அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

வினை தீர்க்கும் விநாயகர்

அருள் தனைக் கூட்டும் ஆனைமுகன் தோப்புக்கரணத்தின் பலன்கள்.... “பிள்ளையாரப்பா.... ஏனப்பா இந்த மாதிரி சோதனை பண்றே” – என்று உரிமையுடன் அனைவரும் ஒருமையில் பேசுமளவு அன்பையும் கருணையையும் பொழிபவரே விநாயக மூர்த்தி ஆவார். ஸ்ரீவிநாயகரின்  தோற்றத்தைப் பற்றிப் பல புராண வைபவங்கள் உண்டு. அனைத்தும் உண்மையே! காரணம், ஹேரம்ப கணபதி, லக்ஷ்மி கணபதி எனப் பல்வேறு கணபதி அவதாரங்களின் மஹிமைகளைப் பறை சாற்றுபவையே அவை! அரசமரத்தடி, குளக்கரையென எங்கும் நிறைந்து அனைத்து ஜீவன்களுக்கும் அருளைப் பொழியும் கண்கண்ட மூர்த்தியே பிள்ளையாரப்பன்! ஆதிசங்கரர் “ஷண்மதம்” என ஆறுவிதமான தெய்வ மூர்த்திகளின் வழிபாடுகளை நிர்ணயித்து விநாயக வழிபாட்டைக் “காணாபத்யம்” எனும் தலைப்பில் தந்துள்ளார். “தேகப் பயிற்சி செய்ய இடமில்லையே, குழந்தைகள் மெலிந்திருக்கின்றனவே” என்று ஏங்கும் Flat வாசிகளான நகரத்து மக்கள், தினந்தோறும் குழந்தைகளோடு இல்லத்தில் “தோப்புக் கரணம்” இட்டுவர வாழ்க்கைக்குரிய பலன்களாக, உடல் வலுவும், மனதிடமும், நல்ல இரத்த ஓட்டமும் ஏற்படுவதோடு, Arthritis போன்ற மூட்டு, தசை நோய்கள் வாழ்நாளில் ஒருகாலத்திலும் அண்டாது, இளவயதிலேயே பயின்று வந்திடில்!

ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்

கர்ண தேவதைகள் :- ஆன்மீக ரீதியாக, காதுகளின் நுனிகளில் கர்ண தேவதைகள் எனப்படும் நல்தேவதைகள் உறைகின்றன. காதுகள் தாம் உணர்ச்சிகளைத் தூண்டுகின்ற அங்கங்களுள் முக்கியமானதாகும். நல்லதோ, கெட்டதோ, பிறருடைய வார்த்தைகளைக் கேட்டுத்தானே மகிழ்ச்சி, துக்கம், கோபம், குரோதமெனப் பலவித உணர்வுகளுக்கு ஆளாகின்றோம்! காதுகளில் நுழைகின்ற ஒலியினை, சப்தத்தினை முறைப்படுத்தும் தேவதைகளே கர்ணதேவதைகள்! பூமியில் தங்கமோ, வைரமோ, வெள்ளியோ இருப்பின் அதை எடுக்கும் முறைகளை அறிந்து செயல்பட வேண்டும். அதுபோல, கர்ண தேவதைகள், எவ்வித பேதமுமின்றி, அனைத்து ஜீவன்களின் காதுகளில் உறைந்தாலும், அவற்றின் மஹிமையை அறிந்து “ஆக்கப்படுத்துவோர்க்கே” அவற்றின் பரிபூரண பலன்கள் கிட்டும். முறையாக வெட்டி எடுக்கப்படும் தங்கம் போல், அதாவது கர்ண தேவதைகள் நன்கு செயல்பட,
1. காதுகளில் தோடுகள், கடுக்கன்களை அணிந்திடில் தங்கம், ஆபரணக் கற்களுக்குரிய தெய்வீகத் தன்மையால், அவை கோயில் கோபுர, தெய்வமூர்த்திகளின், தீர்த்தங்களின், மந்திரங்களின், வேத ஒலிகளின் தெய்வீக சக்தியை ஈர்த்துக் கொள்வதால் காதுகள் புனிதமடைந்து அவற்றில் வசிக்கும் கர்ண தேவதைகளை ஆனந்தப்படுத்துகின்றன. இல்லையெனில்  பூமியில் புதைந்து கிடக்கும் வைரச் சுரங்கம் போல் கர்ணதேவதைகளும் செயல்படாது நிற்கின்றன!.
பிள்ளைச் செல்வந்தரும் மல்லிகை பூஜை
2. இறைவனுக்குச் சார்த்திய புஷ்பத்தைக் காதுகளில் வைத்தலாகாது என்று எண்ணுவது தவறு. சில குறிப்பிட்ட புஷ்பங்களை உதாரணமாக அடுக்கு மல்லிகைப் பூக்களைக் குறித்த நேரத்தில் தினமும் காதுகளில் வைத்து வந்தால் சில அற்புதமான பலன்களை எளிதில் பெற்றிடலாம். மந்தமான காதும் சீர் பெறும். திருக்கழுக்குன்றம் அருகே ஓரகடம் என்னும் சிற்றூரில் அமர்ந்து ஸ்ரீவாடாமல்லீஸ்வரர் ஈஸ்வரன் அருள்பாலிக்கின்றார். கலியுகத்தில் “இவ்வுளவு மலர்களா!” என்று அதிசயிக்குமளவிற்குக் கீழே தாமரைகள் பூத்துக் குலுங்கும் தடாகம்! அமைதியான மிகச்சிறிய குன்றின் மேல் ஒரேயொரு சந்நிதியுடன் விளங்கும் சிவாலயம்! இந்த சிவலிங்க மூர்த்திக்கு மல்லிகைப்பூ சாற்றி, மல்லிகைப் பூக்களாலேயே அபிஷேகம் செய்து, இறைப்பிரசாதமான மல்லிகைப் பூக்களைக் காதுகளில் வைத்து சந்நிதியை அடிப்பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம் செய்து வர எத்தகைய காது சம்பந்தமான நோய்களும் நீங்குவதோடு அவதூறு, பொய், வீண் பழிகளால் ஏற்பட்ட அலுவலக, உத்யோகப் பிரச்னைகள், உறவுத் துன்பங்கள், திருமணத் தடங்கல்கள் போன்றவை நிவர்த்தியாகி மீண்டும் நன்மதிப்பைப் பெற்றிடலாம். மேலும் பிறருடைய பேச்சுக்களை நம்பியதால் விளைந்த கணவன் – மனைவி உறவுப் பிரிவுகளையும் ஒன்று கூட்டி, நல்வித தாம்பத்ய வாழ்வு மலர அருள்மிகு வாடாமல்லீஸ்வரர் அற்புதமான முறையில் அருள்புரிகின்றார்.

அடிக்கடி கர்ப்பம் நழுவுவதால் சந்ததியின்றி வருத்தமுறுவோர் இங்குள்ள தாமரைத் தடாகத்தில் நீராடி மஞ்சள் ஆடை தரித்து தம்பதி சகிதம் மடியில் நிறைய மல்லிகைப் பூக்களைச் சுமந்து குன்றின் மேல் பக்தியுடன் ஏறிடுக! ஸ்ரீவாடாமல்லீஸ்வரருக்கு மல்லிகையால் அர்ச்சனை, அபிஷேகங்களைச் செய்து, ஜாதிமத பேதமின்றி எத்தனை ஏழைச் சுமங்கலிப் பெண்களுக்கு மல்லிகைப் பூவினைப் (தாமே தொடுத்துக் கட்டியது) பிரசாதமாக, மஞ்சள், மஞ்சள் புடவை/ ரவிக்கைகளுடன் அளித்து வருகின்றார்களோ அந்த அளவிற்குப் புண்யசக்தி மிகுந்து கர்ப்பப்பை வலுப்பெற்றுக் கரு நன்கு தங்கி சந்ததி விருத்தியடையும். குருவருளும் ஆழ்ந்த நம்பிக்கை எதையும் சாதிக்குமன்றோ! இங்கு தான் தர்மசம்வர்த்தினியாக ஆதிபராசக்தி தவமிருந்து ஸ்ரீவாடாமல்லீஸ்வரரை அடைந்ததோடன்றி, இவ்வற்புதத் தலத்தில் தான் ஸ்ரீரகுநாதப் பெருமாளாக, அமர்ந்த கோலத்தில் உள்ள ஸ்ரீராமரையும், சீதையையும் ஒன்றாக தரிசிக்கும் பாக்யத்தையும் பெற்றாள்! அருகிலுள்ள ஸ்ரீரகுநாதப் பெருமாள் ஆலயத்தின் மஹிமையை உய்த்துணர, ஸ்ரீராமரையும் சேவித்துத் திருவருளைப் பரிபூரணமாக பெற்றிடுக! மீண்டும் தோப்புக் கரண மஹிமைக்கு வருவோமா!
கர்ணதேவதைகள் நிறைந்து நடமாடுகின்ற புனித பூமியே ஓரகடம்! முற்காலத்தில் திருக்கழுக்குன்றத்தை வலம் வருகின்ற கிரிவலப் பாதையானது ஓரகடம் ஸ்ரீவாடாமல்லீஸ்வரர் உறையும் சிறு குன்றையும் சுற்றியே அமைந்திருந்தது. நான்கு வேதங்களே மலைக் குன்றுகளாக விளங்குவதாலும், வேதமென்பது, “சிரவண கீதமாக” அதாவது எழுத்தாலன்றி யாவரும் காதால் கேட்டு அறிவதாக, “சப்த வர்ணமாக”, ஒலி ரூபத்தில் அமைந்திருப்பதாலும் ஸ்ரீவாடாமல்லீஸ்வரரின் தரிசனமே திருக்கழுக்குன்றம் கிரிவலத்தின் பரிபூரண பலன்களைத் தருகின்றது.

தோடுடைய செவியன் :- இறைவனே தோடு அதாவது கடுக்கன் அணிந்திருந்தான் என்றால் அதன் மகிமை தான் என்னே! அக்காலத்தில் “பத்ரங் கர்ணேபி:“ என்று கூறி வேதங்களைத் துவங்குவார்கள், வேத ஒலிகளைக் கேட்டு, காதுகளில் அவற்றின் தெய்வீக சக்திகளைப் பாய்ச்சுகின்ற கர்ண தேவதைகளுக்கு வந்தனம் செலுத்துவதாகவும், காதுகளில் உள்ள “வேத கலித“ நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி கூட்டி இரத்த நாளங்களை மேம்படுத்துவதாகவும் தோப்புக்கரணம் அமைகின்றது. காதுகளில் கடுக்கன் அணிந்திருந்தால் “வேத கலித” நரம்புகளுக்கும் மேன்மையுடையதான வேத லிங்க நரம்புகள் ஆக்கம் பெறுகின்றன.
சுயம்பு மூர்த்திபோல், காதுகளில் ஆழ்ந்து கிடக்கும் வேதலிங்க நரம்புகள் தாம் உத்தமமான தெய்வீக நிலையை, ஒலி ரூபத்தில், சப்த வடிவில், ஓம்கார சப்த வடிவில் தரவல்லவை. முருகப் பெருமான், பிரம்மனுக்கு ஓம்கார உபதேசம் தருகையில் முதலில் தன் வேலால் பிரம்மனின் திருச்செவியின் வேதலிங்க நரம்புகளில் “ஓம்” என எழுதி பிரம்மனுக்கே பெரும் விளக்கம் தந்தார். நாக்கிற்கும் காதுகளில் உள்ள வேதலிங்க நரம்புகளுக்கும் தொடர்புண்டு. தற்காலத்தில் நாக்கில் வேல் குத்திக் காவடியெடுக்கும் பழக்கம் நிலவுகிறது. உடலை வருத்தும் இப்பழக்கம் கலியுகத்திற்கு ஏற்புடையதன்று. எனினும் அக்காலத்தில் பக்தி மேம்பட்ட நிலையாய் எவ்வித வலியையும் மறந்த தெய்வீக நிலையில், இத்தகைய தெய்வீக நிலையும் உண்டென மக்களுக்கு உணர்த்திடவே இவையமைந்தன.. உத்தமத் திருவருளுடன் அக்காலத்தில் இவை நிகழ்ந்தமையின் இறையருளால் உடற்காயக் கூறுகள் உடனே மறைந்து காரிய சித்திகளைத் தந்தது. எனவே தெய்வ கட்டளையின்றி தற்போது வேல் குத்துதல் போன்றவற்றில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் வேண்டும். வேதலிங்க நரம்புகள் எனில் வெறும் நரம்புகள் என எண்ணுதல் வேண்டா. நம்முடலில் 72000 நாடி நரம்புகள் உள்ளதென சித்த வைத்யக் கூறுகள் தெளிவுறுத்துகின்றன. இவற்றில் ஒரு சிலவற்றையே நாம் அறிகின்றோம். யோகம், ஆசனம், பிராணாயாமம், தியானம் போன்றவற்றை முறையாக, குருவருளுடன் பயின்றால் தான் ஏனைய நாடிகள் ஆக்கத்திற்கு வரும். வேதலிங்க நாடிகளை எளிமையாக ஆக்கப்படுத்துவதே தோப்புக் கரணமாகும்.. தோப்புக்கரணத்தை நன்கு பயின்றவனே இராவணன்! ஆனால் இதனால் அவன் பெற்ற தெய்வீக சக்திகளை வீணே விரயம் செய்தான். எனவே சரணாகதி மனப்பான்மையுடன் ஸ்ரீவிநாயகருக்குத் தினந்தோறும் காலை, மதியம், மாலை வேளைகளில் தோப்புக் கரணமிட்டுவர, இப்பயிற்சியில் கர்ண யோகம், கர்ண தியானம், கர்ணமூல பிராணாயாமம், கர்ணபந்த ஆசனம், கார்க்கோடக சுவாச பந்தனம் (பாம்பு போல் சுவாச யோகமுறை) போன்ற யோக சித்திகள் தாமே கிட்டும்.

ஸ்ரீஹேரம்ப கணபதி
திருவில்லிபுத்தூர்

கைவிரல் – கிரந்தி ரகசியங்கள்
கைவிரல்களின் முட்டிப் பகுதிகளில் சில நரம்பு முடிச்சுகள் உள்ளன. இவற்றிற்கு கர்ண கிரந்திகள் என்று பெயர்...
ஆள்காட்டி விரல் முட்டிப் பகுதி – தர்ஜக்ரந்தி (குருவிரல்)
நடுவிரல் – (சனிவிரல்) மத்யக்ரந்தி
மோதிர விரல் – (சூரிய விரல்) ஸ்வர்ண க்ரந்தி
சுண்டு விரல் (புதன் விரல்) – அநாமிக க்ரந்தி
கட்டைவிரல் (சுக்கிர விரல்) – ஸ்வேத க்ரந்தி
தோப்புக்கரணமிடுகையில், இருகை விரல்களையும் மடித்து, முன்நெற்றியின் மேற்புற மூலைகளில் குட்டிக் கொள்கின்றோமல்லவா! இப்பகுதிகளில் தான் மூலை(ள)க் கபால நரம்புகள் உள்ளன. மேற்கண்ட நான்கு கிரந்தி முடிச்சுகளால் (விரல் முட்டிகள்) தழுவப்பெறும் போது குட்டிக் கொள்கையில் ஒருவித தெய்வீக மின் சக்திக் கிளர்ச்சியுற்றுக் காதுகளில் உள்ள வேதலிங்க நரம்புகளைத் தூண்டுகின்றது. நெற்றியில் குட்டுகையில் சுக்கிர விரலான கட்டைவிரல் தனித்து நிற்கும். ஸ்வேதக்ரந்தி எனப்படும் கட்டை விரல் முட்டியானது ஜபயோகத்திற்கு மட்டுமே உரித்தானது. ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தையோ வேறு நாமாவளிகளையோ ஜபிக்கையில் கட்டை விரலை மடித்து உட்கைவிரல் கணுக்களில் வைத்து என்ணும் முறையொன்றுண்டு. கட்டைவிரலின் பின்புறக் கணுவிற்கு ‘ஸ்வேத க்ரந்தி’ என்றும் உட்புறக் கணுவிற்கு ‘ஸ்வரூபக்ரந்தி’ என்றும் பெயர்.

வெளிப் புற ஸ்வேதக்ரந்தி ஜபயோகத்திற்கும் உட்புற ‘ஸ்வரூபக்ரந்தி’ ஞான யோகத்திற்கு ஏற்புடையது. எனவேதான் ஸ்ரீதட்சிணா மூர்த்தி, சின்மய முத்திரையாக, குருவிரலாகிய ஆள்காட்டி விரலை, சுக்கிர விரலான கட்டைவிரலின் உட்புறக் கணுவான ஸ்வரூபக்ரந்தியினைத் தொட்டுக் காட்டி ஞானத்தை போதிக்கிறார்!

பிள்ளையாருக்குச் சிதறுகாய் உடைப்பது ஏன்?
தேங்காய்க்குப் பல அபூர்வமான தெய்வீக குணங்கள் உண்டு. ஏற்கனவே இளநீர் அபிஷேகத்தின் மகிமையை பலவாறாக முந்தைய இதழ்களில் விளக்கியுள்ளோம். எவர் கண்ணும்படாத தூய நீராக இளநீர் அமைவதால் இறைவனுக்குரிய இளநீர் அபிஷேகம் ஓர் உன்னத அபிஷேகம் ஆகும். தேவலோகத்துக்குரிய பயிரான தென்னையை உலகிற்குக் கொண்டு வந்தவர் ஸ்ரீபரசுராமர் ஆவார். அரசு, ஆல், வேம்பு போன்ற சமித்து (ஹோமங்களுக்குப் பயன்படுபவை) மரங்களைப் போல் தென்னை மரத்திலும் எப்போதும் நல்ல தேவதைகளே வசிக்கின்றன. மூன்று கண்களை உடைய தேங்காய் சாதாரணமாகக் கிடைக்கிறதென்றாலும் ஒரு கண், இருகண் உடைய தேங்காய்களும் உண்டு. ஒரே கண் உடைய தேங்காய் பெறுதற்கரியது! இதனை உடைத்திடாது இல்லத்திலோ, கடையிலோ வைத்திருந்தால் பணப் பொழிவு ஏற்படும். இருகண் உடைய தேங்காயை வீட்டில் வைத்திருந்து, எப்போது மனக் குழப்பங்கள் ஏற்படுகின்றதோ அப்போது இதனைக் கையில் வைத்துக் கொண்டு ஸ்ரீவிநாயக தோத்திரங்களை ஓதிட மனத் தெளிவு கிட்டும். இவ்விரண்டு வகைத் தேங்காய்களும் எப்போதும் பூஜையில் இருக்க வேண்டியவை.
தேங்காய் சகுன இலக்கணத்தில் மிகச் சிறந்ததாக விளங்குகிறது . நல்ல பூவை உடைய தேங்காய் கிட்டிடில் காரியம் மங்களகரமாக முடியும். அழுகல் தேங்காயாக இருந்திடில் எடுத்த காரியம் பல துன்பங்களைத் தரும். தேங்காயை உடைக்கையில் அழகாக, இரண்டாக வட்டமாக உடைந்திடில் காரியம் நன்கு நடக்கும். சிதறுகாயாக இல்லாது சாதாரணமாக பூஜைக்கு உடைக்கும் போது பல சுக்கல்களாக தேங்காய் உடைந்திடில் காரியம் தடைபடுவதோடு தொடர்ந்து பல இன்னல்கள் ஏற்படவே செய்யும்.
சிதறுகாய் என்பது எடுத்த காரியம் விக்னங்கள் இல்லாது நல்லபடியாய் முடிய வேண்டும் என்று பிள்ளையாரைப் பிரார்த்திப்பதாகும். காரியசித்திக்குப் பஞ்சபூத சக்தியின் அனுக்ரஹம் மிகவும் தேவைப்படுகிறது. சிதறுகாய் உடைப்பைத் “தெங்க வாயுப் பிரசவம்” என்றும் “தெங்க ஜலவாயுப் பிரவேசம்” என்றும் சித்தர்களின் பாஷையில் கூறுகின்றனர். சித்தர்களின் பரிபாஷை என்பது கிரந்த வடிவிலோ, நாடிகளின் வடிவிலோ அல்லது குருவாய் அருள்மொழிகளாகவோ வெளிவந்து பல சூட்சும தெய்வீக இரகசியங்களையும் சங்கேத முடிச்சுகளையும் தன்னுள் கொண்டிருக்கும். அதாவது இச்சங்கேத முடிச்சுகளைச் சூட்சுமமான முறையில் அவிழ்த்தால் தான் அவற்றின் தெளிந்த பரிபூர்ணமான பொருளையும், அதன் வழிமுறைகளையும் உணர முடியும்! சிதறுகாய் உடைத்தலைத் “தெங்க வாயுப் பிரசவம்” எனக்கூறுவதன் பொருளென்ன? தேங்காயிலிருந்து (பஞ்சபூத சக்திகளான) நாம் காணாத ஜல சக்தியும், தேங்காயினுள் நீருக்கு மேல் பகுதியில் உள்ள வாயு சக்தியும், சிதறிய காயில் இருந்து “பிறப்பெடுத்து” வெளிவரும் நிலையையே தெங்க ஜல வாயுப் பிரசவமென்றும் கூறுகிறோம். தேங்காயின் உள்ளிருந்த நீரும் , வாயுவும் வெளி உலகில் பிரவேசிப்பதையே தெங்க ஜலவாயுப் பிரவேசமென்றும் பரிபாஷை விளக்கம் தருகின்றது! சிதறுகாயில் தேங்காய்ப்பூ இருக்குமாயின் இதனை “தெங்குழவிக் கணு“ என்றும் சித்தர்கள் விளக்குகின்றனர். காரணம் எவர் கண்ணும் படாது சிருஷ்டிக்கப்பட்ட தேங்காய்ப் பூவானது சிதறுகாயின் போது உலகிற்குக் காட்டப்படுகின்றதல்லவா!
தேங்காய்ப்பூ ரகசியம்
பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம், நீர், தீ, காற்று ஆகாயமென ஐந்தும் சேர்ந்ததே உலகிலுள்ள அனைத்து ஜீவன்களின் உடல்களாகும். ஒவ்வொரு பஞ்சபூதமும் ஒவ்வொரு சக்தியைக் கொண்டது அல்லவா! உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஏதேனும் ஒரு பஞ்சபூத சக்தியையேனும் தன்னுள் கொண்டிருக்கும். குறித்த எக்காரியம் சித்தியாக வேண்டுமோ அப்பொருளில் மிகுந்துள்ள பஞ்சபூத சக்தியை அறிந்து அச்சக்தியை நாம் பெறுகையில் காரிய சித்தி விரைவில் கைகூடுகின்றது.. இதுவே காரிய சித்தியின் ரகசியம். பஞ்சபூத சக்திகளின் உருவே தேங்காய்ப்பூ ஆகும். இதனைப் பான லிங்கமாகக் கருதி வழிபட்டவரே ஸ்ரீபரசுராமர் ஆவார். தம் தாயைக் கொன்றமையால் ஏற்பட்ட பலவிதமான தோஷங்களுக்கு உரிய பல பரிஹாரங்களைச் செய்து வந்த ஸ்ரீபரசுராமர் சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் சிவாலயத்தில் தான் பூலோகத்தின் முதல் தேங்காய்ப் பூவினை இறைவனுக்கு அர்ப்பணித்ததோடன்றி தேங்காய்ப் பூவினை லிங்கமாக பாவித்துப் பல கல்ப சூத்திரங்களை இயற்றினார். எனவே இத்திருக்கோயிலில் தென்னை மரத்தின் முதல் இளநீரையோ, தேங்காயையோ இறைவனுக்குப் படைப்பது மிகவும் விசேஷமானதாகும். இவ்வாறு தென்னை மரத்தின் முதல் காய் அபிஷேகத்தால் பெண்கள் தக்க வயதில் பூப்படைவதோடு, மிகச் சிறுவதிலேயே (12 வயதிற்குள்)) பூப்படைந்த சிறுமியரை, கன்னிப் பெண்களை இங்கு அடிப்பிரதட்சிணம் செய்ய வைத்திட, பெற்றோர்களின் பயம் , கவலை அகன்று நன்னிலையில் அவர்கட்குத் திருமணம் கைகூடும். மேலும் நற்காரியங்கள் நன்கு நடைபெறவும், பல வருடங்களாகக் கைகூடாது இருந்து வரும் திருமண வைபவம் மிகச் சிறப்புடன் நடைபெற்றிடவும், தேங்காய்ப்பூ உள்ள தேங்காய்களைக் கொண்டு தேங்காய் சாதம் செய்து மப்பேடு கோயில் ஸ்ரீசிங்கீஸ்வரருக்குப் படைத்து அன்னதானம் செய்து வருதல் வேண்டும்.
சிதறுகாயில் சிதறா சக்தி! – சிதறுகாயில் பஞ்சபூத சக்திகள் பொங்கித் திரண்டு நமக்கு அருளைப் பொழிகின்றன அல்லவா! இது எவ்வாறு சாத்தியமாகிறது! தேங்காயின் ஓடுதான் பிருதிவி (நிலம்) சக்தியாகும். தேங்காயை ஓங்கித் தரையில் அடித்திட... என்ன நிகழ்கின்றது! சில திடப்பொருள்கள் வேகமாக ஒன்றின் மேல் ஒன்று உராய்ந்தால் சூடும், தீப்பொறியும் உண்டாகும் என்று விஞ்ஞானம் பகர்கின்றது! இது மெய்ஞ்ஞானத்தின் ஓர் வெளிப்பாடே! சிதறுகாயில், தேங்காய் ஓடு பூமியில் படும்போது உண்டாகும் சூட்டினை “மூலாதாரச் சூட்டின்”  ஒருவகையெனச் சித்புருஷர்களின் மெய்ஞ்ஞானம் பகர்கின்றது! சிதறுகாய் தரையில் மோதுகையில் கண்ணுக்குத் தெரியாத ஓர் அக்னி சக்தி உருவாகின்றது! இது மூலாதாரக் கனலின் பிறிதொரு வகை! மூலாதாரச் சூட்டையும், மூலாதாரக் கனலையும் எழுப்புவது எப்படி? “காலால் எழுப்பி!” – ஆம், அரும்பெரும் கணபதி பக்தையான அவ்வையாரின் அருள் நிறைந்த அமுத மொழிகளிவை! “மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்தே!” – விநாயகர் அகவல்..
அவ்வையாரின் விநாயகர் அகவலின் ஒவ்வொரு வரிக்கும் யோக, தியான, ஞான, பக்தி, கர்ம வழிகளில் பற்பல விளக்கங்களைத் தந்திடலாம். “காலால் எழுப்பி” சிதறுகாயை உடைப்பது எப்படி? ஆம், சிதறுகாயை உடைப்பதற்கான எளிய யோக வழிமுறைகளும் உண்டு! இடது கால்பாதத்தை பூமியில் முதலில் அழுத்தி பிறகு வலது காலைச் சற்றே உயர்த்திடுக! வலதுகாலை “எழுப்பிய” (உயர்த்திய) நிலையில், கண்கள் விநாயகரின் வயிற்றுப் பகுதியை (பிரபஞ்சத்தின் மூலாதாரப் பகுதியிது!) நோக்கிட, இடதுகாலின் , குதிகாலை உயர்த்தி, இடது கால்விரல்களின் அழுத்தத்தில் நின்றவாறு தேங்காயைத் தரையில் அடித்தல் வேண்டும். இது ஒருவகையான “மூலாதார ஆசனமாகும்” . இதனை முறையாகச் செய்தால் மூலாதாரச் சூடு நம் உடலில் சிறிதளவு எழும். இது மிகவும் சக்தி வாய்ந்தது! பல்லாயிரம் மூலிகைகளின் சக்தியைச் சில விநாடிகளில் நம் உடலுக்குத் தரவல்லது! பல்லாண்டுகள் பயின்ற யோகத்தில் கிட்டும் மூலாதாரச் சூடு, சிதறுகாய் உடைக்கும் எளிய பாவனையில் கிட்டுகின்றதெனில் என்னே இதன் மஹிமை! சிதறுகாய் பூமியில் மோதுவதால் ஏற்படும் ஒருவகையான மூலாதாரச் சூடும், கனலும்... சிதறுகாய் உடைப்பவர் முறையான யோக நிலையில் காலை உயர்த்தி நிற்பதால் ஏற்படும் மற்றொரு வகையான மூலாதாரச் சூடும்... விநாயகரின் “உப்பிய” வயிற்றைச் சென்றடைகின்றது! அண்டத்தைச் சுமக்கும் பெருவயிறோன் அல்லவா!
சிதறுகாய் உடைக்கும் முறைகள்!
1. கர்ப்பிணிப் பெண்ணோ, அவள்தம் கணவனோ சிதறுகாயை உடைத்தலாகாது. பூசனிக்காயையும் திருஷ்டிப் பரிஹாரத்திற்காக அவர்கள் உடைத்தலும் கூடாது. வேறுவிதமான பிரார்த்தனைகளை ஏற்றோ அல்லது பிரசவத்திற்குப் பின்னோ சிதறுகாயை உடைத்திடலாம்.
2. சிதறுகாயை உடைக்கையில் கைகளைக் கவிழ்த்த நிலையில் உடைக்கலாகாது. இம்முறை முதலில் சிரமமானது போல் தோன்றும். ஆனால் பழக்கமாயிடில் இச்சிறப்பான முறையில் சிதறுகாயை உடைத்து காரிய சித்தியை எளிதில் பெற்றிடலாம். இதனைத் தனியே விளக்கியுள்ளோம்.
3 சிதறுகாய் பல சுக்கல்களாக வேண்டும் என்று எண்ணாதீர்கள்.. அதற்காகத் தேங்காய் உடையாமல் போவதோ இரண்டாக மட்டும் உடைவதோ சிறப்புடையது அல்ல. குறைந்தது 5 சிதறு துண்டுகள் இருத்தல் வேண்டும்.
4. அந்தந்த பிரார்த்தனையைப் பொறுத்து சிதறுகாய் உடைக்க வேண்டிய திசையமையும், பொதுவாக ஒன்பது தேங்காய்களைக் கிழக்கு, தென் கிழக்கு, வடக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, நடுமையம் என எட்டுத் திக்குகளோடு நடுப் பகுதியிலும் சிதறுகாய்களை உடைத்திடல் வேண்டும்.
5. சிதறுகாயில் குடுமிப் பகுதியைத் தவிர எவ்வித சிறு நார்ப்பகுதியும் இருத்தல் கூடாது. எந்த அளவிற்கு நார்ப்பகுதி, சிறிய அளவில் கூட இருக்கிறதோ, அந்த அளவிற்குக் காரிய சித்தி தடைப்படும்.
6. சிதறுகாயின் மூன்று கண்களும் மிகத் தெளிவாக இருத்தல் வேண்டும். பிரார்த்தனைகளின் வகைகளுக்கு ஏற்ப, சிதறுகாய்க்கு விபூதி, குங்குமம், சந்தனம், பசும்பால், கஸ்தூரி பூசுதலும் உண்டு.
பூசியே பூசல்போம்.
தேங்காய்க்குத் திங்களன்று விபூதி பூசியும், செவ்வாயன்று குங்குமம் பூசியும், புதனன்று துளசிமாலை சுற்றியும், வியாழனன்று மஞ்சள் பூசியும், வெள்ளியன்று காய்ச்சாத பசும்பால் பூசியும், ஞாயிறன்று தாமே அரைத்த சந்தனம் பூசியும் கோயில் தொட்டியில் சிதறுகாயை உடைத்திடில் பலன்கள் பெருகி, கார்யசக்தியும் துரிதமாகும். சனியன்று தேங்காயின் மூன்று கண்களிலும் மூன்று கற்பூரங்களைத் தனியாக ஏற்றி சுற்றிச் சிதறுகாய் உடைத்திட வேண்டும்.
7. தேங்காயின் இணைப்புப் பகுதியில் கறுத்த நரம்புகள் ஓடும். ஒரு காயில் இரண்டிற்கு மேல் இவை இருத்தல் கூடாது.
8. வலதுகாலை முன் வைத்தல், இடதுகாலை முன் வைத்தல் என “வல/இடக்குழிவோட்ட“ சிதறுகாய் உடைக்கும் முறைகள் உண்டு. அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களில், உங்களுடைய நட்சத்திரம் வலவொட்டு நட்சத்திரமா, இடவொட்டு நட்சத்திரமா என அறிந்து கொள்ளுங்கள்...இதில் பாஸ்கர அயன ஸ்ருதி முறை, ஆகர்ஷணத் திருமுறை என்ற இரு முறைகளில் அவரவர் நட்சத்திரத்திற்கேற்ப சிதறுகாயை உடைத்து வியத்தகு பலன்களைப் பெற்றிடலாம்..
பாஸ்கர அயனஸ்ருதி முறை : இம்முறையில் வலவொட்டு நட்சத்திரக்காரர்கள் தமக்கு வலப்புறம் சூரியன் இருக்குமாறு பார்த்து நின்று சிதறுகாயை உடைத்திட வேண்டும். இடவொட்டு நட்சத்திரக்காரர்கள் தமக்கு இடப்புறம் சூரியன் இருக்குமாறு நின்று சிதறுகாயை உடைத்திடுக! பொதுவாக நோய்கள் நிவர்த்தி, தந்தை வழி உறவு சம்பந்தமான பிரார்த்தனைகளுக்கு இம்முறை ஏற்றது.
ஆகர்ஷணத் திருமுறை : இம்முறையில் வலவொட்டு நட்சத்திரக்காரர்கள் பிள்ளையார் தமக்கு வலப்புறம் இருக்குமாறு நின்றும், இடவொட்டு நட்சத்திரக்காரர்கள் தமக்கு இடப்புறம் பிள்ளையர் இருக்குமாறு நின்றும் சிதறுகாயை உடைத்திட வேண்டும். கணவனின் தீய ஒழுக்கம், பணக்கஷ்டம், கல்வி மற்றும் பல வாழ்க்கைத் துன்பங்கள் தீர இம்முறை ஏற்றதாகும்.

பிரேத தோஷங்கள்

கடுமையான சாபங்கள் தீரும் வழிமுறைகள்
பிரேத சாபம் அல்லது பாடை தோஷம் ஏற்படக் காரணங்கள்.
1. எவரேனும் இறந்துவிட்டால் பிரேதத்தை வீட்டில் வைத்துக் கொண்டே உறவினர்கள் சச்சரவு, சண்டையில் ஈடுபடுவதாலோ, சொத்துக்களைப் பற்றிய தகராறுகளை உருவாக்குவதாலோ,
2. பேரன் பேத்திமார்கள் இருந்தும் நெய்யினால் ஆகிய தீப்பந்தத்தை எடுத்துச் செல்லாவிட்டாலும்,
3. “தலைப்பிரவேசம்” என்ற நியதியின் படி மயானத்தினுள் முதலில் தலைப் புறத்தை மயானத்தின் உள் நோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். இது மாறினாலும்.... பிரேத சாபங்கள் ஏற்படுகின்றன.
4. மிகவும் புனிதம் வாய்ந்த மணமுள்ள பூக்களைத் தெய்வமூர்த்திகளுக்குச் சூட்டிய பின்னரே அவற்றை இறைப்பிரசாதமாக நாம் ஏற்றிட வேண்டும். ஆனால் தற்காலத்தில் இந்நிலைமாறி பூக்களைப் பிரேதங்களுக்குச் சார்த்தும் ஒரு தவறான பழக்கம் நிலவி வருகிறது. இது மட்டுமின்றி சவ ஊர்வலங்களின் போது தெய்வீக சக்தி வாய்ந்த பூக்களைச் சாலைகளில் வாரி இறைக்கின்றனர். தெய்வமூர்த்திகளின் உருவங்களை மட்டுமே அலங்கரிக்கப் பிறந்த புனிதம் வாய்ந்த பூக்கள் பலர் கால்களிலும் வாகனங்களின் சக்கரங்களிலும் மிதிபடுகின்றன. இதன் விளைவு கொடிய சாபங்களாய் மாறி அவரவர் சந்ததிகளையே பாதிக்கும். ஆகவே எக்காரணம் கொண்டும் அருட்சக்தி நிரம்பப் பெற்றிருக்கும் பூக்களை சவ ஊர்வலங்களை அலங்கரிக்கப் பயன்படுத்தாதீர்கள்! சவங்களுக்கு வெண்ணிற ஆடையைச் சாற்றுதலே சிறப்புடையது.
5. பல குடும்பங்களில் இறந்தவருடைய கட்டைவிரல் கொண்டு பென்ஷன் போன்ற பல பத்திரங்களில் கைரேகையைப் பதிக்கின்ற அருவருக்கத்தக்க நிகழ்ச்சி நடைபெறுகின்றது. உயிரற்ற சவத்தின் கைரேகைகள் எந்த பத்திரங்களில் படிந்துள்ளனவோ அவை வாழ்நாள் முழுதும் பிரேத சாபமாக பாடை தோஷமாக மாறிச் சொல்லொணாத் துன்பங்களைத் தரும். மேற்கண்ட பிரேத தோஷங்களுக்கும், பாடை தோஷங்களுக்கும் நிவர்த்தி என்ன? அறிந்தோ அறியாமலோ பலருடைய குடும்பங்களில் இத்தகைய தோஷங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். இதற்குப் பிராயச்சித்தமாக சித்புருஷர்களின் ஜீவசமாதியில் புது ஆடைகளை வைத்தும் வாசனைத் திரவியங்களைத் தெளித்தும் சந்தனக் கட்டைகளை வைத்தும் பரிஹாரத்தைப் பெற்றிடலாம். இவற்றைப் பிரசாதமாக ஏழைகளுக்கு அளித்திட வேண்டும். ஏழைகளுடைய இறுதி ஊர்வலத்திலோ அல்லது அறிந்தவர்களின் குடும்பத்தில் மரணம் ஏற்பட்டாலோ இறந்தவர் மீது சந்தனக் கட்டை வைப்பதும் இதற்கு மிகச் சிறந்த பரிகாரமாகும். தகனத்தின் போது சந்தனக் கட்டையையும் சேர்த்து எரித்திடல் வேண்டும். புஷ்பத்தைச் சவத்தின் மேல் வைத்தலாகாது எனில் சந்தனக் கட்டையை மட்டும் வைத்திடலாமா, அதுவும் புனிதமான பொருள் தானே! சந்தனம், சுயநலமற்ற தியாக வாழ்வின் சின்னம்! மெழுகுவர்த்திபோல் தன்னை அழித்துக் தரணிக்குத் தக்க சேவை செய்யும் புனிதமான ஜீவன்! ஆம், வெறும் கட்டை என்று எண்ணுகிறோமே, அந்த சந்தனக் கட்டைக்கும் உயிருண்டு! ஈமச் சடங்கில் சந்தனக் கட்டையில் எழும் புனிதமான மணமானது மயானத்தில் உள்ள துர்சக்திகளை விரட்டியடிக்கும் தெய்வீக சக்தி கொண்டது! விண்ணளாவ எழுந்து பல்லாயிரம் சதுர அடிக்குப் பரவும் சந்தன மணம் எங்கெல்லாம் பரவுகின்றதோ அங்கெல்லாம் தீய எண்ணங்கள் தீய சக்திகளை அழித்து நம்மை புரிகின்றது.. ஒவ்வொரு ஜீவனின் இறப்பின் போதும் பத்துவிதமான வாயுக்கள் (தச வாயுக்கள்) பிரிகின்றன. இவை முறையாகப் பிரிந்தால் தான் உடலுக்குப் பரிபூரண “திவச நிலை” கிட்டுகின்றது. உடலை எரித்த மறுதினத்தில் மயானத்திற்குச் சென்று சாம்பலைப் பொறுக்கிப் பாலில் கலக்கும் பழக்கம் இன்றைக்க்ம் நிலவுகின்றது. சாம்பல் பரிபூரணமாகக் கரைகின்றதா அல்லது அங்கு எலும்புத் துகள்கள் மிஞ்சுகின்றதா – உடலின் எப்பகுதியில் உள்ள எலும்பு அக்னியில் சரியாக வேகவில்லை – போன்றவற்றைக் கொண்டு அந்த ஜீவனின் கர்ம வினைகளை நிர்ணயித்துவிடலாம். பிருத்வி – பூத நியதிகளின்படி எப்பகுதியின் எலும்பு மிஞ்சியுள்ளதோ அந்த உறுப்பின் மூலம் அந்த ஜீவன் செய்த தீவினைகளையும் பாவங்களையும் நிச்சயித்து அதற்கேற்றபடி தான தர்மங்களை 10 நாள் ஈமச் சடங்குகளில் சேர்ப்பார்கள்.. உண்மையில் ஒருவர் எத்தகைய கொடிய பாவங்களைச் செய்திருந்தாலும் சற்குருவின் அறவழிக்கேற்பப் பத்து நாட்களின் மரணச் சடங்குகளை முறையான தான தருமங்களுடன் நிறைவேற்றினால் அந்த ஜீவனை இறப்பிற்குப் பிறகும் நிச்சயமாகக் கடைத்தேற்றி விடமுடியும்.
பெற்றோரிட்ட சாபங்கள் நீங்கிட... தசாவதார விரதம்
பொதுவாக ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி, ஸ்ரீவராஹ ஜெயந்தி, ஸ்ரீராமநவமி, ஸ்ரீகிருஷ்ண ஐயந்தி போன்றவை மாதப்பிறப்புகள் போன்றே பித்ரு தர்ப்பணங்களுக்குரிய விசேஷ தினங்களென்பது பலரும் அறியாத ஆன்மீக ரகசியமாகும். அவதாரங்களின் வைபவ நாளில் பித்ரு தர்ப்பணமா என்று கேட்டிடலாம். மாதப்பிறப்பு என்பது என்ன? சித்திரை  தேவி, ஆடிதேவியெனப் பல தேவமூர்த்திகள் அவதரிக்கின்ற விசேஷ தினங்கள் தாமே மூதாதையர்களுக்கான மிகச் சிறந்த தர்ப்பண நாளாக மாதப் பிறப்பாக அமைகின்றன! ஏன்?
ஸ்ரீவிஷ்ணுபதி, பிரதோஷம் போன்ற மிகப் புனிதமான நேரத்தில் பூஜைகள், ஹோமங்களோடு தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றிடில் பலன்கள் பலகோடியாய்ப் பெருகுமென்பதை நாமறிவோமே! பித்ருக்களின் நாயகரே ஸ்ரீமஹாவிஷ்ணுதானே! தேவி பாகவதத்தில் தினந்தோறும் பித்ருதர்ப்பணம் செய்தல் மிகவும் சிறப்புடையதெனக் கூறப்பட்டுள்ளதே! பல யுகங்களுக்கு முன் நிகழ்ந்து வந்த தினசரித் தர்ப்பணமே இன்று குறுகி “அமாவாசையன்று மட்டுமே தர்ப்பணம்” என்ற நிலைக்கு நம்மை ஆட்படுத்தி விட்டது! என்னே காலத்தின் கோலம்! எனவே தசாவதார விரத தினத்தன்று தசாவதாரங்கள் எழுந்தருளியுள்ள ஆலய தீர்த்தங்களிலும், புண்ய நதிக்கரைகளிலும் மூதாதையர்க்கான பித்ரு தர்ப்பணங்களை நடத்தி, எள் கலந்த உணவினை அன்னதானமாக அளித்திட, பிரேத சாபங்கள் தீரும். மேலும் பிள்ளைகள் வெளிநாடுகளிலோ வெளிமாநிலங்களிலோ இருக்க தாய் அல்லது தந்தையின் இறுதிச் சடங்குகளில் மூத்த மகளோ, ஏனைய சந்ததியினரோ கலந்து கொள்ள முடியாமற் போனாலும் பித்ரு சாபங்கள் ஏற்படுவதுண்டு.
பிரேத சாபம் வேறு, பித்ரு சாபம் வேறு! தாயோ, தந்தையோ இறக்குந் தருவாயில் தன் மூத்தமகனோ, குறிப்பிட்டவரோ தனக்குக் கொள்ளியிட வேண்டும் என விரும்பி அது கலியுகக் கோலாகல விளைவுகளால் நிறைவேறாமற் போனால் அது பிரேத சாபத்திடலடங்கும்.. என்ன இருந்தாலும், செல்வம், புகழ், கீர்த்தி போன்ற நிலையற்ற சொத்துக்களுக்கு ஆசைப்பட்டுத்தானே பெற்றோர்களை விட்டுப் பிரியத் துணிந்து, அந்நிய ஆடம்பரங்களுக்கு இச்சைப்பட்டு, தெய்வம் போன்ற தாய், தந்தையரை மறந்தோம் என தசாவதார விரதமன்றேனும் உணர்தல் வேண்டும். எனவே தசாவதார விரதமன்று (12.9.1997) பித்ரு ஹோமமோ, கணபதி ஹோமமோ, சுதர்சன ஹோமமோ, ஏதேனும் ஒரு ஹோமம் நிகழ்த்தி சந்தனக் கட்டையை ஆஹுதியாக அளித்திட பிரேத தோஷங்கள் நிவர்த்தியாகும். இதில் ஜாதி பேதமின்றிப் பலரையும் பங்குபெறச் செய்தால் அனைவருக்கும் இப்பலன்கள் சென்றடையும். இதனோடு தசாவதார விரத முறைகளும் சில உண்டு.  தசாவதார விரதம்
தசாவதார விரதம் என்ற ஓர் அற்புதமான பண்டிகை உண்டு. பல பெறற்கரிய பலன்களைத் தரக் கூடியது. திருஅண்ணாமலையில் அபயமண்டபப் பகுதியில் நம்முடைய ஸ்ரீ-ல-ஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் அருகில் அண்ணாமலையின் பத்து முகடுகளையும் தரிசனம் செய்திடலாம். இதனை தசமுக தரிசனமென்றும் தசாவதார தரிசனமென்றும் குறிப்பிடுகின்றோம். கிரிவலப் பாதையானது காஞ்சி சாலையில் இணைகின்ற இடத்தில், தசாவதாரத் திருநாளில், அபய மண்டபத்திற்கு அருகில் உள்ள பித்ரு சாந்தி தீர்த்தத்தில் (சிறுகுளம்) தர்ப்பணங்களை அளித்திட எத்தகைய பிரேத சாபங்களுக்கும், பாடை தோஷங்களுக்கும் நிவாரணம் கிட்டும். பித்ருக்களுக்குப் ப்ரீதீ அளிக்கின்ற “பிரண்டை இலைத் துவையல்” கலந்த அன்னத்தைப் படைத்து இங்கு தானம் அளித்துவர எவ்வித தோஷங்களும் நீங்கும்.

லட்சுமி கடாட்சம்

கொழிக்கும் ஸ்ரீலட்சுமி கடாட்சத்தைப் பெறுவீர்!
பணம் என்பது நம் மனம் போல் இறைவன் உறையுமிடம், மனந்தனில் அழுக்கான எண்ணங்கள் சேர்ந்தாலோ, பணமானது லஞ்சம், புரட்டு, அதர்மமான முறைகளில் வந்தாலோ, மது, புகை, தீயொழுக்கங்களில் செலவழிக்கும் நோக்கமிருந்தாலோ, புனிதமான மனதை விட்டும், பணத்தை விட்டும் ஸ்ரீலட்சுமியோ, தெய்வமோ விலகி நின்றிடுவர். பண தேவதைகள் நம் இல்லத்து நிலைவாயிற்படிகளில் தான் உறைகின்றனர். ஏன்? ஸ்ரீலட்சுமி தேவியை வரவேற்கவே! எனவே வாசலில் மட்டுமல்லாது சமயலறை, படுக்கை அறை, பூஜையறையென அனைத்திடங்களிலும் மரத்தாலான நிலைவாயிற்படிகள் வைத்து அவற்றிற்குச் செவ்வாய், வெள்ளி தோறும் தாமே அரைத்த மஞ்சள், சந்தனமிட்டுப் பழுத்த சுமநங்கலிகளைக் கொண்டு குங்குமமிட்டு வந்திடில், தரித்திர நிலைமை மாறி முறையான வழிகளில் பணம் கொழித்து ஸ்ரீலட்சுமி கடாட்சமும் நிறையும். மா, பலா, தேக்கு போன்று நிலைப்படி ரகசியங்களும் உண்டு. நிலை வாசற்படிக்குக் காலை, மாலை, இரண்டு வேளைகளிலும் கோலமிடுதல் வேண்டும். மாம்பலகை நிலைப்படி மிகவும் விசேஷமானது. ஏனெனில் திருமகளின் வாகனம் ICHING எனப்படும் இரு கூட்டு மாங்கனிகளைப் போலிருக்கும். மாம்பலகை நிலைப் படியெனில் ஹிருதயக் கமல புள்ளிக் கோலமும், பலாப் பலகையெனில் நட்சத்திரக் கோட்டு கோலமும், தேக்குப் பலகையெனில் கோபுர வடிவக் கோலமும் சிறப்புடையதாகும். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உரித்தானது. ஆகையால் அந்தந்த நட்சத்திர மண்டல அமைப்பில் கோலமிட்டிடில் அந்த நட்சத்திர தேவ மூர்த்திகளே அதில் ஆவாஹனமாகி நம்மை மகிழ்ந்து ஆசிர்வதிக்கின்றனர்.
எப்போதும் பணத்தைச் சந்தனமரப் பெட்டியில் மல்லிகைப் புஷ்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டும். அணிகின்ற pantன் பின்பையிலோ, இடுப்பிலோ பணத்தைச் செருகுதல் கூடாது. பெருமாளின் மார்பில் ஸ்ரீலட்சுமி உறைவது போல சட்டையின் மேல் உள்பாக்கட்டில் பணத்தை வைத்திடுக! பெரும் பணம், லாபம் வரும் போது சம்பளம் வந்ததும் முதன் முதலாக பால், உப்பு போன்ற விருத்தியடையும் பொருட்களை வாங்கிடுக! தாய் அல்லது மனைவியிடம் முதலில் சம்பளப் பணத்தைத் தருதல் சிறப்புடையது.

ஸ்ரீஇரட்டைபிள்ளையார் மூர்த்திகள்
உய்யக்கொண்டான்மலை

தஞ்சாவூர் ஸ்ரீசங்கரநாராயணர் ஆலயத்தில் தீர்த்தக் கிணறு அருகே உள்ள கோண லிங்கங்களைத் தாமரை மலர்களால் அர்ச்சித்து, சர்க்கரைப் பொங்கலால் அபிஷேகம் செய்து வர வீணான விரயங்களும், நஷ்டங்களும் தணிந்து வியாபாரம் பெருகுவதோடு, நடுத்தர, ஏழை மக்களின் பணத் தட்டுப்பாடும் நீங்கும். ஸ்ரீராமர் தம் ஆட்சியில் ஏற்பட்ட சில பிரச்னைகள் தீர சீதாபிராட்டியுடன் ஸ்ரீஅகஸ்தியர் கூறியபடி கோண லிங்க வழிபாட்டினை மேற்கொண்டார். ஒருபோதும் லாட்டரி சீட்டை வாங்காதீர்கள். லாட்டரிச் சீட்டு வியாபாரமும் ஏற்புடையதன்று. லட்சக்கணக்கான ஏழைகளின் கண்ணீரையும், ஏக்கங்களையும் தாங்கி வரும் லாட்டரிச் சீட்டில், அதன் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்போருக்கும் அவர்களுடைய குடும்பங்களிலும் கொடிய மனோ வியாதிகள் ஏற்படும். எனவே லாட்டரிச் சீட்டை அறவே ஒதுக்குங்கள்.. அதன் மூலம் பணம் வந்திருக்குமாயின் ஏழைகளுக்கு அன்னதானம், ஆடைதானம், மாங்கல்ய தானம் போன்றவற்றின் மூலம் ஏழைகளின் ஏக்கங்களைத் தீர்த்து, லாட்டரிச் சீட்டின் மூலம் வந்த தீவினைகளுக்கு பரிஹாரம் தேடுங்கள்.
பல ஆலயங்களில் இரண்டு விநாயகர்கள் சேர்ந்து இரட்டைப் பிள்ளையாராக அருள்பாலிக்கின்றனர். இரட்டைப் பிள்ளையார் வழிபாடு ஐஸ்வர்யத்தைத் தருவதாகும். திருமாலின் புதல்விகளை மணந்த பின்னரே இரட்டைப் பிள்ளையார் அவதாரம் ஏற்பட்டமையின், இரட்டைப் பிள்ளையார் வழிபாடு லட்சுமி கடாட்சத்தைத் தரவல்லதாகும். சங்கடஹர சதுர்த்தி விரதத்தை இரட்டைப் பிள்ளையார் சந்நிதியில் தொடங்குவதும், முடிப்பதும் பணத்தட்டுப் பாட்டை நீக்கி முறையான வழிகளில் நிதியைப் பெருக்கும். சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளிலும் விநாயகருக்குரிய நட்சத்திரத்திலு முழுத் தாமரைப் பூக்களால் இரட்டைப் பிள்ளையாருக்கு மாலை அணிவித்து, மோதகம் நைவேத்யத்துடன், மோதகத்தையும், தாமரை மலர்களையும் ஏழைச் சிறுவர், சிறுமியர்க்குத் தானமாக அளித்துவர எத்தகைய பணக்கஷ்டமும் தீரும் .
இல்லத்தில் அரிசிப் பானை ஸ்ரீலட்சுமி உறையுமிடமாகும். தினமும் அரிசிப் பானையில் (அரிசி உள்ள பாத்திரத்தில்) ஒரு தாமரை மலரை வைத்து மறுநாள் அதனைப் பசுவிற்கோ, யானைக்கோ (யானைக்கு நிறைய மலர்கள்!) அளித்து வர பணவரவு பெருகிக் கஷ்டங்களுக்குத் தீர்க்கமான தீர்வேற்படும். பூலோகம் தோன்றியது முதல் கோடிக்கணக்கான யுகங்களாக கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு, மனித குலத்திடமிருந்து எவ்விதக் கைமாறும் எதிர்பாராது, பால் அளித்து ஜீவ சக்தி தரும் உத்தம “அன்னை ஸ்தானத்தைப்” பெற்றுள்ள பசுவின் உடலில் எத்தனை கோடி தேவாதி தேவர்களும் தேவ மூர்த்திகளும் உறைகின்றனர். “பிருஷ்டபாகம்” எனப்படும் பசுவின் வாலின் மேற்புற இருபகுதிகளிலும் ஸ்ரீலட்சுமி தேவி வசிக்கின்றாள். பசுவைக் காணும் போதெல்லாம் பசுவின் பிருஷ்ட பாகத்தைத் தொட்டுக் கண்களில், ஒற்றிக்கொள்ளுங்கள். பள்ளிக் கட்டணம், தேர்வுக் கட்டணம், சம்பளப் பணம், வியாபாரத்தின் முதல்வரவு போன்றவற்றைப் பசுவின் பிருஷ்ட பாகத்தில் வைத்து வணங்கி எடுக்கும் நற்பழக்கத்தை இன்றும் பல குடும்பங்களில் கடைபிடிக்கின்றனர். இவ்வாறாக ஸ்ரீலட்சுமி கடாட்சத்தை தரவல்ல எளிய பூஜைமுறைகள் பல உள்ளன. சற்குருவை நாடி அறிவீர்!

அடிமை கண்ட ஆனந்தம்

(குருமங்கள கந்தர்வா என்றழைக்கப்பெறும் ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள், தம் சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்தரிடம் பல்வேறு மூர்த்தங்கள், தீர்த்தங்கள், தலங்கள், மலைகள், வனப் பகுதிகளில, பெற்ற உய்த்துணர்ந்த குருகுலவாச சம்பவங்களே இங்கு “அடிமை கண்ட ஆனந்தமாக” மலர்கின்றன..
எட்டு வயதிலேயே “சற்குரு” ஒருவரைப் பெறும் பாக்யம் பெற்ற அந்த அரை டிராயர் சிறுவன் பெரியவருடன் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து பல அற்புதங்களை, தெய்வீக அனுபவங்களை, யோகியர், மஹான்கள், சித்புருஷர்களின் தரிசனங்களைக் காணும் பெரும் பேற்றைப் பெற்றான்! எத்தனையோ மலைகளில் அரிய மூலிகைகளைக் கண்டான். அவற்றில் நாலைந்து “ரசவாத மூலிகைகள்” ஆகும். நல்லதை உருவாக்கும் ரசவாத மூலிகைகள்! இறையருளால் இவை இன்று மறைக்கப்பட்டுள்ளன. காரணம் கலியுக மக்களின் அளவு கடந்த பேராசைக் குணங்கள் தாம்! திருஅண்ணாமலை, கொல்லிமலை, பர்வத மலை, வள்ளி மலை போன்ற மூலிகை மலைகளில் இன்றும் ரசவாத மூலிகைகள் மறைபொருளாய்க் காணக் கிடைக்கின்றன. அவற்றை அறிந்தவர்கள், அறிந்தும் அறியாதோராய், அறவாழி ஆண்டவனின் அடிமையாய், அமைதியாய் அடங்கி உள்ளனர் அவனியிலே! அன்னாரை அறிவாலன்றி அன்பால் அறிவீரே!
 ஒரு முறை கொல்லி மலையில்.. மலைப்பள்ளத்தாக்கில் கோரக்கர் குகையென்ற ஒன்றுண்டு! இன்றும் உள்ளது ! அற்புத சித்புருஷராகிய கோரக்கர் பெருமான் அமர்ந்து தம்மை நாடி வந்த ஆயிரக்கணக்கான மக்களின் கொடிய நோய்களைத் தீர்த்த தெய்வீகக் குகை அது!
“ஏனிப்படி இந்தக் காட்டுல புலி, கரடி வர்ற இடத்துல கோரக்கர் இருந்தாரு? அவரா மேல ஏறி ஊருக்குள்ள வந்திருந்தா எல்லாரும் பார்த்திருப்பாங்களே!” – சிறுவனின் அரைகுறையான (வழக்கம் போல்!) கேள்வி!
கல்லாய் முள்ளாய்க் கர்மங் கழியும்!
“ஆமாண்டா, அண்ணாமலையானைப் பார்த்தாலே ரொம்ப விசேஷம், ஆனா, காலுல கல், முள்ளு குத்தி, உச்சி மண்டைல வெயில் பட்டு, சூட்டுல கால் பொசுங்கி ஏன் கிரிவலம் (மலைவலம்) வரணும்? சிவனே, ‘சிவனேன்னு’ ஞானமலையா கெடக்கற இடம் அண்ணாமலை, நீ வெறும் மலையையா சுத்தி வர்ற? பிள்ளையாரு, தன் அப்பனைச் சுத்தி வந்த மாதிரி நீ உன்னப்பனை, அண்ணாமலையானைச் சுத்தி வர்றது எவ்வளவு பெரிய பாக்யம்! இங்க சூட்டுல கால் பொசுங்கலைடா, ஆனா உன் கெட்ட கர்மாதான் பொசுங்குது இல்லாட்டி பெரிய பெரிய வியாதியும், பணக் கஷ்டமுந்தான் உன்னைச் சுத்தி சுத்தி வரும்! காலுல கல்லு குத்துதே, நீ எத்தனை பேரு மனசைக் குத்தினியோ அந்தப் பொல்லாப் பாவம் இப்படி உன்னைக் குத்திக் கழிஞ்சு போகுது! இல்லாட்டி ரத்த மூலமா, ஹார்ட் அட்டாக்கா வந்து பாதிக்கும்! மண்டையிலே படுறது வெயில் சூடா! இல்லியே! எவனோட சொத்தையெல்லாம், லஞ்சமா, ஓசியா வாங்கி அலைய/காயவிட்டியோ, அனுபவிச்சியோ அதுதான் உன் தலையைப் பொசுக்குது! இல்லாட்டி ஆக்ஸிடெண்டாகி டாக்டருங்க மண்டையைக் கொத்தி ஆபரேஷனா ஆக்குவாங்க! இப்ப புரியுதா ஏன் மஹானுங்க இப்படி காட்டுல இருங்காங்கன்னு! தேடி அலைஞ்சாத் தாண்டா அருமை புரியும்!
கோரக்கருனா எந்த வியாதியையும் தீர்த்திடுவாருன்னு நம்பி ஜனங்க நம்பிக்கையோட காலுல செருப்பு கூட இல்லாமல், முள் குத்தி, சிராய்ச்சுக்கிட்டு இந்த (கொல்லி மலையில்) கோரக்க சித்தரு குகைக்கு வருவாங்க! இந்த நம்பிக்கைக்குத் தாண்டா கோரக்கரு வைத்யம் பாத்தாரு! அவரு தொட்டாலே போதும், எல்லா வியாதியும் பறந்துடும்! இப்பக் கூட கொல்லிமலைல கோரக்கரு இருந்த குகைக்கு நம்பிக்கையோட போயி சாம்பிராணி, ஊதுபத்தி ஏத்தி பக்தியோட கும்பிட்டால் போதும் எல்லாத்தையும் கோரக்கரே பாத்துப்பாரு!”  - இவ்வாறு கோரக்கரின் மஹிமை பற்றி கூறிவந்த பெரியவர் கொல்லி மலையிலிருந்து சுமார் 20 மைல் தொலைவில் அடர்ந்த காடுகளிடையே உள்ள “பெருமாள்” கோயிலுக்கு அழைத்துச் சென்றார்..
பட்டப் பகலிலேயே இருட்டாக இருந்தது. அவ்வளவு அடர்த்தியான மரங்கள்! முள், தழைகளைத் தள்ளிச் செல்வதற்குள் பெரும்பாடாகி விட்டது! கை, கால், முட்டி, எங்கும் ரத்தச் சிராய்ப்புகள்! இன்றும் இவ்வாலயத்தை தரிசித்திடலாம்... பெருமாள் கோயிலையடைந்த பெரியவர் ஆங்காங்கே பல அகல் விளக்கு தீபங்களை ஏற்றினார். சிறுவனுக்குத் தெரிந்த வரை பெரியவர் எந்த மூட்டையையும் கையில் எடுத்து வந்ததாகத் தெரியவில்லை! அப்படியானால் இவ்வளவு விளக்குகளும், எண்ணெயும், நெருப்பும் எங்கிருந்து வந்தன? சிறுவன் வியந்தான்! ஓரக் கண்களல் சந்தேகத்தோடு பெரியவரை உற்று நோக்கினான்! அவரும் நோக்கினார், எப்படி சிமிட்டிய கண்களுடன்!
“இதெல்லாம் தேவலோகத்து விளக்குடா! கந்தர்வ லோகத்துப் பசுநெய்யடா மகனே! தரைலபடாம மேலே விளக்கு நிக்குது பாத்தியா? மனுஷங்க தினமும் இங்க வந்து பூஜை பண்ணனும்! ஆனா எப்பனாச்சும் தான் சிலர் வந்து போவாங்க! எதுக்கு? எங்கேயுமே கிடைக்காத மூலிகையை இங்க பறிச்சு மருந்தாக்கி வித்துக் காசாக்கிடுவாங்க சுயநலக்காரங்க! அதனால் தான் பல மூலிகைகளை ஆண்டவன் மறச்சு வச்சுட்டான்! மனுஷங்க வர்றலைன்னா சாமிக்குப் பூஜை நின்னுடுமா? மஹான்களும் தேவர்களும் இங்க வந்து விளக்கு ஏத்தி பூஜை பண்ணுவாங்க!” – பெரியவர் வெகுவேகமாக விளக்குகளை ஏற்றிக் கொண்டே , “டேய், தேவாதி தேவருங்க எல்லாம் வர்ற டைமிது! உடனே நம்ம கிளம்பிடணும்!” என்றார்.
“ஏன் வாத்யாரே, கொஞ்சம் நின்னு அவங்களைப் பாத்துட்டுப் போகலாமே!”
“அவங்க சும்மா வரமாட்டாங்கடா, அம்பது அறுபது அடி நீளத்துக்குப் பாம்புங்களைத் தோள்ல போட்டு மாட்டிகிட்டு வருவாங்க, சிலபேரு இருபதடி புலி, சிங்கம் மேல வருவாங்க., பரவாயில்லையா!”
சிறுவனுக்கு வெலவெலத்து விட்டது பெரியவரை இழுத்துக் கொண்டு புறப்பட்டால் போதும் என்ற முடிவிற்கு வந்து விட்டான்! வரும் வழியில்.....
“இதோ பார்டா, இது தான் ரசவாத மூலிகை! நல்ல நட்சத்திரம் பாத்துப் பறிச்சு, காலை வெயில்ல பக்குவம் பண்ணியாச்சுன்னா இந்த பூஜையினால் தேவலோக அருள் கிடைக்கும்.”
சிறுவனுக்கு ஒரு நப்பாசை! “இவற்றைக் கொஞ்சம் பறித்துக் கொண்டால்..” கூடவே பயமும் கவ்வியது “இவரு என்ன சொல்வாரோ!”
“ராஜா, வேணும்னா பறிச்சுக்கோ! அந்த ரசவாத பக்குவம் எல்லாம் சொல்லித்தரேன்!” சிறுவனுக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது!
“வாத்யார் இப்படிச் சொல்கிறார்?” அவன் மனம் வியந்து விரிந்தது...
“ஆமாண்டா நான் தான் சொல்றேன்! உனக்குப் பயமாயிருந்தா நானே பறிச்சுத் தர்றேன்! இன்னிக்கு செவ்வாய்க்கிழமை, அஸ்வினி தானே, நல்ல நேரமும் தோதா இருக்கு!” என்று சொல்லி ஏதேதோ மந்திரங்களைத் துதித்துச் சில மூலிகைகளைப் பறித்து கொண்டார். ஆனால் அந்தப் பச்சிலைகளைச் சிறுவனிடம் தரவில்லை.

அமுத தாரைகள்

1. ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அந்தாதி – ஒரு தெய்வீக முத்துக் குவியல்
(ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தம் குருஅருளால் புனைந்த தெய்வத் திருப்பாக்கள்!)
வேலை கிடைத்திட : தம் மகனுக்கு/மகளுக்குப் பட்டப்படிப்பிருந்தும் தக்க வேலை இல்லையே என்று ஏங்கும் தாய்மார்கள் ஏராளம், முன்பிறவிகளில் சரியாக, உணவு, ஊதியம் அளிக்காது தொழிலாளர்களைக் கடுமையாக வேலை வாங்கியிருந்தாலும், சுகமான வேலைகிட்டிய பின் பெறும் ஊதியத்திற்குத் தக்கவாறு உழைக்காது காலத்தை வீணாக்கியதான கர்மவினைகளும் சேர்ந்தே இப்பிறவியின் வேலையின்மையாக ஊழ்வினை போல் உறுத்து வந்துள்ளது. கீழ்க்கண்ட ஸ்ரீஅங்காளி அந்தாதியை ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஓதி வர, தக்க உத்தியோகம் கிட்டும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
திருநெடுங்களம்

வல்லவள் நீயே வியத்தகு யிவ்வுலகி லென்றும்
நல்லவள் நீயேநம்பினோருக்கும் நம்பாதோருக்கும்
மெல்ல நினைவூட்டினையே நின்நாமம்
சொல்லசொல்லச் சுவைக்கொரு யெல்லையுண்டோ.
2. மோரில் பச்சரிசிமாவு, ரவை கலந்து கிண்டிச் செய்யப்படுவதே மோர்க்களி ஆகும். வியாழன் தோறும் யோகப் பட்டையுடன் கூடிய ஸ்ரீதட்சிணா மூர்த்திக்கு மோர்க்களி படைத்துத் தானமளித்து வர, கோபித்துப் பிரிந்து சென்ற கணவன் திரும்பி வருவான். ஸ்ரீஐயப்பன் போல் முழங்காற்பகுதியில் யோகப் பட்டம் எனும் ஒருபட்டை சுற்றிக் குந்திய யோக நிலையில் அமர்ந்திருப்பவரே யோகப் பட்ட தட்சிணா மூர்த்தி ஆவார். (திருச்சி அருகே திருநெடுங்களம் சிவாலயம்.)
3. மகனுடைய தீய வழக்கங்கள், அசிரத்தை, மந்தபுத்தி பற்றிக் கவலையுறும் தாய்மார்கள் ஏராளம். சனிக்கிழமை தோறும் நவகிரஹங்களுக்குப் புளியோதரையும் பல காய்கறிகள் சேர்ந்த கதம்ப ஊறுகாயும் படைத்துக் கறுப்பு/ நீல நிற உடையணிந்தோர்க்கும், ஊனமுற்ற ஏழைகட்கும் அளித்துவர குழந்தைகளின் மந்த புத்தி அகலும்.
4. சிலருக்கு எதைப் பார்த்தாலும் திருட வேண்டும். எடுத்துச் செல்ல வேண்டும். என்ற எண்ணம் (Kleptomaniac) ஏற்படுவதுண்டு. பலசரக்குக் கடை, தொழிற் சாலைகளில், அவ்வப்போது சிறுசிறு பொருட்களும் காணாமற் போய்விடும். இவை தீரவும், தவிர்க்கப்படவும் விஷ்ணு துர்கைக்கு திங்கள் தோறும், ராகுகாலத்தில் கொய்யாப்பழ மாலை சாற்றி வரவும்.
5. பொறியியலில் பிரகாசித்திட...
கொள்ளுமாவினால் ஆன ரொட்டியை வெள்ளிதோறும் ஸ்ரீஹயக்ரீவருக்கு புத ஹோரை நேரத்தில் படைத்துத் தானமளித்துவர விஞ்ஞான, பொறியியல், கல்வியியல் மாணவர்கள் மேன்மை பெறுவர்.. (வெள்ளியன்று புத ஹோரை நேரம் – காலை 7-8, மதியம் 2-3, இரவு 9-10).
6. கனிப்பொறிக் (கம்ப்யூட்டர்) கலை ஞானம் மிக :-
108 அரிசி நொய்க் கொழுக்கொட்டைகளைப் புதன் தோறும், புனர்பூச நட்சத்திரத்தில். ஸ்ரீஹயக்ரீவருக்குப் படைத்து, குதிரைக்கு அவித்த கொள்ளும் அளித்துவர கம்ப்யூட்டர் படிப்பில் இடம் கிடைப்பதுடன்,, கம்ப்யூட்டர் நுண்ணறிவும் விருத்தியாகும்.
7. வியாபாரம் விருத்தியாக :- மஞ்சளைத்தாமே அரைத்து (மஞ்சள் பொடியைக் கரைக்காது) கங்கை, காவிரி போன்ற புண்ய தீர்த்தத்தில் கலந்து வியாபாரிகள் மூன்று வேளைகளிலும் “ஸ்ரீ சுப்ரமண்யோம்” என்று 36 முறை ஓதி வில்வ இலைகளால் “ஸ்ரீசுப்ரமண்யோம்” என்று ஓதிப் பொருட்களின் மேல் தெளித்துவர, வியாபாரம் பெருகும். வியாபாரத்திற்குரித்தான செவ்வாய் கிரஹத்திற்கு அதிபதியே ஸ்ரீசுப்ரமண்ய சுவாமியாவார்.
8. தடங்கல்கள் வராமலிருக்க :- வீடு கட்டுதல், வேலைக்கு மனுச் செய்தல், வெளியூர்ப் பிரயாணம், சுபகாரியங்கள் போன்றவற்றில் தடங்கல்கள் வராமலிருக்க ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் இந்த அங்காளி அந்தாதிப் பாடலை மனவுறுதியுடன் துதித்துவர நற்காரிய சித்தி துரிதமாகும்.
நுதலதில் அழகொரு பொட்டுங் கண்டேன் ஞானப்
பதிகங் கூறும் மூன்று திருநீற்றுப் பட்டை கண்டேனென்னால்
அதிக மியம்பத்தா னியலுமோ ஞானமுன்மூத்த
துதிக்கை நாதனாற்றான் நவில இயலுமே

9. கோர்ட் வழக்குகள் தீர :- பல வருடங்களாக நீடித்து வரும் கோர்ட் வழக்குகள் நியாயமான முறையில் எளிதில் பைசலாகிட, கடன்கள் வசூலாகிட திருச்சியருகே திருநெடுங்களத்தில் உள்ள சிவனுக்கு சிவந்த மாதுளம் பழ முத்துக்களால் ஆவுடையும், லிங்கமும் மறையுமளவிற்கு அலங்கார அபிஷேகங்கள் செய்து ஏழைகளுக்குத் தானமாக அளித்துவர வேண்டும்.
10. சென்ற இதழில் சந்திர காந்தக் கல்லாலான விநாயகர் என்று கூறப்பட்டுள்ளது.
சந்திர காந்தக் கல்லாலான மூர்த்திகள் பலருண்டு. சற்றே முயற்சி செய்து பாருங்கள்.. இறைவன் தானே வழிகாட்டுவார். பல கோயில்களில் மூலமூர்த்திக்கு மேற்பகுதியிலுள்ள கோபுரக் கூம்புப் பகுதியில் சந்திரகாந்தக் கல் பொருத்தப்பட்டிருக்கும் . உஷ்ணமான காலத்தில் குளிர்ச்சியும் குளிர்ச்சியான காலத்தில் வெப்பத்தையும் தரும். பிறந்த எண் கூட்டு எண் இரண்டாக இருந்தால் பொதுவாக Moon stone எனப்படும் ஒரு வகை சந்திரகாந்தக் கல் மிகவும் சிறப்புடையதாகும்... வசதியுள்ளவர்கள் பவளப் பிள்ளையார்  மோதிரம் போல் moon stone கல்லில் பிள்ளையாரை வடித்துக் கொள்ளலாம். moon stone சிறிய அளவில் கூட, ரூபாய் முந்நூறுக்குள் கிடைக்கும். எனவே, சந்திர காந்தக் கல்லால் ஆன விநாயகரைத் தரிசிக்க இயலாவிடில் வெள்ளி, தாமிர, மர, பாத்திரத்தில் கங்கை, காவிரி மற்றும் புனிதநதி, கோயில் தீர்த்தங்களின் நீரை ஊற்றி, அதில் கட்டை விரலுக்கும் சிறியதாக உள்ள விநாயகர் படிமத்தையும் சந்திரகாந்தக் கல்லையும் நீரினுள் இட்டு குறைந்தது மூன்று மணி நேரமேனும் வைத்திடுக... பிறகு விநாயகரை வெளியில் எடுத்துச் சந்திரகாந்தக் கல்லை விநாயகர் பாதங்களில் வைத்துப் பசும்பால் அபிஷேகம் செய்து பாலை அளித்துவர குழந்தைகள் தானே விருப்பங்கொண்டு நன்றாகப் படித்திடுவர்.

மரத்தடி பிள்ளையார்கள்

புனித வேர் தரும் பொற்குவியல் – மரத்தடிப் பிள்ளையார் மஹிமை
வன்னி, வில்வம், அரசு, ஆல், வேம்பு, எனப் பல மரங்களின் கீழ் அமர்ந்து அருள்பாலிக்கின்ற பலவகை மரத்தடி விநாயகர்களின் மகிமைகளையும் வழிபடும் முறைகளையும், பலாபலன்களையும் சித்புருஷர்கள் அருளியபடி இங்கு விளக்குகிறோம்.
1. வன்னிமரப் பிள்ளையார் :- வன்னிமர விநாயகர் வலஞ்சுழியாக இருப்பது பெரும்பாக்கியம். வடக்கு நோக்கியிருப்பின் மிகவும் விசேஷமானது. அவிட்ட நட்சத்திரம் தோறும் வன்னி விநாயகரை நெல்பொரியினால் அர்ச்சித்து அபிஷேகம் செய்து ஏழைக் கன்னிப்பெண்களுக்கு உரிய தானம் அளித்துவர நல்லவரன் கிட்டித் திருமணம் கைகூடும். வாகன வியாபாரிகள் அவிட்ட நட்சத்திரத்தில் வன்னி விநாயகருக்குப் பொரியைப் படைத்து நூற்றுக் கணக்கான குழந்தைகட்கு அளித்திட தொழிலில் நல்ல லாபம் கிட்டும்.
2. வில்வமர பிள்ளையார் : தெற்கு நோக்கியிருப்பின் சிறப்புடையது.. சித்திரை நட்சத்திரத்தன்று மளிகைச் சாமான்களை பல ஏழைக் குடும்பங்களுக்கு தானமாக அளித்து வில்வமர விநாயகரை அடிப்பிரதட்சிணம் செய்து வர  பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வர். பிள்ளைகள் வில்வ விநாயகருக்கு வியாழன், புதன் கிழமைகளில் சந்தனம் அரைத்து இட்டுவர, படிப்பில் விருப்பம் கொள்வர்.
3. அரசமரப் பிள்ளையார் :- மேற்கு நோக்கி இருப்பது சக்தி வாய்ந்ததாகும்.. பூச நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் (அன்னத்தை மலையாய் குவித்துக் காப்பிடுதல்) செய்திட நில, தோட்ட விளைச்சல் பெருகும். உறவினரிடத்து எதிர்பார்த்த உதவி கிட்டும். பணக் கஷ்டம் நிவர்த்தியாகும்.
4. ஆலமரப் பிள்ளையார் :- வடக்கு நோக்கியிருத்தல் சிறப்புடையது. மருத்துவர்கள் மக நட்சத்திரம் தோறும் ஐந்து வகைச் சித்திரான்னங்கள் (எலுமிச்சை, தயிர், புளி, தேங்காய், போன்றவை) படைத்து தானமளித்திட சிகிச்சைத் துறையில் சிறப்படைவர். நோயாளிகள் இவ்வாறு செய்திட கடுமையான நோய்கட்கும் நிவாரணம் கிட்டும்.
5. வேப்பமரத்துப் பிள்ளையார் : - கிழக்கு முக விநாயகர் விசேஷம் நிறைந்தவர். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இவருக்கு (தேங்காயெண்ணெய் + நல்லெண்ணெய் + இலுப்பெண்ணெய் + விளக்கெண்ணெய் + பசு நெய்) பஞ்ச தீபம் எனப்படும் ஐந்து வித எண்ணெய் தீபம் ஏற்றிட மனதிற்கேற்ற வரன் அமையும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் சிறக்கும்.. மைத்துனி/நாத்தனார்/மாமியாரின் கொடுமைகள் தீரும்.. அலுவலகத்தில் மேலதிகாரியின் அடிமையாய்ச் செயல்புரியும் நிலை அகலும்.. இன்று பாகற்காய் கலந்த உணவைத் தானமளித்தல் விசேடமானது.
6. நெல்லிமரப் பிள்ளையார் :- பரணி நட்சத்திரத்தில், விநாயகர் ஆலயத்தில் 108 தேங்காயெண்ணெய் விளக்குகள் ஏற்றி ஏழைகளுக்கு இலவசமாக மருந்துகள், உடலுக்கு ஊக்கந்தரும் சக்தி மருந்துகளை (Vitamins, Tonics etc..) அளித்து வர இரும்புத் தொழிலில் அமோக வியாபாரமும், பெண் குழந்தை இல்லாதோர்க்கு பெண் குழந்தையும், வயதான பெரியோர்களுக்கு மனச்சாந்தியும் கிட்டும்.
7. மாமரப் பிள்ளையார் :- கேட்டை நட்சத்திரம் தோறும் விநாயகருக்கு விபூதிக் காப்பிட்டு மூன்று ஏழைச் சுமங்கலிகளுக்கு உணவு, உடையளித்துவர பகைமை பொறாமையால் நின்று போன / பாதிக்கபட்டுள்ள வியாபாரம் சீர் பெறும். விரக்தியால் உருவாகும் தற்கொலை மனப்பான்மை தணிந்து வாழ்வில் உறுதி ஏற்படும் ; அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பிரச்னைகள் தணியும்.
8. நாவல் மரப் பிள்ளையார் :- வடக்கு நோக்கிடில் மூர்த்தி விசேஷமானது. ரோஹிணி நட்சத்திரம் தோறும் புனித நதிக் கரையில் வறிய சிறுவர்களுக்கு வெண்ணெய் தானம் அளித்துவர பிரிந்த தம்பதியினர், குடும்பங்கள், உறவுகள் ஒன்று சேரும்.
9. இலுப்பை மரப் பிள்ளையார் :- மிகவும் சிறப்புடைய மூர்த்தி, ரேவதி நட்சத்திரத்திலும், செவ்வாய்க் கிழமையிலும் இவருக்கு பசுநெய் தீபம் ஏற்றி மஞ்சள் நிற ஆடைகளை 10 வயதிற்கும் குறைந்த சிறுமியர்க்கு அளித்துவர தனித்து வாழ்கின்ற முதியவர்கள், பெண்களுக்குத் தற்காப்பு சக்தி கிடைக்கும் மிக உயர்ந்த கட்டிடங்களைக் கட்டுவோர்க்கு எவ்வித விபத்துக்களின்றி, நஷ்டமின்றிக் கட்டிடம் நன்கு முடியும்.
10. சந்தனமரப் பிள்ளையார் : - மிகமிக அபூர்வமான மூர்த்தி, சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் பசும்பால் அபிஷேகம் செய்து ஏழைக் குழந்தைகளுக்கு அளித்திடுக! அரிய அபூர்வ சாதனைகளைப் பெற்றுத் தரவல்லது! புதிய வியாபாரம் நன்கு நடைபெறவும், விளையாட்டில் பதக்கங்கள் பெறவும், தேவையான உத்யோக உயர்வைப் பெறவும் அருள்வழியில் செல்லவும் சந்தன மர கணபதி அருள்பாலிக்கின்றார். சந்தன மரத்தினடியில்  தர்பைப் பாயிட்டு அமர்ந்து தியானம் பயின்றிடில் அற்புதசக்திகள் கிட்டும். தோல் நோய்களைக் குணமாக்கும் அற்புத மூர்த்தி இவர்.
11. மகிழ மரப் பிள்ளையார் :- இவரும் அரிய மூர்த்தியே! அனுஷ நட்சத்திரத்தில் இவருக்கு மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்துவர ராணுவம், வெளிநாடுகளில் உள்ளோர் நலமாக இருப்பர். பாதுகாப்புப்படை , RPF போன்ற விசேஷக் காவல், இராணுவ துறைகளில் உள்ளோர் பாதுகாப்பான வாழ்வைப் பெறுவர்.
12. புன்னை மரப் பிள்ளையார் :- ஆயில்ய நட்சத்திரத்தில் இளநீரபிஷேகம் செய்து நெசவுத் துணிகளை பிள்ளையாருக்கு அணிவித்து அதனை ஏழை நோயாளிகளுக்கு அளித்துவர கணவன் மனைவியரிடையே உள்ள மனக் கசப்புகள் நீங்கி தாம்பத்ய வாழ்வு சீர்பெறும்.
13. அட்டைப் பட விளக்கம் – ஸ்வர்ண ஹேரம்ப கணபதி – செல்வ கணபதி
மஹாப்பிரளயத்தின் போது உலகம் மறைந்து பிறகு படைப்பு தொடங்குகின்றதல்லவா! அப்போது சர்வேஸ்வரனே ஸ்ரீகணபதியை தியானித்து ஸ்ரீகிராத மூர்த்தியாக அவதாரம் பூண்டு சிருஷ்டியைத் தொடங்குகிறார். நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூத சக்திகளைக் குடத்தில் (கும்பம்) வைத்து ஸ்ரீபிரம்மா அதனைப் பூஜித்திட ஸ்ரீகிராத மூர்த்தி ஜீவநேசமென்ற பூக்களாலான அம்பை எய்து கும்பத்தில் உள்ள (பஞ்சபூத) ஜீவசக்திகளை விடுவித்திட படைப்பு துவங்குகிறது. இந்தப் படைப்பு வைபவத்திற்கு முன் திருமால் தர்ப்பையால் ஆன பவித்ரத்தை (தர்பை மோதிரம்) எடுத்தளிக்க, ஈஸ்வரனே மஞ்சள் பிள்ளையாரைப் “பிடித்து” ஸ்ரீலட்சுமி தேவியளித்த குங்குமத்தை இட்டுப் பிள்ளையார் பூஜையுடன் சிருஷ்டி தொடங்குகிறது. மஞ்சள் பிள்ளையார் பிடிப்பது என்றால் தற்போது நிலவுகின்ற வழக்கம் போல் மஞ்சளை அரைத்து அதில் கூம்பு வடிவாக உருவம் செய்து வைப்பதாகும்.. ஈஸ்வரன் இவ்வாறு “பிடித்த” மஞ்சள் பிள்ளையாரில், ஈஸ்வரனின் விரல்கள் படிந்திட அவற்றிலிருந்து திருமுகங்கள் தோன்றின. ஸ்ரீலட்சுமி தேவியால் அளிக்கப்பட்ட குங்குமத்தை ஈஸ்வரன் மஞ்சள் பிள்ளையாருக்கு இடுகையில் திருமால் அளித்த பவித்ர மோதிர ஸ்பரிசம் ஸ்ரீலட்சுமி அளித்த குங்குமத்தில் பட்டிட அதிலிருந்து ஸ்வர்ண ஹேரம்ப லக்ஷ்மி தோன்றினாள். திருமாலின் புதல்வியே அவள்! ஸ்வயம் பிரகாச விநாயக முகங்களுடன் தம் பத்னியாம் ஸ்வர்ண ஹேரம்ப லக்ஷ்மியுடன் சிருஷ்டிக்கு முன் அவதரித்தவரே ஸ்வர்ண ஹேரம்ப கணபதி எனும் செல்வ கணபதி! ஏகாதசி தோறும் ஜாதிபேதமின்றி ஐந்து ஏழைச் சுமங்கலிகளுக்குக் குங்குமம், மஞ்சள், ஆடைகள், மெட்டிகளை தானமாக அளித்துவர இல்லத்தில், வியாபாரத்தில் செல்வம் கொழிக்கும்.

மாளய அமாவாசை

புரட்டாசி அமாவாசை – மாளய அமாவாசை
சூரியனும் சந்திரனும் சேர்கின்ற தினத்தை அமாவாசையென நாம் கூறுகிறோம். அமாவாசை நல்ல நாள், எந்த நல்ல கார்யத்தையும் செய்யலாம் என்பதும் உண்மையே! அமாவாசை எவ்வாறு புனித நாளாகின்றது? பிரபஞ்சத்தில் எத்தனையோ சூரிய, சந்திர பூலோக மண்டலங்கள் இருப்பதைப் பற்றி ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் விளக்கி வந்துள்ளோம். பொதுவாக முப்பது நாட்களுக்கு ஒரு முறை சூரிய, சந்திர இணைப்பு நிகழ்கின்றது. தேவர்களுக்கு ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயன காலம் இரவாகவும், தை முதல் ஆனி வரையிலான உத்தராயண காலம் பகலாகவும் உள்ளதென நாமறிவோம்! இதேபோல் நம் மூதாதையர்களான பித்ருக்களுக்கு அமாவாசைக்கு முன் வரும் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) பகலாகவும், அமாவாசையை அடுத சுக்லபட்சம் (வளர்பிறை) இரவாகவும் அமைகின்றது. அதாவது அமாவாசை என்பது பித்ருக்களும் இரவின் தொடக்கம்! பசியும், உறக்கமும் இல்லாப் பெருவரங்களை உடையவர்களே தேவாதி தேவர்களும் பித்ரு தேவர்களும், பின் அவர்களுக்குப் பகல், இரவு பேதமேன்? பித்ரு தேவர்களெனப்படுவோர் உயர்ந்த தெய்வீக நிலையிலுள்ள நம் மூதாதையர்கள் ஆவர். நம்முடைய கடந்த தலைமுறையினர் அனைவரும் பித்ரு லோகத்தைச் சென்று அடைவதில்லை! அவரவருடைய நல்ல, தீய கர்மங்களுக்கு ஏற்ப சொர்க்கம், நரகம், அதளம், விதளம், தேவலோகம், இந்திர லோகம், நாக லோகம் எனப் பலவிதமான லோகங்களை அடைகின்றனர். எனவே உயர்ந்த, உத்தம நிலைகளில் உள்ள பித்ருக்களுக்கு நரை, திரை, மூப்பு, ஊண், உறக்கம், பசி போன்றவை இல்லையெனினும் அவர்களுக்கென ஆண்டவன் அளித்துள்ள தலையாய பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர். என்ன அது? தம்முடைய கடந்த தற்கால, வருங்கால தலைமுறைகளைத் தெய்வீக நெறியில் கடைத்தேற்ற வேண்டும். இதுவே பித்ருக்களின் கடமை. எத்தகைய கடுமையான ஆனால் பொறுப்புள்ள பணி? தீயொழுக்கங்கள் மிகவும் விரைந்து விரவிப் பரவி வருகின்ற இக்கலியுலகத்தில் நேருக்கு நேர் பேசும் சரீரங்களில் பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள், இருந்தும் கட்டுத்தறி விட்ட காளையைப் போல் மனம்போன போக்கில் செல்கின்ற இளை தலைமுறையின் கதி என்ன?
அடியார் : தாவரங்களுக்கும், புல்பூண்டுகளுக்கும் ஏன் தர்ப்பணமளிக்க வேண்டும்?
சற்குரு : இதற்குப் பல காரணங்கள் உண்டு.
1. மனிதனாகப் பிறந்த நாம், பிற ஜீவன்களின் நல்வாழ்விற்காக, சுயநலமின்றித் தியாக உணர்வுடன் செயலாற்றும் வகையில் பலவித இறை வழிபாடுகளை, தான தர்மங்களை மேற்கொள்ள வேண்டும். தர்ப்பணத்தில், திவசத்தில் மூதாதையர்களின் வழிபாட்டுடன் அன்னதானமும் சேர்ந்திருப்பதால் தர்ப்பணம் என்பது சமுதாய நலம் கூடிய மிகச் சிறந்த தியாக வழிபாடுகளுள் ஒன்றாகிறது.
2. கலியுகத்தில் உயிர்களின் வாழ்க்கை உணவைச் சார்ந்ததாக அமைந்துள்ளது. அரிசி, கோதுமை, பால், மாமிசம், காய்கறிகள் போன்றவற்றைச் சார்ந்து தானே மனித வாழ்க்கை உள்ளது. உண்டு கழித்தோமென எண்ணி எத்தனை கோடி உயிர் வகைகளை அழித்து, காய்கறிகளை, மாமிசந்தனைச் சுவைத்து வாழ்கின்றோம். (தாவர, விலங்கு) உயிர்வதை செய்து நாமுண்ட பயிர்களும் உயிர் வகைகளும் விமோசனம் பெறத் தர்ப்பண பூஜை அவசியமே! வள்ளலார் சுவாமிகள் “வாடிய பயிரைக் கண்டு வாடிய” மஹான் அல்லவா. எனவே நம்முடைய நல்வாழ்விற்காகத் தம்முயிரை ஈந்த கத்தரிக்காய், வெங்காயம், கீரை, கோழி, மீன், நண்டு, ஆடு போன்ற உயிரினங்களின் நன்னிலைக்காகவும், உயிர்வதைக்கான பிராயச்சித்தமாகவும் நாம் காருண்யத் தர்ப்பண பூஜையைக் கட்டாயம் செய்திடல் வேண்டும்.
3. தாவரங்களாகவும், புல் பூண்டுகளாகவும் நம் கண்களுக்குத் தோன்றுகின்றவை நம் தலைமுறைகளின் மறுபிறப்பாக இருக்கலாமன்றோ! உதாரணமாக, சுயநலமாக, நம்முடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்ய, அதர்மமான முறையில் மரங்களை வெட்டிடில் அதே மரங்களாகப் வெட்டுபட வேண்டிய மறுபிறப்புகள் அமையுமே! எனவே நமக்கு நாமே நம்முடைய முன்பிறப்புகளுக்குத் தர்ப்பணம் செய்து கொள்கின்றோம் என்பதும் சத்தியமான வாக்கு ஆகும்.
4. கொடிய பாவச் செயல்களைப் புரிந்த நம் மூதாதையர்களுள் சிலர் நரக லோகங்களிலும், இருள் லோகங்களிலும் அல்லல்படுகின்றனர். நாமளிக்கின்ற தர்ப்பண அர்க்ய நீரே அவர்களை மேம்படுத்தி நல்ல ஒளியுலகாம் அருள் உலகிற்குக் கொண்டு செல்லும்.
பெண்களுக்கான தர்ப்பணம்
அடியார் : பெண்கள் தர்ப்பணம் அளித்திடலாமா?
சற்குரு : நிச்சயமாக! ஒரு முறை ஸ்ரீராமர், தன் தம்பி இலக்குவனை, தசரதருடைய சிராத்தத்திற்காக திவசப் பொருட்களைக் கொண்டு வருமாறு அனுப்ப, நெடுநேரமாயும் இலக்குவன் வராததால் தானே அவனைத் தேடிச் சென்றார். ஸ்ரீராமரும் திவசத்திற்குரிய குறிப்பிட்ட திதி முடியும் நேரத்திற்குள் வராமையால் சீதாப்பிராட்டியே தர்ப்பணம், திவசம் ஆகியவற்றை முன்னின்று நடத்தி முடித்து விட்ட ஓர் அற்புதமான நிகழ்ச்சியை நம் புராணத்தில் காண்கிறோம். பெண்கள் வெள்ளை எள் கொண்டு தர்ப்பணம் அளிக்க வேண்டும். ஆண் வாரிசு இல்லாத இடங்களில் பெண்கள் தங்கள் பெற்றோர்க்கும், இறந்த கணவனுக்கு அவனுடைய மனைவியும் அசிரத்தையால் அவநம்பிக்கையால் கணவன் தர்ப்பணத்தைச் செய்ய மறுக்கையில் அவன் அனுமதியுடன் மனைவியும் இவ்வாறாக பெண்களுக்குத் தர்ப்பணம் பூஜை நிகழ்த்திட சகல உரிமைகளும் உண்டு.
(மேலும் பல விளக்கங்களை எம் ஆஸ்ரம வெளியீடான “எளிய தர்ப்பண முறைகள்” என்னும் நூலில் கண்டிடுக!)
புரட்டாசி அமாவாசை மஹிமை
அடியார் : புரட்டாசி மாத மாளயபட்சமும், மாளய பட்ச அமாவாசையும் பித்ருக்களுக்குச் சிறப்புடையதாகக் கூறப்படுவதேன்?
சற்குரு : பித்ருக்களாகிய நம் மூதாதையர்கள் செய்திட்ட தான தர்மங்கள், வழிபாடுகள், புனித யாத்திரைகளின் புண்ய சக்தியில் தான் நாம் வாழ்கிறோம் என்பதை ஒருபோதும் மறக்கலாகாது. புரட்டாசி மாதம் ஸ்ரீவிஷ்ணு பகவானுக்கு ஏற்ற மிகச் சிறந்த மாதமாகும் எவ்வாறு மார்கழி மாதம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு உரித்தானதோ அதேபோல், புரட்டாசி மாதமானது ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஸ்ரீவெங்கடேச , ஸ்ரீபார்த்தசாரதி, ஸ்ரீநிவாச போன்ற பல அவதாரங்களுக்கு மிகவும் விசேஷமானதாக அமைந்துள்ளது. பித்ருக்களின் நாயகரே ஸ்ரீமகாவிஷ்ணு ஆவார். பூலோகத்தில் உள்ள பல கோயில்களில் உற்சவ மூர்த்தி பல இடங்களுக்கும் சென்று அசையும், அசையா ஜடப்பொருள்களுக்கும் காட்சி தந்து அருள்கின்றார் அன்றோ, இதே போல் ஸ்ரீமகாவிஷ்ணுவும் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பட்சத்திலும் (15 நாட்கள்) ஒவ்வொரு லோகத்திலும் பவனி வருகின்றார். இதைப் போல் பித்ரு லோகங்களில் ஸ்ரீமஹாவிஷ்ணு பவனி வருகின்ற காலமே புரட்டாசி மாத கிருஷ்ண பட்ச(தேய்பிறை)மாகும். அந்த தருணத்தில் வசு பித்ருலோகம், ருத்ர பித்ருலோகம், ஆதித்ய பித்ருலோகம், மாத்ரு பித்ருலோகம், ரிஷி பித்ரு லோகம் போன்ற பலவிதமான பித்ரு லோகங்களில் உள்ள நம்முடைய மூதாதையரான பித்ருக்கள், ஸ்ரீமகாவிஷ்ணுவிற்கு பாதபூஜை, ஹோமம், அபிஷேக ஆராதனைகள் போன்ற பூஜைகளை மேற்கொள்கின்றனர். எதற்காக?
பூலோகம் மற்றும் பல லோகங்களில் வாழ்கின்ற நம்மைப் போன்ற சந்ததியினருக்காக.
எவ்வாறு நவராத்திரியில் ஸ்ரீஅம்பிகையின் லோகங்களில் பவனி வருகின்ற சிவபெருமானை இராப் பகலாக ஈஸ்வர்யானவள் 9 தினங்களுக்கு பூஜிக்கின்றாளோ அதேபோல் பித்ரு லோகங்களில் புரட்டாசி மாத தேய்பிறையான மாளயபட்சத்தில் அங்கு எழுந்து அருள்கின்ற ஸ்ரீமகாவிஷ்ணுவை இரவு பகலாக பித்ருக்கள் ஆராதிக்கின்றார்கள். இந்த 15 தினங்களில் மட்டுமே பித்ரு லோகங்களில் இருந்து ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆணைப்படி பூலோகத்திற்கு பித்ருக்கள் வந்து செல்கின்றனர். பித்ரு லோகங்களிலும், தேவ லோகங்களிலும் கிடைக்காத பல பூஜைப் பொருட்கள் பூலோகத்தில் தான் கிடைக்கின்றன. அது மட்டுமா, பல கோயில்களில் உள்ள தீர்த்தங்களின் தெய்வீக சக்தியை வேறு எந்த லோகத்திலும் பெற இயலாது. இதற்காகவே பூலோக தீர்த்தங்களில் நீராடுவதற்கும் அவற்றை தத்தம் லோகங்களுக்கு எடுத்துச் சென்று, இறைவனை அபிஷேகித்து ஆனந்திப்பதற்கும் தேவர்களும் பித்ருக்களும் வருகின்றனர். தங்களுடைய பித்ரு லோகங்களில் உற்சவ மூர்த்தியாக நேரில் எழுந்தருளுகின்ற ஸ்ரீமகாவிஷ்ணுவை ஆராதிப்பதற்கான பூஜை பொருட்களை இறை அருளுடன் எடுத்துச் செல்வதற்கு பூலோகத்திற்கு வருகின்ற பித்ருக்கள் இதற்குக் கைமாறாக தங்களுடைய பூஜா சக்திகளை இந்த 15 நாட்களிலும் தமக்கு தர்ப்பணம் அளிப்போர்க்கு பரிசாகக் கொடுக்கின்றனர். எனவே மாளயபட்சத்தில் தர்ப்பணம் அளிப்போர்க்கு நிறைய தெய்வீக சக்திகள் பரிசாகக் காத்திருக்கின்றன. வருடத்திற்கு ஒரு முறை வருகின்ற இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் பல ஆண்டுகள் விடுபட்டுப் போன தர்ப்பண சக்திகளை ஒன்று திரட்டி பெற்று விடலாம். இறைவன் எத்தகைய காருண்யம் உடையவர்! நாம் அற்புதமான மனிதப் பிறவியை பெறுவதற்குக் காரணமாக இருக்கும் மூதாதையர்களை நாம் பல்லாண்டுகளாக தர்ப்பண பூஜைகளின் மூலம் வழிபட மறந்தாலும் கூட, இப்பெரும் பிழையை மன்னித்து நம்மை நாமே திருத்திக் கொள்வதற்கு அற்புதமான மாளயபட்ச பூஜைகளின் மூலம் நல்வாய்ப்பு அளித்த இறைவனின் பெருங்கருணையை என்னென்று சொல்வது?
இவ்வகையில் மாளய பட்சத்தின் 15 நாட்களிலும் நாம் செய்கின்ற தர்ப்பணங்களை ஏற்று அவற்றைப் பித்ருக்கள் தம்முடைய பூஜைகளோடு சேர்த்து ஸ்ரீமகாவிஷ்ணுவிற்கு அளிக்கின்றனர். பித்ருக்களின் பெருமாள் பூஜையோடு நம் பூஜைகளும் சேருவதற்கு நாம் என்னே பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்! மேலும் தட்சிணாயன காலமான ஆடி முதல் மார்கழி வரையிலான 6 மாத காலம் தேவர்களுடைய இரவு காலமாக அமைகின்றது என்பதை நாம் அறிவோம். இவ்வகையில் புரட்டாசி மாதம் தேவர்களுக்கான நள்ளிரவு காலமாகும். நள்ளிரவு கால பூஜைக்கு அபரிமிதமான பலன்கள் உண்டு. பகல் நேரத்தை விட இரவு பூஜை பல்லாயிரம் மடங்கு அதிக பலன்களை தரவல்லதாகும். அதில் நள்ளிரவு பூஜையின் பலன்களோ லட்சமடங்காய்ப் பல்கிப் பெருகும். மேலும் தேய்பிறையான கிருஷ்ண பட்சம் என்பது (பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரையில் உள்ள 15 நாட்கள் கொண்ட ஒரு பட்சம்) பித்ருக்களுடைய இரவு காலமாகும். எவ்வாறு அம்பிகையானவள் ஈஸ்வரனை இரவில் பூஜித்து சிவராத்திரி, நவராத்திரி போன்ற மகத்துவம் வாய்ந்த நாட்களில் பெறற்கரிய இரவு பூஜைகளின் பலன்களை முழுமையாகப் பெற்று நமக்கு அளிக்கின்றாளோ, அதேபோல் தேவர்களும் தங்களுடைய நள்ளிரவு காலமான புரட்டாசி மாதத்தில் பித்ரு லோகங்களுக்கு வந்து பித்ருக்களின் பூஜைகளில் கலந்து கொள்கின்றனர். தேவர்களுக்கும் பித்ருக்கள் உண்டு என்பது ஒரு தெய்வீக ரகசியமாகும்.
உண்மையில் தேவர்களுக்கு சாகாவரத்தை தந்த அமிர்தத்தை பெறக்காரணமே புரட்டாசி மாதத்தில் அவர்கள் ஸ்ரீமகாவிஷ்ணுவைப் பூஜித்ததே ஆகும். இதற்காக அவர்கள் அமிர்த பூஷணி என்ற அரிய நள்ளிரவு விரத பூஜையை மாளய பட்சத்தில் பித்ரு லோகத்தில் இன்றும் கடைபிடித்து வருகின்றார்கள்..
எள் எவ்வாறு வந்தது?
ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருமேனியிலிருந்து பிறந்தவையே எள் தானிய மணிகளாகும். நாம் எவ்வாறு திருப்பதியில் ஸ்ரீவெங்கேடசப் பெருமாளின் நிர்மால்ய தரிசனத்தை (அலங்கார, ஆபரணங்களின்றி பெருமாளின் சுயம்புத் திருமேனி தரிசனம்) மிகவும் சக்தி வாய்ந்த தரிசனமாக கருதுகின்றோமோ, அதே போல் மாளயபட்சத்தில் பித்ரு லோகத்தில் மட்டுமே, பெருமாள் எள் தானியங்கள் பிறந்த திருமேனியோடு, நிர்மால்ய தரிசனத்தைத் தந்து பித்ருக்களின் நாயகராகப் பரிமளிக்கின்றார். இது ஈரேழு லோகங்களிலும் எங்கும் காணக் கிடைக்காத தரிசனமாகும். பூலோக மனிதர்களாகிய நாம் பெருமாளின் பித்ரு நாயகரான அற்புதமான அவதார தரிசனத்தைப் பெற இயலாது. ஆனால் இதனைக் கன்டு களித்து அபிஷேகித்து, ஆராதிக்கின்ற பித்ருக்களின், தேவர்களின், ஏனைய மகரிஷிகளின், பெருமாளின் “திலஸ்மார நிர்மால்ய தரிசன பூஜையின்” பலாபலன்களை நாமும் பெறுவதற்கு மாளய பட்ச தர்ப்பண, ஹோம, அன்னதான வழிபாடுகளும் பெரிதும் உதவுகின்றன..
மாளைய பட்சத்தின் மகிமையை ஒரு சில அம்சங்களின் ஒரு சிலவற்றை சித்புருஷர்கள் அருளியுள்ளவற்றை இங்கு அளித்துள்ளோம். எனவே அனைவரும் சாதி, மத, இன, குல பேதமின்றி வரும் 17.9.1997 முதல் 1.10.1997 வரை அமைகின்ற மாளயபட்ச தர்ப்பண தினங்களில் தினந்தோறும் தர்ப்பண பூஜைகளையும், தான தர்மங்களையும் கடைபிடித்து நமக்குத் துன்பங்களைத் தருகின்ற தோஷங்களுக்கும், சாபங்களுக்கும் பரிகாரம் பெற்று சகல ஐஸ்வரியங்களுடன், நல்வாழ்வு பெற வேண்டுகிறோம்.
ஈஸ்வர வருட மாளய தர்ப்பண முறைகள் :-
நடப்பு ஈஸ்வர ஆண்டில் வருகின்ற மாளயபட்சத் தர்ப்பணங்களுக்கு விசேஷமான பலன்கள் உண்டு. ஒவ்வொரு தின தர்ப்பணத்திற்கும் நாம் நினைத்துக் கூடப் பார்க்க இயலாத அளவில் அபரிதமான பலன்கள் கிடைக்கின்றன. இத்தகைய பலன்களை நாம் சாதாரணமாகப் பெற வேண்டுமானால் பல வித ஹோமங்களையும், பலவித புனித யாத்திரைகளையும், பூஜை முறைகளையும் கடுமையான நியதிகளுடன் கடைபிடித்தாக வேண்டும். ஆனால் இவற்றை எளிய முறையில் தருவதே மாளய தர்ப்பண பூஜையாகும்.
எல்லோரும் செய்திடலாம் தர்ப்பண பூஜையை :-
தர்ப்பணம் என்றால் நமக்கு தெரியாத ஒன்று என்று எண்ணாதீர்கள். மந்திரங்கள் தெரியாவிட்டால் கூட இதற்கு ஈடான தமிழ் துதிகளும் உண்டு. ஒன்றுமே அறியாத பாமரர்கள் கூடத் தங்கள் தாத்தா, பாட்டியின் பெயரைச் சொல்லி கோயில் குளங்களிலும், காவிரி போன்ற புனித நதிக்கரைகளிலும் எள் கலந்த நீரை சில தர்ப்பைகளின் மேல் ஊற்றினால் போதும். இதனையே மிக எளிய பூஜையாக பித்ருக்கள் சந்தோஷமாக ஏற்கின்றனர். தர்பைப் புல் அதிசயமான மின் சக்தியைக் கொண்டது. மந்திர சக்தியை கிரஹிக்கும் தன்மை இதற்கு அதிகமாக உண்டு. தீய எண்ணங்களோ, கர்மவினைகளோ ஒட்டாத புனிதமான தாவரமே தர்பைப் புல்லாகும். நம்மைவிடப் புனிதமான தெய்வீக சக்தியைக் கொண்ட தேவர்களும், பித்ருகளும் தர்பைப் புல்லில் தான் கண்ணுக்கு தெரியாத சூட்சுமமான ஒளி ரூபத்தில் வந்து அமர்கின்றனர். திருமாலின் உடலிலிருந்து ஏற்பட்ட தாவரமான எள் தானியத்திற்கு “சுபதாரண” அமிர்த சக்தி உண்டு. எவ்வாறு அமிர்தத்தை உண்டு தேவர்கள் சாகாவரம் பெற்றார்களோ அதே போல் நாம் அளிக்கின்ற தில தர்ப்பணம் எனப்படும் எள்ளும் நீரும் கலந்த தர்ப்பணமானது நம் பித்ருக்களுக்கு திலபான அமிர்த சக்தியை மாளய பட்சத்தில் மட்டுமே அளிக்கிறது. அமாவாசையிலும், மாதப்பிறப்புகளிலும் எள்ளில் வேறுவிதமான திலதான அமிர்த சக்தி பெருகுகின்றது.
தர்ப்பணமும் ஓர் அபிஷேகமே!
அடியார் : தர்ப்பணத்தில் நடக்கின்ற தெய்வீக சம்பவத்தை விளக்க வேண்டுகிறோம்.
சற்குரு : முதலில் அனைவரும் பின்பற்றுகின்ற தர்ப்பண முறையைச் சொல்லுகின்றோம். தர்ப்பணத்தை தமிழில் “நீத்தார் கடன் தீர்த்தல்” என்று சொல்கிறோம். பித்ரு லோகங்கள் தெற்கு திசையில் இருப்பதால் பித்ருக்களை தென்புலத்தார் என்றும் தமிழில் அழைக்கின்றோம். தர்ப்பணம் என்றால் வடமொழி சொல், தர்ப்பணம் செய்ய வடமொழி மந்திரங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ண வேண்டாம். வடமொழியும், தமிழ்மொழியும் இறைவனின் இரு கண்களாகும். உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் கலைவாணியே தாயாவாள். தென் அமெரிக்காவில் இருந்து கொண்டு சிலி மொழியில் தர்ப்பணம் அளித்தால் கூட அது பித்ருக்களுக்குத் தான் போய் சேரும். ஏனென்றால் சென்ற பிறவியில் சிலி நாட்டிலோ, ஆஸ்திரேலியாவில் பிறந்து இறப்பவர்கள் இப்பிறவியில் இந்தியாவில் வசிக்கலாம் அல்லவா? பின் பூஜையில் மொழி, வேத பேதம் எதற்கு? வீட்டிலும் தர்ப்பண பூஜையைச் செய்யலாம். புண்ணிய நதிக்கரையிலும், கோவில் தீர்த்தங்களிலும் தர்ப்பணம் செய்வது அபரிதமான பலன்களை அளிக்கும்.
எளிய தர்ப்பண முறை
1. 3, 6, 9 ,12, 21, 24 என்ற எண்களில் தர்பைப் புல்லை நன்கு சுத்தமான இடத்தில் பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு தர்ப்பைகளைப் பரப்புவதற்கு தர்பை ஆசனம் அல்லது தர்பைப் பலகை என்று பெயர்.
2. தர்ப்பைகளைப் பரப்பியவுடன் மானசீகமாக உங்களுடைய மூதாதையர்களை உருவமாகவோ, பெயர் மூலமாகவோ, பார்த்திராவிடில் அவர்களுடைய நினைவையோ ஏற்படுத்திக் கொள்ளுங்கள். புனிதமான நட்சத்திரம் போன்று கண்கள் கூசும்படியான பிரகாசத்தைக் கொண்ட பித்ருக்கள் தர்ப்பைகளில் தான் அமரமுடியும். ஏனென்றால் அத்தகைய தெய்வீகமான அற்புத மின்சக்தியைக் கொண்டதே தர்ப்பைப் புல் ஆகும்.
3. ஒரு பாத்திரத்தில் நீரும், மற்றொரு பாத்திரத்திலோ அல்லது சிறிய வாழை, அரசு, ஆல், பலா, மா இலைகளிலோ சிறிது எள்ளை வைத்துக் கொள்ளுங்கள்.
4. வலது உள்ளங்கையில் சிறிது நீர் ஊற்றி, அதில் சிறிது எள்ளும் கலந்து ஒவ்வொரு மூதாதையரின் பெயரை மூன்று முறை சொல்லி வலது கையின் கட்டைவிரல், ஆள்காட்டி விரலுக்கு இடையே உள்ள பகுதி வழியாக நீரை சாய்த்து தர்ப்பையின் மேல் ஊற்றுங்கள்.
இதுவே எளிய தர்ப்பண பூஜை! இந்த எளிய பூஜையை எல்லோரும் கடைபிடிக்கலாம் அல்லவா? இத்துடன் எளிய அன்னதானம் மேலும் பூஜா பலன்களைப் பெருக்கும். கீழ்கண்ட இரு மந்திரங்களைச் சொல்லியவாறு தர்ப்பண நீரை வார்த்திடலாம். இந்த எளிய முறையில் தர்ப்பண பூஜையை மாளய பட்சத்தில் 15 தினங்களிலும் காலையில் செய்து வந்தால் போதுமானது. தினந்தோறும் உங்கள் மூதாதையரின் நினைவோடு இயன்ற தான தருமம் செய்து வாருங்கள். தினமும் குறைந்தபட்சம் 3 வாழைப் பழங்களையேனும் பசுவிற்கு அளித்திடுங்கள். தர்பையைப் போல் தூய்மையான பசுவின் உடலிலும் பித்ருக்கள் அமருகின்றார்கள். சித்புருஷர்கள் அருளியுள்ள ஈஸ்வர வருடத்திற்கான, மாளய பட்சத்திற்குரிய தினசரி தர்ப்பண முறைகளையும், பலன்களையும் விவரிக்கின்றோம்.
17.9.1997 – பிரதமை திதி சக ஜீவ சேதனத் தர்ப்பணம்
நம்முடைய மூதாதையர்களின், பெற்றோர்களின் வீடு, வாசல், நிலம், நகைகள், கருவிகள், பதவிகள் போன்றவற்றை அனுபவிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். குறைந்த பட்சம் ஒரு பாத்திரமேனும் அல்லது தெய்வப் படமேனும் வழிவழியாய் வந்து கொண்டு இருக்கும். இதற்காக நாம் பித்ருக்களுக்குப் பூஜை செய்யாது அல்லது அவர்களை நினையாமல் கடந்த வருடங்களில் பூர்விக சொத்துக்களைத் தீய காரியங்களுக்கும் ஏமாற்றுதலுக்கும் பயன்படுத்தியது உண்டு. இது தெய்வக் குற்றமாக மாறிட, பல எதிர்பாராத விபத்துகளும், நஷ்டங்களும், விரயங்களும், திடீர் மரணங்களும், அதிர்ச்சிகளும் ஏற்படுகின்றன. மேலும் இல்லத்திலோ, அருகிலோ தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கக் கூடும். நம்முடைய பழைய தலைமுறைகளில் ஒரு சிலரேனும் கொலை, கொள்ளை, வஞ்சித்தல், பிற குடும்பங்களை அழித்தல், கொடுமையான காமக் குற்றங்களைப் புரிதல், உறவினர்களை, பெண்களை ஏமாற்றுதல், லஞ்சம் பெற்று ஏழைகளை, நடுத்தர மக்களை வதைத்தல் போன்ற பலவிதமான பாவச் செயல்களைச் செய்திருக்கக் கூடும். ஏன்? இப்பிறவியிலேயே இதனைச் செய்திருப்போரும் உண்டும். கோயில் இடங்களில் மிகக் குறைந்த வாடகையைக் கொடுத்து சுகமாக வியாபாரச் செல்வப் பெருக்கை அனுபவிப்போரும், கோயிலுக்குரிய இல்லங்களில் பல வருடங்களாக மனசாட்சிக்கு விரோதமாக மிகமிகச் சொற்ப வாடகையில் அனுபோகம் செய்வோரும் நிறைய உள்ளனர். தெய்வசாட்சியாக அவர்கள் உண்டியலில் இட்டோ, இறைத் திருப்பணிகளாகவோ செய்தால் தான் ஓரளவு பிராயச்சித்தம் கிட்டும். இல்லாவிடில் இதற்கான தண்டனைகளோ மிகக் கடுமையானவை! சந்ததிகளையே ஊனமாக்கி, பைத்தியமாக்கும்.
1. மேற்கண்ட தீயசெயல்கள் புரிந்த நம் தலைமுறையினர் ஆவிகளாகச் சுற்றி அவதிப்படுவதிலிருந்து நிவாரணம் பெற்று நரகம் போன்ற இருட்டான லோகங்களிலிருந்து வெளிவரவும்.
2. இப்பிறவியில் இவற்றையெல்லாம் செய்தவர்களும், செய்து கொண்டு வருபவர்களும் கடுமையான எதிர்வினைகளில் இருந்து தங்களைக் காத்துக் கொண்டு குற்றங்களை உணர்ந்து மனம் திருந்தி வாழவும். இந்நாளுக்குரிய சகஜீவசேதன தர்ப்பணத்தைக் கடைபிடிக்க வேண்டும். இன்று எள்ளுடன் துளசியையும் நீருடன் சேர்த்து, துளசி இலைகளைப் பெருமாளின் நாமங்களைச் சொல்லி துதித்துத் தர்ப்பைகளின் மேல் வைத்து, பிறகு எள் கலந்த நீரை வார்த்துத் தர்ப்பணம் இட வேண்டும். பாற்கடலில் பிறந்த துளசி தேவியே பெருமாளுடன் ஐக்கியமாகி இத்தகைய பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தருபவள். இன்று இட்லி, இடியாப்பம் , பணியாரம் போன்ற ஆவியாலான உணவுப் பொருளில் துளசி இலைகளை வைத்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்திடல் வேண்டும். முடிந்தால் வெண்ணிற ஆடைகளை இறைவனுக்குச் சார்த்தி, அவற்றையும் தானமாக அளித்திட வேண்டும். இத்தகைய பிரதமை தின தானங்களில் மட்டும் கிட்டும் சேதன சக்தியே மேற்கண்ட பாவங்களுக்கு மாளய பட்சத்தில் ஓரளவேனும் பிராயச்சித்தம் தரவல்லதாகும். இவை தீய ஆவிகளை அடக்கவல்லதாகும். ஆனால் ஆவி ரூப நிலைமாறி நற்கதியை அடைய, அமாவாசைத் தர்ப்பணங்களையும் மற்றும் மாதப்பிறப்புத் தர்ப்பணங்களையும் விடாமல் தொடர்தல் வேண்டும். திருவாலங்காடு (சென்னையருகே), திருவள்ளூர், ராமேஸ்வரம், மஹான்கள்/சித்புருஷர்கள் ஜீவஸமாதி பூண்ட புனித ஆலயக் குளங்கள் (நாகப்பட்டிணம் அருகே வடபொய்கை நல்லூர், திருவக்கரை, திருஅண்ணாமலை, திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையார், காஞ்சிபுரம் etc.) போன்ற இடங்களில் இத்தர்ப்பணத்தைச் செய்தல் விசேஷமானது. மூலவர் தெற்கு நோக்கி உள்ள கோயில் தீர்த்தங்களும் இத்தர்ப்பணத்திற்குச் சிறப்புடையது.. (ஆவுடையார் கோயில், அத்திப்புலியூர்.)

பாபவிமோசன தீர்த்தம்
பாபநாசம் தஞ்சாவூர்

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், பித்ரு தர்ப்பணம் என்பது
1. உத்தம நிலையில் உள்ள பித்ருக்களுக்கு மேலும் பல உன்னத நிலைகளைத் தரவல்லது.
2. கொடிய செயல்கள், தீவினைகள் இவற்றைப் புரிந்த சில முன்னோர்களின் தீய கர்ம வினைக்குப் பரிஹாரம் தருவது.
3. நடப்பு வாழ்க்கையில், தர்ப்பணம் அளிப்பவர் செய்த தீய செயல்களுக்குரித்தான பரிஹாரத்தைப் பித்ருக்களின் மூலம் பெறுவது ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது.
18.9.1997 – துவிதியை திதி – பூர்ண சாப நிவர்த்தித் தர்ப்பணம்
கணவன், மனைவியரிடையே உள்ள மனக்கசப்புகள் பலவாறாக சண்டை, அடிதடி, கோர்ட் வழக்கு, சொத்து பிரித்தல், விவாகரத்து, குழந்தைகள் பிரிதல், மறுமணம் என எந்த அளவிற்கும் செல்லக்கூடும்.. இதனால் மன அமைதியின்றி வாழ்ந்து மடிந்தோரும், வாழ்வோரும் உண்டு, விருப்பு, வெறுப்புகள , பொருளாதார நிலைமை, கருத்து வேறுபாடுகள், கெட்ட பழக்க வழக்கங்கள், உறவினர் விவகாரம் போன்றவை காரணமாக அமைதியின்றி ஏனோ தானோ என்று வாழ்வோர் பலர். குடும்ப வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு இறந்தோர் நன்னிலையை அடைவதில்லை. தாம்பத்ய வாழ்க்கையில் கணவன் மனைவி ஒருவரையொருவர் உளமார ஏற்று வாழாவிடில் அப்பிணைப்புப் பல்வேறு உறவுகளாகப் பல்லாயிரம் பிறவிகளில் தொடரும்.
– மேற்கண்ட இன்னல்களிலிருந்து விடுதலை பெறம் முன்னோர்க்குச் சாந்தியளிக்க “பாபவிமோசன” தீர்த்தம் உள்ள இடங்களில் தர்ப்பணமளித்துக் கடலைச் சுண்டலைத் தானமாக அளிக்க வேண்டும். கடலை தான்யத்திற்குரிய குருபகவானின் அருள் கூடினால் தான் இவற்றிற்கு நிவாரணம் கிட்டும். பாபநாசம், (திருப்பதி, திருநெல்வேலி, கும்பகோணம் அருகில்...) கும்பகோணம் அருகில் உள்ள திருவிடைமருதூர், திருஅண்ணாமலை ஆலய சிவகங்கை தீர்த்தம், காசி, இராமேஸ்வரம், திருநள்ளாறு மற்றும் பாபவிமோசன தீர்த்தம் உள்ள இடங்களில் இத்தர்ப்பண பூஜை விசேஷமானதாகும். முடிந்த அளவு குண்டு மஞ்சள், மஞ்சள் நிற ஆடைகளைத் தானமாக அளிக்கவும்! 
விரதம், தானதர்மங்கள், ஹோமம், மந்திரத் துதிகள் சேருகையில் தர்ப்பண பூஜா பலன்கள் பெருகும்.
19.9.1997 திருதியை சதுர்த்தி திதி – த்ரய பூஷண சாந்தி தர்ப்பணம்
நண்பர்கள், உறவினர்களை பொன், பொருள், பதவி, அதிகாரம், அந்தஸ்து, செல்வம் காரணமாக ஏமாற்றி அவர்கள் இறந்திருப்பின் அதன் விளைவுகளோ மிகவும் கொடியதாகும். அவர்களுடைய ஆவிகளும் பழிவாங்க வேண்டுமெனப் பல இன்னல்களைத் தரும். பத்து ரூபாய் கடன்வாங்கித் திருப்பித் தருமுன் நண்பர் இறந்தால் கூட அதுவும் பாபகரமானதே! தன்னால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் திருந்திய மனதுடன் உதவி புரிவதே உண்மையான பரிஹாரம். இத்தகைய ஆவிகளின் ஜன்ம சாபல்யத்திற்காகவும், நல்ல பரிஹாரம் பெறவும் இன்றைய த்ரயபூஷண சாந்தி தர்ப்பணம் உதவுகிறது.. சூரிய தீர்த்தம் உள்ள இடங்களில் (ஜுலை 1997- ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழைப் பார்க்கவும்) இத்தர்ப்பணத்தை அளித்து வெந்தயம் கலந்த உணவு (வெந்தயக் குழம்பு, வெந்தயக் கீரை etc,) தானமளிக்க வேண்டும். சூர்யசாகம்பரி லோகத்திலிருந்து வந்த வெந்தயமானது யோகினி, சூலை தேவதைகளுக்குப் ப்ரீதியைத் தருவதாகையால், யோகினி தேவதைகள் பல திக்குகளிலும் நின்று ஆவிச் செயல்களிலிருந்து ரட்சை போல் நம்மைக் காப்பர்.
20.9.1997 பஞ்சமிதிதி – நேத்ர பிரேம தர்ப்பணம்

அமுத கூபம் கோட்டூர்

1. கண் வியாதிகளால் துன்புற்று இறந்தோர்,
2. தன் பிள்ளைகள் தன்னுடைய கண் வியாதிக்குச் சரியாக வைத்யம் பார்க்கவில்லை என்ற மனக்குறையுடன் இறந்தோர்,
3. கண்பார்வை குன்றிய தன்னை, கணவனோ, பிள்ளையோ, பெண்ணோ, மருமகளோ, சரியாக நடத்தவில்லை, சரீர உதவி செய்யவில்லை என்ற எண்ணங்களுடன் இறந்தோர்,
4. கண் ஆபரேஷனால் பாதிக்கப்பட்டு, கண் மருத்துவரின் கவனக்குறைவால் அவதிக்குள்ளானோர் அந்நினைவிலேயே இறத்தல் (இது சம்பந்தப்பட்ட கண் மருத்துவரைப் பாதிக்கும். இதற்குரிய பிராயச்சித்தத்தை அவரும் செய்திடல் வேண்டும்.)
5. கவனக் குறைவு, விபத்து, தொழில் காரணமாகப் பிறருடைய கண்கள் பாதிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்து அவர்கள் இறந்திடில்...
மேற்கண்ட காரணங்களால் “நேத்ர க்ரோத ஆவிகள்” உண்டாகி அவை சம்பந்தப்பட்டவரை மிகவும் பாதிக்கும். இதற்குப் பிராயச்சித்தமாக அக்னி தீர்த்தங்கள் உள்ள கோயில்களிலும், திருவிடைமருதூர், திருவாரூர், கஞ்சனூர், திருக்காட்டுப்பள்ளி, வயலூர், கொள்ளிக்காடு, புகலூர், வன்னியூர், திருஅண்ணாமலை அபயமண்டபம் அருகே உள்ள பித்ரு சாந்தி தீர்த்தம், திருக்கோட்டூர், திருக்கழுக்குன்றம், போன்ற தலங்களில் தர்ப்பணம் செய்து (சிவகனி என்றழைக்கப்படும்) எலுமிச்சை சாதத்தில் , (இரவு, பகலைக் குறிக்கும்) முழுமுந்திரியைக் கலந்து தானமளித்திட வேண்டும். எலுமிச்சை தலவிருட்சமாக உள்ள ஆண்டார் பந்தி, ஐயம்பேட்டை, இலிகுசவனம் ஆகிய இடங்களில் இத்தர்ப்பணமிடுவது மிகவும் சக்தி வாய்ந்த பூஜையாக அமைகின்றது.
இருகண்களையும் மூடி தினமும் மூன்று வேளையும் எலுமிச்சம் பழங்களை சில நிமிடங்கள் உருட்டி வந்தால் கண் நோய்கள் அண்டாது. கண்பார்வை பெருகுமென்பது பாட்டி வைத்தியக் குறிப்பு. சிவபெருமானின் விழிகளிலிருந்து பிறந்த தாவரமாகையால் எலுமிச்சம்பழத்தைச் சிவகனியென்றும் சிவகன்னியென்றும் அழைப்பர். இறைவனின் இருகண்களே சூர்ய அக்னியும், சந்திர அக்னியும் இவையிரண்டுமே இரவு, பகலைக் குறிப்பன. இறைவனின் கண்களிலிருந்து பிறந்தமையால் எலுமிச்சை, அக்னி சக்தியையுடையது. ஆனால் இடக்கண்ணில் தோன்றியமையால் சந்திர அக்னியைப் போல் குளுமையானதும் கூட!
21.9.1997 ஷஷ்டி திதி – ஆத்ம சாந்தி தர்ப்பணம்
மரணத் தீட்டுகள், பிரேத சாபங்கள் பற்றி இவ்விதழில் பிறிதொரு கட்டுரையில் விளக்கங்களை அளித்துள்ளோம். அதனை நன்கு படித்துத் தெளிவு பெற்றிடுக! தெருவில் எவருடைய சவ ஊர்வலம் சென்றாலும் அவ்வுடலுக்குரிய ஆன்ம உயிரின் நன்னிலைக்காக அவருடைய பித்ருக்களை எண்ணிப் பிரார்த்தனை செய்யுங்கள். இது மிகச் சிறந்த காருண்ய பிரார்த்தனையாகும். அடுத்து வருகின்ற அமாவாசையில் நீங்கள் அம்மாதத்தில் காண நேர்ந்த சவ ஊர்வல ஆன்ம உயிர்களுக்குக் காருண்ய தர்ப்பணம் செய்தால் உங்கள் இல்லங்களில் ஏற்பட்டுள்ள பிரேத தோஷங்களுக்கு நிவர்த்தி ஏற்பட்டு கெட்ட கனவுகள், இரவு உறக்கத்தில் பிதற்றுதல், குழந்தைகள் பயந்து கொள்ளுதல், இல்லத்தில், அலுவலகத்தில், நிழல்படுதல், பில்லி, சூன்ய விளைவுகள் போன்றவற்றிற்கும் தீர்வளிப்பதே இன்றைய ஆத்ம சாந்தி தர்ப்பணமாகும். இன்று திருக்கடவூர், ஸ்ரீவாஞ்சியம், திருப்பைஞ்ஞீலி, சென்னை வேளச்சேரி ஸ்ரீதண்டீஸ்வரர் கோயில், சக்தி பீடத்தலங்கள், பாபவிமோசன தீர்த்தம் உள்ள இடங்கள் போன்ற இடங்களில் தர்ப்பைகளின் மேல் கங்கை, காவிரி, போன்ற புண்ய நதி நீரைக் கொண்டு தர்ப்பணமளித்தல் சிறப்பானது. பிரேதங்கள் அக்னியில் தகனமாகி பூமியில் புதைகின்றன அல்லவா! எனவே இன்று பூமியின் கீழ் விளையும் கிழங்கு வகை உணவுகளை (உருளை, கருணை, சேப்பங்கிழங்குகள் etc,) அகத்திக் கீரையுடன் சேர்த்து அளித்திடுக! அகத்திக் கீரையை எருமை மாட்டிற்கும் அளித்திடுக! யமனின் வாகனம் எருமை ஆதலாலும், யமனுக்குரிய மக நட்சத்திர தேவிக்கு அகத்திக் கீரையே ப்ரீதி அளிப்பதாலும் இவ்வித அன்னதானம் தர்ப்பண பூஜையின் பலன்களை மேம்படுத்துகின்றது.

ஸ்ரீபச்சையம்மன் ஆலயம்
திருஅண்ணாமலை

22.9.1997 ஸப்தமி திதி – குரோத சஞ்சல நிவர்த்தித் தர்ப்பணம்
பல இடங்களில் மாமியார், மாமனார், மருகளின் கொடுமைகள் இருந்து வரும். அவர்கள் இறந்தபின் இத்தகைய கொடுமையான வகையில் பிறரை வதைத்த துன்பங்களுக்காகப் பல நரக மண்டலங்களில் அவர்கள் அலைந்து அல்லல்படுவதோடு சந்ததியினருக்கும் பல தீய பழக்கங்களையும் தந்துவிடுகின்றது. அதே போல் அலுவலகத்தில் அதிகாரம், கௌரவம், காரணமாகப் பலரை நாள்தோறும் மிரட்டி மனோபயத்தைத் தந்து மேற்கண்ட பாவகரமான விளைவுகளைப் பெறுவோரும் உண்டும். இவற்றிற்குப் பிராயச்சித்தமாக இன்று “பாண தீர்த்தங்கள்” உள்ள இடங்களில் தர்ப்பையின் மேல் முழுத் தாமரையை மலர விரித்து அதன்மேல் நீருடன் எள்ளைத் தர்ப்பணமாக அளித்திட வேண்டும். இதற்குப் புத கிரஹ ப்ரீதி தேவையாதலின் பச்சைப் பயிறுப் (வெல்லம்) பாயச தானம் சிறப்பான பலன்களைத் தரும். பாண தீர்த்தமில்லாத இடங்களில், ஆவுடையில்லாது பாண லிங்கம் மட்டும் உள்ள இடங்களில் (சென்னை – பூந்தமல்லி – ஸ்ரீவைதீஸ்வரர் கோயில் வெளிப்பிரகாரம்) தர்ப்பணம் அளித்திடலாம்.
இந்நாளில் உளுந்தாலான மெதுவடை செய்து தானமளித்தலும் குதிரைக்குக் கொள்ளை (அவித்து) அளித்தலும் விசேஷமான பலன்களைத் தரும். உளுந்து, சந்திர பகவானுக்கு உரித்தான தோடன்றி பித்ருக்களுக்கான படைப்பு உணவுகளில் எள், அதிசரம், வெல்லம், கரும்புச் சாறு போன்றவற்றோடு சேர்ந்து சிறப்பிடம் வகிக்கின்றது. “பாண” தீர்த்தம் அமைந்துள்ள இடங்களிலும், பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ள திருவிடைமருதூர், வேதாரண்யம், கோடிக்கரை, தனுஷ்கோடி, ராமேஸ்வரம், திருஅண்ணாமலை போன்ற இடங்களில் தர்ப்பணம் செய்தல் பன்மடங்கு பலன்களைத் தரும்.
22.9.1997 சப்தமிதிதி  காமக் குரோத நிவர்த்தித் தர்ப்பணம்
முறையில்லாத காம உணர்வுகளால் உறவினர்கள், நண்பர்களின், குடும்பங்களுக்குத் துரோகம் செய்தல், பஞ்சமா பாதகங்களுக்கு நிகரான கொடிய சாபங்களைப் பெற்றுத் தரும். கலியுகத்தில் பிறன்மனை நாடுதல் என்பது விஷக்கிருமி போல் பரவி புனிதமான கற்புத் தன்மைக்குப் பங்கம் விளைவிக்கின்றது. பலதாரத் திருமணத்தால் எத்தனையோ குடும்பங்களை நாசஞ்செய்திருப்பின் அவர்கள் “தாப ஆவிகளாக” விமோசனமின்றி அலைகின்றனர். நடப்பு வாழ்வில் இவற்றைச் செய்து வருவோருமுண்டு. மனதால் கூடப் பிறரைப் பற்றிய காம எண்ணங்கள் ஏற்படலாகாது. இம்மனிதப் பிறவியில் செய்த பாவங்களுக்கு இப்பிறவியிலேயே பிராயச்சித்தம் தேடுவதே உத்தமமானது! இல்லாவிடில் ஆவியாக நரகலோகங்களில் மிதிபட வேண்டும். மேற்கண்டவற்றிற்கு ஓரளவு பிராயச்சித்தமாக இன்று பசும்பாலில் தர்ப்பைகளை நனைத்துத் தரையில் பரப்பி தாமே அரைத்த சந்தனத்தை (கடையில் சந்தனப் பவுடரை வாங்கிக் கரைத்தல் கூடாது) நீரில் கரைத்து எள்ளுடன் சேர்த்துத் தர்ப்பணமளிக்க வேண்டும். இன்று வெல்லம், பச்சைப் பயிறு, பாயாச தானம் தர்ப்பணப் பலன்களை மேம்படுத்தும்.
“கிருஷ்ணா” தீர்த்தம் உள்ள இடங்களிலும் ஸ்ரீகிருஷ்ணர் கோயில் தீர்த்தங்களிலும் திருவிடைமருதூர், இராமேஸ்வரம், திருவெண்காடு, திருஅண்ணாமலை ஸ்ரீபச்சையம்மன் ஆலயம், திருவையாறு, குற்றாலம், மதுரை போன்ற இடங்களில் தர்ப்பணமளிப்பது சிறப்புடையதாகும். ஆனால் தவறுகளுக்கு வருந்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்து திருந்தி வாழ்வதே முழுப் பிராயச்சித்தத்தைத் தரும்.

சூரிய தீர்த்தம் திருஆடானை

23.9.1997 அஷ்டமி – ஸ்திர ஸ்தான தர்ப்பணம்
சூரிய கிரஹத்தின் உச்ச, நீச, நிலைகளால் ஏற்படும் துன்பங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவும்- தந்தை – மகன் உறவில் உள்ள பிணக்குகள் தீரவும் சொத்துப் பிரிவினைகளால் உடைந்த குடும்பங்கள் நன்கு ஒற்றுமையுடன் வாழவும். சொத்து சம்பந்தமான வழக்குகள் நன்கு பைசலாகவும் இன்றையை தர்ப்பண பூஜை பலன்கள் பெரிதும் உதவுகின்றன. கோதுமையைப் பரப்பி அதன்மேல் தர்பைகளை வைத்துத் தர்ப்பணம் செய்திடுக! இராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆலயத் தீர்த்தத்தில் இன்று (சூரிய குலத்தைச் சார்ந்த) ஸ்ரீராம லட்சுமண, பரத, சத்ருக்னர்களுக்கு அர்க்யம் அளிப்பது அனந்தகோடி பலன்களைத் தரும். பாதாம்பருப்பு கலந்த உணவுப் பண்டதானம் (அல்வா, பாயசம் etc) சிறப்பானது. பாதாம்பருப்பிற்குப் பிரயோக மந்திரங்களை கிரகிக்கும் சக்தி அதிகம். சூரிய தீர்த்தம் உள்ள இடங்கள், ஸ்ரீராமர் அருளும் தலங்கள், சூரியஒளி தழுவுகின்ற லிங்கள் உள்ள தலங்கள் (திருப்பைஞ்ஞீலி, மலைக்கோட்டை, ஈங்கோய் மலை, அய்யர் மலை (இரத்தினகிரி), திருநெடுங்களம் etc.. ) போன்ற இடங்களில் தர்ப்பணமளிப்பது விசேஷமானதாகும்.
24.9.1997 – நவமி – சங்கு முனித் தர்ப்பணம்
கணவனை இழந்தவர்களை மறுமணம் செய்து கொண்டோர்  மனைவியை இழந்தோரை மனம் புரிந்தோர் – தம் புதுவாழ்வில் தம்பதி சகிதம் இன்று மறைந்த ஆணிற்கோ/பெண்ணிற்கோ , வலம்புரிச் சங்கில் நீர் கலந்த எள்ளை நிரப்பி சங்கினால் நீர் வார்த்துத் தர்ப்பணமிட்டால் மறுமண வாழ்வு நன்கமையும். மறுமணம் புரிந்து இறந்தோர்க்கும், இது உகந்த தர்ப்பணம், மூத்த இரண்டாந்தாரப் பிள்ளைகள் இறந்த தம் தந்தை/தாய்க்கு இம்முறையில் தர்ப்பணம் அளித்திட பலவிதமான உறவு, சொத்துப் பிரச்னைகள் நன்முறையில் தீர்வைப் பெறும். தத்து அளிக்கப்பட்ட பிள்ளைகளும் இம்முறையில் மூலப் பெற்றோருக்கோ அல்லது தத்தெடுத்த பெற்றோருக்கோ சங்குமுனித் தர்ப்பண பூஜையைச் செய்திடில் சந்ததிகள் நன்கு தழைத்து தத்து உறவுப் பிரச்னைகளும் தீர்ந்து சுமூகமான வாழ்வமையும். இன்று முந்திரி கலந்த புளியோதரை அன்னதானம் செய்திடல் வேண்டும் முருகனுடைய திருத்தலங்களில் இன்று தர்ப்பணமிடுதல் அற்புதமான பலன்களைத் தரும்.
25.9.1997 தசமி – கோதூளி தர்ப்பணம்
பால்வற்றிய பசுவை விற்று வரும் பணம் பெருத்த தோஷங்களையும் சாபங்களையும்ந் தரும், ஏனெனில் பால் வற்றிய பசுவை அடிமாடாகத்தான் கொன்று தோலைக் கிழிப்பர். எனவே பால் வற்றிய பசுவைப் பராமரித்தல் ஒரு மிகச் சிறந்த தர்ம காரியமாக அமைகின்றது. எத்தனையோ கோடி மடங்கு புண்யசக்தியை எளிதில் பெற்றுத் தருவதாக இருப்பதே பால் வற்றிய பசுவை போஷிப்பதாகும்.
தோலில் தோய்ந்த கர்மங்கள்
பர்ஸ், பை, செருப்பு என எத்தனையோ தோல் பொருட்களைப் பயன்படுத்துகிறோம், எத்தனையோ பசு, காளை, எருமை, நாய், ஆடு போன்ற வாயில்லாப் பிராணிகளை வதைத்து ரத்தம் பீறிடத் தோலைக் கிழித்து நமக்கு வருவதே தோல் பொருட்கள்.. ஒரு போதும் தோல் பொருட்களைப் (செருப்பு உட்பட) பயன்படுத்தாதீர்கள். உங்கள் பாதங்களைச் சுமக்கும் காலணிகளிலும், பூட்ஸுகளிலும், பணத்தைச் சுமக்கும் பர்ஸ், கைப் பைகளிலும், ஆடு, மாடுகளின் மரண ஓலங்கள் படிந்திருப்பதை அறிந்து கொள்ளுங்கள். இன்றேனும் ஒரு வைராக்யத்தை எடுத்துக் கொள்வீர்களாக! “எக்காலத்தும் தோல் பொருட்களைப் பயன்படுத்த மாட்டேன்!” என்பதனை முறையாக வழுவாது கடைபிடித்தால் வாழ்க்கையில் கணிசமான அளவில் தீவினைக் கர்மங்களைத் தடுத்து விடலாம். எனவே தோல் அல்லாத காலணிகளை/பொருட்களை மட்டும் உபயோகியுங்கள். மான்தோல், புலித்தோல் போன்றவை தியானத்தை மேம்படுத்தும். ஆனால் இயற்கையாய் இறந்த மான், புலித் தோல்களையே பயன்படுத்த வேண்டும். இவ்வாறாக நம் வாழ்க்கையில் சேர்த்துக் கொண்ட மிருக (தீய) வினைகளுக்குப் பிராயச்சித்தம் தருவதே கோதூளி தர்ப்பணம்! கோதூளி என்றால் பசுவின் புனிதமான குளம்புகள் பட்ட மண் துளி என்று பொருள்.
தினமும் பசுமாட்டுத் தொழுவதிற்குச் சென்று பசுவின் கால் குளம்பு பட்ட மண்ணை எடுத்து வந்து நீரில் கலந்து நீராடினால் எத்தனையோ ஜென்மப் பாவங்கள் தீரும். பசு நடக்கும் போது அதன் குளம்புகளிலிருந்து தெரிக்கின்ற மண் துளிகள் மிகவும் சிறப்புடையவை. இன்று பசுக்களைப் பராமரிக்கும் கோசாலையிலோ, பசுத்தொழுவத்திலோ, பசுவைக் கட்டியிருந்த இடத்திலோ, அல்லது பசு (கன்றுடன்) வின் முன்னோ இன்றையத் தர்ப்பணத்தைச் செய்திடல் வேண்டும். ஈஸ்வர ஆண்டு கோதூளி தர்ப்பணம் மிகவு பெறுதற்கரிய பாக்யமாகும். முழு நம்பிக்கையுடன் கோதூளித் தர்ப்பணத்தைச் செய்திட ஜன்ம, ஜன்மங்களாக வந்த எத்தனையோ பாவங்கள் தீர்ந்திடுமெனில் எத்தகைய அற்புத சக்தி வாய்ந்த தர்ப்பண முறையிது!

கோதூளி தர்ப்பண முறை
1. பசு இருக்குமிடத்தில் இதனைச் செய்திடல் வேண்டும்.
2. ஒரு பாத்திரத்தில் கங்கை, காவிரி, அல்லது கோயில் குளத் தீர்த்தத்தை நிரப்பி உங்களிடமுள்ள தங்க, ஆபரணம்தனை அதனுள் இடுக! தாத்தா/பாட்டி போன்ற முன்னோர்களிடமிருந்து பாரம்பரியமாக வந்த நகையெனில் அதற்கென விசேஷமான, தெய்வீகமான புண்ய சக்தியுண்டு! தான தர்மங்களுடன் அக்காலத்தில் நன்னெறியுடன் தெய்வீக வாழ்வு வாழ்ந்தவர்களின் புனிதமான உடலை அலங்கரித்த ஆபரணங்களன்றோ! இதில் பித்ருக்கள் எளிதில் ஆவாஹனமாகி வந்தமர்கின்றனர். தரையிலோ, மரப்பலகையிலோ, தாம்பாளத்திலோ, தர்ப்பைகளைப் பரப்பி இப்போது தர்ப்பண அர்க்யம் வார்த்திடுங்கள்.. தந்தை வழியில் – ஆண்வகை – 3, சந்ததியினர் – தந்தை, தாத்தா, பாட்டனார். தந்தை வழியில் பெண்வகை - 3 சந்ததியினர் ; தாய்வழியில் ஆண் வகை – 3 சந்ததியினர் ; தாய் வழியில் பெண்வகை – 3 சந்ததியினர்... ஆகிய 12 பேருக்கு எள் கலந்த நீரை ஒவ்வொருவரின் பெயரையும் மூன்று முறை சொல்லி, தர்ப்பைகளின் மேல் ஊற்றுங்கள் (கட்டைவிரல் ஆள் காட்டி விரலின் இடைப் பகுதி வழியே..) தர்ப்பண முடிவில் தெற்கு நோக்கி சாஷ்டாங்கமாக வீழ்ந்து பித்ருக்களை வணங்கித் தர்ப்பண பூஜையை நிறைவு செய்திடுக! ஆபரணங்களை மறக்காது எடுத்து அணிந்திடுக!
சகல சௌபாக்யத்தையும் தரும் – பெரும்பாவங்களைத் தீர்க்கும் பஞ்சகவ்ய தர்ப்பணம்
ஈஸ்வர வருடத்தில் மட்டும் பசுமாட்டுத் தொழுவத்தில் – கோசாலையில் அளிக்கக் கூடிய விசேஷமான தர்ப்பணமிது. மனைவியின் அனுமதி பெற்றுச் செய்ய வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த தர்ப்பணம். சென்னை மேற்கு மாம்பலத்திலும் காஞ்சிபுரத்திலும் திருச்சியிலும் (பாலக்கரையில் மதிப்பிற்குரிய ஜெயின் குடும்பத்தார் நடத்தும் புனிதமான கோசாலை) பசுக்களைப் பராமரிக்கும் பசுமடம் எனப்படும் கோசாலைகள் உள்ளன. பசுமடமில்லாத இடங்களில் கோயிலில் பசுவைக் கட்டுமிடங்களிலோ அல்லது குறைந்தது ஏழு பசுமாடுகள் உள்ள இடங்களிலோ இதனைச் செய்திடலாம். நகரங்களில் ஜாதி, பேதமின்றி பலரும் கூட்டாகச் சேர்ந்து தங்கள் பகுதிகளில் ஏழு பசுமாடுகளை (கன்றுகளுடன்) வரவழைத்து பஞ்சகவ்யத் தர்ப்பணத்தை அளித்திடலாம்.
25.9.1997 – தசமி அன்றும் 1.10.1997 மாளய அமாவாசையன்றும் பஞ்சகவ்யத் தர்ப்பணத்தை அளிப்பது சிறப்புடையது.. பஞ்சகவ்யம் என்றால் என்ன? ஆயுர்வேத, சித்த மருத்துவத் துறைகளில் சிறப்பிடம் பெறும் ஓர் அற்புதமான அருமருந்து வெண்குஷ்டம் போன்ற தோல் நோய்கள், காசம், ஆஸ்த்மா போன்ற சுவாச நோய்களையும் கண் திருஷ்டி, பில்லி சூன்யம் போன்ற தோஷங்களையும் நீக்கக்கூடியது. சித்தபிரமை (பைத்தியம் பிடித்தல்) நீக்கும் சிறந்த சித்த மருந்து. பசுஞ்சாணம், பசுவின் மூத்திரம், பசுந்தயிர், பசும்பால், பசுநெய் ஆகிய ஐந்தும் சேர்ந்ததே பஞ்ச கவ்யம்.

ஆவூர் சிவத்தலம்

1. ஒரு மண்/வெள்ளி/செம்புப் பாத்திரத்தில் (மூங்கில், பலா, மா, தேக்கு மரப் பாத்திரங்களும் சிறப்புடையவை) பஞ்சகவ்யம் ஊற்றி வைத்துக் கொண்டு (கங்கை, காவிரி போன்ற புண்ய நதி, கோயில் தீர்த்தங்களையும் சேர்த்திடலாம்.)
2. தர்ப்பைப்பாயில்/ மரப்பலகையில் உடற்பகுதி, கால்களோ தரையில் படாமல் அமர்ந்து கொண்டு..
3. சுத்தமான தரையிலோ, மரப்பலகையிலோ, தாம்பாளத்திலோ, பச்சரிசி மாவுக் கோலமிட்டு அதன்மேல் 12/24/36 தர்பைகளைப் பரப்பி
4. பஞ்ச கவ்யப் பாத்திரத்தைக் கையிலேந்தி பசுக்களை மூன்று முறை வலம் வந்து ஆசனத்தில் அமர்ந்து
5. பஞ்சகவ்ய நீருடன் எள்சேர்ந்து தர்பைகளின் மேல் தர்ப்பணமிட வேண்டும்.
6. ஒவ்வொரு மூதாதையர்க்கும் பசுவை மூன்று முறை வலம் வந்த பின்னர் மூன்று முறை தர்ப்பணம் அளிக்க வேண்டும்.

பெருமாள் திருப்பாதங்கள்
திருச்சேறை கும்பகோணம்

தர்ப்பணம் முடிவில் பசு, கன்றுகளுக்கு வயிறு நிறைய ஆகாரம், நீர் அளித்து வணங்கிடுக! எஞ்சிய பஞ்ச கவ்ய நீரை இல்லத்திற்கு எடுத்து வந்து அனைத்து இடங்களிலும் தெளித்திட வேண்டும் . கோயில் கும்பாபிஷேகத்தைப் போல் இல்லத்தைப் புனிதமாக்கும் அரிய பூஜையிது! ஈஸ்வர ஆண்டு மட்டும் பசு, வசு, பித்ரு , தேவாதி தேவர்களால் மனமுவந்து ஏற்கப்படும் பூஜை! இத்தகைய பஞ்சகவ்யத் தர்ப்பண பூஜையைக் கீழ்க்கண்ட இறைத் தலங்களில் நிறைவேற்றிடில் அதன் பலன்கள் பல்கிப் பெருகுகின்றன.
கொட்டையூர் ஸ்ரீகோடீஸ்வரர் ஆலயம் (கும்பகோணம் அருகில்) / காவிரிக்கரை – பலன்கள் கோடியாய்ப் பெருகும். சென்னை – மாடம் பாக்கம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயம் – காமதேனுவின் குளம்பு பட்ட கொம்பு வடிவ அதிசய சிவலிங்கம். கன்றாப்பூர், ஆவூர், கரூர் (திருச்சி அருகே), பந்தணை நல்லூர், பிருந்தாவன், திருவீழிமிழலை, பாண்டவர் கோயில், (காஞ்சிபுரம்), பட்டீஸ்வரம்.
தானதர்மங்கள் : இன்று ஆவியில் வேகும் மென்மையான பதார்த்தங்கள் (மல்லிகைப்பூ இட்லி, எனப்படும் மென்மையான இட்லி, இடியாப்பம் போன்றவை..)
26.9.1997 – ஏகாதசி – பாதஸ்மரணத் தர்ப்பணம்
அனைவரும் தங்களுடைய பெற்றோர்களுக்கும், தமக்கு அறிவு தந்து ஆளாக்கிய குருவிற்கும், பெரியோர்க்கும் கட்டாயம் பாதபூஜை செய்திடல் வேண்டும். ஏனெனில் குழந்தையைக் கொஞ்சிய கரங்களுக்கும், தொட்டிற் பிள்ளையாய் உதைகளைத் தாங்கிய அன்பு நெஞ்சங்களின் பாதங்களுக்கும் மஞ்சள், குங்குமமிட்டுப் பாதபூஜை செய்தால் தான் பணிவும் அடக்கமும் அன்புடன் சேர்ந்து பெற்றோர்களின் உள்ளத்திற்குச் சாந்தத்தைத் தரும். இதுவரையில் தாய், தந்தையருக்குப் பாதபூஜை செய்திராப் பெருங்கடன் தீர இன்று அவர்கட்குப் பூஜை செய்து புண்ய நதி தீரங்களிலும் கோயில் திருக்குளங்களிலும் மீன்களுக்குப் பொரியிட்டு ஏழைகட்கு நெய்கலந்த பொன்னாங்கன்னிக் கீரை கலந்த உணவை (பொடி, கீரை மசியல், கீரை சாதம் etc,) அளித்திட வேண்டும். பாதபூஜைக்குபின் இன்றையத் தர்ப்பணத்தைப் பெருமாள் கோயில் குளங்களில் செய்வது சிற்ப்புடையது. தாயோ, தந்தையோ இல்லாவிடில , பழுத்த (சுமங்கலி) தம்பதிகட்குப் பாதபூஜை செய்திடலாம். இறைவனை நம்பாது வாழ்ந்து இறந்தோருக்கும், கடவுள் நம்பிக்கை கொண்டது போல் நடித்து ஏமாற்றி வாழ்ந்து மாண்டோருக்கும் இன்று விசேஷமான தர்ப்பணத்தை அளித்திட அவர்கள் மரணத்திற்குப் பின்னரேனும் நன்னிலை கிட்ட வாய்ப்புண்டு. இத்தகையோருக்கு இன்று சாளக்கிராமம் எனப்படும் தெய்வீகக் கல்லினை புண்ய நதி/கோயில் தீர்த்தமுள்ள ஒரு பாத்திரத்தில் வைத்து ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை 108 முறையேனும் ஜபித்துப் பின் அப்புனிதமான நீரால் இத்தகையோர்க்குத் தர்ப்பணமளிக்க வேண்டும். சாளக்கிராமக் கல்லிற்கு எதிர்வினைகளை முறியடிக்கும் சக்தி உண்டு. மேலும் பூஜாபலன்களை, பல லோகங்களுக்கும் எடுத்துச் செல்லும் அற்புதமான கிரண வீச்சுகளையுடையதுமாகும். பல பெரியோருடைய இல்லங்களிலோ, நவரத்தின நகைக்கடைகளிலோ சாளகிராமங்கள் கிடைக்கும்.
27.9.1997 துவாதசி – ஹர தீர்த்தப் பிரசாத தர்ப்பணம்
பல குடும்பங்களிலும் சிறந்த பூஜை வழிபாடுகளுடன் தான தர்மங்களுடன் ஏழை எளியோர்க்கான உத்தம சேவைகளுடன் தெய்வத் திண்மை நிறைந்து விளங்கிய பெரியோர்கள் பலருண்டு. எத்தனையோ தலைமுறைக்கு முந்தியவர்களாக இருப்பினும், தர்ப்பணத்தின் முதல் மூன்று தலைமுறைகளில் வராவிடினும் அவர்கட்கு இன்று விசேஷமான தர்ப்பண நாளாகும். இறைநெறிச் செல்வர்களாக, தெய்வீகத் தன்மை நிறைந்த திருவருட்செல்வர்களுக்கும் தர்பைகளின் நான்கு புறமும் அகல் விளக்குகளை ஏற்றித் தர்ப்பணமளித்திட வேண்டும். பிறகு ஏனையோர்க்குத் தர்ப்பணம். பல குடும்பங்களிலும் பலவிதமான குடும்பப் பிரச்னைகளால் தாய், தந்தையரை/பிள்ளைகளை/பெண்களை உறவுகளை ஈவு இரக்கமின்றி வெளியே துரத்தியோர் பலருண்டு. ஏன், பெற்றோர்களை இங்கு அமர்த்தி விட்டு, புகழ், செல்வம், அந்தஸ்து, பதவி வேண்டி அயல்நாடுகளில் குதூகலிக்கும் பிள்ளைகள் இன்றும் உண்டே! என்னதான் வசதிகளைப் பெருக்கியிருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு அன்புப் பிள்ளை வராது, வெள்ளை அல்சேஷியன் நாய் வந்திடில்..... சற்றே யோசித்திடுக! இவ்வாறாகப் பெற்றோர்களின் சாபத்தைப் பெற்றிருக்கும் பிள்ளைகள் எத்தனை எத்தனை? பதவி உயர்வு நாடிப் பல மாநிலங்களுக்கும் புருஷன் சென்றிட, உயிர் நாடியைப் பிடித்துக் கொண்டு இங்கு வாடிடும் குடும்பங்களும் உண்டல்லவா! இவையெல்லாம் உண்டாக்குகின்ற பாவச் சின்னங்களை எடுத்துச் சொன்னால் மிகவும் வருத்தப்பட நேரிடும். எனினும் இவற்றிற்கெல்லாம் ஓரளவு பரிஹாரமாக இன்று ஸ்ரீவள்ளலார், ஸ்ரீபரமாச்சார்யாள், ஸ்ரீபூண்டி மஹான், ஸ்ரீபாடகச் சேரி சுவாமிகள் (சென்னை – திருவொற்றியூர்) ஒடுக்கத்தூர் சித்தர், மதுரை ஸ்ரீகுழந்தையானந்த சுவாமிகள், காஞ்சிபுரம் ஸ்ரீபோடா (சிவசாமி) ஸ்வாமிகள், பாண்டிச்சேரி அருகில் சின்னபாபு சமுத்திரத்தில் உள்ள ஸ்ரீபடேஸாஹிப் ஜீவசமாதி போன்ற மஹான்களுடைய /யோகியர், ஞானியருடைய ஜீவசமாதியில் அபிஷேக ஆராதனைகள் செய்து இங்கு மூதாதையர்களுக்குத் தர்ப்பணமளித்து ஏழைகளுக்குத் தேங்காய்ப் பால் அல்லது சர்க்கரை கலந்த இடியாப்பத்தைத் தானமாக அளிக்க வேண்டும். இத்தகைய ஜீவசமாதிகளில் தங்களுடைய தவறுகளுக்கு மன்னிப்புக் கோரி, தம்மால் தீங்கு இழைக்கப்பட்டோர்க்கு மன ஆறுதல், உதவிகள் அளித்துத் தொடர்ந்து ஜீவசமாதிகளில் இறைத் திருப்பணிகள் புரிந்துவர நிச்சயம் முழுமையான நிவாரணம் கிட்டும்.
28.9.1997 (பிட்ச) துவாதசி
இரண்டாம் நாளும் துவாதசி வருவதால் பிட்ச துவாதசியாகின்றது. 27.9.1997 நாளைப் போலவே இன்றும் மஹான்கள்/யோகியர்களுடைய ஜீவசமாதியில் தர்ப்பணம், அன்னதானம் செய்திடுக! தம் தவறுகளுக்கு 27.9.1997ல் மன்னிப்பு கோரியும் 28.9.1997 ஆகிய இன்றையத் தர்ப்பணத்தில் தவறுகளை மீண்டும் செய்யாதிருக்க அருள்புரியும் படியும் வேண்டிடுக!
29.9.1997 திரயோதசி  விருட்ச சங்கமத் தர்ப்பணம்
மனித குலத்திற்குத் தாவரங்களும் விலங்குகளும் செய்கின்ற நன்மைகளை விளக்கத்தான் முடியுமா? ஆனால் மனிதர்கள் அவற்றிற்குரித்தான நன்றியைச் செலுத்துகின்றார்களா? நாக்குச் சுவைக்காக நாம் உண்டு செரித்த பிராணிகள், மீன்கள், கோழிகள், நண்டுகள், காய்கறிகள், கீரைகள் எவ்வளவென நாம் அறிவோம்! ஒரு மனிதன் தான் வாழ இன்னொரு பிராணியைச் சாகடித்திடில் அதன் மறுவாழ்விற்குப் பொறுப்பேற்க வேண்டுமல்லவா! இதற்காக இன்று வழக்கம் போல் மூதாதையர்களுக்குத் தர்ப்பணமளித்து இன்று தாவரங்களும் பிராணிகளுக்கும் தர்ப்பணமளித்திட வேண்டும். உண்மையில் தர்ப்பணத்தின் பலன்கள் ஒரு சிறிதேனும் ஒரு சிறு புழுவிற்குக் கிடைத்தாற்கூடப் போதும் அது உயர்ந்த நிலையை அடைந்து விடும். அதுவே மனிதப் பிறவியில் நாம் பெறும் பாக்யம்! மனிதர்களுடைய ஆத்மார்த்த பூஜைக்கு மிகுந்த தெய்வவீக சக்தி உண்டு! ஆனால் தினமும் பூஜையோ தர்ப்பண பூஜையோ, ஹோமமோ, சாதாரண புஷ்ப அர்ச்சனையோ, அடிப்பிரதட்சிணமோ, ஜபமோ, தியானமோ எதையேனும் செய்தால் தானே இந்த அற்புத சக்தியைத் திரட்ட முடியும்! தாவரங்கள்ன், பிராணிகளின் நல்வாழ்விற்காக வேண்டி, நீரில் நெல் மணிகளையிட்டுத் தர்பைகளின் மேல் தர்ப்பணமிட வேண்டும். நெல் ஆதியில் உண்டாகிய தாவரமாதலால் அதற்கு நெடிய ஜீவித சக்தி நிறைய உண்டு. எனவே நெல்பொரியுடன் கடலை கலந்து ஏழைக் குழந்தைகளுக்கு தானமளித்திடுக! பிரளய காலத்தில் ஜீவன்கள் சிருஷ்டிக்கப்படுகின்ற வைபவத்தில் பெரும்பங்கு பெறும் கும்பகோணத்தில்  காவிரியின் சக்கரப்படித்துறையில் இதனைச் செய்வது சிறப்புடையதாகும்.
30.9.1997 – சதுர்த்தசி – ஜீவஜோதி ஆகர்ஷணத் தர்ப்பணம்
ஈஸ்வர ஆண்டின் மிகச் சிறந்த பூஜைகளுள் இதுவும் ஒன்றாகும். ஒன்பது மகரிஷிகளுக்கு/சித்தர்களுக்கு மாமுனிகளுக்கு அர்க்யம் (இரு கைகளிலும் நீரை நிரப்பி இரு குதிகால்களிலும் உயரத் தூக்கி நின்று தாரையாக நீரைக் கீழே ஊற்றுதல்..) அளிக்க வேண்டிய நாளிது... ஏன்?
“இனி என் வாழ்நாளில் எத்தகைய பாவங்களையும் தீவினைகளையும் சேர்த்திடாதிருக்க நவநாத சித்தர்களே! அருள்புரிவீர்களாக! ” என்று வேண்டி ஒன்பது சித்தர்களுக்கோ மகரிஷிகளுக்கோ புண்ய நதிக்கரைகளில்/ கோயில் தீர்த்தங்களில் அர்க்யம் அளித்திடுக! எத்தனை கோடி மஹான்களும், யோகியரும், ஞானியரும், சித்புருஷர்களும் உலவுகின்ற புண்ணிய பூமியிது! இதில் ஒன்பது பேர்களைத் தேர்ந்தெடுத்து அர்க்யம் அளித்திடுங்கள்! ஏனெனில் அவர்களே உங்களைப் பாவங்களிலிருந்து காக்க வல்லவர்கள்! ஒன்பது மஹரிஷிகளுக்கு அர்க்யம் அளித்தபின் ஏனையோர்க்குத் தர்ப்பணம் அளித்தும் ஆப்பம் + தேங்காய்ப் பால் தானம் செய்திடுக! இத்தகைய தான தர்மங்கள் தாம் வேத மந்திரங்களுக்கு ஈடான பலன்களைத் தருவதோடன்றி தர்ப்பணங்களில் நிகழ்கின்ற தவறுகளுக்கும் சிறந்த பரிஹாரமாக அமைகின்றன. குலதெய்வத்தை முறையாக வழிபடாமையால் ஏற்பட்டுள்ள கோளாறுகளுக்கும் கருச்சிதைப்புக் குற்றங்களுக்கும் இதனால் நிவாரணம் கிட்டும்.
1.10.1997 – மாளய அமாவாசை
ஈஸ்வர ஆண்டின் மாளய அமாவாசைக்குரிய சிறப்புத் தன்மை என்னவெனில்
1. பகைமை, குரோதம், கௌரவம், மதமாற்றம் மற்றும் பல காரணங்களுக்காகக் குடும்பத்தில் உறவில் எவருக்கேனும் தார்ப்பணம் அளிக்காமல் இருந்திருப்பின் அதனை இன்று செய்து இனியேனும் அதனைத் தொடர வேண்டும்.
2. இன்று சகல ஜீவன்களின் நல்வாழ்விற்காக, புல், பூண்டு, புழு முதல் தாவரங்கள், விலங்கினங்கள், கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத ஜீவிகள் அனைத்தின் நல்வாழ்விற்காகத் தர்ப்பணம் அளித்திட வேண்டும்.
3. சரியான் உணவு, நீர், உறக்கமின்றி தன்னையும் வருத்திக் கொண்டு பிறரையும் வருத்தியோர் இன்று தன் உடலையும் ஆன்மாவையும் வதைத்த துன்பங்களுக்குப் பிராயச்சித்தமாகத் தங்களால் இயன்ற அளவு அந்தந்த ஜீவன்கள் விரும்புகின்ற உணவை அளித்திட வேண்டும். யானை – கரும்பு ; கோழி – தான்யங்கள் ; காக்கை – அன்னம் ; கிளி – பழம் ; பசு – இலை, தழைகள் : நாய் – ரொட்டி, பொறை , ரஸ்க்.
கோ தானம் காருண்ய தர்ப்பணம்
கோ ஸ்தூல மாளய அமாவாசை என்றழைக்கப்படும் ஈஸ்வர ஆண்டின் மாளய அமாவாசையில் வசதியற்ற கோயில்களுக்குப் பசு மாட்டைத் தானமளித்துத் தினமும் சுவாமிக்குப் பாலாபிஷேகம் நிகழ்த்திட ஆவன செய்திட வேண்டும். இதனால் எத்தனை நாள் அபிஷேகம் நடைபெறுகிறதோ அந்த அளவிற்கு மன நிம்மதி உருவாவதோடு தீயவினைகளும் கழிகின்றன. சில சமயங்களில் எல்லாம் நன்கு நடைபெற்று வருகையில் இடையிலோ இறுதியிலோ திடீரென்று ஏதேனும் இடைஞ்சல் ஏற்பட்டு அனைத்துமே ஸ்தம்பித்து நின்று விடும். இதற்குக் காரணம் நம்முடைய தீவினைப் பயன்களே என்று உணர்ந்திட வேண்டும். மாளயபட்ச அமாவாசையாகிய இன்று அறிந்தோர், அறியாதோர், தெரிந்தோர், தெரியாதோர் என அனைவருக்கும் தர்ப்பணம் அளித்திடலாம். தங்களுக்குப் பிடித்த கவிஞர், காவியகர்த்தா, (கம்பன், சேக்கிழார்), கலைஞர்கள், அறிவுஜீவிகள், விஞ்ஞானிகள், தலைவர்கள், வீரர்கள் – என எவருக்கு வேண்டுமாயினும் தர்ப்பணம் அளித்திட அதன் பலன்களால் அது அவர்களுடைய ஆன்மஜோதிப் பிரகாசத்திற்கு வழிவகுக்கும். இதுவே காருண்ய தர்ப்பணம் எனப்படும் மிகச் சிறந்த பூஜையாகும்.
சந்திர கிரஹணத்தின் போது திருஅண்ணாமலை கிரிவலம் வருதலின் சிறப்பு அம்சங்கள்.
வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி (16.9.1997) பௌர்ணமியன்று சந்திர கிரஹணம் ஏற்பட உள்ளது. விஞ்ஞான ரீதியாக, பூமியானது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் வருகையில் பூமியின் நிழல் சந்திரனின் மேல் படுவதால் அதன் (சந்திரனின்) பல பகுதிகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப் படுவதையே சந்திர கிரஹணம் என்று சொல்கிறார்கள்., புராண ரீதியாக ராகு, கேதுவால் – சூரியனும், சந்திரனும் பீடிக்கப் படுவதையே கிரஹணங்கள் என்று சொல்கின்றோம். இதுவும் உண்மையே. சாயா கிரஹங்கள் என்று அழைக்கப்படும் ராகுவும் கேதுவும் ஒரு தனி கிரஹங்கள் அல்ல என்பதும், சூரியனும் சந்திரனும் ஒன்றையொன்று வெட்டுகின்ற இரு மையைப் புள்ளிகளே ராகுவும் கேதுவும் என்பதும் விஞ்ஞான நிலை. சூரிய சந்திரர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டமையால் தான் தேவர்கள் உருவில் வந்திருந்த தம்மால் அமிர்தம் பெறமுடியவில்லை என்று சினந்த இரு அசுரர்களும் வைகுண்டத்திலும் கைலாயத்திலும் அரும்பெரும் தவங்களைப் பூண்டு சூரிய சந்திரர்களுக்கு நிகரான தபோ பலனைப் பெற்றார்கள். இதனைக் கண்டு வியந்த சூரிய சந்திர மூர்த்திகள் அமிர்தம் உண்ண வந்த அதிதிகளான அசுரர்களை விரட்டி உணவளிக்காத பாவத்தின் கர்மவினைகளைக் கழிப்பதற்காக, அருட்தவச்சுடராய் பிரகாசித்த ராகு, கேது மூர்த்திகளிடமே பரிகாரம் வேண்டினர். அசுரர்களாய்த் தவமிருந்து தம்மை விரட்டிய சூரிய சந்திரர்களை வென்றிட வேண்டும் என்று சங்கல்பம் செய்து பெரும் தவம் புரிந்து சூரிய சந்திரர்களுக்கு நிகரான தபோ பலன்களைப் பெற்றவர்களே ராகு, கேது மூர்த்திகள்! சூரிய சந்திரர்களிடம் இருவரும் சேர்ந்து “அதிதிகளைத் துரத்திய பாவத்திற்குப் பரிகாரமாக , நீங்கள் இருவரும் சேர்கையிலோ, இணையும் போதோ உங்களுடைய அமிர்த சக்தியை எமக்குத் தந்துவிடுங்கள். இதன் மூலமே எங்களுடைய அறியாமையினாலான சங்கல்பமும் நிறைவேறும்” என்று ராகு, கேது கூறினர். சூரிய, சந்திரர்கள் இதற்கு மனமுவந்து ஒப்புதல் அளித்து பிராயச்சித்தம் பெறும் பொருட்டு கிரஹணத்தின் போது ராகு கேது மூர்த்திகளுக்கு விசேஷமான அமிர்த சக்தியை அவர்களுக்குத் தொடர்ந்து அளிக்கின்றனர்.
கேதுகாலம் : தற்போது ராகுகாலம் இருப்பதைப் போல கேதுகாலம் என்று ஒன்று எதிர்காலத்தில் அமையும், ராகுகாலத்தைவிட சக்தி வாய்ந்ததாக, ஆனால் ராகுகாலத்தைப் போன்று சுபகாரியங்களுக்குத் தவிர்க்கப்பட வேண்டிய கேதுகாலம் எதிர்காலத்தில் வரவிருக்கின்றது. அதுபோன்று சூரிய சந்திர கிரஹண நேரமே பிரதம ராகுகாலமாகவும், கேது காலமாகவும் சித்புருஷர்களால் விளக்கப்படுகிறது. எவ்வாறு ராகுகால பூஜை, குறிப்பாக ராகுகால ஸ்ரீதுர்கை பூஜை பலகோடி மடங்கு சக்தி வாய்ந்ததாக விளங்குகின்றதோ, அதேபோல் கேது காலம் எனப்படும் சூரிய, சந்திர கிரஹண காலத்தில் ஸ்ரீகேதுவை வழிபடுவது கோடிமடங்கு பலன்களைப் பெற்றுத் தரும்.

சந்திர கிரகண கிரிவலம்

திருஅண்ணாமலையில் சந்திர கிரஹண கிரிவல மஹிமை
ஸ்ரீசூர்ய பகவான் நவகிரஹங்களிலே ஆதி மூர்த்தியாய் விளங்குவதால் ராகு கேதுவிற்கு அளித்த வாக்கின்படி தம்முடைய முழு பாஸ்கராக்னி சக்தியையும் ராகு கேது மூர்த்திகளுக்கு அளிக்க இயலவில்லை. சூரியனை விடத் தபோ பலன்களை ராகு கேது பெற்றிருந்த போதிலும் அவர்களால் சூரிய அக்னிசக்தியை மட்டும் பெற இயலாமல் போயிற்று. இருப்பினும் தம்முடைய தெய்வீக சத்ய வாக்கின் காரணமாக சூரிய சந்திர மூர்த்திகள் பூலோகத்திலுள்ள அருமையான மூலிகைகள், தெய்வத் திருமலைகள், தீர்த்தங்கள், கோயில்கள், சுயம்பு மூர்த்திகள் மஹான்களின் ஜீவசமாதிகள் போன்றவற்றின் மூலமாக ராகு கேதுவிற்கு தம் அமிர்த, அக்னி சக்தியை அளிக்கின்றனர். அதாவது கிரஹணத்தின் போது ராகுகேது மூர்த்திகள் சூர்ய சந்திர மூர்த்திகளின் சக்தியை  பூமியில் உள்ள புனிதப் பொருட்களின் மூலமாகப் பெறுகின்றனர்.
பூசுரப் படலம் :- திருஅண்ணாமலையினுள்ளே சகல கோடி அண்டங்களும் அடங்கியுள்ளன. பரம்பொருளே திருஅண்ணாமலையாய் வீற்றிருப்பதால் அவ்விடத்திலேயே அனைத்து தெய்வீக ரகசியங்களின் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. வருகின்ற 16.9.1997 அன்று ஏற்படும் சந்திர கிரஹணத்தின் போது சந்திர பகவான் தன்னுடைய கலைகளையும் சக்திகளையும் கேதுமூர்த்தியிடமும் – சூரிய பகவான் தன்னுடைய பாஸ்கர அக்னி அமிர்த சக்திகளை ராகுவிடத்திலும் அர்ப்பணம் செய்கின்றனர்.. எவ்வாறு? பூலோகத்திலுள்ள ஜீவசமாதிகள், தீர்த்தங்கள், மூலிகைகள், கோயில்கள் போன்ற புனிதப் பொருட்களின் மூலமாக சந்திர கிரஹணத்தின் போது திருஅண்ணாமலை ஒரு பூசுரப் படலம் உருவாகின்றது. புனிதமான மேகங்கள், தெய்வத்தன்மை நிறைந்த காற்று, OZONE எனப்படும் அண்டவெளி அமிர்தக் காற்று போன்றவை ஒன்று கூடிப் பூசுரப் படலமாக திருஅண்ணாமலையின் உச்சியை வலம் வருகின்றன. சில சமயங்களில் அண்ணாமலையின் உச்சி கூட பூசுரபடலத்தால் மறைக்கப்படுவதுண்டு. இதன் அர்த்தம் என்னவென்றால் தேவாதி தேவர்கள் பூசுரப் படலத்தில் அமர்ந்து திருஅருணாசலத்தை வணங்குகின்றனர் என்பதே!
அண்ணாமலையினுள் கோடிக்கணக்கான ஆபரணக் கற்கள் சுயம்புக் குண்டலங்களாய் அமிழ்ந்துள்ளன. இவற்றுள் தண்டல சுயம்புக்கல் என்பது இறைவனுடைய திருக்கண்களில் இரப்பைகளிலிருந்து (eyelids) தெளித்த அற்புதக் கற்களாகும். இது எவ்வாறு பிறந்தது தெரியுமா? சூரிய, சந்திரர்களே இறைவனுடைய திருக்கண்களாவர். அம்பிகையானவள் இறைவனுடைய கண்களை விளையாட்டாகப் பொத்திட, ஈஸ்வரியின் தெய்வீக ஸ்பரிசத்தால் பேரானந்தம் அடைந்த இறைவனின் கண்களின் இரப்பைகள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்த போது உருவானவையே தண்டலக் கற்கள். இவற்றின் எல்லையில்லாப் பிராகாசத்தில் உருவானவையே சந்திர காந்தக் கற்களாகும். (MOON STONE VARIETY).  தெய்வீக சக்திகள் தண்டலக்கல் மூலமாக ராகு கிரஹத்திற்கும் சந்திரபகவானின் மௌளீஸ்வர சக்திகள் கேதுவையும் அடைகின்றன. குறிப்பிட்ட நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கின்ற கிரஹண நேரத்தின் போது மட்டுமே தண்டல சுயம்புக் கல் திருஅண்ணாமலையின் மேல் முகிழ்ந்து மேலே வரும். பூசுரப் படலமானது இவ்வொளியைச் சூழ்ந்து கொள்ளும், ஏனெனில் இதனுடைய ஒளி பிரவாஹத்தைக் காணும் சக்தி சாதாரண மனிதர்களிடம் இருப்பதில்லை. குருவருள் திரண்டோர்க்கு இக்காட்சி கிட்டுவதுண்டு. அல்லது இதனை உய்த்துணரும் தெய்வீக நிலையைப் பெறுவதுண்டு. சில சமயங்களில் தேவாதி தேவமூர்த்திகளும் சித்தர்களும் மகரிஷிகளும் மின்மினிப் பூச்சி வடிவம் கொண்டு திருஅண்ணாமலையை வலம் வந்து தண்டலக் கல்லின் அருளொளிப் பிரவாஹத்தைக் கிரிவலம் வருவோரின் தேகங்களில் ஊட்டுவதுண்டு. எனவே ஆவணிப் பௌர்ணமியில் (16.9.1997) சந்திர கிரஹணம் ஏற்படும் இந்நாளில் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவோர்க்கு சூரிய, சந்திர, ராகு, கேது மூர்த்திகளின் அருள் ஒன்றாகக் கிட்டுவதோடு பலகோடி விண்மண்டலங்களுக்கு ஒளிக்கிரணங்களை அனுப்புகின்ற தண்டலக்கல்லின் அனுகிரஹத்தையும் பெற்றிடலாம். வயிற்று நோய்கள், கழுத்து நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.
சந்திர கிரஹண அருணாசல கிரிவல முறை
1. ஆண்கள் மேல்சட்டை அணியாது கிரிவலம் வர வேண்டும்.
2. பெண்கள் தங்கள் குடும்பப் பாரம்பரியத்திற்கு ஏற்ப கச்ச முறையில் (மடிசார்) ஆடையணிந்து இறைநாமம் ஓதியவாறே மந்திரமாய் மாறி, மந்திரமே மந்திர தேவதையாய்/ மந்திர தேவதையே கார்யசித்தி தந்து காட்சியளிக்கும்.
3. கர்பிணிப் பெண்கள் கிரஹண நாட்களில் வெளி வருதலோ, கிரிவலம் வருதலோ கூடாது.
4. எவ்வளவோ நல்ல காரியங்களுக்காக நாம் கைக்கொண்ட விரதங்கள், பூஜைகள், பலனளிக்கவில்லையே என்று பலர் ஏங்குகின்றனர். சந்திர கிரஹண அண்ணாமலை கிரிவலமானது விரதங்கள் பூஜைகளின் பரிபூரண பலன்களைத் தரும். ஏனெனில் குறிப்பிட்ட கர்மவினை கழியும் வரை விரத பூஜா சக்திகள் விண்வெளியில் பட்டம் போல் நிற்கும். கர்மவினைகளைக் கழிக்கின்ற கவின்மிகு க்ஷேத்திரமே திருஅண்ணாமலை.
5. மந்திர சித்திகள் பெறுவதற்கு, குறிப்பாக சந்திர கிரஹணத்தன்று திருஅண்ணாமலை கிரிவலம் சிறந்தது. சூரிய, சந்திர மூர்த்திகள்  சந்திர கிரஹணத்தில் ராகு அல்லது கேது கிரஹத்திற்கு தம் தபோ சக்தியை அளிக்கின்ற நேரமாக அமைவதால் அச்சந்திர கிரஹண காலமானது, சக்தி மிக்க ராகு அல்லது கேதுவின் ஆட்சியில் அமைகின்றது. முன்னரே கூறியுள்ளபடி  ராகுகால பூஜைபோல், சந்திர கிரஹணத்தில் ராகுவும் கேதுவும் ஆட்சி செய்வதால் இத்தகைய பிரதம ராகு காலத்திலும், பிரதம கேது காலத்திலும் இயற்றுகின்ற பூஜைகளின் பலன்கள் பன்மடங்காகின்றன.
அடியார்: குருவே, சூரிய சந்திர கிரஹணத்தின் போது வெளியில் செல்லாமலிருப்பதே சிறப்புடையது என்பது உண்மையா?
குரு : இன்று சில புனிதப் பொருட்களை, அணிந்தோ, கைகளில் தாங்கியோ தெய்வத் தலங்களுக்குச் செல்லலாம். கிரஹணத்தில் எவ்வாறு மற்ற பூஜைகளின் பலன்கள் பன்மடங்காகிறதோ அதே போன்று சர்வேஸ்வரனாய் வீற்றிருக்கும் திருஅண்ணாமலையானை கிரிவலம் வருதல் ஓர் உத்தம பிரதட்சிண பூஜையாகும். ஆகவே இதன் பலன்களும் பல்கிப் பெருகும். கிரஹண நேரத்தில் வெளிவர விரும்பாதோர் கிரஹண நேரத்திற்கு முன்பே கிரிவலத்தைத் தொடங்கி கிரஹண நேரத்தின் போது கிரிவலப் பாதையில் ஏதேனும் ஒரு அஷ்டலிங்க சந்நதியில் குறிப்பாக சந்திர லிங்க அல்லது சூரிய சந்நிதியில் தியானம் யோகம், ஹோமம், தர்ப்பணம் , தான தருமங்களோடு “ஓம் நமச்சிவாய” என்றோ அல்லது
“நமசிவய
 சிவாயநம
 சிவயசிவ
 சிவசிவ”
என்ற சித்புருஷர்களின் சிவதாரக மந்திரத்தை கிரஹண நேரமுழுவதும் ஓதியபின் கிரிவலத்தை தொடரலாம். அல்லது கிரஹணத்திற்கு முன்பே கிரிவலத்தை முடித்து, கோயிலிலோ, இல்லத்திலோ இப்பூஜைகளை மேற்கொண்டிடலாம்.. கிரஹண நேரம் முழுவதும் திருஅண்ணாமலை கிரிவலத்திலேயே லயித்திருத்தல் மிகவும் சிறப்புடையதாகும்.
சந்திர கிரஹண கிரிவல சிறப்பு – பிரண்டல கிரஹண பிரதட்சிணம்
1 சந்திர கிரஹணம் தொடங்குவதற்குச் சற்று முன் கிரிவலத்தைத் தொடங்கி கிரஹண நேர முழுவதையும் கிரிவலத்தில் கழித்து, கிரஹணம் முடிந்த பின்னர் கிரிவலத்தைப் பூர்த்தி செய்வதே பிரண்டல கிரஹண கிரிப்பிரதக்ஷணம் எனப்படுகிறது. இம்முறையில் கிரிவலம் வருவோர் தாயின் ஆசியைப் பெறுவர். தீய வழக்கங்களை உடையோரின் வாழ்க்கையில் நல்லதொரு திருப்பம் ஏற்படும். தடங்கிய திருமணம் கைகூடும். நல்ல உத்யோகம் கிட்டும்.

2. சந்திர கிரஹணம் தொடங்குவதற்கு முன்பே கிரிவலத்தைத் தொடங்கி கிரஹண நேரம் முடிவதற்குள் கிரிவலத்தை முடித்தலை  அர்த்த மூல கிரஹண பிரதக்ஷ்ணம் என சித்தர்கள் அருள்கின்றனர். இதன்படி திருஅருணாசலத்தை வலம் மேற்கொள்வோர். தந்தையின் ஆசியைப் பெற்று கடும் நோய்களிலிருந்து குணமடைந்து நல்ல உடல் ஆரோக்யத்தைப் பெறுவர். குழந்தைகள் உடல் நிலைதேறும்.
3. கிரஹணம் தொடங்கிய பின்னர் கிரிவலத்தைத் தொடங்கி கிரஹணம் முடிந்தபின்னர் கிரிவலத்தை நிறைவு செய்வதை பூத கிரஹண பிரதக்ஷ்ணம் என இயம்புகின்றனர். பெரியோர் இம்முறையில் கிரிவலத்தைக் கடைபிடிப்போருக்கு பல காலங்களாகத் தடை பட்டிருந்த நற்காரியங்களுக்குத் தடை நீங்கி நல்ல முடிவு கிட்டும். நிலம், அலுவலகம், உத்யோக உயர்வு போன்றவற்றில் இருக்கும் சிக்கல்கள் நீங்கி இறையருளால் நன்மை நடக்கும். மேலே குறிப்பிட்டுள்ள எம்முறையில் கிரிவலம் வந்திடினும் கிரிவலத்தின் போது தேவையற்ற வீண் பேச்சிற்கும் மற்ற சிந்தனைகளுக்கும் இடமளித்திடாமல் முடிந்தவரை இறைச்சிந்தனையில் மனதை லயித்து இறைநாமத்தை ஓதிடல் சாலச்சிறந்தது. ஏனெனில் இன்று பல விதமான பூச்சிகளின் வடிவில் வலம் வரும் மஹான்களும், சித்தர்களும், யோகியரும் ஜப சக்திகளைப் பிரதிபலித்து அனுகிரஹங்களாக அனைவரின் மீதும் வர்ஷிக்கின்றனர். ஆகவே சந்திர கிரஹணத்தின் போது அருணை கிரிவலம் கிடைத்தற்கரிய ஒரு பெரும் பாக்கியம் என்பதை அனைவரும் உய்த்து உணர்வீர்களாக!
சந்திர கிரஹணத்திற்கான மந்திரம் : சந்திர கிரஹணத்தின் போது, கீழ்க்கண்ட மந்திரத்தைப் பனை ஓலைகளில் எழுதி நெற்றியில் பட்டம் போல் கட்டியிருத்தல் சிறப்புடையதாகும். பனை ஓலையில் உள்ள “தாளத்வீபம்” என்ற தெய்வீக சக்தியுடைய ரேகைகள் அமிர்தசக்தியை ஈர்த்து நெற்றியில் கபால நரம்புகளுக்கு அளிக்கின்றன. காகிதத்திலேனும் எழுதி வைத்துக் கொண்டு துதித்திடுக! கடுமையான நோய்கள் தணியவும், பிறருடைய நோய் நிவாரணத்திற்கும் சங்கல்பம் செய்து கிரஹண நேரத்தில் நெற்றிப் பட்டையுடன் பூஜை, ஹோமம், தான, தர்மங்களுடன் கிரிவலம் வந்து சந்திர கிரஹண முடிவில் தர்ப்பணம் செய்வது சிறப்புடையதாகும். சந்திர கிரஹணத்தின் போது ஜபிக்க வேண்டிய மந்திரம் :-

ஸ்ரீவசிஷ்டேஸ்வரர்
திட்டை தஞ்சாவூர்

இந்த்ரோ நலோயமோ ருக்ஷோ வருணோ வாயுரேவச|
குபேர ஈசோக்நந் த்விந்தூப ராகோத்த வ்யததாம் மம||
சந்திரகாந்தக் கல் மஹிமை : தஞ்சாவூர் – திருக்கருகாவூர் அருகே தென்குடித் திட்டையில் உள்ள ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் சிவாலயத்தில் பிரமாந்திரத்தில் சந்திரகாந்தக் கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. திருஅண்ணாமலையில் பலகோடி யுகங்களுக்கு முன் சந்திர கிரஹண நேரத்தில் ஒளிமிகுந்த தண்டல சுயம்புக் கல்லை தரிசிக்கும் பேறு பெற்று ஸ்ரீவசிஷ்ட மஹரிஷியும், ஹேரம்ப மஹரிஷியும் தண்டலக் கல்லின் பிரகாசத்தின் ஓர் அணுவை கிரஹித்துத் தென்குடித் திட்டைக் கோயிலின் பிரமாந்தரத்தில் பிரதிஷ்டை செய்தனர். சுமார் அரைமணிக்கு ஒரு முறை சந்திர காந்தக் கல்லின் அமிர்தத் துளி மூலவரின் லிங்கத் திருமேனியில் விழும். தற்போது இது சூட்சுமமாகவும் நிகழ்வதுண்டு. சந்திர கிரஹணத்தின் போது திட்டை ஸ்ரீவசிஷ்டேஸ்வரருக்கு கறந்த பசும் பால், வெள்ளை நிற மாதுள முத்துக்களாலும் அபிஷேக, அலங்காரங்கள் செய்து ஏழைகட்கு வெண்ணிற உணவு, ஆடைகளைத் தானமளித்து வர மனநோய்கள் குறையும். கபால நோய்கள் குணமாகும். மனவேறுபாடுகளில் பிரிந்த தம்பதியினர், உறவுமுறைகள் ஒன்று சேர்வர். இன்று இங்கு ஜெபம் செய்வது சிறந்த ஏகாந்த மனோநிலையைப்பெறும்.
தர்பையோடு கிரிவலம் வருக! – 16.9.1997 – சந்திர கிரஹண கிரிவலம்
திருஅண்ணாமலையையோ ஏனைய தெய்வீக மலைகளையோ (குன்றக்குடி, பழனி, பர்வதமலை etc..) சந்திர கிரஹணத்தன்று கிரிவலம் வருகையில் நெற்றிப்பட்டம் கட்டியோ கையில் தர்ப்பைப் புல்லைத் தாங்கியோ கிரிவலம் வந்திடில் மிகவும் விசேஷமானதாகும். ஏனெனில் தர்பையானது எவ்வித கிரஹண ரேகைகளையும் தாங்கி நம் உடலுக்கு ஏற்றவாறு அவற்றைத் தரும் சக்தியுடையது. நெற்றிப் பட்டம் என்பது ஒரு பனை ஓலையில் சந்திர கிரஹண மந்திரத்திற்கான மந்திரத்தை மேலே பார்க்க எழுத்தாணி, பேனா, பென்சிலால் ,எழுதி நெற்றியில் பட்டைபோல் கட்டி அதில் தர்பைப் புல்லைச் செருகுவதாகும்.
எனவே வரும் 16.9.1997 அன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வருகையில், கையில் ஒரு தர்பைப் புல்லையாவது தாங்கி வருதல் புனிதமானதாகும். வசியுள்ளோரும் கிராமத்தவர்களும் கட்டுகட்டாகத் தர்பையைக் கொண்டுவந்து கிரஹண நேரத்தில் கிரிவலம் வருவோர்க்குத் தானமாக அளித்தல் ஸ்வர்ண (தங்க) தானத்திற்கு ஈடான பலன்களைத் தரும். எம்முடைய ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் ( திருஅண்ணாமலை) இயன்ற வரையில், கிரிவலம் வருவோர்க்கு ஒரு தர்பைப் புல்லையாவது இன்று தர இருக்கின்றோம். இயன்றவர்கள், கிரிவலம் வருவோர்க்கு அளிப்பதற்காக, தர்ப்பைப் புல் கட்டுகளை ஆஸ்ரமத்தில் அளித்திடலாம்.  தர்பையை மட்டுமன்றி ரோஹிணி, கொஞ்சுருட்டி, அஞ்சலாடை போன்ற மூலிகைகளையும் தாங்கி இன்று கிரிவலம் வந்திடலாம். அறிந்தோ அறியாமலோ இன்று ஏதேனும் ஒரு நல்மூலிகையைத் தாங்கி கிரிவலம் வருவோர்க்கு அதனதற்குரித்தான பலன்கள் கிட்டும். அமிர்த சக்திகளைத் தரும் கிரிவலம்! சூரிய, சந்திர, ராகு, கேது கிரஹ அனுகிரஹங்களைத் தரும் கிரிவலம்! எத்தகைய கடுமையான நோய்களுக்கும் நிவாரணம் தந்து நீடித்த ஆயுளையும் சுமங்கலித்வத்தையும் தரவல்ல கிரிவலம்! (கிரிவலத்தை முடித்த பின் தர்பையை நீருள்ள நல்கிணற்றிலோ அல்லது கோயில் குளத்திலோ சேர்த்து விட்டுத் தர்ப்பணம் செய்து நீராடுதல் நலம்.)

ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் – திருஅண்ணாமலை
எம்முடைய  தெய்வீக வெளியீடுகளான “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” மாதாந்திர ஆன்மீக இதழையும் பிரதோஷ மகிமை, ஸ்ரீஇராகு கால துர்க்கை மகிமை, சந்தன மகிமை போன்ற ஆன்மீகப் புத்தகங்களையும் திருஅண்ணாமலையில் பெற்றிடலாம். சென்னையில் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தின் அலுவலகத்திலும், திருச்சி, கோவை முகவரியிலும் எம்முடைய ஆஸ்ரம வெளியீடுகள் கிடைக்கும்.
ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் திருஅண்ணாமலை ஆஸ்ரம சேவைச் செய்திகள்
19.7.1997 – திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் பௌர்ணமி பூஜை மற்றும் அன்னதானம்
22.7.1997 – திருச்சி – திருநெடுங்கள சிவாலயத்தில் சூரியக் கதிர்கள் லிங்கத்தின் மேல் படிகின்ற பாஸ்கர பூஜை
3.8.1997 – ஏழைகட்கான இலவச மருத்துவ முகாம்  - சென்னை அருகே வீரராகவபுரம் (காடுவெட்டி) கிராமம்
10.8.1997 – திருச்சி அருகே முத்தரசநல்லூரில் இலவச மருத்துவ முகாம். வியாழன், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னையிலும், திருச்சியிலும் நாமசங்கீர்த்தனம், தேவார, திருவாசகப் பாராயணம் மற்றும் சகஸ்ரநாம கூட்டு வழிபாடுகள் நடைபெற்றன!
விசேஷ தினங்கள் - செப்டம்பர் 1997


தேதி

பண்டிகைகள்

1.9.1997

பிரதட்சிண அமாவாசை – திங்கள் சேர்ந்த அமாவாசை – மௌன விரதத்திற்கும் அடி, அங்கப் பிரதட்சிணத்திற்கும் உகந்தது. அரசமர அடிப் பிரதட்சிணம் சந்தான ப்ராப்தியைத் தரும்.

6.9.1997

விநாயக சதுர்த்தி

7.9.1997

ரிஷி பஞ்சமி

11.9.1997

ஆவணி மூலம் – இன்று திருச்சி மலைக்கோட்டை கிரிவலம் மிகவும் விசேஷமானது.

12.9.1997

தசாவதார விரதம்

16.9.1997

செவ்வாய்  பௌர்ணமி (விடியற்காலை 4.06 மணி முதல் இரவு 12.20 வரை பௌர்ணமி திதி உள்ளது) – இன்று இரவே பௌர்ணமி கிரிவலம்.

17.9.1997

சிறப்புடைய கிரிவல நாள். மாளய பட்சம் ஆரம்பம் – (17.9.1997 முதல் 1.10.1997 வரை சிறப்பான தினசரித் தர்ப்பண நாட்களாகும்.)

20.9.1997

மஹாபரணி – விசேஷத் தர்ப்பண நாள்

27.9.1997

யதி மாளயம் – விசேஷத் தர்ப்பண நாள்

30.9.1997

சஸ்த்ர ஹத மாளயம் – விசேஷத் தர்ப்பணம்.

1.10.1997

மாளய அமாவாசை

2.10.1997

நவராத்திரி ஆரம்பம்

இம்மாதத்திற்குரிய கூடாநாள் – கூடா நாட்களெனப்படும் பிரபலாரிஷ்ட யோக நாட்களில், கரிநாள் போன்று அனைத்துக் காரியங்களையும் குறிப்பாக சுப கார்யங்களைத் தவிர்த்திட வேண்டும்.கூடா நாட்களின் தீமைகளைத் தணிக்க அந்நாளில் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம், திவ்ய பிரபந்தப் பாக்கள், பெருமாள் துதிகளை ஓதிடுக!
12.9.1997 மாலை 5.37 வரை – கூடா நாள் நேரம்
தற்போதைய வழக்கில் கூடாநாட்களில் (பஞ்சாங்கத்தில் பிரபலாரிஷ்ட யோக நாட்கள் எனக் குறிக்கப்பட்டிருக்கும்) திருமண முகூர்த்தங்கள் வைக்கப்படுகின்றன என்பது மிகவும் வருந்தத்தக்கதாகும். சுப முகூர்த்தங்களைக் கணிக்கையில் இத்தகைய கூடா நாட்களைக் கண்டிப்பாகத் தவிர்த்திடல் வேண்டும். உதாரணமாக 29.6.1997 போன்ற நாட்கள் சுபமுகூர்த்த நாட்களாகக் குறிக்கப்பட்டிருப்பினும் இவை கூடா நாட்களாக அமைவதால் சுப முகூர்த்த நாட்களாக ஏற்கலாகாது. இந்நாளில் திருமணங்கள் நிகழ்ந்திருப்பின் தக்க சற்குருவை நாடிப் பரிஹாரம் பெறுவீர்களாக!
ஓர் அன்பான வேண்டுகோள்
ஸ்ரீஅகஸ்திய விஜயம் பரிபூரண தெய்வீக மாத இதழாகப் பரிமளிக்கின்ற காட்சியைக் கண்டு இன்புறும் இறைநெறிச் செல்வர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்... எல்லாம் வல்ல ஸ்ரீஅருணாசலேஸ்வரரின் பெருங்கருணையால் எம்முடைய ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் திகழ்கின்ற திருஅண்ணாமலையில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று அன்னதானம் நடைபெற்று வருவதை அறிவீர்களன்றோ! ஆஸ்ரமத்தின் இதர தெய்வீக வெளியீடுகளான அருணாசல கிரிவல மஹிமை, பிரதோஷ மகிமை, ராகுகால ஸ்ரீதுர்க்கா பூஜை மகிமை, சுபமங்கள தீப மகிமை, சுமங்கலிக் காப்பு போன்ற அற்புதமான ஆன்மீக நூல்களும் (ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளால் அருளப் பெற்றவை) வெளியிடப்பட்டுள்ளன. சித்புருஷர்களின் அற்புதமான விளக்கங்களைத் தாங்கி வரும் நூல்கள் இவை, மேலும் ஸ்ரீநவகிரஹ மகிமை, பிள்ளையார் மகிமை, திருஅண்ணாமலை மகிமை போன்ற பல நூல்களும், வருகின்ற கார்த்திகை தீபத்திற்குள் வெளிவர உள்ளன. ஸ்ரீஅகஸ்திய விஜய ஆன்மீக இதழின் ஆன்மீக வளர்ச்சிக்காகவும், ஆஸ்ரமத்தின் கட்டிட உதவிக்காகவும், ஆஸ்ரமத்தின் மாதாந்திர பௌர்ணமி அன்னதானத்திற்காகவும் ஆஸ்ரமத்தின் சார்பில் மாதந்தோறும் சென்னை, திருச்சி கிராமப் புறபகுதிகளில் ஏழை எளியோருக்காக நடத்தப்படும் இலவச மருத்துவ முகாம்களுக்காகவும் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடையும் வண்ணம் எளிய தெய்வீக விளக்கங்கள், பூஜை வழிபாட்டு முறைகளை அளிக்கும் தெய்வத் துணை நூல்களைப் பிரசுரிக்கவும்., இயன்ற பொருள் உதவியைத் தந்தருளுமாறு பனிவன்புடன் வேண்டுகின்றோம். தங்களுடைய இல்லங்களில் நிகழும் திருமணங்கள், கிரஹப் பிரவேசம், சீமந்தம், உபநயனம், புனித நீராட்டுதல், சதாபிஷேகம்/ சஷ்டியப்தபூர்த்தி போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளில் பங்குகொள்கின்ற விருந்தினர்களுக்கு மேற்கண்ட தெய்வீக நூல்களை அன்பளிப்பாக அளித்து எங்களுடைய அறவழிக்கு உறுதுணையாக நிற்பதோடு, தெய்வீகத்தை யாங்கணும் பரப்புகின்ற அருட்பெரும் தெய்வீகத் திருப்பணியிலும் பங்குகொள்ள வேண்டுகின்றோம். உங்களுடைய உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள், மேலதிகாரிகளுக்கும், மற்றும் நூலகங்களுக்கும் ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழுக்கான சந்தாத் தொகையைத் தாங்களே செலுத்தி எங்களுடைய இறைப்பணி தழைத்தோங்கிட உதவி புரிய வேண்டுகிறோம். ஆஸ்ரமத்திற்கான நன்கொடைக்கு இந்திய வருமானவரிச் சட்டத்தின் 80ஜி பிரிவின்படி வருமான வரிச்சலுகை (Exemption under sec80G of IT Act) என்பதை மகிழ்வுடன் நினைவூட்டுகின்றோம். ஆஸ்ரமத்திற்கான நன்கொடையை ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் சபா அறக்கட்டளை (Sri la Sri Lobhamatha  Agasthiar sabha charitable Trust )  என்ற பெயருக்கு வங்கி செக்/D.D  மூலமாக எடுத்தனுப்ப வேண்டுகிறோம். தக்க ரசீதுகள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.
நித்ய கர்ம நிவாரண சாந்தி
அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம், லக்ன, கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை/தான தருமம்/ வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்திடில், குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்ம வினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேரா வண்ணந் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்.

நாள்

தான /தரும/ வழிபாடு முறை

 சாந்தமான நித்ய வாழ்வுக்கான பலன்கள்

1.9.1997

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரருக்கு பால், விளாம் பழ நைவேத்யம் /தானம்

 பயத்தால் வரும் துன்பங்கள் தீரும்.

2.9.1997

காளிக்கு செவ்வாழைப் பழ நைவேத்யம்

அதிகார தோரணையில் மிரட்டியவர்களின் தொல்லைகள் தணியும்.

3.9.1997

ஸ்ரீசங்கர நாராயண சுவாமிக்கு ஐந்து வகையான பழ நைவேத்யம்  செய்து வடமொழி, தமிழ்மறை ஓதுவோர்க்கு தானமளித்திட....

சந்திர தசை துன்பங்கள் தீரும்.

4.9.1997

வயதான இசைக் கலைஞர்களுக்குத் தான தருமங்கள் செய்திட

ருத்திர பசுபதியின் அருள் கிட்டும்.

5.9.1997

அம்பாளுக்கு 16 வகையான ஷோடஸோபசார பூஜைகள்

தெரிந்தவர்களே நமக்குக் கொடுக்கின்ற துன்பங்கள் தணியும்,

6.9.1997

விநாயக சதுர்த்தியான இன்று 108 விநாயக மூர்த்திகளை தரிசனம் செய்து 108 கொழுக்கட்டைகளை நவேதித்து தானம் செய்திட...

எதிர்பார்க்கின்ற பண உதவிகள் கூடி வரும்.

7.9.1997

ஜீவ சமாதிகளில் பஞ்சாமிர்த அபிஷேகம்

நற்காரியங்களுக்காக சந்தர்ப்பங்கள் கூடி ஒத்து வரும். நெடுங்கால வழக்குகள் நல்ல தீர்வைப் பெறும்.

8.9.1997

சூர்ய பகவான் முருகனை வழிபட்ட தலத்தில் தினைமாவுடன் கோதுமை மாவு கலந்து படைத்து தானமளித்திட....

கணக்கு வழக்குகளில் உள்ள சோதனைகளிலிருந்து நிவர்த்தி

9.9.1997

அஷ்ட லட்சுமி மூர்த்திகளை முத்துமாலையில் ஆவாஹனம் செய்து வழிபட்டிட

வெளிநாடுகளில் வாழ்பவர் நலம் பெறுபவர். சந்திரனின் நீச ஸ்தானத்தால் ஏற்படும் துன்பங்கள் தணியும்.

10.9.1997

தூர்வாசரின் ஸ்ரீலட்சுமி ஸ்தோத்திரத்தை துதித்து, பால் பாயசம் படைத்து ஏழைகளுக்கு அளித்தல்..

பணக் கஷ்டம் நிவர்த்தியாகும்.

11.9.1997

பாதாள கணபதிக்குப் (ஆழத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர் – உதாரணம் விருத்தாசலம் ஆழத்துப் பிள்ளையார்) பால் பேணி படைத்திட,

நம்மைப் பரிகசித்தவர்களே நாணும்படி உயர்வு கிட்டும்.

12.9.1997

தசாவதார விரத நாளான இன்று தசாவதார மூர்த்திகளை வணங்கி, பத்து விதமான உணவுப் பண்டங்களைப் படைத்து, தானமளித்திட....

பாடை தோஷம் எனப்படும் பிரேத சாபங்கள் தீரும்.

13.9.1997

உறவினர்கள் ஒன்று கூடி பசுவிற்குப் பூஜை ஏழைகளுக்கு சுவர்ண தானம் எனப்படும் தங்க தானம்..

 பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும்.

14.9.1997

கோல மாவினால் வரைந்த அல்லது தகட்டில் வரைந்த 24 ஆரங்கள் உள்ள அசோக சக்கரத்திற்கு நாணயங்கள் வைத்தும் 1008 முறை காயத்திரி மந்திரத்தை ஓதிட

தீய வழக்கங்கள் தணியும்.

15.9.1997

நடராஜ ஈஸ்வரனுக்கு ருத்ராட்ச மாலை சார்த்தி வழிபடுதல்...

பேய், பிசாசு, நிழலாடும் பயம் இவை தணியும்.

16.9.1997

1. இன்று சந்திர கிரஹணம் – திருவையாறு அருகே ஸ்ரீசந்திரனக்குரிய தலமான திங்களூரில் சந்திர பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்திட .....
2. தேங்காய் சாதம் சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், அவல் உப்புமா, வெள்ளை கேசரி போன்றவற்றைப் படைத்து ஸ்ரீசந்திர பகவானை வழிபட்டிட

1. கணவன் மனைவியருக்கிடையே தாம்பத்ய வாழ்க்கை, நன்னிலை பெறும்.
2. மனதினால் செய்திட்ட பாவங்களுக்கு விமோசனம் பெற வழியுண்டு.

17.9.1997 முதல் 30.9.1997 வரை மாளய பட்ச புரட்டாசி மாத அமாவாசை பற்றிய விளக்கங்களில் உள்ளவாறு கடைபிடித்திடுக.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam