கொண்டு பூலோக ஜீவன்களுக்கு உரித்தான மகிழ்ச்சியுடன் புவியில் ஸ்ரீகைலாசநாதர் என்ற பெயர் தாங்கித் தோன்றிய தலங்கள்தாம் நெடுங்குடி, வாளாடி, சோழபுரம், திடியன்மலை போன்றவையாம்.
இவற்றுள் சர்வேஸ்வரனே தம்முடைய சிவபூரணத்தைப் பரிபூரணப் பிரகாசமாக்கி, இதிலிருந்து தோற்றுவித்த பராசக்தியாம் உமையவளின் வடிவே சோழபுரம் ஸ்ரீசிவபூரணி அவதாரிகையாகும்.
ஸ்ரீதட்சிணா மூர்த்தி
சோழபுரம்
சனி தசை காட்டுவது தர்ம நிலையையே!
“சனியைப் போல் கொடுப்பாருமில்லை.....” என்ற சொல் வழக்கு ஒன்று உண்டு. ஆனால் இந்த வாக்கியத்தில், சனி மூர்த்தி தீமைகளையே தருவதாக மிகவும் தவறாக அர்த்தம் கொள்கின்றனர். இது சரியன்று, வரங்களைக் கொடுப்பவரும், வருகின்ற தீவினைகளைக் கெடுத்து, வினைப் பரிபாலனத்தைச் சீரமைத்துத் தருபவருமே சனீஸ்வரர்!
“வினை கெடுதல்” என்றால் கலியுகத்தின் தற்போதைய பொருளல்ல! அவரவர், அவரவர் செய்த வினைகளுக்கு ஏற்றபடி விளைவுகளை அனுபவித்தாக வேண்டும் என்பது தர்ம நியதி! தாம் செய்த தீவினைகளின் விளைவுகளையும் ஒருவர் அனுபவிக்கையில், அவை தாங்கொணாத் துன்பங்களாக வருகின்றன. எனவே, வர இருக்கின்றனவும் வந்ததுமான தீவினை அம்சங்களையும் “கெடுத்து” அதாவது மாற்றிச் சீரமைத்து, வல்வினைகளின் விளைவுகளையும் ஓரளவேனும் அனுபவித்தால்தான் தீவினைகளில் இருந்து முழுமையாக விடுதலை பெற முடியும்.
சோழபுரம் சனீஸ்வரரே “வினைதீர்த்தான்”!
எனவே துன்பங்களைத் தாங்குவதற்கான மனோசக்தியைப் பெற்றால்தான் துன்பங்கள் வந்த காரணம் புலனாகும். துன்பங்களுக்கான மூல காரணங்களை அறிந்தால்தான் முழுமையான தீர்வைப் பெற முடியும். இல்லையெனில் வினைகளின் விளைவுகள் அவ்வப்போது துன்பங்களாகத் தலை தூக்கிக் கொண்டே இருக்கும்.
இவ்வாறு சனி தசையில் “வந்த வினை, வருகின்ற வினை, வரும் வினை” ஆகிய முவ்வினை இலக்கணத்தை நன்கு உணர்வித்துக் காப்பவரே சோழபுரம் சனீஸ்வரர்! எனவே தான் “வினைதீர்த்தான்” என்ற சிறப்பான பெயரையும் இவர் பெற்றுள்ளார்.
எனவே, ஜாதகப் பூர்வமாக, சனி தசை என்பது அவரவர் செய்த தீவினைகளுக்கு ஏற்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டிய சனி கிரக சஞ்சாரக் காலமாகும். இதற்காக, சனீஸ்வரரைக் கெடுப்பவர். கெடுதல்களை, துன்பங்களைத் தருபவர் என்று கூறுவது என்னே அறியாமை! “சிவ சிவ!” இவ்வாறு கிரக மூர்த்திகளைப் பற்றி ஒரு போதும் தவறான அர்த்தங்களைப் பதித்துச் சொல்லவே கூடாது. தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள்! சோழபுரம் சனீஸ்வரரே “வினைதீர்த்தான்”! செட்டிநாட்டுப் பகுதிகளில் “வினைதீர்த்தான்” என்ற திவ்யமான சிவநாமப் பெயரைச் சூடும் வழக்கம் இன்றும் உண்டு!
ஸ்ரீகுரு பகவான்
சோழபுரம்
அவரவர் பூர்வ ஜன்ம தீய வினைகளுக்கு ஏற்ப, கடும் துன்பங்களை அனுபவிக்க வேண்டிய காலத்தை உணர்த்தும் வகையில் அமையும் சனி தசையில், சனி புக்தியில், சனி அந்தரக் காலங்களில், சோழபுரம் சனீஸ்வரரை ஆழ்ந்த நம்பிக்கையுடன் வேண்டி முறையாக வழிபட்டு வந்தால், துன்பங்களின் சுமையைச் சனீஸ்வர சுவாமி, தம் சிவபூஜா பலன்களால் ஏற்று, துன்பச் சுமையைத் தணித்து நம்மைக் காப்பவர் ஆகின்றார்.
சனீஸ்வரரே, “வினை தீர்க்க” முன் வந்தருளும் தலம்
தீவினைகளை மாற்றி, பழவினைகளைச் சீரமைத்து நல்வரம் தருபவராக, தீய சக்திகளைத் தடுத்து ஜீவன்களைக் காப்பவராக, தீவினை நோய்க் கொடுமைகளைத் தணித்து நம்மை ரட்சிப்பவராக, தீய குணங்களை அழிப்பவராகக் கலியுகத்தில் கிரக மூர்த்திப் பரிபாலனத்துடன் துலங்கிட, ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி வரம் பெற்ற தலங்களுள் ஒன்றே சோழபுரம் ஆகும். இங்கு சனி தசையில் “கொடுத்தல்” அம்சங்கள், அதாவது சனி கிரக தசையின் நல்வர அம்சங்கள் இரட்டிப்பாகும்.
இதே போல், பழவினை அழுத்தங்களால் “கெடுத்தல்” வகைத் துன்பங்கள் மிகுதியாவதும் உண்டு. இவற்றைத் தணிப்பதற்கான ரட்சா சக்திகளையும் இரு மடங்காக்கித் தந்து, துன்பச் சுமையைப் பெருமளவில் தணித்துத் தருகின்ற வகையில், சிவபூஜை ஆற்றுகின்றவராகவும் சோழபுரம் சனீஸ்வரர் விசேஷமாக அருள்கின்றார். இதுவே “சனியைப் போல் கொடுப்பாருமில்லை” என்பதன் உண்மையான அர்த்த விளக்கங்களில் ஒன்றாம்!
அதாவது சனி தசை என்பது துன்பங்கள் மிகுதியாகும் காலம் என்று தவறாக அர்த்தம் கொள்ளாமல், வாழ்வில் பழவினைகளினால், துன்ப மிகுதியை முன் கூட்டியே உணர்த்தும் காலமே சனி தசை என்று அறிதல் வேண்டும். முன்னரே அறிந்தால்தானே தற்காத்துக் கொள்ள முடியும்!
கரிநாள், சனிக்கிழமை மற்றும் சனீஸ்வரருக்கு உரித்தான பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திர நாட்களில் இங்கு, சனீஸ்வரர் வழிபடும் லிங்கத்திற்கும், சனீஸ்வரருக்கும் புனுகு, அத்தர், ஜவ்வாது கலந்த (சந்தன மரப் பொடியைக் கரைத்து அல்லாது, கைகளால் நன்கு அரைத்த) சந்தனக் காப்பிட்டு வழிபட்டு வர, குடும்பத்தைத் தாக்கும் பலத்த கடன், பெரு வட்டித் துன்பங்கள் அகல்வதற்கும் சனீஸ்வரர் அருள்கின்றார். ஆழ்ந்த நம்பிக்கையுடன் பூஜித்து வந்திடில் நல்ல பலன்களைக் காணலாம். வினைதீர்க்கும் வெற்றியப்பன்!
ஸ்ரீவிநாயகப் பெருமான்
சோழபுரம்
சிவாநீ, சிவானீ, சிவபூரிதப் பூரணி, மகிழ்ச்சி நாயகி, சந்தோஷவல்லி, ஆனந்தவல்லி போன்ற அற்புதப் பெயர்களைப் பண்டைய யுகங்களில் பூண்டு, தற்போது கலியுகத்தில் சிவபூரணியாய் அருள்கின்றாள். சிவபூஷணி வழிபாடு கலியுகப் பெண்களுக்கு அற்புத வரப் பிரசாதமாகும். எத்தனையோ குடும்பப் பிரச்னைகளை எளிதில் தீர்க்கின்றவள். அருளின் அழகு வடிவாய்ப் பிரகாசிப்பதால் தரிசிக்கும் போதே யாவருக்கும் உள்ளூர ஆனந்தம் ஏற்படுவதை நன்கு உணரலாம்!
சோகமே உருவாய் வந்தவர்களும் சிவபூஷணியைத் தரிசித்தவுடன் இனம் புரியாத வகையில் உள்ளூர ஆனந்தம் ஏற்பட்டு, “அப்பப்பா! இப்படி சந்தோஷப்பட்டு எத்தனை வருஷமாச்சு!” என்று மகிழ்ச்சியுடன் உரைக்க வைக்கும் பரம சந்தோஷத் தலம்! இதனால் பல்லாண்டுகளுக்கு முன் வரையும், இன்றும் சில குடும்பங்களிலும் தம் குழந்தைகளுக்கு “சந்தோஷம், சந்தோஷீ” என்ற பெயர்களை வைத்தவர்களும் உண்டு.
சிவபூரணி பூஜைப் பலன்கள்
“இறைவனை” வணங்குதலும், ஆலய தரிசனங்களும் “பிறவிக் கடமை” என்ற நிலை மாறி, அந்தந்த ஆலய தரிசனப் பலன்களைக் கேட்ட பின்னரே குறித்த கோயிலுக்குச் செல்லும் அளவிற்குக் கலியுகத்தில் பக்தி நிலை மங்கி விட்டது. சோழபுரம் சிவபூரணி தரிசன பலன்களே சொல், பொருள், பகுத்தறிவுக்கு எட்டாததெனில், சிவபூரணி பூஜைப் பலன்கள் சொல்லவும் பெரிதன்றோ!
இளைய சமுதாயத்தினர் பலரும் பலவிதமான முறையற்ற ஆசைகளுக்கு ஆட்பட்டு விடுகின்றார்கள். குறிப்பாக, மது, புகையிலை, பொடி, போதைப் பொருள், காமக் கேளிக்கை ஆட்டங்கள் போன்றவற்றில் சட்டென்று மனதை லயித்து, புதிய கெட்ட வழக்கங்களுக்கு மிக எளிதில் கலியுக இளைஞர்கள் ஆளாகின்றார்கள். இவர்களை எளிதில் சீர் திருத்த சோழபுரம் சிவபூரணித் தாய் அருட் கருணை புரிகின்றாள்.
மஞ்சள் மங்களமே
சோழபுரம்
அழகான கணவன், அழகான மனைவி வேண்டும் என்று ஏங்குவோர், இத்தலத்தில் அம்பிகைக்குச் சுபமுகூர்த்த நாட்களில் கல்யாண உற்சவம் நிகழ்த்தி வழிபட வேண்டும். வெளி அழகு நிரந்தரமன்று, உள்ளத்தழகே உத்தம பக்தி என்பதை உணர்விக்கும் அழகம்மையே சோழபுரம் சிவபூரணித் தாய்! அழகோடு, புனிதமான கற்பும், பரிசுத்தமும் தோய வாழ உதவுபவளே, உலக அன்னையாம் ஸ்ரீசிவபூரணித் தாய்!
தாயின் அரவணைப்பு கிட்டாது வாழ்வோர்க்குத் தாயன்பினை உணர்த்துபவளே ஸ்ரீசிவபூரணி அம்மை!
தற்காலத்தில் அழகிப் போட்டியில் பங்கு பெற்று பரிசு பெறுதல் என்பது பல இளம் பெண்களுக்கும் உள்ள ஆசையாகும். அழகுக்கு அழகாய் அருள் புரிபவள் சிவபூரணி அம்பிகையே! சந்தோஷம் நிரம்பி, மகிழ்ச்சியைப் பொழிந்து, ஆனந்தத்தைத் திரட்டித் தருபவள்! இம்மூன்று வகை ஆனந்தம் கூடிய இயற்கை அழகையே நல்வரமாகத் தரவல்லவள்.
இளைஞர்கள் யாவரும் சோழபுரம் ஸ்ரீசிவபூரணி ஆலயத்தில் இலவசமாக ஆலயத் திருப்பணிகளை ஆற்றி அம்பிகையின் திருப்பாதங்களுக்குச் சந்தனமும், மஞ்சளும் காப்பிடுவதற்காக கைகளால் அம்மியில் அரைத்து, உரலில் இடித்துத் தருகின்ற, சந்தனக் கல்லில், சந்தனக் கட்டையால் அரைத்துத் தருகின்ற கருணை கூர்ந்த நற்சேவைகளை ஆற்றி வருதலால் புத்தி தெளிவடைந்து, தீய வழக்கங்கள் அகல உதவும்.
கிளுவை தரும் கிளுகிளு குளிர்ச்சி
சோழபுரம்
இயற்கைப் பூர்வமாக அழகு (சாதன)ப் பயிற்சி அளிப்போர் இங்கு சோழபுரம் சிவபூரணி ஆலயத்தில் வழிபட்டு வருதலால் தொழிலில் நல்ல முன்னேற்றம் பெறுவர். ஆனால் அழகுபடுத்துதல் என்ற பெயரில் பெண்கள் தங்கள் கூந்தலைக் கத்தரித்தலோ, புருவத்தைச் சிரைத்தலோ கூடவே கூடாது. இது குடும்பத்தில் அட்டதரித்திர நிலையை உருவாக்கும். கணவனும் நிலை கெட்டு வாழ்ந்து, துன்பங்களே வீட்டை மொய்க்கும்.
இங்கு சிவபூரணி அம்பிகையை ஒரு மண்டலம் இடைவிடாது பூஜித்து வருவோர் அழகிலும், அழகுத் துறையிலும், அழகுப் பணிகளிலும் (ப்யூட்டி பார்லர்) மேன்மை பெறுவர். ஆனால், அழகு செய்வதாக எண்ணி அழகு முடியை வெட்டுதலோ, தலைமுடியின் முன் நெற்றி முடிகளைக் கத்தரிப்பதோ, புருவத்தைச் சிரைத்து சீர் செய்வதோ சாபங்களையே பெற்றுத் தரும் என்பதை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
தாம்பூலச் சிகப்புதான் உதடுகளுக்குப் புனிதமான அழகைத் தரும். ரசாயனம் கலந்த லிப்ஸ்டிக்கை ஒரு போதும் உபயோகித்தல் கூடாது. பரத நாட்டியம், புராண நாடகங்கள், தெய்வ உற்சவ நிகழ்ச்சிகள், திருமணம், சீமந்தம் போன்ற புனிதமான காரியங்களுக்கு மட்டுமே அழகூட்டும் சாதனங்களை, அதுவும் இயற்கை ரீதியாக, மூலிகைப் பூர்வமாக மட்டுமே பயன்படுத்திடலாம். ரசாயனப் பூச்சுகள் கூடவே கூடாது.
வெண்ணெய், எலுமிச்சை, வெள்ளரிக்காய், தாம்பூலம், மஞ்சள், சந்தனம், வெட்டி வேர் போன்ற இயற்கை மூலிகைகளை, திரவியங்களை மட்டுமே அழகூட்டும் சாதனங்களாகப் பயன்படுத்த வேண்டும். தற்காலத்தில் ப்யூட்டி பார்லர் என்ற வகையில், இருக்கின்ற இயற்கை அழகைச் சிதைத்தல், பெண்களின் முடியைக் கத்தரித்தல், செயற்கைப் பூச்சு வாசம் போன்றவைதாம் நிகழ்கின்றன. இவை அனைத்தும், இயற்கையை வதைத்த தோஷங்களாகப் பெண்களுக்குச் சாபங்களாக வந்து, வம்சப் பரம்பரையைப் பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளவும்.
ஸ்ரீநடராஜப் பெருமான்
சோழபுரம்
பொழுது போகாமல் வாரம் ஒரு முறை ப்யூட்டி பார்லருக்குச் செல்வது என்ற முறையற்ற பழக்கத்தைத் தயவு செய்து தவிர்க்கவும். பெரும்பான்மையான தற்போதைய ப்யூட்டி பார்லர்கள் அனைத்துமே பெண்களிடம் பொதிந்திருக்கும் புனிதமான தெய்வீகத்தை மாசுபடுத்துவதால், கலியுகப் பெண்கள் பல தோஷங்களுக்கு ஆளாகி சுமங்கலித்வத்திற்கு, புனிதத்திற்கு, உடல் ஆரோக்யத்திற்கு ஊறுகளை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள்.
ஆடை அலங்கார உடை தயாரிப்புத் துறையில் உள்ளோர், இங்கு சிவபூரணி அம்பிகைக்கு வண்ண ஆடைகளால் அலங்கரித்துப் பூஜித்து வர, தம் புனிதமான தொழிலில் மேன்மை பெறுவர்.
தறிச்சுடர் சக்திகளைப் பொழியும் சக்திகள் மிகுந்த தலம் ஆதலால் வஸ்திர சக்தி மிகுந்த தலமாகச் சோழபுரம் விளங்குகின்றது. நவராத்திரி மற்றும் வளர்பிறை வெள்ளிக் கிழமைகளில் இங்கு சண்டி ஹோமம் நிகழ்த்தி, அனைத்து விதமான வண்ணங்களிலும் உள்ள 21 விதமான பட்டுப் புடவைகளை ஹோமத்தில் ஆஹூதியாக அளித்துப் பூஜிப்பதால் தோல் நோய்களுக்கு நல்ல தீர்வு கிட்டும்.
சிவபூரணி அம்பாளுக்கு உரித்தான நாட்களாக விளங்குபவை வெள்ளி, பூரம், அவிட்டம், அனுஷம், சுவாதி மற்றும் பஞ்சமி, சப்தமித் திதி நாட்கள் ஆகும். அம்பிகைக்குச் சிரசு முதல் பாதம் வரை சந்தனக் காப்பிட்டு, முழு முந்திரியைப் பதித்து அலங்கரித்து வழிபடுவதால், சுபமங்கள சக்திகள் உற்பவித்துத் திருமண தோஷங்களை நிவர்த்திக்கும். இங்கு பிரதோஷ பூஜைகளை உற்சவரின் புறப்பாடுகளுடன் கொண்டாடுவதால் நிலையற்ற வாழ்வைப் பெற்றிருப்போர், நிலையான தொழில்/பணியைப் பெற உதவும்.
அமுத தாரைகள் |
பூணூல் என்பது சமயச் சின்னமோ, சாதிச் சின்னமோ அன்று. அனைத்துப் பெண்களும் தோடு, மூக்குத்தி, மெட்டி, வளையல் போன்ற ஆன்மீகச் சாதனங்களை அணிவது போல ஜாதி, மத, குலம், இன பேதமின்றி பூவுலகில் அனைத்து ஆண்களும் அணிய வேண்டிய ஆன்மீகச் சாதனமே பூணூலாகும். அந்தணர்கள் மட்டுமே பூணூல் அணிவர் என்பது தவறான கருத்து. கடவுள் வழிபாட்டு ஆன்மீகச் சாதனங்களுள் ஒன்றாகப் பூணூல் விளங்குவதால், அனைத்து ஆண்களும் பூணூலை, ருத்ராட்சம், ஸ்படிக மாலை, தாமரை மணி மாலை, துளஸி மணி மாலை போன்று தாராளமாக அணிந்திடலாம்.
கோயில்களில் பூஜிப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக குடுமி வகைச் சிகை வைத்திருக்க வேண்டும். குடுமி வகைச் சிரசே ஆன்மீகப் பூர்வமாக, கர்வம், ஆணவம், Ego வகை அகங்காரங்களைக் களைந்து, தெய்வீக ரீதியாகத் தற்காப்பு சக்திகளை அளிக்கவல்லதாகும். குடுமி வகை முடி அமைப்பால் கபாலச் செல்கள் பிரகாசமாகி, அபாரமான நினைவாற்றல் உண்டாகும். பூஜகர்கள் அனைவரும் பூணூல், மணி கங்கண், ருத்ராட்சம் போன்ற ஆன்மீக சாதனங்களை கண்டிப்பாக எப்போதும் அணிந்திருக்க வேண்டும்.
ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் மகிமாலை
மன ஆற்றல் தரும் மகிமாலை ஸ்ரீசந்திர மௌளீஸ்வரர்
பலரும் எத்தனையோ வேண்டுதல்களைத் தனக்காகவும், பிறருக்காகவும் வேண்டிக் கொண்டு விட்டு இவற்றுள் பலவற்றைச் செய்யாமலும், இயலாமையாலும், அப்படியே விட்டும் விடுகின்றார்கள். கேட்டால், “கடவுளுக்கு என்ன நம் நிலைமை தெரியாதா?” என்று தமக்குத் தாமே சமாதானம் செய்து கொண்டு விடுகின்றார்கள், என்ன இருந்தாலும், “ஒன்றைச் செய்கின்றேன்” என்று இறைவனிடமே வாக்குக் கொடுத்து விட்டு, வாக்கும் மனமும் மாறுவது என்றால் ஏற்புடையதா? இத்தகைய சத்திய நேர்த்தி பாக்கிகள் தாம், இதே ஜன்மத்திலும், வரும் பிறவிகளிலும், பலரும் வாக்குக் கொடுத்து ஏமாறுவதாக, ஏமாற்றப்படுவதாக வந்து சேர்கின்றது.
ஸ்ரீமேற்றளிநாதர்
திருமேற்றளி
எனவே விடுபட்ட வேண்டுதல்களை நினைவுறுத்தி ஆக்கிச் செயலாக்கிடத் துணை புரியும் சத்திய நேர்த்திபுலச் சக்திகள் நிறைந்த தலங்கள் பல உண்டு. தஞ்சாவூர் அருகே மகிமாலை என்ற தலத்தில் உள்ள ஸ்ரீசந்திர மௌளீஸ்வரர் ஆலயத்தில், திங்கட் கிழமை அன்று, தானே 108 மகிழம் பூக்களைத் தொடுத்து, மாலையாக்கி, சுவாமிக்குச் சார்த்தியும், அம்பிகைக்குச் சாமந்திப் புஷ்பத்தில் பாதவடிகள் செய்து திருவடிகளில் சார்த்தியும் வழிபட்டு வருவதால், விட்டுப் போன வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் பலவும் நினைவுக்கு வந்து அவற்றை நிறைவேற்றிடும் வகையில் நல்வாய்ப்புகள் கைகூடும். மறந்த பிரார்த்தனைகளுக்குத் தக்கத் தீர்வுகளும் கிட்டும். இங்கு பால் தானம் செய்து மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் பெறுவது பிள்ளைகளுக்கு அபாரமான நினைவாற்றலைப் பெற்றுத் தரும்.
ஆலயத்தில் சங்கு முழக்கம் ஆறு வேளை பூஜைகளிலும் மிகவும் முக்கியமானதாக இருக்கும் போது, வடபாரதப் பகுதியில் அனைத்து இல்லங்களிலும், ஆலயங்களிலும், புனிதமான நதிக் கரைகளிலும் பிரம்மாண்டமான சங்குகள் சிறு குழந்தைகள், பெரியோர்கள், முதியோர்கள், சந்யாசிகள் வரை அனைவராலும் மிகவும் சந்தோஷமாக ஊதப்படுகையில், தமிழகத்தில் சங்கொலி பற்றி மூடத்தனமான எண்ணம் ஏற்பட்டுள்ள நிலை உள்ளத்தைச் சுடுவதாகும். சங்கு என்பது மரணச் சடங்குகளில் மட்டுமே ஒலிப்பது என்ற தவறான அபிப்பிராயம் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. “சங்கு ஊதியாச்சு” என்று தவறான பேச்சு வழக்கு மொழியும் வழக்கில் வந்துள்ளது மிகவும் வருத்தம் தருவதாகும். இந்த இரண்டு எண்ணங்களுமே அபத்தமானவை.
சங்கொலி பற்றித் தவறான கருத்துக்களை பக்த கோடிகள் முனைந்து நின்று முறியடித்து, ஒவ்வொரு இல்லத்திலும் பூஜை நேரத்தில் சங்கொலி முழக்கம் கேட்குமாறு சீரிய பணிகளை ஆற்றுதல் வேண்டும். இந்த அற, இறைப் பிரச்சாரப் பணியில் இளைஞர்கள் பெரும் பங்கு ஏற்க வேண்டும். சங்கொலியில் அபூர்வமான ஓங்கார நாதம் எழுவதால், வீட்டில் இயற்கையான ஓங்கார நாதம் நிதமும் எழுதல் குடும்பத்திற்கே சுபிட்சம் தருவதாகும். தினமும் ஒவ்வொரு வீட்டிலும் சங்கொலி கேட்டாக வேண்டும்.
ஸ்ரீசாரபரமேஸ்வரர்
திருச்சேறை
புத்தாடைகள் அல்லது ஆடைகளுக்கான புதிய துணிகளை வாங்கியவுடன் அவற்றைப் பெரிய தாம்பாளத்தில் அல்லது பெரிய வாழை இலையில் வைத்துக் குறைந்தது மூன்று நாளைக்காவது பூஜித்திட வேண்டும். அவற்றுக்குத் தினமும், மஞ்சள், குங்குமம் இடுதல் வேண்டும். குறைந்தது 108 முறை பஞ்ச பூதசுத்தி மந்திரங்களை ஓதிய பிறகே அவற்றைப் பயன்படுத்துதல் வேண்டும்.
பிறந்த நட்சத்திர நாளில் புத்தாடைகள் அல்லது அவரவர் வசதிக்கு ஏற்ப, குறைந்தது, ஒரு துண்டு, கர்சீப் துணி, நன்கு சீரமைக்கப்பட்ட பழைய துணிகளையாவது தானமாக அளித்து வருவதால், தோல் நோய்கள் அண்டாது ஆன்மீக ரீதியாகத் தற்காத்துக் கொள்ளலாம்.
பல துறைக் கஷ்டங்களை நீக்கும் திருச்சேறை மூன்று துர்க்கை மூர்த்தி பூஜைகள்!
ஒரே ஆலயத்தில் மூன்று துர்க்கை மூர்த்திகள் அமைவது மிகவும் விசேஷமானதாகும். செவ்வாயும், திரிதியைத் திதியும் சேரும் நாளில் மூன்று துர்க்கைகளை ஒரு சேர வழிபடுவது – வாழ்க்கையில் பல் கஷ்டங்களை தினந்தோறும் சகித்துக் கொண்டு வரும் இல்லறப் பெண்மணிகளுக்கு நல்ல தீர்வுகளைப் பெற்றுத் தருவதாகும். பசுநெய் தீபம் (தாமரைத் திரி), பஞ்ச தைல தீபம் (பஞ்சுத் திரி), மாவிளக்கு தீபம் (பருத்தித் துணித் திரி) ஏற்றி, செவ்வாய் ராகு காலத்தில் கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை ஸ்ரீசாரபரமேஸ்வரர் ஆலயத்தில் மூன்று துர்க்கைகளையும் வழிபடுவதால் வறுமை, சம்பந்திகளின் கொடுமைகள், உறவினர்களின் இம்சைகள், பிள்ளைகள் தறிகெட்டு வாழ்தல், வீடு நிலம் அமையாமை, நல்ல வேலையின்மை, உடலை வருத்தும் நோய்கள் போன்ற பல திசைகளில் வரும் பலவிதத் துன்பங்களால் வாடுகின்ற இல்லறப் பெண்மணிகளுக்கு இந்த மும்மூர்த்தி துர்க்கை வழிபாடு நல்ல தீர்வுகளைப் பெற்றுத் தரும். மாவிளக்கைப் பலருக்கும் பிரசாதமாகப் பகிர்ந்தளிப்பதுதான் சிறப்பான பலன்களைத் தரும்.
கும்பகோணம் அருகே மழையப்ப நல்லூரில் ஆலமரத்தடி ஸ்ரீஆகாச விநாயகரை வாஸ்து நாட்களிலும், செவ்வாய்க் கிழமைகளிலும் கொழுக்கட்டை படைத்து தானமளித்து வழிபட்டு வர நன்முறையில் வீட்டில், தோட்டத்தில் நன்னீர் சுரக்க உதவும்.
ஸ்ரீசைலம், பகுதியில், அடர்ந்த வனத்தில், பூலோக ஜீவன்களின் நலன்களுக்காக ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள், காபாலிகர்களிடம் நரபலிக்காகத் தம்மைத் தியாகமயமாய் அர்ப்பணித்திட, காபாலிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஸ்ரீஆதிசங்கரரின் தலையைக் கொய்ய முற்பட்டனர். அப்போது, ஸ்ரீநரசிம்மர் தோன்றி ஆதிசங்கரரைக் காப்பாற்றினார் அல்லவா! இதன் பிறகு, ஆதிசங்கரர் பல்வேறு வைரவத் தலங்களிலும் பூஜித்து, சோழபுரம் (அக்காலத்து பைரவேஸ்வரபுரம்) ஸ்ரீபைரவேஸ்வரரைத் தரிசித்து வழிபட்டு, காபாலிக உஷ்ண சக்திகளைப் போக்கிக் கொண்டார். எனவே ஸ்ரீஆதிசங்கரர் வழிபட்ட தலங்களுள் சோழபுரம் பைரவர் ஆலயமும் ஒன்றாகும்.
வடுக்கள், மரு, சதை பருக்கள் போன்றவற்றால் முகமும், உடல் பகுதிகளும் பாதிக்கப்பட்டு வேதனைக்கு ஆளாகி இருப்போர், இங்கு சோழபுரத்தில் ஸ்ரீபைரவேஸ்வரருக்கு ஒரு வாரமோ, ஒரு பட்சமோ, தினமும் தொடர்ந்து குளிகை நேரத்தில் உப்பும், மிளகும் சார்த்தித் தேனாபிஷேகம் செய்து, எண்ணெய் வகை உணவுப் பண்டங்களைத் தானமாக அளித்து வந்தால் தோல் வகை நோய்கள் நன்கு குணமாக வழி பிறக்கும்.
மிக பெரிய அளவில் உள்ள ஸ்ரீகைலாசநாத மூர்த்திகளை, சூரியோதயத்திற்கு முன்னும், சூரியோதயத்திற்கு பின்னும், வானில் வெளிச்சம் இருக்கும் போதே, கையில் குறைந்தது மூன்று அல்லது மூன்றின் மடங்கில் தேங்காய்களை அவற்றின் தேங்காய்க் (மேற்றளிக்) கண்களை வானை நோக்கி இருக்குமாறு ஒரு தாம்பளம், மூங்கில் கூடையில் வைத்து, 21 முறை அடிப்பிரதட்சிணம் செய்து வழிபட்டு வருதலால், கபாலம் சம்பந்தமான நோய்களான கபால வீக்கம், உச்சந்தலையில் எலும்புக் கட்டி, கபாலம் கோணலாக இருத்தல், விபத்தில் கபாலம் நசுங்குதல், தீராத ஒற்றைத் தலைவலி, கபாலத்தில் அடிபட்டு உடல் பகுதிகள் செயல் இழத்தல் போன்றவற்றிற்குத் தக்க நிவாரணம் அளிக்கும். தேங்காய்களை, தாம்பூலம், மஞ்சள், பழங்கள், புடவை, ரவிக்கைகளுடன் ஏழைச் சுமங்கலிகளுக்குத் தானமாக அளிக்க வேண்டும். இத்தகைய கபால சக்தித் தலங்களுள் ஒன்றே திருமேற்றளி ஆலயமாகும். கும்பகோணத்தில் இருந்து சுந்தரப் பெருமாள் கோயில் கிராமத்திற்குச் செல்லும் வழியில் ஒரே ஒரு சிறு சந்நிதியுடன் சற்று மேட்டுப் பகுதியில் உள்ள திருமேற்றளி ஸ்ரீகைலாசநாதர் சிவலிங்கத்திற்கு மேற்கண்ட வகையில் தக்க வழிபாடுகளை நிகழ்த்தியும், தேங்காய் மாலைகளைச் சார்த்தியும் வழிபட்டு வர, தக்க நிவர்த்திகள் கிட்டும்.
ஸ்ரீஆகாசவிநாயகர் கும்பகோணம்
மாமியார் மருமகள் பகைமையால் துன்பச் சுமைகளுக்கு ஆட்பட்டிருக்கும் குடும்பத்தினர், தன் துன்பங்கள் தீர்ந்திட, ஸ்ரீசந்தோஷி மாதாவைப் பூவுலகிற்குத் தந்த சோழபுரம் ஸ்ரீசிவபூஷணி அம்பிகைக்கு, வெள்ளி, துவாதசி, மற்றும் பூரம் நட்சத்திர நாளில் வளையல் காப்பு (குறைந்தது 1008) இட்டு, சாதி, மத, இன பேதமின்றி எண்பது வயது நிறைந்த கட்டுக் கிழத்தி என்று புனிதமாக போற்றப் பெறுகின்ற வயதான சுமங்கலிகளுக்கு அன்னம், ஆடை, ஆபரணம் தந்து, தேவையான உதவிகளை ஆற்றி மகிழ்ச்சி அளித்தல் வேண்டும்.
குடும்பத்தில் நாத்தனார், அண்ணி, மச்சினி உறவு முறைகளுள் ஏற்பட்டுள்ள பகைமை, கோபம், குரோத விளைவுகளைக் களைவதற்கும், உறவினர்களின் அடக்குமுறை, ஏசுதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டோர் தீர்வு பெறவும் சோழபுரத்தில் சிவபூரணி அம்பிகைக்கு, சிரசு முதல் பாதம் வரையில் வருவதான சாமந்தி, ரோஜா, மல்லிகை, சம்பங்கி, தாமரை, சங்கு புஷ்பம் போன்ற ஆறுவிதமான அல்லது பன்னிரெண்டு வித நறுமண மலர்களால் தொடுக்கப் பெற்ற மாலைகளைச் சார்த்தி வணங்கி வர வேண்டும். கனகாம்பரம், காட்டுமல்லி, ஜவ்வந்திப் பூக்களைக் கடவுளுக்குச் சார்த்தக் கூடாது. இவை கடனைப் பெருக்கும், மஞ்சள் நிற சாமந்தி வேறு ஜவ்வந்திப் பூ வேறு! மஞ்சள் நிறச் சாமந்திப் பூ ஏற்புடையதே!
மாற்றார் குழந்தைகளை அல்லது மாற்றாந்தாய்க் குழந்தைகளை, அல்லது பிறர் குழந்தைகளை, பகைமையால் துரோகித்து நடத்துதலால் நாக தோஷங்கள், நர தோஷம், நரக தோஷம் போன்ற பெரும் தோஷங்கள் உண்டாகி அதிகமாகத் துன்புறுத்தும், இதற்குப் பரிகாரம் பெறுதல் என்பது மிகவும் கடினமே., எனினும், இவ்வாறு பிற குழந்தைகளுக்குத் துரோகம் செய்து பெரும் பாவ வினைகளைச் சேர்த்துக் கொண்டோர், சோழபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலய வளாகத்தில், பழமையான உரலைக் கொணர்ந்து, கைகள் நன்கு வலித்து நோகும்படி மஞ்சள் இடித்து அம்பிகைக்கு மஞ்சள் காப்பு இட்டு, அங்கப் பிரதட்சிணம் செய்து வழிபட வேண்டும். மாற்றாந் தாய்களின் அதிகாரத்தால், கொடுமையால் வேதனைகளுடன் வாழ்வோர் ஸ்ரீசிவபூரணியிடம் மனமுருகிக் கதறி அழுதுப் பிரார்த்தித்து வர வேண்டும்.
ஸ்ரீதிரிகோண நாதேஸ்வரர்
திருப்பள்ளிமுக்கூடல்
அழகிப் போட்டி என்பதை ஆன்மீகத்தில் ஏற்பது கிடையாது. அழகிப் போட்டியில் அறிந்தோ, அறியாமலோ பங்கு கொள்வோர், பிறகு ஆபாசமான படங்களில் நடிப்பதோ, போஸ் கொடுப்பதோ ஒரு போதும் கூடாது. பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்ற, அதிலும் மாதவம் புரிந்து மகளிராய்ப் பிறக்கும் பாக்யம் பெற்ற எந்தப் பெண்ணுமே புனிதமான, தூய வாழ்க்கையையே வாழ வேண்டும். அழகும், அறிவும் கட்டிய கணவனுக்கே அர்ப்பணிக்கப்படுதலே தமிழ்ப் பண்பாட்டின் தெய்வீக இலக்கணமாகும். கணவனே கண்கண்ட தெய்வமாக வாழ அருள்பவளும் சோழபுரம் ஸ்ரீசிவபூரணி அம்பிகையே! கணவனும் பரிசுத்தமான அன்பை மனைவியிடம் நிலை நிறுத்திட வேண்டும். மனைவி, கணவனை தெய்வமெனப் போற்றுமளவு, கணவனும் உத்தமனாக வாழ உதவுபவளும் சோழபுரம் ஸ்ரீசிவபூரணி அம்பாளே! தவறுகளைச் செய்த கணவன் திருந்தி வாழ உதவும் தலம். கணவனின் தெய்வீகக் காரியங்களுக்கு இறுதி வரை மனைவி உறுதுணையாக நின்றால், இல்லறம் சாந்தமாகப் பொலியும்!
அழகின்மை, உடல் கட்டிகள், வழுக்கைத் தலை, இளவயதிலேயே நரைத்தல், படிப்பின்மை, குறைந்த நிலைப் படிப்பு, உயரமின்மை, கறுப்பாக இருத்தல் போன்ற பலவிதமான தாழ்வு மனப்பான்மைகளால், இளைஞர்களும், இளைஞிகளும் மனம் வெதும்பிச் சோர்ந்து போய், பல கெட்ட வழக்கங்களில் மனதை லயித்து ஏனோ, தானோவென்று கலியுகத்தில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகையோர் சோழபுரம் சிவபூரணி ஆலயத்தில் மூன்று மணி நேரத்திற்குக் குறையாமல் சந்தனக் கல்லும், கட்டையைக் கொண்டு வந்து பலருடன் ஒன்று சேர்ந்து சந்தனம் அரைத்து, அம்பிகைக்குச் சந்தனக் காப்பு இட்டு வழிபட்டு வருதலால் தாழ்வு மனப்பான்மை அகலும். வாழ்வில் நல்ல பிடிப்பு ஏற்பட்டு, நன்னெறிகளோடு முறையாக வாழ வழி பிறக்கும்.
திருப்பள்ளிமுக்கூடல்
கபாலக் குறைகளை நீக்கும் கைலாயமேற்றளி சக்திகள்
மேற்றளி என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. மனிதனுடைய கபாலத்தில், இடது, வலது உச்சி மேட்டில் உள்ள கபாலத் தளிக்கு மேற்றளீயம் என்று பெயர். ஸ்ரீவிக்னேஸ்வர வழிபாட்டில், இரு கரங்களையும் மாற்றி வைத்து உச்சந்தலை, பக்க நெற்றிப் பட்டையில் கைகளை மடித்து, விரல்களின் நான்கு மேற்றளி முட்டிகளால் குட்டிக் கொள்ளும் போது சிரமேற்றளியும், கைமேற்றளியும் பொருதுகையில் மேட்டுச் சூர்ணத் தளி சக்திகள் யோகப் பூர்வமாய்க் கிட்டுகின்றன. கபால மேற்றளி என்பது திருக்கயிலாயத்தைக் குறிப்பதாகும். தேங்காயின் மேல் பகுதியில் உள்ள கண்கள், மேற்றளி யோகச் சுடர்க் கண்களாகும். இதே போல, உளியால் செதுக்கப்படாது, தானாக அமையும் சுயச் சிலா ரூபங்கள், மேற்றளி வடிவச் சிற்பங்களாகும். திருக்கயிலாயத்தில் இருந்து பொங்கும் மேற்றளிச் சுடாராழிச் சுடர் தீப சக்திகளைக் கொண்டிருக்கும் லிங்க மூர்த்தங்கள் பலவும், ஸ்ரீகைலாசநாதர் என்ற நாமத்தைப் பெற்று அருள்வர்.
ஸ்ரீநந்தீஸ்வரர்
சதுர்வேதமங்கலம்
பள்ளி முக்கூடல் ஸ்ரீதிரிகோண நாதேஸ்வரர்
நன்கு பல குழந்தை குட்டிகளுடன் செழித்து வளர்ந்த சந்ததியானது சில வம்சங்களில் பலத்த மிருத்யு தோஷங்களால் ஓரிருவருடன் குறுகிய குடும்பமாகவும், சுற்றம் சூழ இருந்த உறவுகள் மறைந்து, குறுகிய சுற்றமாகவும் பல சந்ததிக் குற்றங்களுடன் எத்தனையோ குடும்பங்கள் வாடுகின்றன. ஆண் அல்லது பெண் சந்ததி இல்லாமல் வாடுகின்ற குடும்பங்களும் நிறைய உண்டு. பெரியோர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள், ஆகிய மூன்று தலைமுறைகளுமே சேர்ந்து வாழும் பாரம்பரியக் குடும்ப வாழ்வுதான் உலகெங்கும் குடும்ப வளத்தையும், சமுதாயத்தையும் செம்மையாக்கி நலம் பயக்கும்.
பிள்ளைகள், தம் பெற்றோர்களுக்கு முந்தைய தலைமுறையையும் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து கூட வாழ்வதுதான் பாரதத்தின் தெய்வீகப் பண்பாடு ஆகும். ஆனால் கலியுக மனிதனின் குறுகிய சுயநலத்தால் குடும்ப விரிவே குறுகிப் போய்விட்டது. ஆன்மீகப் பூர்வமாக, உலகத்தில் மக்கள் பெருக்கத்தைக் கூடுவதாகவோ, குறைவதாகவோ ஏற்பதில்லை, இறை நியதிப்படியே அனைத்தும் நடக்கும். ஆனால், விஞ்ஞானப் பூர்வமாக, மருத்துவப் பூர்வமாக மனித குலம் சந்ததியைத் தடுக்க, முடிக்க, நிறுத்த, முயற்சிப்பது பலத்த பாவ வினைகளைப் பெருக்குகின்றன. எனவே இனியேனும் நல்ல சந்ததிகளுடன் குடும்பமானது தழைத்துப் பொலிந்து விளங்கிப் பிரகாசித்திட, குடும்ப சகிதமாகவும், மூன்று அல்லது நான்கு தலைமுறையினருமே ஒன்றாகச் சேர்ந்தும் திருவாரூர் அருகே பள்ளி முக்கூடல் எனும் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீதிரிகோணநாதேஸ்வரரை, குறிப்பாக அமாவாசை நாளன்று தர்ப்பண பூஜைகளை ஆற்றி வழிபடுதல் வேண்டும். ஸ்ரீராமர், தம் 24 தலைமுறைகளுக்கும் தர்ப்பணப் பூஜைகளை ஆற்றி வழிபட்ட சிறப்புடைய தலம். குறிப்பாக, இளைய சமுதாயத்தினர் அங்கப் பிரதட்சிணம் செய்து இங்கு வழிபட்டு வர நல்ஒழுக்கம் மேம்படும். தீய வழக்கங்கள் அகல இங்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்த 24 தீபங்களை ஏற்றி வழிபட்டு வருதல் வேண்டும்.
தொடரும் ஆனந்தம்... |
ஒரு முறை சிறுவன் வெங்கடராமனை சென்னை கிண்டி ரேஸ் கோர்சிற்கு அனுப்பி குதிரைகள் மேல் பணம் கட்டி பெரியவர் விளையாடச் சொன்ன அனுபவங்கள் அடிமை கண்ட ஆனந்த நிகழ்ச்சியாக ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன. அப்போது சிறுவன் பணம் கட்டிய குதிரை ஜெயித்து நிறைய பணத்தை சிறுவன் பெற வேண்டிய சமயத்தில் யாரோ ஒருவர் பணம் பெற வேண்டிய கௌண்டரில் கையை விட்டு பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டார். பணம் கிடைக்காமல் ஏமாந்து அழுது கொண்டே ராயபுரம் அங்காள கோயிலுக்கு வந்தபோது அவ்வாறு கௌண்டரில் கையை விட்டு தன்னைக் காப்பாற்றியது நம் கோவணாண்டிதான் என்று அறிந்து எல்லையில்லா ஆனந்தம் அடைந்தான் சிறுவன்.
ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்
திருவஹிந்திபுரம்
கிட்டத்தட்ட இதைப் போன்ற நிகழ்ச்சிதான் இங்கு நீங்கள் காணப் போவது...
ஆனால், இங்கு ஒரு சின்ன மாறுதல் ...
அன்று கௌண்டருக்குள் கையை விட்டு சிறுவனைக் காப்பாற்றினார் கோவணாண்டி சற்குரு ...
இங்கோ தன்னை “கை விட்ட” சீடனையும் காப்பாற்றுபவரே நம் சற்குரு ...
எந்தெந்த கார்களை, டூ வீலர்களை வாங்க வேண்டும் என்பதை நம் சற்குரு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். நல்ல, முன்னேற்றம் தரும், நன்மை பயக்கும் பெயர்களைக் கொண்ட வாகனங்களையே வாங்க வேண்டும் என்பதே நம் சற்குரு அடியார்களுக்கு வழங்கும் வழிகாட்டுதல். இந்த வழிகாட்டுதலை நிராகரித்து தெரிந்தோ தெரியாமலோ பல அடியார்களும் செயல்படும்போது அதற்குண்டான “பரிசையும்” அவர்கள் பெறுவது இயற்கையே. இவ்வாறு ஒரு அடியார் நம் சற்குரு சிபாரிசு செய்யாத ஒரு வாகனத்தை வாங்கி விட்டார். ஏற்கனவே பல கார்களைப் பயன்படுத்திய அந்த அடியாருக்கு இந்தப் புதிய காரை நிறுத்தியவுடன் அதிலிருந்து சாவியை வெளியே எடுக்கும் முறையை அறிய முடியவில்லை. கார் கம்பெனிக்கோ, நண்பர்களுக்கோ போன் செய்தால் போதும் உடனே பிரச்னை தீர்ந்து விடும்.
ஆனால், பல கார்களுக்கு சொந்தக்காரரான அவருக்கு ஒரு கார் சாவியை வெளியே எடுக்க முடியவில்லை என்று எப்படி தன் நண்பர்களிடம் கூற முடியும். Presige issue?! சாவியை வெளியே எடுக்காமலே ஒன்றிரண்டு நாட்களை ஓட்டி விட்டார் அவர். ஒரு நாள் புதிய காரில் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு ஒரு பழைய அடியாரையும் அழைத்துக் கொண்டு சென்றார். தரிசனத்திற்காக கோயில் முன்பு காரை நிறுத்தியபோது தன்னுடைய நிலையை சூசகமாக தெரிவித்தார். ஆனால், அந்த அடியார் தன்னுடைய பிரச்னையைத் தீர்ப்பார் என்ற நம்பிக்கை அவரிடம் கிடையாது. காரணம் அந்த பழைய அடியாரிடம் எந்த காரும் கிடையாது, ஆனால், சற்குருவிடம் நிறைந்த நம்பிக்கை கொண்டிருந்தார் என்று சொல்லலாம். என்ன ஆச்சரியம், பாபாவின் அனுகிரகமா, இல்லை சற்குரு மேல் கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையா, இல்லை சீடன் தன்னைக் கைவிட்டாலும் தான் சீடனைக் கைவிடமாட்டேன் என்ற நம் சற்குருவின் சூளுரையா, அந்த அடியார் நொடியில் காரைப் பூட்டி, சாவியை வெளியே எடுக்கும் வித்தையையும் காரின் சொந்தக்காரருக்குத் தெரிவித்தார்.
ஓம் ஸ்ரீகுருவே சரணம்