ஒருவருடைய வீட்டு விலாசம் மறந்து விட்டால் அதனால் என்ன விளைவு ?

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

சிறுவனுக்கு நெடுங்காலமாகவே, தான் ஒருவனே “கோவணாண்டிப் பெரியவரின் ஏகமனதான ஒரே சிஷ்யன்” என்று மிகவும் பெருமிதம் கொண்டிருந்தான். இந்த “அகங்கார” எண்ணத்தைத் தட்டுவதற்காகவே, அவனுக்கான குருகுலவாசத்தில், நிறைய சம்பவங்களை, அனுபூதிகளை, நல்ல பாடம் புகட்டும் வைபவங்களைப் பெரியவர் அவனுக்கென அவ்வப்போது ஸ்பெஷலாகத் தோற்றுவித்துத் தந்தார் போலும்!

பாக்கியைத் தீர்க்கும் பிட்சையிலும் பாக்கியா?

ஓரு முறை….

சேலம் பகுதியில் நடை யாத்திரையாகச் சென்ற போது, சில வீடுகளில் அவரே வலியச் சென்று,

“பவதி பிட்சாந் தேஹி! அம்மா பிட்சை போடுங்க!” என்று கூவி, பிட்சை கேட்டு நின்றார். “பவதி பிட்சாந்தேஹி” எனில், “பிட்சை இடுங்கள்!” என்று பொருள், புனிதமான வகையில் பிட்சை எடுத்து, அன்னதானம் நிகழ்த்தும் அனுபூதியே, பேச்சு வழக்கில், பிச்சை என்றாகி நடைமுறையில் உழைக்காது தனக்கென வேண்டி சுயநலமாக, அவலமாகப் பிச்சை எடுப்பது என்று ஆகி விட்டது.

“ஏன் வாத்யாரே, அங்கே போய் நிக்கறே? அவங்கதான் பிட்சை கொடுக்க மாட்டாங்கன்னு முகத்தைப் பார்த்தாலே நல்லாத் தெரியுதே!”

சிறுவன் சற்றுக் கோபமாகவே பேசினான்!

உலக அமைதிக்கான
உன்னத கீதம்!

பெரியவர் அவனைப் பார்த்து அர்த்தமுள்ளச் சிரிப்பை உதிர்த்தார்.

அவருடைய பொருள் பொதிந்த சிரிப்பைப் பார்த்ததும்தான் அவனுக்கு விஷயம் புரிந்தது.

“அப்படீன்னா சித்தர்கள் கணக்குப்படி, உனக்கு யாரு பிட்சை இடணும்னு பாக்கி இருக்கோ அவங்க வீட்டு முன்னாடி போய்த்தான் நீ பிட்சை கேட்டு நிப்பியா?”

“பதிலைத் தெரிஞ்சுக்கிட்டே ஏண்டாப்பா கேள்வி கேக்கறே?”

“இல்லை…” என்று சிறுவன் சற்று இழுத்தான்.

“என்னடா இல்லை, லொள்ளைன்னுக் கிட்டு……”

அவர்கள் அறியாதது ஏனோ அய்யா?

“அது சரி, அவங்கதான் உனக்கு பிட்சை அரிசி போடணும்னு பூர்வ ஜன்ம பாக்கி ஆச்சே, அப்புறம் அவங்க ஏன் உனக்கு அரிசி போடலை?”

சிறுவன் அப்பாவித்தனமாகக் கேட்டான்.

இதற்குள் நடுவில் ஒரு (குச்சி) ஐஸ்கிரீம் வண்டி வந்தது. பெரியவர் நிறைய ஐஸ்கிரீம் குச்சிகளை வாங்கி, அங்கு வெய்யிலில் வாடி இருந்தவர்களுக்கு அளித்தார். அவர்கள் உலக மஹா சந்தோஷத்துடன் ஐஸ் புரூட் சாப்பிடுவதைக் கண்டு ரசித்த அவருக்கோ ஆனந்தமோ ஆனந்தம்! பிறகு வழக்கம் போல், கோவண முடிச்சில் இருந்து, ஒரு பத்து ரூபாய் பணத்தை எடுத்து ஐஸ்கிரீம்காரனிடம் கொடுத்தார்.

ஐஸ் வண்டிக்காரனோ “ஏம்பா பெரியவரே! ஊரு உலகத்துக்கு எல்லாம் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்கறீயே! உன்னோட ஒட்டிக்கிட்டு இருக்கானே, இந்தப் பிள்ளையாண்டானுக்கும் ஒண்ணு வாங்கிக் கொடுத்தா என்னவாம்?” என்று கேட்டு விடவே, சிறுவன் சிறிது அதிர்ந்தான்.

பெரியவர் சிறுவனை விநயத்துடன் பார்த்தார்.

என் செய்வீரையா ஐஸ்கிரீமுடன்?

“ஏண்டா, உனக்கும் ஐஸ்கிரீம்னா நாக்கு ஊறுதா? இந்தக் குச்சி ஐஸ்கிரீம் வேணுமா?”

சிறுவன் கண்களை அகல விழித்தவாறே, “ஆமாம்” என்பது போலத் தலையாட்டினான்!

ஆனால் பெரியவரோ, “மிச்சச் சில்லறை கொடுப்பா!” என்றார்.

“எட்டணா மிச்சம் இருக்கு பெரியவரே! அதுக்கும் ஐஸ்கிரீம் வாங்கி, இந்தப் பயலுக்குக் கொடுத்துடேன்!” என்றான் அவனும் விடாப் பிடியாய்!

“மிச்சத்தை கொடுன்னா கொடுத்துடேன், சும்மா ஏன் வளவளன்னு பேசிக்கிட்டு இருக்கே?”

ஐஸ்கிரீம் வண்டிக்காரன் சிரித்துக் கொண்டே, “எனக்குப் பத்து ரூபாய்க்கு வியாபாரம் பண்ணிக் கொடுத்தியே, அதுக்கு நன்றியா, நானே ஒரு ஐஸ்கிரீமை ப்ரீயாக இந்தப் பையனுக்குத் தரேன்!” என்று சொல்லிப் பெரியவரின் பதிலுக்குக் கூட காத்திராமல், வெகு விரைவாகச் சிறுவனின் கைகளுக்குள் ஐஸ்கிரீமைத் திணித்து விட்டு, அவன் பெரியவரின் பதிலுக்குக் காத்திராமல் நகர்ந்தான். ஆனால் பெரியவரோ, அவன் பதில் பேசும் முன்னேயே விரைந்து நடக்கலானார்.

இப்போது “என்ன செய்வதென்று புரியாமல்” திகைத்த சிறுவன், பெரியவரைப் பார்த்தான். ஆனால் அதற்குள், அவர் வெகு வேகமாக முன்னே நடந்து கொண்டிருந்தார்.

தீர்ந்ததே பாக்கியப்பா!

சிறுவன், தன் கையில் மெல்ல மெல்ல உருகிக் கொண்டிருந்த ஐஸ்கிரீமை வைத்துக் கொண்டு, மிகவும் பரிதாபமாக விழித்தான். நல்ல வேளை, அப்போது ஒரு சிறு பையன் ஐஸ்கிரீமுக்கு ஆசைப்பட்டு, அங்கு ஓடி வரவே, அவசரம் அவசரமாக, அவனிடம் அதைக் கொடுத்து விட்டுப் பெரியவரை நோக்கி ஓடினான் சிறுவன்.

சிறுவன் ஐஸ்கிரீமை வாங்கும் போதெல்லாம் படுவேகமாக நடந்த பெரியவர், அவன் ஐஸ்கிரீமைத் தானமாகக் கொடுப்பதை ஓரக் கண்ணால் கண்டதும், சட்டென்று நின்றார்.
இதையும் பார்த்துவிட்டான் சிறுவன்!

“ஓஹோ! நம்மைச் சோதனை செய்து பார்க்கிறாரா இவர்? “இந்தப் பயல் என்ன செய்கின்றான்” என்று பார்ப்பதற்காகவா இந்த ஐஸ்கிரீம் கூத்து நடந்தது?”

சிறுவன் பொய்க் கோபத்தால் சிவந்து, அவரை நோக்கினான்!

தெரியாததும் தீரா பாக்கியே!

“ஏன் வாத்யாரே! ஒருத்தனுக்கு மலை போலப் பிரச்னை வந்தாலும், நல்லா சமாளிக்கணும்னு அடிக்கடி சொல்லுவியே!”

“என்ன விஷயம்டா கண்ணா? நான் தான் எட்டணா மிச்சத்தை வாங்கிட்டு வந்துட்டேனே, அப்பவே நீ நிறைய விஷயங்களைப் புரிஞ்சுக்கிட்டு இருக்கணுமே! என்ன ஆச்சு இப்போ?”

பெரியவருக்குத் தெரியாததா? அல்லது வழக்கம் போல நடிக்கிறாரா?

“ஏண்டா அந்த ஐஸ்கிரீமைத் திங்கணும்னு உன் தலையில எழுதலையேடா ராஜா! விதிக்காத ஒரு காரியத்தை நாங்க எப்படியப்பா செய்ய முடியும்?”

சிறுவன் இப்போது கோபத்தை விட்டு விட்டு, சற்றுப் புத்திசாலித்தனமாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டான்!

“என் கையால அந்தப் பையனுக்கு ஐஸ்கிரீம் கொடுக்கணும்னு பாக்கி இருக்கே வாத்யாரே! அதை முடிச்சுட்டுத்தான் வந்தேன்! அதுதான் லேட்டாயிடுச்சு!”

பெரியவர் அர்த்தமுடன் அவனைப் பார்த்துச் சிரித்தார்.

“உனக்குத் தெரியுதுடா, உன் கையால அந்தச் சின்னப் பயலுக்கு ஐஸ்கிரீம் கொடுக்கற பாக்கி ஒண்ணு இருக்குதுன்னு! அதையும் கொடுத்து உன் பாக்கியைத் நீ இன்னிக்குத் தீர்த்துட்டே! ஆனா இதே மாதிரி, நமக்கு அந்த வீட்டுக்காரங்க பிட்சை அரிசி போடணும்னு, உனக்கும் எனக்கும் தெரியுது! ஆனா அந்த வீட்டுக்காரங்களுக்குத் தெரியிலியேடா ராஜா! தெரிஞ்சா அடியேனுக்குப் பிட்சை போட மாட்டாங்களா என்ன?”

சிறுவனுக்குச் சுருக்கென்று உரைத்தது! தான் சற்று முன் அவரிடம் கேட்ட கேள்வியை மனதில் நினைத்துப் பார்த்தான்!

“….அது சரி, அவங்கதான் உனக்கு பிட்சை அரிசி போடணும்னு பூர்வ ஜன்ம பாக்கி ஆச்சே, அப்புறம் அவங்க ஏன் உனக்கு அரிசி போடலை?”

இதற்கான பதிலைப் புரிய வைக்கத்தானா பெரியவர் இந்த ஐஸ்கிரீம் திருவிளையாடலைப் புனைந்தார்?

இவ்வாறாக மனதில் எண்ணி, எண்ணிச் சிறுவன் சிரித்ததைக் கண்டு பெரியவரும் கலகலவென்று ஆகி விட்டார்!

காய்ந்த ஜாதகமா?

இப்படித்தான் பல நடை யாத்திரைகளிலும், வழியில் நல்ல சுடச் சுட வடை, பஜ்ஜி, போண்டாக் கடைகள் வந்தாலும், அவை என்னதான் சுத்தமாக இருந்தாலும், பெரியவர் வாங்கித் தர மாட்டார்.

ஹோட்டல் கடைகள் எல்லாம் கடந்து போய், ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரே டீக்கடையில், இதிலும் காய்ந்து கிடக்கும் ஒரே ரொட்டியை வாங்கித் தருவார். அதையும் முருங்கைக் காயைக் கிழித்துத் தின்பது போலப் பல்லில் வைத்து இழுத்துச் சிறுவன் அந்த ரொட்டியைத் தின்று தீர்க்க வேண்டும்!

“தனக்கென்று காய்ந்த ரொட்டி ஜாதகமா?” – சிறுவன் பொருமுவான்! அவனால் வேறென்னதான் செய்ய முடியும்? கடுமையான குருகுலவாசம் ஆயிற்றே!

அப்பப்பா கலியுக குருகுலவாசத்தில்தான் எவ்வளவு கஷ்டமான பாடங்கள்? எதுவும் எளிமையான சம்பவங்களாகவே இல்லையே! இத்தனைக் கஷ்டங்களின் ஊடேயும், ஒவ்வொன்றிலும் நிறையப் பாடங்களை அவன் கற்றுக் கொண்டான்.

பல்லாயிர வருட பாக்கி பல்சுவைச் சாப்பாட்டில் தீர்ந்ததே!

ஆனால், சில சமயங்களில் எதிர்பாராத விதங்களில், திடீரென்று சில வீடுகளில் நுழைந்து, சிறுவனுக்காக விசேஷமாகச் சமைக்கச் சொல்லி, என்னென்ன சமைக்க வேண்டும் என்று அவரே பல சாப்பாட்டு அயிட்டங்களையும் வரிசையாகச் சொல்லி, அவரும் வயிராச் சாப்பிட்டு விட்டு வெளியே வருவார். இதைக் கண்டு சிறுவனுக்கு ரொம்பவும் ஆச்சரியமாக இருக்கும்.

“பூர்வ ஜன்மத்துல நாம இவங்க வீட்டுல பூஜை செஞ்சப்போ, அவங்க வீட்டுல வயிறு நெறைய அப்ப நாம ரெண்டு பேரும் சாப்பிடலைன்னு இவங்களுக்குக் குறைபாடுடா! இதை நிவர்த்தி செய்யத்தான், இந்த ஜன்மத்துல இந்த விஸ்தாரமான சாப்பாடு! இது ஓசிச் சாப்பாடு இல்லை! பூர்வ ஜன்ம பாக்கியைத் தீர்க்கற சாப்பாடு! அதனால அயிட்டங்கள் ஜாஸ்தி! ஆனா, இன்னும் கால் மணி நேரத்துல நமக்குத் திரும்பவும் பசிக்கும். அப்பத்தான் ஒரிஜினல் சாப்பாடு சாப்பிடணும்!”

பெரியவர் இதைச் சொல்லியவாறே வயிறு குலுங்கச் சிரித்தார். அவர் சொன்ன மாதிரியே, அப்போதைக்கு வயிறு நிறையப் பல்சுவை உணவு உண்டாலும், அடுத்த கால் மணி நேரத்தில் இருவருக்கும் அகோரப் பசி எடுத்தது!

பின் என்ன, வழக்கம் போல, நடை யாத்திரையில் அடுத்து வந்த குக்கிராமத்தில் கிடைத்ததோ காய்ந்து கருவாடாகிப் போண பன் ரொட்டியும், தீய்ந்து போன ஒரு தம்ளர் டீயும்தான்! இது கால் மணி நேர பாக்கியைத் தீர்த்த பல்சுவைச் சாப்பாடு மாதிரி இல்லை! இந்தக் காய்ந்த ரொட்டிதான் பத்துப் பன்னிரெண்டு மணி நேரத்துக்குத் தாங்கும்!

பெரியவர் சொன்ன இந்த பாக்கி அனுபூதியும் பூர்வ ஜன்மப் பூர்வமானது எனச் சிறுவன் நன்றாகவே உணர்ந்தான்! ஏனென்றால், முன் பின் தெரியாத வீட்டில் நுழைந்து, அந்த வீட்டு அறைகளும், ஹாலும், தோட்டமும், படிகளும் மிகவும் பழக்கமானது போல, அந்தக் காலத்து மின்விளக்கு இல்லாத மங்கிய வெளிச்சத்தில், அவர் சரசரவென்று நகர்ந்தது, வீட்டில் இருந்தோரும் அவரிடம் பழகியது எல்லாம் அவனுக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும்.

அந்த வீட்டில் சகஜமான உறவினர் போல, விடுவிடுவென்று உள்ளே நுழைந்து ஹாலுக்கும், சமையலறைக்கும் நடை புரிந்து, அவர்களுடன் சகஜமாகச் சொந்தம் கொண்டாடிப் பேசுவார். கன்னடம், தெலுங்கு, மலையாளம், சௌராஷ்டிரா என அனைத்து மொழிகளும் அவருக்கு அத்துப்படி!

“பல யுகத்துப் பெரியவங்களாகிய நீங்க, அன்னிக்கு ஒரு நாள் எங்க வீட்டுல காலடி எடுத்து வச்ச பாக்கியம், இன்னிக்கு எங்க வீட்டுல லக்ஷ்மி கடாட்சம் பொழியுது!” என்றும் பலரும் சொல்லச் சொல்ல, அவன் கேட்டுக் கேட்டு ஆனந்தம் கொண்டிருக்கிறான்.

பூர்வ ஜன்மத்துள் புகுந்த கதை!

இருந்தாலும் பெரியவரைக் குடைவதற்காகவே அவன்,

“பூர்வ ஜன்மம்னா வாத்யாரே, நம்ம இந்த வீட்டுல அந்தக் காலத்துல பூஜை பண்ணி ஒரு அம்பது, நூறு வருஷமாவது இருக்குமா வாத்யாரே? 1865, 1866 வருஷ வாக்குல இருக்குமோ?” என்று கேட்டு அவர் வாயைப் “பிடுங்கிப்” பார்த்தான்!

இதிலாவது கோவணாண்டிப் பெரியவரின் “ரிஷி மூலம், நதி மூலம்” ஓரளவேனும் புலப்படலாம் அல்லவா! ஆனால் பெரியவரா இதில் சிக்குவார்! “சிக்கெனப் பிடிபடாதச் சித்தர் குலம்” ஆயிற்றே!

“நான் படிக்காத முட்டாளுடா கண்ணு! எனக்கென்னடா இங்கிலீஷ் வருஷக் கணக்குத் தெரியும்? ஆனா அது நடந்தது ஒரு “பிங்கள” வருஷம்னு நல்லா ஞாபகம் இருக்கு!”

பெரியவர் அர்த்தப் புஷ்டியுடன் ரசித்துச் சிரித்து பதில் தந்தார்!

“ஏண்டா பயலே! நீ தடுக்குல புகுந்தாம் நாங்க கோலத்துல பூந்துடுவோம்னு உனக்கு நல்லாத் தெரியுமே! அப்பறம் ஏண்டா கொஞ்சம் நூல் விட்டுப் பாக்கறே?”

சிறுவன் வெற்றிகரமாகத் தோல்வியுற்றுத் தலையைக் குனிந்து கொண்டான்!

“நாங்க ஒரு வீட்டுக்குள்ளாற நுழையறோம்னா...!”

பெரியவர் சற்றே நிறுத்தினார்..!

“..... அதுக்குக் கோடிக் கோடிக் காரணங்கள் இருக்குது!” – என்று சிறுவன் முழுசாகச் சொல்லி முடித்துச் சிரித்தான்!

ஆனால் பெரியவரோ அவன் காதைத் திருகி, “எங்களை எடை போடாதேடா முட்டாள்! நாங்க ஒரு வீட்டுக்குள்ளாற நுழையறோம்னா... நாங்க ஆயிரமாயிரம் வருஷத்துக்கு முந்தைய பூர்வ ஜன்மத்துக்குள்ளாற நுழையறோம்னு அர்த்தம்...!”

அப்பப்பா!! சித்தர்கள் தாம் எவ்வளவு எளிமையாக எதையும் புரிய வைத்து விடுகிறார்கள்!

இத்தகையக் குருகுலவாச அனுபூதிகளை எல்லாம் வெள்ளியங்கிரி மலைப் பயணத்தில் சிறுவன் எண்ணி எண்ணி அசை போட்டு வந்தான்.

“ஏன் வாத்யாரே! லக்ஷ்மி கடாட்சம்னா பணம் வந்து கொட்டுமா? எனக்கெல்லாம் அந்த பாக்யம் இருக்கான்னு கொஞ்சம் பாரு வாத்யாரே!” என்று  சொல்லியவாறே சிறுவன், தன் உள்ளங்கை ரேகைகளை அவரிடம் காண்பித்தான்.

“உனக்குக் குரு கடாட்சம் வேணுமா? லக்ஷ்மீ கடாட்சம் வேணுமா? குருகடாட்சத்தோட சேர்ந்து வர்ற லக்ஷ்மீ கடாட்சம் வேணுமா?... இல்லாட்டி .....”

 – பெரியவர் சற்றே நிறுத்தினார்!

இந்த தடவை அவன் மூக்கை நுழைப்பதாக இல்லை! எனவே வியப்புடன் சிறுவன் அவரைப் பார்த்தான்!

“..... இல்லாட்டி ..... நான் வாங்கித் தர்ற காஞ்ச ரொட்டி, பரோட்டா மட்டும் போதுமா?”

அந்த “மட்டும் போதுமா?” என்பதில்தானே குருகுலத்தின் பொக்கிஷமே அடங்கி உள்ளது.

சிறுவன் நன்கு உஷாரானான்!

“நீ கொடுக்கற காஞ்ச ரொட்டி போதும் வாத்யாரே!”

பெரியவர் கலகலவென்று சிரித்தார்.

“இத்தனை வருஷம் என்னோட இருந்தும் இன்னமும் இப்படிச் சோத்து மூட்டை சுப்புடுவா, சாப்பாட்டு ராமனா இருக்கியே! என்னிக்குடா எங்கிட்டேந்து அத்தனை விஷயங்களையும் கத்துக்கப் போறே?”

“எல்லாத்தையும் நீதான் அழுக்கு பரோட்டாலேயும், அந்தக் காஞ்ச போன பன் ரொட்டிலேயும் திணிச்சு வச்சு என்னோட கபாலத்துக்குள்ள நேரடியாவே திணிச்சுக் கிட்டு வர்றியே வாத்யாரே! அப்புறம் எதுக்குத் தனியாக் கத்துக்கறதாம்?”

சிறுவன் குஷியாக அவருக்கு பதில் தந்தான். அவன்தான் பரோட்டா சமஸ்தானத்தில் குதித்து விட்டானே! பரம சந்தோஷத்தோடு பதில் பீறிட்டுக் கொண்டு வந்தது!

“நீ சொல்றது கூட நூத்துக்கு நூறு உண்மை தாண்டா?”

சிறுவன் திகைத்தான்!

“பாராட்டுவது என்ற சரித்திரமே இவரிடம் கிடையாதே! நாம் என்ன அப்படித் தத்துவச் சித்தாந்தமாய்ப் பொழிந்து விட்டோம்? உண்மையிலேயே நாம் சொன்னது போலவே, பரோட்டா, காஞ்ச ரொட்டி மூலமாகத்தான் அவர் தரும் அறிவு வேலை செய்யுதே! பிறகு எதுக்கு சரஸ்வதி கடாட்சம், லக்ஷ்மி கடாட்சமெல்லாம்?”

பெரியவர் நறுக்கெனத் தலையில் குட்டினார்.

“இப்படித் தலைக் கபாலத்துலக் குட்டியும் கூட, குரு கடாட்சம் வந்து சேரும்டா கண்ணு?”

இருவரும் சேர்ந்து அனுபவித்துச் சிரித்தார்கள்!

நட்சத்திர சமையல்

அம்மாமாருங்கோ, ஐயாமாருங்கோ, நல்லாப் பாருங்கோ..! – இடியாப்ப ஈச சித்தர் வாக்கு!

குடும்ப ஒற்றுமையும், நண்பர்களின் ஆதரவும் கிடைக்க உதவும் ஆன்மீக உணவு!

பரணி நட்சத்திர சக்திகள் நிறைந்த ரவா இட்லி!

ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தோருக்கும் உரிய விசேஷமான நட்சத்திரச் சமையல் குறிப்பு முறைகள் உண்டு. சனி கிரகம் பூச நட்சத்திரம், சுக்கிர கிரகம் – பரணி என்றவாறாக, ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு கிரகத்தைச் சார்ந்து வருவதால், அந்தந்த நட்சத்திரத்தார் மாதந்தோறும் தம் நட்சத்திர நாளில் மட்டுமல்லாது, ஏனைய நாட்களிலும் திறம்படச் சமைத்து, இறைவனுக்கும், தமக்குரிய நட்சத்திர தேவிக்கும், சந்திர மூர்த்திக்கும் படைத்து அன்னதானமளித்தும், தம் குடும்பத்தாருடனும் உண்டும் வருதல் இல்லறக் கடமைகளில் ஒன்றாகும்.

தம் நட்சத்திர சக்தி உணவு வகையை அறிந்து பழகி, அடிக்கடி சமைத்து வருதலும், இல்லத்தில் ஆன்மீக சக்திகளை நன்கு நிரவி, சாந்தமயமான குடும்ப நிலை, சிறப்புடன் வந்தமைய உதவும்.

ஒவ்வொரு நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்கும் வெவ்வேறு குணாதிசயங்கள் இருக்கும், பரணி நட்சத்திரத்தில் பிறந்தோர், பொதுவாக, கூர்மையான பார்வையும், தெளிந்த மனத்தோடு பழகுகின்ற தன்மைகளையும் உடையவர்களாக இருப்பர். சிறிது பிடிவாத குணமும் உடையவர்கள். அர்த்தம் பொதிந்த பேச்சைப் பேச விரும்புபவர்கள்.

பரணி நட்சத்திரத்திற்கென 360 கலைகள் உள்ளன. இந்த 360 கலைகளுக்குமான 360 வகை ஆன்மீக உணவு வகைகள் உண்டு. இவற்றை நன்கு அறிந்து கொண்டு, சமைத்துத் தன் குடும்பத்திற்கும், உற்றம், சுற்றத்திற்கும், அளித்து ஏழைகளுக்குத் தானமும் செய்து வந்திடில், நல்வகையான பேச்சு திறனும், கணக்குப் பாடத்தில் நல்ல முன்னேற்றமும் பெற்று, நல்ல வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். இவற்றில் குறித்த சில ஆன்மீக சக்திகள் எழும் வழிவகைகள் சித்தர்களால் “நளபூபதி” கிரந்தங்களில் அளிக்கப் பெற்றுத் தலைமுறை, தலைமுறையாக வருவதாகும். இவ்வகை உணவுகளை உண்ணும் பிள்ளைகளுக்கும் கணக்குத் துறையில் நல்ல விருத்தி ஏற்படும்.

இந்த நட்சத்திரக் கலைகள் 360ல், 12ஆவது கலையை இம்மாதம் எடுத்துக் கொண்டுள்ளோம். “ஸ்வாதிஷ்ட பதம்” என்பது இக்கலையின் பெயராகும்.

இக்கலை தரும் அருள் யாதெனில், எந்தெந்த உணவு வகைகளைப் பரணி நட்சத்திரக்காரர்கள் தம் கையால் செய்தால், நல்ல குடும்ப ஒற்றுமையும், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும் என்பதை விளக்குவதேயாகும்.

பரணீய சக்திகள் பூரிக்கும் ரவா இட்லி

ரவா இட்லி என்பது சாதாரண உணவு வகையாகத்தான் பலரும் அறிவர். இதில் பூரிக்கும் பரணி நட்சத்திர சக்திகளைப் பெறுதற்கு உரித்தான மந்திரங்கள் உண்டு. “ஓம் யாதேவி ஸர்வ பூதேஷு மேஷ சங்க்ரஹம ரூபேண சமஸ்திதா நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:”

இது பரணீய சக்திகள் பலவற்றைக் கொண்டது என நன்கு அறிந்து சங்கல்பம் செய்து குறித்த மந்திரங்களை ஓதிச் சமைக்கும் போது கூடுதலாகச் சிறப்பானப் பலன்களைப் பெறுகின்றோம். இம்மாதத்தில் பரணி நட்சத்திரத்தின் 12ஆவது கலைக்கு உரித்தான உணவு வகையான “ரவா இட்லி” செய்வது பற்றிய விளக்கங்களைக் காண்போம்.

பல்வகை அனுகிரக சக்திகளையும் குறித்த வகையில் தருவதாக நட்சத்திர உணவு முறைகள் அமைந்துள்ளன. அதாவது, வாழ்வில் எந்த உணவைத் திறம்பட, எவ்வகையில் ஆக்கிப் படைத்துத் தானம் அளித்து வந்தால், எந்தப் பிரச்னைக்கு, எத்தகைய துன்பங்களுக்கும் தீர்வுகள் கிட்டும் என்ற வகையிலான சமையல் துறை விளக்கங்கள் நிறையவே உண்டு. இவற்றை அறிந்து  கடைபிடித்துப் பயன் பெறுதலே சிறப்புடையதாகும்.

இந்த பரணி நட்சத்திரச் சமையல் உணவாகிய “ரவா இட்லியை”, எந்நாளிலும், குறிப்பாக பரணி நட்சத்திர நாளிலும் ஆக்கி, இறைவனுக்குப் படைத்துத் தான தர்மம் செய்து வருவதால், நல்ல நண்பர்களைப் பெற்று, வியாபார விருத்திகளையும் அடைவர்.

எனவேதாம், நம் பெரியோர்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய ஆன்மீகச் சமையல் முறையைப் பாரம்பரியமாக வகுத்துத் தந்துள்ளனர். மேலும், இந்த உணவின் பயனாக, சூரியனின் ஆட்சி நிலையாலும், கேந்த்ர கோண நிலைகளைப் பொருத்தும் நற்பலன்களை அளிக்கச் செய்யும். இத்தகைய ஆன்மீகம் நிறைந்த பரணி நட்சத்திரத்திற்கு உரிய சமையல் முறையால், வியாபார விருத்தியையும் நன்கு அடையலாம்.

இதனைப் பரணி நட்சத்திரக்காரர்களும், ஏனையோரும், அனைத்து நாட்களிலும், குறிப்பாக, பரணி நட்சத்திர நாட்களிலும், செய்து படைத்துத் தானமளித்து விசேஷமான பலன்களை அடைவார்களாக! பரணி நட்சத்திரத்திற்கு உரிய துதிகளை (அகத்திய நட்சத்திர வாக்கியத் திரட்டு மந்திரம்) ஓதியவாறு சமைத்தல் விசேஷமானதாகும்.

தேவையான பொருட்கள்:-

1. மெல்லிய பம்பாய் ரவை – 2 கப்
2. நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
3. பச்சை மிளகாய் – 10 (விழுதாக்கிக் கொள்ளவும்)
4. புளித்த கெட்டித் தயிர் – 2 கப்
5. பொடியாக அரிந்த வெங்காயம் – ½ கப்
6. நன்கு அரிந்த கொத்தமல்லித் தழையும், கருவேப்பிலையும் – 2 டேபிள் ஸ்பூன்
7. வேக வைத்த பட்டாணி – ¼ கப்
8. உப்புத் தூள் – 1 ½ டீ ஸ்பூன்
9. சமையல் சோடா - ½ டீ ஸ்பூன்

தாளிக்க: - கடுகு – ¼ டீ ஸ்பூன் ,
உளுத்தம் பருப்பு - ½ டீ ஸ்பூன் ,
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம் :- கட்டி தட்டாமல் பொன் நிறமாக வறுத்த ரவையைத் தயிரோடு கலக்கவும், எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களையும் அதில் சேர்த்திடுக, நறுக்கிய வெங்காயத்தையும் இதில் இறுதியாகச் சேர்க்கவும்.

மூன்று நிமிடங்கள் மிதமான சூட்டில் இவற்றை வதக்கவும், அனைத்தும் நன்கு வதங்கியவுடன், இதனுடன் பொடி உப்பைச் சேர்த்து, ரவையுடன் கலக்கவும்.

இத்துடன் பச்சை மிளகாய் விழுதை, நறுக்கிய மல்லி தழை, கருவேப்பிலை, சோடாவுடன் சேர்க்கவும், இவற்றை நன்றாகக் கலந்து, எண்ணெய் தடவிய இட்லி தட்டில், சுமார் 7 நிமிடங்கள் – ஆவியில் வேக வைக்கவும். இப்போது பரணி சக்திகள் நிறைந்த ரவா இட்லி தயாராகி விடுகிறது.

பரணி நட்சத்திரத் துதிகளை ஓதி பரணி நட்சத்திரத் தேவியின் அருளை வேண்டி சுவாமிக்குப் படைக்கவும்., கடந்த இதழில் குறிக்கப்பட்டுள்ளது போல, முதலில் எந்தப் பொருட்களைப் பயன்படுத்துகின்றீர்களோ அதற்கான தேவதா மூர்த்திகளை நன்கு மனதாரச் சிந்தனையில் இருத்தி வேண்டிடுக! உதாரணமாக, ரவையில் சூரிய சக்திகளும், நல்லெண்ணையில் சனி கிரக சக்திகளும், பட்டாணியில் புதவித்யா சக்திகளும், நிறைந்துள்ளன.

மிளகாய் – மாசானி அம்மன் மற்றும் சாகம்பரீ தேவி சக்திகள்
தயிர் – பெருமாள் சக்தி
கருவேப்பிலை – சனீஸ்வரர்
கொத்தமல்லி – சப்தமாதா
உப்பு – லவணேஸ்வரி துர்க்கை

அந்தந்த உணவுப் பொருளுக்கான தேவதா மூர்த்திகளைத் துதித்தவாறு, அந்தந்தப் பொருளைப் பயன்படுத்துதல் உணவிற்கு ஆன்மீக ரீதியான மேன்மையைத் தருவதாகும்.

காரையூர் விஷ்ணுபதி

ஓம் நமோ நாராயணாய ஸ்ரீமத் ராமானுஜாய நம:

திருமால் நெறி வாழி! திருத்தொண்டர் செயல் வாழி!

விஷ்ணுபதிப் புண்ய காலம் 16-11-2005

தமிழ் வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரும் விஷ்ணுபதிப் புண்ணிய காலத்தின் மகத்துவத்தைக் கடந்த பல வருடங்களாக தம் குருவருளால் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் எடுத்துரைத்து வருகின்றார்கள்.

கலியுலகில் மக்கள்க்குப் பல வகைகளிலும் ஏற்பட்டு வரும் துன்பங்களுக்கும், சூறாவளி, கடல் கொந்தளிப்புகள், நில பூகம்பம் போன்ற மலிந்து வரும் இயற்கைச் சீற்றங்களுக்கும் அருமருந்தாய் அமைவதே விஷ்ணுபதி போன்ற விசேஷமான விரதங்கள், பண்டிகை வழிபாடுகளாகும். இவைதாம் உலக ஜீவன்களுக்கு நன்மைகளை எப்போதும் அளிக்க வல்லவையாம்.

96 வகை ஷ்ண்ணாவதித் தர்ப்பண நாட்களில் ஒன்றாக விஷ்ணுபதிப் புண்யகாலம் துலங்குவது, இதன் தெய்வீக மகத்துவத்திற்கு ஒரு சான்றாகும். எனவே, வைணவப் பீடாதிபதிகளும், வைணவப் பெரியோர்களும், பக்த கோடிகளும், திருமால்நெறிச் செல்வர்களும் விஷ்ணுபதிப் புண்யகால நாளில், அனைத்துப் பெருமாள் தலங்களிலும், குறிப்பாக 108 வைணவத் தலங்களிலும், பரம்பொருளாம் ஸ்ரீநாராயணப் பெருமாளை ஆராதனை செய்யும் மகத்தான உற்சவ நாளாகச் சிறப்புடன் கொண்டாட ஆவன செய்ய வேண்டுமாய் மிகவும் பணிவுடன் கேட்டு கொள்கின்றோம்.

மாதப் பிறப்பு நேரத்தை ஒட்டி, விஷ்ணுபதிப் புண்யகால வழிபாட்டு நேரத்தையும் துல்லியமாகக் கணிக்கும் பஞ்சாங்கத் திருக்கணித முறை உண்டு. எனினும், இதில் பல நுணுக்கமான கிரக சஞ்சரிப்புக் கணக்கு இருப்பதால், பக்தர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம், மாதப் பிறப்பின் முதல் நாள் நள்ளிரவு 1.30 மணி முதல், மாதப் பிறப்பன்று காலை 12 மணி வரை விஷ்ணுபதியைக் கொண்டாடுவது சிறப்புடையதாகும்.

விஷ்ணுபதிப் புண்ய காலத் தலம் காரையூர் ஸ்ரீரங்கநாயகித் தாயார் சமேத ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் கோயில் (திருப்பத்தூர் – சிங்கம்புணரி செல்லும் மார்கத்தில் திருப்பத்தூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.)

பலரும் அறியாத காரையூர் ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் கோயில் அரிய பல புராண வைபவங்களுடன் நன்கு இணைந்ததாகும். திருமகள் திருவழகு பெற வழிபட்ட திருத்தலம். ஸ்ரீதேவியும், பூதேவியும் பூவுலகில் பெருமாளின் பல அவதாரங்களுக்கும் இறைத் துணையாய் ஆகி மணம் புரிவதற்காகத் தவம் ஆற்றும் முன்னரும், தவ நிறைவிலும் இத்தலத்தில்தான் வந்து வழிபடுகின்றனர்.

மிகவும் தொன்மையான தலம் என்பதால் சித்தர்களும், மஹரிஷிகளும் அடிக்கடி வந்து வழிபடும் தலமாகப் பொலிகின்றது. கன்னிப் பெண்களை வருத்தும் அழகில்லையே, படிப்பில்லையே, வேலையில்லையே என்ற குறைகளையும் மற்றும் பல திருமண தோஷங்களை நிவர்த்தி செய்து நல்ல கணவனைப் பெற அருளும் தலம். சரியாக ஜாதகப் பொருத்தம் பார்க்காது, பெரியோர்களைக் கலந்து யோசிக்காது, அவசரப்பட்டுச் செய்த திருமணத்தில், தம்பதியர் பலத்த பிரச்னைகளில் சிக்கி வேதனை அடைகையில், இத்தகைய தம்பதியரின் சொல்லொணாத் துன்பங்களுக்குப் பரிகார வழிகளைத் தந்தருளும் திவ்யமானத் திருமால் தலம்.

இக்கோயிலில் காட்சி தரும் ஸ்ரீவிஷ்வக்ஸேனர் சிறப்பான பலன்களை அளிக்கின்றார். இத்தலத்தில் விஷ்வக்ஸேனர் மிகவும் அபூர்வமாக விமானம், கலசத்துடன் தெற்கு நோக்கி காட்சி அளிப்பது மிகவும் விசேஷமானது.

வாழ்க்கையில் தவறு செய்யாதவர்களே கிடையாது. தவறு செய்பவர்கள், “தவறு செய்தேன்” என்று எந்த உத்தமரிடமாவது மனதார ஒப்புக் கொண்டு, அத்தவறுகளை மீண்டும் செய்யாது இறையருளை வேண்டித் திருந்தி வாழ்வதுடன், தன் தவறுகளால் பாதிப்படைந்தவர்களுக்குத் தக்க நிவாரணமும் அளிப்பவர்களையே உண்மையான (இறைப்) பகுத்தறிவுடைய மனிதர்கள் என்று உத்தமர்கள் உரைக்கின்றனர்.

“சூழ்நிலைச் சந்தர்ப்பங்களாலோ, சிலரும், கட்டாயப்படுத்தியதாலோ, அடித்தோ, மிரட்டியதாலோ, தவறு செய்தேன்!” என்று சொல்வது சரியன்று. இதனால், இறைவன் அளித்துள்ள அறிவைப் பகுத்துணர்ந்து செயலாற்றவில்லை என்று பொருளாகிறது அல்லவா!

எப்போதும் அபயம் தரும் ஸ்ரீவிஷ்வக்ஸேனர்!

மேலும், அடி தாங்காமலோ, வலி தாங்காமலோ உடல் காம உணர்ச்சிகள், வேதனையைப் பொறுக்க முடியாமல் பிறர் தவறு செய்திட, பிறர் படும் கஷ்டங்களைக் கண்டு வேதனை அடைவோர் தாம் தவறு செய்யா விட்டாலும், காருண்யத்தால், “தாமே தவறு செய்ததாகச்” சொல்வோரும் உண்டு. தவறுகளே செய்யாதவர்களும் தவறு செய்ததாகச் சிக்கிக் கொள்வதும் உண்டு. செய்யாத தவறுகளில் இருந்து இத்தகையோரைக் காப்பாற்றிடவும் காரையூர் ஸ்ரீவிஷ்வக்ஸேனர் துணை புரிகின்றார்.

தம் கஷ்டங்களை, குறைகளை எங்கிருந்தும், எவ்விடத்தில் இருந்தும் காரையூர் ஸ்ரீவிஷ்வக்ஸேனரிடம் முறையிட்டு, “ஸ்ரீவிஷ்வக்ஸேன மஹா பிரபோ அபயம் அபயம் அபயம்!” – என்று கூவி அழைத்து இருக்கும் இடத்தில் இருந்தே குரல் கொடுத்துக் கூப்பிட்டால் போதும், தவறு செய்யாதவரைக் காப்பதுடன், பிறர் மீது பழியைச் சார்த்தித் தப்பிக்கின்றவர்களையும் உண்டு இல்லை என்று ஆக்கிக் கண்டித்துத் திருத்தும் உத்தம மூர்த்தியே காரையூர் ஸ்ரீவிஷ்வக்ஸேனர் ஆவார். கலியுகத்தில் ஸ்ரீவிஷ்வக்ஸேனர் வழிபாடு மீண்டும் புத்துணர்ச்சி பெறுதல் வேண்டும். “சேனை முதலியார்” எனந் தீந்தமிழில் போற்றப் பெறுபவர். பெருமாளின் சேனைப் பீடநாயக மூர்த்தி. எத்தகைய உற்றம், சுற்றப் பகைமையையும் களைந்து அருள்பவர்.

“காரையூர் ஸ்ரீவிஷ்க்ஸேனாய நம:” என்று சிந்தையில் பலமாக இருத்தி, நற்காரியத்தில் இறங்கினால், தவறுகளே செய்யாதிருக்க நல்வழி பிறக்கும். வங்கித் துறை, பாதுகாப்புத் துறை போன்ற “risks” மற்றும் பொறுப்புகள் நிறைய உள்ள துறைகளில் இருப்போர் இம்மந்திரத்தை எப்போதும் ஓதியவாறு இருத்தலால் இதன் பலாபலன்களால் தவறுகள் நேராதிருக்க உதவும். பிறருடைய பொருளில், பணத்தில், தயவில் காரியங்களை முடித்துக் கொண்டு, பணம், பொருள், நிலம், வீட்டைத் திருப்பித் தராது நன்றி கெட்டு வாழ்வோரையும் கண்டிக்கும் மூர்த்தி, இத்தகைய நன்றி இல்லா அரக்கர்களின் பகைமை, அவமானம், உதாசீனத்தில் இருந்தும் காத்திடும் மூர்த்தி.

அருள் பொழியும் ஸ்ரீமுனிப் பெருமாள் பீடம்

காரையூர் ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் கொடி மரத்திற்கும், ஸ்ரீகருடாழ்வார் சன்னதிக்கும் இடையே ஓர் அற்புதமான ஸ்ரீமுனிப் பெருமாள் பீடம் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த பீடம். கலியுகத்தில் முழுப் பலன்களை அளிக்கும் ஸ்ரீமுனிப் பெருமாள் பீடம்.

இந்த முனிப் பெருமாள் பீடத்தின் முன்பு பக்திப் பூர்வமாக, ஆழ்ந்த நம்பிக்கையுடன் நின்று, வாழ்க்கையில் ஏற்படுகின்ற இன்ப, துன்பங்களையும், உத்தியோகம், குழந்தைகள் படிப்பு, கன்னிப் பெண்களின் திருமணப் பிராப்தம், உத்தியோகத்தில் இட மாற்றங்கள், நிலபுலன்களை நியாயமான விலைக்கு விற்றுப் பணம் வராத நிலை என்று வீட்டு நடப்புகளை எல்லாம் ஒன்று விடாமல் சொல்லி வேண்டி வருதலால், துரிதமான முறையில் நல்ல பலன்களைப் பெற்றிடலாம், எள் சாதம், புளியோதரை படைத்து வழிபடவும்.

இதோடு மட்டுமல்லாமல் இந்த ஸ்ரீமுனிப் பெருமாள் பீடத்தைத் தரிசனம் செய்த பிறகே, மற்றத் தெய்வங்களைத் தரிசனம் செய்வதால், ஆலய தரிசனத்தின் பூரணப் பலன்களைப் பெற்றிட முடியும். எனவேதான் இந்த ஸ்ரீமுனிப் பெருமாள் பீடத்தைக் “கோகர்ண ஒலிப் பீடம்” என்று உத்தமர்கள் உரைத்துப் போற்றுகின்றனர்.

இந்த ஸ்ரீமுனிப் பெருமாள் பீடத்தில் உரைக்கப் பெறும் பிரார்த்தனைகள் அனைத்துமே ஸ்ரீமணவாளப் பெருமாள் காதில் நன்கு விழுகின்றது என்பது ஆலயத் தலப்புராண ஐதீகம். எனவே, திருமணம் ஆகாதோர் தமக்குத் திருமணம் ஆவதற்கும், திருமணமாகியும் பல பிரச்னைகளால் சேர்ந்து வாழாதோர், சேர்ந்து வாழ்வதற்கும் இப்பீடத்தில் நேர்த்தி வைத்துக் கொண்டு, ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாளின் அருளைப் பெறுதல் வேண்டும்.

காரையூர் ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு வலப்புறத்தில் அருள்மிகு ஸ்ரீரங்கநாயகித் தாயார் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பொதுவாக ஸ்ரீரங்கநாயகித் தாயார் சந்நிதி, தெற்கு நோக்கி அமைந்தால், இத்தகையத் தலங்களில் பெண்களுக்கு ஏற்படும் மார்பு சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வளிக்கும் அனுகிரக சக்திகள் நிறைந்திருக்கும்.

ஸ்ரீரங்கநாயகித் தாயார் சந்நிதி வடக்கு நோக்கி அமைந்திடில், குடும்பப் பெண்களுக்கு ஏற்படும் பண சம்பந்தமான பிரச்னைகளுக்கு நியாயமான முறையில் தீர்வுகளைப் பெற்றுத் தரும் தலமுமாகிறது. ஸ்ரீரங்கநாயகித் தாயார் மேற்கு நோக்கி அமைந்தால், பெண்களுடைய சந்ததிகள், குழந்தைகள் சம்பந்தமான குறைகளை நிவர்த்தி செய்து அருளும் தலமாகும்.

இங்கு காரையூரில் உள்ள ஸ்ரீரங்கநாயகித் தாயார் கிழக்கு நோக்கி உள்ளார். கணவனுக்கு வருகின்ற துன்பங்களை, கணவனின் குணத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய உதவும் தலம். எனவே காரையூர் ஸ்ரீரங்கநாயகித் தாயார் இல்லறப் பெண்களுக்கெனக் காருண்யமாக அருள வந்துள்ள தாயார் தேவியாவாள். என்னே, காரையூர் தாயார் அருளும் தயை! இவ்வரிய தெய்வீக வாய்ப்பை வாழ்வில் நன்கு பயன்படுத்திக் கொள்க! ஆகவே தாய்மார்களே! காரையூர் ஸ்ரீரங்கநாயகித் தாயாரை வேண்டி நீங்கள் அனைத்து நலன்களையும் பெறுவீர்களாக!

சாம்பிராணி தூப வழிபாட்டுத் தலம்!

அன்றாட வாழ்க்கையில் சேரும் கண் திருஷ்டிகளைப் போக்குவதில் சாம்பிராணித் தூபம் பெரும் பங்கு வகிக்கின்றது என்று நாமறிந்தாலும் இந்த எளிய ஆன்மீக சாதனத்தை தினந்தோறும் பயன்படுத்தாமையால் தான் தோஷங்கள் திட்டுத் திட்டாய்ச் சேர்ந்து விடுகின்றன.

இந்த சாம்பிராணி தூபத்தில் சிறிது பச்சரிசி மாவு, ஒரு சிட்டிகை வேப்பிலைப் பொடி, ஒரு சிட்டிகை செம்பருத்திப் பொடி, ஒரு சிட்டிகை மல்லிகைப்பூத் தூள், ரோஜாத் தூள், இவற்றைக் கலந்து சாம்பிராணி தூபத்தில் சிறிது சிறிதாக இட்டு தூபம் இட்டு வர, கண்ணேறு, குத்து வாங்கு, கால்முடக்கி, கை உளைச்சல் போன்ற திருஷ்டித் தோஷங்கள் விலகும் என்பது சான்றோர் வாக்கு. ஆகவே, இத்தகைய வலியத் திருஷ்டித் தோஷங்களை விலக்கி நன்மைகளை நல்கும் காரையூர் ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாளுக்கு, சாம்பிராணி தூபம் போட்டு அந்த தூப சாம்பலையே முனி பெருமாள் சன்னதிப் பிரசாதமாக வழங்குகிறார்கள்.

ஸ்ரீநடராஜப் பெருமான் திருக்கோளக்குடி

ஆகவே கண் திருஷ்டித் தோஷங்கள் தீர ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் கோயில் சாம்பிராணி தூப சாம்பல் விபூதி பிரசாதம் பெற்றுத் தினமும் இட்டுக் கொண்டு இல்லத்திலும், கடையிலும் சாம்பிராணித் தூபம் இட்டு வருவதால் வியாபாரத்தில் வருகின்ற துன்பங்கள் விலகும்.

கா+அரையர்+ஊர் (கா= பாக்கள் நிறைந்த சோலை) என்பதாக, திருமாலைப் போற்றும் திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை அபிநயம் பிடித்துத் திவ்யாமிர்தமாகப் பாடும் “அரையர் சேவை” என்ற அற்புதமான இறைப் பணியை ஆற்றுபவர்களாகிய “அரையர்கள்” நிறைந்த ஊராகப் பண்டையக் காலத்தில் பொலிந்தமையால் காரையூர் எனவும் ஆயிற்று. இவர்கள் உத்தம விஷ்ணு பக்தியைப் பூண்டிருப்பர். முற்காலத்தில் அரையர்கள் பலரும் ஒன்று கூடி வாழ்ந்து, அரையர் சேவை செழித்துச் செறிந்த திருமால் தலமே காரையூர் ஆகும். அரையர் சேவை ஸ்ரீரங்கநாதருக்கு மிகவும் ப்ரீதியானது. இங்கு காரையூர்த் திருத்தலத்தில் அரையர் சேவையை உவப்புடன் கண்டு, கேட்டு, மகிழவே, யோக சயனத்தில் இருந்து மீண்டு, மிகவும் அபூர்வமாக நின்ற கோல மூல மூர்த்தியாக ஸ்ரீரங்கநாதர் காரையூரில் அருள்கின்றார். இங்கு “அரையர் சேவையைப்” பிரார்த்தனையாக ஸ்ரீமுனிப் பெருமாள் பீடத்தில் நிகழ்த்தி, ஸ்ரீரங்கநாதரை வழிபட்டு வருவோர்க்கு ஆண், பெண் இருவகைச் சந்ததிகளும் தழைக்க, ஆதித்யப் பித்ருக்களின் அனுகிரகம் நிறையும்.

வரும் விஷ்ணுபதிப் புண்யக் காலமானது, கார்த்திகை மாதப் பிறப்பன்று அமைகின்றது. அதாவது 16.11.2005 புதன் கிழமையன்று, காலை 10.32 மணிக்கு சூரிய மூர்த்தி விருச்சிக ராசியில் பிரவேசிப்பதுடன் கார்த்திகை மாதம் தொடங்குகிறது அல்லவா! எனவே, வழக்கம் போல முதல் நாளாகிய 15.10.2005 இரவு 1.30 மணி முதல் 16.11.2005 காலை 12 மணி வரை விஷ்ணுபதிக்கான அபிஷேக, ஆராதனைகளையும் கீழ்க்கண்ட சகலவிதமான பூஜைகளுடன் ஆற்றிடவும்.

இந்நாளில் பரம்பொருளாம் காரையூர் பெருமாள் மூர்த்திகளுக்கு, 64 விதமான அபிஷேக ஆராதனைகள், சிறப்பான வேள்வி, ஹோம, யாக வழிபாடுகள், தேன் கலந்த சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண் பொங்கல், திண்டு தோசை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, புடலங்காய் போன்ற உணவு வகைகள், மிளகு வடை, கற்கண்டுப் பால் பாயசம், பிரண்டை மூலிகை சிறிது கலந்த சட்னியுடன் பஜ்ஜி போன்றவை படைத்து அன்னதானம் ஆற்றுதல்,

ஸ்ரீமுருகப் பெருமான் தேனிமலை

இலையில் தட்டி வைத்துச் சமைப்பதான மிளகுத் தட்டை (மிளகு வடை), வடை, சப்பாத்தி, போளி போன்றவை மிகவும் விசேஷமான பலன்களைத் தருபவையாம். ஜாதி, சமய பேதமின்றி பொது ஜன சமஷ்டித் தர்ப்பணப் பூஜைகளைக் கடைபிடித்தல், தர்ப்பணம் பற்றி அறியாத பாமரர்களுக்கும் தர்ப்பணப் பூஜையைச் செய்ய உதவுதல் ஏனைய விஷ்ணு ஆராதனைகளையும் உளமாற ஆற்றி, விஷ்ணுபதிப் புண்ய கால உற்சவம் நடைபெறுதல் வேண்டும். நடப்பு விஷ்ணுபதிப் புண்ய காலம் சுந்தர ஸ்ரீஹரி பாவன விஷ்ணுபதிப் புண்யக் காலமாகும்.

விஷ்ணுபதி நாளில், ஏழைகளுக்கு தானியங்கள், காய்கறிகளோடு, பாத்திரங்கள், மண்பாண்டங்கள், அடுப்புகளைத் தானமாக அளித்தல் நன்று. மணாளன், மணவாளன் என்றாலே சுந்தரமான திவ்யாமிர்தப் புருஷராகத் தோன்றும் பெருமாளைக் குறிப்பதாகும். இதிலும், அழகிய மணவாளன் எனில் பிரபஞ்சத்திலேயே அனைத்துத் திருமால் வடிவுகளிலும் எழும் பரமானந்தமே, மணவாளப் பெருமாளாக முகிழ்த்து வந்த தலமே காரையூர் என்ற சிறப்பைப் பெறுகின்றது.

கார் எனப்படும் வாருண மேகம், நீர் கசியும் மேக கர்பச் செல்களைத் தாங்கி, கார் உறையும் ஊர் என்பதாகக் காரையூர் ஆயிற்று. வருண பகவான் மானுட வடிவில் பெருமாளைப் பன்னெடுங்காலமாகச் சேவித்து ஆனந்தித்தத் தலம்.

வருண மூர்த்தியும், இந்திர மூர்த்தியும் மழை மேகங்களைச் சேமித்து வைக்கும் வருணபூதி வளாகத் தலம் என்ற பொருளும் காரையூரின் சிறப்பியல்பாகும். பல்வகை மேகங்கள் திரண்டு வரும் தலம். மேகங்களில் பூவுலகிற்கென 1008 வகை மேகங்கள் உண்டு. இவை அடைக்கலம் பெறும் வான்வளாகத் தலமே காரையூர் ஆகும். இங்கிருந்து அற்புதமான மேக வடிவுகளைக் காணலாம். காளிதாச மஹாகவி வழிபட்ட தலம்.

கூடல் மாநகரம் எனப்படும் மதுரைக்குக் கூடல் மேகங்களை வருண மூர்த்தி இத்தலத்தில் இருந்துதாம் எடுத்துச் செல்கிறார். கள்ளழகருக்கும் மூத்தத் தலம் என்பதால், கள்ளழகர் சூக்குமமாய்த் தேவஉலா கொண்டு தேவானுபூதிகளை அருளும் தலமும் ஆகிறது.

தற்போது உலகைக் கலக்கி வரும் சூறாவளி, சுட்ரீனா, சுநாமீ, ரீடா போன்ற கடல்ம் சீற்றங்களுக்கு ஆன்மீக ரீதியாகத் தக்க நிவாரணம் பெற, இங்கு ஸ்ரீமுனிப் பெருமாள் பீடத்தில் 108 விதமான மூலிகா, தைல, அன்னாபிஷேகங்களுடன், ஆயுள்காரக சக்தி நாளான சனிக்கிழமை தோறும் பொதுஜனநல வழிபாடுகளை ஆற்றி வருதல் வேண்டும்.

மோகினி அவதாரம் பூண்டு அமிர்தத்தைப் பகிர்ந்து அளித்த பின், அமிர்தத்தின் நறுமணத்தோடு, திவ்யாமிர்தத்தோடு, திவ்யாமிர்தப் பிரகாசத்தோடு திவ்யாமிர்தப் புருஷராக, அழகிய மணவாளப் பெருமாள் எழுந்தருளும் தலம். எனவே, இங்கு தேனாபிஷேகம் மிகவும் விசேஷமானதாகும்.

“காரைத் தேனோ (இலுப்பை மரத் தேன்) பாறைத் தேனோ!” என்று சொல்வழக்கிற்கு ஏற்ப, அருகில் உள்ள தேனி மலை, திருக்கோளக்குடித் தலங்களில் உள்ள மலைப்பாறைத் தேனால் இங்கு அபிஷேகம் செய்வது சிறப்புடையதாகும். இங்கு பாறைத் தேனின் திவ்யாமிர்த சக்திகள் பெருகிடும். நல்வர வளமும் கிட்டும் என்று சிவயோக மாமுனிகளும் போற்றுகின்றனர். எத்தகைய தேனினும் இனிய திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை இங்கு குறைந்தது எட்டு மணி நேரமேனும் குறிப்பாக அரையர் சேவையுடன் பிணைத்து ஓதி வழிபட்டு வருதலால், தம்பதிகள் இடையே உள்ள எத்தகைய மன வேறுபாடுகளையும் களைந்து சுமூகம் அடைந்திட நல்வழி பிறக்கும்.

ஏழ்மை நிலையில் உள்ள திவ்ய்பிரபந்தப் பாசுரம் பாடும் பாடகர்களை, அரையர் பிரான்களை, இத்தலத்திற்கு வரவழைத்து, தொடர்ந்து 12 மணி நேரத்திற்கு மேல் திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை ஓத வைத்தல் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பெரும் நன்மைகளைத் தருவதாகும். இங்கு பெய்யும் மழைநீர், பிற இடங்களில் பெய்யும் மழை நீரை விட மிகுந்த மேன்மையும், அமிர்தமான இனிமையையும் கொண்டதாகும்.

இதனால்தான் மதுர கவியாழ்வார் (மதுரம் = தேன்) இத்தலத்தைச் சேவித்தவாறுதான் நம்மாழ்வாரை தரிசிக்கச் சென்றார். சிதம்பரம் தலத்தில் இன்னமும் எண்ணற்றத் தேவாரப் பாடல்கள் மறைந்திருப்பது போல, நாமறியா எண்ணற்றத் திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள் உண்டு. வருங்காலத்தில் சித்தர்களின் ஆணையாகத் தக்க சற்குருமார்கள் மூலமாக, இத்தலம் மூலமாகவே ஏனைய பல திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள் தக்கத் தருணத்தில் வெளிவரும்.

தேனில் தோய்த்த பலா, தேன் ஊறிய அத்திப் பழம், தேன் ஊற்றிய சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை புதன் கிழமை தோறும் இத்தலத்தில் படைத்துத் தானமாக அளித்துவர, திருமணமாகிய சில மாதங்களிலேயே மண்டிக்கிடக்கும் கடுமையான சச்சரவுகள் தீர வழி பிறக்கும்.

பலத்த மனவேறுபாடுகளுடன் வாழும் கணவன், மனைவி தம்பதிகள் இங்கு புத்தாடைகளை அணிந்து வழிபட்டு, ஒரு கல்யாணத்திற்குத் தேவையான அளவு புடவை, ரவிக்கை, வேட்டி, துண்டு, சட்டை போன்ற முழுமையான ஆடை வகைகளை இங்குத் தானமாக அளித்து வழிபட வேண்டும். பிறகு ஊர் திரும்பியவுடன், தாம் அணிந்து வழிபட்ட புத்தாடைகளையும் தம் குலதெய்வக் கோயில் பகுதியில் தானமாக அளித்திடல் வேண்டும்.

திருமணம் ஆன ஓரிரண்டு மாதங்களுக்குள் ஏற்பட்டுள்ள பலத்த மன வேறுபாடுகள் களையப் பெறுதற்கு, மேற்கண்ட வஸ்திரதான வழிபாடு மிகவும் துணை புரியும். தம்பதியருடன், பெற்றோர்களும் இங்கு வந்து புதன், சனி, திருவோணம், ரோஹிணி நாட்களில் வழிபடுதல் நன்று. மேலும் காதல் திருமணம், பெற்றோர்களின் சம்மதமில்லாமல் நிகழ்ந்த திருமணம், பிள்ளை அல்லது பெண்ணுக்கு விருப்பமின்றி நிகழ்ந்த திருமணம் போன்றவாறாக அமைந்தத் திருமண வாழ்க்கையில் எழும் பலத்த பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வுகளைத் தரும் தலம்.

அன்பர்கள் தங்கள் திருமண நாளை இங்கு காரையூர் ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் ஆலயத்தில் கொண்டாடி வருதல் குடும்பத்தில் நல்ல மனஅமைதியைப் பெற்றுத் தரும்.

இலுப்பைத் தல விருட்ச மஹிமை!

தல விருட்சங்களில் அரசு, ஆல், வேம்பு போன்று இன்னும் பல விருட்சங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொரு விருட்சத்திற்கும் விதவிதமான பலன்கள் உண்டு. இலுப்பை எண்ணெய் அளப்பரியதும், தனிமனிதனால் தாங்க இயலாத அளவிலுமான புண்ய சக்திகளை அபரிமிதமான பலாபன்களைத் தர வல்லது ஆகும். எனவே பலருக்கும் இது சென்றடையும் வண்ணம் ஆலயங்களில் இலுப்பை எண்ணெய் விளக்கேற்றுதலே சிறப்புடையது. இல்லத்தில் ஏற்றுவதானால் பசுநெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைச் சேர்த்து ஏற்றுதல் வேண்டும்.

கோயில் நடை சார்த்தி இருக்கும் போது, தலவிருட்சங்களில் தரிசனப் பலன்கள் பலவும் நிறைவதால், தலவிருட்சத்தையும், ஆலயத்தையும் சேர்ந்து வலம் வந்திடலாம்., மேலும் தல விருட்சங்களை வைத்து, மக்கள் தங்களுடைய குறைகளைத் தீர்த்து, நிறைவு பெறுகின்ற வகையில் சித்தர்களும், மஹரிஷிகளும் தலவிருட்சங்களாகத் தம் தபோ பலத்தால் ஆகின்றனர்.

“சேஷதானப்பர்” என்ற மஹரிஷித் தம்பதிகள் ஸ்ரீமஹாவிஷ்ணுவே தம் குடும்பத்தில் ஸ்ரீராமர் போல் குழந்தையாய் வளர்தல் வேண்டும் என விரும்பினர். பரம்பொருளே குழந்தையாக வருவதெனில் ஒரு சிறு தவறும் இல்லா வகையில் மாபெருந் தவம் புரிதல் வேண்டுமன்றோ! மஹரிஷித் தம்பதிகள் பல யுகங்கள் தவம் புரிந்து, தவம் நன்கு கனியும் நிலையில் அவர்களுக்கு பலத்த சோதனைகளை இறைவன் ஏற்படுத்திட, அவற்றை எல்லாம் தம் புனிதமான பக்தியினால் அவர்கள் வென்றனர்.

எனினும் ஒருநாள், இலுப்பை மரத்தில் படர்ந்திருந்த மல்லிகைக் கொடியில் இருந்து புஷ்பத்தைப் பறிக்கையில் ஒரே ஒரு இலுப்பை இலையைக் காரணம் இல்லாது பறித்த காரணத்திற்காக, அவர்களுக்கு மறுபிறவி வந்தமைந்து, மஹரிஷியும் வானாசூரன் எனும் அரக்கராகப் பிறக்க வேண்டி சில காலம் வாழ வேண்டியதாயிற்று. மஹரிஷித் தம்பதிகள் பதறிச் சாபவிமோசனம் கேட்டிட, “இலுப்பையாய் அமர்ந்து இனிய திருமால் அதிலுறைய அனைத்தும் சுபமாகும்” எனச் சாபவிமோசனமும் பெற்றார். இதில் பூலோக ஜீவன்களாகிய நாம் அறிய வேண்டிய பாடம் யாதோ?

பிறருக்கு நல்வழி காட்ட வேண்டிய மஹரிஷிகள் சிறு தவறிழைத்தாலும் கடுந் தண்டனைகளை அனுபவித்தாக வேண்டும். இது நாட்டுத் தலைவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் ஒரு பாடமாகும். எவ்வளவு நல்லவராக வாழ்ந்தாலும் ஒரு சிறு தீய எண்ணமும், ஒரு தீயரின் கூடா நட்பும் அனைத்து நற்குணங்களையும் மாய்த்து விடும் என்ற பாடத்தைப் பிற ஜீவன்களுக்குப் புகட்டவே, சேஷதானப்பர் மஹரிஷியின் மூலமாக இந்த இறைலீலை நிகழ்ந்தது, மஹரிஷி குணங்களுடன் அரக்க வடிவில் வாழ்ந்தால், அசுர குணங்கள் தாமே தலை தூக்கும்! ஆம், மஹரிஷிகளும் ஜீவன்களை கடைத்தேற்ற இறைவன் ஆட்டுவித்தபடி ஆடிப் பூவுலகில் தோன்றுகின்றனர்.

மஹரிஷிக்குரிய தபோபலன்கள் நிறைந்திருந்தும், சேஷதானப்ப மஹரிஷி செய்த சிறு தவறினால், இதன் விளைவாக, மறுபிறவியில் சற்றே அசுர குணம் தொக்கிடவே, வானாசூரன் என்ற அரக்கனாகிக் கடுமையாகத் தவம் இருந்தார். எதற்காக? வானத்தில் இருக்கின்ற அனைத்து லோகங்களையும் தான் ஆள வேண்டும் என்ற விருப்பத்துடன்! இதுவும் மாயாலீலை தாமே!

திருமாலைப் பிள்ளையாக வளர்க்க விழைந்த தவம். ஒரு சிறு தவறால், எல்லையையே அறிய முடியாத வானத்தை தான் ஆள வேண்டும் என்ற பேராசையாக வந்திட, வானாசூரன் கடுந்தவம் இயற்றினார். வானாசூரனின் தவத்தை மெச்சி, பிரம்மதேவன் காட்சித் தந்தார். பிரம்மனைக் கண்டவுடன், பேராசை மாயையால், சிவன் என்று நினைத்துக் கொண்டு, “சிவபெருமானே! வானத்தை ஆளுகின்ற வரம் வேண்டும்!” என்று வரம் கேட்டார். பிரம்மாவும், இதில் பதிந்திருந்த – சேஷதானப்ப மஹரிஷியின் மூலம் பூவுலகிற்கு வரவிருந்த திருமாலின் அவதார லீலைகளை – எண்ணி மகிழ்ந்தார்.

“நிமிடத்துக்கு நிமிடம் மாறி வரும் வானுலக லோகங்களில் இது மிகமிகக் கடினமாயிற்றே! எனினும், இலுப்பை மரமாக மாறி, வானாசூரா! நீ தவமிருந்து வா! அம்மரத்து வித்துக்களை எடுத்து இலுப்பை எண்ணெயைக் காய்ச்சி, மக்கள் இறைவனுக்குத் தீபம் ஏற்றி வருவர். அவர்களுடைய தீப பூஜைகளால், உன் மர நிழலில், அழகிய மணவாளப் பெருமாள் குடி கொள்வார். பின்னர் அவர் நற்கோயில் கொண்டு, தூப தீப சக்திகளால் வானத்தைத் தூய்மையாய் ஆக்கி, மக்கள் நலம் பெறும்படி வர மழையும், வள வரமும் தந்தருள்வார். இதன் மூலம் பெருமாளும், சிவபெருமானும் இருவருமே மகிழ்ந்து நீ கேட்கும் நல்வரங்களை அளிப்பர்! இவ்வரிய அனுபூதி நிகழ வல்ல தலமே காரையூர்த் திருத்தலமாகும். பெருமாள் குடி கொள்ளும் வண்ணம், ஆங்கே இலுப்பை மரமாய்த் தவம் புரிக!” என்றார்.

மேலும் பிரம்ம மூர்த்தி வானாசூரனின் தலையில் தம் திருக்கரங்களை வைத்திட்டார். இதனால் அம் மஹரிஷிக்கு பிரம்ம ஞானம் பிறந்து, தம்முடைய மஹரிஷிக் கோலமும் நினைவுக்கு வந்தது. தமக்குத் திருமால் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என்று கேட்டுத் தவம் புரிந்ததும் விளங்கியது.

ஆகவே வானாசூரனாக இருந்த உருமாறி, செய்த சிறு தவறுக்கும் பிராயச்சித்தம் கிட்டி, மஹரிஷித் தம்பதிகள் இலுப்பை மரமாய் நின்று, உத்தமச் சித்தர்களின், மஹரிஷிகளின் நல்வரங்களைப் பெற்றிட, பூர்வ ஜன்மத் தவமும் நன்கு கனிந்தது.

சேஷதானப்பரின் பூர்வ ஜன்மத் தவம் யாதோ? நினைவிருக்கிறதா? திருமாலைப் பிள்ளையாய்ப் பெற்று வளர்த்தல்தானே! பெருமாளும் அழகிய மணவாளராய் இலுப்பைப் பொந்தில், இலுப்பையின் வயிற்றில் தோன்றிட மஹரிஷி வேண்டிய நல்வரமும் கனிந்தது.

எனவே, காரையூர் இலுப்பை மரம் பெருமாள் தோற்றத்துக்கும் முந்தையதாகும். சேஷதானப்ப மஹரிஷியின் இலுப்பை விருட்சப் பிறையில் பெருமாள் தோன்றுகின்றார் என்ற உடனேயே, இலுப்பை மரத்தடியில் ஆதிசேஷன் வந்தமர்ந்து நிழல் காத்தார். இதனால்தான் இன்றும் இலுப்பை மரமானது 5 தலை நாகம் போல, கோயிலின் மேல் படர்ந்த கோலம் காணப் பெறுகிறது. பட்சி ராஜராக கருடாழ்வாரும் வந்து அமர்ந்திட இங்கு தினமுமே பட்சிராஜ பூஜையும் செழித்தோங்கியது.

எத்தகைய தவறுகளையும் செய்த மானுடர்கள் தம் தவறை ஸ்ரீமுனிப் பெருமாளிடம் உரைத்து, இனி அதே தவறுகளை மீண்டும் செய்யாது, உண்மையிலேயே திருந்தி வாழ்தல், தம் தவறுகளால் பாதிப்படைந்தோர்க்குத் தக்க நிவாரணங்களை அளித்தல் இவற்றோடு, தக்க பரிகாரங்களையும் செய்து வருதல் வேண்டும். இதனால், இப்பிறவியிலேயே அவற்றைத் தக்க முறையில் தீர்த்து அருளும் திவ்ய மூர்த்தி! எத்தகைய தீய வழக்கங்களையும் களைவதற்கு ஸ்ரீமுனிப் பெருமாள் பீடப் பூஜை நன்கு உதவும்.

சேஷதானப்ப மஹரிஷி, வானாசூரனாகி, மீண்டும் சேஷதானப்ப மஹரிஷியாகி, திருமாலைப் பெற்று நமக்குத் தந்து இன்றும் தல விருட்சமாய், இலுப்பை மரமாய் நின்று, மக்கள் வேண்டும் வரங்களை அளித்துக் கொண்டிருக்கிறார். இதனை வலம் வந்து வணங்குதலால் வெளியில் சொல்ல முடியாதபடியான குற்றங்களை, பாவங்களைச் செய்தோர் நன்கு மீள உதவும் தலம்.

ஸ்ரீமுனிப் பெருமாளுக்கும், இத்தல விருட்சத்திற்கு மஞ்சள் அரைத்துப் பூசி, சந்தனம், குங்குமம் இட்டு, பட்டு ஆடைகள் சாற்றி வழிபட்டிடில், கணவன், மனைவி செய்யும் தவறுகளுக்குத் தக்கப் பரிகார நிவர்த்திகள் கிட்டும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். வியாபார விருத்திக்கும் உதவும்.

குறிப்பாக கூட்டு வியாபாரத்தில், வருமானம் வரும் பொழுது மட்டும், சிரித்துப் பகிர்ந்துக் கொண்ட கூட்டாளிகள், நஷ்டம் வரும் பொழுது விலகி ஓடி தப்பிக்க முயற்சி செய்கின்றவர்களும் உண்டு. இவர்களை அடையாளம் காணவும், இவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவும். இவர்கள் திருந்தவும், இவர்கள் தரவேண்டிய தொகையைப் பெறவும் ஸ்ரீமுனிப் பெருமாள் வழிபாடு உதவும்.

இந்தத் தல விருட்சத்திற்குப் பல்வகை அபிஷேகங்கள் செய்து சந்தனம், குங்குமம் இட்டு ஆடை சாற்றி வழிபட்டு வந்திடில், கூட்டாளிகள் கஷ்டத்திலும் தோள் கொடுத்து வியாபாரம் விருத்தி அடைய வழி பிறக்கும்.

காரையூர் ஸ்ரீரங்கநாதப் பெருமாள்!

ஸ்ரீரங்கநாதர் சயனக் கோலமின்றி, மிகவும் அபூர்வமாக நின்ற கோலத்தில் மூலவராக அருளும் தலமே காரையூர் ஆகும். “ஒன்றே பரம்பொருள்” எனும் போது இதில் ஆக்கல், காத்தல், அழித்தல் (மறைத்தல்) ஆகிய மூன்றும் ஒரே இறைத் தன்மையிலான குணங்களும் அடங்குகிறது  அல்லவா! இதில் சிவ, விஷ்ணு, பிரம்ம மூர்த்தி அம்சங்கள் ஒன்றாகின்றன.

இதே போலவே, பிற மூர்த்தி பேதமின்றி, திருமாலே பரம்பொருள் என்று பக்திப் பூர்வமாகக் கொள்வோர்க்கு, ஆக்கல், காத்தல், அழித்தல் (மறைத்தல்) மூன்றுமே நாராயணப் பரம்பொருளின் பால் செறிகின்றது. இவ்வகையில் ரங்கநாதப் பெருமாளின் கிடந்த கோலம் காத்தல் தொழிலையும், நின்ற கோலம் ஆக்கல் தொழிலையும், அமர்ந்த கோலம் அழித்தல் (மறைத்தல்) தொழிலையும் உணர்விக்கும். இறைவன் இன்ப, துன்ப நிலைகளைக் கடந்த, உத்தம நிலைகளை அளிப்பவர். எனினும் தன் மீது அடியார்கள் கொள்ளும் பரிபூரணப் புனிதம் கொண்ட அன்பிற்கு (பக்திக்கு) ஆட்பட்டு, பெருமாளே அடியார்கள் வேண்டும் வடிவுகளில் பல அவதாரக் கோலங்களைக் கொள்கின்றார்.

இவ்வகையில் காரையூர் ஸ்ரீரங்கநாதப் பெருமாள், ஏனைய ஆலயங்களிலும் பூண்டிருக்கும் சயனக் கோலங்களின் திரட்சியாய், ஆக்கல் குணப்பாடுகளுடனும் சேவை சாதிக்கின்றார். பல சயனக் கோல மூர்த்திகளுக்கும் மூத்த மூர்த்தி!

மேலும் அரையர் சேவை ஆனந்தமாகப் பொலிந்த திருமால் சோலைப் பகுதியாகப் பண்டையக் காலத்தில் காரையூர் பொலிந்தமையால், அடியார்களின் பக்தியைக் கண்ணாரக் கண்டு ஆனந்திக்கவும், நல்வரங்களைப் பொழியவும் நின்ற கோலம் பூண்டு அதியற்புதமாகக் காட்சி தருகின்றார். எனவே காரையூர் நின்ற கோல ரங்கநாதர் தரிசனம் ஆக்கப்பூர்வமான வாழ்க்கையைத் தருவதாகும்.

வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், கடன் பிரச்னைகள், திருமண வாழ்வில் பலத்த மன வேறுபாடுகள், உற்றம், சுற்றத்துப் பகையால் பீதியுடன் வாழ்தல், குடும்பத்தில் தற்கொலை, கொலை, விபத்தால் மரணம் போன்ற மாரக தோஷங்கள் சூழ்தல், புத்தி தடுமாறி, அறிவு கெட்டு, வாழ்க்கையில் நெறி கெட்டு வாழ்ந்தமையால், உற்றம், சுற்றம், குடும்பத்தால் புறக்கணிக்கப்படுதல், கல்வியில் மந்தம், வேலை கிட்டாமையால் பெற்றோர்கள், உறவினர்களால் உதாசீனப்படுத்தப்படுதல், தற்கொலை உணர்ச்சிகள் ஏற்படுதல்,

-போன்றவற்றால் வாழ்க்கையில் பெரிதும் பாதிப்புக்கு ஆளாவோர், இங்கு காரையூரில் திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை ஓதியும், பிறரையும் ஓத வைத்து, அரையர் சேவைகளை ஆற்றியும், இங்கு ஸ்ரீமுனிப்பெருமாள் பீடத்தில் முதலில் தம்மை ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஒப்படைத்துப் பிறகு ஸ்ரீரங்கநாதரை வழிபடுவதால் வாழ்வில் நல்ல மாற்றங்கள் கிட்டும்.

மன்னிப்பும் தண்டனையும்

வாழ்வில் செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்து வந்தால் மன்னிப்பு ஒருபோதும் கிட்டாது, தெரிந்தே செய்த தவறுகளுக்கான விளைவுகளைத் தண்டனையாகக் கண்டிப்பாக அனுபவித்தே ஆக வேண்டும்.

தண்டிப்பது மனிதன் செயல், மன்னிப்பது கடவுள் செயல் என்று பலரும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வாக்கியத்தை வைத்துக் கொண்டு, வாழ்க்கையில் பலரும் தினமுமே நிறையத் தவறுகளை வரம்பற்ற முறையில் செய்து கொண்டே வருகின்றனர். மேலும், தினமும் மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்தே வாழ்க்கையை நடத்தினாலும், கடவுள், இவர்களை மன்னித்துக் கொண்டே இருப்பார் என்றே இவர்கள் திடமாக நம்புகின்றனர்.

ஆனால் தெரிந்தே செய்யும் தவறுகளுக்கு மன்னிப்போ, பிராயச்சித்தமோ எங்கும் எவ்விடத்திலும் ஒரு போதும் கிடையவே கிடையாது. தெரிந்தே செய்யும் தவறுகளின் விளைவுகளை அவரவர் அனுபவித்தே கழித்தாக வேண்டும்.

ஒவ்வொருவரும் அவரவருடைய கர்மச் செயலுக்கு ஏற்பவே வினைகளை, விளைவுகளை இன்ப துன்பமாக, தண்டனையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே சத்தியமானதாகும்.

உண்மை இப்படி இருக்கும்போது, கடவுள் தண்டிப்பதோ, கடவுளின் மன்னிப்பு என்பதோ எவ்வாறு பொருள்படும்? நாம் செய்த செயலுக்கான விளைவுகளை நாமே அனுபவித்துக் கழிக்க வேண்டும் என்பதே சத்தியமான, தர்மமான நிலைப்பாடு, இது, ஒவ்வொருவருடைய மனதிலும் ஆழப்பதிந்தால்தான், குருவளையோ, திருவருளையோ அடைவதற்கான ஆரம்ப, மூலாதார நல்வழிகள் தென்படும்.

ஒரு சிறு குண்டூசியை ஆபீசிலிருந்து எடுத்து வந்து பயன்படுத்தினால் கூடப் பிறருக்கு உரித்தான இந்த குண்டூசியைத் தவறாகப் பயன்படுத்திய வினை விளைவுகள் தீரும் வரை, குண்டூசியின் குணம் போல, மனதை அவ்வப்போது குத்தும் வண்ணம் சம்பவங்கள் வாழ்வில் நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஒரே ஒரு குண்டூசியால் வரும் வல்வினைகளைச் கழிக்கவே நிறையப் பரிகாரங்களைச் செய்தாக வேண்டும் என ஒவ்வொரு மனிதனும் இனியேனும் அறிவாராக!

இத்தகையப் பரிகார வழிகளை ஓரளவேனும் அறிவதற்காகவே, வசதியற்ற பள்ளிகளுக்கு, ஏழைப் பிள்ளைகளுக்குத் தேவையான பென்சில், நோட்டுப் புத்தகம், குண்டூசிகளை அவ்வப்போது தானமாக அளித்து வருதல் வேண்டும் எனில், என்றுதான் முழுமையான வகையில் பரிகார வழிகளைப் பெறுவது? வாழ்வில் எப்போதுதான், எவ்வகையில்தான் இந்தக் குண்டூசியால் வந்த கர்ம வினைகள் பரிபூரணமாகத் தீரும்? நன்கு ஆத்ம விசாரம் செய்து பார்க்கவும்.

முதலில் இத்தகைய “குண்டூசித்தனமான” தவறுகளைச் செய்வதை நிறுத்தினால்தான், இவற்றில் இருந்து மீள்வதற்கான பரிகார வழிகளே ஓரளவு கிட்டலாகும் என்பதையும் அறிந்து கொள்க! தவறுகளைச் செய்து கொண்டே மறுபுறம் பரிகாரங்களையும் செய்து வந்தால், பரிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்திய சாபமும் சேர்ந்து விடும். இதே போலவே ஆபீசில் ஓசியில் போன் கால்கள் செய்தல், ஆபீசுக்கு உரிய சாதனங்கள், வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், கூடுதலாகப் பில்லைப் போட்டு பணம் வாங்குதல், தவறான காரணங்களைச் சொல்லிக் கடன் வசதி பெறுதல் போன்றவை யாவும், 25, 30 வருட அலுலக வாழ்வில் மலை போலப் பெருகி விடுமே!

இவ்வினைகளின் ஒரு சில விளைவுகளாக, பென்ஷன், கிராஜுடி, பிராவிடெண்ட் பண்ட் என இறுதியில் வரும்போது இவை தாமதமாகும், அல்லது தொகை குறைந்து வரும் அல்லது தங்களுடைய மொத்த வருமானத்தைத் தனியார் வட்டிக் கடை, கம்பெனிகளில் டெபாசிட் செய்து ஏமாந்து விடுவதும் உண்டு அல்லது தேவையான போது இவை வந்து சேராது என்று பலவகைகளில் வந்து வருத்தும். வேறு பலவிதங்களிலும், இவை தொடர்ந்து வந்து துன்பங்களைத் தரும். ஆகையால், முதிய வயதில் இத்தகைய அலுவலகக் கர்மங்களை மலை போலப் பெருக்கிக் கொண்டு சுமக்காது, அவ்வப்போது தக்க தான தர்மங்கள் செய்து இவற்றைக் கழித்து வருதலே ஓரளவேனும் பரிகார வழிகளைக் காட்டும்.

இதிலும் இத்தகையத் தான, தர்மங்களும் ஓரளவு பரிகார வழிகளையே பெற்றுத் தருமே தவிர, இதுவே முழுமையாகக் கர்ம வினையைக் கழிப்பதாகி விடாது.

எனவே, கர்ம வினைக் கழிப்பு என்பது எளிதல்ல என்பதால், தினமும் கூடுதலாக எதிலும் கர்ம வினைகளைச் சேர்த்துக் கொள்ளாது வாழ்வில் நிதமுமே மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். சுக்ர வார வழிபாடாகிய வெள்ளிக் கிழமையானது எத்தகைய தீயவர்களுக்கும் ஒரு துளியேனும் புனிதமான எண்ணங்களைத் தருவிக்கும்.

எனவே வெள்ளிக்கிழமை தோறும் பூக்கள், வெள்ளி மெட்டி, மாங்கல்யம் போன்ற மங்களகரமான பொருட்களை ஒரு சிறிதேனும் தானமளித்து, வெள்ளீஸ்வரர் ஆலயம், மதுரையம்பதி, வடமதுரை, சுக்ரவார அம்மன் தலங்களிலும், சிலா வடிவ நடராஜரையும் (கும்பகோணம் – திருவையாறு அருகே வடகுரங்காடுதுறை) வழிபட்டு வந்தால், வாழ்வில் நல்ல மாற்றங்கள் விடிவெள்ளியாய் மலரும்.

சாப்பிடும்போது பிறருடைய இலையைப் பார்ப்பதும் தவறே!

சாப்பிடும்போது பிறருடைய இலையைப் பார்ப்பது, அவர்கள் என்ன, எப்படி சாப்பிடுகின்றார்கள் என்று நோட்டம் விடுவதும் அநாகரீகமானதும், அதர்மமானதும் ஆகும். இத்தகைய எண்ணங்கள் தோன்றா விட்டாலும், பிறர் சாப்பிடுவதைச் சாதாரணமாக வேடிக்கை பார்ப்பதும் தவறானதே. சாப்பிடும்போது நீங்கள் செய்ய வேண்டிய, கடை பிடிக்க வேண்டிய எளிய பூஜை முறைகள், ஆன்மீக வழிமுறைகள் நிறைய உண்டு.

இவற்றை அறிந்து கடைபிடிக்காமையால்தான், பிறருடைய இலையைப் பார்க்கும் புத்தியானது, தன்னையும் அறியாமலும் ஏற்பட்டு விடுகின்றது. இவ்வாறு பிறர் சாப்பிடுவதைக் காணும் தன்மையானது,  தற்காலத்தில் ஹோட்டலில் கிட்டத்தட்ட  எல்லோருக்குமே ஏற்படும்.

இந்த தவறான பழக்கத்தில் இருந்து எப்படி மீள்வது? உணவு உண்கையில் கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக வழிமுறைகளை அறிந்து முறையாகக் கடைபிடித்தால், உணவு உண்ணும் நேரத்திலும் தெய்வீகம் பரிமளிக்கும்படி செய்திடலாமே!

நீங்கள் உணவு உண்ணும்போது, உங்கள் இலையில் பரிமாறப்படும் உணவுப்  பதார்த்தங்களைப் பார்த்து, அதில் உள்ளனவற்றைப் பற்றிச் சற்று ஆத்ம விசார ரீதியாக யோசியுங்கள். எத்தகைய பொருட்கள், திரவியங்கள் எல்லாம் தம்மைத் தியாகம் செய்து,  உங்களுக்கு உணவாக வந்தமைந்து ஜீவ சக்தியை அளிக்கின்றன என்று சிந்தித்துப் பாருங்கள். பொரியல், துவையல், அவியல், சாம்பார், ரசம் என ஒவ்வொரு உணவு வகையிலும் உள்ள பருப்பு, எண்ணெய், காய்கறி வகைகள், தானியங்கள், மற்றும் பல திரவியங்களுக்கான தேவதைகளை எண்ணிப் பிரார்த்தனை செய்திடுக.

உதாரணமாக, துவரம் பருப்பு எனில், சூரிய கிரகத்திற்கு உரிய தானியம் என்பதால், “சூரிய மூர்த்தியே போற்றி!” என்றும், ஜீரகம் எனில் “ஜீரக தேவதையே போற்றி, ஜீரக மூலிகை தேவதையே போற்றி, ஜீரக மருத்துவ தேவதையே போற்றி!” என்று  மனதினுள் ஓதி எண்ணிடுங்கள்.

தயிர், மோர் எனில்  “பசு தேவதையே போற்றி, காமதேனுவே போற்றி”  என்றும் மனதினுள் ஓதி, இவ்வாறாக, பால், தயிர், வெண்ணெய், நெய் போன்ற உணவுப்  பொருட்களின் மூலாதாரப் பொருட்களை அறிந்து கொண்டு, அந்தந்த தேவதைகளை வணங்கிடுக. சமைக்கும் போதே இத்தகைய தெய்வீகச் சிந்தனைகள் எழுவது உணவிற்கு ஆன்மீக  ரீதியாகவும் ருசியையும், மணத்தையும், ஆத்ம சக்திகளையும் நிறைத்துத் தரும்.

உங்களுக்குப் பூர்வ ஜன்மப்  புண்ய சக்தியாக, உணவளித்தப் பித்ருக்களுக்கு நன்றி செலுத்திடுக. பூவுலகில் நாம் வாழ வழிவகுத்துத் தந்த பெற்றோர்களுக்கு நன்றி செலுத்திடுக! நாம் உண்ண உணவு கிட்டியது போல, உலகில் நம்மோடு சமுதாயத்தில் வாழும் வசதி அற்ற ஏழைகளும் நல்ல சாப்பாட்டைப் பெற வேண்டி, அவரவருடைய பித்ருக்களை வேண்டிடுக.

உணவு உருவாவதற்குக் காரணமான, நிலம், நீர், உரச் சத்துக்கள் போன்றவற்றை அளித்த  பலவகை தேவதா மூர்த்திகளுக்கு நன்றி கூறி வழிபடுக.

உணவுப் பரிமாறப் பட்டிருக்கும் இலைக்கும் உரித்தான தாவர தேவதைகளை வழிபட்டிடுக.
உணவை உண்டு  ஜீவித்து  வாழ்வதற்கான தேவ ஜீவ சக்திகளை அளிக்கும் அன்ன தேவதைகளுக்கு நன்றி தெரிவித்து வழிபடுக!

மேலும்,  எவருடைய இலையை உற்றுப் பார்த்தாலும் அவருடைய பசித் தன்மை குறைந்து, அவருடைய சாப்பாட்டின் அளவும் குறைந்து போவதற்கும் நீங்களே காரணமாகி விடுவீர்கள் என்றும் அறிந்து கொள்க!

இவ்வாறாக உணவைச் சாப்பிடும்போது  நீங்கள் ஆற்ற வேண்டிய பூஜைகளுக்கே நேரம் சரியாக  இருக்கும்போது, பிறருடைய இலையை ஏன் பார்க்க வேண்டும்?  இவ்வாறு, பிற இலைகளைப் பார்த்து மனதில் ஏற்படும் தேவையற்ற எண்ணங்களைச் சுமந்து கூடுதல் கர்ம வினைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்.

இயந்திர வாழ்க்கையா?

இயந்திரம் போல் வாழாதீர்கள்!

உயிரை நிலை உடலில் நன்கு நிலை நிறுத்தி வாழ்ந்திட, அன்னம், வீடு, உடை மூன்றும் மிக முக்கியமாகத் தேவை அன்றோ! இவை மூன்றும் சார்ந்து வருவது சம்பாத்யம் மூலமாகத்தானே எனப் பலரும் வருமானத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

பூர்வ ஜன்மப் புண்ய சக்திகளின் கனிச் சாரமாகவே ஒவ்வொரு பைசா வரும்படியும் கிட்டுகிறது. தவறான வழிகளில் வந்து சேர்வது வருமானமாகாது, செல்வமுமாகாது, பணமுமாகாது, பாவக் கொத்துக்களே தவறான வழிகளில் பெறும் தொகை யாவையும், இவை பெருமளவு புண்ணியத்தைக் கரைத்து விரயமாகுவதுடன், விஷப் பாம்பு போல எப்போது வேண்டுமானாலும் பலத்தத் துன்பங்களுடன் மோதி வந்து தீண்டலாகும்.

இப்பூவுலகில் சம்பாதிக்கும் முறையாக, துறையாக, விவசாயம், தொழில், அலுவலகப் பணிகள் பெரும்பாலும் அமைகின்றன. இதில் வேலைக்குச் செல்பவர்கள், 60 வயது வரை பணி புரிந்து ஓய்வு பெற்றோ அல்லது இதற்கு முன்னும் VRS  பெற்றோ, ஓய்வடைந்ததாக வாழ்க்கையை இயந்திர கதியாக நடத்துகிறார்கள்.

அலுவலகப் பணியானது கலியுகத்தில், இயந்திர கதியாக, அதாவது ‘ஏதோ போனோம், வந்தோம், சம்பளம் வாங்கினோம், குடும்பத்தை நடத்தினோம், பற்றாக்குறைக்குக் கடன் வாங்குகிறோம்!’ என்ற அளவில்தான் பெரும்பாலோர்க்கு வாழ்க்கை நடந்து வருகின்றது. இதுதானா உண்மையான வாழ்க்கை முறை?

இவ்வாறு, இயந்திர கதியாக வாழ்பவர்கள், 45, 60 வயதுக்குப் பின் மிகவும் உடல், மனம், உள்ள பீதிகளால், பலவீனத்தால் சிரமப்படுகிறார்கள். இதிலும், தற்போதையக் கலியுக வாழ்வில், 40 வயதைத் தாண்டினாலே, கண்களுக்குக் கண்ணாடி போடுதலோடு, அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, இருதய நோய், மூலம் என்று பல வியாதிகளும் வந்து விடுகின்றன.

எனவே, 40 வயதுக்கு மேல், கலியுக சராசரி மனித வாழ்க்கை ஏனோதானோ என்று இதுவும் இயந்திர மந்த கதி ஆகி விடுகிறது. இதற்கெல்லாம் தீர்வுகள் தான் என்னே?

“வாழ்க்கையை எவ்வாறு செம்மையுடன் வாழ்வது?” என்று பலரும் எண்ணிச் சற்றே ஆத்ம விசாரப் பூர்வமாகத் தன்னைத் தினமும் உணர்தல் வேண்டும்.  அலுவலக வாழ்க்கையில் மெஷின் போலான பணிகளால், சொந்தக் குடும்ப வாழ்க்கையும் அலுப்புத் தட்டிப் போய் அனைத்துமே இயந்திர கதியாக ஆகி விடக்கூடாது. இதற்கு என்ன செய்வது?

இயந்திர கதியாக வாழ்க்கையை ஓட்டாது வாழ்க்கையைச் செம்மையாக்குவதற்கு எளிமையான இறைவழி முறைகள் நிறையவே உள்ளன. இவற்றைக் காலமுறை தவறாது கடைபிடித்து வருதல்தான் வாழ்வை ஆன்மப் பூர்வமாகச் செம்மைப்படுத்தும். மது, புகை, முறையற்றக் காமக் கேளிக்கைகள், ஒன்றுமே செய்யாது வெறுமனே காலாட்டி, தூங்கி, வெறுமனே வீதியில் நடந்து பொழுதைக் கழித்தல் போன்றவை யாவும் – செல்வத்தை வாரி இறைத்துச் செலவழிப்பது போல – ஆயுள் சக்தியைப் பெரிதும் விரயம் செய்வதாகும்.

ஸ்ரீஉய்யவந்த அம்மன் சாக்கோட்டை

மூலிகா சக்திகள் நிறைந்த “மந்த கச்ச தூபம்” என்ற விசேஷமான தூபத்தைத் தினமும் ஆலயத்தில் ஏற்றி வழிபட்டு வந்தால், வாழ்க்கையை நன்கு புரிந்து கொண்டு, நல்ல பிடிப்புடன் வாழ முடியும். தினமும் பழமையான (சுயம்பு மூர்த்தி) தினசரி வீட்டிலும், ஆலயத்திலும் விளக்கேற்றி, மந்தகச்ச தீப தூபமும் ஏற்றி வழிபடுதல், தினமும் காக்கை, பசு, நாய்க்குச் சிறிதேனும் உணவிடுதல், ஒரே ஒரு உணவுப் பொட்டலத்தையேனும் தினமும் தானமாக அளிப்பது  - இந்த மூன்றையும் தினசரி செய்து வருதலால் இதில் திரளும் மகத்தான புண்ய சக்தியால் வாழ்க்கை செம்மையாக்க பெரும் மூலாதாரமாக அமையும்.

“நாற்றமெடுக்கிறது” எனப் பலரும் ஆலய கோமுகத்தின் அருகிலேயே செல்வதில்லை. அபிஷேக திரவியங்கள், பழம், நீர், தயிர், நெய், பால் போன்றவை காய்ந்து ஏற்படும் நாற்றம் எனப் பலரும் இதை எண்ணினும், ஆலயத்துக்கு வழிபட வரும் பலருடைய உடல், மனம், உள்ளத்தில் உள்ள அருவருக்கத்தக்க, ஆபாசமான, கேவலமான எண்ணங்களும், சுயநலமான பிரார்த்தனைகளும்தான் கோமுகத்தில் நாற்றமாகப் பெருக்கெடுக்கிறது என்பதே உண்மையாகும். மேலும் இந்த நாற்ற மனப்பான்மையும் ஒருவருக்கொருவர் மாறுபடும். தூய உள்ளத்தார்க்கு நாற்றமே தோன்றாது. இவர்களுக்கு நல்ல சுகந்த மணம் உள்ளதாக கோமுகம் பரிமளிக்கும்.

“கோமுகத் தீர்த்தத்தைப் பிரசாதமாக உட்கொள்ளக் கூடாது” என்று பலரும் தவறாக எண்ணுகிறார்கள். கோமுகத் தீர்த்தம் சிறப்பானப் பிரசாதத் தீர்த்தமே! கோமுக வழி எவ்வளவு நாற்றமாக, அழுக்காக இருந்தாலும் அபிஷேகப் புனிதத் தீர்த்தம், புனிதத் தீர்த்தமே!

கோமுகத் தீர்த்தத்தைத் தாராளமாகப் பிரசாதமாக யாவரும் அருந்தலாம். உண்டியலில் தக்க காணிக்கையைச் செலுத்தி, ஒரு சிறு கண்ணாடி பாட்டிலில் இல்லத்திற்கு எடுத்துச் சென்று வைத்து வழிபடலாம்.  மரணத் தறுவாயில் இருப்போர்க்குச் சுயம்பு கங்கா ஜலமாக, கோமுகத் தீர்த்தத்தை ஊற்றுவது நன்று.

சுயம்பு இறைத் திருமேனியை தழுவி வழிந்து வருவதாலும், பல லட்சம் வருடங்களாக அபிஷேக ஆராதனைகளை கொண்ட தெய்வ மூர்த்திகளின் திருப்புனித வடிவைத் தழுவி வருதலாலும் கோமுகத் தீர்த்தத்திற்கு மகத்தான சக்திகள் உண்டு.

இந்த கோமுகத் தீர்த்தப் பிரசாதமுமே இயந்திர மயமான கலியுக மனித வாழ்க்கையைச் செம்மைப் படுத்தித் தரும் சாதனங்களில் ஒன்றாகும்.

எனவே இயந்திரம் போல செயற்கை வாழ்க்கையை மேற்கொள்ளாது, மேற்கண்ட எளிய வழிமுறைகளைக் கடைபிடித்து வாழ்வில் நன்னிலை பெறுக, “வாழ்க்கை அலுத்து விட்டது, போரடிக்கிறது!” என வெளிப்படையாக எண்ணுவோரும், கூறுவோரும் மேற்கண்ட வழிபாடுகளை ஆற்றி வந்தால் வாழ்வில் நல்ல பிடிப்பு உண்டாகி, “பொருள்பட அறமுடன்” வாழ்வதற்கான நல்வழி பிறக்கும். அவ்வப்போது பலருக்குள்ளும் எழும் “தற்கொலை உணர்ச்சிகள்” முற்றிலுமாக மறையும் வாழ்வில், நன்கு பிடித்தம் கொண்டு முறையாக வாழ, சாக்கோட்டை ஸ்ரீஉய்யவந்த அம்பாள் தரிசனம் மிகவும் துணை புரியும். வேதனைகளில் உழன்ற ஸ்ரீராமருக்கு “வீரபாவனம்” தந்த ஸ்ரீவீரசேகரச் சிவலிங்க மூர்த்தி அருளும் தலம். “அம்மா! தாயே! உய்யவந்தாளே!” என்று அழைத்தாலே போதும், கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்டு ஓடோடி வந்தருளும் ஸ்ரீஉய்யவந்த அம்பாள் அம்பிகை வழிபாடும், இயந்திர கதியான மானுட வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து, பயனுற வாழும் பதீதபாவன வழிவகைகளைத் தருவதாகும்.

கரிநாள் மகத்துவங்கள்

அனைத்து வகைக் கரிதோஷங்களையும் நீக்கவல்ல சனீஸ்வரப் பூஜை நாளே கரிநாள்! கர்ம வினைகள் கழிவதற்கு நல்வழிகளைக் காட்டும் நாளே கரிநாள்!

தற்காலத்தில் கரிநாள் என்றால் செவ்வாய்க் கிழமை போல சுப காரியங்களை நடத்தக் கூடாது என்று மட்டுமே அறிந்திருக்கின்றார்கள். கரிநாளில் வந்தமையும் பிற காலசக்திகளைப் பொறுத்து – சனிக்கிழமை, புதன்கிழமை, பூச நட்சத்திரம், அஷ்டமி, விஷ்கம்ப யோகம் – போன்ற பிற வகைக் கால அம்சங்களைப் பொறுத்தும், ஒவ்வொரு கரிநாளுக்குமான மகாத்மியங்கள் நிறையவே உள்ளன. கரிநாள் எப்படித் தோன்றியது என்பதை விளக்குவோமாயின், பல புராணங்களின் இணைப்புகளும் இதில் வந்து சேரும்.

கரிநாள் என்பது சனீஸ்வரப் பூஜைக்கு உரித்தான மூலமுதல் நாள் என்று அறிந்திடுக! ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி தோன்றிய தினமே கரிநாள் கூடிய பூச நட்சத்திரம் சேர்ந்த சனிக் கிழமையாகும். இதில் சங்கடஹர சதுர்த்தித் திதியும் சேர்ந்து வருமாயின் இதன் பலாபலன்கள் அபரிமிதமாகப் பொழியும். குடும்பத்தை வருத்தும் பலவிதமான தோஷங்களையும் எளிதில் நிவர்த்தி செய்து தர இவை வல்லவையாகும். திருநள்ளாறு, குச்சனூர் தவிரவும், மிகமிக விசேஷமான சனீஸ்வர வழிபாட்டுத் தலங்களாக, பொங்கு சனி, மங்கு சனி, தங்கு சனி ஆகிய மூன்று சனி தசைக் காலங்களிலும், மற்றும் ஒன்பது புக்தி, அந்தரக் காலங்களிலும் வழிபட வேண்டிய – வடகுரங்காடுதுறை, விளங்குளம், திருக்கொள்ளிக்காடு, சோழபுரம் போன்ற விசேஷமான தலங்களும் உண்டு.

கேட்டை நட்சத்திர தேவி, சங்கட ஹர சதுர்த்தி பூஜையில் வல்லவளாவாள். சந்திர மூர்த்தி தன் பதினாறு கலைகளையும் இழந்து வேதனையுற்ற போது, இருபத்தியேழு நட்சத்திர தேவியருமே வெவ்வேறு பூஜைகளில், விரதங்களில் வல்லவர்களாய் நிறைய நோன்புகளை நோற்று, இதன் பலாபலன்களோடு சந்திர மூர்த்திக்கு உறுதுணையாக இருந்தார்கள். இதில் கேட்டை நட்சத்திர தேவி, சங்கடஹர சதுர்த்தியும் சனிக்கிழமையும் சேர்ந்து வரும் நாளில், சனி கிரகத்திற்கு உரிய பூச நட்சத்திர சக்திகள் நிறைந்த பூச தீர்த்தத் தலங்களில் நீராடி, கருங்குவளைப் புஷ்பம், நீலோத்பவம், சங்குப் பூக்கள் போன்ற சனைஸ்சர சக்திகள் நிறைந்த மலர்களால் சனீஸ்வரரை அர்ச்சித்துப் பூஜித்து வந்தாள்.

சந்திரன், சனி இரண்டையுமே கிரக மூர்த்திகளாகவே நாம் கலியுகத்தில் பெரிதும் அறிந்தாலும், சந்திர கிரக மூர்த்தி, சனீஸ்வர கிரக மூர்த்தி, ஆதிமூலச் சந்திர மூர்த்தி, ஆதிமூல சனீஸ்வர மூர்த்தி, ஆயுள்காரக சனைஸ்சரர், மதிகார சசிச் சந்திரன் என்று பல வடிவுகளில் பல அவதாரங்களைக் கொண்டு, இரு மூர்த்திகளுமே, நவகிரகாதிபதிகளாக மட்டுமன்றி ஏனைய காரகத்துவங்களுடனும், தெய்வாவதாரக் குணப்பாடுகளுடனும் அருள்கின்றனர்.

கரிநாள் என்பது மனித சமுதாயத்தின் ஒட்டு மொத்தக் கரி தோஷங்களைக் தீர்ப்பதற்கான சனீஸ்வர பூஜா சக்திகள் நிறைந்த நாளாகும். நாட்டில் பெருந் தீ விபத்துக்கள் நிகழ்வது சமுதாயக் கரிதோஷங்களால்தாம், இவை தீர்வு பெற ஜாதி, சமய பேதமின்றிச் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் சனிவார, கரிநாள் வழிபாடுகளை ஆற்றி வருதல் வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவரிடமும் எண்ணற்ற வகையான அதர்மச் செயல்களினால் கரிதோஷங்கள் அட்டையாய் ஒட்டிக் கொண்டிருக்கும். இதனால்தான் அட்டைப் பூச்சியைக் கரத்தில் தாங்கி அருளும் தன்வந்த்ரீ மூர்த்தீ வழிபாடு, சனி தசையில் வரும் துன்பங்களைத் தீர்க்க வல்ல அற்புத வழிபாடாகிறது. கரிநாளும், புதனும், ஆயில்ய நட்சத்திரமும் கூடும் நாளில் சனீஸ்வர மூர்த்தி கரத்தில் அட்டையைத் தாங்கி அருளும் தன்வந்த்ரீமூர்த்தியைப் பூஜிக்கின்றார். இவ்வாறாக இறை மூர்த்திகள் மூஞ்சூறு, ஆந்தை, அட்டை போன்ற ஜீவன்களையும்  வாகனமாகவும், கையில் ஏந்தியும் தோற்றம் கொண்டு அருள்வதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு.

பலராலும் வெறுக்கப்படும் அட்டைப் பூச்சியைத் தாங்கி அருளும் தன்வந்த்ரீ மூர்த்தி வழிபாடானது பகைமை, விரோதம், குரோதங்களால் செய்யும் சுய காரியங்களின் கரிவினைப் படிவுகள் அகல மிகவும் உதவும். இத்தகையக் கரிதோஷங்களை அவ்வப்போது தீர்த்து வர வேண்டும். இல்லையெனில் ஒழுங்காகச் சுத்தம் செய்யப்படாத சமையற் பாத்திரக் கரி போல் வாழ்வில் இவை ஒட்டிக் கொண்டு சற்றும் அகலாது அடிக்கடி வருத்தும்.

கரிதோஷ நிவர்த்திக்கு கரிநாளில் ஆற்றும் சனீஸ்வர வழிபாடு எவ்வாறு உதவி புரியும்? ஒரு ஆலயத்தில் இருக்கின்ற சனீஸ்வரரின் சன்னதியைச் சுற்றிலும் பக்தர்களின் பூஜைக் கிரமங்கள் காரணமாக அவ்விடத்தில் விசேஷமான ஆயுள் சக்திக் கதிர்களும், மார்க்கண்டேய சக்திகளும் நிறைந்திருக்கும். சனீஸ்வரரை வழிபட வருகின்றவர்களுடைய உடலில், இருதயத்தில் இத்தகைய தேவ வரக் கதிர்கள் ஆன்ம சக்தி மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதனை அறிதல் மனிதனின் ஆறறிவுப் புலத்தின் நுண்ணறிவுக்கும் எட்டாததாகும்.

ஸ்ரீசனீஸ்வரர் வடகுரங்காடுதுறை

மேலும், பழமையான ஆலயங்களில் உள்ள சனீஸ்வரத் திருவுருவங்கள், விண்ணுலக சனீஸ்வர மண்டலத்தோடு வான்வெளி நீரோட்டப் பிணைப்பைக் கொண்டிருக்கும். எனவே சனீஸ்வர வழிபாட்டில் தேவப் பூர்வமான சக்திப் பரிணாமப் பரிமாணங்கள், மனித உடலில், மனதில், உள்ளத்தில் ஏற்படுகின்றன.

ஒருவர் சனீஸ்வரரை வழிபடுகின்ற போது, அவருடைய ஜாதக ராசிச் சக்கரப் பூர்வமாக, எந்த ராசியில் சனி கிரகம் அமைந்துள்ளதோ, அந்த ராசி மண்டலத்தின் கிரகக் கிரணக் கதிர்கள் சனீஸ்வர வழிபாட்டில் பிணைந்து, அவருடைய உடலில் சனிகிரக அம்சங்கள் உள்ள இடங்களில் நன்கு பரிணமிக்கும்.

இருதயத்தில் “சனிப் பிரதமம்” என்ற எட்டு வகையான நாளங்கள் சனிபிராம்ய சக்திகளைக் கொண்டுள்ள சனீஸ்வரருக்கான பூஜைகளில் இவை ஆக்கம் பெறும் இவ்வாறு சாதாரணமாகவே, சனீஸ்வர சன்னதியை ஒரு முறை சுற்றி வந்தாலே அனைவருக்கும் மேற்கண்ட வகைகளில் சனி கிரகப் பிரதம ஆகர்ஷண ஆக்கங்கள் மனித உடலில் நிகழ்கின்றன. இதனைப் பலரும் அறிவது கிடையாது. ஆனால், சனீஸ்வரரைச் சுற்றி வந்தால் நல்ல மாற்றங்கள் வாழ்வில் உண்டாவதாக இதன் பலா பலன்களை நன்கு அறிகின்றார்கள். சனீஸ்வரரிடம் வேண்டியவை, காரிய சித்திப் பலாபலன்களாக நன்கு கனிந்து வரும்போது தான், “சனீஸ்வரரைச் சுற்றினோம், நல்வழி கிட்டியது!” என்று எண்ணிச் சந்தோஷப்படுகின்றார்கள். ஆனால், வேண்டுதல் நம் கடமை, வேண்டியதில், வேண்டப் பற்றவற்றை அளித்தல் தெய்வச் சித்தம் என்பதால், சனீஸ்வரரை வலம் வரும் போதெல்லாம் அவருடைய அருளாசிகள் நிறைந்துதான் வருகின்றன.

நாம் ஒவ்வொரு வினாடியும் இயங்குவது இறையருளாலேயே!

எனவே, சனீஸ்வரரை வலம் வருவதின் பின்னணியில் இவ்வளவு தேவலீலைகள் நிகழ்கின்றன என அறிக! இதற்காக அவரவருடைய பித்ருக்கள் அரும்பாடுபட்டுக் கடுமையாக 60 நாழிகையும் பன்னெடுங்காலமாக உழைக்கின்றார்கள். உங்களை ஆக்கப்படுத்தி, ஊக்கப்படுத்தி ஆலயத்திற்குச் செல்ல வைத்து மேற்கண்ட வகையில் அமானுஷ்ய தேவசக்திகளை நல்வரங்களாகப் பெற்றுத் தருவதற்குள் அவர்கள் உங்களுடைய கர்மவினை அழுத்தங்களுடன் பெரிதும் போராட வேண்டியதாகிறது. எனவே, ஒவ்வொரு முறையும் ஆலயத்திற்குச் சென்று வருகையில் இது “பித்ருக்களின் அருளாசியால்தான்” என அறிந்து நன்றி செலுத்துக! நாம் இயங்கப் பெறுவது இறைசக்தியால்தான் என நன்கு பரிபூரணமாக உணர்ந்தறிக!

சனீஸ்வரர் சன்னதியில் வழிபடும்போது கோச்சார, கிரக சக்திகளும், கிரக ஆக்கங்களும் நன்கு பரிணமித்து வருகின்றன. கோச்சார சனீஸ்வர மூர்த்தி மற்றும் ராசிச் சக்கர சனீஸ்வர மூர்த்தியின் அருட்பரிபாலனங்கள் வெவ்வேறானவை! கோச்சாரம் என்பது, அந்தந்த நாளில் எந்த ராசியில் எந்த கிரகம் அமைகின்றது என்பதாகும்.

கோச்சார சனீஸ்வரரின் பூஜா பலன்கள் எவ்வாறு அமைகின்றன? தற்போதைய நிலையில், கடக ராசியில் சனீஸ்வரர் உறைந்து அருள்கின்றார். ஒவ்வொரு மனித உடலிலுமே கிரக ராசிக் கூறுகள் உண்டு. மேலும், பிறந்த நாளில் ராசிச் சக்கரப் பூர்வமாக சனீஸ்வரர் அமையும் இடத்திற்கும், தினமுமே அந்தந்த நாளில் சனி கிரகம் அமைந்துள்ள இடத்திற்கும் உள்ள ஆன்ம கிரக நீரோட்டப் பிணைப்பே “அனுராதனத் தீர்த்தக் கோடு” ஆகும். சனீஸ்வரரின் இடுப்பில் உள்ள ஆபரண அனுராதனம் இதனைக் குறிப்பதாகும்.

கரிநாளில் ஆற்றும் சனீஸ்வரப் பூஜா பலன்கள், இந்தப் பிறவியில் சேர்த்துள்ள கர்ம வினைகள் கழிவதற்கு நல்வழிகளைக் காட்டும். மேலும், பூர்வ ஜன்மக் கர்ம வினைகளால் இந்த ஜன்மக் கர்ம வினைகள் கழிபடாது தேக்கம் அடைகின்ற நிலையும் மாறும். இதையெல்லாம், ஒவ்வொரு முறையும் நீங்கள் சனீஸ்வரர் சன்னதியில் வலம் வரும்போது நிகழ்கின்ற தெய்வீக அற்புதங்களாகும். எனவே, ஏதோ இயந்திர கதியாகச் சனீஸ்வரரைச் சுற்றி வந்தோம் என்று ஒருபோதும் எண்ணாதீர்கள். சனீஸ்வரரை வலம் வருகையில் இவற்றை நன்கு மனதில் வைத்து ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்.

தனிச் சன்னதி கொண்டு
அருளும் ஸ்ரீசனீஸ்வரர் திருவலஞ்சுழி

கரத்தில் மிளிரும் நவகிரக வடிவுகள்!

கை விரல்களில், பிரபஞ்சத்திற்கே குருவான தட்சிணா மூர்த்தி காட்டும் சின்மய முத்திரையில் பிரதானப் பாத்திரமாகும் ‘குருவிரலான’ ஆள்காட்டி விரல் போல், நடு விரலானது “சனி கிரக அம்ச விரல்” என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்? நீங்கள் சனீஸ்வரரைக் கரம் கூப்பி வழிபடுகையில் நடுவிரல் கணுக்கள், ரேகைகள், நகப் பிறைகள் மூலமாக சனைஸ்சர அனுகிரக சக்திகள் உங்களை வந்தடைகின்றன என்பதும் நீங்கள் அறியாததன்றோ! இவ்வாறு ஆலயத்தில் ஒரு முறை கை கூப்பி வணங்குதற்கே ஆயிரமாயிரம் தேவ காரணங்கள் உண்டெனில் தினசரி ஆலய வழிபாடுதானே சாலவும் நன்று. எனவே கலியுகத்தில் குடும்பத்தினர் அனைவருமே தினமும் ஆலய தரிசனம் பெற்றாக வேண்டும்.

நவகிரக மூர்த்தியாக மட்டுமல்லாது, ஆலயத்தில் சனீஸ்வரர் தனித்த சன்னதி, கோபுரம், விமானம் கொண்டு அருள்வது விசேஷமான பலன்களைத் தருவதாகும். மேற்கு நோக்கிய மூர்த்திகள் ஆதித்ய பூஷண சக்திகளைத் தாங்கி அருள்கின்றார்கள். அதாவது, சனீஸ்வரருடைய பிதாவாகிய சூரிய மூர்த்தியே தம் கிரணங்களால் ஆதித்ய சக்திகளை சனீஸ்வரருக்கு வர்ஷிக்கும் பாங்கு இது! சில ஆலயங்களில் சூரிய ஒளி சனீஸ்வரர் மீது படுவது உண்டு. இவை வெகு சிறப்பான அனுகிரகங்களைத் தரவல்லவை. பொதுவாக, வடகிழக்கு மூலையில், மேற்கு நோக்கி சனீஸ்வரர் அருள்வது, குடும்பத்திற்கு சகல க்ஷேமங்களையும் காயத்ரீ சவிதா மண்டலப் பித்ருக்களின் ஆசிகளுடன் பிணைத்துப் பிரதானமாக அளிப்பதோடு, தசா புக்தி அந்தரக் கால பூர்வ லாப அனுகிரக அம்சங்களுடன் பொலிவதாகும்.

வடகிழக்கு திசையில் ஆலயப் பிறை மூர்த்தியாகவோ, அல்லது தனிச் சன்னதி கொண்டு அருளும் சனீஸ்வரர், கோச்சாரப் பலன்களை தங்கு சனிக் கால அனுகிரக சக்திகளை விசேஷமாகப் பொழிபவர் ஆவார்.

நவகிரக மூர்த்தியாக அருளும் சனி கிரக சக்திகள் வேறு, தனித்த சன்னதி கொண்டு ஆதிமூல சனீஸ்வரராய் அருளும் முறை வேறு. இதுதவிர, சனீஸ்வர மண்டலத்தில் நிறைய சனீஸ்வர தேவதைகளும் உண்டு. இவர்கள்தாம், நவகிரக மண்டலத்தின் எட்டு, பதினாறு, முப்பத்திரண்டு, அறுபத்தி நாலு கோணங்களிலும் அமர்ந்து அருள்கின்றனர்.

இவர்களுடைய பலகோண ஆசிகளைப் பெறவே ஆலயத்தில் வலம் வந்து வணங்குவதாய் நவகிரக மூர்த்தங்கள் அமையும். கும்பகோணம் அருகே கொட்டையூரில் பின்னணிப் பிரபாசக் கோணச் சக்கரங்களுடன் நவகிரக மூர்த்திகள் அருள்கின்றனர்.

வடகுரங்காடுதுறை சனீஸ்வரர்!

வடக்குப் பக்கம் அருளும் மூர்த்திகளுக்கு விசேஷமான சக்திகள் உண்டு. இதனால்தான் வடக்கு நோக்கி ஓடுகின்ற நதியும் கூடுதலான தேவ சக்திகளை அளிக்கின்றன. எதையும் கேட்காமலேயே அருள்கின்ற சிவமூர்த்தி வடகுரங்காடுதுறையில் ஸ்ரீதயாநிதீஸ்வரராக அருள்கின்றார் என்பது கலியுகத்தில் நமக்கு மிகவும் பாக்கியம் தருவதல்லவா? எனவே கேட்பதை மிகவும் கவனமாகக் கேட்டு இவ்வாலயத்தில் நடைப் பிரதட்சிணமாக வந்து வழிபடுதல் வேண்டும். ஒவ்வொருவருக்கும் பொதுவாக வாழ்க்கையில் பொங்கு சனி, தங்கு சனி, மங்கு சனி காலங்கள் வந்து அமையும். பொங்கு சனி என்பது வளம் கொழிக்கும் காலமாகும். இதற்கான விசேஷமான வரங்களைப் பெற்று இங்கு ஸ்ரீதயாநிதீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீகோலாகலேஸ்வர சனீஸ்வரர் அருள்கின்றார்.

கரிசலாங்கண்ணி, கருவேப்பிலை, கருங்குவளை புஷ்பம் போன்ற கரிச்சுடர் சக்திகள் நிறைந்த மூலிகைகள் திரவியங்கள், பூக்களால் சனீஸ்வர மூர்த்தி அம்பிகைக்குக் கிரீடம் சார்த்தி வழிபட்ட தலம். முற்காலத்தில் மூலிகைகளைப் பொன்னாக மாற்றும் ரசவாத சக்திகள் நிறைந்த தலமாகப் பொலிந்த பொன்னகரமாகப் பொலிந்தமையால் தங்கத்திலேயே உயர்ந்த அபராஜித வகைத் தங்கத்தால் ஆகிய மிக உயரமான வைரத் தங்கத்தைச் சூடிய மகுடத்தைத் தாங்கியவளாய் ஸ்ரீஜடாமகுடேஸ்வரியாய் அபூர்வமான நாமம் கொண்டு இறைவி அருளும் தலம்.

ஸ்ரீஜடாமகுடேஸ்வரி வடகுரங்காடுதுறை

வல்லம் சித்தர் மேற்கண்ட கரிச்சுடர் மூலிகைகளைப் பொன்னாக்கி, பொன் கிரீடமாக்கி அம்பிகைக்கு ஜடாமகுடமாகச் சார்த்தி வழிபட்ட தலம். இங்கு ஓடும் காவேரி நீரோட்டம், கரிச்சுடர் மூலிகை சக்திகள் நிறைந்ததாகும். தோல் வகை நோய்களை குணப்படுத்த வல்லது. கரிச்சுடர் என்பது பூமிக்கு அடியில் தானாகவே, வெப்பம் ஜோதியாய்ப் பிரகாசித்து ஒளிர்வதாகும். வடபாரதத்தில் பீகார் மாநிலத்தில் ஜாரியா, தன்பாத் போன்ற நிலச் சுரங்கப் பகுதிகளில், நிலத்தடியில்  கரிப்படிவங்கள் இயற்கையாகவே எரிந்து, சிவந்து காட்சி அளிக்கும். இந்த வெப்பத்தில் மிகவும் அபூர்வமான “ஜ்வால பாளம்” போன்ற ரசவாத மூலிகைச் செடிகள் தோன்றும். கடல் நீரடியிலும் கரிச்சுடர் ஜோதி தென்படுவதுண்டு.

“பெர்முடா டிரையாங்கிள்” எனப்படும் ரகசியக் கடல் முக்கோணப் பகுதியில் கரிச்சுடர் ஆகர்ஷண சக்திகள்தான் ஈர்ப்பு வினையை இங்கு பொருத்துகின்றன. சனீஸ்வர கிரகச் சக்கர வழிபாட்டுடன் இங்கு சனிப் பரணி சித்தரின் வழிபாட்டுடன் பயணம் செய்தால் இதனுடைய தெய்வீக ரகசியங்கள் புலப்படும். ஆனால், தேவை உள்ளோர்க்கு மட்டுமே இவை புலப்படுத்தப் பெறும். ஒற்றைக் காலில் நீருக்குள் நின்று சனிப் பரணிச் சித்தர் தலம் தவம் பூணும் கடல் பகுதி இது.

தசா மூர்த்தியாக, புக்தி மூர்த்தியாக, அந்தர மூர்த்தியாகவும் சனி தசை, சனி புக்தி, சனி அந்தரக் காலங்களில் சனீஸ்வரர் அருள்கின்றார். எனவே, ஒவ்வொருவரும் தனக்கு இப்போது எந்த தசை, புக்தி, அந்தரம் நிகழ்கின்றது என்பதைக் கண்டிப்பாக அறிந்து கொண்டு,

1. ஓம் சூரிய தசா மூர்த்தியே போற்றி
2. ஓம் அங்காரக புக்தி மூர்த்தியே போற்றி
3. ஓம் புத அந்தர மூர்த்தியே போற்றி

-என்றவாறாக ஒரு நாளில் ஆறு வேளைகளிலும் தன்னுடைய தசா, புக்தி, அந்தர மூர்த்திகளை அறுபத்தி நான்கு முறை ஓதி, போற்றி, நவகிரகங்களை வலம் வந்தும் வழிபடுதல் வேண்டும். ஆலயங்களில் நவகிரக மூர்த்திகளையும், சனீஸ்வரரையும் வலம் வந்து வணங்குகையில், தசா, புக்தி, அந்தர மூர்த்திகளைப் போற்றி வழிபடுதல் வேண்டும்.

கரிநாளில் சனீஸ்வரரை விசேஷமாக வழிபடும் முறைகளும் உண்டு. கருங்குவளை, சங்கு புஷ்பம், நீலோத்பவம் போன்றவற்றை ஸ்ரீசனீஸ்வரருக்கான துதிகளை ஓதித் தானே தொடுத்து சனீஸ்வரருக்குச் சார்த்திடல் வேண்டும். ஒவ்வொரு பூவிலும் அறுபத்தி நாலு முறை சனீஸ்வர நாமம் ஓதிய பலன்கள் நிறைவது சிறப்புடையது.

நீங்கள் சனீஸ்வரருக்குச் சார்த்திய புஷ்பங்களை எவரெல்லாம் தரிசிக்கின்றார்களோ, எவருக்கெல்லாம் பிரசாதமாக அளிக்கப்படுகின்றதோ அவர்களுக்கெல்லாம் நீங்கள் ஓதிய சனீஸ்வரத் துதிகளின் பலாபலன்கள் சென்றடைந்து இவ்வரிய சேவைக்கான தியாகமயப் புண்ணிய சக்திகளும் உங்களுக்குக் கூடுதலாக வந்து சேரும். கடையில் வாங்கப்படும் பூக்கள், மாலைகள் பொதுவாக நல்லவையாக இருந்தாலும், அவற்றில் ஒரு சில மிதிபட்டவையாகவோ, கீழே விழுந்து, சிதறி, பொறுக்கப் பட்டவையாகவோ, பலரும் அழுக்குக் கைகளால் எடுத்துப் பார்த்தவையாகவோ, பலவிதமான எண்ணங்களுடன் தொடுக்கப்பட்டவையாகவோ, பிறருடைய தோட்டங்களில் இருந்து முறையற்ற வகையில் பறிக்கப்பட்டவையாகவோ, ஏற்கனவே பலராலும் பயன்படுத்தப் பட்டவையோகவோ இருக்கக் கூடும் அல்லவா?

விரல்களில் கிளைக்கும் யோகப் பூர்வ சுத்த சக்தி!

எனவே, தானே தொடுத்து இறைவனுக்குச் சார்த்துதலே மிகவும் சிறப்புடையது. பூக்களைத் தொடுக்கையில் நல்ல கூரிய கண் பார்வை சக்தி பெருகும். பூத்தொடுத்தல் என்பது தியான, யோக, சுவாச யோக சக்திகளும் நிறைந்ததாகும்.

மனிதனுக்கு விரல் நுனிகள் மூலமாகத்தான் பலவகை எண்ண சக்திகளும் உடலுக்குள் நுழைகின்றன. பூத்தொடுக்கும் போது விரல் நுனி ரேகைகள் மிகவும் புனிதமான சக்திகளை உடைய பூக்களின் நாளங்கள், நரம்புகளுடன் இழைவதால் கரசுத்தி மூலமாக அங்க சுத்தியும் அதாவது, உடல் உறுப்புகளும் நன்கு சுத்திகரிக்கப்படுகின்றன.

சனீஸ்வர மூர்த்திக்குப் ப்ரீதி தருகின்ற பூக்களை முதலில் நன்கு அறிந்து கொள்க, மேலும், கரிசலாங்கண்ணித் தைலம் சேர்ந்த எண்ணெயால் சனீஸ்வரருக்குத் தீபம் ஏற்றுவது மகத்தான பலன்களைத் தரும். கரிசலாங்கண்ணி மூலிகை இலைகள், சூரிய மண்டலத்தின் ஒளியை நேரடியாகவே பெறுவதோடு, எங்கோ கோடிக்கணக்கான மைல் தொலைவில் உள்ள சனி கிரகத்தின் ஒளிக் கிரணங்களாலும் வளர்பவையாகும். கரிசலாங்கண்ணித் தீபக் கிரணங்களும், சனி மண்டலத்தின் அனுகிரக சக்திகளை ஈர்க்க வல்லவை.

பிறருக்குப் பலன் தரும் தீப வழிபாடு!

நீங்கள் சனீஸ்வர சன்னதியில் ஏற்றுகின்ற கரிசலாங்கண்ணித் தீப சக்திகள் இதைப் பற்றி ஒன்றுமே அறியாது ஆலயத்தை வலம் வருகின்ற பாமரர்களும், ஏனையோருக்கும் இதன் பலாபலன்களை அளிப்பதால், இதன் மூலமும் நீங்கள் மகத்தான இறைச் சமுதாயப் பணியை ஆற்றியவர்கள் ஆகின்றீர்கள். எனவே, ஆலய தரிசனத்துக்குத் தானே தொடுத்த பூச்சரங்களை எடுத்துச் சென்று, அந்தந்த மூர்த்திக்கான தைல தீபங்களை ஏற்றுவதன் மூலம் சிறப்பான இறைச் சமுதாயப் பணிகளை ஆற்றியவர்களாகவும் ஆகின்றீர்கள் என்பதையும் அறிக!

சில ஆலயங்களில் சனீஸ்வரருக்கு எள்ளுருண்டை மாலைகளைச் செய்து தருவர். ஆலயத்திலேயே இதற்கென விசேஷமாக அனுஷ்டானங்களுடன் செய்து எள்ளுருண்டை மாலைகளைச் சார்த்துவதும் உண்டு. ஜம்புப் பழம் எனப்படும் பெரிய நாவல் பழம், சாதாரண சிறுநாவல் கனிகள், கறுப்பு திராட்சை இவற்றாலும் மாலைகளைத் தொடுத்துச் சார்த்திடலாம். ஆஞ்சநேயருக்கு வடைமாலை சார்த்துவது போல, எள்தட்டை மாலை, எள் சேர்ந்த வடை மாலைகளை சனீஸ்வரருக்குச் சார்த்துவதும் விசேஷமானது. பூஜையின் நிறைவில் இவற்றை மனமுவந்து பிறருக்குத் தானமாக அளித்திடுக., சிறிது, சிறிதாகவேனும் தினமுமே, வாரந்தோறுமே தான, தர்ம சக்திகள் உங்களிடம் சேர்தல் வேண்டும் அல்லவா!

காகங்களுக்காக ஆற்றும் காக பூஜைகள்!

காக பூஜைகள் மிகவும் விசேஷமானவை. சந்ததிகளைக் காப்பவை. பித்ருக்களின் ஆசிகளைப் பெற்றுத் தருபவை. சனிப் பரணிச் சித்தரே காக்கைகளுக்கு உரிய சற்குருப் பீடமாவார். இவர் கரிநாளிலும், சனிக்கிழமைகளிலும், சனி நட்சத்திர நாட்களிலும் (பூசம், அனுஷம், உத்திரட்டாதி), சனி ஹோரை நேரத்திலும் பூலோகத்திற்கு வந்து காக்கைகளுக்கு உபதேசம் தந்து சனீஸ்வரத் தலங்களில் பூஜிக்கின்றார். கிரக கிரணக் காலக் கணிப்புகளைக் காக்கைகளும், பறவைகளும் நன்கு அறியும். இவை கிரண காலத்தில் வெளிவராமல் அடங்கி, ஒடுங்கிப் பூஜைகளை ஆற்றும். எனவே சூரிய, சந்திர கிரண காலங்களில் பட்சிகளுக்கான பூஜைகள் அபரிமிதமான பலன்களைத் தரவல்லவை! எனவே பட்சி சாஸ்திரக்காரர்களும், ஜோதிடர்களும் கிரகண காலத்தில் நிறையப் பூஜைகளை, ஜபங்களை மேற்கொள்ள வேண்டும்.

காக்கைகள் கூட்டம் கூட்டமாகச் சில சமயங்களில் சந்தோஷமாக ஆரவாரிக்கும் காட்சியைப் பார்த்திருக்கின்றீர்களா? இக்காட்சி சனிப்பரணிச் சித்தரின் வருகையையும், அவருக்குக் காக்கைகள் அளிக்கும் வேத கோஷ வரவேற்பையும் குறிப்பதாகும். எனவே, இனியேனும் சனீஸ்வரரை வழிபடும்போது, சனிப் பரணிச் சித்தரின் ஆசிகளை முதலில் வேண்டி அவருடைய மூல வழிபாட்டுத் தெய்வமான சனீஸ்வரரைக் கும்பிடுங்கள். இது சனீஸ்வரருக்கே உவப்பு அளிப்பதாகும். உண்மையில் கரிநாளில் இந்த சனீஸ்வர மகத்துவத்தை விளக்கும் இக்கட்டுரையைப் படிப்பதும், பிறருக்குப் படித்துக் காட்டுவதும் கூட சனீஸ்வர மூர்த்தியின் சிறப்பான வழிபாடாகவும் ஆகின்றது.

ஸ்ரீசனீஸ்வரர் விளங்குளம்

விளங்குளம் சனீஸ்வரர்

கரிநாளில் சனீஸ்வரரை வழிபட வேண்டிய மிகவும் முக்கியமான தலங்களுள் ஒன்றே பட்டுக்கோட்டை பேராவூரணி விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயம் ஆகும். இங்குள்ள பூசத் தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்தது. முப்பத்து முக்கோடித் தேவர்களால், கோடானு கோடி மூலிகைகளின் திரவியக் கலவையுடன், சக்தி வாய்ந்த நோய் நிவாரணியாகவும் ஆரோக்ய நீரோட்டப் புனலாகவும் துலங்குகின்றது. இத்தீர்த்தத்தில் சனிக்கிழமைகளிலும், கரிநாளிலும் நீராடி மாற்று ஆடைகளை அணிந்து, அணிந்து நீராடிய ஆடைகளை உடனே தானமளித்தல் பலவிதமானப் பித்ரு தோஷங்களை நிவர்த்தி செய்வதாகும். இங்குக் கரி அடுப்பில் அன்னம் உணவு சமைத்து, தானம் அளிப்பதும் அன்னம் சமைத்து கரித் தணலில் சாம்பிராணி தூபம் இட்டு இதில் சந்தனத் தூள், ஜவ்வாது, கோரோஜனை கலந்தத் தூளை நிரவி, நறுமணச் சாம்பிராணித் தூபமாகக் கரிநாளில் குறைந்தது ஒரு நாழிகைச் சந்தனப் புகையை ஆலயத்தில் எழுப்பி வழிபடுதலும் அற்புதமான வழிபாடுகளாகும்.

இங்கு விளங்குளத்தில் தன் தேவியுடன் எழுந்தருளி இருக்கும் சனீஸ்வரப் பெருமானை வழிபடுதல், சந்ததிக் குற்றங்கள் தீர்வதற்கு மிகவும் உதவும். மிகவும் சக்தி வாய்ந்த சனீஸ்வரத் தலம், சனிக்கிழமைதோறும் இங்குள்ள பூசத் தீர்த்தத்தில் நீராடி வழிபடுதலுடன், எள்ளுருண்டை, எள் சாதம், நல்லெண்ணெய் கலந்த புளியோதரை, எள் தட்டை, எள் பொடி வெல்லமும், ஏலமும் கலந்த “திலகத் திவ்யப் பூரணம், எள் பூரணக் கொழுக்கட்டை” போன்ற எட்டு வகை எள்வகைப் பண்டங்களைச் சனீஸ்வரருக்குப் படைத்தல் அஷ்ட தீர்க்க சனைஸ்சர வழிபாடு ஆகும். குறைந்தது எட்டு வகை ஆடைகளை (சேலை, வேஷ்டி, சட்டை, துண்டு, பாவாடை போன்றவை) தானமளித்து, உங்கள் குடும்பத்தில் எவருக்கு நெடுங்காலமாகத் தர்ப்பணம் அளிக்கவில்லையோ அவர் பெயரைச் சொல்லி, முஞ்சிப்புல் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்து முதலில் முஞ்சிகேச மகரிஷிக்கு 12 முறை அர்க்யம் அளித்துப் பிறகு மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் அளித்திட வேண்டும்.

தர்ப்பணம் பற்றி அறியாத பாமர ஏழைகளை அமர வைத்து, அவர்களுடைய மூதாதையர்களுக்குத் தர்ப்பணத்தை அளிக்க வைப்பதும், பல தலைமுறை இடைவெளிகளைக் குறைத்துக் கர்ம வினைகளின் அழுத்தங்களையும் தணிக்கும்.

விளங்குகளம் பூசத் தீர்த்தத்தில், சனி ஹோரை நேரத்தில், சனிப் பரணிச் சித்தர் காக்கைகளோடு வந்து நீராடி, சனிப் பாளம், சனிக் கற்பகம், பரிவிளாகச் சனி போன்ற அபூர்வமான மூலிகைத் திரவியங்களை இத்தீர்த்தத்தில் கலந்து, மூலிகா சக்திகளை அபிவிருத்தி செய்து தருகின்றார். மிகவும் சக்தி வாய்ந்த தீர்த்தமே விளங்குளம் பூசத் தீர்த்தம். இதற்குப் படிகளை அமைத்துச் சீரமைத்துத் தருவது சந்ததிகளை நன்கு தழைக்கச் செய்யும்.

மாரக தோஷங்களால், குடும்பத்தில் ஏற்படும் துர்மரணம், இளவயது மரணம், பெண்கள் சீக்கிரமாகவே விதவை ஆதல் போன்றவற்றிற்கு நன்முறையில் தீர்வுகளைப் பெற, சனிக்கிழமைகளிலும், கரிநாளிலும் இத்தீர்த்தத்தில் நீராடி, முழு நீள வாழை இலையில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வருதல் வேண்டும்.

காக பூஜை – காகங்களைப் பூஜிக்கும் முறை!

சந்ததிகள் தழைக்க, பிள்ளைகள் நல்ல ஒழுக்கத்துடன் வாழ உதவும் காக பூஜை!

காகங்களுக்கான “காக பூஜையை” அனைத்துக் குடும்பங்களிலும் தினந்தோறும், வாரந்தோறும், பட்சந்தோறும் ஆற்றி வர வேண்டும். தினமும் காகத்திற்கு உணவிடுவது நம் பாரத ஆன்மீகப் பாரம்பரிய ரத்தத்தில் ஊறி வந்த உத்தமப் பூஜைகளில் ஒன்றாகும். காகபுஜண்ட மஹரிஷி, கலியுகத்தில் மக்கள் நடத்த வேண்டிய காக பூஜைகளின் மகத்துவத்தை “காகதேவக் கிரந்தங்கள்” பலவற்றிலும் நன்கு விளக்கி உள்ளார். இதில் பல வழிமுறைகள் உண்டு.

“காக்கைக் குளியல்” என்று வழக்கில் கேலியாக சொல்கிறார்கள் அல்லவா, இது சரியன்று, முதலில், காகத்திடம் அற்புதமான தேவ குணப்பாடுகள் நிறைய உள்ளன என்பதை மனித குலம் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். ஜாதி, சமய பேதமின்றிப் பலரும் ஒன்று சேர்ந்து, நற்காரியங்களை ஒற்றுமையாக நடத்தும் சத்சங்க அமைப்பிற்குக் காக்கைகள் குலம்தான் கலியுகத்தில் முன்னோடி ஆகும்.

பிறலோகப் பயணம் கொள்ளும் யோகக் காக்கைகள்!

காக்கைகளில் “தெரிசனக் காக்கை, நூபூரக் காக்கை, பரிமளக் காக்கை” எனப் பல வகைகள் உண்டு. பரிமளக் காக்கை வந்தால் நல்ல வாசம் வரும். இது காக்கை வகைகளில் யோக சக்திகளைக் கொண்டவை ஆகும். அண்டங்காக்கைகள் பற்பலப் பித்ரு மண்டலங்களுக்குச் சென்று வரவல்லவை!

காகம், பருந்து, சில வகை வண்டுகள், பஞ்சவர்ணக் கிளிகள் போன்றவை குறித்த சில நாட்களில் வான்வெளி மண்டலங்களுக்குச் சென்று வரும் தெய்வப் புலங்களைக் கொண்டவையாகும்.

வான்வெளியில்தான் நம் கண்களுக்கு எட்டிய வரை எங்கேயுமே தங்கும் இடம் இல்லையே? பின் காகம், புறா போன்றவை எவ்வாறு பித்ரு மண்டலங்களுக்குச் சென்று வரமுடியும் என்று எண்ணத் தோன்றும். நம் ஊனக் கண்களுக்குத்தான், வானில் தங்குமிடமே இல்லாதது போல் தோன்றுகிறது. நம் கண்களுக்குப் புலப்படாத வான்வெளி மண்டல தங்கும் மண்டபங்கள் நிறையவே உண்டு.

அவை வான் மண்டல மண்டபங்களில் தங்கி, அங்கு வரும் பிற மண்டலத் தேவ புறாக்கள், தேவ கிளிகளைச் சந்தித்து, அவை அளிக்கும் தேவ தரிசன அனுபூதிகள், தேவ செய்திகள் மற்றும் தேவானுகிரங்களையும் பெற்றுத் திரும்பி வருகின்றன. சில நாட்களில் அவை நேரடியாகவும், பித்ரு மண்டலங்களுக்குச் சென்று வருவதும் உண்டு.

எறும்பு பாத தூளி லிங்கச் சித்தர்

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாதசிவராத்திரி அருணாசல கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே!  திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம் – எறும்பு பாத தூளி லிங்கச் சித்தர் , பார்த்திப வருட ஐப்பசி மாத சிவராத்திரி நாள்: 31.10.2005

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்.

திருஅண்ணாமலையில் மனித குலத்தார் மட்டுமே கிரிவலம் வருகின்றார்கள் என எண்ணாதீர்கள், எண்ணற்ற பறவைகளும், நாகங்களும், வண்டினங்களும், புழுக்களும் மற்றும் ஏனைய உயிரினங்களும் தினமுமே அருணாசலத்தைக் கிரிவலம் வந்து கொண்டுதாம் இருக்கின்றன. அந்தந்த உயிரினங்களுக்கு உரிய குலக்ஷேம தேவதைகளின், சத்குருமார்களின் நல்வழி காட்டுதலுடன் அவை அருணாசல கிரிவலம் வருகின்றன.

இவ்வகையில் தினமும் ஆயிரக்கணக்கான எறும்புகள், திருஅண்ணாமலையில் கிரிவலத்தை மேற்கொள்கின்றன. இவற்றில் பிற லோகங்களின், பிற பூமிவாழ் எறும்புகளும் அடங்கும். பிப்பல மஹரிஷிதாம் எறும்புகளுக்கு உரிய சத்குருமார்களில் ஒருவராகின்றார். இம்மஹரிஷியின் பூர்வ சத்குருவான எறும்புப் பாத தூளி லிங்கச் சித்தர் பெருமான், அருணாசல கிரிவலப் பகுதியில் அருணாசலச் சிவ மந்திரத்தை ஓதியவாறு கிரிவலம் வரும் எறும்புகளின் பாதம் பட்ட மண் துளிகளைப் பத்திரமாகத் தொகுத்தெடுத்து அரச இலை பந்தங்களில் வைத்து லிங்கமாக்கி வழிபட்டு வந்தார். இத்தகைய எறும்புப் பாத மண் தூளிகளாலான லிங்கத்திற்கு “எறும்புப் பாத தூளி லிங்கம்” என்று பெயர்.

முதலில் கண்ணுக்குத் தெரியாத நுண் வகை எறும்புகள் அருணாசலக் கிரிவலம் வரும் நுணுக்கத்தைக் கண்டு அறிதலே மிகவும் கடினமானது. இதிலும் இவ்வாறு கிரிவலம் வரும் எறும்புகளின் பாத நடைப்படி வடிவுகளைக் கண்டு எறும்புப் பாத மண் துகள்களைச் சேகரித்துச் தக்க மூலிகா, தைலப் பந்தனங்களுடன் லிங்கமாக்கிப் பலரும் தரிசிக்கும்படி அமைத்துத் தருதல் எனில் என்னே அரிய இறைத் திருப்பணி!

கோமள வரம் தரும் கோதூளி நீராடல்!

எறும்புகளின் பாதத் தூளிப் பட்ட மண்துகள்களை மட்டும் பிரித்துத் தொகுத்து எடுத்தலும், மேலும் ஒரு லிங்க வடிவாய் ஆக்குதற்குப் பல லட்சம் எறும்புகளின் பாதத் துளி மண் துகள்களைத் திரட்டுவதும் பன்னெடுங்கால தேவகாரியம் அன்றோ! இத்தகைய லிங்கங்கள் பிருத்வி சக்தி லிங்க வகை சக்திகளைப் பூண்டவையாகும். கோதூளி லிங்கம் என்பதாகப் பசுவின் கால் குளம்படி பட்ட மண்ணைத் தலையில் தெளித்து கொள்தல், “கோதூளி நீராடல்” ஆகும் அல்லவா!

பலவிதமான குடும்பப் பிரச்னைகளில் வாடுவோர், இந்தக் கோதூளி நீராடலை மேற்கொண்டு வழிபட்டு வருதல் வேண்டும். பசுவின் கால் குளம்படி பட்ட மண்ணைப் புனிதமான ஆற்று நீரில் கரைத்து நீராடுவதும் சிறப்பான வழிபாடு ஆகும். மனக் குழப்பங்களைப் போக்கிடும் மாமருந்துகளைப் பெற்றுத் தர மிகவும் உதவிடும் அற்புதமான பூஜை இது!

எறும்புப் பாத தூளி லிங்கச் சித்தர் எப்போதும் நடக்கும் போதும், நகரும் போதும், அருணாசலத்தைக் கிரிவலம் வரும் போதும், தன் பாத அடிகளை மிகவும் கவனமாகப் பயின்று, இறைமந்திரங்களை ஓதியவாறே, ஒவ்வொரு காலடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைத்து, ஓர் எறும்புக்குக் கூடத் துன்பம் இழைத்திடாது, சர்வ சாதக சர்வ லோக விழிப்பு நிலையில் அருணாசலத்தைக் கிரிவலம் புரிந்து வந்தார்.

எறும்புப் பாத தூளி லிங்க வடிவுகளை மிகவும் கவனமாக மூலிகைப் பீடங்களில் சுமந்து வந்து அருணாசல கிரிவல வளாகத்தில் மிகவும் சிரத்தையுடன் பிரதிஷ்டை செய்து, கிரிவலம் வரும் பக்தர்களுக்கு எறும்புப் பாத தூளி லிங்கத் தரிசனமாகப் பெற வைத்துப் பூஜித்து வந்தார். மனித நடமாட்டம் இல்லாத மரங்கள் அடர்ந்த பகுதிகள், எறும்புகள், மற்றும் ஏனைய பிராணிகளுக்கு என மூன்று எறும்புப் பாத தூளி லிங்க மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து தந்தார்.

இவ்வாறாக, திருஅண்ணாமலையில் எட்டுத் திக்குகளிலும் அவர் இறையருளால் தோற்றுவித்த எறும்பு பாத தூளி லிங்க வழிபாட்டைப் பலரும் தரிசித்துப் பூஜித்து மகிழ்ந்தனர். நல்ல புத்தியுடன் நல்ல நினைவாற்றல், கூர்மையான அறிவு, தீயதைச் சாராது எப்போதும் நன்னெறியில் திளைக்கும் மனம், சிறப்பான இறை இலட்சியக் குறிக்கோளுடன் வாழ்க்கையைப் பெறுதல் – போன்ற பலவற்றுக்கும் எறும்பு பாத தூளி லிங்க வழிபாடு உதவுகிறது.

சந்ததி தழைக்கட்டும்!

நிறைய சந்ததிகளுடன் வாழ்ந்து செழித்த குடும்பங்கள் பலவும், தற்காலத்தில் தர்ப்பணம், படையல் போன்ற வழிபாடுகளைப் பன்னெடுங்காலம் ஆற்றாமையால், திடீரென்று சந்ததி இழந்து போய் வாடுகின்ற நிலையில் வேதனையுற்று வாழ்கிறார்கள். கட்டிய வீட்டையும், விளையும் நிலத்தையும், ஆஸ்திகளையும் தக்கவரிடம் ஒப்படைக்கும் வண்ணம் சந்ததிகள் இல்லாது வாடுவோர், நன்முறையில் சிறப்பான தீர்வுகளைப் பெறுதற்கு மூலாதாரமாக விளங்குவது தரணி பந்துப் பித்ருக்களின் ஆசிகளாகும். இவற்றைப் பெற உதவுவது எறும்புப் பாத தூளி லிங்க வழிபாட்டுப் பலன்களாகும்.

இந்த மாத சிவராத்திரிக் காலத்தில் எறும்புப் பாத தூளி லிங்கச் சித்தர்பிரான் தூல, சூக்கும வடிவுகளில் அருணாசலமாம் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகின்றார். எனவே இந்த ஐப்பசி மாத சிவராத்திரி கிரிவலத்தில், சர்க்கரை, தானியங்கள் கலந்த ரவையை பாதையோரம், மரத்தடியில் ஓரத்தில் இட்டவாறு கிரிவலம் வருதல் மிகவும் விசேஷமானதாகும்.

இந்த ஐப்பசி மாத சிவராத்திரியில் இருந்து அடுத்து வரும் பௌர்ணமி வரை, தினமும் அவரவர் ஊரில் உள்ள ஆலயங்களில் மதில் சுவரோரமாக சர்க்கரை கலந்த தான்ய ரவையை எறும்புகளுக்கு என இட்டு வாருங்கள். இது பணக் கஷ்டத்திற்கு நல்ல நிவர்த்தியைப் பெற்றுத் தரும். இதற்காகப் பணம் வந்து கொட்ட வேண்டும் என்று பேராசைப் படாதீர்கள். குறைந்த சம்பாத்தியத்தில் பணி புரியும் தன் பிள்ளைகளுக்கு எவ்வாறு எதிர்காலம் அமையுமோ என்று வருந்துபவர்களுக்கு நன்னிலை கிட்டவும் இந்த ஐப்பசி மாத சிவராத்திரி கிரிவலம் நன்கு உதவும்.

ஐப்பசி மாத சிவராத்திரியை அடுத்து வரும் வளர்பிறையில், வயல் வெளி ஓரங்களில், மரத்தடிகளில் எறும்புகளுக்கு இடையூறு இல்லாது, அவற்றைத் துன்புறுத்தாது, அவற்றின் காலடி பட்ட மண்ணை, ஆற்று மண், நல்ல கிணற்று மண், வில்வ மரத்து அடிமண், துளசிச் செடி மண் ஆகிய ஐந்தையும், புனிதமான ஆற்று நீருடன் சேர்த்துச் சிறு லிங்கமாக்கி அரச இலை, வாழை இலை, தாமரை இலை, மந்தாரை இலை, பூவரசு இலை ஆகிய 5 இலைகளிலும் வைத்துத் தினமும் பூஜித்து வருவோர்க்கு, வறுமை நிலையிலிருந்து விடுபட வழி பிறக்கும். இவ்வாறு எறும்புகளுடன் கிரிவலம் வந்த எறும்புப் பாத தூளிச் சித்தர்தாம், பார்த்திப ஆண்டின் ஐப்பசி மாத சிவராத்திரி நாளில் திருஅண்ணாமலை பிப்பலியத்துறை எனும் கிரிவல தரிசனப் பகுதியில் அருணாசலத்தில் ஐக்கியம் கொண்டார்.

பலரும் கலியுகத்தில் ‘பிறரைப் பழி வாங்க வேண்டும்’ என்ற துடிப்பில் அதர்மமாகப் பேசுதல், அதர்ம வினைகளைச் செய்தலும் உண்டு. தம் வாழ்நாளுக்குள் இத்தகையப் பழிவாங்கும் படலத்தில் இருந்து அவரவர் விடுதலை பெற்று வெளி வந்தாக வேண்டும். இல்லையேல், இந்தப் பழி உணர்ச்சி ஜன்மாந்திரப் பகையாகத் தொடர்ந்து வந்து கொலை போன்ற தீவினைகளாக வந்து வாட்டும். கலியுகத்தில் சகோதர, சகோதரிகள் கூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாது பகைமை பூண்டு இருப்பது வருந்தத் தக்கதாகும். இத்தகைய பகைமையைக் களைய இம்மாத அருணாசலச் சிவராத்திரி கிரிவலம் நன்கு உதவிடும்.

பாம்புகளைக் காணுகையில் “அஸ்தீகா சித்தரே போற்றி!” என்று வணங்குவது போல, எறும்புகளைக் கண்டால், “எறும்பு பாத தூளிச் சித்தரே போற்றி!” என ஓதி வணங்கிட்டால், இவ்வகையில் தம் சத்குருவின் பீடத்தை நினைவூட்டியதால் ஒவ்வொரு எறும்பும் நன்றி கூறித் தன் தவத்தில் ஒரு துளியைத் தானமாகத் தரும். இத்தகைய தவதான சக்திகள் எறும்புகளுக்கே உரிய விசேஷமான சங்கல்ப சக்திகள் ஆகும்.

31.10.2005 திங்கட் கிழமை காலை 6.15 மணி முதல் 1.11.2005 செவ்வாய்க் கிழமை காலை 6.52 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதச் சிவராத்திரித் திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள் : 31.10.2005 திங்கட் கிழமை இரவு!

நவம்பர் 2005 பௌர்ணமி நாள்: 15.11.2005 செவ்வாய்க் கிழமை காலை 7.28 மணி முதல் 16.11.2005 புதன் கிழமை காலை 6.27 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படிப் பௌர்ணமித் திதி நேரம் அமைகின்றது. திருஅண்ணாமலை கிரிவல நாள்: 15.11.2005 செவ்வாய்க் கிழமை இரவு.

நட்சத்திர லிங்க வழிபாடு

மனிதனை பரிபூரண ஆறறிவு கூடிய மனிதனாக வாழ வைக்கும் நட்சத்திர லிங்க வழிபாடு!

நம் அகஸ்திய ஆஸ்ரமம், திருஅண்ணாமலை சார்பாக, 27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் அவரவருக்கான ஆயுட்கால நட்சத்திர வழிபாட்டுத் தலங்களை மூன்று நூல் தொகுதிகளாகப் பிரசுரித்து அளித்துள்ளோம். இத்தலங்களில் ஒவ்வொரு நட்சத்திர தேவியும், அல்லது ஒரு நட்சத்திரத்தில் உள்ள சில நட்சத்திரத் தேவியரும் ஒன்று சேர்ந்து வழிபட்டுச் சிவலிங்க பூஜைகளை ஆற்றிச் சந்திர மூர்த்தியை மணக்கும் பாக்யம் பெற்று, ஜீவன்களின் வழிபாட்டிற்கும் உரிய தெய்வப் பேற்றைப் பெற்றனர்.

தட்சனின் புதல்விகளான 27 நட்சத்திரத் தேவியருமே, சிவபூஜையில் சிறந்த சிவச் செம்மல்கள் ஆவர். இவர்கள் வழிபட்ட சிவலிங்கங்கள் தாம் அந்தந்த நட்சத்திரப் பெயரிலேயே சில தலங்களில் இன்றும் வழிபாட்டிற்கு உள்ளன. 27 நட்சத்திர லிங்க மஹிமையும் ஒரு சேரத் தோன்றி வழிபாட்டிற்குத் துலங்குவது மிகவும் விசேஷமானதாகும்.

நவகிரக மூர்த்திகளிலும் ஆதிமூர்த்திகள், நவகிரக பரிபாலன மூர்த்திகள், கிரகலோகத் திருமேனி மூர்த்திகள் என்று சில வகைகள் உண்டு. ஆதிமூல நவகிரக மண்டலங்களில் தாம் ஆதிமூல நவகிரக மூர்த்திகளை நாம் தரிசிக்க முடியும். ஆலயங்களில் நாம் காண்பவை நவகிரக மண்டல அதிபதிகள் ஆவர்.

தேவர்கள், அசுரர்கள் எனும் புராண சம்பவங்களாக நாம் காண்பது நற்குணங்களுக்கும், தீய குணங்களுக்கும் உள்ள பரிபாலன போராட்டத் துறை ஆகும். கலியுக மனித மனத்திலேயே “இதைச் செய்யலாமா, வேண்டாமா?” எனப் பெரும் போராட்டங்கள் ஏற்படுகின்றனவே! தீய குணங்களை வரித்தால் எத்தகைய தீமைகள் ஏற்படும் என்று தெரிந்தே தவறு செய்தால், இது புனிதத்திற்கும், அதர்மத்திற்குமாக மனிதனுக்குள் நிகழும் போராட்டம் தானே!

இறைவழிபாட்டில் கிட்டும் புண்ய சக்திகளைத் தீயவற்றில் தீய செயல்களில் விரயம் செய்தால் எத்தகைய மாபாதகங்கள் உண்டாகும் என்பதை மனித குலம் பன்னெடுங் காலமாக அறிந்தும் மதுக் கடைகளில் கூட்டம் நிரம்புகிறதே! ஆன்மீகப் புத்தகங்களை விட, பீடி, சிகரெட்டுகள் தாமே கோடிக்கணக்கில் நாட்டில் விற்பனை ஆகின்றன! இவை எல்லாம் புண்ய விரயத் தீயப் பொருட்களாகும். மயக்க மாயை எண்ணங்களை, அதர்மமான போதை எண்ணங்கள் மென்மேலும் பரவாது இவற்றை ஓரளவேனும் தடுத்துச் சுத்திகரிக்கவே சித்தர்களும், மாமுனிகளும் பூவுலகிற்கு வருகையில் வருண மூர்த்தி மழையைப் பெய்வித்து அந்தந்தப் பகுதியைச் சுத்திகரிக்கின்றார்.

விரதங்கள், ஆலய தரிசனங்கள், பூஜைகளில் மிகவும் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் புண்ய சக்தியானது, பேராசை, பொறாமை, தீய குணங்கள், தீய செயல்களினால் விரைவில் கழிகிறது. எவ்வாரு நல்லோருக்கும் சோதனைகள் ஏற்பட்டுத் தீயதின்பால் வசப்படுகிறார், எவ்வாறு நல்லோர்க்கும் பொறாமை, காமம், பேராசை குணங்க்ள் ஏற்படுகின்றன என்றவாறாக புனிதத்திற்கும், புனிதமற்றவற்றிற்கும், நல்லதுக்கும், தீயதுக்கும் இடையே உள்ள போராட்டமாகக் கலியுக மனித வாழ்வு நடை பெற்று வருகிறது.

இவற்றைக் கண்ணுறுகையில் தாம் கலியுகத்திலும் அரக்கர்கள், அசுரர்கள் உண்டு, இவர்கள் தீய எண்ண வடிவுகளில் பலருக்குள்ளும் வாழ்கின்றனர் என்பதை நாம் பன்முறை விளக்கி வந்துள்ளோம். கலியில், உருவத்தில் தேவர்கள், அசுரர்கள் இல்லையெனினும், மனத்தளவில் எத்தகைய அசுர எண்ணங்கள், அவலம் ஏற்படுகின்றது என்பதைப் பலரும் அறிவர். எனவே, அவரவர் தமக்குள் எந்த அளவுக்கு அசுரர்கள் என அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு நட்சத்திர லிங்க வழிபாடுகள் மிகவும் உதவும்.

அதாவது தன்னைத் தானே நன்கு அறிந்து கொண்டு, திருந்தி, சீர்படுத்திச் செம்மையுடன் வாழ நட்சத்திர லிங்க வழிபாடுகள் உதவும். ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வாழ்வில் அனைத்து நட்சத்திர நாட்களிலும் வாழ வேண்டி உள்ளமையால் அனைத்து நட்சத்திர லிங்க வழிபாடுகளும் அனைவருக்கும் உரியனவே! திருவிடைமருதூர், சென்னை – திருவொற்றியூரில் 27 நட்சத்திரங்களுக்குமான லிங்க வடிவுகள் தரிசனத்திற்காக உள்ளன. வாழ்வில் நன்கு பயன்படுத்திக் கொண்டு சிறப்படைக!

கைரேகையும் பாதரேகையும்

கை ரேகைகளும், பாத ரேகைகளும் உடல், மனம், உள்ளத்தைச் சுத்தமாக்கும் பிருஹத் சக்திகள்!

27 நட்சத்திரங்களும் ஒரு சுழற்சியாக முழுமையாக நிறைவடைவது  ப்ருகதீசப் பிரகாசம் எனப்படுவதாகும். பிருகம் என்பது நில சக்திகள், சப்த வகைகள், தங்குமிடம், ஒளிப் பிரகாசமாக நிறைவது எனப் பல அர்த்தங்கள் நிறைந்து வரும். தஞ்சாவூரில் அருளும் பெருவுடையாரான பிருஹதீஸ்வரர், பிருஹத் எனப்படும் தற்போதையப் பிரபஞ்சத்தில் உள்ள ஒளிப் பிரகாசப் பொருட்களுக்கெல்லாம் பிருஹதீஸ்வர ஒளிப் பிரகாசத்தை அளிப்பவராவார். இதனால் அனைத்து லோகங்களிலும் பிருஹதீஸ்வரர் காட்சி அளிப்பவர் ஆகிறார். பிரபஞ்சத்தில் அனைத்து லோகங்களிலும் இதே அளவில் பிருஹதீஸ்வர லிங்கம் தோற்றம் தரும்.

“பிருஹதீ நடன முத்திரை” என்ற ஒன்று உண்டு. அமர்ந்த கோல அபூர்வ யோக நடனம் இது! இடது உள்ளங்கையை வலது கால் உள்பாதத்தில் பதித்து, இடது கை விரல்களை, வலது கால் விரல்களுக்குள் சங்கிலி போல் செருகிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

இதே போல், வலது உள்ளங்கையை இடது கால் உள் பாதத்தில் பதித்து, வலது கை விரல்களை இடது கால் விரல்களுக்குள் சங்கிலி போல் செருகிப் பிடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு இரு கைகளால் இரு கால்களை நன்கு கெட்டியாகப் பற்றிக் கொண்டு, தஞ்சாவூர் பொம்மை போல முன்னும் பின்னும் சாய்ந்தபடி யோகாசனமாக ஆடுதலே “பிருஹதீ நடன முத்திரை” ஆகும். சிறுநீரகக் கோளாறுகள், பௌத்ர நோய் வராது தற்காப்பு சக்திகளை அளிக்கும் ஆரோக்ய முத்ராசனம் இது!

திருக்கோளக்குடி

‘நடேச சிவ, நடேச பல நடேச குண பாஹிமாம்
நடேச சிவ நடேச பல நடேச குண ரட்சமாம்’

என இயற்கையாக அமையும் சந்தத்துடன் ஓதியவாறே, தஞ்சாவூர் பொம்மை போலச் சாய்ந்தாட வேண்டும். உள்ளங்கை ரேகைகள் போல, உள்ளங்கால் ரேகைகளும் உள்ளன என்பதை பலரும் அறிந்தாலும், பலரும் கால் ரேகைகளைத் தினமுமே பார்ப்பதில்லை! ஆற்றுப் பகுதிகளில் நீராடுகையில் உள்ளங்காலில் உள்ளங்கையால் ஆற்று மண் எடுத்துக் கால் ரேகைகளில் படுமாறு நன்கு தேய்த்து, பிறகு கை ரேகைகள், கால் ரேகைகள் ஒன்றுபடும்படி வைத்து ஆசன யோகாசனம் புரிந்திடும் வழக்கம் இன்றும் உண்டு!

பிருகத் சக்திகள் நிறைந்ததே சோளப் பொரி ஆகும். சிறு சோளப் பொரிகளை எண்ணெயை விட்டுப் பூரிக்கையில் பெரிதாக வடிவெடுத்து இதில் நிறைந்திருக்கும் பிருகத் சக்திகளைக் குறிப்பதாகும். இவ்வாறு எண்ணெய் விட்டுச் சோள முத்துக்களைப் பொரித்துத் தக்க உப்பு, காரம் சேர்த்து ஏழைக் குழந்தைகளுக்குக் கைரேகைகள் படும்படி கை நிறைய அள்ளி, அள்ளித் தானமாக அளிப்பது விசேஷமான பலன்களைத் தருவதாகும். தனக்குத் தேவையான சமயத்தில் பிறருக்கு உதவி செய்து தனக்குத் தேவையான போது பணம், பொருளின்றித் தவிப்பவர்களுக்குக் கொடுத்த பொருள் முறையாகத் திரும்பி வர இந்த சோளப் பொரி தான சக்திகள் உதவும்.

பிருகத் சக்திகள் நிறைந்த மற்றொரு பொருள் மருதாணி ஆகும். ரேகைகள் நிறைய மருதாணி இடுவது கை விரல்களுக்கு மந்திர ஈர்ப்பு சக்திகளை அளிக்கும். மருதாணி இட்ட கரங்களோடு பூக்களைக் கோர்த்து இறைவனுக்குச் சார்த்துவது விசேஷமான கூடுதல் பலன்களை அளிப்பதாகும். பிறருடைய பேச்சைக் கேட்டுக் கணவன் தன்னை வருத்துவதாக எண்ணி வருந்தும் பெண்கள் மருதாணி அரைத்துத் தானமளிப்பதுடன், மருதாணி இட்ட கரங்களோடு பூக்களைக் கோர்த்துப் பெருமாளுக்குச் சார்த்தி வர வேண்டும்.

மருதாணியைப் பகல் நேரத்தில் இட்டுக் கொள்வதே நன்று. மருதாணி இட்ட கரங்களோடு தான தர்மம் செய்கையில் கிருஷ்ண கடாட்சத்தால் திருவருள் கடாட்சம் பெற்ற குசேலனின் ஆசிகள் கிட்டும். வறுமையின் ஊடேயும் ஏழைக் குழந்தைகளுக்கு மருதாணி அரைத்துத் தரும் கைங்கர்யத்தைக் குசேலரும், அவருடைய மனைவியும் ஆற்றி வந்து, கிருஷ்ண பக்தி மார்கமாக, மருதாணித் தான, தர்மப் பலன்களாக வறுமையை அடியோடு களைந்தனர்.

ஸ்ரீவாத்யார்ஐயா ஜீவசமாதி
சிங்கம்புணரி

மருதாணி இட்ட கரங்களோடு ராதா சமேத கிருஷ்ணனை நெடுநேரம் கைவலிக்க வலிக்க வணங்குதல் சிறப்புடையதாகும். கணவனுடன் கொண்டுள்ள எத்தகைய மனத்தாங்கல்களையும் இந்த வழிபாட்டுப் பலன்கள் நிவர்த்தி செய்து தரும்.

சில சமயங்களில் சூரியனைச் சுற்றி வட்டம் பூரித்து நிற்கும். இதற்கு பிருஹத் வளையம் என்று பெயர். தீயதை எண்ணும் போது, செய்யும் போது யாருக்கு இது தெரியப் போகிறது என எண்ணி விடாதீர்கள்! சூரிய, சந்திர சாட்சியாய் உலகில் நல்லது, நல்லது அல்லாதது அனைத்தும் நிகழ்கின்றன. வானத்தில் தீய எண்ணங்கள், தீய சக்திகள் மிதந்து செல்வதால், வானில் நற்கிரண சக்திகள் பாதிக்கப்படுகின்றன. பூவுலகில் அக்கிரமமான காரியங்கள், அதர்மமான எண்ணங்கள் மிகுகையில், சூரிய, சந்திர கிரகங்களைச் சுற்றிக் கருவளையங்கள் ஏற்படும். இதற்கு நிவர்த்தியாகவும், பரிகாரமாகவும் ஆவியில் வேகும் வட்ட வடிவுகளான உணவுப் பொருட்களைத் தயாரித்துத் தானமாக அளித்திட வேண்டும்.

அதர்மமான, தகாத, எண்ணங்கள் அடிக்கடி ஏற்பட்டால், இதற்கு நிவர்த்தியாக, இட்லி, வடை, போண்டா போன்ற வட்ட வடிவமான, உருளை வடிவான பொருட்களைப் படைத்து உச்சிப் பொழுதில் தானமாக அளித்து வருதல் வேண்டும்.

மிகவும் மோசமான எண்ணங்கள் அடிக்கடி மனதில் எழுமாயின், வட்ட வடிவமான வளையங்கள், பூக்கள், டிசைன்கள் உள்ள ஆடைகளை சிங்கம்புணரி ஸ்ரீமுத்து வடுகநாதர் சித்தர் (வாத்யாரையா சித்தர்) ஜீவ சமாதியில் ஏழைகளுக்கு அளித்து வழிபட்டு வருதல் மனம் சுத்திகரிக்க நல்வழி பிறக்கும்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோளக்குடியில் அமாவாசையில் அப்பிரதட்சிணமாகவும், பௌர்ணமியில் பிரதட்சிணமாகவும் வலம் வந்து அன்னதானம் செய்து வர, தீயவழி செல்லும் கணவன், பிள்ளைகள் திருந்த நல்வழி பிறக்கும்.

அன்னதானமே ஆத்ம ஞானமாம்! அன்னதானமே ஞானபூஷணம்! அன்னதானமே ஆத்மநாதமாம்! அன்னதானமே ஆத்ம யோகமாம்! அன்னதானமே யோக க்ஷேமமாம்! அன்னதானமே ஆத்மபாவனம்! அன்னதானமே கர்ம யோகமாம்! அன்னதானமே ஞானயோகமாம்! அன்னதானமே பக்திமார்கமாம்!

அமுத தாரைகள்

பிட்சை எடுத்தல் என்பது, பல இடங்களில் இருந்து அரிசியைப் பெற்று, ஆலய வளாகத்திலேயே விறகடுப்பை அமைத்துச் சமைத்து அன்னமாக்கி, இறைவனுக்குப் படைத்து, ஏழைகளுக்குத் தானமாக அளித்தல் ஆகும். பிட்சை என்பது தனக்காகப் பிச்சை எடுப்பதல்லவே! வேதியர்களும், வசதியானவர்களும், பாடகர்களும் இன்றும் மார்கழியில், பஜனை ஆற்றி, வீதிகளில் பாடி வந்து, பிட்சை எடுத்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதுண்டு. புனிதமான பிட்சை மூலமாகப் பலருக்கும் அன்னதானம் இட்ட புண்ய சக்தி, அரிசியை இட்டவர்களைச் சென்றடையும், அதியற்புதச் சமுதாய இறைப் பணி இது!

பிட்சைக்கான ஆன்மீக இலக்கணமாக, அன்றைய தினம் பிட்சை எடுத்தத் தானியத்தை அன்றே சமைத்துத் தானமளித்து விட வேண்டும், மறுநாளுக்காக ஒரு அரிசி மணியைக் கூட வைத்துக் கொள்ளக் கூடாது என்பது பிட்சையின் நியதியாகும். பிடியரிசித் திட்டம் என்பதாக ஒவ்வொரு வீடாகச் சென்று அரிசியைச் சேகரித்தும் அன்னதானம் செய்வதும் பிட்சை வகையைச் சார்ந்த நல்ல தர்மமே!

ஸ்ரீவல்வில்ராமர் புள்ளபூதங்குடி

அசூன்ய சயன நாள் எனச் சில விரத நாட்கள் வரும். இந்நாட்களில் சுரட்டப்பள்ளி பள்ளி கொண்ட சிவபெருமான், ஸ்ரீமன் ரெங்கநாத மூர்த்தி, புள்ளபூதங்குடி வல்வில் ராமன், ஸ்ரீவாஸ்து மூர்த்தி போன்ற சயனக் கோல மூர்த்திகள் சயன யோகத்தில் இருந்து மீண்டு, சயன யோக தரிசன அம்சங்களைப் பூண்டு அருள்கின்றனர். விரதத்தில் மனம், புத்தி, அறிவு, உள்ளம் ஆகிய நான்கும் நன்கு செறிவதற்கான தியான யோகக் கூட்டுப் பலன்களாக இவை வந்து சேருகின்றன. அசூன்ய யோக சயன விரத நாளில் திரளும் பலாபலன்கள் பிற நாட்களில் கிட்டாதவையாகும். உறக்கம் என்பது ஒருவிதமான யோக நிலையே ஆகும். ஒரு மனித உடலுக்குத் தேவையான அளவில் உறங்குவது நல்ல யோக நிலை. இந்த அளவுக்கு மீறி உறங்குவது இதே உடலுக்குத் தீமை பயப்பதாகின்றது. எனவே, அசூன்ய சயன யோக நாளில், பகலில் உறங்காதும், சூரிய உதயத்திற்கு முன் எழுந்தும், சூரிய மறைவிற்கு முன்னரேயே இரவு உணவை ஏற்றும், சூரிய மறைவிற்குப் பின் உணவை ஏற்றிடாதும், ஸ்ரீரங்கநாதர் போன்ற சயனக் கோல ஆலயத்தில் இரவு நேரப் பூஜைகளை ஆற்றியும், இரவு நேரம் உறங்காது இருப்பதும், அல்லது இன்று ஒரு நாளேனும் இரவு ஏழு மணிக்குள் உறங்கி, காலையில் பிரம்ம முகூர்த்த நேரமான காலை மூன்று மணிக்கு எழுவதாகச் சங்கல்பம் செய்து கொண்டு பிரம்ம முகூர்த்த நேரப் பூஜைகளை ஆற்றுவதும் இவ்விரதப் பலாபலன்களை மேம்படுத்தும், இரவில் செய்த பாவச் செயல்களுக்குத் தக்க பரிகாரங்களைத் தரவல்ல விரதம்.

நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, நாக சஷ்டி போன்ற தினங்கள் நாக தோஷங்களை நிவர்த்தி செய்ய வல்லவை அல்லவா, இதே போலவே, சங்கட ஹர சதுர்த்தி நாள் சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் கரி நாள் மகாபல சனீஸ்வர மூர்த்தி நாளாகும். மகாபலிச் சக்கரவர்த்தி, ஜோதிட ரீதியாக தமக்குச் சில கண்டங்கள் இருப்பதாக அறிந்த போது, சனி வாரந்தோறும் மிகவும் கடுமையாக விரதமிருந்து சனிக்கிழமையும், சங்கட ஹர சதுர்த்தி நாளும் சேர்ந்து வருகின்ற தினத்தில் ஆஞ்சநேயரும், விநாயக மூர்த்தியும் சேர்ந்தருளும் விசேஷமான மூர்த்தியின் தரிசனத்தைப் பெற்றார்.

தர்ப்பாரண்யேஸ்வரராகச் சிவபெருமான் அருள்புரியும் திருநள்ளாறுச் சிவத்தலத்தில் சனீஸ்வர மூர்த்திக்குத் தர்ப்பை கிரீட வழிபாடு மிகவும் ப்ரீதி உடையதாகும். எனவே, கரிநாளில் உங்கள ஊரில் சனீஸ்வர மூர்த்திக்குத் தர்ப்பைப் புல்லால் அழகிய கிரீடம் அமைத்து வழிபடுவதும் விசேஷமானதாகும். பிள்ளைகளுடன் ஏற்பட்டுள்ள பகைமை தீர உதவும்.

தினமும் பழமையான ஆலயத்தில் விளக்கேற்றுதல், தினமும் காக்கை, பசு, நாய்க்குச் சிறிதேனும் உணவிடுதல், ஒரே ஒரு உணவுப் பொட்டலத்தையேனு தினமும் தானமாக அளிப்பது இந்த மூன்றையும் தினசரி செய்து, மந்தகச்ச தீப தூபம் ஏற்றி ஆலயத்தில் வழிபட்டு வந்தால் இதுவே வாழ்க்கையைச் செம்மையாக்கப் பெரும் மூலாதாரமாக அமையும்.

வாரம்  ஒரு முறை சுயம்பு லிங்கத் தலத்தில் கோமுகத்தை (கோயிலில் அபிஷேக நீர் வரும் தாரை) குரு ஹோரை நேரத்தில் சுத்திகரித்து வந்தால் ‘கஸ்மலம்’ என்ற அதிபயங்கர தோஷங்கள், மன அழுக்குகள் அகல உதவும். வெறுப்பு, உணர்ச்சி, உதாசீனம், அகங்காரம், ஆணவம், ego போன்ற மன அழுக்குகளைச் சுத்திகரிக்க உதவும் எளிய வழிபாடே கோமுகச் சுத்திகரிப்பு ஆகும்.

பூவுலகில் இருந்து தமக்குரிய பறவை வடிவங்களில் மட்டுமல்லாது, “astral travel” என்பதான தேவசக்திகள் மூலமாகவும், வான்வெளி மண்டலங்களுக்கு செல்ல வல்ல யோக சக்திகளைப் பூண்டவையே காகங்களும், புறாக்களும், பட்சிகளுமாகும்.

பூவுலகின் தெய்வீக மையமான நம்முடைய பாரத நாட்டின் ஆன்மப் பிரகாசக் கலாச்சாரத்தில், நிறைய வகைப் பூஜைகளைப் பஞ்சாங்கப் பூர்வமாக அளித்திடுவதன் காரணமே, ஒவ்வொரு நாளிலும் பொலியும், காலதேவ சக்திகளை வாழ்வில் நன்கு பயன்படுத்திக் கொள்வதற்காகவே, எனவே பஞ்சாங்கம் என்பது வெறும் காலண்டர் அல்ல, விஞ்ஞானிகளே போற்றும் வண்ணம் துல்லியமான வானியல் நட்சத்திர, கோள, கிரக சஞ்சாரங்களை எளிமைப்படுத்தித் தரும் காலசக்தி சாதனமே பஞ்சாங்கம்!

ஒவ்வொரு வீட்டிலும் பஞ்சாங்கம் இருப்பதே சுபமங்கள சக்திகளைத் தருவதாகும். பஞ்சாங்கத்தைத் தினமும் மூன்று வேளையும் எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொள்வதுமே காலதேவதைகளை வணங்குவதான ஒரு வகைப் பூஜையே!

காகங்களைக் கூட்டமாக வரவழைத்து அனைத்திற்கும் உணவிடும் மாண்பு “காகபலமார்க” தர்மமாகும். இதனை ஆற்றி வருதலால், பிளவு பட்டுள்ள குடும்பம் ஒன்றாகி, சுமுகம் வந்தமைந்திட, காக பூஜா பலன்கள் நன்கு உதவும்.

மஹாபலிச் சக்கரவர்த்தி, சனி வாரந்தோறும் பன்னெடுங்காலம் மிகவும் கடுமையான விரதமிருந்து சனிக்கிழமையும், சங்கடஹர சதுர்த்தி நாளும் சேர்ந்து வருகின்ற தினத்தில் ஆஞ்சநேயரும், விநாயக மூர்த்தியும், சேர்ந்தருளும் “மாருதிகஜராயர்” எனும் விசேஷமான மூர்த்தி சங்கம தரிசனத்தைப் பெற்றார். இத்தரிசனத்தை இதற்கு முன் சனீஸ்வர மூர்த்தி கரிநாள், சங்கடஹர சதுர்த்தியும், சனிக்கிழமையும் கூடி வரும் நாளில் பெற்றமையால், மாருதிகஜராயர் தரிசனம், கஜராயராகிய பிள்ளையார், மாருதியாராகிய அனுமார், சனீஸ்வர மூர்த்திகளின் திரண்ட அனுகிரகத்தைத் தருவதாகும். பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது என்பது “மாருதிகஜராயர்” தரிசனத்தின் உட்பொருளாகும்.

தொடரும் ஆனந்தம்...

“அவர் கடல் மாதிரி வீடு வைத்திருக்கிறார், கப்பல் மாதிரி கார் வைத்திருக்கிறார்...”, என்றெல்லாம் மற்றவர்களைப் பார்த்து பார்த்து பலரும் ஏங்கிப் பெருமூச்சு விடுகிறார்களே தவிர கடவுள் நமக்கு என்னவெல்லாம் செல்வங்களை அள்ளி அள்ளி வழங்கியிருக்கிறார் என்பதை நினைத்துப் பார்ப்பதே இல்லை என்பார் நம் சற்குரு. அவற்றில் ஒன்றே நினைவாற்றல் என்ற பொக்கிஷம். “ஒரு நாள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குப் புறப்படும்போது உங்கள் வீட்டு விலாசம் மறந்து விட்டால் உங்கள் நிலை என்ன? இதை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?” என்று ஒருமுறை கேட்டார் நம் சற்குரு. அப்போதுதான் நினைவாற்றலின் மகத்துவத்தை அடியார்கள் ஓரளவு உணர முடிந்தது.

இது வெறும் கற்பனை அல்ல, நடந்த சம்பவமே. ஒரு முறை உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீனுக்கு தன்னுடைய வீட்டு விலாசத்தை நினைவுக்குக் கொண்டு வரவே முடியவில்லை. இறுதியில் நண்பர் ஒருவருக்கு போன் செய்து தன்னுடைய வீட்டு விலாசத்தை கேட்டு அறிந்து கொண்டாராம். உலக மக்களின் நலுனுக்காகவே தன்னுடைய அறிவை அந்த விஞ்ஞானி பயன்படுத்தியதால் அவர் எந்த குழப்பமான வேதனையையும் மேற்கொண்டு சந்திக்கவில்லை. நம் சபையில் சேவைக்கு வந்த ஒரு அடியாரின் மனைவிக்கு தீடீரென்று தன்னுடைய பெயரைத் தவிர வேறு எதுவும் ஞாபகமில்லாமல் போய் விட்டது. வேறு வழியில்லாமல் அவருடைய கணவர் VRS பெற்றுக் கொண்டு இன்று அமிர்தா அன்னை ஆஸ்ரமதில் சேர்ந்து தன் மனைவியுடன் பணி புரிந்து வருகிறார்.

எனவே திதி வழிபாடு, குறிப்பாக பௌர்ணமி மலைத்தல கிரிவல வழிபாடு நமக்காக கடவுள் அளித்த செல்வங்களை நினைவு கூர்வதுடன், அன்னதானம் போன்ற தான தர்மங்களை இந்த கிரிவலங்களுடன் இணைக்கும்போது அதன் பலன்கள் ஆயிரம் ஆயிரமாய் பெருகும் என்பதை நீங்களே கண் கூடாகக் காணலாம்.

கிரகணம் பற்றி நம் சற்குரு கூறுவது என்ன?
பொதுவாக, சூரிய கிரகணங்களின் போது கண்டிப்பாக உணவு உண்ணுவதைத் தவிர்க்கவும். கர்ப்பிணிகளின் மேல் ஒரு கீற்று சூரிய ஒளி கூட படாத அளவிற்கு அவர்களை பாதுகாப்பாக தனி அறையில் வைப்பது நன்று. கிரகணம் முடியும் நேரம் வரை தங்களுக்குத் தெரிந்த இறைத் துதிகளை அவர்கள் ஓதுதல் நலம்.

சந்திர கிரகணத்திற்கு இத்தகைய பலத்த கட்டுப்பாடுகள் கிடையாது. ஒருமுறை சந்திர கிரகணத்தின்போது நம் சற்குரு ஹோமம் நிகழ்த்தியபோது அந்த ஹோம இடைவெளியில் அடியார்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது. அதே போல் ஒரு சந்திர கிரகணத்தின்போது நம் ஆஸ்ரமத்தில் அன்னதானமும் விமரிசையாக அளிக்கப்பட்டது. இது பற்றி ஒரு அடியார் நம் சற்குருவிடம் வினவியபோது நம் சற்குரு, “என்ன சார் செய்வது? பல மைல்கள் கிரிவலமாக திருஅண்ணாமலையில் நடந்து வந்த பக்தர்கள் பசி வயிற்றைக் கிள்ளுகிறது என்கிறார்கள். நம்மிடமோ சமைத்து வைத்த பிரசாதம் தயாராக இருக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு பிரசாதம் அளிப்பது தவறு என்று அடியேனுக்குத் தோன்றவில்லை...”, என்றார் தாயினும் சாலப்பரிந்து.

நம் சற்குருவின் இந்த வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு தங்கள் கிரகணம் பற்றிய குழப்பங்களை அடியார்கள் நிவர்த்தி செய்து கொள்ளலாம். அன்னதானம், கிரிவலம் போன்ற இறை சேவைகளுக்கு கிரகணத்தின்போது எந்தவித கட்டுப்பாடும் கிடையாது என்பது நம் சற்குரு நமக்கு உணர்த்தும் தொட்டுக்காட்டிய வித்தையாகும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam