குழந்தைகள் தாய் மொழியில் படித்தால்தான் ஞானம் உதயமாகும் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

வெள்ளியங்கிரிப் பயணத்தில் தான் சிறுவனுக்கு எத்தனை எத்தனை அனுபூதிகள்! எமலோகம் சென்று மீண்ட பழனிச்சாமிக்கான சம்பவத்தின் அனுபூதிகள் இன்னமும் அவரிடம் இருந்து வர  வேண்டுமே! மேலும், வெள்ளியங்கிரியில் அவன் கண்ணாரக் கண்ட எண்ணற்ற அனுபூதிகளையே வாழ்நாள் முழுதும் அசைபோட்டு, அசை போட்டு ஆனந்திக்கலாமே!

பெரியவரை, இந்தப் பிரபஞ்சத்தின் மகத்தான சித்புருஷர்களில் ஒருவரெனப் பல சமயங்களிலும் சிறுவன் உணர்ந்தாலும், அவருடைய உத்தமத் தெய்வீக லீலைகளை அவனை உணர விடாமல், குருமாயைப் படலத்தை அவரே அவ்வப்போது விரித்து விடுகிறாரோ? என் செய்வது!

சிறுவனுக்காகக் கோவணாண்டிப் பெரியவர் தன்னுடைய உத்தமப் பெருந் தெய்வீக நிலைகளிலிருந்து வெகுவாகக் கீழிறங்கி வந்து, மிகவும் எளிமையான முறையில், அவனுக்கு எத்தனையோ விஷயங்களைப் போதித்தார். மெட்ராஸ்  தமிழ் பாணியில் அவர் பேசுகின்ற பாணிதான் சிறுவனுக்கு மிகமிகப் பிடித்திருந்தது.

... ஒரு முறை சென்னை ராயபுரத்தில் திடீரென ஒரு டீக்கடைக்காரர் பெரியவரிடம் வந்தார். அவரிடம் மெட்ராஸ் தமிழிலேயே, “இன்னா நைனா.....” என ஆரம்பித்து “சும்மா குந்திக்கிட்டுக் கிடக்கே”.... என்பது வரை சரளமான மதராஸ் தமிழில் உரையாடலானார். மண்ணின் மஹிமைதானே! அந்த டீக்கடைக்காரர் மிகவும் சகஜமாகி விட்டார்!

கூட வரும் சகுனத்தையும் பார்!

அந்த டீக்கடைக்காரர் சிறிது சிறிதாகப் பழகி ஒரு நாள், “சாமீ! என்னோட கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்க வராங்க! இதோ ஜாதகம்!” – என்று ஒரு மஞ்சள் தாளை நீட்டினார். பெரியவரோ எந்த ஜாதகமும் அவரிடம் வரும்போது, மிகவும் கூர்மையாக ஹோரை, சகுன சாஸ்திரங்களைப் பார்ப்பவர் ஆயிற்றே!

அப்போது காக்கைகள் சண்டை போட்டுக் கொள்ள.... கோயில் கதவு வேறு காற்றில் சார்த்திக் கொண்டும் விட்டது.

பெரியவர் உதட்டைப் பிதுக்கினார்.

ஆனால் வந்த டீக்கடை தாமுவோ, “ஏற்கனவே தள்ளிக் கிட்டே போகுது! ரொம்பவும் பொருத்தம் பார்க்காதே சாமீ!” என்றார்.

பெரியவரோ அவருடன் மிகவும் பரிச்சயமானவர் போல் ஜாதக விஷயங்களைப் பேசலானார். பெரியவருடைய பாணி எப்போதுமே, “அடியைப் பிடிடா பாரத பட்டா!” – என்பது போல, ஏதேனும் முன்னோர்களின் உறவு முறையைப் பிடித்துக் கொண்டு மடக்கி விடுவதேயாகும்.

எக்கடனும் தீர்க்கும்
இனிய கீதம்!

டீக்கடைக்காரருக்குப் பெரியவரிடம் இருந்து அவருடைய கல்யாணத்திற்குப் பச்சைக் கொடி கிட்டவில்லை என்றதும் வருத்தமடைந்தார். திடீரென்று வெளியே சென்று, தன் வீட்டிலிருந்து குடும்பத்தையே அழைத்து கொண்டு வந்து விட்டார்.

திருத்திய திரும்பாத திசை

“ஏம்மா, நீனு மீனாதானே? உன்னோட ஒண்ணு விட்ட அக்கா உமையாளை மணச்சநல்லூர்ல பாபு வீட்டுலத்தானே கட்டிக் கொடுத்திருக்கே!” என்று குசலம் விசாரித்தவாறே பெரியவர் நைசாகத் தாமுவின் திருமண விஷயத்தையே பூட்டி வைத்து விட்டார்.

“ஏம்பா, ராமதுரை உனக்குத் தான் எஸ்.எஸ்.எல்சியிலே, கணக்குப் பாடம் போயிடுச்சே! திரும்பி எழுத வேண்டாமாடா கண்ணு! ஒரு சப்ஜெக்ட் போயிடுச்சேன்னு வெறுத்து ஒதுக்கிடாதப்பா! தைரியமா அக்டோபர்ல பரீட்சை எழுது போ, போ! பி.எஸ்.சி கெமிஸ்டரி எடுத்துக் கிட்டு பி.டி. முடிச்சுட்டு வாத்யார் உத்யோகத்துக்குப் போறதுதான் சரின்னு உன் தலையில எழுதி இருக்கே!” – என்று பேசியவாறே பெரியவர் தாமுவின் ஜாதகத்தை மீண்டும் ஓரங்கட்டினார்.

மானாவாரியாக அவர் அளிக்கும் தக்க நேரத்திலான அறிவுரைகள், உபதேசங்கள் பலரையும் வியக்கச் செய்யும்.

ஆனால் அந்த தாமுவோ, “சாமீ பொண்ணு எந்தத் திசைலேந்து வரும்?” என்று பெரியவரின் கவனத் திசையைத் திருப்ப முயன்றார்.

பெரியவர் இப்போது சற்று யோசித்தார்.

பரிகாரமே தரும் பக்குவம்

தாமுவின் தந்தையை அழைத்த பெரியவர், “தம்பிக்கு மூணு கல்யாணம்னு ஜாதகக் கண்ணாடி காட்டுதே! அதனால் இந்த வரன் இப்போதைக்கு வேணுமான்னு நன்னா யோசிங்க! அதுக்கு முன்னாடி நிறையப் பரிகாரங்கள் செஞ்சாகணும், இல்லாட்டி தோஷங்கள் சுத்திச் சுத்திச் சுழட்டி அடிக்குமே! இந்தப் பையனுக்கு மூணாவது கல்யாணம்தான் நெலச்சு நிக்கும்னு எட்டாமிடம் சொல்லுதே! இப்ப என்ன பண்ணப் போறீங்க!”

“இல்லை சாமீ! இந்தப் பொண்ணு நல்ல வசதியான இடம்! தூரத்துத் தெரிஞ்ச குடும்பம்....” என்று அவர் ஜவ்வாக இழுத்தார்... ஆனால் பெரியவர் சற்றும் அசைந்து கொடுக்கவில்லையே!

“முதல்ல பரிகாரங்களைச் செஞ்சாகணும், அப்புறம்தான் மத்த பேச்செல்லாம்! பொண்ணு ஜாதகம் சரியாக இருந்தாலும் இந்த சம்பந்தத்தில் பையனுக்குச் சில சிக்கல்கள் உண்டு!”

அதுக்குள் மற்றொரு சொந்தக்காரர் பெரியவரிடம் மெதுவாக வந்து, தலையைக் குனிந்து காதோடு, காதாக, “சாமீ! இவங்க ஒரு பெரிய ஜோஸ்யரைப் பார்த்துருக்காங்க! பொண்ணு வீட்டுக்காரங்களும் நிறைய பேர் கிட்ட ஜாதகம் பார்த்துருக்காங்க! அவங்க கிட்ட நீங்க சொன்னதைச் சொன்னாக்க, ‘கத்துக் குட்டி ஜோஸ்யர்தான்’ இப்படிச் சொல்வாருன்னு சொல்லிட்டாங்க! இப்ப உங்களை எப்படியாச்சும், இந்த ஜாதகத்துக்கு எஸ்ஸுன்னு சொல்ல வைக்கலாம்னு பார்க்கறாங்க!” என்றார்.

பெரியவர் அந்த ஆளைப் பார்த்து முறைத்தார்!

“இந்த வயசுலேயும் உனக்குக் கோள் மூட்டற புத்தி போகலையே! கேவலமா இல்லை!” என்று உரக்கக் குரலை எழுப்பவே, அடுத்த வினாடி அந்தக் கோள்மூட்டி காணாமற் போனார்!

பிறகென்ன, அவர்கள் என்னதான் முட்டி மோதிப் பார்த்தும் பெரியவர் அசைவதாக இல்லை!

சென்று வா! செய்து வா!

ஒரு வழியாய் அந்த டீக்கடை தாமு வழிக்கு வந்து, பெரியவரிடம் செய்ய வேண்டிய பரிகாரங்களைக் கேட்டு எழுதிக் கொண்டார்.

 “எலேய்! நீ இத்தனையும் செய்வேங்கற நம்பிக்கையிலதான் சொல்றேன்! செய்யாட்டி, ஒண்ணுக்குப் பத்தா, தண்டனை எகிறிக்கும் ஜாக்கிரதை!”

“சாமீ! இதெல்லாம் செஞ்சு முடிச்சுட்டா, இந்தப் பொண்ணைக் கல்யாணத்துக்கு ஓகேன்னு சொல்லிடலாமா?”

தாமு தன் இடத்திலேயே பிடிவாதமாக நின்றார். பெரியவர் இப்போது, வானத்திற்குள் கூர்ந்து பார்த்தார்.

“முதல்ல, நீ அத்தனைப் பரிகாரங்களையும் செஞ்சுட்டு வா! அப்பறம் யோசிக்கலாம்! அதுக்குள்ளாற, கூடுதலா எவ்ளோ கர்ம மூட்டையைச் சுத்துக்கிறியோ, யாருக்குத் தெரியும்?”

அவ்வளவுதான், பெரியவர் விடுவிடுவென்று நடக்கலானார். சிறுவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

“வாத்யார் அந்த ஆளுக்கு மூணு கல்யாணம்னு ஏன் இதனை இப்படிப் பச்சையாக, அப்பட்டமாகச் சொல்லணும்? சற்று மாற்றிச் சொல்லி இருக்கலாமே!”

அப்போது அவரிடம் அவனுக்கு இது பற்றி நேரடியாகக் கேட்பதற்கு மிகவும் பயமாக இருந்தது, எனவே மிகவும் அமைதியாக, வெகு வேகமாக அவருடன் நடக்கலானான்.

அந்த டீக்கடைக்காரருடைய, முப்பாட்டனார் ஒருவர், தான தர்மங்களை, வழிபாடுகளைக் கைமாறு கருதாது நன்கு செய்தவர் ஆதலின், அந்தப் புண்ணிய மூட்டையால், தாமுவின் குடும்பம் நன்கு ஓடிக் கொண்டிருந்தது.

மீண்டும் வந்த மிஞ்சிய பரிகாரத்தார்

பெரியவர் சொன்னபடி, அந்த டீக்காரக் குடும்பத்தினர் பல ஆண்டுகளாகவே தினமும் 36 தம்பளர் டீ, பாலை ஏழைகளுக்கு இலவசமாக் அளித்து வந்தார்கள். ஆடி வெள்ளி, நவராத்திரி மற்றும் கோயில் உற்சவ நாளில் 108, 1008 தம்ளர் டீ, பாலாக தான, தர்மம் பெருகியது! புண்ணியமும் நன்கு விருத்தி ஆயிற்று! ஆனால் விதி கடுமையாக விளையாடினால் என்ன செய்ய முடியும்?

“நாங்க விதிக்குள்ளாற புக மாட்டோம் அப்பனே!”

நாங்களும் “இங்க பள்ளம் இருக்கு, அங்கே முள் இருக்கு, ஜாக்கிரதைன்னு” சொல்லிக் காட்டற சாதாரணமான ஆன்மீக வழிகாட்டிதான், ஒரு கைக்காட்டிதான்! மத்தபடி நாங்க காட்டற வழியில நீ போறதோ, போகாததோ உன் விதிப்படிதான் நடக்கும்! எவருடைய விதியையும் நாங்க மாத்தறது கிடையாது, நாங்க யாரையும் கட்டாயப்படுத்தறதும் கிடையாது! இந்தப் பரிகாரங்கள் முடியற வரைக்குமாவது கல்யாணம்கற பேச்சே நாங்க எடுக்கறதா இல்லை! ஏன்னா விதி அதிபயங்கரமா விளையாடப் போகுதே! என்ன செய்யப் போறே?”

அந்தத் தாமு தலையைக் குனிந்து கொண்டார், அவர் கண்களில் நீர் வழிந்தது.

சொல்ல வந்ததைச் சொல்லாமல், சொல்ல முடியாமல் தாமு சென்று விட்டார். மேலும், இரண்டு, மூன்று முறை வந்தார் பிறகு நெடு நாள் வரவே இல்லை!

முகத் திருப்பம் முக்கியத் திருப்பமே!

கிட்டத்தட்ட ஆறு மாதம் கழித்துத் தாமு மீண்டும் வந்தார்!

இப்போது பெரியவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார்...

“சாமீ, சொன்ன பரிகாரத்தை முக்கால்வாசி பண்ணிட்டேன்! ஆனா எப்படியாவது கல்யாணம் ஆனாச் சரியாயிடுங்கறதனால, பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப வற்புறுத்தினதால, கல்யாணமும் செஞ்சுக்கிட்டேன்! இப்ப டாக்டருங்க அதுக்குக் குழந்தையே பொறக்காதுன்னு சொல்லிட்டாங்க!”

இருவர் ஜாகத்தையும் அவன் நீட்டினான்!

“உன்னோட ஜாதகத்தை இனிமே நான் பார்க்கக் கூடாது! அந்தப் பொண்ணோட ஜாதகத்தைப் பார்க்க வேண்டிய நேரமும் இப்ப வரலை! ஆனா, இத பாருப்பா, இந்த பொண்ணுக்கு எந்த கர்பப் பைக் கோளாறும் கிடையாது, நிச்சயமாகக் குழந்தை பொறக்கும்! ஆனால் இந்தப் பரிகாரங்களை எல்லாம் செஞ்சாகணும். இப்பனாச்சும் பரிகாரத்தை முழுசாச் செய்வியா, இல்லையான்னு முடிவு எடுதுக்க!”

அவன் நிச்சயமாக்ச் செய்வதாக வாக்களித்ததால், பெரியவர் மேலும், சில பரிகாரங்களைச் சொன்னார். சிறுவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது! இந்த ஆளிடம் அவருக்கு ஏனிந்தக் கரிசனம்!

“இத பாருப்பா தாமு! இதுக்கு மேலேயும் நிறைப் பரிகாரங்கள் இருக்கு! இதை எல்லாம் முடிச்சாத்தான், அடுத்ததை நாங்க எடுத்துச் சொல்வோம்!”

ஆனால் டீக்கடைக்காரர் தாமுவோ, இதனை எல்லாம் எடுத்துக் கொண்டு, இன்னொரு பெரிய ஜோதிடரிடம் போனார்.

இல்லையென்று இல்லையா? இருக்கா?

அந்த ஜோதிடரோ, “தாமு! பேசாம இன்னொரு கல்யாணம் பண்ணிக்க! இந்தப் பொண்ணுக்குக் குழந்தை கிடையாதுன்னு ஜாதகத்துல பொடரில அடிச்ச மாதிரிச் சொல்லுதே! அதுதான் டாக்டருங்களே, இந்தப் பொண்ணுக்கு வயித்துல கர்பம் தங்காதுன்னு சொல்லிட்டாங்களே!” என்று அழுத்தமாகவே கூறிட, அந்த டீக்கடைக்காரர் வேறு பல டாக்டர்களிடமும் செல்ல, பெண்ணிற்கு குழந்தை பிறக்கவே வாய்ப்பில்லை என்று உறுதியாகச் சொல்லி விட்டார்கள்.

உடனே, தாமு எவருக்கும் தெரியாமல் இன்னொரு பெண்ணை மணப்பதற்காக அந்தக் குடும்பத்திடம் பேசி அடுத்தக் திருமணமும் செய்து கொண்டு விட்டான். அத்தனையும் பத்தே நாளில் முடிந்து விட்டது,

ஆனால் இரண்டாம் கல்யாணம் ஆன இரண்டாம் நாளிலேயே, முதல் மனைவி கர்பம் தரித்திருக்கிறாள் என்ற செய்தி, வந்ததும், தாமு ஆடிப் போய்விட்டான்!

இதற்குள் முதல் மனைவி இரண்டாம் மனைவிக் குடும்பத்தினர்கள் நடந்ததை அறிந்து, சண்டை போட்டுக் கொண்டு, வீதிச் சண்டை, வெறிச் சண்டை ஆகி, போஸீஸ் கேஸ் ஆகி,  கோர்ட் கேஸ் ஆக முற்றிப் போய் தாமுவிற்குச் சிறைத் தண்டனை எனவும் ஆகி விட்டது எல்லாம் ஒரே வாரத்தில் நடந்த கூத்து!

சொன்னாற் சொன்னதே!

இதெல்லாம் நடப்பதற்கு முன்னும் நடந்த பின்னும் அவ்வப்போது தாமு பெரியவரைப் பார்க்கப் பெரு முயற்சி செய்தான்.

பெரியவரோ சிறுவன் மூலமாக, “சொன்ன பரிகாரங்களைச் செய்திருந்தால் பலத்த வினைகள் வந்திருக்காது, கர்ம வினைகளின் தன்மைகளைத் தணித்திருக்கலாம்! இதற்காகவே முன் கூட்டியே எச்சரித்தோம்! நாங்கள் ஒரு கைகாட்டியே!” என்று மீண்டும் சொல்லி அனுப்பி விட்டார்.

சிறையிலிருந்து வெளி வந்த பின் தாமு நேரே பெரியவரிடம் வந்து சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து நமஸ்காரம் செய்தான்.

பெரியவரும், “இதோ பாருடா தாமு! இனி இந்த ஊரு உனக்கு வேணாம்! இந்தா பணம்! இதை வச்சு ஒரு டீக்கடை வச்சுக்க, தெற்கு தமிழ்நாட்டுல, சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் இருக்கற ஊராப் பாத்து நல்லபடியா ஒரு டீக்கடை வச்சுப் பிழைச்சுக்கோ போ! ஆனா, நான் இதுக்கு முறைப்படி சொன்ன பரிகாரம் எல்லாத்தையும் திரும்பிச் செஞ்சுதான் ஆகணும்! எல்லாத்தையும் செஞ்ச பிறகு எத்தனை வருஷம் ஆனாலும் பரவாயில்லை, அப்புறம் என்னை வந்து பாரு!” என்று சொல்லி வழியனுப்பினார்!

தாமுவும் தெற்கு தமிழ்நாட்டுப் பகுதியில், ஒரு கிராமத்திற்குப் போய்ப் புது மனிதனாய் வாழத் தொடங்கினான். தினமும், 100 பேருக்கு, டீ, காபி, பால் தானம் தொடங்கி, படிப்படியாய் வளர்ச்சி பெற்றுப் பெரியவர் சொல்லிய அனைத்துப் பரிகாரங்களும் செய்தான். இறுதியில் பெரியவரையும் வந்து பார்த்தான்!

மூன்றில் முடியுமே!

பெரியவரோ, ஒரே வரியில், “அடுத்த முறை மனைவியோடு வந்து பார்! விதிப்படி, மூணாவது கல்யாணம்!” என்று கூறி விட்டுப் பெரியவர் மறைந்து விட்டார்.

தாமு வாழ்ந்த ஊரில் உள்ளூர்ப் பெரியவர் ஒருவரின் நட்பு அவனுக்குக் கிடைத்தது. தாமுவின் உபகார குணம் ஊர் மக்களைக் கவர்ந்தது, அந்தப் பெரியவர் தன் ஊனமுற்ற பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

தாமுவும் தம்பதி சகிதமாய்ப் பெரியவரை வந்து பார்த்தார்.

“இத பாரு நயினா, உன்னோட விதியை எங்களால மாத்த முடியலை! மாத்தவும் நாங்க முயற்சிக்கலை! ஆனா, பரிகாரங்கள் விதியின் கடுமையைத் தணிக்கும். உன்னோட வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு பாடமா இருக்கட்டும்! தான, தர்மத்தை மட்டும் ஒருபோதும் விட்டுடாதே!” என்றார்.

சிறுவனுக்கு ஒன்றுமே புரியவில்லை!

துவாதச துர்க்கா வழிபாடு

பார்த்திப ஆண்டிற்கான துவாதச துர்க்கா நவராத்திரி வழிபாடு!

ஒவ்வொரு தமிழ் ஆண்டிலும், புரட்டாசி மாத மாளய பட்ச அமாவாசை முடிந்த உடன், பிரதமைத் திதி முதல் நவராத்திரிப் பண்டிகை தொடங்குகின்றது என நாமறிவோம்.

ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கான நவராத்திரிப் பண்டிகையும் விசேஷமான பலன்களைத் தாங்கி வருகின்றன. மானுட வடிவில் பூவுலகில், குறித்த பல சிவத் திருத்தலங்களில், ஒன்பது ராத்திரிகளில் ஆதிபராசக்தியே விசேஷமான பூஜைகளை ஆற்றும் காலமே நவராத்திரியாகும்.

பெரிய வீடுகளை வைத்திருப்போர், நிறைய பொம்மைகளை வைத்துக் கொலு வைத்துப் பாமரரும் கொலுக் காட்சியைத் தரிசிக்கும்படி அறப்பணிகளை ஆற்றுவது சமுதாயத்தில் ஜாதி, சமய, மத, குலச் சண்டைகள் தணிந்து ஜாதி வேறுபாடுகள் இன்றிச் சாந்தம் நிலவப் பெரிதும் உதவிடும் அன்றோ!

கிளியைத் தாங்கும் கோலத்தவள் பூஜை!

நடப்பு பார்த்திப ஆண்டு, நவராத்திரிக்கு, “விமல வேதகீர சாரதாம்பா நவராத்திரி” என்று பெயர். சிருங்கேரியில் சாரதாம்பாள் வேதசக்திகளின் வடிவமான் கிளியைத் தாங்கி அருள்கின்றாள் அல்லவா!

ஸ்ரீதுங்கஸ்தனாம்பிகை காஞ்சனாகரம்

அம்பாள் கிளியைத் தாங்கும் தரிசனக் காட்சி இவ்வாண்டில் சிறப்பான நல்வரங்களையும், பலாபலன்களையும் அளிப்பதாகும். மயிலாடுதுறை – பூம்புகார் மார்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள “கஞ்சனாகரம்” சிவத்தலத்தில் ‘துங்கஸ்தனாம்பிகை’ தேவி இடத் தோளில் கிளியைத் தாங்கி அருளும் கோலத்தவள் ஆவாள். பார்த்திப ஆண்டு நவராத்திரியில் அனைத்துப் பெண்களும் கண்டிப்பாகத் தரிசிக்க வேண்டிய தேவி!

ஒன்பது ராத்திரிப் பூஜைகள் என்றாலும், திதிக் கணக்கில் இது எட்டு நாளாகி, ஒரே நாளில் இரு நவராத்திரித் திதிகளாய் அமையும். இதனைச் சமனப்படுத்தவே, பல ஆண்டுகளுக்கு ஒரு முறை, லீப் ஆண்டு போல, துவாதச துர்காம்பிகை வழிபாடாக, 12 நாட்கள் கூடியதாக நவராத்திரி வழிபாடுகள் அமையும். இது அதிர்ஷ்டவசமாக தற்போதையப் பார்த்திப ஆண்டில் ‘துவாதச துர்க்காம்பிகை நவராத்திரியாக’ மலர்கின்றது. வாழ்வில் அபூர்வமாக அமைவது நன்கு பயன்படுத்திக் கொள்க!

எப்போதும் சிவச் சிந்தனையில், துய்க்கும் சித்தர்கள், அம்பாள் உபாசனையில் வல்லவர்கள் ஆவர். நவராத்திரிப் பண்டிகைக் காலத்தில் அம்பிகையே மானுட வடிவில் பூவுலகில் பூஜைகளுக்காக வருகை புரிவதால், இத்தருணத்தில் அம்பாள் உபாசனை நன்கு கனிந்து அருளும்.

அகஸ்திய மஹரிஷி, ஸ்ரீலலிதா பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீவித்யா உபாசனைகளிலும், துர்வாச மாமுனி ஸ்ரீராமர் அவதாரத்திற்கு முந்தைய திரேதா யுகத்தில் இருந்தே துர்க்கா உபாசனையிலும், கருவூர்ச் சித்தர் வராஹி உபாசனையிலும் வல்லவர்கள் ஆவர்.

‘பைரவி உபாசனை’ மிக மிகக் கடுமையானது, பைரவ மஹிரிஷியும், பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளும் இதில் வல்லவர்கள் ஆவர். இவ்வாறு ஸ்ரீவித்யா மற்றும் அம்பாள் உபாசனைச் சித்தர்கள், பூவுலகில் பிரவேசித்து, குறித்த அம்பாள் பூஜை நிகழும் தலங்களில் பிரசன்னமாகி வழிபட்டு நவராத்திரி உற்சவக் காலத்தில், தினமும் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர்.

எனவே மேஷம் முதல் மீனம் வரை, ஒவ்வொரு ராசிக்காரர்களும் தம் ராசிக்குரிய துர்க்கையினை பார்த்திப ஆண்டில் நன்கு தேவியைப் பூஜித்திட வேண்டும்.

ஒரு குடும்பத்தில் பல ராசிகளைச் சேர்ந்தவர்கள் இருப்பர் ஆதலின், அனைவருமே இதில் பங்கேற்றல் குடும்பத்திற்கே அம்பாளின் அனுகிரகங்களை நன்கு வர்ஷிக்கும். உதாரணமாக, மேஷ ராசியில் பிறந்தோர், இந்த சாரதா நவராத்திரியில், கதிர்மங்கள துர்க்கையை வழிபடுதல் வேண்டும்.

இங்கு ஒவ்வொரு துர்க்கையையும் எந்தெந்தத் துறையினர் தம் வாழ்நாள் முழுதும் வழிபட வேண்டும் என்பது இங்கு ஓரளவு விளக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இந்த பார்த்திப ஆண்டில் எந்த ராசியினர் எந்தத் துர்க்கையை விசேஷமாக வழிபட வேண்டும் என்பதும் குறிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ராசிக்காரரும் தாம் எந்தத் துறையில் இருந்தாலும், அந்தந்த துர்க்கையை வழிபடும் துறைகளில் உள்ளவர்களின் நலவளத்திற்காகத் தியாகமயமாகப் பூஜித்தல் வேண்டும் என்ற சுயநலமற்ற ஆன்ம நிலையைப் பெற இந்த பார்த்திப ஆண்டு துவாதசாம்ச துர்க்கா வழிபாடு நன்கு அமைந்து வருகிறது. இதற்கான கூடுதல் விளக்கங்களை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்திராலயங்களில் இருந்து பெற்றிடுக!

மேஷ ராசிக்காரர்களுக்கான ஸ்ரீகதிர்மங்கள துர்க்கை வழிபாடு

ஸ்ரீவனதுர்கை கிள்ளுக்கோட்டை திருச்சி

கதிர் மங்கள துர்க்கை, வன துர்க்கை, சாம்பவி துர்க்கை, சாகம்பரீ துர்க்கை என்று போற்றப் பெறும் துர்க்கை ஆவாள். கும்பகோணம் கஞ்சனூர் அருகில் உள்ள கதிராமங்கலத்திலும் (துர்வாசர் முதன் முதலில் துர்க்கா தரிசனம் பெற்ற தலம்).

சென்னை – கோயம்பேடு ஸ்ரீகுறுங்காளீஸ்வரர் ஆலயம் அருகி உள்ள ஸ்ரீவைகுண்டப் பெருமாள் ஆலயத்திற்குப் பின்புறமும் வன துர்க்கைக்கான ஆலயம் உள்ளது. வேறு பல இடங்களிலும் உண்டு.

சாரதா நவராத்திரியின் கதிர்மங்கள துர்க்கைக்கு கம்பு, நெல், கோதுமை போன்று பச்சைக் கதிர்களாலும் காய்கறிகள், பழங்களாலும் அலங்கரித்து இங்கு அளிக்கப்பட்டுள்ள துதிகளை ஓதியும், செம்பருத்திப் பூவால் அலங்கரித்தும், சிகப்பு நிறத்தினாலான மஞ்சள் பார்டர், மஞ்சள் நிறப் பூக்கள் உடைய வஸ்திரம் சார்த்தியும், தக்காளிச் சாதம் படைத்து அன்னதானம் அளித்தும் இந்நாளில் பூஜித்திட வேண்டும்.

விவசாயம், நீர், நீர்சக்தித் துறை, நிலம் வாங்குதல், வீடு கட்டி கிரகப் பிரவேசத்தை நாடி நிற்போர், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கட்டிடத் துறையினர், கட்டிடத் தொழிலாளர்கள், சிவில் என்ஜினியர், அடுக்குமாடிக் கட்டிடங்கள், தோட்டத் துறையினர், B.E (Architecture) போன்றோர் வழிபட வேண்டிய துர்க்கை.

கதிர் வேய்ந்த மங்கள சக்திகளை, அதாவது நன்கு முற்றிக் கனிந்த மங்களத்தையே அனுகிரகமாக அளிக்கின்ற துர்க்கை, பகலிலும், இரவில் நன்கு விஸ்தாரமாகவும் பூஜித்து, பல காய்கறிகள் கலந்த உணவு படைத்துத் தானமளித்து, ஆடுகளுக்குத் தான்யக் கதிர்களையும், பசுவிற்குப் புல், குதிரைகளுக்குக் கொள், யானைக்குக் கம்புச் சோற்றுக் கவளம் அளித்து வழிபடுதல் விசேஷமானதாகும். பிராணிகளுக்கு ஏற்ப உணவளிக்கவும்.

மேஷ ராசிக்காரர்கள் பார்த்திப ஆண்டு நவராத்திரி முதல் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை ஓதி வழிபட வேண்டிய துர்க்கைத் துதி!

யே வைபரசிதெ – புனருத்திவ – கம்பமுக்யைர்
துர்ப்பிக்ஷ் – கோர – சமாயசை காரிதாசூ
ஆவுஷ்க்ருதாஸ - த்ரிஜகதர்த்திஷுருப – பேதாஸ்
ஸ்தரம்பிகா சமபிரக்ஷது மாம் விபத்ப்ய:

ரிஷப ராசிக்காரர்களுக்கான ஸ்ரீஅபயாட்சாம்பிகை துர்க்கை பூஜை!

ஸ்ரீஅபயாட்சாம்பிகை துர்க்கையே சூலினி துர்க்கை என்றும் போற்றப்படும் துர்க்கை!

ராணுவம், கப்பற் படை, விமானப் படை, ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள், கொல்லம் பட்டறை, இரும்புத் தொழில் துறையினர் வழிபட வேண்டிய துர்க்கை ஆவாள்.

மஞ்சள் நிறப் புடவையில் சிகப்பு மலர்கள், சிகப்பு பார்டர் கூடிய வஸ்திரம் சார்த்தி, ஷண்பகப் புஷ்பம் சார்த்தி, தேங்காய் சாதம் படைத்து வழிபடுதல் வேண்டும்.

ஸ்ரீசூலினி துர்கை சந்திரசேகரபுரம்

ஏழைக் கன்னிப் பெண்களுக்கு ஆடைகளை, வளையல், கண் மை, 12/24/36 வகை, மங்களப் பொருட்களைத் தானம் அளித்தல் நலம் தரும். கும்பகோணம் அருகே சந்திரசேகரபுரம் தலத்தில் உள்ள ஸ்ரீசூலினி துர்க்கை, ஸ்ரீஅபயாட்சாம்பிகை துர்க்கை அம்சங்களை அருள்கின்றாள்!

ஸ்ரீஅபயாட்சாம்பிகைத் துர்க்கையை வழிபடுகையில் சூலத்திற்கும் மாலை, வஸ்திரம் சார்த்தி வழிபடுதல் வேண்டும். ஏனெனில் சூலம் மூலமாகவே முதலில் ஸ்ரீஅபயாட்சாம்பிகை தேவியின் அருளை நாம் கலியுகத்தில் பெறுதல் கை கூடும்.

அக்னி சக்திகள் பூரித்துப் பொங்கும் மூர்த்தியாதலின், சூலினி துர்க்கையை எவரும் தொட்டுப் பூஜித்தல் கூடாது. ஒரு மரக் கோலால், குறிப்பாக, சந்தனக் கோலால் வஸ்திரம், மாலை சார்த்திப் பூஜித்தலே விசேஷமானது.

எதிரிகளால் வதைபடுபவர்கள், துரோகிகளின் ஊடே வாழ்பவர்கள், பணி புரிபவர்கள். பகைமைத் தீய சக்திகளின் இடையே வாழ வேண்டி இருப்பவர்களைக் காக்கும் அற்புத சக்திகள் வாய்ந்த துர்க்கை!

ஆனால், தானே பிறருக்குத் தீமைகள், துரோகம் செய்து விட்டுப் பிறரை பகைவர் என்று சொல்லும் போலித்தனம் இங்கு செல்லுபடி ஆகாது. பிறருக்குத் தீமைகளையும், துரோகத்தையும் செய்பவர்கள், முதலில் தம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தக்க நிவாரணம் தந்தால்தான் எந்தப் பரிகாரமும், வழிபாடும் பலனளிக்கும். ஒரு புறம் வழிபாடு, மறுபுறம் அக்கிரமங்கள் தொடர்ந்தால் தண்டனைகள் பன்மடங்காகும்.

எனவே நீங்களே ஒருவருக்குத் துரோகம் செய்துவிட்டு அவர் உங்களுக்குப் பகைவராக இருக்கிறார் என்று சொல்லுதல் அதர்மமானதே! உண்மைக்குப் புறம்பானதே! இதை உணர வைத்துத் திருத்துவதும் ஸ்ரீஅபயாட்சாம்பிகை வழிபாடாகும். ஒருவர் மனம் திருந்தி, தம்மை நன்கு திருத்திக் கொள்ள உதவும் துர்க்கை வழிபாடு இதுவேயாம்.

ரிஷப ராசிக்காரர்கள் பார்த்திப ஆண்டு நவராத்திரி முதல் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை ஓதி வழிபட வேண்டிய துர்க்கைத் துதி!

அப்யர்த்தனேன சரஸீருஹ சம்பவஸ்ய
த்யக்த்தேவாதிதா பகவ தக்ஷி – பிதான் –லீலாம்
விச்வேச்வரீ விபதபாகமனே புரஸ்தான்
மாதா மாமஸ்து மதுகடைபயோர் – நிஹந்த்ரீ:

மிதுன ராசிக்காரர்களுக்கான லக்ஷ்மண சம்ரட்சக துர்க்கை

ஸ்ரீலக்ஷ்மண சம்ரட்சக துர்க்கையே, ஸ்ரீலவண துர்க்கை என்றும் போற்றப்படுபவள்!

ஸ்ரீராமர், லட்சுமண மூர்த்திகளும் சிவ பூஜைகளையும், துர்க்கை பூஜைகளையும் ஆற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  லவணாசுர வதத்தின் போது லக்குமண சுவாமிக்கு உதவிய துர்க்கை தேவி.

ஸ்ரீராமரும், லட்சுமண மூர்த்தியும், துர்க்கை தேவி தரிசனம் பெற்றதோடு, துர்க்கையின் திரண்ட சக்திகளையே ஸ்ரீதுர்க்கா பராசக்தித் தரிசனமாகவும் பெற்றார்கள். மருத்துவத் துறை, கடல் பொருட்கள், மருத்துவ துறையை ஒட்டிய துறைகளான மருந்துகள், ரத்தப் பரிசோதனைகள், உடல் பரிசோதனை, எக்ஸ்ரே, ஆயுர்வேதம், சித்த வைத்யத் துறையை சார்ந்தவர்கள் வழிபட வேண்டிய துர்க்கை!

தேங்காய் சாதம் நைவேத்யம் மிகவும் விசேஷமானது. நீல நிற ஆடைகளைச் சார்த்தி, சம்பங்கிப் பூ மாலையை அணிவித்து வழிபடுதல் நன்று.

மிதுன ராசிக்காரர்கள் பார்த்திப ஆண்டு நவராத்திரி முதல் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை ஓதி வழிபட வேண்டிய துர்க்கைத் துதி!

காந்தாரமத்ய – த்ருடலக்ன தயா வசன்னா
மக்னாச்ச வாரிதிஜலே ரிபுபிச்ச ருத்தா:
யஸ்யா: ப்ரபத்ய சரணௌ விபதஸ்தரந்தி
சா மே சதாஸ்து ஹ்ருதி சர்வஜகத் – சவீத்ரீ

கடக ராசிக்காரர்களுக்கான கங்கா சங்கம துர்க்கை

“ஜாதவேதோ துர்க்கை” என்றும் கங்கா சங்கமத் துர்க்கையை குறிப்பிடுவார்கள், கங்கை என்றால் ஏதோ வட பாரதத்தில் மட்டுமே ஓடுகின்ற புனித நதி என்று எண்ணாதீர்கள். பரம்பொருளாம் சிவபெருமான் சிரசில் இருந்து பொழிவதெனில் இது பாரதத்தில் மட்டும்தானா பொங்கிப் பாயும், சற்றே சிந்தித்துப் பாருங்கள்! கங்கை பிரபஞ்சத்திற்கே உரியதன்றோ!

கங்கை நீரோட்டமானது பாரதம் மட்டுமல்லாது உலகெங்கும் உண்டு. ‘கங்காள நாதர், கங்காதரர், கங்காதீஸ்வரர்’ என்ற பெயரில் இறைவன் அருளும் தலங்கள் (தக்கோலம், சென்னை – புரசைவாக்கம்) யாவும் கங்கை நீரோட்டம் உடையவையே, கங்கா தேவி எழுந்தருளியுள்ள தலங்களும் கங்கா சங்கம துர்க்கை (ஜாதவேதோ துர்க்கை) அருளும் தலமே!

மேலும், சிவகங்கைத் தீர்த்தம், நூபுர கங்கை, பால கங்கை போன்ற கங்கா நாமத் தீர்த்தத் தலங்களும் (திருஅண்ணாமலை, பழமுதிர்ச் சோலை, லால்குடி) கங்கை நீரோட்ட சக்திகளை கொண்டவையே ஆதலின், இத்தகைய தலங்களில் உள்ள துர்க்கை தேவி, கங்கா சங்கம துர்க்கை தேவி அம்சங்களைப் பூண்டு அருள்கின்றாள்.

பொதுப்பணித் துறை, நீர்த் துறை, கனிமங்கள், தண்ணீர் டாங்குகள், நீர் சேமிப்புக் கிடங்கு, ஏரி, ஆறு, குளத்துறைகள், கடல் நீர்த் துறையில் இருப்பவர்கள் கங்கா சங்கம துர்க்கை (ஜாதவேதோ துர்க்கை) தேவியை வழிபடுதல் வேண்டும்.

ஆரஞ்சு வண்ண ஆடையில் பச்சைப் பூக்கள் பச்சை பார்டர் கூடிய வஸ்திரத்தைச் சார்த்தி வழிபடுதல் நன்று. சேமியாப் பாயசம் படையல் மிகவும் விசேஷமானது. வெள்ளை நிறச் செம்பருத்திப் பூக்கள், மாலை சார்த்தி, அர்ச்சித்து வழிபட வேண்டும்.

கடக ராசிக்காரர்கள் பார்த்திப ஆண்டு நவராத்திரி முதல் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை ஓதி வழிபட வேண்டிய துர்க்கைத் துதி!

யத்பூஜன – ஸ்துதி – நமஸ்க்ருதிபர் பவந்தி
ப்ரீதா: பிதாமஹ – ரமேச – ஹராஸ்த்ர யோபி:
தோஷாமபி ஸ்வககுணைர் – தததீம் வபூம்ஷி
தாமீச்வரஸ்ரய தருணீம் சரணம் ப்ரபத்யே

சிம்ம ராசிக்காரர்களுக்கான தட்சயக்ஞ துர்க்கை (சாந்தி துர்க்கை)

“தட்சயக்ஞ துர்க்கை” என்றதும் தட்சன் நடத்திய வேள்வி நினைவுக்கு வரும். சிவனுக்கு ஆஹுதி தர மறுத்த தட்சனுடைய வேள்வியில் சூரிய, சந்திர, முப்பத்து முக்கோடி தேவர்கள் பங்கு பெற்றும், சிவபெருமானையே தட்சன் எதிர்க்கத் துணிந்த போது, சிவாம்சமாக வெளிப்போந்த வீரபத்ர சுவாமிக்குத் துணையாக நின்றவளே தட்சயக்ஞ துர்க்கை தேவி.

பகைமையை வென்று பகைமையை முற்றிலுமாகக் களைபவள். எப்போதும் வாழ்வில் கூட இருந்து கொல்லும் பகைமை வராது காப்பவள். பைனான்ஸ், கடன், சிட் பண்ட், வங்கித் துறை சார்ந்தவர்கள் வழிபட வேண்டிய துர்க்கை.

கடன் மற்றும் நோய்த் துன்பங்கள், பில்லி, ஏவல், சூன்யத் தொல்லைகளில் இருந்து காப்பவள்.

“தட்சயக்ஞ துர்க்கைக்கு” வெளிர் சிகப்பு நிற வஸ்திரத்தைச் சார்த்தி வழிபடுதல் விசேஷமானது. வில்வ மாலை சார்த்தி பூரணக் கொழுக்கட்டை படைத்து வழிபடுதல் சிறப்புடையதாகும்.

தட்சன் வழிபட்ட தலங்களும் (நேமம்), தட்சன் சாபநிவர்த்தி பெற்ற தலங்களும், 58 சக்திக் தலங்களும் தட்சயக்ஞ துர்க்கைத் தலங்களாகும். ஸ்ரீவீரபத்ர சுவாமியின் மஹிமையைப் பறை சாற்றும் தலங்களும், வீரபத்ரர் எழுந்தருளும் தலங்களும், தட்சயக்ஞ துர்க்கைத் தலங்களாகும்.

சிம்ம ராசிக்காரர்கள் பார்த்திப ஆண்டு நவராத்திரி முதல் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை ஓதி வழிபட வேண்டிய துர்க்கைத் துதி!

ப்ராங் நிர்ஜரேஷு நிஹிதைர் – நிஜசக்தி லேகை
ரேகீபவத்பி – ருதிதாகில – லோக – குப்தயை
சம்பன்ன சஸ்த்ர – நிகரா ச ததாயு தஸ்தைர்
மாதா ம மாஸ்து மஹிஷாந் நகரீ புரஸ்தாத்

கன்னி ராசிக்காரர்களுக்கான சேனாம்பிகை துர்க்கை

‘சேனாம்பிகை துர்க்கையே, ஜ்வாலா துர்க்கை’ என்றும் போற்றப்படுகின்றாள்!

பண்டாசுரனை வதம் செய்கையில், ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் சேனாதிபதியாகத் திகழ்ந்தவள், நெருப்பைக் கக்கி அசுர சக்திகளை அழித்து நல்வரங்களை காத்தருள்பவள். அம்பிகையாம் துர்க்கை கக்கும் நெருப்பானது சீர்திருத்த முடியாத ஆணவப் பகைமையை அழிக்கும், சேனாம்பிகை துர்க்கை வழிபாடு தீயவர்களைத் திருத்தும், எதிரிகளை அடையாளம் காட்டி, எச்சரித்துப் பகைமை சக்திகளைக் களைய உதவும். கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகளை அடையாளம் காட்டி, பக்தர்களை ரட்சிக்கும்.

விளக்கு ஒளி நிறத்தில், அதாவது தீப மஞ்சள் நிற வஸ்திரத்தைத் தரிசிப்பதில் ப்ரீதி அடைபவள். வாசனை நிறைந்த ரோஜாப் பூக்களை சார்த்துதல் ஏற்றது. முந்திரி வெண்பொங்கல் படையல் மிகவும் விசேஷமானது.

தீ பயன்படும் துறைகள், நெருப்பு சார்ந்த பாய்லர், தீயணைப்பு, வெல்டிங், கொல்லம் பட்டறைத் துறை, தீப்பெட்டி, casting, இரும்புத் தொழில் போன்ற துறையினர் வழிபட வேண்டிய துர்க்கை தேவி.

ஸ்ரீஅக்னீஸ்வரர், தீயாடியப்பர் போன்ற அக்னி சம்பந்தமான பெயர்களுடன் அருளும் இறை மூர்த்திகள் உள்ள தல துர்க்கை மூர்த்தியான ‘சேனாம்பிகை துர்க்கையே, ஜ்வாலா துர்க்கை அம்சங்களைப் பூண்டவள் ஆவாள்.

கன்னி ராசிக்காரர்கள் பார்த்திப ஆண்டு நவராத்திரி முதல் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை ஓதி வழிபட வேண்டிய துர்க்கைத் துதி!

ஏதத்சரித்ர – மசிலம் – லிகிதம் ஹி யஸ்யாஸ்
ஸம்பூஜிதம் ஸதன ஏவ நிலேசிதம் வா
துர்க்கஞ்ச தாரயதி துஸ்தர – மப்ய சேஷம்
ச்ரேய: ப்ராயச்சதி ஸ்ர்வமுமாம் பஜே தாம்

துலா ராசிக்காரர்களுக்கான மோகன துர்க்கை

மோகன துர்க்கையே பாற்கடல் அமுதமோதகப் படலத்தில் மோஹினி விஷ்ணுவிற்குத் துணையாக நின்றவள். நீதி, நியாயம், தர்மத்திற்கு ஏற்றபடி அனுகிரகத்தை அருள்பவள்.

அமிர்தத்தைப் பெருமாள் தேவர்களுக்கு ஒருதலை பட்சமாக அளித்தார் என எண்ணாதீர்கள். இவ்வாறு பிறர் சொல்வாராகில் நீங்களே நன்கு ஆத்மவிசாரம் செய்து உங்களுக்குள்ளேயே நல்ல ஆத்மார்த்தமான விடைகளைப் பெற்றுப் பிறருக்கு எடுத்துரையுங்கள்.

அசுரர்கள் அமிர்தம் உண்டிடில் சாகாவரம் பெற்றுத் தெய்வ மூர்த்திகளையே எதிர்த்து, அக்கிரமச் செயல்களைப் புரிவார்கள் அன்றோ! தேவர்களே நன்னெறிகளாகிய நற்காரியங்களை நிகழ்த்துபவர்கள். அசுரர்கள் கேட்டு அமிர்தத்தைப் பெற்றிருந்தாலும், அசுரர்கள் திருந்தி வாழ்ந்திருக்க மாட்டார்கள். அமிர்த சக்திகளும் அவர்களிடம் விரயமாகி இருக்கும். எனவே மோஹினி விஷ்ணுவும், மோகன துர்க்கையும் ஆற்றிய அமிர்தப் பங்கீடு சரியானதே.

நடனத்துறை, இசைத்துறை, போட்டோ கலைத்துறை, முடி திருத்துபவர்கள், சிகை அலங்காரத் துறை, காஸ்மெடிக்ஸ், வாசனை திரவியங்கள், சட்டம், நீதி போன்ற துறையில் உள்ளவர்கள் வழிபட வேண்டிய துர்க்கை.

நம்பிக்கைத் துரோகிகளையும், குருவிற்குத் துரோகம் செய்தவர்களை தண்டித்து வதைப்பவளே மோகன துர்க்கை, வதைத்தல் என்றால், உடலைக் கூறு போட்டு வருத்தி இம்சித்தல் என மனிதப் பொருளைக் கொள்தல் கூடாது. பெறுதற்கரிய மனிதப் பிறவியைப் பெற்று, நம்பிக்கைத் துரோகிகளாக, நயவஞ்சகர்களாக, குரு துரோகிகளாக வாழ்பவர்களை என்னவென்பது? இறைத் தூதுவராம் சத்குருவிற்கே துரோகம் செய்பவர்களை என்ன தண்டித்தாலும் போதுமானதாகாதே! ஏனெனில் சத்குருவிற்குத் துரோகம் செய்பவர்களை கடவுளே மன்னிப்பது கிடையாதே!

எனவே, இறைமூர்த்திகளால் வதம் செய்யப்படுதல் எனில், அசுர சக்திகள் முழுதுமாக அழியப்படுவதாகும். அரக்க சக்திகள் முற்றிலுமாகக் களையப் பெறுதலாகும்.. இதன் மூலமாகவே சமுதாயம் சாந்தம் பெறும்.

மேலும் கலியுகத்திலும் அசுரர்கள் உண்டு. வெளி வேஷத்தில் நல்லவர்களாகவும், மனதால் முறையற்ற காம எண்ணங்களைப் பெருக்கியும், உண்மைகளை மறைத்தும், பிறருக்கு நயவஞ்சகம், துரோகம், கெடுதல் புரியும் கயவர்களும் கலியில் உண்டே!

எனவே, கலியுகத்தில் உலவும் அரக்க சக்திகளை வென்றிட மோகன துர்க்கை வழிபாடு மிக, மிகத் தேவையே! மோகன துர்க்கைக்கு சுத்தமான மஞ்சள் நிற ஆடைகளைச் சார்த்தி வழிபடுதல் வேண்டும். ராமபாணம் எனப்படும் பிச்சிப் பூ சார்த்தி வழிபடுதல் மிகவும் சிறப்புடையதாகும்.

துலா ராசிக்காரர்கள் பார்த்திப ஆண்டு நவராத்திரி முதல் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை ஓதி வழிபட வேண்டிய துர்க்கைத் துதி!

விச்வேச்வரீதி மஹிஷாந்தகரீதி யன்யா:
நாராயணி த்யபி நாமபிரங்கிதானி
சுக்கதானி பங்கஜபுவாச சுரர்ஷிபச்ச
த்ருஷ்டாணி பவாக மூகைச்ச சிவாம்பஜேதாம்

விருச்சிக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்ரீதிருஷ்டி துர்க்கை

திருஷ்டி என்றாலே ‘திருஷ்டி தோஷம்’ என எண்ணி விடாதீர்கள். ‘திருஷ்டி’ என்றால் ‘பார்வை’ என்று பொருள். எனவே திருஷ்டி என்றால் தவறாக நடைமுறையில் இருப்பது போல கண் திருஷ்டி பொருள் கொள்ளக் கூடாது. இதே போலவே, கர்மா, நித்திய கர்மா என்றால் செயல், காரியம், பணி என்ரு பொருளாகும். ஆனால் ‘கர்மா, கர்ம வினை’ என்றாலேயே சொல் வழக்கில் தீயதாகப் பொருள் கொள்கின்றார்கள்.

கர்மாவின் அதாவது செய்யும் செயலைப் பொறுத்தும் அதன் விளைவுகளைப் பொறுத்தும்தான் கர்ம வினைகளின் தன்மைகள் நல்லதா, தீயதா என உரைக்க முடியும். இதைப் போலவே திருஷ்டி என்பது பார்வையே! இதில் நல்ல நோக்கோடு பார்த்தல் நல்ல திருஷ்டி நல்லோரைப் பார்த்து உங்கள் திருஷ்டி (பார்வை) பட்டாலே போதும், நாங்கள் புண்ணியவான்கள் ஆவோம்! என்று சொல்வார்கள் அல்லவா..!

எனவே, தீய பார்வை தீய திருஷ்டி ஆகும். இதன் ஒரு வகையே கண் திருஷ்டி , திருஷ்டி துர்க்கை திருஷ்டி வகைத் தோஷங்களை மட்டுமல்லாது அனைத்து வகைத் தோஷங்களையும் நீக்குபவள். பில்லி, சூன்யம், ஏவல் தொல்லைகளை அடியோடு போக்குபவள்.

ருத்ராக்னி தேவதைகளின் குருவாக திருஷ்டி துர்க்கை பொலிவதால், மிகவும் விசேஷமாக வழிபடப் பெற வேண்டிய துர்க்கை!

குடும்பத்தைப் பிரித்தவர்கள், கோள் மூட்டிப் பிறருக்குத் தீங்கிழைத்தவர்கள். பிறருடைய பதவி உயர்வைத் தடுத்தவர்கள். பிறருடைய பதவியை, சொத்தை, வாய்ப்பைப் பறித்தவர்கள், பிறருடைய நல்வாழ்வை கெடுத்தவர்கள் – போன்றோர் திருந்தி வாழ வழி வகுக்கும் துர்க்கையாவாள்.

கருஞ்சிகப்பு நிற ஆடைகளைச் சார்த்தி, பவள மல்லி மாலைகளை அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் படையல் இடுவது மிகவும் விசேஷமானதாகும்.

விருச்சிக ராசிக்காரர்கள் பார்த்திப ஆண்டு நவராத்திரி முதல் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை ஓதி வழிபட வேண்டிய துர்க்கைத் துதி!

மாஹிஷ்மதீ தனுபவஞ்ச ருருஞ்ச ஹந்து
மாவிஷ்க்ருதைர் – நிஜரஸா – தவதார – பேதை:
அஷ்டா தசா ஹத – நவாஹத – கோடிஸங்க்யை
ரம்பாஸதா ஸமபிரக்ஷது மாம் விபத்ப்ய:

தனுசு ராசிக்காரர்களுக்கான வேட்டுவ துர்க்கை

வேட்டுவ துர்க்கையே, சபரி துர்க்கை எனப் போற்றப்படுகின்றாள்., சிவபெருமான் அர்ஜுனனின் தவத்தை மெச்சி, பாசுபதாஸ்திரம் அளிக்க பூவுலகிற்கு வந்த போது அவனுடன் சண்டையிடுவதாக மாயை லீலைகள் புரிந்தாரல்லவா எதற்கு?

அர்ஜுனன், பாரத முடிவில் காண்டீபத்தை இழந்து, காண்டீபமும் வலிவிழந்து மறையும்! எனவே ‘இறைத் திருவடிகளே பிரபஞ்சத்தில் சாசுவதமானவை!’ என்பதை உணர்த்திடவுமே இந்த ‘மாயைச் சண்டை’ லீலைகள்!

சபரி துர்க்கை தேவியே ஆதிசிவனுடன் சேர்ந்து வந்து, சிவ லீலையில், சுவாமியும், அர்ஜுனனும் சினமுற்றுக் கடுஞ் சண்டை ஆகுதல் கூடாது என்பதற்காக அவ்வப்போது சாந்தக் கிரணங்களைப் பொழிந்தவள் ஆவாள்.

வனத்துறை, மரத்துறை, தாவரத்துறை, இறக்குமதி, ஏற்றுமதித் துறை, காடு வளர்ப்பு போன்ற துறைகளில் உள்ளவர்கள் வழிபட வேண்டிய துர்க்கை தேவி ஆவாள். சபரி துர்க்கை தேவிக்குத் தாமரை மலர்ப் படையல் விசேஷமானதாகும். நிறையப் பூக்கள் டிசைன் நிறைந்த இளஞ் சிகப்பு நிற ஆடை மிகவும் ஏற்றது. அனைத்து வகைப் பழங்களைப் படைத்து மகிழ்ந்திடுக!

சென்னை – திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரர் ஆலயம் மற்றும் அர்ஜுனன் வந்தமையும் மஹாபாரதப் புராண சம்பவங்கள் நிகழ்ந்த தலங்கள் யாவுமே சபரி துர்க்கை அம்சங்கள் நிறைந்த தலங்களாகும்.

அசைவ உணவிற்கு அடிமையாகி கரப்பான், எலி என அனைத்தையும் உண்டு ருசி பார்க்கும் அசைவ உணவு வெறியர்கள் உணவுப் பேராசைக் கண்டத்தில் இருந்து மீள வேட்டுவ துர்க்கையை (சபரி துர்க்கையே) வணங்கி வருதல் வேண்டும்.

மது, புகையிலை மற்றும் முறையற்றக் கேளிக்கைகளுக்கு ஆளாகி, உடல், மனம், புத்தி ஆரோக்யத்தை இழந்தோர் திருந்தி வாழ வழிபட வேண்டிய துர்க்கை தேவியே வேட்டுவ துர்க்கை!

தனுசு ராசிக்காரர்கள் பார்த்திப ஆண்டு நவராத்திரி முதல் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை ஓதி வழிபட வேண்டிய துர்க்கைத் துதி!

ப்ராலேய – சைலதநயா – தனுகாந்தி சம்பத்
கோசாதிதா குலயச் சவிசாருதேஹா
நாராயணி நமத பூப்ஸித – கல்பல்லவி
சுப்ரீதி – மாவஹது கம்பநிசும்ப – ஹந்த்ரீ:

மகர ராசிக்காரர்களுக்கான ஸ்ரீசந்திர சேகர துர்க்கை (ஸ்ரீசந்திர மௌளீ துர்க்கை)

பரம்பொருளாம் ஆதிசிவன், எண்ணற்ற அவதாரங்களை, கோடிக்கணக்கான, காரணங்களுக்காகப் பற்பல யுகங்களிலும் பூண்டு யாவர்க்கும், யாவைக்குமாய் அருள்கின்றான்.

தேவாதி தேவ, தெய்வ மூர்த்திகள் உற்பவிப்பதற்கும், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் ஏனைய ஜீவன்களுக்குமாக, இறைவன் மேற்கொண்டு அருள்கின்ற அவதாரங்கள் தாம் எத்தனை, எத்தனை! உதாரணமாக, (சென்னை அருகில்) திருஆலங்காடு சிவத்தலத்தில், முஞ்சிகேஸ்வர மகரிஷி அருந்தவம் புரிந்து, இறைவனை “முஞ்சிப் புல் தரித்த மூல மூர்த்தியாய், புல்லுக்கும் ஆங்கே பொசிந்து நடன ஆசி புரிந்தருளும் நடராசப் பெருமானாய்த் தரிசனத்தைப் பெற்றார். இத்தகைய அவதாரங்கள் தோன்றுகையில், இறைத் துணைவியாய் ஆகுதற்கு ஆதிபராசக்தி அருந்தவம் புரியலாகின்றாள். ‘முஞ்சிப் புல்’ என்பது ஒரு வகை மூலிகைப் புல் ஆகும். வல்லாரை போல் நல்ல நினைவாற்றலைத் தரவல்லதாம்.

ஆதிசிவனாம் சர்வேஸ்வரனின் அனைத்து அவதாரங்களுமே திருஅண்ணாமலையில்தாம் உற்பவிக்கின்றன என்பது பலரும் அறியாததாகும் எனவே, முஞ்சிகேஸ்வர மூர்த்தி, திருஅண்ணாமலையில் உள்ள முஞ்சிப் புல்நுனி முகட்டில் தான்  உற்பவித்துப்பிறகு திருஆலங்காட்டில் அவதாரிகை கொண்டார். இதிலும், அம்பிகையும் இறைவனுடைய இத்தகைய புது அவதாரங்களுக்கும், இறைத் துணைவியாக ஆவதற்குப் பல கோடி ஆண்டுகள் பூவுலகில் கடுந்தவம் புரிந்து, ஞானாம்பிகையாகவும், வண்டார் குழலியாகவும், சௌந்தராம்பிகையாகவும், ஆன்ந்தவல்லியாகவும் அவதாரம் கொள்கின்றாள்.

ஆதிசிவன், எந்த அவதாரத்தில் அசுரர்களை மாய்க்கின்றாரோ, அதற்கெனத் துணை புரியும் துர்க்கா அம்சமும் உடன் தோன்றும். இவ்வகையில், சந்திர மௌலீஸ்வரராக அவதாரம் கொண்டார், மூன்றாம் பிறைச் சந்திரனைத் தன் முடியில் சூடிய முக்கண்ணன்.

தேவர்களின் மனதிலும், சரீரத்திலும் புகுந்து மயக்கமடைய செய்த தேவர்களின்  அசுர சக்திகளை மாய்த்திடவே, தேவர்களின் மனத்தில் ஆக்கப் பூர்வ ஆகர்ஷண சக்தியாகப் பரிணமித்து, சந்திரசேகர மூர்த்தியாகவும் அவதாரம் புரிந்தார்.

இம்மூர்த்திக்கு உறுதுணையாய் இருந்தவர்களே, வக்ர காளி, சந்திர சேகரபுரம் தல துர்க்கை போன்ற பராசக்தி அம்சங்களும் ஆவர். சந்திரசேகர துர்க்கைக்கென விசேஷமான தாத்பர்யம் ஒன்றுண்டு. எல்லா துர்க்கை சக்திகளையும் திரட்டி, சமஷ்டி துர்க்கையாக ஆர்பவித்த மூர்த்தியே சந்திர சேகர துர்க்கையாவாள். சிம்ம வாகனத்தாளாய், சந்திர கலைகளைப் பூண்டவளாய் ஆள்கின்ற துர்க்கை மூர்த்தி.

டெக்ஸ்டைல்ஸ் துறை, ரசாயனத்துறை, புத்தகப் பதிப்புத் துறை, அணுகுண்டு ஆயுதத் துறை, மண்வளத்துறை, அதிக சப்தங்கள் எழுகின்ற பாக்டரிகள், sound engineering, அழிவை ஏற்படுத்தும் ஆயுதத் தயாரிப்பு துறை போன்ற துறைகளில் உள்ளவர்கள் தம்மைத் தற்காத்துக் கொள்ளவும், காப்பு சக்திகளைப் பெறவும், தொழில் வளத்திற்கும் வழிபட வேண்டிய துர்க்கை!

அழிவுச் செயலுக்கான ஆயுதத் தயாரிப்புத் தொழிலுக்கு ஆன்ம சக்திகள் உதவா ஆனால் அறிந்தோ, அறியாமலோ விதி வசத்தாலோ, இத்தகைய தொழில் துறைகளில் பணிபுரிவோர்க்கான ரட்சைகளை அளிக்க வல்லதே சந்திர சேகர துர்க்கை வழிபாடு.

மக்களின் நற்பண்புகளை அழித்து இல்லறக் குடிமையை நாசம் செய்யும் மதுத் தயாரிப்பு, மது விற்பனை, அழிவு நிலை ஆயுதங்கள் போன்ற துறைகளில் பணிபுரிவோர் கூடிய விரைவில் வெளிவந்து நல்ல பணிகளை நாடுதலே குடும்பத்திற்கு நன்று. இல்லையேல் பலத்த தீவினைக் கர்மங்கள் சூழும்.

ஸ்ரீதுர்கா தேவி திருவக்கரை

வெள்ளை வண்ண ஆடையில், பச்சை வண்ணப் பூக்களும், பச்சை  இலைகளும் நிறைந்த ஆடையைச் சந்திரசேகர துர்க்கைக்குச் சார்த்தி, பால் சாதம், பால் பாயசம், பாலும், சோறும் கலந்த பாயசம் படைத்தல் விசேஷமானது.

ஜவ்வாது மரப் புஷ்பம், மனோரஞ்சிதப் பூக்களைச் சார்த்தி வழிபடுதல் வேண்டும். சோமேஸ்வரர், சோமநாதர், சந்திரசேகரர், சந்திர மௌலீஸ்வரர் – போன்ற “சந்திர வகை நாமம்” பூண்ட தலங்களில் உள்ள துர்க்கா தேவி, சந்திரசேகர துர்க்கை அம்சங்களைத் தாங்கி, அருளும் மூர்த்தியே! (முசிறி, திருவக்கரை, மானாமதுரை, கும்பகோணம் அருகே பழையாறை, சந்திரசேகரபுரம், தஞ்சாவூர் அருகே மகிமாலை, பெருமகளூர், சோம்நாத்).

மகர ராசிக்காரர்கள் பார்த்திப ஆண்டு நவராத்திரி முதல் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை ஓதி வழிபட வேண்டிய துர்க்கைத் துதி!

பந்தே வதே மஹ்தி ம்ருத்யுபயே ப்ராக்தே
வித்தக்ஷயேச விவிதே ச மஹோபதாபே
யத்பாதபூஜன – மிஹ ப்ரதிகார மாஹுஸ்
சா மே ரமஸ்த – ஜனனீ சரணம் பவானீ

கும்ப ராசிக்காரர்களுக்கான ஞான துர்க்கை!

‘ஞான துர்க்கையே, தீப துர்க்கை’ எனப் பிரசித்தி பெற்றவள், நித்திய கர்மங்களை ஒழுங்காக நிறைவேற்றிட அருள்பவள், மனத்தெளிவு அளிப்பவள், குழப்பங்களை நீக்குபவள், கொந்தளிப்புகளை அகற்றுபவள். ஸ்திரமான புத்தியை அளிப்பவள்.

IAS, IPS, IES, IFS, IRS போன்ற பெரிய பொற்றுப்புகளைச் சுமந்து ஒவ்வொரு நாளும் எப்போதும் பலத்த tensionனுடன் பணியாற்றும் உயர்துறை அதிகாரிகள் வழிபட வேண்டிய மூர்த்தியே ‘ஞான துர்க்கை (தீப துர்க்கை) தேவி!

பணியாட்களை தேர்ந்தெடுக்கும் துறை, பயிற்சித் துறை, பள்ளி, கல்லூரி, ஆசிரியர்த் துறையைச் சார்ந்தவர்கள் வழிபட வேண்டிய துர்க்கை தேவி. வெள்ளை நிற வண்ண ஆடையில் நிறையச் சிகப்பு பூக்கள் அமைந்த அல்லது பெரிய சிகப்பு பார்டர் உள்ள வஸ்திரத்தை சார்த்துதல் விசேஷமானது..! மல்லிகை மாலை ‘ஞான துர்க்கை (தீபதுர்க்கை) தேவிக்கு ப்ரீதி தருவதாகும். கோதுமை அல்வா படையல் நலம் பயக்கும்.

‘வேதாரண்யம் விளக்கழகு’ என்பதாக, வேதாரண்யம் போன்று விளக்குகள், தீப வழிபாடுகளில் பிரசித்தி பெற்ற தலங்களில், ‘ஞானேஸ்வரர், ஞானாம்பிகை’ மற்றும் குரு மூர்த்தி சக்தித் தலங்களில் உள்ள துர்க்கை தேவி, ‘ஞான துர்க்கை (தீபதுர்க்கை) தேவி அம்சங்களைத் தாங்கி அருள்பவள். மேலும் அமர்ந்த கோல துர்க்கை தேவி மூர்த்தமும் ‘ஞான துர்க்கை (தீபதுர்க்கை) தேவி அம்சம் கொண்டதே!

கும்ப ராசிக்காரர்கள் பார்த்திப ஆண்டு நவராத்திரி முதல் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை ஓதி வழிபட வேண்டிய துர்க்கைத் துதி!

உத்பத்தி தைத்ய ஹனன ஸ்தவனாத் மகானி
சம்ரக்ஷ காண்யகில – பூதஹி தாய ய லா:
சுக்தான யசேஷ நிகமாந்தவித: படந்தி
தாம் விஸ்வமாதர – மஜஸ்ர – மபீஷ்டவீமி

மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்ரீராமார்ஜூன துர்க்கை!

வெற்றி வாஹினி துர்க்கை, விஜய துர்க்கை, பரஞ்சோதி துர்க்கை எனவும் போற்றப்படுபவளே ராமார்ஜுன துர்க்கை ஆவாள். ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர், ஈஸ்வரர், துர்க்காம்பிகை மூர்த்தி போன்ற தெய்வ மூர்த்திகளிடம் பெற்ற நல்வரங்களைக் கொண்டு பாண்டவர்கள் தாம் ஆட்சி செய்த காலத்தில் தங்கள் ஆட்சியிலும், துரியோதனின் ஆட்சியிலும் கண்ட நிறை, குறைகளை வைத்து, ஆக்கிய நீதி நெறிகளை முன் வைத்துத் தர்ம ஆட்சியைத் தந்து ஆண்டார்கள். ஆட்சியில் இருந்த போதும், வனவாசத்திலும் அவர்கள் தர்ம நியதிகளுடன் பொலிவதற்கான விசேஷமான அருளைப் புரிந்த துர்க்கையே ராமார்ஜுன துர்க்கை!

துர்க்கா தேவி உபாசனையைப் பூண்டவளும், துர்க்கை அம்சங்களுடன் தோன்றியவளாகக் கலியில் வழிபடப் பெறுபவளான திரௌபதி தேவி, துர்வாச மஹரிஷியின் அருள் வழிமுறைகளுடன் வழிபட்டு, ராமார்ஜுன துர்க்கையின் அருளைப் பெற்ற இடமே கும்பகோணம் அருகில் உள்ள சந்த்ரசேகரபுரம் ஆகும்.

நல்ல விதமான புண்ய சக்திகளையே வெற்றியாய்த் தருபவளாய், விஜயதசமி நாளில் அருளும் துர்க்கையே விஜய துர்க்கையாகிய ராமார்ஜுன துர்க்கை. ஜனாதிபதி, பிரதம மந்திரி, அரசியல் துறையினர், முதன் மந்திரிகள், அமைச்சர்கள் என அரசாங்கத் தலைமை கொண்டவர்கள், அரசியல் துறையினர் மற்றும் பெரிய கம்பெனிகள், தொழிலகங்களின் தலைமையாளர்கள் (CMD) யாவருமே நீதி நெறிகள் பிறழாது பணிகளை ஆற்ற வேண்டும் ஆதலின், இத்தகையோர் அனைவரும் வழிபட வேண்டிய துர்க்கையே ராமார்ஜுன துர்க்கையாகிய விஜய துர்க்கை!

மேலும், விண்வெளி ஆராய்ச்சி, Atomic Energy, Nuclear Science, Petrol, Diesel, Gas துறையினர் வழிபட வேண்டிய துர்க்கையும் ராமார்ஜுன துர்க்கையே! உலகில், அனைத்துத் துறைகளிலும் ஏதேனும் ஒருவிதமான வெப்ப சக்தி சேர்ந்திருக்கும். மனித உடலுக்கும் குறிப்பிட்ட டிகிரி வெப்ப நிர்ணயம் உண்டல்லவா! உதாரணமாக, வங்கித் துறை என்றால் கூடக் கம்ப்யூடர் தேவைப்படுவதால், இது இயங்கவும் மின்வெப்பத் துறை சக்தியான மின்சக்தி தேவையன்றோ!

எனவே, எந்தெந்தத் துறையில் எத்தகைய அக்னி சக்தி உள்ளதோ, அதற்கு ஏற்ற வகையில், வழிபட வேண்டிய துர்க்கை அம்சங்களும் அமைகின்றன. ராமர்ஜுன துர்க்கைக்கு, மஞ்சள் நிற சாமந்திப் பூ மிகவும் ஏற்றது (ஜவ்வந்திப் பூ அல்ல) மஞ்சள் வண்ண ஆடையில் சிகப்புக் கட்டங்கள் நிறைந்த வஸ்திரங்களைச் சார்த்தி வழிபடுதல் ஏற்றது.

தேன் நெல்லி, கரும்புச் சாறு, தேனில் ஊறிய பழங்கள், இதிலும் விசேஷமாக, தேனில் ஊறிய பலா போன்றவை ராமார்ஜுன துர்க்கைக்கு மிகவும் ஏற்றவை.

சிவாலயங்களில் பெருமாள் எழுந்தருளும் ஸ்தலங்களும் உண்டு (திருஅண்ணாமலை, காஞ்சிபுரம்) இத்தகைய சிவா விஷ்ணுத் தலங்களில் அருளும் துர்க்கை தேவி, ராமார்ஜுன துர்க்கை அம்சங்களைப் பூண்டு அருள்கின்றாள்..!

மீன ராசிக்காரர்கள் பார்த்திப ஆண்டு நவராத்திரி முதல் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை ஓதி வழிபட வேண்டிய துர்க்கைத் துதி!

சூக்தம் யதீய மரவிந்தபவாதி – த்ருஷ்ட
மாவர்த்ய தேவ்யனுபதம் சுரதஸ் சமாதி:
த்வாவப்யவயபது – ரபீஷ்ட மனன்ய லப்யம்
தாமாதி தேவ தருணீயம் ப்ரணமாமி தேவீம்

சசிமாதவச் சித்தர்

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி அருணாசல கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே! சசிமாதவச் சித்தர் அருணாசல கிரிவலம் வரும் மாத சிவராத்திரி மஹிமை! புரட்டாசி மாத சிவராத்திரி நாள் : 1.10.2005

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில் நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்.

வேள்வியில் சிவபெருமானுக்கு ஆஹூதி தர மறுத்து, ஆணவத்துடன் தட்சன் இயற்றிய யாகத்தில் பங்கு கொண்டமையாலும், சந்திர மூர்த்தி முழுமையான கலைகளையும் இழந்து தவித்தார். இதற்கான பரிகாரத்தைப் பெற சித்தர்களையும், மஹரிஷிகளையும் சந்திர மூர்த்தி நாடிய போது, அவர்கள் சசிதர லிங்கப் பிரதிஷ்டை விதிகளை உபதேசித்துத் தக்க சிவ பூஜைகளை ஆற்றி வருமாறு உரைத்தனர்.

தட்சனுடைய சாபத்தை அடைவதற்கு முன், சந்திர மூர்த்தி, விண்ணில் முழுக் கலைகளுடன் நித்தியப் பௌர்ணமிச் சந்திரனாகவே பூரித்துப் பிரகாசித்தார். பிரம்ம மானசப் புத்திரரும். கர்த்தமப் பிரஜாபதியுமான தட்சன் இட்ட சாபத்தின் வலிமையால் இவற்றில் பலவும் மறைந்து போயின. பூலோகத்தில் மனித செல்வ லட்சணங்களாக 16 பேறுகள் குறிக்கப் பெறுகின்றன. இதே போல சந்திர கிரகத்திற்கான 16 தெய்வ லட்சணங்கள் உண்டு. இவற்றில் சிரேயஸ், தேஜஸ், தீப பிரகாசம், அனுபூதித் தத்துவம், ஜோதி பூர்ணம் போன்ற கலா சக்திகளையும் சந்திர மூர்த்தி இழந்து வருந்தினார்.

எனவே சிவபூஜா பலன்களே தமக்கு நல்வழி காட்டும் என உணர்ந்து சந்திர மூர்த்தி ஆற்றிய சிவ பூஜைப் பலன்களிலும் சர்வேஸ்வரன் மேலும் பல சிவ லீலைகளையும் புனைந்திட்டார். எதற்கு சந்திர மூர்த்திக்காகவா? இல்லை, இல்லை!

64 திருவிளையாடல்களோடு சிவானுபூதிகள் முடிந்திடவில்லை! தேவாதி தேவர்களுக்கும் பூலோக ஜீவன்களுக்கும் பாடம் புகட்டவேதான் சிவமஹா லீலைகள் இன்றளவும் கோடானு கோடி லோகங்களில் தொடர்கின்றன.

சந்திர மூர்த்தி ஆற்றிய பூஜைகளில், சந்திரனுடைய சங்கல்பத்திலும் ஒரு சிறு குறை தொக்கி நின்றது. இதுவும் இறைச் சங்கல்பமாக விளைந்ததே ஆகும். என்ன அதுவோ? கார்த்திகை தேவி, ரோஹிணி தேவி, திருவாதிரை தேவி ஆகிய மூன்று நட்சத்திர தேவிமார்களும் சேர்ந்து பல அரிய பூஜைகளை ஆற்றி, சந்திர மூர்த்தியின் கலைகள் மீண்டும் மிளிர வேண்டிச் சங்கல்பம் பூண்டனர். ஏனைய தேவிமார்களோ சந்திரகலை வளர வேண்டும் என்றும் சங்கல்பித்தனர். மிளிர்தலுக்கும், வளர்தலுக்கும் வித்யாசம் உண்டன்றோ!

சந்திர மூர்த்தியும் இறைத் திருவிளையாடலின் மார்கமாக பெரும்பான்மையான நட்சத்திர தேவிமார்கள் கூறியதை ஏற்றுச் சங்கல்பித்துச் சிவபூஜைகளை ஆற்றிடவே, சந்திர கலைகள் வளரலாயின, அனைத்துக் கலைகளும் நன்கு வளர்ந்தாலும், முந்தைய நிலை போல் பௌர்ணமிச் சந்திரனாய்ப் பிரகாசிக்கவில்லை., அதாவது சந்திரக் கலைகள் யாவும் வளர்ந்தனவே தவிர, ஒளிப் பிரகாசத்தால் அவை மிளிராதபோது தான் ரோஹினி, கார்த்திகை, திருவாதிரை தேவிமார்கள் உரைத்ததன் சங்கல்பத் தாத்பர்யத்தைச் சந்திர மூர்த்தியும் ஏனைய தேவிமார்களும் உணர்ந்தனர்.

இதைக் கண்டு திகைத்திட்ட சந்திர மூர்த்தி சிவபெருமானிடம் மன்றாடி வேண்டியபோது, தான் “சசி மாதவப் பெருமாள் மூர்த்தியே, நின்னுடைய கலைகளையும் மிளிர வைக்க வல்ல வரத்தைத் தர வல்லவர். எனவே சசிமாதவனாய், மாதவப் பெருமாளாய், நிலாத்துண்டத் திங்கப் பெருமாளாய்த் திருமால் அருளும் மூர்த்தியை நோக்கித் தவம் புரிந்து ஆவன அடைவாய்!” எனச் சந்திரமௌளீஸ்வர மூர்த்தி வரம் தந்தார்.

நிலாத்துண்டத் திங்க பெருமாளின் மூத்த அவதார சக்தியே, சசி மாதவப் பெருமாள் ஆவார். ஆனால் இவர் அருளும் தலத்தை கோடானு கோடி பூமிகள், லோகங்கள் உள்ள இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு தேடுவது? சந்திர மூர்த்திக்கு உதவிடச் சித்தர்பிரான்களும், மஹரிஷிகளும் சிவலோகத்தில் ஒன்று கூடினர். சசி மாதவ மண்டலத்தில் தோன்றிய சித்தர் ஒருவரின் பெருமையை ஸ்ரீஅகஸ்தியர் அப்போது அவர்களுக்கு உணர்வித்தார். பாற்கடலில் சந்திரன் தோன்றுவதற்கு முன்னரேயே, சந்திர மூர்த்திக்குத் தம் கலைகளை இழக்கும் நிலை வந்தடையும் என்பதைத் தீர்க தரிசனமாக அறிந்து உணர்த்த ‘பூமா ஸ்மரணாச்சாரி’ என்ற சித்தரின்பால் அவர்கள் அனைவரும் சந்திர மூர்த்தியை அனுப்பி வைத்தனர்.

ஆனால் சந்திரன் தேடிய “பூமா ஸ்மரணாச்சாரி சித்தரோ”, சசிமாதவச் சித்தர் என்று பெருமாளே அருளிய திருநாமத்துடன், அருணாசலத்தில் கிரிவலம் வந்து கொண்டு இருந்தார். அறுபது நாழிகையும், சூரிய, சந்திர ஒளியில் கிரிவலம் வந்த உத்தமச் சித்தர், அமாவாசைத் திதியோ, வளர்பிறைத் திதிகளோ, தேய்பிறைத் திதிகளோ எந்நாளிலும், இரவில் அவர் அருணாசலத்தை கிரிவலம் வருகையில், பௌர்ணமிச் சந்திர பிரகாசம் போல் ஓர் அற்புத மாதவ ஒளிச் சுடர் அவரைச் சுற்றிலும் படர்ந்து அவருக்கு வழிகாட்டுவதைக் கண்டு சந்திர மூர்த்தி ஆச்சரியமடைந்தார்.

சந்திர மூர்த்திக்கு சிவபெருமான் அளித்திட்ட திருவுரையின்படி சசிமாதவப் பெருமாளின் அருட்பிரவாகமே தாம் இழந்த சசிகதிர் கலைகளை மீண்டும் பெற்றுத்தர முடியும் என்பதால் சசிமாதவப் பெருமாள் தலத்தை தேடுவராயினர். இந்நிலையில் அவருக்கு சசிமாதவ சித்தரின் மகிமைகள் தெரிய வந்தது. தன் கதிர்களை போலவே சசிமாதவ சித்தரின் இயற்கையான சுயம்பிரகாச ஒளிச்சுடர் நிலவுவது கண்டு ஆனந்தம் அடைந்தார்.

தமக்குள்ள சுயம் பிரகாச ஒளியானது சசிமாதவ சித்தர் பிரானிடம் சசி மாதவப் பெருமாளின் மாதவ நல்வரமாய் பிரகாசிப்பது கண்டு, “இவரே தமக்கு அருள் வழி காட்ட வல்லவர்!” எனத் தெளிந்து பரவசமானார் சந்திரமூர்த்தி, சசிமாதவச் சித்தரும், சந்திர மூர்த்தியின் அருணாசல வருகையை அறிந்து ஓடோடி வந்து, அடக்கமும், பணிவுடனும், சந்திர மூர்த்தியின் நிலையை அறிந்து அவருக்கு இறையருளால் பெருந்துணையாக நிற்கச் சங்கல்பம் பூண்ட சித்தர்களின் அருட்பாங்கை சசிமாதவ சித்தர் சந்திர மூர்த்திக்கு உணர்த்தினார். சிவபெருமான் உரைத்தபடி, சந்திர மூர்த்திக்காக அருள வல்ல மாதவப் பெருமாள் அருளும் சுயம்புத் தலத்தைத் தேடுதற்கான பூஜா பலன்களைப் பெறவும், சந்திர மூர்த்திக்கான கலைகள் அனைத்தையும் மிளிர வைப்பதற்கான அருளைப் பெறவும், சசிமாதவ சித்தர் 160 ஆண்டுகள் தொடர்ந்து மாத சிவராத்திரி தோறும் கிரிவலம் வந்திட்டார். மாதவப் பெருமாளாய் அருளும் திருமால் தலங்களில், பௌர்ணமியன்றும், திங்கட்கிழமையிலும் பருப்பு பாயச அன்னதானத்துடன் வழிபடுவது இழந்த பொருள், சொத்தைப் பெற உதவும்.

சித்தர்பிரானின் அருந்தவத் திறமையால் ஒரு திங்கட்கிழமையன்று, அவருக்கு சந்திர மௌலீஸ்வரரின் தரிசனம் கிட்டியது. எனவே இம்மாத சிவராத்திரி கிரிவலத்தில்

சசிபாவன, சசிமாதவ, சசிதாரண பாஹிமாம்
சசிமோதன, சசி சூடக, சந்திரோதய ரக்ஷமாம்

சசி சிவ, சிவ சசி, சசி ஹர, ஹர சசி
சசி புத, சசி குண, சசி புர தாரணம்

என்ற துதியை ஓதியவாறு அருணாசல கிரிவலம் வருதல் வேண்டும்.

கிரிவலப் பலன்கள்!

பிறருடைய தீய செயல்களால் தன் பதவி, தொழில், சொத்துக்களை இழந்தவர்கள் கிரிவலம் வரவேண்டிய திருநாள், நாய், பறவைகள், தாவரங்கள் போன்றவற்றிற்கு இன்று சசிமாதவப் பெருமாள், மூன்றாம் பிறை நாளிலிருந்து பூச்சர சக்திகளுடன் அருளுவதால், கிரிவலப் பாதையில் உள்ள மூர்த்திகளுக்கு பூக்களால் ஆன கிரீடம் சார்த்துதல் விசேஷமானது. மன நல நோயாளிகளுக்கு, இவர்களோ அல்லது இவர்களுடைய பெற்றோர்களோ, உற்றம், சுற்றமோ, இந்நாளில் தக்க சங்கல்பத்துடன் அருணாசல கிரிவலத்தை மேற்கொள்ள வேண்டும்.

மனைவி அல்லது உறவினரின் பேச்சை கேட்டு பெற்றோர்களுக்கு கொடுமை செய்தவர்கள் இனியேனும் மனந்திருந்தி வாழ சங்கல்பம் பூண்டிடில் தக்க பரிகாரங்களை பெற்று தரவல்ல கிரிவலமாகும். அயல்நாட்டு மோகத்தால் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தாய், தந்தையரை பரிதவிக்க விட்டவர்களும், தக்க பரிகாரங்களைப் பெற உதவும் கிரிவலம். பெற்றோர்கள் இறந்து விட்டால் அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை எவ்வாறு ஆற்ற முடியும்? ஆதரவற்ற முதியோர்கள் வாழும் முதியோர் இல்லங்களில் அவ்வப்போது தக்க சேவைகளை ஆற்றி வருக!

1.10.2005 சனிக்கிழமை மதியம் 12.43 முதல் 2.10.2005 ஞாயிற்றுக் கிழமை மதியம் 2.32 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி புரட்டாசி மாதச் சிவராத்திரித் திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள் : 1.10.2005 சனிக்கிழமை இரவு!

அக்டோபர் 2005 பௌர்ணமி நாள் : 16.10.2005 ஞாயிற்றுக்கிழமை இரவு 8மணி 2 நிமிடம் முதல் 17.10.2005 மாலை 5.44 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமித் திதி நேரம் அமைகின்றது. திருஅண்ணாமலை கிரிவல நாள்: 16.10.2005 ஞாயிற்றுக் கிழமை இரவு.

ஆரோக்யமான வாழ்க்கைக்கு

சிறு பிள்ளைகளுக்குப் பொழுது போக்கிற்காக என்ன சொல்லித் தருக்கின்றீர்கள். எப்போதும் படி, படி என்றால் போரடிக்கும் அல்லவா! தாயக் கட்டம், பல்லாங்குழி, ஐந்து கல் ஆட்டம் போன்ற பழமையான விளையாட்டுக்களைப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தாருங்கள். ஆன்மீக ரீதியாக மூளையை நன்கு பயன்படுத்தும்படி பிள்ளைகளின் விளையாட்டுக்கள் அமைய வேண்டும். ‘வெட்டு, வெட்டு’ என வரும் செஸ் விளையாட்டுக் கூட ஏற்புடையதல்ல! சதுரங்கம் வேறு, செஸ் ஆட்டம் வேறு!

பிள்ளைகளுக்கு ஒன்று முதல் 17 எண் வரையிலான வாய்ப்பாடுகள் சிறுவயதிலேயே நன்கு மனப்பாடமாக தெரிந்தாக வேண்டும். இது வாழ்நாள் முழுதும் நன்கு பயனாக வேண்டும்.

பாண்டி, கோ கோ போன்ற விளையாட்டுகள், ஒற்றைக் கால் யோகம், இரட்டைக் கால் யோகம் போன்றவற்றின் வகை முறைகளாகும். பாண்டியாட்டம் என்பது ஒற்றைக் காலில் நின்று பழகும் விளையாட்டு ஆதலின் மகத்தான யோக சக்திகளை அளிப்பதாகும். கால் வீக்கம், இரத்த அழுத்தம், தலை சுற்றல், ஒற்றைத் தலைவலி நோய்கள் வராது இளமையில் இருந்தே தற்காத்துக் கொள்ளவும் உதவும்.

ஐந்து கல் ஆட்டம் என்பது தரையில் சில உருண்டைக் கற்களை வைத்தும், வானில் சிறு கற்களைப் போட்டும், கீழிருந்து சிறு கற்களை உள்ளங்கைக்குள் வழித்து, வானிலிருந்து விழும் கற்களையும் சேர்த்துப் பிடிக்கும் ‘கல் ஆட்டமாகும்’. இத்தகைய யோகப் பூர்வமான விளையாட்டால், கண்களுக்கும், கை நரம்புகளுக்கும் நல்ல யோக சக்திகள் உண்டாகும். முழங்கை, தோள்களுக்கு நல்ல தேகயோகப் பயிற்சிகளை அளிப்பதுடன், கண்களின் சுழற்சிகளும், இயற்கையாகவே துரிதமாக நகன்று பயில்வதால், கிட்டப் பார்வை, தூரப்பார்வை ஏற்படாமலும் காத்திட உதவும்.

சிறுவர்களை உட்கார வைத்துப் பெற்றோர்கள் அருகில் அமர்ந்து, நிறையப் புராணக் கதைகளைச் சொல்லி வர வேண்டும். இரவில், வானில் கிரக அமைப்புகளையும், நட்சத்திரத் தரிசனங்களையும் தினமும் பெற்றுத் தந்து விளக்கிட வேண்டும். ஐந்து வயதிற்குள் முன்னூறு நட்சத்திர தரிசனங்களின் வானியல் இருப்பிடத்தை அறிந்து கொண்டால் நல்ல மனோதிடமும், ஞாபக சக்தியும், மன வைராக்யமும், மனோ தைர்யமும் உண்டாகும்.

மூன்று வேளையும் சந்தியா வந்தனப் பூஜைகளும், ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்யங்களையும் ஆற்றி வருதல் நல்ல நினைவுத் திறனோடு நல்ஒழுக்கத்தையும் தரவல்லதாகும். இவை ஜாதி, குல பேதமின்றி அனைவருக்கும் உரித்தான நித்தியப் பூஜைகளே! பூணூல், கடுக்கன், மணிக் கட்டிலும், இடுப்பிலும் கறுப்புக் கயிறு போன்றவை எப்போதும் தற்காப்பு சக்திகளை அளிப்பவை!

சமையலறை புனிதங்கள்

இல்லறப் பெண்களுக்கான இனிய, எளிமையான சிறப்புடைய விளக்கங்கள்! புனிதமான சமையலறைப் பணிகளுமே உயிர் வாழ்வதற்கான ஜீவசக்தியைத் தரும் தேவ சக்திகளை உணவு மூலம் அளிப்பதாகும்.

புனிதமான சமையலறை மேலான வெறுப்பு அகலட்டும்!

கலியுகத்தில் இல்லறப் பெண்கள் ஒவ்வொருவரும் தத்தம் குடும்பத்துக்கு, பூஜைகள், விரதங்கள் மட்டுமன்றி, எவ்வளவோ நல்வழிமுறைகளில், குடும்ப நல்வளத்திற்காக எளிமையான முறையில் ஆன்மீக ரீதியாகத் தினமும் நன்கு பணியாற்ற முடியும். இதற்கு ஆண்களும் உறுதுணையாக நின்றால் தான் குடும்பத்தில் சாந்தம் நன்கு பரிமளிக்கும்.

மனித குலத்தில், பிரம்ம மூர்த்தியின் சிருஷ்டி இலக்கணமாக, இயற்கையிலேயே, ஆண்களை விட ஏழு மடங்கு மனோ சக்திகளைக் கூடுதலாக பெண்கள் பெற்றிருப்பதால், இவ்வரிய மனவளத் திறனை, நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை அறிந்து, வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினால், இது குடும்பத்திற்கு பல வகைகளில் துணைபுரியும் அன்றோ!

ஆண், பெண் இருபாலார்களிலும், தற்போதைய கலியுக மனம் சுகத்திற்கும், கேளிக்கைக்கும், கடுமையாக உழைக்காமைக்கும் ஆட்பட்டு விட்டது என்பது நாம் நன்கு அறிந்ததே! எனவே, “பூஜைகள், விரதம், ஆலய தரிசனம்” என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தால், மனித மனம் சிறப்புடன் இவற்றை ஏற்காது, முற்றிலும் ஒதுங்கிடவே முற்படும்.

இத்தகைய அவலமான நிலை கலியுகத்தில் ஏற்பட இருப்பதைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே சித்தர்களே தீர்க்க தரிசனமாக் உணர்ந்தனர். அந்தந்தக் காலகட்டத்தில் மாற்றம் பெறும் கலியுக மனிதச் சமுதாய நிலைகளுக்கு ஏற்றபடி, இல்லறப் பெண்கள் குடும்ப வாழ்க்கையில் நன்முறையில் இறை வழிபாட்டுப் பலாபலன்களைப் பெறத் தகுந்த எளிய நல்வழிமுறைகளைச் சித்தர்கள் அளித்துள்ளனர். விஸ்வாமித்திர மாமுனி விண்ணில் இருந்து, “ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை” கிரகித்து, உலகத்தார் அனைவருக்கும் தந்தாரல்லவா! இதே போல, எழுத்து வடிவில் இன்றி எழுதாக் கிளவியாய் விண்ணில் துலங்கும் இத்தகைய சித்தகிரந்த அருள்மொழிகளைத் தக்க சித்த வழிச் சத்குருவினரே கலியுலகில் எடுத்துரைக்க வல்லவர்கள் ஆவர்.

அன்புப் பரிமாற்றமே இல்லறத்தில் முதல் பாடம்

கலியுகத்தில் இல்லற வாழ்வில் தம்பதியர் அறிந்து கடைபிடிக்க வேண்டிய முழு முதல் கோட்பாடு என்னவோ? இல்லறத்தில் கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் நன்கு புரிந்து கொண்டு, அன்புடன் துணை நின்று, தம்முள் தூய்மையான அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்க்கை நடத்துவதே முதல் சங்கல்பம், எனவே, கணவன் – மனைவி பந்தம் என்பது பூர்வ ஜன்மப் பிணைப்பே என மனதார உணர்ந்து, தம்பதியர் மனம் ஒருமித்து வாழ்தலே, கலியுகக் குடும்ப வாழ்வின் முதன்மையான இல்லறப் பூஜையாகிறது.

இதற்கு ஆன்மீக ரீதியாக, சமையல் துறையில் கடைபிடிக்க வேண்டிய நல்வழிமுறைகளும் உண்டு. பெண்கள்தான் எப்போதும் சமையல் கட்டில் உழல வேண்டும் என்றில்லாது, கணவனும் சமையல் பணிகளில் மனைவிக்குத் துணை புரிந்தால்தான், இயற்கையாகவே அன்புப் பரிமாற்றங்கள் உற்பவிக்கும், மாதவிலக்குக் காலங்களில், இதனைப் பெண்களுக்கான, “இயற்கை தரும் ஓய்வு” எனக் கருதி, கணவனே சமையலறையில் சமைத்துக் குடும்பத்திற்கு உணவு பரிமாறுதலால், மிக எளிதில் சாந்த சக்திகள் இல்லறத்தில் நிரவலாகும். இதனைப் “பரிபாலன இல்லறத் தர்மக் கடமையாகப்” பெரியோர்கள் போற்றுகின்றனர்.

கணவனும் சமையலில் துணை புரிதல் வேண்டும்!

காலை முதல் இரவு வரை, தாய்மார்கள், சமையல் கட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியது தானா!? அலுவலகம் செல்லும் பெண்களோ, ஆபீஸிலும் உழைத்து, வீட்டிற்கு வந்தும் சமையல் பணிகளில் மூழ்கிக் கிடக்க வேண்டியது தானா? எந்த உணவால் ஒவ்வொரு விநாடியும் உயிர் வாழும் சக்தியை நாம் பெறுகின்றோமோ, அந்த உணவு தயாராகும் அன்னச்சாலையான சமையலறையைக் கண்டாலே தாய்க் குலம் வெறுப்படையும் வண்ணம், கணவனும், குடும்பத்தினரும் ஒதுங்கி நடந்து கொள்தலாகாது, கணவனும், பிள்ளைகளும் சமையற் பணிகளில் துணை புரிந்தால்தான், அன்புப் பரிமாற்றங்கள் தோன்றுவதற்கான மூலக் கூறுகள், நல்வாய்ப்புகள் நன்கு விருத்தியாகும்.

பெண்களுக்கும் சமையலறையைக் கண்டாலே அலுப்புத் தட்டும் வகையில் அல்லாது, இதனை மாற்றி எண்ணச் சீரமைப்பைத் தரவல்ல எளிமையான வழிமுறைகளும் உள்ளன.

தினமும் காலையும், மாலையும் இரவும் பணி முடிந்தபின் அடுப்பைப் பன்னீர் கலந்த நீரால் நன்கு துடைத்து வைத்து வணங்கிடுக! சமையல் துவங்கும் முன் கோலமிட்டுப் பூக்களை வைத்து வணங்கிடுக! சமைக்கும் போது பூக்களை ஓரத்தில் கண்களில் படும்படி வைத்து விடுங்கள். பூக்களின் தரிசனமே மிகவும் புனிதமானதாகும்.

வாரம் ஒரு முறையோ, இயன்றால் தினமுமோ கங்கை, காவேரி போன்ற புண்ணியத் தீர்த்தத்தை, மாவிலை கொண்டு அடுப்புப் பகுதிகளில், சமையலறையில் தெளித்து, சமையற்கட்டைச் சுத்தி செய்யுங்கள். தர்பையில் ஆன பவித்திரம் எனப்படும் தர்பையாலான மோதிர முடிச்சை மோதிர விரலில் அணிந்து சமையல் செய்வது நன்று.

எதைச் சமைத்தாலும் உடனே சுவாமிக்கு படைத்து விடுங்கள். காலையிலும், மாலையிலும் தான் சுவாமிக்குப் படைக்க வேண்டும் என்பதில்லை.

அன்னத்தில் மந்திரச் சாரம் சேரட்டும்!

இறைத் துதிகளைத் தெரிந்தவர்கள் வரிசைக் கிரமமாக ஒவ்வொன்றாக ஓதிக் கொண்டு சமையுங்கள். இதில் குடும்பத்தினரும், அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே உரக்க ஓதி நன்கு கலந்து கொள்ளலாம். அவ்வளவாக இறைத் துதிகள் தெரியாதவர்கள் அன்னபூரணி தேவிக்கான எளிய மந்திரத் துதிகளை ஓதியவாறு சமைத்தல் நன்று.

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ஈஸ்வர்யை ச தீமஹி
தன்னோ அன்னபூரணி ப்ரசோதயாத்

தமிழ் மந்திரம்

“அன்னம், உண்வு ஆகுதற் பொருளே
அக்னிப் பூரண ஆனந்த சுதமே
கன்னற் கற்பம் கவினுறத் தந்தே
காலை பகலுடை மாலைக் கலமே
முன்னும் பின்னும் உன்னிய துணையுள்
முத்தாய் வந்துறை மூலத் தெளிவே!
சென்னித் திறமாய்ச் சிவந்த சிவமே!
அன்ன பூரணி ஆரணத் தருள்வாய்!”

என்று ஓதியபடி சமைத்திட வேண்டும்.

“ராமா ராமா, சிவ சிவ” – என்று எப்போதும் ஓதியவாறும் சமைத்தல், பணிபுரிதல் மிகவும் நன்றே! இவை உள்ளத்திற்கும், சமைக்கும் பண்டங்களுக்கும் சாந்த சக்திகளை வார்த்தளிக்கும்.

ஒவ்வொரு முறையும் பாத்திரத்தில் நீர் ஊற்றும் போதும், எடுக்கும் போதும், “கங்கா போற்றி, காவேரி போற்றி..” என்று புனித நதி தேவதா மூர்த்திகளின் பெயர்களை ஓதிடுக! காய்கறிகளை நறுக்குகையில், அவற்றைப் படைத்த ஸ்ரீசாகம்பரி தேவியையும், பால், மோர், தயிரைப் பயன்படுத்துகையில் ஸ்ரீகிருஷ்ணரையும், கோமாதாவையும் எண்ணித் துதித்திடுக!

ஸ்ரீஅன்னபூரணி தேவி திருச்சோற்றுத்துறை

சோற்றில் பதியட்டும் மாமறைக் கீற்றுகள்!

மாதம் ஒரு முறையேனும் வசதி உள்ளவர்கள், வீட்டில் தக்கோரைக் கொண்டு தமிழ்மறை, தேவமறைத் துதிகளை ஓத வைத்து, இவ்வாறு மறையோதுதல் நிகழ்கையில், வேத சப்த சக்திகள் காதுகளில் ஒலித்திட, இதன் பின்னணியில் இணைந்து உணவு சமைத்து அன்னதானம் செய்த பின்னர், குடும்பத்தாருடன் உண்டால், உடலில் நல்ல வேத சக்திகள் சேரும்.

“தமக்குத் தமிழ் மறைகள், தேவ மொழி மறைகள் தெரியவில்லையே” – என்று ஏங்குபவர்கள், இவற்றை அறிந்தவர்களை ஓத வைத்து, இம்மறை மொழிகளின் பின்னணியில் சமைத்து, உணவு பரிமாறுதல் அன்னதானம் அளித்தலால், வேதமந்திரங்களை அறியாதோர்க்கும், பாமரர்க்கும், ஏழைகளுக்கும் ஜாதி, மத பேதமின்றி “வேதமோதிய பலன்களைத்” தந்திடும் எளிய அருள்வழி முறையாகும்.

காக்கை, அணில், பறவைகளுக்கு மட்டுமன்றி, தினமும் ஓர் ஏழைக்கேனும் அளிப்பதற்காக ஓர் உணவுப் பொட்டலத்தையும் எடுத்து வைத்திடுக! சமையல் கட்டில் இருந்து கொண்டு, மனித சமுதாயத்திற்கு ஆற்றும் மகத்தான சமுதாய இறைப் பணிகள் அல்லவா இவை யாவும்!

ஒவ்வொரு சமையல் பண்டத்திலும் மிளிரும் தேவ சக்திகள்

மேலும் எந்தெந்தக் காய்கறிகளில் எத்தகைய சக்திகள் உள்ளன என நீங்களே நன்கு அறிவீர்கள்! அந்தந்த மளிகைப் பொருள், காய்கறிகளைப் பயன்படுத்துகையில் அதற்கான மூர்த்திகளைப் போற்றியவாறே சமைத்திடுக!

உதாரணமாக வெண்டைக்காய் எனில் மூளை விருத்திக்கு உதவுவது என அனைவரும் நன்கு அறிவர். எனவே, வெண்டைக் காயைச் சமைக்கையில், தட்சிணா மூர்த்தி, ஹயக்ரீவர், கலைமகள், சுசரித சரஸ்வதி, ஞான மூர்த்தியாகிய கேது மூர்த்தி – போன்ற தெய்வ மூர்த்திகளைப் போற்றியவாறு சமைத்தல் வேண்டும்.

மிகவும் முக்கியமான அரிசிச் சாதத்தை வடிக்கையில், சமைக்கையில் திருச்சோற்றுத்துறை சிவலிங்க நாதரையும், இத்தலத்தில் அன்னபூரணியாக அருளும் தேவியையும் எண்ணிச் சோறு வடித்திடுக! அரிசி என்பது நவகிரகங்களில் சந்திர மூர்த்திக்கு உரிய தானியம் என்பதால், சாதம் வடிக்கையில், சந்திர மூர்த்தியின் காயத்ரி / (சந்திர மூர்த்தியே போற்றி) நாம்மோதுதலும் மிகவும் முக்கியமானது.

தக்காளி எனில் இதன் நிறம் துர்க்கை, ராகு மூர்த்திக்கு உரியதாகிறது. ஆதலால் இம்மூர்த்திக்கான துதிகளை ஓதியபடி தக்காளியைச் சமைத்திடுதல் வேண்டும்.  மிளகாய் அரைத்துச் சார்த்தி வழிபடும் தேவியே மாசானி தேவி அல்லவா! கடுகு என்பது கார்த்தவீர்யாஜுன ஸ்வாமிக்கு ப்ரீதியானதாகும். உப்பு என்பது லவணேஸ்வரி தேவியையும், மஞ்சள், மங்கள சக்தியைத் தரும் மஞ்சள் தேவி அம்பாளையும் குறிப்பதாகும். புடலங்காய் என்பது திவசம், படையலில் பயன்படுத்தப்படுவதாகப் பித்ரு சக்திகள் நிறைந்ததாகும்.

தாளிப்பு சப்தமும், தாளிப்பு வாசனையும், சப்த கந்த தேவதா மூர்த்திகளின் அனுகிரகத்தைப் பெற்றுத் தருவதாகும். இடியாப்பம், இட்லி என்பது சந்திர கிரக சக்திகளைத் தருவதாகும். தேங்காய் என்பது சிவ சக்திகளையும், விநாயக அம்சங்களையும் பூண்டதாகும். ஏலக்காய் என்பது ஏலவாய் குழலி தேவியையும், முந்திரி பருப்பு ஸ்ரீவேதபுரீஸ்வரரையும். அந்தந்த தானியங்கள், அந்தந்த நவகிரக தேவ சக்திகளையும் பூண்டு வருகின்றன.

சாம்பார், பொரியல், ரசத்தில் பயனாகும் துவரம் பருப்பு சூரிய சக்திகளைப் பூண்டதாகும். இவ்வாறாக எந்தெந்தக் காய்கறிகள், மளிகைச் சாமான்கள் எத்தகைய தேவசக்திப் பூண்டவை என அறிந்து, அதற்கான எளிமையான துதிகள் ஓதிச் சமைத்து வந்தால், வாழ்க்கை முழுதும், அனைத்து நாளங்களிலும் இவை நன்கு நிரவி வளம்படும். நல்ஒழுக்கமும், பண்பாடும், கணவன், மனைவி, பிள்ளைகளிடம் நன்கு மிளிர்ந்து வரும்.

பலவிதமான (உண்மையான!) காரணங்களால் “தினமும் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. பூஜை செய்ய முடியவில்லையே” என ஏங்குவோர், மேற்கண்ட வகையில் இறைநாமங்களை இணைத்துக் காரியங்களை ஆற்றி வந்தால், “இன்று பல இறைநாமங்களை  இறையருளாலேயே ஓதினோம்!” என்ற வகையில் ஓரளவு மனத் திருப்தியும் ஏற்படும்.

மேலும், கலியில் அன்னமய கோசமாக, உயிருக்கு ஜீவசக்தி அளிப்பது, ஆரோக்யமாக, தீர்க்காயுளுடன் பொலிய உணவே மூலாதாரமாக விளங்குவதால் மேற்கண்ட வகையிலான ஆன்மீகச் சமையல் பணியில் இறைமை இணைந்து அனைவரையும் அடைந்து, குடும்பத்திற்கும், சந்ததிகளுக்கும் சாந்தத்தையும் ஏனைய நல்வளங்களையும் அளிக்கும்.

பெற்றோர்களின் கடமை

குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள்!

தொட்டில் குழந்தைகள் பல லோகங்களுக்கும் சென்று வரும் ஆன்ம சக்திகளைப் பூண்டவை, குழந்தைகள் பெற்றோர்களின் பல கர்ம வினைகளைத் தம்முள் ஏற்று அனுபவித்துக் குடும்பத்தைக் காக்கின்றன!

ஐந்து வயது வரை குழந்தைகளிடம் முழுமையான தெய்வீகம் நன்கு மிளிர்வதால், குழந்தைப் பருவத்தில் A for Apple, B for Boy எனக் கல்வியைத் திணிக்காதீர்கள். கலியுக கல்வித் திட்டத்தில் அப்படிக் கட்டாயக் கல்வியைத் திணிக்க வேண்டியது நிர்பந்தமெனில்,  A for Andal , B for Bharatwaja, G for  God என்று சொல்லித் தாருங்கள்.  ஏனெனில், ஐந்து வயதிற்குள் உள்ள குழந்தைகள், குறிப்பாக பேசும் பருவத்தை அறியாத பச்சிளங் குழந்தைகள், ஆண்டாள், பரத்வாஜரை நேரடியாகவே தரிசிக்கும் தெய்வீக சக்திகளைப் பெற்றுள்ளனர்.

ஐந்து வயதிற்குள் கட்டாயத் திணிப்புக் கல்வி வேண்டாம்

ஐந்து வயதிற்குள் பள்ளியில் சேர்க்க வேண்டியது என்பது தவிர்க்க முடியாத மனித சமுதாயப் பெருங்குற்றமாக உலகெங்கும் ஆகி விட்டதே! எனவே ஒருபுறம் 5 வயதில்தான் பள்ளிக் கல்வி துவங்குதல் வேண்டும் என்று ஆன்மீக ரீதியாகப் போராட வேண்டும். மறுபுறம், நடைமுறை ரீதியாக, இதில் ஆக வேண்டிய நல்வழிமுறைப் பற்றி இனி யோசிக்க வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளிடம் ஐந்து வயது வரை நிலவும் பரிபூரண தெய்வீகத்தை நன்கு பேணிட வேண்டும். திணிப்புக் கல்வி மூலம் குழந்தைகள் இழக்கும் தெய்வீகத் தன்மைகளை ஓரளவேனும் ஈடு செய்ய முயல வேண்டும்.

கர்ம வினைகளைக் களைய உதவும் குழந்தைகள்!

உண்மையில் பேச்சுப் பருவம் வரை, குழந்தைகளுக்குத் தன் பெற்றோர்களுடையதும், தன்னுடையதுமான பூர்வ ஜன்மக் கர்ம வினைகளின் பாங்கும் நன்கு தெரியும். மேலும் ஒன்றுமறியா பச்சிளங் குழந்தை வாந்தி, பேதி, அடிபடுதல் எனப் பல வகைகளில் துன்பப்படுகையில் அனைவருக்கும் என்ன தோன்றும்? “ஒன்றுமறியா இக்குழந்தை இவ்வேதனைகளை அடைவதேன்? இறைவன் ஏன் பச்சிளங் குழந்தைகளுக்கு இவ்வளவு கஷ்டங்களைக் கொடுத்துக் கஷ்டப்படுத்துகிறான்?” – என்றே பலரும் எண்ணுவர்.

உண்மையில், பேச்சுப் பருவம் வரை அனைத்துக் குழந்தைகளும் கர்ம வினைகளின் பாங்கை நன்கு அறிவதால் அவர்கள் தம் பெற்றோர்களின், சகோதர, சகோதரிகளின் கர்ம வினைகளை ஓரளவுத் தம் உடலில் தாங்கியே காய்ச்சல், சளி, இருமல், அம்மை நோய்கள் என மிகவும் துன்பப்பட்டுக் கழித்துக் குடும்பத்திற்கு உதவுகின்றார்கள் என்பது பலரும் அறியாததாகும்.

பச்சிளங் குழந்தை, 24 மணி நேரமும் மல்லாந்து படுத்துக் கிடக்கிறதே, வேறு எதுவும் செய்வது போல் தெரியவில்லையே, அது எந்த வகையில் செயலாற்றுகிறது? இதற்கு விஞ்ஞானப் பூர்வமான விளக்கங்கள் கிடையாது. மெய்ஞான விஞ்ஞானம் தான் இங்கு கைக்குதவும் சாதனமாகும்.

குழந்தை தவழ்ந்தால் வீடும், நாடும், குவளையமும் தழைக்கும்!

உண்மையி பச்சிளங் குழந்தைகள் பல விண்ணியல் லோகங்களுக்கும் சென்று வரும் ஆற்றல் கொண்டவை. மேலும் உறக்கத்திலேயே, அவை பல லோகங்களுக்கும் சென்று நிறையக் காரியங்களையும் ஆற்றி வருவதால்தான் தொட்டிற் குழந்தைகள் நெடுநேரம் உறங்குகின்றன. மேலும், குழந்தைகள் வீட்டில் தவழ்வதையே “பால வாஸ்து தேரோட்டப் புனல்” எனச் சித்தர்கள் உரைக்கின்றார்கள். ஆம்! இல்லத்தில் தவழ்ந்து குழந்தைகள் வாஸ்து சக்திகளை விருத்தி செய்கின்றனர்.

குழந்தைகள் நிறைந்த வீட்டில்தான் தெய்வீகம் நிறைந்து துலங்குவதற்கான மூலக் கூறுகள் தழைக்கும். ஒரு குழந்தை வீடு முழுதும் தவழ்ந்து உலா வருகையில், எண்ணற்ற விண்ணுலக லோகங்களில் இருந்து பெற்று வந்த, கிரகித்தத் தெய்வீக கிரணங்களை இல்லமெங்கும் தவழ்ந்து பரப்புவதால், பல தோஷங்களும், கர்மப் படிவுகளும் கழிந்து குடும்பத்தில் சாந்தம் நிலவ ஏதுவாகும்.

மேலும் பூமியில் தவழ்ந்து, தவழ்ந்து, இவ்வாறு சிறு குழந்தைகள்தாம் பூமியடித் தெய்வீக நீரோட்ட சக்திகளைப் இல்லங்களுக்கும், பூவுலகின் ஏனைய ஜீவன்களுக்குமாயும் அளிக்கின்றன. எனவேதான் “மழலைச் செல்வம்” என்று குழந்தைப் பருவத்தைப் போற்றுகின்றனர்.

ஒரு குழந்தை, இரு குழந்தை என்று மனித சட்டங்கள், கட்டுப்பாடுகள் மூலம் ஜீவப் பெருக்கத்தைத் தடுக்க முயல்வது அதர்மமாகும். பிறப்பு தேவ ரகசியங்களை எவராலும் தக்க சத்குருவின் அருளின்றி உணர இயலாது, நிறைய மழலைச் செல்வங்கள் ஏற்படுவது, நாட்டின் மக்கள் தொகையைப் பெருக்குவதாக எண்ணுதலும் தவறானதே! உலக மனித சமுதாயத்தில், ஒவ்வொரு கால கட்டத்திலும் இத்தனை குழந்தைப் பருவத்தினர், பிள்ளைப் பருவத்தினர், பாலகர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதிர்ந்த வயதினர் என்று அந்தந்தப் பருவத்தினர் குறித்த எண்ணிக்கையில் இருந்தால்தான் மனித சமுதாய வாழ்க்கைச் சக்கரம் சீராக ஓடும்.

செயற்கை முறைகளிலும் குழந்தைப் பிறப்பைத் தடுக்க எண்ணுகையில், இது மனிதர்களின்  பருவ விகிதாச்சாரத்தைத் தகாத முறையில் வருத்தி அமைத்து, தேவையில்லா வகையில் சமுதாய நற்பண்புகளை மாற்றித் திருத்தும் சீரழிவு நிலையே ஏற்படும். தற்போது திருமணத்திற்கு “நல்ல பெண், நல்ல மாப்பிள்ளை கிடைக்கவில்லை” எனப் பல குடும்பங்களிலும் 30 வயதைத் தாண்டிய இளைய பருவத்தினர் திருமணப் பருவத்தையும் கடந்து அவதியுறுவதற்குக் காரணமே, தற்போதைய மற்றும் இதற்கு முந்தைய தலைமுறையினர் ஓரிரு குழந்தைகளுடன் நிறுத்தி “வாழ்க்கையின் தர்மத்தை” அவமதித்ததாகும். இதனால்தாம் சமுதாயத்தில் ஒழுக்கச் சீரழிவுகள், பண்பாட்டுப் பேரழிவுகள், ஜாதி வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

பிஞ்சு முகத்தில் தவழும் அமிர்த சாந்தமயப் பிரகாசக் களை!

மேலும் எத்தனையோ பணக் கஷ்டங்கள், குடும்பத் துன்பங்கள், அலுவலக இன்னல்களுக்கு இடையேயும் குடும்பத் தலைவரும், மனைவியும், பிள்ளையரின் பஞ்சு (பிஞ்சு) முகத்தைக் காண்கையில் அதன் முகத்தில் தோன்றும் தெய்வீகத் தன்மைகளிலும், மனம் கனிந்து, மகிழ்ந்து, ஆனந்தத்தில் திளைக்க வைப்பதின் மூலமும் குழந்தைகள் இல்லறத்திற்கு அரிய தெய்வீகப் பணிகளை ஆற்றுகின்றனர்.

எனவே, ஏழ்மை நிலையில் உள்ள, வசதியற்ற கர்பிணிகளுக்கு குழந்தைகள் கருவில் நன்கு வளரவும், பிறந்த குழந்தைகள் நன்கு ஊட்டச் சத்துடன் வளரவும், தாய்ப்பால் நன்கு விருத்தியடையவும் தேவையான டானிக்குகள், தானியங்கள், பால், வெண்ணெய் போன்றவற்றைத் தானமாக அளிப்பதும், சந்ததிகள் தழைப்பதற்கான “பாலமோதகப் புண்ய” சக்திகளை அளிக்கும். தாய்ப்பால் ஊறுதல் நாட்டிற்கு ஆன்மீக வளம் தரும்.

பேச்சுப் பருவம் வரும் வரை, உலகின் அனைத்துக் குழந்தைகளும் வேத சக்திகளில் தாம் வளர்கின்றன. தாய்ப்பால் என்பது தாயின் புனித தேகத்தில் திளைக்கும் வேதசக்திகளின் திரட்சியே ஆகும். பேச்சுப் பருவம் வந்த மூன்ற்றாண்டுகள் வரை காத்ர சக்திகள் குழந்தைகளைக் காக்கின்றன. பத்துவயது வரை வித்யா சக்திகள் நன்கு காக்கின்றன. இவ்வாறாக வெவ்வேறு குழந்தைப் பருவங்களிலும் தெய்வீக சக்திகள் நன்கு மிளிர்ந்தே குழந்தைகள் வாழ்ந்து குடும்பத்திற்கு ரட்சா சக்திகளை அளிக்கின்றார்கள். எனவே, குழந்தைகளே இல்லத்தின் சத்தியமான செல்வ சக்திகள்.

பிரதமை மகத்துவம்

காணமற் போனவர்கள், தொலைந்த பொருள், பத்திரங்கள் கிட்டிட உதவும் பிரதமைத் திதிப் பூஜைகள்! பிரதமைத் திதியின் மகத்துவம்!

ஆதரவற்றோருக்கு உதவும் ஆதி பிரதமைத் திதிப் பூஜைகள்!

பொதுவாக, பிரதமைத் திதிகளில் நிகழ்த்தப் பெறும் குறித்த பல பூஜைகளின் பலாபலன்களும், தக்க அன்புடன் பராமரிக்கப்படாத சிறு பிள்ளைகளுக்கும், தக்க ஆதரவின்றியும், அநாதை போலும் வாழ்வோர்க்கும், சம்பாதித்ததை பல வழிகளிலும் இழந்து, கஷ்டப்பட்டு வாழ்வோர்க்கும், வாழ்வில் தேவையான நன்மைகளையும் பெற்றுத் தரும் சக்திகளைக் கொண்டவை ஆகும்.

கலியுகத்தில் முதியவர்களின் வாழ்நிலையும், பெரும்பாலான நாடுகளில், சமுதாயத்தில் மிகவும் வேதனை தருவதாக அமைந்துள்ளது. பெற்றோர்களின் பாசமின்றி எங்கோ விச்ராந்தியாக, அதாவது, ஏனோதானோ என்ற வகையில் தக்க அன்பு அரவணைப்பின்றி வளரும் பிள்ளைகளுக்கும் நன்மை தருவதாக பிரதமைத் திதிப் பூஜைகள் அமைகின்றன.

ஆனால், இத்தகைய பிள்ளைகளோ அறியாமையால் வளர்ந்து வர, இவர்கள் சற்றும் அறியாத, இவர்களுக்கான பிரதமைத் திதிப் பூஜைகளை எவர் ஆற்றுவது?

ஆலய வழிபாட்டுச் சங்கங்களும், ஏனைய சத்சங்க அமைப்புகளும், பிற பொதுநல மனப்பான்மை உடையோரும், ஆதரவற்ற பிள்ளைகளுக்கான வளர்ப்பு நிறுவனங்களிலும், ஆலயங்களிலும், இறைப் பணிக் குழு அமைப்புகளிலும், அவரவர் இல்லங்களிலும், பிரதமைத் திதி நாட்களில் இவற்றை முறையாகக் கடைபிடித்து வருதல் நன்று, ஏனெனில் இதுவே அற்புதமான இறைச் சமுதாயப் பணியாக அமைந்து, ஆதரவற்ற பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும், முதியோர்க்கும் நல்வகைப் புண்ய சக்திகளையும், நல்வாழ்வைப் பெறுவதற்கான துணை சக்திகளையும் பெற்றுத் தருமன்றோ! இந்நிலை வருங்காலத்தில் பலருக்கும் வராது தற்காத்துக் கொள்ளவும் உதவும்.

மேலும், திதி பூரண சக்திகள் நன்கு பரிணமித்து வரும் பரிபூரண முழுத் திதி நாட்களான அமாவாசை, பௌர்ணமியை அடுத்து வருவதாகப் பிரதமை அமைவதால் இதில் பூரண சக்திகளும் நன்கு நிறைந்திருக்கும்.

பிரதமைத் திதிப் பூஜைப் பலாபலன்கள், ஆதரவற்ற பிள்ளைகளுக்கான நற்பலன்களை மட்டுமல்லாது, சிறிய வயதுப் பருவத்தினர், யாவருக்குமே துணை புரிவதாகும். மேலும் ஆதரவற்ற நிலை வருங்காலத்தில் சந்ததிகளில் ஏற்படலாகாது தற்காத்துக் கொள்ளவும் பிரதமைத் திதிப் பூஜை நன்குதவும்.

பல குடும்பங்களிலும், கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதால், crecheலேயே முழுமையாக அல்லது பணியாளர்கள் அல்லது உறவினர்களின் பராமரிப்பில் பெற்றோர்களின் தக்க அரவணைப்பின்றி வாழும் பிள்ளைகளுக்கும்,

தாய் அல்லது தந்தை இல்லாது வளரும் சிறு பிராயத்தவர்களுக்கும் நலம் பயத்து உதவுவதே பிரதமைத் திதியில் ஆற்றப் பெறும் பூஜைகளாம். ஆமாம், தாய், தந்தையரின்றி வாடி, வதங்கி வளரும் இப்பிள்ளைகளுக்காக யார்தான் முயற்சி எடுத்து, எவ்வகையில் பூஜிப்பது?

இந்தக் கேள்வி எழும் போதுதான், ஒவ்வொரு மனிதனும் எத்தகைய சுயநலத்துடன் வாழ்கின்றார் என்பது புலனாகும். தங்கள் சந்ததிகளுக்கு இத்தகைய நிலை வருதல் கூடாது என்பதற்கான தற்காப்பு ரட்சா சக்திகளைப் பெறவேனும், பிரதமைத் திதிப் பூஜைகளை நிகழ்த்தி வர வேண்டும். அல்லவா!

தம் பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலைகளால் பிற இடங்களில், பிறரிடம் வாழ வேண்டி இருக்கிறதே என வேதனையுறும் பெற்றோர்களும், இப்பிள்ளைகளின் நலம் நாடும் உறவினர்களும், இதைப் படிக்கின்றவர்களும், இதன் மூலம் இவ்வரிய விஷயத்தை அறிய வருகின்றவர்களும், ஒரு தியாகமய சமுதாய இறைப் பணியாகவும், இங்கு அளிக்கப்படும் பிரதமைத் திதிக்கான சில வகைப் பூஜைகளை, ஆலய வழிபாடுகளை, தான, தர்மங்களைப் பெறுதற்கரிய மானுடப் பிறவியைக் கொண்டமைக்கான லட்சியக் கடமைப் பூஜையாக நன்கு ஆற்றி வரவேண்டும்.

பொதுவாக, பிரதமைத் திதியை சுபமுகூர்த்த நாளாகத் தமிழ்நாட்டில் கொள்வது கிடையாது. ஆனால், ஆந்திரப் பகுதிகளில் திருமணங்கள் பிரதமைத் திதிகளிலும் நிகழ்கின்றன. பூகோள அம்சங்களை வைத்துக் கணித்து, அந்தந்த பூகோளப் பகுதி ஜீவன்களின் கர்மப் பாங்கை ஒட்டியும் காலசக்திகள் அமைகின்றன எனவும் இதிலிருந்து உணரலாம். இதனால்தாம் பிறப்பிற்கு நட்சத்திரமும், மறைவிற்குத் திதியும் காலக் கணக்கில் முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே விண்ணையும் , மண்ணையும் இணைக்க வல்லவையும் காலசக்திகளே!

பூமியில் உள்ள நீரோட்டங்களும், வானியல், நீரோட்டங்களும் இணைவதும் திதியின் தெய்வீக அம்சங்களுள் ஒன்றாகும். வியாழன் (குரு), சூரியன், சந்திரன் என வானியல் கிரக அம்சங்கள் பலவும், நம் உடலிலும், கை விரல்களிலும், கை ரேகைகளிலும் பதிந்துள்ளன என நாமறிவோம். உதாரணமாக,

ஆள்காட்டி விரல் – குரு கிரகம்
கட்டை விரல் – சுக்கிர கிரகம்
மோதிர விரல் – சூரிய கிரகம்
நடுவிரல் – சனி கிரகம் ஆகும்.

திதி மாற்றம் மனித உடலிலும் கர்ம ஸ்ருதி மாற்றங்களைத் தரும்!

தொன்மையான பஞ்சாங்க நியதிகளின்படியும், விஞ்ஞானத்தின் விளக்கப்படியும், திதி என்பது வானில் சூரிய, சந்திர கதி அசைவு தூரத்தை ஒட்டி அமைவதால், ஒவ்வொரு நாளும் பிரதமை, துவிதியை எனத் திதி வகைகள் மாறுகையில், மனித உடலிலும் இதனை ஒட்டி, கிரக, கிரண, ரேகை நீரோட்டங்களிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு திதியிலும், அவரவர் உடலிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.

உதாரணமாக, ஏகாதசி அன்று ஜீரண நீரோட்டங்களில், ஜீரணச் சுரப்பிகளில் பல மாற்றங்கள் ஏற்படும். இதனால்தாம் ஏகாதசித் திதி உண்ணா நோன்புக்கான விரத நாளாகிறது.

நீரோட்ட ப்ருத்வி சக்திகள் கொழிக்கும் பிரதமைத் திதி நாள்!

சிவபெருமானின் சிரசிலிருந்து, திதிப் பூரண சக்திகள் மூலமாகவும், பூமியில் பல இடங்களுக்கும் கங்கை நீரோட்டப் பிரவாகம் வந்தது.  நீர்வீழ்ச்சிகளில், மேலிருந்து நீர் கீழே வருவதும், மழை நீர் வானிலிருந்து கீழே பொழிவதும் திதி பூரணக் கால அம்ச இஷ்டப் பூர்வ பல சக்திகளால்தாம். இவ்வகையான திதிப் பூரண சக்திகளும், இஷ்டப் பூர்வ சக்திகளும் பலம் பெற்றுப் பொழியும் நன்னாட்கள் அவ்வப்போது எப்போதாவது ஒருங்கிணந்து வரும்.

இத்தகைய சக்திகளை நன்கு கிரகித்திடவே, ஆலயங்களிலும், பூஜையறையிலும் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்குவது சிறப்புடையதாகிறது.

இயற்கை வளநாளாகியப் பிரதமைத் திதி நாளில் பொங்கல் வைத்தல், சிதறு தேங்காய் உடைத்தல், காவடி எடுத்தல், பால் குடம் போன்ற இயற்கை வகைப் பூஜைகளை ஆற்ற வேண்டிய நாள். பிரதமைத் திதி நாள் முழுதும் நைலான், பிளாஸ்டிக், பிளாஸ்டிக் நாற்காலி, பேனா, செயற்கைச் செருப்பு, பிளாஸ்டிக் உறை போன்ற செயற்கை வகைப் பொருட்களைத் தவிர்த்திடுக!

மரம், துணிப் பை, காகிதப் பை, இலை, தழை போன்ற இயற்கையை ஒட்டிய பொருட்களில் உறைவது, பயன்படுத்துவது நன்று. பிரதமைத் திதி நாட்களில் கூடிய மட்டும் செயற்கையான பொருட்களை முற்றிலுமாகத் தவிர்க்கவும்.

ஒரு பௌர்ணமியில் இருந்து அடுத்த பௌர்ணமி வரை உள்ள (அமாவாசை, பௌர்ணமி தவிர) ஏனைய 28 திதிகளுமே, உலக ஜீவன்களின் நல்வாழ்விற்காக, வெப்பம், குளுமை, ஆகர்ஷண சக்தி, ஒலி, ஒளி போன்ற 28 வகையான முக்கியமான, தினசரி வாழ்க்கைக்குத் தேவையான சக்திகளைத் தருபவை ஆகும்.

பௌர்ணமியும், அமாவாசையும் திதிப் பீடங்களாக அமைவதால், இவை இரண்டும் பிரக்ருதித் தத்துவத்தில் திதிகளாக அல்லாது, தனித் தன்மை வாய்ந்தமையாகவே கொள்ளப்படுகின்றன.

மேலும், இவை இரண்டையும் திதி தேவதைகளின் மூலப் பீடமாகவும் கொள்வதாலும், பௌர்ணமியும், அமாவாசையும் சூரிய, சந்திர கிரகங்களின் இணைப்பாகவும், நேருக்கு நேர் வருவதாக அமைவதாலும், இவை கிரகங்களுக்கு உபசக்திகளைத் தரும் ஆற்றலைக் கொண்டவையாகவும் துலங்குகின்றன.

ஸ்ரீஆதிநாதர் குமாரவயலூர்

பிரதமையில் சூரிய, சந்திர மூர்த்திகளுக்கு ஒரே வகையான, ஒரே வண்ண, புஷ்பம், மாலை, வஸ்திரம் சார்த்தி, அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்துவது மிகவும் நன்று.

பிரதமையில் முத்தான முத்துறை வழிபாடுகள்!

தனக்கென அல்லாது பிற ஜீவன்களின் நலன்களுக்காக, ஏதேனும் மூன்று நற்காரியங்களை பிரதமை நாளில் ஆற்றிட வேண்டும். பிரதமை என்பது உலகில் எல்லாவற்றிற்கும் முதலாவதான மூல முதல் பீஜங்கள் தோன்றிய நாளாகவும் அமைவதால், சிருஷ்டிக் கடவுளான பிரம்ம மூர்த்திக்கு உரிய நாளாகவும் துலங்குகின்றது.

மனிதர்கள், பிராணிகள், (பறவைகள் உட்பட), தாவரங்கள் ஆகிய மூன்ரு வகையான ஜீவன்களுக்குப் பயன்படும் வகையில், பிரதமைத் திதி நாளில் நற்காரியங்களை ஆற்றிட வேண்டும். குடும்பத்தில், இதுவரை சரியாக அறியாது விடுபட்டுப் போன விஷயங்கள் பலவற்றையும் அறிய இது உதவலாகும்.

இந்நாட்களில் ஆலய, நந்தவனச் செடிகளுக்கு நன்கு பாத்தி கட்டி, உரமிட்டு விருத்தி செய்தல், பசு மற்றும் இதர பிராணிகளை நன்கு நீராட்டி, மஞ்சள், குங்குமம் வைத்து உணவளித்தல், நாய்களுக்கு உணவு, பறவைகளுக்குத் தானியங்கள் இடுதல், ஏழ்மை, நடுத்தர, வசதியற்ற நிலையில் உள்ளோர்க்கு உதவுதல் – போன்ற மூன்று துறைகளிலும், குறைந்தது. மும்மூன்று நற்காரியங்களை நிறைவேற்றுதல் வேண்டும். இதன் பலாபலன்கள் எண்ணற்றவை! குறிப்பாக, காணாமற்போன மனிதர், பிராணி, பொருட்கள், நகைகள், ஆவணங்கள், ரெகார்டுகள், பத்திரங்கள் போன்றவை பற்றிய தகவல்களை அறியவும் நல்வாய்ப்புகளும் ஏற்படும்.

ஆலயத்தில் உள்ள குப்பைகளை அகற்றுதல், ஆலயக் குளத்துறைப் படிகளைச் சுத்திகரித்தல், ஆலய நந்தவனத்தைச் சுத்திகரித்தல் போன்ற கோயில் திருப்பணிகளும், சகல ஜீவன்களுக்கும் மனிதர்கள், பிராணிகள் (பறவைகள் உட்பட), தாவரங்கள் ஆகிய மூன்று வகையினருக்கும் ஆன்மீக ரீதியாகப் பலனளிப்பதால், இவையும் மூன்று வகையினருக்கும் உரித்தான நற்சேவைகளேயாகும்.

ஆதியும், மூலமும் கோதியே வரும் பிரதமையாம்!

இன்று ஆதிமூலர், ஆதிநாதர், (திருச்சி – லால்குடி அருகே) பூவாளூரில் திருமூலநாதர், ஆதிஜகன்னாதர், ஆதிகுமாரர், ஆதிகௌரி, ஆதிலட்சுமி போன்ற “ஆதி” மற்றும் “மூலம்” சம்பந்தமான கடவுள் பெயர்களை உடைய தலங்களில் (பட்டுப் புழு நூல் கலவாத) நார் (மடிப்) பட்டு வகைத் துணிகளை பக்தர்கள் உடுத்தி, இறை மூர்த்திகளுக்குப் பட்டு வஸ்திரங்களையு (பட்டுப் புழு நூல் கலவாத) நார் (மடிப்) பட்டு வஸ்திரம் சார்த்தி வழிபடுதலால், அவரவருடைய பெற்றோர்கள் செய்த தீவினைகள் மற்றும் தாய், தந்தையர்க்குத் தாமோ, பிறரோ, அறிந்தும், அறியாதும் செய்த தீவினைகள், பழவினைகள், குற்றங்களின், கர்ம வினைகளின் விளைவுகளால் – சமுதாயம், குடும்பம், உற்றம், சுற்றத்திடையே சிக்கி, அவதியுறுவோருடைய துன்பங்கள் அகல வழி பிறக்கும்.

பெற்றோர்களின் காப்பு இன்றி, உறவினர்களின் பராமரிப்பில் நன்கு பேணப்படாது, அநாதையாக வாழ்கின்றவர்களுடைய வாழ்க்கை சீர்மை பெற, தக்கோர் வந்து உதவவும், நல்வழிகள் கிட்டவும், பித்ருக்களின் சகாயம் கை கூடி வரும். இவ்வாறு பிரதமைத் திதி வழிபாட்டின் மஹிமை சொல்லவும் பெரிதே!

நவகிரக ஆட்சி

சந்திர மூர்த்தி மனதைப் பரிபாலிக்கும் மதிகாரராகவும், புதமூர்த்தி புத்தியைப் பரிபாலிக்கும் புத்திகாரராகவும் விளங்குகின்றார் அல்லவா., ஜோதிட ரீதியாக, கோள்களின் “கிரக காரகத்துவம்” என்பது, ஒவ்வொரு கிரகமும், மனித வாழ்வில் பரிபாலிக்கும் துறைகளைக் குறிப்பதாகும்.

கலியுக நியதிப்படி, மனிதர்களின் கர்ம பரிபாலன ஆட்சியை மேற்கொள்பவர்கள் நவகிரக மூர்த்திகள் ஆவர். அதாவது, கலியுகத்தில் பூலோக ஜீவன்களின் கர்ம பரிபாலனமானது, நவகிரகங்களின் அருளாட்சியாய் அமைகின்றது. தற்போதையப் பார்த்திப ஆண்டிற்கான நவகிரக பரிபாலனத்தில், ராஜாவாக சனீஸ்வர மூர்த்தியும், மந்திரியாக குரு மூர்த்தியும், சேனாதிபதியாக புத கிரக மூர்த்தியும் அமைகின்றனர்.

எந்தக் கோளம் எத்துறைக்கான பரிபாலன மூர்த்தியாக அமைகிறதோ அதைப் பொறுத்துப் பலாபலன்களும் அமைகின்றன. சேனாதிபதியாக மட்டுமன்றி, அர்க்காதிபதியாகவும் (நீர்வள அம்சங்கள்), மேகாதிபதியாகவும் (மேக வானம்) புதமூர்த்தி ஆட்சிக் கொண்டு அருள்கின்றார். நவகிரக ஆட்சிப் பரிபாலனத்தைச் சாதாரணமாக, கலியுகத்தில் உள்ளது போலான மன்னர், மந்திரி, அரசாங்கம், பொது நிர்வாகம் போல் கருதிடலாகாது.

நவகிரக தேவ ஆட்சி முறை ரகசியங்கள், விளக்கங்கள் யாவும் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட தெய்வீக ரகசியங்களாகும். தக்க உத்தமர்கள் மூலமாகவே ஆழ்ந்த நம்பிக்கையுடன் பெறப் படவேண்டியவை. எனவேதான், ஜீவன்களுக்கு நன்கு புரிந்து புலப்படவே, நவகிரக ஆட்சி முறையானது ராஜா, மந்திரி, சேனாதிபதி, அம்சப் பாங்கில் அளிக்கப்படுகின்றது.

இவற்றை ஒட்டியே, அதாவது எந்தெந்த கிரகங்கள் எத்துறையை ஆள்கின்றனர் என்பதை ஒட்டியே, அக்காலத்தில் மன்னர்கள் வருடாந்திர பட்ஜெட்டை அமைத்துக் கொண்டார்கள். தற்போதைய பட்ஜெட் நிலைகளிலும் பஞ்சாங்கக் கணிப்புகளை வைத்து நிர்ணயித்து அந்தந்த ஆண்டுகள், பல்வேறு துறைகள், உற்பத்தி வளம் போன்ற கணக்கீடுகளைக் கொண்டு பட்ஜெட் தயாரிப்பதே ஆன்மீக ரீதியாக நன்கு நன்மை பயக்கும்.

கிரக வாரியாக பொதுப்படையான பலன்களை மட்டும் கருத்தில் கொள்ளாது, அந்தந்த நாடு, மாநிலங்களை ஜாதக, ராசிக் கட்டத்தை வரைந்து பார்த்து நவகிரக பரிபாலனத்தை நிர்ணயித்துப் பட்ஜெட்டை தயாரித்து வந்தால், சமுதாயத்திற்கு மிகவும் உதவும். அதாவது அந்தந்தத் துறை அமைச்சர்கள் அந்தந்த கிரக வழிபாடுகளை மேற்கொண்டு, அந்தந்த ஆண்டிற்கான கிரக அம்சங்களையும், கோசார ரீதியாக அந்தந்த மாநிலம், மாவட்டத்திற்கான கிரக அமைப்புகளையும் அறிந்து தத்தம் துறைகளைத் திறம்பட நடத்துதல் வேண்டும்.

அந்தந்த வாரத்தில், பட்சத்தில், மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் எவ்வகையில் உச்சம், நீசம், சமம் பலன்களைக் கொண்டுள்ளன என்பதை அறிதலும், அறிந்து அவற்றை சமுதாயத்திற்கு அந்தந்தத் துறைகளில் காரியங்களை நடத்துதலும் நன்மை பயக்கும்.

ஒரு நாளில் எந்தெந்த கிரகம் எத்தகைய வலிமை பெற்றுள்ளது என்று அறிந்து செயல்படுதலே நன்று. இவ்வாறு கிரக ஆட்சி மகத்துவத்தை விரித்து விளக்கிடில் பெரிய புராணமாக அமையும். இவை அத்தனையும் சத்தியமான வாக்குகளே, வெறும் மூட நம்பிக்கை என்று எண்ணிக் காலதேவதா மூர்த்திகளின் தோஷங்களுக்கு ஆளாகி விடாதீர்கள்.

மனம், புத்தி , அறிவு இந்த மூன்றுக்குமான விளக்கங்களை நன்கு புரிந்து நடந்திடவும் சந்திர கிரக வழிபாடு உதவும். நல்ல புத்தி, ஸ்திர புத்தி என்றெல்லாம் கேள்வி பட்டு இருப்பீர்கள். புத்தி என்பது கொள்ளும் அறிவைச் சார்ந்து வருவதாகும். புத்தக அறிவு, உலகியல் அறிவு, அனுபவ அறிவு, அனுபூதி அறிவு என அறிவு நிலைகள் பலவகைப்படும். நல்ல அறிவைப் பெறுவதற்கு நல்ல புத்தி தேவை, அறிவு, மனம், புத்தி மூன்றுமே கபால நாளங்களில் ஆக்கம் பெறுவதற்காகவே, இயற்கையில் ஒவ்வொருவரும் நல்ல புத்தி உள்ளவர்களாகவே பிறக்கின்றார்கள். இடையில், வாழ்க்கையில் பெறும் கல்வி, அனுபவம், கர்ம வினைகளின் அழுத்தம் போன்றவை நல்புத்தி நிலையை மாற்றுகின்றன.

மனமும் ஒரு புலனாகவே செயல்படுகின்றது. உண்மையில், நல்புத்தியின்படியே மனம் நடக்க வேண்டும். ஆனால், சுகபோகம், மாயை போன்றவற்றிற்கு ஆட்பட்டு மனமானது புத்தியை விட்டு விலகிச் சென்று விடுகின்றது. புத்தி செயல் இழக்க, இழக்க அறிவு மந்தமாகிறது.

ராம நாம ஜப சக்தி

பிள்ளைகள் போற்றும் வேதமாதவனின் ராம நாம ஜப சக்தி

அன்பு பொங்கும் களங்கமில்லா உள்ளத்தைச் சுமந்திருக்கும் பிள்ளைகளே! உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள், எவ்விடத்திலும் நிறைந்திருக்கும் கடவுள், பிள்ளையார், முருகன் போன்ற பல வடிவங்களில் உடனே நல்வரங்களை அளித்திடக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடவுளிடம் நல்லதையே கேளுங்கள். நீங்கள் கேட்பது உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், நீங்கள் வாழும் உலகத்திற்கும் பயன் தருவதாக இருக்கட்டும். கடவுள் கொடுக்கும் வரை சளைக்காமல் காத்திருங்கள்! பிள்ளைகள் கேட்பதை எல்லாம் நன்றாகக் காது கொடுத்துக் கேட்பதால்தான், “செவி சாய்த்த பிள்ளையார்” என்ற பெயரைக் கொண்டும் பிள்ளையாரப்பன் அருள்கின்றார்.

பிள்ளையாரிடமும், முருகனிடமும் நன்றாக மனம் விட்டுப் பேசுங்கள்! உங்களிடம் நன்றாகப் பேசுவதற்காகவே, கடவுளானவர், சிவபெருமான், பெருமாள், அம்பாள், பிள்ளையார், முருகனாக, உங்களைப் போன்றே மனித வடிவில் கோயிலில் காத்துக் கொண்டிருக்கின்றார். தெய்வங்கள் நிச்சயமாகப் பேசும். வீட்டிலும் கடவுள் படங்களின் முன் அமர்ந்து நிறையப் பூஜித்து வந்தால், வீட்டிலும் கடவுள் பேசி அருள்வார்.

...உங்களைப் போன்றே சிறு பிள்ளையான “வேதமாதவன்” செய்த சேவையைப் பற்றிக் கொஞ்சம் கேளுங்கள். இது ராமாயண காலத்தில் நிகழ்ந்த அனுபூதி!

ஸ்ரீசெவிசாய்த்த விநாயகர் அன்பில்

அனுமாருடைய சேவை அணியில் இருந்த பையனே வேதமாதவன். அக்காலத்தில் பள்ளிகள் கிடையாது. 5 வயதில் சத்குருவின் பாடசாலையில் பிள்ளைகளை விட்டு விட்டு, 12 வயதில் வந்து கூட்டிச் செல்வார்கள். இவ்வகையில் குருகுலவாசமாக, அனுமாரின் குருகுல வாசசாலைக்கு வந்தவனே வேதமாதவன். ஆஞ்சநேயரின் ஆன்மீக சேவைப் படையில் இருந்த வேதமாதவன், பூத்தொடுத்தல், ஆலயத்தைச் சுத்தம் செய்தல் போன்று சிறு சிறு சேவைகளைச் செய்து வந்தான்.

சிறுவயதில் இருந்தே அனுமாரிடம் பக்தியும், அபிமானமும் கொண்டிருந்தான். எப்போதும் ‘ராம நாமம்‘ ஜபித்தவாறு ராமாநாம ஸ்மரணையில் இருப்பவரே அனுமார் என்று கேள்விப்பட்டான். அவரைப் போலவே எந்நேரமும் ராமநாமம் ஓதுதல் வேண்டும் என்று உறுதி பூண்டு எப்போதும், பணிகளின் இடையேயும் கூட ராமநாமம் ஓதி வந்தான். இதைத் தவிர அவனுக்கு வேறு எந்த மந்திரத்திலும் நாட்டம் ஏற்படவில்லை! வேறு மந்திரங்களை ஓதும் போதும் மன ஓடையினுள் ராமநாமத்தை இடைவிடாது ஜபிக்கும் மனோசக்தியையும் சிறு வயதிலேயே பெற்றான்.
“ஹே மாதவா!“ என்றால் திரும்பிப் பார்க்க மாட்டான்., “வேதமாதவன்“ என்று முழுப் பெயரையும் கூப்பிட்டால்தான் திரும்பிப் பார்ப்பான். இப்படியாக வேதமாதவன் அனுமாருடைய சேவகத் துறையில் இருந்து கொண்டு, பலருக்கு பல்வகையான உதவிகளை அசராது ஆற்றி வந்தான்.

ஒரு நாள்...

நல்ல மழையில் ஒரு பக்திக் குழுவினரைக் கடலுக்குள் இருந்த திட்டைக்குத் தர்ப்பணப் பூஜைக்காக அழைத்துச் சென்றான். திரும்பி வருகையில் நல்ல மழை பெய்து, படகினுள் நீர் பெருகியது., எப்படியோ ஒரு வழியாய்ச் சமாளித்து அவர்களுடன் கரை வந்து சேர்ந்தான்.,
மறுநாள் காலை, வேதமாதவன் கடற்கரைக்குச் சென்ற போது அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் நாள் படகில் நீர் நிரம்பிய நிலையில் கஷ்டப்பட்டுக் கரை சேர்ந்த வேதமாதவன். கடற்கரையில் படகை விட்டு விட்டு வந்தானல்லவா? படகில் இருந்த நீர் சிறிது சிறிதாக வடிந்து, அதில் சிக்கிய ஒரு மீன், படகில் நீர் முழுதும் வற்றியமையால் , வெளிச் செல்ல வேறு வழி இல்லாமையால், இறந்து கிடந்தது போலப் படகினுள் கிடந்தது.

“தன் கவனக் குறைவால் தான்” இது நிகழ்ந்தது என்று வேதனையுற்ற வேதமாதவன் மிகவும் வருத்தமுற்றான். இந்த மீனை மீண்டும் நீரில் விட்டு விட்டால், பிற பெரிய மீன்கள், நண்டுகள் இதனைக் கடித்து தின்று விடும். அப்படியே படகிலோ, தரையிலோ விட்டாலோ, பறவைகளும் கொத்திக் கொத்தி அவைகட்கு உணவாகக் கொண்டு விடும்.

தன்னுடைய கவனக் குறைவால் இறந்த அந்த மீனுக்கு ஏதேனும் செய்து, அது நற்கதி அடைய வேண்டும் என்று விரும்பினான். எனவே, மீனுக்கான காருண்யத் தர்ப்பணம் செய்ய விழைந்தான். ஆனால் எப்படிச் செய்வது? இதற்கு “அனுமார்தான் நல்வழி காட்ட முடியும்!” என்று அவன் எண்ணினான். அவன் அனுமார் சேவையில் இருந்தானே தவிர, ஒரு நாள் கூட அவரை அருகில் இருந்து தரிசித்தது கிடையாது..

மீனின் நற்கதிக்காக, மிகுந்த வெறியுடன், வெகு வேகமாக, வேதமாதவன் “ராம், ராம்” என்று ஓதலானான். படகில் கிடந்த மீனைக் கையில் எடுத்த சிறுவன், அதனைக் கண்டு வேதனையில் துடித்து மென்மேலும் தன்னை மறந்த நிலையில், “ராம ்ராம்” என்றவாறு உரக்கவும் ஜபிக்கலானான். என்ன ஆச்சரியம்! அவன் ராமநாமம் ஜபிக்க ஜபிக்க, அந்த மீனுக்கு ஜீவத் துடிப்பு வரத் தொடங்கி, அதன் உடல் சற்றே அசையலாயிற்று. ஆனால் அவன் ராம நாமத்தை ஓதுவதை நிறுத்தி விட்டாலோ அந்த மீன் மறுபடியும் அசைவற்று முன்பு போலவே கிடக்கும். எனவே, அவன் மிகவும் பக்தி சிரத்தையுடன் ராம நாமம் ஓதியவாறே அதற்கு உயிர்த்துடிப்பு வந்தவுடன், நீரில் விட்டு விட்டால் அது பிழைத்துச் சென்று விடும் என்று எண்ணினான்.

ஆனால் அவன் கையில் இருந்து கொண்டு அவன் ராமநாமம் ஜபிக்கும் போது மட்டுமே, அது உயிர்த் துடிப்புடன் நன்கு அசையும், சிறிது நேரம் ராம ஜபத்தை நிறுத்தி விட்டாலோ, மீண்டும் அதன்  உடல் அசைவற்றதாகி விடும். அதனைச் சிறிது தண்ணீரில் விட்டுப் பார்த்து, “ராம் ராம்” என நீருக்குள்ளும் ஓதிப்பார்த்தான். ஆனாலும் அவன் கையில் இருந்தால் தான், அந்த மீனுக்கு உயிர்த் துடிப்பு வந்ததே தவிர, அவனை விட்டு அகன்றால், அது அசைவற்றே கிடந்தது.

இப்போது வேதமாதவனால் என்ன செய்ய முடியும்? அந்த மீனுக்கு ஜீவன் இருக்க வேண்டுமானால், தன் கையிலோ, இடுப்பில் துணியிலோ வைத்துக் கொண்டு இருந்தால் தான் அவனால் அதற்கு ஜீவசக்தி அளிக்க முடியும் என்றாகி விட்டதே! எனவே, எவரும் அறியா வண்ணம் ,அந்த மீனைத் தன் இடுப்பு முடிச்சில் வைத்துக் கொண்டு, “ராம ராம” என்று ஓதி, ஓதியே பிற பணிகளைத் தொடர்ந்தான்.

மீண்டும் என்ன ஆச்சரியம், அந்த மீனிடம் இருந்து எவ்விதமான நாற்றமும்  வரவில்லை! மாறாக, நல்ல சந்தன நறுமணம் ஏற்பட்டு, அந்த இடமே கமகமவென்று மணத்தது.

அவ்வப்போது வேதமாதவன் மீனைத் திறந்து பார்த்துக் கொள்வான். அந்த மீனுக்கு ஜீவசக்தி அளிப்பதற்காகவே அவன் இராப்பகலாக உறங்காது, ஓயாது, ராமநாமம் ஜபிக்க ஜபிக்க....

இவ்வாறாகப் பல நாட்கள் கடந்தன...

தக்க உணவு, ஓய்வு உறக்கம் இல்லாமையால் அவன் உடலும் பலத்த பாதிப்புக்கு ஆளாகியது. இவனுடைய அதீத நிலையையும், குன்றி வரும் ஆரோக்யத்தையும் கவனித்தவர்கள்., அவனிடமிருந்து அபூர்வமான சந்தன மணம் எழுவதையும், அடிக்கடி இடுப்பில் மீனைப் பார்ப்பதையுமாக இருப்பதைக் கண்டு அனுமாரிடம் நடந்தது அனைத்தையும் சொல்லி விட்டார்கள்.

அவரோ நிகழ்ந்ததை எல்லாம் தீர்க தரிசனமாக உணர்ந்தறிந்து. “அந்த மீனுக்கு தன் ராமநாம ஜபப் பலன்களை எல்லாம் வேதமாதவன் அர்ப்பணித்து வருகின்றான். அந்த மீனுக்கு ராமதரிசனம் கிட்டிட வேண்டும்,., இதன் மூலம் தான் இந்த அனுபூதிக்கு ஒரு முடிவு கிட்டும்!” என்று உறுதியாக உரைத்து விட்டார். அனைவரும் வேதமாதவனிடம் சென்று நடந்ததைச் சொன்னார்கள். வேதமாதவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

இந்த மீனுக்கு ராம தரிசனம் கிட்டும், வரை தான் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக அவன் கவலைப்படவில்லை. அந்த மீனுக்கு “எவ்வாறு ராம தரிசனத்தைப் பெற்றுத் தருவது” என்பது தான் அவனுக்குப் புரியவில்லை. எனினும், சீதாப் பிராட்டி தந்த துளசி மணி மாலையை அணிந்து, அதன் மணிகளைச் சுவைத்து ராமநாமச் சுவையைச் பகுத்துரைத்த அனுமார், தன் நெஞ்சைத் திறந்து காட்டி “ராம தரிசனம்” பொலிவதை உணர்த்தியதை நினைத்துக் கொண்டான்.

எனவே, அனுமாரின் ஹிருதய தரிசனம் மூலம், இந்த மீனுக்கு உரிய ராம தரிசனத்தைப் பெற்றுத் தர முடியும் என அவன் உறுதியாக நம்பினான். அவன் மிகவும் தைரியமாக அனுமாரின் அருகில் சென்று, எதையும் கேட்காமல் அவரருகே சென்று நின்றான், அவன் வருகையின் காரணத்தைத் தீர்க தரிசனமாக உணர்ந்த அனுமாரும், “வேதமாதவா! ராம தரிசனத்தை நீ பெற்றால்,  உன் கண்கள் பார்வையை இழந்து விடும்! உனக்கு இன்னமும் நேத்ர சக்திகள் நன்கு விருத்தியாக வேண்டும். நீ பார்வையை இழப்பதை நானும் விரும்பவில்லை. இந்த மீனோ உன் கையில் இருந்தால் தான் ஜீவசக்தியுடன் இருக்கும்! இப்போது என்ன செய்வது என்பதை நீயே சொல் பார்க்கலாம்!” என்றார்.

வேதமாதவன் சற்றும் யோசிக்காமல், “பிரபோ! அடியேன் பார்வை இழப்பதைப் பற்றிச் சற்றும் வருத்தம் இல்லை! அடியேனுடைய பிழையால் இந்த மீனுக்கு ஏற்பட்ட கதியில் இருந்து எப்படியாவது அது மீண்டு நற்கதியை அடைய வேண்டும். அடியேன் கண்களை நன்றாக இறுக்கி மூடிக் கொள்கிறேன்! இந்த மீனுக்காவது ராமதரிசனத்தைப் பெற்றுக் கொடுங்கள்!” என்று பக்திப் பெருக்கால் உரைத்தான்.

“ராம் ராம்” என்று பெருங்குரலில் ஓதியவாறே அவன் கண்களை நன்கு இறுக்கி மூடிக் கொண்டது மட்டும் அல்லாமல், கண்களைச் சுற்றித் துணியையும் இறுக்கிக் கட்டிக் கொண்டு விட்டான்.

வீணாதாரியாகக் காட்சி தந்த ஆஞ்சநேயர், உடனே வீணையை எடுத்து மீட்டி, நாதஜோதியின் மூலம் அந்த மீனுக்குத் தன் நெஞ்சில் நிறைந்த ராம தரிசனத்தைப்,பெற்றுத் தர..., அது ஜோதி வடிவாய் வானில் மறைந்து முக்தி நிலையைத் தழுவியது, ஆஞ்சநேயர் வேதமாதவனைத் தழுவி, அவனுடைய தியாகத்தை மிகவும் மெச்சிப் போற்றினார்., வீணையைத் தாங்கியவராய் ஸ்ரீஆஞ்சநேயத் தரிசனம் தந்தார்.

“இவ்வாறு, அப்பழுக்கற்ற ராம பக்தியைப் பூண்டதினால், ராம தரிசனம் தானாகவே முக்திக்கும்,! ஸ்ரீராம தரிசனமின்றி முக்தி நிலையை அடைதல் கடினமே!” என அருளினார்.

இப்போது வேதமாதவனுக்கு பெரும் வருத்தம் ஏற்பட்டு விட்டது! “ஸ்ரீராம தரிசனமின்றி முக்தி நிலையை அடைதல் கடினமே’ என உரைத்து விட்டாரே! ராம தரிசனத்தை விடப் பெரியதா முக்தி நிலை?

அனுமன் திகைத்துப் போனார்! “ராம நாமத்திற்கே, ராம தரிசனத்தையும் முக்தியையும் பெற்றுத் தரவேண்டிய கடமை உண்டே! ராம தரிசனத்தை விட முக்தி நிலை பெரிது என்பது போலன்றோ நாம் உரைத்து விட்டோம்!” என அவரும் மலைத்துப் போனார்.

எனவே அவர் வேதமாதவனிடம், “ராம நாமமே உனக்குக் கலியுலகில் ராம தரிசனத்தைப் பெற்றுத் தருவதாக!” என்று வரமளித்தார்.

ஸ்ரீராமரும் திரேதா யுகத்தில் அயோத்யாவில், சரயு நதியினுள், நேரே உள் இறங்கித் தன் அவதார நிறைவைப் பூர்த்தி செய்தார் அல்லவா! அப்போது மீன் வடிவில் அனைவருக்கும் காட்சி தந்தார். கலியுகத்தில்  ஆஞ்சநேயர் வாக்காக, தியாகராஜ சுவாமிகள் தான் பூஜித்த ஸ்ரீராமர் பரிவாரச் சிலைகளை ஆற்றிலே தூக்கிப் போட்டு மீண்டும் பெற்ற அனுபூதியை அறிவீர்கள் அல்லவா!  இவ்வாறாக அச்சிலைகளில் “ஸ்ரீராமரின் மச்சவாத்சல்ய ஸ்பரிசம் கிட்டிய பிறகே, தியாகராஜ சுவாமிகளுக்கு ஸ்ரீராமரின் திவ்ய தரிசனம் கிட்டியது.

மேலும் 96 கோடி முறை ராமநாமம் ஓதி சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஸ்ரீராமதரிசனம் பெற்ற அனுபூதி நினைவுக்கு வருகிறதா! எனவே ஆழ்ந்த நம்பிக்கையுடன , பிள்ளைகளே ராம், ராம் என எப்போதும் ஓதி வாருங்கள்!

ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்!

நட்சத்திர சமையல்

பெண்கள் அறிய வேண்டிய ஆன்மீகச் சமையல் முறை , ரோஹிணி நட்சத்திர சக்திகள் நிறைந்த தயிர் இட்லி!

பணக் கஷ்டங்கள், கடன் சுமையைத் தணிக்க வல்ல ஆன்மீக உணவை அறிவீர்காள்!

“அம்மாமாருங்கோ, ஐயாமாருங்கோ, நல்லா பாருங்கோ....!” ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகள்!

ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகள் தம் சிஷ்ய கோடியாம் சிறுவனுடன் பல ஆண்டுகளுக்கு முன் ஆலயங்களிலும், தெருக்களிலும் பாமர மக்களிடையே ‘இறைப் பிரச்சாரம்’ ஆற்றுகையில், “அம்மாமாருங்கோ, ஐயாமாருங்கோ, நல்லா பாருங்கோ...!” என்று எளிமையாக நடைமொழியில் தொடங்கியே ஆன்மீகப் பேரூரை ஆற்றுவார்.

கோவணாண்டியாய் வலம் வந்த சித்புருஷரான அவரே, அதே சமயத்தில் சென்னைத் துறைமுகத்தில் வெளிநாட்டார் கப்பலில் வந்து இறங்குகையில், பிரெஞ்ச், ஆங்கிலம், ஸ்பானிஷ் எனப் பல மொழிகளிலும் அந்தந்த நாட்டவரைப் போலவே மிகவும் திவ்யமாகப் பேசுவார். ஒரே சமயத்தில் பல இடங்களில் தோன்றிடுவார். சில சமயங்களில் அவர் பேசுவது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வாக்கியங்களாகக் காதில் விழும் அற்புதமும் நிகழும்.

எனவே, சித்தர்களே அனைத்து மக்களுடைய நடைமுறை மொழி பாவனையிலும், மெட்ராஸ் தமிழ் போல பாமரர்களுடைய கொச்சையான ஒருமை வாடை பாஷையிலும் கூட நன்கு எளிமையாகப் பேசி, ஜாதி, மத, இன, குல பேதமின்றி ஆன்மீக சக்திகளை யாவருக்குமாய் அளிக்கின்றார்கள். எப்போதும் சிவச் சித்தத்தில் உறைந்து, பரமானந்தத்தில் திளைக்கும் சித்தர்களுடைய ஒவ்வொரு வார்த்தையும், எழுத்தும் மிகவும் சக்தி வாய்ந்தவையாகும்.
ஆனால் சித்தர்களுடைய ஒவ்வொரு எழுத்துக்கும் இறை மகத்துவம் உண்டு என்பதை நடைமுறையில் உணர்ந்து அறிவது மிக மிகக் கடினமே, ஏனெனில், பூமியில் உலா வரும் சித்தர்பிரானை இவரே உத்தமச் சித்தர்களுள் ஒருவர். மகத்தான, தெய்வீக சக்திகளைப் பூண்டவர் என்று தெரிந்து கொண்டால், கலியுக மனிதர்கள் சித்தர்களைச் சும்மாவா விடுவார்கள்?

அவர்களைச் சுற்றி, சுற்றி வந்து, மொய்த்துப் பிடுங்கி “இதைத் தா... அதைத் தா...!” என்றல்லவா வருத்திப் பிழிந்து விடுவார்கள்.

கேட்ட விருப்பத்தை அவர் நிறைவேற்றவில்லை என்றாலோ, துரத்தித் துரத்தித் துன்புறுத்துவார்களே! எப்பொருளையும் மூலிகா சக்திகளால் தங்கமாக மாற்றவல்ல வல்லம் சித்தரைச் சுயநலவாதிகள் துன்புறுத்தியதால் தாமே, அவர், “தங்க மாற்று மூலிகைகள் தரணியில் அற்றுப் போவதாக!” என்று சாபமிட்டு மறைந்து போனார்.

இதனால்தான், கலியுகத்தில் தினமுமே எண்ணற்றச் சித்தர்கள் திருஅண்ணாமலையில் கிரிவலம் “வலம்” வந்தாலும், பல சிவத்தலங்களிலும் தினமும் தூல, சூக்குமச் சரீரங்களில் பூஜித்து வலம் வந்தாலும், எவருமே தம்மைச் சற்றும் வெளிக்காட்டிக் கொள்வதில்லையே! ஆழ்ந்த நம்பிக்கை கொண்டோர்க்கே, சித்தர்களின் தரிசனம் ஓரளவு புலப்படும்.

கலியுகத்தில் இறைவன் மீதும், சத்குரு மீதும் ஆழ்ந்த நம்பிக்கையைக் கொள்வது கடினமானது என்பதால்தான், சித்தர்கள் மிக எளிமையான வழியில், கலியுக வாழ்விற்கு ஏற்பப் பல அற்புதமான நல்வழிகளை தந்துள்ளனர், இவற்றில் ஒன்றே, இல்லறப் பெண்களுக்கான ஆன்மீகச் சமையல் அறநெறிக் குறிப்புகளாகும். இவை யாவும் சித்தர்களின் ஆதிகிரந்தப் பத்திர வாக்கியங்களில், “நளபூபதித்” தொகுப்பில் காணப்படுகின்றன.

நளச் சக்கரவர்த்தியும், பாண்டவர்களில் பீமசேனனும் இவற்றில் பலவற்றைத் தக்க மஹரிஷிகள் மூலம் கற்றார்கள். இந்த நளபூபதித் தொகுப்பில் நட்சத்திராக்னிப் பாதசுத அத்தியாத்திலிருப்பதே ரோஹிணி நட்சத்திர சக்தி விளக்கங்களாகும். ஆம், ஒவ்வொரு நட்சத்திரத்தாரும் அறிந்து கொள்ள வேண்டிய ஆன்மீகச் சமையல் முறைகள் நிறைய உண்டு.

பொதுவாக, ரோஹிணி நட்சத்திரப் பெண்கள் வாழ்வில் களங்கமற்ற அழகையும், வேதநற்குண அமைதியையும் விரும்புவர்களாவர். ரோஹிணி நட்சத்திரத்திற்கு 360 கலைகள் உள்ளன. ஒவ்வொரு கலைக்கும் உரித்தான ஆன்மீகச் சமையல் வகை முறைகளும் ஏனைய கல்வி, தொழில் பற்றிய விளக்கங்களும் நிறைய உண்டு.

இவற்றைத் தக்க உத்தமர்களின் மூலம் சிறிது சிறிதாக அறிந்து, இவற்றை முறையாகச் சமைத்து ரோஹிணிச் சந்திரச் சக்கரத்தின் முன் அமர்ந்து, அன்னபூரணித் தேவிக்கான துதிகளை ஓதிப் படைத்திடுக! பிறகு உற்றம், சுற்றத்திற்கு அளித்து, தான தர்மமாகச் செய்து வந்திடில் விசேஷமான பலன்களை எளிதில் பெறலாம். எந்த நட்சத்திரதினருக்கு எத்தகைய சமையல் முறைகள் ஆன்மீகப் பூர்வமாக ஏற்று வரும் என்பதை அறிந்து கடைபிடித்தல் சிறப்பானப் பலன்களைத் தருவதாகும்.

ரோஹிணி நட்சத்திரச் சமையல் குறிப்புகளின்படி, ரோஹிணி நட்சத்திரக்காரர்கள் சமைத்து வந்தால், ரோஹிணி நட்சத்திரத்தின் 360 கலைகளிலும் தாராபல சக்திகள் நன்கு விருத்தியாகி பல்கிப் பெருகின்றன. ஆரோக்கியம், மன அமைதி, சாந்தமான வாழ்க்கை, முறையான செல்வ விருத்தி, நிம்மதியான மண வாழ்வு, சாந்தம் பூரிக்கும் குடும்பம் போன்றனவாகச் சிறப்பான பலன்கள் பலவும் இத்தகைய ஆன்மீகச் சமையல் மூலமாக நன்கு கிட்டிடும்.

ரோஹிணி நட்சத்திரத்தின் 360 கலைகளில் ஒன்றான பருபதக் கலையைப் பற்றி இங்கு ஓரளவு குருவருளால் காண்போம். பருபதக் கலையில் எத்தகைய உணவு வகைகள், எவ்வகையில் ஆக்கப் பெற்றால் எவ்வகையில் பலாபலன்கள் வந்தமையும், குடும்பத்தில் ஆனந்தம் பூரிக்கும், சாந்தமான வாழ்க்கை புலரும் என்பதை ஆன்மீகச் சமையல் முறைகள் விளக்குகின்றன.

இத்தகைய அரிய ஆன்மீக விஷயங்களை, வரம் தரும் சாதனங்களை எந்த அளவிற்குப் பிறருக்கு எடுத்து உரைக்கின்றீர்களோ, அந்த அளவில் பருபதப் புண்ணிய சக்திகள் வந்து சேர்ந்து புண்ணிய வரமாய்ப் பெருகும்.

தற்போதையக் கலியுலக மனித சமுதாயத்தில், பல குடும்பங்களையும் வருத்துவது பணக் கஷ்டங்களும், கடன் சுமைகளும் ஆகும். தேவகடன் (பூஜைகள்), ரிஷிகடன் (அர்க்யம், விரதம், ஹோமம் போன்றவை), பித்ரு கடன் (தர்ப்பணம், படையல், திவசம்) இம்மூன்றையும் ஒழுங்காக நிறைவேற்றாத குடும்பங்களில்தான் கடன் சுமை பெருகும்.

பிறர் பொருளை அபகரித்தல், பொய் பேசுதல், தவறான எண்ணங்கள் தோன்றுதல், பெற்றோர்களுக்கான கடமைகளை ஆற்றாதிருத்தல் போன்றவற்றாலும் பணக் கஷ்டம், கடன் பிணி ஏற்படும். இவற்றை மிகக் குறுகிய காலத்திலோ, ஒரேயடியாகவோ நீக்குவது மிக மிகக் கடினமே, ஆன்மீக உணவு முறை, மறையோதுதல், அன்னதானம் போன்றவற்றின் மூலமே, இவற்றுக்கு கணிசமான அளவில் தீர்வு காண முடியும்.

அலுவலகப் பெண்கள் பணிக்கு செல்லாத அக்காலத்தில், இல்லத்தில் இருந்தவாறே, பெண்கள் தினமும் பல எளிய வழிபாடுகளை ஆற்றுவதன் மூலமாகக் குடும்பத்திற்குப் பெரும் துணையாக, தம் பூஜா பலன்களினாலும் ஆன்மீகத் தூணாகவும் நின்றனர்.

எனவே கலியுகத்திலும் பெண்கள் ஆன்மீக ரீதியான சமையல் வழிமுறைகள் மூலமாக மிக எளிதில் குடும்பத்திற்குப் பல புண்ணிய சக்திகளை ஈட்டித் தந்து குடும்பத்திற்கு நல்வரப் பலன்களையும், பல துன்பங்களுக்குமான தீர்வுகளையும் எளிதில் பெற்றுத் தரமுடியும்.

இவ்வகையில் ரோஹிணி நட்சத்திரத்தாருக்கு உரியதாக இங்கு நாம் காண்பது  “தயிர் இட்லி” உணவாகும் இது பித்ரு சக்திகள் நிறைந்த உணவாகும். பித்ரு தோஷங்களாலும், மூதாதையர்க்கு முறையான தர்ப்பணம், திவசம் அளிக்காமையாலும் கடன் சுமையும், பணக்கஷ்டமும் ஏற்படுவதால், இத்தகைய பித்ரு தோஷ நிவர்த்தி உணவைச் சமைத்து, ஸ்ரீநரசிம்மருக்கு உரிய ருணஹரத் தோத்திரம் ஓதிப் படைத்து உண்டு தானமளிப்பதும் கடன் நிவர்த்திக்கு மிகவும் உதவுவதாகும்.

ருணஹரத் தோத்திரம் – கடன் சுமைகளைப் போக்கும் ஸ்ரீநரசிம்ம ஸ்தோத்ரம்!

1. தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ் தம்ப ஸமுத்பவம்|
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ||
2. லக்ஷ்ம்யாலிங்கித மாமாங்கம் பக்தானாம் வரதாயகம் |
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ||
3. ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம் |
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ||
4. ஸ்மரணாத் ஸர்வபாபக்னம் கத்ரூஜ விஷ நாசனம் |
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ||
5. ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசனம் |
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ||
6. ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரணம் |
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ||
7. க்ருரக்ரஹை: பீடிதானாம்: பக்தானாமபயப்ரதம் |
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ||
8. வேதவேதாந்த யக்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம் |
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ||
9 ய இதம் படதே நித்யம் ருணமோசன ஸ்மக்ஞிதம் |
அந்ருணீ ஜாயதே ஸத்ய: தளம் சீக்ர மவாப்னுயாத் ||
ஸம்பூர்ணம்

இந்தத் தயிர் இட்லி உணவை ஆன்மீக ரீதியாக குறித்த நல்வழியில் சமைத்து உண்டு, தானமாக அளிப்பதால், சந்திர கிரகத்தின் நீச சக்தி வேகம் தணியும், மானப் பிரச்சனையிலிருந்து இத்தகைய தர்மம் செய்பவர்களையும், தர்மம் பெறுபவர்களையும் சந்திர மூர்த்தி காக்கின்றார்.

தயிர் இட்லியை நன்கு சமைத்துப் படைத்து, உற்றம், சுற்றத்துடன் உண்டு, நரசிம்மரையும், சந்திர மூர்த்தியையும் வேண்டித் தானமளிப்பதால், செய்தோர்க்கு, செய்த குடும்பத்திற்கும், தானம் பெறுவோர்க்கும் நல்ல மகிழ்ச்சியும், தான தர்மப் பலன்களும் நன்கு கைகூடும்.

தனரேகை உள்ளவர்கள் மல்லிகைப் பூக்களையும் சந்தனக் கல், சந்தனக் கட்டைகளைத் தானமாக அளித்தால், செல்வம் நன்கு விருத்தியாகும். இதேபோல இந்தத் தயிர் இட்லியை, இயற்கையாகவே நந்தகோபதேவ சக்திகளை உடைய ரோஹிணி நட்சத்திரக்காரர்கள் செய்வது மிகவும் விசேஷமானதாகும்.

உணவைச் சமைப்பதற்கான சாதனங்களிலும், திரவியங்களிலும், பொருட்களிலும், தானியங்களிலும், காய்கறிகளிலும் ஆன்மீக சக்திகள் உள்ளன, இவற்றை நன்கு அறிந்து சமைப்பது என்பதே ஆன்மீக குறிப்பின் முதல் பாடமாகும்.

தயிர் இட்லிக்குத் தேவையான பொருட்கள்!

1. பச்சரிசி – 2 கப் (வேதமாதவ சந்திர சக்திகள் நிறைந்தது)
2. உளுத்தம் பருப்பு – 1 கப் (பாலாமிர்த சந்திர சக்திகள் நிறைந்தது)
3. ஜீரகம் – 2 டீ ஸ்பூன் (விதான அமிர்த தேவதா சக்திகள்)
4. மிளகு – 2 டீ ஸ்பூன் (சீதளா தேவி சக்திகள்)
5. கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் (பிரகஸ்பதி, மஞ்சள் தேவி மாதா சக்திகள்)
6. கல் உப்பு – 2 1/2 டீ ஸ்பூன் (லவணேஸ்வரி துர்க்கா சக்திகள்)
7. ஏடு நீக்கிய புளித்த தயிர் – 2 கப் (நந்தகிருஷ்ண சக்திகள்)
8. பச்சை மிளகாய் – 10 (மாசானி அம்மன் சக்திகள்)
9. சமையல் சோடா – 1/2 டீ ஸ்பூன் (குஹபுத்ரீ தேவி சக்திகள்)
10. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் (சூரிய, சனீஸ்வர சக்திகள்)

அந்தந்த தேவதா மூர்த்திகளின் நாம ஜபத்துடன், தேவதா சிந்தனையுடன் ஒவ்வொரு சமையல் சாதனத்தினையும் பயன்படுத்துவது நன்று.

அடுப்பை ஏற்றும் போது “அக்னீஸ்வரா போற்றி” என்றும், தீக் குச்சியை ஏற்றும் போது “ருத்ராக்னீஸ்வரா போற்றி!” என்றும், பாத்திரத்தில் தண்ணீர் விடும் போது “ஜலகண்டேஸ்வரா போற்றி” என்றும், மிக்சியின்/கிரைண்டரின் சுவிட்சைப் போடும் போது “அகோரயா நம”  “அகோரேஸ்வராய நம: அகோரேஸ்வரா போற்றி!” என்றும் ஓதிடுக!

உளுத்தம் பருப்பையும், அரிசியையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். நீருள்ள பாத்திரங்களை ஒரு மரப் பலகை மேல் பிருஹதீஸ்வரரை வேண்டி வைத்தல் நன்று, மரப்பலகை இல்லாவிடில் பூமாதேவியை வேண்டிப் பாத்திரங்களைத் தரையில் வைக்கவும், இட்லி மாவிற்காக அரிசியைக் கிரைண்டரில் அரைக்கும் போது நடராஜரையும், அஷ்டதிக்குப் பாலகர்களையும் வேண்டிடுக!

பச்சை மிளகாயை அரைக்கையில் “மாசானி அம்மனே போற்றி!” என்று கூறி அரிசியுடன் சேர்த்து கரகரப்பாய் அரைத்திடுக! கிரைண்டரில் இருந்து மாவை எடுக்கும் முன், பருப்பு மாவு, அரிசி மாவை ஒன்றாய்க் கலந்து, புளிப்புத் தயிரையும், மிளகு, சீரகம், கடலைப் பருப்பையும் கலக்கவும்.

பிறகு மாவு பொங்கி வருவதற்காக 15-20 மணி நேரம் வரை மூடி வைக்கவும். பொங்கிய மாவு தரிசனம் சுபமங்கள சக்திகளை உடையது. பொங்கிய மாவைத் திறந்து பார்க்கும் போது, “ஸ்வேத விநாயகா சரணம், வெண்காட்டீசா சரணம், ஸ்வேத விநாயகா போற்றி!” என ஓதி வணங்கிடவும்.

சமையல் சோடாவை இட்லி தயாரிக்கும் முன் எண்ணெய் சூடு செய்து இட்லி மாவுடன் கலக்கவும்., குக்கர் தட்டில் சாதாரண எண்ணெயைத் தடவி, தைல நாயகியே போற்றி” என்று ஓதி, ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அங்குல உயரத்திற்கு மாவை ஊற்றி, இட்லியை ஆவியில் நன்கு வேக வைக்கவும். இட்லி வெந்தவுடன் திறந்து பார்க்கும் போது, “வாயு மூர்த்தியே போற்றி, சரத்சந்த்ர மூர்த்தியே போற்றி” என்று ஓதி இறக்கவும்.

பிறகு தயிர் இட்லியை ரோஹிணி நட்சத்திர லிங்கத்திற்குப் படைத்து, உண்டு சூடாகத் தேங்காய் சட்னியுடன் தானமளிக்கவும். அந்தந்தக் கிழமைக்கான வண்ணத்தில் சட்னி அரைத்து தயிர் இட்லியுடன் அளித்தல் சிறப்புடையதாகும். பச்சை அல்லது வதக்கிய வெங்காயச் சட்னியை முற்றிலுமாகத் தவிர்க்கவும்.

அமுத தாரைகள்

1. நான்கு விதமான நவராத்திரி விழாக்கள் ஒரு தமிழ் வருடத்தில் அமைகின்றன. பொதுவாகப் புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுநாள் கொண்டாடும் நவராத்திரி சாரதா நவராத்திரி ஆகும். பங்குனி மாத அமாவாசையை அடுத்து வருவது வசந்த நவராத்திரி, லலிதா நவராத்திரி (ராஜ நவராத்திரி, மாதங்கி நவராத்திரி), மகாவராஹி நவராத்திரி (மேதாவித்யை நவராத்திரி) என்பவை, பிறவகை நவராத்திரிகள் ஆகும். இந்த நான்கையும் வருடம் தோறும் பக்தியுடன் குருவருளால் கொண்டாடுவோர்க்கு நிச்சயமாகத் தீர்க சுமங்கலித்துவ சக்திகள் நன்கு பொலியும்.

2. நவராத்திரியின் மகத்துவத்தைத் தெரிந்தவர்களும், வசதி உள்ளவர்களும், நடுத்தர வர்கத்தினரும் மட்டுமே நவராத்திரி விரதத்தை, விழாவைக் கொண்டாடி விட்டால், இதனைப் பற்றி ஒன்றுமே அறியாத ஏழைகளும், பாமரர்களும் என்றுதான் இவற்றைப் பற்றி அறிவது, இவற்றைக் கொண்டாடுவது?

வடகுரங்காடுதுறை

இதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ஜாதி, மத, பேதமின்றிப் பலரும் ஒன்று சேர்ந்து, சத்சங்கங்களை அமைத்து, சிறு சிறு தெய்வீக பொம்மைகளையேனும் வாங்கி, அவற்றை ஏழைக் குடும்பங்களுக்கும், குடிசை, சேரிவாசிகளுக்கும் தானமாக அளித்து இதன் மகத்துவத்தை விளக்குதலும் மகத்தான இறைச் சமுதாயப் பணி அன்றோ? அவரவர் வீட்டிற்குள்ளேயே கொலு வைத்தாலும், பலரையும் அழைத்தும், மேலும் பொது வழிபாட்டுச் சாலையான ஆலயங்களில், நூற்றுக் கணக்கான பொம்மைகளைத் தானமாக அளித்து, பிரம்மாண்டமான அளவில், பிரபஞ்சக் காட்சி போல் கொலு அமைத்து, ஊர் மக்கள் அனைவரும் தரிசிக்கும்படி இறைச் சேவை புரிதலும் மகத்தான சமுதாய இறைப் பணிதானே!

3. சமுதாயத்தின் அனைத்துப் பொருள் உற்பத்தி, மழை அளவு, தட்ப வெப்ப நிலை, தான்யவளம், மக்களுடைய ஒழுக்கக் குணங்கள், சமுதாய அமைதி, கனிவர்கங்கள், பால் வளம், தொழில், சன்மார்க்கம் போன்ற பலவும் நவகிரக ஆட்சி நிர்மாண நியதிகளாக அமைந்துள்ளன.

4. “குழந்தைகளின் தெய்வீகத்தை ரட்சிப்போம்”, “Save Child’s Divinity” என்ற இறை அறிவொளி இயக்கமானது உலக இயக்கமாக மாறி ஆற்றலும், ஆக்கமும் வளமும் பெற்றால்தான் மனித சமுதாயத்தில் தெய்வீகப் பூர்வமாக ஜாதி, மத, குல, இன வேறுபாடுகள் இன்றி, அமைதியும், சாந்தமும், நல்லிணக்கமும் மிளிரும்.

5. பிரதமைத் திதி நாளில் நீர்வீழ்ச்சிகளில் நீராடி, புத்தாடைகள் அணிந்து, நீராடிய ஆடைகளை உடனேயே தானமளித்தல் சிறப்பான பலன்களைத் தரும். மலைச் சுனைத் தீர்த்தத்தில் அன்னம் வடித்துப் படைத்தலும், அருவி நீரில் சாதத்தை இடுதலும், குலதெய்வத்தை முறையாக வழிபடாத தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கான நல்வழிகளைப் பெற்றுத் தரும்.

6. சிசுக்கள் முதல் முதியோர் வரை அனைத்துப் பருவத்தினரும் நிறைதலே மானுட சமுதாயப் பேராண்மை! எனவே பிள்ளைப் பிறப்புத் தடையை ஆன்மீக ரீதியாக தர்ம நெறிகள் ஏற்பதில்லை.

7. திருவையாறு அருகே, கணபதி அக்ரஹாரம் ஊரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள வடகுரங்காடு துறை ஸ்ரீதயாநிதீஸ்வரர் ஆலயமே, பிரதமைத் திதி தோறும் அடிப்பிரதட்சிணத்துடன் வழிபட வேண்டிய சிவாலயமாகும்.

8. புதன் கிழமை தோறும் அறிவு, புத்தி, மனம் மூன்றையும் பற்றி  நன்கு சிந்திக்க வேண்டும். ஆத்மவிசாரம் என்பது நல்ல புத்தியை ஆக்கம் பெறச் செய்து, புத்தியைப் பண்படுத்தி, மனதை நல்புத்தியின்பால் இருக்கச் செய்வதாகும்.

9. புதன்கிழமையில் புத்திகளுக்கான கபாலச் செல்கள் நன்கு ஆக்கம் பெறும் வகையில் ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம் போன்ற புத்தியை நன்கு பிரகாசிக்கச் செய்யும் பௌம்ய சக்திகளையும் நன்கு ஆக்கப்படுத்திக் கொண்டிட வேண்டும். எனவே புதன் கிழமை தோறும் முந்திரி, பாதாம் பருப்பு, முற்றிய தேங்காய், வெண்டைக் காய், வல்லாரைக் கீரை போன்ற ஞானசக்திப் பண்டங்களால் பூஜித்தும், உணவுப் பண்டங்களை ஆக்கியும், தானமளித்தும் உங்கள் பிள்ளைகள் நல்ஒழுக்கத்தில் சிறப்பதற்காக ஆவன செய்யுங்கள். நடத்தை தவறிய பிள்ளைகள் சீர்திருந்திட, புதன் கிழமை தோறும் கும்பகோணம் – புளியஞ்சேரி அருகில் உள்ள இன்னம்பூர் சிவாலயத்தில் (அகஸ்தியர் ஆதிசிவனிடமே பாடம் பயின்ற தலம்) வழிபட்டு வரவேண்டும்.

தொடரும் ஆனந்தம்...

ஆஞ்சநேயரின் குருகுலத்தில் வசித்த வேதமாதவன் என்ற பக்தி மிகுந்த சிறுவன் மாதவா என்று கூப்பிட்டால் கூட திரும்பிப் பார்ப்பதில்லை, வேதமாதவன் என்று முழுப் பெயரையும் அழைத்தால்தான் திரும்பியே பார்ப்பான் என்று நாம் ஏற்கனவே கண்டோம்.

இவ்வாறு அடியார்களின் முழுப் பெயரையும் பிரயோகிப்பதால் அவர்களுக்கு ஏற்படும் பலாபலன்களையும், பெயர்களைச் சுருக்கும்போது அந்த பெயரை உடையவர்களுக்கும், அழைப்பவர்களுக்கும் ஏற்படும் வேதனையையும் நம் சற்குரு பல இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளார். நம் ஆஸ்ரமத்தில் மணி என்ற நாமம் கொண்ட பலர் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு அடைமொழியை இட்டு அவர்களை தெளிவாகச் சுட்டிக் காட்டியதுடன் பாலசுப்ரமணியன் என்றவாறு அவர்களின் முழுப் பெயரையே எப்போதும் அழைத்து அடியார்களுக்கு வழிகாட்ட நம் சற்குரு தவறியதே இல்லை.

என்னதான் இந்த பெயர்ச் சுருக்கம் fancy ஆக இருந்தாலும், வசதியாக இருந்தாலும் நம் சற்குரு அதை அங்கீகரிப்பதே இல்லை. உதாரணமாக, நம் சபையில் V.அச்சுதநாராயணன் என்ற நாமம் கொண்ட ஒரு அடியார் இருந்தார். அவர் தன்னுடைய பெயரைச் சுருக்கி VAN என்று குறிப்பிட்டபோது இது தவறு என்று தன்னுடைய பல சொற்பொழிவுகளிலும் சுட்டிக் காட்டியுள்ளார் என்பது நீங்கள் அறிந்ததே.

இதற்கு முக்கிய காரணம் நாமம் என்பது ஒருவருடைய ஆன்ம சக்தியைக் குறிப்பதாகும். எனவே நாம் பெயரைச் சுருக்கி அழைக்கும்போது அந்த ஆன்ம சக்தியைக் குறைத்தவர் ஆகிறோம். மேலும், வேதமாதவன், மாதவா என்று அழைக்கும்போது திரும்பிப் பார்த்தால் அடுத்தவன் உடைமையான பெயருக்கு ஆசைப்பட்டு திரும்புவதாகத்தானே அர்த்தமாகிறது. இத்தகைய உயர்ந்த நிலையில் இருந்தவனே வேதமாதவன்.

பாணினி என்ற கணித மேதையின் வரலாறு நீங்கள் அறிந்ததே. ஒருமுறை 12 பால் பாத்திரங்களில் ஒன்றில் மட்டும் ஒரு முத்தை இட்டுக் கரைத்து விட்டு, முத்துள்ள பாத்திரம் எது என்று அவரைக் கேட்டபோது, “அவர் இந்த சாதாரண வேலைக்கெல்லாம் அடியேன் வரவேண்டுமா என்ன, என் பையனைக் கேளுங்கள் அவன் சொல்வான்...”, என்று கூறினார். அவ்வாறே அவர்களும் பாணினியின் குழந்தையை அழைத்து கேட்டபோது அவன் அந்த 12 பாத்திரங்களையும் 12 ராசிக் கட்டங்களிலும் வைக்குமாறு கூற அவர்கள் அவ்வாறே 12 பாத்திரத்தையும் வைக்க, அந்தப் பாத்திரங்களைப் பார்க்காமலேயே கடக ராசியில் இருக்கும் பாத்திரத்தில் உள்ள பாலில்தான் முத்து கரைக்கப்பட்டிருக்கிறது என்று கூறினான். அனைவரும் ஆச்சரியத்துடன் இது எவ்வாறு சாத்தியமாயிற்று என்று அந்தச் சிறுவனைக் கேட்க, அவனோ, “முத்து கரைக்கப்பட்ட பாத்திரத்தில் இருந்த பாலின் உயரம் முத்து கரைக்கப்பட்டதால் சிறிதே கூடியது...”, என்று கூறினான். இவ்வாறு கடக ராசி முத்திற்கு உரித்தான சந்திர பகவான் ஆட்சி கொள்ளும் ராசி என்பதும் அது மனிதர்களின் தினசரி கோசர பலன்களைப் பாதிக்கவல்லதும் என்பதும் இதன் மூலம் தெளிவாகின்றது அல்லவா?

இந்தச் சிறுவனே அனுமார் குருகுலத்தில் வேதமாதவனாக தோன்றியவன். ஒரு சிறு முத்தே பாலின் உயரத்தை மாற்றவல்லது என்றால் ஆயிரக் கணக்கில் கூறப்படும் ஒரு நாமம் ஒரு மனிதனை எந்த அளவில் பாதிக்கும்? இந்த பாதிப்பு அந்த நாமம் அழைப்பவர்களை பாதிக்கக் கூடாது என்ற உயர்ந்த நோக்கில்தான், தியாக மனப்பான்மையுடன்தான் வேதமாதவன் செயல்பட்டான் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் சசி மாதவ லீலையாகும்.

இத்தகைய குரு லீலைகள் என்றோ நடந்தது அல்ல, இது இன்றும் நம் சற்குருவின் குருகுலத்தில் தொடரும் இனிய வைபவமே என்பதை உணர்த்துவதே இனிவரும் நிகழ்ச்சியாகும். நம் சபையில் ஞாபகமறதிக்கு பேர்போன ஒரு அடியார் இருந்தார். அவருக்கு நம் சற்குரு பாஸ்வார்டாக அருளியதே Bhooma3 என்பதாகும். பூமா ஸ்மரணாச்சாரியார் என்ற சித்தர் பிரானிடம்தான் சந்திர மூர்த்தியை அனுப்பி அவர் இழந்த கலைகளில் ஒளி பெற சித்தர்கள் அருள் புரிந்தனர் என்று மேலே கண்டோம். பூமா ஸ்மரணம் என்றால் நிரந்தரமான, தெளிந்த ஞாபக சக்தி என்றும் ஒரு பொருள். இத்தகைய பெயரை நம் சற்குரு அளித்தது எத்துணை பொருத்தமான செயல்! Bhooma3 என்ற பாஸ்வார்டுக்கு நியூமராலஜி எண் கணக்கிட்டுப் பாருங்கள் சற்குருவின் பெருமை நம்மை வியக்க வைக்கும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam