தன்னை நம்பாதவரையும் வைத்து பிறர் நலம் பேணுபவரே சற்குரு !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

“வாத்யாரிடம் ஏடாகூடமாகப் பதில் சொல்லி, வாத்யார் ஏதாவது தண்டனை கொடுத்தார்னா, செஞ்சி மலையில் பண்ணின மாதிரி அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டார்னா..!”
சிறுவனுக்கு உடல் வெலவெலத்தது!
“ஆனா..!”
பெரியவரின் “ஆனா” பாஷை இன்னும் முடிவு பெறவில்லையே!
“ஆனா, யாரு தலையில கோடீஸ்வரன் ஆகணும்னு எழுதலையோ அவங்களுக்கு இந்த சுனையே கண்ணுல படாது! மறைஞ்சு போயிடும்!”
“சரி சரி இங்கே பாரு!” என்று தொடர்ந்த பெரியவர், அங்கு பக்கத்தில் கிடந்த பாக்கு மர மடக்கை எடுத்துச் சிறுவனிடம் கொடுத்து,
“இந்த சுனையில் கொஞ்சம் தண்ணி எடுத்துக்கிட்டு வாயேன்! ரொம்பத் தாகமா இருக்கு!”
அவ்வளவுதான், சிறுவன் ஆடிப் போய் விட்டான்!
“கடவுளே! என்னே சோதனை இது?”
தயங்கித் தயங்கி நின்றான் அவன்!
“ஏண்டா, தாகம்னு சொல்றேனுல்ல, பசிக்கிற வயித்துக்கு தண்ணீ கூடக் கொடுக்காத ஜன்மம்டா நீ! அப்படியே உடம்பு சூடா இருந்தா சுனையில் ஒரு முழுக்கும் முழுகிட்டு வா போ!”
“இதில் பெரியவர் ஏதோ பெரிய “சூட்சுமத்தை” வைத்து அனுப்புகிறார் என்ற முடிவிற்கு அவன்தான் எப்போதே வந்துவிட்டானே! வாழ்க்கையில் முதன் முதலாக, ரொம்ப ரொம்ப, ரொம்பவே உஷாரானான் சிறுவன்!
“அண்ணாமலையாரே! அங்காளீ! லோபாமாதா!” என அனைத்துத் தெய்வங்களையும், சித்தர்களையும், மஹரிஷிகளையும் சிறுவன் துணைக்குக் கூப்பிட்டுக் கொண்டான்!
சுனையில் குரு விளையாடல்!

அம்மாவின் அருள் மடியில்...

வெடவெடவென்று நடுங்கிக் கொண்டே சுனை அருகே சென்று கண்களை மூடிக்கொண்டு சாஷ்டாங்கமாக வீழ்ந்து எழுந்தான்!
எழுந்து பார்த்தால்...
என்ன ஆச்சரியம்...
எதிரே சுனையையே காணோம்! நன்றாகக் கண்களைக் கசக்கிப் பார்த்தான்! ஊஹும், ஒன்றையும் காணோம்! சுனை இருந்த சுவடே தெரியவில்லையே!
அவன் நடுங்கியவாறே... பயந்து பயந்து பின்னால் திரும்பினால்...
அங்கே பெரியவர் சிரித்துக் கொண்டே நின்றார்., ஆனால் அடுத்த நிமிடமே சிரித்த முக பாவனையை அவர் மாற்றிக் கொண்டு,
“ஏண்டா, இவ்வளவு நேரமாடா, இதுக்கு? தாகமெடுத்த வாய்க்கு ஒரு வாய் தண்ணீ கூட கொடுக்காதவன்னால என்னடா பிரயோஜனம்?” என்று சப்தம் போட்டு அதட்டிக் கூறியவாறே, அவனிடம் இருந்து வெடுக்கென்று மடக்கைப் பிடுங்கிக் கொண்டு எதிரே சென்றார்.
“க்ளொ க்ளா, க்ளொ க்ளா க்ளொ க்ளா, க்ளொ க்ளா” என்ற சப்தத்துடன், அவன் நீரில் இறங்கும் சப்தம் கேட்டது, சிறுவன் மலைத்துப் போய் நின்றான், கண்களைக் கசக்கிப் பார்த்தால் அங்கு சுனை நிறைய நீர் இருக்க, பெரியவர் சர்வ சாதாரணமாக நீரை மொண்டு கொண்டிருந்தார்.
சிறுவனால் நம்பவே முடியவில்லை! மீண்டும் கண்களைக் கசக்கிப் பார்த்தான், இப்போது சுனை தெரியவில்லை! ஆனால் பெரியவர் குனிந்து நீரை எடுப்பதான “ஜல சப்தங்கள்” மிகவும் துல்லியமாகக் கேட்டன.
பாக்கு மடக்கு நிறைய நீரை எடுத்துக் கொண்டு, முகம், கை, கால் கழுவினாற்போல, ஈரம் சொட்டச் சொட்ட வந்த பெரியவரைப் பார்த்து அவன் அசந்தே போனான்!
வெள்ளியங்கிரியில் என்ன குருகுலவாசத் திருவிளையாடலோ இது?
சமாளித்து ஏமாந்த படலம்!
“ஏண்டா! சுனை ரொம்ப ஆழம்னு பயந்துக்கிட்டு அதுக்குள்ளாற இறங்கலியா? என்ன இருந்தாலும் நீ சின்னப் புள்ளை தானே!” – ரொம்பவும் அப்பாவித்தனமாகப் பெரியவர் கேட்டிடவே,
“உனக்குத் தெரியாதா வாத்யாரே! எது ஆழம், எது ஆழம் இல்லைன்னு!” பிரமாதமான பதிலுடன் சமாளித்த சிறுவனின் மூக்கிற்குக் கீழ் பெரியவர் தடவிப் பார்த்தார்.
“என்ன வாத்யாரே இது?”
“ஒண்ணும் இல்லைடா கண்ணு! மீசையில மண்ணு ஒட்டி இருக்கான்னு பார்த்தேன்!”
சிறுவன் குபீரென்று சிரித்திட, பெரியவரும் சேர்ந்து சிரித்தார்!
“இங்கே போற வழியிலேயே நிறைய சுனைகள் இருக்குடா! இளமைய முதுமையாக்கும், முதுமையை இளமையாக்கும்! அதுவும் கொஞ்ச காலத்துக்குத்தான்!”
“இங்கேந்து பார்த்தா உச்சி தெரியுமா வாத்யாரே!”
-சிறுவன் தன் பழைய கேள்வியைப் போட்டுப் பார்த்தான்.
“அதுக்குள்ள எப்படிடா உச்சி வரும்! இவ்வளவு விஷயங்களை நீ பார்க்கணும்னு உன் தலையில எழுதி இருக்கே! அதுக்குள்ள உச்சி தெரியணும்னா எப்படி?”
“இங்க தாண்டா சிறுவாணி ஆறு உற்பத்தி ஆகுது. கலைமகள், “தான் கற்றது கையளவுன்னு” அடக்கமா அம்பாள் கிட்டேந்து கத்துக்கிட்ட வித்யா சக்தித் தலம்! இங்கே படிச்சா, மந்திர உபதேசம் செஞ்சா,, ரொம்ப காலத்துக்கு நிலைச்சு நிக்கும்!”
இப்படிப் பல தெய்வீக விஷயங்களைப் பெரியவர் பொக்கிஷமாய்க் கொட்டிச் செல்ல ...
தன் கபால ஓட்டிற்குள் நிரப்பிட முயன்றான் சிறுவன்!
அதற்குள் சற்று இருட்டிடவே.... பெரியவர் ஏதேதோ பழங்களைக் கொண்டு வந்தார். அவற்றை உண்டு, நன்கு நடந்து வந்த களைப்பில் அவன் உறங்கலானான். பெரியவர் பக்கத்தில் கொட்டக் கொட்ட விழித்துக் கிடந்தார்.
என்னதான் களைப்பில் தூங்க முயன்றாலும் சிறிது தூங்கிய பின் சற்று எழுந்தான்! அவ்வளவுதான், “டேய் நீ தூங்கினது போதும்டா! இப்ப நம்ம முறை!” என்று சொல்லியவாறே பெரியவர் அவன் மடியில் படுத்துக் கொண்டு விட்டார்!
“போச்சுடா, இனிமே நம்ம தூங்க முடியாதே!”
சிறுவன் அங்கலாய்த்துக் கொண்டான்!
தூங்காமல் தூங்கினார்!
சற்று நெடுந் தூரத்தில்...
நல் தங்கமயத் தேர்கள் வானில் இருந்து வந்திறங்கின! தெய்வ மூர்த்திகள் போல் பலரும் வந்திறங்கினர்.
சிறுவனுக்கு அருகில் சென்று பார்க்க ஆசை! ஆனால் இவர் பரசுராமர் போல் மடியில் படுத்திருக்கிறாரே!
சற்று ஆவலுடன் எட்டி, எட்டிப் பார்த்தான் சிறுவன்!
“ஒண்ணுமில்லைடா... நாளைக்கு பக்கத்து ஊர்ல ஒரு வீட்டுல திவசமாம்! இன்னிக்கே பித்ரு மூர்த்திகள் வந்து இறங்கறாங்க! இது ஹரிவாச(ர)ம்னு பேரு!!” என்று சொல்லிக் கொண்டே புரண்டு படுத்தார்.
சிறுவனுக்கு தூக்கி வாரிப் போட்டது போலிருந்தது! தூங்குகிறவருக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்?
“தூக்கமா, நாங்க தூங்கறதே கிடையாதுடா! நாங்க தூங்கியே எத்தனையோ நூறு வருஷம் ஆகுது? தூங்கினா இதை எல்லாம் பார்த்துச் சொல்ல முடியுமா? படுத்தாத் தூக்கம் கூட வர மாட்டேங்குது?” ஆம் பெரியவர்தான் அலுப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார்! சிறுவன் குனிந்து அவருடைய கண்களை இருட்டில் பார்த்தான்!
அவரோ ஜம்மென்று “குறட்டை”விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்!
“ஸென் தத்துவம் போல்” இவரைப் புரிந்து கொள்ள முடியாத மடையன் ஆகி வருகிறோமே! சிறுவன் மண்டையைப் பிய்த்துக் கொண்டான்!

உறக்கநிலை

உறக்க நிலை யோகமுறை
பூமியின் ஈர்ப்பு விசை, வான சாத்திரம், “உறக்க நிலை” யோகமுறை வழிபாடுகள், உடலுள் உறையும் கோள்கள்!
ஈர்ப்பை “இறையருளென” ஓது!
பூமியின் புவி ஈர்ப்பு விசை ஏதோ விஞ்ஞானப் பூர்வமான கண்டுபிடிப்பு என்றே பலரும் எண்ணுகின்றனர். இதைப் பற்றி நம் முன்னோர்கள் கோடிக்கணக்கான விளக்கங்களை அளித்துள்ளனர். பூமிநாதர், பூமீஸ்வரர், பூலோகநாதர் எனப் பெயர் பூண்டு இறைவன் அருளும் ஆலயங்கள் யாவும் புவி ஈர்ப்பு பற்றிய ரகசியங்களை உணர்விப்பவை ஆகும். இத்தலங்களில் தாம் (செவலூர், மணச்சநல்லூர்) பூமி, ஆகாயம் பற்றிய ஆராய்ச்சிகளை இறையருளால் பண்டைய வல்லுநர்கள் பெற்றனர். இத்தலங்களுக்கும் பூமியடி நீரோட்ட மார்கமாகப் பல திருத்தலங்களுக்கும் தெய்வீகப் பூர்வமான இணைப்புகள் உண்டு.
மேலும், “ஞான கூபம், எண் கோணக் கிணறு” போன்ற பெயருடன் அமையும் தலத்தீர்த்தங்களில் குறித்த ஹோரையில் பக்திப் பூர்வமான வழிபாடுகளுடன் இடும் தாமரை மலர்கள், குறித்த பிற தலங்களில், குறித்த நாளில் பெறப்படுகின்ற அற்புதத்தைப் பலரும் கண்டு உணர்ந்துள்ளனர்.

ஸ்ரீபூமிநாதர் செவலூர்

ஸ்ரீபூமிநாதர், பூமீஸ்வரர், பூலோகநாதர் போன்ற “பூமி” சம்பந்தமான பெயர்களைத் தாங்கி அருளும் தலங்களில், “விசேஷமான” புவி ஈர்ப்பு அம்சங்கள் நிலவுகின்றன. இவற்றை விஞ்ஞானக் கருவிகளால் அளவிடவோ, உணரவோ இயலாது.
“எதையும் இறையருளால்தான்” பெற முடியும், என்று உளமாற, எண்ணி அமையும் ஆராய்வே, நன்முறையில் பலன்களைத் தரும். “நாம்தாம் கண்டு பிடித்தோம்” என்ற செருக்கு வருமாயின் வாழ்க்கையில் சறுக்கிவிடும்.
புவி ஈர்ப்பிற்கு அப்பாற்பட்ட புவியோகத் தலங்கள்
இன்றைக்கும், திருஅண்ணாமலை, செஞ்சி, வெள்ளியங்கிரி, கேதார்நாத் போன்ற மலைப் பகுதிகளில், “புவி ஈர்ப்பு விசையற்ற” குகைப் பகுதிகள் உண்டு. இவை ஆழ்நிலை தியானத்திற்கு நன்கு உதவும். இத்தகைய பல பாறைகளிலும் இன்றும், என்றுமாய் ஆழ்ந்த யோகவர நிலைகளில், எத்தனையோ சித்தர்கள், மஹரிஷிகள் குகைகளில் தவம் பூண்டுள்ளனர். குறித்த ஒரு சிறு பாறையைச் சற்றே நகர்த்தினால் போதும், நாம் சற்றும் காற்றுப் புகாது என்று எண்ணும் இடத்தில், “ஜில்” என்ற குளிர்ந்த நறுமண மூலிகை வாசனைகளின் ஊடே, பாறையின் அடியில் சித்தர்கள், மஹரிஷிகள் நம் கண்களால் பார்க்க முடியாத ஒளிப் பிரகாசத்தில் தவம் பூண்டு கிடப்பதைக் குருவருளால் காணலாம். இதனைக் “கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை!”
“கண்டால்” கணையாய்த் துளைத்தெடுப்பரே!
“குகைகளில் தவம் பூண்டு என்ன பயன், இவர்கள் வெளியே வந்தால் மக்களுக்கு உதவலாமே!” என்று எண்ணிடலாம். ஆனால் இத்தகைய தெய்வீகப் புனிதர்கள் வெளி வந்தாலோ “அதைக் கொடு, இதைக் கொடு” என லௌகீகமான ஆசைகளுடன் அவர்களைப் பிய்த்துப் பிடுங்கி, “கேட்டது  கிடைக்கா விட்டால், அவர்களைத் துன்புறுத்தும் இழிநிலையில் அல்லவோ மனித சமுதாயம் அமைந்துள்ளது. இதனால்தான் கலியுகத்தில் சத்குருமார்கள் “இலைமறை கனியாக” உறைந்து “நாடிச் சரணடைந்து நாடுவோர்” உணரும் பாங்கில் அருட்பணி ஆற்றுகின்றனர். “அன்புடன் கூவி அழைத்தால்” அவர்களே தாமே முன் வந்து கருணையுடன் நல்வழி காட்டுவர்!
மேலும் ஒருவருக்குப் பலன்கள் கிட்டி, இன்னொருவருக்குக் கிட்டாவிட்டால், பொறாமையால் அவதூறுகளைப் பாய்ச்சி, உத்தமர்களுக்கு வேதனைகளைத் தருவதாகவும் அல்லவோ கலியுக மனித சமுதாயம் இழிவை நாடிச் செல்கின்றது. இதனால்தான், உத்தமத் தெய்வீக நிலைகளில் இருக்கின்ற சத்குருமார்கள் “நம்பிக்கையுடன்” நாடி அடைவதாகவே சமுதாயத்தில் உறைகின்றனர்.
புவி ஈர்ப்பிற்கு அப்பாற்பட்ட “பீதாம்பர யோகம்”
“பீதாம்பர யோகம்” என்ற வகையில், பூமிக்கு மேல் குறித்த உயரத்தில் மிதந்தவாறு, “அசல யோகம்” பயில்கின்ற அற்புதமான யோக முறைகளும் உண்டு. இவற்றை அறிந்தவர்கள் தாம் “Astral travel” என்ற வகையில் பிற லோகங்களுக்குப் பயணம் செய்ய முடியும்.
உலக மக்கள் அனைவரும் இந்த “பீதாம்பர யோகக்” கலையை ஓரளவேனும் அறிந்தவர்களே! ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒன்பது விதமான சரீர உறைவுத் தன்மைகள் இருப்பதால், எந்த சரீரத்தில் இது பதிந்துள்ளது எனப் பகுத்தறிவால் உணர்ந்து செயல்படும் திறன் அமைய வேண்டுமே!
“அசல சுந்தரி” என்ற பெயரில் அருளும் அம்பிகை “பீதாம்பர யோக” சக்திகளை அருளவல்ல ஈஸ்வரி ஆவாள். “அசலம்” என்றால் உள்ளம், மனம், உடல் மூன்றும் அசைவற்ற யோக நிலை ஆகும். சர்வேஸ்வரனே அனைத்துச் சலனங்களாகவும் (அசைவுகளாகவும்), சலனங்களுக்கு அப்பாற்பட்ட “அசலேஸ்வரராகவும்” துலங்குவதால், அம்பிகை மானுட வடிவில் இறைவனின் இத்தகைய விபூதிகளைத் துய்க்க விழைந்து, ஒரு யுகத்தில் கடுமையான பீதாம்பர யோக நிலையில் ஆழ்ந்திட்டாள்.

ஸ்ரீபூலோகநாதர் திருச்சி

“நகர் கிராமத்தில் அருளும் “அப்ரதீஸ்வரர்”
இத்தகைய அபூர்வமான யோக சக்திகளின் அற்புதத்தால், பிரபஞ்சத்தின் அனைத்துக் கோள்களும், நட்சத்திரங்களும் அம்பிகை தவமிருக்கும், தலைத்தை வலமாகவும் (பிரதட்சிணம்), இடமாகவும் (அப்பிரதட்சிணம்) வலம் வரலாயினர். “அசலமான” தவத்தில் இருந்து ஒரு “நவமித் திதி” நாளில் மீண்ட அம்பிகை, தன்னைச் சுற்றி, சூரிய, சந்திர, ராகு, கேது மூர்த்திகள் உட்பட கோடானு, கோடி கோளங்கள், நட்சத்திரங்கள் வலமாகவும், இடமாகவும் வந்து வணங்குவதைக் கண்டு அதிசயித்தனள்.
அனைத்துக் கோடி நட்சத்திரங்களும், கோள மூர்த்திகளும், கோடானு கோடி தேவதைகளும் ஈஸ்வரியை வணங்கிடவே அனைத்துக் கோள்களும், “சலனமாக நகரும்” இடமான அந்த இடத்தில், “நகர, நாகர, நாக” சக்திகள் மிளிர்வதை அம்பிகை உணர்ந்தனள். “கோள்கள் நகர்ந்து, பிரதட்சிணமாக, அப்பிரதட்சிணமாக வரும் அந்தக் (கோள) நகர் எனும் திருத்தலத்தில் துலங்கும் “இறைவனின்” விசேஷமான சுயம்பு வடிவே இதற்குக் காரணம் எனவும் ஞானப் பூர்வமாக அம்பிகை அறிந்தனள்!
உடனே, ஆங்கே இறைவனைக் கோடானு கோடி ஸ்வர்ண வில்வ தளங்களால் உலகம்மையாய் ஆதிபராசக்தி சிவபெருமானை அசல ரூபராகப் பூஜித்திட... அத்தலத்தில் சர்வ தளங்களிலும் “ஸ்வர்ண வில்வ நாணயப் பொழிவு” நிரம்பி, ஆங்கே “அப்ரதீஸ்வரர்” சுயம்பு லிங்க மூர்த்தியாக சர்வேஸ்வரன் தோன்றிக் காட்சி அளித்து, அம்பிகையின் “சலனமற்ற யோக” நிலையை வாழ்த்தி அருளினார்.
ஸ்ரீஅதுல சுந்தரி (ஸ்ரீஅசல சுந்தரி) ஸ்ரீஅப்ரதீஸ்வரர்
மேலும், சர்வ சலனங்களும் அற்ற அபூர்வமான முறையில், உலக அன்னை, மானுட வடிவில் யோகம் பூண்டமையால், அம்பிகைக்கு “அதுல சுந்தரி” என்ற பெயரையும் சூட்டி அருளினார். பிறயுகங்களில் “அசல சுந்தரி” என்ற பெயரையும் அம்பாள் பெற்றாள். இரண்டுமே அற்புதமான நாமங்களே!
இவ்வரிய வான சாத்திர சக்திகள் நிறைந்த தலமே திருச்சி – லால்குடி அருகே உள்ள “நகர்” திருத்தலமாகும். திருச்சி லால்குடி செல்லும் வழியில் திருமாந்துறையை அடுத்த உட்பிரிவுச் சாலை வழியே சென்றால் “நகர்” சிவத்தலத்தை அடைந்திடலாம். வான சாத்திர சக்திகள் நிறைந்த தலம், இங்கிருந்து கோளங்கள், நட்சத்திரங்களைத் தரிசிப்பது மிகவும் விசேஷமானதாகும். இங்கு “வானியல் ஆராய்ச்சி நிலையம்” அமைவது உலகில் வேறெங்கும் கிட்டாத பல அபூர்வமான கோள, நட்சத்திர தரிசனங்களைப் பெற்றுத் தருவதாகும்.
அறிய வேண்டியதை அறிந்தால் போதும்!
வான சாத்திர ரகசியங்களை வெறுமனே “விஞ்ஞானப் பூர்வமாக” முழுதுமாக அறிய இயலாது, வான சக்திகள் பலவும் ஒவ்வொரு மனிதரின், ஜீவனின் உடலுக்குள்ளும் நிறைந்துள்ளன, இவற்றை நன்கு விருத்தி செய்து கொண்டு, வான்வெளியில் பிற மண்டலங்களில், கோள்களில் உள்ள உத்தம சக்தித் துறையினரை, பித்ரு மூர்த்திகளை, பித்ரு லோக தேவாதி தேவதா தேவதைகளைத் தக்க சத்குருவின் துணையுடன் தொடர்பு கொண்டு அவரவருக்குத் தேவையான வான்வெளி விஷயங்களை மட்டும் ஆன்மீக ரீதியாகப் பெற முடியும்.
அனைவரும் அனைத்தையும் அறிந்து யாது பயன்? அறிய வேண்டியதை, அவரவர் அறிய வேண்டிய நேரத்தில் அறிந்தால் போதுமானதன்றோ!
புகழ், செல்வம் பெறுதல், வியாபார நோக்கங்களுக்காக ஒரு போதும் வானசாத்திரத் துறையை அணுகுதல் கூடாது. அப்படி அணுகினால் வான சாத்திரம் துணை புரியாது மறைந்து விடும்! இதனால்தான் வான சாத்திரத்தில், விஞ்ஞானத்தால் ஒரு வீசம் சதவீதம் கூட எதையுமே பல்லாயிரம் ஆண்டுகளாக அறிய முடியாமல் போகின்றது. “அனைத்தும் இறையருளால்தான் அறியப்படுவது” எனச் சத்தியப் பூர்வமாக உதித்தால்தான், இறைவனே மனங் கனிந்து, வான்திரை அற்புதங்களை, தெய்வ ரகசியங்களைச் சித்தர்கள், மஹரிஷிகள் மூலமாகவே ஓரளவு ஞானப் பூர்வமாக உணர்த்துவார்.

பூமியினுள் செறியும் புவிப்புலம்
மனிதனுக்குள், ஒவ்வொரு ஜீவனுக்குள் உறையும் உள்உலக வான்வெளி என்பது என்ன? இதற்கு நாம் வாழும் பூமியினுள் உறையும் உட்புலத்தைப் பற்றிய ஞானத்தை அடைதல் வேண்டும்.
பூமி சுழன்று கொண்டே இருப்பதாலும், ஒரு விநாடிக்குள் பூமியானது கிட்டத்தட்ட 11 மைல் தூரம் நகன்று விடுவதாலும், நாம் காணும் வானப் பரப்பு மாறிக் கொண்டே இருக்கிறது. மேலும் நாம் பூமியின் மேற்பரப்பில்தான் வாழ்கின்றோம். பூமியின் உள்ளேயும் அந்தர் மார்க ஜீவ வாழ்க்கை உண்டு. எனவே, வெறும் கல், மண் பாறை, நீர், கனிமங்கள் மட்டுமே பூமியினுள் இருப்பதாக எண்ணுவது தவறே! வான்பரப்பிற்கும், பூமியின் உட்பரப்பிற்கும் ஆன்மீகத் தொடர்புகள் நிறையவே உண்டு.
எறும்புகள் இவற்றை நன்கு அறிந்தவை! எறும்புகளுடன் ஆன்மீக ரீதியாகத் தொடர்பு கொண்டால், பூமியின் உட்பரப்புப் பற்றிய ரகசியங்கள் தேவையான அளவு புலனாகும். நந்தி, ஆலயத் தல மரம், ஆலய மதில் தேவதைகளுடன் பேசுவோரும் உண்டே! எனவே பிற ஜீவன்களிடம் இருந்து மனிதன் பெற வேண்டிய அறிவுப் புலன்கள் நிறையவே உண்டு. இவை எல்லாம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட இறைமைத் துறையாகும். ஆனால், கலியுக மனிதனோ புனிதமான நேரத்தை வீணடித்துக் கொண்டுள்ளானே!
குழந்தைகளிடம் தெய்வீகம் சிறக்கட்டும்!
அறிவில் சிறத்தல் என்பது ஸ்ரீராகவேந்த்ர சுவாமிகள் போன்று ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் இறையருளால் வல்லமை பெறுவதாகும். 5 வயது வரையில் குழந்தைகளிடம் செழுமையான தெய்வீகத் தன்மைகள் பதிந்து இருப்பதால், தற்காலக் கல்வித் துறையில் 5 வயதுக்கு மேல்தான் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயமான நியதி ஏற்படுத்தப்பட வேண்டும். தற்காலத்தில் “திணிப்புக் கல்வி மூறை” நிலவுவதால், Pre KG, LKG, UKG  என 5 வயதுக்கு உள்ளாகவே, தேவையற்ற விஷயங்களைக் குழந்தைகளின் மனதில் திணிப்பது, அவர்களுடைய தெய்வீகத் தன்மைகளைப் பாதித்து, மூன்று, நான்கு வயதிலேயே பயம், பொய், பொறாமை, பகைமை, விரோதம் போன்றவை ஏற்பட்டு விடுகின்றன.
ஒவ்வொருவரும் தாங்கி இருக்கும் ஒன்பது சரீரங்களும் ஆன்மப் பூர்வமாகச் சந்திப்பது உறக்கத்தில் தாம்! யோகியர்கள் இதனை விழிப்பு நிலையிலேயே ஆற்றி விடுகின்றார்கள். இதனால்தான் உத்தம “சத்குரு” ஒரு போதும் உறங்குவதில்லை! (இந்த இதழின் “அடிமை கண்ட ஆனந்தம்” பகுதியைப் பார்க்கவும்) அவர்கள் உறங்குவது போல் தோன்றுவதும் “யோக சயனமே”! ஏனெனில் சாதாரண மனிதர்களைப் போலன்றி, உலகியல் உணர்வுகளுடனும் யோகியர்கள் சில தருணங்களில் “யோக சயனம்” பூணுவதுமுண்டு!

அறமுடைக் கடமைகள்

ஆலயப் பூஜகர்களின் அறமுடைக் கடமைகள்
ஜாதி, மத பேதமின்றி அனைவருக்காகவும் இறையுருவைப் பூசனை செய்யும் அறப் பணியான பூஜகர் பணி, பூர்வ ஜன்மப் புண்ணிய சக்தியால் கிட்டும் பெரும் பாக்யமே எனப் பூஜகர்கள் உணர்ந்து தியாகமயமான வாழ்வில் நற்பண்புகளுடனும் சிறத்தல் வேண்டும்!
பூசனையாளர்களாகிய பூஜகர்கள் அப்பழுக்கற்ற உத்தமப் பக்தியுடனும், தர்மம், நல்ஒழுக்கம், சத்தியம், வாக்கு நாணயம், தியாகம் போன்ற உத்தமப் பண்புகளுடன் ஜாதி, மத, இன, குல பேதமின்றி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அறச் சீலச் செம்மல்களாய் அனைவரும் போற்றும் வண்ணமும் சமுதாயத்தில் வாழ்ந்து பிரகாசிக்க வேண்டும்.
ஆலயத்தில் பூஜிக்கின்ற பாக்யத்தைப் பெற்ற பூசாரிகள், பண்டாரங்கள், அர்ச்சகர்கள், குருக்கள், பட்டாச்சாரியார்கள், பண்டாக்கள் போன்றோர், இறையுருவைச் சமுதாயச் சார்பாக நெருங்கித் தொட்டுப் பூஜிக்கின்ற பாக்யத்தைப் பூர்வ ஜன்ம புண்ய சக்தியால் பெற்றுள்ளமையால், மிக மிகப் புனிதமான வாழ்க்கையை மேற்கொண்டு நன்னெறிகளில்தாம் ஒழுகுதல் வேண்டும்.
இறைவன் அளித்துள்ள ஆறறிவைப் பூண்டுள்ள மனிதன், கலியுகத்தில் பலவிதமான சுயநல, முறையற்ற சுகபோகங்களுக்கு ஆட்பட்டு மது, முறையற்ற காமத் தீச்செயல்கள், புகை பிடிப்பு, போதை, லாகிரி வஸ்துக்களுக்குப் பகுத்தறிவை அடகு வைத்து வாழ்கின்ற வேதனையான நிலை உருவாகி வருகின்றது. இதனால் பட்சிகள், விலங்கினங்கள், புழு, பூச்சிகள் போல் ஓரறிவு, ஈரறிவு உடையோராய் கலியுகச் சமுதாயத்தில் பலரும் வாழ்வதால், கலியுக மனிதர்களை ஆன்மீக ரீதியாக உய்விப்பதில், தான தர்மங்களும், வேத சக்திகளும், பூஜை, யோக, தவ, ஞான சக்திகளும்தாம் பெரிதும் துணை புரிகின்றன.

இவற்றுக்கு மூலாதாரமே ஆலய வழிபாடுகளாக அமைவதால், ஆலயப் பூஜைகளைச் செம்மையாக ஆற்ற வேண்டிய பூசை இயக்குநர்களான பூஜகர்கள், உத்தமத் தமிழ் மாமறைத் துதிகள் அல்லது தேவமொழி மறைத் துதிகள் அல்லது இரண்டிலுமே அறிய வேண்டிய மாமந்திரங்களை முறையாக அறிந்து மனிதச் சமுதாய வேன்மைக்காகத் தினமும் ஓதி வருதல் வேண்டும்.
மாமறைத் துதிகளைத் தினமும் பொதுச் சமுதாய நலவளச் சங்கல்பத்துடன் ஆறு வேளைகளிலும் ஓத வேண்டிய கடமை பூஜகர்களுக்கு உண்டு. உலகின் அனைத்து மொழிகளும் கலைவாணியின் அருள் மொழிகளே! அகத்தியரின் அருட்புனலான தண்டமிழும், தேவமொழியும் உலக மொழிகளுக்குத் தாயும், தந்தையுமாய், இறைவனின் இரு கண்சக்திகளாய்த் துலங்குவதால், தமிழ் மாமறைகளை, அறிந்தால் தேவமொழித் துதிகளோடு குறைந்தது ஆறுமணி நேரமாவது தினமும் ஓதித் தம் உள்ளம், மனம், உட லைப் புனிதப்படுத்தி, சத்திய சீலராகச் சமுதாயத்திற்கு நல்வழிகாட்டியாகப் பிரகாசித்துச் சிறத்தல் வேண்டும்.
மக்கள் வினைகள் மறையவர் தலையில்!
“மக்கள் செய்வது மன்னன் தலையில், மன்னன் செய்வது மறையவர் தலையில்!” என்பது முதுமொழி வாக்கு. அதாவது, மக்கள் செய்கின்ற தவறுகள் மன்னர்கள் அல்லது ஆட்சியாளர்களை வந்தடையும். இவற்றோடு மன்னர்கள் அல்லது ஆட்சியாளர்கள் செய்யும் பாவ வினைகளும் மறையவர்களாகிய பூஜகர்கள், பூசாரிகளை வந்தடையும்., மறையவர் எனில் குறித்த இனத்தாரைக் குறிப்பதன்று.
அக்காலத்தில் மக்கள் சமுதாயத்தில் ஆட்சி முறையானது, “மன்னன், மக்கள், ஆலய மாட்சி” என்ற முக்கோணப் பரிபாலன அம்சத்தில் பதிந்து வந்தமையால், நீதி, நியாயம் நேர்மை, சத்தியம் அனைத்தும் நன்கு பொலிந்தன, பண்டையத் தமிழ் மாமன்னர்கள் பக்தியுடைத் தர்மத்தில் சிறந்தமையால் ஆலயத்தில் இறைவனிடம் நேருக்கு நேர் உரையாடும் அற்புத இறை மாண்பினைப் பெற்றிருந்தார்கள். ஆனால் ஆட்சியாளர்களிடம் தர்ம நெறிகள் மங்கும் போது, அதாவது அக்காலத்தில் மன்னர்கள் பக்தி சிரத்தை குன்றி ஆட்சி செய்யும் போது, அவர்கள் அதர்மமான செயல்களைச் செய்யத் தலைப்படுகின்றார்கள். இதனால், சமுதாயத்தில் அசத்தியம், அதர்மம், நாணயமின்மை போன்றவை பெருகி, மக்களுக்குப் பெருந்துன்பங்களாக வந்து சேர்கின்றன.
இதனால் மக்களும் வெறுப்புற்றுப் பகைமை, பேராசை, மாற்றான் மனை நோக்குதல், மது, போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், காமத் தீவினைகள், விரோதம், குரோதம் போன்றவற்றிற்கு ஆளாகித் தீய செயல்களில் ஈடுபடுவதால், இது மன்னருக்கே, ஆட்சியாளர்களுக்கே பெரும் போராட்டமாக ஆகிவிடுகின்றது. இவ்வகையில்தான், மக்களுடைய துன்பங்கள் யாவும் மன்னன் அல்லது ஆட்சியாளர்களின் தலையில் வீழ்ந்து, இவையாவும் ஆலய பூஜகர்களை ஒட்டு மொத்தமாகத் தாக்குகின்றது.
விரத நெறிகளில் மேன்மை காண்க!
சமுதாய நலன்களுக்காக, ஜாதி, மத, இன குல பேதமின்றி அனைவருக்காகவும், அனைத்து ஜீவன்களுக்காகவும், தியாகமயமாக, சுயநலமற்று, இறைவனைப் பூஜிக்கின்ற பெருங் கடமையைப் பூஜகர்கள் பெற்றிருப்பதால், ஆலயத்தில் ஆறு வேளை பூஜைகளையும், பஞ்சாங்கத்தில் வரும் அனைத்துப் பண்டிகைகளையும் விரதாதிகளையும் தினமுமே முறையாக பக்திப் பூர்வமாக ஆலயங்களிலும் அனுசரித்து, இல்லற வாழ்க்கையிலும் மேன்மை செறியக் கடைபிடித்திட வேண்டும்.
மேலும், ஏகாதசி விரதம், திருவோண, கார்த்திகை விரதங்கள், மூன்று வேளை சந்திப் பூஜைகள், 96 நாட்களில் அமையும் ஷண்ணாவதித் தர்ப்பணப் பூஜைகள் மற்றும் பூஜகர்களுக்கு உரித்தான நித்தியக் கடமைகள் அனைத்தையும் பண்புடன் முறையான நியதிகளுடன் கடைபிடித்து வாழ்தல் வேண்டும்.
பூர்வ ஜன்மப் புண்ணிய சக்தியால் வருவதே பூஜகத் துறைப் பணி
ஜாதி, மத, இனத் துவேஷமில்லாது அனைவருக்கும் இறையருளை பெற்றுத் தரும் இறைச் சிறு கருவியாக சமுதாய நலன்களுக்காக, அகில, உலக ஜீவ நலன்களுக்காகப் பூஜிக்கும் அறப் பணியே அரும்பெரும் பாக்கியமாகக் கிட்டியுள்ளது என்பதைப் பூஜகர்கள் மனச் சாட்சிப் பூர்வமாக உணர்ந்து, அனைத்து வகை விரதங்களையும் பூஜை முறைகளையும் தினசரியுமே ஆத்மார்த்தமாகக் கடைபிடித்தால் தான் சகல வகையான சமுதாயத் துன்பங்களுக்கும் நிவாரணத்தைத் தேடித் தரும் அனுபூதிகளில் மேன்மை பெற முடியும்.
பூஜகர் பணி என்பது இறையருளால், பூர்வ ஜன்மப் புண்ணியப் பலாபலன்களாகக் கிட்டியத் தியாக மயமான வாழ்வு என்பதால், பிறரைப் போல் வசதிப் பூர்வமாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்களைத்  தவிர்த்து, இறைவன் அளிக்கின்றதையே மனப்பூர்வமாக ஏற்று நல்ல மனத் திருப்தியுடன் வாழ்தல் வேண்டும்.
பாரதக் கோயில் பூஜைகள் யாவும் உலக ஜீவன்கள் அனைவருக்குமாகவே! எனவே, அகில உலக மொத்த ஜீவ சமுதாயத்திற்குமான ஆலயப் பூஜைகளை நடத்தித் தர வேண்டிய உத்தமப் பொறுப்பில் இருப்பதால், நல்ஒழுக்க நெறிகளில் ஒரு சிறிது தவறினாலும், பூஜகர்கள் கடும் சாபங்களையும், கடும் விளைவுகளையும் ஏற்க நேரிடும். இதுவே “மக்கள் செய்வது மன்னன் தலையில், மன்னன் செய்வது மறையவர் தலையில்!” என்ற முதுமொழி உண்மைப்பாடாக உரைக்கப்படுகின்றது.
ஒப்பு நோக்குதல் ஒரு போதும் வேண்டா! தப்பாமல் தகைமை காண்!
“அரசியல், சினிமா, அலுவலகம், வியாபாரம்” போன்ற துறைகளில் இருப்போர் தவறுகளைச் செய்தும் சுகமாகத்தான் வாழ்கின்றார்களே என்று பூஜகர்கள் தம் வாழ்க்கை நிலையை ஒரு போதும் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்தல் கூடாது. கலியுகத்தில், எத்தகைய தவறு செய்தவர்களும் சரணடையும் சரணாலயமாக ஆலயம் விளங்குவதாலும், ஆலயப் பூஜைகளை பூஜகர்களை நம்பியே சமுதாயமே ஒப்படைத்திருப்பதாலும், பூஜகர்களின் நன்னடத்தை, நல்ஒழுக்கம், சத்திய சீலம் நன்கு சிறப்பாக அப்பழுக்கற்ற முறையில் அமைந்தாக வேண்டும்.
பாரமர்களும், பெரியோர்களும், முதியோர்களும், ஏழைகளும், பணக்காரர்களும், யாத்ரீகர்களும், பள்ளிப் பிள்ளைகளும், சிறுவர்களுமாக, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினர்களுமே பூஜகர்களை நம்பியே ஆலய வழிபாடுகளை ஆற்றுவதால், தீபாராதனைக்காகக் காத்திருந்து பிரசாதங்களைப் பெற்றுச் செல்வதால், கடமைகளை, நியதிகளைப் பூஜகர்கள் உணர்ந்து, இறை நியதிகளில் இருந்து சற்றும் பிறழாமல், வழுவாமல் கடமையாற்றிட வேண்டும்.
பூஜகர்கள் ஒரு நிமிட நேரங்கூடச் சும்மா இராது, எப்போதும் இறை மாமந்திரங்களை ஓதியவாறே, நல்லதையே எண்ணி, நல்லதையே செய்து, நல்லதையே கடைபிடிக்கும் தன்மைகளைப் பூணுதல் வேண்டும். பிற துறையினரை விட, பூஜகர்களிடமிருந்துதான் மக்கள் சமுதாயம் நிறைய எதிர்பார்ப்புகளுடன் வாழ்க்கையை நடத்துகிறது.
சமுதாயத்தில், ஆட்சியாளர்களும், மக்களும் செய்கின்ற செயல்களும், வினைகளும் பூஜகர்களை மிகவும் பாதிக்கும். ஆனால், ஒரே ஒரு பூஜகர் கூட உண்மையிலேயே புனிதமாக வாழ்ந்து, நல்வழி காட்டினால், பத்தாயிரம் தீயவர்களை இறையருளால் நிச்சயமாகச் சீர்திருத்துகின்ற மகத்தான தெய்வீக சக்திகளைப் பெற்று, மகத்தான முறையில் சமுதாயத்தில் அறப்பணிகளை ஆற்றித் தர முடியும்.
அறப் பண்புகள், நல்மறைக் குணங்கள் பொங்கட்டும்!
புகையிலை போடுதல், பொய் பேசுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், கெட்ட வார்த்தைகளைப் பேசுதல் போன்ற தகாத நடவடிக்கைகள் ஒரு போதும் பூஜகர்களை அண்டலாகாது, பாரதப் பண்பாட்டின்படி, பஞ்சகச்ச முறைப்படி ஆலயப் பூஜை முறைகளுக்கான ஆன்மீக ரீதியான முறையில் உடைகளை அணியாது, ஏனோதானோ என உடை அணிந்து இருத்தல், தட்டுக் காசுக்காக ஏங்கி, பூஜையில் சிரத்தை மங்குதல், தட்டில் பணம் போடுபவர்களுக்கு மட்டும் பூ, பிரசாதம் அளித்தல், கடுமையான சொற்களைப் பேசுதல், பக்தர்களிடம் எரிந்து விழுதல் போன்றவற்றைப் பூஜகர்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

பூஜகர்களுடைய குறைபாடுகளைப் பற்றியே சொல்வதாக எண்ண வேண்டாம். எவருக்கும் கிட்டாத மிக மிகப் புனிதமான இறைப் பணிகளைப் பெற்றுள்ளதில் நிறைந்துள்ள நியமங்கள்தாம் இங்கு பட்டவர்தனமாக எடுத்துரைக்கப்படுகின்றன. சத்திய நெறி முறைகளுடன் வாழ்கின்ற சில பூஜகர்களும் உண்டு. எனினும், மேற்கண்ட வகையில் எந்தப் பழிச் சொல்லுக்கும் ஆளாகாது, பூஜகர்கள் பண்டைய பாரத உத்தம மகானுபாவர்கள் அளித்துள்ள தார்மீக நியதிகளின்படி வாழ்ந்து, உலக சமுதாயத்தைக் கரையேற்ற வேண்டிய பெரும் பொறுப்பைத் தாங்கி உள்ளார்கள் என்பதை உணர்த்திடவே இத்தகைய விளக்கங்கள் யாவும் மீண்டுமாய் அளிக்கப் பெறுகின்றன.
இன்னல்களை இனிதே ஏற்க!
இவ்வாறு பூஜகர்கள் புனிதமாக வாழ்ந்தாலும் கூட, வெறுப்புகள், பகைமை, வீண்பழி, துர்சொல், பொறாமை, தூஷித்தல், கேலி, கிண்டலுக்கு ஆளாதல், ஏசல்கள், வசவுகள் போன்ற பலவும் ஏற்படும் என்பதும் உண்மையே, ஆனால், மக்களுக்கு இறையருளைப் பெற்றுத் தருகின்ற தெய்வீகக் கருவியாக வாழவேண்டிய தார்மீக பொறுப்பில் வாழ்ந்து வந்திடில், இறைவனே முன்வந்து பூஜகர்களை அரவணைத்துக் காத்திடுவார் என்பதும் சத்திய வாக்கு ஆகும்.
மேலும், தற்போதைய சூழ்நிலையில் வருமானம் போதாமை, நிரந்தர வருமானமின்மை போன்ற பல காரணங்களால் பூஜைகளை ஆற்றாதிருப்பது முறையன்று, இவ்வாறு தன்னால் தார்மீக முறைப்படி பூஜைப் பணியை ஆற்ற இயலவில்லை என்றால் தியாக உள்ளம், நல்மனம் நிறைந்தோர்க்கு இப்பணியை அளித்து விடுதலே நன்று. ஆனால், இதனால் “தேவ கடமையில்” இருந்து தவறிய பாவ வினையும், “அளித்த நல்மானுடப் பிறவியில், விளித்த நல் இறைக் கடமையில் இருந்து தவறி” களித்த நல்பிறவியை அழித்த வல்வினைப் பாவச் செயலாகவும் வந்து கோடானு கோடிப் பிறவிகளில் வந்து தொற்றி மாய்க்கும் எனவும் அறிக!
உத்தமமான பிரம்மச்சர்ய மாண்புகள் கலியுகத்தில் கடைபிடிப்பதற்கு மிகவும் கடினமாதலின், நன்னெறிகள் சிறக்கும் உத்தமமான இல்லற வாழ்க்கையே பூஜகர்களுக்கு ஏற்ற மிகச் சிறப்பான இல்லற தர்மமாகும்.
உண்மையிலேயே தியாகமயமாய், தெய்வீகப் பண்புகளுடன் துலங்குகின்ற பூஜகர்களைப் போஷிக்க வேண்டியது மக்கள் சமுதாயத்தின் கடமையாவதால், பூஜகர்கள் நல்ஒழுக்க மாண்புகள், தியாகமயச் சீல நெறிகளுடன் சமுதாயமே போற்றும்படி இறைத் திருநெறிகளில் எந்நேரமும் உய்ந்து வாழ்தல் வேண்டும்!
எவ்வளவுதான் நேர்மை, நாணயத்துடன், அடக்கம், பணிவுடன் துலங்கினாலும், பூஜகர்களின் வாழ்க்கையில் “வறுமை, மனக் கஷ்டங்கள், பிறரால் ஏசப்படுதல்” போன்றவை ஏற்படுமாயின், இவற்றால் மன்ந்தளர்தல் கூடாது, இதற்காகப் பிறரை வசைபாடுதலும் கூடாது. ஏனெனில், “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பதாக, இதற்குப் பூர்வ ஜன்மப் புராணக் காரணங்களும் உண்டு.
“எந்த வேத மாமறைகளால் இறைவனை உணர்ந்தறிதல் வேண்டுமோ, அதே வேத மாமந்திரங்களை அகங்காரம், ஆணவம், மாயையால் இறைவன் மீது பாய்ச்சியதால் வந்த சாபம், பூஜகர்களுக்கும், மறையவர்களுக்கும் தற்போது மீந்துள்ளது. எந்த வேத மாமறைகளால் இறைவனைப் பிறருக்கும் உணர்விக்கும் அருட்பெருங் கடமைகளை ஆற்றுதல் வேண்டுமோ, அதை விடுத்து, மானுட வடிவில் வந்தவர் ஈசனே என அறியாது, அகங்காரத்தால், ஆணவத்தால், அதே வேத மாமறை மந்திரங்களைத் தவறான முறையில் உச்சாடனம் செய்து, ஈசன் மீதே தாந்த்ரீக விலங்குகளைப் பூர்வ புராண சம்பவத்தில் ஏவியமையால் “பூஜகர்களுக்கு, மறையவர்களுக்கு “ஈசனாலேயே அளிக்கப்பட்டுள்ள சாபத்தால்”, ஏற்பட்டுள்ள நியதிகளால் பூஜகர்களின் வாழ்வில் ஏசல்களுடன் பல கஷ்டங்கள் வந்து சூளும் என்பதை மனப் பூர்வமாக உணர்ந்தாக வேண்டும், இதற்கும் நிவர்த்திகளை இறைச் சமுதாயப் பொதுப் பணிகளில், ஜாதி, மத பேதமின்றி, அனைத்து ஜீவன்களின் நல்வளத்திற்காகவும் உத்தம பக்திப் பாங்குடன் இறைக் கடமைகளை ஆத்மார்த்தமாக ஆற்றுதல் வேண்டும். இது ஒன்றே “ஈசனே இட்ட சாபத்திலிருந்து ஓரளவேனும் ஈசனருளால் குருவருட் பூர்வமாக” மீண்டிடத் துணை புரியும்.
பூஜகர்களுக்கு முறையான குடும்ப வாழ்வும், நல்ல இல்லறமுமே, தெய்வீகத்தில் செழித்துத் தழைக்க வைக்கும். பிரம்மச்சரிய வாழ்க்கைக் கட்டத்தில் “கரணம் தவறினால் கோடிப் பிறவிகளாகி, இழிவு நிலைகள் உண்டாகும். பிரம்மச்சரிய நியதிகளுடன் பூஜைகர்கள் கலியுகத்தில் வாழ்வது மிக மிகக் கடினம். இதனால்தான் தர்ம பத்னியாம் “மனைவியிடம் இருந்து தர்பையை” அனுமதிப் பூர்வமாகப் பெற்றே பல இறைப் பூஜைகளை ஆற்ற வேண்டும் என்ற நியதிகள் கடுமையாக உள்ளமையால், மனைவி அற்றோர் பூஜகர்களாக ஆகும் பாக்கியத்தைப் பெறுதல் கூடாது என்ற நியதியும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே பெண்ணினத்திற்கு மகத்தான புனித சக்திகள் துலங்குவதை உரைப்பதே நம் பாரதக் கலாச்சார இறை மாண்பாகும்.
மழையின்மையால் ஆலயச் சொத்துக்கள், நிலங்களில் இருந்து வருமானமின்மை, குறைந்த வருவாய், பூஜகர்களுக்குச் சம்பளம் சரியாக அளிக்காமை போன்றவைதாம், பாரதத்தின் குறிப்பாகத் தமிழகத்தின் ஆயிரக்கணக்கான ஆலயங்களில் “ஒரு வேளை பூஜையோ, வாரமொரு முறை, மாதமொருமுறை பூஜையோ, பூஜையற்ற நிலையோ” இருக்கக் காரணமாவதால், சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் சத்சங்கமாக ஒன்று சேர்ந்து, பண்டையத் தமிழகம் போல் பக்திமிகு தமிழ் மாமன்னர்கள் காலத்தில் துலங்கியது போல், ஆறு வேளைப் பூஜைகளுடன் பாரதத் திருக்கோயில்கள் புலர்ந்திட ஆவன செய்தல் வேண்டும்.

தெய்வ ஆயுதங்கள்

நானிலை தந்தருளும் நாராயணப் புலம்!
“நின்று, இருந்து, கிடந்து, நடந்து” என்ற நான்கு விதமான தோற்றங்களில் அர்ச்சாவதார நிலைகள் கொண்டு, பரம்பொருளாம் ஸ்ரீமன்நாராயண மஹாவிஷ்ணு மூர்த்தி, பல யுகங்களிலுந் தொடர்ந்து அரிய பல திருமேனிகளைத் தாங்கி, கலியுகத்திலுமாக இன்றும் பல தலங்களிலும் ஜீவன்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
“நானிலை நற்றிரு மேனி
நாராயணபூ மார்கம்                      
பாநிலை பஃறொளி யாகி
பூ நிலை பரவல் வேண்டி
பாஆ ரதில் பதியும் பாதம்
பரம்பொரு ளான தன்றோ!”
(கிடந்த நிலை = ஸ்ரீரங்கநாதர் ; நடந்த நிலை = உலகளந்த பெருமாள் ; இருந்த நிலை = அமர்ந்த கோலம்)

உத்திரமேரூர்

மனிதன் தன்னுடைய வாழ்க்கையில், “நின்று, இருந்து, கிடந்து, நடந்து” ஆகிய நான்கு நிலைகளிலும் தினசரியே பல காரியங்களை ஆற்ற வேண்டி உள்ளது அல்லவா! இந்நான்கு நிலைகளில் மனிதன் நன்கு உய்தலே ஆரோக்யப் பேரருள் பூத்ததாகிறது. இந்த நான்கு நிலை அசைவுகளையும், சலனங்களையும் தடங்கலின்றி ஆகும்படி மனிதனுக்கு நன்கு அமைதலே சிறப்பான ஆரோக்யத்தின் சின்னமுமாகிறது. எனவே, வாரந்தோறும், குறிப்பாக திருமாலுக்குரிய புதன், சனிக்கிழமைகளிலும், திருவோண நட்சத்திர நாளிலும், “நின்று, இருந்து, கிடந்து, நடந்த” நிலைகளில் (சென்னை – திருநீர்மலை, காஞ்சிபுரம்) அருளும் பெருமாள் மூர்த்திகளை, “நடந்து சென்றே தரிசித்து வருதல்” என்ற வைராக்யத்தைப் பூண்டு நிறைவேற்றி வருதலால், நல்ல ஆரோக்ய சக்திகளைப் பெற்றிடலாம். இதற்காக தினமுமே இரண்டு மூன்று ஆலயங்களுக்கு, தலங்களுக்குக் கூடச் செல்ல வேண்டியதாயிருக்கும்.
ஆயுதப் பொருள் அதுவல்ல காண்!
இறைமூர்த்திகள், சங்கு, சக்கரம் மற்றும் ஆயுதங்களை ஏந்தி இருப்பதற்கான காரணங்கள் கோடி கோடியாய் உண்டு. எனவே சாதாரணமான “ஆயுதப் பொருளில்” தெய்வாயுதங்களை அர்த்தங் கொள்ளலாகாது.
மனித சமுதாயந்தான், போர், கொலை, கொள்ளை, பகை எனப் பலவகைகளிலும் ஆயுதத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இறைவனைப் போற்றி வணங்குவதற்காகவும், இறையருளால் நற்காரியங்களை நிறைவேற்றவும் படைக்கப்பட்ட கரங்களைக் கூடக் கலியுக மனிதன் அவலமான முறையிலும், ஆயுதமாகவும் அன்றோ பயன்படுத்துகின்றான். என்னே அவலமிது! வீரம் என்பது நற்செயல்களை ஆற்றிடப் பயன்படுதல் வேண்டுமே தவிர, பிறரை வதைப்பது, தன் உடல் வலிமையை எவ்வகையிலேனும் வெளிப்படுத்துவது வீரமாகாது.
“வேல் வேல் வெற்றி வேல்”
தீயோர்களைத் திருத்தவும், நாட்டின் தற்காப்பிற்காகவும் ஆயுதங்கள் தேவைப்படக் கூடும். ஆனால் ஆயுதங்களை தார்மீகமான ரீதியாக, தக்கோர் மூலமாகத் தக்க வழிமுறைகளில் பயன்படுத்திட வேண்டும். கத்தி, அரிவாள் போன்றவை கலியுகத்தில் நல்ல செயல்களுக்கும், தீய செயல்களுக்கும் பயனாகின்றது அல்லவா! ஆக்குவோரின் பகுத்தறிவுப் புலமே ஆயுதத் தன்மைக்கு அழகு தரும். இதற்காகவே முருகப் பெருமானின் வேல்தனையே முருகப் பெருமானாக பாவித்து அபிஷேக, ஆராதனைகளை ஆற்றும் பூஜைப் பாரம்பரிய நிலவுகிறது. இல்லத்தில் சச்சரவுகளை உருவாக்கும் மனப்பகைமையையும் போக்கி, சாந்த சக்திகளை நிரவிட உதவும் சக்தி வாய்ந்ததே வேல் பூஜை, பொதுவாக “வேல் அபிஷேகம்” துரிதமான பலன்களைத் தரவல்லதாம்.
ஆயுதத் துஷ்பிரயோகம் சமுதாயத்தையே பாதிக்கும்
கலியுக மானுடச் சமுதாயம் ஆயுதங்களைத் தவறாகப் பயன்படுத்துவதால், ஆயுதம் என்றாலே “தீயவற்றுக்கு” ஆவது என்பதாகி விட்டது. மேலும், மனித சமுதாயமும், “நாட்டுப் பாதுகாப்பு” போன்ற வகையில் ஆயுதங்களைத் தர்மமான முறையில் பயன்படுத்தாவிட்டால், ஆயுதங்கள் மூலமாகவே, பலத்த கர்ம வினைகளும், அழிவும் சமுதாயத்திற்கு ஒட்டு மொத்தமாக வந்து சேரும்.
இன்று உலகளவில் பல நாடுகளில் நிலவும் அதர்மமான போர்களினால், பயங்கரவாதச் செயல்களினால் ஏற்படும் அதர்மமான தீய சக்திகள், உலக மக்கள் அனைவரையும், பல வகைகளிலும் பேரழிவுகளாக, பெரு நோய்களாகத் தாக்கும்.
தெய்வ மூர்த்திகளுக்கு ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று குணங்களைச் சொல்லுவர். குணங்களுக்கு அப்பாற்பட்ட தெய்வத் தன்மைகளை, இவ்வாறு குறுக்கிச் சொல்வது, குறுகிப் போன மனிதப் பகுத்தறிவுக்கு ஓரளவேனும் உணர்த்திடவேதான்!
உண்மையில் இறைவப் பரம்பொருளுக்குச் சார்த்தப் பெறும் ஆக்கல், காத்தல், மறைத்தல் குணபூதிகள் யாவும், சாசுவதமான இறைகுணப் பாங்குகளை ஆரம்ப அடிப்படை நிலையில் உணர்விக்க வைப்பதற்கே! இதன் மூலம் மனித வாழ்வு மட்டுமல்லாது அனைத்துக் கோடி ஜீவன்களின் வாழ்க்கைக் கடமைகளை உணர்த்த உதவுவதற்கும் ஆகும். மனிதனுக்கு மட்டுந்தான் வாழ்க்கை? பசு, எறும்பு, புழு, மரம், செடி, வண்டு என அனைத்திற்கும் ஜீவ வாழ்வு உண்டு என்பதே மனிதன் முதலில் அறிய வேண்டியதாகும்.
(தீயதை) “அழித்துத்” திருந்தியது ஆக்கல்!
“ஆக்கல், காத்தல், அழித்தல்” ஆகிய முக்குணங்களில், “அழித்தல்” என்பதற்கு நடைமுறையில், “சிதைத்தல், ஒழித்துக் கட்டுதல், அடியோடு, வேரோடு பிடுங்குதல்” போன்ற அர்த்தங்கள்தான் கொள்ளப்படுகின்றன. ஆனால் இவற்றைத் தெய்வ சங்கல்பங்களான “ஆக்கல், காத்தல், மறைத்தலுக்கு” அர்த்தமாக்கிக் கொள்ளக் கூடாது.
காத்தல் பிரானாகிய திருமாலப்பர், ஜீவன்களை எந்நிலையிலும் காத்து ரட்சிப்பவரே ஆவார். மிகவும் மோசமான பாவ வினைகளைப் புரிந்தோரும் திருந்தி வாழச் சந்தர்ப்பம் அளிப்பதும், மனித ஆயுளின் பாத்திரக் காரணமாகிறது என உணர்க! உலக மக்களே பெரும்பாலும் வெறுத்து ஒதுக்குகினாற் கூட, “பெருநோயால்” அவதியுறுவோரின் மனிதல் கூட, “மானுட வாழ்வைத்” துய்த்து வாழ வேண்டும் என்ற மனப்பாங்கு, பொதுவாகப் பிறரை விட நன்கு நிறைந்திருக்கும். எனவேம் வாழ்வின் எந்த நிலையிலும், எந்த வயதிலும், எத்துறையிலும் எத்தகைய நல்மாற்றங்களும் ஏற்படலாகும். ஆகவே, பெரும் பேறாகக் கிட்டியுள்ள ஆயுளை, நல்வகையில் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியச் சித்தத்தைப் பெற்றிட, நானிலைப் பெருமாள் வழிபாடும், “ஆயுதபாணி” மூர்த்தித் தரிசன சக்திகளும் நன்கு உதவும். தற்கொலை எண்ணம், நேர விரயம், தீயது செய்தல் என்றவாறாக மனிதன் தன்னை “அழித்தல்” கூடாது.
எனவே திருந்த வேண்டிய முறையில் ஜீவன்களைத் திருந்த வைத்துக் காப்பதும் இறைமையில், காத்தல் துறையின் அம்சமாகும்.

ஸ்ரீபிரயோக சக்கர பெருமாள்
திருவக்கரை

இறைமையின் ஆயுதப் பொருள்
இறப்பில் “அழிவதல்ல” எதுவும்!
பிறப்பு, இறப்பு என்ற இரு வாழ்க்கைப் பலகைகளுக்குள் மனிதன் குறுகிய அறிவோடு வாழ்வதால்தான் பிறப்பிற்கு முந்தைய, இறப்பிற்குப் பிந்தைய நிலைகளை மனிதப் பகுத்தறிவால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. பகுத்தறிவு இவ்வகையில் மங்கியதன் காரணமாகத்தான் தற்காலத்தில் இறப்பு என்பதையே “அழிவு” என்பதாக, மிக மிகத் தவறாக இழிவான முறையில் அர்த்தம் கொள்ளப்படுகின்றது.
“பெருமாள் பிரயோகச் சக்கரம் தாங்கிய நிலையில் அருள்பூரித்து இருப்பதும்!” காத்தல் தொழிலை அருட்பூர்வமாகக் செம்மைப் படுத்துவதற்கேயாம்! அசுரர்கள், தெய்வ மூர்த்திகளிடம் பெற்ற வரங்களால் தெய்வ சக்திகளையே மூடத்தனத்தால் எதிர்க்க முற்பட்டமையால், மாமுனிகளின் தபோ பலன்களால் அவர்களைத் திருத்த முயன்றனர். அவர்களுடைய சாத்வீகத்தையும் அரக்கர்கள் எதிர்த்ததுடன் அவர்களுடைய தவங்களையும் கலைக்க முற்பட்டமையால், தீயசக்திகளைத் திருத்துவதற்குத் தெய்வாயுதங்கள் பயனாயின. தெய்வ சக்திகளுக்கு அஞ்சிப் பணிய வேண்டிய அரக்கர்கள், இறைவனைப் பகுத்துணரும் பாங்கை இழந்து, பகுத்தறிவு மங்கியமையால், தம்மை விட “வலியார் யார்?, “வலிய ஆயுதங்களைத் தாங்கியோர் யார்?” என மூடத்தனமாக ஆய்ந்து, ஆயுதங்களின் மேல் மூட நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு அகங்கார, ஆணவத்தால் தம்மைத் தாமே அழித்துக் கொண்டனர்.
முக்தி தரும் பக்திச் சக்கரம்
“சக்கரம்” என்றால் “வீச எறிந்து அழித்தல்” என்று பொருள் கொள்தலாகாது. காக்கும் கடவுளாம் பெருமாளா சக்கரம் வீசி மாய்ப்பவர்? அல்லது “சக்கரம்” வீசித்தான் அசுரர்களின் சக்ஹாரம் நிகழ்தல் வேண்டுமா? சித்தர்களின், மகரிஷிகளின் தவப் புலன்களின் உருவகமான பிரயோகச் சக்கரத்தின் ஸ்பரிசம் படுதலே முக்தி நிலைகளுக்கு வழிவகுக்கும் எனில், பிரயோகச் சக்கரத்தின் தன்மைகளை, பலன்களை, யோக முறைகளை, நல்வர சக்திகளை என்னென்றுதான் உரைப்பது!
“நின்று, இருந்து, கிடந்து, நடந்து” எனப் பல நிலைகளிலும், நமக்காகவே பலவிதமான ஆயுதங்களைத் தாங்கியவறாகப் பெருமாள் மூர்த்தி காட்சி அளிக்கின்றார். ஒவ்வொரு மனிதனின் அங்க வடிவுக்கும் கூட கோடானு கோடி அர்த்தங்கள் உண்டு. காரணம், ஒரு மனிதனின் வடிவானது பல கோடிப் பிறவிகளின் தொகுப்பன்றோ! எனவே கோடிக்கணக்கான பிறவிகளின் தொகுப்பாக வரும் இத்தகைய மனிதக் கூட்டில் இருந்து ஒவ்வொருவரும் மீண்டிட நல்லருள் புரியவே இறைவனின் திருக்கோல தரிசனங்கள் அமைகின்றன.
அசுரர்களை மாய்த்திடவே தெய்வ மூர்த்திகள் ஆயுதங்களை ஏந்தியதாகப் புராண ரீதியாகக் கூறுவது மனித அறிவிற்கு ஓரளவு புரிபடவேதான்! கோடிக்கணக்கான அசுரர்கள் முழுதுமாகப் பண்டைய யுகங்களில் மாய்ந்து அழிந்து விட்டார்கள் எனில், தற்போதையக் கலியுக மனிதர்களிடையே கொலை, கொள்ளை, குரோதம், விரோதம், பகைமை, காம வினைகள் போன்ற அசுர குணங்கள் படிந்து கிடக்கின்றனவே, எவ்வாறு!
எனவே, கலியுகத்திலும் பசுத்தோல் போர்த்தியவராய், மனித வடிவிற்குள் அசுர, அரக்கக் குணம் படைத்தவர்கள் உண்டு. இவர்களையும் திருத்தும் வண்ணமாகவே, புராண ரீதியாகக் கொண்டது போலவே, கலியிலும் தெய்வ மூர்த்திகள் ஆயுதபாணிகளாகத் துலங்குகின்றனர்.
மேலும், இறை மூர்த்திகளின் திருக்கரங்களில் ஆயுதங்களாகப் பொலிவோர் சித்தர்களும், மஹரிஷிகளும் எனில், இனியேனும் ஆத்ம விசாரம் செய்து தெய்வங்கள் தாங்கும் ஆயுதங்களின் மகத்துவத்தை ஓரளவேனும் இவ்விளக்கங்கள் பகுத்துரைப்பதின் மூலம் நன்கு அறிய முயல்வீர்களாக!

கொம்பூதிச் சித்தர்

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி அருணாசல கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே! திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம் கொம்பூதிச் சித்தர் அருணாசல கிரிவலம் வரும் மாத சிவராத்திரி மஹிமை வைகாசி மாத சிவராத்திரி நாள் 5.6.2005
காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னான, சித்தர்களின் இறைப்பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!
திருஅருணாசல மாத சிவராத்திரி கிரிவலம் ஸ்ரீகொம்பூதிச் சித்தர்
மனித வாழ்வு முடிந்தவுடன் அந்தந்த மனிதனுடைய அங்கங்கள் புதைந்தோ, அக்னியில் பஸ்மமாகியோ பூமியை அடைகின்றன. இறப்பிற்குப் பின் மனித உடல் நெருப்பில் பஸ்மம் ஆவதே உத்தமமானது. இதற்கான தக்க விளக்கங்களைத் தக்க சற்குருவிடம் பெற்றிடவும்.
உண்மையில் எவ்வித அறுவை சிகிச்சையிலும் உடல் எலும்பு, அங்கம், தசை, பல் போன்ற எதுவுமே சிதைவுறாது, நன்முறையில் உடலைப் பேணிப் போற்றி இறைச் சிந்தனையுடன் இயற்கையான மரணத்தை ஏற்றுச் சரீரத்தை உகுத்தலே சிறப்புடையது.
32 முழுமையான பற்களுடன் இறுதி வரை வாழ்தலும் ஒரு நல் அனுகிரகமே! தான தர்ம சக்திகள் நிறைவுபட வாழ்ந்து மறைவதும் உத்தமமானது. “உடலை வளர்த்தேன், உயிரை வளர்த்தேன்!” என்பதாக, உண்பதே உடல் பெருக்கவே என்று தவறாகப் பொருள் கொண்டு, ருசியுடன் உண்பதற்காகவே வாழாது, பிறருக்கு உதவும் படி சரீர உழைப்புடன் பலருடன் ஒன்று சேர்ந்து சத்சங்கப் பூர்வமாக அறப்பணிகளை ஆற்றி வாழ்வதே உத்தம வாழ்வாகும்.
எவ்வகையில் ஒருவர் இறந்தார் என்பதைக் கொண்டு, இறந்தவரின் கர்மவினைப் போக்கினை உணர வைக்கும் சாத்திரமே “கர்ம யோகச் சதுரம்” எனும் பாடம் ஆகும்.
சங்கு, யானை, புலி, மான் போன்றவை இயற்கைப் பூர்வமாக இறந்த பிறகு அவற்றின் கொம்புகள், தந்தம், தோல் போன்றவை தெய்வீக சாதனங்களாகப் பயன்படுவதை அறிவீர்கள் அல்லவா! சில வகைக் கொம்புகள், இசைக் கொம்புக் கருவிகளாகப் பயன்படுகின்றன.
சில வகை மாட்டுக் கொம்பிலிருந்தும் கொம்பு வாத்யம் தயாரிக்கப்படுவதும் உண்டு. ஆனால் அவை ஆன்மீக ரீதியாக நன்கு சுத்திகரிக்கப்படுதல் வேண்டும். சில வகை உலோகங்களிலும் கொம்பு வாத்யங்கள் அமைவதும் உண்டு. கொம்பு வாத்யத்தை, இறைவழிபாடுகள், ஆறுகால பூஜைகள், ஒலி வகை வழிபாடுகளுக்கு மட்டும் அல்லாது, சமிக்ஞை, தட்பவெப்ப நிலை அறிவித்தல், மூலிகை அறிதல், போர் உணவு, எச்சரிக்கை, போர் வாத்யங்களாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.
மூன்றடிக் கொம்பு வாத்யம் முதல் முப்பதடிக்கும் மேல் நீளமான கொம்பு வாத்யங்கள் நிறையவே உண்டு. கொம்பூதிச் சித்தர் எனும் அற்புதச் சித்தர்பிரான் மனித உடற் பாங்குகளை சப்த மார்க சக்திகளாக வரையறுத்துத் தந்தவர். எப்போதும் இவ்வகைக் கொம்பு வாத்யங்களை முழக்கியவாறே, இசைத்தவாறே அருணாசலத்தைக் கிரிவலம் வந்திடுவார். கொம்பூதிச் சித்தர் அந்தந்த நாள், நட்சத்திரத்திற்கு ஏற்பக் கொம்பு வாத்யங்களை இசைத்து மக்களுக்கு சப்தநாள நல்வரங்கள் மூலமாக அருள்புரிந்து வந்தார்.
வற்கடம் போலான பஞ்சம் ஒரு முறை நாட்டை வாட்டிய போது, லட்சக் கணக்கான மக்கள் அருணாசத்திற்கு இவரைத் தரிசிக்கத் திரண்டு வந்தனர். சித்தர் அருளியவாறு 1008 கொம்பு வகை இசைக் கருவிகளை இசைத்து, அமிர்தவர்ஷிணி போன்ற ஜலபாவன ராகங்களில் இறைப் பாடல்களை, கீர்த்தனைகளை இசைத்து, இறைவனைப் போற்றியவாறே அருணாசலக் கிரிவலத்தைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நிகழ்த்திட நாட்டில் நல்ல மழைப் பொழிவு ஏற்பட்டு வளம் பூக்கலாயிற்று.
இச்சித்தர் தொட்டு ஆசிர்வதித்த கொம்பு வாத்யங்கள் இன்றும் பல ஆலயங்களில் தொன்மையான இசைக் கருவிகளாகத் துலங்குகின்றன. இவர் அளித்த கொம்பு வாத்யத்தைத் தம் ஊர் ஆலயத்தில் தினமும் ஊதி, சுகப் பிரசவம் பெற்றோர் ஆயிரமாயிரம் உண்டு.
கர்பப்பை பலவீனம் காரணமாகப் பிள்ளைப் பேறு பெற இயலாதோர், இவரளித்த கொம்பு வாத்யத்தைத் தம் ஊர் ஆலயத்தில் ஆறு வேளைகளிலும் பூஜைக் காலங்களில் ஊதியும், கர்ப நாளங்கள் வலுப் பெற்று நற்சந்ததிகளைப் பெற்றனர்.
இவர் பல யானைகளுக்கும் கொம்பு வாத்யம் ஊதுவதில் விசேஷமான பயிற்சிகளை அளித்து, ஆலய யானைகளை நன்கு பயிற்றுவித்தார். கொம்பு வாத்யத்திற்கு எந்த மூங்கில், எந்தக் கொம்பினை எந்த உலோகக் குழலைப் பயன்படுத்துவது என்பதற்க்கும் இசைநுணுக்கக் கலைகளைப் போதித்த அற்புதச் சித்தர்.
அக்காலத்தில் அருணாசல வனத்தில் யானைகள் அதிகமாக நடமாடும், ஒரு முறை நீர் வறட்சி காரணமாக, யானைகள் அருணாசலத்தை முற்றுகை இட்டு நெல், கரும்பு வயல்களை ஆக்கிரமித்த போது மக்கள் இவரை அண்டினர்.
“யானைகள் வயல்களை மேய்ந்து வயிறு நிறைய உண்பதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவை வயிறு நிறைந்து வாழ்த்திச் சென்றிடில், ஒன்றுக்கு நான்காக விளைச்சல் மிகுந்து நாடே வளம் பெறும்!” என்று அறிவுரை தந்து, யானைகளுக்காகக்  காட்டில் பெருங் குளங்களை வெட்டச் செய்து விலங்குகள், பட்சிகளுக்கும் அருள்புரிந்தார். இதன்பின் விளைச்சல் பன்மடங்காயிற்று!
ஒரு முறை, கிளிகள், குரங்குகளைப் பலரும் வேட்டையாடியதால் அவற்றின் இனப் பெருக்கம் வெகுவாகக் குறைந்தது. இதற்காகக் குரங்குகளும், பட்சிகளும் இவரை முற்றுகை இட்டுப் பல நாட்கள் அழுது புலம்பின. ஒரு மிருகசீரிஷ நன்னாளில் சித்தர்பிரான் அவைகளைக் கூட்டாக கிரிவலம் வரச் செய்து, அவைகளைத் தட்டிக் கொடுத்து அவற்றின் பாஷையிலேயே அவைகளுக்குக் கிரிவல முறைகளை எடுத்துரைத்தார். அவற்றின் கிரிவலம் முடிந்தவுடன், குறித்த அருணாசலத் தரிசனத்தில் அவைகளுக்காகக் காத்திருந்து, அவையாவும் வந்தவுடன், தம் கொம்பு வாத்யத்தை எடுத்து ஊதிட, எங்கிருந்தோ ஆயிரக்கணக்கான குரங்குகளும் பட்சிகளும், அவ்விடத்தில் வந்து சேர்ந்து குரங்குகளின், பட்சிகளின் இனத்தையே சந்தோஷப்படுத்தின.
இத்தகைய மஹிமைகள் நிறைந்த கொம்பூதிச் சித்தர், நடப்பு ஜுன்2005 மாத சிவராத்திரி கிரிவலம் புரிகின்ற காலை, இவருக்கு மிகவும் பிடித்தமான கொம்பு வாத்யத்தை ஊதியவாறே அல்லது கொம்பு வாத்யத்தை ஊதுகின்றவர்களுக்குத் தக்க சன்மானம் அளித்து அவர்களைக் கொண்டு கொம்பு வாத்யங்களை ஊதியவாறே ஜாதி, மத, குல பேதமின்றிப் பலருடன் சத்சங்கமாகக் கிரிவலம் வருதல் மிகவும் விசேஷமானதாகும்.
தியாகமய “கோயில் மாடு” தானம்
மூங்கில், விலங்குக் கொம்புகள், உலோகக் கொம்புகள் எனக் கொம்பு வாத்யங்களில் பல வகைகள் உண்டு. இதில் “கொம்பூதிச் சித்தர்” பெரும்பாலும் பயன்படுத்தியது “விரதமால்ய ரிஷபக் கொம்பு” வாத்யமாகும். அக்காலத்தில் கொம்பு வாத்யம் செய்திடுவதற்காகவே, இதற்கெனவே விசேஷமாகக் கோயில் சார்பில் மாடுகளை வளர்ப்பார்கள். ஆனால் கொம்பை எடுப்பதற்காக விலங்குகளை இம்சிப்பதில்லை, வதைப்பதில்லை, அக்காலத்தில் தங்கள் சந்ததி தழைப்பதற்காக, தாம் வளர்க்கும் பசுவின் முதல் காளைக் கன்றை கோயிலுக்காக அர்ப்பணிப்பது உண்டு.
அக்காலத்தில் “கோயில் மாடு” என்றாலே எவரும் சற்றே கைகளை ஆட்டி விரட்டக் கூட மாட்டார்கள். பார்த்த மாத்திரத்திலேயே கையெடுத்துக் கும்பிடுவர். தற்காலத்தில் “கோயில் மாடு” எனக் கிண்டலாகப் பேசுவது வேதனை தருவதாகும். விசேஷமான மூலிகைத் தழைகளை ஊட்டி இவற்றை வளர்க்கையில், “பிரமத் திண்டு” எனும் விசேஷமான திமிலைக் கொண்டு இவை வளரும். பிற காளைகளில் இவ்வகைத் திமிலைக் காண இயலாது. தியாகமயமாகக் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்படும் “கோயில் மாடுகளில்” மட்டும், நந்தி மூர்த்தியின் அருளால் இவை வளரும்.
இவற்றின் “திமில் பகுதி” ஒன்றரை அடி உயரத்திற்கு நல்ல வலுவுடன் இருக்கும். இவ்வகைக் காளைகள் “விரதமால்ய ரிஷபங்கள்” எனப்படும். இதனை வளர்ப்பதெற்கென பதினெட்டுப் பேர்களைக் கொண்ட “நந்திக் கலம்பகக் குழுவினார்” எனும் பவித்ரமான கொம்பூதிக் குழுவினர் நல்விரதம் பூண்டு இருப்பர்.
“சிவப் பிடரிப் பூஜை”
தேவப் பிரச்னம் மூலம், குறித்த நாளில் இதன் திமிலை இந்தக் குழுவினர் சங்கிலி போல் ஒருவரை ஒருவர் தொற்றிப் பற்றிக் கொள்ள, இந்தப் பதினெட்டுப் பேரையும் சுமந்து, இந்தக் கோயில் மாடு ஆலயத்தைப் பதினாறு முறை வலம் வரும். பிறகு அந்தக் கோயிலில் தானே மனமுவந்து வந்து, “ஆலய மூல நந்தி” முன் நிற்க, பதினெட்டுப் பேருக்கும் எக்காயமும் இன்றிச் சுமந்து வந்த கோயில் காளைக்கு நன்றி தெரிவித்து, அவர்கள் அதனைச் சுற்றி வந்து வணங்கிடுவர். இதற்குச் “சிவப் பிடரி உற்சவம்” என்று பெயர்.
பிறகு இதன் கொம்புகள் ஆலயத்திற்கு அளிக்கப் பெறும். கொம்புகளுக்கு மூங்கில் வண்ணப் பூச்சுகள் தடவப் பெற்று, பல திரவியங்களிலும் கஷாயப் பக்குவம் பெற்றுச் சிறிது காலத்திற்குப் பின் கொம்பு வாத்யமாக உருப் பெறும். 48 நாட்கள், அதாவது ஒரு மண்டலத்திற்கு இதற்குப் பூஜைகள் ஆற்றப் பெற்று, ஸ்ரீநந்தீஸ்வரர் எனப் பெயர் கொண்டு அருளும் சிவாலயத்தின் (உ-ம் திருவொற்றியூர்) நந்தி மூர்த்தியின் முன்னிலையில் இக்காளையின் கொம்பால் கொம்பு வாத்யத்தின் முதல் கொம்பு வாத்ய முழக்கப் பூஜை நடைபெறும். மூலிகைப் பூச்சுக்களால் பதனம் பெற்றமையால், இதன் கொம்பு முழக்கம் பத்து மைல் தூரத்திற்குக் கேட்க வல்லதாகும். இத்தகைய கொம்பு வாத்ய இலக்கண முறைகளைப் பன்னெடுங்காலம் பூவுலகில் போதித்த பெம்மானே “கொம்பூதிச் சித்தர்” ஆவார். இவருடைய குருவே “தந்துபிச் சித்தர்” எனினும், மக்கள் ஆன்மீக ரீதியான மரியாதை நிமித்தம் இவரையும் “தந்துபிச் சித்தர்” என்றே அழைத்துப் போற்றலாயினர்.
கொம்பு வாத்ய இறையிலக்கணக் கர்த்தா!
பன்னாட்டு மலைவாசிகளும் இவரை நாடி, தத்தம் நாட்டுக்குரிய வாத்யக் கருவி முறைகளைப் பற்றிய விளக்கங்களை அறிந்து பெற விழைந்த போது, அவரவருக்குரிய மொழியிலேயே விளக்கங்களைத் தந்து பற்பல அற்புதங்களை நிகழ்த்தினார்.
மானுட சரீரத்தில் மனிதர்களை உய்விக்க வேண்டிக் கலியுகத்தில் பலநூறு ஆண்டுகள் இவர் வாழ்ந்தமையால், பல காரணப் பெயர்களைப் பூண்டு, “கொம்பூதிச் சித்தர், தந்துபிச் சித்தர், சப்தமார்கச் சித்தர்” எனவும் பெயர்களைப் பெற்றார்.
கொம்பூதிச் சித்தரிடம் பல நாட்டு மன்னர்களும் ஆலய வாத்யங்கள், கோயில் திருவிழா வாத்யகள், போர் முழக்க வாத்யங்கள், வனவேட்டை வாத்யங்கள் எனப் பற்பல வகையிலான கொம்பு வாத்யங்களின் இன்னிசை இலக்கணங்களைப் பெற்றுச் சென்றனர்.
கொம்பு ஊதுதலுக்குத் திறமையான உடல் வளம், மன வளம், தொண்டை வளம், வயிற்று வளம் தேவை ஆதலின், அக்காலத்து மன்னர்கள், கொம்பூதிச் சித்தரின் ஆணையின்படி, கொம்பூதிக் கலைஞர்களுக்கெனத் தனி மான்யம், வீடு, செல்வம், நிலம் அளித்துப் போற்றினர். இவர்கள் கொம்பு ஊதிப் பழகுவதற்கெனத் தனி மலை, தனி வன, நிலப் பகுதியும் மான்யமாக அளிக்கப் பெற்றன.
அக்காலத்தில் “பேரரசர்” என்றால், குறைந்த பட்சம் ஒரு லட்சம் குதிரைகள், ஆயிரக் கணக்கான யானைகளைக் கொண்ட பல்வகுப்புப் படைகள் இருந்தமையால், கொம்பு ஒலிச் சப்த மொழிதான் பல மைல்களுக்கு விரிந்து, படைகளுக்கு உணர்விக்கும் “சங்கேத மொழியாக”, “குறியாணை மொழியாகவும்” அக்காலத்தில் இருந்தது.
இசைமர இயல்கள்
ஆலயத் துறைகளிலும், படைத் துறையிலும், சங்கிற்கு அடுத்த இடமாக கொம்பு வாத்யத்திற்குத்தான் சிறப்பிடம் கிட்டியது. இதற்காகவே, ஒவ்வொரு ஊரிலும் மரமேறிக் கொம்பு வாத்யம் ஊதுவதற்கு எனக் “கொம்பூதிப் பனை மரங்கள்” இருந்தன. இவற்றை ஊர் மக்கள் பூஜிப்பர். கொம்பு ஊதுபவர்களைத் தவிர வேறு எவரும் இதில் ஏற மாட்டார்கள். அவ்வளவு பவித்ரமானதாக இசைப் பனை மரங்கள் போற்றப்பட்டன. இன்றைக்கும் இசைவள சக்திகள் நிறைந்த பனை மரம், தென்னை மர தரிசனத்தைக் கண்டவாறு சங்கீதப் பயிற்சி பெறுவோர், ஆற்றுவோர் உண்டு.
தினமும் சித்தர்கள், யோகியர்களின் ஜீவ சமாதியில் கொம்பு ஊதி வழிபட்ட பின்னரே, மன்னர்கள் தம் தினசரிப் பணிகளைத் தொடங்குவர். அந்த அளவிற்கு சங்கும், கொம்பு வாத்யமும், மங்கள சக்திகளைக் கொண்டவையாகும். வேத மந்திர ஒலிகளில் தோன்ற வல்ல பல்வகைப் பீஜாட்சர சக்திகளும், கொம்பு வாத்யத்தில் எழுமாதலின், அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக, “பரசுராம தேசம்” எனப்படும் கேரளப் பகுதி ஆலயங்களில், இன்றளவும் விதவிதமான கொம்பு வாத்யக் கருவிகளின் இசைப்புடன்தான், தினமுமே ஆறு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன.
“(இசை) அட்சர லிங்கங்கள்”
தினமும் ஆறு வேளைகளிலும் கொம்பு வாத்யங்களை ஊதி இசைத்தவாறே, அருணாசலமாம் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்த “தந்துபிச் சித்தராம், கொம்பூதிச் சித்தர்”, அண்ணாமலையில் “கொம்பூள சாதகத்” தரிசனப் பகுதியில் ஒலி, ஒளிப் பிரமாணம் கொண்ட ஏழு வகை அட்சர லிங்கங்களைப் பலருக்கும் தரிசனம் செய்து வைத்தார்.

சப்தலிங்கங்கள் திருகோகர்ணம்

இவருடைய கொம்பு வாத்தியத்திலிருந்து எழுந்த ஒலி நாளங்களில் இருந்து தோன்றிய பல ஒளிக் கிரணங்களும் பூமாலைகள் போல இத்தகைய அட்சர லிங்கங்களை அடைந்தன. இவற்றின் ஒரு வகைதாம் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் சிவாலயத்தில், சப்தவடி லிங்கங்களாக அபூர்வமான தரிசனத்துடன் அருள்கின்றன. இசைக் கலைஞர்கள் சப்தமித் திதி தோறும் திருக்கோகர்ணம் சிவாலயத்தில், சப்த ஸ்வர மூலசக்தி வாரணங்களுள் ஒன்றாக அருளும் சப்தவடி லிங்கங்களைப் பூஜித்து வந்திடில் இசையில் மேன்மை பெறுவர். இவையாவும் “அட்சர லிங்க அம்சபூதிகள்” ஆகும்.
இவ்வகை அட்சர லிங்கங்களையும் சுயம்பாய் தோற்றுவித்து அதியற்புதக் கொம்பு வாத்யங்களுடன் பல ஊர்களிலும் உள்ள ஆலயங்களுக்கும் கொம்பூதிச் சித்தர் அளித்தார். இன்றும் பல ஆலயங்களிலும் உள்ள பாண லிங்கங்கள் (ஆவுடையற்றவை) யாவும் “கொம்பூதிச் சித்தர்” அளித்த அட்சர லிங்கங்களே ஆகும். “கொம்பூதிச் சித்தர்” கொம்பு வாத்யத்தை முழக்கினால் கேட்பதற்கே மிகவும் இனிமையாக இருக்கும். கொம்பூதிச் சித்தரிடம் ஒவ்வொருவரும் ஆசி பெற வருகையில், அவரவருடைய கர்ம வினைப் பாங்கிற்கு ஏற்ப, “பப்பரப் பம்பரம்ப” பீஜாட்சர சக்திகள் அவருடைய கொம்பு வாத்தியத்தில் இருந்து எழும். இவ்வாறு கொம்புகளை ஊதியே பல நூறு மைல்களுக்கும் அப்பால் தம்மை வேண்டுவோர்க்கு ஆசிகளை நல்கியமையாலும், “கொம்பூதிச் சித்தர்” என்ற காரணப் பெயருடன் மக்களால் போற்றப் பெற்றார்.
கூத்தபிரான் களித்த (கூடாத) ஜலசமாதி!
இவ்வாறு பல ஆண்டுகள் கொம்பு வாத்யங்களை இசைத்தவாறே அருணாசலத்தை கிரிவலம் வந்தக் “கொம்பூதிச் சித்தர்”, ஒரு மாத சிவராத்திரி நாளில், அருணாசலத்தின் சூரியத் தீர்த்தத்தில் நீராடி எழுகையில், கொம்பு வாத்யம் அவர் கையிலிருந்து மறைந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து வேதனையுற்ற “கொம்பூதிச் சித்தர்”, கொம்பு வாத்யமின்றித் தன்னால் அருணாசலத்தில் ஒரு சிறிது தூரம் கூட நடக்க இயலாது என்பதால், “கடவுளே! என்ன சோதனை இது!” என அஞ்சிக் கதறி அழுது, அந்த சூரியத் தீர்த்தத்தில் ஜலசமாதி கொள்ள விழைந்தார்.
அக்காலத்தில் திருஅண்ணாமலையில் சூரியத் தீர்த்தம் நன்கு பரந்து விரிந்து இருந்தது. அதனுடைய அடுத்த கரையையே மறு கரையில் இருந்து பார்க்க இயலாத வண்ணம், நல்ல பரவலான நீர்ப் பரப்புடன் நல்ல ஆழத்துடன் துலங்கியது. நடுவில் கொலு மண்டபமும் பிரகாசித்தது.
ஜீவ ஜலசமாதி எனில் யாதோ? நீருக்குள் பகதிப் பூர்வமாக இறங்கி, எவ்விதச் சலனமின்றி, இறைநினைவுடன் நீரினுள் அடியினுள் நடந்து, எச்சுவடும் இன்றி அடங்கி, மறைவதே ஜீவ ஜலசமாதியாகும்.
“ஓம் நமசிவாய! அருணாசல சிவ!” என உரத்து ஓதியவாறே இரு கரங்களையும் மேலே உயர்த்தி வணங்கியவாறே, எந்தச் சலனமும் இன்றி நீருக்குள் இறங்கி மறைய, மறைய
..... தீர்த்தக் கரையிலோ இதனைக் கண்டு ஆயிரக்கணக்கானோர் தவித்திட....
அப்போது...
அருணாசல மலையில் ஒரு திவ்யமான காட்சி தோன்றியது!
ஆம்.... அருணாசல ஈஸ்வரனே மலை உச்சியில் தோன்றி, நீரினுள் மறைந்த அவருடைய கொம்பு வாத்யத்தை எடுத்து, இசைத்திடவே....
(சிவாட்சர) ஒலியில் ஒளி(ர்)ந்த ஓங்காரக் கொம்பூதியார்!
அந்த இறையொலிக்குள் மறை ஒளியாய்ச் சித்தர்பிரான் ஐக்யமானார். இது நிகழ்ந்ததே அட்சர லிங்கப் பகுதியாகும். ஆதிசிவன் கொம்பு ஊதித் தரிசனம் அளித்த இடமே கொம்பூதிப் பாறை லிங்கமுகத் தரிசனமாகும்.
இவ்வாறு கொம்பூதிச் சித்தர் சிவபெருமான் ஊதியோதிய கொம்பிசை ஒலியில், ஜோதியாக ஐக்யமான தினமே ஒரு பார்த்திப ஆண்டின் வைகாசி மாத சிவராத்திரித் தினமாகும்.
“பப்ரப்பாங்”..... என அவர் கொம்பு வாத்யத்தை முழங்குகையில், ஒவ்வொரு கொம்பு வாத்ய முழக்கத்திலும் எழும் “பப்பரப் பாசுர ஒலிக் கழல்” பலவிதமான வேத நுணுக்க அனுகிரகமாகக் கருதப் பெற்று இதிலிருந்து வான சாஸ்திரக் கணக்குகளைப் பலரும் பெற்றனர். வராஹமிஹிரர், ஆரியபட்டர் வழி வந்தப் பல வானியல் நிபுணர்களும் கொம்பொலியால் பல அரிய வானியற்கோள் தரிசனங்களைப் பெற்றனர்.
மிகவும் அதிசயமாக, பிரம்மாவின் அற்புத சிருஷ்டியாக, அனைத்து மனிதர்களாலும் காண இயலா பல அரிய நட்சத்திரங்களை, கோள்களை தம் (வெறும்) கண்களால், பகலிலேயே காண வல்ல அற்புதக் கலியுக வான சாஸ்திரியான சின்ஹா, கொம்பூதிச் சித்தரைச் சூக்குமக் காரண வகைகளில் தரிசிக்கும் பேற்றைப் பெற்றவராவார்.
இத்தகைய மகத்துவங்கள் நிறைந்த கொம்பூதிச் சித்தர் தூல, சூக்கும, காரிய, காரண வடிவுகளில் நடப்பு வைகாசி மாதச் சிவராத்திரி நாளில் அருணாசல கிரிவலத்தை ஏற்கின்றார். அவருடன் சேர்ந்து திருஅண்ணாமலையில் கிரிவலம் வரும் அரிய பாக்யத்தை நன்கு பயன்படுத்திக் கொள்க!
பார்த்திப ஆண்டு, வைகாசி மாத சிவராத்திரி ஞாயிற்றுக் கிழமை தின அருணாசலக் கிரிவல பலன்கள்
தோல் வகை நோய்களால் வாடுவோர்க்குத் தக்க பரிகாரங்களைத் தரவல்ல மாத சிவராத்திரிக் கிரிவலம், இம்மாத சிவராத்திரியில் வாய்ப் பாடல்களுடனும், கொம்பு வாத்யம், புல்லாங்குழல், கிளாரினெட், நாதஸ்வரம், சாக்ஸோபோன் போன்ற ஒலிக் கருவிகளை தக்க வித்வான்களைக் கொண்டு இசைத்தவாறும் ஊது கருவிகளுடன் இறைப் பாடல்களைப் பாடியவாறும் வலம் வருதல்
தோல் சம்பந்தமான நோய்களுக்கு நல்ல நிவாரணம் பெற உதவும்., கொம்பூதிச் சித்தர்பிரானின் ஆசியுடன் இசைத் துறையில் மேன்மை பெறவும் துணை புரியும்.
இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் மகத்தான நற்பணிகளை ஆற்றுதலால், பேச்சுத் தன்மை இன்றி வாடுவோர்க்கு நல்குணமும் கூடுவதான நற்பலன்களை அளிக்கும். தம் குழந்தை நன்றாகப் பேசவில்லையே என்று ஏங்குவோர், நற்பலன்களை அடைய, ஏழை இசைக் கலைஞர்களை வைத்து, இன்னிசைக் கச்சேரியுடன் கிரிவலம் வர உதவுதலும், இன்னிசைக் கருவிகளை இசைத்தவாறு திருஅண்ணாமலையில் கிரிவலம் வருதல் வேண்டும்.
கண், காது, தொண்டை வகை மருத்துவ நிபுணர்கள் (ENT Specialist) தம் துறைகளில், மேன்மையடைய இம்மாத சிவராத்திரி நாளில் அருணாசலத்தை கிரிவலம் வருதல் வேண்டும்.
ஒளி, ஒலிபரப்புத் துறையில் பணிபுரிவோர், இசை ரெகார்டிங் செய்வோர், இசை அமைப்பாளர்கள், இசைக் கலைஞர்கள், இன்னிசை வித்வான்கள் தம் துறைகளில் மேம்பட இன்றைய கிரிவலம் துணையாகும்.
இவ்வாறாக, சப்த வகைத் துறையினர் இம்மாத அருணாசல கிரிவலத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வானுலகத் தொடர்பு

வானுலகத் தொடர்பைத் தரும் வான்சக்தித் தலங்கள்!
வான் தரிசனங்கள் பலவும் தினமும் வாழ்நாளில் பெற வேண்டியவையே! தேனி மலை, திருக்கோளக்குடி, பொதிய மலை, திருஅண்ணாமலை போன்ற தலங்களில் பிற தலங்களில் பெற முடியாத பல அரிய தரிசனங்களைப் பெற்றிடலாம். இவை சூக்கும சரீரப் பயணத்திற்குத்  துணை புரியும். தினமும் ஒரு அரைமணி நேரமாவது பெறும் வான் தரிசனத்தில் கிட்டும் பல அபூர்வமான கோள, நட்சத்திர ஒளிக் கிரணங்கள், ஆன்மீக ரீதியாகவும் பல அரிய நேத்ரபல கண் பார்வை விருத்திக்கான சக்திகளையும், பல லட்சம் மைல்களுக்கு அப்பால் பித்ருக்களின் காட்சி தரிசனப் பலன்களையும் தரவல்லவையாகும்.
எனவே, வான் மண்டலத் தரிசனத்திற்குப் பிறகு கண்களை மூடியவாறு தாம் கண்ட வான் தரிசனங்களை மனதினுள் கொணர்ந்திட, இவை உடலினுள் துலங்கும் வான்மண்டல நாள சக்திகளுடன் பிணைவதால், இவை வானஜோதி தரிசன நல்வரங்களாகவும் மலர்ந்து உதவுகின்றன.
பஞ்சாங்கத்தில் பகுத்துணர வேண்டிய கோள் பாத நகர்வுகள்!
தினசரி கிரகங்கள் நகரும் நிலையை “கிரகப் பாத சாரங்கள்” எனப் பஞ்சாங்கத்தில் குறித்திருப்பார்கள். இவற்றை அறிந்து கொண்டு, வான் தரிசனம் பெறுவது நன்று. ஏனெனில், இவற்றின் மூலம், எந்தெந்த கிரகம் எந்த நட்சத்திரப் பகுதியில் சஞ்சாரம் கொண்டுள்ளது எனத் தெரிய வரும். ஜோதிடர்கள்தானே தினசரி கோள் சஞ்சார நிலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என எண்ணாதீர்கள்! இன்றையப் பொழுதில், எந்த கிரகம் எந்த ராசியில் என அறிந்து கொண்டால், சிறிது, சிறிதாக எந்த கிரகம், எந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறது எனவும் அறிந்து கொள்ளும் பக்குவமும் கிடைக்கும். நாளடைவில், கிரக நிலைகள் யாவும் மனதில், உடலில் நன்கு பதிந்துவிடும்.
ஒவ்வொருவர் உடலிலும் வான சாத்திரக் கூறுகள் இருப்பதால்தான், பிறந்த தேதியை வைத்து ஜாதகங் கணித்து, வாழ்க்கை நிலைகள் கணிக்கப் பெறுகின்றன. உயிர் உடல், மனம் ஆகிய மூன்றையும் வைத்துப் பெறப்படும் அறிவானது, உடலில் திகழும் கிரக அம்சங்களைப் பொறுத்து ஏற்படுவதாகும்.
உடலில் ஒளிரும் கோள் சக்திகள்!
வலது கண்ணில் சூரிய அம்சங்கள், இடது கண்ணில் சந்திர அம்சங்கள், ஆள்காட்டி விரலில் குரு அம்சங்கள், கட்டை விரலில் சுக்ர அம்சங்கள், நடு விரலில் சனி அம்சங்கள், மோதிர விரலில் சூரிய அம்சங்கள், சுண்டு விரலில் புதன் அம்சங்கள் என உடலில் ஆங்காங்கே கிரக அம்சங்கள் பலவும் உள்ளன. வானியலில் கிரக மாற்றங்கள் ஏற்படும் போது, உடலிலும் மாற்றங்கள் ஏற்படும். அப்படியானால் அனைவருக்கும் ஒரே மாதிரியான வகையில் அல்லவா மாற்றங்கள் ஏற்படும் என்று கேட்டிடலாம்!
அவரவருடைய பூர்வ ஜன்மக் கர்மப் பாங்குகளும், உடலில் அமையும் கிரக அம்சங்களின் தன்மைகளும், குணங்களும் மிகவும் முக்கியமானவே ஆகும். எனவே, தினமும் வான் தரிசனத்தைப் பெற்று வந்தால், பல்வகை அனுபூதிகள் தாமே கிட்டலாகும்.
நல்வாழ்விற்கான ஆன்மீகக் குறிப்புகள்!
அன்னசக்தியை ஒட்டியதே கலியுக வாழ்வு!
உத்தம யோக முறையில் தாம் உணவுச் சக்தியின்றி காற்றிலிருந்து பிராண சக்தியைப் பகுத்து ஜீவ சக்தியைப் பெறுவர். இப்பூவுலகில் மனிதனன்றி ஏனைய ஜீவன்கள் யாவும் உணவின்றியும் பன்னாள் வாழும் தன்மைகளைக் கொண்டவை. ஆனால், கலியுக மனித வாழ்வானது, அன்னசாரத்தை ஒட்டியதாக, அதாவது வெளி வகை உணவிலிருந்தே உடலானது, ஜீவ விருத்தி சக்திகளைப் பெற்று, மானுட உடலைப் பேணி வாழ வேண்டுவதாக அமைந்துள்ளது. இதுவே அன்னமய கோசமாக உரைக்கப்படுகின்றது.
அதாவது, தினமும் உண்ணாவிடில், மனிதன் வலுவை இழந்து, நோய்களுக்கு ஆட்பட்டு விடுகின்றான். மேலும், மூன்று வேளையும் நன்கு உண்டாலும், முறையான ஆரோக்யமான வாழ்வு அமையாதபடி கலியுக உணவு முறை அமைந்துள்ளது.
எனவே, உடலுக்கு உயிர்ச் சக்தியைத் தருவது ஜீவ சக்தியே, இதனைச் சாதாரண மனிதர்கள் பெரும்பாலும் உணவிலிருந்தும், காற்றிலிருந்தும், பெறுகின்றனர் என்ற ஆதாரப் பாட நிலையை முதலில் தற்போதேனும் அறிந்து செயல்படுக!
பெறுதற்கரிய மானுடப் பிறவியை நல்ல இறைப் பகுத்தறிவுடன் பெற்றிருப்பதால், உலக மனித குலமே, ஏனைய தாவரங்கள், விலங்குகள், பட்சிகளின் நல்வாழ்விற்காக, பல நற்காரியங்களை ஆற்றி வாழ்வதையே உத்தமமான மானுடப் பிறவி வாழ்க்கை என்று சித்தர்கள் உரைக்கின்றார்கள்.
தற்போதைய கலியுக வாழ்வு முறையில் குறிப்பாக, உணவில் மூலிகை சக்திகள், தைல சக்திகள், பிராண வாயு சக்திகள் போன்றவை பெரிதும் மறைந்து வருவதற்குக் காரணமே, விறகு, கரி போன்ற இயற்கையான பொருட்களில் அக்னியை வளர்த்து ஆக்கும் உத்தம அக்னிப் பூர்வ சமையல் முறை மறைந்து வருவதாகும்.
மேலும், செயற்கை ரசாயனக் கலவை கூடிய காஸ் சிலிண்டர் அடுப்புகளில்தான் நகரப் பகுதிச் சமையல்கள் நிகழ்வதால், உணவுகளில் நல்சக்திகள் மாய்ந்து ரசாயன சக்திகளே உடலைச் சேருகின்றன. ஆனால் காலத்தை ஒட்டியும் வாழ்ந்தாக வேண்டுமே! இவற்றை நிவர்த்தி செய்ய அன்னதானப் புண்ய சக்திகளே ஆன்மீக ரீதியாகத் துணை புரியும்.
எனவேதான் தினமுமே பசு, காக்கை, நாய்களுக்கு உணவிடும் ஜீவகாருண்யமும், “தினசரி மூவருக்கேனும் அன்னமிடும்” நற்பழக்கமும் தினசரிக் கடமையாக நமக்கு நம் பெரியோர்களால் அளிக்கப்பட்டு, கால மாற்றங்களில் ஏற்படும் பல தன்மைகளுக்கு நிவர்த்திகளைத் தருகின்றது.
Fast Food, ரெடிமேட் வகை உணவுகள், ஹோட்டல் உணவுகள், தகர டப்பாக்களில், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட உணவுகள் (tinned food) என்பதாக, வெளிச் சமையல் உணவுகளில் கலியுக மனிதனுக்கு நாட்டம் மிகுந்து, உடலுக்கு கேடு விளைவித்து, கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தையும் எளிதில் எப்பயனுமின்றியும், தீயதை விலை கொடுத்து வாங்கியும் விரயம் செய்கின்றனர்.
ஆண்டுப் பலாபலன்களில் அத்தனை விளக்கங்களும்!
அந்தந்தப் தமிழ்ப் புத்தாண்டில் எத்தகைய துன்பங்கள் நிகழப் போகின்றன என்பதை தீர்க தரிசனமாக உணர்ந்து அந்தந்த ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய பூஜை மற்றும் உணவுக் குறிப்புகள் அளிக்கப் பெறுகின்றன. நவகிரக மூர்த்திகளும் தான்யாதிபதி, ரசாதிபதி, அர்க்காதிபதி, ஸஸ்யாதிபதி, நீரசாதிபதி, மேகாதிபதி எனப் பல அதிபதித்துவங்களை அளித்து, அந்தந்த தமிழ் ஆண்டில் ஜீவ வாழ்வின் பல்துறைகளிலும் ஏற்படும் மாற்றங்களைத் தீர்க தரிசனமாகக் குறித்துத் தருகின்றனர். பெருகி வரும் விஞ்ஞான மாற்றங்களுக்கு, இத்தகைய பஞ்சாங்க மாமறை விளக்கங்கள் ஏற்று வருமா எனச் சிலர் எண்ணிடலாம்!
பூமிகள் பல உண்டு. நம் நடப்பு விஞ்ஞானம், நாம் வாழும் பூமியை மட்டுமே ஒரே பூமி என எண்ணி பல தப்பான கணக்குகளைப் போட்டு வருகின்றது. நம்மை விட விஞ்ஞானப் பூர்வமாக முன்னேறி உள்ள பூமிகள் பல உண்டு. அவற்றைப் பார்க்கும் போது, நம் பூமியின் கம்ப்யூட்டர் முன்னேற்றங்கள் பல நூறு ஆண்டுகள் பின் தங்கி உள்ளன. மேலும் எதனையும் “விஞ்ஞான முன்னேற்றம்” என்று சொல்வதும் தவறே! ஏனென்றால் நாம் “விஞ்ஞான முன்னேற்றம்” எனக் காண்பது அனைத்தும் பிற பூமிகளில் இருந்து வந்தவையே! அங்கிருந்து இங்கு வந்தவர்கள், இங்கு பிறந்தவர்கள் அவற்றை இங்கு கொணர்கின்றார்கள்! ஆம், வருடந் தோறும் பிற கிரகங்களில் இருந்து பலரும் மனித வடிவில் நல் உலக சமுதாயத்தில் தற்போது கலந்து வருகின்றார்கள் என்பதும் உண்மையே என்பது வருங்காலத்தில் புலனாகும்.
அங்கும் எங்கும் பஞ்சாங்க நியதிகளே!
மக்களுக்குத் தீங்கு பயக்காத, தீமைகளைப் புதிதாக உருவாக்காத எதுவும் ஏற்புடையதே! ஆனால் இத்தகைய விஞ்ஞானப் பூர்வமாகப் பல நூறு ஆண்டுகள் “முன்னேறி உள்ள பூமிகளிலும்” எப்போதும் சாசுவதமான பஞ்சாங்க கணிதமே நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
பக்க விளைவுகள் பல உள்ள விஞ்ஞான மருத்துவத்தில் இருந்து மீண்டு, சித்த வைத்தியம், ஆயுர் வேதம், யுனானி, இயற்கை வைத்திய முறைகளுக்குத் தற்போது, மக்கள் மாறுவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம் அல்லவா!
நடப்புப் பார்த்திப ஆண்டில் மட்டுமல்லாது, வரும் ஆண்டுகளிலும் கீழ்கண்ட உணவு முறைகளைக் கடைபிடித்திடுதல் நலம் தரும்.
தினமும் காலை – இஞ்சி, மதியம் – சுக்கு, இரவு – கடுக்காய் சிறிது ஏற்றல் ஆரோக்யமான வாழ்வைத் தரும். இதற்கு “த்ரயம்புரிக் காயகல்பம்” என்று பெயர். இம்மூன்றையும் அந்தந்த வேளைகளில் முறையாகச் சிறிது உண்டு வந்தால், மனத் தெளிவு, உள்ளத்தில் சாந்தம், நோய் எதிர்ப்பு சக்திகள், நல்உடல் திறன், நல்அரோக்யம் திளைத்திட உதவும். இது எளிமையான பண்டையக் காலக் காயகல்ப முறைகளில் ஒன்றாகும்.
தினமும் மூன்று இளம் பிஞ்சாண வெள்ளரிக் காய்களை உண்டு வருதல் வேண்டும். குறைந்தது. மூன்று வெள்ளரித் துண்டுகளையாவது, ஜீரகப் பொடியுடன் தொட்டு உண்ணுதல் நன்று.
காலையில் முள்ளங்கி சூப் அல்லது முள்ளங்கிச் சாறு அருந்துதல், மாலையில் பாகற்காய் சூப் அல்லது பாகற்காய் ஜூஸ் (ஜீனி போடாது) அருந்த வேண்டும்.
தினமும் காலையில் சூரிய உதயத்திற்குப் பின், காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள், வில்வம், வேம்பு, துளசி, நாவல், ஆவாரம் பூ, சிறு குறிஞ்சாண் ஆகியவற்றின் இலைகளையோ அல்லது பொடிகளையோ, வெறும் வயிற்றில் சிறிது பொடியாகவோ அல்லது வெந்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.
ரசாயன முறைச் சமையல் காரணமாக, இவ்வாண்டில் இருந்து பொதுவாக பூச்சிக் கடி, அரிப்பு, ஒவ்வாமை, மதுமேகம், தோல் வியாதிகள் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. குப்பை மேனிக் கீரையை வாரந்தோறும் இருமுறையாவது உண்டு வர வேண்டும்.
இதற்கு மற்றொரு மூல காரணம், உடலில் எண்ணெய் பசை தக்க அளவில் இல்லாமை ஆகும். ஆண், பெண் இருபாலாரும் வாரமிருமுறை கண்டிப்பாக எண்ணெய் தேய்த்து நீராடிட வேண்டும்.
கோ பூஜை, யானைக்கு உணவிடுதல், யானையிடம் ஆசி பெறுதல், யானைகளை வைத்துப் பூஜை நடத்துதல், யானையிடமிருந்து பூணூல், மாங்கல்ய ஆசி பெற்று அணிதல் குடும்பத்திற்கு நல்ஆசிகளை அளிப்பதாகும். இவை தோஷங்களால் வரும் வியாதிகளைப் போக்கும்.

திருந்திவாழ...

திருந்தி வாழவுமே வாழக்கை
வியாச மகரிஷியின் புதல்வரான சுக பிரம்ம மகரிஷி, கிளி முகம் கொண்டவர். இவர் சீதாப் பிராட்டியின் தந்தையாம் ஜனக மகாராஜாவிடம், சமுதாயத்தின் ஆன்ம நலன்களுக்காகச் சேவை புரிய, பல பாடங்களைப் பயின்றவர் எனப் பலரும் அறியார்.
மன்னராய் மாமஹரிஷியே!
பெரும் பேரரசராகப் பொலிந்த ஜனக மகாராஜா, உத்தம மகரிஷியாகவும் பலராலும் போற்றப்படுகின்றவர். அரண்மனைச் சுகபோகம் நிறைந்த ஒரு மகாராஜா, விதேஹ முக்தரகப் பொலிவது எப்படிச் சாத்யமாகும்?
தானே விதேஹ முக்தராயினும், ஒரு மகரிஷியின் அறிவுரைப்படி, தான் அரசவையில் இல்லாத போது அரியணையில் ஒரு தர்பையை வைத்து அரசாண்டவரே ஜனக மஹாராஜா! அதாவது தற்போதைய செல்போனை விட, எங்கு நடப்பதையும் குறித்த மந்திரங்களால் உணர்த்த வல்ல காந்த சக்திகளை, மின்னியல் சக்திகளை, அணு சக்திகளைக் கொண்டதே தர்பை ஆகும் என்பதை இது உணர்த்துகிறது. விஞ்ஞானத்தில் தற்போது இதன் பலன்களை அறிய வந்தால் உடனடியாக Patent rights போட்டு, தவறான முறைகளில் அணு ஆயுதங்களுக்குப் பயன்படுத்தத் தொடங்குவர் என்பதால்தான் மந்திரப் பூர்வ சக்திகள் தர்பையில் மறைந்து பொதிந்துள்ளன.
எந்த ராஜ்யப் பிரச்னைகளின் நடுவேயும் பூஜைகளில் சற்றும் தவறாதவரே ஜனக மஹாராஜா! தர்பையின் மகத்துவங்களை நன்கு அறிந்தவர். இவருடைய நித்தியப் பூஜை சங்கல்பத்தைக் காணவே, பல மகரிஷிகளும் திரளுவர். ஏனெனில், அவருடைய பரந்த சாம்ராஜ்யத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு சிறு தும்பைச் செடியின் மேன்மைக்காகவும், எங்கோ சாலையில் அடிபட்டிருக்கும் மண் புழுவின் நலனுக்காகவும் கூடச் சங்கல்பித்துத் தினமுமே சமுதாய நலவேள்வியாக அரும்பெரும் யாகங்களை நிகழ்த்தி, தர்மத்தின் அரணாகத் துலங்கியவர்.
(மனம்) சும்மா இருப்பதே சுகம்
மனதை யோகப் பூர்வமாகத்தான் அடக்க வேண்டும் என்பதில்லை! யோகத்தில் மனம் தானாகவே அடங்கும்! அன்னதானம் போன்ற நற்காரியப் பணிகள் மூலமாகவும் மன சுத்தி நன்கு கிட்டும்.
நல்லவர் எப்போதும் நல்லவராக வாழ்வது எப்படி? நல்லவர்கள், தம் ஆயுளில், எக்காலத்தும் தீயதின் வசப்படாமல் வாழ்வது எப்படி போன்ற சமுதாய நல வினாக்களும், அனுபவப் பூர்வமான விளக்கங்களை, சுகபிரம்ம மகரிஷி, ஜனகரிடம் இருந்து பெற்று, பல மன்னர்களுக்கும் உணர்த்தி, அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்தினார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் மிகுந்த கலியுகத்தில் அனைத்து நாடுகளுக்கும் தற்போது இவை மிகவும் பயனுள்ளவை! பல சமுதாயக் கொந்தளிப்புகளின் இடையே, இல்லறத்தில், தொழிலில் நல்லவராக, நல்ஒழுக்கத்துடன் வாழ்வது கலியில் மிகவும் கடினம் எனப் பலரும் எண்ணுகின்றனர் தாமே! ஜனக மஹாராஜா, திரேதா யுகத்தவர் ஆனாலும், பல யுகங்களிலும், குறிப்பாக கலியுகத்திலும் மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகளைப் பல மஹரிஷிகள் மூலம் அளித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இவை மிகவும் தேவை!
புத்தி சுத்திக்கொரு புதன் கிழமை!
தாமே ஜீவன் முக்தராகப் பொலிந்திடினும், நாட்டு நலவளப் பாடங்களில் சிறந்து, மக்கள் சமுதாயத்தை மேம்படுத்த, பல ஆன்மப் பாடங்களை ஜனக ராஜாவிடம் இருந்து, பெற்ற சுகபிரம்ம மகரிஷி, ஜனகரை பிரம்ம ரிஷியாகப் போற்றிய நன்னாளே சுகபிரம்ம புதன் நாளாகும். இந்நன்னாள் எப்போதாவதுதான் வந்தமையும், எனினும் புதன் கிழமையில் புத ஹோரை நேரத்தில் இவற்றில் சில சக்திகளைப் பதித்துள்ளனர்.
பலருக்கும் தம் வாழ்வில் செய்த பெரும் தீவினைகள் மனதை வருத்த்க் கொண்டே இருக்கும். “கீரபாவனப் புண்ய சக்திகள்தாம்” இவற்றுக்கான தக்க பரிகார வழிகளைப் பெற்றுத் தரும். இவற்றைப் பெற வல்ல கீழ்க்கண்ட வகைப் பூஜைகளும் உண்டு.

ஸ்ரீதுங்கஸ்தனாம்பிகை காஞ்சனாகரம்

புதன்கிழமை தோறும் சுகபிரம்ம ரிஷி வழிபட்ட தலங்களிலும் (திருச்சி அருகே கீரனூர் மற்றும் “ஸ்ரீவேதபுரீஸ்வரர்” ஆலயங்கள்). தன் திருக்கரங்களில், அம்பிகை கிளியைத் தாங்கி இருக்கும் தலங்களிலும் (மதுரை, மாயூரம் அருகே கஞ்சனாகரம் ஸ்ரீதுங்கஸ்தனாம்பிகை அம்பாள்) பூஜித்து, சுகபிரம்ம மகரிஷியையும் வணங்கி வர வேண்டும்.
புதன்தோறும் கிளிகளுக்குக் கோவைப் பழம், கனிகள், தானியங்களை அளித்தும், அருணாசல கிரிவலத்தில் பட்சிகளுக்குத் தீர்த்தம், தானியங்கள், உணவு அளித்தும், சிறைப்பட்டுள்ள (கிளிப்) பட்சிகளை விடுவித்தும், சிறு பிள்ளைகளுக்கும் வயதானோர்க்கும் பழ வகை உணவுகளை (ஜாம், புரூட் சாலட்) அளித்தும் வந்தால், தீய வழி ஆட்பட்டோர் திருந்திட வழி பிறக்கும்.
புத்திகாரகராகப் புத மூர்த்தி துலங்குவதால், புதன்கிழமை தோறும் முதியோர், அநாதை, மனவளம் குன்றியோர் இருக்கும் நல்வாழ்வு இல்லங்களில் மனதாரப் பேசி வருதலும் மகத்தான இறைப் பணியே!
மேலும், அரசியலில், சமுதாயப் பணிகளில் ஈடுபட்டிருப்போரும், அரசாங்கப் பணித் துறைகளில் இருப்போரும், அதிகார சக்திகள் நிறைந்த பெரிய பணிகளில் இருப்போரும், அறிந்தோ, அறியாமலோ தம் வாழ்வில் செய்த தவறுகளுக்கும் பரிகாரம் தேடிட இவ்வழிபாடுகள் உதவும்.
பரிகாரமோ, பிராயச் சித்தமோ கர்ம வினைகளை முழுதும் தீர்த்து விடாது, கர்ம வினைகளின் விளைவுகளை ஓரளவு தணிக்கும், தம்மால் பாதிப்பு அடைந்தவர்கள் முழு நிவாரணம் பெற்றால்தான், எந்தக் கர்ம வினையுமே தீர்வடையும். அதுவரை நடப்பு ஜன்மத்திலும், பிறவி தோறும் சுற்றிச் சுற்றியே வரும். இதுவும் ஜனக மஹாராஜாவிடம் இருந்து சுக பிரம்ம மஹரிஷி பெற்றளித்த நியதியாகும்.
சமுதாய அமைதிக்காகவும், பலரும் ஜாதி, மத பேதமின்றி, சத்சங்கமாக இவ்வகை வழிபாடுகளை புதன்கிழமை தோறும் ஆற்றுவதும் மகத்தான சமுதாய சேவையாகும், எனவே நாட்டின் சமுதாய வள நலன்களுக்காகப் பலரும் இவற்றைச் சத்சங்கமாகவும் கடைபிடித்திடலாம்.
தர்ப்பண சக்திகள்
சந்த்திகளை நல்ஒழுக்கத்தில் தழைக்க வைக்கும் தர்ப்பண சக்திகள்!
“ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில்”, கடந்த பல ஆண்டுகளாக, உலகத்தார் யாவருமே தம் மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் அளிக்க வேண்டியதைப் பற்றி சித்தர்கள் அளிக்கும் அரிய விளக்கங்களை, நூல் வடிவிலும், கட்டுரைகளாகவும், பித்ருக்களின் ஆசியாளும், சற்குருவின் அருளாலும், அளித்திடுவதை இறைச் சிறுக்கருவியாய் அரும்பெருங் கடமையாக ஆற்றி வர முயன்று வருகின்றோம்., தர்ப்பண விளக்கங்கள் இன்னமும் கோடானு கோடி உள்ளன.
கர்ப்பம், முட்டை, வெப்பம், அயற்சி ஆகிய நான்கு பொதுவான வகைகளில் ஜீவன்கள் பூவுலகில் சிருஷ்டி ஆகின்றன. ஒவ்வொரு உயிரினத்திற்கும் உரிய தலை, கண், காது போன்ற அங்க வடிவுகள், வாழ்க்கை நிலைகள், முறைகள் யாவும் அதனதனுடைய பூர்வ ஜன்ம கர்ம வினைகளின் பிரதிபலிப்பே ஆகும்.
“ஆத்மம்” என்பதற்கு எத்தனையோ அர்த்தங்கள், விளக்கங்கள், வேதங்கள் முதல் நாலடி வெண்பா வரை அளிக்கப்பட்டுள்ளன. இவை படிக்கும் போது, நன்கு புரிவது போல மிகவும் சுவாரசியமாக இருக்கும். பிறகு மறந்து விடும். இதற்குக் காரணம் என்ன?
மனிதனின் உள்ளிருக்கும் இருதயத்தை, குடலை வெளியில் நன்கு காண முடியுமா? மலமூத்ராதி உணர்வுகளும் அவரவர்களுக்குள் ஆவதே! ஆனால் அவரவர்தாமே இவற்றை நன்கு “உணர” முடியும் அன்றோ! அதாவது அவரவர் கர்ம வினைகளை அவரவர்களே அனுபவித்தாக வேண்டும் என்பதை உணர்த்துவதே மலமூத்ராதி அவஸ்தைகளாகும்.
என்னதான் மனித அவயங்களை “Medical Scan”  செய்து பார்த்தாலும், உள்ளிருக்கும் அதே வண்ணத்தில், வடிவில் காண முடியுமா? இதே போல, அவரவர் உள்ளுள் ஒளிரும் ஆத்ம சக்தியை வெளி விளக்கங்களால் காண்பது முழுமை ஆகாது!
ஜீவனுக்குள் ஜீவன் ஜீவசக்தியைத் தரிசிக்கும் ஜீவ ஆடித்வம்!
மிக மிக உத்தமமான ஆத்ம வடிவ விளக்த்தில், ஒரு ஜீவன் மற்றொரு ஜீவனுக்கு “ஆடியாக” உரைக்கின்றனர். அதாவது ஜீவனுக்கு ஜீவன் “கண்ணாடியாக” அமைவதாகிறது. இந்த மிக எளிமையான சித்தர்களின் ஆத்ம சக்தி வாக்கியத்தையே, “ஜீவனுக்கு ஜீவன் ஜீவ ஆடியே!” என்ற ஆத்மவிசார வேத உற்பத்தி வாக்கியமாகவும் சித்தர்கள் அளிக்கின்றனர்.
அதாவது, “ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குக் “கண்ணாடியாக” ஆகின்றான். எனவே “கண்ணாடி” போலத் தன்னைத் தானே உணர உதவுவதே ஜீவ சமுதாய வாழ்க்கை ஆகும். அன்னதானத்திலும் தன்னை உணர வல்ல ஆத்ம சக்திகள் கிட்டுவதால் தான் அன்னதானமே அற்புதமான “யோகமாகப்” போற்றப் பெறுகின்றது.
இதனைத்தான் “ஆத்மார்த்தமான பூஜை, ஆத்மார்த்தமான அன்னதானம், ஆத்மார்த்தமான இசை, ஆத்மார்த்தமான தர்ப்பணம்” என்றெல்லாம் உரைக்கின்றனர். இத்தகைய உத்தம நிலையானது “சொல்லியோ, படித்தோ வருவதன்று, அனுபவப் பூர்வமாக உணர்வதே”, என்பதைக் கூட இவ்வாறு படித்துத்தான் கலியில் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.
“(ஜீவ) வாடிப் பட்டி!”
“ஜீவ நாடி, ஜீவ கோடி” இரண்டுக்கும் நடுவனதாக அமைவதே “ஜீவ ஆடி” ஆகும். “ஜீவ வாடி” என்பது உயிரானது, உலகில் தங்க வேண்டிய கருப் பொருளை, கர்மப் பூர்வமாகத் திரட்டி அளிப்பதாகும். இதற்காகவே குழந்தை பிறந்தவுடன், நாபிக் கொடியைப் பிரித்தவுடன் நன்கு நீரால் துடைத்து, காலுக்கு “வாடிகம்” எனும் தண்டை (வெள்ளித் தண்டை) அணிவித்து நெற்றிக்கு “வாடிக மை” என்பதான தைலங்களாலான கண் “மையை” ஒரு வெற்றிலையில் வைத்து இடுவார்கள். வெற்றிலைக்கும் “ஜீவ வாடி” என்ற பெயர் உண்டு. காரணம், தாய்க் கொடியில் இருந்து பிரிந்த பிறகும் “வெற்றிலையின் பசுமை” மாறாது, மங்களகரமாகப் பல சுபகாரியங்களிலும் பூஜைப் பொருளாகப் பயனாவதாகும். வெற்றிலையில் “மை” தடவி அமையும் “சகுன சாஸ்திரங்களும்” உண்டு. காணாமற் போனவர்களைக் கண்டறிய இது உதவும்.
ஜீவ வாடி சக்தித் தலங்கள் சில உண்டு. திண்டுக்கல் – மதுரை இடையே “வாடிப்பட்டி” என்ற திவ்யமான சிவா – விஷ்ணுத் தலம் ஒன்று உண்டு. இங்குள்ள அற்புதமான ஆலயத்தில் பண்டைய காலத்தில் “ஜீவநாடித் தீர்த்தம்” என்ற ஒன்று பொலிந்தது. தர்மபுத்திர்ருக்கே ஆத்ம விளக்கங்களைத் தந்த தலமிது. இந்தத் தீர்த்தத்தில் அவரவர் தம்மைப் பிம்பமாகப் பார்த்து “ஜீவ நாடி, ஜீவ கோடித்” தன்மைகளை அறிந்து “ஜீவ ஆடி” மூலத்தை உணர்ந்து கொள்ளலாம். தற்போது இந்த அபூர்வமான தீர்த்தமானது கலிகால நியதியாகப் பெரிதும் மறைந்து வருகின்றது.
ஒரு கண்ணாடியில், பார்க்கும் பொருள், பார்க்கின்ற பொருள், பார்க்க வைக்கும் பொருள் ஆகிய மூன்று உண்டு. இவைதாம் “ஜீவநாடி, ஜீவ கோடி, ஜீவ ஆடி” ஆகிய மூன்றுமாய் ஆகின்றன. கோடி என்பதற்கு யோகப் பூர்வமாய், தியானப் பூர்வமாய், ஞானப் பூர்வமாகக் கோடானு கோடி அர்த்தங்கள் உண்டு.
வாழ்க்கையில் அனைத்துச் சந்திப்புகளும், காரியங்களும் இந்த மூன்றினுள் அடங்குவதாகும். “ஆடி அடங்கும் வாழ்க்கை” என்ற முதுமொழியில், இந்த “ஆடித்” தத்துவம் நன்கு விளங்குகின்றது. இதற்கெனவே அமைந்த “ஆடி” மாதம், பல ஆத்மார்த்தமான விசேஷப் பண்டிகைகள், விரதங்களுடன் பொலிவதுடன், “ஆடி மாதத்தில்” வானில் அமையும் கோள, நட்சத்திர அம்சங்கள், மகத்தான ஆத்ம சக்திகளைத் தருபவை ஆகும். இதனால்தான் வானியல் நிபுணர்களும், சாஸ்திரிகளும் “ஆடி” மாதத்தில்தான் அற்புதமான வானியல் தரிசனங்களை, கண்டுபிடிப்புகளைப் பெற்றனர். இதனால்தான் “ஆடித் தபசு” அம்மனாய், அம்பிகை தோன்றி, மகத்தான நல்வரங்களை ஜீவன்களுக்கு அருள்கின்றாள்.
கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் இந்த மூன்று கால வகைகளும் “ஆடி”யின் திரிபே ஆகும். இதனைத்தான் ஆதிசங்கர பகவத்பாதாளும், “த்ருக் த்ருஷ்டி விவேக” விளக்கங்களாக, “கண்ணாடியை” மையமாக வைத்து அளித்துள்ளார்.
எள்ளின் மறைபொருள்
தர்பை, எள், நீர் மூன்றும் “ஆடி” வகைத் தத்துவார்த்தமாகவும், அனுபூதிப் பூர்வமாகவும் தர்ப்பணப் பூஜையில் பயன்படுகின்றன. கலியுகத்தில் தத்துவம் என்பது வெறும் புத்தக அறிவாக, ஏட்டுச் சுரைக்காயாக மாறி விட்டது. எள்ளில் மறைபொருளாக உள்ள தைல சக்தி, எண்ணெயாக வெளி வரும் வரை, அனுபூதி சக்திகளுடன் திகழ்கிறது. இதனால்தான் விண்ணியல் ஞானவான்களான பித்ருக்களுக்கு, “எள்” மிகவும் ப்ரீதி அளிப்பதாக உள்ளது.
எனவே எள்ளுக்கு மறைபொருளை உரைபொருளாக உணர வைக்கும் தர்ப்பண சக்திகள் உண்டு. எனவே தர்ப்பணம் என்பது தத்துவத்தை, அனுபவப் பூர்வமாக அளிக்க வல்லவை! இதனால்தான் மஹா கணபதிக்கு உரிய சதுராவ்ருத்தித் தர்ப்பணப் பூஜை என்ற விசேஷமான பீஜாட்சர வகைப் பூஜை ஒன்று உண்டு. தக்க பெரியோர்களிடம் விளக்கங்களைப் பெற்றுக் கடைபிடிக்கவும்.
“கடந்த காலத்தில் வாழ்ந்தோர்க்காக, நிகழ்காலத்தார், வருங்காலத்தாரின் ஆன்ம வளத்திற்காக” அளிப்பதே தர்ப்பணமாகும். மூன்று காலத்தாரும் தர்ப்பண சக்திகளால் இணைகின்றனர். “நடந்ததே, நடப்பனவாய் நடந்து வருகிறது” என்பதே, சித்தர்கள் காலமார்கம், பூமியின் சுழற்சி, பூமி வாழ்க்கை பற்றி அளிக்கும் “ஏக வாக்கிய” விளக்கமாகும். இதில் ஆத்ம விசாரமாகப் புகுத்திடில், “ஆடி, கோடியாகி” கோடானு கோடி விளக்கங்கள் புலனாகும். இத்தகைய ஆத்ம சக்திக்கான நல்வரங்களை அளிப்பவளும் “ஆடிப் பூர” அம்மனாய் மிகவும் அரிதாயச் சில தலங்களில் அருள்கின்றாள்!
உண்மையில் வாழ்க்கை என்பதில் மூதாதையர்கள் உத்தம நிலைகளை அடைவதும் அல்லது மீண்டும் பிறப்பெடுப்பதும் கால மார்கமாகத்தானே! உதாரணமாக, ஆத்மார்த்தமாக நீங்கள் அளிக்கும் தர்ப்பணத்தில், கீழ் நோக்கி பூமியில் விழும் தர்ப்பண நீர்த் தாரைகளில், உங்கள் முன்னோர்களின் பிம்பங்களைக் கண்டிடலாம். சத்தியப் பூர்வமான தர்ப்பண வழிபாடுகளில், பித்ருக்களே கைகளில் இருந்து அர்க்ய நீரைப் “பிடித்துச் செல்வதாகப்” பலரும் உணர்ந்துள்ளனர்.
தர்ப்பண ஆடி
முன்னோர்கள், மூதாதையர்கள் என்பார் யார்? பாரதக் குடும்பங்களில் பாட்டனார், முப்பாட்டனார், பெயரையே பேரனுக்கு, கொள்ளுப் பேரனுக்கு வைக்கும் வழக்கம் உண்டு. இதற்கு என்ன அர்த்தம்? உதாரணமாக, உங்களுடைய பாட்டனார், முப்பாட்டனாரின் பெயர் “கந்தசாமி” எனில், அவருடைய பெயரே மீண்டும் எவருக்கேனும் உங்கள் வம்சத்தில் வைக்கும் போது “தாத்தா மீண்டும் பிறந்திருக்கிறார்!” என உரைப்பதுண்டு.
அதாவது இதன் மூலம் உங்கள் மூதாதையரே உங்கள் குடும்பத்தில் மீண்டும் பிறந்திருக்கின்றார் என்பதாகிறது. மீண்டும் மீண்டும் இது குடும்பத்தில் நிகழும் அன்றோ! இதுவே சித்தர்களின் மஹாவாக்கியமான “நடந்ததே நடப்பனவாய் நடந்து வருகிறது” (What Happened Happens to Happen) என்பதை நிரூபிப்பதாகும்.
உங்கள் தாத்தா, முப்பாட்டனாரின் பெயரைச் சூடியவர் அல்லது “தாத்தாவே உரித்து வந்திருக்கிறார்” என்பதன் பொருள் இப்போது நன்கு விளங்குகின்றதா? தாத்தா அல்லது முப்பாட்டனார் பெயரைக் கொண்டவர் நீங்களாகவே இருந்தால், நீங்கள் தாத்தாவிற்கோ, முப்பாட்டனாருக்கோ இப்போது அளிக்கும் தர்ப்பணம், அவரே நீங்களாக வந்து பிறந்திருப்பதால், உங்களுக்காக நீங்களே சுயத் தர்ப்பணம் அளித்துக் கொள்வதாகவும் ஆகின்றது அல்லவா! இதுவே மூன்று காலங்களையும் உள்ளடக்கும் “தர்ப்பண ஆடி” விளக்கமாகும்.
மேலும், யுகாதி யுகமாக, ஒரு பெயருக்கு ஒரு வடிவம் என்பதில்தான் மனித சமுதாயம் ஈடுபாடு கொண்டு விட்டது. உதாரணமாக “மகாத்மா காந்தி” என்றால் “இப்படித்தான் இருப்பார்” என்று மனித சமுதாயத்திற்கு உருவ முறையே மிகவும் பழகி விட்டது. இந்த “உருவச் சார புத்தி” பெரிதும் மாறுதல் அடைந்தால்தான், அனைத்து ஜீவன்களுக்குள் உறையும் ஆத்ம சக்திப் பரிணாமம் நன்கு புரிபடும். “உருவத்தில்” மனம் ஒன்றிடில் “உருவம்” மறைந்தால் மனநிலை மாறுபாடடையும் என்பதால்தான் சத்குருமார்கள், தங்களைப் “புகைப்படம்” எடுக்க விரும்புவதில்லை!
“உருவத்தைப் பிடிக்காதே! உள்ளத்தில் பிடி” என்றவாறான, தெய்வீகத்தில், குருவருளில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ள வேண்டிய ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்தரின் அருள்மொழியை, உள்ளத்தில் நன்கு சாசுவதமான ஒளிச் சுடராக ஏற்றிடுக! அதாவது வெறுமனே “கடவுளை நம்புதல்” மட்டும் போதாது, ஒவ்வொரு கண் இமை அசைவும், உலகின் ஒவ்வொரு சலனமும், இறையருளால் நிகழ்வதாகையால், “இறை நம்பிக்கையை” வாழ்வின் ஒவ்வொரு விநாடியிலும் விருத்தி செய்து வரவேண்டும். இதுவே உலகில் ஒவ்வொரு ஜீவ வாழ்வின் சாசுவதமான லட்சியமாகும்.
“சென்றவர் வந்தாரே!”
உங்கள் குடும்பத்தில், ஐந்தாவது, ஆறாவது தலைமுறைகளில் வாழ்ந்த “கந்தசாமி” என்ற மனித வடிவம், இன்று நீங்களாக வேறு வடிவத்தில் வந்துள்ளதை, உங்களால் சத்தியப் பூர்வமாகக் “கண்ணாடி” போல நன்கு காண முடிகின்றது அல்லவா!
நீங்கள், மேற்கண்ட உதாரணப்படி உங்கள் ஐந்தாம் தலைமுறையின் மறுவடிவு எனில், உங்கள் சகோதரியோ, சகோதரனோ, பிள்ளையோ மற்றொரு ஆறாம் தலைமுறை, ஏழாம் தலைமுறையின் வடிவு ஆகின்றது அல்லவா! அதாவது, ஒரு ஐந்தாம் தலைமுறை மனிதர், ஏழாம் தலைமுறை மனிதரைப் பார்த்துத் தற்போது வாழ்வதால், “ஜீவனுக்கு ஜீவன் ஜீவ ஆடி” என்பதும் நிரூபணமாகப் புலனாகின்றது அல்லவா! இவ்வாறு வாழ்வில் நீங்கள் சந்திக்கும், பார்க்கும் யாவரும் பூர்வ ஜன்மத் தொடர்பு உடையவர்களே என்பதை நன்கு அறிக!
பிம்பங்களே பிறவி நிலைகள்
உலக மனித உருவங்கள் பண்டைய பிறவித் தொகுப்புகளின் பிம்பங்களே! கிணற்றில், ஆற்று நீரில், பாத்திர நீரில் பிம்பமாகத் தெரியும் உருவமானது, சற்றே நீரை அசைத்தால், பிம்பமும் மாறி அசைந்து, மறைந்தும் மாறுகின்றது அல்லவா! இதைப் போலவே பிறப்பும், இறப்பும் சலனங்களாகும். இதனால்தான் “வாழ்க்கை நிலைகளை”, “பிறவிகளை” “நீர்க் குமிழிகள்” என உரைக்கின்றனர்.
ஜலமண்டலப் பித்ரு லோகங்கள்
இதனை உணர்த்தும் வண்ணமாயும், பித்ருக்களின் லோகத்தையே ஜல மண்டலமாகக் கொண்டுள்ளனர். ஆம், பித்ருக்கள் யாவரும் பல்வகை ஜல மண்டலங்களில்தான் வாழ்கின்றார்கள். இதனால்தான் நீர் சம்பந்தமான தர்ப்பணம், நீரை வைத்துச் சமைக்கும் திவசப் படையல்கள், அஸ்தியை நீரில் கரைத்தல் போன்று ஜலப் பூர்வமாகப் பித்ரு வழிபாடுகள் அமைகின்றன. ஏன், மனித உடலிலும் பெரும்பாலு நீர் தானே நிறைந்திருக்கின்றது?
ஆனந்தம், சோகம் இரண்டிற்கும் இடையிலும் அகப்பட்டு வாழும் மனிதனுக்கு, இந்த இரண்டு நிலைகளிலும் நீர் தானே நிறைந்திருக்கின்றது?
ஆனால், புனிதமான நீரை, மனித குலம் தவறாகப் பயன்படுத்துதல் கூடாது என்பதற்காகவே, நீருக்குள் மனிதனால் ஒரு ஐந்து நிமிடங்கள் கூட இருக்க முடியாது என்ற “அதம நீர்ச்சாரமும்”, உப்புக் கரிக்கும்படியான கடல் நீரமைப்பும், ஆழமான கிணற்றில் நீர் இருப்பதுமாக விதிக்கப்பட்டுள்ளன.
ஜலவகைப் பித்ரு லோகங்களும் நிறையவே உண்டு. உத்தம பித்ரு நிலைகளிலும் எண்ணற்றவையும் உண்டு.. ஸ்ரீசூரிய நாராயண சுவாமியாகிய பெருமாளப்பர்தான் பித்ருக்களுக்கான அதிபதி என்று நாம் அறிவோம்., ஸ்ரீமன்சூரியநாராயண சுவாமியும் பாற்கடல் போல, தர்பைச் சாரக் கடலில்தாம் சயனித்து அருள்கின்றார்.

திரு குந்திதேவி திருநல்லூர்

நீர் வகை பூஜைகளில் சிறந்தவளே குந்தி தேவி ஆவாள். சித்தர்களும், மஹரிஷிகளும் அதிசயித்துப் போற்றும் வண்ணம், மாமுனியாம் துர்வாசரிடம் பன்னெடுங்காலம் பணிவாக, சாத்வீகமாக, தெய்வீகமாக அருட்பணிகளை ஆற்றியவள் என்று மகரிஷிகளாலும் போற்றப் பெற்றவள்.
இதனால் துர்வாசரிடமிருந்தே “சாதக சாகர சாதகி” என்ற அபூர்வமான பட்டத்தையும் பெற்றமையால்தான், குந்தி தேவி பித்ரு பூஜைகளைச் செவ்வனே ஆற்றுவதற்காகவே, கும்பகோணம் அருகே திருநல்லூர்த் திருத்தலத் தீர்த்தத்தில் “சப்த சாகரம்” என்பதாக – ஏழு பெருங்கடல் தீர்த்தங்களையும் – இறைவனே துர்வாச மகரிஷியின் பெருந்தவத் திறத்தினால் ஒன்றிணைத்து வரவழைத்துத் தந்து மூதாதையர்களின் பூஜைகளை நிகழ்த்திடப் பேரருள் புரிந்தார்.
இதிலிருந்து என்ன தெரிகின்றது? சூரிய மூர்த்தி, வாயு மூர்த்தி போன்று சகல தெய்வ மூர்த்திகளிடமே நேரடியாகப் பேச வல்ல தவத்திறனைப் பெற்ற குந்தி தேவிக்கே இறைவன் பித்ரு பூஜைகளை நிகழ்த்துவதற்காக விசேஷமான அருள்புரிந்தார் என்றால், பித்ரு பூஜைகளின் மகிமைதான் என்னே!
இவ்வாறாக, “ஜீவனுக்கு ஜீவன் ஜீவ ஆடி!” என்பதில் தர்ப்பணப் பூஜையின் சக்திகளை விளக்குவதாகவுமான கோடானு கோடி அர்த்தங்கள் உண்டு. இவ்வாறு பூவுலகில் நீங்கள் காணும் ஒவ்வொரு மனிதரும் பல்லாயிரம் பிறப்புகளின் பிம்ப வடிவமே! இதனை நன்கு உணர்த்துவதும் தர்ப்பண சக்திகளின் மகிமைகளுள் ஒன்றாகும்.
24, 36 தலைமுறைகளுக்குத் தர்ப்பணம் அளித்தீர்களா?
பலரும் தர்ப்பணத்தை ஒரு பத்து நிமிடப் பூஜையாக “டக்கென்று” சிரத்தையின்றி ஏதோ “கடனே” என்று முடித்து விடுகின்றார்கள். இதை நன்கு விஸ்தாரமாக நிரவிச் செய்வதென்றால், அமாவாசைத் தர்ப்பண பூஜையை ஒரு மணி நேர பூஜையாக, 24, 36 தலைமுறைகளுக்கும் விரவி வருவதாக நன்றாகவே பலன்கள் நன்கு விருத்தி ஆகும்படிக் கூடச் செய்திடலாமே! ஏன் மனம் ஒப்பவில்லை?
மூதாதையர்கள் அளித்த உடலும், ரத்த அணுக்களும், வீடு, வாசல் சொத்துக்களையும் அனுபவிக்கையில், அவர்களுடைய மேலுலக நல்வாழ்விற்கான தர்ப்பணப் பூஜைகளில் மனம் லயிப்பதில்லையே ஏனோ? இதற்காகவே தினசரித் தர்ப்பணமோ, அல்லது வருடத்தின் 96 முக்கிய நாட்களில் தர்ப்பண நியதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றின் சக்திகளையும் மனித சமுதாயம் இழந்து வருகின்றது.
தர்பையிலும், எள்ளிலும் பித்ருக்களுடைய ஒளி வகைச் சரீரங்கள் ஆவாஹனம் ஆகக் கூடிய திரவிய அணுக் கூட்டுப் பரல்கள் நிறையவே உண்டு. இதனால் தான் அக்காலத்தில் ஜாதி, இன பேதமின்றிப் பலரும் ஒன்று சேர்ந்து சத்சங்கமாக, தர்ப்பணப் பூஜைகளை அளிக்கையில், அனைவரின் முன்னாலும் “சாட்சி வேதகணமாக”, ஹோமம் நடைபெறுகின்றதோ இல்லையோ முன்னால் ஒரு ஹோம குண்டத்தை வான்சகுனப் பொருளாக வைத்து, துளசிச் செடி, தாமிர, வெள்ளிப் பாத்திரங்கள், விளக்குகள், நவதானியங்கள், பிரண்டை, மூங்கில் தட்டு அல்லது குவளை, நெல்லிக் கனிகள், சமித்துகள், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, நல்ல வடுத் தேங்காய்கள் போன்ற 96 வகை பித்ரு சக்திப் பொருட்கள் நிறைந்த திவ்யமான சூழ்நிலையில் பலரும் ஒன்று சேர்ந்து குளக்கரை, ஆற்றங்கரை, கோயில் மண்டபங்களில், தர்ப்பணப் பூஜைகளை ஆற்றினர். இதனால், பித்ருக்களுடைய ஆசீர்வாதம் சமுதாயத்தின் நல்வளத்திற்காக வந்து குவிந்து, சமுதாயத்திலும் அளப்பரிய சாந்தம் நிலவியது.
ஆனால், இவற்றை இன்றும் சமுதாயப் பூஜையாக ஆக்க வேண்டுமே! அப்போதுதானே சமுதாயத்தில் சாந்தத்தை ஓரளவேனும் பெற இயலும்! செய்கின்ற சிறு தர்ப்பணப் பூஜையை இன்னமும் நன்கு விருத்தி செய்ய வேண்டுமானால், நிறையப் பித்ருக்களின் ஆத்ம ரீதியான போக்குவரத்து பூமியில், இல்லங்களில் நிரவுமாறு, கூடுதலாக, பலவிதமான தர்ப்பணப் பூஜை முறைகளை ஏற்றுக் கடைபிடித்திட வேண்டும்.
முதலில், ஒவ்வொரு குடும்பத்தினரும், தம் வம்ச வழியில் உள்ள மிகவும் வயதானவர்களிடமிருந்து, அப்பா மற்றும் அம்மா வகையில், முந்தைய 24 தலைமுறைகளின் பெயர்களைக் கேட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
தாத்தா பாட்டியிடம் கேட்டால் “மூன்று தலைமுறைக்கு மேல் பெயர்கள் தெரியவில்லையே என்று சொல்கின்றார்களே!” என்ற பதில் ஒரு போதும் வரக் கூடாது. இவ்வாறு தந்தை மற்றும் தாய் வழியில் 24 தலைமுறைகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் சந்ததி, சந்ததிகளாக வருமாறு எழுதி வைக்காதது யாருடைய தவறும், குற்றமும் ஆகிறது?
ஏதோ பெயருக்காக, தந்தை மற்றும் தாய் வழியில் பிதுர், பிதுப் பிதாமகர், பிதுப் பிரபிதாமகர் என்று மட்டும் சொல்லிக் கொண்டு தாய், தந்தை வகையில் தாத்தா, தாத்தாவிற்குத் தாத்தா, முப்பாட்டனார், என மூன்று, மூன்று தலைமுறைகளுக்கு மட்டும் தர்ப்பணம் அளித்தால் போதுமா, ஸ்ரீரமணர், ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் போன்ற மகான்கள் உதிக்கும் குடும்பத்தில் இந்த மகானுபாவ உற்பத்தியால் அவர்களுடைய 24 தலைமுறைகளும் கடைத்தேறுகின்றனர் என்பது சத்தியமான முதுமொழி.
எனவே, பலருக்கும் சேவை புரியும் வண்ணம் உத்தம வாழ்க்கையை ஒருவர் நடத்திக் கொண்டால், தம் தலைமுறைகளில் பலரையும் கடைத்தேற்றிடலாம் அன்றோ! எனவே, இதைப் படித்தவுடனேயே இன்றே இப்போதே உங்களுடைய குடும்பப் பெரியோர்கள், ஊர்ப் பெரியவர்களின் துணையை நாடி, குறைந்த பட்சம் 24 தலைமுறைகளின் மூதாதையர் பெயர்களை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
அமாவாசை மட்டுமல்லாது, “ஷண்ணாவதித் தர்ப்பண நாட்கள்” எனப்படும் 96 வகைத் தர்ப்பண நாட்களில், தாய், தந்தை வழிகளில் 24, 24 பேர்களுக்கும் தர்ப்பண அர்க்யத்தை அளிப்பதுதான் குடும்பத்தைச் சிறப்புடையதாக்கும். 36 தலைமுறைகள் எனில் இன்னமும் சிறப்புடையதாகும். இல்லையெனில், பல தலைமுறைக்கும் தர்ப்பண சக்திகள் அமையாது  விடுபட்டுப் போய் விடும். இதனால் அவர்கள் ஏனைய சரீரங்களிலேயே சுற்றிக் கொண்டு, பிறவித் தளைகளில் இருந்து விடுதலையைப் பெற இயலாமலும், வேறு பிறவி எடுக்க முடியாமலும், தர்ப்பண சக்தியின்றியும் அவதிப்படுவார்கள்.
உண்மையிலேயே, இதனால் தான் 24 தலைமுறைகளையும் அறிந்த குடும்பத்தவர்கள் கலியுகத்தில் மிக மிக பாக்யசாலிகள் ஆவர். செட்டி நாட்டுப் பகுதியில் “ராம.பெரி.வீர.வடு” என்பதாக, நாட்டுக் கோட்டைச் செட்டியார்களின் குடுமபப் பாரம்பரியத்தில் ஐந்தாறு தலைமுறைகளை முன்னே வைத்துப் பெயரிட்டுக் கொள்கின்ற உத்தமமான நற்பழக்கம் நிலவி வருகின்றது. இது மிகச் சிறந்த நாமத் துறைப் பழக்கமாகும். இதைப் போன்று அனைவரும் பெயர்களை அமைத்துக் கொண்டால், தலைமுறைப் பெயர்கள் விடாமல் நன்கு போற்றிப் பித்ரு பூஜைகளை நடத்திடலாம்.
தம்முடைய 24 வகை மூதாதையர்களின் பெயர்களை, தந்தை மரபும் தாய் வழியிலும் அறிந்து கொண்டு, வருடத்தின் 96 நாட்களிலும், 24 வகை முறைத் தர்ப்பண பூஜையாக ஆற்றி வருதல், குடும்பத்திற்கு நல்ல சிறப்பினை அளித்து ஆண், பெண் இரு வகை சந்ததிகளும் நன்கு தழைத்திட மிகவும் துணை புரியும்.
எனவே, இன்றிலிருந்தே இதற்காக உறுதியுடன் செயல்படுவதோடு, சுற்றம், உற்றம், நட்பு என ஜாதி, மத இன குலபேதமின்றி யாவருக்கும் இந்த கூட்டுப் பாரம்பரியப் பரம்பரைத் தர்ப்பண மகிமை சக்திகளை உணர்த்திடுங்கள்.
ஆனால் 24 தலைமுறைகளின் பெயர்களைப் பெறுதல் என்பது தற்காலத்தில் மிகவும் கடினமானது என்பது உண்மையே! செட்டிநாட்டுப் பகுதியில் 60 மற்றும் 80வது வயது சஷ்டி அப்தப் பூர்த்தி, சதாபிஷேக, நிறைவின் போது, இலவசமாகச் சில தெய்வீக நூல்களை வெளியிட்டு, அதில் குடுமபப் பாரம்பரியப் பெயர்களைப் பதித்து வைப்பதால், இதனையே அனைவரும் நல்வழிகாட்டி முறையாக ஏற்று 24, 36 குடுமபத் தலைமுறைகளை ஒவ்வொருவரும் நன்கு அறியுமாறு நாடெங்கும் செயல்பட்டிட வேண்டும்.
உண்மையில், எள் என்பது மகத்தான சக்திகளைக் கொண்டு, ஒரு மனித உடலின் அமைப்பை (ஜீவ அணு வரைவு) உணர்த்துவதே என்பதை நாம் சித்தர்களின் வாக்காகப் பன்முறை விளக்கி வந்துள்ளோம். எத்தனையோ தலைமுறைகளைத் தாண்டிப் பித்ருத் தர்ப்பண அர்க்யங்களை எடுத்துச் சென்று அளிக்க வல்ல சிறு எள் மணிகளை வைத்து, ஒரு மூன்று தலைமுறைக்கு மட்டும் தர்ப்பணம் அளிப்பது பகுத்தறிவாகுமோ! சற்றே சிந்தித்துப் பாருங்கள்!
ஆயிரக்கணக்கான தலைமுறைகளைத் தாண்டிச் சென்று அடைய வல்ல எள் மணிகளைக் கொண்டு எத்தனையோ அற்புதங்களை வாழ்வில் நிகழ்த்திடலாமே! எள்ளும், தர்பையும் மட்டுமல்லாது இன்னமும் எத்தனையோ, குறைந்த பட்சம் 96 வகைப் பித்ரு சக்தித் திரவியங்களை சேர்த்துக் கொண்டு தர்ப்பண சக்திகளை நன்கு விருத்தி செய்து கொள்ளலாமே! இவ்வழி முறைகளைத் தக்க சற்குருவை நாடிப் பெறுதல் விசேஷமானது.
பொதுவாக இப்போது அளிக்கப் பெறும் தர்ப்பண முறை மூன்று தலைமுறையோடு நின்று விடுவதை ஓரளவேனும் நிவர்த்தி காண, “சாட்சிப் பூர்வத் தர்ப்பணம்” என்ற ஒன்று உண்டு. விஷ்ணு சக்திகள் நிறைந்த நெல்லி, அரசங் குச்சி, ஆலிலை, பிரண்டை, தர்பை, ஹோம குண்டம் போன்ற 24 வகைகளைச் சாட்சியாக வைத்து, பன்னிரெண்டு, பதினாறு, இருபத்துநாலு எனத் தலைமுறைகளுக்குத் தர்ப்பணங்களை அளிப்பர். பித்ரு ஹோமங்களில், தேனில் ஊறிய 36 முழுமையான மலை நெல்லிக் கனிகளை, ஒவ்வொரு தலைமுறைக்குமாக, ஹோம ஆஹூதிகளாக அளிப்பதும் மகத்தான பித்ருத் தர்ப்பணப் பூஜையாகும். வாரம் ஒரு முறை பிள்ளையாருக்கு உரிய “சதுராவ்ருத்தித் தர்ப்பணம்” என்ற விசேஷமான பூஜையும் உண்டு. இவை எல்லாம் 24, 36 தலைமுறைகளுக்குத் தர்ப்பண சக்திகள் சென்றடைய உதவுவதாகும்.

நோய்களும் தீர்வுகளும்

அடியார்: சத்குருவே, கலியுகத்தில் வேறு எதையும் விட, “மக்கள் மிகவும் அஞ்சுவது நோய்களைக் கண்டுதான்!” என்ற அளவில் நோய்கள் பெருகி வருகின்றனவே, என் செய்வது? மருத்துவ விஞ்ஞானத்தில் புதுப் புது நோய்கள், மருந்துகளும் அவ்வப்போது கண்டு பிடிக்கப்படுகின்றனவே!
முதற் கேள்வி உங்களுக்குள்ளேயே!
சத்குரு: (ஆழ்ந்த சிந்தனையுடன்) ஏதேதோ கற்பனை செய்துகொண்டு, சற்றும் சிந்தனை செய்யாது, ஆழ்ந்த தெய்வீக நிலைகளில் அறிய வேண்டியதை எல்லாம், கலியுகத்தில் “படக் படக் கென்று” விரைவுக் கேள்விகளாகக் கேட்டு விடுகின்றீர்கள்! இதில் உங்களுக்குப் புரியும் வண்ணம் பதில் சொல்ல நாங்கள்தான் சிரமப்பட வேண்டியதாக உள்ளது.
(ஆழ்ந்த சிந்தனையுடன் தொடர்கிறார்....)
... இருந்தாலும், இனியேனும் எந்தக் கேள்வியையும் உங்களுக்குள்ளேயே முதலில் கேட்டுக் கொள்ளுங்கள். “நமக்குத்தானே பதில் தெரியாதே! அதனால்தானே கேட்கிறோம்” என்பது, உங்கள் வெளி அறிவால் ஏற்படும் உணர்வு ஆகும்.
உங்கள் உடல் வடிவமானது “பல்லாயிரக்கணக்கான பிறவிகளில் ஆற்றிய காரியங்களின் ஒட்டு மொத்த திரண்ட வடிவம்!” என்பதை முதலில் நன்கு தெரிந்து கொள்ளுங்கள். இதில் பல்லாயிரப் பிறவிகள், பல்லாயிரம் ஆண்டுகளின் எண்ணற்ற வகையிலான ஆன்ம அனுபவங்கள், அனுபூதிகள் ஆன்மீக ரீதியாக நன்கு  திரண்டு வரும். இதுவே பூர்வ ஜன்மப் புண்ய விளைவுகள் என்று உணர்த்தப்படுகிறது. எவ்வளவு கெட்டவராக வாழ்ந்தாலும் அவருள்ளும் சிறிது ஆன்மீக அனுபவ அனுபூதிகள் சற்றுத் தொக்கியே நிற்கும்.
எனவே, உங்களுக்குள்ளேயே முதலில் கேள்விகளைக் கேட்டுக் கொண்டால், உங்களுக்கே தெரியா வண்ணம், நீங்களே அறியா வகையில், பல எளிய, உத்தம, சிறப்பான விளக்கங்கள் உள்ளுறைப் பூர்வமாய் நிறையவே கிடைக்கும். அவற்றை இங்கு கொணர்ந்து வந்து மென்மேலும் தெளிவு பெறுதலே நன்று.
ஏனெனில், உங்களுடைய பித்ருக்கள் உங்களுள் புகுந்து உள்ஒலி மார்கமாக விடையளிக்கப் பன்னெடுங் காலமாகக் காத்துக் கிடக்கின்றனர். இதுவே “ஆத்ம விசாரம்” எனும் அற்புதமான மனயோகத்தின் ஆரம்பப் படிகள் ஆகும். மேலும் ஆன்மீகத்தில், “சரியா, இல்லையா, இதுவா, அதுவா?” என்று ஒரு வரி விடையில் எதையும் எதிர்பார்த்திடல் ஆகாது. ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு கண் அசைவுக்கும் ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டெனில், இதை இறைவனளித்த பரிசான பகுத்தறிவு கொண்டு வாழ்வில் பகுத்துணராதது யார் குற்றம்?
அடியார்: பல்லாயிரப் பிறவிகளின் தொகுப்பு இப்பிறவியாகிறது என்று விளக்கி உள்ளீர்கள் குருதேவா! ஆனால், புத்தக அறிவு, புத்தகப் படிப்பு ஏட்டுச் சுரைக்காயாக வெறுமனே காலப் போக்கில் உதிர்ந்து விடுகிறது. ஜன்மம் ஜனமமாகத் தொடர்வது கிடையாது என்பதுதானே ஆன்மீக நிலை!

ஸ்ரீதன்வந்த்ரி மூர்த்தி
நெல்லுவாயா நெல்லுவாய்புரம்

சத்குரு:- பொறுமையாக முதலில் கேட்டுக் கொள்க! அறிவு என்பது கலியுகத்தில் நிறைய விஷயங்களைப் புத்தகம் மற்றும் பல தொடர்புகள் மூலம் அறிந்து கொள்வதே என்ற எண்ணம் ஏற்படுவதால்தான், இத்தகைய விரைவான ரீதியில் குறுக்குக் கேள்வி முளைக்கின்றது.
தாவர இயல், ரசாயனம், பௌதிகம், விலங்கியல் என்பதாக, ஆரம்பப் பள்ளிக் கல்வி முதல் கல்லூரி வரை பல கல்வித் துறை இயல்களைப் படித்து விட்டு, வங்கியில், தபால் துறையில், ரயில்வே துறையில், ஏதேனும் கம்பெனியில் சேர்கின்ற பின் அனைத்தும் மறக்கப்பட்டு விடுகின்றன. கலியுகத்தில் இந்த ஜன்மத்தில் நீங்கள் அறிவு என்று எண்ணித் தெரிந்து கொண்டவை நாலைந்து அல்லது பத்துப் பதினைந்து ஆண்டுகளில் மங்கி, மறைந்து போய் விடுகின்றதே!
ஆனால், மானுடப் பிறவியில் பெற்ற ஆன்மீகப் பூர்வமான, அனுபவப்பட்ட ஆன்ம அறிவுதான் ஜன்ம, ஜன்மமாகத் தொடர்ந்து வரும். புத்தக அறிவு தொடராது, மீண்டும் பிறந்தால் மீண்டும் LKG, UKGயில் தான் பாடம் தொடங்கும். ஆனால் ஒரு பிறவியில் பெற்ற தவ, யோக ஆன்மீக முன்னேற்றங்கள், உத்தம தேவ நிலைகள் அடுத்த பிறவிகளிலும் தொடர்ந்து வரும். இதைத்தான் ஆரம்பத்திலேயே உங்களுடைய இப்பிறவியானது, பல்லாயிரம் பிறவிகளின் அனுபவ, அனுபூதித் தொகுப்பென எடுத்துரைத்தோம்.
நோய்கள் பற்றிய விளக்கங்கள் என ஆரம்பித்து எங்கெங்கோ Subject செல்கிறது என எண்ணக் கூடாது, ஏனெனில், குருகுலவாசத்தில் குருவோடு கூடவே இருந்து எண்ணற்ற நற்காரியங்களைக் குறைந்தது 25 ஆண்டுகளாக ஆற்றினால்தான் உங்களுடைய முதல் கேள்விக்கே பதில் புரியலாகும். இருந்தாலும், எதையும் சுட்டித் தொட்டுக் காட்டுவதே சத்குருவின் குருகுலவாச அம்சமும் ஆகும்.
இப்போது நோய்கள் பற்றிய ஆத்ம விசாரத்தைத் தொடர்வோம். ஏதோ புதுவகை நோய்கள் கண்டுபிடிக்கப்படுவதாகக் கூறுகிறாயே, எது புது நோய்?

இறைவன் படைத்த அதே அங்கங்கள்தாமே எலும்பு, தசை, நரம்புகளாய் ஆரம்ப முதல், ஆதி முதல பல யுகங்களாக மனித தேகத்தில் இருக்கின்றன. இதில் எந்த மாற்றமும் இல்லையே!
சித்தர்களின் வேத வாக்குப்படி, மானுட உடலில் 72,000 நாளங்கள் உள்ளன. தற்போதைய மருத்துவம் இவற்றில் இதுவரை 36 நாளங்களைக் கூட சரியாக அறியவில்லையே!
எனவே, எந்தெந்த நாளத்தில் எந்தெந்த நோய், எந்தக் காலத்தில், பூவுலகின் எப்பகுதியில் ஏற்படும் என்பதையே “அகஸ்தியக் கிரந்த நாடிகள்” தீர்கமாகக் குறிக்கின்றன. தற்போது பல இடங்களிலும் காணப் பெறும் நாடி ஜோதிட நாடிகளல்ல இவை! சத்குருமார்களால் எழுதாக் கிளவியாக வானியற் கிரண சப்தவளிப் பூர்வமாகப் பெறுவதாகும்.
பழவினைகளின் காரணமே நோய்களாக வருகின்றன அல்லவா! அப்படியானால் “புது நோய்” என்று சொல்வதும் தவறுதானே! எனவே, இப்பூவுலகிற்கு எதுவுமே புது நோய் கிடையாது. உடலின் உள்பகுதியே மங்கிய கண்ணாடி வழியே தெரிவது போலான “உடலுருக்கி நோய்” வருங்காலத்தில் வர இருப்பதாக அகஸ்திய கிரந்தங்களில் உரைக்கின்றனர். எனவே, அனைத்து விதமான நோய்களுக்கான விளக்கங்களும் நம் பண்டைய கிரந்தங்களில் காணப் பெறுபவையே! விஞ்ஞான மருத்துவத் துறையானது இன்னமும் 72000 நாளங்களை அறியாத வரையில், பலவும் புது நோயாகவே தோன்றும்.

எனவே, புது நோய் என்று ஒன்று சொல்லி ஒன்று வரக் காரணமென்ன? குறித்த பல தீய வினைகள் கழிவு பெறாமையால், அவைக் கழிவு பெற வேண்டிய வழிபாட்டு முறைகள், விரதங்கள் விடுபட்டுப் போனமையால், அவற்றின் விளைவுகள் அத்தகைய நோய்களாக மீண்டும் ஏற்படுகின்றன. இதுகாறும் சமுதாயத்தில் அத்தகைய நோய்களுக்கு ஆன்மத் தீர்வு பூஜைகள் மூலமாக நிலவியமையால் குறித்த நோய்க்கான கர்ம வினைகள் களையப் பெற்று வந்தன. ஆனால் கலியில் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் பலவும் குறைந்து வருவதால் வினைகளில் தேக்கங்கள் ஏற்பட்டு மீண்டும் நோய்களாகின்றன.
அதாவது, எந்த விதமான கர்ம வினை விளைவுகளால் எந்த நோய் உண்டாகின்றதோ, அக்கர்ம வினை விளைவுகள் கழிவதற்காக பூஜை, தியான, யோக, வழிபாட்டு சக்திகளை மனித சமுதாயம் இழந்து வருகிறது என்பதே இதன் பொருளாகும்.

ஒருவருடைய நோயை இன்னொரு மனிதரான மருத்துவரால்தான், மருந்துகளால் தான் குணமாக்க முடியும் என்ற எண்ணமுமே பரவி வருகிறது. தக்க மருத்துவர்கள் மூலமாகத்தான் சிகிச்சை பெறுதல் வேண்டும் என்பது சரியானதே! ஆனால் பூர்வ ஜன்மத்தில் மருத்துவ தேவ மூர்த்திகளை உபாசித்தவர்களே, இப்பிறவியில் மருத்துவராகின்றனர். ஆகவே, குறித்த நிவாரண சக்திகளை ஆன்மப் பூர்வமாகப் பெற்றவர்கள் மூலமாகவே மருத்துவ சிகிச்சை கைக் கொள்ளப்படுகிறது என்பதே உண்மையாகும்.

எனவே, டாக்டரிடம் சென்று மருந்து வாங்கிச் சாப்பிடுகின்ற ஒரு சாதாரண நிகழ்ச்சியாக நாம் எண்ணுவது, இடையில் எத்தனையோ சம்பவங்களையும் பலவிதமான மனிதத் தரப்பினர்களையும் கர்மப்பூர்வமாக இணைப்பதாக உள்ளது. நீங்கள் டாக்டருக்குக் கொடுக்கும் தொகையில் இருந்து அவர் அதனைச் செலவழிக்கும் தன்மை, மருந்துகளின் மூலப் பொருட்கள், அவை தயாராகும் இடம் போன்ற பலவும் இதில் அடங்குகின்றன.
இவ்வகையில் டாக்டரிடம் செல்வதற்கான ஊர்திப் பயணம், இடையில் சந்திப்பவர்கள், டாக்டரிடம் மருந்துச் சீட்டு பெற்று மருந்து வாங்கும் இடம், செலவாகும் தொகை... என இவை அனைத்திலும் நோய் நிவாரணத்திற்கான கர்ம நிவாரணப் பரிபாலனங்கள் நிகழ்கின்றன. இவை அனைத்தும் முறையாக நிறைவு பெற்றால்தான் நோய் நிவாரணமாகும். நோய் தொடர்ந்தால், நோய்க்கான வினைகளில் பூர்வ ஜன்ம சம்பந்தப்பட்டவர்களின் கர்ம பரிபாலனச் சம்பவங்கள் இன்னமும் நிறைவு பெறவில்லை எனப் பொருளாகும்.
ஆனால் இவற்றைக் கலியில் எடுத்துச் சொன்னால் எவர் தான் நம்புவார்கள்? எனவே இவை யாவும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, காரண காரியங்களை அறிய விழைவோர்க்கே தக்கவர்கள் மூலமாகத் தக்கத் தருணத்தில் உணர்த்தப் பெறும்.
மேலும் நம் முன்னோர்கள் பலவிதமான தான தர்மங்களை ஆற்றி வந்ததுடன், குலதெய்வ பூஜை, நேர்த்திக் கடன்கள் போன்ற பலவற்றையும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் நிறைவேற்றி வந்தமையால் பலவிதமான நோய்களும் அண்டாமல் தற்காத்துக் கொண்டனர். நோய்கள் ஏற்பட்ட போதும் அவற்றைத் தாங்கும் சக்திகளையும் இயற்கை வைத்யம், சித்த வைத்யம், ஆயுர்வேதம் போன்றவை மூலமாகப் பக்க விளைவுகள் இன்றி நல்குணம் கண்டனர்.

ஹோமம், வேதம், தமிழ் மறைகள், காவடிகள், அபிஷேக ஆராதனைகள், கோமுக பூஜை, காரடையான் நோன்பு, ராமலக்ஷ்மண துவாதசி போன்ற பலவகை விரதங்களை, பூஜைகளை நம் முன்னோர்கள் முறையாக ஏற்று நடத்தி வந்தனர். இவற்றுள் பலவும் தற்போது சமுதாயத்தில் மறைந்து வருவதால், இவற்றால் தீர வேண்டிய கர்மவினைகள் தீர்வு பெறாமல் தங்கி விடுவதால், இக்கர்ம வினைகளின் விளைவுகளாக வரும் நோய்களும் தீராமல் சமுதாயத்தில் தங்கி விடுகின்றன.
மேலும் வாமன ஜயந்தி, மோகினி ஏகாதசி போன்ற பல உற்சவங்கள், விரதங்கள், பண்டிகைகள் பலவும் சுத்தமாக மாறி மறைந்தே போய் விட்டமையால், இவற்றால் தீர வேண்டிய பல கர்ம வினைகள் தங்கிப் போய் விடுகின்றன. சமுதாயத்தில் தற்போதைய தலைமுறை இவற்றை விட்டு விட்டமையால் இவை புது நோய்கள் போல் தொற்றித் தாக்குவதாக தோன்றுகின்றது.
அக்காலத்தில் என்ன, இருபது, இருப்பத்தைந்து ஆண்டுகள் முன் வரை, மகிழ மரம், வேம்பு, வன்னி போன்ற அற்புதமான மருத்துவ சக்திகள் நிறைந்த மரங்களை, மருத்துவர்களே தினமும் வலம் வந்து வணங்கி வந்தமையால், மருத்துவர்கள் என்றும் ஆரோக்ய ஜோதிப் பொலிவோடு திகழ்ந்தார்கள். எனவே மருத்துவர்களுக்கு மன சுத்தி, உள்ள சுத்தி, உடல் சுத்தி அவசியமே! தினசரியும் ஸ்ரீவைத்யநாதர் பூஜை, ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்திக்கான பூஜைகளை ஆற்றி வருதலும், ஜாதி, மத பேதமின்றி, ஏழைகளுக்கு இலவச மருத்துவச் சிகிச்சைகளும் அளிப்பதுமே கலியுகத்தில் மருத்துவர்களுக்கு மன சுத்தி, உள்ள சுத்தி, உடல் சுத்திகளைப் பெற்றுத் தரும்.

உலகெங்கும், தற்கால மருத்துவர்கள் பலரும் புகை பிடித்தல், மது, புகையிலை போன்ற, தகாத ஆரோக்யமற்ற, அதர்மமான பழக்க வழக்கங்கள் பலவற்றுக்கும் ஆளாகி, பூர்வ ஜன்ம புண்ய வசத்தால் தாம் பெற்ற மருத்துவப் பணிக்கே இழுக்கைத் தேடிக் கொள்கின்றனர். இறையருளால், மற்ற துறையினரை விட, மக்களுக்கு மருத்துவத் துறை மார்கமாக அரும்பணியாற்றும் தெய்வீகமான வாய்ப்பு மருத்துவர்களுக்குப் பெரும் பாக்கியமாகக் கிட்டி இருப்பதால், இதனை வாழ்வில் இவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கடவுள் வரப் பிரசாதமாக அளித்துள்ள அரிய மானுடப் பிறவியை “விரயம்“ செய்ததாகும். அடுத்த பிறவியில் அரிய மருத்துவப் பணி கிட்டுமென்பது என்ன நிச்சயம்? இவ்வாறு கொடுத்த அரும் பிறவியை நஷ்டமாக்கினால் துயரமான, வேதனையான பிறவிகளே அடுத்து வந்து வாய்க்கும்.
உண்மையில், தம் பூஜைகள் மூலம் மருந்துகளுக்கே மருத்துவ குண சக்திகளை விருத்தி செய்து தரும் தன்மைகளை ஆன்மப் பூர்வமாக அளித்திட மருத்துவர்கள் தினமுமே கருட மூர்த்தியை வலம் வந்து பூஜிக்க வேண்டும். பல மருத்துவர்களும் ஒரு வகை நோய்க்கு ஒரே வகை மருந்தையே பலருக்கும் எழுதி அளித்தாலும், சில மருத்துவர்கள் அளிப்பதே விரைவில் குணத்தை அளிக்கும். இதற்கு முக்கியக் காரணமாவது, மருத்துவரின் கை ராசி ஆகும். இது இத்தகைய கருட மூர்த்திப் பூஜா பலன்களால் விளைவதே ஆகும்.

ஸ்ரீகருடக்கொடி சித்தர் சித்துக்காடு

சென்னை – பூந்தமல்லி அருகே உள்ள சித்துக்காடு (கிராமத்தின் பழைய பெயர் = திருமணம் கிராமம்) கிராமத்தில் ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் சிவாலயத்தின் அருகில் உள்ள, ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தின் ஸ்ரீஆண்டாள் சன்னதியின் முன் மண்டபத் தூணில் கருடக் கொடிச் சித்தர் அருள்கின்றார். பறக்க வல்ல தம் மேனியில், இச்சித்தர்பிரான் கோடிக்கணக்கான மூலிகைகளைச் சுமந்து, கருடக் கொடியைத் தாங்கியவாறு அருள்பவர். டாக்டர்களும், மருத்துவத் துறையினரும், மருந்துகள் தயாரிப்போரும் தைலக் காப்பு மற்றும் சிகப்பு நிற செம்பருத்திப் பூ, ஷண்பகப் பூக்களைச் சார்த்தி,
கருட மூர்த்தியையும், பெருமாளையும், கருடக் கொடிச் சித்தரையும் வழிபடுதல் சிறப்புடையது. கடுமையான நோய்களால் வாடுவோர், குறிப்பாக ஆடைகளை உடலில் நெடுநேரம் தரிக்க இயலாதவாறு கூடக் கடுமையான தோல் நோய்களால் வாடுவோர், ஆயில்ய நட்சத்திரம், புதன் கிழமை தோறும் கருடக் கொடிச் சித்தரைத் தரிசித்து வணங்கி, கீரை உணவு வகைகளைப் பாத்திரத்தோடு தானமாக இங்கு அளித்து வர நல்ல பலன்களைக் காணலாம்.
இப்பெருமாள் ஆலயம் திருமணத் தடங்கல்கள், திருமண வாழ்வில் உள்ள மன வேதனைகளையும் போக்க வல்ல திருமண சக்தித் தலமாகும். இதனால்தான் இத்தலத்திற்குத் திருமணம் கிராமம் என்றே பெயர் பதிந்துள்ளது.
இங்கு தலவிருட்சமாக அமைந்துள்ளது மிகவும் அபூர்வமான ஸ்ரீபுர நெல்லி விருட்சமாகும். தக்க அனுமதியுடன் இங்கு நெல்லி – துளசி திருமணப் பூஜைகளை நிகழ்த்துதலால், பல விதமான நாக தோஷங்கள், பித்ரு தோஷங்கள், திருமண தோஷங்களுக்குத் தீர்வு பெற்று நல்வகையில் திருமண பாக்யமும், திருமண வாழ்க்கையைச் சூழ்ந்துள்ள துன்பங்களும் அகல உதவும். இங்கு “ஸ்ரீபுர நெல்லி“ மரத்தில், அபூர்வமான “தேவராஜக் கிளிகளை“ தம்பதி சகிதம் தரிசித்தல் மிகவும் நல்ல சகுனமாகும்.
மருத்துவர்கள் தினமும் அரச மரத்தை வலம் வந்து வணங்குதலால், நோயையும், மருந்துகளையும் சரியாக விரைவில் அறியும் பாங்குடன், தக்க உத்தமர்களின் குருவருளுடன், நோய்க்கான ஆன்மீக ரீதியான காரணங்களை ஓரளவேனும் முதலில் அறிந்திடும் திறனும் கை கூடும். மேலும் நோயாளிகளின் மனநிலைகளை உணர்தல், மனோ பல ரீதியாக நோயாளிகளுக்குத் திடமும், மனோ தைரியமும் அளித்தல் போன்ற திறன்களும் மேம்படும்.

ஸ்ரீபுர நெல்லிமரம் சித்துக்காடு

சிறு துன்பம் என்றாலே வீட்டை விட்டு ஓடிப் போகும் எண்ணம், தற்கொலை எண்ணங்கள் பரவி, மனதை மென்மேலும் பலவீனமாக்கும் கலியுகச் சூழ்நிலையில், சிகிச்சைக்கு முன்னர், முதலில் எந்த வைத்தியருமே நோயாளிகளுக்கு வாழ்வில் நல்ல மனோதிடத்துடன் பூமியில் வாழ வேண்டிய மனோ தைரியத்தை, வைராக்கியச் சித்தத்தை பெற்றுத் தர வேண்டிய தலையாய மருத்துவ இறைப் பணிக் கடமை உண்டு. இதுவே, பெறுதற்கரிய மானுட பிறவியின் ஆத்ம குணாதிசயங்களை உணர்விக்கும் ஆரம்பப் பாடத்தை போதிக்கும் புண்ணியக் காரியமும் ஆகிறது.
தற்காலத்தில் மருத்துவர்கள் தம் துறைகளில் திறமை பெறுவதை விட, புகழ், செல்வம், சொல்வாக்கு பெறுவதையே பெரிதும் விரும்புகின்றனர். தினமும் மஹா வில்வ மரத்தை 36 முறையேனும் வலம் வருவதால் மருத்துவர்களுக்கு இறை நற்பணிகளை ஆற்றுவதற்கான நல்ல உடல் திறன், மனச்சித்தம் கிடைக்க, பித்ருக்களின் ஆசிகள் திரண்டு வரும்.
மருத்துவர்கள் வாரம் ஒரு முறையேனும் எனத் திட்டம் வகுத்துக் கொண்டு, ஏழைகளுக்கு எந்த அளவில் இலவசமாக ஆத்மார்த்தமாக, மருத்துவ சேவை அளிக்கின்றார்களோ, அந்த அளவிற்கு அவர்களுடைய மருத்துவத் திறமைகள் மருத்துவ தேவதைகளின் அருட்கருணையால் நன்கு விருத்தியாகி, நல்பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

தேனிமலை அதியற்புத மருத்துவ சித்சக்தித் தலம்!
புதுக்கோட்டை பொன்னமராவதி இடையில் உள்ள தேனி மலை அதியற்புத மருத்துவ சித்சக்தித் தலமாகும். மருத்துவ சக்திகள் நிறைந்த செவ்வாய் மண்டலச் சித்தர்களின் போக்குவரத்து நிறைந்த தலம். செவ்வாய் தோறும் மருத்துவர்கள் இயன்ற அளவில் விரதமிருந்து, மலைத் தல முருகப் பெருமானை வழிபடுதலும், தேனி மலையில் கிரிவலம் வருதலும், ஆலயங்களில் மருத்துவப் பூக்களின் நந்தவனத்திற்கு, நறுமணப் பூச்செடிகளை வளர்க்க நன்கு உதவுவதும் மருத்துவத் திறமைகளை அபரிமிதமாக மேம்படுத்தும்.
தற்காலத்தில் பெரும்பாலான மருத்துவர்களுடைய தலையாய பிரச்னை யாதெனில், பெரும்பாலோர், M.B.B.S  மட்டுமோ அல்லது M.S, M.D படித்தவர்களாகி உள்ளனர். ஆனால் ஆண்டுக்கு ஆண்டு மருத்துவச் சிறப்புத் துறைகளும், சிறப்புத் துறைகளில் உருவாவதால், மருத்துவத் துறையில் நடப்பு விஷயங்களைக் கிரகிக்க இயலாமல் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை பலருக்கும் வந்து மனம் தளர்ந்து விடுகின்றனர்.
இவற்றில் இருந்து மீண்டு, மருத்துவ அறிவில் நல்வளம் பெற, செவ்வாய் தோறும் விரதமிருந்து தேனி மலையில் கிரிவலம், வந்து வேத சக்திகள் நிறைந்த மந்தாரை இலைகளில் அன்னதானம் அளித்து வருதல், துரிதமான முறையில் மருத்துவ விஷயங்களை கிரகிக்க கை மேல் பலன்களை அளித்து உதவும்.
மருத்துவ சக்திகள் அபரிமிதமாக நிறைந்த, பலராலும் அறியப் பெறாத அற்புதமான கிரிவலத் தலமே தேனி மலையாகும். இங்கு பௌர்ணமி தோறும் கிரிவலம் வருதல், நோய் நிவர்த்திக்கும், கண்ணடி தோஷம், பகைமை தோஷங்களின் நிவர்த்திக்கும் உதவும்.
மருத்துவர்கள், ஆங்கில மருந்துத் துறையிலும் கூட, நோயாளிகளின் இரண்டு மணிக் கட்டுகளிலுமே, இரண்டு பட்டுக் கம்பளத் துணியை வைத்து, நாடித் தன்மைகளை அறியும் பண்டைய வைத்திய முறை தன்மைகளைத் தக்க முதிய மருத்துவப் பெரியோர்கள் மூலம் அறிந்து கடைபிடித்தல் வேண்டும்.
நாடி பார்க்கும் போது ஓத வேண்டிய தேவ மொழி, தமிழ் மாமறைத் துதிகளும் உண்டு., இவ்வாறான “நாடிப் பிடிஅடி“ மந்திர முறைகளை அறிவு விருத்திக்கும் ஆன்மீகப் பூர்வமாக நன்கு உதவும்.
தினமும் தரையில், கம்பளம், துணி விரித்து, பலகை வைத்து, இதன் மேல் தர்பைப் பாய் விரித்து நன்றாக நிமிர்ந்து பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து, குறைந்தது 36 நிமிடங்கள் ஆழ்ந்து தியானித்தல் வேண்டும்.

இரவில் படுக்கும் முன், தன் நோயாளிகள் ஒவ்வொருவரையும் மனதில் கொண்டு வந்து, அவர்கள் குணமடைய நன்கு பிரார்த்திக்க வேண்டும். படுக்கும் போது, “நோயாளியை எண்ணுவதா“ என்று தவறாக எண்ணாது, இதுவும் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்திக்கு ஆனந்தம் தரும் இறைச் சமுதாயப் பொதுப் பணிப் பூஜை என அறிக!
மருத்துவர்கள் நோய்க் கிருமிகள், வேதனைகள், வருத்தங்கள், அழுகை, கூக்குரல், வலி, ரத்தம் சிந்துதல், அங்கச் சிதைவுகள் போன்ற துன்பமான சூழ்நிலைகளில் பணி புரிவதால், மருத்துவர்கள் எப்போதும் மனதினுள் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை மற்றும் தமிழ் மாமறை மந்திரங்களை ஜபித்திருத்தல் நல்லது., இது நாள, நாடிகளை அவ்வப்போது சுத்திகரிக்க உதவும்.
பௌர்ணமி தோறும் திருஅண்ணாமலை, தேனிமலை போன்ற மூலிகை மலைத் தலங்களில் கிரிவலம் வருதல் நன்று, ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும் கொல்லி மலை, கேதார்நாத், பொதிய மலை, சஞ்சீவி மலை போன்ற மூலிகை மலைப் பகுதிகளில் பிராணாக்னிக் காற்றுச் சுவாச சஞ்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும் விட “இறையருளால்தான் மருத்துவ குணங்கள் ஏற்படுகின்றன. இறைவனுடைய திருக்கரங்களில் தாம் என்றென்றும் இறைச் சிறு கருவியாய்த் துலங்கி, ஜீவன்களுக்கு நற்பணிகளை ஆற்றிட வேண்டும்!“ என்று வேண்டி வாழ்வதே மருத்துவர்களுக்குச் சிறப்பையும், சீர்மையையும் தருவதாகும்.

அமுத தாரைகள்

பஞ்சாங்கம், ஜாதகம், கணிப்பவர்கள், ஜோதிடத் துறையினர் வழிபட வேண்டிய நகர் கிராம ஸ்ரீஅப்ரதீஸ்வரர் சிவத்தலம்
பஞ்சாங்கம், ஜாதகம், கணிப்பவர்களும், ஜோதிடத் துறையினரும் வழிபட வேண்டிய தலமே திருச்சி – லால்குடி அருகே உள்ள நகர் கிராம ஸ்ரீஅப்ரதீஸ்வரர் சிவத்தலம். “நகரும்“ கிரகங்கள், நட்சத்திரங்கள் இறைவனை, இறைவியை இட வலமாக, வல இடமாக வலம் வந்து வணங்கும் தலம். அபூர்வமான வில்வத் தல மரம் உள்ள தலம். 1008 லிங்கங்களாலான சகஸ்ர லிங்க மூர்த்தி தனிச் சந்நதியுடன் வில்வ மரத்துடன் சேர்ந்து வலம் வரும்படி அமைந்த அதியற்புதத் தலமாகும். கோள் சக்திகள் நிறைந்த தலமாதலின் நவமித் திதியில் வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.
பஞ்சாங்கம் கணிப்பவர்கள், ஒவ்வொரு வருடத்திற்கும் உரிய பஞ்சாங்கத்தைக் கணிக்கும் முன் நகர் சிவத்தலத்தில் இறைவனைப் பிரதட்சிணமாகவும், அப்பிரதட்சிணமாகவும் வலம் வந்து வணங்கிப் பஞ்சாங்கம் கணித்தலைத் தொடங்கிட வேண்டும்., இடையில் வந்து வணங்குதலும் நன்று.
பஞ்சாங்கம் கணித்தல் நிறைவு பெற்ற பின் பஞ்சாங்கத்தை ஸ்ரீஅப்ரதீஸ்வரருக்குச் சமர்பித்து சகல கோளங்களின் அனுகிரகத்தைப் பெற்ற பின்னரே உலகிற்கு அளிக்க வேண்டும்.
குழந்தைகளின் பாதங்களில்தாம் ஆத்ம ரேகைகள் நிறைந்து அருள் கூட்டும்., மூன்று வயதிலேயே Socks, Shoes மாட்டி விட்டு, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் பாதங்களுக்கு இயற்கையான காற்றுப் புகாமல், வளர வேண்டிய வயதில் வளர்ச்சியைக் குறுக்கினால், தெய்வீகத் தன்மைகளைச் சுருக்கினால் என் செய்வது! குழந்தைகளை வெற்றுப் பாதங்களோடு ஆலயங்களில் நிறைய நடக்க விடுங்கள்! யோக பாதம், பாத யோகம், ஸ்ரீபாத யோகம், ஸ்ரீயோக பாதம், ஸ்ரீஸ்ரீயோகபாதம் ஆகிய ஐந்து வகை யோக சக்திகள் குழந்தைகளின் முதல் ஐந்து வயதிற்குள்தான் பரிணமிக்கும்., இதனை Pre KG, LKG, UKG திணிப்புகள் தடுத்து விடும்.

பீளைச் செடி ஆலங்குடி

மெய்ஞான விஞ்ஞானிகளே சித்தர்களும், மஹரிஷிகளும் ஆவர். எந்த லோகத்தில் இருந்தும், எத்தகைய லோகங்களையும் தொடர்பு கொள்ள வல்லவர்கள்! எந்த நாட்டு மொழியிலும் எவருடனும், எறும்பு, யானை, தாவரங்கள் என அனைத்து உயிரினங்களோடும் அன்பு ததும்ப உரையாட வல்லவர்கள். பூளை எனப்படும் இலவம் பஞ்சு, மர மல்லி, அசோக மரம், பன்னீர்ப் புஷ்பம் போன்றவை தற்போதைய “Wireless blue tooth” போலான கிரண சக்திகளைக் கொண்டவை! பாண்டவச் சகாதேவன், ஆய கலைகள் சகலத்தையும் அறிந்தவனாய், கோடி, கோடியாம் அற்புதமான வானியல் ரகசியங்களைக் கொண்ட வான சாத்திரத்தில் கரை கண்டவன் என ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே போற்றி உள்ளார்.. சகாதேவன் சில வகைப் புஷ்பங்களின் ரேகைகள் மூலம் வருணன், சூரியன், சந்திரன் என்றவாறாக, நவ மூர்த்திகளையும் குறித்த சில புஷ்பங்களால் பூஜித்து, பூக்கள் தரும் புனிதங்களைத் துய்த்த உத்தமனாவான். இத்தகைய அரிய விளக்கங்களை எங்கள் ஆஸ்ரம வெளியீடான பூக்கள் தரும் புனிதங்கள் நூலில் (தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில்) காணலாம்.

ஸ்ரீஆபத்சகாய ஈஸ்வரர்
ஆலங்குடி

தேவ மந்திரங்கள் கலியுகத்தில் மறையலாகும் என்பதைத் தீர்க தரிசனமாக உணர்ந்தே பூர்வ யுகச் சித்தர்களாய், மஹரிஷிகளாய்ப் பொலிந்தோர் மீண்டும் பாரதத் திருமண்ணில் உதித்து, சமயக் குரவர்களும், நாயன்மார்களும், ஆழ்வாராதியர்களும், அருணகிரி நாத சுவாமிகளும், திருமூலரும், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் சுவாமிகளுமாய்த் தோன்றி, சாசுவதமாகத் துலங்கிப் பிரகாசிக்கும் அதியற்புத மாமறைத் துதிகளை தென்னாடுடைய சிவனாருக்குகந்த அமிர்தத்தினும் இனிய அருந்தமிழில் அளித்துள்ளனர்.
அஃதுறை ஆண்டவத் திருப்பா! – ஆயுத எழுத்துடன் பெருமாள் அருளும் ஆலயங்கள் (திருவெஃகா) எத்தகைய பெரும் பகைமையையும் தீர்த்துக் காத்தளிப்பவையாம்.ஆயுத எழுத்து அட்சரச் சொற்கள் நிறைந்து வரும் இறைப் பாக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை! பகல் உச்சிப் பொழுதை, ஆயுத அட்சர சக்தி நேரமாக, அபிஜித் முகூர்த்த நேரமாகச் சித்தர்கள் உரைக்கின்றனர். தினமும், பகல் உச்சிப் பொழுதில், ஆயுத எழுத்து அமைந்து வரும் பாசுரங்களை, மறைப் பாடல்களை ஓதி வந்தால், உறவு, தொழில், அலுவலகத்தில் பகைவர்களால் துன்புறுவோர் பகைமையை வென்று, தீய சக்திகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
மருத்துவர்கள் தினமும் வேப்ப மரத்தை வலம் வந்து வணங்குதலால் சுவாச சக்திகள் மேம்பட்டுப் பிராணாக்னி சக்திகள் வலுப்பெறும். தினமும் கருட காயத்ரீ மந்திரங்கள், கருட மந்திரங்களை ஓதி, கருட மூர்த்தித் தரிசனம் பெறுதலால், நோயை அறியும் பாங்கு, தகுந்த மருந்துகளை அளிக்கும் திறன், ஆங்கில வகை மருந்துகளில் உள்ள பக்க விளைவுகளைத் தரும் விஷ சக்திகளைப் போக்குதல் போன்ற திறன்கள் மேம்படும்.
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து நீராடுதல், திருவோணம் நாளில், கடுமையான ஸ்ரீதன்வந்த்ரீ விரதம், மாதமொரு முறையேனும் ஸ்ரீவைத்தீஸ்வரர் ஸ்ரீமருந்தீஸ்வரர், வைத்யநாத மூர்த்திகளை வழிபட்டு, தீர்த்தப் பிரசாதத்தை உண்டு வருதல் வேண்டும்.
மருத்துவர்கள் தினமும் 1008 முறை அல்லது வாரம் முழுதும் 10008 முறை என கருட காயத்ரீ மந்திரங்கள், கருட மந்திரங்களை ஓதுவதைச் சங்கல்பமாக எடுத்துக் கொண்டு, கடைபிடித்து, தம் மருத்துவ சக்திகளை ந்ன்கு விருத்தி செய்து கொள்ள வேண்டும். இதனால் மருத்துவத் திறமைகள் நன்கு விருத்தியாகி, பலரும் போற்றும்படி மருத்துவ சக்திகள் மேம்பட்டு, விரைவில் நோயறியும் பாங்கும் நன்கு அறிவுப் புலனாகி, சரியான மருந்தை உரைக்கும் அம்சமும் தக்க சமயத்தில் நினைவுக்கு வந்தும் உதவும்.
மருத்துவர்கள் தினமும் வேப்ப மரத்தை வலம் வந்து வணங்குதலால், சுவாச சக்திகள் மேம்பட்டுப் பிராணாக்னி சக்திகள் நன்கு வலுப் பெறும். மருத்துவருக்கு ஆரோக்யமான நாடி சுத்தம் நிலவி, நிரவி இருந்தால் தான் நோயாளியின் நாடித் தன்மைகளைக் கொண்டு, உடலின் எந்த அவயம் பலவீனமாகி, நோய்க்கு ஆட்பட்டுள்ளது என தீர்கமாகத் தெரிய வரும். மருத்துவருக்கே ஆரோக்ய நாடிக் குறைவெனில், நாடி பார்க்கும் தன்மைகளிலும் குற்றங்கள் ஏற்பட்டு நோயை அறிவதில் தவறுகளும், மருந்துகளை அளிப்பதில் பெருந் தவறுகளும் வந்து சேரும். இவற்றை நிவர்த்தி செய்யவும், இத்தகைய குறைபாடுகள் வாராது தற்காத்துக் கொள்ளவும் வேப்ப மரக் காற்றில் நிறைந்திருக்கும் பிராணாக்னி நாடிச் சுவாச சக்திகள் நன்கு உதவிடும்.

திருவெஃகா

மருத்துவர்கள் தினமும், கருட மூர்த்தியைத் தரிசிப்பதால், எத்தனை வீட்டுப் பிரச்னைகள், துன்பங்கள், பணக் கஷ்டங்களின் ஊடேயும், அறுவை சிகிச்சையின் போதும், மருத்துவ சிகிச்சையின் போதும், மனச் சலனமின்றி நோயாளிகளை கவனிக்கும் வைராக்யத் திறனும் கிட்டும்.
வாரம் ஒரு முறை ஹோம பூஜைகளை (தன்வந்த்ரீ ஹோமம்) நிகழ்த்தி, குறைந்தது 21 விளக்குகள் (வேப்பெண்ணெய்த் தைலம்) ஏற்றி வழிபட்டு வருதலால் அக்னிப் பூர்வமான மருத்துவ சக்திகள் திரளும். பெரும்பாலான மருந்துகள் பல்வகை அக்னி சக்திகளில் ஆக்கப் பெறுபவையே! இதனால் நல்ல கைராசி சக்திகளும், மூதாதையர்கள் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கி இருந்தால் அவர்களுடைய நல்ஆசிகளையும் எளிதில் பெற உதவும்., மருத்துவ தேவதைகளின் நல்வரங்களும் இதன் மூலம் நன்கு கனியும்.
“எங்கோ அக்கிரமம் நிகழ்கிறது, நமக்கென்ன வந்தது? என்று மக்கள் அசட்டையாக இல்லாது, எப்போதும் இறைமந்திரங்களை ஓதியும், அவ்வப்போது இயன்ற தான, தர்மங்கள், வழிபாடுகளை ஆற்றுவதையும், பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்றதின் லட்சியமாகவும் கொண்டு செயல்படுதல் வேண்டும். பயங்கரவாத சக்திகள் அதிகமாக உள்ள இடங்களில், “வேல் மாறல், பகை கடிதல்”  போன்ற சக்தி வாய்ந்த பீஜாட்சரப் பாக்களைச் சத்சங்கப் பூர்வமாக செவ்வாய் ஹோரை நேரத்தில் ஓதியும், தக்க ஹோம பூஜைகளையும் ஆற்றி வருதலாகிய பிறவிக் கடமைகளையும் செவ்வனே ஆற்றி வர வேண்டும்.
கலியுகத்தில் வன்முறைத் தீய சக்திகள் விரைவில் பரவும் என்பதால்தான் மாமுனிகள் இத்தகைய சக்தி வாய்ந்த வேல் சக்தி மந்திர சக்திகளைத் தந்தருளி உள்ளனர். தனித்திருக்கும் போதும், இரவிலும், பிரயாணத்திலும், புது இடங்களுக்குச் செல்லும் போதும் இவ்வகைக் காப்பு சக்தி மந்திரங்களை இடைவிடாது ஓதி இவற்றை இந்தி மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கூட எழுதித் தமிழ் அறியாதப் பிறரையும் ஓத வைத்தல் உத்தமமான தொண்டாகும். “வன்முறை தணிதல் வேண்டும், அன்னமா மறைச் சுடராலே! வேல் வேல் வெற்றி வேல்!” என்று மிக எளிமையாக ஓதி, தினமும் பித்ரு ப்ரீதி தரும் பிரண்டைத் துவையலுடன் அன்னதானம் செய்வதும், சாத்வீகமான முறையில் வன்முறைத் தீய சக்திகளை மாய்த்திட உதவும். உலகின் எங்கோ ஒரு மூலையில் இவ்வாறு ஆற்றப் பெறும் எளிய வகை அன்னதானம் கூட பலத்த பயங்கரவாதியின் மனதை, அவரவருடைய மூதாதையரின் பாங்கால் பண்படுத்த வல்லதாகும்.
4.6.2005 சனிக் கிழமை நள்ளிரவு 1.41 மணி முதல் 5.6.2005 ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 2.21 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வைகாசி மாதச் சிவராத்திரித் திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள் : 5.6.2005ஞாயிற்றுக் கிழமை இரவு!
ஜூன் 2005 பௌர்ணமி நாள் : 21.6.2005 செவ்வாய்க் கிழமை மதியம் 1 மணி 4 நிமிடம் முதல் 22.6.2005 புதன் கிழமை 9.44 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படிப் பௌர்ணமித் திதி நேரம் அமைகின்றது. கிரிவல நாள் : 21.6.2005 செவ்வாய்க் கிழமை இரவு!

தொடரும் ஆனந்தம்...

கடவுள் தன்னை நம்பியவர்களைக் காப்பதும், கடவுளை நம்பினோர் கெடுவதில்லை என்பதும் நீங்கள் அறிந்ததே. தன்னை நம்பாதவருக்கும் நல்லருள் புரிவதே குரு கருணை என்பதே நம்மை பிரமிக்க வைப்பதாகும். இதை மற்றவர்கள் எந்த அளவிற்கு நிறைவேற்றினார்கள் என்பது நமக்குத் தேவையில்லாத ஒன்று எனினும் நம் சற்குரு தன்னை நம்பாத அடியார்களையும் காத்து இரட்சித்தார் என்பதே நமக்கு ஊக்கம் என்ற அருமருந்தை அளிக்கும் குரு கருணையாகும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆலங்குடி

“நம்பியவர்களையே நன்னெறிப்படுத்த இயலும், நம்பாதவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய இயலும்?” என்று நீங்கள் கேட்பது காதில் விழத்தான் செய்கிறது. ஒரு உதாரணத்தின் மூலம் இதை தெளிவுபடுத்துவோம். சில அடியார்களை, அவர்கள் வேலையில் இருந்தாலும், மேற்படிப்பு படிக்கும்படி அறிவுரை அளித்தார் நம் சற்குரு. அவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் நிர்வகிக்கும் ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை உருவானபோது நம் சற்குரு அளித்த அறிவுரையே இதுவாகும். “உனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் போதும், நீ படிக்கும் கல்லூரியில் பாடம் சொல்லித் தரும் ஆசிரியருக்கு அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் கூட நீ இதுபற்றிக் கவலைப்பட வேண்டாம்...,” என்ற மனத் தெளிவை அளித்தார் நம் சற்குரு. “அடியேனை நம்பாத அடியார்கள் எத்தனை பேர் சபையில் இருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியாது, ஆனால், அவர்கள் திறமைகளை வைத்து அண்ணாமலையை வலம் வரும் எத்தனையோ கோடி அடியார்களுக்கு உணவு சமைத்து பரிமாற வைக்கிறான் அந்த அண்ணாமலையான் என்றால் வேறு எதைத்தான் அவன் சாதிக்கமாட்டான்...”, என்பார் நம் சற்குரு.

“ஒவ்வொரு நொடியும் நாம் கடவுளிடம் ஆழ்ந்த நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி என்ற மார்கத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டே இருந்து அதை செயல்படுத்துவதில் துடிப்பாக இருந்தால் போதும், மற்ற அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொள்வார், நாம் அது பற்றி சற்றும் கவலை கொள்ளத் தேவையில்லை...”, என்று ஊக்கம் அளிப்பவரே சற்குரு.

பலரும் ஒருவர் பேசும் வார்த்தைகளை மட்டும் வைத்துக் கொண்டு முடிவுகளுக்கு வருவதால்தான் இத்தகைய குழப்பங்கள் ஏற்படுகின்றன. தன் மருமகள் முன்னிலையில் தன் மனைவி தன்னை ஏசி விட்டாள் என்பதால் நம் சற்குரு மேலேயே வெறுப்பு வந்து விட்டதாக ஒரு அடியார் மனம் நொந்து கொள்கிறார் என்றால் அவர் குரு தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்பது எண்ணமா இல்லை மருமகளிடம் ‘உருப்படியில்லாத’ நல்ல பெயர் சம்பாதிக்க வேண்டும் என்பது முக்கியமா? இது பற்றி நீங்கள் ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் குரு நம்பிக்கை என்பது எத்தகைய அளப்பரிய பொக்கிஷம் என்பது தெரிய வரும்.

ஒரு மாமன்னன் இறைப் பரம்பொருளை வணங்குவதே இல்லை, ஆலயங்களுக்கே சென்றது கிடையாது. அந்த நாட்டின் ராணியோ எந்த நேரமும் கோயில், வழிபாடு என்றே காலத்தைக் கழித்து வந்தாள். ராஜா இவ்வாறு கோயில் வழிபாடு செய்யாதது குறித்து மிகவும் கவலை கொண்டிருந்தாள். ஒரு நாள் இரவு தூக்கத்தில் அந்த மன்னன் “ராமா, ராமா...”, என்று கதறுவதைக் கேட்டு திகைத்த ராணி மறுநாள் காலையில் மிகவும் ஆனந்தத்துடன் மன்னரைப் பார்த்து, “வேந்தே, தாங்கள் கனவில் ராமா ராமா என்று கூறினீர்களே, அதைக் கேட்டு நான் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை...”, என்றாளாம். அதைக் கேட்ட மன்னன் பெரும் அதிர்ச்சியுற்று,“ என்ன என் ராமன் என்னை விட்டுப் போய் விட்டானா?” என்று கூறி படுக்கையில் சாய்ந்து விட்டானாம், திரும்ப அவன் எழுந்திருக்கவே இல்லையாம்...

இப்போது சொல்லுங்கள் யார் சிறந்த ராம பக்தர்? ராஜாவா, ராணியா?

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam