காதல் போர் மற்போர் அல்ல !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ரிஷபாயண கோமுகம்

நான்கு நந்தீஸ்வரர்களுக்கிடையே உள்ள அதியற்புத கோமுகம்
ஸ்ரீவைத்யநாதருடைய கோமுகமாதலின் பெறற்கரிய கோமுக தீர்த்தம கொடிய, கடுமையான நோய்களைத் தீர்க்கும்.
கோமுகம் என்றால் இறைவனின் திருச்சந்நிதியிலிருந்து அபிஷேக நீர் வெளி வரும் தாரை அல்லவா! இறைத் திருமேனியில் பட்டு வருகின்ற தீர்த்தப் பிரசாதமாதலின் பலவிதமான நோய்களையும், பாவங்களையும் தோஷங்களையும் தீர்க்கின்ற தெய்வீக சக்திகளையும் கோமுக தீர்த்தம் பெற்றிருப்பதோடு எத்தனையோ அனுக்ரஹங்களையும் நல்வரங்களாகப் பெற்றுத் தருகின்றது. மேலும் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களும் எப்போதும் துவாதசி கூடிய அமிர்த யோக நேரத்தில் இந்த கோமுக வாயிலில் காத்திருந்து பரம்பொருளின் திருப்பிரசாதமாய்க் கோமுக நீரை ஏற்றுப் பரமானந்தமடைகின்றனர்.
கோடானு கோடி தேவதைகளையும் அற்புத தெய்வ மூர்த்திகளையும் தன்னுள் உறைகின்ற பாக்யத்தைப் பெற்ற ஸ்ரீ கோமாதா தேவியானவள் தினந்தோறும் குறித்த தலங்களில் குறித்த நட்சத்திர நாட்களில் பல கோமுகங்களில் அமர்ந்து தீர்த்தப் பிரசாதத்தைப் பெற்று இன்றும் நமக்கு அருள்பாலிக்கின்றாள். இத்தகைய தெய்வத் திருத்தலங்களுள் ஒன்றே இங்கு நாம் காண்பதாகும்.

நம் தமிழகத்து ஆலயங்களுள் திருச்சி அருகே திருநெடுங்களத்தில் உள்ள காசியில் உள்ளது போன்ற இரட்டை விமானம், மூலஸ்தானத்தை ஒட்டிய அர்த்த மண்டபத்தில் விசேஷமான, மருத்துவ சக்தி நிறைந்த இரு தெய்வீக வெள்ளெருக்குத் தூண்கள் உள்ள சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் கோயில், நான்முக சண்டேஸ்வரர் (சென்னை திருக்கச்சூர்), லால்குடியில் உள்ள வீணை ஏந்திய ஸ்ரீதட்சிணாமூர்த்தி, சென்னை கோயம்பேட்டில் உள்ள வீணையில்லா ஸ்ரீ ஞான சரஸ்வதி, திலதர்ப்பணபுரியில் உள்ள துதிக்கையில்லாத ஆதி விநாயகர், திருவக்கரையில் முகங்களுடன் உள்ள சிவலிங்கம், ஊத்துக்கோட்டை அருகே சுரட்டப்பள்ளியில் பத்னியுடன் அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி, இதனருகே ராமகிரியில் சிவலிங்கமெதிரே கூப்பிய கரங்களுடன் கூடிய ஆஞ்சநேயர் என எத்தனையோ அற்புதமான வரங்களையும் பலன்களையும் நல்கும் இறை மூர்த்திகளின் அருள் சுரக்கும் தெய்வத் திருத்தமிழ்நாட்டில் நாம் வாழ்வது பெறுதற்கரிய பேறல்லவா! முக்திக்கு வழிகாட்டும் (நாம் அறிந்த) முப்பதாயிரம் திருத்தலங்களுக்கு மேலிருக்கும் தென்னாடுடைய சிவனாகரனே இங்கு நிறைந்திருக்க நமக்கு வேறு என்ன வேண்டும் ?
இதோ இந்த அழகிய தமிழ்நாட்டுத் திருக்கோயிலில் என்னே அற்புதமான கோமுகம்! சுற்றிடும் நான்கு நந்திகள் தெய்வீகப் பொலிவுடன் அமைந்திருக்க இடையில் இவ்வழகிய கோமுகம்! மிகவும் சக்திவாய்ந்த கோமுகம்! ஆனால் இதன் அருமை, பெருமை, மஹிமைகளை அறிந்தோர் ஒரு சிலரே!
ஒவ்வொரு திதியிலும், நட்சத்திரத்திலும் இக்கோமுகத்தில் அபிஷேக நீரைப் பெற்று அருந்துவதினால் தீர்கின்ற கொடிய நோய்கள் எத்தனையெத் தனை! கழிகின்ற கர்ம வினைகளோ எண்ணற்றவை!
சித்புருஷர்கள் இதனை ரிஷபாயன கோமுகம் என்று குறிப்பிடுகின்றனர். ருத்திரபதி சித்தர்கள்  இக்கோமுகத்தில் தான் வாசம் செய்கின்றனர். இக்கோமுக தீர்த்தமே இவர்களுடைய சுவாசம், அன்ன ஆகாரமுமாகும். அதிலும் பசுக்களுக்குரித்தான ரோஹிணி நட்சத்திரமும் அமிர்த யோகமும் துவாதசி திதியும் கூடுகின்ற நாட்களில் மட்டுமே இவர்கள் கோமுக தீர்த்தத்தை அருந்துவர்! எப்போதும் இக்கோமுகத்தில் கடுந்தவம் புரிகின்ற ருத்திரபதி சித்தர்கள் இங்கு குறித்த சில கோமுக பூஜைகளை நிறைவேற்றுவோர்க்கு அவர்களுடைய தார்மீகமான அபிலாட்சைகள், பிரார்த்தனைகள் நிறைவேறிடத் தங்கள் தபோ பல சக்தியின் சிறப்பம்சத்தை இக்கோமுகத் தீர்த்தம் மூலமாகத் தாரை வார்க்கின்றனர்.
பூசுர தியான சக்தி
அனைத்து மனிதர்களுடைய தலையாய பிரச்னையே பலவிதமான தகாத, முறையற்ற, கேவலமான எண்ணங்களுக்கு அடிக்கடி ஆட்படுவதுதான்!
இறைவன் திருச்சந்நிதியின் முன் நின்றால் கூட விஷமான எண்ணங்கள் முகிழ்க்கின்றனவே! சித்புருஷர்களின், மஹான்களின் ஜீவசமாதியில் வணங்கி நின்றிடினும் அங்கும் கீழ்த்தரமான எண்ணங்கள் தாம் மனதில் முளைக்கின்றனவே!
காரணமென்ன?
20, 30, 40 ஆண்டுகளாகப் பெருகிப் பாசி படிந்து பாறையாகி ஆழ்ந்த மனதில் வேரூன்றிக் கிடக்கும் தீய எண்ணங்கள் மேலெழும்பி வந்தால்தானே நம் மனதைச் சுத்தப்படுத்த முடியும்! அவ்விஷ சக்திகளைக் கிளப்பி அவற்றை பஸ்மம் செய்யும் பூசுர சக்தி தெய்வத் தலங்களிலும் ஜீவசமாதிகளிலும் தானே நிறைந்திருக்கும்!
இந்த பூசுர தியான யோகத்தில் எப்போதும் திளைப்பவர்களே ருத்திர பதி சித்தர்கள்! எனவே இத்தலத்தில் கைகளில் ஒரு செம்பில் கங்கை/காவிரி போன்ற புண்ணிய நதி நீரைச் சுமந்து மூலஸ்தானத்தோடு இக்கோமுகத்தை மெளனமாக 12/21 முறை வலம் வந்து கோமுகம் எதிரில் அமர்ந்து ஓம் என ஓம்கார ஒலியைத் தொடர்ந்து மனதினுள் ரீங்காரம் செய்து
ஓம் சிவய சிவ
சிவ சிவ
நமசிவாய
சிவாய நம
- என்று சித்த ஸ்ருதியில் பஞ்சாட்சரத்தை ஜபித்திட ருத்திரபதி சித்தர்களின் கருணையால் பூசுர தியான சக்தி சிறிது சிறிதாக உடலிற் சேர்ந்து மனம் தூய்மையடையும். அமிர்தயோகம், திரிதியை, சப்தமி, திரயோதசி, ரோஹிணி, அனுஷம், சதயம் உள்ள திதி நாட்கள் சிறப்புடையவை! ஜப முடிவில் கங்கை, காவிரி நீரை சுவாமிக்கு அபிஷேக நீராக அளித்தும் கோமுகம் மூலமாக அபிஷேக நீரைப் பிரசாதமாக பெற்று இல்லத்திற்கு எடுத்து வந்து கிணற்றில் சேர்த்தோ அல்லது குடிநீராக சிறிதோ அருந்தி வர வேண்டும். இது கணவனுடைய தீய வழக்கங்களும் அகல கணவனுடன் இப்பூசுர தியானத்தைச் சேர்ந்து செய்வது சிறப்புடையதாகும்!
காவியின் தெய்வீகம்
காவியின் புனிதம், கட்டிக் காக்கப்பட வேண்டிய அவசியத்தை ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் மிகவும் வற்புறுத்தி வருகின்றோமல்லவா! இதனைப் பற்றி காச்யப மஹரிஷி நன்கு விளக்கியுள்ளார், காவி கட்டுபவர்கள் பிரம்மச்சர்யம், நல்லொழுக்கம், தர்மம், சத்யம், தெய்வீக எண்ணங்கள் போன்ற நெறிகளிலிருந்து ஒருபோதும் பிறழக் கூடாது. கரணந் தவறினால் கடுஞ்சாபமே!

காவி தரிப்போர் பரிசுத்தமான வாழ்க்கையைத்தான், கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். ஏதோ விரதத்தின் போது மட்டும் காவி, விரதம் முடிந்த பின், காவியை விட்டு விட்டு இல்லறம் புகுதல் என்பது காவியின் புனிதத்தை அவமதிப்பதோடன்றிப் பெரும் சாபங்களையே பெற்றுத் தரும் அதர்மமுமாகும். ஒரு முறை காவியுடுத்திடில் அதன்பிறகு வாழ்நாள் முழுதும் காவி தரித்து அதற்குரிய புனிதமான, பிரம்மச்சர்யம் நிறைந்த தெய்வீக வாழ்க்கையே வாழ்ந்திடல் வேண்டும்.
ஆனால் இதுவரையில் அறிந்தோ அறியாமலோ, காவியுடை தரித்தும், பவித்ரமான முறையில் வாழ முடியாமற் போனதற்கு யாது பிராயசித்தமோ? இதற்கு ருத்திரபதி சித்தர்களே ஒரே ஒரு முறைக்கான பிராயசித்த வழிமுறைகளை அளித்துள்ளனர். இப்பிராயசித்தம் என்பது வாழ்வில் ஒரு முறையே! இதற்குப் பிறகும் வழி தவறினால் பாவங்கள் கொடியதாகி அதன் விளைவுகளும் கடுமையானதாக இருக்கும்.
காவியுடைக்கான துறவு வாழ்க்கையை மேற்கொண்டால், குரு பக்தியில் அசிரத்தை, அசத்யம் பேசுதல், அதர்மம், சற்குரு காட்டிய வழியை விட்டு விலகிச் செல்தல், பாரம்பர்ய பூஜைகளைக் கை விடுதல், எளிய வாழ்க்கையைத் துறத்தல் போன்றவை நிகழ்வது கூடாது. இவற்றிற்கெல்லாம் பிராயசித்தம் தருவதே இவ்வரிய ரிஷபாயன கோமுக பூஜை!
காவி கட்டி புனிதமான அகவாழ்விற்குப் புறமாக நடந்தோரும், சந்யாசி தர்மத்தைப் பிழைகளுடன் கடைபிடித்தோரும், இத்திருத்தலத்திற்கு வந்து பெளர்ணமி திதியன்று இக்கோமுகத்தை அடிப் பிரதட்சிணமாக வலம் வந்து முறையான கோமுக பூஜைகளை நிறைவேற்றி கோமுக தீர்த்தத்தால், புரோட்சண (நீர் தெளித்தல்) முறையில் உடலை சுத்தி செய்து தம் தவறுகளுக்காக மனதார வருந்தி தம் பிழைகளை நன்கு உணர்ந்து ரிஷபாயன நந்திகளிடம் தம்மை அர்ப்பணிக்க வேண்டும்!

எளிய ஆன்மீக வழிமுறைகள்

சில எளிய ஆன்மீக வழிமுறைகளைக் கடைபிடிப்போமானால், பல துன்பங்கள் விலகுவதோடு எளிதில் புண்யத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
முடிந்த வரை சாப்பிடும்போது நீரருந்தாது, முடிவில் ஒரு பழத்துடன், முக்கால் வயிறுக்கு உணவேற்பதால் மன சஞ்சலங் களும், சம்பந்தமில்லாக் கனவுகளும் அகலும். வாழையிலை, மந்தாரை இலை, வெள்ளித் தட்டில் சாப்பிடுவது நன்மை பயக்கும். எவர்சில்வர், அலுமினியத் தட்டுகளைத் தவிர்த்திடுக. தாம்பூலம் போடுவது நல்லதெனினும் புகையிலை இல்லாத வெற்றிலை, (கள்ளியம்) பாக்கு, சுண்ணாம்பு மட்டுமே சேர்த்திட வேண்டும். ஆண்களாயின் 3 வெற்றிலைகளுக்கு மேலும், பெண்களாயின் இரண்டு வெற்றிலைகளுக்கு மேலும் போடக் கூடாது. தாம்பூலம் என்பது ஜீரணத்திற்காக மட்டும்தான், வெற்றிலைகளாக உள்ளே தள்ளி புகையிலையையும் சேர்ப்பதற்கல்ல! இரவு உணவிற்குப் பின் தாம்பூலம் கூடாது.
வெறுந் தரையிலோ அல்லாது மரப் பலகையிலோ, கோரைப் பாயிலோ படுப்பதே சிறந்ததாகும். நவீனமான செயற்கைக் குஷன் கூடிய மெத்தைகளைத் தவிர்க்கவும். ராத்திரி ஸுக்தம் எனப்படும் மந்திரத்தை ஓதி உறங்குதல் சிறப்புடையது.
கோயிலுக்குச் செல்கையில் பாண்ட் அணிவதைத் தவிர்க்கவும். பாண்ட் அணிவதால் முறையற்ற சுவாசங்கள் கூடி, எண்ணங்களே பல்கிப் பெருகும். படிக்கும் போது இடப்புறம், பின் பக்கத்திலிருந்து விளக்கு வெளிச்சம் படும்படியான இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும்.
தினமும் துளஸி, வில்வம், வேப்பிலை, கரிசலாங்கண்ணி, அருகம்புல் என ஏதேனும் ஒரு மூலிகையின் இலைகளைச் சிறிது மென்று உண்டு வரவேண்டும். இராசயன உரங்கள் நிறைந்த தான்ய, காய்கறிகளினால் ஏற்படும்தீய ரசாயன விளைவுகளுக்கு இது ஒன்றே மாற்று மருந்தாம்.
அலுவலகத்தில் அடிக்கடி (ஓஸியில்) டெலிபோன் செய்து கர்ம வினைகளைப் பெருக்கிக் கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரும் ஓய்வு பெறுகையில், குறைந்தது, 25000 ஓஸி டெலிபோன் கால்களைச் செய்து பெரும் கர்ம வினைகளில் மாட்டிக் கொள்கின்றார்கள் என்பதை நினைவில் கொள்க!
மறை பொருளே தான தர்மம்
நாம் அடிக்கடி வலியுறுத்தி வருவது போல பேனா, பென்ஸில், ரப்பர், காய்கறி, பை, வேட்டி, சட்டை, காலணி, குறைந்த பட்சம் ஒரு வாழைப் பழம் என ஏதாவது ஒன்றைத் தான தர்மம் தொடர்ந்து செய்வது என்பதை தினசரி வைராக்யமாக வைத்துக் கொண்டிடுக!
சிறுகச் சேமித்துப் பெருவாழ்வு வாழ்வது போல, இச்சிறு தான தர்மங்களே மாமலையாய்ப் பெருகி,  பெருமலையாய் நிற்கும் நம் கர்மவினைகளைக் கழிக்க உதவுவது மட்டுமன்றி, இறப்பின் போதும் இறப்பிற்குப் பின்னும், என்றும் உடன் வருவது இவைதாம் என்பதை உணர்ந்திடுக!
காபி, டீ, சினிமா, சிகரெட், ஆடம்பர, கேளிக்கைச் செலவுகளைக் கணக்கெடுத்திடில், சிறிய தான, தர்மச் செலவுகள் ஒரு பொருட்டல்லவே!
தண்ணீரின் மூலமாகத் தான், நோய்களைப் போல், தீய எண்ணங்களும் உடலில் சேர்கின்றன. வெளியிடங்களில் ஒரு போதும் நீர் அருந்தாதீர்கள், வென்னீராயின் அருந்திடலாம். கைப்பையில், எப்போதும், பாட்டிலில் நீர் வைத்திருப்பது நல்ல பழக்கமாகும். இதனால் தண்ணீர் கிடைக்காத இடங்களில், கடுந்தாகத்தால் துடிப்போர்க்கு நீரைத் தானமாக அளிக்கும் அற்புதமான தெய்வீக வாய்ப்பு கிட்டுமே! ஆனால் சிலர் தண்ணீர் பாட்டில் எடுத்துவரச் சோம்பேறித்தனம் கொண்டு, பிறர் தண்ணீர் பாட்டிலைக் கேட்பது தவறு ஆகும்.
குறை தீர்ப்பர்!
உங்களிடமுள்ள குறைகள், குற்றங்கள், தீவினைகளைப் பற்றிச் சிந்தித்து, ஒவ்வொரு திங்களன்றும் சிவன் கோயில் நந்தியிடம் உங்கள் மனதை உறுத்தும் பாவச் செயல்களைச் சொல்லிப் பிராயசித்தம் வேண்டிடுக! மாதம் ஒரு முறையேனும் திருச்சி மலைக் கோட்டை, திருக்கழுக்குன்றம், பழனி, திருப்பரங்குன்றம், குன்றக்குடி, திருஅண்ணாமலை போன்ற மலைத் தலங்களைக் குடும்பத்துடன் வலம் வந்திடுக! தன் ஆத்மாவைத் தானே சுற்றி வருவது போலாகுமிது!
காரண காரியமின்றி திடீரென்று வீட்டில் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் மிகுந்தால் தீவினை சக்திகள் அதிகமாக வீட்டில் சேர்ந்து விட்டன என்று பொருள். உடனே ஒட்டடையை நீக்கி, வீட்டைத் துப்புரவு செய்து, நன்றாகச் சாம்பிராணி தூபமிடுங்கள்! வாஸ்து பூசை மிக முக்கியம்!
வில்வம், வேம்பு மரங்கள் சேர்ந்துள்ள இடங்களில் கணவன், மனைவி இருவருமே அவற்றை அடிக்கடி அடிப்பிரதட்சிணம் செய்து வருவார்களேயானால் கணவன், மனைவியரிடையே மனஸ்தாபங்கள் குறைந்து உண்மையான அன்பு வளரும்.
செவ்வாய், வெள்ளிதோறும் தேங்காயில் சூட தீபமேற்றி குழந்தைகளுக்கு திருஷ்டி கழித்து, உடைத்து வருதலால் பல தோஷ விளைவுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்,
தினந்தோறும் மரப் பலகையில்/தர்பைப் பாயில் அமர்ந்து காலையில் 15 நிமிடங்கள் விளக்கு ஜோதியைப் பார்த்தவாறும், இரவில் வானில் நட்சத்திரங்களைப் பார்த்தும் தியானம் செய்திடுக! நட்சத்திர தியானம் மிகவும் இன்றியமையாதது. பலரும் இதனைப் பற்றி அறியாதிருக்கின்றனர். உங்களுடைய நட்சத்திரத்தை நீங்களே அறிந்து கொண்டு வானில் பார்ப்பதுதானே சிறப்பானது! நட்சத்திர தியானமே உங்களுக்குரித்தான நட்சத்திர தேவதையின் பேரருளைப் பெற்றுத் தரும்!
பாகற்காய், முள்ளங்கி, வெள்ளரி, முட்டைக்கோஸ், காரட் போன்றவற்றைப் பச்சையாகவே நறுக்கி ஜூஸ் செய்து அருந்தி வந்தால் பலவித நோய் எதிர்ப்பு சக்திகள் தாமே உருவாவதோடு அபூர்வமான சில ஆன்மீக சக்திகளும் உடலில் சேரும்.

கலியுகத்தில் தவமோ, யாகமோ, வேள்வியோ மறைந்து வருகின்ற நிலையில், சராசரி மனிதனுக்குத் தெய்வீக சக்திகளைப் பெற்றுத் தருகின்ற வழிபாடுகள் குறைந்து விட்டன. சற்குருவை, பெரியோர்களை அன்புடன் போற்றுகின்ற பண்பாடும் மறைந்து வருகையில், மனிதன் தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்ள உத்தம சற்குருவை நாடுதலே அவனுக்கு நற்கதியைத் தரும். திருஅண்ணாமலை கிரிவலம் சற்குருவைக் காட்டும்!
காடோ, மலையோ, சாலையோ, அலுவலகமோ, பிரயாணமோ எப்போதும் இறை நாமத்தைத் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். சனி, ஞாயிறு என விடுமுறை வந்திடில் தூங்கி, அரட்டையடித்துப் பொழுதை வீணே கழிக்காது, பூஜைகளைப் பெருக்கி, மலை வலம், குறைந்த பட்சம் கோயிலை அடிப்பிரதட்சிணம் வருதல் என குடும்ப சகிதம் வழிபாடுகளைக் கூட்டினால்தான் சாந்தமாக வாழ முடியும் கலியுகத்தில்!
வடமொழி/தமிழ் மறை ஓதுதல் முற்றிலுமாக மறைந்து விட்டது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குரிய தவ வலிமையைத் தரவல்ல மறையோதுதல் நின்று விட்டது. ஏதோ நாலைந்து ஸூக்தங்களையும், தேவாரப் பாடல்களையும் மட்டும் ஓதினால் போதுமா?
இறைவனே தந்த பொக்கிஷங்களான வடமொழி/தமிழ்மறைகளை ஒதுக்கி விட்டோம். நால்வர்களுடைய அருந்தமிழ் வேதங்கள், ஸ்ரீ வள்ளலார் சுவாமிகளின் வேதங்களினுமினிய தீந்தமிழ், தெய்வத் தமிழ் அருட்பாக்கள், ஆழ்வார்களின் வேதப் பொருளாம் திவ்ய பிரபந்தப் பாசுரங்கள் - ஆகியவற்றை நாம் ஓதாமல் காலத்தை விரயமாக்கி விட்டோமே, இதற்குப் பரிஹாரந்தான் என்னே!
இவ்விறைத் தூதுவர்கள் பாடி மகிழ்ந்து இறைவனை தரிசித்த திருத்தலங்களிலேனும் சரீர சேவை செய்து, உழவாரத் திருப்பணிகளைச் செய்யலாமன்றோ!
இன்னும் எத்தனையோ எளிய ஆன்மீக வழிமுறைகளுண்டு! சற்குருவாம் ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் அளித்து வரும் ஆன்மீக பொக்கிஷங்களிவை!
வெறுமனே படித்து விட்டால் போதுமா?
ஸ்ரீ அகஸ்திய விஜயத்தில் வருகின்ற தான, தர்ம, பூஜை முறைகள் நடைமுறையில் சாத்தியமா என்று கேட்போர் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆனால் சற்குருவின் வாக்காய் ஏற்று அவற்றைப் பரிபூரணமாகக் கடைபிடித்து அற்புதப் பலன்களைப் பெற்றதாகவும் நிறைய கடிதங்கள் வந்துள்ளன. என்னே முரண்பாடு!
எனவே தெய்வீகம் என்பது சிரத்தையுடன் மெளனமாக இறைத்தொண்டு புரிவதே தவிர, வெறும் வாய்ப் பேச்சினால் எதனையும் சாதிக்க இயலாது! எப்போதும் சுகமாக, செளகரியமாக, எவ்விதப் பிரச்னைகளுமின்றி வாழவேண்டும் என்று எண்ணுவது சுயநலமல்லவா! இச்சுயநலக் காட்டை விட்டு வெளி வந்து சமுதாயத்தில், பிறரும் நன்கு வாழ நான் என்ன இறைப்பணி செய்தேன் என்று நெஞ்சைத் தொட்டுக் கேளுங்கள்!

புடலைங்காயின் மகத்துவம்

புடலங்காயின் தெய்வீகத் தன்மைகள்
புடலங்காயினுள் பித்ருக்களின் ஜீவிதக் காற்று அடங்கியுள்ளது. புடலங்காயை இரண்டு, மூன்றாக ஒடிக்கையில் ஏற்படும் ஒலியே பித்ரு மந்திர பீஜாட்சர ஒலியாம்.
திருமணமோ, திவச காரியமோ, இரண்டிலுமே புடலங்காய் விசேஷப் பங்கு கொண்டுள்ளது அல்லவா! ஒவ்வொரு காய்கறியின் தோற்றத்திற்கும் ஆயிரமாயிரம் காரண காரியங்களுண்டு. தெய்வ உருவங்கள் கல்லிலோ, உலோகத்திலோ வடிக்கப்படும் போது, கட்டை விரல் அளவிற்கு உட்பட்டு இருந்தால்தான்,  வீட்டில் வைத்து வழிபடலாம். கட்டைவிரல் உயரத்திற்கு மேலிருப்பின் அதற்கு முறையான வழிபாடுகளும்,  நைவேத்யமும் செய்யப்பட வேண்டும்.
புடலங்காய், எள், பிரண்டை போன்றவை பித்ரு லோகங்களிலிருந்து நமக்குக் கிட்டியவை! பித்ருக்களில் வசு, ருத்ர, ஆதித்ய பித்ருக்கள் மட்டுமன்றி எண்ணற்ற வகையினர் உண்டு! சுமங்கலிப் பிரார்த்தனை எனப்படும் பூஜை கூட, சுமங்கலித்வத்தை அருள்கின்ற மங்களாத்ரேய பித்ருவின் ஆசிர்வாதத்தைப் பெறுவதற்காக அமைந்ததாகும்.
இதேபோல் சந்தான பிராப்திக்காகச் செய்யப்படும் புத்ரகாமேஷ்டி யோக யாக, நாக பூஜா வழிபாடுகள் புத்ரஜித் என்ற வகைப் பித்ருக்களுக்குரியதாகும். புத்ரஜித் என்பது புகழ்பெற்ற நேபாள மணிகளாகும். இதனை அணிந்து, பித்ரு பூஜை மற்றும் பூஜைகளை நடத்துவது தேவாதி தேவ மூர்த்திகட்கும், பித்ரு தேவர்கட்கும் ஆனந்தத்தை அளிப்பதாகும்.
புடலங்காயினுள் சிலவகைப் பித்ரு தேவர்களின் சூட்சும ஆத்மக் கதிர்கள் உறைகின்றன.
அப்படியானால் ஒவ்வொரு புடலங்காயும் பித்ரு குலத்தைச் சார்ந்ததா? ஆம்! ஜாதி, மத, இன, குல, ஆண்,  பெண், தாவர விலங்கு, புழு, பூண்டு என எவ்வித பேதமுமின்றி அனைவர்க்கும் பித்ருக்கள் உண்டு. அமாவாசைத் திதியன்று உலகின் அனைத்து ஜீவன்களும், தாவர, விலங்குகள் உட்பட அனைத்துமே பித்ரு சாந்தி விரதத்தை மேற்கொள்கின்றன.
அமாவாசையன்று நாய், பூனை, பசு மற்றும் தாவரங்களின் உணர்ச்சிகளை, நடவடிக்கைகளை உன்னித்துப் பார்த்தீர்களானால் சில அபூர்வமான குணாதிசயங்களைக் (perceptible changes) காணலாம். இதைக் கொண்டுதான் நம் பெரியோர்கள் அமாவாசையன்று வாழைக்காய், புடலங்காய் போன்ற பித்ரு அம்சக் காய்கறிகளையே உணவில் சேர்த்தனர். இன்றும் கிராமப்புறப் பகுதிகளில் அமாவாசையன்று அசைவ உணவுகளைத் தவிர்க்கின்ற நற்பழக்கம் நிலவுவதைக் காணலாம்.
பித்ருக்களிலும் பல நிலைகள் உண்டு என்பதைக் கூறினோமல்லவா! சில வகைப் பித்ருதேவர்களுக்கு பூலோக வாச கபால தேகக் கூட்டில் சில காலம் வசிக்க வேண்டிய நியதியிருக்கும். அதாவது தச வாயுக்கள்,  பத்து விதமான வாயுக்கள், தேகக் கூட்டிலிருந்து முறையாகப் பிரிந்தால் தான் தேக சாந்தியும் ஆத்ம சாந்தியும் ஏற்படும். இது கருதியே சில உத்தமத் துறவியர் தாமே தம் கபாலத்தில் தேங்காயை உடைத்துக் கபால வாயுப் பரிமாண நிவர்த்தியை மேற்கொண்டு கபால மோட்சம் பெறுவர்.
பித்ருதேவர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், கந்தர்வர்களுக்கும் சூட்சும தேக வடிவுகள் உண்டு. ஏன் மனித வகைகளிலேயே நம்மைப் போல மனித உருவம், ஆனால் மல, மூத்ராதி கோசங்களில்லா குணாதிசயங்களை உடைய மனிதர்களும் உண்டு. இவையெல்லாம் உண்மையே! அனைவர்க்கும் கபாலவாயுப் பரிமாணம் உண்டு. அதாவது குண்டலினி சக்தி ஆத்ம ஜோதியாய் மலர்ந்து தரிசனம் தருகின்ற யோக முக்தி நிலை அனைத்து வகையினருக்கும் உண்டு.
இவ்வாறு சில பித்ரு தேவர்கள், தமக்குரிய பூலோக வாயு நிலை வாசந்தனை உய்விக்க, புடலையில் நுணா சூட்சும வாயுவாகப் பரிணமிக்கின்றனர். அதாவது புடலையின் உள் உள்ள காற்றானது சாதாரணமான காற்றல்ல! சில பித்ரு தேவர்களின் ஞான வாசப் பரிமாணமது!
மனிதர்களுக்குள்ள கடமை போல பித்ரு தேவர்களுக்கும் பல கடமைகள் உண்டு. உறக்கமும், பசியுமில்லா உத்தம நிலையது! ஆனால் கண் துஞ்சாது, ஓய்வுறாது கடுமையாய் உழைத்தாக வேண்டும் பித்ருதேவர்கள்!
ஒவ்வொரு ஆண்டிற்கும் இத்துணை ஆயிரம் ஜீவன்களுக்கு நல்வழி காட்டவேண்டும் என்ற நியதி பித்ருக்களுக்கு உண்டு! அந்த ஜீவன்களோ தாவரமோ, விலங்கோ, மனிதனோ, புல்லோ, புழுவோ எந்த வகையாயும் இருக்கலாம்.
இன்று நீங்கள் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வரக் காரணமென்ன? உங்களுடைய பித்ருக்களின் கடும் உழைப்பினால், ஆசியினால்தான் கிரிவலம் வருகின்ற பாக்யம் கிட்டியுள்ளது! இதற்காகவே, உங்களுடைய நிதி நிலைமை, குடும்ப விவகாரங்கள், அலுவலகப் பிரச்னைகள், போக்குவரத்து வசதி, உணவு, நீர், உடல், ஆரோக்யம் அனைத்தையும் நன்முறையில் ஒன்று கூடச் செய்து இத்தகைய பின்னணி நிகழ்ச்சிகளை உங்களுடைய மூதாதையர்களாகிய பித்ருக்கள் நிறைவேற்றிட, ஏதோ பஸ் ஏறினோம், வந்தோம், கிரிவலம் முடிந்தது. சென்றோம் என்றல்லவா எளிமையாக எண்ணுகின்றீர்கள்!
இதிலும் பஸ் நிலையம் வரை வந்து அப்பப்பா என்ன கூட்டம், நம்மால் நின்று கொண்டு திருஅண்ணாமலை வரை போக முடியாது! திரும்பி வருவதற்குள் பஸ் கிடைக்காமல் போதும் போதுமென்று ஆகிவிடுகிறது என்று பாதி வழியிலேயே திரும்பி விடுவோர் எத்தனை பேர்? இதுதான் விதி!
தீய கர்ம வினைகள் வலுவாய் அழுத்தும் போது பித்ருக்கள் விதி வலியதுஎன்ற வேத வாக்கிற்குப் பிரமாணம் தருகின்றனர். ஆனால் பூஜா, தான, தர்ம சக்திகள் மிகுந்திருப்பின், கூட்டமிருந்தால் என்ன, பெளர்ணமி கிரிவலம் பெறுதற்கரிய பேறல்லவா என்று மன உறுதியுடன் பஸ்ஸில் ஏறி விட்டால்... திருஅண்ணாமலைக்குக் கொண்டு வந்து சேர்ப்பது பித்ருக்களின் கடமையாகின்ற தல்லவா! இவ்வாறாக ஒவ்வொரு பித்ரு தேவரும் ஒரு விநாடி நேரங் கூட ஓயாது தம் வம்சாவளியினரின் நலனுக்காகப் பாடுபடுவதால்தான் இன்று இலட்சோப லட்சம் மக்கள் திரு அண்ணாமலையை கிரிவலம் வருகின்றனர்!

அகந்தை அகல

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அந்தாதி
(ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் அருளியது)
மனிதனுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாய் இருப்பது நான் எனும் அகந்தையே! தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது போல வாழ்வில் நடக்கின்ற நல்லதோ, நன்மையற்றவையோ அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நம் முன்வினைகளே காரணம் என்பதை உணர்தல் வேண்டும். நம்முடைய ஒவ்வொரு விரல் அசைப்பிற்கும் கண் துடிப்பிற்கும் இறையருளே பெருந்துணை என உணர்ந்தால் தான் ஒவ்வொரு விநாடியும் நாம் வாழ்வது தெய்வ சங்கல்பத்தினால்தான் என்ற ஞானம் ஏற்படும். தெய்வமே நம் வாழ்விற்கு உறுதுணையாக நிற்கும்போது தீயொழுக்கங்களை நாடுவது அகந்தை நிறைந்த பேராசையால்தான்!
நம்முள் உறைபவன் இறைவன். தீச்செயல் புரிகையில் இறைவன் நம்மை விட்டு அகல்கின்றான் என்பதைவிட அகந்தையால் ஆண்டவனை விட்டு நாம் பிரிந்து செல்கின்றோம் என்பதே சாலப் பொருந்தும். அகங்காரமாகிய ஆணவம் அழிவுற்று நம்மை இராப்பகலாய், உறக்கத்திலும், விழிப்பிலும் நம்மைக் காப்பவன் இறைவனே என்ற ஞானத்திற்கு வித்திடுகின்ற, ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் திருவாய் மொழியாய் மலர்கின்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அந்தாதிப் பாடல் இதோ
தான் தோன்றி தரணியில் தந்திடும் நின் புகழ் முன்பே
வான் தோன்றி வருமுன்னை வந்தம்மா நின் புகழ் பாட
யான் தோன்றி என்றும் நின்னருள் பரப்பியே நினைவில்
நானெனும் நீ தோன்றியே நின்றாடுவாய் பராசக்தியே!
தினந்தோறும் இத் திருப்பாடலை ஓதி வர, நானெனும் அகந்தை கழன்று நாதன் நாமமே எப்போதும் நினைவில் நிற்கும்படி செய்திடுவாள் ஈஸ்வரியாம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி!

குடுமியின் புனிதத்துவம்

குடுமியின் புனிதத்வம்
முற்காலத்தில், ஏன், நமது முந்தைய தலைமுறை வரை, சாதி வேறுபாடின்றி அனைவருமே குடுமி வைத்துக் கடுக்கன்கள் அணிந்திருந்தனர். இவை புனிதமான தெய்வீகச் சின்னங்களே. அனைவருக்கும், உரித்தான அறவழியிது! ஆலயங்களில் இறைவனைப் பூஜிக்கும் பெரும் பாக்கியம் பெற்ற பூசாரிகள், பண்டார சந்நிதிகள், குருக்கள், அர்ச்சகர்கள், பட்டாச்சார்யார்கள், சிவாச்சார்யார்கள் அனைவரும் கட்டாயமாகக் குடுமி வைத்துக் கடுக்கன்கள், பூணூல் அணிந்தே பூஜை செய்து பக்தர்களுக்கு விபூதி, குங்குமத்தைப் பிரசாதமாக அளிக்க வேண்டும்.
அகங்காரம், ஆணவத்தைக் களைவதும், கபால நரம்புகளைப் புனிதப்படுத்துவதும், சிரசில் உள்ள நாளங்களைத் தெய்வீக நெறியில் செலுத்த வல்லதுமான குடுமி முறையில்தான் சிகையிருக்க வேண்டும். குடுமி வைத்திருப்போர் உண்மையான பக்தியுடன் அளிக்கின்ற பூக்கள், விபூதி, குங்குமம் பிரசாதத்திற்குப் பெரும் மகத்வம் உண்டு! இது நம் மூதாதையர்கள் பின்பற்றிய இறைநெறிதானே!
பூர்வ ஜென்மப் பூஜா பலன்களாகவே பெறுதற்கரிய இறைவழிபாட்டுப் பணி கிட்டியிருப்பதால் ஆலயங்களில் பூஜைசெய்வோர் அனைவரும் சாதி, இன, குல வேறுபாடின்றி, நிச்சயமாகக் குடுமி வைத்துத் தான் ஆக வேண்டும். இந் நியதியில் எவருக்கும் விதிவிலக்கு கிடையாது. குடுமி வைத்திருத்தல் கேலிக்குரியதல்ல! உள்ளத்தைப் பக்குவப்படுத்தும் உத்தம அறவழிமுறை! பூஜை செய்பவர் எவ்வகையினராயிருப்பினும் குடுமி நியதி உண்டு. ஆதலின் குடுமி வைத்திருப்போர் அளிக்கின்ற பிரசாதத்திற்கும் தெய்வீகச் சிறப்பம்சங்கள் உண்டு!

வானில் தெரியும் நட்சத்திரம்

இரவில் வானில் எத்தனையோ நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன. இக்காட்சி நமக்குப் பழகிப் போனமையால் நாம் இரவில் வானத்தைப் பார்ப்பது கூட இல்லை ! நகர்ப்புறப் பகுதிகளிலோ அடுக்கு மாடிகள் நம் கண்களுக்குத் தெரியாதவாறு வானத்தையே மறக்கடித்து விடுகின்றன! அல்லது இவ்வளவு பெரிய கட்டிடங்களுக்கு இடையில் வானின் ஒரு சிறு பகுதியைத் தான் நம்மால் பார்க்க முடிகின்றது!
வானத்தை ஏன் தினந்தோறும் பார்க்க வேண்டும்?
சித்புருஷர்களின் பரிபாஷையில் கருநீலக் கண்ணாடி, வெண்திரை மனசாட்சி என்று வானத்தைக் குறிப்பிடுகின்றார்கள். அதாவது சூரிய, சந்திர, நட்சத்திர தேவதைகள் தாம் மனிதர்களுடைய நல்லதோ, கெட்டதோ, அனைத்து விதமான செய்கைகளையும் சாட்சியாகப் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். இரவோ, பகலோ, மறைவிடமோ, வெட்ட வெளியோ, தர்மமோ, அதர்மமோ மனிதனுடைய எல்லாக் காரியங்களையும் இவர்களே அவனுடைய மன சாட்சியைப் போலவே கண்டு அறிந்து இருக்கின்றனர். இதனால் தான் சித்தர்கள் வானத்தை மனிதனுடைய மனசாட்சிக் கண்ணாடி என வர்ணிக்கின்றனர். அதாவது எந்த கிரஹ, நட்சத்திர, தேவாதி தேவர்கள் மனிதனுடைய அனைத்துக் காரியங்களையும் கண்காணிக்கின்றனரோ, அதையேதானே மனிதனுடைய மனசாட்சியும் காண்கின்றது! எனவே வானமே கருநீல மனசாட்சிக் கண்ணாடி!
எனவேதான் நம் மூதாதையர்கள் மாலைச் சந்தி நேர பூஜைக்குப் பிறகு தினந்தோறும் வானத்தைப் பார்த்து தியானித்து சப்தரிஷி மண்டலத்தின் 7 நட்சத்திரங்கள், அங்கவ மகரிஷி நட்சத்திரம் , அருந்ததி, அகஸ்தியர் போன்ற முக்கியமான நட்சத்திரங்களைத் தரிசித்து வழிபட்ட பின்னர் தான் இரவு நேர உணவை ஏற்பார்கள்!
இரு தேவியருடன் நிறைமதி
இத்தகைய நட்சத்திர வழிபாட்டிற்குரிய விசேஷ மந்திரங்களும் உண்டு . அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் சில நட்சத்திரங்கள் சில மாதங்களில் தான் தென்படும். இதற்காகவே நட்சத்திர லிங்க வழிபாடு என்ற ஒன்றும் உண்டு. குறிப்பாக கார்த்திகை, ரோஹிணி நட்சத்திரம் உள்ள நாட்களில் சந்திர பகவானை தரிசித்தால் 27 நட்சத்திரங்களையும் வழிபட்ட பலன்கள் கிட்டுமென்பது பலரும் அறியாத தெய்வீக ரகசியமாகும். சந்திர பகவான் இவ்வரத்தைப் பெற்ற இடமே மதுரையம்பதி ஆதலின் மதுரையில் ஸ்ரீ சந்திரபகவான், கார்த்திகை, ரோஹிணி தேவியருடன் சேர்ந்து அருள்பாலிக்கின்றார்.
இவ்விரு தேவியருள் தாம் 25 நட்சத்திர தேவியரும் அடக்கம் என ஏனைய நட்சத்திர தேவியர் இருபத்தைன்மரும் வரமளித்தமையால் ஸ்ரீ கார்த்திகை, ஸ்ரீ ரோஹிணி சமேதராக ஸ்ரீ சந்திர பகவான் காட்சியளிக்கின்ற தலங்கள் யாவும் நவகிரஹ ஸ்தலங்களுள் திருப்பதி, திருவையாறு அருகே திங்களூர் போன்று மிகவும் சக்தி வாய்ந்த சந்திரப் பதியாக விளங்குகின்றன!
எனவே அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் திருஅண்ணாமலை, ரத்னகிரிமலை (அய்யர் மலை) போன்ற மலைத் தலங்களில் கிரிவலம் வர இயலாதோர் சென்னை திருவொற்றியூர் ஸ்ரீபடம்பக்கநாதர் ஆலயத்தில் அபூர்வமாக அருள் பாலிக்கும் 27 நட்சத்திர லிங்க மூர்த்திகள் அனைத்திற்குமோ அல்லது அவரவர் நட்சத்திர லிங்க மூர்த்திக்கேனுமோ அபிஷேக, ஆராதனைகளைச் செய்து மற்றும் தான தர்மங்களுடன் வழிபட வேண்டும். அல்லது சந்திர பகவான், கார்த்திகை, ரோஹிணி தேவியருடன் எழுந்தருளியுள்ள தலங்களில் வழிபடுதலும் சிறப்புடையதாகும். இதனால் ஆயுள் சக்தி கூடும். மன சஞ்சலம் அகலும்.
நட்சத்திர வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. பஞ்சாங்க (ஐந்து) கால தேவதைகளான நாள், கிழமை, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தினுள் பிரதானமாக விளங்குவது நட்சத்திரம் ஆதலின் இதற்கு நிறைந்த மகத்வம் உண்டு!
சந்திர தரிசனம் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் வானில் தென்படும் சந்திரப் பிறையே மூன்றாம் பிறை தரிசனம் என்பதையும் இதற்கு தெய்வீக மகத்வங்கள் நிறைய உண்டு என்பதையும் ஸ்ரீ அகஸ்திய விஜயத்தில் நன்கு விளக்கி வந்துள்ளோம்.
சிவபெருமான் தன்னுடைய சிரசில் இந்த மூன்றாம் பிறையையே சூடியுள்ளமையால் அன்று நாம் பார்ப்பது சாட்சாத் சிவபெருமானின் சிரசேயாகும். எனவேதான் மூன்றாம் பிறை புனிதத் தன்மையும் இறையருளும் கூடிப் பரிணமிக்கின்றது. மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தன்று எந்த நட்சத்திரம் உள்ளதோ அந்நட்சத்திரத்தவர்கள் குறித்த சில வழிபாடுகளை மேற்கொண்டு சந்திர தரிசனம் பெறுவார்களேயானால் பல வரங்களை எளிதில் பெற்று விடலாம்.
உதாரணமாக வானில் சந்திர தரிசனம் (மூன்றாம் பிறை) கிட்டுகின்ற நாளானது உத்திர நட்சத்திர நாளானால் அன்று சந்தனக் காப்பு தழுவிய சிவலிங்க மூர்த்திகளுக்கு (எப்போதும் சந்தனக் காப்பில் உறையும் லிங்க மூர்த்திகள் சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீ மாசில்லாமணீஸ்வரர், ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை மங்களச் சிவமூர்த்தி, வேதாரண்யத்தில் திருக்கல்யாணகோல சிவமூர்த்தி) பாண லிங்கத்திற்கோ, ஆவுடைக்கோ சந்தனக் காப்பு/ தைலகாப்பிட்டு சண்பகப் புஷ்பத்தால் பூஜித்து ஆவியில் வேகும் உணவு வகைகளை (இட்லி, இடியாப்பம் etc.,) படைத்துத் தானமாக அளித்துவர உறவுகளில்,  வியாபாரத்தில், அலுவலகத்தில் எதிரிகளின் பகைமையிலிருந்து விடுதலை பெற்று, தோஷங்களிலிருந்து நிவர்த்தியடைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் உண்டாகும், சந்தான விருத்திக்கும் இது நல்வழி கூட்டும்.
நட்சத்திரத் துதிகள்
தினந்தோறும் குறிப்பாக அவரவருடைய நட்சத்திர நாளில் உதக சாந்திஎனப்படும் 27 நட்சத்திர மந்திரங்களைப் பற்றிய துதிகளை மாலை நேரத்தில் ஓதி வருதலால் மனத் திண்மை ஏற்பட்டு மனக் குழப்பங்களுக்கும , நஷ்டங்களுக்கும் தீர்வு பெறலாம்.
பல குடும்பங்களில் தரித்திரம், நோய், வேலையின்மை, உறவுப் பிரச்னைகள், திருமணத் தடங்கல்கள் என அடுக்கடுக்காகத் துன்பங்கள் வந்து கொண்டேயிருக்கும். இவர்கள் தினந்தோறும் உதக சாந்தி மந்திரத்தை ஓதி வந்திடலாம். இது வடமொழியில் உள்ளது. இதனை ஓத இயலாதோர் சிவபெருமானுடைய திவ்யமான அவதாரமான ஸ்ரீ சந்திர மௌளீஸ்வரருக்குரிய துதிகளைப் பாராயணம் செய்து வந்தால் மனக் குழப்பங்கள் நீங்கும்.
சில தலங்களில் வெண்மை நிற பாணலிங்கம் அல்லது ஸ்படிக லிங்கமிருக்கும். எவ்வாறு சந்தான பிராப்திக்காக (குழந்தை பாக்யம் பெற) மன்னார்குடியில் ஸ்ரீ சந்தான கிருஷ்ண மூர்த்தியைத் தம்பதிகளின் மடியில் வைத்துப் பூஜிக்கச் செய்கின்றார்களே அதேபோல வெண்மை நிறமுள்ள பாணலிங்கத்தையும் தம்பதிகள் தம் மடியில் வைத்து பக்தியுடன் பூஜித்துக் கறந்த பசும்பால், தேன் அபிஷேகம் செய்து ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்திடில் குழந்தை பாக்யம் கிட்டும்.
புதுக்கோட்டை ஸ்ரீ கோகர்ணேஸ்வரர் ஆலயத்தில் இத்தகைய ஸ்வேத/ வெண்மை லிங்கத்தைத் தரிசித்திடலாம். மூலஸ்தானத்தில் தனித்து வைத்திருக்கின்றார்கள். இதற்குரித்தான தனி அபிஷேக ஆராதனைகளைத் தக்க அனுமதி பெற்றுச் செய்து வருக!
அங்கவ மஹரிஷியின் நட்சத்திர தியானம் தினமும் இரவு நேரத்தில் சிறிது நேரம் வானத்தைப் பார்த்து அமர்ந்து கண்களைத் திறந்த வண்ணம் தியானித்திட வேண்டும். அங்கவ மஹரிஷி என்னும் மாமுனி மூன்று வயதிலிருந்தே வானத்தைப் பார்த்து அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இச்சிறப்பான தியான முறையால் அரிய பல சித்திகளைப் பெற்றார். இதனால் அவருக்குப் பகல் நேரத்திலேயே அனைத்து நட்சத்திரங்களையும் காண்கின்ற தெய்வீக சக்தி கிட்டியதோடு எதிரில் நிற்கின்ற எத்தகைய ஜீவனின் உடல், மனம், உள்ளத்தை ஊடுருவி ஆராய்ந்து எதிர்காலத்தை நன்கு அறியும் தீர்க தரிசனத்தைப் பெற்றார். ஆனால் அவரோ இத்தகைய எளிய சித்திகளில் மனதை லயிக்கச் செய்திடாது ஜீவன்களின் மேன்மைக்கான இறைப் பணிகளிலும் இறை தரிசனத்திலுமே தியானத்தைத் தொடர்ந்தார்.
அங்கவ மஹரிஷி தன்னுடைய நட்சத்திர தியானத்தால் எத்தகைய சாதனைகளைப் படைத்தார், அவருடைய தியானம் சமுதாயத்திற்கு எவ்வகையில் பயன்பட்டது?
ஒவ்வொரு மாதத்திலும் சில ராசிகளுக்குரிய நட்சத்திரங்கள் வானில் காட்சியளிக்கும். உதாரணமாக தமிழ் வருடப் பிறப்பை ஒட்டி, வானில் மேஷ, ரிஷப, மிதுன, கடகம், சிம்மம், கன்னிக் குரிய நட்சத்திரங்கள் மிக நன்றாகத் தெரிகின்ற வாய்ப்புண்டு.
அங்கவ மஹரிஷி விண்ணில் தெரிகின்ற ராசிகளுக்குரிய நட்சத்திரங்களைக் கொண்ட ஜீவராசிகளுக்காக இரவு முழுவதும் பிரார்த்தனை செய்வார். பகலில் அந்தந்த நட்சத்திரத்திற்குரிய வழிபாடுகள், ஹோமம், அபிஷேக ஆராதனைகள், வேள்விகள், தான தர்மங்களைச் செய்திடுவார்.
லிங்கம் காட்டும் பூகோளம்!
பிரபஞ்சத்தில் குறிப்பாக பூலோகத்தில் உள்ள சிவலிங்க மூர்த்திகளில் சில லிங்கங்கள் பிரளய பந்தனம் கொண்டிருக்கும். அதாவது இத்தகைய லிங்கமானது பூலோகத்தைக் குறிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருப்பதால் பூமியின் எப்பகுதியில் பிரளயம், போர், கடல் நாசம் போன்ற துன்பங்கள் ஏற்பட்டிடினும் அதற்கேற்ப சிவலிங்கத்தின் ஒரு பகுதி நிறமும் சூட்சுமமாக மாறிடும். எனவே இத்தகைய சிவலிங்கத்தைத் தீண்டாத் திருமேனிஎன்று அழைப்பர். அதாவது அபிஷேக, ஆராதனைகளுக்காக எவரும் இதனைத் தொட்டு பூஜிப்பது கிடையாது. நீர் சிறிதும் கூடப் படாமல் பாணலிங்கமூர்த்தி பாதுகாக்கப்படுகிறது. ஆவுடைக்கே அனைத்து அபிஷேக ஆராதனைகளும்! சென்னை அருகே கூவம், தக்கோலம், இலம்பையங்கோட்டூர்ச் சிவலிங்கமூர்த்திகள் இவ்வற்புதமான வகையைச் சேர்ந்தவர்கள்!
இம்மூர்த்திகள் பிரபஞ்சத்தின் தோற்றத்தையே தன்னுள் கொண்டிருப்பதால், உத்தம இறைநிலையுடையோர் இதனை உற்றுப் பார்த்தே பூமியின் எவ்விடத்தில் எத்தகைய இயற்கை விளைவுகள் /சோதனைகள் ஏற்படும் என்பதை நன்கு உரைத்திடுவர் ! ஆனால் அந்த உத்தமர்களோ எதிர் காலத்தை அப்பட்டமாக உரைத்திடில் சமுதாயத்தில் ஏற்படும் விளைவுகளைக் கருத்திற் கொண்டு ஏதுமறியாதோராய் அறிந்தும், அறியாதோராய் நம்முடன் வாழ்ந்து அற்புதமான இறைப் பணிகளைப் புரிகின்றனர்.
இத்தகைய திருத்தலங்களில் நட்சத்திரங்கள் மிகவும் சக்தியுடையதாக இருக்கும். ஏனெனில் இம்மூலமூர்த்திகள் தம்முள் பிரபஞ்ச வடிவத்தை சூட்சுமமாகத் தாங்கியிருப்பதால் இதில் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் அடக்கமல்லவா! எனவே இத்தலங்களில் இரவு நேரம் வானத்தை நோக்கி தியானம் செய்வது பன்மடங்கு தியான பலன்களைத் தரும் அங்கவ மஹரிஷி இத்தகைய தலங்களில் தான் தம் மூன்று வயது முதலே தவம் புரிந்தார்.

அடிமை கண்ட ஆனந்தம்


ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சுவாமிகளின் குருகுலவாச அனுபூதிகள்
தம் சற்குருநாதரான ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளிடம் கலியுகத்தில் நேரடியாகவே குருகுல வாசத்தைப் பெறும் பாக்யத்தை அடைந்தவரே ஸ்ரீவெங்கடராம சுவாமிகள்!அதியற்புதமான குருகுல வாசம் !அதுவும் ஒரு சித்புருஷரையே சற்குருவாகப் பெறுவதென்றால் என்னே அதன் மகத்வம்.
இக்குருகுலவாச அனுபூதிகளேஅடிமை கண்ட ஆனந்தமாக இனிதே கனிந்து மாதந்தோறும் குருவின் மஹிமையைப் பறை சாற்றுகின்றது.
பெரியவர் அமாவாசை சித்தரின் பெருமைகளைச் சொல்லலானார்.
அமாவாசை சித்தர்கள் என்று பலருண்டு. ஒரே நாமத்தைச் சூடி பல மஹரிஷியரும், யோகியரும்,   சித்புருஷர்களும் தோன்றுவதுண்டுதானே! அமாவாசை சித்தர் என்பார் மரம், மலை போன்று எப்போதும் உயரமான இடங்களில் தான் தவம் புரிவார், தென்னை, பனை போன்ற மரங்களில் மேலே ஏறி உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு விடுவார். அவர் பார்வை எப்போதும் பகலாயின் சூரியன் மீதோ, இரவாயின் சந்திரன் மீதோ இருக்கும் அல்லது ஏதாவது ஒரு மலையின் மீது ஏறி உச்சிப் பாறையில் உட்கார்ந்து கொண்டு விடுவார், அமாவாசையன்று மட்டும் கீழிறங்கி வருவார்.
அவருடைய மஹிமையினை அறிந்தோர் அவருக்காக உணவு கொண்டு வருவார்கள். அவராகவே சில வீடுகளுக்கும் செல்வது உண்டு! ஆனால் சாப்பிடும் போது மட்டும் போதும்  என்று சொல்லவே மாட்டார். அதே போல் இலையிலும் கொட்டை, நார், கருவேப்பிலை, சக்கை என்று எதையும் விட்டு வைப்பதுமில்லை! உருவமோ கருப்பாக, பாம்பு உடல் போல் ஒட்டியிருக்கும்!
“சுவாமி, பாத்திரத்தில் அன்னம் தீர்ந்து விட்டது,” என்று சொல்லி நாமாகவே உணவு போடுவதை நிறுத்தினால் தான் உண்டு! இல்லாவிடில் போட்டதையெல்லாம் சாப்பிட்டுக் கொண்டுதான் இருப்பார்! அவ்வளவு உணவும் எங்குதான் போகின்றது? அது தான் தெய்வீக ரகசியம்! ( இதற்கான விளக்கங்களை அவரே அளித்திருக்கின்றார். உண்டவர் விண்டிலர்! )
சாப்பிடும் போது அவர் எதுவும் பேசமாட்டார். தானே அமாவாசைசித்தர் என்று சொல்லிக் கொள்ளவும் மாட்டார். பலரும் அவர் சாப்பிடுகின்ற பாணியை வைத்துத்தான் இவர் அமாவாசை சித்தர் என்று அடையாளம் கண்டு கொள்வார்கள். மஹரிஷிகளையோ, யோகியர்களையோ அவர்களுடைய தாடி, ஜடா முடி, தேஜஸ் போன்றவற்றைக் கொண்டு தெரிந்து கொண்டு விடலாம். ஆனால் கறுத்த உருவத்திலோ, சிவத்த நிறத்திலோ, குண்டாய், ஒல்லியாய், வற்றலாய், ஆண்டியாய், பரதேசியாய் எந்த சித்தர் எந்தக் கோலத்தில் வருவார் என்று சொல்ல முடியாது!
தேவர்களால் கூட சித்தர்களை இனங் கண்டு கொள்ள முடியாது!
குப்பைத் தொட்டியிலும், குறு மலையிலும், கோபுரத்திலும், வீதியிலும், காட்டிலுமாக எந்த சித்தர் எந்த இடத்தில் வீற்றிருப்பார் என்று எவராலும் கணிக்க முடியாது!
மேலும் எந்த சித்தரும் ஒவ்வொருவரும் அவரவர் நல்ல / காரியங்களைத் தொடர்ந்து செய்வதைத் தான் விரும்புகின்றார்களே தவிர தன்னைச் சுற்றி வீணாக கும்பல் சேர்வதை அவர்கள் விரும்புவதில்லை !
அமாவாசைச் சித்தரும் ஒவ்வொரு அமாவாசையன்று மட்டுமே மலையிலிருந்தோ மரத்திலிருந்தோ கீழிறங்கி வருவாரல்லவா! பாக்யம் உள்ளோருக்கே அமாவாசையன்று அவருடைய தரிசனமும், அவருக்கு சரீர சேவை செய்தல் அல்லது உணவிடுதலாகிய பெரும் பேறோ கிட்டும்.
இன்றைக்கும் திருஅண்ணாமலை, பர்வத மலை, கொல்லி மலை, இமாலயமலை, மானசரோவர், பொதிய மலை போன்ற சித்புருஷர்களின் நடமாட்டம் நிறைந்த இடங்களில்  அமாவாசைச் சித்தரின் தரிசனம் அமாவாசையன்று சிலருக்குக் கிட்டத்தான் செய்கின்றது. அடக்கம், பணிவு, பக்தி காரணமாக அவர்கள் இதனை விளம்பரப் படுத்துவதில்லை !
மேலும் இன்றைய விஞ்ஞான உலகத்தில், இத்தகைய உத்தமமான சித்புருஷர்களைக் கண்டால் கூட அவர்களின் உடலமைப்பையே கூறு போட்டு ஆராய்ச்சி செய்யும் அளவிற்குத் தான் விஞ்ஞானத்தின் நிலை சீரழிந்து விட்டதே!
மோர் Once more...
அமாவாசைச் சித்தர் அமாவாசையன்று மட்டுமே உண்பார். அன்று எத்தனை மூட்டை உணவிட்டாலும் உண்டு விடுவார்.
இவரைச் சோதனை செய்யும் பொருட்டு ஒரு மாட்டு வண்டியில் பல அண்டாக்கள் நிறைய நீர் மோரைக் கொண்டு வந்து ஒருவர் இறக்கிட அனைத்தையும் அமாவாசை சித்தர் தாம் ஒருவராகவே குடித்து முடித்துவிட்டார். அதன் பிறகு அவ்வண்டியின் அச்சு முறிந்து எத்தனையோ முறை புது அச்சுகளை மாட்டியும் அவ்விடத்தை விட்டு மாட்டு வண்டியையே எடுக்க முடியவில்லை . அதற்குள் அமாவாசை திதி முடிந்திடிவே சித்தரோ மீண்டும் தென்னை மரத்தில் ஏறி விட்டார்!
அடுத்த அமாவாசை வரை ஒரு மாத காலம் அம்மரத்தடியிலேயே தங்கியிருந்து தம்முடைய அவநம்பிக்கைக்குப் பிராயசித்தமாக அந்த அன்பர் மீண்டும் அதே அளவு ஒரு வண்டி நிறைய மோர் கொணர்ந்து அடுத்த அமாவாசையின் போது அவரிடம் அளித்து மன்னிப்புக் கோரிட, மாதந் தோறும் அமாவாசையன்று ஏழைகளுக்கான நீர் மோர் தானத்தை வாழ்க்கை முழுதும் கடை பிடிக்கும்படி அவருக்கு அமாவாசை சித்தரே நல்லதொரு வரமாய்த் திருவாய் மலர்ந்தருளினார். நீர் மோர் மூலம் சீர்தரு முக்தி! சித்தர்களால் முடியாதது எது?
மா போதுமா?
மாங்கொட்டை, முருங்கைச் சக்கை என அவர் எதையுமே இலையில் விட்டு வைப்பதில்லை. இதனால் இவருக்கு "மாங்கொட்டைச் சாமி சித்தர்" என்ற பெயரும் உண்டு!
இவரைச் சோதிப்பதற்காக ஒருவர் முந்நூறு மாம்பழங்களைக் கொண்டு வந்து தந்திட அவையனைத்தையும் தனியாக தான் ஒருவனாகவே கொட்டையுடன் உண்டு விட்டார் ! கொடுத்தவரோ தன் வீடு திரும்புகையில் தன்னுடைய தோட்டத்தில் அனைத்து மரங்களிலும் மாம்பழங்கள் பன் மடங்காகப் பெருகியிருப்பது கண்டு வியந்து ஓடோடி வந்து சித்தரின் பாதங்களைப் பற்றிச் சரணடைந்தார்!
ஒரே பெயரில் பல சித்தர்கள் தோன்றுவதுண்டு! அமாவாசைச் சித்தரே பல யுகங்களிலும், கலியுகத்தில் பல்வேறு இடங்களிலும் பல உருவங்களில் தோன்றியுள்ளார். இவருக்குப் பல சிஷ்யர்களும் உண்டு!
இவ்வாறாக அமாவாசை சித்தரின் பெருமைகள் சொல்லவும் பெரிதே!
பெரியவர் அமாவாசைசித்தரின் மஹிமையைச் சொல்லச் சொல்ல ராம காதை கேட்ட ஆஞ்சநேயர் போல் சிறுவனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது!
சரியாக அமாவாசை திதி தொடங்கும் தருணத்தில், தென்னை மரத்திலிருந்து கீழிறங்கலானார் அமாவாசைச் சித்தர்.
சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம்!
அதெப்படி வாத்யாரே, இவரு இப்ப இங்க இருக்கார்னு உனக்குத் தெரியும்? .
பெரியவர் சிரித்தார்.
பாம்பின் கால் பாம்புதாண்டா அறியும்!
பிறகு பாம்பு போல் உஸ் என்று சைகை காட்டினார்!
சத்தம் போடாம இரு! ஏதோ நமக்கு பாக்யம் இருந்துச்சுன்னா அவருக்கு ஏதாச்சும் சேவை செய்யலாம்!
மரத்திலிருந்து கிடுகிடுவென்று மிகவும் லாவகமாக இறங்கினார் சித்தர்.
அப்பப்பா! ஏதோ ஒட்டின மாதிரி உடம்பு இருந்தாக் கூட எவ்வளவு வேகமா இறங்கறாரு
இதற்கு முன் ஒரே ஒரு முறை சற்றுத் தொலைவிலிருந்து சிறுவன் அவரைப் பார்த்திருக்கிறான். ஸ்ரீமூகாம்பிகை கோயிலுக்குப் பெரியவருடன் சென்றிருந்த போது கோலார் பகுதி அருகே ஒரு மரத்தின் மேல் அவர் அமர்ந்திருந்தார்.
ஆனால் அப்போது அவர் தான் அமாவாசை சித்தரென்று சிறுவனுக்குத் தெரியாது!
ஏதோ அந்தப் பக்கம் பார்த்துப் பெரியவர் கை கூப்பிக் கும்பிடுவதைக் கண்டு சிறுவனும், ஏதோ கோயில் தெரிகிறது போலிருக்கிறது என்று அவனும் அப்படியே செய்தான்.
சற்றுத் தள்ளிச் சென்றதும் பெரியவர் சொன்னார், மரத்து மேல பாத்தியே அவர் தான்டா அமாவாசைச் சித்தரு!
ஏன் வாத்யாரே! அப்பவே சொல்லியிருந்தா பக்கத்துல போய்ப் பாத்துருக்கலாம் தானே! ஏன் விலகிப் போகணும்?
சும்மா பாக்கறது, தரிசனம் பண்றது எல்லாம் அவர் விரும்பறது கிடையாதுடா! தெய்வீகத்துல ஏதாச்சும் தியாகம் செஞ்சாத்தான் அவர் தரிசனமே கிடைக்கும்! முதல்ல அவரைப் பத்தி நல்லாத் தெரிஞ்சுக்க...
அதன் பிறகுதான் மேலே நாம் கண்டுள்ள விளக்கங்களையெல்லாம் பெரியவர் வெளிப்படுத்தினார். இது நடந்த இரண்டாண்டுகளுக்குப் பின்தான் இந்த தரிசனம் கை கூடியது!
அமாவாசையில் ஒரு ஜோதி!
..... வேகமாகக் கீழிறங்கிய சித்தரின் திருவடிகளில் இருவரும் வீழ்ந்து வணங்கினர். மரத்தடியில் அமர்ந்த சித்தர் கை, கால்களை நன்றாக நீட்டி அமர்ந்து கொண்டார்!
பெரியவரும் அவருக்குப் பக்கவாட்டில் அமர்ந்து மெதுவாக அவருடைய கால்களைப் பிடித்துவிட்டார். ஒரு மாதம் முழுதும் மரத்தின் மேல் அமர்ந்தால் எப்படியிருக்கும்? நன்றாகக் களைப்படைந்தது போல் காணப்பட்ட சித்தர் மரத்தின் மேல் சாய்ந்தவாறே குக்குடாசன முறையில் யோக நித்திரை கொண்டார்!
சித்தர்களுக்கு ஏது தூக்கம்? பெரியவர் மெதுவான குரலில், “டேய், நீ கொஞ்ச நேரம் கை, கால் புடிச்சு விடு! எத்தனை ஜன்மம் எடுத்தாலும் இது கெடைக்காதுடா! ஓவரா ஏடா கூடமா ஏதாச்சும் பண்ணி அவரோட யோகத்தைக் கலைச்சுடாதே! நான் போயி சாலு (பானை), அரிசி, விறகு, காய் வாங்கி வர்றேன்! ஏதாச்சும் அவருக்குப் பண்ணிப் போட்டு கொஞ்சம் ஆசிர்வாதம் வாங்கினாத் தாண்டா நாளைக்கு நீ ஆஸ்ரமம் கட்டி ஏதோ கொஞ்சம் அன்னதானம் நல்லாப் பண்ற மாதிரி செய்வாரு! அதுக்குத் தாண்டா இன்னிக்கி ஓடி வந்தோம்..
சிறுவன் அருகில் அமர்ந்து அவருடைய முழங்கால்களைப் பிடித்து விட...
கை உஷ்ணம் மாறியதால்அதை உடனே உணர்ந்த அவர் சற்றே கண்களைத் திறந்து பார்த்திட...
நேருக்கு நேராக தெய்வீகம் பொழியும் அவருடைய கண்களைக் காணும் பாக்யம் பெற்ற சிறுவனுக்கு.....
ஜோதிமயமான அப்பார்வையின் இறை சக்தியால் ........
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு தெய்வீகப் புத்துணர்ச்சி எழுவதை நன்கு உணர முடிந்தது!
இச்சக்திதானே அமாவாசைச் சித்தரின் மகத்தான ஆசிர்வாதம்!
குண்டலினுக்குள் குடிபுகும்  குக்குடாசன சித்சக்தி!

பிரதோஷ வழிபாடு

பிரதோஷ நேரத்திற்குள் பிரதோஷ பூஜை நடப்பதே சிறபுடையது. பிரதோஷ நேரங் கடந்த பின் பூஜை நடந்திடில் அது சாயங்கால / இரவு நேர பூஜையாகுமே தவிர பிரதோஷ பூஜா பலன்கள் கிட்டாமற் போகும்.
எம்முடைய ஆஸ்ரம வெளியீடான பிரதோஷ மஹிமை என்னும் நூலில் பிரதோஷம் பற்றிய சித்புருஷர்களுடைய அற்புதமான விளக்கங்களை அளித்துள்ளோம்.
பிரதோஷ வழிபாடு யாங்கனும் கொண்டாடப்படுவது கண்டு நாம் ஆனந்தம் அடைந்தாலும், ஸ்ரீ ஐயப்ப விரதத்தில் பரவலாகக் காணப்படுகின்ற பெருங் குற்றங்களைப் போல, பிரதோஷ வழிபாட்டிலும் சில தவறான அணுகுமுறைகள் இருப்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். குறைகளைக் கூறுகின்றோம் என்பதை விட எவ்வாறு திருமண வைபவத்தில் குறிப்பிட்ட சுப முகூர்த்த நேரத்திற்குள் தாலி கட்டுதலை நிகழ்த்தினால் தான் புனிதம் நிறைந்ததாக இருக்குமோ அதே போன்று பிரதோஷ நேரத்திற்குள் பெரியோர்கள் வகுத்துள்ள முறையில் வழிபாடுகள் நடைபெற்றால்தான் பிரதோஷத்தின் பரிபூரணமான பலன்களைப் பெற முடியும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்!
நேரமே நிறைவானது
பிரதோஷ நாளான திரயோதசித் திதியன்று சூரிய அஸ்தமன நேரத்தில் மாலை 4:30 – 6:30 மணிக்குள் பிரதோஷ வழிபாடு நிகழ்வதே சிறப்புடையது. இரவு 8 மணிவாக்கில் கூட இவ்வழிபாட்டைச் செய்கின்ற அறியாமையைத் தான் சில இடங்களில் காண்கின்றோம். மாலை 6:30 மணிக்கு மேல் பிரதோஷ நேரம் மறைந்து விடுகின்றது. அதன் பின்னர் அது அந்தி பூஜையாக, சாயங்கால பூஜையாகத் திகழுமேயன்றிப் பிரதோஷ பூஜையாகாது!
தற்போது பெரும்பாலான ஆலயங்களில் பிரதோஷ வழிபாட்டுக் குழு என்ற ஒன்றிருக்கும் ! அதனை நிர்வகிப்போர் அலுவலகம் செல்பவர்களாக இருப்பர். அலுவலக வேலை முடிந்து இல்லம் சென்று அவர்கள் திரும்பி வருவதற்குள் பாதி பிரதோஷ நேரம் கடந்திருக்கும். கோயிலிலோ அத்தகைய முக்யஸ்தர்கள் வர வேண்டும் எனக் காத்திருப்பர். இவர்களோ தாங்களில்லாமல் பிரதோஷ பூஜை தொடங்கக் கூடாது என்ற நிலையை மேற்கொள்வர்! தெய்வீகத்தில் எத்தகைய தேவையற்ற அந்தஸ்து, விவகாரம், (Egoism) பாருங்களேன்!
ஈரேழுலகங்களிலும் காணக் கிடைக்காத புனிதமான பிரதோஷ நேரத்தில், பரிபூரணமான இறையருள் ததும்புகின்ற தெய்வீகமான நேரத்தில் மனிதர்களுடைய சுயநலமும், போலி கெளரவமும், அந்தஸ்தும் தானா தலையிடுவது?
தான் வந்தாலும் வராவிட்டாலும் சரியான நேரத்தில் பிரதோஷ பூஜைகள் நிகழ்வதுதானே உண்மையான பக்தனுக்கு அடையாளம்!
நூற்றுக்கணக்கான மக்கள் பிரதோஷ நேரத்தில் காத்துக் கிடக்க, தனியொரு மனிதனுக்காக பிரதோஷ வழிபாடே நிறுத்தப்படுமாயின் இதற்குக் கடும் சாபங்கள் உண்டு. சொல்லொணாப் பாவங்களைக் கூட்டித் தரும் அதர்மச் செயலிது! மஹரிஷிகளின், சித்புருஷர்களின் சாபங்களைப் பெற்றுத் தரும் பாவகரமான காரியமிது! குடும்பத்தையே பாதிக்கும் கொடிய பாவமிது!
தனியொரு மனிதனுக்காக/மனிதர்களுக்காக எல்லாம் வல்ல சர்வேஸ்வரனையும், ஆண்டவனின் அடியார்க்கு அடியார்களையுமா காக்க வைப்பது! சிவனடியார்களுக்காகத் தம்மையும், தன் பிள்ளையையும், நிலபுலன்களையும், சொத்துக்களையும் அர்ப்பணித்த நாயன்மார்கள் வாழ்ந்த இத்தெய்வத் தமிழ்த் திருநாட்டிலா இத்தகைய அவலம் நிகழ்வது!
இனியேனும் இத்தகைய பெருந்தவறுகள் நிகழாதவாறு பக்த கோடிகள் சரியான பிரதோஷ நேரத்தில் பிரதோஷ வழிபாடுகளை முறையோடு நடத்திட வேண்டும், அறிந்தோ அறியாமலோ இதற்குக் காரணமானோர் தக்க சற்குருவை நாடிப் பிராயச்சித்தங்களைப் பெற்றிடுதல் வேண்டும்.
தற்போது சில ஆலயங்களில் இரவு 8 மணி வரை கூட பிரதோஷ நாயகரின் புறப்பாடு வழிபாடுகளைத் தொடர்கின்றார்கள். பிரதோஷ நேரத்திற்குள் அபிஷேக, ஆராதனைகள், சுவாமி புறப்பாடு முடிந்தால் தான் புனிதமான பிரதோஷ நேர பூஜா பலன்கள் மக்களைச் சென்றடையும் என்பதை நன்கு உண்ர்ந்திடுக!
பிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி அனைத்தும் பிரகாரத்திலிருக்கும் உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதாகவும் இதனால் மூலமூர்த்திக்குப் பிரதோஷ நேரத்தில் எவ்வித வழிபாடும் செய்தல் கூடாது என்றும் சிலர் எண்ணுகின்றார்கள், இது தவறான கருத்து பிரதோஷ நேரத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகளைத் தொடர்வதில் எவ்விதத் தவறுமில்லை !
பிரதோஷ நேரத்தில் காப்பரிசி, அருகம்புல் , வில்வம் மூன்றையும் இட்டு நந்தி பூஜையினைச் சிறப்பாகச் செய்திடல் வேண்டும்.
- மூக்குக்கயிறு இல்லாத நந்திக்கு
- வலது காலை முன் வைத்துள்ள நந்தீஸ்வரருக்கு
- அம்பிகையை நோக்கிச் சற்றுச் சாய்ந்த நிலையில் உள்ள நந்தீஸ்வரருக்கு ….காதுகள் நன்கு பரந்து விடைத்துள்ள நந்தி மூர்த்திக்கு
- சுவாமிக்கு எதிர்ப்புறம் பார்த்து நிற்கும் நந்தீஸ்வரருக்கு
என ஒவ்வொரு நந்திக்கும் ஒவ்வொரு வித பூஜை முறைகள் உண்டு!
பிரதோஷ நேரத்தில் பிரதோஷ மூர்த்தியின் புறப்பாடு உற்சவம் தான் மிகவும் முக்கியமானதாகும். விதவிதமான நடனங்களின் மூலம் சுவாமியின் உலாவை சிறப்புறச் செய்திட வேண்டும். நடனங்களின் மூலம்தான் பிரதோஷ மூர்த்தியின் சக்திகள் நன்கு வெளிப்படுகின்றன.
ஆனால் தற்காலத்தில் பாதுகாப்பு, பக்தர்கள் தோள் கொடுத்து சுவாமியைத் தூக்க முன் வராமை காரணமாகப் பல கோயில்களில் பிரதோஷ உலாவே நிகழ்வது கிடையாது. இந்நிலை மாறி அனைத்துத் தலங்களிலும் பிரதோஷ மூர்த்தியின் உலாப் பெரும் விழா நன்கு நடைபெற பக்த கோடிகள் உதவ முன் வருதல் வேண்டும்.
பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன் நிற்கும் நந்தீஸ்வரருக்கு மட்டுமே பல இடங்களில் முக்கியத்வம் தருகின்றனர் . ஆனால் பிரதோஷ நேரத்தில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நந்திகளின் திருக் கொம்புகளினிடையே சிவபெருமான் நடனமாடுவதால் ஆலயத்தில் உள்ள அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வது சிறப்புடையது!
அருணை அரனின் பிரதோஷம்
திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் பல நந்தீஸ்வர ரூபங்களைக் காணலாம். பிரதோஷ நேரத்தில் திருஅண்ணாமலையை கிரிவலம் வருதலின் மஹிமையையும் பலன்களையும் விளக்கப் புகுந்தோமானால்... மீண்டு வர எத்தனைக் கோடி யுகங்கள் ஆகுமோ தெரியாது!
ஆதி சிவனுடைய எத்தனையோ கோடி அவதாரங்களும் குறிப்பாக 64 மூர்த்தங்களும் ஒருங்கே சேர்ந்து 64 விதமான நடனங்களையாடுகின்ற உத்தமத் தலமே திருஅண்ணாமலை! பெரும் பாக்யம் பெற்றவர்கள்தாம் பிரதோஷ நேரத்தில் அருணாசல கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து நந்திகளின் திருக்கொம்புகளின் ஊடே சர்வேஸ்வரனின் திருமேனியாக விளங்கும் திருஅண்ணாமலையை தரிசிப்பார்கள் ! இதனுடைய பலாபலன்களை, நல்வரங்களை, ஐஸ்வர்ய கடாட்சங்களை மோட்சப் பெரும் பேறுகளை எப்படித்தான் எடுத்துரைப்பது?
அருணாசலப் பிரதோஷ நேர கிரிவல மஹிமைஎன்னும் தலைப்பில் இவற்றைக் குருவருளால் பின்னர் நன்கு விவரிக்க உள்ளோம்.
பிரதோஷ நேரத்தில் ஸ்ரீ அதிகார நந்தி வழிபாடு
அதிகார நந்தி எழுந்தருளியுள்ள தலங்களில் பிரதோஷ வழிபாடு பல சிறப்பம்சங்களைக் கொண்டு விளங்குகின்றது. அதிகார நந்தி, சுயம்பிரபை தேவியுடன் எழுந்தருளியுள்ள தலங்களில் (திருமழபாடி, புதுக்கோட்டை திருக்கோகர்ணம்) நடைபெறுகின்ற பிரதோஷ உற்சவம் தனிப் பெருஞ் சிறப்புடையது. பிரதோஷ நேரத்தில் அதிகார நந்தியை வழிபட வேண்டிய சிறப்பான வழிமுறைகளைச் சித்புருஷர்கள் அளித்துள்ளனர்,

ஸ்ரீஅதிகாரநந்தி
திருகோகர்ணம் புதுக்கோட்டை

பிரதோஷ நேரத்தில்தான் பிரதோஷ வழிபாடு என்ற நியதியை எவராயினும் சரி, கட்டாயமாகக் கடைபிடித்திட வேண்டும்.
அதிகாரநந்தி எழுந்தருளியுள்ள இடங்களில் அவருக்கும் அபிஷேக, ஆராதனைகளுடன் வில்வம், அருகம்புல் மாலை, காப்பரிசியும் சார்த்திட வேண்டும். பிரதோஷ நேரத்தின்போது நந்தீஸ்வரரின் திருக்கொம்புகளிடையே சுவாமி நடனமாடுகையில், ஒவ்வொரு நந்தீஸ்வரரின் கொம்பு மற்றும் உடல் அசைவுகளையும் சுவாச ஓட்டங்களையும் முறைப்படுத்தும் அற்புதக் கைங்கர்யத்தை மேற்கொள்பவரே அதிகார நந்தீஸ்வரர்! அனைத்து நந்தீஸ்வர தேவ மூர்த்திகளின் தலைமை மூர்த்தியுமாவார்.
அதிகார நந்தி இல்லாத இடங்களிலும் அதிகார நந்தியே சூட்சுமமாகப் பிரதோஷ காலத்தில் இந்த தெய்வீகக் கைங்கர்யத்தை மேற்கொள்கின்றார்.
தலங்களில் அதிகார நந்தி எழுந்தருளியிருப்பதின் தாத்பர்யம் என்ன? திருக்கயிலாயத்தின் முன் சுவாமிக்கு முன்னர் எழுந்தருளியிருப்பவரே அதிகார நந்தீஸ்வரர், இறைவனுக்குக் கோடி கோடியாம் வாகனங்கள் உண்டு. கயிலாயத்தில் நந்திகணங்கள், நந்தி வாகனங்களின் மற்றும் நந்தீஸ்வர மூர்த்திகளின் தலைமை மூர்த்தியாக விளங்குபவரும் அதிகார நந்தீஸ்வரராவார். இவர் தம் தேவியாம் சுயம்பிரபை தேவியுடன் எழுந்தருளியுள்ள திருமழபாடி போன்ற தலங்கள் மிகவும் விசேஷமானவை. மேலும் அதிகார நந்தீஸ்வரர் சடாட்சரக்கழி என்னும் விசேஷமான கோலைக் கொண்டு திருக்கயிலாயத்தில் அருள் புரிவதால் இக்கோலுடன் விளங்குகின்ற அதிகார நந்தி உள்ள இடங்களில் பிரதோஷ உற்சவம் தனிச் சிறப்பிடம் பெறுகின்றது.
பிரதோஷ நேரத்தில் அதிகார நந்தி உள்ள இடங்களில் அதிகார நந்திக்கு பசுநெய்க் காப்பிட்டு, அபிஷேக ஆராதனைகள் செய்து வெண்பட்டு, வஸ்திரம் சாற்றிடுக, பிரதோஷ மூர்த்தி வலம் வருகையில், அதிகார நந்தி திருச்சந்நிதியின் முன் தீப சேவை சாதித்திட வேண்டும். மேலும் பிரதோஷத்திற்கான நடன முறைகளை அதிகார நந்தியின் முன் மாற்றி மாற்றி ஆடுவது மரபாகும்.
பிரதோஷ வழிபாடுகளில் பங்கு கொண்டு, சரீர சேவை புரிந்து, ஸ்வாமியை தரிசித்து வழிபடுவதால் பல வருடங்களாகத் தீர்வு பெறாது உள்ள நில, சொத்து, அலுவலக வழக்குகள் நன் முறையில் தீர்வு பெறும். குறிப்பாக செவ்வாய்க் கிழமையன்று செவ்வாய் பகவானுக்குரிய மிருக சீரிஷம், அவிட்ட நட்சத்திரங்களில் அமைகின்ற பிரதோஷ பூஜைகளைக் கொண்டாடுவது மிகவும் சிறப்புடையதாகும். இந்நாட்களில் தக்காளி, பீட்ரூட், சாம்பார் சாதம் போன்ற செவ்வாய் பகவானுக்குரிய வர்ணமான சிகப்பு நிற உணவு வகைகளைப் படைத்துத் தானமளிப்பது பூஜையின் பலன்களைப் பன்மடங்காக்கும்.
அதிகார நந்தி தம் தேவியான சுயம்பிரபை தேவியுடன் எழுந்தருளி உள்ள தலங்களில், பிரதோஷ பூஜையில், சிறப்பாகப் பங்கு கொள்வதால் அந்தஸ்து, கெளரவம், செல்வம் போன்றவற்றாலும், மனத்தாங்கல்களாலும் பிரிந்த திருமண உறவுகள் மற்றும் சகோதர, பங்காளி உறவுகள் மீண்டும் நன்முறையில் இணைந்து இல்லறம் நல்லறமாய் மீண்டும் மலர்ந்திட இத்தகைய வழிபாடு பெரிதும் உதவுகிறது.
அம்பிகையை நோக்கி வலது புறம் சற்றே திரும்பிய நிலையிலோ அல்லது வலப்புறக் காது சற்று உயர்ந்த நிலையிலோ உள்ள நந்தீஸ்வரரிடம், அபயம் வேண்டி பிரதோஷ பூஜை முடிந்தவுடன், தன்னுடைய குடும்பப் பிரச்சனைகளையும் துன்பங்களையும் அந்நந்தியின் வலது காதில் உள்ளது உள்ளபடியே உரைத்திடலாம். இடப்புறம், நந்தியின் காது உயர்ந்து இருப்பின் தம்முடைய திருமணம், அல்லது தாம்பத்ய வாழ்க்கையில் உள்ள துன்பங்களைத் தெரியப்படுத்தலாம்.
இவ்வாறாக பிரதோஷ நேரத்தின்போது நந்தீஸ்வர மூர்த்திகள் கலியுகத்தின் கண்கண்ட பிரத்யட்ச மூர்த்தியாய் அருள்பாலிக்கின்றனர்,

வாஸ்து பூஜை

வாஸ்து பூஜை என்பது புதுக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு பூஜையென்றே இதுகாறும் பலரும் எண்ணி வந்துள்ளனர். இது தவறு!
சொந்த வீட்டில் இருப்போரும் வாடகை வீட்டிலிருப்போரும் மட்டுமன்றி அலுவலகம், பாக்டரி, கடை வைத்திருப்போரும் கூட, வாஸ்து நாளில் தலை/நிலை வாசல்படிகளுக்குக் காவி, மஞ்சள் குங்குமமிட்டுக் கோலமும் இட்டு வாசற்படி நிலை தேவதைகளைப் பூஜிக்க வேண்டும்.
நிலை உத்திரங்களில் வாழுகின்ற உத்திர தேவதைகளும் உண்டு. வாஸ்து நாளுக்கு முன்னரேயே இல்லத்தில் ஒட்டடை, தூசு, தும்புகளை நீக்கிட வேண்டும். எதிர்வினைகளும் (negative forces) தீவினை சக்திகளும்,  கண்ணேறு திருஷ்டியின் தீய சக்திகளும் இவற்றிற் படிவதால்தான் வீட்டில் தம்பதியரிடையே எப்போதும் வாக்குவாதங்கள் நிகழ்கின்றன.
வாஸ்து நாளன்று வாஸ்து ஹோமம் செய்தல் சிறப்புடையது. குறைந்த பட்சம் வாஸ்து மூர்த்திக்குரிய மந்திரங்களையாவது ஓதி வருதல் வேண்டும், வாஸ்து ஹோமத்தை நடத்த இயலாதோர் பூஜையிடத்தைச் சுத்தஞ் செய்து கோலமிட்டு நடுவில் ஒரு கலசத்தை வைத்து (தாமிர, வெண்கல, செம்பு) அதற்கு நூல் சுற்றி, கங்கை, காவிரி போன்ற புனித தீர்த்தத்தை உள்ளே ஊற்றி மாவிலைக் கொத்து வைத்து மஞ்சள் பூசிய தேங்காயால் மூடி விட வேண்டும்.

ஐந்து முகக் குத்துவிளக்கில் பசு நெய் விளக்கேற்றி ஸ்ரீ வாஸ்து புருஷ தேவ மூர்த்திக் குரிய மூல மந்திரம் அல்லது வாஸ்து காயத்ரீ மந்திரத்தை 108/1008 முறை ஓதி, கிழங்கு வகை உணவுகளைப் படைத்து, ஸ்ரீ வாஸ்து புருஷ தேவமூர்த்தியை வணங்கித் துதித்துப் போற்றிடுக! பின்னர் வீடு அலுவலகம், பாக்டரி அனைத்து இடங்களிலும் குறிப்பாக (மர) உத்திரங்களிலும் மாவிலைகளால் கலச நீரைத் தெளித்திட வேண்டும்.
இத்தகைய வாஸ்து பூஜையினை வருடத்திற்கு எட்டு முறையே வருகின்ற வாஸ்து நாட்களில் செய்து முறையாக வழிபட்டு வந்திடில் நில சம்பந்தமான தோஷங்கள் நீங்குவதோடு வீடுகளில் சுபிட்சமும் ஏற்படும். பலரும் கோர்ட் வழக்குகளினால் நிலபுலன்களில் சாகுபடியோ, வீடுகளைக் கட்ட முடியாமலோ தேக்க நிலை ஏற்பட்டு வேதனையுறுகின்றார்கள். இவர்கள் முக்கியமாக வாஸ்து பூஜைகளைக் கட்டாயம் நிறைவேற்றி ஸ்ரீ வாஸ்து மூர்த்தியை வழிபட்டால்தான் நில சம்பந்தமான தாவாக்கள் நன்முறையில் தீரும்.
வாஸ்து நாள் (திருக்கணித முறைப்படி)
தமிழ் மாதம் வைகாசி 21
வாஸ்துபுருஷ தேவ மூர்த்தியின் முக்கியமான யோக காரியங்களாவன:
தந்த சுத்தி ......... காலை 5.47 முதல் 6.05 வரை
புனித ஸ்நானம் (நீராடுதல்) - 6.05 முதல் 6.23 வரை
பூஜை 6.23 முதல் 6.41 வரை
போஜனம் 6.41 முதல் 6.59 வரை
தாம்பூலம் 6.59 முதல் 7.17 வரை
6.41 முதல் 7.17வரையிலான வாஸ்து மூர்த்தியின் போஜன, தாம்பூல நேரங்கள் மிகவும் புனிதமானவை,
ஆதலின் இந்நேரமே அஸ்திவாரம், மனைக்கால் போன்றவற்றிற்கு மிகவும் புனிதமானதாகும். எனினும் ஆரம்ப நேரத்திலிருந்தே மந்திரம் ஓதுதலைத் தொடங்கிட வேண்டும். அதாவது வாஸ்து புருஷ மூர்த்தி யோக நித்திரை விடுவதிலிருந்து மீண்டும் சயனமாகும் வரை மந்திர பாராயணம் அவருடைய திருச்செவிகளில் இனிமையாகப் பாய்ந்திட வேண்டும்.

சரபேஸ்வர மகிமை

ராகுகால, பிரதோஷ நேர சரபேஸ்வர பூஜையின் விளக்கங்களைச் சென்ற மாத மே 1998 அகஸ்திய விஜயத்தில் கண்டோம். இனி சரபேஸ்வர மூர்த்தி வழிபாட்டில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான நியதிகளைக் காண்போமா!
ஸ்ரீ சரபேஸ்வர வழிபாட்டிற்காக இல்லத்திலிருந்து செல்லும் பொழுது காலணிகள் அணியாது வெற்றுக் கால்களுடன் செல்வதே சிறப்புடையதாகும்.
ஐயப்ப விரதத்தைப் போன்றே இதிலும் காலணிகள் அணியாது செல்ல வேண்டிய காரணமென்ன?
ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தி, ஹிரண்யாட்சனை வதம் செய்து அவனுடைய குருதியை தம் உடலில் ஏற்றமையால் அவருடைய உக்ரம் மேலும் தீவிரமடைந்து, கட்டுக்கடங்காத நிலையை அடைந்தது. அனைத்து லோகங்களிலும் வாழ்கின்ற ஜீவராசிகளும் அவருடைய உக்ரஹத்தைத் தாள முடியாது தவித்தனர் என்றும் புராணத்தில் நாம் காண்கின்றோம் அல்லவா!
ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி உக்ரதாண்டவம் பூண்டவராய்ப் பலவித தெய்வத் திருநடனங்களுடன் பிரபஞ்சத்தின் பல்வேறு லோகங்களுக்கும் சென்றார். காரணமென்ன? ஸ்ரீ நரசிம்ம அவதார மஹிமையில் ஸ்ரீ நரசிம்மருக்கு ஏற்பட்ட உக்ரத்திற்கான தெய்வீகக் காரண காரியங்களை சித்புருஷர்கள் மிகவும் அழகாகவும் தெளிவுடனும் விளக்குகின்றனர்.
ஹிரண்யாட்சனுடைய அக்கிரமத்தால் பலவிதமான லோகங்களிலும் குரோத, துரோக, விரோத, பகைமை எண்ணங்களே பரவிக் கிடந்தன. பரவெளியில் இத்தகைய அசுர சக்திகள் விரவி நின்றமையால் மஹரிஷிகளாலும், யோகியராலும் உலக நன்மைக்காகச் சாந்தமுடன் தியானத்தையோ, பூஜைகளையோ கடைபிடிக்க இயலவில்லை. சரியான நேரத்தில், பரிபூரணமாகப் பூஜைகளை நிறைவேற்ற இயலாமல் அவர்கள் தங்கள் கடமையிலிருந்து தவறியவர்களாகிப் பல சாபங்களுக்கும் ஆளாகினர். இவ்வரக்க சக்திகளை எதிர்க்க வேண்டுமாயின் பெருந் தபோ பலன்களைச் செலவழித்தாக வேண்டுமே! அருந்தவத்தில் திளைக்கும் தவசிகளுக்கே இந்நிலை என்றால் சாதாரண பிரஜைகள் என் செய்வார்கள்? அவர்களோ தீயசக்திகளை வன்மையாக எதிர்க்கும் புண்ய சக்தியின்றி மாயையிற் சிக்குண்டு தவறான வாழ்க்கை முறைகளில் ஈடுபடலாயினர்.
ஓர் அழுகிய மாம்பழமானது ஒரு கிடங்கு நிறைய உள்ள மாம்பழங்களையே கெடுத்து விடுவது போல  ஹிரண்யாட்சன் என்ற ஓர் அரக்கனால் பிரபஞ்சமே அல்லலுற்றதே! ஸ்ரீ நரசிம்ம அவதாரம் ஏற்பட்டது, ஹிரண்யாட்சனை வதம் செய்வதற்காக மட்டுமல்ல, இத்தெய்வாவதாரத் தோற்றத்திற்கு லட்சோப லட்சம் காரணங்கள் உண்டு! பண்பட்ட பக்தனாய், சுயநலமின்றி, சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் வாழ்ந்திட வேண்டும் என்பதை உணர்த்துவதும் ஸ்ரீ நரசிம்ம அவதாரமே!
ஹிரண்யாட்சன் கிளப்பிய அரக்க எண்ணங்கள், சக்திகள், குணங்கள் விஷக் கிருமிகளைப் போல் பல்கிப் பெருகலாயிற்றே! ஹிரண்ய வதம் முடிந்தாயிற்று, ஆனால் அவனால் விளைந்த சேதங்கள், முளைத்த மூர்க்க சக்திகள், கிளைத்த கெட்ட குணங்கள் இவற்றைக் களைவதென்றால் மஹரிஷிகள் தம் அனைத்துத் தவ சக்தியையன்றோ முன் வைத்திட வேண்டும்! பார்த்தார் நரசிம்ம மூர்த்தி, எங்கெல்லாம் அசுர சக்திகள் திரண்டு கிடந்தனவோ அங்கெல்லாம் தம் உக்ரத்தைப் பன்மடங்காக்கினார்!
எதற்காகவோ உக்ர நடனம்?
இதனால் ஏற்பட்ட உஷ்ணத்தில் தீய அசுர சக்திகள் பஸ்மமாயின! ஆயிரமாயிரம் மஹரிஷிகள் கூடி ஆயிரமாயிரம் ஆண்டுகள் தவம் புரிந்து அதனால் ஏற்படும் தவயோக சக்தியால்தான் அழியக் கூடிய வன்மையான அசுர தீய சக்திகளை, தம்முடைய விசேஷமான (வெற்றுக் கால்களுடனான) உக்ர நடனத்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்மமாக்கினார் நரசிம்ம மூர்த்தி!
ஒரு புறம் இத்தகைய லீலை! மறுபுறமோ நரசிம்ம மூர்த்தியின் உக்ரமும் மிகுந்திட அனைத்து லோகங்களுக்கும் அவருடைய உக்ரத்தைத் தாங்குகின்ற பூஜா/புண்ய/தர்ம சக்தியைப் பெறவில்லையாதலின் அதன் அக்னிப் பிழம்புத் தன்மையைத் தாங்க இயலாது, தேவர்களும் விண்ணுலக வாசிகளும் தத்தளித்தனர். காரணம், நரசிம்மரின் திருப்பாதங்கள் பட்ட இடமெங்கும் அக்னிப் பிரவாகம் புரண்டோடியதுதான்! இதன் பின்னரே ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தி தோன்றி அவரும் தம் வெற்றுப் பாதங்களுடன் அக்னி, ரெளத்ர மற்றும் பல தாண்டவ சக்திகள் நிறைந்த விசேஷமான சாலுவேச நடன கதியில் எங்கெல்லாம் நரசிம்மரின் திருப்பாதங்கள் பட்டனவோ அவற்றின் மேல் தம் திருப்பாதங்களைப் பதித்து உக்ர சக்தியைத் தம்முள் ஏற்றுத் தணித்தார்.
இவ்வாறு ஹரியின் பாதங்களும் ஹரனின் பாதங்களும் சேர்ந்த இடங்களிலெல்லாம் சரபேச சக்திகள் திரண்டன. இதனால்தான் ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை வழிபடச் செல்கையில் இல்லத்திலிருந்து பாதணிகளின்றி வெற்றுக் கால்களுடன்தான் சென்றிட வேண்டும் என்ற நியதி ஏற்பட்டது! இந்த ஒரு இறை வழிபாட்டின் விளக்கத்திற்குள் தான் எவ்வளவு விஸ்தாரமான விரிவுரை!
ஒவ்வொரு தெய்வ மூர்த்தியின் அனுகிரஹத்தைப் பெறுவதற்கும் விதவிதமான வழிபாடுகள் உண்டு!
சிவலிங்கத்தின் அருளைப் பெற தைலக் காப்பு, அபிஷேகம், அர்ச்சனை, தூபம், தீபம் போன்றவையும்
திருமாலின் அர்ச்சாவதார அருளைப் பெற புஷ்ப, ஆபரண, வஸ்திர அலங்காரம்,திருமஞ்சன முறையிலான விசேஷமான அபிஷேகம், தூப, தீப பூஜைகள், வடமொழி/ தமிழ்மறை கூட்டு சத்சங்கப் பாராயணம்,
முருகனின் திருவருளைப் பெற அபிஷேகம், காவடிகள், விரதம், வேல் அபிஷேகம் போன்றவையும்,
பிள்ளையாரின் பெருவரங்களைப் பெற ஹோமம், அன்னப் பிரசாதம்/அன்னதானம், அருகு அர்ச்சனை,  சந்தனம், பஞ்சாமிர்தம் போன்ற காப்பு பூஜைகள் என பலவிதமான வழிபாட்டு முறைகளுண்டு. அதாவது எல்லாம் வல்ல பரம்பொருளே மனிதனுடைய தேக, மன, உள்ள வளர்ச்சி/பக்குவத்திற்கு ஏற்பவும் பக்தி, மனோபாவம், சரணாகதி நிலைக்கேற்பவும் சூழ்நிலை, பொருளாதார நிலை, கர்ம வினைப் பகுப்புகளுக்கேற்பவும் வெவ்வேறு தெய்வ உருவங்களில் தோற்றமளிக்கின்றான்.
கங்கை, காவிரி போன்ற புண்ய நதித் தீர்த்தத்தில் துளஸி, வில்வம் வைத்திருந்து இதனையே ஸ்ரீ சரபேஸ்வர அபிஷேகத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.
அக்னி தத்வம் நிறைந்ததாகவும் உக்ர மூர்த்தங்களாவும் ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ சரபேஸ்வரர், ஸ்ரீ காளி, ஸ்ரீ வீரபத்ர மூர்த்திகள் விளங்குவதால் இத்தெய்வீக அக்னி சக்தியை நமக்கேற்ற வகையில் அருட் சக்தியாக மாற்றிப் பெறும் வகையில் சிலவிதமான எளிய வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். எனவே சரபேஸ்வரரின் தோற்றத்திற்கிணங்க, சைவ, வைணவ இறைத் தத்துவங்களின் இணைப்பாகவும் சீதள தேககாந்தியை அளித்து அக்னி மய தெய்வீக சக்தியைச் சாந்த மயமாக்கிப் பெறும் வண்ணமாகவே வில்வம், துளஸி கலந்த தீர்த்தம் இப்பூஜையில் பெருமை பெறுகின்றது.
ஸ்ரீ சரபேஸ்வரரை ஒவ்வொரு தினத்திற்குரிய பூவால் அர்ச்சித்து வர, காரிய சித்திகள் கூடுகின்றன.
ஞாயிறு - துளஸி + வில்வம்
திங்கள் - பாரிஜாதம் (பவளமல்லி)
செவ்வாய் - கொன்றை
புதன் - தாமரை
வியாழன் - கொன்றை, சாமந்தி
வெள்ளி - மல்லி, தும்பைப்பூ
சனி - கதம்பம் (மணமுள்ள பூக்கள் மட்டுமே)
பிரதோஷ காலம் - அருகம்புல், வில்வம்
தாமே சந்தனத்தை அரைத்து உருண்டைகளாக்கிப் பூக்களைப் போல் அர்ச்சிக்க வேண்டும். கோயிலுக்கே சந்தனக் கட்டை/கல்லை எடுத்துச் சென்று கங்கை, காவிரி போன்ற புனித நீரைக் கொண்டு பக்தர்களைக் கோயிலிலேயே சந்தனத்தை அரைக்கச் செய்து சந்தனத்தை அரைத்த மூன்று மணி நேரத்திற்குள் சுவாமிக்கு சார்த்திடுதல் /அர்ச்சித்தலே உத்தமமான பலன்களைத் தரும்.
ஸ்ரீ சரபேஸ்வர வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது! ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றியுள்ள தமிழிலானஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை அடிக்கடி ஓதி வருதலால் இனந்தெரியாத பீதி, பயம் அகலும். குடும்ப சச்சரவுகள் கணவனின் மூர்க்கத்தனம், மாமனார் / மாமியார்களின் கொடுமை, பாதுகாப்பின்மை, திடீர் மரணங்கள்/விபத்துகள் போன்றவை காரணமாக சில இல்லறப் பெண்கள் எப்போதும் என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்ற பீதியுடன் வாழ்கின்றனர். இவர்கள் கவச ஜலூஷருடைய ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை ஓதி, ஞாயிறு ராகுகாலம், தினசரிப் பிரதோஷ நேரம், அமாவாசை, பௌர்ணமியை ஒட்டிய பட்ச பிரதோஷ நாட்களில் ஸ்ரீ சரபேஸ்வரருக்குத் தாமே அரைத்த சந்தனமிட்டு வருதல் வேண்டும்.
ஸ்ரீ சரபேஸ்வர கவசம்
(ஸ்ரீ கவச ஜலூஷர் அருளியது)
ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியும், ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியும் பிரதோஷ நேரத்தில்தான் அவதரித்த தெய்வ மூர்த்திகள்! எனவே மாலையும் இரவும் சேர்கின்ற நேரத்தில் சரபேஸ்வர வழிபாட்டிற்குப் பன்மடங்கு பலன்கள் உண்டு! எனவே நித்ய பிரதோஷ நேரம் எனப்படும் தினசரி மாலை நேரத்தில் (4:30 – 6:30) இதனை ஓதிவருதலால் அடுக்கடுக்காய்த் துன்பங்கள் வந்திடினும் அவை நம் கர்மவினைகளின் பாற்பட்டவை என்பதை உணர்ந்து அவற்றைச் சமாளித்து ஆத்ம சக்தி பெறுவதற்கான இறையருள் கிட்டும்.
நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி என்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூரிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
பரம் பொருளே! சரபேசா! வாழி வாழியே!

ஸ்ரீஐயப்ப விரதம்

ஸ்ரீ ஐயப்ப பிரபாவம் நன்கு விருத்தியடைந்து பாரெங்கும் சாஸ்தாவின் வழிபாடு பல்கிப் பெருகி நகரங்கள் மட்டுமன்றிக் குக்கிராமங்களிலும் ஹரிஹர சுதனின் நாமம் குதூகலமாகக் கொழித்து வருவது கண்டு நாம் பரமானந்தம் அடைகின்றோம். இத்தொடரில் ஸ்ரீ ஐயப்ப விரதம்தனை மேன்மேலும் சிறப்புடன் அதற்குரித்தான கட்டுக் கோப்புகளுடன், இறை நியதிகளுடன் கடைபிடிப்பதற்காக, தற்போது இவ்விரத முறையில் பரந்து காணப்படுகின்ற விரத பங்க முறைகளைச் சுட்டிக் காட்டி அவற்றைக் களைவதற்கான முறைகளையும் இத்தொடரில் அளித்து வருகின்றோம். புனிதமான தெய்வ ஆராதனைகளில் சித்புருஷர்களால் உவப்புடன் விரத மஹா மூர்த்தியாகப் போற்றப்படும் ஸ்ரீ ஐயப்பனுக்கு உடலையும் உள்ளத்தையும் நன்முறையில் பக்குவப்படுத்திப் புனிதப்படுத்தும் கடுமையான விரத முறைகளே ப்ரீதி தருவதாகும் என்பதை உணர்தல் வேண்டும்.
ஸ்ரீ ஐயப்ப விரதமென்பது தற்போது ஒரு பிரார்த்தனையாகவும், வருடந்தோறும் தொடரும் விரதமாகவும் இருந்து வருகின்றது. இத்தனை முறை சபரிமலைக்கு விரதத்தோடு பெருவழியில் சென்று வந்துள்ளேன் என்று பெருமையுடன் கூறிக் கொள்வோருமுண்டு.

ஆரியங்காவு

உண்மையான தெய்வீக பக்தியில் இவை அகங்காரத்தின்பாற் பட்டதாகவே கருதப்படுகிறது. எத்தனை முறை சென்றாலும் இன்னமும் ஸ்ரீ ஐயப்பன் அழைப்பதால் மேன்மேலும் உத்தமமான விரத முறைகளைக் கடைபிடித்துச் செல்லுதல் வேண்டும் என்பதே சாஸ்தாவின் இறையாணை என்று ஏற்பதே சரியான நிலை!
பிரார்த்தனையாகவோ, வருடாந்திர விரதமாகவோ சபரிமலைக்குப் புனிதமான விரத நெறி முறைகளை நன்கு ஏற்றுக் கடைபிடித்துச் சென்றிடில், கர்மவினைக் கழிப்பிற்கும் மன சுத்திக்கும், அங்கங்களைப் புனிதப்படுத்திக் கொள்வதற்கும் தீய சக்திகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சிறந்த ரட்சையாகவும் இல்லறத்திற்குரிய தவமுறைகளைச் சீரிய முறையில் தொடர்வதற்கான இறையருளைப் பெற்றுத் தருவதாகவும், வாழ்க்கைத் துன்பங்களை நம் கர்மாக்களின் விளைவுகளாகப் பக்குவமுடன் ஏற்று அவற்றை எதிர்நோக்குவதற்கான மனோதிடத்தையும் தீர்கமான வைராக்யத்தையும் தருவதாகவும் அமைந்திருப்பதே ஸ்ரீ ஐயப்ப விரதமாகும்!
நம் உடலில் உள்ள 72000 நாடி நரம்புகளையும் சுத்திகரித்து, அவற்றை இறைநெறிகளின் பால் செல்லுமாறு ஆக்கப்படுத்துவதே இவ்விரதத்தின் தனித் தன்மையாகும்.
உணவுக் கட்டுப்பாடு, அந்தந்தக் கிழமைக்கேற்ற விசேஷமான உணவு முறை, கடும் நடைப் பயணம், கருமை/நீல நிற ஆடைகளின் மருத்துவ/தெய்வீக குணங்கள், மூன்று வேளை நீராடுதல், வெறும் தரையிற் குறித்த திசைகளில் படுத்தல், முடி வளர்த்தலின் ஆன்மீக ரகசியங்கள், எப்போதும், குறிப்பாக விரத்தின் போது காதில் கடுக்கன்களை அணிதல், தினசரி ஆலய வழிபாடுகள், சபரிமலை வனங்களில் உள்ள ஸ்வர்ண காந்தி ரேகைகளைப் பரப்பும் பாறைகளின், மற்றும் அதியற்புதமான மூலிகைகளின் மருத்துவ குணவாடகங்கள் இவ்வாறாக ஸ்ரீ ஐயப்ப விரதமானது பிறவிப் பிணியை நீக்குவதற்கான எத்தனையோ அருள் வழிமுறைகளையும் தந்து கார்ய சித்திகளையும் அளித்து மிகச் சிறந்த தெய்வ வழிபாடுகளுள் ஒன்றாக ஸ்ரீ ஐயப்ப விரதம் எல்லாம் வல்ல பரம் பொருளாலேயே வழங்கப்பட்டுச் சிறப்பிடம் பெறுகின்றது,
இத்தகைய தாத்பர்யங்களும் இவற்றிற்கும் மேலாக எண்ணற்ற மஹிமைகளைக் கொண்டதே ஸ்ரீ ஐயப்ப விரதம் என்பதை உணர்ந்தால்தான் இத்தகைய பவித்ரமான இவ்விரதத் தில் எவ்வளவு அசட்டையாக, அலட்சியமாக இருந்து வந்துள்ளோம். ஏதோ காலை, மாலையில் மட்டும் கறுப்பு/நீல ஆடை, ஆபீஸுக்கு பாண்ட், சட்டை மாட்டி இவ்வாறாக இவ்விரதத்தில் உள்ள பங்கங்கள் எல்லாவற்றையும் உணர்ந்து, தெளிந்து ஸ்ரீ ஐயப்பனிடம் மனதார மன்னிப்பு வேண்டிச் சரணடைந்து திருந்திடுக!
இத்தகைய கடுமையான விரத நெறிமுறைகளைச் சரிவர கடைபிடிக்க இயலவில்லையென்றால் அரைகுறையாக, ஏனோதானோவென்று சபரிமலைக்குச் சென்றிடாமல் ''ஐயப்பா! உன்னுடைய விரதநெறி முறைகளை முழுமையாகக் கடைபிடிப்பதற்கான பக்குவம் அடியேனுக்கு இன்னமும் வரவில்லை !” என்று தெளிவுற்று பரிபூரணமான விரத நெறிமுறைகளைக் கையாண்டு ஸ்ரீ ஐயப்ப ஜோதி தரிசனம் பெறுவோம், இயலாதெனில் அதற்குரிய பக்குவத்தை இறைவன் அருளும் வரை காத்திருப்போம் என்ற தீர்கமான முடிவைப் பெற்றிடுக!

ஆரியங்காவு

தினசரி ஆலய தரிசனமுறை
ஸ்ரீ ஐயப்ப விரதத்தை ஏற்றுள்ளோர் தினமும் குறைந்தது மூன்று மைல்கள் தூரம் நடந்து ஆலய தரிசனங்களை மேற்கொண்டிட வேண்டும்.
ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் தாங்கள் மேற்கொண்டுள்ள புனிதமான விரதத்தின்போது எக்காரணம் கொண்டும் காலணிகள் அணிதலை தவிர்த்திட வேண்டும். நாங்கள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமே? பல முக்யஸ்தர்களைச் சந்திக்க நேரிடுமே, அப்போது வெற்றுக் கால்களுடன் அவர்கள் முன் செல்ல முடியுமா என்ற கேள்விகள் மனதில் எழுகின்றன அல்லவா?
தற்கால மனிதன் பரிபூரண தெய்வ நம்பிக்கையுடன், முறையான விரத அனுஷ்டானங்கள், இறைத்தொண்டுகள் மற்றும் திருப்பணிகளைச் செய்வதைவிடப் போலியான மற்றும் பகட்டான கௌரவத்திற்கும் வேஷத்திற்குமே முக்கியத்துவம் அளிக்கின்றான். இதனால் இறையருளால் சித்தர்களும், மஹான்களும் ஏற்படுத்தியுள்ள விரதநெறி முறைகளின் மகத்துவத்தை உணராது. மாயையில் சிக்கித் தவிக்கின்றான்.
வாழ்க்கையில் ஒரு முறையேனும் பரிபூரணமாக ஐயப்ப விரதத்தை முறையாய் அனுஷ்டிப்பதால் கிடைக்கக் கூடிய இறை அனுக்கிரஹத்தையும், புண்ய சக்தியையும் அறிந்தால்தான், ஐயப்ப பக்தர்கள் விரதத்தின் மேன்மையை உணர்வர். எத்தனையோ ஆயிரம் ஆண்டுத் தவங்களுக்கு ஈடானது இது!
வெற்றுக் கால்களுடன் விரதநெறி பூண்டு நடக்கும்போது, பாதங்களிலும், கைகளிலும் மருதாணி இட்டு நடந்தால் மேலும் அற்புத தெய்வீக சக்திகளைக் கூட்டித் தரும். மருதாணி அற்புதமான தெய்வீக மூலிகை! மருதாணிச் சிவப்பிற்கு தெய்வீக சக்திகளை, மந்திர சக்திகளை ஈர்க்கும் சக்தி உண்டு!
சென்ற சில மாத ஸ்ரீ அகஸ்திய விஜய இதழ்களில் ஸ்ரீ ஐயப்ப விரதங்களில் கடைபிடிக்க வேண்டிய உணவு கட்டுப்பாடு நியதிகளை விவரித்திருந்தோம். தற்போது ஒவ்வொரு கிழமைகளிலும் பின்பற்ற வேண்டிய பிரதட்சிண வழிபாட்டுமுறைகளை அறிவோம்.
பொதுவாக ஐயப்ப விரதமிருப்போர் எங்கு சென்றிடினும் வெற்றுக் கால்களுடன் நடக்கும் போது ஸ்ரீ பூமாதேவ்யை நம: ஸ்ரீ பூமாதேவியே போற்றி என்ற மந்திரத்தைத் தொடர்ந்து ஜபித்தவாறு செல்லுவதால் கால்கள் புனிதம் பெறுகின்றன. (இம்மந்திர சக்தியானது) நடக்கும்பொழுது தரையில் இருக்கக் கூடிய சில துர்சக்திகள் (கழிப்பு, பில்லி சூன்ய சக்திகள் etc.,) அவர்களை பாதிக்காமல் பாதுகாக்கின்றது. இது மட்டுமல்லாது அவர்கள் நடந்து செல்லும் இடங்கள் முழுவதும் விரதத்தின் புனிதத்துவத்தை அவர்களுடைய கால்கள் மூலம் பரப்பும் ஓர் அற்புத சமுதாயப் பூஜையையும் ஐயப்ப பக்தர்கள் ஆற்றுகின்றனர். இதனால் ஐயப்ப விரதப் பலன்கள் விரதமிருப்பவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பல்கிப் பெருகி அருள்பாலிக்கின்றது. இந்நிலையில் நன்முறையில் விரதமிருந்தால் தானே விரதத்தின் புண்யசக்திகள் உடலில் சேரும்!
திங்கள் கிழமைக்கான ஆலயவழிபாடு
தினந்தோறும் குறைந்தது மூன்று மைல்கள் தூரமாவது கால்நடையாகச் சென்று ஏதேனும் ஒரு ஆலயத்தை தரிசனம் செய்திடல் வேண்டும் என்று கூறினோமல்லவா! இன்று குறைந்தது இருபது முறையேனும் அடிப்பிரதட்சிணம் செய்து வலம் வருதல் வேண்டும். அடிப் பிரதட்சிணமெனில் ஒரு அடியை ஒட்டி அடுத்த அடியை எடுத்து வைப்பதாகும். சோமசுந்தராய நம: என்று ஓதி வலம் வருக! இன்று ஆலயங்களில் உள்ள அரசு, ஆல், வேம்பு, வில்வம் போன்ற புனித விருட்சங்களைச் சுற்றி அடிப் பிரதட்சிணம் வருதலால் விரத காலங்களில் சினம், வருத்தத்தை உருவாக்கக் கூடிய சம்பவங்களின் விளைவுகளிலிருந்து தற்காத்துக் கொண்டு விரதத்தின் புனிதத்தைக் காத்திடலாம்.
செவ்வாய் கிழமைக்கான ஆலய வழிபாடு
செவ்வாய்க் கிழமைகளில் ஏதேனும் ஒரு மலைக் கோயிலையோ அல்லது படிகட்டுக் கோயிலையோ வலம் வரவேண்டும், (இறைவனின் சந்நதிகள் பூமியிலிருந்து ஓரளவு உயரத்தில் அமைந்திருக்கும் உதாரணம் : வரதராஜபெருமாள் கோயில் காஞ்சீபுரம், உய்யக்கொண்டான்மலை திருச்சி) இவ்வாலயங்களில் 36 முறை ஏறி இறங்கிப் படிப் பிரதட்சிணம் செய்து வணங்கிடல் வேண்டும். படிப்பிரதட்சிணம் என்றால் கீழிருந்து ஒரு முறை படிகளில் ஏறி இறைவனை தரிசித்தலாகும். இவ்வாறு ஐயப்ப விரதமிருப்போர் செய்திடில் அவர்கள் உடலில் அதோமுக சாஸ்தவாருணம் என்ற அற்புத ஆன்மீகச் சக்தி உடலில் பிரவேசம் கொள்கிறது. இந்த விசேஷமான தெய்வீக சக்தி எப்போதும் பரவெளியில் பரவியிருக்கும் தீய எண்ணங்களால் ஏற்படும் மாசினை (pollution) கட்டுப்படுத்தவும், தூய்மைப்படுத்தவும் பெரிதும் உதவி புரிகிறது. படிக்கட்டுக் கோயில்களில் நட்சத்திர மண்டலங்களின் ஆகர்ஷண சக்தி மிகுந்திருக்கும்.
தற்போது உலக அளவில் பரவலாக அஞ்சப்படும் பரவெளி மாசினால் (Pollution) வரும் தீமைகளுக்கு என்னே ஒரு அற்புத ஆன்மீகத் தீர்வு ஐயப்ப விரதத்தின் அளப்பரிய சக்தியால்!
புதன் கிழமைக்கான ஆலய வழிபாடு
இன்று விநாயக மூர்த்திக்கோ அல்லது ஐயப்ப மூர்த்திக்கோ சந்நிதியின் முன் குறைந்தது 36 முறை தோப்புக்கரணம் இடுதல் வேண்டும். இவ்வாறு தோப்புக்கரணம் இடுகையில் காதுகளில் கடுக்கன் அணிந்திருத்தல் சிறப்புடையதாம், பலன்களை அள்ளித் தரும்.
கடுக்கனுடன் தோப்புக்கரணம் இடுகையில் காதுகளில் உள்ள கரணஅமிர்த நாளங்கள் தூண்டப்படுவதால் தலையில் உள்ள கபால அமிர்த நரம்புகள் ஆக்கம் அடைந்து அமிர்த தாரைகள் சுரக்க வழிவகுக்கிறது. இவ்வமிர்த தாரைகளின் இயல்பானது மனதை எப்போதும் தீய சக்திகளின் பாதிப்பிலிருந்து பாதுகாத்துத் தொடர்ந்து நல்லெண்ண ஓட்டங்களையே மனதில் நிலைநிறுத்தும். இதனால் விரதசக்தி மேன் மேலும் புனிதமடைகின்றது.
வியாழக் கிழமைக்கான ஆலயவழிபாடு
வியாழக்கிழமைதோறும் ஐயப்ப பக்தர்கள் சித்தர்கள் அருளியுள்ள வலிய அங்குஷ்டப் பிரதட்சிணம் என்ற முறையில் பிரதட்சிணம் செய்திடல் வேண்டும். அங்குஷ்டப் பிரதட்சிணம் என்றிடில் குதிகால்களைத் தூக்கி முன் கால்களை மட்டும் தரையில் பதித்த, வண்ணம் நடந்து பிரதட்சிணம் செய்வதேயாகும். இதனால் பூமியின் ஆகர்ஷணச் சக்தியை தேகத்தில் சமநிலைப்படுத்தும் வண்ணம் ஐந்து புலன்களும் கட்டுப்பாட்டுடன் பணியாற்றும். 
பொதுவாக கண்களாலும் கைகளாலும் மற்றப் புலன்களாலும் கட்டுப்பாட்டை இழக்கும் மனதிற்கு அமைதியையும் பெற்றுத் தரும் மிகவும் சக்திவாய்ந்த பிரதட்சிணமாகும். இப்பிரதட்சிண முறையில் குறைந்தது 108 அடி தூரமேனும் நடத்தல் வேண்டும்.
பெருவழிப் பாதைக்கு முன்னோடியாய் அமைந்திருக்கும் அரிய பிரதட்சிணமிது.
வெள்ளி கிழமைக்கான ஆலயவழிபாடு
ஐயப்ப விரதமேற்றோர் இன்று கோயிலில் நமஸ்காரப் பிரதட்சிணம் என்ற முறையில் பிரதட்சிணம் வருதல் வேண்டும். சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்து இந்த நமஸ்காரத்தில் தலையை பதித்த இடத்தில் பாதங்கள் வைத்து மீண்டும் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தல் வேண்டும். தொடர் வணக்கப் பிரதட்சிணமிது! இது போன்று நமஸ்கரித்தலை சித்தர்களின் வழக்கில் சிலா பர்த்தி பிரதட்சிணம் என வழங்கப்படுகிறது.
இப்பிரதட்சிணத்தின் பலன்களாக தலை முதல் கால் வரை பதிந்துள்ள தோஷங்களும் மற்றும் தோலின் மேல் படிந்துள்ள தீவினைப் படிவுகளும் அகற்றப் பெற்று புனிதம் அடையும்.

கருத்தில் ஊறும் கருணை ஊற்று

உங்களுடைய பொதுவான பிரச்னைகளுக்கான தீர்வுகள்
பெரியோரின் அருள் வாக்கிற்கும் அருட் செயலுக்கும் ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு. சற்குருவோ, மஹானோ எந்த மந்திரத்தை, பிரசாதத்தை அளித்தாலும் அதற்கு விசேஷமான சக்தி கூடுகின்றது.
மாதந்தோறும் எங்களுக்கு வருகின்ற எண்ணற்ற கடிதங்கள் அனைத்தையும், நம் குருமங்களகந்தர்வா ஆகிய ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளே தனிப்பட்ட முறையில், விசேஷ கவனம் செலுத்தி, படித்துப் பார்த்துப் பலவற்றிற்கும் பதில் மொழியை அருள் மொழியாக வழங்குகின்றார்.
ரிப்ளை கார்டோ, ஸ்டாம்பு ஒட்டப்பட்ட கவரோ அனுப்பப்படாத நிலையில், ஆயிரக் கணக்கானோருக்கு பதிலளிப்பதில் எங்களுக்குப் பெரும் பொருட் செலவாவதோடு தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்னைகளின் தீர்வுகளைத் தபாலில் பதிலாக அனுப்புவதென்பது இயலாத காரியமும் ஆகிவிடுகின்றது. விவாக ரத்து,  குடும்ப விவகாரங்கள் எனத் தனிப்பட்ட விஷயங்களுக்குக் கடிதங்கள் மூலமாக பதிலளிப்பதும் உசிதம் அல்ல!
அன்பர்களின் பொதுவான பிரச்னைகளுக்கும், சந்தேகங்களுக்கும் குருவின் கருணையினால் இங்கு அவர் தம் விளக்கங்களை அளிக்கின்றோம்.
என் செய்வது சுவாமி படங்களை!
பலரும் தங்கள் வீட்டில் உள்ள பழைய, கிழிந்து/உடைந்து போன சுவாமி படங்களை என்ன செய்வது என்று கேட்டுள்ளனர்.
இயன்ற வரையில் பழைய படங்களைச் சீர் செய்து புதுக் கண்ணாடி பிரேமில் பொருத்திடுக! ஏனெனில் மூதாதையர்களும், வீட்டுப் பெரியோர்களும் பூஜித்து வந்த பொருட்களெனில் அவற்றில் புண்ய சக்தி நிறைந்திருக்கும். இத்தகைய புண்ய சக்திக்கு காலப் பிரமாண சக்தி என்று பெயர் ! காலம் காலமாக, ஆண்டு தோறும் நம்முடைய இல்லத்தில் ஏற்படும் துன்பங்களைத் தீர்ப்பற்காக இக்கால பிரமாண புண்ய சக்தியானது பழைய பூஜா திரவியங்களிலிருந்தும், பூஜா பொருட்களிலிருந்ததும் ஒளிக் கிரணங்களாகச் சூட்சுமாக,  வெளிவந்து கொண்டிருக்கும்.
ஆனால் மிகவும் சிதிலமடைந்து விட்ட பழைய சுவாமி படங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
புனிதமான இவற்றைக் கடற்கரைக்கு எடுத்துச் சென்று, கடலினுள் சற்று உள்ளே, முழங்கால் அளவிற்கு மேல் நீர்ப்பகுதி உள்ள இடத்தில், கனமான பொருட்களுடன் (புதுத் துணிப்பை, துணி முடிச்சு) சேர்த்து நீரினுள் வைத்திட வேண்டும். இதனையே விநாயகர் பூஜையின் போது விஸர்ஜனம் என்று கூறுகின்றோமல்லவா! அதேபோல இத்தகைய பழைய சுவாமி படங்களை புனிதமான கடல் நீரில் விஸர்ஜனம் செய்வதே மிகவும் உத்தமமானதாகும். குறிப்பாக, தேய்பிறையில், கேட்டை, ஆயில்யம் நட்சத்திரங்களில் இத்தகைய படங்களைக் கடல் நீரில் விஸர்ஜனம் செய்வது சிறப்புடையதாகும். இதேபோன்று பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட பழைய மணிகள், சங்குகள், உடைந்த ருத்ராட்சங்கள், உதிர்ந்த துளசி மணி மாலைகள், தாமரை மணி மாலைகள், பழைய பூணூல் போன்றவற்றையும் கடலிலேயே விஸர்ஜனம் செய்துவிடுதல் வேண்டும். கங்கை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஜீவ நதிகளின் அருகே வசிப்போர் ஜீவநதியில் விஸர்ஜனத்தைச் செய்திடலாம்.
இளமையில் இறைமை!
சிறுவர்களையும், சிறுமியரையும் எவ்வாறு, சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியில் நாட்டம் செலுத்துமாறு ஊக்குவிப்பது என்று கேட்டு ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன.
உங்கள் குழந்தைகளைத் தினந்தோறும் காலையில் நீராடிய பின்னர், சந்தனத்தை அரைத்து ஐந்தாறு உருண்டைகளாக ஆக்கிக் கொண்டு, அருகில் உள்ள பிள்ளையாருக்கு/ஏதேனும் தெய்வ மூர்த்திக்கு இட்டுவரச் செய்யுங்கள். சந்தனைத்தை அரைக்கும்போது அதற்குரித்தான மந்திரங்களையோ அல்லது ராம் ராம், சிவ சிவ, கோவிந்தா, முருகா என்று இறை நாமத்தை ஓதியவாறு சந்தனத்தை அரைக்கச் செய்து உங்கள் இல்லத்தின் அருகில் உள்ள சுவாமிக்கு இட்டு வரச் செய்தால் அவர்களுக்கு இறைபக்தி தானாகவே உடலிலும் உள்ளத்திலும் ஒளிரும்.
இதற்காக நூறோ, இருநூறோ செலவு செய்து ஒரு நல்ல சந்தனக் கட்டையையும் சந்தனக் கல்லையும் வாங்கி வைப்பதில் என்ன சிரமம் இருக்கிறது?
வருடம் தோறும், மதுராந்தகத்தில் ஸ்ரீஏரிகாத்த ராமருக்கு சந்தனம் சார்த்துவதற்காகவும், சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தில், சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் மட்டும் சார்த்தப்படுகின்ற சந்தனக் காப்பிற்காகவும் சந்தனம் அரைக்கச் சொல்லி நாம் வருடம் தோறும் அன்பர்களை வேண்டி வருகின்றோம்.
இவை ஆண்டுதோறும் நிகழ்கின்ற புனித நிகழ்ச்சிகளாக இருந்தும் கூட, சந்தனக் காப்புப் பூஜைக்கு முதல் நாளோ, சில நாட்களுக்கு முன்னராகத்தான் அனவரும் வேக வேகமாக, மிகவும் சிரத்தையுடன் சந்தனக் கல்லையோ சந்தனக் கட்டையையோ தேடுகின்ற பழக்கம் இன்றும் நிலவி வருகின்றது!
சந்தனம் தந்திடும் மங்களம்!
ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறையில் சந்தனக் கல்லும், சந்தனக் கட்டையும் அவசியம் இருந்தாக வேண்டும். ஏனென்றால் அமாவாசை, பௌர்ணமி போன்ற பித்ருக்களுக்குரிய நாட்களில், பித்ருக்கள், நம் வீட்டிற்கு வருகை தருகையில், அவர்கள் மிகவும் புனிதமான, பவித்ரமான பொருட்களில்தான் ஆவாஹனமாகி தங்களுடைய ஆசிர்வாத சக்தியைப் பதித்துச் செல்கின்றனர். இவ்வகையில் சந்தனக் கட்டையும் சந்தனக் கல்லும் சேர்ந்து இருக்கும் போது அதற்கு தெய்வீகத் தன்மை கூடுகின்றது. இரண்டையும் பிரித்து வைத்தால் கூடாது.
நாம் பன்முறை ஸ்ரீ அகஸ்தியவிஜயத்தில் கூறி வருவதைப் போல பூலோகத்திலும், தேவலோகங்களிலும் இரண்டிலுமே காணப்படுகின்ற சில விருட்சங்களில், மூலிகைகளில், சந்தனம், வில்வம், துளசி, பவளமல்லி, தேங்காய் போன்றவை பூலோக, தேவலோகங்களில் பூஜைக்காகத் தேவாதி தேவர்களாலும், மனிதர்களாலும் பயன்படுத்தப்படுகின்ற பொதுப்படையான பூஜைப் பொருட்கள். இவை மிகவும் தெய்வீக சக்தியடையவை. எனவேதான் தங்களுடைய லோகங்களில் மிகவும் பரிச்சயமான பூஜைக்குரிய புனிதப் பொருட்களில் தேவர்களோ பித்ருக்களோ கந்தர்வர்களோ மிகவும் எளிதில் ஆவாஹனமாகி நமக்கு ஆசியைத் தந்தருள்கின்றனர்.
ஜாதகம் ஒரு புனிதமான விதி பத்திரமே
கிருஹப்ரவேசம், உபநயனம், திருமணம் போன்றவற்றுக்கு நல்ல நாள் குறிப்பதற்காகவும், ஜாதகப் பொருத்தம் பார்ப்பதற்காகவும் பலரும் ஜாதகங்களை எங்கள் அலுவலகத்திற்கு அனுப்புகின்றனர். பொதுவாக ஜாதகம் பார்ப்பது என்பது மிகவும் சிரத்தையுடன், இறை பக்தியுடன் செய்யப்பட வேண்டியதாகும். அனைவருடைய ஜாதகங்களையும் கணித்துப் பலா பலன்களை எழுதுவதென்றால் அதற்கே எங்களுக்கு நேரம் சரியாக இருக்கும். அது எங்களுக்குரித்தான தொழிலுமல்ல.
ஆனால் எந்த நல்ல காரியத்தையும், ஜாதகப் பூர்வமாக நன்கு கணித்துச் செய்வதே சிறப்பானது என்று நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். ஜாதகத்தைக் கணிப்பதற்காக சோதிடரிடம் அதை எடுத்துச் செல்லும் போது சில குறிப்பிட்ட விசேஷமான அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். இவற்றைச் சகுன சாஸ்திரத்தில் சிறப்பாகப் பெரியவர்கள் விளக்கியுள்ளனர்! அதாவது கருப்பு மையிலோ (ink)அல்லது கருப்பு படிகின்ற Xerox படிவமாகவோ ஜாதகம் இருத்தல் கூடாது. நீல நிற/பச்சை நிறமையில் ஜாதகத்தை எழுதுவது சிறப்புடையது.
கருப்பு நிற/சிகப்பு நிறங்களை ஜாதகத்தில் கண்டிப்பாக தவிர்க்கவும். நீலம், பச்சை போன்ற பிற நிறங்கள் ஏற்புடையவை, மேலும் ஜாதகத்திற்குரிய பேப்பரில் சிவப்பு மையை நான்கு மூலைகளிலும் தடவுதல் கூடாது. மஞ்சள் அல்லது குங்குமத்தைத்தான் இடவேண்டும். முதலில் பிள்ளையார் சுழியை இட்டுப் பின்னர் உங்கள் குலதெய்வத்தின பெயரை எழுதித்தான் ஜாதகத்தின் நகலை எடுக்க வேண்டும்.
ஜாதகம் என்பது நம்முடைய விதிச் சக்கரத்தின் பிம்பமாக, அமைப்பாக இருப்பதால் அதனை மிகவும் பவித்ரமாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். நாலாகவோ எட்டாகவோ மடித்துப் பையில் அலட்சியமாக வைத்துக் கொள்ளக் கூடாது! பத்திரமாக ஒரு கவரில் /பையில் போட்டுப் பாதுகாக்க வேண்டும். உண்மையில் ஒவ்வொரு வீட்டிலும், குடும்பத் தலைவனே, கணவனே கண் கண்ட தெய்வமாக விளங்குவதால் அவரவர் தம்முடைய கணவனின் ஜாதக்தைத் தங்க, வெள்ளி, செப்பு தகடுகளில் பொறித்து அதற்குத் தினமும் மஞ்சள், குங்குமம், சந்தனப் பொட்டிட்டுப் பூஜித்து வருதல் சிறப்பானதாகும்.
ஒருவருடத்தில் ஜாதகத்தைக் கொடுக்கும் பொழுது கிழக்கு அல்லது வடக்கு திக்கு நோக்கியே அமர்ந்து கொடுத்தல் வேண்டும். ராகுகாலம், எமகண்டம் போன்றவற்றைப் பாராது, நினைத்தவுடன் ஜாதகத்தை எடுத்துத் தருதல் என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். ஒவ்வொருவரும், தனக்கு எந்த கிரஹத்தின் தசை மற்றும் புக்தி நடக்கின்றது என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தசை, புக்தி காலங்களில் அந்தந்த கிரஹ மூர்த்திக்குரிய நாமங்களை எப்போதும் ஓதி வர வேண்டும். குறிப்பாக ஒருவருக்கு குரு தசையும் சந்திர புக்தியும் நடக்குமானால் ஒவ்வொரு நாளும் வருகின்ற குரு ஹோரையில் ஓம் குருவே போற்றி, ஓம் குருவே நம: என்று குருவை தியானித்தும் சந்திர ஹோரையில் ஓம் சந்திராய நம : சந்திரனே போற்றி என்றும் துதித்து வருதல் வேண்டும். இது மிகவும் எளிமையான வழிபாடு! அவரவருக்குரிய கிரஹ தசை, புக்திகளை அறிந்து அந்தந்த கிரஹத்திற்குரிய தலங்களுக்கு, நிச்சயமாக ஆண்டிற்கு ஒரு முறையேனும் சென்று முறையாக வழிபட்டு வர வேண்டும்.

சந்திரசேகரபுரம்

உதாரணமாக ஒருவருக்கு குரு தசை நடக்குமானால் காஞ்சிபுரம் அருகேயுள்ள கோவிந்தவாடியிலோ அல்லது கும்பகோணம் அருகேயுள்ள ஆலங்குடியிலோ குரு பகவானாகிய ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்குரிய முறையான வழிபாடுகளை ஒரு முறையேனும் மேற்கொள்ள வேண்டும். அதேபோல சந்திர புக்தி, சந்திர தசை நடக்கும் போது சந்திரனுக்குரிய அற்புத ஸ்தலங்களாகிய திங்களூர், மதுரை, திருப்பதி, சந்திரசேகரபுரம் போன்ற இடங்களில் சந்திர பகவானுக்குரிய முறையான வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வருவோமேயானால் ஒவ்வொருவருக்கும் எந்த தசை, புக்தி நடக்கின்றது என்பதை அவரவரே அறிந்து மனப்பூர்வமாக அந்த நினைவிலேயே, கவனத்திலேயே தம் வாழ்க்கையை பக்தியுடன் நன்முறையில் நடத்துவர்.
துன்பங்கள் மிகும்போது வேகவேகமாக ஒரு ஜோசியரை அண்டி, அவரிடம் தனக்கு என்ன தசை, என்ன புக்தி நடக்கிறது என்று கேட்டுக் கொள்வதை விட, அவரவர், தாமே இதனை நித்ய வழிபாடாக மேற்கொண்டால் கிரஹங்களைப் பற்றிய ஓர் உணர்வு, எப்போதும் மனதிலும் உள்ளத்திலும் நிறைந்திருக்குமல்லவா!
நடக்கின்ற தசாபுக்திக்கேற்ப கிரஹவழிபாடுகள் மாறும். உதாரணமாக, குரு தசையில், குரு புக்திக்கு நின்ற நிலையில் உள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பூஜையும், குரு தசையில் சந்திர புக்திக்கு, ரிஷப வாகன வழிபாடும், குரு தசையில் புதன் புத்திக்கு, வீணையேந்திய தட்சிணாமூர்த்தி வழிபாடும் சிறப்புடையவை!
இவ்விளக்கங்களைத் தக்க சற்குருவை நாடி அறிந்திடுக!
முதல் ஜாதகம் கிரஹ லிங்கத்திற்கே!
முதன் முதலாக ஜாதகம் கணித்தவுடன் ஜாதகத்தைத் தஞ்சை பிருஹதீஸ்வரர் ஆலயத்தில் லிங்க வடிவில் உள்ள நவகிரஹ மூர்த்திகளிடம் சமர்ப்பித்து, கையில் ஏற்றிய அகல் விளக்குடன் ஒன்பது முறை வலம் வருதல் வேண்டும். ஏனெனில் விதியை இறைவன் சூட்சுமமாக, தலைச் சுழியாகவும், கை, கால் ரேகைகளாகவும், அங்க லட்சணங்களாகவும், ஜாதகமாகவும் பலவழிகளில் புலப்படுத்துகின்றான்.
கை ரேகைகள், ஜோதி ஸ்பரிசம் பெற்று தீர்க ஜாதக அம்சங்கள் பெறவே இந்த முதல் ஜாதக வழிபாடு!.நவகிரஹங்கள் லிங்கங்களாக அமர்ந்து விசேஷமாக அருள் பாலிக்கின்ற தலமே தஞ்சை பிருஹதீஸ்வரர் ஆலயமாகும். இது காணக் கிடைக்காத காட்சி! இந்த நவகிரஹ லிங்க மூர்த்திகளில் சந்திரபகவான் தனித்து விசேஷத் தன்மையுடன் காணப்படுவதாலும் சந்திர பகவானுடைய தேவிகளே 27 நட்சத்திரமூர்த்திகள் ஆனமையினாலும் அவரவரர் தம்முடைய ஜாதகத்தை எடுத்துச் சென்று தஞ்சாவூர் நவகிரஹ லிங்க மூர்த்திகளிடம் சமர்ப்பித்து, நவகிரஹலிங்க அருளைப் பெற்றிட வேண்டும்.
பிரசாதத் தேங்காய் மூடி ரகசியம்!
கோயிலில் தேங்காயை உடைத்தவுடன் பிரசாதமாக எந்த மூடியைப் பெறுவது என்று பலருக்கும் ஐயம் ஏற்படும். தேங்காயின் கண்கள் உள்ள பகுதியைப் பிரசாதமாகப் பெறுவதுதான் சிறப்புடையது. உடைத்த தேங்காயில் தேங்காய்ப்பூ இருக்குமானால் மிகவும் நல்ல சகுனமாகும். ஒற்றைக் கண் தேங்காய் மிகவும் சிறப்பான அருளைத் தரும். செல்வ கடாட்சத்திற்கு வழிவகுக்கும். தேங்காய் உடைகின்ற பாணியை வைத்துக் கூட சகுனத்தை கூறி விடலாம். சரியாக இரண்டு அரை வட்டமாக உடைந்துள்ளதா அல்லது மேலும் கீழும் சிதறல்களுடன் உடைந்துள்ளதா அல்லது தேங்காய் ஓடு பிரியும்படி உடைகிறதா என்று பலவகையான உடையும் முறைகள் உண்டு, தேங்காய் உடையும் முறையைப் பொறுத்து அருள் வாக்கு கூறும் காரிய சதகம் என்ற சகுன சாஸ்திரக் கலை மிகவும் அற்புதமான சோதிடக் கலையாகும்.
கருப்பெனில் வெறுப்பா?

நவகிரக மூர்த்திகள்
தஞ்சை பெரியகோயில்

கருப்பு நிற ஆடையை அணிந்திடலாமா? இந்த சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது! கருப்பு நிற ஆடை சனி பகவானுக்கு மிகவும் ப்ரீதி தருவதால் சனிக்கிழமைதோறும் கருப்பு நிற ஆடையை அணிவது மிகவும் விசேஷமானதாகும். ஒவ்வொரு கிழமைக்கு உரிய நிறங்கள் உண்டு. அந்தந்த நாளுக்குரிய சரியான நிற ஆடைகளை அணிந்து சென்றால் கார்ய சித்தி மேன்மை அடையும். எனவே சனிக் கிழமை நடக்க வேண்டிய காரியங்களுக்குக் கருப்பு அல்லது கருநீல நிற உடை அணிந்து செல்வது மிகவும் சிறப்பானதே!
கோயிலில் பிரசாதமாகப் பெற்று மிஞ்சுகின்ற விபூதி, குங்குமத்தை என்ன செய்வது?
பலர் சிறிது விபூதி, குங்குமத்தை மட்டும் இட்டுக் கொண்டு மிச்சத்தைக் கோயிலில் உள்ள கிண்ணத்திலேயே கொட்டிவிட்டு வருகின்றார்கள். இது மிகவும் தவறானதாகும். தெய்வ அருளையே அவமதிப்பதாகும்,
கோயிலுக்குச் செல்லும்பொழுதே சட்டைப் பையில் சிறு காகிதத்தை எடுத்துச் சென்று விபூதி, குங்குமப் பிரசாதத்தைப் பெற்று, பொட்டலத்தில் மடித்து வைத்துக் கொண்டு இல்லத்தில் அனைவருக்கும் பிரசாதமாக அளித்த பின்பு, இத்தகைய பொட்டலங்களைச் சேர்த்து மாதம்தோறும் குறிப்பிட்ட திதிகளில் கடலிலோ அல்லது நதியிலோ விஸர்ஜனம் செய்து விடுதல் வேண்டும். கடலோ, நதியோ அருகில் இல்லாவிடில் வில்வம், அரசு, ஆல், வேம்பு முதலிய மரங்களின் வேர்ப்பகுதியில் சேர்த்திடலாம்.
உண்மையில் கோயிலிலிருந்து பெறப்பட்டு மிஞ்சுகின்ற குங்குமத்தை ஏற்கின்ற சௌந்தர்ய தேவதைகளுண்டு! இவ்வாறு மிஞ்சுகின்ற கோயில் குங்குமத்தை ஒரு மஞ்சள் துணியில் சேர்த்து வர வேண்டும். ஆறு மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒரு முறை, திருச்சி அருகே அன்பில் என்னுமிடத்தில் ஓடும் காயத்ரீ நதியில் கரைத்து விட்டு அவ்வூர்ச் சிவன் கோயில் அம்பிகையை வழிபட்டுக் குங்குமப் பிரசாதம் பெற வேண்டும். அம்பிகையின் பெயர் ஸ்ரீகுங்குமசெளந்தரி.
பிள்ளையார் சுழியிடும் திருமுறை!
வெறும் ‘உ’ என்று மட்டும் போட்டு பிள்ளையார் சுழியை இடக் கூடாது. ‘உ’ என்றெழுதி அதன் கீழே ஒரு பீடமாக ஒரு சிறிய கோட்டைச் சேர்த்திட வேண்டும். எனவே பீடத்துடன் கூடிய பிள்ளையார் சுழியே சிறப்பானதாகும். பீடமல்லாமல் அதாவது அடிக்கோடு இல்லாமல் பிள்ளையார் சுழி இடக்கூடாது.
பிரணவ சக்தியில் வியட்டிப் பிரணவச் சக்தி, சமஷ்டிப் பிரணவச் சக்தி என்று இரு வகையுண்டு. இவை இரண்டும் சேர்வதே சிருஷ்டி, அதாவது சிவ ஸ்வரூபமும், சக்தி ஸ்வரூபமும் சேர்ந்தால்தான் இல்லற வாழ்க்கை இனிதே நடைபெறும். எனவே நாமெல்லாம் இல்லறத்தில் தெய்வீக நெறியுடன் சிறந்து வாழ விரும்புவதால் வியட்டி, சமஷ்டி பிரணவங்களின் இணைப்பாக விளங்குகின்ற பிள்ளையார் சுழியை இடும்போது அடியில் ஒரு பீடத்துடன் இடுவதுதான் விசேஷமாகும். அப்போதுதான் ஓம்கார சித்தி, சக்தியுடன் நிலைத்து நிற்கும். பிள்ளையார் சுழிக்குப் பீடம் இடும் பொழுது சாட்சாத் விநாயகப் பெருமானுக்கே ஆசனத்தில் அமருவதற்காக ஒரு பலகையை அளிப்பது போலாகும். பிள்ளையார் நம்மிடம், நம்மில்லத்தில் பீடமிட்டு அமர்ந்தால் அதைவிட நமக்கு வேறென்ன வேண்டும்! பிள்ளையார் சுழியை நமக்குப் பெற்றுத் தந்தவரே ஸ்ரீ அகமர்ஷண மஹரிஷி! எனவே அவர் நினைவைக் கூட்டி விநாயகரை தியானித்து பிள்ளையார் சுழியை இட்டிடுக!

ஓர் அற்புத கையெழுத்து

கையெழுத்தில் தலையெழுத்து!
என்னுடைய கையெழுத்து (Signature) கிறுக்கலாக இருக்கிறது. கையெழுத்தில் சுழிசுழிகளாகப் போடுவது சிறப்புடையதா அல்லது நன்றாகத் தெரியும்படி கையெழுத்திடுவதா? இதுவும் பலருடைய கேள்விக் கணைகளாகும்!
தற்காலத்தில் Signature என்ற பெயரில், குறிப்பாக, வங்கிகளில் சுழிகளாகவும், வளையங்களாகவும், கோலங்களாகவும் அவரவர் இஷ்டத்திற்கு கையெழுத்து என்ற பெயரில் மொழி தேவதையை வேதனைப்படுத்துகிறார்கள். கையெழுத்திடுவது என்பது, அவருடைய பெயரை இன்னொருவர் படிக்கும்படியாக அமைந்திருக்க வேண்டும். தன்னுடைய கையெழுத்தைப்போல் இன்னொருவர் போட்டிடக் கூடாது என்பதற்காக கன்னாபின்னாவென்று மொழி தேவதையைப் புண்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்!
எனவே அவரவருடைய கையெழுத்து, பிறருக்கு நன்றாகப் புரியும் வகையில் இடுவதுதான் சிறப்புடையதாகும். ராமன், கிருஷ்ணன், வெங்கடராமன் போன்ற தெய்வீகப் பெயர்களை வைத்துக் கொண்டு அந்த இறை நாமங்களை, கையெழுத்து மூலமாகப் பிறரைப் படிக்கச் செய்வதுதான் சிறப்புடையதாகும். மேலும், கையெழுத்திடும் போது மேலிருந்து கீழாக இறங்குதல் கூடாது. சமநிலையில் அதாவது நேர் கோடாகக் கையெழுத்திடுவதே சிறப்புடையதாகும்.
கையெழுத்திட்டுக் கீழோ, அல்லது மேலோ இரண்டு புள்ளிகளை வைப்பதும் சிறப்புடையதே. கருப்பு அல்லது சிகப்பு நிறமையினால் ஒருபோதும் கையெழுத்திடாதீர்கள். நீலம், வயலட் போன்ற ஏனைய நிறங்களைத் தேர்ந்தெடுத்திடுக! குறிப்பாக கருப்பு, மற்றும் சிவப்பு நிறத்தில் வங்கி செக்குகளிலோ, பத்திரங்களிலோ கையெழுத்திடுதல் கூடாது. அலுவலகத்தில் அட்டெண்டென்ஸ் புத்தகத்தில் (Attendance Register) கையெழுத்திடுவதானால் கூட, கிழக்கு நோக்கியே கருப்பு, சிகப்பு நிறங்களைத் தவிர்த்து வேறு நிற மையினால்தான் கையெழுத்திட வேண்டும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆலங்குடி

காலணிகாட்டும் சகுனம்
அவசர கோலமாக வெளியில் புறப்படும் போது செருப்புகளை மாற்றிப் போட்டுக் கொண்டால், அது அபசகுனமாக ஆவதோடு அந்த செருப்பு ஜதைகளை உடனடியாக தானம் செய்துவிட வேண்டும் என்பதையும் குறிக்கின்றது.
மூன்று மாதத்திற்கு ஒரு முறையேனும் குறைந்தது இரண்டு ஜதை செருப்புகளையேனும் தானமாக அளித்திட வேண்டும். அப்போதுதான் கால்கள் மூலமாக நாம் இழைக்கின்ற துன்பங்களுக்கும், பாவங்களுக்கும், தீவினைகளுக்கும், பிராயச்சித்தம் தேடமுடியும். பெரியோர்களையும் குழந்தைகளையும் காலால் உதைப்பது, புனிதப் பொருட்களைக் காலால் மிதிப்பது, தகாத இடங்களுக்குச் செல்வது இவற்றுக்கெல்லாமான பிராயச்சித்தத்தைக் காலணிகளைத் தானமாக அளிப்பதால்தான் பெறமுடியும்.
திருமணமான பெண்களுக்கு
பல பெண்மணிகள் தங்களுடைய துரதிருஷ்டமான திருமண வாழ்க்கையைப் பற்றிக் கடிதங்கள் எழுதியுள்ளனர். மனைவியானவள் தன்னுடைய கணவனுடன் சேரத் துடிக்கின்ற நிலையில் கணவனோ அவளை ஒரு சிறிதும் மதிப்பதில்லை. பெண்மையின் தன்மையைப் புரிந்துகொள்ள இயலாதவர்களாக, குரோதம் மிகுந்த மூடர்களாக சில கணவன்மார்கள் இருக்கின்றார்கள். இந்நிலையில், தான் எவ்வளவோ பிரார்த்தனைகள் செய்தும், வழிபாடுகளை மேற்கொண்டும் தான் சேர்ந்து வாழத் துடித்துக் கொண்டிருந்தாலும் கூட, கணவன் ஒரு சிறிதும் சட்டை செய்யவில்லையென்றால் விவாகரத்தைப் பெறுவதில் எவ்விதத் தவறும் கிடையாது.
கணவனின் நினைவுடனிருப்போர், விவாகரத்து பெற்று மறுமண வாழ்க்கைதான் வாழ வேண்டும் என்ற அவசியமில்லை. எந்தக் கணவனுடன் வாழத் துடிக்கின்றார்களோ அக்கணவனுடன் வாழ இயலாது போனால் கூட விவாகரத்தின் மூலம் அக்கணவனுக்கு வேறு ஒரு மறுமண வாழ்வு அமைவதற்கு ஒரு உதவியாக அமைகிறதல்லவா! தான் தனித்திருந்து ஏதோ ஜீவனாம்சத்தைப் பெற்றுக்கொண்டு அதே கணவனின் நினைவோடு கணவனே கண் கண்ட தெய்வமாக வாழ்ந்திடலாம்.
இதேபோன்று, தான் இணைந்து வாழத் துடித்தாலும் மனைவியானவள் தன்னுடன் ஒத்துழைக்கவில்லை எனப் பல கணவன்மார்கள் புலம்புகின்றனர். அவர்களுக்கும் இதே நியதியுண்டு. இருந்தாலும் இத்தகைய தீர்கமான முடிவெடுப்பதற்கு முன்னர், சில ஆண்டுகள் நன்றாக யோசித்து பெரியவர்களுடன் நன்கு கலந்தாலோசித்த பின்னரே இத்தகைய முடிவிற்கு வருதல் வேண்டும். கணவன் வெறுத்து ஒதுக்கினாலும் தனித்து வாழ்ந்து அவனையே நினைந்து உருகி உத்தம நிலையடைந்த பெண்கள் பலருண்டு!
அன்பளிப்பில் அன்பு அழியும்
நான் மிக உயர்ந்த பதவியில் இருப்பதால் எனக்குப் பலவிதமான அன்பளிப்புகள் வருகின்றன. இவற்றை நான் கேட்டுப் பெறவில்லை. ஆனால் அது தானாகவே வருகிறது. இவற்றை என்ன செய்வது ? இதேபோன்று வங்கிகளிலும் பலவித கம்பெனிகளிலும் தீபாவளி பொங்கல், வருடப் பிறப்பு நாட்களில் ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்கள் மூலமாக பலவிதமான டைரிகள், காலண்டர்கள் மற்றும் பல அன்பளிப்புப் பொருட்கள் வருவதுண்டு! இவற்றைப் பெறலாமா?
எவ்வித முகாந்திரமுமின்றி இத்தகைய அன்பளிப்புகளைப் பெறுவதால் நிச்சயமாகத் தீய கர்மவினைகள் கூடுகின்றன என்பது உண்மையே! ஏனென்றால் எந்த வாடிக்கையாளரும் மனப்பூர்வமாக அன்பளிப்பை அளிப்பதில்லை. ஏதோ இவர்களுக்குக் கொடுத்து அழ வேண்டியிருக்கிறதே என்று அரைகுறை உள்ளத்துடன் தான் அன்பளிப்பைத் தருகின்றார்கள். எங்கு உண்மையிலேயே அன்பு நிரவி இருக்கிறதோ அத்தகைய இடத்திலிருந்து அன்பளிப்பைப் பெறுவதில் தவறில்லை. ஆனால் பதவியை ஒட்டி அன்பளிப்பு வருமானால் அதில் நிச்சயமாகக் கர்மவினைகள் நிறைந்திருக்கும். இதனைப் பெறுவதானால் தீவினைக் கர்மங்கள் ஒட்டத்தான் செய்யும். அதாவது அதனைக் கொடுப்பவருடைய வேதனைகளும், வாதனைகளும் அவர் பட்ட கஷ்டங்களும் நிச்சயமாக அதில் கூடியிருப்பதால் பயன்படுத்தும் போது அவை நம்மை பாதிக்கத்தான் செய்யும்.
ஆனால் அத்தகைய பதவியில் இருந்துகொண்டு ஏனைய ஊழியர்கள் அவற்றைப் பெறும் போது அவற்றைப் பெறாமல் ஒதுக்கித் தள்ளவும் முடியாது, இச்சமயத்தில் என் செய்வது?
அத்தகைய அன்பளிப்புகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்! ஆனால் அவற்றை உங்களுக்காக வைத்துக் கொள்ளாதீர்கள் ! உடனடியாக ஏழைகளுக்குத் தானமாக அளித்து விடுங்கள்! உதாரணமாக தீபாவளிக்கு, பொங்கலுக்கு, ஐந்தாறு பாக்கெட்டுகள் இனிப்பு கிடைக்குமானால் அதனை உடனடியாகக் கோயில் வாசலில் உள்ள ஏழைகளுக்கு அளித்து விடுங்கள். இதனால் உங்களுக்கு மன நிம்மதி கிட்டுவதோடு அதனைக் கொடுத்த வாடிக்கையாளருக்கும் அதனுடைய புண்ய சக்தி போய்ச் சேருகிறது. இதற்கு நீங்கள் கருவியாக இருப்பது ஒரு பெரிய விஷயமல்லவா!

ஒரு டைரி கிடைத்தால் கூட அதனை ஒரு ஏழைப் பள்ளி மாணவனுக்கு அளித்தால் அந்த டைரியைப் பார்த்தவுடன் அவனுக்கு கிடைக்கும் ஆனந்தத்தின் பகுதியாக நீங்களும் பரமானந்தம் அடைவீர்கள்! தானத்தில்  மட்டும் தான் கொடுத்தவரும் பெறுபவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

ஸ்ரீஹயக்ரீவர்

கலைவாணியின் குருவாம் ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தி அட்டைப்பட விளக்கம்
கலைவாணியாம் ஸ்ரீசரஸ்வதி தேவிக்குரிய பெருமைகளில் தலையாயது யாதெனில் சகல விதமான கல்வி, கேள்வி, வித்தை, ஞானத்திற்கு மட்டுமல்லாது சகல வேதங்களுக்கும் கல்விச் செல்வத்திற்கும் அதிபதியான ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாள் மூர்த்தியையே தன் குருவாகப் பெற்றதாம். இன்றளவும் ஸ்ரீ சரஸ்வதி தேவி, ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தியிடம் வித்யை பயின்று கொண்டிருக்கிறாள் எனில் கல்விக்கு எல்லைதான் எது? ஆனால் பூலோகத்தில்தான் M.A. M.Sc., Phd. M.S., M.D என்று ஏதோ சில பட்டங்களைப் பெற்று விட்டுத் தம்மை அறிவு ஜீவிகளாக, கல்வியின் எல்லையாக எண்ணி ஆணவப் பட்டங்களை விட்டுக் கொண்டிருக்கின்றனர் பலர். என்னே அறியாமை! அறிவு மாயை!
ஞானத்தை அழிக்க வந்த அசுரர்களை மாய்த்த அசதியில் திருமால் யோக நித்திரை பூண்டார், சார்ங்கம்  என்னும் வில்லைத் தலையணையாகக் கொண்டு காக்குங் கடவுளாம் பெருமாளே யோக நித்திரை கொண்டு விட்டால் ஜீவன்களின் கதி என்னாவது? தேவர்கள் திகைத்தனர். பரமன் அறியானா இப்பிரச்னையை? எதுவும் அவனின்றி அசையாதே! யோக நித்திரையும் பரம்பொருளாம் பரந்தாமனின் மாயையே என்பதை தேவ மாயையிற் சிக்குண்ட அமரர்கள் அறிந்தாரில்லை ! அவர்களின் கவலை என்னவெனில் ஆங்காங்கே எஞ்சியுள்ள ஒரு சில அரக்கர்கள் கடுந்தவம் பூண்டு மும் மூர்த்திகளிடம் வரம் பெற்று மீண்டும் முளைத்து, கோடானு கோடி அசுரர்களாய்ப் பெருக்கெடுத்து விட்டால்!

ஸ்ரீஹயக்ரீவ பெருமாள்
காஞ்சி வரதர் திருத்தலம்

தாங்கள் மீண்டும் தேவ மாயையிற் சிக்காது, வித்யை, ஞானத்தில் சிறப்புறவும் அற்புத தபோபலன்களைப் பெறவும் பூர்ண கேசவ சிம்மயாகத்தை மேற்கொள்ள தேவர்கள் விரும்பினர்.
அனைத்துலகங்களிலும் உள்ள தானியங்களை, கஜகேசரிகளான பெரும் யானைகளின் மூலமாக பூமிக்குக் கொணர்ந்து ஜேஷ்ட மாத (வைகாசி) வசந்த ருதுக்காலத்தில் வசந்தோற்சவமாக, அனைத்து விதமான தான்யங்களையும் ஆஹுதியாக அளித்து யாகத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு லக்ஷ்மி சகிதமாகத் திருமால் எழுந்தருள வேண்டும்! அதுமட்டுமா, இந்த யாகம் நடைபெற வேண்டிய விசேஷமான வைகாசி மாத விசாக நட்சத்திரமே வேள்வி, யாகம் மற்றும் ஹோமங்களில் ஏற்றப்படும் அக்னி ஸ்தம்பனத்திற்குரிய நட்சத்திர நாள்!
மேலும் வசந்த ருதுக் காலமே, வசந்தோற்சவமே தான்ய ஹோமத்திற்குரிய காலம்! வசந்த நவராத்திரியில்தானே ஸ்ரீ தான்ய லட்சுமியின் திரு அவதாரம் சிறப்புற்றது! இது மட்டுமா, ஸ்ரீ மஹாவிஷ்ணு, மகத்தான தீர்த்தவாரி அளிப்பதும் வைகாசி விசாகத்தில்தானே!
முருகப் பெருமான், தன் மாமனாம் பெருமாளிடம் சங்கு, சக்கரங்களை ஆயுதமாகப் பெற்று அசுரர்களை வென்றதும் வைகாசி விசாகத்தில் தானே! இதற்குக் கைமாறாகத்தான், ஆறு ஜோதிகளிடமிருந்து பரம்பொருட் ஜோதியாய்ப் பரிணமித்த முருகப் பெருமானே விசாக நட்சத்திரத்திற்குரிய அதிதேவ மூர்த்தியாதலின், பூர்ண கேசவ சிம்மஹோமத்திற்கான முதல் அக்னியை கெளமார புருஷனாக குமரப் பெருமானாக எடுத்தளிக்கின்றார்.
இத்தகைய விசேஷங்கள் நிறைந்த வைகாசி விசாக மஹிமையைப் புராணங்களாக விண்டுரைக்கலாம்.
திருமால் யோக நித்திரை பூண்டிருக்க பூர்ண கேசவ சிம்ம யாகத்தை வேண்டி அவரைத் தொழுதாக வேண்டுமே! வைகாசி விசாகமோ நெருங்கிக் கொண்டிருக்கின்றது. என் செய்வது!
தேவேந்திரர்களின் தலைவனான இந்திரன் கறையான் வடிவங் கொண்டு திருமாலின் சார்ங்கம் வில்லின் நாணைச் சற்றே அரித்திட...
பிரபஞ்சத்தையே இரட்சிக்கும் சார்ங்கம்வில் ஒரு கறையானின் வாய்க்கா ஆட்படும் ? திருமால் யோக நித்திரையில் நகைத்தார். எல்லாம் அவர் தம் லீலைகள்தாம்!
சார்ங்கம் வில் பட்டென்று தெரித்திட... ஸ்ரீ விஷ்ணுவே மாயமாய் மறைந்து விட்டார். தேவர்கள் திகைத்தனர்.
ஏதோ செய்திட, ஏதோ ஆகி விட்டதே!
ஸ்ரீ விஷ்ணுவின் பொன் திருமேனியே மறைந்து விட்டது!
சகல லோக சஞ்சாரியும், சிரஞ்சீவியும், சைவ, வைணவ பேதங்களைக் கடந்து ஹரிஹர ஜோதியாய் அகஸ்திய நட்சத்திரமாய்ப் பொலிபவருமான ஸ்ரீ அகஸ்தியமாமுனியின் துணையை நாடினர் முப்பத்து முக்கோடி தேவர்களும்!
தம் தீர்க்க தரிசனத்தால் நடக்க இருக்கின்ற இறை லீலைகளை எண்ணி எண்ணி வியந்தார் அகஸ்திய மஹரிஷி!
திருமாலுடைய சார்ங்கம் வில்லுக்கு அதியற்புத சக்திகள் உண்டு! அதனைப் பூட்டும் போதெல்லாம் தெய்வீகப் பேரொளியும் பேரானந்த கானமும் உண்டாகும்! இவ்வாறு ஒவ்வொரு முறையும் சார்ங்கம்வில் அசைக்கப்படும் போதெல்லாம் எழும் பேரொளியிலும் அருங்கானத்திலும் பல அற்புதமான தபோபலம் பொருந்திய மஹரிஷிகளும் சர்வ தந்த்ர ஸ்வதந்த்ர சித்தர்களும் தோன்றுகின்றனர்.
திருமாலின் திருவடிகளை அடைவோரை சாயுஜ்ய, சாமீப, சாரூப்ய போன்ற பல அற்புத நிலைகளைப் பெறுவதாகக் குறிப்பிடுகின்றோமல்லவா! இவ்வாறு நித்ய சூரிகளாய் வைகுண்டத்தில் பெருமாளுக்குச் சேவை புரிவோர் பலருண்டு.
பரம்பொருளாம் ஸ்ரீமன் நாராயணனே சித்த புருஷர்களையும், யோகியரையும், ஞானியரையும், மஹரிஷிகளையும், மாமுனிகளையும், ஜீவன் முக்தர்களையும், முமூட்சுக்களையும், அவ்வப்போது பூலோகம் உள்ளிட்ட பல லோகங்களுக்கும் அனுப்பி, ஜீவன்கள் கரையேற தம் (தெய்வத்) தூதுவர்கள் மூலமாக அருள்பாலிக்கின்றார்.
திருமாலின் உருவமே மறைந்து விட்டது கண்டு திகைத்து ஸ்ரீஅகஸ்தியரை நாடி வந்தனரன்றோ தேவர்கள், ஸ்ரீ அகஸ்தியர் அருளுரை கூறலானார்.
“தேவரீர்காள்! அறியாமையில் என்ன காரியம் செய்து விட்டீர்கள்! எனினும் அனைத்தும் இறை லீலைகள்தாம்! தற்போது பெருமாள் அதே இடத்தில்தான் தம் யோக நித்திரையைத் தொடர்கின்றார். அவர் தம் யோக நிலை என்றும் மாறாது! ஆனால் அவ்வரிய தரிசனத்தைக் காணும் நேத்ர தீட்சையை இழந்து விட்டீர்கள், உங்களுடைய அவசர கோலச் செய்கையால்!
எனினும் நீங்கள் நடத்த ஆசைப்படுகின்ற பூர்ண கேசவ சிம்ம யாகத்தை நடத்தித் தர வல்லவர்கள் ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ர சித்புருஷர்களே! இந்திரனுடைய செய்கையால் சார்ங்கம் நாணொலி எழுப்பப்பட்டு அச்சித்தர்களின் தோற்றமும் ஏற்பட்டு விட்டது. கிளி வடிவுடைய அவர்கள் தற்போது பல திருத்தலங்களிலும் தீர்த்தவாரி தரிசனங்கள், ஸ்நானங்களை, குறிப்பாக பிரம்ம தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சிவ தீர்த்தங்களில் புனித நீராடல்களை மேற்கொண்டு வைகாசி விசாகத்தன்று அருணாசல க்ஷேத்திரமாகிய திருஅண்ணாமலையில் மானுட உருவங் கொண்டு கிரிவலத்தை மேற்கொள்கின்றனர். கிரிவல வழிபாடு முடிந்ததும் அவர்களே பூர்ண கேசவ சிம்ம யாகத்தை மேற்கொள்கின்றனர். இதில் நீங்களனைவரும் பங்குபெற்று தார்மீகமான வரங்களைக் கேட்டுப் பெறுங்கள்! மாயமாய் மறைந்திருக்கும் திருமாலின் தரிசனத்தையும் பெற வேண்டி ஹோமத்தின் சங்கல்பத்தில் ஸ்ரீ அருணாசலேஸ்வரரை வேண்டிடுக! ”
ஸ்ரீ அகஸ்தியரின் அருளுரையின்படி, வைகாசி விசாகத்தில் தேவர்கள் திருஅண்ணாமலையைத் தொடர்ந்து கிரிவலம் வந்தனர்.
திருஅண்ணாமலையின் திருக்கோவிலூரை நோக்கிய பகுதியில் பரிமுக தரிசனம் என்ற ஓர் அற்புதமான இறை தரிசனம் உண்டு. இங்குதான் கிளி ரூபத்திலிருக்கின்ற ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ர சித்தர்கள் மானுட ரூபத்தில் பூர்ண கேசவ சிம்ம யாகத்தை நிகழ்த்துகின்றனர்.
தேவர்களுக்கோ ஒரு புறம் பூர்ண கேசவ சிம்ம வேள்வியை ஸ்ரீ மஹா விஷ்ணுவின் திருவருளுடன் நிகழ்த்தியாக வேண்டும். மறுபுறம் ஸ்ரீமஹா விஷ்ணுவின் மஹா திவ்ய ரூபமே மறைந்து விட்டது. எங்கே காணுவோம் பரம்பொருளை?
தேவர்கள் பன்முறை கிரிவலம் வந்து பரிமுக தரிசனப் பகுதியில் இத்தகைய அற்புதமான சித்தர்களைக் கண்டு தரிசித்துத் தமக்கு பூர்ண கேசவ சிம்ம யாகத்தை நடத்தித் தரும்படி கேட்டுக் கொண்டதுடன், தங்கள் கண்ணுக்குத் தெரியா வண்ணம் மறைந்திருக்கின்ற ஸ்ரீ மகாவிஷ்ணுவின் தரிசனத்தையும் பெற்றுத் தரும்படி மிகவும் பணிவுடன் வேண்டினர்.
பகுதான்ய வருடத்திற்குரிய விசேஷமான ஹோமமாதலின், பிரபஞ்சத்திலுள்ள அனைத்து விதமான தானியங்களையும் ஆஹுதியாக அளித்துச் செய்யப்பட வேண்டியதே பூர்ண கேசவ சிம்ம ஹோமமாகும்.
சித்தர்களுக்கே உரித்தான புனிதமான அமிர்த நேரத்தில் ஹோமம் தொடங்கி, மிகச் சிறப்பான முறையில் நிறைவு பெற்றிட, அனைவரும் எல்லாம் வல்ல ஸ்ரீஅருணாசலேஸ்வரரை, ஸ்ரீ மகாவிஷ்ணுவின் தரிசனத்தைத் தேவர்களுக்குப் பெற்றுத் தருமாறு மனமுருக வேண்டினர். அப்போது பரிமுக தரிசனத்தை எதிர்நோக்கிய திருக்கோவிலூரின் விண்பகுதியில், பரிமுகப் பரம்பொருளாக, ஸ்ரீ லக்ஷ்மி சமேதராய் குதிரை முகத்துடன் ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தி தரிசனம் தந்தார்.
அவருடைய தெய்வீகத் தோற்றமே நம் அட்டைப் படத்தை அலங்கரிக்கின்றது. முப்பத்து முக்கோடி தேவர்களும், சித்தர்களோடு சேர்ந்து ஸ்ரீ ஹயக்ரீவரை தரிசித்துப் பரமானந்தம் அடைந்தனர். பரம்பொருளாம் பரிமுகப் பெருமாளின் தரிசனமே, வேள்வி நன்முறையில் பரிபூர்ணத்வம் அடைந்ததைக் குறிக்கின்றதல்லவா!
ஸ்ரீ ஹயக்ரீவர் மூர்த்திக்குரிய ஸ்ரீ காயத்ரீ மந்திரமாவது:
ஓம் வாகீச்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத் !!
வைகாசிப் பௌர்ணமியன்று ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தியை வணங்கி, அவித்த கொள் தானியத்தைக் குதிரைக்கு அளித்தல் மிகவும் விசேஷமானதாகும். கல்வியில் சிறப்படைய ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடே பெரிதும் உதவுகின்றது. கலைவாணியின் சற்குரு மூர்த்தியே ஸ்ரீ ஹயக்ரீவர் அன்றோ !
எனவே வைகாசிப் பௌர்ணமியன்று, மேற்கூறிய ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தி காயத்ரீ மந்திரத்தையும், ஸ்ரீ ஹயக்ரீவருக்குரித்தான துதிகளையும் ஜபித்தவாறு, திருஅண்ணாமலையை கிரிவலம் வருதல் சிறப்புடையதாகும். இன்றைக்குக் கிளி தரிசனமும் அரிய அனுக்ரஹங்களைப் பெற்றுத்தரும்
இதனால்
1. யாவரும் குறைவில்லா கல்விச் செல்வத்தைப் பெறுவர்
2. கல்வியில் பின் தங்கியுள்ள குழந்தைகள் நல்ல முன்னேற்றமடைவர்.
3. நன்கு படிக்கின்ற குழந்தைகள் மிகச் சிறப்புடன் பிரகாசிப்பர்.
4. ஞாபக மறதியால் வரும் துன்பங்கள் தீரும். நினைவாற்றல் பெருகும்.
5. மருத்துவம், விஞ்ஞானம், பொருளாதாரம், தொழில் நுட்பம், நுண்கலை என கல்வித் துறைகள் அனைத்திலும் சிறப்பிடம் பெற்றிடலாம்.
ஆமாம், தேவர்கள் ஸ்ரீ அகஸ்தியரை நாடிடக் காரணம் என்ன? இன்று உலகின் மிகச் சிறந்த மந்திரங்களுள் ஒன்றான ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம மந்திரத்தை, ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தியே, நேரடியாகத் தம் திருவாக்கினால் ஸ்ரீ அகஸ்தியருக்கு உபதேசித்தார் அன்றோ ! அதனால்தான் ஸ்ரீராமருக்கு ஸ்ரீ ஆதித்ய ஹிருதயம் என்னும் அற்புதமான மந்திரத்தை உபதேசிக்கும் பாக்யம் பெற்ற ஸ்ரீஅகஸ்தியரே ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தியிடம் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தை உபதேசமாகப் பெற்றுப் பணிவுடனும், அடக்கத்துடனும் கோடானு கோடி யுகங்களாகச் சிரஞ்சீவியாக விளங்குகின்றார் என்றால் ஸ்ரீ அகஸ்தியரின் மகிமை தான் என்னே ! அவருடைய பூலோக விஜய மகிமையைப் பரப்புவதுதானே ஸ்ரீ அகஸ்திய விஜயத்தின் தலையாய தெய்வீகத் திருப்பணி!
தினமும் குழந்தைகளை, சிறுவர், சிறுமியரை ஸ்ரீ ஹயக்ரீவாய நம: ஸ்ரீ ஹயக்ரீவா போற்றி என ஓதியவாறே, அவர்கள் கையாலேயே சந்தனத்தை அரைக்கச் செய்து, ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்திக்கு இட்டு வரச் செய்திடில், இது மிகச் சிறந்த தினசரி பூஜை ஆவதோடு, பிள்ளைகளுக்கும், நல்ல தெய்வீக நெறிகள் நிறைந்த ஒழுக்கமான வாழ்க்கையையும், சிறந்த கல்வியறிவையும் தர வல்ல மிக எளிமையான பூஜையாகும்.

ரிஷபாயன கோமுகம் எங்கே ?
ரிஷபாயன கோமுகத்தைப் பற்றி இவ்வளவு விரிவாகச் சொல்லியிருக்கின்றீர்களே, அது எங்கேயிருக்கின்றது என்று சொல்லவில்லையே!
ஆம், தமிழ்நாட்டில்70000 கோயில்களுக்கு மேல் உள்ளன. இவற்றில் நால்வரால் பாடப்பெற்ற 274 பாடல் பெற்ற தலங்களையோ, 108 வைணவத் திருப்பதிகளையோ, அருணகிரிநாதரால் திருப்புகழ்ப் பாமாலை சூடப் பெற்றுள்ள குமரத் தலங்களையோ, பன்னிரு ஆழ்வாராதிகளால் மங்களாசாஸனம் செய்யப்பட்டுள்ள தலங்களையோ உங்களுடைய வாழ்வின் முக்கியமான தெய்வீக வைராக்யமாக ஏற்றுக் கொண்டு மாதத்திற்கு ஒன்றாக, ஒவ்வொரு தலத்திற்குச் சென்று வழிபடலாமல்லவா!
மும்பை, டெல்லி, கல்கத்தா, ஆக்ரா, சிம்லா, டார்ஜிலிங், ஊட்டி, கொடைக்கானல் என எங்கெங்கோ சுயநலத்துடன், ஆயிரக்கணக்கில் செலவழித்துக் கொண்டு செல்கின்றீர்களே, இதில் என்ன நிரந்தரமான சுகங் கண்டீர்கள்? எங்கெங்கோ எதெதற்கோ செல்கையில் திருத்தலப் பயணம் ஒன்றை மேற்கொள்ளக் கூடாதா?
மது, சிகரெட், காபி, ஆடம்பர ஆடைகள், சென்ட், பவுடர் போன்றவற்றிற்காக வாழ்நாளில் லட்சக் கணக்கில் செல்வாகின்றதல்லவா! இதில் ஒரு துளியையேனும் முறையாக தெய்வீகத்திற்காகச் செலவழிக்கலாமன்றோ !
இதனை செலவு என்று கூறுவதே தவறு! தேவகடன், ரிஷிகடன், பித்ரு கடன் என ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள முக்கடன் நிவர்த்தியாக அமைவதே இவையாதலின் திருத்தல/தான தர்மச்செலவை செலவு என்று எண்ணுதலே தவறு!
குறைந்த பட்சம் 274 பாடல் பெற்ற ஸ்தலங்கள், 108 வைணவத் தலங்கள்/ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பெற்ற தலங்களையேனும் புத்தகங்கள் மூலமாக நன்கு அறிந்து கொள்ளலாமல்லவா!
நீங்கள் வழிகாட்டினால்தானே உங்கள் பிள்ளைகளும் தெய்வத் திருத்தலங்களைப் பற்றி அறிந்து எதிர்கால சமுதாயத்தில் இறை நெறிகளும் தழைக்கும் ? இல்லாவிடில் வடமொழி/தமிழ்மொழி மறைகள் வழக்கில் இல்லாது, மறைந்து வருவதைப் போல், எதிர் காலத்தில் இறைநெறி மறைகளே புத்தக அளவில் மட்டுமே என்ற நிலை ஏற்பட்டுவிடும்.
அம்பிகையும் ஈஸ்வரனும் எதிரெதிரே தோன்றி அருள்பாலிக்கின்ற தலங்களைத் தேடிப்பார்த்துத் தரிசனம் செய்து அதி அற்புதப் பலன்களைப் பெற்றிடுக என்று ஸ்ரீ அகஸ்திய விஜயத்தில் வெளியிட்டிருந்தோம்.
சிலரோ எவ்வித முயற்சியும் எடுக்காது அத்தகைய அபூர்வமான தலத்தை வெளியிடாமல் காலந் தாழ்த்தி விட்டீர்களே! இரண்டு மாதம் வீணாக ஓடி விட்டதே என்று அன்பான கோபாவேசத்துடன் கேட்டுள்ளனர்!

திருஆமாத்தூர்

பலரிடம் கேட்டோ, புத்தகங்களைப் படித்தோ இறைவனைப் பற்றிய ஆத்ம விசாரத்தில் இனிய பத்து நிமிடங்களை ஒதுக்க விரும்பாத மனிதன் எத்தனையோ தேவையற்ற காரணங்களுக்காக புகையிலை - வெற்றிலை - பாக்கு - பீடி - சிகரெட் - சினிமா - செய்தித்தாள் - காம உணர்ச்சிகளைக் கூட்டும் பத்திரிகைகள்/சினிமா, Windowshopping போன்று எத்தனையோ மணித் துளிகளை, வாரங்களை, மாதங்களை, வருடங்களைத் தன் வாழ்க்கையில் இழந்து வருகின்றானே, என்னே பரிதாபம்!
கும்பகோணம் மற்றும் தஞ்சை, திருவாரூர்ப் பகுதிகளில் பாடல் பெற்ற ஸ்தலப் பட்டியலில் வராத சிறு கோயில்களில் , குக்கிராமங்களில் அமைந்துள்ள நன்கு பிரசித்தி பெறாத சில தலங்களில் இன்றும் அம்பிகை, ஈஸ்வரன் எதிரெதிரே இருப்பது, இரட்டை நந்திகள், நான்முக சண்டேஸ்வரர், ஒரே திசையைப் பார்த்து நேர்வரிசையாக உள்ள நவகிரஹங்கள் - இவ்வாறாக எத்தனையோ அற்புதங்கள் உள்ளனவே, என்று இவற்றைப் பற்றி அறிந்து வாழ்வில் பயன் பெறப் போகின்றீர்கள்?
விழுப்புரம் - திருஅண்ணாமலை சாலையில் உள்ள திருஆமாத்தூர் சிவாலயத்தில் அம்பிகையும் சிவலிங்க மூர்த்தியும் எதிரெதிரே அற்புதக் கோலம் கொண்டு அருள்பாலிக்கின்ற காட்சியைக் கண்டு மகிழ்ந்திடலாம்.
ரிஷபாயன கோமுகம் எனப்படும் நான்கு நந்திகளுக்கிடையே உள்ள அற்புதமான மூலஸ்தான கோமுகம் எங்கு இருக்கிறது, என்பதை நீங்களே கண்டு அறிந்து கொண்டால் என்ன? நாங்கள் எடுத்துச் சொல்வது ஒருபுறம் இருக்க தெய்வீகத்தில் உங்களுடைய முயற்சிதான் என்னே?

வெளிநாட்டுக் காரியங்கள் நன்முறையில் முடிந்திட :
திருமணம், உயர் தொழில், ஆராய்ச்சி, மேற்படிப்பு, அதிக வருமானம் காரணமாகப் பலரும் வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார்கள், அனைவருக்கும் வெளி நாட்டுப் பயணம் வாய்ப்பதில்லை. உள்ளங்கைகளில் செவ்வாய் மேடு எனப்படும் ரேகை அம்சங்கள் சிறந்து விளங்குபவர்களுக்குத்தான் வெளிநாட்டுப் பயணம் நன்கு அமையும். வெளிநாட்டிற்குச் சென்று வருவதோ அல்லது அங்கு வசதிகளுடன் வாழ்வதோ பெரிதல்ல! நம் பாரதப் பண்பாட்டிற்கேற்ப நல்லொழுக்கங்களுடன் புனிதமான கற்பு நெறிகளுடன் இறைபக்தியுடன், எங்கிருப்பினும் பிரகாசிப்பதே சிறப்புடையது!
இன்றைக்கும் வெளிநாடுகளில் வாழ்கின்றோர், தங்களுடைய பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் பீதியுடன் தான் வாழ்கின்றனர், எனவே வெளிநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய காரியங்கள் நன்முறையில் நிறைவேற அருள்பாலிப்பவரே கோயம்புத்தூர் பேரூரில் சோழன் படித்துறை அம்பலவாண மண்டபத்தில் உள்ள முக துவார நந்தீஸ்வரர் ஆவார். இவருக்கு இயன்ற போதெல்லாம் நல்லெண்ணெய்க்காப்பிட்டு அருகம்புல் மாலையும் ஸ்ரீ நந்தீஸ்வரருக்கு ப்ரீதியான வேர்க்கடலை மாலை சாற்றி வந்திடில் அயல்நாட்டுக் காரியங்கள் நன்முறையில் நிறைவேறும்.

அமிர்த தாரைகள்

வைராக்யம் நிறைந்த மன உறுதிபெற
பலரும் மன உறுதியில்லாமல் தவிக்கின்றனர். ஏகப்பட்ட நிராசைகளையும், பேராசைகளையும், காம வெறி எண்ணங்களையும் மனதிற் சுமந்திருப்பதால்தான் நல்ல வைராக்யமான, தீர்கமான முடிவுகளை எடுக்க இயலாமல், பலவிதமான சஞ்சலங்களுடன் வாழ்கின்றனர். இவற்றை உடனடியாகத் தீர்ப்பதென்பது இயலாத காரியமாகும். மன உறுதி வாய்த்தால்தான் தீய எண்ணங்களிலிருந்தும், தீய சக்திகளிடமிருந்தும் ஒதுங்கிச் செல்ல முடியும். இத்தகைய நல்ல வைராக்யம் நிறைந்த மனதைப் பெற்றிடச் சில எளிய தான தர்ம/பூஜைகள் உண்டு.
தினந்தோறும் புறாவிற்குத் தானியங்கள் அளித்தல், காக்கைக்கு உணவு கொடுத்தல், திருவாதிரை நட்சத்திரம் மற்றும் சிவனுக்குரிய திங்கள் கிழமையில் காளைக்கு உணவளித்தல், தினந்தோறும் பிள்ளையார்/ இறைச் சந்நிதியில் சாம்பிராணி தூபம் இடுதல் போன்றவற்றை இடைவிடாது செய்து வந்தால் நல்ல மன உறுதியைப் பெற்றிடலாம். பலர் ஒன்று கூடி சத்சங்கம் அமைத்து ஒவ்வொருவரும் ஒரு வைராக்ய காரியத்தை ஏற்றுச் சிறப்பாக நடத்திடலாமே! ஒரு நாள் தவறிடினும் அது மன வைராக்யத் தளர்வைக் குறிக்கும்!

ஸ்ரீநர்த்தன கணபதி லால்குடி

வலப்புறம் கோமுகம் உள்ள தலங்களில் இறைவனுக்குத் தேன் கலந்த பசும்பாலால் அபிஷேகம் செய்து,  பாலை ஏழைகளுக்குத் தானமாக அளித்து அடிப் பிரதட்சிணம் செய்து வந்தால் மன சஞ்சலங்கள் அகன்று மன உறுதிகிட்டும். (உ.ம் - சென்னை திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் ஆலயம், லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் ஆலயம்)
படிப்பில் சிறந்து விளங்க...
கல்வித் துறையில் மந்தமான குழந்தைகள் கூட சிறந்து விளங்குவதற்காகப் பலவிதமான எளிய வழிபாடுகள் உள்ளன. மக்களுடைய அபிலாசைகளும், ஆசைகளும் எக்கச்சக்கமாக மலைபோல் குவிந்திருப்பதாலும்,  ஒருவனே இறைவன் என்ற தத்துவத்தை உணர்வது என்பது கடினமாக உள்ளது! சிலருக்குச் சிலவிதமான வழிபாடுகள் தான் மனதிற்கு பிடித்ததாகவும், ஏற்புடைய தாகவும் இருக்கும்.
எனவேதான் ஒரே பரம்பொருளே இரட்சிப்பதற்காக, அவரவர் மனோ நிலைகளுக்கேற்ப பலவிதமான வடிவுகளில் அநுக்கிரகங்களைத் தந்து துன்பங்களைத் தாங்குகின்ற சக்தியையும் அளித்து அவரவர்க்குரித்தான காரண காரியங்களை அனுபவிக்கச் செய்து கரை சேர்க்கின்றது. சரஸ்வதி, ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீவித்யாலஷ்மி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, புத கிரகத்திற்கான வழிபாடுகள் போன்று பலவிதமான தெய்வ மூர்த்திகளின் விசேஷமான பூஜைகள் கல்விச் செல்வத்தைத் தந்தருள்கின்றன.
நவவியாகரண பண்டிதர் என்று போற்றப்படும் ஸ்ரீ ஆஞ்சநேயர் நான்கு மறைகளிலும், ஆறு அங்கங்களிலும்,  64 கலைகளிலும் மேன்மை பெற்று விளங்குகிறார். ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு புதன் கிழமை தோறும் வெண்ணெய் சாற்றி
ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
என்ற ஸ்ரீ விஷ்ணு காயத்ரீ மந்திரத்தை குறைந்தது 10,008 முறை ஓதி வந்தால் அபாரமான நினைவாற்றலும் படிப்பில் கவனமும் ஏற்படும்.
படிப்பில் நன்கு பிரகாசித்திட மூலம், புனர்பூச நட்சத்திரங்களில், புதன் கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களில் மேற்கண்ட ஸ்ரீ ஆஞ்சனேய வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். இவ்வழிபாட்டினால் நன்கு படிக்காத பிள்ளைகள் கூடப் படிப்பில் அக்கறை காட்டுவர்.
அங்கவர் பூஜை எங்கு, எவருக்கோ ?
வேறு யாருக்கு? பூலோகவாசிகளான நமக்குத் தான்! 27 நட்சத்திரங்களுள் ஒவ்வொரு நட்சத்திர மூர்த்தியும் விசேஷமாக வழிபட்ட தலங்கள் உண்டு! அந்தந்த நட்சத்திர நாளில் அங்கவ மஹரிஷி அந்தந்த தலத்திற்குச் சென்று விசேஷமான ஹோம, அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபடுவார், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய அதிதேவதா, பிரத்யதி தேவதா மூர்த்திகள் மற்றும் தலமும் உண்டு. உங்கள் நட்சத்திரத்திற்குரிய தேவ மூர்த்திகளை முதலில் அறிந்து கொள்ளுங்கள்! அங்கவ மஹரிஷி அந்தந்த நட்சத்திர மூர்த்தி பூஜித்த தலங்களில் அந்த நட்சத்திரத்திற்குரிய ஹோம குண்டத்தை அமைத்து வேள்வி/யாகம் செய்து புனிதமான பிரசாதமாக ஹோம பஸ்மத்தை விண்ணில் அந்தந்த நட்சத்திர மண்டலத்தில் சேர்த்து விடுவார் ! யாரொருவர் அவருடைய நட்சத்திர நாளில் அறிந்தோ, அறியாமலோ வானத்தைப் பார்த்து தியானிக்கிறாரோ அவருக்கு அங்கவ மஹரிஷியே ஹோம பஸ்மப் பிரசாத் சக்தியை நட்சத்திர ஒளி மூலம் தந்து அருள்பாலிக்கின்றார். எனவே தினமும் வானத்தை நோக்கி சிறிது நேரம் தியானத்தில் அமருங்கள்! குறிப்பாக உங்கள் நட்சத்திர நாட்களிலாவது!
சினம் நீக்கும் சிவத்தலம்
சினத்தினால் ஏற்படும் தீமைகள் எத்தனையோ உண்டு. இதனால் உயர்ந்த வாழ்க்கை நிலைகளையும்,  பதவிகளையும், செல்வத்தையும் இழந்தோர் பலருண்டு. தங்கமான குணத்தையே கோபம் தவிடு பொடியாக்கிவிடும். இத்தகைய கோபத்தை நீக்கி குணமான குன்றாக மாற்ற வல்லதே திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள திருநெல்லிக்கா திருத்தலமாகும். ஸ்ரீதுர்வாஸ முனிவருடைய கோபம் அகன்ற அற்புதமான திருத்தலம். நெல்லிவனநாதராய் அருள்பாலிக்கும் இச்சிவ மூர்த்திக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்து ஏழைகளுக்கு இனிய பழரஸச் சார்வகைகளைத் தானமளித்துவர எத்தகைய கடுமையான கோப குணங்களும் தணிந்துவிடும்.
பிரதோஷ நந்தி வழிபாடு
மூக்குக் கயிறு இல்லாத நந்தீஸ்வரத் தலங்களில் பிரதோஷ வழிபாடு செய்து வர சித்தப் பிரமை, மன வியாதிகள் தணியும், இரட்டை நந்தி சேர்ந்துள்ள தல பிரதோஷ பூஜை கூட்டுக் குடும்ப (Joint - Family) வாழ்க்கை மேன்மையுற வழி வகுக்கும்.
பகைமை தீர
சுவாமிக்கு எதிர்ப்புறமாகத் திரும்பி இருக்கும் தலத்தில் நந்தி மூர்த்திக்கு பிரதோஷ வழிபாடு செய்து வர பொறாமை, விரோதம், குரோதம், பகைமை, பழிவாங்குதல் காரணமாகப் பிறர் தரும் துன்பங்களிலிருந்து தீர்வு பெறலாம்.
சந்தனம் இட்டு வந்தனம் செய்வோம்!
பக்தி சிரத்தையுடன், நாம் முறையாக மந்திரம் ஓதி, சந்தனம் அரைத்து, அரைத்த சந்தனத்தைக் கெட்டியாக்கி அதைத் தெய்வ விக்ரகத்திற்கோ அல்லது படத்திற்கோ சாற்றும்போது அதற்குறித்தான தெய்வங்கள் அந்தச் சந்தனப் பொட்டுக்களை உடம்பில் தாங்கிய வண்ணம் அமர்ந்து நமக்கு அருள்பாலிக்கின்றன, ஒரு சமயம், அடியேன் அகத்தியரின் திருவருவப் படத்திற்கு, சந்தன குங்கும பொட்டுகள் இட்டு வணங்கியபோது,  குருவின் கருணையினால், அகத்தியபெருமானின் தரிசனம் கிட்டியது. அப்போது அடியேன் அன்னவருக்குச் சமர்ப்பித்த சந்தனம் அவர் திருமேனியில் சந்தனப் பொட்டுக்களாய் மின்னுவது கண்டு பெருமகிழ்ச்சியுற்றேன். அடியேன் கண்ணால் கண்டதை உங்களிடம் உறுதிபட உரைக்கின்றேன். -  வெங்கடராம சுவாமிகள்.
பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்ந்திட...
ஆணவம், கர்வம், சொத்து, காமவெறி அந்தஸ்து காரணமாகத் தாமே சண்டையிட்டுப் பிரிந்து வாழ்கின்ற தம்பதியருண்டு! பிறருடைய சூது, வாதனை, பொறாமை, பகைமை, துரோகம், குரோதத்தால் பிரிக்கப்பட்டுத் தனித்து வேதனையுடன் வாழும் தம்பதிகள் பலர். ஒன்றாக வாழ்ந்திடினும் மன ஒற்றுமையின்மை, விட்டுக் கொடுத்து வாழும் தன்மையின்மை, கோபகுணம், பிடிவாதம் காரணமாகச் சாந்தமின்றி வாழ்வோரும் உண்டு! இத்தகையோருக்குத் தத்தம் பிழைகளை உணர்ந்து திருந்தி இணைந்து வாழச் செய்யத்தான் இறைவன் பல திருத்தலங்களிலும் திருமணக் கோலங்களைப் பூண்டு அருள்பாலிக்கின்றான். இவற்றில் அவரவர் பிரச்னைகளைத் தீர்க்கும் விசேஷத் தலத்தின் மஹிமையைத் தக்க சற்குருவிடம் அறிந்து முறையான பூஜை பரிஹார தான தர்மங்களை அறிந்து நற்பயன் பெற்றிடுக! இவ்வகையில் பிறருடைய தீச் செயல்களினால் பிரிந்து வாழவேண்டிய துர்பாக்யசாலிகளாகி விட்டவர்களும் மீண்டும் இணைந்து ஒன்று சேர்ந்து வாழ்ந்திட, மயிலாடுதுறையில் ஸ்ரீ மயூரநாதர் திருக்கோயிலில் ஸ்ரீ அநவித்தை அம்பிகையின் சந்நிதியில் உள்ள சிவலிங்கத்திற்கு வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி திதிகளில் மஞ்சள் நிறப் புடவை சார்த்தி அபிஷேக ஆராதனை, பூஜைகள் செய்து ஏழைச் சுமங்கலிகளுக்கு மஞ்சள் நிற ஆடைகளைத் தானமாக அளித்திட்டுப் பரிபூர்ண நம்பிக்கையுடன் வழிபட்டு வருதல் வேண்டும். சர்மா, அநவித்தை என்ற உத்தம தம்பதிகள் இணை பிரியாது உள்ளம் ஒன்றியவர்களாய் வாழ்ந்து பாரத கண்டமெங்கும் பல திருத்தலங்களுக்குச் சென்று சத்சங்க இறைப் பணிகளாற்றி, ஈருயிர் ஓருயிராகி, இறைவனிடம் ஐக்யமான அற்புதத் தலமே மயூரநாதரின் சிவத்தலம்! கணவன், மனைவி இணை பிரியாது தெய்வீகச் சிந்தனையுடன் சிறப்புடன் வாழ இறைவன் இங்கு தம்பதி ஐக்ய லிங்கங்களைப்  படைத்துள்ளான், அநவித்தை லிங்கத்திற்கு எப்போதும் புடவை சாற்றியிருப்பது சிவ, சக்தி ஐக்யத்தை அதாவது கணவன், மனைவி ஆத்ம ஜோதிப் பிணைப்பைக் குறிக்கின்றதல்லவா!
பெற்றோர்களின் கவலைகள் நீங்கிட.
தங்கள் பிள்ளைகளைப் பற்றி, குறிப்பாக தங்கள் பெண் பிள்ளைகளைப் பற்றித் தினந்தோறும் கவலைப்படாத பெற்றோர்களே இல்லை என்று சொல்லி விடலாம். பெண்கள் பருவமடைந்தவுடன் பெண்ணை  நல்லிடத்தில் திருமணம் செய்து கொடுக்கும் வரை மிகுந்த கவலைகளுடன் நிதமும் பல்வேறு பிரார்த்தனைகளுடன் பூஜைகளை நிகழ்த்தியும் மனதில் பெருஞ் சுமையுடன் வாழ்கின்றனர். இறைவன் ஒவ்வொரு பூவையும் ஒவ்வொரு விதமாகப் படைத்து பூக்களுக்கென்று பல தெய்வீக குணங்களையும் அளித்துள்ளான். ஒவ்வொரு மஹரிஷியும் ஜீவன்களுடைய குறித்த சில துன்பங்களைத் தீர்ப்பதற்காகக் கடுந்தவமிருந்து இறைவனிடமிருந்து சில புஷ்பு வழிபாடுகளைப் பரிஹாரமாகப் பெற்றுத் தருகின்றனர்.
எனவே குறித்த பூவைக்கொண்டு செய்ய வேண்டிய பூஜைகளை அம்மஹரிஷிகளே அளித்துள்ளமையால் அவற்றை, சற்குருவின் அருளுடன் முறையாகக் கடைபிடிப்போர்க்கு அத்துன்பங்களிலிருந்து நிவாரணம் கிட்டுகின்றது.
இவ்வகையில் நந்தியாவட்டைப் பூ பல அபூர்வமான சித்த மருத்துவ குணங்களைக் கொண்டதுடன் சில தெய்வீக சக்திகளையும் பெற்றுத் திகழ்கின்றது. ஸ்ரீ நந்தீஸ்வரர் உபாசனையில் சிறந்து விளங்கிய சிவபுரச்  சித்தர்கள் பெரிதும் போற்றுகின்ற புஷ்புமிது! நந்தீஸ்வரர் சித்தர்கள் தம் தபோபலத்திற்கு என்றும் இதனையே பயன்படுத்துகின்றனர்.
சனிக்கிழமை தோறும் சிவலிங்கத்திற்கு நந்தியாவட்டை புஷ்பங்களைத் தொடுத்துக் கட்டிய எட்டு மாலைகளை அணிவித்து வந்திடில் பெற்றோர்களின் மனச் சுமை குறைந்து நல்வழிகள் காட்டப் பெறுவர்!
நல்ல வரன்களைப் பெற...
பல குடும்பங்களிலும் பிள்ளையோ, பெண்ணோ நல்ல இடத்திலிருந்து வரனைப் பெற்று நன்முறையில் திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாகும். காசு, பணம், அந்தஸ்து, கௌரவத்திற்கு ஆசைப்பட்டு குடும்ப அமைதியை இழந்து பாகப் பிரிவினைகளும் உறவுப் பிரிவினைகளும் ஏற்படுவதை யாரும் விரும்புவதில்லை. மாறாக, வரன் கிடைப்பது நடுத்தரக் குடும்பமாக இருந்தாலும் சரி, குடும்ப அமைதிக்கான, நற்பண்புகள் நிறைந்த வரனையே விரும்புபவர், நல்ல வரனை எவ்வாறு பெறுவது? ஒவ்வொருவருடைய நல்ல கோரிக்கையையும் நிறைவேற்றிட ஒவ்வொரு விதமான விசேஷ வழிபாட்டு முறையைச் சித்தர்கள், மஹரிஷிகள், இறைத் தூதுவர்கள் மூலமாக இறைவன் அறிவிக்கின்றான்.
புடலங்காய் என்பது ஒரு அற்புதமான படைப்பு! அதனுடைய வெண்மை கலந்த பசுமை நிறம் புனிதமானதாதலின் திருமணம் மற்றும் வைதீக காரியங்களில் இது பயன்படுகின்றது. நவராத்திரியின் போது சாகம்பரீதேவி வழிபாடு என்ற ஒன்றுண்டு. தாரவங்களுக்கு, செடி, கொடி, மரங்களுக்கு தெய்வ நாயகியே ஸ்ரீ சாகம்பரி தேவியாதலின் அம்பிகையை, காய்கறிகள், கிழங்குகள், கனிகள் கொண்டு அலங்கரித்துப் படைத்து மகிழ்வர். இவற்றில் புடலங்காய் அலங்காரம் ஸ்ரீ சாகம்பரீதேவிக்கு மகிழ்ச்சியைத் தருவதாகும். புடலங்காய் என்பது பித்ரு லோகங்களிலிருந்து பெறப்பட்டது! நம் மூதாதையர்களான வசு, ருத்ர ஆதித்ய பித்ருக்களின் நாயகராக விளங்கும் ஸ்ரீ விஷ்ணுவிற்கும் இது மிகவும் உவப்பான பிரசாதமாகும்.
புடலங்காயின் ஆன்மீக, வைத்ய குணங்களைப் பற்றிச் சித்த வைத்ய வாடகங்களில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கும் குழந்தை பாக்யத்திற்கும் சில விசேஷமான பித்ரு ஆசிர்வாதங்கள் தேவைப்படுகின்றன, மாமியார், மாமனார், நாத்தனார், மருமகள் போன்ற உறவுகளில் ஏற்படும் பகைமை, எதிர்ப்பு உணர்ச்சிகளால் அவர்கள் இடும் சாபங்களும் பித்ரு சாபங்களாக மாறி திருமண சம்பந்தங்களையும் சந்தான பாக்யத்தையும் பாதிப்பதுண்டு. நின்ற கோலத்தில் தேவியர்களுடன் அருள்பாலிக்கின்ற பெருமாளுக்கு புடலங்காய் பாயாசத்தைப் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் எதிர்பார்க்கின்றபடி நல்ல வரங்கள் கிட்டும்.

டாக்டர்கள் தெய்வீக அருளைப் பெற...
மருத்துவர் தொழில் என்பது மிகவும் புனிதமான தொழிலாகும். வெறும் மருத்துவப் படிப்பினால் மட்டும் மனிதர்களுடைய வியாதியைக் குணப்படுத்திட முடியாது. எவ்வாறு மனித வாழ்க்கையே கர்மவினைகளின் தொகுப்பாக, விதியாக அமைந்துள்ளதோ, நோய்கள் கர்மங்களின் விளைவாக ஏற்படுகின்றனவோ அதற்குரிய குணமும் கர்ம வினைகளுக்கு ஏற்பவே அமையும் என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையில் மருத்துவர்கள் நிறைய பூஜைகளையும் வழிபாடுகளையும் மேற்கொண்டு புண்ணிய சக்தியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் நேரமில்லையே என்று மருத்துவர்கள் எண்ணிடலாம்.
கலியுகத்தில் மனிதன் இயந்திர கதியாக வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்த சித்புருஷர்களும் மகரிஷிகளும் நோய்களைத் தீர்ப்பதற்காகவே சில அபூர்வமான தீர்த்தங்களையும் ஆலயங்களையும் தம்முடைய பெருந்தவப் பயனாய் நமக்குப் பெற்றுத் தந்துள்ளனர்.
மருத்துவர்கள் தம் தொழிலில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் அல்லவா? அறுவை சிகிச்சைக்குரித்தான கருவிகள், இரத்த மாற்றத்தில் உள்ள தொழில் நுட்பங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக அளிக்கப்படும் மருந்துகள் நன்முறையில் செயல்பட வேண்டும். இவற்றில் உள்ள குற்றம் குறைகளினால் அவமதிப்பு ஏற்படுமேயானால் தாம் நம்பியுள்ள மருத்துவத் தொழிலே பெரும் பாதிப்புக்குள்ளாகிவிடும் அல்லவா!
மருத்துவர்கள் தம் துறையில் சிறப்புடன் வாழ அருள்பாலிப்பவரே திருத்துறைப் பூண்டியில் உள்ள பவ ஒளஷதீஸ்வரர். இவருக்கு செவ்வாய், ஆயில்யம், மற்றும் தேய்பிறை நாட்களில் நல்லெண்ணெய்/தேங்காய் எண்ணெய்க் காப்பிட்டு, மூலிகை இலைகளால் அர்ச்சித்து (வில்வம், துளசி, வன்னி, etc.) கருவேப்பிலை, புதினா போன்ற மூலிகைகள் கலந்த உணவினைப் படைத்து தானம் செய்து வர மருத்துவத் தொழிலில் அபரிமிதமான குணமாக்கும் சக்தியும், கைராசியும் ஏற்படும். ஒளஷதம் எனப்படும் மருந்துகளுக்குரிய தெய்வீக முறையில் குணத்தைத் தருகின்ற தெய்வ மூர்த்தியே பவ ஒளஷதீஸ்வரர்.

சாதனை படைப்பீர்!
திருநள்ளாற்றில் ஸ்ரீ சனீஸ்வரர் அருள் பாலிக்கும் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சிவாலயத்தில் இன்றும் தினந்தோறும் அங்குள்ள நகவிடங்க தியாகராசரை வழிபட்டிட இந்திரபகவான் மாலை பூஜை நேரத்தில் சூட்சுமமாக வருகின்றார். முப்பத்து முக்கோடிதேவர்களுக்கும் அதிபதியான இந்திர பகவான் ஓர் அற்புதமான தெய்வ மூர்த்தியாவார், தினந்தோறும் கோடானு கோடி தேவர்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்களைத் தனித்தனியே கவனித்து அறிந்து அவற்றைத் தீர்க்கின்றார் என்றால் அவருக்கு இத்தகைய வல்லமை எங்கிருந்து வந்தது?
பூலோகத்தில் தினந்தோறும் ஸ்ரீ நகவிடங்க தியாகேசரை மாலை நேரத்தில் வழிபடுவதன் மூலமாகத்தான் இந்திர பகவானுக்கு இத்தகைய தெய்வீக சக்தி கிட்டியது.
எவ்வாறு நவராத்திரியில் நாம் செய்கின்ற பூஜையானது அம்பிகையானவள் பரபிரம்மத்திற்குச் செய்கின்ற பூஜையோடு இணைந்து அபரிமிதமான பலன்களைத் தருகின்றதோ அதேபோல திருநள்ளாற்றில் மாலை சந்தி நேரத்தில் நாம் செய்கின்ற வழிபாடும் தானதர்மமும் இந்திர பூஜையோடு சேர்ந்து அதன் பலாபலன்களை பன்மடங்காகப் பெருக்கித் தருகின்றன. குறிப்பாக நகவிடங்கருக்கு வெண்பட்டு மற்றும் பட்டு வஸ்திரங்களைச் சாற்றி அவற்றை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் வாழ்வில் பெரும் மாற்றங்களைப் பெற்றிடலாம்.
பலரும் உயர் கல்வி, நல்ல செல்வாக்கு, பழுத்த/நீண்ட அனுபவம் போன்றவற்றைப் பெற்றிருந்தும் பலரால் பதவியிலும் வீடு, வாசல் போன்ற சொத்து விஷயங்களிலும் பெரிய சாதனைகளைப் படைக்க முடியாமல் தவிக்கின்றனர். அத்தகையோருக்கு இப்பிரார்த்தனையானது தார்மீக ரீதியாக வாழ்க்கையில் பெரும் மாற்றங்கைளப் பெற்றுத் தரும்.

நித்ய கர்ம நிவாரணம்

1.6.1998 – எருமை மாடுகளுக்கு அகத்தீக் கீரை கொடுத்தல் – அடிவயிறு சம்பந்தமான நோய்கள் தீரும்.

2.6.1998 – காளை மாடுகளுக்கு கோதுமை தவிடு அளித்தல் – குடும்பத்தில் பயம் விலகும்.

3.6.1998 – 60/80 வயது நிரம்பிய சுமங்கலிகளுக்குத் தன் கையால் தொடுத்த மல்லிகைப் பூ தானம் – கணவனின் முறையற்ற தீய காமப் பழக்கம் அகலும்.

4.6.1998 – பெண்களுக்குரிய அனாதை ஆஸ்ரமத்தில் ஆடை அணிகலன்கள் தானம் – பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.

5.6.1998 – தாய் தந்தையருக்குக் கங்கை நீரால் அபிஷேகம் – மனைவியின் கர்ப்பப்பை நோய்கள் தீரும்.

6.6.1998 – 25 வருட கால நல்ல நண்பனுக்கு தங்க மோதிரம் பரிசு தருதல் – குடும்பத்தில் ஏற்பட்ட மனக் குழப்பம் தீரும்.

7.6.1998 – தன்னுடைய ஆரம்பக் கல்வி ஆசிரியருக்கு வஸ்திர தானம் – அலுவலகத்தில் ஏற்படும் வீண்பழி தீரும்.

8.6.1998 – இரண்டு முக சிரசினையுடைய முருகனுக்குத் தேனும் பலா சுளையும் அபிஷேகம் – ஏழைகளுக்கு தானம் – வருவாய் முறையாய் இரட்டிப்பாகும்.

9.6.1998 – 12/21/30 சுண்டல்களைக் கோர்த்து மாலையாக்கி 54 மாலைகளுக்குக் குறையாமல் சக்தி விநாயகருக்கு அணிவித்தல் – சிறுவர்களுக்கு தானம் – முடிவு தெரியாத வழக்குகள் முடிவுறும்.

10.6.1998 – 80 வயது சுமங்கலிகளுக்கு வெற்றிலைப் பாக்குடன் இனிப்புப் பணியாரங்கள் தானம் – மாத விடாய் நோய்கள் நீங்கும்.

11.6.1998 – ஆறுமுக சுவாமிக்கு அரைத்த சந்தனத்தால் பொட்டிட்டு மார்பிலும் சந்தனம் வைத்திட, கணவனுக்கு நன்மை தரும் செய்திகள் கிட்டும்.

12.6.1998 – குபேர சகஸ்ரநாமத்தை தங்கக் காசுகளால் ஜபித்து அர்ச்சித்து ஏழைகட்கு முந்திரி, பாதாம் பருப்பு, தானமளித்திட – பல நாட்களாய் வராத பணம் வந்து சேரும்.

13.6.1998 – பள்ளிச் சிறுவர்களுக்குத் தண்ணீர் புட்டிகள் (Water Bottles) தானம் – நீர் சம்பந்தமான நோய்கள் தீரும்.

14.6.1998 -  ஆட்டுப் பாலும் வேக வைத்த வேர்க்கடலையும் பெருமாள் கோயிலில் தானம் – வீட்டில் தான்யம் சேரும்.

15.6.1998 – வீட்டில் மரத் தூண்களுக்குப் பூஜை செய்தல் மகா விசேஷம் – பெண்களின் சின வார்த்தைகளால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.

16.6.1998 – ஏகபாத மூர்த்திக்கு தன் கையால் தொடுத்த மாலை அணிவித்தல் ஓமப் பொடி தானம் – ஏங்கிய நற்காரியங்கள் நிறைவேறும்.

17.6.1998 – குழந்தைகளுக்கு தேக்கு மரத்தாலான சுவாமி பொம்மைகள் தானம் – பிள்ளைகளை அடித்த பாவம் போகும்.

18.6.1998 – தீர்த்த கண்டிகளைத் தானமாய் நல்லோருக்கு அளித்திட தொண்டை நோய்கள் தீரும்.

19.6.1998 – நந்தியுடன் கூடிய வெள்ளி லிங்கங்களை உத்தம சிவன் அடியார்களுக்குத் தானமாய் அளித்திடில் தேடிய செல்வம் நிலைத்து நிற்கும்.

20.6.1998 – வாசி யோகம் பயில்பவர்களுக்கு அரச மரத்தாலான யோக தண்டம் தானம்  - மன சஞ்சலம் தீரும்.

21.6.1998 – நாட்பட்டு வேட்டி அல்லது சேலையை தினமும் முறையாக நீராடுவோர்க்கு தானமாய் அளித்திடில் நீர் சம்பந்தமான நோயிலிருந்து நிவாரணம்.

22.6.1998 – காவல் / பாதுகாப்புத் துறையினர் ஆளுயர மாலை தொடுத்து பைரவருக்குச் சார்த்தி அன்னதானம் செய்திடில் தலைக்கு வரும் ஆபத்து தலைப்பாகையோடு போகும்.

23.6.1998 – கடலில் தோணியில் செல்பவர்கள் இன்று கடலுக்குள் செல்லாமல் கரையோரம் இருந்து காரியங்களைச் செய்திடில் கடுமையான ஆபத்திலிருந்து மீள்வர்.

24.6.1998 – காய்கறிக்காரர்களுக்கு காலில் ஆபத்து வர சந்தர்ப்பம் உண்டு. கால பைரவரை நினைத்து அன்னதானம் செய்திடுக

25.6.1998 – பூக்காரர்கள் இன்று புதிய வியாபாரத்தில் ஈடுபட வேண்டாம்.

26.6.1998 – நிதி/ஃபண்டு விஷயங்களில் இன்று கவனம் தேவை.

27.6.1998 – மாமன் உறவில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

28.6.1998 – மனைவியின் உறவு வகையில் கவனமாகப் பேசிடுக!

29.6.1998 – பங்காளிக்காக இன்று கடன்படாதீர்கள்.

30.6.1998 – மைத்துனியுடன் உறவு மயானம் வரை கொண்டு சென்று விடும். கவனம் தேவை.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam