அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சிதறுகாய் உடைக்கும் முறைகள்

சென்ற இதழில் பாஸ்கர அயனஸ்ருதி முறையிலும், ஆகர்ஷணத் திருமுறையிலும் அந்தந்த நட்சத்திரத்தினர் எந்தப் பக்கத்தில் நின்று சிதறுகாயை உடைத்திடுதல் சிறப்புடையது என்பதை விளக்கியுள்ளோம். அதில் குறிப்பட்டுள்ள வல ஓட்டு, இட ஓட்டு நட்சத்திர வகைகளை இங்கு அளிக்கின்றோம். மேலும் சென்ற இதழில் சிதறுகாய் உடைக்க வேண்டிய முறைகள் பற்றி ஓரளவே அளித்துள்ளோம். இது பற்றிய முழுவிபரங்களைப் பிரசுரிக்குமாறு பல வாசகர்கள் கேட்டுள்ளனர்.
1. சிதறுகாயை உடைக்கும் முன் அதன் மூன்று கண்களிலும் கற்பூரமேற்றி மூன்று முறைச் சுற்றி உடைக்கும் முறையுண்டு. தேங்காயின் மூன்று கண்களிலும் கற்பூரம் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து ஏற்றிட வேண்டும். ஆனால் மூன்று கண்களும் ஒரே சமயத்தில் மேல் நோக்குவது இயலாததாகும். முதலில் தேங்காயின் இரண்டு கண்களை மேல்நோக்கி வைத்து கற்பூரத்தை ஏற்றிடுக.. பிறகு விடுபட்டுள்ள தேங்காயின் கண்ணில் மற்றொரு முறை கற்பூரம் வைத்து ஏற்றிட வேண்டும் அல்லது ஒவ்வொரு கண்ணிற்கும் ஒரு முறையாக மூன்று முறை கற்பூரமேற்றிட வேண்டும்.
2. மூன்று கண்களிலும் கற்பூரத்தை ஏற்றிச் சுற்றி முடிந்தவுடன் இடது கையில் தேங்காயின் கண்கள் மேல் நோக்கியவாறு வைத்துக் கொண்டு இந்நிலையை மாற்றாது வலது கையால் தேங்காயை எடுத்து கையை சற்றே மேல் உயர்த்திச் சிதறுகாயை உடைத்திட வேண்டும். அதாவது தேங்காயின் கண்கள் நோக்கிய நிலையைச் சற்றும் மாற்றாது அந்நிலையிலேயே தேங்காயைப் பிடித்து உயரே தூக்கிச் சிதறுகாயை அடித்து உடைக்க வேண்டும் விபூதி, குங்குமம், மஞ்சள் பூசியோ துளசி, வில்வ மாலை சுற்றியோ சிதறுகாயை உடைத்திடுகையில் இவையாவும் கால்களில் படாவண்ணம் சிதறுகாய்த் துண்டுகள் தொட்டிக்குள்ளேயே சிதறுமாறு உடைத்திடுக.
அடியார் : சிதறுகாய் உடைப்பதால் எவ்வாறு தோஷங்களும் திருஷ்டிகளும் விலகுகின்றன?
சற்குரு : எனது அருமைச் சீடனே! முதலில் தோஷங்கள் மற்றும் திருஷ்டிகள் என்பவை எதனால் வருகின்றன என்பதை அறிந்து கொள்வாயாக. கலியுக மக்களின் மனதில் பொறாமை எண்ணங்களும், பேராசைகளும், கொடிய மனோபாவங்களும், திருப்தியின்மையும் அதிகளவில் உருவாகியுள்ளன. இது போன்ற எதிர்வினை எண்ண சக்திகளே திருஷ்டிகளாகவும், தோஷங்களாகவும் பிறரைப் பீடித்து வாட்டுகின்றன. ஆனால் ஒவ்வொரு மனிதனும் தான் ஆற்ற வேண்டிய நித்ய பூஜைகளையும் எளிமையான தான தருமங்களையும் முறையாய் ஆற்றி வந்திடில் நம்மை துர்சக்திகளின் தாக்குதல்களிலிருந்து இவை ஒரு கவசம் போல் காத்திடுவதுடன் அவனுக்கும் இத்தகைய தீய எண்ணங்கள் தோன்றா வண்ணம் தடுக்கின்றன! ஆனால் தற்காலத்தில் இப்பூஜை முறைகளில் ஒரு சிறுபங்கைக் கூடச் செய்ய நேரமில்லை என்ற காரணம் நியாயமானதா? இதுவே பணவரவு அல்லது மற்றொரு சகாயம் வரக்கூடிய காரியத்திற்கு இதே போன்று “நேரமில்லை” என்ற காரணத்தைச் சொல்வார்களா? இதற்கெல்லாம் காரணம் பூஜைகளின், இறையருளின் அருமைகளை அறியாததே! இதுவே கலியுகத்தின் அவல நிலை!
நித்ய பூஜைக்ளைச் செய்யாவிடினும் இறைவனின் கண்களாகிய சூரிய, சந்திர மூர்த்திகளுக்கான எளிமையான பூஜைகளை (சூரிய நமஸ்காரம், பௌர்ணமி வழிபாடு, மூன்றாம் பிறை தரிசனம் etc.. ) ஆற்றி வந்திடில் அவை கண் திருஷ்டிகளையும் தோஷங்களையும் நீக்கும். எத்தனையோ ஆலயங்களில் சூரிய, சந்திரர்களைப் பலரும் முறையாக வணங்குவது கூட இல்லை! சந்தனம், மஞ்சளை அரைத்து எடுத்துச் சென்றோ அல்லது தேங்காய் எண்ணெய்/ நல்லெண்ணெய் எடுத்துச் சென்று சூரிய சந்திர மூர்த்திகளின் கண்களில், தக்க பெரியோர்களின் அனுமதியுடன் பூசி, திராட்சைப் பழ நைவேத்யமும், தானமும் செய்துவர திருஷ்டித் துன்பங்கள் நீங்கும். இதுமட்டுமா! இறைவன் தன் படைப்பில் சில ஜடப்பொருட்களுக்கு, தீய சக்திகளை கிரஹித்துத் தன்னுள் அடக்கி, பரவெளியை சுத்திகரிக்கும் ஓர் அரியபணியை இட்டுள்ளார். இத்தகைய சக்திகளை நிரம்பப் பெற்றிருக்கும் படிகாரம், கருப்புக் கயிறு, பச்சை மிளகாய் மற்றும் சங்கு போன்றவற்றையே வீட்டின் நிலைப்படியில் கட்டுகின்றோம். இதே போன்று எவர்கண்களும் படாது வளர்ந்த தேங்காயின் முக்கண்களுக்கு திருஷ்டி தோஷங்களை நீக்கும் அற்புத சக்தியுண்டு என்பதைப் பன்முறை விளக்கியுள்ளோம். சிதறுகாய் உடைத்தல் என்பது எதிர்வினைகளைக் குறைக்கும் ஓர் எளிமையான வழியாக அமைகிறது.. சிதறுகாய் உடைப்பதற்குச் சற்றுமுன் மட்டையை உரித்து மட்டையிலிருந்து வந்த புதுக்காயாக உடைப்பது விசேஷமான பலன்களைத் தரும். இவ்வாறு செய்ய முடியவில்லையெனில் மட்டையை உரித்தவுடனேயே மஞ்சள் அல்லது திருநீறை முறையாகத் தேங்காயின் மீது பூசிவைத்தல் நலம். இதனால் அதனுடைய சூட்சும காந்த சக்தி நீடிக்கப்படுகிறது.

ஆடை தோஷங்கள்

3தீயவினைகளைக் களையும் எளிய வழிமுறைகள்” என்னும் தலைப்பில்,
1. நாம் அணியும் ஆடைகளில் தோஷங்களும், பாவச் சுமைகளும், தீவினை சக்திகளும் சேரா வண்ணம் தடுக்கும் முறைகளையும்
2. ஆடைகளின் மூலம் கர்மவினைகளைக் கழிக்கும் வழியினையும் இதுவரையில் ஓரளவு அளித்துவந்துள்ளோம்.
ஆடைகளை நன்கு கிழியும் வரை அணிவதும், கிழிந்த பின்னும் தைத்து அணிவதும் தவறானது. ஆணியிலோ வேறெங்குமோ, புடவையோ, சட்டையோ, எந்த ஆடையுமோ மாட்டிக் கிழியுமானால் அதனை மீண்டும் அணியக் கூடாது. எதிர் வரும் துன்பத்தைக் குறிக்கும் சகுனமே இது! உடனே ஸ்ரீதுர்க்கை தேவியை வணங்கி எலுமிச்சை (மூடித்) தீபம் ஏற்றுவது சிறந்த அபசகுன நிவர்த்தியாகும். இதேபோல் நெருப்புத் துளி பட்டுப் பொத்தலான துணிகளையும் உடனே தூக்கி எறிந்து விடவேண்டும். அவற்றை தான தர்மங்களுக்குக் கூடப் பயன்படுத்தலாகாது.  ஒவ்வொரு ஆடையையும் அணிய வேண்டிய கால நியதியும் உண்டு. குறிப்பிட்ட காலவரையறைக்கு மேல் அந்தந்த ஆடையை தானமாக அளித்து விட்டுப் புதிய ஆடையை அணிதல் வேண்டும்.
உள் ஆடைகள் – 30 நாட்கள், இதற்கு மேல் உள்ளாடைகளைப் பயன்படுத்தினால் “தொடுகர்மங்கள்” எனப்படும் தீவினைகள் நம்மைத் தாக்குகின்றன. இதனால் கணவன், மனைவியரிடையே அடிக்கடி மனஸ்தாபங்களும், பெற்றோர்களிடமிருந்து பிரிவும் ஏற்படும். மூன்று விதமான உள் ஆடைகளை தினந்தோறும் மாற்றி/மாற்ற அணிந்து வர ஒன்பது மாதங்களுக்கு ஓர் உள்ளாடையை 30 தினங்களுக்கு மேல் அணியக் கூடாது என்பதே நியதி. ஆடைகளுக்கான கால நியதிகள், ஒவ்வொரு ஆடையையும் அணியக் கூடிய கால அளவு:-

வேட்டி – 6 மாதங்கள்

துண்டு – 3 மாதங்கள்

பாண்ட் – 10 மாதங்கள்

சட்டை (பருத்தி) – 1 மாதம்

செயற்கை இழை (Tc, Polyseter) –  3 மாதங்கள்

கைக்குட்டை – 3 வாரங்கள்

புடவை – பருத்தி – 3 மாதங்கள்

புடவை– நைலான்– நைலக்ஸ்          3 மாதங்கள்

புடவை – பாலியஸ்டர் – 2 மாதங்கள்

ரவிக்கை – 2 மாதங்கள்

போர்வை – 1 வருடம்

பட்டு – 3 வருடங்கள்

நார்ப்பட்டு – 6 மாதங்கள்

கம்பளி – 3 வருடங்கள்

பாய் – கோரை – 6 மாதங்கள்

படுக்கை (bed) – 3 மாதங்கள்

தலையணை – இலவம் பஞ்சு – 2 வருடங்கள் ; தலையணை உறை – 6 மாதங்கள்

தொப்பி – 6 மாதங்கள்

இவற்றையெல்லாம் படித்துவிட்டு மலைக்காதீர்கள். நிறைய செலவாகுமே என்று அஞ்சாதீர்கள். கொடிய கர்மவினைகளை அவ்வப்போது கழிக்காவிடில் அவை கடுமையான நோய்களையும் பெருத்த செலவினங்களையும் கொண்டு வந்து சேர்க்கும்.
செலவில் தீவினை செல்வதாக!
அடியார் : குருதேவா! ஆறுமாதங்களுக்கு, மூன்று மாதங்களுக்கு என ஆடைகளை மாற்றுவது அனைவராலும் முடியுமா? செலவுகள் கூடுமல்லவா?
சற்குரு : ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று செட் ஆடைகளையேனும் வைத்திருப்பார்கள். ஒரு வேட்டிக்குரிய காலம் 3 மாதங்கள் எனில், மூன்று வேட்டிகளை வைத்திருப்போர் மாறி மாறி அணிகையில் ஒரு வேட்டிக்குரிய 3 மாத அணியுங்காலம் முடிவதற்கு 9 மாதங்கள் ஆகுமல்லவா? எனவே நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கைக்குள் அமைவதே சித்தர்கள் அளிக்கின்ற ஆடை இலக்கணங்கள்.
அடியார் : பழைய ஆடைகளை என் செய்வது குருதேவா?
சற்குரு : ஸ்ரீஅகஸ்திய விஜயம் படிப்போருக்கு இந்தக் கேள்வியே மனதில் எழக் கூடாதே! கிழிந்த ஆடைகளை சைக்கிள் ரிபேர் செய்வோர், மெக்கானிக்குகள் போன்ற ஏழைகளுக்குத் துடைக்கும் துணியாகவேனும் பயன்படுமாறு அளித்திடுக! உங்களுடைய பொருள் எங்கேயாவது ஏதாவது ஒரு மூலையில் மற்றவர்களுக்காகப் பயன்படுகின்ற வரையில், அதன் புண்யசக்தியால் உங்களுக்குக் கார்ய சித்தியும் கிட்டும், பாவங்களின் தன்மையும் குறையும். மீண்டும் அணியும் அளவில் உள்ள ஆடைகளை மட்டும் நன்றாக பட்டன்கள் வைத்துத் தைத்து, துவைத்து, சலவை செய்து கோயில்களில் ஏழைகளுக்குத் தானமாக அளித்திடுக! ஆடைகள் தானம் மிகவும் சக்தி வாய்ந்தது. லிங்கக் குற்றங்கள், முஷ்டிப் பிரயோகப் பாவங்கள், மாதாந்திரத் தீட்டுகள் போன்ற கொடிய தோஷங்களுக்கும், பாவங்களுக்கும் ஆடைதானமே சிறந்த பிராயசித்தத்தைத் தருகிறது.
புணர்ச்சி விதிகள் :- மேலும் இரவு நேர எமகண்டம், சூன்யதிதி, கூடாநாட்கள் காலங்களிலும் தலையற்ற நட்சத்திர நாட்கள் (புனர்பூசம், விசாகம், பூரட்டாதி) , உடலற்ற நட்சத்திர நாட்கள் (மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்) காலற்ற நட்சத்திர நாட்களிலும் (கிருத்திகை, உத்திரம், உத்திராடம்) உடலுறவு கொண்டிடில் தீவினைகளே பெருகும். ஆனால் கலியுலக நடைமுறையில் நம் முன்னோர்கள் தந்துள்ள இத்தகைய அற்புதமான வாழ்க்கை முறைகளைக் கடைபிடிக்காமையால் தான் தீயொழுக்கம் பரவி மனித வாழ்க்கையிலும் சமுதாயத்திலும் அமைதியின்மை நிலவுகின்றது. மேற்கண்ட தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தருவதே ஆடை தானங்களாகும். மேலும் இரவு நேரத்தில் மனிதன் தவறுகளைச் செய்து தினமும் சேர்க்கின்ற தீவினைக் கர்மங்கள் ஏராளம். இவற்றிற்கும் நிவர்த்தி தருபவையே ஆடைதானங்கள். ஆடைகளைத் தானம் செய்கையில் “வஸ்த்ராக்னிப் பிரகாச தேவதை” பிரசன்னமாகி, ஆடைகளில் படிந்துள்ள பலவிதத் தீவினைகளையும் பஸ்மம் செய்து, ஆடைகளில் படிந்துள்ள தீய கர்மங்களை நீக்கிப் புனிதமாக்குவதால் அதைப் பெறுகின்றோர் “புனிதமான ஆடைகளாக” தர்மதேவதையின் ஆசியையும் பெறுகின்றனர். ஆடைதானத்தில் நிகழும் அற்புதமிது!.

அடிமை கண்ட ஆனந்தம்

குருமங்கள கந்தர்வா என்றழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தம் சற்குருநாதராகிய ஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகளே “அடிமை கண்ட ஆனந்தம்” தொடராக மலர்ந்துள்ளது. எத்தனையோ புண்ணியத் தலங்களிலும், புனித நதிக்கரைகளிலும், திருக்கோயில்களிலும், மலை ஸ்தானங்களிலும் தன் குருநாதருடன் அனுபவித்த தெய்வீக விஷயங்கள் எத்தனை யெத்தனை! எட்டு வயது முதலே தன் குருநாதருடன் அவர் பெற்ற பல வேத, மந்திர, யந்திர, தந்திர, யோக, தியான, ஞான, ஆசன, பக்தி கூடிய ஆனந்தமய இறைப்பயிற்சிகளை, தெய்வீக அனுபவங்களை அவற்றின் இறைச்சுவை ததும்பும் வண்ணம் இங்கு ஓரளவே எடுத்தளிக்கின்றோம்....
சென்ற இதழ் தொடர்ச்சி....
ரசவாத மூலிகைகள் கொல்லி மலையில் மட்டுமா நிறைந்து கிடக்கின்றன? வெள்ளியங்கிரி, வேதகிரி, திருஅண்ணாமலை, பொதிய மலையென மூலிகையற்ற புனித மலைகளும் உண்டா என்ன? ரசவாதக் கட்டுகளில் பல வகையுண்டு. பாதரசத்தை மூலிகைகளால் கட்டி லிங்கம் போன்ற தெய்வ உருவங்களை வடித்தல், நவபாஷாணங்களைக் கொண்டு சிலை கட்டுதல், உலோகக் கலவை மாற்றங்கள், ஸ்வயம்புக் கற்களின் அம்சங்களுக்கேற்ப அஷ்டபந்தனம், நவ, தச பந்தனங்களை உருவாக்குதல் போன்ற விதவிதமான “கட்டுகள்” உண்டு!
சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் கொம்பு வடிவில் அதிசயமாகக் காட்சி அளிக்கும் ஸ்வயம்பு லிங்கத்திற்குத் “தேன் மெழுகு” கொண்டு அஷ்டபந்தனம் சார்த்தும் கலைகளைப் பெரியவரே பல ஆண்டுகளுக்கு முன் சிறுவனுக்குக் கற்பித்தார். இன்றைக்கும் அருள்வழங்கும் அதிசயமான அற்புதமான லிங்கமிது! திருஅண்ணாமலை இடைக்காடர் சித்தரின் சூட்சும ஜீவசமாதி உள்ள இடமாகும். அவருடைய ஐக்ய லிங்கம் அருள்பாலிக்கும் அற்புதத் தலம். ஸ்ரீஅருணாசல மூர்த்தியின் கர்ப்பகிரஹத்திலிருந்து அபிஷேக நீர் வெளிவரும் தாரையான “கோமுகம்” தான் இடைக்காடர் தோன்றிய இடமாகும். இங்கு தான் கோவணாண்டிப் பெரியவர் சிறுவனுக்கு இடைக்காடரின் “கோமுக யோக” தரிசனத்தைப் பெற்றுத் தந்தார் எவரும் காண இயலா இடைக்காடரின் அபூர்வமான யோக நிலை இது!  ஒவ்வொரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலும் அபிஷேக நீரான கோமுக நீரைப் பருகி வந்தால் எவ்வித வியாதிகளுக்கும் நிவாரணம் கிட்டும் என்பதனை இடைக்காட்டு சித்தர் பல கிரந்த நாடிகளில் அருளியுள்ளார். இது பற்றிய அரிய விளக்கங்களை எம்முடைய ஆஸ்ரம வெளியீடான “கோமுக நீர் மஹிமை” எனும் நூலில் காண்க.
ரசவாத மூலிகைகளைக் கொல்லி மலையிலிருந்து கோவணாண்டிப் பெரியவர் எடுத்து வந்தாரல்லவா? ஆனால் கொல்லி மலையில் இருந்து திரும்புகையில் ரத்தினகிரி மலை, ஈங்கோய் மலை, குணசீலம் போன்ற பல இடங்களுக்கும் சென்று திருஅண்ணாமலைக்கு வருகின்ற வரை சிறுவன் மூலிகைகளைப் பற்றி அறவே மறந்து விட்டான்.
கொல்லி நோய் கொல்லி!
இன்றைக்கும் கொல்லி மலையில் ஸ்ரீஅரப்பளீஸ்வரர் ஆலயம் அருகில் சிறிய ஆறும், மலைப் பள்ளத்தாக்கில் அதே ஆறு இயற்கையான நீர் வீழ்ச்சியாகவும் விளங்கி வருகிறது. சித்புருஷர்களின் சஞ்சாரம் எப்போதும் உள்ள இடமே கொல்லி மலை நீர் வீழ்ச்சியாகும். பல அரிய தெய்வீக மூலிகைகளின் கரைசலாய் இனிய நறுமணத்துடன் சுவையுடனும் வந்து வீழ்கின்ற அருவி நீரானது மிகவும் சக்தி வாய்ந்தது. எத்தகைய சித்த ஆயுர்வேத வைத்யர்களாயினும் ஆயில்ய நட்சத்திரத்தன்றும், தேய்பிறையில் பிரதமை திதியிலும், ஞாயிறு, வியாழக்கிழமை சூரிய உதயத்திலும் இந்த இடத்தில் அமர்ந்து அருவி நீரானது தலையில் கொட்டும் வண்ணம் அமர்ந்து குறைந்தது 3 மணி நேரமாவது ஸ்ரீஅகஸ்தியரையும், போகரையும் தியானித்து வந்திடில் அவர்கள் நிச்சயம் வைத்தியத் துறையில் நன்கு பிரகாசிப்பர். கடுமையான வியாதிகளினால் அவதியுறுவோரும் மேற்கண்ட நேரங்களில் கொல்லிமலை அருவி நீரில் நீராடியோ அல்லது நீரைத் தலையில் தெளித்துக் கொண்டோ ஈசனாம் ஸ்ரீஅறப்பளீஸ்வரரைத் துதித்து மருந்தினை உட்கொண்டிட நன்முறையில் குணமேற்படும்.
பொதுவாக கடுமையான வியாதிகளுக்கு நிவாரணமாக ஞாயிறு, திங்கள், வியாழக்கிழமைகளில் சூர்யோதய நேரத்திலும்,  அஸ்வினி, ரோகிணி, சித்திரை, சதயம், ரேவதி நட்சத்திர தினங்களிலும் தேய்பிறையில் ஸ்ரீஅறப்பளீஸ்வரருக்குக் கீரைகள் கலந்த உணவுடன் எலுமிச்சை அன்னம் படைத்துத் தானம் அளித்துவர நோயின் கடுமைகள் தணியும்.
சிவன் சொத்து!
கொல்லி மலையில் அனைத்து மூலிகைகளும் ஸ்ரீஅறப்பளீஸ்வரருக்கே உரித்தானவை! இங்கு சுவாமிக்குத் தக்க காணிக்கை செலுத்தாது ஒரு மூலிகை இலையைக் கூட நாம் எடுத்து வரலாகாது. திருஅண்ணாமலையைப் போல சித்தர்கள் எப்போதும் புழங்கும் இடமாதலால் இங்கு காலணி இல்லாது நடப்பது மிகவும் விசேஷமானதாகும். யோகியரின், ஞானிகளின், மஹரிஷிகளின், சித்தர்களின் புனிதமான காலடிகள் பட்ட தூசியேனும் நம் உடலில் சேர நாம் என்னே பாக்கியம் செய்திருக்க வேண்டும்! உண்மையில் கோவணாண்டிப் பெரியவருடன் கொல்லி மலையில் இருந்த சில நாட்களில் சிறுவனும் கோவணாண்டியாகவே திரிந்தான் ஏன்?  மூலிகைக் காற்று நன்கு உடலில் படவே! இங்குதான் ஒரு புதுவகை தான தருமத்தைச் சிறுவன் கற்றுக் கொண்டான் என்ன அது?.....
கொல்லிமலையிலிருந்து இறங்குகையில்..... பல ஆண்டுகளுக்கு மின் பஸ் வசதி கூட சரியில்லாத காலமது. மண்/தார் சாலையைத் தவிர்த்து அடர்ந்த காடுகளிடையே மூலிகைச் செடியினூடே கரடு முரடான பாறைப் படிகளின் குறுக்குப் பாறை பாதை வழியே அவர்கள் கீழ் இறங்கினர். வழியில் ஓரிரண்டு ஐந்து தலை நாகங்களைப் பெரியவர் சிறுவனுக்குக் காண்பித்தார். “வாத்தியாரே! கடவுள் இந்த மாதிரி அஞ்சு தலைப் பாம்பை எல்லாம் படைச்சதனால் என்ன பிரயோசனம்?” என்று பலமுறை சிறுவன் கேட்டும் பெரியவர் அதற்குப் பதிலளிக்கவில்லை. ஆனால் இதற்கான அற்புதமான விளக்கத்தைச் சிறுவன் ஸ்ரீநாகாத்தம்மன் சந்நதியில் தான் பெற்றான். அதைப் பிறகு காண்போம்.
நாமக்கல் சாலையை அடைந்தவுடன் சிறுவனை முன்னே அனுப்பி, பின் சற்று தாமதித்து வந்தார் பெரியவர். “திரும்பிப் பார்க்காதே... என் குரல் மட்டும் உனக்குக் கேட்டுக்கிட்டே இருக்கும்” – பெரியவரின் ஆணையிது. ஒருமணி நேரமாவது கழுத்தைக் கொஞ்சம் கூட திருப்பாதவாறு சென்று கொண்டிருந்த சிறுவனுக்கு “ஏன் இப்படி வருகிறார் ?” என்று கேட்கும் ஆவல் அதிகரித்தது. ஆனால் ஆதிசங்கரருடைய வாழ்க்கை வரலாற்றில் வருவதைப் போல் தான் எங்கேனும் திரும்பிப் பார்த்து, பெரியவர் கல்லாய்ச் சமைந்து விட்டால்! சொன்னதைச் செய்யாத சீடனுக்கு சற்குருவிடம் கடுமையான, தண்டனைகள் எத்தனையெத்தனை? சிறுவனுக்கு நினைக்கவே பயமாய் இருந்தது. எனவே கேட்கும் எண்ணத்தைக் கைவிட்டான். ஆனால் செல்லும் இடமோ, திசையோ, ஊரோ தெரியவில்லை. பின்னால் அவர் வருகிறாரா இல்லையா என்பது கூடத் தெரியவில்லை. “ஏண்டா! கொஞ்சம் பரோட்டா சாப்பிட்டுப் போகலாமா?” பெரியவரின் கட்டைக் குரல் வார்த்தைகள் அமிர்தமாய் இப்பொழுது அவன் காதில் ஒலித்தன. அதிலும் “பரோட்டா” என்ற சொல்லுக்குத்தான் எவ்வளவு சக்தி! “சோத்துமூட்டை” என்று பெரியவர் அடிக்கடி அவனைச் சொல்வதில் என்ன தவறு! (பிற்காலத்தில், திருஅண்ணாமலையிலும் பல இடங்களிலும் மூட்டை மூட்டையாகச் சிறுவன் அன்னதானம் செய்யப் போவதை அன்று பெரியவர் குறிப்பால் அருள்வாக்காய் தீர்கதரிசனமாய் உணர்த்தினாரோ!) இருந்தாலும் திரும்பிப் பார்க்கலாமா கூடாதா என்ற அச்சத்தில் சிறுவன் முதன் முதலாகச் சற்றே தலையை அசைத்துக் கொண்டே தன் வேகத்தைத் தணித்தான். பெரியவர் பரிவுடன் அவன் தோள்களைத் தொட சிறுவன் இன்னமும் நம்ப முடியாத நிலையில் பயம் கவ்விய முகத்துடன் திரும்பிப் பார்த்தான். என்ன ஆச்சர்யம்! சிறுவனாலேயே நம்ப முடியவில்லை.. “இவர் எப்படி இப்படி மாறினார்?” ஏனென்றால் அப்பொது பெரியவருடைய அந்தத் தோற்றத்தைக் கண்டு அவனாலேயே, அவன் கண்களை நம்ப முடியவில்லை. அரைமணி நேரத்திற்கு முன் கோவணாண்டியாய்க் காட்சி தந்தவர் இப்போது பேண்ட், சட்டை, கோட்டு சகிதம், ஆங்கிலேயனைப் போல் காட்சி தந்தார். இது போன்ற காட்சிகளை இதன் முன்னர் பல முறை சிறுவன் கண்டிருந்தாலும் கூட, சுற்றிலும் மரங்களே இருக்கும், இப்பகுதியில் இத்தகைய உடைகளை எங்கிருந்து அவர் பெற்றார்? இத்தகைய வினாக்கள் விடையின்றியே விண்ணில் இன்றும் மிதக்கின்றன! சித்தர்களின் சாம்ராஜ்யத்தை எவர்தாம் உணர முடியும்?
பின்னர் ஒரு முறை  சென்னை துறைமுகப் பகுதியில்..... ஒரு நாள் நடுப் பகலில் பெரியவர் சிறுவனை துறைமுகத்தின் உள்ளே நெடுந்தூரம் அழைத்துக் கொண்டு அப்போது தான் புதிதாக வந்திருந்த ஒரு வெளிநாட்டுக் கப்பலருகே சென்றார். பாவாடை அளவிற்குப் பெரிய அரைடிராயரை அணிந்திருந்த தன்னையும், கோவணத்துடன் உள்ள பெரியவரையும் நிச்சயமாக செக்யூரிட்டிகாரர்கள் பார்த்தால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவார்கள். எந்த நிமிஷமும் இது நடக்கக் கூடும் என்ற அச்சத்தில் பெரியவரைத் தொடர்ந்து சிறுவன் சென்றான். ஆனால் அவரோ எதற்கும் கவலைப்படாதவராய் ஹாயாகத் தம் கைகளை ஆட்டிக் கொண்டு துறைமுகத்தினுள் சென்றார்! இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் ஆங்காங்கே இருந்த அதிகாரிகளும், காவல்காரர்களும் நம் பெரியவருக்கு ராயல் சல்யூட் கிடைக்கும் போதெல்லாம் பெரியவரோ சிறுவனைப் பார்த்துப் பெருமையுடன் ஹார்டிபோல் உதடை இருபுறமும் நீட்டி ஒரு புன்னகையை உதிர்த்திடுவார்! தெய்வீகச் சிரிப்பையா அது! இவை நிகழும்போது “அதெப்படி வாத்தியாரே எல்லோரும் கோவணம் கட்டினா கூட உனக்கு எல்லாரும் சல்யூட் அடிக்கிறாங்க”, என்று சிறுவன் கேட்ட போது, “உன் கண்ணுக்கு நான் இப்படி! அவங்க கண்ணுக்கு நான் எப்படியோ!” என்று சொல்லியவாறே கண்களைச் சிமிட்டுவார் பெரியவர்!
அப்போது தான் “ஒரு வேளை அவர்களுடைய கண்களுக்குச் சூட்டு கோட்டுதாரியாகப் பெரியவர் காட்சி அளிப்பாரோ?” என்றவாறு சிறுவனின் மனம் (தேவையில்லாத) ஆராய்ச்சியில் இறங்கியது. இருந்தாலும் சிறுவன் விடவில்லை., “அப்படின்னா, சித்து செய்யறது நீ தப்புன்னு அடிக்கடி சொல்லுவியே வாத்யாரே?” பெரியவரோ சற்றே அமைதியானார். ஆம் அமைதிக்குப் பின் தானே புயல்! சிறுவனுக்கு வியர்க்கத் தொடங்கியது!
“நாம ஏதாவது தப்பா கேட்டுட்டோமா?”
“அப்படியில்லையடா கண்ணு! சித்தன் எப்போதும் ஒரு சித்து கூட செய்ய மாட்டான். ஆனா அவன் போற இடமெல்லாம் சித்துக்கள் தானாய் விளையாடும்.... நம்பிக்கை இல்லாத மர மண்டைகளைத் திருத்தி நல்ல வழி காட்டறதுக்காக!” அவருடைய குரலில் இருந்த உஷ்ணம் சிறுவனைத் தகித்து விட்டது. அவன் கண்களில் நீர்த்திவலைகள் திரண்டன. “எங்கெங்கோ காடுமேடுகளெல்லாம் தேடி அலைந்து காணக் கிடைக்காத கொல்லிமலை கோரக்கர் குகையைத் தரிசனம் செய்ய வைத்து, எங்கோ அடர்ந்த காடுகளுக்கிடையே இருக்கும் அற்புதமான பெருமாளின் தரிசனம் கிட்ட வைத்து, தான் இதுவரை பார்த்திராத கொல்லிமலை அருவி நீரில் பல மணி நேரம் அமர வைத்து அற்புதமான மூலிகா சக்திகளைப் பெற்றுத் தந்து, கங்கை, காவிரி, இமயமலை, பொதியமலை தரிசனம் காட்டி..” – என நினைத்த சிறுவன் விம்மியவாறு பெரியவரின், கால்களைப் பற்றிக் கொண்டான்.
“பற்றுக பற்றற்றான் தாளினை” ஆனால் பற்றுவதற்கு அவர் கால்கள் அங்கு இல்லையே! சிறுவன் நிமிர்ந்து பார்த்திட ஆங்கே  பெரியவரோ கப்பலில் வந்திறங்கிய வெளிநாட்டு மக்களுடன் அவர்களுடைய மொழியிலேயே மிகவும் அன்யோன்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்! சிறுவன் மலைத்து நின்றான்! கண்டறியாத ஆடை! கேட்டறியாத மொழி! “நிச்சயமாக இவர் ஒரு சாதாரண மனுஷனில்லை. இந்த உண்மையை நன்குப் புலப்படுத்துவதற்காகத்தான் பெரியவர் இத்தகைய திருவிளையாடல்களை நிகழ்த்தினாரோ ? சிறுவன் பிரமித்துப்போய் விட்டான்! அவன் ஆடாவிட்டாலும் அவன் சதை ஆடியது! ஏன், சித்துக்கள் தானே ஆடத் தொடங்கியதாலோ!.

நவராத்திரி பூஜைகள்

ஒன்பது தேவியர் அருளும் பலன்கள்
பிரதமை திதி 2.10.1997 கடன்கள் தீர்ந்திட......
இன்று மூன்று பெண்களைப் பெற்றெடுத்த பழுத்த சுமங்கலித் தம்பதிகட்குப் பாதபூஜை செய்து ஸ்ரீமாதேவி என்னும் அம்பிகையின் நாமத்தை 108 முறை ஜபித்து சர்க்கரைப் பொங்கலைத் தானமாக அளித்திட வேண்டும். இன்று சயனக் (படுத்த நிலை) கோலத்தில் உள்ள விஷ்ணுவை தரிசித்தல் சிறப்புடையதாகும். ஸ்ரீமாதேவியானவள் நவராத்திரியின் பிரதமை திதியில் தோன்றி அருள்பாலிக்கின்றாள். நிறைய கடன் உள்ளவர்கள், பெண் சந்ததியில்லாதவர்கள், குழந்தைகள் இல்லாதோர், மாமனார்/ மாமியார்/ நாத்தனார்களினால் துன்பறுத்தப்படுபவர்கள் இன்று ஜாதி பேதமின்றி, மூன்று பெண்களைப் பெற்ற மூத்த தம்பதிகளுக்குப் பாத பூஜை செய்து, சயனக் கோலத்தில் உள்ள விஷ்ணுவைத் தரிசித்து, சர்க்கரைப் பொங்கலை தானமளித்திட, மேற்கண்ட துன்பங்களுக்கும் தோஷங்கட்கு நிவர்த்தியும் கிட்டும். கடன் தொல்லைகள் தணியும்.
துவிதியை திதி – 3.10.1997
குழந்தைகளின் துன்பங்கள் தீர.......
ஸ்ரீவிதாத்ரி தேவி அருள்கின்ற விசேஷமான நாளிது. அறியாப் பருவத்தில் செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் தருகின்ற பூஜை. இரண்டு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகளைப் பெற்ற ஏழை சுமங்கலிக்குத் தான தர்மங்கள் செய்வது சிறப்புடையது. இன்று குழந்தைகட்குப் பிடித்தமான அப்பம், பொரி, கடலை, இனிப்புகளைத் தானமளித்து ஸ்ரீவிதாத்ரி தேவியை தியானித்திட குழந்தைகட்கான திருஷ்டிகள், தோஷங்கள் கண்ணேறு நோய்கள் தீரும். கல்வி, இசை, ஓவியம், நாட்டியத்தில் குழந்தைகள் சிறப்புப் பெறுவர்.
திரிதியை – 4.10.1997
கணவன் நன்னிலை பெற :
மூன்று ஆண்களையும் இரண்டு பெண்களையும் பெற்ற தம்பதிக்கு மஞ்சள் நிற ஆடைகள், உணவு தானமாக அளித்து ஸ்ரீபோகதா தேவி என்னும் இன்றைய தினத்திற்குரிய நவராத்திரி தேவியை தியானித்து வழிபட..
1. கடுமையான நோய்கள் தணிந்து கணவனுக்கு நீண்ட ஆயுளையும்
2. பெண்களுக்கு சுமங்கலித்துவத்தையும் பெரியோர்களின் ஆசியையும் பெற்றுத் தரும்.
இன்று தெற்கு நோக்கியிருக்கும் அம்பிகையின் சந்நிதியை மருதாணி, மெட்டியிட்டு அடிப்பிரதட்சிணம் செய்தல் விசேஷமானது. கணவனுடைய தீய வழக்கங்கள் தணிய இன்றைய நவராத்திரி த்ரிதியை பூஜைகளைச் செய்தல் வேண்டும்.
நவராத்திரி நான்காம் நாள் (5.10.1997)
உறவுப் பகை தீர......
இன்று நான்கு வயது சிறுமியை இன்றைய தினத்திற்குரிய ஸ்ரீவிக்னகாதினி தேவியாக எண்ணி எண்ணெய் ஸ்நானம் செய்வித்து புத்தாடைகள், வளையல்கள், புஷ்பம் அணிவித்து ஸ்ரீதுர்க்கை சந்நிதிக்குச் சென்று குழந்தையுடன் ஸ்ரீதுர்க்கையை வழிபட வேண்டும். பயத்த மாவினாலான இனிப்புகளை தானமளிப்பதுடன் ஏழை சுமங்கலிக்குத் தக்க தான தர்மங்கள் செய்திட வேண்டும். இதனால் குடும்பத்திலுள்ள பகைமை தீர்ந்து இல்லறத்திலும் வியாபாரத்திலும் ஒற்றுமை பெருகி செல்வம் முறையாகச் சேரும். இன்று எலுமிச்சை மாலை சாற்றி ஸ்ரீகாளியைத் தரிசனம் செய்தல் சிறப்புடையது..
நவராத்திரி ஐந்தாம் நாள் பூஜை : (6.10.1997)
திருமணத் தடங்கல்கள் தீர....
ஸ்ரீநிதிப்பிரபா என்னும் நவராத்திரி தேவிக்குரிய நாளிது. இன்று, நான்கு பெண்ணைப் பெற்ற மூத்த தம்பதியர்க்குப் பாத பூஜை செய்து நாபியில் தாமரை மலர் எழும்ப அதில் பிரம்மாவுடன் காட்சி தரும் பெருமாளுக்குச் சர்க்கரை பொங்கலைப் படைத்து ஏழைகட்கு தானமளித்திட வேண்டும். ஸ்ரீநிதிப்பிரபா தேவியை தியானித்து ஐந்து முக விளக்கேற்றி வழிபட திருமணத் தடங்கல்கள் நீங்கி விரவில் திருமணம் நடந்தேறும். பித்ரு தோஷங்களை நிவர்த்திக்கும் பூஜையிது. இன்று ஸ்ரீசாமுண்டீஸ்வரிக்கு மாதுளம்பழ முத்துக்களால் அபிஷேக, அலங்கார, அர்ச்சனை செய்வது விசேஷமானதாகும்.
நவராத்திரி ஆறாம் நாள் பூஜை : 7.10.1997
பெண்களின் நோய்கள் தீர....
ஸ்ரீபாபக்னி தேவிக்குரித்தான நவராத்திரி நாள். சாரமாமுனிவர் இத்தேவியை உபாசனை செய்து அரும்பெரும் வரங்களைப் பெற்றார். மூன்று ஆண்களைப் பெற்ற மூத்த தம்பதியர்க்கு அவருடைய பூஜைக்குரித்தான திரவியங்கள், மணி, பீடம் போன்ற பூஜைப் பொருட்களைத் தானமாக அளித்திட வேண்டும். இன்று உடல் ஊனமுற்றோர்க்குக் கீரை உணவினைத் தானமாக அளித்திட பெண்களுடைய உடல் நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், கர்ப்பப்பை வியாதிகள் தீரும்...
நவராத்திரி ஏழாம் நாள் பூஜை : 8.10.1997
பெண்களின் பூஜா சக்தி அதிகரிக்க ...
ஸ்ரீபுண்யாதேவி அருள் பாலிக்கும் அற்புதமான நாள். ஏழு குழந்தைகளைப் பெற்ற பழுத்த தம்பதியினர்க்குப் பாத பூஜையுடன் அவர்கட்குத் தேவையானவற்றை தானமாக அளித்திடல் வேண்டும். இன்று பொன்னாங்கண்ணி, வல்லாரை, பசலை, வெந்தயக் கீரை, சிறுகீரை போன்ற மூலிகைக் கீரைகளால் ஆன உணவை வீட்டில் தெய்வத்திற்குப் படைத்து ஏழை நோயாளிகட்கும், தொழு நோய்க்காரர்கட்கும் தானமாக அளிக்க வேண்டும். ஸ்ரீபுண்யா தேவி தியானத்துடன் இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய், வேப்பெண்ணெய் ஏதேனும் ஐந்து வகை எண்ணெய் கலந்த பஞ்சமுக தீபத்தை ஏற்றி (ஐந்து முக விளக்கு அல்லது ஐந்து அகல் விளக்கு தீபமேற்றி) வழிபட பெண்களுடைய பூஜா பலன்கள் அதிகரிக்கும் புண்ய சக்தி பெருகும்.
நவராத்திரி எட்டாம் நாள் பூஜை :- 9.10.1997
வீடுபெற.....
ஸ்ரீசசிப்பிரபா தேவி அருள்பாலிக்கும் திருநாள். ஆறு குழந்தைகளைப் பெற்ற பழுத்த தம்பதியினர்க்குப் பாத பூஜையுடன் தேவையான தான தர்மங்களைச் செய்து ஸ்ரீசசிப்பிரபா தேவியின் தியானத்துடன் கருநிற அல்லது கருநீல நிறமுடைய பழங்களையும் (திராட்சை) ஆடைகளையும் தானமளித்திட வீடு, நிலமற்றோர்க்கு பூமி பாக்யம் கிட்டும். நீண்ட கால கோர்ட் வழக்குகள் நியாயமான முறையில் தீர்வு பெறும்.
நாகதோஷ நிவர்த்தி நவராத்திரி ஒன்பதாம் நாள் பூஜை : 10.10.1997
நாக தோஷங்களை நிவர்த்தி செய்கின்ற நாகாம்பிகை (நாகாத்தம்மன்) அருள்பாலிக்கின்ற நவராத்திரி தினமாகும். நான்கு பெண்களைப் பெற்ற மூத்த தம்பதியினர்க்கு மஞ்சள், மருதாணி, சந்தனம் பூசி பாத பூஜை செய்து வணங்கிட வேண்டும். சர்க்கரை கலந்த பாலை ஏழைகட்கு தானமளித்தோ அல்லது ஸ்ரீநாகாத்தம்மன் கோயிலில் பாலாபிஷேகம் செய்து பால் தானமோ செய்திட வேண்டும். மேற்கண்ட வழிபாடு நாகதோஷம்தனை நிவர்த்தி செய்து சந்தானப் பிராப்தத்திற்கும், திருமணம் கை கூடுவதற்கும் வழிவகுக்கும்.
பொதுவான விளக்கங்கள் :-
1. நவராத்திரியில் தினமும், இரவில், சிவராத்திரி போல் பூஜைகளை நிகழ்த்துவது சிறப்பானது.
2. ஜாதி, வித்யாசமின்றி 70, 80 வயது நிறைந்த மூத்த, பழுத்த தம்பதியர்க்குப் பாத பூஜை செய்து வணங்கி தினமும் ஆசி பெறுதல் மிகவும் விசேஷமானது.
3. தினமும் காலை, பகல், மாலை, இரவில்  இல்லத்தில், குறிப்பாக கொலுவிற்கு, அடர்த்தியான சாம்பிராணி தூபம் இட்டு நெய் தீபம் காட்டுதல் வேண்டும்.
4. நவராத்திரியில் ஏழைச் சிறுமியர்கட்குத் தேவையான, வளையல்கள், ரிப்பன்கள் மரத்தாலான ஹேர்பின் போன்றவைற்றையும் சுமங்கலிகட்கு வளையல்கள், மஞ்சள், தாம்பூலம், சீப்பு மற்றும் பெரிய கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களையும் தானமாக அளிப்பதால் மாங்கல்ய சக்தி விருத்தியடையும். சிறிய சீப்பு, சிறிய கண்ணாடியைத் தவிர்த்து பரந்த மனப்பான்மையுடன் பெரிய கண்ணாடி, சீப்பு அளித்தல் புனிதமானது!
5. நவராத்திரியில் தினந்தோறும் ஜாதி, வேறுபாடின்றி, அனைத்து இல்லறப் பெண்களும் ஒன்று கூடி விளக்குகளை ஏற்றி அபிராமி அந்தாதி போன்ற இறைத் துதிகளை ஓதிட பலன்கள் பல்கிப் பெருகும். கூட்டு வழிபாட்டிற்குத் தனிப்பட்ட பூஜையை விட சக்தியும் பலன்களும் அதிகம்.
சிவபுரம் அடியிற் சிவலிங்கம்!
அங்கப் பிரதட்சிணம் செய்வதற்கான விசேஷமான தலங்கள் பல உண்டு. பூமாதேவியின் அருட்சக்தி நிறைந்திருக்கும் குறித்த நாட்கள், நட்சத்திர நேரங்களில் இத்திருத்தலங்களில் அங்கப் பிரதட்சிணம் செய்து வணங்கிட நிலபுல, வீடுகள் அமைதல், விளைச்சல் பெருகுதல், தோட்டப் பயிர் செழித்தல் போன்ற நற்பலன்கள் கிட்டும். மேலும் குடும்ப உறவுகளில் உள்ள தாங்க முடியாத துன்பங்களுக்கும் விடிவு ஏற்பட்டுத் தக்க நிவாரணமும் கிட்டும். பொதுவாக அங்கப்பிரதட்சிணமானது நற்காரிய சித்தியைத் தரும் பிரார்த்தனையாகும். எத்தனையோ சித்தர்களும், மஹான்களும் எப்போதும் சஞ்சாரம் செய்கின்ற ஆலயங்களில் அவர்களின் புனிதமான காலடிகள் பட்ட இடங்களில் நம் தேகம் புரண்டிட நாம் என்னே பாக்கியம் செய்திருக்க வேண்டும்!

சிவபுரம் திருத்தலம்

கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம் திருத்தலம் அங்கப்பிரதட்சிணம் செய்வதற்குரித்தான புண்ணிய பூமிகளுள் ஒன்றாகும். காரணம் இத்திருத்தல பூமிப் பகுதியினடியில் மாபெரும் சிவலிங்கங்கள் அமைந்து, இன்றும் ஸ்வேத வராஹ ஒளிக்கதிர்களை, பூரண ஜோதிக்கிரணங்களைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஆயிரமாயிரம் அடிகளுக்குக் கீழ் திருமால், வெண்பன்றியாக பூலோகத்தின் அடியில் உள்ள பல அபூர்வமான லிங்க மூர்த்திகளுக்குப் பூஜை செய்து அருள்பாலித்த தலம். பூமாதேவியும் ஸ்ரீவராஹ மூர்த்தியின் திருமேனி பட்ட மண்துகள்களைத் திரட்டிப் புனிதமான லிங்கங்களாக்கி வழிபட்ட தலம்! இதுமட்டுமல்லாது வாமன அவதாரத்தின் போது, பாதாளத்தில் வாழ்கின்ற மஹாபலிச் சக்கரவர்த்திக்குத் காவலாய் அமர்ந்து, நித்ய தரிசனம் அளிப்பதாய் வாக்களித்த ஸ்ரீமஹாவிஷ்ணு சிவபுரச் செம்மண் அடியில்தான் பாதாள லோகப் பாதையை அடைகின்றார்.
மேலும் வராஹ மூர்த்தியாக ஸ்ரீமஹாவிஷ்ணுவின் திருப்பாதங்கள் பட்ட இடங்களிலெல்லாம், அத்திருப் படிவுகளை ஸ்ரீபூமாதேவி உத்தம பக்தியுடன் வழிபட்ட பாதாள பூமியே சிவபுரம் ஆகும். எனவேதான் சிவபுரம் திருக்கோயிலின் பூமியினடியில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு சிவலிங்கம். ஸ்வயம்புத் திருமேனியாய் எழும்பி “சிவபர” கிரணங்களை வீசுகின்றது. ஆகவே திருஞானசம்பந்தர் இத்திருத்தலத்தை மிதித்திட அஞ்சி, தம் கால்கள் படாது அங்கப்பிரதட்சிணம் செய்தவாறே வலம் வந்து பதிகம் பாடினார். மனிதனாகப் பிறந்த நாம், சிவபுரச் சிவ பூமியில் நம் தேகத்தின் அங்கங்கள் படுமாறு வாழ்வில் ஒரு முறையேனும் அங்கப் பிரதட்சிணம் செய்திடல் வேண்டும். பூமியடியில் இலட்சக்கணக்கான மூலிகைகள் நிறைந்த புனிதமான பூமி!
பலன்கள் : உடலால் செய்த கொடிய பாவங்கள் தீர நல்வழிகள் கிட்டும். அதர்மமான முறையில் பலதார மணம் புரிந்தோர், பல குடும்பங்களை, பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்தோர் இங்கு அங்கப்பிரதட்சிணம் செய்து ஏழைகளுக்கு ஆடைகளைத் தானமாக அளித்திடல் வேண்டும். புனிதமான துறவிகளுக்கும், வயதான பிச்சைக்காரர்களுக்கும் நன்கு தைக்கப்பட்ட புதிய கோவணத் துணிகளையும் தானம் செய்திடுக! மேலும் தீராத வியாதிகளை உடையோர் இங்கு இயன்ற தூரத்திற்கு அங்கப் பிரதட்சிணம் செய்து வருதல் வேண்டும். பஞ்சாங்கத்தில் கீழ்நோக்கு நாட்கள் என சில நட்சத்திர நாட்கள் குறிப்பிடப்பட்டிருக்கும், பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய நாட்களில் பிரதட்சிணம் செய்வது சிறப்புடையதாகும். பூமாதேவியின் சக்தி பூரிக்கும் நாட்களிவை. நிலபுலம் சம்பந்தமான கோர்ட் வழக்குகளினால் பாதிக்கப்பட்டிருப்போர், நியாயமான, துரிதமான தீர்ப்புகளைப் பெற இங்கு அங்கப் பிரதட்சிணம் செய்து பூமிக்கடியில் விளைகின்ற உணவினை (கிழங்கு வகைகள்) அன்னதானமாக அளித்து வர வேண்டும். சொல்லவும் பெரிதே சிவபுர மஹிமை!

தீபாவளியில் தீப பூஜை
ஸ்ரீகிருஷ்ணன், நரகாசுரனை வதம் செய்து தர்மத்தை நிலைநிறுத்திய நாளே தீபாவளியென நாமறிவோம். ஐப்பசி சதுர்த்தசியாம் திருநாளன்று எத்தனையோ புராண சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் ஒன்றே ஸ்ரீகிருஷ்ணனின் நரகாசுர வதமாகும். காலப் போக்கில் ஏனையவற்றை மக்கள் மறந்து தீபாவளியெனில் நரகாசுர வதமே நினைவில் நிற்கின்றது. அகண்ட காரிருளில் பாதாள லோகத்திற் கிடக்கும் மகாபலி தீப ஒளியைக் காணும் நாள்! ஸ்ரீலக்ஷ்மி தேவி குபேரனுக்கு அருள்பாலித்த நாள்! வனவாசத்திலிருந்து மீண்ட இராமனுக்கு, இராமனில்லா அயோத்தியாக ஒளியிழந்து இருந்த மாநகரத்து மக்கள், ஒளிப்பிரகாசமாய் விளக்குகள் ஏற்றி வரவேற்புத் தந்த திருநாள்! இவையெல்லாம் தீபாவளித் திருநாளில் நடந்த வைபவங்களே! தம்முடைய இறைப் பிரசாரங்களாலும் ஸ்ரீஅகஸ்திய விஜயம் மூலமாகவும் நம் குருமங்கள கந்தர்வா (ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்தரின் தவப் பெருஞ் சிஷ்யரான) ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தம் சற்குருநாதரின் திருவருளால், சித்புருஷர்களின் அரிய கிரந்தங்களிலிருந்து காலப்போக்கில் விடுபட்ட ஸ்ரீவிஷ்ணுபதி, ஸ்ரீதசாவதார விரதம் மட்டுமல்லாது தீபாவளி போன்ற விசேஷ தினங்களின் ஏனைய மகத்துவங்களையும் எடுத்துரைத்து வருகின்றார்கள்.
ஈஸ்வர ஆண்டு மிகவும் புனிதமானது! பல இறை அவதாரங்கள் ஏற்பட்ட அற்புதமான ஆண்டு! கடவுள் நம்பிக்கையுடையோர்க்கும், இறைபக்தியைப் பன்மடங்குகாய்ப் பெருக்கும் நல்வாய்ப்புகளைத் தரும் தெய்வீக ஆண்டு! துன்பங்களால் அவதியுற்று இறைவன் மேலேயே அறியாமையினால் கோபம் கொண்டிருப்போர்க்கு, மன சஞ்சலங்களை அகற்றித் தெய்வத் தொண்டில் விவேகத்துடன் ஈடுபடச் செய்யும் மகத்தான ஆண்டு! நம்பிக்கையில்லாதோரையும், ஆண்டவனே அருட்பெருஞ் செயல்களால் அரவணைக்கும் ஆண்டு! இவ்வகையில் ஒரு யுகத்தில் ஸ்ரீமஹாலட்சுமி தேவியே ஸ்ரீதீபலட்சுமியாக அவதரித்த ஆண்டே ஈஸ்வர ஆண்டு! அதுவும் அந்த யுகத்தின் ஈஸ்வர ஆண்டின் தீபாவளி தினத்தில் தான் ஸ்ரீதீபலட்சுமி அவதரித்தாள்! எனவேதான் இவ்வருட (ஈஸ்வர) தீபாவளியானது. ஸ்ரீதீபலட்சுமி அவதரித்த பெரும் மகத்துவம் வாய்ந்ததென சித்புருஷர்களின் கிரந்த நாடிகள் பெருமிதத்துடன் அளிப்பதை, இங்கே ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் அருட்திறத்தால், அவர்தம் குருவருளால் காண்கின்றோம்!
 சினத்தில் பிறந்த சீரிய வழிபாடு
ஒருமுறை..... ஸ்ரீமன்நாராயண மூர்த்தியிடம் சற்றே கோபம் கொண்டு பூலோகத்திற்கு வந்த ஸ்ரீமஹாலட்சுமி, பல திருத்தலங்களுக்கும் சென்று தவம் புரியலானாள். ஸ்ரீசரஸ்வதி தேவியும், ஸ்ரீபார்வதி தேவியும் ஸ்ரீமஹா லட்சுமியைச் சமாதானம் செய்யும் பொருட்டு பூமிக்கு விரைந்தனர். இச்சமயத்தில் தான் பூலோகத்தில் பெருகிக் கிடந்த அதர்மங்களும், அக்கிரமங்களும் தணியும் வண்ணம், ஸ்ரீபார்வதி தேவி, ஸ்ரீதுர்க்கையாகத் தோன்றி தீய சக்திகளை அழித்திட்டாள். இவ்வாறாகப் பல தேவியரும் பூலோகத்திற்கு வந்து இறைவழிபாடு செய்த காலமே ஐப்பசி சதுர்த்தசிக்கு முந்தைய அதாவது தீபாவளிக்கு முன்னதான நவராத்திரி காலமாயிற்று. மக்கள்படும் துன்பங்களை, குறிப்பாகப் பெண்குலத்திற்கு ஏற்படுகின்ற இன்னல்களை இரண்டு தேவியரும் ஸ்ரீலட்சுமிக்கு எடுத்துரைத்து, அதைத் தீர்த்திட தக்க வழிபாடுகளையும் தவத்தையும் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் ஸ்ரீலட்சுமி தேவிக்கு உரைத்தனர். மூன்று தேவியரும் பூவுலகை வலம் வருகையில், ஸ்ரீலக்ஷ்மி தேவி மக்கள் படுகின்ற இன்னல்களைக் கண்டு வேதனையுற்று “இத்துன்பகரமான வாழ்க்கையினிடையே மக்கள் தெய்வச் சிந்தனையே இல்லாது வாழ்கின்ற துர்பாக்கியமான” நிலையையும் கண்டு மிகவும் வருத்தமுற்றாள். இதுவே ஸ்ரீலக்ஷ்மியின் ஒரு தீவிர தெய்வீக வைராக்கியத்திற்கும் வழிவகுத்தது. தாமே பெருமாளைப் பிரிந்து வந்திருக்க, மக்கள் இறை நினைவின்றி இருப்பதை எவ்வாறு சுட்டிக் காட்ட முடியும்? மக்களுடைய துன்பங்களுக்கு நிவாரணம் அளித்திடவும் இறைவழிபாடுகள் மேம்படவும் தன் தவத்தையும் பூஜாபலன்களையும் அர்ப்பணித்திட சங்கல்பம் செய்து கொண்ட ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீஅகஸ்தியரை நாடித் தனக்குத் தக்க பூஜை முறையினை விளக்குமாறு கேட்டுக் கொண்டனள்.
ஸ்ரீஅகஸ்தியர், “தாயே! பராசக்தி! தாங்கள் அறியாதது இவ்வுலகில் ஒன்றுமில்லை! ஆனால் தங்கள் மூலமாகவும் பரம்பொருள் ஸ்ரீமன்நாராயண மூர்த்தி எத்தகைய  திருவிளையாடல்களைப் புரிய இருக்கின்றாரோ, அதை யாமறியோம்! எனினும் தாங்கள் குறிப்பிட்டபடி தற்போது மக்களுடைய துன்பங்களுக்குக் காரணம் உணவுப் பற்றாக்குறையே! வயிற்றுக்குச் சோறில்லையானால், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற முடிவிற்கு வருகின்ற மனிதன் தகாத செயல்களைச் செய்து தீவினைகளையே சம்பாதித்துக் கொள்கின்றான். சற்றே வசதியுள்ளோரும் பேராசை காரணமாக எவ்வகையிலும் பொருளைச் சேர்த்திடலாம் என்று அதர்மமான, அநியாயமான முறையில் தகாத காரியங்களில் ஈடுபட்டுச் சொல்லொணாப் பாவங்களைச் சேர்த்துக் கடுமையான கொடிய நோய்களால் அவதியுறுகின்றனர். இதனால் வசதியிருந்தும் அவர்களால் சரியாக உண்ண முடிவதில்லை. எனவே தாங்கள் ஸ்ரீஅன்னபூரணி தேவியை ஜோதிரூபமாக வழிபட்டிடில் இதனால் மக்களுடைய பெரும்பான்மையான துன்பங்களை எளிதில் தீர்த்திட முடியும்! நள்ளிரவும் பிரம்ம முகூர்த்த நேரமும் இணைகின்ற சக்தி வாய்ந்த பூஜை காலமாதலின் இந்நேரத்தில் ஸ்ரீஅன்னபூரணியை ஜோதி வழிபாடு மூலமாக பூஜிப்பது மிகவும் சிறப்புடையது என்று கூறி அற்புதமான “சப்த ஜோதி மண்டல தீப வழிபாட்டு” முறையைத் தெளிவுபடுத்தினார்., இவ்வாறாக ஸ்ரீலக்ஷ்மிதேவியே சப்த ஜோதி மண்டல தீப வழிபாட்டைக் கடைபிடித்து ஸ்ரீஆன்னபூரணியை வழிபட்டு ஸ்ரீதீபலட்சுமியாகத் திருமகளே நமக்கு அருள்பாலிக்கின்ற தினமே தீபாவளியாகும்.
ஸ்ரீஅகஸ்தியர் எடுத்துரைத்தபடி ஸ்ரீலக்ஷ்மி தேவி ஸ்ரீஅன்னபூரணியை வழிபட்ட சப்தஜோதி மண்டல தீப வழிபாட்டு முறையை நாமும் கடைப்பிடித்து பெறற்கரிய பலன்களைப் பெறுவோமாக!
1. மண்ணாலாகிய ஏழு நாசிகள் (மூக்குப் பகுதிகள்) கொண்ட, மேலே கைப்பிடியுடன் கூடிய தீர்த்த கண்டியைத் (கமண்டலம் போன்றது) தயார் செய்து கொள்ள வேண்டும். மண்பாண்டம் செய்பவர்களிடம் இதன் மாதிரியைச் சொல்லிச் செய்து கொள்ளலாம். சற்றுப் பெரிதாக இருப்பின் நாசிகள் நன்கு அமையும் கோயிலில் இத்தகைய பூஜையை நிகழ்த்திடில் மிகப் பெரிய கண்டியைச் செய்து வைத்து அனைவருடைய சார்பிலும் பூஜித்திடலாம். இதனை கிண்டி என்றும் சொல்வதுண்டு.
2. பூஜைக்கு முன்னர் அன்னத்தை வடித்து ஏழு நிறமான ஏழு பெரிய அன்ன உருண்டைகளைப் பிடித்து வைத்திடுக! சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம், புளியோதரை, எலுமிச்சை அன்னம், கருவேப்பிலைப் பொடி அன்னம், தக்காளி சாதம், கருநீல திராட்சைக் கனிகள் கலந்த  தயிர் சாதம், வெண்பொங்கல், மிளகுப் பொடி, பருப்புப் பொடி சாதம் என்றவாறாக  ஏதேனும் ஏழு நிற அன்ன வகைகளைக் கொண்டு ஏழு பெரிய உருண்டைகளைச் செய்திடலாம்.

தீர்த்த கண்டி

3. ஓர் வாழையிலையை வைத்து சாதாரண அன்னத்தை பரப்பி அதன் நடுவில் சப்தஜோதி மண்டலக் கண்டியை (மண்ணால் செய்த கிண்டி அல்லது கமண்டலம் போன்ற அமைப்பு – வரைபடத்தைப் பார்க்கவும்) வைத்திடுக! கண்டியினுள் ஆபரணங்களை  வைத்திடலாம். கண்டிக்குள் ஏழுவகையான நதி தீர்த்த நீரை அல்லது ஏழு வகையான கோயில் தீர்த்த நீரை ஊற்றி ஆபரணங்களை இட்டிடுக! கண்டியைச் சுற்றி ஏழுநிற அன்ன உருண்டைகளை வைத்துச் சுற்றிலும் ஏழு பசுநெய் தீபங்களை ஏற்றிடுக! கண்டிக்கு மஞ்சள், விபூதி, சந்தனம், குங்குமமிட்டுக் கண்டிக்குப் பூமாலையிட்டு அலங்கரிக்க வேண்டும். ஏழு அன்ன உருண்டைகளைச் சுற்றியும் பூச்சரத்தினை வைத்திடுக!
4. கண்டியின் மேலுள்ள தட்டில் 7 திரிகளையிட்டு ஏழு பசுநெய் தீபம் ஏற்றிட வேண்டும். அல்லது ஒரு பெரிய அகலையும் கண்டியின் மேற்பகுதியில் வைத்து ஏழு தீபங்களை ஏற்றுவது எளிதானது.
5. அன்னபூரணியின் படமோ, காசியில் கிடைக்கும் சிறு விக்ரஹ உருவமோ இருப்பின் மேற்கண்ட சப்தஜோதி மண்டலக் கண்டியின் முன் வைத்திடலாம். ஸ்ரீமஹாலக்ஷ்மி, அன்னபூரணி தேவிக்கு இம்முறையில் தீபவழிபாடு செய்து ஸ்ரீவைகுண்டப் பெருமாளின் மார்பில் உறையும் பேற்றைப் பெற்றாள். மக்களுடைய வறுமையைத் தீர்ப்பதற்காக இவ்வழிபாட்டின் மூலம் தீபாவளியன்று ஸ்ரீதீபலட்சுமியாக அவதரித்து இவ்வழிபாட்டின் பூஜாபலன்களை அளிக்கின்றாள்.
6. தீபாவளியன்று வீடு முழுவதும், கோயில் முழுதும் அகல், குத்து விளக்கு தீபங்களை ஏற்றிட வேண்டும். இதற்கான ஜோதியை மேற்கண்ட சப்தஜோதி மண்டல ஜோதியிடமிருந்து பெற்று ஏற்றுவது ஸ்ரீதீபலட்சுமியின் கடாட்சத்தைப் பெற்றுத் தரும்.
7. விளக்குத் திரி, சௌந்தர்ய லஹரி, ஸ்ரீஅன்னபூர்ணாஷ்டகம், ஸ்ரீஅபிராமி அந்தாதி போன்ற துதிகளை ஓதி, நிறைய சாம்பிராணி தூபமிட்டு, நெய் தீபங்காட்டி தீபாவளிப் பட்சணங்களைப் படைத்து ஸ்ரீஅன்னபூரணியைப் போற்றி வணங்கிப் பூஜையை நிறைவு செய்தல் வேண்டும். ஏழுவகை அன்னங்களை, பட்சணங்களை, ஏழைகளுக்குத் தானம் செய்திடுக!
8. இன்று ஆதிசங்கரருடைய ஸ்ரீஅன்னபூர்ணாஷ்டகத்தை ஓதுவது சிறப்புடையது. அறியாதோர் கீழ்க்கண்ட பாடல்களை ஓதி சப்தஜோதி மண்டல தீப வழிபாட்டின் அற்புதமான பலன்களைப் பெற்றிடலாம்.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமசிவாயவே – தேவாரம்
விளக்கை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே – (திருமந்திரம்)
இறைவனுக்கு நைவேத்யம் படைக்கும் போதும் தினமும் உணவு உண்ணும் போதும் துதிக்க வேண்டிய பாடல்
அன்னபூர்ணே சதாபூர்ணே
சங்கரப்ராண வல்லபே
ஞான வைராக்ய சித்யர்த்தம்
பிட்சாந் தேஹி ச பார்வதி
மாதா ச பார்வதி தேவி
பிதா தேவோ மஹேஸ்வர:
பாந்தவா சிவ பக்தாஸ்சா
ஸ்வதேசோ புவனத்ரயம்
பிட்சாந் தேஹி| பிட்சாந் தேஹி| பிட்சாந் தேஹி||
தனக்கு பரம் பொருளிடம் பரஞ்சோதியாய்ப் பிரகாசிக்கும் திருவருளைத் தந்த இத்தீப வழிபாட்டினை சகல லோகங்களிலும் பரப்பி, ஸ்ரீமஹா லக்ஷ்மியே ஸ்ரீதீபலட்சுமியாக அருள் பாலிக்கின்றாள். முந்தைய யுகமொன்றில் ஸ்ரீஈஸ்வர ஆண்டில் நிகழ்ந்த தெய்வத் திருவிளையாடலிதுவே!  ஸ்ரீஅன்னபூரணியே, “ஸ்ரீலக்ஷ்மி! உன்னுடைய தீபவழிபாடு மிகவும் மகத்வம் வாய்ந்தது. அன்னத்தின் சாரத்தையே தீப ஒளியாகக் கூட்டுவதால் இதன் பிரகாசமானது மக்களுடைய வறுமையைத் தீர்ப்பதோடு இறைவனின் நெஞ்சில் பக்திச் சுடராக நீங்கா இடம் பெறும் பாக்கியமும் அவர்கட்குக் கிட்டும்”, என்று அருளுரை மொழிந்திட்டாள்.
பலன்கள்
1. ஈஸ்வர ஆண்டில் மேற்கண்ட முறையில் கண்டி விளக்கேற்றி வழிபடும் இல்லங்களில் எல்லாம் ஸ்ரீதீபலட்சுமியே தம்முடைய தெய்வீக ஒளிச்சுடரையும் கூட்டி தீபப்பிரகாசக் கடாட்சத்தை அர்ப்பணித்துச் செல்கின்றாள்.
2. அனைத்து பொக்கிஷங்களையும், செல்வத்தையும் சகல ஐஸ்வர்யங்களையும் இழந்து நின்ற குபேரனுக்கு ஸ்ரீமஹாலக்ஷ்மி தேவியே சப்தஜோதி மண்டல தீப வழிபாட்டை உணர்த்திக் கடைப்பிடித்து, அனைத்து லட்சுமி கடாட்சங்களையும் மீண்டும் குபேரன் பெறுமாறு செய்தாள். எனவே வறுமை, பணப் பற்றாக்குறை, நிதிசீர் குலைவு உள்ள இடங்களில் இப்பூஜையை மேற்கொண்டிடில் நிதி நிலைமை மேம்படும்.
பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் நஷ்டங்களினால் பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டு அதில் உள்ள ஊழியர்கள், வேலையின்மையால் பல துன்பங்களுக்கு உள்ளாகியிருப்பர். அவர்கள் சத்சங்கமாக ஒன்று கூடி மேற்கண்ட பூஜையை ஆழ்ந்த நம்பிக்கையுடன் கோயிலில் நிகழ்த்தி இயன்ற அளவு அன்னதானம் (எழுவகை அன்னவகைகள்) செய்திட நிதிநிலைமை சீர்பெற்று மீண்டும் வேலைக்குச் செல்லும் நல்வாய்ப்புக் கிடைக்கும். ஆழ்ந்த இறைநம்பிக்கை எந்நற்காரியத்தையும் சாதிக்க வல்லதாகும்!
3. தீபாவளிக்குத் தோஷங்களை நிவர்த்திக்கும் சக்தி உண்டு. எனவே கன்னிப் பெண்கள் சிரத்தையுடன் இதனைச் செய்திடில் பல வருடங்களாகத் தடைபட்டு வரும் தடங்கல்கள் நீங்கி மங்களகரமான முறையில் திருமணங்கள் நடைபெறும்.
4. பிரிந்த கணவன் மனைவியர் இத்தீப வழிபாட்டை முறையாகச் செய்திடில் கணவனுடன் சேர்ந்து வாழ்கின்ற நன்னிலை உண்டாகும்.
5. செல்வத்தை ஈட்டுவது பெரிதல்ல! அது நிரந்தரமாகத் தங்கி, ஒழுக்கமான, சாந்தமான வாழ்வைத் தர வேண்டும். இதற்கு வழிவகை செய்வதே தீப வழிபாடு!

அமிர்த தாரைகள்

1. வல, இட வொட்டு நட்சத்திரங்கள் :- வலவொட்டு நட்சத்திரம் – அசுவினி, பரணி, கார்த்திகை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, மூலம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.
இடவொட்டு நட்சத்திரம் :- ரோஹிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, மகம், பூரம், உத்திரம், விசாகம், அனுஷம், கேட்டை, அவிட்டம், சதயம், திருவோணம்.
சிதறுகாய் உடைக்கும் முறை பற்றிய விளக்கங்களில் (ஆகஸ்ட் – 1997) வல, இடவொட்டு நட்சத்திரக்காரர்கள் அவரவர்க்குரிய சிதறுகாயை உடைக்கும் முறையைக் காண்க.
2. குங்குமம் தந்திடும் மங்களம் :- மயிலாடுதுறை அருகே திருமீயச்சூரில் ஸ்ரீலலிதாம்பிகை இரு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அற்புதமாகக் காட்சியளிக்கின்றாள். ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் அறிந்தோர் ஸ்ரீலலிதாம்பிகையின் சந்நிதியில், வாழ்க்கையில் ஒரு முறையேனும் சஹஸ்ர நாமத்தை ஓதினால் தான் பலன்கள் பரிபூர்ணமாகும். ஸ்ரீஅகஸ்தியரின் பத்னியாகிய ஸ்ரீலோபமாதாவின் ஆசியும் கிட்டும். இவ்வாலயத்திலேயே முறைப்படி மஞ்சளை இடித்துக் குங்குமம் தயாரித்து ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் ஓதி ஸ்ரீலலிதாம்பிகைக்கு முதல் குங்குமத்தை இட்டு, ஜாதி வேறுபாடின்றி பல சுமங்கலிகட்கும் குங்குமப் பிரசாதத்தை அளித்து வந்தால் கணவனின் கெட்ட பழக்கங்கள் மறைந்து, நோய்களும் தணிந்து மாங்கல்ய சக்தி நன்கு விருத்தியடையும்.

திருமீயச்சூர்

3. வறுமை நீக்கும் அருமை விநாயகர் :- தும்பிக்கையில்லாத, மனித முக ஸ்ரீஆதிவிநாயகருக்கு வெள்ளிக் கிழமைதோறும் விபூதிக்காப்பிட்டு சுக்ர ஹோரை நேரத்தில் (காலை 6-7, பகல் 1-2 , மாலை 7-8) சுக்ர பகவானுக்குரிய வெண் பட்டு சார்த்தி முந்திரி, திராட்சை, கலந்த வெண்பொங்கலைப் படைத்து ஏழைகளுக்கு தானமளித்துவர, தரித்திரம் நீங்கி முறையான பணவரவு ஏற்படும். வியாபாரத்தில் ஏற்படும் பெருத்த நஷ்டங்களும் தீர்ந்து நன்முறையில் வியாபாரம் விருத்தியாகும். (திருச்சி, திலதைப்பதி போன்ற தலங்கள்)
4. தினமொரு பச்சிலை :- தினமும் ஒரு மூலிகையேனும் உடலில் சேர வேண்டும். கருவேப்பிலை, அருகம்புல், வல்லாரை, பொன்னாங்கண்ணி, ஆராக்கீரை, துளஸி, கரிசலாங்கண்ணி, அகத்திக்கீரை போன்ற மூலிகைக் கீரைகளை/இலைகளை/பொடியை தினமும் சிறிது உண்டு வந்திடில் மூலிகைக்குரிய ஆன்மீக சக்தி உடலில் சேருவததோடு, ஆங்கில மருந்துகளாலும், செயற்கை உரத்தால் விளையும் உணவுப் பொருட்களாலும் ஏற்படும் ரசாயன விஷ விளைவுகளிலிருந்து உடலைக் காக்கின்றது. தற்போது பல மூலிகை இலைப் பொடிகள் நிறையக் கிடைப்பதால் மூலிகையுணவு மிகவும் எளிதானதே. கலப்படமில்லாத தூய்மையானதாகத் தேர்ந்தெடுக்கவும்.
5. பூச்சூடும் புனித முறைகள் :- கடையில், பூவை வாங்கிய உடனேயே கண்ட இடங்களில் நின்று கொண்டு பூவைச் சூடாதீர்கள்! செருப்புக் கடைகளையும், ஊர்வலங்களையும், அமங்கலப் பொருட்களையும் பார்த்துக் கொண்டு பூவை அணிதலாகாது. பூவை வாங்கியவுடன் “ஓம் புஷ்பேஸ்வராய நம: , ஓம் புஷ்பவனேஸ்வரரே போற்றி” என்று இறை நாமங்களைத் துதித்து சுத்தமான நீரைத் தெளித்து, கோயிலிலோ, இல்லத்திலோ, மங்களகரமான காரியங்கள் நிகழும் இடங்களில் தான் பூவைச் சூடுதல் வேண்டும். ஜாதிபேதமின்றி வயதான சுமங்கலிகளிடமோ, கணவனிடமோ பூவைப் பெற்று அணிதல் சுமங்கலித்துவத்தைத் தரும். மரத்தாலான கொண்டை ஊசிகளால் மட்டுமே தலையில் பூவைச் செருகிடுக! பிளாஸ்டிக் ஊசி கூடாது! ஜடையின் நுனியில் பூவைத்தல் கூடாது. வெறுமனே கூந்தலைப் பின்னி விட்டுவிடுதலால் கணவனுக்கு நோய்களே பெருகும். ஆடாது, அசங்காமலிருக்கும்படி கூந்தலின் ஒருபுறம் மட்டுமே பூ இருக்க வேண்டும். நார், ரிப்பன் (மரஹேர்பின்), ஏதேனும் கொண்டு ஜடை நுனியைப் பிணைத்திடுக! பூவைக் கூந்தலுக்குள் வைத்து மறைத்தல் கூடாது. பூ வெளியில் நன்கு தெரிய வேண்டும்.

ஸ்ரீநரமுக விநாயகர்
திருச்சி

6. குழந்தைகள் நன்கு படித்திட :- உங்கள் குழந்தைகளை (ஆரம்பப் படிப்பிலிருந்து கல்லூரி, தொழில் நுட்பக் கல்வியுட்பட) தினமும் ஸ்ரீசுசரித சரஸ்வதி நாமத்தை தியானித்தவாறே சந்தனக் கல்லில் சந்தனத்தை அரைக்கச் செய்து தினமும் ஸ்ரீசுசரித சரஸ்வதிக்கு இட்டுவரச் செய்திடில் இறையருளால் படிப்பில் முன்னேற்றம் பெறுவர்.
7. கிரஹ சஞ்சாரத் துன்பங்கள் நீங்கிட..... ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அந்தாதி
 நம்முடைய வாழ்க்கைப் பிரச்னைகள் ஓரளவேனும் தீர்ந்தால் தான் கடவுள் சிந்தனையையே மேம்படுத்த முடியும் என்று பலர் எண்ணுகின்றனர். சித்புருஷர்களின், மஹான்களின் திருவாக்காய் மலரும் துதிகளிலும் பாடல்களிலும் அவர்களுடைய தபோ சக்தியும் வேத, மந்திர சக்திகளும் கூடியிருப்பதால், அவற்றிற்குப் பிரச்னைகளை நிவர்த்திக்கும் தெய்வீக சக்தி இருப்பதோடு மாறா இறைபக்தியையும் பெற்றுத் தரும் மாபெரும் ஆன்மீக பொக்கிஷங்களாகவும் அவை விளங்குகின்றன கிரஹ சஞ்சாரத் துன்பங்கள் என்றால் கிரஹங்களின் பெயர்ச்சியால் உருவாவன என்பது பொருளல்ல! நம்முடைய கர்மவினைகளின் சுழற்சிகளையே கிரஹ அசைவுகள் குறிக்கின்றன. கீழ்க்கண்ட பாடலை முறையாக ஓதி நவகிரஹத்தை வலம் வர பலவிதமான துன்பங்களும் தடங்கல்களும் நீங்கும்.
வாளுடன் வந்தவடிவழகு நாயகியென் வாக்கினில் நின்று
ஆளுடன் வந்தவருக்கெல்லா முன்நாமங் கூறியவர்
கோளது மாற்றியே குறைதீர்த்திடச் செய்து
நாளெல்லாம் நின்நாமங் கூறும்நிலைதனை யீந்திடாயோ
--- ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் அருளியது.

ஸ்ரீவைத்தியநாதர் மகிமை

ஸ்ரீவைத்தியநாதர் – பிரபஞ்சத்தின் வைத்தியர்!
ஸ்ரீ சூரிய பகவானே வணங்குகின்ற லிங்கம்!
ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயிலில் நடக்கும் அற்புதம்!!
சூரிய கிரணங்கள் தழுவுகின்ற லிங்க மூர்த்தி!!!
மயிலாடுதுறை (மாயூரம்) அருகே உள்ள ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயிலில் புரட்டாசி மாதம் 17,18,19,20,21 தினங்களில் (அக்டோபர் 1997 – 3,4,5,6,7) பஞ்சாங்க ரீதியாக மாலை நேரத்தில் சூரிய பகவானுடைய கிரணங்கள் ஒளிக்கதிர்கள் ஸ்ரீவைத்யநாத ஸ்வாமியாகிய மூலஸ்தான லிங்க மூர்த்தியின் மேல் படிகின்ற தெய்வீக காட்சியைக் கண்டு தரிசித்து அற்புதமான முறையில், பல கடும் நோய்களுக்கான நிவாரணத்தையும் பெற்றிடுங்கள். நாள்தோறும் கோடானுகோடி ஜீவன்களுக்குத் ஜீவ சக்தியை அளிக்கின்ற சூரியபகவானே ஸ்ரீவைத்தியநாத ஸ்வாமியை ஸ்பரிசித்துப் பூஜை செய்கின்ற காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்! அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையேனும், ஸ்ரீபாஸ்கர மூர்த்தியாகிய சூர்யபகவான் மாலை நேரத்தில், ஸ்ரீவைத்தியநாத சுவாமியின் மேல் ஒளிக்கிரணங்களைப் பொழிந்து அபிஷேகம் செய்கின்ற தெய்வீக வைபவத்தைக் கண்குளிர தரிசித்தால் தான் நாம் கண்களைப் பெற்ற பாக்கியத்திற்குப் பரிபூர்ணம் கிட்டும்.

ஸ்ரீதன்வந்திரி மூர்த்தி மாத்தூர்

இதோ..... ஸ்ரீதைலநாயகியாக, ஸ்ரீபார்வதி தேவி தைலாம்பிகையாக, ஈஸ்வரனைத் தொடர்கின்றாள்! எங்கு செல்லவோ? கூடவே கோடிக்கணக்கான மூலிகை விருட்ச அம்சங்கள் நிறைந்த சஞ்சீவி! இம்மட்டோ, பல கொடிய நோய்களைத் தீர்க்கவல்ல வில்வமரப் புற்று மண்ணும், ஈஸ்வரனையும் அம்பிகையையும் தொடர்ந்தது! இதோ சஞ்சீவி, வில்வப் புற்றுடன் ஸ்ரீதைலாம்பிகை சமேதராக ஸ்ரீவைத்யநாத சுவாமி லிங்கமூர்த்தியானார்! பிரபஞ்சத்திற்கே இவர்தான் வைத்தியர்! சூரசம்ஹாரத்திற்கான வேலை முருகப் பெருமான் பெற்ற திவ்யத் தலம். செவ்வாய் பகவானுக்கு அதிபதியான ஸ்ரீசெல்வமுத்துக் குமாரசாமியாம் முருகனை, குறித்த நட்சத்திரத்தில் ஹோரையில் தற்போதும் செவ்வாய் பகவான் வலம் வந்து போற்றுகின்றார்.
அமிர்த கடாட்சத் தலம்
பலவிதமான கர்மவினைகளால் ஏற்படும் அனைத்து நோய்களையுந் தீர்க்கும் பொருட்டு இறைவனே மருத்துவனாக எழுந்தருளியுள்ள சிறப்பான தலம்! கோடிக்கணக்கான சித்தர்கள் அமிர்த நேரம் என்னும் தெய்வீக ரகசியங்கள் நிறைந்த, திருவருள் பொங்கும் தெய்வீக சக்திகள் கூடுகின்ற நேரத்தில் ஸ்ரீவைத்ய நாதரை அமிர்தத்தால் அபிஷேகம் செய்கின்ற புனிதத்தலம்! அனைத்து நவகிரஹ மூர்த்திகளும் ஒரே வரிசையில் உள்ள ஒப்பற்ற ஆலயம்! ஸ்ரீஅங்காரக (செவ்வாய்) பகவானுக்கு மூலமூர்த்தியும், உற்சவ மூர்த்தியும் அமைந்துள்ள திருக்கோயில்! இத்தலத்திற்குப் புள்ளிருக்கும் வேளூர் என்ற பெயருமுண்டு! புள் – (ஜடாயு) பறவை ரிக்கு – ரிக்வேதம் ; (வேள்) – முருகனின் ஊர் – சூரியன் ஆகிய நால்வரும் முதன்மையாக வழிபட்ட விசேஷமான இறைத்தலம்! இங்குள்ள ஜடாயு குண்டம் தொன்மையானது. அருட்சக்தி நிறைந்த குண்டம்! ஸ்ரீராமரும் ஸ்ரீலக்ஷ்மணரும் சடாயுவைப் புனிதமான முறையில் தகனஞ் செய்த தொன்மை வாய்ந்த சக்தி மிகுந்த இறைத்தலம். ஜடாயுவின் சகோதரனே சம்பாதி, கழுகாயிருப்பினும் பூர்வஜென்ம புண்யவசத்தால் அனைத்து வகையான பூலோக, தேவலோக புஷ்பங்களின் மஹிமையை நன்கு அறிந்திருந்தமையின், தினமும் லட்சக்கணக்கான விதவிதமான பூக்களைக் கொணர்ந்து, ஸ்ரீவைத்யநாத சுவாமியைப் பூஜித்து மகிழ்ந்த புண்ணியாத்மா! ஸ்ரீராமருக்கு முன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்தோன்றியவர். நாகலிங்க புஷ்பம், ராமபாண புஷ்பம் போன்ற மலர்களை வைத்து முறையாக பூஜித்திடில், இவை பல ஹோமங்களுக்குரிய பலன்களை உடனே தரவல்லவை!
சூரிய பூஜையில் நாம் பெறும் அமிர்தசக்தி
சூரிய பகவான் இங்கு மாலையில் ஸ்ரீவைத்யநாத சுவாமியை பூஜிப்பதின் மகத்துவம் என்ன? உலக ஜீவன்கள் மட்டுமன்றி, இப்பூமியைப் போலுள்ள இன்னும் பல பூமிகளிலும், அனைத்து வகையான நல்ல, தீய காரியங்களுக்கு முழு சாட்சியாக இருப்பவர்களே சந்திரனும், சூரியனும், எனவேதான் அக்காலத்து மன்னர்கள், கோயில் தர்ம காரியங்களில் “சூரிய, சந்திரர்கள் உள்ள வரையில்” என்று சாசனங்களை எழுதி வைத்திருக்கின்றனர். அனைத்து ஜீவன்களுடைய அதர்மமான, தீய கர்மங்களுக்கும் சூரியன் சாட்சியாக இருப்பதால் அவருக்குப் பல தோஷங்கள் ஏற்பட்டு, சூரிய கிரணங்களுடைய ஜீவ சக்தியும், தெய்வீக, அமிர்த சக்திகளுக்கு பங்கம் ஏற்படுகின்றன. மேலும் சூரியபகவானே பல நோய்களைத் தணிக்கும் தெய்வ மூர்த்தியன்றோ?

சித்தாமிர்த தீர்த்தம்
வைத்தீஸ்வரன் கோவில்

ராகு, கேதுவினால் கிரஹண நேரங்களில் பீடிக்கப்படுகையிலும், சூர்ய, சந்திர மூர்த்திகள் அமிர்த சக்தியைச் சற்றே இழக்கின்றனர். இதுபற்றிய விளக்கங்களை ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் ஏற்கனவே அளித்துள்ளோம். இதனை ஈடுசெய்யும் பொருட்டு, ஸ்ரீதன்வந்திரி அருளியபடி, கோடானுகோடி சித்புருஷர்களும் சித்த கணங்களும் ஸ்ரீவைத்யநாத சுவாமியின் சிரசில் அமிர்தத்தைப் பொழிந்து அபிஷேகித்திருக்கையில் சூர்யபகவான் அந்த திவ்யமான காட்சியைக் கண்டு ஆனந்தமடைந்து தாமிழந்த சில அமிர்த சக்தியின் அம்சங்களை மீண்டும் பரிபூர்ணமாகப் பெறுகின்றார். சித்தர்களின் அமிர்த அபிஷேக நீர் கலந்த தீர்த்தமே இன்று சித்தாமிர்த தீர்த்தமாய், திருக்குளமாய் இங்கு விளங்குகின்றது. காமேதேனு, பாலைச் சுரந்து ஸ்வாமியை அபிஷேகித்திட்ட அமிர்தமயமான பாலும் இத்தீர்த்தத்தில் தான் கலந்தது! சூரியபகவான் இதில் தான் நீராடி பல அமிர்த சக்திகளையும் பெற்றார். சுயம்புத் திருமேனியான ஸ்ரீவைத்யநாத சுவாமி மிகுந்த அமிர்த சக்தியைப் பெற்றவர். மிகவும் புனிதமான மஹான்கள், யோகியர்கள் போன்றோரால் இவ்வமிர்த சக்தியை கிரஹித்திட முடியும்! நாம் என்ன செய்வது? மேற்கண்ட தினங்களில் ஸ்ரீசூர்யபகவானின் சூர்ய கிரணங்கள் லிங்கத் திருமேனியில் பட்டு, சூரியபகவான் பூஜித்திடுகையில்,
1. சூர்ய கதிர்களுக்கு லிங்கத் திருமேனியி அமிர்த சக்தி சேர்கின்றது
2. லிங்கத்தின் மேல் பட்டுப் பிரதிபலித்து வருகின்ற அமிர்த சக்தி வாய்ந்த கிரணங்கள் நம்மீது படுகையில் அதன் தெய்வீக சக்தியால் பல நோய்களுக்கு நிவர்த்தி கிட்டுகின்றது.
3. மூதாதையர்களுக்கு சரிவரத் தர்ப்பணம் அளிக்காமையால், பித்ரு சாபங்களினால் சந்ததியின்மை, தாம்பத்திய உறவுப் பிரச்சனைகள், கணவன் மனைவி பிரிவுகளினால் துன்புறுவோர்க்குத் தக்க பரிகாரங்கள் இத்தரிசனத்தால் கிட்டும். பித்ருகாரகன் சூர்ய பகவானன்றோ!  சூர்ய பகவான் தம் திருக்கரங்களால் நிகழ்த்துகின்ற பாஸ்கர பூஜை தினங்களில் (புரட்டாசி 17,18,19,20,21 – அக்டோபர் 1997) மாத 3,4,5,6,7, நாட்கள்) சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீவைத்தியநாத சுவாமியின் திருமேனியிலிருந்து பட்டு வருகின்ற சூரியக் கதிர்களின் அமிர்தமயமான தெய்வீக சக்தியைப் பெற்றுத் திளைத்திடுங்கள்! எத்தகைய கொடிய நோய்களுக்கும் நிவர்த்தி தரவல்லது. ஆழ்ந்த பக்தியுடன் வழிபட்டிடில்! இன்று ஆரஞ்சு வண்ண ஆடைகளை இங்கு தானம் செய்திடுக கோதுமை உணவு வகை அன்னதானம் சிறப்புடையது!

ஸ்ரீசுசரித சரஸ்வதி

(அட்டைப்பட விளக்கம்) வீட்டில் கல்விச் செல்வம் பெருகிட
ஆம். ஸ்ரீசுசரித சரஸ்வதியே கல்விச் செல்வத்திற்கெனக் கலியுகத்தில் அருள்பாலிக்கும் கலைமகள்! நவதுர்க்கைகள் மட்டுமன்றி ஸ்ரீசூரிய துர்க்கை, ஸ்ரீவிஷ்ணு துர்க்கை எனப் பல்வேறு துர்க்கா தேவியர் நம்முடைய பலவகையான கர்மவினைகளையும், சமுதாயத்தில் நிலவும் தீய சக்திகளையும் களைந்திட அவதாரம் பெற்றுள்ளது போல ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளைக் குருவாகக் கொண்டு நமக்கு அருளைத் தருகின்ற ஸ்ரீசரஸ்வதி தேவியரும் பலருண்டு. கரங்களில் வீணையின்றி அருள்பாலிக்கும் ஞானசரஸ்வதி, பீடத்தினடியில் புனிதநதி நீரோட்டமிருக்க தரிசனந்தரும் பிருந்தாவன சரஸ்வதி, கையில் சுவடியோடிருக்கும் பாரதி என ஸ்ரீசரஸ்வதி தேவமூர்த்திகள் விதவிதமான கலைச் செல்வங்களை அருள்கின்றனர். (சென்னை கோயம்பேடு சிவன்கோயில், மங்கலக்குடி, ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி)
விஞ்ஞானம் பற்றி மெய்ஞ்ஞான விளக்கங்கள் – அனைத்தும் ஸ்ரீசரஸ்வதி லீலைகளே!
கலியுகத்தில் நவீன விஞ்ஞானம் விரிந்து பெருகிச் செல்கின்றதே இதுவும் கலைவாணியின் அருள்துறையின்பால் பட்டதா? ஆம். நிச்சயமாக! சித்புருஷர்களின் கிரந்த வாக்யங்களில் நம்மை பிரமிக்க வைக்கும் விஞ்ஞான விளக்கங்களும் காலக் குறிப்புக்களும் நிறைந்துள்ளன கம்ப்யூட்டர், அணுசக்தி, Laser  என விஞ்ஞானத்தின் புரட்சியாக நாம் எவற்றைக் கருதுகின்றோமோ, அவையெல்லாம் காலச் சுழற்சியில் மீண்டும் வந்துள்ளனவே தவிர, எதுவும் புதில்ல, அனைத்தும் கலைமகளின் அருளால் கனிந்தவையே. ஆனால் தாம் பெற்ற விஞ்ஞானக் கல்வியை, விஞ்ஞானிகள் அழிவிற்குப் (அணுசக்தி) பயன்படுத்துதலே வேதனைக்குரியதாம்.

ஸ்ரீஞானசரஸ்வதி மங்கலக்குடி

கிருதயுகம், திரோதாயுகம் (ஸ்ரீராமர் காலம்) துவாபர யுகம் (ஸ்ரீகிருஷ்ணர் காலம்), கலியுகம் (நடப்புக் காலம்) என்ற நான்கு யுகங்களும் காலச் சுழற்சியில் மீண்டும் மீண்டும் வருகின்றன! எனவே நாம் வாழ்கின்ற கலியுகம் போன்று எத்தனையோ விஞ்ஞானமயக் கலியுகங்கள் கோடானு கோடி வந்து சென்றுள்ளன! யுகயுகமாய் வாழ்கின்ற சித்தர்களும், மஹான்களும் அனைத்து யுகங்களையும் விஞ்ஞானங்களையும் கண்டு உணர்ந்து நமக்கு விளங்குகின்றனர். விஞ்ஞானம் எங்கு முடிகின்றதோ அதுதான் மெய்ஞானத்தின் தொடக்கம் என்பது சித்தர்களின் வாக்கு! பல கோடி யுகங்களுக்கு முன் ஸ்ரீசுவாஸிஷ ஈச பிரம்மமூர்த்தியின் தேவியாய் அவதரித்த ஸ்ரீசுசரித சரஸ்வதியின் வழிபாடு பிரதோஷம், விஷ்ணுபதி போன்று தற்போது ஆன்மீக மறுமலர்ச்சி பெறுகின்றது.
1. கம்ப்யூட்டர், அணுசக்தி, மருத்துவத் துறை அறுவை சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள், தொழில் நுட்ப ஆய்வு, கனிப்பொருள், ஆராய்ச்சி, ரசாயன, பௌதிகத் துறைக் கண்டுபிடிப்புகள், வானவியல் மற்றும் விண்வெளித் தொடர்பு சாதனங்கள் (Satellite Communications) என்று ஒப்பற்ற விஞ்ஞான முன்னேற்றங்கள் என்று நாம் கருதும் பலநிலைக் கல்விக்கு, கலியுகத்தில் அருள்பாலிப்பவளே சுசரித சரஸ்வதி,! இன்று நாம் காணும் ஹெலிகாப்டரும், விண்வெளி ராக்கெட்டுகளும், கம்ப்யூட்டர்களும் ஏற்கனவே பல கலியுகங்களில் பழக்கத்திலிருந்தவையே என்பது எவராலும் நம்ப இயலாத ஆனால் சத்யவாக்கான ஆன்மீக இரகசியமாகும்! நம்முடையது போல் எத்தனையோ பூமி கிரஹங்கள் உள்ளனவே! ஒன்றில் கிருதயுகமும், மற்றொன்றில் திரேதாயுகமும், பிறிதொன்றில் துவாபர யுகமும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கலியுகம் நடக்கின்ற, நாம் வாழ்கின்ற பூமிக் கோளங்கள் போல் எத்தனையெத்தனை! சற்குருவின் பரிபூரண அருள்கூடினால் தான் இத்தகைய பிரம்ம ரகசியங்களை அறிந்திட முடியும், அதுவரையில் அனைத்தும் கட்டுக்கதை போல்தான் தோன்றும்!
மஹாப்பிரளயத்தின் போது அனைத்துக் கலைகளும், கல்வியும் மறைந்து ஸ்ரீசரஸ்வதியிடம் ஒடுங்குகின்றன. அவை தாம் அந்தந்த யுகங்களில் மீண்டும் வெளிவருகின்றன. ஸ்ரீசரஸ்வதி தேவியே இன்றும் தம் சற்குருவான ஸ்ரீஹயக்ரீவ பெருமாளிடம் அடக்கமாகக் கல்வி பயில்கின்றாள் என்றால் கல்வி கரையிலதன்றோ!
ஸ்ரீசுசரித சரஸ்வதியின் வலக்கரத்தில் அமர்ந்துள்ள சித்தர்! ஸ்ரீதர்பலிங்க சித்தர்
நவராத்திரி கொலு பூஜையை பல லோகங்களிலும் பரப்பி இறைத் திருப்பணி புரிந்தவர். கோடானுகோடி யுகங்களாக புனர்பூச நட்சத்திரத்தில் ஸ்ரீஹயக்ரீவரை இன்றும் வழிபட்டு ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் சரஸ்வதியிடமிருந்துதான் சிவபெருமானின் 64 தாண்டவ நடனங்களின் தெய்வீக இரகசியங்களைக் கற்றறிந்தார். ஸ்ரீகுப்பைச் சித்தர், ஸ்ரீமலப்புழுச் சித்தர், கட்டை விரல் சித்தர் ( உயரம் கட்டை விரலளவே!) போன்று ஸ்ரீதர்பலிங்க சித்தரும் அன்றும் இன்றும் என்றும் பிரபஞ்சத்தில் நினைத்த போதெல்லாம் உலா வரும் நித்ய சித்தராவார். இவருடைய எல்லையில்லாத் தவத்தின் மஹிமையை உணர்ந்து ஸ்ரீசுசரித சரஸ்வதியே ஸ்ரீதர்பலிங்க சித்தரைத் தம் வலக்கரத்தில் அமரும் அற்புத பாக்கியத்தை அளித்துள்ளாள். ஒலி, ஒளி ரூபத்தில் கல்வியில் தெய்வீக நிலையைத் தருபவளே ஸ்ரீசுசரித சரஸ்வதி! இதற்கான வழிபாடு முறைகளை ஸ்ரீதர்பலிங்க சித்தரே மக்களுக்கு அளிக்கின்றார்.

ஸ்ரீஅகத்திய பிரான் மாத்தூர்

பக்த ரஞ்சனி அன்னம் – வலக்கரம்
ஸ்ரீசுசரித சரஸ்வதியின் வலக்கரத்தில் உள்ள அன்னம்! பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் நல்லது, தீயதெனப் பகுக்கும் தெய்வீக சக்தி பெற்றதாகும். பலகோடி பிரம்ம மூர்த்திகளுக்கு வாஹனமாகி நின்ற பெரும் பேற்றைப் பெற்றது. பக்த ரஞ்சனி எனப் பெயர் பெற்ற இந்த அன்னமானது பலகோடி ஆண்டுகள் வாசியோக நிலையிலிருந்து நல்லன, தீயவனற்றைச் சுவாசத்தால் பகுத்துப் பிரிக்கும் ஆத்ம சக்தியைக் கொண்டுள்ளது. வாசியோகங்களின் மூலம் கோடிக்கணக்கான ஜீவன்களைத் தீய வழிகளிலிருந்து நன்னெறிப் படுத்தியமையால் பக்த ரஞ்சனி அன்னம் அம்பிகையின் கரத்தில் அமரும் தெய்வீகப் பேற்றைப் பெற்றது. நல்ல எண்ணங்களுடன், நற்சிந்தனையுடன், நல்ல பண்புள்ள பழக்க வழக்கங்களுடன் நற்காரியங்கள் செய்தவாறு வாழ்ந்திட அருள்பாலிக்கும் அன்னபட்சி!
வித்யா கற்பக விருட்சம் – இடக்கர மலர்கொத்து
கேட்டதைத் தரும் தேவலோகத் தெய்வீக மரமான கற்பக விருட்சத்தில் பல வகைகள் உண்டு. அதில் வித்யா கற்பக விருட்சமானது விரும்புகின்ற கல்விச் செல்வத்தை அளிக்க வல்லதாகும். கல்வி, நடனம், இசை, ஓவியம் என வித்யா கற்ப விருட்சங்களில் எண்ணற்ற வகைகள் உண்டு. கோடி கோடியாய்ப் பரிணமிக்கும் இம்மலர்களையே, ஸ்ரீசுசரித சரஸ்வதி தேவி தன் இடக் கரத்தில் தாங்கி நிற்கின்றாள். இம்மலர்களுக்கு ஆரமாக விளங்குகின்ற மாலையானது தும்ப மாலிகா புஷ்பத்தினால் ஆனது. இத்தும்ப மாலிகா புஷ்பமே கலியுக கல்விச் செல்வத்திற்கு உரித்தானது. அனைத்து நவீன விஞ்ஞான ஆயுவுகளும் இதில் அடங்கும்! அம்புஜ சக்தி வரப்ரதா மாலை என சித்புருஷர்களின் பரிபாஷையில் வழங்கப்படும் இம்மாலையானது அம்பிகையின் கைகளில் உள்ள வித்யா ரேகைகளிலிருந்து ஒளிரும் சூட்சுமப் பிரகாசக் கதிர்களை கிரஹித்து அழியாக் கலைச் செல்வத்தை அளிக்க வல்லதாகும்.
கல்பசூத்ர மஹாபட்சி – புறா வீணை
அம்பிகை தன் திருக்கரங்களில் தாங்கியிருக்கும் வீணையானது கல்பசூத்ர மஹாபட்சி எனப்படும் புறா வடிவிலுள்ள ஒரு மஹரிஷியின் ஆத்ம கான ஸ்வரூபமாகும். இம்மஹரிஷி கடுந்தவமிருந்து கல்ப சூத்ர மஹாபட்சி புறாவாகும் வடிவை வேண்டினார். ஏன்? புறாக்கள், கருடன், காக்கை போன்ற சில பட்சிகள் வானுலகங்கள் பலவற்றிற்கும் பறந்து செல்லும் ஆற்றல் பெற்றவை. இதிலும் கல்ப சூத்ர மஹாபட்சிப் புறாவானது எவராலும் அடைய முடியாத சப்தஸ்வர லோகங்களுக்குச் செல்லும் அபூர்வமான தெய்வீக சக்தியைப் பெற்றவை. வீணா கானத்தை மீட்டி இறைவனைப் பூசிப்பதன் மூலமாக எளிதில் முக்தியைப் பெற்றுவிட முடியும். பிரபஞ்சத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் அற்புதமான புறா! இறைவனின் நாட்டியத்தில், சர்வேஸ்வரனுடைய ஹிருதயாகாசத்தில் பிராண நாடியாக எழுவதே இசை! பெறற்கரிய இவ்வீணையின் தரிசனமே பலவித பாக்கியங்களைப் பெற்றுத் தரும். இசை மூலம் ஞான ஒளி, ஞானசக்தி , ஞானசக்தியைத் தரவல்லது. இசைக் கலைஞர்கள் வழிபட வேண்டிய வீணை!
வித்யுத் பூரண சுவடிகள் – இடக்கரம்
அம்பிகையின் இடக்கரத்தில் உள்ள சுவடியில் தாம் நான்கு வேதங்கள் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் உள்ள வேதமறைகளின் சக்தியானது யந்திர, சக்கர வடிவுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. அனைத்து உலக மொழிகளின் தாயன்றோ ஸ்ரீசரஸ்வதி தேவி! அது மட்டுமா, மனிதனின்றி, சகல விலங்குகளின், தாவரங்களின் சங்கேத மொழிகளுக்கும் அதிபதி கலைவாணியே! இம்மொழிகளின் சப்த நாதங்களும், எழுத்து வடிவுகளும் இச்சுவடியில் பதிந்துள்ளன.
இவ்வாறாக, கலியுகத்தின் கல்விச் செல்வத்தை அதன் எண்ணற்ற பிரிவுகளின் சிறப்புத் தன்மைகளோடு பன்மொழிச் செல்வத்தையும், கலை ஞானத்தையும், நுண்கலை அறிவையுந் தந்து அருள்பாலிப்பவளே ஸ்ரீசுசரித சரஸ்வதி! இந்த வித்யுத் பூரணச் சுவடியில் தாம் அனைத்துக் கல்வித் துறைகளும் அடங்கியுள்ளன. நவீன விஞ்ஞானக் கண்டுப்டிப்புக்களெல்லாம் இதில் அடங்கும்.
பன்னீர் கந்தக் கமலம் – வெண்தாமரை
ஸ்ரீசுசரித சரஸ்வதி அமர்ந்துள்ள அற்புதமான வெண்தாமரை! ஸ்ரீஹயக்ரீவரின் தேவியான ஸ்ரீலக்ஷ்மி அவதாரம் பெற்றபோது, அடக்கத்துடன் ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீஹயக்ரீவரைக் குருவாகக் கொண்டு எல்லையற்ற கல்விச் செல்வத்தைப் பெற்றும் சாந்தத்துடனும் பணிவுடனும் திகழ்கின்ற காட்சியைக் கண்டு மனம் பூரித்தாள். ஸ்ரீஹயக்ரீவரும், ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவரும் சேர்ந்து ஸ்ரீசுசரித சரஸ்வதிக்கு தரிசனந் தந்திட, குருபத்னி – குரு சமேத தரிசனம் விசேஷமான தன்றோ! புனர்பூச நட்சத்திரத்தில் இத்தகைய திவ்ய தரிசனத்தைத் தந்து ஸ்ரீஹயக்ரீவ – லக்ஷ்மி ஹயக்ரீவ மூர்த்திகள் பன்னீர்ப் புஷ்பங்களை நறுமணமுள்ள சந்தனத்தில் தோய்த்து ஸ்ரீசுசரித சரஸ்வதி – சுவாசிஷ ஈஸ்வர பிரம்ம மூர்த்தியை ஆசீர்வதித்திட்டனர், ஸ்ரீவிஷ்ணு – லக்ஷ்மி  திருக்கரம் பட்ட சந்தனமும் (கந்தம்) பன்னீரும் அற்புத தெய்வீக சக்தி கொண்டவை அன்றோ! வெண்ணிறப் பன்னீர் மலர் வெள்ளைத் தாமரையாயிற்று! சந்தனம் வித்யுத் பூரண சுவடியாயிற்று!
திருஷ்டிச் சாந்துப் பொட்டு
திருவாயின் இடப்புறத்தில் ஸ்ரீசுசரித சரஸ்வதிக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு அமைந்திருப்பதைக் காணலாம்! அம்பிகைக்கே  திருஷ்டியா! எத்தனையோ கல்விமான்கள், அறிவாளிகள், நாட்டிய இசைக் கலைஞர்கள், ஓவியக் கலைஞர்கள் பிறர் கண்படும் வண்ணம் தத்தம் துறையில் பிரகாசித்திடுகையில் அவர்கட்கு ஏற்படுகின்ற தோஷங்களை அம்பிகையே தன்னுள் ஏற்றுக் காப்பாற்றுகின்றாள். ஐ.ஐ.டி கோல்ட் மெடலிஸ்ட் என்று புகைப்படத்துடன் ஓர் அறிவுஜீவிப் பிள்ளை பத்திரிக்கைகளின் மூலம் கோடிக்கணக்கானோரைச் சென்றடையும் போது இதனால் குரோதம் கூடிய பொறாமைக் கண்கள் பட்டு அப்பிள்ளையை பாதிக்குமன்றோ! ஸ்ரீமஹா கணபதியே ஸ்ரீசுசரித சரஸ்வதிக்கு இட்ட திருஷ்டிப் பொட்டு! என்னே பாக்கியம்! ஸ்ரீவிநாயகரின் திருக்கரங்களால் திருஷ்டிச் சாந்துப் பொட்டையிடும் அரிய பாக்கியத்தைப் பெற்ற, சாந்தஸ்வரூபியான ஸ்ரீசுசரித சரஸ்வதியின் திருஉருவத்தை சித்தர்களின் கிரந்த நாடிகளிலிருந்து நமக்களித்த ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளுக்கும் நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்.
இந்த 1997ம் (ஈஸ்வர ஆண்டு) நவராத்திரியில், ஸ்ரீசுசரித சரஸ்வதி உருவ வழிபாடானது கலியுக மக்களின் நல்வாழ்விற்கென அர்ப்பணிக்கப்படுகின்றது நம் குருமங்கள கந்தர்வ, ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் குருவருளால்.!

கொலு வைப்பது ஏன் ?

நீங்களும் கொலு பூஜைப் பயன்களைப் பெற்றிடலாமே! இறைவனின் படைப்புக் கூடமே கொலு! ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் கடந்த சில வருடங்களாக நவராத்திரியில் கொலு வைப்பது மிகச் சிறந்த சமுதாயப் பூஜைகளில் ஒன்றென விளக்கி வந்துள்ளோம். சாதி, மத, இன பேதமின்றி அனைவரும் தங்களுடைய இல்லங்களில் கொலு பொம்மைகளை வைத்து அக்கம் பக்கத்தாரையும், உற்ற சுற்றங்களையும் அழைத்து வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழம், ஆடைகள் போன்றவற்றை அளித்து ஆனந்தப்படுத்த வேண்டும்.  கொலுவை சித்தர்களின் கிரந்த நாடிகளில் “இறைக் கூடச் சட்டம்” எனப் பரிபாஷையில் விளக்குகின்றனர். பொதுவாக ஆலயங்களில் உள்ள மூர்த்திகளில் தெய்வீக சக்தியைக் கொணர்வதற்கோ புதுப்பிப்பதற்கோ ஆகம நியதிகள் பல உள்ளன. இறைக் கூடச் சட்டமாக சித்தர்கள் அழைக்கின்ற கொலுவில் வைக்கப்படும் இறை மூர்த்திகளின் உருவங்கள், தாவர, விலங்கின, ஜடப் பொருட்கள்  மற்றும் ஏனைய உருவங்களிலும் ‘பரிபாலன ஜீவசக்தி’ என்னும் ஒருவகை ஆத்ம சக்தி எளிதில் ஆவாஹனமாகிறது. உலகில் விளங்கும் உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் அனைத்திற்கும் ஆத்ம சக்தியுண்டு. ஒரு சிறிய இரும்புத்துண்டு கூட இரும்புத் துண்டாக, ஜடப்பொருளாகப் பிறப்பெடுத்துள்ளது. உதாரணமாக வங்கியிலோ, ரயில்வே, தபால் தந்தித் துறையிலோ அல்லது வேறெங்குமோ தன் சம்பளத்திற்குரிய பணியைச் செய்யாது பொழுதை வீணே கழிப்போர் அதேயிடத்திலேயே தூண்களாகவோ மேஜை நாற்காலிகளாகவோ பிறப்பெடுப்பர்! எனவே இல்லத்திலோ அலுவலகத்திலோ நீங்கள் அமர்கின்ற மேஜை, நாற்காலி, பயன்படுத்துகின்ற பேனா, பென்சில் போன்ற அனைத்திற்கும் உங்களுக்கும் பூர்வ ஜென்மத் தொடர்புண்டு!
நாமே நம் கொலு உருவங்கள்: கொலு அமைத்தல் என்றால் ஒற்றைப் படை எண்ணாக 1,3,5,7 ... எனப் படிகளை அமைத்து அதில் ஓர் அறிவு, ஈரறிவு, மூன்று அறிவு, ஆறு அறிவு வரை தாவர, விலங்கு, மனித விலங்கு, உருவங்களை அமைத்தலாகும்.
1. புரட்டாசி மாத மாளய அமாவாசையன்றே கொலுப்படிகளை அமைத்து அலங்கரித்து  பொம்மைகளை அடுக்கி வைத்திட வேண்டும். பல கோடி யுகங்களுக்கு முன் ஸ்ரீகிராத மூர்த்தியாக இறைவனே சிருஷ்டிக்கான ஜீவ அணுக்களை ஓர் அறிவு, இரு அறிவு என வகைப்படுத்திய புனித தினமே மாளயபட்ச அமாவாசையாகும். இறைவன் அனைத்து அறிவு வகை ஜீவன்களையும் ஒரே சமயத்தில் ஒன்றாகவே படைத்தார். நாமும் ஓர் அறிவு முதல் அனைத்து வகை ஜீவன்களாகவும் பிறப்பெடுத்திருக்கலாம் அல்லவா! இதனை நினைவூட்டுவதே கொலு வழிபாடாகும்.
2. மாளய அமாவாசையன்று வைக்கப்பட்ட கொலு பொம்மைகளை எக்காரணம் கொண்டும் ஒன்பது தினங்கள் வரை நகர்த்துதல் கூடாது. ஆத்ம சக்தி பொங்கி வழிகின்ற உருவங்களை நகர்த்திடில் அவற்றின் ஆன்மசக்தி குறைந்து இல்லத்தில் கொலு பொம்மைகள் மூலமாகக் கிடைக்கின்ற புண்ய, பூஜா சக்தி குறைந்துவிடும்.
3. இறைக் கணிப்பொறி  ஆதிப்படைப்பில் ஸ்ரீபிரம்மா மேருமலையில் ஒரு கும்பத்தில் ஜீவசக்தி அணுக்களைத் திரட்டிப் பலவிதமான பூஜைகளைச் செய்வித்தார். அவற்றில் ஒன்றே ஆத்மசக்தி பூஜையாகும். வெறும் ஜீவ அணுக்களுக்கு, ஆத்மசக்தி அளித்தாலன்றோ படைப்பின் அம்சங்கள் பூர்த்தியாகும். அதாவது ஜீவசக்தியும் ஆத்ம சக்தியும் சேர்ந்தால் தான் உயிர் வாழ்க்கை மேம்படும். கம்ப்யூட்டருக்கான அடிப்படையாக Binary  தத்துவம் இருப்பது போலே ஒவ்வொரு ஜீவனுக்கும் ஜீவசக்தியும் சேர்ந்து ஆத்ம சக்தியும் இருந்தால் தான் அது மேன்மை பெற்றுப் பரிபூரணமடையும். ஜீவ சக்தி என்பது கண்ணுக்குத் தெரிவது. ஆத்ம சக்தி என்பது கண்ணுக்குத் தெரியாததாகும். எனவே தான் ஒற்றைப் படைகளில் கொலுப் படிகளை அமைத்திட, ஆத்ம சக்தியானது அடுத்த நிலைப் படியாக சூட்சும்மாக அமைந்து ஜீவ, ஆத்ம சக்திகளை முழுமைப்படுத்துகின்றது. ஒற்றைப் படை எண்ணில் கொலுப்படியை அமைக்கும் போது ஜீவசக்தி, ஆத்ம சக்தி சேர்ந்து கம்ப்யூட்டரின் Binary போல உயிர் நிலைகளின் ஆன்ம சக்தியை மேம்படுத்துகிறது. இரட்டைப் படிகளாக அமைக்கும் போது ஜீவ சக்தி தனித்தே நிற்பதால் ஆன்மீக நிலை கை கூடாமல், லௌகீக நிலைகளிலேயே அதாவது விருப்பு வெறுப்புகளுடனேயே பற்றுக்களுடனேயே பயனற்ற ஜீவ வாழ்க்கை தொடரும்.
ஸ்ரீதர்ப லிங்க பூஜை : கொலுபொம்மை வைத்து கொலு பூஜை முறையை வெவ்வேறு யுகங்களிலும் பல்வேறு மகரிஷிகள் பூலோக மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். தர்பலிங்க சித்தர் என்பவரே கலியுகத்திற்கான கொலு பூஜை முறையை நமக்கு உணர்த்தியவர் ஆவார்.
4. ஸ்ரீதர்பலிங்க சித்தர் தாம் ஸ்ரீசுசரித சரஸ்வதியின் வலக் கரத்தில் அமர்ந்துள்ளார். இறைவனுடைய 64 விதமான தாண்டவ நடனங்களைக் காணும் பேறு பெற்ற உத்தம சித்புருஷரே ஸ்ரீதர்பலிங்க சித்தர் ஆவார். இறைவன் நடனமாடும் போது ஏற்படுகின்ற உடுக்கை ஒலி சக்தியிலிருந்துதான் பலவித மந்திரங்களும் உண்டாகின்றன. வலதுகால் அசைவுகளில் ஜீவசக்தியும் இடதுகால் அசைவுகளில் ஆத்ம சக்தியும் ஈசன் நடனமாடும் பொழுது வெளிப்படுகின்றன. இவற்றைக் கொலு பொம்மைகளில் சேர்ப்பவரே இச்சித்தராவார்! ஆகவே அனைத்து ஜீவசக்தி, ஆத்ம சக்தி ரகஸ்யங்களையும் அவற்றில் ஒன்றை மற்றொன்றாய் மாற்றும் அற்புத தெய்வீக சக்தியையும் பெற்றவர்! உலகில் உள்ள அனைத்து ஜீவன்களையும் தம்முடைய ஜீவசக்தி நிலையிலிருந்து ஆத்ம சக்தி நிலைக்கு உயர்த்தி அருள்பாலிப்பவர்! இது மட்டுமின்றி பல அற்புத ஜோதி லோகங்களில் என்றென்றும் சிவ யோகத்தில் தழைக்கும் மஹான்களும் சித்தர்களும் தாங்கள் பூலோக மக்களின் நலனுக்காக ஸ்தூல உருவம் பூண்டு பூலோகம் வரவிழையும் போது அவர்களின் உத்தம ஜோதி வடிவான ஆத்ம சக்தியிலிருந்து ஜீவசக்தி நிலைக்கு மனித ரூபத்தில் மாற அருள் பாலிப்பவர் ஸ்ரீதர்பலிங்க சித்தராவார்.
யாருக்காக வாழ்க்கை : அலுவலகம் சென்றோம், வந்தோம், சம்பாதித்தோம், ஏதோ வாழ்க்கை நடத்தினோம் என்று ஏனோதானோ என்று வாழ்வதால் யாருக்கு என்ன பயன்? தாமே ஒழுங்காக வாழ்ந்திடாது தம் பிள்ளைகள் நல்ல ஒழுக்கத்துடன் சிறந்த கல்வியுடன் விளங்க வேண்டும் என்று எண்ணுவது நியாயமாகுமா? இதற்காகவே தர்பலிங்க சித்தர் ஜடஜீவித தியான முறையை கொலு பூஜை மூலம் நமக்கு அளித்துள்ளார்.
“ஜடஜீவித ஆத்ம தியானம்” :
எளிதாகப் புரிய வேண்டுமெனில், ஜடப் பொருள்கள் (அசையாத பொருட்கள்) ஆற்றுகின்ற தியானம் என்று இதனைக் குறிப்பிடலாம். அதாவது கொலுவில் பல்வேறு உருவங்களை அமைத்து தூப தீபம் காட்டி ஒன்பது நாட்கள் வ்ழிபடுகின்றபோது அவை பெறுகின்ற தியான நிலையே ஜீவித ஆத்ம தியானமாகும். காரண காரியமில்லாது எந்தப் பொருளும் உலகில் இறைவனால் படைக்கப்படவில்லை. கொலுப் படிகளில் நாம் அமைக்கின்ற உருவங்கள் அவை எந்த வடிவில் இருந்தாலும் நவராத்திரி தினங்களின் மஹிமையால் தியான சக்தியைப் பெறுகின்றன. இவ்வித அரிய தியான நிலையில் ஒவ்வொரு பொம்மையும் விசேஷமான, தெய்வீக சக்தி வாய்ந்த ஒளி, ஒலிக்கதிர்களை வெளிவிடுகின்றன. இவைதாம் நம் இல்லம் முழுதும் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் நிரவி நின்று தீவினை சக்திகளை அழித்து நற்கதிர்களைப் பாய்ச்சுகின்றன. உற்றம், சுற்றம், நண்பர்கள் என அனைவரையும் எவ்வித பேதமின்றி கொலுவிற்கு அழைத்திடுக! கொலு அமைப்பு தருகின்ற அமைதியையும், சாந்தத்தையும் கண்டு ஆனந்தம் அடைந்து செல்கையில் அவர்களுக்கும் “ஜடஜீவித ஆத்ம சக்தியின்” தியானக் கிரணங்களின் சக்தி எளிதில் கிட்டுகின்றது.
“யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக” என்ற வகையில் சுயநலமற்ற தியாக வாழ்க்கையை, நம்முடைய இல்லற வாழ்விற்காக அசைவற்ற ஜடப் பொருட்கள் கூட தியானத்தை மேற்கொள்கின்றன என்றால் நவராத்திரி ஓர் அற்புதமான பூஜை தானே!
சித்தர்களின் அற்புதமான நவராத்திரி விளக்கங்கள்
மாளயபட்ச அமாவாசை முடிந்து அடுத்த பிரதமை திதியில் இருந்து ஒன்பது தினங்கள் நவராத்திரி தினங்களாக அமைகின்றன. முந்தைய யுகங்களில் சிவராத்திரி போன்று நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் இரவு நேரத்தில் மக்கள் தேவி பூஜையில் ஈடுபட்டனர். பகலில் சற்று ஓய்வு பெற்றனர். எனவே நவராத்திரியின் போது இரவு நேர வழிபாடும் தானமும் சிறப்புடையதாகும். ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது போல் ஆதிபராசக்தியானவள் இறைவனை ஒன்பது நாட்களிலும் விதவிதமான முறைகளில் வழிபடுகின்றாள்.
நவநாத சித்தர்களின் விளக்கம் :-
எந்த இறைத் தத்துவத்திற்கும், பூஜைக்கும் சித்புருஷர்கள் அளிக்கின்ற விளக்கங்கள் புதிய நோக்கோடும். அதி அற்புதமாகவும் இருக்கும். காலத்திற்கேற்ப பூஜா விதிமுறைகளை சித்தர்கள் அளிப்பதால் மக்களுடைய வாழ்க்கை முறைகளை ஒட்டியவாறே அவை அமைந்துள்ளன. செல்வந்தர்கள் முதல் பாமர மக்கள் வரை அவரவருடைய வாழ்க்கை நிலைகளுக்கேற்ப பலவிதமான வழிபாட்டு முறைகள் சித்தர்களால் அளிக்கப்படுகின்றன. நவநாத சித்தர்கள் அளிக்கின்ற நவராத்திரி விளக்கம் மிகவும் அற்புதமானது. அவற்றைக் காண்போமோ! ஒரு முறை அம்பிகை, ஈஸ்வரனின் கண்களை பொத்திட..... இதுவும் இறைத் திருவிளையாடல் தானே! இதனால் ஏற்பட்ட லீலா விநோதங்கள் எத்தனையெத்தனை!
1. அம்பிகையின் திருக்கரங்கள் இறைவனின் திருக்கண்களை ஸ்பரிசித்த தெய்வத் திருநிகழ்ச்சியை “சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனம்” என சித்தர்கள் விளிக்கின்றனர். இன்றைக்கும் இப்பெயரில் அண்ணாமலையில் சித்தர்களின் அற்புதமான மலை தரிசனமொன்று விளங்குகிறது. கணவன் – மனைவி ஒன்றிணைந்து சிறப்பான தாம்பத்ய வாழ்க்கையைப் பெற்றிட இத்தரிசனம் உதவுகிறது.
2. ஈஸ்வரி, ஈஸ்வரனின் கண்களைப் பொத்திட, சிவ சக்தியும், பராசக்தியும் சேர்ந்து “சிவபர” ஜோதியை உருவாக்குகின்றனர். இந்த ஜோதியை மட்டுமே தியானித்து உத்தம இறைநிலைகளை அடைந்த மஹரிஷிகள் பலருண்டு. கார்த்திகை தீபத்தன்று எங்கெல்லாம் தீபம் ஏற்றப்படுகின்றதோ (திருஅண்ணாமலை, சென்னை – திருக்கச்சூர், குளித்தலை – இரத்தனகிரி மலை etc… ) அங்கெல்லாம் (சிவபரஜோதியை தரிசித்த சிவபரயோகிகள்) பிரசன்னமாகி கார்த்திகை தீபத்தில் தாங்கள் பெற்ற சிவபர ஜோதியின் அருளைக் கூட்டி, பக்தர்கள் யாவருக்கும் இதன் பலன்கள் சென்றடையும் வண்ணம் அற்புதமான இறைத் திருப்பணிகளை ஆற்றுகின்றனர். இதிலிருந்து பிறந்ததே மலை தீப தரிசனம்!
3. ராகு, கேது கிரணங்களின் சக்தியால் பீடிக்கப்பட்ட சூர்ய, சந்திரர்கள் தங்கள் அமிர்த சக்தியை அவர்களுக்குத் தந்திட்டமையால், தங்களிடம் குறைந்த அமிர்த சக்தியை நிறைவூட்ட இருவரும் கடுந்தவத்தை மேற்கொண்டனர். ஆதிசிவன் காட்சியளித்து “நீங்கள் இருவரும் சக்தி உபாசனையில் மேம்படுதல் வேண்டும். இதற்காக அமிர்த சக்தியைத் தரவல்ல ஸ்ரீஅமிர்தவல்லி அம்பிகையை நோக்கித் தவம் புரிவீர்களாக!“ என்று அருளினார்! இருவரும், அக்னி மண்டலத்தில் அமர்ந்து கடுந்தவம் புரியலாயினர்.
சூரிய மண்டலமே அக்னித் தத்வம் நிறைந்தது! கதிரவனிடமிருந்தே சந்திரனும் அக்னியைப் பெறுவதால் சந்திரனும் அக்னிதத்வ பூமியாகவே விளங்குகிறது. அக்னிக்குள் அக்னிபூர்வமான தவமென்றால் அங்கு கிளர்ந்தெழும் ஜ்வாலைகளைப் பற்றி எப்படி விவரிப்பது? அவர்களுடைய அக்னியின் கடுமையைத் தாங்காது சர்வ லோகங்களுந்தகித்தன. இது இவ்வாறிருக்க..
ஆடிய திருவிளை ஆடல்!!
இப்புராண நிகழ்ச்சியில் இறைவனும் அம்பிகையும், சொக்கட்டான் ஆடினர் என்று காண்கின்றோம். அண்ட சராசரங்களையும் ஆட்டுவிக்கின்ற ஆண்டவனுக்கு சொக்கட்டான் விளையாட்டே ஒரு திருவிளையாடல் தானே! அம்பிகையும் ஈஸ்வரனும் சொக்கட்டான் ஆடினர் என்பதின் உண்மைப் பொருள் என்னவெனில்...
ஒவ்வொரு பிரம்மாந்திர யுகம் மாறும் போதும் ஸ்ரீபிரம்ம மூர்த்தி மாறுவார். சொக்கட்டான் ஆட்டத்தின் தாயக்கட்டைக்கு (dice) பிரம்மபதக்கம் என்று பெயர். ஆட்டக்கட்டமே “பிரபஞ்ச சட்டம்” அதாவது சர்வ லோகங்கள்! நகர்த்தப்படும் காய்களே “கிரஹ தோரணங்களாகும்” அதாவது ஒரு பிரம்மாவின் காலம் முடிந்து அடுத்த பிரம்மாவின் ஆட்சி துவங்குகின்ற கண்ணிமைக்கும் நேரத்திற்கும் குறைவான கால அளவில் சிருஷ்டி பரிபாலனத்தை ஈஸ்வரன், அம்பிகை இருவருமே ஏற்கின்றனர். இதுவே சொக்கட்டான் ஆட்டம், சிவபுரச் “செல்வந்தர்கள்!” இவ்வரிய சிருஷ்டி நேரத்தில் தான் இறைவனும் இறைவியும் சிருஷ்டியை ஏற்கின்ற கண்ணிமைக்கும் நேரத்தில்தான் உருவாகின்றவர்களே மஹரிஷிகளும், யோகியர்களும், ஞானியரும்! இறைவனும் இறைவியும் கணித்து உருவாக்குகின்ற அற்புதப் படைப்புகள்! ஈஸ்வரனாலேயே படைக்கப் பெற்ற இவ்வற்புதப் படைப்புகளை சர்வ லோகங்களுக்கும் அனுப்ப வேண்டுமல்லவா!
பிரபஞ்சச் சட்டத்தில்..
பிரம்ம பதக்க அசைவுகளைக் கொண்டு.,
கிரஹ சஞ்சார தோரணங்களை நகர்த்தி!
பெருங்கருணையுடன் இருவருமே உருவாக்குகின்ற சித்தர்கள், மஹரிஷிகள், ஞானிகள், முமூட்சுக்கள், யோகியர், மாமுனிகள், முனித்ரயர்கள், மஹான்கள், முனிபுங்கவர்கள் போன்ற இறைத் தூதர்களை சர்வேஸ்வரனின் இரு கண்களான சூர்ய, சந்திரர்களுக்கு இறைவி அர்ப்பணிக்கின்றாள். இதனையே “ஈஸ்வரனின் கண்களை அம்பிகை பொத்தினாள்” என்று கூறுகிறோம்.
சூரிய, சந்திரர்கள் ஒளி வீசாத லோகம் ஏதும் உண்டா? சூர்ய, சந்திர மண்டலங்களிலிருந்து இவர்கள் பூலோகம் உள்ளிட்ட பல லோகங்களுக்கும் சூர்ய, சந்திர பாதைகளின் வழியே செல்கின்றனர். இறை சிருஷ்டிகளான, மேற்கண்ட உத்தம இறை நிலையைப் பிறவியிலேயே பெற்றவர்களை எவ்வாறு அம்பிகை சூர்ய சந்திர மண்டலத்திற்கு அர்ப்பணித்தாள்?
தன்னுடைய மோதிர விரலை இறைவனுடைய கண்ணில் (சூர்ய நேத்ரம்) வைத்தும் இடதுகை உள்ளங்கை, மேடுகளால் இறைவனின் இடது கண்ணையும் (சந்திர நேத்ரம்) ஸ்பரிசித்தும் அர்ப்பணித்தாள். இறைவனின் வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாகவும் அமைந்துள்ளதன்றோ! எனவே தான் நம் மோதிர விரலுக்கு சூரிய விரலென்றும், உள்ளங்கையின் சில மேடுகளுக்கு சந்திரமேடு என்றும் பெயர் வந்தது. இந்த சிவபுரச் செல்வர்களின் அர்ப்பணிப்புப் படலமே “இறைவனின் திருக்கண்களைப்” பொத்திய தாயிற்று! இறைவனுடைய ஒரு திருவிளையாடலால் ஏற்படும் நல்விளைவுகள் எத்தனை, எத்தனை?
இதற்கு முன்னர், அம்பிகையின் சக்தி அம்சங்களைப் பெற வேண்டி சூர்ய சந்திரர்கள் உக்ரஹமான தவத்தில் ஆழ்ந்தனர் என்று கண்டோம் அல்லவா? அவர்களைச் சாந்தம் செய்யும் பொருட்டும் அவர்களுடைய பிரார்த்தனைகளும் நிறைவேறும் வண்ணமும் அவர்கட்கு அம்பிகை தன் திரு திருக்கரங்களில் உள்ள “பரப்பிரகாச சக்கரத்தின்” வடிவைக் காட்டி ஆனந்தப் படுத்தினாள். அம்பிகை தன் உள்ளங்கைச் சக்கர தரிசனத்தைக் காட்டியதே கண்களைப் பொத்தியதாயிற்று – இதன் பின் சூரிய, சந்திர மண்டலங்களுக்கும் யோகியர், சித்புருஷர்களை அனுப்பி அவர்களுடைய புனிதமான அக்னியைத் தணித்தாள்.
ஏழு, ஒன்பது, பன்னிரெண்டு....
பல யுகங்களுக்கு முன்..... நாமறிந்தவை ஏழு கிரகங்களே இராகு, கேதுவுடன் இவை ஒன்பதாயின, புளூட்டோ, நெப்டியூன், யுரேனஸ் ஆகியவற்றுடன் பன்னிரெண்டு ஆகியுள்ளன. நாமறியாத இன்னும் பல கிரகங்கள் கலியுகத்தின் எஞ்சியுள்ள இலட்சக்கணக்கான ஆண்டுகளில் வரவுள்ளன. இவையெல்லாம் சொக்கட்டான் ஆட்டம் எனப்படும் கிரக தோரண சஞ்சாரத் திருவிளையாடலே! இறைவனே இயக்குகின்ற கிரக சஞ்சாரப் படலங்களின் அசைவுகளே, இறைசக்தியின் பிராணாயாம பூதப் படல்களே கிரஹ அசைவுகள்! நவநாத சித்தர்கள் அளிக்கும் அடுத்த விளக்கம் யாதெனில், அம்பிகை இறைவனுடைய திருக்கண்களைப் பொத்தியமையால் பல லோகங்கள் இருளில் ஆழ்ந்தன. பூலோகத்திலும் பல வகைகள் உண்டு என்பதை நாம் அவ்வப்போது எடுத்துரைத்து வந்துள்ளோம். பல உலகங்களையும் இருளில் ஆழ்த்தி விட்டோமே என்று வருந்திய அம்பிகை இதற்குப் பிராயச்சித்தமாக இருண்ட லோகங்கட்கெல்லாம் சென்று கடுமையான பூஜைகளை மேற்கொண்டு ஒளியூட்ட விரும்பினாள். ஒன்பது தினங்கள் இவ்வாறு பூஜை செய்து சர்வேஸ்வரனை வழிபட்டு அம்பிகை, “பத்தாம்” நாள் இருளை வென்று விஜயதசமியன்று பிரபஞ்சம் எங்கும் சக்தியின் ஒளி வெள்ளம் பாய்ந்து அனைவரும் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தனர். இதுவே விஜயதசமி!
அமாவாசையில் நடப்பதென்ன?
இரவு பகல் உருவாவதற்குக் காரணம் சூரிய, பூமி கிரகங்களின் சுழற்சியே என விஞ்ஞான பூர்வ காரணங்களால் கூறப்பட்டாலும் ஆன்மீகத்தில் இதற்குப் பல விளக்கங்கள் உண்டு. சூரியனும் சந்திரனும் இணைகின்ற மாளய அமாவாசை அன்று சூரிய, சந்திர மண்டலங்களில் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட பல தெய்வீக சம்பவங்கள் நிகழ்கின்றன. கோடிக்கணக்கான பித்ரு தேவ மூர்த்திகளும், பித்ருக்களும் , சூரிய, சந்திர இணைப்பில் இணைகின்றனர். உண்மையிலேயே, பெரும் பாக்யம் பெற்ற மனிதர்கள் மட்டுமே மாளயபட்ச அமாவாசையன்று தங்கள் பித்ருகட்குத் தர்ப்பணம் அளிக்கின்றனர். பராசுர மகரிஷியும், வியாசரும் கலியுக மக்களின் வாழ்க்கை முறைகளை ஒட்டி, பித்ரு தர்ப்பண முறைகளை மிகமிக எளிமைப்படுத்தித் தந்துள்ளனர். ஒன்றுமே அறியாத பாமரர் கூட பித்ரு தர்ப்பண மந்திரத்தையோ, தர்ப்பண முறைகளை அறியாவிட்டாலும் தன் மூதாதையர்களின் நினைவாக ஓர் உணவுப் பொட்டலத்தையேனும் அன்னதானமாக மாளய பட்ச அமாவாசையன்று ஓர் ஏழைக்கு ஆத்மார்த்தமாக அளித்திடில் இதனையே, பித்ரு தர்ப்பணத்திற்கு ஈடாக மூதாதையர்களே ஏற்கின்றனர். இது பலரும் அறியாத ஆன்மீக இரகசியமாகும். இவ்வாறாக, மாளய பட்சத்தன்று நிகழ்த்தப்படுகின்ற பித்ரு தர்ப்பணங்கள், ஹோமங்கள், பூஜைகள், தான தர்மங்களைப் பொறுத்து அந்தந்த உலக ஜீவன்களின் கர்ம பரிபாலனக் கணக்கு தெய்வீக ரீதியாக ஆய்வு செய்யப்படுகிறது.
அமாவாசைத் தர்ப்பணம் அயல் நாட்டவருக்குண்டா?
அதெப்படி வெளிநாட்டவர்கள் மாளயபட்சத்தைப் பற்றி அறியாதவர்களாயிற்றே? தர்ப்பணத்தினால் அனைத்து உலக ஜீவன்களின் கர்ம பரிபாலனமே எப்படி மாறுதலுக்கு உள்ளாகும்? மிகச் சிறந்த கேள்வி!
பாரத பூமி கர்ம பூமி, சனாதன தர்மம் செழித்தோங்கிய பூமி, கோடானு கோடியுகங்கட்கு முன் எல்லா நாடுகளும் ஒன்றாகவே இருந்தன. மனிதனுடைய ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புகளே தீவினைகளைக் கூட்டி நாட்டுப் பிரிவுகளை, ஜாதி, மத, இன வேற்றுமைகளை உருவாக்கின. நம் பாரதத் திருமண்ணில் அதிலும் தெய்வீகம் நிறைந்த தமிழ் நாட்டில் கும்பகோணத்தில் தான் ஆதிப் பிரளய கால படைப்புகள் ஏற்படுகின்றன என்பதைப் புராணங்களிலிருந்து காணலாம்
எனவே நம் இறைத்திருநாட்டிலிருந்து பிறந்த ஜீவன்களே பல பல ஜன்மங்களாய் அனைத்து நாடுகளிலும் வாழ்கின்றனர். எனவே, தமிழ்நாட்டில் ஒருவர் இங்கு மாளய பட்சத்தன்று தர்ப்பணம் அளித்தாலே போதும், அவருடைய கோடானு கோடி பிறவித் தொடர்புகள் இன்று எங்கெல்லாம் எந்த நாட்டில் வாழ்கின்றனரோ அவர்கட்கு அத்தர்ப்பண சக்தியானது நன்மை தரும் தெய்வீக சக்தியாய்ப் போய்ச் சேரும்.
எனவே அயல்நாட்டவர் என்ற பேதமே கிடையாது! அனைவரும் பித்ரு மண்டலங்களைச் சார்ந்தவர்களே! இத்தகைய அற்புதங்கள் நிகழும் நாளே மாளயபட்ச அமாவாசை. மேலும் அமாவாசையிலிருந்து ஒரு பட்சமாகிய பதினைந்து நாட்களும் பித்ருக்களின் சிறப்பான இரவு நாட்களாக அமைகின்றன. இவையும் நவராத்திரிக்கு சிறப்பைச் சேர்க்கின்றன. இவ்வகையில் சித்தர்களின் அருள்வாக்காக நவராத்திரியின் சிறப்பை விளக்கினால் அதற்கென தனி புராணமே எழுத வேண்டியிருக்கும்..!!!
ஏழை எளியோர்க்கான நவராத்திரி பூஜை
“நவராத்திரி கொலு என்றால் பொம்மைகளை வாங்க வேண்டும், நிறைய செலவு ஆகுமே” – என்றெல்லாம் எண்ண வேண்டாம். வீட்டில் இருக்கின்ற பெட்டிகள், அட்டைப் பெட்டிகளைக் கொண்டு ஒற்றைப் படை எண்களில் (1,3,5,7,9....) கொலுப்படிகளை அமைத்து சிறிய பொம்மைகள், களிமண்ணாலான பிள்ளையார், ஏனைய உருவங்கள், மண்பாத்தி, செடிகள், புல் தாவரங்கள் என உங்கள் வசதிக்கேற்ப கொலுவை அமைத்திடுங்கள்! பலர் ஒன்று கூடியும் தங்கள் பகுதியின் பொது இடத்தில் இவ்வாறு கொலுவை வைத்திடலாம்! இடவசதி, ஆரோக்யச் சூழ்நிலை, தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்கள் போன்றவற்றின் காரணமாக இல்லத்தில் கொலுவை அமைக்காவிடில் கோயிலில் கொலுவை அமைப்பதற்கான சரீர சேவையையும் பொருளுதவியையும் அளித்திட வேண்டும். பொம்மைகளால், உருவங்களாலான கொலு என்று மட்டுமல்லாது நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் அம்பிகையின் வெவ்வேறு வடிவங்களையும் அலங்கரித்து மக்கள் தரிசித்துச் செல்லும்படி அமைத்திடுதலும் சிறப்பானதாகும்.
மண்ணைக் குவித்து சிறுமலையாக்கி மலைக் கோயில், அருவி, தாமரைக் குளம், சுனை, விலங்குகள், தாவரங்கள் என இயற்கைக் காட்சிகளையும் அமைத்திடலாம். பணக்காரர்கள் நிறைய பொம்மைகளை வாங்கி ஏழைகளுக்கு அளித்து கொலு பூஜையைப் பரப்பிட வேண்டும். இதனால் அவர்களுடைய செல்வம் குபேர நிதியாய்ப் பெருகிடும். இது கிடைத்தற்கரிய பாக்யமாகும்! கொலு வைப்பதற்கு நிறைய இடம் வேண்டுமே என்றும் யோசித்திடாதீர்கள்! ஒன்பது நாட்கள் மட்டுந்தானே. இருக்கின்ற அலமாரி, டேபிளை கொலுப்படியாக்குங்கள்! ஏனைய சாமான்களைப் பக்கத்து வீட்டிற்கு அனுப்பிடலாமே! மனமிருந்தால் மார்கமுண்டு!

கொலு பூஜை லால்குடி

பிரம சக்தியைப் பெற வேண்டாமா?
சிவனையும், விஷ்ணுவையும் தொழுகின்ற நாம் பிரம்ம பகவானை மறந்து விடுகின்றாமே! மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து ஜீவன்களுக்கும் தந்தையே ஸ்ரீபிரம்ம தேவர்! பிரம்ம சக்தியை நாம் பெற்றால் தான் அமைதியான வாழ்க்கையை நடத்திட முடியும்! மஹா பிரளயத்தின் போது உலக அழிவிற்குப் பின், நம்முடைய ஜீவ அணுக்களை ஒரு குடத்தில் வைத்து மேருமலையில் ஸ்ரீபிரம்மா பூஜித்துச் செய்கின்ற சிருஷ்டிக்கான வழிபாட்டிலிருந்துதான் நாம் அனைவரும் தோன்றினோம் என்பதை மறந்து விடலாகாது! இறைவனின் அடிமுடியைக் காணும் புராணப் படலத்தில், ஸ்ரீபிரம்மா பொய்யுரைத்தமையால் பூலோகத்தில் அவருக்கென கோயில் அமையாத சாபத்தைப் பெற்றதைக் கொண்டு ஸ்ரீபிரம்மாவாகிய சதுர்முகனின் வழிபாட்டையே மறந்து விட்டோமே! இப்புராண நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்த சம்பவங்கள் நன்கு சித்தரிக்கப்படாமையால்தான் இக்கருத்து ஏற்பட்டது.
பிரம்ம சக்தியில்லாது நம்முடல் ஒரு விநாடி கூட இயங்காது! அனைத்து சிவன் கோயில்களிலும் பிள்ளையார், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர் / விஷ்ணுவுடன் பிரம்மா கோஷ்ட மூர்த்தியாக மூலவருக்கான சுற்றுச்சுவரில் அமரும் பெரும் பாக்யத்தைப் பெற்றுள்ளாரெனில், ஸ்ரீபிரம்மா சர்வேஸ்வரனின் பரிபூர்ண அம்சமல்லவா! பிரம்ம சக்தியை நமக்குத் தருகின்ற அரிய மந்திரங்களுள் ஸ்ரீகாயத்ரீ மந்திரமும் ஒன்றாகும். இதனால் தான் பிரம்மாவிடமிருந்து வந்தாக மனித குலத்திற்கு, ஜாதி இனபேதமின்றி அனைவருக்கும் பூணூல் உரியதாகின்றது. ஏனெனில் “பிரும்மோப தேசம்” எனப் பெயர் கொண்ட ஸ்ரீகாயத்ரீ மந்திர உபதேசத்தில் பூணூலை அணிவித்துப் பெரியோர்கள் மந்திர உபதேசத்தைப் புகட்டுவதால் எல்லோர்க்கும் உரியதே ஸ்ரீகாயத்ரி மந்திரம்! அனைவருக்கும் ஏற்பட்டதே பூணூல்! எவ்வாறு ருத்ராட்சம், காசிக்கயிறு, மாங்கல்யச் சரடு, துளசிமாலை போன்றவை தெய்வசக்தியைத் தரும் உபகரணங்களாக யாவருக்கும் அமைந்துள்ளதோ இதேபோல் அனைவருக்கும் ஜாதி, குல பேதமின்றி பூணூலும் இவ்வகை உபகரணங்களுள் ஒன்றாக, உரித்தானதாகச் சிறப்புப் பெற்றுள்ளது! நாம் மறந்து விட்ட பிரம்ம வழிபாட்டை நவராத்திரி பூஜைகள் தாம் நினைவுறுத்தி, அளப்பரிய பிரம்ம சக்தியையும் நமக்குப் பெற்றுத் தருகின்றன. கொலுவில் பல உருவங்களைக் கூட்டி சிருஷ்டியின் தத்துவமான அனைத்து ஜீவன்களும் ஒன்றே, இதில் பாகுபாடுகள் ஏதும் கிடையாது! இறைவனின் படைப்பில் ஆண், பெண் என ஜாதி, சமயமென, மனித, விலங்குகள் என வித்யாசம் காட்டுகின்ற மனிதர்களே! நவராத்திரி கொலுவில் நீங்களே பொம்மைகளை, உருவங்களை சிருஷ்டி செய்து பிரம்ம சக்தியைப் பெற்றிடுங்கள்! ஏனென்றால் அனைவருக்கும் தந்தை பிரம்ம தேவனே! பிரம்மாவிடமிருந்து பிரஜாபதிகள், பிரவர முனிகள், கோத்ராதி பதிகளான முனிகள் இவ்வாறாகத் தானே இறைப் படைப்பு துவங்கியது! நாம் அனைவரும் பிரம்மனின் குழந்தைகளே என்ற ஆரம்ப இறைநெறியை உணர்த்துவதே நவராத்திரி பூஜை! எனவே நவராத்திரியில் கொலு வைத்து வழிபட்டால் எத்தனையோ நாட்களுக்கு, வருடங்களுக்கு விட்டுப்போன ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் பிரம்ம சக்தியை எளிதில் பெற்றிடலாம்! பிறருக்கும பெற்றுத் தரலாம். ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓத மறந்ததற்கான பிராயச்சித்தத்தை ஓரளவேனும் பெற்றிட, நவராத்திரியில் கொலுவை அமைத்துப் பலரையும் அழைத்து இனிய இறைப் பாடல்களை இசைத்து இயன்ற பிரசாதத்தை அளித்து, ஏழைச் சிறுமியர்களுக்கும் பெண்மணிகளுக்கும் பாவாடை, தாவணி, வளையல், தோடு, ரிப்பன், மஞ்சள், வெற்றிலை பாக்கு – போன்ற மங்களப் பொருட்களை அளித்திடுங்கள்! மங்களந் தருமிடத்தில் தானே மங்களம் பெருகும்! பிரம்ம சக்தி கூடுமிடத்தில் தான் ஸ்ரீகாயத்ரீ தங்குகின்றாள்!

ஸ்ரீபிரம்மா கண்டியூர்

நவராத்திரியில் அரிய பிரம்மபூஜை
ஸ்ரீபிரம்மாவிற்குத் தனி சந்நதி அமைந்துள்ள இடங்களிலும் (தஞ்சை அருகே கண்டியூர்) ஸ்ரீபிரம்மா பூஜித்த, ஸ்ரீபிரம்மபுரீஸ்வரராக இறைவன் அருள் பாலிக்குமிடங்களிலும், நவராத்திரி கொலு அமைத்து வழிபடுதல் சிறப்புடையதாகும். இதற்கு வாய்ப்பில்லாவிடில் இவ்விடங்களில் நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் பிரம்ம சிருஷ்டியின் போது முதலில் ஏற்பட்ட தாவரங்களுள் ஒன்றான  அரிசிச் சோற்றால் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து அன்னத்தை தானமளித்து அம்பிகைக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் செய்திடல் வேண்டும். பெரும்பாலும் அனைத்து சிவாலயங்களிலும் நான்முகனாம் ஸ்ரீபிரம்மா கோஷ்ட மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். இனியேனும் நம் தந்தையாம் ஸ்ரீபிரம்மாவை வழிபட மறக்காதீர்கள்! நீங்கள் சிசேரியக் குழந்தையா?
நவீன மருத்துவத்தில் கர்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசேரிய அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் நடத்துவது பிரபல்யமாகி வருகிறது! யோனி தத்துவ முறைப்படி யோனி மூலப்பிறப்பே சிறப்புடையதாகும். பொதுவாக பெற்றோர்களின் கர்ம வினைகளுக்கேற்பவும், குறித்த நற்காலத்தில் உடலுறவு கொண்டு, நல்ல நேரத்தில், நட்சத்திரத்தில் (காலற்ற, உடலற்ற, தலையற்ற நட்சத்திரங்களில்லா நாளில்) கருத்தரிப்பு ஏற்படுவதைக் கொண்டே ஆன்மீக ரீதியாக சிஸேரியனா, சாதாரண பிரசவமா என்பதைக் கூறிட முடியும். சிசேரியன் முறையில் பிறந்தோரும் அக்குழந்தையின் பெற்றோர்களும் சில பரிஹாரங்களைச் செய்து நல்வழி பெறுதல் வேண்டும். என்ன இருந்தாலும் பிறக்கும்போதே தாயின் வயிற்றைக் கிழித்துப் பிறக்கும் விதியிருப்பின்... இதற்குப் பல ஆன்மீக விளக்கங்கள் உண்டு.. இதனைத் தக்க சற்குருவை நாடி விளக்கங்களைப் பெற்றுத் தக்க பரிஹாரங்களையும் செய்திடலாம். ஏனெனில் எத்தகைய காரண காரியங்களைத் திறம்பட இறையருளால் எடுத்துரைத்திட்டாலும் மனித மனம் ஏற்றிடுமா? கட்டுக் கதை, நிரூபணமில்லாதது, மூடநம்பிக்கை என்றல்லவா மனித மனம் அவற்றை ஒதுக்கிடும்! கோமுகம் என்பது யோனி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆத்ம சக்தியான இறைவனிடமிருந்து, கர்பவாசமிருந்து, கர்பகிரஹத்திலிருந்து, யோனியின் மூலமாக, கோமுக (அபிஷேகநீர் வெளிவரும் தாரை) த்தின் மேல் கோஷ்டத்தில் உள்ள பிரம்மா ஜீவன்களின் சிருஷ்டிக்கு அருள்பாலிக்கின்றார்! எனவே கோமுக பூஜைக்கும் ஸ்ரீபிரம்ம பூஜைக்கும் நெங்கிய தொடர்புண்டு! எனவே சிசேரியன் முறையிற் பிறந்தோர் யோனி தத்துவத்தின் தெய்வீக அம்சங்களை உய்த்துணர்ந்து நல்வழி பெறுவதற்காக ஈஸ்வர ஆண்டு நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் ஆலயங்களில் உள்ள கோமுகத்தைக் கழுவி சுத்தஞ்செய்து, கோலமிட்டு அலங்கரித்து வழிபட வேண்டும். கோமுகத்தின் மேல்/கோஷ்டமூர்த்தியாய் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீபிரம்மாவிற்கு எண்ணெய்க் காப்பிட்டு அபிஷேக ஆராதானிகள் செய்து வெண்தாமரை மலர்களால் அலங்கரித்து அர்ச்சித்து வழிபடுக! ஸ்ரீபிரம்மா வெண்தாமரைத் தேவியின் நாயகரன்றோ! சிசேரியன் முறையிற் பிறந்தோர் குழந்தைகளாய்/ சிறுவர்களாயிருப்பின் அவர்களுடைய பெற்றோர்களே இதை  எடுத்துச் செய்யலாம். பெண்கள் நல மருத்துவர்களும் (Gynaecologist) இத்தகைய கோமுக ஸ்ரீபிரம்ம பூஜையை நவராத்திரியில் செய்து வர இயன்றவரையில் சிசேரியன் முறையின்றி இயற்கை முறைப் பிரசவமே தாமாகவே அமையும்.
கோமுகநீர் புனிதம் நிறைந்ததே!
பல ஆலயங்களிலும் கோமுக தாரையானது நன்கு கவனிக்கப்படுவதில்லை. பக்தர்களோ “நாற்றம் அடிக்கிறதே...!” என கோமுகத்தையே தவிர்த்து விடுகின்றனர். இறைவனிடம் எதை எதையோ கேட்டு வலம் வருபவர்கள் இறைவன் திருமேனியிலேயே பட்டு அமிர்தமாய் வருகின்ற புனித நீரை நாற்றமென ஒதுக்குகின்ற நிலை மிகவும் வேதனைக்குரியது.
குப்பைச் சித்தர் எப்போதும் குப்பைகளிடையே அமர்ந்து நாற்றத்துக்கிடையே தம்மை அண்டி வருவோர்க்கு நறுமணம் வீசும் பிரசாதத்தினை குப்பையிலிருந்து தான் அள்ளித் தருவார்! எனவே, நாற்றமோ நறுமணமோ நம் மனதில் தான் இருக்கிறதே தவிர வெளிப் பொருட்களில் இல்லை.
கோடிகோடியாம் தேவதைகளும், தேவ மூர்த்திகளும் அமர்ந்து தவம் புரிகின்ற கோமுகத்தில் இருந்தா நாற்றம் வரும்! இறைத் திருவிளையாடலாக நம் தீவினைக் கர்மங்களே நாற்றமாகத் தெரிகின்றனவே தவிர, உண்மையான பக்தி இருப்பின் கோமுகமே தெய்வ மண்டலமாகக் காட்சி தரும். தினமும், கோமுகத்தைச் சுத்தம் செய்து வழிபட்டு கோமுக தீர்த்தத்தைப் பருகி முக்தி பெற்றோர் பற்பலர். இத்தகைய மோட்சம் பெறும், முக்தி நிலை தரும் அரிய தெய்வீக சக்தி வாய்ந்ததே கோமுக வழிபாடாகும். எனவே நவராத்திரி தினங்களிலேனும் எந்த ஆலயத்திலாவது சிவன், அம்பிகை, பிள்ளையார் என சந்நிதியின் கோமுகத்தைச் சுத்தம் செய்யும் திருப்பணியை மேற்கொள்வீர்களாக! சிசேரியன் முறையில் பிறந்தோர்க்கு மிகச் சிறந்த பூஜையே நவராத்திரியின் கோமுக பிரம்ம வழிபாடு.
நவராத்திரியின் சிறப்பு
ஒன்பது இரவுகள் கூடிய நவராத்திரியில் செய்யப்படுகின்ற இரவு நேர பூஜைக்கு மிகுந்த சக்தி உண்டு. பலா பலன்களும் அதிகம். காரணம் என்ன? ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீசரஸ்வதி மூவரும் ஒன்றாகக் கூடி எல்லாம் வல்ல இறைவனை, சர்வேஸ்வரனைப் பூஜிக்கின்ற நாட்களில் நாமும் தேவியை வழிபடுவோமேயானால், நம் பூஜையும் மூன்று சக்தி தேவியரின் பூஜையோடு சேர்கின்ற அரிய பாக்யம் கிட்டுகின்றதல்லவா!
நவராத்திரியின் துவக்கம்  மழைக் காலத்தின் துவக்கத்தை, அதாவது தட்பவெப்ப நிலை மாறுதலைக் குறிக்கின்றது. சரத்ருது காலமானது மழை காலத்திற்கு முன்னோடியாகும். உடல் இலக்கண ரீதியாக, தட்ப, வெப்ப மாறுதல்களால் நோய்கள் கூடும் காலமிது. தீய சக்திகள் ஆக்கிரமிக்கும் காலமும் கூட. எனவே இது நோய், நொடிகள் அதிகரிக்கும் காலமுமாகிறது. இதனால் மக்களும் தளர்ச்சியடைகின்றனர். ஆரோக்யம் குன்றினால் செய்கின்ற பூஜைகளையெல்லாம் மனிதன், உடனே ஓய்வு (Rest) என்ற பெயரில் குறைத்து விடுகின்றான். பூஜை குறைந்தால்... புண்ய சக்தி குறையும்!! தீய சக்திகள் தலை தூக்கும்! எதிர் வினைகள் (Negative Forces) இரட்டிப்பாகும்! இதையெல்லாம் கலியுக நியதியாக எதிர்பார்த்துத்தான் கலைமகளும், திருமகளும், துர்க்கையும், மக்களுக்குக் கூடுதல் புண்ய/தெய்வீக சக்தியைத் தரும் பொருட்டுத் தாமே சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். கருமையிலும், இரவிலும் தீய சக்திகளின் வலிமை கூடும். ஆனால் பகல் நேர பூஜையை விட இரவு நேர பூஜைக்கு சக்தி அதிகம். நள்ளிரவு மற்றும் பிரம்ம முகூர்த்த நேர (விடியற்காலை மூன்று முதல் ஐந்து மணிவரை) பூஜையின் சக்தியோ அபரிமிதமானதாகும்.
பூஜிக்கும் அம்பிகையை பூஜிப்போம்!
எனவே தான் எதிர்வருகின்ற துன்பங்களிலிருந்து (வெள்ளம், பெருமழை, நிலச்சரிவு, கடும் நோய்கள், தட்ப வெப்ப மாறுதல்களால் பொருள் நஷ்டம்/உற்பத்தி குறைதல்/ வேலையின்மை, அதிக செலவுகள் etc ) மக்களுக்கு நிவாரணமளிக்க, ஸ்ரீதுர்க்கா, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீசரஸ்வதி மூவரும் கடுந்தவத்தைப் பல்வேறு பூஜைகளின் மூலமாக மேற்கொள்கின்றனர். ஊசி முனையில் கடுந்தவம் புரியும் வல்லமை பெற்ற மூன்று அம்பிகையரும் சாந்தமான வழிபாடுகளை “நவாவரண யோக” நிலை பூண்டு மேற்கொள்கின்றனர். எனவே இந்த ஒன்பது தின இரவுகளிலும், நாம் குறித்த வழிபாடுகளுடன், தான தர்மங்களுடன் நவராத்திரியைக் கொண்டாடுவோமேயானால் அவற்றின் பூஜை பலன்கள் “நவாவரண யோக” நிலையில் உள்ள மூன்று அம்பிகையரை அடைகின்றன. யோக சக்தி எதையும் கோடிமடங்காய் ஆக்கிவிடும். உதாரணமாக நவராத்திரியில் நாம் அம்பிகையைப் பூக்களால் அர்ச்சிக்கின்ற பொழுது, அவை “நவாவரண யோக” நிலையில் அமர்ந்து ஈஸ்வரனைப் பூஜிக்கின்ற அம்பிகையைச் சென்றடைகின்றன. இதனால் பூக்கள் “யோக தீட்சை” பெற்று, ஆண்டவனை அர்ச்சிக்கின்ற அம்பிகையின் தேவ மலர்களுடன் சேர்ந்து சர்வேஸ்வரனின் திருப்பாதங்களை அடைகின்றன. இவ்வாறாக நவராத்திரி பூஜையின் சக்திகள் பல்கிப் பெருகுகின்றன.
ருது எது? :- நவராத்திரி காலமே வர்ஷருது காலமாகும். சித்திரை முதல் பங்குனி வரை மூன்று மாதங்களுக்கு ஒரு ருது காலமாக, வருடத்திற்கு நான்கு ருதுக்கள் உண்டு. ருது தேவதைகள் தாம் வாழ்க்கையைக் காலத்துடன் இணைக்கின்றன. ஆனால் நாமோ ருது தேவதைகளைப் பற்றி நினைப்பதேயில்லை.. ஒவ்வொரு கன்னிப் பெண்ணும், தான் ருது ஆகின்ற மாத ருதுவின் பெயரை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ஆவணியில் “ருது” ஆகின்ற பெண் வர்ஷ ருதுவை நினைவில் வைத்துக் கொண்டு தினமும் காலையிலும் மாலையிலும் வர்ஷ ருது தேவதையை தியானித்து சாந்து/குங்குமம்/சந்தனத்தை நெற்றிக்கு இட்டுக் கொண்டு பூச்சூட வேண்டும். ஏனெனில் ருது தேவதைகள் விரும்பி அமர்கின்ற இடங்கள், பூக்கள், நெற்றித் திலகம், தங்க ஆபரணங்கள் போன்றவையாகும். இதை முறையாகச் செய்து வந்தால் நல்ல கணவன் கிட்டுவான்.
எளிமையான ஸ்ரீசக்கர விளக்கம்
ஸ்ரீசக்கரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். எளிமையாகச் சொல்வதானால் சர்வேஸ்வரியின் இருப்பிடமே, இல்லமே ஸ்ரீசக்கரமாகும்! இதில் பலவித கோணங்கள் உண்டு. ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீசரஸ்வதி மூவருமே ஸ்ரீசக்கரத்தினுள் உறைகின்றனர். இங்கு கோடானு கோடி தேவதைகளும் உண்டு. மூன்று அம்பிகையரும் வர்ஷ ருது காலத்தில் “சாரதா” லோகத்தில் எழுந்தருளி கூட்டு வழிபாடாக ஒன்பது தின இரவுகளிலும் இறைவனைப் பூஜிக்கின்றனர். சாரதா லோகத்திலும் ஸ்ரீசக்கர ரேகைகள் பாய்ந்தோடுவதால், மிகுந்த பிரகாசமுடைய இந்த ரேகைகள் தாம் அம்பிகையரின் பூஜா பலன்களை நமக்கு அளிக்கின்றன. எவ்வாறு?
ஸ்ரீசக்கரத்திலிருந்து எப்போதும் பொழிந்து கொண்டிருக்கின்ற ஒளிக் கிரணங்களை, நவாவரண தேவதைகளே பூலோகத்திற்கும் மற்றும் பல கோடி லோகங்களுக்கும் எடுத்துச் செல்கின்றன. சாரதா லோகத்தில் யோக நிலையில் அமர்ந்திருக்கும் அம்பிகையருடைய பூஜா பலன்களையும் நவாவரண தேவதைகள்தாம், நவராத்திரி தினங்களில் பூலோகத்திற்குக் கொண்டு வருகின்றன. பொதுவாக, முறையாக ஸ்ரீசக்கர பூஜை/ ஸ்ரீவித்யா பூஜையைக் கிரமமாகக் கடைபிடித்து வருவோர்க்கு நேரிடையாக அருட்கடாட்சத்தை அளிக்கின்றனர். ஆனால் சாதாரண மனிதர்களுக்கும் ஸ்ரீசக்கர வழிபாட்டின் தெய்வீக சக்தி வழிபாட்டின் தெய்வீக சக்தி சென்றடைய வேண்டுமல்லவா! இது தானே சித்தர்களின் தெய்வீகத் தொழில்!
ஆம், ஒன்றுமறியாப் பாமரர்களையும், பெண்களையும் வேதமோதிய பலன்களும், ஹோம பூஜா சக்திகளும் சென்றடையும் பொருட்டு அதற்குரித்தான எளிய வழிபாட்டு முறைகளை அளிப்பது சித்புருஷர்களின் தலையாய கடமைகளுள் ஒன்றல்லவா! நவாவரண தேவதைகள், மூன்று அம்பிகையரின் தெய்வசக்திகளைத் தாங்கி பூலோகத்திற்கு வருகின்றார்கள் என்பதையறிந்தோம். இதனை நாம் எவ்வாறு பெறுவது? இதற்கு வழிவகுப்பவைதான் நவராத்திரியின் எளிய வழிபாடுகள்..!
மனித உருவில் பூஜை!
அடியார் : சற்குருவே! அம்பிகையானவள் எப்போதும் இறைவனைப் பூஜிக்கின்ற தெய்வமூர்த்தியன்றோ! இரவு பூஜை, பகல் பூஜையென அம்பிகைக்கும் பாகுபாடு உண்டா?
சற்குரு: (புன்முறுவலுடன்) மனிதன் தன்னை, தன் வாழ்க்கை முறையை எண்ணிக் கொண்டேதான் எதையுமே எடைபோடுகின்றான். தெய்வ நிலை, மனிதனின் மனதிற்கு அப்பாற்பட்டது என்பதை அடிக்கடி மறந்து விடுகின்றான். இரவும் பகலும் ஈஸ்வரியின் கண்களிலிருந்தே உருவாகின்றன. அதாவது சூரியனும், சந்திரனும் அம்பிகையின் வலது, இடது கண்களே! எனவே இரவு, பகல் வருடங்கள், யுகங்களைக் கடந்ததன்றோ அம்பிகையின் நிலை! இருப்பினும் மனிதப் பிறவியின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக மூன்று அம்பிகையருமே மானுடப் பெண்களாய் வடிவெடுத்து இறைவனை ஆராதிக்கின்றனர். மஹரிஷிகளும் யோகியரும் கூட ஆண்டவனை அற்புதமான மானுட உருவில் தான் அர்ச்சித்து ஆனந்தமடைய விரும்புகின்றனர். எனவே எத்தகைய அரிய மனிதப் பிறவியை நாம் பெற்றிருக்கிறோம். இதை நாம் வீணே கழித்திடலாமா!
கர்மத்தின் வரைமுறை :- மனிதன் இரவிலும் பகலிலும் பல தகாத செயல்களைச் செய்து பாவங்களைச் சேர்த்துக் கொள்கின்றான். உதாரணமாக, காம இன்பத்தில் ஈடுபடுகின்ற மனிதன், தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு உடலற்ற, காலற்ற, தலையற்ற நட்சத்திர நாட்களில் எத்தகைய புணர்ச்சியையும் கொள்ளக் கூடாது. ராசிகளில் பகல், இரவு ராசிகளுமுண்டு. எந்தெந்த காரியங்களை எந்த காலத்தில் எந்த ராசியில் செய்ய வேண்டும் என்பதை அறிந்து செய்தால் பெரும்பான்மையான தீவினைக் கர்மங்களைத் தடுத்து விடலாம் என்பதை அறிந்து செயல்படுக.
உதாரணமாக மீனராசி, இரவிலும் பகலிலும் சக்தியுடையதாதலின் இதில் நீண்ட (பகல், இரவு கூடிய) பிரயாணங்கள், கூடுதல் வேலை (overtime), பகலிலும் இரவிலும் தொடர்கின்ற – பெரிய காரியங்களை மேற்கொண்டிடில் காரியத் தடங்கல்களின்றி, தீவினைக் கர்மங்களின்றி காரிய சத்தியைப் பெற்றிடலாம். குறிப்பாக, பகலில் தொடங்கி இரவிலும் தொடர்கின்ற கிரிவலம் மற்றும் பூஜைகளுக்கு மீன ராசியில் சந்திரனிருக்கும் நாட்கள் மிகவும் சக்தியுடையவையாகும். எனவே மனிதன் இரவில் சேர்க்கின்ற பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக, இறைவனே வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, விஷ்ணுபதி புண்யகாலம், நவராத்திரி போன்ற இரவு நேர பூஜைகளை ஏற்படுத்தியுள்ளான். அம்பிகையரும் இதற்குத் தாங்களே முன்னோடியாக நின்று ஒன்பது தினங்களுக்கு இரவு நேரப் பூஜைகளை மேற்கொண்டு மனிதர்கள் அறிந்தோ அறியாமலோ இரவு நேரத்தில் சேர்க்கின்ற தீய கர்ம வினைகளுக்கான பரிஹாரத்தை வேண்டிப் பிரார்த்திக்கின்றனர். தேவிகளே வழிபடுகின்ற நவராத்திரி இரவு நேர பூஜையில் நாமும் பங்கு பெற வேண்டுமல்லவா!
கிருப சூத்ர சாந்துப் பொட்டு
ஸ்ரீசுசரித சரஸ்வதிக்கு ஆதிபுராணங்களை உபதேசித்தவர் ஸ்ரீஆதிமூல கணேசப் பெருமானாவார். திரிபுர தகனத்தில் அச்சிறுத்த விநாயகராக அமர்ந்தது முதல் தொன்று தொட்டு அனைத்துப் புராண வைபவங்கட்கும் சாட்சியாக நின்று அருள்பாலிப்பவர் ஆதலின் ஸ்ரீசரஸ்வதி தேவியே பிள்ளையாரப்பனிடம் புராண மந்திர உபதேசங்களைப் பெற்றாள். துதிக்கையை திசையெங்கும் ஆட்டியவாறு பெருவயிறு குலுங்கிட, பேரானந்தத்துடன் விநாயகர் பல புராணங்களை எடுத்துரைக்கும் காட்சி காணத் தெவிட்டாதது. ஸ்ரீகணபதியின் கவின் மொழிகளைக் கேட்டுத் தன்னை மறந்து பிரம்மானந்த நிலையில் இருந்த ஸ்ரீசரஸ்வதியை, விநாயகப் பெருமான், “அம்மா கலைவாணி! நான் சொல்லிவந்த இப்புராண வைபவத்தைச் சற்றே மீண்டும் சொல்வாயா?” – என்று கேட்டிட ஸ்ரீசரஸ்வதி திகைத்து நின்றாள். “ஸ்ரீமஹா கணபதி பிரபோ, எத்தனையோ யுகங்களுக்குத் தங்கள் திருவாய்மொழிகளால் அனைத்தையும் கேட்டு உய்த்துணரும் தெய்வீக பாக்யம் பெற்றேன். எவ்வாறு அதனை எடுத்துரைப்பேன்?’
“ஸ்ரீஹயக்ரீவரையே குருவாகக் கொண்டிருக்கும் பாக்யத்தைப் பெற்ற நீ சகலகலாவல்லித் தெய்வமன்றோ! உனக்கு உபதேசம் செய்யும் தகுதி அடியேனுக்குக் கிடையாது! நீ கற்றறியாதது சகல லோகங்களிலும் எங்கும் எதுவுமில்லை. பிரம்ம சிருஷ்டியில் “கிருப சூத்ர” சாந்து என்ற ஒன்று படைக்கப்பட்டது. அதன் பிறகு சிவபணி சார மூலிகை விருட்சத்தில் புனிதமான புனுகுப் பூனையிடுகின்ற நல்ல நறுமணமுள்ள புனுகிலிருந்து பெறப்படுவதே கிருப சூத்திரச் சாந்து ஆகும். பிரம்ம சூத்திர மந்திரங்களின் தெய்வீக சக்தி நிறைந்தது”- என்று கூறிய விநாயகர் கிருபசூத்திரச் சாந்தினை எடுத்து ஸ்ரீசரஸ்வதிக்கு இட்டுத் திருஷ்டி கழிக்கும் பாவனையில் சுற்றி ஆசீர்வதித்தார். இச்சாந்துப் பொட்டினை இட்டவுடன் ஸ்ரீசரஸ்வதி தேவியின் திருவாக்கிலிருந்து அரிய கீதங்கள் பிறந்தன, அற்புதமான ராகங்கள் தோன்றின, சக்தி வாய்ந்த மந்திரங்கள் உருவாயின, பெறற்கரிய பீஜாட்சர மந்திரங்கள் பொழியலாயின, இதிகாசங்கள் எழுந்தன! சகல வேத ஒலிகளும் பிரபஞ்சத்தில் நிரவின! எனவே நாமும் ஸ்ரீசுசரித சரஸ்வதியை வழிபட்டு நிரந்தரமான கல்விச் செல்வத்தைப் பெற்றிடுவீர்களாக, பெற்றிடுவோமாக!
ஓர் அன்பான வேண்டுகோள்
ஸ்ரீஅகஸ்திய விஜயம் பரிபூர்ணமான தெய்வீக மாத இதழாகப் பரிமளிக்கின்ற காட்சியைக்கண்டு இன்புறும் இறை நெறிச் செல்வர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்:-
எல்லாம் வல்ல ஸ்ரீஅருணாசலேசுவரரின் பெருங்கருணையால் எம்முடைய ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் திகழ்கின்ற திருஅண்ணாமலையில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று அன்னதானம் நடைபெற்று வருவதை அறிவீர்கள் அன்றோ! ஆஸ்ரமத்தின் இதர தெய்வீக வெளியீடுகளான அருணாசல மஹிமை, பிரதோஷ மகிமை, ராகுகால ஸ்ரீதுர்க்கா பூஜைமகிமை, சுபமங்கள தீப மகிமை, சந்தன மகிமை, திருப்பணி தரும் திருஅருள், திருச்சி மலைக்கோட்டை மகிமை, சுமங்கலிக் காப்பு போன்ற அற்புதமான ஆன்மீக நூல்களும் (ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளால் அருளப் பெற்றவை) வெளியிடப்பட்டுள்ளன. சித்புருஷர்களின் அற்புதமான விளக்கங்களைத் தாங்கி வரும் நூல்கள் இவை. மேலும் ஸ்ரீநவகிரஹ மகிமை, பிள்ளையார் மகிமை, திருஅண்ணாமலை மகிமை போன்ற பல நூல்களும் வருகின்ற கார்த்திகை தீபத்திற்குள் வெளிவர உள்ளன. ஸ்ரீஅகஸ்திய விஜய ஆன்மீக இதழின் ஆன்மீக வளர்ச்சிக்காகவும், ஆஸ்ரமத்தின் கட்டிட உதவிக்காகவும், ஆஸ்ரமத்தின் மாதாந்திர பௌர்ணமி அன்னதானத்திற்காகவும் ஆஸ்ரமத்தின் சார்பில் மாதந்தோறும் சென்னை, திருச்சி கிராமப்புற பகுதிகளில் ஏழை எளியோருக்காக நடத்தப்படும் இலவச மருத்துவ முகாம்களுக்காகவும் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடையும் வண்ணம் எளித தெய்வீக விளக்கங்கள், பூஜை வழிபாட்டு முறைகளை அளிக்கும் தெய்வத்துணை நூல்களைப் பிரசுரிக்கவும்... இயன்ற பொருள் உதவியைத் தந்தருளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம். தங்களுடைய இல்லங்களில் நிகழும் திருமணங்கள், கிரஹப் பிரவேசம், சீமந்தம், உபநயனம், புனித நீராட்டுதல், சதாபிஷேகம்/ சஷ்டியப்த பூர்த்தி, போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளில் பங்குகொள்கின்ற விருந்தினர்களுக்கு மேற்கண்ட தெய்வீக நூல்களை அன்பளிப்பாக அளித்து எங்களுடைய அறவழிக்கு உறுதுணையாக நிற்பதோடு, தெய்வீகத்தை யாங்கனும் பரப்புகின்ற, அருட்பெறும் தெய்வீகத் திருப்பணியிலும் பங்கு கொள்ள வேண்டுகின்றோம்.
உங்களுடைய உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள், மேலதிகாரிகளுக்கும் மற்றும் நூலகங்களுக்கும் ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழுக்கான சந்தாத் தொகையைத் தாங்களே செலுத்தி எங்களுடைய இறைப்பணி தழைத்தோங்கிட உதவி புரிய வேண்டுகிறோம். ஆஸ்ரமத்திற்கான நன்கொடைக்கு இந்திய வருமான வரிச் சட்டத்தின் 80ஜி பிரிவின்படி வருமானவரிச் சலுகை உண்டு. (Exemption under sec 80G of IT Act) என்பதை மகிழ்வுடன் நினைவூட்டுகின்றோம்.
ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் – திருஅண்ணாமலை – சேவைச் செய்திகள்
3.8.1997 – சென்னை – பூந்தமல்லி அருகே வீரராகவபுரம் கிராமத்தில் ஏழைகளுக்கான இலவச மருத்துவ முகாம்.
6.8.1997 – திருச்சி அருகே வடதிசைபாயும் காயத்ரீ நதிக்கரையிலுள்ள திருமாந்துறை ஆலயத்தில் பொதுமக்கள் பங்குபெறும் வண்ணம் ஆடிப்பூர அம்மனுக்கான ஹோமம் கிராமத்து மக்கள் குறிப்பாக பெண்களும் ஹோம ஆஹுதிகள் அளித்து ஆனந்தமடைந்தனர்.
10.8.1997 – சென்னை – திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலய உழவார இறைத் திருப்பணி.
10.8.1997 – திருச்சி – முத்தரசநல்லூரில் ஏழைகட்கான இலவச மருத்துவ முகாம்.
16.8.1997 – விஷ்ணுபதி புண்யகால பூஜைகள்
17.8.1997 – திருஅண்ணாமலையில் பௌர்ண்மி கிரிவலம் – அன்னதானம்
18.8.1997 – ஆவணி அவிட்ட பூணூல் அணியும் வைபவம் – இன்று எங்கள் ஆஸ்ரமத்தில் ஜாதி வித்தியாசமின்றி, விருப்பம் தெரிவித்த பலருக்கும் ஸ்ரீகாயத்ரீ மந்திர உபதேச, தெளிவுரையுடன் பூணூல் அணிவிக்கப்பட்டு, ஸ்ரீகாயத்ரீ ஹோம குண்டத்தில் ஆஹுதி அளிக்கும் தெய்வீக பாக்கியம் அளிக்கப்பட்டது ஆகஸ்ட் ’1997 – ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் உள்ள அறிவிப்பை ஏற்றுத் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அன்பர்கள் வந்திருந்து எவ்வித வேறுபாடும்., இன்றி ஸ்ரீகாயத்ரீ ஹோமத்தில் தாமே ஆஹுதி அளிக்கும் பாக்கியம் பெற்றனர்.
18.8.1997 – 50க்கும் மேற்பட்ட யோக, ஆசன நிலைகளுடன் காயத்ரீ நமஸ்கார பூஜை நடைபெற்றது.

நித்ய கர்ம நிவாரணி

அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம், லக்னம், கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை/தான தருமம்/ வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்திடில், குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்ம வினைகளின் கழிப்போடு எவ்விதமான புதிய தீவினைகளும் சேராவண்ணந் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்..
1.10.1997 முதல் 10.10.1997 வரை நவராத்திரி பூஜை விளக்கங்களில் உள்ளபடி செய்யவும். 11.10.1997 அன்று ஆயுர்தேவி வழிபாடு.
30.10.1997 அன்று தீபாவளி பூஜை - இவ்விதழில் விளக்கம் காண்க.

நாள்

  தான தர்ம வழிபாட்டு முறை

நிவாரண பலன்கள்

12.10.1997

 பெருமாள் கோவிலில் ஸ்ரீலக்ஷ்மிக்கு முழுத் தாமரை மலரால் அர்ச்சனை

எதிர்பார்த்த பண உதவி கிட்டும்.

13.10.1997

சயனக் கோலத்திலுள்ள பெருமாள் கோவிலில் அடிப் பிரதக்ஷிணம், சர்க்கரை பொங்கல் தானம்.

அலுவலகத்தில் எதிரிகளின் பகைமை தணியும்.

14.10.1997

இன்று கோயிலில் பச்சரிசி மாவினால் அசோகச் சக்கரம் (24 ஆரங்கள் வரைந்து கோலமிடுதல்.)

உறவினர்களால் வரும் துன்பங்கள் தணியும்.

15.10.1997

சந்திரனுக்குப் பால் அபிஷேகம்/ பால் தானம், வானில் சந்திர தரிசனம்,

பொறாமை உள்ளவர்கள் நாணும்படி நற்காரியங்கள் நடைபெறும்.

16.10.1997

புண்யநதி அல்லது கோயில் தீர்த்தத்தில் நீராடுவது விசேஷமானது

குழந்தைகளின் நோய்கள் தணியும்.

17.10.1997

ஸ்ரீரங்கநாதருக்குத் துளஸி மாலை சாற்றி வெண்பொங்கல் தானம்..,

நிம்மதியான உறக்கம் கிட்டும்.

18.10.1997

முருகன் கோவிலில் தினைமாவுப் பண்டங்கள் தானம்.

வீடு கட்டுதல் சம்பந்தமான பிரச்னைகள் தீரும்.

19.10.1997

பிள்ளையாருக்கு மோதக நைவேத்யம், கரக சதுர்த்தியாதலின்,

கபால சம்பந்தமான (ஒற்றைத் தலைவலி) நோய்கட்கு நிவாரணம் கிட்டும்.

20.10.1997

ஏழை சுமங்கலிகட்கு ஐந்து வகை மங்களப் பொருட்களை அளித்தல்

மங்கள சக்திகள் நிறையும்.

21.10.1997

ஆறுமுகனுக்கு செவ்வரளி மாலை சாற்றிட...

மனதிற்கு உகந்த வீடு கிடைக்கும்.

29.10.1997

ஐந்து ஆயுதங்கள் (பஞ்சாயுதம்) தாங்கிய பெருமாள் கோவிலில் பெரிய தோசை தானம்.,

எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும்.

விசேஷ தினங்கள் – அக்டோபர் – 1997
1.10.1997 – மாளய அமாவாசை
2.10.1997 – பிரதமை – நவராத்திரி ஆரம்பம்
10.10.1997 – சரஸ்வதி பூஜை
11.10.1997 – விஜயதசமி – ஸ்ரீஆயுர்தேவி பூஜை          
15.10.1997 – பௌர்ணமி – பகல் 12.48 மணி முதல் மறுநாள் (16.10.1997) காலை 9.15 மணி வரை பௌர்ணமி. இன்று இரவு பௌர்ணமி கிரிவலம் சிறப்புடையது.
27.10.1997 – வாஸ்துநாள்
30.10.1997 – தீபாவளி – ஸ்ரீலக்ஷ்மி பூஜை
31.10.1997 – கேதாரகௌரி விரதம்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam