முக்தி என்பது ஒரு தனித்த அனுபவமே !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

நட்சத்திரக் காப்பு திரட்டு

பெரும்பாலான தெய்வாவதார மூர்த்திகள் தோன்றிய ஆண்டே ஈஸ்வர ஆண்டு. ஆதலின் இதற்கு  இத்தகைய விசேஷமான பெயர் சூட்டப் பெற்றுள்ளது. இவ்வகையில் ஸ்ரீ நர்த்தன விநாயகராகவும் பால  கணபதியாகவும், விஜய கணபதியாகவும், இரட்டைப் பிள்ளையாராகவும்,  கணேசாயினியாகவும் தம்   அன்னையாம் ஸ்ரீ பார்வதி தேவியின் விருப்பப்படி பல திருவிளையாடல்களைப் புனைந்தார்  பிள்ளையாரப்பர்!
இரட்டைப் பிள்ளையாராக அவர் ஈசுவர் அம்சமாகவும் சக்தி அம்சமாகவும் தோன்றிய போது அனைத்து  தேவாதி தேவ மூர்த்திகளும் நட்சத்திர தேவதா மூர்த்திகளும் ஆனந்தமடைந்தனர். எனவே   இப்புத்தாண்டில் சித்புருஷர்கள் அருளியுள்ள இரட்டைப் பிள்ளையார் நட்சத்திரக் காப்பினை  அனைவரும் தினந்தோறும் ஓதி விநாயகப் பெருமானின் திருவருளை பெற வேண்டுகிறோம்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமான நட்சத்திரக் காப்பு திரட்டு வருமாறு:
அசுவினி:
வருவன கண்டேன்  வளர்மதி திருஅஸ்வினி அருள் பூண்டு
இருவினை களையும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
பரணி:
திருஅருள் புரியும் தீச்சுடர் பரணி அருள் பூண்டு
குரு அருள் பூண பூரண இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
கார்த்திகை

ஸ்ரீபிள்ளையார் மூர்த்திகள்
பழமண்ணிப்படிக்கரை

யாதும் பெருமையுற கீர்த்தி கிருத்திகை அருள்பூண்டு
ஏதுசெய்யினும் நலமே விளையும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே
ரோகிணி
மாதர் பிழை களைய மனமிரங்கும் ரோகினி அருள் பூண்டு
வேதம் ஓதுவோர் துணையாகும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
மிருகசீரிஷம்:
மலை அருவி எனப் புகழ் சிதறும் மிருகசீருஷ அருள் பூண்டு
மனைவி துயர் நெருங்காது அருள் புரியும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
திருவாதிரை:
வாழியெம் போற்றி என்றேத்தும் வளம்பெரு ஆதிரை அருள் பூண்டு
ஆழி முதல்வனாகி நின்ற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
புனர்பூசம்:
புகழ் மாலை சூட்டியெனைப் புனிதனாக்கி புனர்பூச அருள் பூண்டு
திகழ்கின்ற திடசித்தி அருள்கின்ற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
பூசம்:
குளிர்ந்து வரும் குருவருள் பூண்ட பூசத்து அருள் பூண்டு
தளர்ந்த வினை சேராதிருக்க இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
ஆயில்யம்:
ஏந்திழையாளொடு மதி ஆயில்ய சகிதமாகி  கை
ஏந்தி நிற்கும் நிலையிலா அருள் பூண இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
மகம்:
தர்ம திருவருள் மாதேவி மகத் திருவருளால்
கர்மத் தொல்லை தீர உடனிருக்கும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
பூரம்:
பன்மலர் தூவிப் பாடி மகிழ்ந்து பூரம் அருள் பூண்டு
இன்முகம் சுமந்து வாழ இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
உத்திரம்:
சிந்தையிலே சீர் பெறும் உத்திர அருள் பூண்டு
கந்தலாடைக்கு ஆளாக்காத இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
அஸ்தம்:
அஸ்த மெல்லியலாளொடு சசிதர அருள் பூண்டு
அஸ்தர அம்பென வார்த்தைகளால் துன்புறாது இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
சித்திரை:
சொல்லும் செயலும் சித்திரையால் சிவமே பூண்டு
அல்லும் பகலும் அரனருள் பெற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
சுவாதி:
திங்கள் உடனுறை சுவாதித் திருவருள் பூண்டு
எங்கும் எதிலும் வெற்றியுற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
விசாகம்:
திசைதிசை தொழுது விசாகத் திருவருள் பூண்டு
இசைபட வாழ்ந்திடவே இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
அனுஷம்:
பொடிதனைப் பூச வைத்த புனித அனுஷ அருள் பூண்டு
வடிவு பொங்கும் வாழ்வுற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
கேட்டை

கிரக ராசி மண்டலம்
திருத்தவத்துறை லால்குடி

தொழும் தொண்டர் கேட்டைத் திருவருள் பூண்டு
மழுவும் மானும் பூண்டவர் அருள் பெற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
மூலம்:
வண்டுசேர் குழலினாளை மூல அருளைப் பூண்டு
கண்டு சேர் மணாளன் உடனுறைய இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
பூராடம்:
அண்ட வானவர்கள் ஏத்தும் பூராடத் திருவருளால்
தொண்டர்கள் தொழுதேத்த இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
உத்திராடம்:
வல்வினை விரைந்தோட உத்திராடத் திருவருள் பூண்டு
இல்வினை இனிதுற நடத்த இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
திருஓணம்:
சங்கணி குழையும் பூண்டு திருவோணத் திருவருள் கூட்டி
இங்கணியும் சிறப்பெல்லாம் குறையுறாதிருக்க இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
அவிட்டம்:
கடுவினையும் களைந்தருளும் அவிட்டத் திருஅருள் பூண்டு
சுடுவினை தாக்காதிருக்க இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
சத்யம்:
 பக்தர்க்கருளும் பாச நிறை சதயத்தருளால்
சித்தர் அருள் பெற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
பூரட்டாதி:
முக்தி நிலை அருள்கின்ற பூரட்டாதி அருள் பூண்டு
சக்தி நிலை பெற வைத்திட இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
உத்திரட்டாதி:
உருகும் மனமுடையோர் உத்திரட்டாதி அருள் பூண்டு
பருகி வாழ்வாங்கு வாழ இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
ரேவதி:
ஹரஹர சிவ என்பார் மனதில் புகுந்து ரேவதி
கரங் கொடுத்துதவ இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமுரிய நட்சத்திர பீஜாட்சரங்களும் உண்டு. அவற்றைத் தக்க குருவை நாடித்  தெளிதல் நலம்.
உங்களுடைய பிறந்த நட்சத்திர வழிபாட்டு முறை
பல ஆலயங்களில் உட்புற மேற்சுவற்றில் பன்னிரெண்டு இராசிகளின் உருவங்கள் பொறிக்கப்  பட்டிருக்கும்/வண்ணமாகத் தீட்டப்பட்டிருக்கும். (உ.ம். சென்னை பூந்தமல்லி ஸ்ரீவைதீஸ்வரர் கோயில்,  புதுக்கோட்டை ஸ்ரீ கோகர்ணேஸ்வரர் ஆலயம், லால்குடி, etc..). இதன் கீழ் அமர்ந்து தியானித்து அவரவருடைய   நட்சத்திர நாளில் மாதந்தோறும் இந்நட்சத்திரக் காப்பு திரட்டினை ஓதி வருதல் சிறப்புடையதாகும்.   இத்தகைய மேற்சுவர் உருவங்களுக்கு ஆகர்ஷண சக்தி மேம்பட்டிருப்பதால் இது ஆயுள் விருத்திக்கும்  ஆரோக்கியத்திற்கும் நல்வழி காட்டும்.

திருஅண்ணாமலை அன்னதானம்

ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகளின் குருவருளாணையின்படி அவர்தம் சிஷ்யராம் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் கடந்த பல ஆண்டுகளாக திருஅண்ணாமலை கார்த்திகை தீபப் பெருவிழாவில்  மகத்தான அன்னதானத்தை நிகழ்த்தி வருகின்றார்கள். ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளைத் தரிசிக்க வருவோரின் பலவிதமான சந்தேகங்களுக்குச் சித்புருஷர்களின் நெறிமுறைகளின படி பல அற்புதமான விளக்கங்களை அளித்துள்ளார்கள் அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

அண்ணாமலையில் அற்புத அக்னி
அடியார் : குருவே! திருஅண்ணாமலை அன்னதானம் எவ்வாறு சிறப்புடையது?
சற்குரு : எத்தனையோ விளக்கங்களை ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் அளித்துள்ளோம், பலகோடி  யுகங்களாக ஸ்ரீ நந்தீஸ்வரர் அகஸ்தியருக்கு எடுத்துரைத்து வருகின்ற திருஅண்ணாமலை மஹிமையை  இன்றும் எந்நேரமும் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் பலகோடி கிரந்தங்களாக எழுதி வருகின்றார். அரிசி  மணி அன்னமாவது அக்னியில் தானே! பிரபஞ்சத்திலேயே பஞ்சபூதத் தலங்களுள் அக்னித் தலமாக  விளங்குவது திருஅண்ணாமலையன்றோ! எனவே இப்பூவுலகில் எங்கு, எந்த நாட்டில் உணவு  சமைத்திடினும் தீக்குச்சியோ, காஸோ, ஸ்டவ்வோ, மின்சார அடுப்போ எதுவாயிருப்பினும் அதற்குரிய  அக்னியின் மூலாதாரமே திருஅண்ணாமலையார் தானே! எனவே அக்னி பிறந்த, பிறக்கும்  இடமாகிய திருஅண்ணாமலையில் அன்னத்தைச் சமைத்திடில் அக்னி லிங்கத்தின் பரிபூர்ண அனுக்ரகத்தை  நேரடியாகப் பெறுவது என்பது மிகவும் விசேஷமானதல்லவா! மற்ற இடங்களில்  ஏற்றப்படும்  நெருப்பிற்கும் (விளக்கு, அடுப்பு, கற்பூரம், ஊதுபத்தி etc.,) திரு அண்ணாமலையில்  ஏற்றப்படும்  நெருப்பிற்கும் நிறைய தெய்வீக அம்ச மாறுபாடுகளுண்டு!  ஏன்! சூர்ய, சந்திர மூர்த்திகளும், கோடிக்கணக்கான நட்சத்திர மூர்த்திகளும் தங்களுக்குரிய ஒளி சக்தியை  அக்னி மூர்த்தியான திரு அண்ணாமலையிடமிருந்து பெறுகின்றன. அக்னியின் ஒரு வகையே ஒளியும்!
 எனவேதான் திருஅண்ணாமலையில்  ஈஸ்வரனாம் திருஅண்ணாமலையாரைக்  குறுக்கே கடக்காது  சூர்ய பகவான் சுற்றிச்  செல்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  திருஅண்ணாமலையில் வந்து  சேர்கின்ற சூரிய, சந்திரக் கதிர்கள் பிற இடங்களிலிருந்து வேறுபட்டவை என்பது ஆன்மீக  விந்தையாகும். உலகிலுள்ள  பெரும்பாலான நீர், நிலத்  தாவரங்களுக்கான ஜீவ சக்தி சூர்ய,  சந்திர  மண்டல ஒளிசக்தி திருஅண்ணாமலையாராம் அக்னிலிங்கத்திலிருந்தே பெறப்படுவதால்  இத்திருத்தலத்தில் அன்னம் பாலித்து அன்னதானமிடுதல் ஆயிரமாயிரம் மடங்குகளாய்ப் பலன்களைப்  பெற்றுத்தரும்.

யாருக்கு அன்னதானம்
அடியார் : குருவே! கிரிவலத்தில் ஏழைகள் மட்டுமன்றி, பலரும் அன்னதானம் பெறுகின்றனரல்லவா?
சற்குரு : எவ்வாறு இறைவனின் படைப்பில் மத, இன, ஜாதி, பேதம் கிடையாதோ அதே போல் உத்தம  ஆன்மீக நிலையில் கிரிவலம் வருவோர்களிடையே ஏழை, பணக்காரர், ஆண், பெண் என்ற வேறுபாடு  மறைந்து விடுகிறது. ஒரு பெரிய கோடீஸ்வரராயிருந்தாலும்  திருஅண்ணாமலையை கிரிவலம்  வருகையில் களைப்புற்றுத் தளர்ச்சியினால் தாகம், பசி ஏற்பட்டிடில் அவருக்கு நீரும், உணவும்   அளித்தால் அதுவும் அன்னதானமே. மேலும் கடவுளின் உருவமான திருஅண்ணாமலையை  கிரிவலம் வருகின்றவர்கள் புனிதயாத்திரை மேற்கொண்டோர்கள் ஆதலின் அவர்களுக்கு  அன்னதானம் அளிப்பது தலையாய கடமை மட்டுமல்லாது, மிகவும் புண்ணிய காரியமும் ஆகும்.
திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகின்ற ஒவ்வொருவர் உடலிலும் அவரது மூதாதையர்களும்,  பித்ரு தேவ மூர்த்திகளும், வசு, ருத்ர ஆதித்யர்களும்  ஆவாஹனமாகி கிரிவலம் வருகின்ற  பாக்கியத்தைப் பெறுகின்றனர். எனவே அன்னதானமிடுகையில், கிரிவலம் வருகின்ற ஒரு அடியார்   மட்டும் அன்னதானம் பெறுவது போல் தோன்றும் - ஆனால் அந்த அன்னத்தின் சூட்சும சக்தி  பல  பித்ரு தேவர்களைச் சென்றடைகின்றது என்பது ஒரு அற்புதமான ஆன்மீக  இரகசியமாகும்.
சித்தர்களும், மகரிஷிகளும், யோகியர்களும் பலவிதமான வடிவங்களில் நம்மைச் சோதிக்க  வருகின்றனர். அன்னதானம், சரீர சேவை போன்ற நற்காரியங்களே அவர்களை ஆனந்தப்  படுத்துமாதலின், உத்தமப் பெரியோர்களின், ஆசியைப் பெற ஏதேனும் நற்காரியங்களைச் செய்து  கொண்டேயிருக்க வேண்டும். திருஅண்ணாமலை தீபமானது கோடானுகோடி லோகங்களில்  வேறு  எங்கும் காணக் கிடைக்காத அற்புத தரிசனமாதலின் அவ்வற்புத ஜோதி ரூபத்தைத் தரிசித்திட அனைத்து  தேவாதி தேவ, தெய்வ மூர்த்திகளும், மகரிஷிகளும், கார்த்திகை தீபத்தன்று எத்தனையோ சூட்சும   வடிவங்களில் இங்கு கூடுகின்றனர். அவர்கள் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அவர்களைத்  தரிசித்தப் பலனை நாம் பெற்றவர்களாகின்றோம். அன்னதானத்துடன் இத்தகைய தெய்வீக  லீலைகளைக் கண்டு ஆனந்திக்கையில் அதன் பலன்கள் தேவாதி தேவர்களின் ஆசியையும் பெற்று  மிளிர்கின்றன.

சிந்தும் உணவிற்குச் சீரிய விளக்கம்
அடியார் : "குருவே! அனைத்தும் இறைவனின் செயல்தான். ஆனால் அன்னதானத்தின் போது கீழே  சிந்துகின்ற உணவோ அல்லது இலையில் அன்னம் மீந்து விடுவதோ உண்டு. இதற்கான ஆன்மீக விளக்கங்களைத் தர வேண்டுகிறோம்!”
சற் குரு : ''இறையருளால், எம் சற்குருவின் குருவருளால் சித்புருஷர்களுடைய பல விளக்கங்களை  அளித்து வந்துள்ளோம். எதுவும் காரண காரியமின்றி நிகழ்வதில்லை. அனைத்தும்  இறையாணையாகவே நிகழ்கின்றது என்பதை உணர்த்திடத்தான் நாம் இறைப்பணியாற்றி  வருகின்றோம்.
ஓர் அன்னதான நற்காரியமானது பலருடைய பொருளுதவியால் நடைபெறுகையில் அதில்  பலவிதமான எண்ணங்கள் கூடுகின்றன. அறிந்தோ அறியாமலோ முறையற்ற வழியில் கிட்டிய  பணமும் அதில் சேரக் கூடும். மேலும் மளிகை, காய்கறி, எண்ணெய் போன்ற பல பொருட்களை  வாங்கும்போதும், உணவைச் சமைக்கும்போதும் எத்தனையோ வகையான எண்ணச் சிதறல்கள்  சேர்கின்றன. உபயோகமற்ற எண்ணங்கள் பஸ்மமானாலும் தவறான எண்ணங்கள் அன்னம்  சமைக்கையில் நெருப்பில் சேர்ந்த அன்னமானது கீழே சிந்துகின்றது. இது ஒரு வகை விளக்கமாகும்.
இது தவிர கீழே சிந்தப்படுகின்ற உணவானது நாய், பூனை, எறும்புகள், ஆடு, மாடுகள் பூமியில் உள்ள  பூச்சிகளுக்குத் தானே போய்ச் சேர்கின்றது.
இதுவும் அன்னதானந்தானே! நம்முடைய பூர்வ ஜென்ம உறவுகள் நாய், பூனை, எறும்பாகக் கூடப்   பிறந்திருக்கலாமன்றோ! இதுவும் ஓர் அற்புதமான விளக்கமன்றோ! மேலும் அடியார்கள் உண்டு மீந்து  இருக்கின்ற உணவை நாய், ஆடுகள், மாடுகள், எறும்புகளும் உண்கின்றன அல்லவா! ஏன், நம்  ஆஸ்ரமத்தில் பெளர்ணமி அன்னதானத்திற்குப் பிறகு, மறுநாள் கீழே கிடக்கும் ஆயிரக் கணக்கான  இலைகளை ஆடுகளும் மாடுகளும் உண்கின்ற காட்சியைக் காணலாம். பூமியில் சிந்துகின்ற உணவு மண்ணில் மக்கி சத்தாகித் தாவரங்களுக்கு உதவுகின்றது. இவ்வாறாக  இறைநியதி யாகத்தான் அனைத்தும் நிகழ்கின்றன என்பது பரிபூர்ணமான உண்மையாகும்.

கார்த்திகை தீப அன்னதானம்
எல்லாம் வல்ல ஈசனாம் ஸ்ரீ அருணாசலேஸ்வரரின் திருவருளாலும், ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்தரின்  குருவருளாலும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு 4.12.1997 முதல் 15.12.1997 வரை திருஅண்ணாமலை  கார்த்திகை தீபப் பெருவிழாவில் நம் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் சார்பில்  அன்னதானம்  சிறப்புற நடைபெற்றது.  பொருளுதவி, சரீர சேவை மற்றும் பலவகைகளில் அன்னதான இறைப்  பணிபுரிந்த அனைவர்க்கும் நம் ஆஸ்ரமத்தின் சார்பில் நன்றியைக் காணிக்கையாக்குகின்றோம்.  ....................

அடிமை கண்ட ஆனந்தம்

தம் சற்குரு நாதர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகளுடன் பாரதத்தின் பல பகுதிகளுக்கும்  கால்நடையாகச் சென்றும் இரயில் பயணம், சூட்சுமப் பிரயாணமாக இமாலயம், கொல்லிமலை,   செஞ்சிமலை, பர்வதமலை, சதுரகிரிமலை, இன்றும் அகத்தியர் வாழ்கின்ற பொதிய மலை போன்ற  சித்தர்கள்/யோகிகள்/மஹரிஷிகள் உலவுகின்ற புனிதமான மலைப் பகுதிகளிலும், தெய்வீகம்   தழைக்கும் திருத்தலங்களிலும் பல குருகுலவாச அனுபூதிகளைப் பெற்று இன்று ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம  சுவாமிகளாய் நல்லறமாம் இல்லறத்தை ஏற்று நம்மிடையே உலவி வந்து கலங்கரை விளக்கமென  ஆன்மீகப் பாதையில் வழிகாட்டி ஒளிர்கின்றார் . அவருடைய குருகுலவாச அனுபூதிகளே ''அடிமை  கண்ட ஆனந்தமாக" மலர் கின்றது.
''என்ன தெய்வ நம்பிக்கை இருந்தாலும் அல்லல்களுக்கு ஆட்பட்டுத்தானே வாழ  வேண்டியிருக்கின்றது. மகான்கள் கூட பலவிதமான உடற்பிணிகளிடையே, கஷ்டங்களுடனேதான்   வாழ்கின்றனர். சற்குரு, சற்குரு என்று நம்பிக்கையுடன் வாழ்பவர்கள் கூட இன்ப,  துன்பங்களுக்கிடையில் தானே உழல்கின்றார்கள்.
அப்படியென்றால் சற்குருவின் பணிதான் என்னே?' - என்று கேட்டுக் குழம்பிய மனோநிலையில்  இருப்போர் பலர்.
தெய்வ நம்பிக்கை என்றால் நல்லதோ, கெட்டதோ, இன்பமோ, துன்பமோ  அனைத்தும் நம்  கர்மவினைகளாக நாமே விதை விதைத்துக் கொண்டவையாம் என்று தெளிவதே! முற்பகல் செய்யின்  பிற்பகலில் கர்ம வினைகளாக விளைந்தவையே இன்ப துன்பங்கள். நம் கர்மவினைகளை நாம்   முழுமையாக அனுபவித்துக் கழித்தால்தான் முக்தி நிலைக்கான அறவழியே கண்ணுக்குப் புலப்படும்.  எனவே சற்குருவானவர் அருகிலிருந்து கொண்டு நம் கர்மவினைகளுக்கேற்ப இன்ப, துன்பங்களைச்  சகிப்புத் தன்மையுடன், எல்லாம் இறைவன் செயல் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன்  செயல்படுவதற்கான மன உறுதியை அளிக்கின்றார். எனவேதான் பிறர் கண்களுக்கு, ''என்ன தான்  சற்குரு கருணை இருந்தாலும் இவர்களும் கஷ்டப்படத்தானே செய்கிறார்கள்!'' என்று மாயையாகத்   தோன்றுகின்றது. எல்லாம் இறைநியதியே என்ற நம்பிக்கையை வேரூன்றச் செய்து, தான்  பிறப்பெடுத்தது பிறருடைய நல்வாழ்விற்கான இறைப் பணிகளை ஆற்றுவதற்காகவே என்ற அடுத்த  இறைநிலைக்காகவும், இவ்வாறாக அடுக்கடுக்காக பல் வேறு உத்தம இறை நிலைகளுக்கு அருகில்   இருந்து இட்டுச் செல்பவரே சற்குரு ஆவார் என்பதை உணர்த்துவதே இவ்வடிமை கண்ட ஆனந்தம்.

இனி....
திருஅண்ணாமலையின் உயரத்தைத் தாண்டி மேலே பறப்போம் என்று நினைத்த சிறுவனுக்கு ஒரே  ஆச்சரியம்! பெரியவரைப் பார்த்தான், அவரோ ''உஸ் ஸ் '' என்று ஜாடை காட்டி மலையைக் கண்களை  அசைக்காமல் பார்த்துக்  கொண்டேயிருந்தார்.
இப்போது மலையைப் பார்ப்பதை விட்டுவிட்டுப் பெரியவரைப் பார்க்க ஆரம்பித்தான் சிறுவன்.   ஏனென்றால் "டேய்! ரொம்ப Alertஆ இருக்கணும்.  சுத்தி என்ன நடக்குதுன்னு பாத்துக்கிட்டே   இருக்கணும். இப்ப நீ சின்ன புள்ள! ஆனா  நீ பெரியவனா ஆனப்புறம், நான் பக்கத்துல  நிக்க   மாட்டேன். ஆயிரக் கணக்குல, லட்சக்கணக்குல அன்னதானம் பண்ற மாதிரி வர்றப்போ ஒரே டயத்துல நீ   ஆயிரம் விஷயத்துல கவனம் வச்சுக்கணும். வர்றவங்க, போறவங்க, அடுப்புல பாத்திரம் ஏத்துறது,   நெருப்பைப் பாத்துக்கறது, உப்பு, புளி சாமான் போதுமான்னு ஸ்டாக் எடுக்கறது.  எண்ணெய் டின்   இருக்கா, வெறகு போதுமா, விளக்கு பூஜை எப்ப நடத்தணும், பெளர்ணமி டயம் எப்ப வருது,   கோயிலுக்கு அன்னம் அனுப்ப வண்டி ரெடி பண்றது. கூட்டத்தைக் கண்ட்ரோல் பண்ண கம்பு, கயிறு  கட்டறது. இதுக்கு நடுவுல அந்தப் பிரச்னை, இந்த பிரச்னைன்னு நெறய பேரு கொழந்தைங்க   குட்டிங்களோடு வந்து நிப்பாங்க, திடீர்னு  மழை வந்துச்சுன்னா மாடில  எல்லாத்தையும்  பத்ரப்படுத்தணும்."
சரமாரியாய் பெரியவர் அடுக்கிக் கொண்டே போவார். சின்னஞ்சிறுவனாய் இருந்து கொண்டு  அவனால் அவர் சொல்வது எதையுமே நம்ப முடியவில்லை! தானாவது அன்னதானம்  பண்ணுவதாவது, தன் பின்னால் நூறு பேரா வருவார்கள்! தனக்கென ஒரு ஆஸ்ரமமா இருக்கும்! இதையெல்லாம் அவன் நினைத்துக் கூடப் பார்த்தது கிடையாது. குருவருள் கடாட்சமாகப் பல  ஆண்டுகளுக்குப் பின்னர் திருஅண்ணாமலையில் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமமாக   மலர்ந்து இன்று பல்லாயிரக் கணக்கானோர்க்கு அன்னதானம், ஏழைகளுக்கு இலவச மருத்துவ    உதவியுடன் ஆயிரக் கணக்கானோர்க்கு அருள்வழிகாட்டும் அற்புத, சித்புருஷராய் ஸ்ரீலஸ்ரீ   வெங்கடராம சுவாமிகளாய், குருவருள் திறனைப் பொழிந்து வருகின்றார். அன்று தீர்க்க தரிசனமாய்  சற்குரு உரைத்த ஒவ்வொரு வார்த்தையும் வேதப் பிரமாணமாய் உண்மையிலேயே காலப்போக்கில்   நிகழ்ந்து வருவது கண்டு ஆச்சரியமடைந்த சிறுவனே இன்று குருமங்கள கந்தர்வாவாக அடிமை கண்ட  ஆனந்தம் மூலமாக நமக்குக் குரு அனுபூதிகளை உணர்த்தி நம்மை உய்விக்க வந்துள்ளார்.
திருஅண்ணாமலையை வைத்த கண் விடாமல் உயரப் பறந்து கொண்டே பெரியவர் பார்த்துக்  கொண்டிருந்தார் என்று தொடங்கினோம் அல்லவா! மலையை நோக்கிக் குத்திட்டு நின்ற அவருடைய   விழிகளில் ஒளிப் பிரகாசம் நிறைந்திருந்தது. இமைகள் அசையாது நின்ற அவ்விழிகள் ஏதோ இனம்  புரியாத தியான நிலையைக் குறிப்பது போலிருந்தன. அவரை இந்நிலையில் இதற்கு முன் சிறுவன்  பார்த்ததில்லை. ஆனால் பல சமயங்களில், ''டேய்! நான் Bodyயை விட்டுட்டு மேல வேற வேலையாய்  போறேன். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கிடைக்காத Body இது! ரொம்ப பத்திரமாப் பார்த்துக்கனும்",   என்று சொல்லி தன்னைச் சுற்றி வில்வ இலைக் காம்புகளினால் தரையில் ஒரு வட்டத்தைப் போட்டு   விட்டு நடுவில் ஒரு வெள்ளைத் துணியை விரித்து அதில் படுத்து விடுவார். பார்ப்பதற்கு அவர்  தூங்குவதுபோல் தானிருக்கும். ஆனால் இத்தகைய ASTRAL TRAVEL எனப்படும் சூட்சுமப் பயணத்தில்  கூட அவர் கண்கள் தியான நிலையைக் குறித்ததாகச்  சிறுவனுக்குத் தெரியவில்லை.
ஆனால் ..... எத்தனையோ சிந்தனைகள் உயரப் பறந்து கொண்டிருந்த சிறுவனுக்கு ஏற்பட்டாலும் கூட  அவன் மனம் எதிலும் இலயிக்கவில்லை.
பொதுவாக விழிகள் திறந்த நிலையைக் கண்டால் ஏதோ ஒருவித அச்சம் ஏற்படும் அல்லவா! ஆனால்   பெரியவரின் கண்களையும், அண்ணாமலையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டேயிருந்த சிறுவன்,  அவருடைய கண்களில் ஆனந்தம் பொங்கி வருவதைக் கண்டு வியந்தான், முன் ஒரு முறை  பாண்டிச்சேரியில் அன்னையின் (Mother) தரிசனத்திற்காக அங்கு பெரியவர் சிறுவனை அழைத்துச்  சென்ற போது, ''இந்த அன்னை உலகுக்கே அன்பைப் பொழியக்கூடிய தெய்வீக சக்தி நெறைஞ்சவங்க!  இவங்க தரிசனமே ரொம்ப விசேஷமானது தெரிஞ்சிக்கோ! இங்கேயும் அன்னதானம் பண்ற சான்ஸ்  உனக்குப் பின்னாடி கிடைக்கும்! நல்லா ஞாபகம் வச்சுக்கோ!'' என்று சொன்னார். அன்னையை (Mother) நெடுஞ்சாண் கிடையாக சிறுவன் வணங்கிட அன்னை புன்முறுவல் செய்தார். அப்போது  பெரியவர், ''இதுக்குப் பேர்தான் தெய்வீகச் சிரிப்பு! உள்ளத்துல அன்பு பொங்கி வழியும்போது உதடுகள்   மட்டுமல்லாமல் சிரசு முதல் பாதம் வரை தெய்வீகம் பூத்துக் குலுங்கும்படி முகம் நிறைய  பரமானந்தமே புன்சிரிப்பாகப் பொங்கும்.''
பெரியவருடைய விளக்கத்திற்குப் பிறகுதான் சிறுவன் அன்னையின் திருமுகத்தை நோக்கினான்.   தலைமுடியிலிருந்து நெற்றியும், புருவங்களும்,  இடுக்கிய கண்களும், கன்னங்களும்,  நாசியும்,   உதடுகளும், தாடையும் அனைத்துமே அன்பு அருவியாய் பொழிவதைக் கண்டு அவன் உடல்   சிலிர்த்தது!
ஏதேதோ, குரு தொட்டுக் காட்டிய.. தெய்வீக நிகழ்ச்சிகளில் லயித்து உயரப் பறந்த சிறுவன் திடீரென்று  கண் விழித்துப்பார்த்தான். இல்லை, இல்லை அவன் கண்கள் திறந்துதானே இருந்தன! எப்படி அவன்   திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் எங்கே கோழியைப் பிடித்தானோ அதே இடத்தில் தான்  இருப்பதைக் கண்டு அவனுக்கு ஆச்சரியமாய் விட்டது. பெரியவரோ ஹாயாகக் கால்களை நீட்டி  அமர்ந்திருந்தார், ஏதோ கால்கள் எல்லாம் வலிப்பது போல் முழங்கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தார்.
''ஏதோ ரெண்டு பேருமே பறந்து போன மாதிரி இருந்ததே! மலை கூட, கூடவே வளர்ந்த மாதிரி   தெரிஞ்சதே! எங்கேயோ பறந்தோம், எப்படி கீழே வந்து சேர்ந்தோம்! இவரோ ஏதோ நூறு மைல் கார்  ஓட்டின மாதிரிக் கால்களைப் பிடித்து கொண்டிருக்கிறாரே! இப்போதைக்கு அவர் வாயிலிருந்து ஒரு  வார்த்தையும் வராதே!'' சிறுவன் அங்கலாய்த்துக் கொண்டான்.
''ஆமாண்டா! மேலே பிளேன் ஓட்டிக்கிட்டே, ஆயிரக்கணக்கான மைல் ஓட்டறதுன்னா, அதிலும்  கண்ணத் திறந்துக்கிட்டே ஓட்டறதுன்னா, சும்மாவா ! '' பெரியவர் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே   குறும்புடன் சிறுவனைப் பார்த்தார்.
இவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பேசவும் கூடாது, நினைக்கவும் கூடாது என்று ஆயிரத்து  ஓராவது முறையாகச் சிறுவன் தீர்மானம் செய்து கொண்டான்.
இதற்கு முன்னரே சிறுவன் நேரடியாகவே இதைப் பற்றி பெரியவரிடம் கேட்டிருக்கிறான்.
"என்ன  வாத்தியாரே! எல்லாத்தையும் டக்டக்னு receive பண்ணிடறே! என்னால் எதையும் ஓப்பனா  சொல்ல  முடியாமல் போகுது! எதையும் ஒரு செகண்டு கூட நினைக்கவும் முடியாமல் போகுது.  கொஞ்ச நேரம் என்ன ஃப்ரியா விடமாட்டேங்கறியே! '' தான் பேசுவது பிரபஞ்சத்தையே ஆட்டி   வைக்கவல்ல ஓர் அற்புதமான சித்புருஷரிடம் என்பதை அவன் அறிந்தானில்லை. தான் விளையாட்டுப்    பிள்ளையாய் மோதி நிற்பது அண்ட சராசரத்தையே ஆட்டுவிக்க வல்ல மாபெரும் சித்தமாமுனி என்பதையும் அவன் உணர்ந்தானில்லை.
ஆனால்...
என்று அவன், தான் அண்டியிருப்பது, சரணடைந்திருப்பது, தன்னை ஆட்டுவிப்பது, ஈசன் வடிவில்   எழுந்தோடி வந்திருக்கும் சித்புருஷர் என்பதை உணரத் தொடங்கினானோ அன்றிலிருந்தே அவர் தன்   உடலை மறைத்துக் கொண்டு விட்டார்.
''உன்னை நாங்க ஃப்ரீயா திங்க் பண்ணவிட்டோம்னா மனசு கண்ட்ரோல் இல்லாமப் போயிடும். நீ   சின்னப் பையனா இருக்கிறதால தப்பு தண்டாவா ஒரு எண்ணமும் வராட்டாக் கூட இந்த வயசிலேயே   தெய்வீக எண்ணம் வர்றதுக்காகத்தான் நாங்க உன் மனசுல எந்த எண்ணமும் வறதுக்கு முன்னாடியே  ரீசிவ் பண்ணி சொல்லி கொடுத்திடறோம்.  இதனால் அந்த எண்ணமும் பூதாகாரமாக விசுவரூபம்   எடுத்து பூதாகாரமா வளர்ந்திடும். நாங்க பக்கத்துல இருக்கறப்போ உனக்கு எதுவுமே   தேவையில்லையே! சற்குருன்னா உன்னோட கஷ்டத்திலேயும், நஷ்டத்திலேயும் பங்கெடுத்துக்கிட்டு   பின்னாடியே நிப்பார். ஆனா அவரு எப்பவும் கூட இருக்கார்னு நம்பிக்கை இருந்தாத்தான் எந்த   அற்புதமும் நடக்கும்.
இப்ப அஷ்டமாசித்தியைப் பற்றிச் சொல்லிக் கொடுத்தேன்! உன் மண்டையில் அது ஏறாதுன்னு   எனக்கு நல்லாத் தெரியும். நீயும், நாமதான் சின்னப் பையனாச்சே! இதெல்லாம் நமக்கெதுக்குன்னு நீ   யோசிப்ப! இப்ப கூட நீ யோசிச்சுக்கிட்டே இருக்க ! ஒவ்வொரு மனுஷனுக்கும் உள்ளே ஒன்பது  சரீரங்கள் உண்டு. ஒவ்வொரு மனுஷனும் இந்த ஒன்பது மனசுலதான் மாறி மாறி  வாழ்ந்துகிட்டிருக்கான். அதனால் தான் திடீர்னு பக்தி வருது! சமயத்துல கெட்ட எண்ணம் வருது! அது    மாதிரி உடனே சாத்வீக எண்ணம் வருது. அதுவும் மாறி அவங்களைத் திட்டலாமா அப்படீன்னு இந்த  ஒன்பது மனசுங்களுக்குள்ளதான் மனுஷன் மாறி மாறி இருந்துக்கிட்டுருக்கான்.
ஆனா நாங்க சற்குருவாகப் பக்கத்துல இருந்துக்கிட்டு கொடுக்கிற ட்ரெய்னிங் என்னான்னா  மனுஷனோட ஒன்பது உடம்பையும், மனசையும் முழுசா தெய்வீகமா மாத்தறதுதான். ஆனா அது  ரொம்ப கஷ்டமான காரியம். எங்கமேல முழு நம்பிக்கை வச்சாத்தான் நாங்க இதைச் செய்வோம். அது  வரைக்கும், சற்குரு மேல் நம்பிக்கை வர்றவரைக்கும் எல்லா தெய்வீகக் காரியங்களையும்  செய்யவச்சிட்டே இருப்போம். அதுல முக்கியமானது தான் திருஅண்ணாமலை கிரிவலம்.

புத்தாண்டு அருளுரை

1998 வருடப் பிறப்பு முதல் தினந்தோறும் இவ்விதழில் உள்ள இரட்டை கணபதிக் காப்பினைத் தினசரி வழிபாட்டிற்குரிய வைராக்கியமாக மேற்கொண்டு குறைந்தது மூன்று முறையேனும் நிதமும் ஓதி வருதல் வேண்டும். ஒரு குடும்பத்திலேயே பல நட்சத்திரக்காரர்கள் இருப்பதாலும், உறவினர்கள், நண்பர்கள் எனப் பல்வேறு நட்சத்திரத்தாருடைய தெய்வீக மேம்பாட்டிற்காகவும் அனைத்து நட்சத்திரக் காப்பையும் தினந்தோறும் பாராயணம் செய்தல் சிறப்புடையதாகும். இதுவே பிறருடைய நல்வாழ்விற்காக ஆற்றப்படும் சிறந்த சமுதாய இறைத் தொண்டாகவும் அமைதிறது.
ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலும் ஏதேனும் ஒரு நற்காரியத்தை நிறைவேற்றுவதாக உறுதியெடுத்துக் கொள்ளுங்கள். அது தனக்காக, தன் குடும்பத்திற்காக அல்லாமல் பிறருடைய நல்வாழ்விற்காகவே அமையட்டும்.

ஸ்ரீஇரட்டைப் பிள்ளையார் மூர்த்திகள்
பூவாளூர்

கடந்த பல வருடங்களாக நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகள் அந்தந்த வருடத்திற்குள்ளோ அல்லது வாழ்நாள் முழுவதுமாகவோ நிறைவேற்றப்பட வேண்டிய நற்சேவை ஒன்றை வருட வைராக்யமாக அளித்து வருகின்றார்கள்.

  1. தினந்தோரும் பசு/காளைக்கு உணவளித்தல்
  2. சந்திராஷ்டம தினங்களில் அந்தந்த ராசிக்குரியவரின் நல்வாழ்விற்காக பசுவிற்குத் திங்கள் தோறும் சந்திர பகவானுக்குரித்தான உளுந்து உணவை அளித்தல்.
  3. மாதம் தோறும் ஏழை எளியோருக்கான மருத்துவ உதவி.
  4. யமபகவானுக்குரித்தான மக நட்சத்திரம் தோறும் அவருக்குரிய வாகனமான எருமைக்கு அகத்திக் கீரை தானம். (ஆரோக்கியம் மற்றும் ஆயுள் விருத்தி)
  5. தினந்தோறும் கோயிலில் எறும்புகளுக்காக ரவை + சர்க்கரை இட்டு வருதல்
  6. நவமி திதி தோறும் வெள்ளை ஆண் குதிரைக்கு அவித்த கொள் தானியம் அளித்தல் (மன ஓட்டங்கள் அடங்கி அமைதி பெற)
  7. தினந்தோறும் காக்கை, புறாவிற்கு உணவு அளித்தல் (பித்ருக்களின் ஆசியை பெறவும் பரந்த மனப்பான்மையை அடையவும்)
  8. சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் ஸ்ரீ விநாயகருக்கு ஹோமம்
  9. அந்தந்த நட்சத்திர தினங்களில் திருவொற்றியூரில் உள்ள நட்சத்திர லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தல்

… இவ்வாறாக பலவிதமான நித்ய வார, திதி வழிபாடுகள் கடந்த பல வருடங்களாக இடைவிடாது தொடர்ந்து நம் ஆசிரம அடியார்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இதனை ஆஸ்ரம அடியார்களுக்குக் கிட்டும் வரப்பிரசாதம் என்றே குறிப்பிடலாம். ஏனெனில் இத்தகைய விதவிதமான பூஜைகளின்/தானதருமங்களின் பலா பலன்களும் அற்புதமான புண்ய சக்திகளின் ஒரு பங்கும் ஒவ்வொரு அடியாருக்கும் நிதமும் கிட்டுகின்றது. இதுவே சத்சங்கத்தின் மஹிமையாகும்.
ஜாதி, இன பேதமின்றி பலர் சத்சங்கமாக ஒன்று கூடினால் எத்தனையோ இறைப்பணிகளை எளிதில் ஆற்றிடலாம். தனி மனிதனாக இவையனைத்தையும் செய்வதற்கு இயாலாததன்றோ! ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் எவ்வித ஜாதி பேதமுமின்றி இறைத் திருப்பணிகளையும் ஏழை எளியோரின் நல்வாழ்விற்கான அறப்பணிகளையும் எவ்வித விளம்பரமுமின்றி சத்சங்கமாகச் செய்து வருவார்களேயானால் இத்தகைய சத்சங்கக் கூட்டு பூஜையினால் கிட்டும் அபரிமிதமான புண்ய சக்தியால் சாந்தமான வாழ்க்கை அமைவதோடு சமுதாயமும் ஓர் ஆன்மீக அமைதிப் பூங்காவாக விளங்குமன்றோ!

சத்சங்கம் அமைப்பீர்
1998 ஆம் ஆண்டு பலரும் ஒன்றாகச் சேர்ந்து மேற்கண்ட வைராக்ய இறைப் பணிகளையும் மற்றும் ஈண்டு அளிக்கப்பட்டுள்ள புதுவிதமான வருட வைராக்ய இறைத் தொண்டுகளையும் ஆற்றி, எல்லாம் வல்ல இறையருளைப் பெற்று வாழ வேண்டுகின்றோம்.

  1. தங்களுடைய பிறந்த, திருமண நாட்களில் ஏழைகளுக்குப் புத்தாடைகள், பொன் மாங்கல்யங்கள் அளித்தல்.
  2. இனியேனும் மாதம் தோறும் இடைவிடாது தொர்ந்து மூன்றாம் பிறைச் சந்திரனை வானில் தரிசித்தல் – இது மிகச் சிறந்த வாழ்க்கை வைராக்யமாய் அமைந்து உத்தமமான இறைருளைப் பெற்றுத்தரும்.
  3. ஒரு வருடத்தில் தானும் தன் குடும்பத்தினரும் உண்கின்ற அரிசியின் அளவிற்கு ஈடாக அன்னதானம் செய்தல் அல்லது அதற்குரித்தான தொகையை அளித்தல் அல்லது இதற்குரிய தொகையேனும் ஆத்மார்த்தமாக அன்னதானம் செய்திடுவோரிடம் அளித்திடவேண்டும்.

ஒன்றை உணர்ந்திடுக, உங்கள் மூதாதையர்கள் எத்தனையோ ஏழைகளின் வயிற்றில் இட்ட உணவுதான் இன்று உங்கள் குடும்பதிற்கு மூன்று வேளை, ஆறுவேளையாக வட்டியும் முதலுமாக உணவாகத் திருப்பித் தரப்படுகிறது. திருஅண்ணாமலை, காஞ்சிபுரம், காசி, திருவிடைமருதூர், கும்பகோணம், ராமேஸ்வரம் மற்றும் பல புண்ய நதிக் கரைகளில் இடப்படும் அன்னதானத்திற்குப் பன்மடங்கு பலன்களுண்டு.

  1. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் புத்தாடைகளையும் இனிப்புகளையும், சர்க்கரைப் பொங்கல் கரும்பு போன்றவற்றையும் ஏழைகளுக்குஅளித்து மகிழ்ந்திடுக. தனியொரு மனிதன் நான்கு சுவர்களுக்குள் தன் குடும்பத்துடன் மட்டும் கொண்டாடுவது பண்டிகையாகாது என்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.
  2. இவ்வருடத்தில் அவரவர் வசதிக்கேற்ப ஓர் குறித்த தொகையையேனும் ஏழைகளுக்கு டானிக் மருந்து மாத்திரைகளாக அளித்தல்.
  3. குருடர்களுக்கு தேவையான, நடப்புக் கோல் (Walking sticks), Braille கடிகாரங்கள் அளித்தல், ஊனமுற்றோர்கான ஊன்றுகோல்கள் செயற்கைக் கால்கள் (Jaipur legs) அளித்து அறுவை சிகிச்சைகளுக்கு உதவுதல்.
  4. பிள்ளைகளால் நிராகரிக்கப்பட்டு அனாதைகளாக வாழும் முதியோர்களிடம் அன்புடன் கலந்துரையாடி மனதிற்கு இதமாகப் பேசி சரீரப் பணிகளைச் செய்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தல். (இதனால் எதிர்காலத்தில் நமக்கு இத்தகைய அனாதரவான நிலை ஏற்படாது என்பது நிச்சயம்)
  5. எத்தனையோ பஞ்சாயத்து மற்றும் கார்பரேஷன் பள்ளிகளில் உட்கார்ந்து படிக்க பெஞ்சு பலகை வசதியின்றியும், காலில் செருப்பின்றி கிழிந்த பைகளுடன் பரிதவிக்கின்ற மாணவர்கள் எத்தனை எத்தனை! பலர் ஒன்று சேர்ந்து இத்தகைய ஏழை மாணவர்களின் துயர் துடைக்கும் நற்பணிகளை எப்போதும் நிறைவேற்றி வரலாமே!

இவ்வாறாக நம்முடன் வாழ்கின்ற ஏழை எளியோரின் கஷ்டங்களைத் தீர்க்கும் உத்தமமான சேவையே அரிய இறைபணிகளாக அமைகின்றது என்பதை உணர்ந்திடுவீர்களாக. நமக்காக சுயநலமாக வாழ்ந்து பல வருடங்களைக் கழித்து விட்டோம். தான தருமம் என்பது ஒரு செலவு அல்ல. காபி, டீ, சிகரெட், பேப்பர், சினிமா போன்ற ஆடம்பரச் செலவுகளை நோக்குமிடத்து தான தரும செலவுகள் ஒரு பொருட்டல்ல என்பதை நீங்களே உணர்வீர்கள். எனவே நல்லதொரு வைராக்கியத்தை இவ்வருடத்தில் ஏற்று இறையருளால் தொடர்ந்து ஆற்றுவீர்களாக.

சித்தர்களின் பேரணி

எத்தனை எத்தனை சித்தர்கள்!
கோடிக்கணக்கான யுகங்களாகத் திருஅண்ணாமலைத் திருத்தலமானது பலகோடி சித்தர்களின் குடிலாக அன்றும் இன்றும் என்றும் விளங்கி வருகின்றது. நாம் அறிந்த, அறிந்திராத எத்தனையோ சித்தர்கள் இன்றும் எப்போதும் எந்நேரமும் நம் கண்ணுக்குத் தெரிகின்ற வகையில் மனித ரூபங்களிலும் இன்னும் எத்தனையோ வடிவங்களிலும் நம்மால் அறிய இயலாத சூட்சும வடிவுகளிலும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தவாறு உள்ளனர்.
ஏன்! கிரிவலப் பாதையில் நம்மைத் தொடர்கின்ற அல்லது முன் செல்கின்ற, கூட வருகின்ற ஆனோ பெண்ணோ, இளைஞரோ, வயதானவரோ, ஆடோ, நாயோ, கண்ணில் படுகின்ற காகமோ, கழுகோ, பாம்பு, கீரி போன்றவை கூட சித்தர்களாக இருக்கக் கூடும்!
சித்தர்கள் வெவ்வேறு காரணப் பெயர்களைத் தாங்கி ஜோதி பிழம்பாய் நம்முடைய நல்வாழ்விற்காக எத்தனையோ தியாகங்களைப் புரிந்து இறைவனை வேண்டியவாறே திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்றனர்.
யுகம் யுகமாக திருஅண்ணாமலையில் இருந்து வருகின்ற சித்புருஷர்களும் உண்டு. இறை ஆணையாக அவனே ஆண்டு வந்து அளிக்கின்ற மனித பிறவியை ஏற்று, மக்கள் அறியும் வண்ணமோ அல்லது தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத வண்ணமோ வாழ்ந்து தம் மானிட உடலைச் சட்டையெனக் கழற்றி ஜீவ சமாதி பூண்டோ அல்லது மறைந்தோ பிரம்ம ஜோதியாய்த் திகழ்கின்ற சித்தர்களும் உண்டு.
அங்கப் பிரதட்சண அண்ணாமலையார், இசக்கி மாமுனிச் சித்தர், பசுபதிநாதர், அரிக்கேன் சித்தர் போன்று மனிதர்களோடு மனிதர்களாய் வாழ்ந்த இறைப் பெருநிலையை உய்வித்தோர்களும் உண்டு. இசக்கி மாமுனி சித்தரும், அங்கப் பிரதட்சண அண்ணாமலை சுவாமிகளும் இதே காலத்தில் வாழ்ந்த அருட்பெருஞ் சித்தர்களாவர். இவர்களைக் கண்டு தரிசித்து வணங்கி சேவை புரியும் பாக்கியம் பெற்றோர் உண்மையிலேயே கிடைத்தற்கரிய பெரும் பேற்றைப் பெற்றவர்களாவர்.
எப்போதும் திருஅண்ணாமலையை அங்கப் பிரதட்சணம் செய்தவாறே பக்தர்களுடைய அருள் காணிக்கையினால் செய்தற்கரிய அன்னதான சேவைகளைப் பல வருட காலம் நிகழ்த்தி அரிய அன்னதான சத்திரத்தையும் நிறுவியவரே அங்கப் பிரதட்சண அண்ணாமலை சுவாமிகள் ஆவார்.
தற்போது, ஒரு முறை என்ன, ஒரு சிறு தூரத்திற்குக் கூட நம்மால் அங்க பிரதட்சணத்தை செய்ய முடியவில்லை. ஆனால் பல வருடங்களாக, திருஅண்ணாமலையை அங்கப் பிரதட்சணமாக வலம் வருதல் என்றால் அவர் எத்தகைய பேரருள் நிறைந்த பெருஞ்சித்தராவார்!
இதைப் போன்றே சமீப காலம் வரை மானுட உடலில் ஜோதியாய் உலா வந்த இசக்கி மாமுனி சித்தரும் எப்போதும் சங்கு ஒன்றை ஊதிய வண்ணம் திருஅண்ணாமலைய கிரிவலம் வந்திடுவார். வெறும் சங்கு சத்தம் என்று எண்ணாதீர்கள், பலவிதமான வேத மந்திர, பீஜாட்சர ஒலிகள் அவை! பல கொடிய கர்ம வினைகளையும் தீர்க்க வல்லவை! ஏதோ சங்கை ஊதுகின்றார் என்று பலரும் அவருடைய வாழ்நாளில் அறியாமையினால் எண்ணினர். ஆனால் இசக்கி மாமுனி சித்தரோ தம்மை யாரென்று காட்டி கொள்ளாது தம்முடைய தெய்வீக சங்கின் மகத்துவத்தையும் வெளிக்காட்டாது சாதாரண மனிதன் போல் வாழ்ந்து இறை ஜோதியுள் ஐக்கியமானார். ஆனால் திருஅண்ணாமலையாரிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள், “அவர் எப்போது சங்கை ஊதூவார், அந்த இறை ஒலியைக் கேட்கும் பாக்கியம் நமக்குக் கிட்டாதா” – என்று ஏங்கி அவரைப் பின் தொடர்வர். அவர் நம் முன்னால் எங்கோ சென்று கொண்டிருப்பது போலிருக்கும், அவரும் சங்கை எடுத்து ஊதத் தொடங்குவார் போல் தோன்றும், ஆனால் சட்டென்று மறைந்து கிரிவலத்தில் வேறெங்கோ நடந்து கொண்டிருப்பார். அவருடைய சங்கொலியை கேட்கும் பேறு பெற்றவர்கள் மிகவும் பாக்கியசாலிகள்!

அரிக்கேன் சித்தர்
அடுத்ததாக அரிக்கேன் சித்தர்..
அரிக்கேன் சித்தருடைய அருட் சேவையே அலாதியானதாகும். விதவிதமான காரணப் பெயர்களைச் சூடி அதிசயமான பல சேவைகளைப் புரிந்த வண்ணம் உத்தம் இறைலீலைகளைக் காட்டிய சித்தர்களுள் அரிக்கேன் சித்தரும் ஒருவராவர். எப்போதும் கையில் ஒரு அரிக்கேன் விளக்கைத் தாங்கிய வண்ணம் இருப்பவர் ஆதலின் அவருக்கு இந்த காரண பெயர் ஏற்பட்டது. இரவில் கிரிவலம் வருகின்றவர்களுக்கு அரிக்கேன் விளக்கைத் தூக்கிக் கொண்டே முன்னால் வழி காட்டுவார். ஒரே சமயத்தில் கிரிவலத்தில் பல இடங்களிலும் பலருக்கு விளக்கினால் வழிகாட்டிய அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் இன்றும் இருக்கின்றன.
அந்த அரிக்கேன் விளக்கிற்கு அவர் மண்ணெண்ணெய் ஊற்றியதையோ, திரி மாற்றியதையோ, விளக்கை ஏற்றியதையோ எவரும் கண்டதில்லை! எவ்விதக் காற்றடித்தாலும் சலனமில்லாமல் வழிகாட்டும் அருள் விளக்கு அது! சில சமயங்களில் வேண்டுமென்றே கிரிவலப் பாதையை விட்டு அவர் விலகிச் செல்வார். உண்மையிலேயே பக்தியோடு அவரைப் பின் தொடர்பவர்களுக்கு அரிக்கேன் விளக்கை முன் தூக்கி காண்பித்து மிகச் சிறப்பான அண்ணாமலை தரிசனங்களைக் காட்டுவார். ஆனால் எதுவும் பேசுவதில்லை. அவரை ஏதோ வழிப்போக்கர் என்று எண்ணியோருக்கு அத்தகைய உத்தம தரிசனங்கள் கிட்டுவதில்லை.
கிரிவலத்தின் முக்கியமான சில குறித்த இடங்களில் அவர் எப்போதும் கையில் அரிக்கேன் விளக்குடன் அமர்ந்திருப்பார். ஒருவரோ இருவரோ வந்தால் கூடப் போதும், எதையும் கேட்கும் முன்னரே அவரே விளக்கை எடுத்து கொண்டு வழி காட்டத் தொடங்கிவிடுவார்! ஒரே சமயத்தில் கிரிவலத்தின் பல இடங்களிலும் இவ்வாறு அரிக்கேன் விளக்கைத் தாங்கிய அவருடைய திரு உருவங்களைக் கண்டதாக பல கிரிவல அடியார்கள் பல ஆண்டுகட்கு முன் அதிசயத்துடனும் ஆனந்தத்துடனும் குறிப்பிட்டுள்ளனர்.
நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவமிகளுக்கு அவருடைய சற்குரு நாதர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகள் குருவருட் கருணையால் அரிக்கேன் சித்தரைத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. இவ்வற்புத சித்தரின் மகிமையைப் போற்றும் வண்ணமாகவே நம்முடைய ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் இன்றும் பல அரிக்கேன் விளக்குகள் மாட்டப் பட்டுள்ளன.
அரிக்கேன் சித்தர் விரும்பி அமர்ந்த பல இடங்களில் ஒன்றே நம் ஆஸ்ரமத்தின் அருகில் இருந்த சுமைதாங்கிக் கல்லாகும். சில ஆண்டுகளுக்கு முன் வரை இச்சுமை தாங்கிக் கல் நமது ஆஸ்ரமத்திற்கு முன் இருந்தது.
கோகர்ண சித்தர், பசுபதி நாதர், ஆவுடை அக்கா, லாட முனிவர், மரமேறிச் சித்தர், தூதுவளைச் சாமி, அமாவாசை சித்தர், பிறாண்டி முனிவர், ஏர் தூக்கி சித்தர், சங்கு முனி சித்தர், ஆமணக்கு சித்தர், பஞ்ச மணி சித்தர், சல்லாத் துணி சித்தர், நீரோட்ட வல்லாட்ட முனி சித்தர், குடிக் கொம்பு முனி சித்தர், சச்சிதானந்த பரப்பிரம்ம பூண்டி, ஆற்று சுவாமிகள் போன்றவாறாக பல வகையான அற்புதமான சித்தர்கள் இன்றும் சூட்சுமமாக உலவி வரும் புனித பூமியே திருஅண்ணாமலையாகும். இன்றும் கோடிக்கணக்கான சித்தர்கள் என்றும் கூடி நிற்கும் சித்தர் திரு பூமியே திருஅண்ணாமலை திருத்தலம்.
இவர்களை பற்றிய மகாத்மியங்களை ஓரளவேனும் ஸ்ரீ அகஸ்திய விஜயம் மூலமாக பக்த கோடிகளுக்கு அளித்திட எல்லாம் வல்ல திரு அண்ணாமலையாரின் திருஅருளை வேண்டுகின்றோம்.

1998 புத்தாண்டுச் செய்தி
ஈசுவர வருடத்தின் மிகப் புனிதமான உத்தராயணப் புண்ணிய காலமானது தை மாதம் முதல் தேதியன்று (14.1.1998) உதயமாகின்றது.
இவ்வாண்டின் மகா சங்கராந்திக்குரிய தேவியே மகோதரி தேவியாவாள். மகர சங்கராந்தி எனப்படும் தைப் பொங்கல் அன்று மகோதரி தேவியின் தெய்வீக சக்திகள் உச்சத்தில் கூடுகின்றன. தெய்வமூர்த்திகளின் சிலா ரூபங்களில் இறைசக்தி மிகவும் பரிபூர்ணமாக நிறைந்திருக்கும் அல்லவா! அவற்றைப் பெறுவதற்கான இறை வழிபாடுகளையும் புனிதமான உடலையும் நாம் பெற்றாக வேண்டும். அல்லது பலருடைய நல்வாழ்விற்காக சாதி, மத, இன வேறுபாடு இன்றி உண்மையான உள்ளத்துடன் சமுதாய இறைப் பணிகளைச் செய்து வந்தால் அந்த இறைச் சக்திதானே முன்வந்து தியாக சீலர்களுக்கு அருள்பாலிக்கும்.
இதே போன்று மகர சங்கராந்தி தெய்வ மூர்த்தியான ஸ்ரீ மகோதரி தேவியின் பரிபூர்ண கடாட்சத்தைப் பெற, பலவிதமான எளிய பூஜை முறைகளையும், மூலிகைக் காப்பு முறைகளையும் சித்புருஷர்களின் கிரந்தங்கள் விளக்குகின்றன. ஏனெனில் மூலிகைகளில் சிலவற்றையேனும் தினந்தோறும் உண்டு வந்தால்தான் மூலிகா சக்திகளின் அற்புதத்தால் நம் உடலும் மனமும் ஆரோக்கியமும் புனிதம் பெறுவதோடு தெய்வ சக்தியினை மிக எளிதில் கிரகிப்பதற்கான விசேஷமான உடல் அமைப்புகளும் ஏற்படுகின்றன. எனவே நம் உணவு முறைகளில் பொன்னாங்கண்ணி, வல்லாரை, அருகம்புல் போன்றவை கட்டாயம் இடம் பெற வேண்டும்.
ஆங்கிலப் புத்தாண்டு தினமானது கிட்டத்தட்ட உத்தராயணத்தை ஒட்டி இருப்பதாலும் தட்சிணாயன கிரணங்கள் முடிந்து உத்தராயண கிரணங்களின் ஆட்சியின் தொடக்கத்தில் இருப்பதாலும் இவ்விதழில் “மகர சங்கராந்தி மூலிகைக் காப்பு முறை” என்னும் தலைப்பில் அளிக்கப்பட்டுள்ள தெய்வீக மூலிகை உணவு முறைகளை 1.1.1998 முதல் அதாவது தட்சிணாயன, உத்ராயண காலச் சங்கமத்திலிருந்து கடைபிடிப்பது மிகவும் சிறப்புடையதாகும்.
நல்ல உடல் ஆரோக்கியம், தெளிந்த அறிவு, அமைதியான மனம், வைராக்கியமான உள்ளம் ஆகியவற்றோடு பெறற்கரிய புனிதத் தன்மையையும் அளிக்க வல்லதே ஈஸ்வர வருட உத்தராயண புண்ணிய காலத்தில் தொடங்கப்படும் ஸ்ரீ மகோதரி தேவியின் மூலிகா வழிபாட்டு முறையாகும்.
மகரசங்கராந்தி மூலிகைக் காப்பு முறை

  1. வேம்பும் வில்வமும் கலந்து தினந்தோரும் உண்டு வருதல் வேண்டும். இவ்வாறாகவே மாவிலையும் அத்தியும் தினமும் உடலில் சேருதல் வேண்டும். இயன்ற வரை இம்மூலிகைகளின் பச்சை இலைகளை உண்டு வருதல் சிறப்புடையது. தற்காலத்தில் இவ்வித மூலிகைப் பொடிகள் எளிதில் கிடைப்பதால் அவற்றையும் உண்டிடலாம். மூலிகைகளை உண்டு பழக்கமில்லாதோர் ஒரு வாரம் வேம்பு + வில்வமும் மறுவாரம் மாவிலை + அத்தியும் உண்டு வருதல் வேண்டும்.
  2. பத்து நட்களுக்கு ஒரு முறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க வேண்டும்.
  3. வாரம் தோறும் சனிக்கிழமை அன்று பச்சை பாகற்காய் சாறு அருந்தி வர வேண்டும்.
  4. வாரம் ஒரு முறை குறிப்பாக வியாழனன்று மலையருவி நீரில் நீரடுவது உடலுக்கு நல் ஆரோக்யத்தையும் உள்ளத்திற்கு தெய்வீக சக்தியையும் தரும். இது அனைவருக்கும் சாத்தியமானதல்லவே! எனவே வியாழக்கிழமை தோறும் சுத்தமான கங்கை நீர் கலந்த நீரிலேனும் நீராடுதல் வேண்டும்.
  5. திங்கள் இரவு முழுதும் வியாழன் இரவு முழுதும் துளசி இலைகளை நீரில் போட்டுவைத்து மறுநாள் செவ்வாயன்றோ அல்லது வெள்ளியன்றோ நாள்முழுதும் அத்துளசி நீரையே அருந்த வேண்டும். இயன்றவரை பிற நீரைத் தவிர்த்திடுக. உணவைச் சாதாரணமாக உண்டிடலாம்.
  6. இதேபோன்று ஞாயிறு இரவிலும் புதன் இரவிலும் வில்வ இலைகளை நீரில் போட்டு வைத்து மறுநாள் வியாழனன்றோ அல்லது திங்களன்றோ அந்நீரையே பருகுதல் வேண்டும். பிற நீரை அருந்திட வேண்டாம். உணவு முறைகளில் எவ்வித மாறுபாடுகளும் தேவையில்லை.
  7. மாணவ மாணவியர் ஒவ்வொரு புதன் கிழமையன்றும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்திடில் ஞாபக சக்தி விருத்தி அடைவதோடு படிப்பில் நாட்டம் ஏற்பட்டு கல்வி அறிவு மிகும். மாலை கிரிவலம் எனில் மதிய உணவிற்குப் பின் எதுவும் உண்ணாது மலையைச் சுற்றிய பின்னரே உணவேற்க வேண்டும்

அதாவது கிரிவலத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன்னரே எதுவும் உண்ணாதிருத்தல், ஒருமுகப்பட்ட மன நிலையைத் தரும்.

திருஅண்ணாமலை மட்டுமின்றி அய்யர்மலை (குளித்தலை), உச்சிப் பிள்ளையார் கோயில், பர்வத மலை, பழனி மலை, திருக்கச்சூர் சிவன் மலை, குடுமியான்மலை, விராலிமலை, குன்றக்குடி, கரூர் வெண்ணெய்மலை, பச்சைமலை, தாந்தோன்றி மலை போன்ற மலைத்தலங்களிலும் கிரிவலம் வந்திடலாம்.
மேற்கண்ட எளிய மூலிகைக் காப்புகளின் வழிபாடுகளைக் கடை பிடித்திடில் மஹோதரி தேவியின் நல்லாசிகளைப் பெறுவதற்கான தக்க உடல் ஆரோக்யமும், தெய்வீக மனோ நிலையும் கிட்டும். எத்தகைய குழப்பங்கள் ஏற்படினும் மிகவும் தீர்க்க தரிசனமான முடிவை எடுத்திடலாம். மூலிகைகள் வெறும் மருத்துவ குணங்களை மட்டும் கொண்டிருப்பவை அல்ல. அனைத்தும் ஆரோக்யம் மட்டும் தருவதில்லாமல், சாந்தம், சத்வ குணத்துடன் தெய்வீக சக்திகளை கிரஹிக்கின்ற உடல், மனப்பாங்கினையும் அளிக்கின்றன. இத்தகைய ஆன்மீக ஆற்றலை வேறு வகையில் அடைய வேண்டுமெனில் கடுமையான தவத்தையோ மணி மந்திர சித்திகளையோ பெற்றாக வேண்டும். எனவே தினந்தோறும் ஒரு மூலிகை கீரையை உண்டு தைலங்களை தலையில் தேய்த்து ஊறி வந்திடிலோ, வில்வம் துளசி வல்லாரை போன்ற மூலிகை இலைகளை, சாறினை உண்டு/அறுந்தி வந்தால் எளிய முறையில் பல தெய்வீக சக்திகளைப் பெற்றிடலாம்.

சற்குரு

உங்களுடைய சற்குரு யார்?
“ஸ்ரீ அகஸ்திய விஜயத்தில் தக்க சற்குருவை நாடி தெளிவு பெறுக”, என்று வாக்கியம் அடிக்கடி எழுதப்படுவதைக் குறித்து வாசகர்கள் பல கடிதங்களை எழுதிய வண்ணம் உள்ளனர். தற்காலத்தில் சற்குருவைக் காண்பது எளிதோ? சற்குரு என்பவர் எப்படி இருப்பார் என்பதை சாதாரண மனிதர்கள் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?
தற்போது பலரும் பலவிதமான காவி உடைகளில் உலவி வருகின்றனரே இவர்களுள் சற்குரு என்பவரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது. சற்குரு தாமே தம்மை அறிவித்துக் கொள்வாரா அல்லது நாமாக அறிந்துகொள்ள வேண்டுமா, அவரை இவ்வாறு பல விதமான வினாக்களுடன் பலரும் விளக்கங்களை பெற விரும்பி எழுதியுள்ளனர்.
கிரதயுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகமென நான்கு யுகங்களிலும் சற்குரு மூலமாகத்தான் முக்தியையோ மோட்சத்தையோ பெற முடியும். ஸ்ரீ ராமருக்கு கூட வசிஷ்டரும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு சந்தீபனியும் சற்குருவாய் அமைந்ததை நாம் அறிவோம். இவ்வாறு தெய்வாவதார மூர்த்திகளும் மகரிஷிகளும் தாங்களே சற்குருவை ஏற்று எடுத்துக்காட்டாக வாழ்ந்து சற்குருவின் மகத்துவதை உணர்த்தியுள்ளனர். ஆனால் நான்கு யுகங்களிலும் மனிதனுடைய வாழ்க்கை முறைகள் மாறிமாறி வந்துள்ளன. திரேதா யுகத்தில் உண்மையிலேயே மிகப் புனித தெய்வீக சக்தியினை உடையோரே காவியுடையை தரித்தனர். ஆனால் கலியுகத்திலோ காவியின் புனிதத் தன்மையை உணராது காவி கட்டுவதற்கான தெய்வீக விதிகள் புறக்கணிக்கப் படுகிறது என்பது வேதனைக்குரியதாகும்.

ஸ்ரீசந்திரசேகரர்
திருமீயச்சூர் சிவாலயம்

ஸ்ரீஅருணை ஈசனுக்கு
மாலை கதிரவனின் மங்களபூஜை
திருமீயச்சூர்

எனவேதான் கலியுக நியதியாக இறைவனால் அனுப்பப்ட்ட இறைத் தூதுவர்களாக பிறப்பெடுக்கின்ற சற்குருமார்கள் துறவிகளாகவோ அல்லது பெரும்பாலும் தாமே இல்வாழ்க்கையை ஏற்று நம்முள் ஒருவராகவோ வாழ்ந்து தெய்வீகத்தைப் போதிக்கின்றனர். சற்குருவை அறிவதற்கே உடலும் மனமும் பக்குவப் படவேண்டும். சற்குருவை அடைவதற்கு மிகமிக எளிய வழி “இறைவா எனக்குரிய சற்குருவைத் தந்தருள்வாயாக”, என மனமுருக பிரார்த்தித்து திருஅண்ணாமலையை ஆழ்ந்த நம்பிக்கையுடன் பலமுறை வலம்வந்து வணங்கிடில் இறைவனே உவப்புடன் சற்குருவை அளித்திடுவான். ஸ்ரீ வள்ளளார் ஸ்வாமிகள் ஸ்ரீ காஞ்சி பரமாசாரியார் போன்றோர் கோடிக்கணக்கான மக்களை கரையேற்றுவதற்காக இறை ஆனையாக மானுடப் பிறவி எடுத்து தம்முடைய அடியவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக பூலோகத்திற்கு வந்தபோது எத்தனை மனிதர்கள் அதனை நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.
பிள்ளையார் சிலையைத் திருடுதல் சரியா?
எங்கிருந்தாவது பிள்ளையார் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தால்தான் விசேஷமானது என்ற கருத்து நிலவி வருவது மிகவும் வேதனைக்குரியதாகும். இன்னும் சொல்லப்போனால் பிள்ளையாரைத் திருடி வந்து இன்னொரு இடத்தில் வைக்கின்ற பழக்கம் கூட, இப்போதும் சில இடத்தில் இருந்து வருகிறது. ஆன்மீகத்திற்கு இது ஏற்புடையதல்ல. பலவித வேத, மந்திர, தந்திர, யந்திர சக்கிரங்களுடனும் மணி மந்திரங்களுடனும் ஓர் இடத்தில் தெய்வ வடிவு கொண்ட விநாயகரைப் பெயர்த்து எடுப்பது மிகவும் பாவகரமான செயலாகும். இதற்கு உடந்தையாக இருப்போர் சொல்லொனாத் துயரங்களை அனுபவிக்க நேரிடும் என்பதை உணர்ந்திடுக. எனவே பிள்ளையார் சிலையைத் திருடி வந்து இன்னொரு இடத்தில் வைக்கின்ற வழக்கத்தை பக்தர்கள் அனைவரும் ஒன்று கூடித் தடுப்பீர்களாக!
மனிதர்கள் அறிந்தோ அறியாமலோ இப்பெரும் பிழை இதுகாறும் செய்திருப்பினும் இனியேனும் விழிப்புணர்ச்சி கொண்டு இத்தகைய மாபெரும் குற்றத்தை செய்யாதிருப்பார்களாக! புதிதாக பிள்ளையார் கோயிலை நிர்மாணிக்க வேண்டுமெனில் ஒரு புதிய சிலையைத் தக்க ஆகம விதிகளுடன் அமைத்திட வேண்டும். ஓர் இடத்தில் உள்ள பிள்ளையார் சிலையை மற்றொரு இடத்திற்குப் பல நியாயமான காரணங்களால் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்குரிய ஆகம நியதிமுறைகளைக் கடைபிடிக்கவேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் பூஜையில் உள்ள எந்த விநாயகர் சிலையையும் மற்றொரு இடத்தில் வைப்பதற்காகக் கவர்ந்து செல்லுதல் கூடாது. இவ்வாறு திருடப்பட்ட பிள்ளையார் சிலைக்குத்தான் தெய்வீக சக்தி அதிகம் என்று எண்ணுவது என்பது அறியாமையின் பாற்பட்டதாகும். இதனால் விளையும் விபரீதங்களும் தீவினைகளும் பலப்பல என்பதை இனிதேனும் அறிந்து தெளிந்து நல்ல பாடத்தைச் சமுதாயத்திற்கு புகட்டுவோமாக.

பசுவின் கன்றிற்கான பவித்ரமான மடிப்பால் தானம்
தான தருமங்கள் என்றால் மனிதர்களுக்கு மட்டும்தானா? இல்லை, காக்கை, புறா, கோழி, பசு, காளை,யானை, மயில்… எனப் பலவித ஜீவராசிகளுக்கும் செய்யப்படும் தான தருமங்கள் பல உண்டு. இவற்றுள் மிகவும் சிறப்புடையதொன்றாக விளங்குவதே பசுவின் கன்றிற்கான மடிப்பால் தான மாகும்.
அதாவது மிகவும் எளிமையாகப் புரியும்படி சொல்வதானால் உங்களுடைய பால்காரரிடம் அவருக்கு ஒரு நாளில் பால் மூலம் வருகின்ற வருமானத்தைப் பணமாக அவரிடம் கொடுத்துவிடுங்கள். ஒரேயொரு நிபந்தனையின் பேரில்! அன்றைய நாள் முழுவதும் கன்றுக் குட்டியானது தாய்ப்பசுவின மடிப்பால் முழுவதையும் எவ்விதத் தடங்கலுமின்றி ஆனந்தமாக அருந்துவதற்கு அவன் அனுமதிக்க வேண்டும். அப்பசுவிடம் பால்காரர் அன்று பாலைக் கறக்காது பால் அனைத்தையும் அதன் கன்றே அருந்தும்படி விட்டுவிட வேண்டும்.
“கோ பாலசிருட்ச தானம்” என்று அழைக்கப்படும் இத்தகைய தானமானது மிகவும் அற்புதமான பெரும் புண்ய சக்தியைத் தரவல்ல, பல வகையான செல்வப் பேறுகளை அளிக்க வல்ல தானமாக சித்புருஷர்கள் அருள்கின்றனர். எல்லாவற்றையும் விட அன்றைய நாள் முழுவதும் விவரிக்க இயலாத, சொல்லில் அடக்காத ஒரு பரமானந்த நிலையில், பேரானந்தத் துள்ளலுடன், மகிழ்ச்சி ததும்புகின்ற பரவசத்துடன், ஆனந்தப் பெருக்குடன் அப்பசுங்கன்று பிரம்ம நிலையில் நடைபோடுவதைக் கண்டு உங்கள் உள்ளத்தில் அளப்பிலாப் பேரின்பம் சுரத்தலை நன்கு உணர்வீர்கள். எத்தனைக் கோடி பணம் கிடைத்தாலும் பெற இயலாத பெரும்பேறு இது. 16 வகையான செல்வங்களைப் பற்றி சொல்வார்களே, அதையும் விஞ்சிய சிவானுபவ நிலையை கிருஷ்ணாமிருதத்தை தரவல்லதாகும் இத்தானம்.
தம் வாழ்க்கையில் பலரும் வேண்டுமென்றே அறிந்தும் அறியாமலும் பலரை வஞ்சித்தும் ஏமாற்றியும் பிறருடைய சொத்துக்களை அனுபவித்திருப்பர், ஏன்? தினமும் ஓசியில் அலுவலகத்தில் செய்கின்ற டெலிபோன் கால்கள் எத்தனை? எத்தனை? வீட்டிற்குக் கடத்திவரப் படுகின்ற பென்சில் பேனா பேப்பர் குண்டூசி பொன்றவையும் கணக்கில் அடங்காதன்றோ. இவையும் பிறர் சொத்துக்களன்றோ. ஒவ்வொரு குண்டூசியாக பெரும் பாவவினைகள் சேர்ந்து கூட்டு வட்டியாகி பிரம்மாண்டமான இரும்பு மாலையாய் கர்மவினைகள் திரண்டு கண்முன் நிற்கும். இவற்றுக்கு ஓரளவேனும் பரிஹாரமாக, ஓர் அற்புதமான பிராயச்சித்தமான “கோ பால சிருட்ச தானமாகிய” கன்றுக்கு மடிப்பால் தானத்தை அளிக்கின்ற நற்செயலை இயன்றபோதெல்லாம் செய்து வருதல் வேண்டும்.

பாதாளலிங்க மகிமை

சென்ற இதழில் பாதாள லிங்க மஹிமை பற்றிய அடிப்படை விளக்கங்களைக் கண்டோம் அல்லவா! மேல் உலகங்கள், கீழ் உலகங்கள் போல் பாதாள உலகங்களும் உண்டென்பது உண்மையே! பாதாள லோகங்களில் கூட, நாம் வாழும் நிலப்பரப்பின் கீழுலுள்ள பூமியின் பாதாள பகுதி லோகங்கள் வேறு, நம்முடைய பூமிக்கோளத்தை அடுத்து, மேலும் கீழும் பக்கவாட்டிலுமாக உள்ள பல லோகங்கள் வேறு. இவற்றிலும் எத்தனையோ கோடி ஜீவராசிகளுண்டு. எல்லாவற்றையும் படைத்த இறைவனின் பேரருளை, பெருஞ்ஜோதி தரிசனத்தை உணர்வதற்கு நம் குறுகிய, சுயநலமான மனப்பான்மையை விடுத்துப் பரந்த பகுத்தறிவைப் பெற்றிட வேண்டும். இதற்கு ஒரே வழி தக்க சற்குருவைச் சரணடைதலாகும்.

ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர்
திருஅண்ணாமலை

நம்முள் அசுரர்களா?
தேவர்கள். அசுரர்கள் என்ற பாகுபாடு அவரவர் எண்ண ஓட்டங்கள், மனோ நிலைகளைப் பொறுத்ததாகும். பொறுமை, துரோகம், அசத்தியம், குரோதம், முறையற்ற காமம், சினம், ஏமாற்றுதல், களவு, அகங்காரம், ஆணவம், செருக்கு, ஆடம்பரம், சுயநலம், பணிவின்மை, அடக்கமின்மை, லோபம் என எத்தனை விதமான அசுர குணங்கள் மனிதர்களிடம் குடி கொண்டுள்ளன. இந்த அசுர சக்திகளெல்லாம் அழிந்தால்தான் ஒரு மனிதன் சுய பிரகாசமாய், ஆத்ம ஜோதியாயத் திகழ முடியும்! ஆனால் மாணவப் பருவங்கள் போக எஞ்சியிருக்கும் 60, 70, 80 வருட ஆயுளில் தன் அசுர குணங்களை ஒழிக்கவா முயற்சியெடுக்கின்றான்? இறக்கும் தருவாய் வரை மது, புகையென அசுர பழக்கங்களில் மிதப்போர் எத்தனையெத்தனை? ஒரு சிகிரெட்டினாலோ, பீடியினாலோ விடுகின்ற நச்சுப் புகையில் இருபது, முப்பது மனிதர்களுடைய நூரையீரல்கள் பாதிக்கப் படுகின்றதென்றால் எத்தகைய கொடிய குற்றமிது! தன் வாழ்நாளில் புகைபிடிக்கும் பழக்கத்தால் இலட்சக் கணக்கானோருடைய இருதயத்தைப் பதம் பார்க்கும் இக்கொடிய குற்றத்திலிருந்து எவ்வாறு வெளிவருவது? எத்தனையோ அடிமைத் தளைகளிலிருந்து அறுபட்டு வந்த மனிதன், கேவலம் புகை பிடிப்பதற்கும் மது அருந்துவதற்கும் அடிமையாகி விட்டான்! இதற்கு பரிஹாரமென்ன?

ஸ்ரீபாதாள ஐயனார்
திருச்சி மலைக்கோட்டை

திருஅண்ணாமலை ஸ்ரீ பாதாளலிங்கம், விருத்தாசலம் ஆழத்துப் பிள்ளையார், திருச்சி மலைக்கோட்டை பாதாள ஐயனார் போன்ற பாதாளத்தில், சமநிலத்தின் கீழ் உறையும் தெய்வமூர்த்திகளுக்கு (திருச்சி திருநெடுங்களம் ஸ்ரீநெடுங்களநாதர், தஞ்சை திருவையாறு பகுதிகளில் உள்ள சில ஸ்ரீ அக்னீஸ்வர மூர்த்திகள்) அசுர சக்திகளை மாய்க்கும் சக்தி அபரிமிதமாக இருப்பதால் புகைபிடிக்கும் தீயபழக்கமுள்ளோர் இத்தகைய பாதாள லிங்க மூர்த்திகளுக்கு அடிக்கடி சாம்பிராணி தூபம் இட்டு வர வேண்டும். பல வருடப் புகைப் பழக்கம் தீர்ந்திட இயன்ற போதெல்லாம், வாரம் ஒருமுறையேனும் குங்கிலிய (சாம்பிராணி) தூபம் இட்டு வந்திடில் இயற்கையாகவே இக்கொடிய பழக்கத்திலிருந்து வெளிவந்திடலாம்.
(எம்முடைய ஆஸ்ரம வெளியீடான சாம்பிராணி மஹிமை என்னும் நூலில் மேலும் பல அரிய விளக்கங்களைக் காணலாம்)
சாம்பிராணிப் புகைக்குப் பரவெளியைய் தூய்மைப்படுத்தும் அற்புத தெய்வீக சக்தி உண்டாதலின் புகை பிடித்துப் பரவெளிக்கு நஞ்சூட்டிப் பாழ்படுத்திய வேதனைகளுக்கு ஒரே பரிஹாரம் இது ஒன்றேயாம்!
பல அசுரர்களை மாய்ப்பதற்காக மஹரிஷிகள் பாதாள மூர்த்திகளிடம்தான் சரண்புகுந்து அரும் பெருந்தவங்களை மேற்கொண்டனர்.
புண்யங்களில் கூட அசுர புண்யங்கள் உண்டு. தீய செயல்களின் பாங்காக ஓரிரு நற்செயல்களைக் கூடவே செய்திடுதலாலும் அசுர புண்யம் சேர்வதுண்டு! உதாரணமாக லஞ்சம், ஏமாற்று வேலை, திருடு, லாட்டரிச் சீட்டு விற்றல், சீட்டுக் கம்பனி மோசடி போன்றவற்றால் சம்பாதித்த லட்சகணக்கான தொகையில், யாருமறியாமல் ரகசியமாக திருப்பதி, திருத்தணி போன்ற கோயில் உண்டியல்களில் குறித்த தொகையைச் செலுத்தி விடுவதால் ஓரளவு அசுர புண்யம் உண்டாகும். இது ஏற்புடையதல்ல என்றாலும் தீவினைக் கர்மங்களின் தண்டனைகளின் கொடுமையைச் சற்றே தணிக்கப் பயன்படக் கூடும் என்றாலும் நன்னிலைக்கு இது வழிகாட்டாது!
பல அசுரர்கள் இவ்வாறே கொடிய தவம் பூண்டு இறவாமலிருந்து பல கொடுமைகளை இழைப்பதற்கு அசுர புண்யத்தை பெற்றனர். பாகப்பிரிவினையில் ஏமாற்றுதல், லாட்டரிச் சீட்டு வரும்படி, பிதுரார்ஜித மூதாதையர் சொத்துக்களை ஆடம்பரமாக, அநீதியான கேளிக்கைகளில் செலவழித்தல் போன்றவையெல்லாம் மேற்குறித்த தீவினைக் கர்மங்களில் அடங்கும். ஏனெனில் இத்தகைய கொடுமைகளால் துன்புறுவோர் “மண்ணைத் தூவி” வேதனைகளால் சாபமிடுவர்! “மண் தூவி” இடப்படும் சாப வினைகளுக்குப் பரிஹாரமாக அமைவதே பாதாள லிங்க வழிபாடு. இவர்கள் கங்கை, காவிரி போன்ற புனித தீர்த்தங்களை ஒரு களிமண்ணில் வடிக்கப்பட்ட குடுவை/கண்டியில்/கிண்டியில்/கமண்டலத்தில் நிரப்பி அதன் மூலம் அபிஷேகம் செய்து பூமிக்கு கீழே விளையும் கிழங்கு வகை உணவுகளை அன்னதானம் செய்து வரவேண்டும்.
மேலும் பாதாள லிங்க மூர்த்திக்கு ஈர்ப்பு சக்தி, சாயா அனுகிரஹ சக்தி, அயன விருத்திசக்தி போன்ற பலவிதமான சக்திகளுண்டு. சமதளத்தில் உள்ள மூர்த்திகளைவிட பன்மடங்கு சக்தியை அளிப்பவர்களே பாதாளலிங்க மூர்த்திகளாவர்.

ஸ்ரீபாதாள ஈஸ்வரன்
வாத்தலை திருச்சி

ஸ்ரீபாதாள ஈஸ்வரன்
அரித்துவாரமங்கலம்

முடியை முடிவீர்
பாதாள லிங்க மூர்த்தியை தரிசிக்கையில் ஜடாமுடியுடன் தரிசிப்பது மிகவும் விசேஷமாகும். ஏனெனில் ஜடாமுடிக்கு தெய்வீக சக்தியைத் தாங்கும் சக்தி அதிகமாகும். ஆண்களாயின் மேலாடை இன்றி தரிசித்தல் விசேஷமாகும். குடுமி வைத்திருந்தாலோ அல்லது சாதாரண கிராப்பாய் இருப்பின் உச்சியில் முடியை நன்கு ஒரு முடிச்சாக மாற்றி பாதாள லிங்கத்தை வணங்கிட வேண்டும். பெண்கள் தலை முடியை விரித்திடாது வாழைநார்/பூ/ரிப்பன் கொண்டு நன்கு நுனியில முடிந்தோ அல்லது பின்னலிட்டோதான் துதித்திட வேண்டும். ஏனென்றால் பகீரதனின் பிரார்த்தனையின்படி கங்கா தேவி பூலோகத்திற்கு வந்த போது அம்பிகையின் வேகத்தையும் நீர்ப் பொழிவினையும் எவராலும் தாங்க முடியவில்லை. சிவபெருமானே பாதாள லோகத்திலிருந்து கங்கா ஜடாதரனே ஜடையை விரித்து முடிந்து பூலோகத்திற்கு வேண்டிய மட்டும் ஜலப் பிரவாகத்தை அளித்தார்.
என்வே நாம் காண்கின்ற கங்கை நதி கங்கஜடாதரரின் ஒரேயொரு முடியிலிருந்து வெளிப்பட்ட சிறு துளிகளேயாம். இதை குறிக்கும் முகமாகத்தான் ஆணோ பெண்ணோ தலை முடியில் ஒரு சிறு முடிச்சாவது இட்டு பாதாள மூர்த்தியை தரிசித்திட வேண்டும் என்பது பெரியோர்களின் அருள்வாக்கு.
இவ்வாறாக கங்கை ஜடாதரரின் கங்கை நீர்பிரவாக தெய்வீகச் சக்திகள் அனைத்து பாதாள தெய்வ மூர்த்திகளிடையேயும் நிரம்பப் பெற்றுள்ளதால் கங்கை நீரால் அவர்களுக்கு அபிஷேகம் செய்வது மன சுத்தியைத் தரும். தொழிலிலும் அலுவலகத்திலும் வாழ்க்கையிலும் நிறைய எதிர்ப்புகளுடன் வாழ்வோர் பாதாள லிங்கத்திற்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து ஏழைகளுக்கு இப்புனித நீரால் சமைக்கப்பெற்ற அன்னத்தை தானம் செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுவர்.

மூதாதையர் முன் வருவரே
மஹான்கள்/யோகியர்/சித்புருஷர்களின் ஜீவசமாதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் லிங்கங்களுக்கு பித்ரு தேவர்களின் ஆசியை கிரஹிக்கும் அற்புத சக்தியுண்டு. இதேபோல் பாதாள லிங்க மூர்த்திகளை பித்ரு தேவர்கள் அடிக்கடி வழிபடுவதால் பித்ருதேவ சாந்நித்யம் நிறைந்ததாக அப்பாதாள மூர்த்தி உறையும் மண்டலமே சிறந்து விளங்குகின்றது. சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் காப்பிட்டு, குங்கிலிய தூபமிட்டு வந்தால் பித்ருக்களின் ஆசியைப் பெற்று திருமண தோஷங்கள் நீங்குவதோடு சந்தான பிராப்தியும் கிட்டும்.
புதன்கிழமை தோறும் பாதாள லிங்க மூர்த்திக்குப் பச்சை நிற வஸ்திரம் சார்த்தி சாம்பிராணி தூபமிட்டுவந்தால் குழந்தைகளுக்கு அறிவு விருத்தியாகி வித்யா சக்தி பெருகும்.
இவ்வாறாக பாதாள லிங்க மஹிமை எத்தனை எத்தனையோ! அத்தனையையும் குரு வாய்மொழியாக கேட்டறிதல் சிறப்புடையதன்றோ!

இரட்டைப் பிள்ளையார் மகிமை

இரட்டைப் பிள்ளையார் என்பது இரு பிள்ளையார் உருவங்கள், சிலா ரூபங்கள் சேர்ந்து தரிசனந் தருவதாகும். வேறு எந்த தெய்வத்திற்கும் அமையாத சிறப்பம்சமிது! பல கோயில்களில் நாலைந்து பிள்ளையார் மூர்த்திகளைப் பல காரணங்களால் ஒன்றாக வைத்திருப்பர். இது கூட இறைச் செயலாக அமைந்த ஓர் அற்புதமான வழிபாடாகும். பிள்ளையார் மூர்த்திகள் இரண்டாய்த் தோற்றங் கொள்வதற்குப் பல புராண மஹாத்மியங்களுண்டு. திருஅண்ணாமலை போன்ற தலங்களில் இரட்டைப் பிள்ளையார் சந்நிதிகள் மிகவும் பிரசித்தமானவை!
ஒரு முறை ஸ்ரீ பார்வதிதேவி விநாயகருடைய பால லீலைகளைக் காண விரும்பி கணபதியை வேண்ட அவரும் குதூகலமாய், பால கணபதியாகப் பல லீலைகளைப் புரிந்து, நர்த்தன கணபதியாய் நாட்டியங்களை அளித்து அவ்வுருவங்களின் ஏகாந்தத் தொகுப்பாய் இணைந்து இரட்டைப் பிள்ளையாராகக் காட்சியளித்தார். இது தவிர தம்மையே எப்போதும் தியானித்திருக்கும் தம் பத்னி மூர்த்தியின் பக்தியை மெச்சி “எதை தியானிக்கின்றாயோ அதுவாய் ஆயிடுக”, என்ற அற்புத வரமளித்திட பிள்ளையாருடைய பத்தினி தெய்வமூர்த்தி மற்றுமொரு விநாயக மூர்த்தியாய் அற்புத வடிவம் கொண்டு, பிள்ளையாருடன் பிள்ளையாராய் இரட்டைப் பிள்ளையாரான வரலாறும் உண்டு.

ஸ்ரீரெட்டைப் பிள்ளையார் மூர்த்திகள்
திருவீழிமிழலை

இரட்டை பிள்ளையாரை வழிபட வேண்டிய விசேடமான பூஜைகளுண்டு. வழிபாட்டு முறைக்கேற்ப பலாபலன்களும் மாறும்.

  1. இரு கண்களையுடைய தேங்காயை இரட்டைப் பிள்ளையாருக்கு படைத்திட தனபாக்கியம் பல்கி பெருகும்.
  2. பொதுவாக எடுத்த நல்ல வைராக்கிய காரியமானது எத்தனையோ இடர்களுக்கு இடையிலும் நன்கு நிறைவேறிட திருஅண்ணாமலையில் சாணக்கிய தரிசனம் பெரிதும் அருள் பாலிக்கிறது. இங்கு இரட்டைப் பிள்ளையார் சன்னதியின் பின்னாலிருந்து திரு அண்ணாமலையினை தரிசிப்பதே சானக்கிய தரிசனமாகும்.
  3. பெரிய வியாபாரிகளில், எவ்வளவோ முதலீடு செய்து தக்க வரவு இல்லாமையாலோ, அல்லது நஷ்டம் ஏற்படுவதாலோ வருந்துவோர் பலருண்டு. இத்தகைய சமயங்களில் கைகொடுப்பவரே இரட்டை பிள்ளையார் ஆவார். இவர்கள் இரட்டைப் பிள்ளையாருக்கு பெரிய அளவில் சிலாரூபத்தின் உயரம், அகலத்திற்கு சரியாக தங்கம், வெள்ளி காசுமாலைகள் அணிவித்து, அலங்கரித்து சஹஸ்ரநாம பூஜை செய்து, தம் குலதெய்வத்திற்கு அக்காசுமாலையை அளித்திடல் வேண்டும். மேலும் மாதம் தோறும் தம் குடும்பத்தாரின் பிறந்த நட்சத்திரங்களில் இரட்டைப் பிள்ளையாருக்கு மோதகம் படைத்து ஏழைக் குழந்தைகளுக்குத் தானமாக அளித்துவர வியாபார நஷ்டங்கள் நன்முறையில் தீரும்.
  4. இரட்டைப் பிள்ளையார் மூர்த்தியானவர் சில கோயில்களில்தான் தரிசனம் தரிகின்றார். இம்மூர்த்திகள் இல்லாத இடங்களில் என்ன செய்வது? அரச மரமும் வில்வமரமும் சேர்ந்துள்ள இடங்களிலோ அல்லது வேப்பமரமும் வில்வமரமும் சேந்துள்ள இடங்களிலோ இரட்டைப் பிள்ளையாருக்குரித்தான விசேஷ வழிபாட்டு முறையொன்றுண்டு. மஞ்சளை நன்கு அரைத்து ஒரு பெரிய புதிய வெள்ளைத்துணியில் அதனைப் பூசி அரச + வில்வ மரத்திற்கோ அல்லது வேம்பு + வில்வ மரத்திற்கோ சுற்றி வைத்து கட்டிட வேண்டும்.

இயன்ற போதெல்லாம் குறிப்பாக சனிக்கிழமைகளில் 108 முறை அடிப்பிரதட்சிணம் செய்து வணங்கி இனிப்பு, காரம் கலந்த பணியாரம் அல்லது, கொழுக்கட்டை செய்து தானம் செய்திடல் வேண்டும்.

ஸ்ரீ கணேசாயினீ பூஜை
ஈஸ்வர ஆண்டிற்கான உத்தராயண புண்ய காலத்திற்கான பூஜைகளுள் ஸ்ரீ கணேசாயினி வழிபாடும் அடங்கும். ஏன் இத்தனை விதமான பூஜைமுறைகள் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா!
மனிதனுக்கு பல விதமான பேராசைகளும் நிராசைகளும் முறையற்ற அநீதியான விருப்பங்களும் இருப்பதால்தான் அவன் பலவிதமான தீய கர்மவினைகளைச் சேர்த்துக் கொள்கின்றான். இதனால்தான் அவனுக்கு, ஒன்றே இறைவன் என்ற சத்திய வாக்கில் மனம் அடங்காது, எந்த தெய்வத்தை வணங்கினால் எத்தகைய விருப்பம் நிறைவேறும் போன்ற பலவிதமான மனோ நிலைகளுடன் வாழ்வதால்தான் இறைவனே தன்னைப் பலவிதமான உருவங்களில் வெளிப்படுத்தி அவனுடைய ஆசாபாசங்களைக் கூட்டியோ குறைத்தோ, மறைத்தோ, நிறைவேற்றியோ அவன் வாழ்வை நடத்தி செல்கின்றான். அனைத்தும் இறைவன் செயலே என்பதயே பல தெய்வ வழிபாட்டு முறைகளும் புகட்டுகின்றன.

ஸ்ரீ விநாயகர், பெண் உருவம் கொண்டு தோற்றமளிப்பதை கணேசாயினி என்பர் பெரியோர்! தேவாரம் பாடுபவர்கள் ஓதும் விதிமுறையாக முதலில் சுந்தரருடைய “பிடியதன் உருஉமை” என்ற பாடலை முதலில் ஓதும் பழக்கம் நடைமுறையில் உண்டு. உமையவளாம் ஸ்ரீ பார்வதி தேவியே தன்னிடம் மறைந்து கிடந்த சிவசக்தி ஐக்யபிரவாஹத்தை வெளிக்கொணர வேண்டி அதாவது சக்தி அம்சத்தை மீண்டும் நிலைநிறுத்திட வேண்டி முழுமுதற்கடவுளாம் பிள்ளையாரப்பனை வேண்டினள். விநாயகரோ ஆனந்தத் திருவிளையாடலில் பால கணபதியாய், நர்த்தன மூர்த்தியாய் விதவிதமான கோலங்களில் லீலைகள் புரிந்திட, இறுதியில் அன்னையின் கரங்களில் சிக்குண்டபோது, ஓம் காரக் கோலத்துடன் வெளிவந்தார்.  கோலம் என்பதற்குப் பெருத்த முடிவிலா நல் ஒலி என்று பொருள். ஓம்கார ஒலிதானே முதலும் முடிவும். எனவேதான் ஓம்கார ஓலமிட்ட விநாயகரே ஓலமிட்ட விநாயகராக பல திருத்தலங்களில் அருள்கின்றார் (திருவையாறு), ஓம்கார ஓலமிட்ட விநாயகரோ ஸ்ரீ பார்வதி தேவிக்கு அம்பிகையின் சக்தி அம்சத்தை சிவசக்தி ஐக்ய ஸ்வரூப பிரவாஹத்தை உணர்த்தும் வண்ணம் ஸ்ரீ கணேசாயினியாக ஓங்கி உயர்ந்து தோற்றமளித்தார். இவரை கணேசாயினி என்று கூறும் வழக்கமும் உண்டு. மதுரை, நாகர்கோயில், சுசீந்திரம், திருநெல்வேலி அருகே வாசுதேவநல்லூர் போன்ற இடங்களில் ஸ்ரீ கணேசாயினி திரு உருவத்தை தரிசித்திடலாம்.
பலருக்கு எத்தனையோ திறமைகள் இருப்பினும் தொழிலிலோ வாழ்க்கையிலோ அலுவலகத்திலோ அவற்றை வெளிக்காட்டக் கூடிய வாய்ப்புகள் இல்லாமலிருக்கும் அல்லது பொறாமையால் பலர் அதனை ஒதுக்கிவிடுதலும் உண்டு. மேலும் எத்தனையோ பேருக்கு குறிப்பாக ஓவியர்களுக்கு தம்முடைய திறமையால் தான் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்திருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டத்தால் அன்றும் இன்றும் விரக்தியான வாழ்க்கையைத்தானே பெற்றிருக்கிறோம் என்று மனம் குமுறுவர். இத்தகையோர் நன்முறையில் தங்கள் திறமைக்குரிய வருமானம் கௌரவம் பதவி உயர்வு மற்றும் பலவிதமான வசதிகளை நியாயமான முறையில் பெற்றிட உத்தராயான புண்ய காலத்தில் துவாதசி திதிதோறும் ஸ்ரீ கணேசாயினி மூர்த்திக்கு பச்சைநிற வஸ்திரங்களைச் சார்த்தி வருதல் வேண்டும்.

காணும் பொங்கல் தரும் கண்டி பூஜை
அக்டோபர் 1997 ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் ஏழுவித நாசிகளைக் கொண்ட தீர்த்த கண்டி/மண் கலச பூஜையைப் பற்றி விளக்கியிருந்தோம். இது போன்ற கண்டி பூஜையை மற்ற விசேஷ நாட்களிலும் செய்யலாமா என்று பல வாசகர்கள் வினவியுள்ளனர்.
நிலையான லக்ஷ்மி கடாட்சத்தையும் நியாயமான வழிகளில் அனைத்து ஐஸ்வர்யங்களும் நம்மை வந்து அடையவும் பௌர்ணமி அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் இக்கண்டி பூஜையை முறையாய் ஆற்றிடலாம். முற்காலத்தில் உலோகங்கள் கண்டுபிடிக்கப்படாத நாட்களில் மண் விளக்குகளும், கலசங்களுமே பூஜைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. நாளடைவில் உலோக விளக்குகள் நடைமுறைக்கு வந்த பின்னர் மண் கலச பூஜைகள் நின்று போயின்.
கற்சிலையைவிட உலோக மூர்த்திகளைவிட மண்சேர்ந்த சுதை மூர்த்திகளுக்குத்தான் தெய்வீக சக்தி அதிகம் என்பதை பன்முறை ஸ்ரீ அகஸ்திய விஜய இதழ்களில் விளக்கியுள்ளோம். சென்னை ராயபுரம் ஸ்ரீ அங்காளம்மன் ஊத்துக்கோட்டை அருகேயுள்ள சுருட்டைப்பள்ளி (ஸ்ரீ ரெங்கநாதரைப் போல் சிவபெருமானும் சயனக்கோலம் கொண்ட ஒரே திருத்தலம்) போன்ற இடங்களில் மூல விக்ரகங்களே சுதையால் ஆன சக்தி வாய்ந்த தெய்வ மூர்த்திகளாவர். ஆகவே இவற்றை முறையாக தீர்த்த கண்டி தீப பூஜை செய்து அழியாச் செல்வமாம் அருளை பெறவேண்டியது மிகவும் அவசியமாகும்.

கிரிவல மகிமை

திருஅண்ணாமலை கிரிவல மஹிமை
சென்ற இதழில் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகையில் அக்னித் தலமாகிய இப்பூமியில் நம் பாதங்கள் படுகையில் எழுகின்ற அக்னி சக்தியைப் பற்றி விளக்கங்களை ஒரளவு அளித்திருந்தோமல்லவா. இதைப் பற்றி மேலும் விளக்கங்கள் கேட்டு பல கடிதங்கள் வந்துள்ளன.
எவ்வாறு தெய்வீக வாழ்க்கையைப் பெறுவது?
டாக்டர்களுக்கு…
பூர்வ ஜன்ம புண்யம் மிகுந்திருந்தால்தான் ஒருவர் டாக்டராக முடியும் என்பதை நன்கு உணர்ந்திட வேண்டும். முன் ஜன்மங்களில் பலருடைய நோய்கள் தீர்வதற்காகச் சரீர சேவையும், பண உதவியும், மருத்துவ உதவிகளையும் செய்ததற்குப் பரிசாகத்தான் இப்பிறவியில் மருத்துவராகும் தெய்வீக வாய்ப்பு கிடைக்கிறது.

உலகத்திலுள்ள அனைத்து டாக்டர்களுக்கும் இது பொருந்தும். எனவே இறைவனே மனமுவந்து அளித்துள்ள இவ்வரிய தெய்வீக சேவையை டாக்டர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வெண்டும்
எத்தனையோ தொழில்களிலும் அலுவலகப் பணிகளிலும் லஞ்சம், ஏமாற்றுதல், சுயநலம், பேராசை, வறுமை போன்றவை காரணமாக வாய்ப்புண்டு. ஆனால் தீவினைகள் சேராததும் பிறருடைய கர்மவினைகளைக் கழிப்பதற்கும் அற்புதமான புண்ணிய சக்திகளை தரும் வகையிலும் அமைகின்ற தொழில்களுள், வாழ்க்கை முறைகளில் மருத்துவராகப் பிறவி அமைவது மிகவும் சிறப்புடையதாகும்.
மருத்துவத் துறைக் கல்வியானது அடிப்படை அறிவைத் தந்திடினும் டாக்டர் லட்சுமண சுவாமி, டாக்டர் ரங்கசாமி, டாக்டர் குருமூர்த்தி போன்றவர்களைப் போல் தெய்வீக சிந்தனைகளும் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்கின்ற நற்பண்பும் கூடினால்தான் ஒருவருடைய மருத்துவ ஆற்றல் பல்கி பெருகுகின்றது என்பது நிதர்சனமான உண்மையாகும்.
அதாவது 24 மணி நேரத்தில் ஒரு டாக்டர் எந்த அளவிற்குத் தன்னை பிறருடைய நல்வாழ்விற்காக அர்ப்பணித்துக் கொள்கிறாரோ அந்த அளவிற்கு அவருடைய தெய்வீக ஆற்றலும் உள்ஜோதியாய்ப் பெருகும்!
உண்மையில் ஒரு மருத்துவர் எவ்வளவு நேரம் ஏழை எளியோருடைய நோய்களைத் தீர்க்கும் மருத்துவப் பணியில் ஈடுபடுகின்றாரோ, அந்நேரமெல்லாம் பொன்னான தெய்வீக நேரமாக, இறை வழிபாட்டில் ஈடுபட்டுள்ள காலமாக மேலுலகில் புண்ணியக் கணக்கு எழுதப்படுகின்றது. சேவை மனப்பான்மையுடைய மருத்துவர்கள் அருகிவிட்டனர். சாதாரண மருத்துவ அறுவை சிகிச்சைக்குக் கூட ஆயிரக் கணக்கில் செலவாவதை நாம் நன்கறிவோம். பணம் சம்பாதிக்கும் சுய நோக்கோடு மருத்துவப் பணியைச் செய்வது, இறைவன் தனக்களித்த பிரசாதத்தை மதியாது அவன் முகத்திலேயே விட்டெறிவது போலாகும். துர்வாசர் அளித்த தெய்வப் பிரசாத பூமாலையை இந்திரன் அலட்சியம் செய்து யானையின் மேல் வைத்து விட இந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தின் விளைவுகளை நாம் நன்கு அறிவோம்!
எங்களுடைய சம்பாத்யத்தில் ஒரு பங்கைக் கோயில் திருப்பணிகளுக்காக அளிக்கின்றோமே என்று பலர் எமக்குக் கடிதங்களை எழுதியுள்ளனர். நம்முடைய பல கர்மவினைகள் பூஜை, ஹோமம், பாதயாத்திரை, கிரிவலம், பண உதவி, சரீர உதவி எனப் பலவிதமான தெய்வீக முறைகளில்தான் கழிகின்றன. கோடீஸ்வரர் ஒருவர் தம் சொத்தை கோடி கோடியாக இறைத் திருப்பணிகளில் செலவிட்டாலும் கூட, உண்மையாக, நியாயமாக, நேர்வழியில் ஈட்டிய தொகையாயிருந்தால் மட்டுமே அற்புதமான புண்ய சக்தியைப் பெற்றிட முடியும் மேலும், அவர் உடலால் தர்ப்பண பூஜைகள், பாதயாத்திரை கோயில் உழவாரத்திருப்பணி, புனித நீராடல், தான தர்மங்கள் இவை செய்தால்தான் உத்தம் இறைநிலையை அடையமுடியும்.
இதேபோல் எந்த டாக்டரும் இறையருளால், தம் மூதாதையர்களிம் ஆசியால், தம் பூர்வ ஜென்ம புண்யவசத்தால் பெற்ற மருத்துவக் கல்வியறிவை செல்வஞ் சேர்க்கும் கருவியாக மட்டும் ஆக்கிவிடாது ஏழை எளியோருடைய நோய்களைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தினால்தான் அது உண்மையான, தெய்வீக வாழ்க்கையாக மலர்கின்றது.
நம் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் சார்பில் கடந்த பல வருடங்களாக சென்னை, திருச்சி கிராமப்புற பகுதிகளில் ஏழைகளுக்கான மருத்துவ வசதி முகாம்கள் நடைபெறுவதுடன் பல நூற்று கணக்கான மருத்துவர்கள் எத்தகைய உயர் கல்வியைப் பெற்றிருப்பினும் செல்வச் செழிப்புடன் இருப்பினும் அடக்கத்துடனும் ஆர்வத்துடனும் உள்ளன்போடு ஏழைகளுக்குத் தம்முடைய பொன்னான நேரத்தை அர்ப்பணிக்கின்ற காட்சியை கண்டு நாங்கள் ஆனந்திக்கின்றோம்.

மருத்துவர்களுக்கான ஸ்ரீ இந்திராக்ஷி கவச மந்திரம்
ஸ்ரீ இந்த்ராக்ஷி கவசம் என்ற ஓர் அற்புதமான மந்திரம் உண்டு. இதில் பலவிதமான நோய்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது நோய் நிவாரணத்திற்காகத் துதிக்கப்படும் சக்திவாய்ந்த மந்திரமாகக் கருதப்படுகிறது. அனைத்து மருத்துவர்களும் இதனை தினந்தோறும் பாராயணம் செய்வது மிகவும் சிறப்புடையதாகும்.
மருத்துவ விஞ்ஞானிகளே, திகைக்கும் வண்ணம், பலவிதமான காய்ச்சல் வகைகளைப் பற்றி இம்மந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மருத்துவர்கள் மட்டுமின்றி, நோயாளிகளும் இம்மந்திரத்தை துதித்து வந்தால் இறையருளால் நல்வழி கிட்டும்.
நோய் என்பது நம் கர்மவினைகளுக்கேற்ப நாம் அனுபவிப்பதே என்ற எண்ணம் ஆணித்தரமாக உள்ளத்தில் பதிந்தால் எந்த நோயையும் சகிப்புத் தன்மையுடன் ஏற்கின்ற மனப்பக்குவம் கிட்டும். மருத்துவர்கள் தம்மை உத்தம் இறையடியார்களாய், இறைக்கருவியாய் எண்ணியே செயல்படுதல் வேண்டும்.
நோய், நிவாரணம் பெற வேண்டும் என்ற எண்ணம் சிறந்ததே. ஆனால் நம்மை பற்றியுள்ள நோயானது, அதற்குரிய துன்பங்களை, முன்  வினைப் பயன்களாக நாம் அனுபவித்த பின்னர்தான் நம்மை விட்டு அகலும் என்பதை உணர்ந்திடுக! அக்கர்ம வினைகளின் விளைவுகள் பணச் செலவுகளாகவோ, உடல் வேதனைகளாகவோ, மன வருத்தமாகவோ வேறு பல சோதனைகளாக ஏற்பட்டு அவை அனுபவிக்கப்பட்ட பின்னர்தான் நோய் குணமாகும்.
பிறகு இடையில் டாக்டர் எதற்கு?
மேலே நாம் குறித்துள்ள விளக்கம் தெய்வீக நோக்குடையது. இதுவே வேத சத்தியமும் கூட. ஆனால் உடல் வேதனைகளையோ, வலியினையோ தாங்குமளவிற்கான உள்ள உறுதியினை ஆன்மீகப் பக்குவத்தை நாம் பெறவில்லையாதலின் அவற்றை தணிக்கும் முறையில் மருத்துவரை நாடுகிறோம். அவர் எவ்வளவு தொகை fees ஆகப் பெற்றாலும் சரி, எந்த ஒரு டாக்டரும் பெறற்கரிய பூர்வ ஜென்ம புண்ய சக்தியினால்தான் மருத்துவத் துறைக்கு வந்துள்ளார் என்பது ஆன்மீகப் பிறவி ரகசியத் தத்துவமாதலின், அவருடைய புண்ய சக்தியினால்தான் மருந்து, மாத்திரைகள் அளிக்கப்பட்டு நோய் நிவாரணத்திற்குக் காரணமாகின்றது.
அதாவது கர்ம வினைகளைக் கழிப்பதற்குப் பலவித புண்ய சக்திகள் பல கோணங்களிலிருந்து தேவைப்படுகின்றன. இவ்வாறாக ஒரு சமுதாயம் என்பது பல ஜீவன்களும், கர்மபரிபாலனத்தில், தத்தம் புண்ய சக்திகளைப் பரிமாறிக் கொள்ளும் மேடையே ஆகும். எனவே சத்சங்க வழிபாடாகப் பலரும் ஒன்று கூடித் தக்க சற்குரு காட்டும் நல்வழியில் இயங்கினால் கர்ம பரிபாலனம் தெய்வீக முறையில் செழித்துச் சமுதாயமே இறையருளால் மிகச் சிறந்து விளங்கும்.
இறைவழிபாட்டை நிறுத்துதல் வேண்டா…
குடும்பத்தில் எவரேனும் இறந்து விட்டால் அடுத்த ஒரு வருடத்திற்குக் கோயிலுக்குப் போக கூடாது, விரதம் ஏற்றல் கூடாது, பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது என்ற தவறான வழிமுறை ஏற்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் பலரும் இறைவழிபாடுகளை நிறுத்தி விடுகின்றார்கள். தயவு செய்து இத்தகைய மாபெரும் தவறுகளை வாழ்க்கையில் செய்து விடாதீர்கள். அக்காலத்தில் நம் பெரியோர்கள், இறப்புச் சடங்குகளின் பத்து தினங்களிலும் பல்வேறு வகையான பித்ரு பூஜைகளையும் தான, தருமங்களையும் செய்து, அப்புண்ய சக்தியின் பலனை இறந்தவர்க்கு அர்ப்பணித்து அவ்வான்மா சாந்தியடைய வழிவகை செய்தனர். ஈமச் சடங்கு முறைகளும் பத்துநாள் சடங்குகளும் ஆயிரமாயிரம் ஆன்மீக விளக்கங்கள் கொண்டவை!
எனவே குடும்பத்தில், ஒருவர் இறந்தாலும் அடுத்த ஒரு வருடத்தில், அவர்தம் குடும்பத்தார்களும் நெருங்கிய உறவினர்களும் கோயிலுக்குச் சென்று வழிபடுவதற்கு எவ்விதத் தடையும் கிடையாது. எவ்வித விரத முறைகளையும் பண்டிகைகளையும் நன்முறையில் தொடர்ந்து நடத்திடலாம்.
உண்மையில் இறந்தவர்களின் ஆன்மாவானது அனைத்து விதமான இறைவழிபாடுகளும் தங்கு தடையின்றி நடைபெற வேண்டும் என்று எண்ணிடுமே தவிர நற்காரியங்களை நிறுத்துவது என்பதற்கு ஒருபோதும் ஒப்ப மாட்டார்கள். எனவே இறப்பை சாக்காகக் கொண்டு அனைத்து வழிபாடுகளையும் நிறுத்திடுதலால் ஒரு பயனும் இல்லை. மாறாக நொடிக்கு நோடி ஏதேனும் மந்திரத்தை ஜபித்து வாழ்ந்தால்தான் கலியுக வாழ்க்கைக்குத் தேவையான புண்ணிய சக்தி கிடைக்கும் என்ற நிலை இருக்கும்போது இறப்பை ஒரு காரணமாகக் கொண்டு கோயிலுக்குச் செல்வதையோ விரத வழிபாடுகளை மேற்கொள்வதையோ ஒரு போதும் நிறுத்தி விடாதீர்கள்.
அறியாமையினால் ஏற்பட்டுள்ள இத்தகைய வழக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திடுக.

வாகன பூஜை

புதிய கார், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், சைக்கிள் போன்றவற்றை  வாங்கியவுடன் செய்ய வேண்டிய வாகன வழிபாட்டு முறையொன்றுண்டு. புதிய வாகனம் வந்தவுடன் கீழே குறித்த கோயில்களுக்கு சென்று சுவாமிக்கு  மாலையிட்டு, பாதங்களில் வாகனத்தின் சாவியை வைத்து வணங்கிய பின் அம்மாலையை வாகனத்தின் பெட்டியில் வைத்து பத்திரமாக எடுத்து வருதல் வேண்டும். மாலையை வாகனத்திற்கு மாட்டுவதெனில் பூக்கள் கீழே சிதறுதலோ சக்கரத்தில் மிதிபடுதலோ கூடாது. இந்திரன், துர்வாச மாமுனி அளித்த (திருமகளின் திருக்கரங்கள் பட்ட) மாலையை அலட்சியமாகத் தன் வாகனமான யானைக்குப் போட்டிட யானையோ அதைத் தன் கால்களில் போட்டு மிதித்து விட இந்திரன் கடுஞ்சாபத்திற்குள்ளானான். எனவே  இறைவனுக்குச் சார்த்தப்பட்ட மாலையை வாகனத்திற்கு மாட்டி ஓட்டுவதானால், அது உதிர்ந்து கீழே மிதிபடாமல் பார்த்து கொள்ளவேண்டும் அல்லது மாலையை வாகனப் பெட்டியில் பத்திரமாக வைத்திருந்து இல்லந்திரும்பியவுடன் வாகனத்தில் சிறிது நேரம் மாட்டி வைத்திருந்து எடுத்து வைத்திடுக!
வாகன பூஜையின் ஓர் அங்கமாக பலரும் எலுமிச்சைக்  கனிகளைத் தரையில் வைத்து அதன்மேல் சக்கரங்களை ஏற்றி “பலியாகக்” கருதும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இதுவும் தவறானதே! எலுமிச்சைக்கு “சிவகனி” என்று பெயர். மேலும் சுவாமியின் பிரசாதமான எலுமிச்சைக் கனியை நசுக்குதல் பிரசாதத்தையே அவமதித்து வீணாக்குதல் போலாகும். எலுமிச்சைக் கனி பற்றிய பல தெய்வீக ரகசியங்களுண்டு. அவற்றைத் தக்க சற்குரு மூலம் அறிந்திடுக! பிரசாதக் கனிகளை வாகனத்தில் வைத்து, வீட்டில் எலுமிச்சை அன்னம் செய்து தானமாக அளித்திடுதலே சிறப்புடையது.
புதிய வாகனத்திற்கான தெய்வ மூர்த்திகள்
புதிய வாகனங்களை வாங்கியவுடன் அவரவர் பகுதியில் உள்ள கீழ்க்கண்ட தெய்வமூர்த்திகளின் கோயில்களுக்குச் செல்தல் சிறப்புடையது.
1.கடையிலிருந்து புதிய வாகனத்தை எடுத்தவுடன் முதல் பயணம் கோயிலுக்குச் செல்வதாகத்தான் இருக்க வேண்டும்
2.திருஷ்டி பல துன்பங்களைத் தருமாதலின் முதல் பயணத்தில் குடும்பத்துடன் மட்டும் செல்வது நல்லது.
3.இயன்றவரை கார், வேன் போன்றவற்றை அன்னதானம், மருத்துவ சேவை, இறைப் பணிகள் போன்ற நற்காரியங்களுக்குப் பயன்படுத்துங்கள்.
4.உங்களுடைய பிறந்த தேதி, நட்சத்திரத்திற்கேற்ப வாகன எண்ணைப் பெற்றுக் கொண்டிருத்தல் நன்மைகளைத் தரும்.
5.வாகனத்தை ஓட்டுகையில் இறை நாமத்தை/ஸ்ரீ காயத்ரீ துதி போன்றவற்றை எப்போதும் ஓதிக் கொண்டிருக்கப் பழகுங்கள். உங்கள் குழந்தைகளையும் சிறுவயதிலிருந்தே இறை நாமம் ஜபித்தவாறே அனைத்துப் பணிகளையும் செய்யுமாறு ஊக்கப்படுத்துங்கள்.

ஸ்ரீவியாக்ரபாதேஸ்வரர்
பெரும்புலியூர்

புதிய வாகனத்தை அர்ப்பணிக்க வேண்டிய தெய்வமூர்த்திகள்:
சென்னை குறுங்காலீஸ்வரர் சிவாலயத்தில் உள்ள ஸ்ரீ ஆபத்ஸகாய ஆஞ்சநேய மூர்த்தி
1.சுசீந்திரம் ஸ்ரீ தாணுமாலயர்
2.சிவன் மலை
3.திருமழப்பாடி ஸ்ரீ வஜ்ரதம்பேஸ்வரர்
4.சென்னை முடிச்சூர் சந்திரகாந்தக் கல்லாலான ஸ்ரீ பீமேஸ்வரர்
5.திருவெண்காடு ஸ்ரீ அகோர மூர்த்தி
6.நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர்
7.திருவையாறு கல்லனை அருகிலுள்ள பெரும்புலியூர் ஸ்ரீ வியாக்ரபாதேஸ்வரர்
மேற்கண்ட மூர்த்திகளுக்கு ஆரஞ்சு பழ மாலை அல்லது செவ்வாழை பழ மாலை அல்லது வரிவாழைப் பழ மாலை (வரிகளுடன் கூடிய மலநாட்டு வாழை) சார்த்தி வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.
வாகன விருத்திக்கு அருள்பாலிக்கின்ற தெய்வாம்சங்களை உடைய இம்மூர்த்திகளுக்கு புதிய வாகனத்தை அர்ப்பணித்து பிறகு பயன்படுத்தத் தொடங்குங்கள்.
படைப்போம் புதியதைப் படைத்தவனுக்கே
பிரஷர்குக்கர், பாத்திரங்கள், தோசைக் கல் போன்று எந்த புதிய பாத்திரத்தை வாங்கினாலும் முதலில் கங்கை, காவிரி போன்ற புண்ய நதி தீர்த்தத்தை ஊற்றி சர்க்கரைப் பொங்கல், போளி, பணியாரம் போன்ற இனிப்பு உணவைச் சமைத்து இல்லத்திலேயே குல தெய்வத்தின் நாமத்தை தியானித்துப் படைத்து வறியவர்கட்கு அன்னதானம் செய்திடில் இல்லப் பாத்திரங்களில் நற்குண தேவதைகள் ஆசியைப் பதிக்கின்றன.
புதிதாகக் காலணிகள் வாங்கிடில் இயன்றவரை பழைய காலணிகளை நன்கு தைத்து பயன்படும் வகையில் ஆக்கி தானம் செய்திடுக! வசதியுள்ளோர் புதுக்காலணிகள் வாங்கிடுகையில் எளியோர்க்கு அளிப்பதற்காகக் குறைந்த பட்சம் ஒரு ஜோடி ஹவாய் சப்பலை (Hawai Chappal) யாவது வாங்கி அளித்திடுக! இத்தகைய சிறு தான, தர்மங்களையெல்லாம் உங்கள் பிள்ளைகள், குழந்தைகள் மூலமாக அளித்துப் பழக்கிடில் தெய்வீகத் தன்மை இளமையிலேயே அவர்கள் தேகத்தில் ஊறிட, இறையருளால் எவ்விதக் கெட்டபழக்கத்திற்கும் ஆளாகாமல் நல்லொழுக்கத்துடன் விளங்குவர்.

தைப்பொங்கல்

கடந்த பல பொங்கல் சிறப்பிதழ்களில் பொங்கல் பற்றிய புதுமையான சித்புருஷர்களின் விளக்கங்களைத் தந்துள்ளோம். பொங்கல் வைக்கும் முறையைப் பற்றி சில குறிப்புக்களை மட்டும் இங்கு காண்போம்.
பொங்கல் வைக்கின்ற நேரம் நன்கு கவனத்துடன் கணிக்கப்படவேண்டும். உண்மையில் ஒரு சுப முகூர்த்த நாளானது எவ்வாறு துல்லியமாக கணிக்கப்படவேண்டுமோ, அதே போன்றுதான் பொங்கல் பானை வைக்கப்படும் நேரமும் மிகப் புனிதமுடையதாகும்.
மகர சங்கராந்தி தேவமூர்த்தி, இல்லத்தில் தானே விரும்பி நுழைகின்ற நாளே தைப்பொங்கல், இன்று பஞ்சாங்கத்தில் உள்ள அந்தந்த வருடத்திற்குரிய மகர சங்கராந்திக்குறிய தேவதா மூர்த்தியின் வர்ணனைகளைப் பூஜை அறையில் படித்திடுங்கள். உலை பொங்கிடுகையில் ஏற்படுகின்ற சப்தங்களைப் பற்றி ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் முன்னரே விளக்கியுள்ளோம்.
பளக் பளக்கென்று திவ்யமான ஒலிகளுடன், நீருடன் சேர்ந்து அரிசி கொதிக்கின்றதல்லவா இதற்கு தெய்வீக மகத்துவம் அதிகம். தற்காலத்தில் குக்கர் வைத்து அன்னம் வடிக்கின்ற பழக்கம் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு இல்லத்திலும் அரிசி உலையின் ஒலி நன்கு கேட்கப்படவேண்டும்.
சங்கராந்திக் கிரமன ஒலிகள் எனப்படும் தெய்வீக ஒலிகள் கேட்கப்படவேண்டும். இவை வீடு முழுவதும் பரிபூரணமாக நிறைந்திட வேண்டும். அப்போதுதான் அன்னத்திற்கு தட்டுப்பாடு ஏற்படாது. எனவே பிரஷர் குக்கர் மூலம் அன்னத்தைச் சமைக்க வேண்டிய நிலையில் இருப்போர் வாரத்திற்கு ஒருமுறையேனும் மண் பானை, வெங்கலப் பாத்திரத்தில் நீர் உலை வைத்து அன்னம் சமைக்கின்ற அற்புதமான பணியை மேற்கொள்வீர்களாக. இந்த ஈஸ்வர ஆண்டிலிருந்தாவது ஒவ்வோரு வீட்டிலும் நீர் உலை இறையொலி இல்லத்தில் நன்கு ஒலிப்பதாக!
தைப்பொங்கலன்று மண்பானை அல்லது வெங்கலப் பாத்திரத்தில்தான் தைப்பொங்கலை செய்திட வேண்டும். மண்பானைப் பொங்கல் தான் அதி அற்புத தெய்வீகச் சக்திகளை தரும்.
“எனக்குப் பானையில் அன்னம் வடிக்க தெரியாதே ஏதேனும் ஏடாகூடமாக நேர்ந்துவிட்டால் அபசகுணமாகி விடுமே”,  என்றெல்லாம் யோசிக்காதீர்கள்.
மண்பானை இல்லையெனில் இதற்கென வெங்கலப் பாத்திரத்தையேனும் வாங்கி வைத்துகொள்ளுங்கள். இவ்வாறு கொதி உலை நீரின் புனிதமான சப்த ஒலிகள் மூலமாகத்தான் மகரசங்கராந்தி கிரமண தெய்வீக சுடர்கள் நம்மைச் சேர்கின்றன. எனவே இவ்வரிய தெய்வீக வாய்ப்பைப் பெறுவதற்காக தைப் பொங்கலன்று அரிசிப் பொங்கல், பால் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் போன்று அவரவர் குடும்பம் பாரம்பர்யப்படி பொங்கல் பொங்கி மகிழ்ந்திடுக.
அடுத்ததாக, பொங்கல் பானையில் தாமே நன்கு அரைத்த மஞ்சள் , சந்தனம், குங்குமம் போன்றவற்றை எட்டு திக்குகளிலும் நன்கு பூசி/வைத்து பொங்கல் பானைக்கு மஞ்சள் கிழங்கால் ஆன மாலை சூட்டி மகர சங்கராந்தி தேவதா மூர்த்தி ஆவாஹனமாவதற்கான ஏற்பாடுகளைச் செய்திடுங்கள். வீடு முழுவதும் சுண்ணாம்பு, காவிபூசப்பட வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் பிளாட்டுகளில் வசிப்போர் தங்கள் கட்டடத்திற்குக் காவி பூசுதல் இயலாதெனில் ஒவ்வொருவரும் தங்களுடைய பிளாட்டின் ஒரு பகுதிக்கு, தலைவாசற் படிகளிலும் சந்தனம் மஞ்சள் குங்குமம் இட்டிட வேண்டும். சமையல் அறை, படுக்கையறை என அனைத்து அறைகளுக்கும் நிலைவாசற்படி வைக்கப்படவேண்டும் என்பதை நாம் பல முறை வலியுறுத்தி வந்துள்ளோம்.
அடுத்ததாக, பொங்கல் பொங்கிடுகையில் எந்த பக்கத்தில் அரிசியோ பாலோ பொங்குகின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதை வைத்து மகர சங்கராந்தி பலன்களாக எதிர்வருகின்ற நிகழ்ச்சிகளைத் தீர்க்க தரிசனமாக அறிகின்ற சங்கராந்தி கணித முறையும் ஒன்று உண்டு. கிழக்கு, வடகிழக்கு, மேற்கு, தெற்கு, வடமேற்கு, வடக்கு தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு என்ற எட்டு திக்குகளில் எந்தத் திசையில் ஒலை நீர் பொங்கி வழிந்தது என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும். தக்க பெரியோர்களிடமும், சற்குருமார்களிடமும் இது குறித்தான விளக்கங்களைப் பெற்றிடுக. உலைநீர் வழியும் திசையை வைத்து வரும் மாதங்களில் எத்தகைய இன்ப துன்பங்களை வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் என்பதைத் துல்லியமாக அறிய முடியும். முற்காலத்தில் இதை வைத்து வரும் நாட்களில் தாம் சந்திக்கவிருக்கும் சோதனைகளை முன் கூட்டியே அறிந்து, அதைச் சந்திப்பதற்குரித்தான மனோ திடத்தையும், ஆத்ம சக்தியையும் பெற வேண்டி விசேஷமான கூடுதல் பூஜைகளை ஆற்றத் தொடங்குவர். ஆகவே மகர சங்கராந்தி பூஜையானது அவ்வாண்டில் வரும் இன்ப துன்பங்களை எடுத்து காட்டும் ஓர் அற்புத வழிபாடாகும்.
காணும் பொங்கல்
தைப் பொங்கலுக்கு மறுநாள் வருகின்ற மாட்டு பொங்கலன்று என்ன செய்ய வேண்டும்? மாட்டுப் பொங்கலன்று பசு, காளை மற்றும் எருமை மாடுகளுக்கு உணவளித்தல் வேண்டும். பொதுவாக தினமும் காக்கைக்கு உணவிடுதல் போல ஒவ்வொருவரும் நிதமும் பசுவிற்கு வாழைப்பழம், புல், வைக்கோல் போன்றவற்றை அளித்து வரவேண்டும். ஆனால் தற்காலத்தில் மாட்டு பொங்கலன்று மட்டும் ஒரே நாளில் அனைவரும் ஒன்று சேர்ந்து பசுகளுக்கு அனைத்தையும், அள்ளித் தந்துவிடுவதால் பசுக்களுக்கு அஜீரணம் ஏற்பட்டுவிடுகின்றது. இயன்றால் உங்கள் இல்லத்திற்கோ பிளாட் பகுதிக்கோ ஒரு பசுவை அழைத்து நீராட்டி மஞ்சள் குங்குமமிட்டு, புண்ணாக்கு, தவிடு போன்றவற்றை அளித்து கோமாதாவை வணங்கி வலம் வரவேண்டும். மாட்டுப் பொங்கலன்றும் பொங்கல் வைப்பதற்கு காரணம், நாட்டில் கால் நடைகள் நன்கு பெருகி நன்முறையில் ஜீவிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையின் பொருட்டேயாகும். இதற்கும் மகர சங்கராந்தி தேவியே அருள்பாலிக்கின்றாள்.
காணும் பொங்கலன்று மஹான்கள் யோகியரைக் காணுதல் அல்லது அவர்களுடைய ஜீவ சமாதிகளை தரிசித்தல் சிறப்புடையதாகும். எனவே காணும் பொங்கலன்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள், ஸ்ரீ பாடகச்சேரி ராமலிங்கஸ்வாமிகள், ஸ்ரீ பூண்டி ஆற்று ஸ்வாமிகள், ஸ்ரீ கசவனம் பட்டி ஸ்வாமிகள் (திண்டுக்கல் அருகே), மதுரை ஸ்ரீ குழந்தையானந்தா ஸ்வாமிகள், பாண்டிச்சேரி அருகேயுள்ள சின்னபாபு சமுத்திரத்தில் உள்ள படேசாஹிப் ஸ்வாமிகள், பாண்டிச்சேரி அருகே வில்லியனூர் ஸ்ரீ ராம்பரதேசி ஸ்வாமிகள், காஞ்சி ஸ்ரீ பரமாச்சாரியார் ஸ்வாமிகள் போன்ற மஹான்களின் ஜீவன் முக்தர்களின்/யோகியரின் ஜீவசமாதியை தரிசித்து காணும் பொங்கலை மஹான்களைக் காணும் பொங்கலாய்க் கண்டு மகிழுங்கள். ஜீவசமாதியில் செய்யப்படுகின்ற அன்னதானம் ஆடைதானம் போன்றவற்றுக்கு பன்மடங்கு பலன்கள் உண்டு.

லட்சுமி கடாட்சம்

ஐஸ்வர்ய கடாட்சம், சகல சம்பத்துகளும் கிட்டுதல், லட்சுமி கடாட்சம் என்றால் என்ன?
மந்திரங்களை ஓதுவதாலோ, புனித ஆறு மற்றும் தீர்த்தங்களில் நீராடுவதாலோ மட்டும் திருமகளின் லட்சுமி கடாட்சம் கிட்டுவிடுமா?
பலவிதமான சக்திவாய்ந்த மந்திரங்களை ஓதுவதாலும், புனித நதிகளிலும், கோயில் தீர்த்தங்களிலும் நீராடுவதாலும் பாவங்கள் தீரும், லட்சுமி கடாட்சம் கிட்டிடும் என்று பலன்களாகப் பெரியோர்கள் அருளியுள்ளனர் அன்றோ! இது எவ்விதம் சாத்தியமாகும் என்ற எண்னம் நிச்சயமாக ஏற்படும்.
சித்தர்களின் கிரந்தங்களில் லட்சுமி கடாட்சத்தை பற்றி அற்புதமான பல விளக்கங்களை அளிக்கின்றனர். அவற்றில் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகின்றோம்.
சாதாரண மனிதனின் கண்ணோட்டத்தில் லட்சுமி கடாட்சம் என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போமா?
லட்சக்கணக்கில் பணம் கொட்ட வேண்டும், கார், பங்களா என்று வசதியாக வாழ வேண்டும், விதவிதமான ஆடை ஆபரணங்களை அணிய வேண்டும் – இவை எல்லாம் நிறைவேறினால் அவன் லட்சுமி கடாட்சம் பெற்றவன் என்று உலகத்தில் பெரும்பாலான மக்கள் எண்ணுகின்றனர் அல்லவா!
”இத பாருடா, வெறுமனே காசு, பணம் வந்து கொட்டினாக்க மட்டும் லட்சுமி கடாட்சம்னு சொல்லிட முடியுமா? ஒடம்பு ஆரோக்யம், மனசுக்குச் சாந்தியோடப் பணம் நெறஞ்சு அதக் கொடுக்கற மனசும் நெறஞ்சிருக்கணும், அதுதாண்டா லட்சுமி கடாட்சம்!...” என்றவாறாக சற்குருநாதர் மேலும் பல அற்புதமான விளக்கங்களைத் தந்தருளினார்.

“எத்தனையோ நவரத்தினங்களையும், அற்புதமான தெய்வீக மூலிகைகளையும், சாளகிரம மூர்த்திகளையும் பாதரச வடிவுகளையும் எங்கிருந்தோ தருவித்து அவற்றின் மஹிமையினை மணிக் கணக்கில் விளக்க வல்லவர், எந்த மொழியிலும் நினைத்த நேரத்தில் பேச வல்லவர், ஏன் சாதாரண கோவணாண்டியாகவே திரிகின்றார்? ஒருவேளை லட்சுமி கடாட்சம் இவருக்கு இல்லையோ!” – என்ற எண்னம் சிறுவனுக்கு ஏற்பட்ட போது குருநாதர் கூறிய விளக்கங்கள்தாம் அவை!
அதற்குப் பிறகுதான், சகல ஐஸ்வர்யங்களுக்கும் அப்பாற்பட்ட சச்சிதானந்த ஜோதியே தன் குருநாதரெனத் தெளிந்தான் அச்சிறுவன்! அவரே இன்று ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளாய் ஸ்ரீ அகஸ்திய விஜயம் மூலம் தம் குருவிடமிருந்து பெற்ற ஆன்மீக பொக்கிஷங்களை கலியுக மக்களின் நல்வாழ்விற்காக அளித்து வருகின்றார்கள்
ஐஸ்வர்யம் பெறுவதென்றால்…
1.ஒருவன் தினமும் நன்முறையில் மல ஜலங்கழித்து, கழிவு உறுப்புகளில் எவ்வித உபாதையுமின்றி நன்கு ஆரோக்யமாக இருந்திடில், இவ்வித அனுக்ரஹமும் ஐஸ்வர்யத்துள் ஒன்றே!
2.தினமும் அலுவலகம் சென்று சிறுகாயமோ, துன்பமோ இல்லாமல் பத்திரமாகத் திரும்பி வருதல் ஓர் ஐஸ்வர்யமே!
3.தங்கள் கணவன்/பிள்ளைகள், அலுவலகம்/பள்ளி/கல்லூரி சென்று பத்திரமாகத் திரும்புதலும் இல்லறப் பெண்கள் பெறுகின்ற ஐஸ்வர்யத்தின்பாற்பட்டதே!
4.நாள்தோறும் காது, கண், தோல் போன்ற அவயங்கள் எவ்விதத் துன்பங்களுக்கும் ஆளாகாது நன்முறையில் செயல் படுதலும்
5.இரவில் நன்கு அல்லது தேவையான அளவு உறங்கி எழுதலும்
6.எல்லாவற்றையும் விட நல்ல மனநிலையோடு “இது என் குடும்பம், இது என் அலுவலகம், இது என் மனைவி, மக்கள்”- என்ற தெளிந்த அறிவுடன், மனோநிலைக்குப் பங்கம் இன்றி தினமும் நன்கு வாழ்வதும் ஐஸ்வர்ய கடாட்சத்துள் அடங்கும்.
ஒன்றைச் சற்றே சிந்தியுங்கள்!
திடீரென்று நினைவு தவறி, நாம் வாழ்கின்ற உலகைப் பற்றிய உணர்வுகளை, தொடர்புகளை, உறவுகளையே மறந்து மனநிலைக் கோளாறு ஏற்படுமானால்…
எங்கோ சென்றலையாமல் இறையருளால் நம் வீட்டிற்குத் தினமும் வந்து சேர்கின்றோமே! நிச்சயமாக இதுவும் ஐஸ்வர்யந்தானே!
மனநிலை மாறிச் சித்தபிரமையில் எங்கெங்கோ அலைந்து திரியாது தெளிந்த அறிவு, மனத்துடன் இருப்பதும் ஐஸ்வர்யந்தானே!
இதைப் பற்றிச் சற்றே ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்! ஒரு நாளென்ன, ஒரு நிமிட நேரம் நம் மனோநிலை தவறினால் ஏற்படும் விபரீதங்களைச் சிறிதே எண்ணிடுக!
அப்போதுதான் புரியும் ஓவ்வொரு வினாடியும் நாம் மன சுபிட்சத்துடன் வாழ்வது ஐஸ்வர்ய கடாட்சத்தினாலென்று!
இறைவழிபாடுகள், தான தர்மங்களை, பித்ரு தர்ப்பணங்கள், ஜப, தியானங்களை நாம் முறையாகச் செய்துவராவிடினும், மூன்று வேளையும் உண்டு ஏதோ ஒருவழியாய் நிம்மதியாய் வாழ்க்கைச் சக்கரம் உழல்கின்றதே இதுவும் ஐஸ்வர்யப் பெருநிலையால்தானே!
அப்படியானால் எல்லோருக்கும் ஒருவகையில் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டுதானே இருக்கின்றது! இதிலென்ன ஐஸ்வர்ய கடாட்சமோ என்று கேட்கத் தோன்றுகிறதா?
உண்மையே, எவராயினும் சரி அறிந்தோ அறியாமலோ, பச்சிளங்குழந்தையாகவோ, சிறுபாலகனாகவோ அல்லது இளைஞனாகவோ ஏதேனும் ஒரு பருவத்தில் குறைந்த பட்சம் ஒரு முறையாவது புனித நதியிலோ/கோயில் குளத்தீர்த்தத்திலோ நீராடியிருப்பாரன்றோ! அதன் ஐஸ்வர்ய சக்தியே பல்லாண்டுகளுக்கு நீடிக்கின்றது என்பதை உணர்ந்து தெளிந்திடுக!
அடியார்: சற்குருவே! ஒருமுறை புனித தீரத்தத்தில் நீராடினாலே சகல ஐஸ்வர்யகடாட்சமும் கிட்டுமெனில் பலவகையான துன்பங்களும் பிணிகளும் தொடர்கின்றனவே, இது எதனால்?
சற்குரு: அதாவது, நீ சொல்வது என்னவென்றால், புனித தீர்த்த நீராடலுக்குப் பின் உடனே ஐஸ்வர்ய கடாட்சப் பலன்கள் எப்போதும் அமுத சுரபியாய் வர்ஷிக்க வேண்டும், அப்படிதானே!
அடியார்: ஆம், குருருதேவா!
சற்குரு: (புன்முறுவலுடன்) மனிதனுக்கு என்னே பேராசை! புனித தீர்த்தப் பலன்கள் என்றும், எப்போதும் மாறுவதில்லை அல்லது குறைவதில்லை! ஆனால் புனித நீராடலுக்குப் பின் மேலும் புனிதமாக அல்லவா மனிதன் வாழ முயற்சிக்க வேண்டும்! ஆனால் அவனோ பாவச் சுமைகளை அல்லவோ பெருக்கி வாழ்கின்றான்!
பேராசை, பொறாமை, கோபம், முறையற்ற காம எண்ணங்கள்/ செயல்களுடன், நித்ய வழிபாடுகள், பித்ரு தர்ப்பணம் போன்ற வழிபாடுகளை நிறைவேற்றாது, இயந்திர கதியில் ஏனோதானோவென்று வாழ்தல், லஞ்சம் பெறுதல், பொய்/வஞ்சகம் பேசுதல், கணவனுக்கு/மனைவிக்குத் துரோகமிழைத்தல், பெற்றோரை அவமதித்தல், தாய் தந்தையர்க்குரிய சேவை செய்யாதிருத்தல் – என்றவாறாகப் பலவிதமான கர்ம வினைகளைச் சேர்த்துக் கொள்கிறான். இத்தீவினைகளின் ஆதிக்கத்தால், பெருக்கத்தால், சேற்றில் புதைந்த மாணிக்கக் கல் போல், ஐஸ்வர்ய கடாட்சமும் பாவச் சுமைகளிடையே பதிந்து கிடக்கின்றது.
ஆழ்ந்த நம்பிக்கையே அதனை மீட்டுத் தரும்! சற்குரு அருகிலிருந்தால் வாழ்க்கை முழுதும் என்ன, எத்தனை கோடி ஜன்மம் எடுத்திடினும் ஐஸ்வர்யத்தைத் தரும் அருள்வழியை அளித்திடுவார். சற்குருவின் அருள் கூடி வருமாயின் எவ்வளவு ஜன்மம் எடுத்தாலும் அது பாக்கியமே!
எனவே புனித தீர்த்தத்தில் நீராடுதலால் ஐஸ்வர்யம் கிட்டுகிறது என்பது முக்காலும் உண்மையே! அதனைப் பலப்படுத்தும் வகையில் தெய்வீக வாழ்க்கையை மேற்கொண்டிட வேண்டும். பாவங்களிலும் பல வகையுண்டு. முன்ஜன்ம (சஞ்சித) பாவம், இனி வரும் ஜன்மத்திற்குரிய பாவம், இப்பிறவியில் கூடிய பாவம் இவ்வாறாகப் பாவ வினைகள் பல உண்டு! ஒவ்வொரு கோயில் தீர்த்தமும்/ மந்திரமும் குறித்த பாவவினைகளைத் தீர்த்து, ஐஸ்வர்யத்தைத் தந்தருளிகின்றது.

தை பௌர்ணமி

11.1.1998 இரவு 11.00 முதல் 12.1.1998 இரவு 11.53 வரை திருக்கணித முறைப்படி பௌர்ணமி திதி அமைகின்றது. பௌர்ணமியில் ஸ்ரீ சந்திர பகவானின் உச்ச நிலை மற்றும் வளரும் பௌர்ணமி கிரண நிலைகளை கணித்தும் சித்புருஷர்களின் “சந்திர கால கிரண” முறையை ஒட்டியும் ஆஸ்ரமத்தில் பௌர்ணமி பூஜையும் அன்னதானமும் நடைபெறுகின்றது. கோயில்களில் பொதுவாக “வாக்ய கணித” பஞ்சாங்க முறைப்படியும் காலை, மதிய, மாலை நேரப் பூஜைகளைப் பொறுத்தும் பௌர்ணமிதிதி அனுஷ்டிக்கப்படுவதால் பௌர்ணமி தின மாறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. பொதுவாக புனிதமான வளரும் சந்திர (பௌர்ணமி) கிரஹ கதிர்க் காலத்திலும், பௌர்ணமி, உச்சம் கொள்கின்ற இரவுப் பொழுதிலும், இரவில் அமைகின்ற சந்திரனின் காலப் பரிமாணத்தை ஒட்டியும் பௌர்ணமி கிரிவல நாள் சிறப்புப் பெறுகின்றது.
பௌர்ணமி விரத நியதிகள் வேறு, பூஜை முறை நேர நியதிகள் வேறு, கிரிவல கால நியதிகள் வேறு என்பதை உணர்ந்திடுக! இத்தகைய அரிய விளக்கங்களைத் தக்க சற்குருவிடம் பெற்றுத் தெளிவு பெறுவீர்களாக!

அன்னதான மகத்துவம்
நம் ஸ்ரீ-ல-ஸ்ரீ அகஸ்தியர் ஆசிரம வாயிலில் பன்னிரெண்டு படிக்கட்டுகள் தெய்வீக மகத்துவம் வாய்ந்ததாக அமைக்கப் பெற்றுள்ளன. இவற்றில் மூலிகா பந்தனங்களும் ஷட்கோணச் சக்கரங்களும் தெய்வீக யந்திரங்களும் ஆகர்ஷண கிரணங்களைப் பரப்பும் வண்ணம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. பூர்வ மந்திரார்த்த வழிபாட்டுக் காலம் முடிந்த பின்னர், நங்கநல்லூர், ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயத்தில் அமைந்துள்ளது போல கோண யந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. இவையனைத்தும் அன்னதானத்தைப் பெற்று நம்மை ஆசிர்வதிக்கின்ற பக்த கோடிகளின், இறையடியார்களின் தெய்வீக நல்வாழ்விற்கான பித்ரு தேவர்களின் நல்லாசிகளை, மூலிகா தேவதைகளின் ஔஷத சக்திகளை, கால தேவதைகளின் சுபிட்ச கிரணங்களை, காரியசித்தி தேவதா மூர்த்திகளின் அனுக்கிரகத்தையும் பெற்றுத் தரும் வண்ணம் ஆன்மீக ரீதியாக நம்பர் கணித தத்துவத்தை (Numerology) ஒட்டியும் அமைக்கப்பட்டுள்ளன.
எனவேதான் நம் ஆஸ்ரம அடியார்கள் கூட கால்களில் பாதணியின்றியே இப்படிகட்டுகளில் நடந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய தெய்வீக சக்திகள் நிறைந்த படிகட்டுகளில் நடப்பது சரிதானா? கிரிவலம் நடக்கின்ற அடியார்களின் பாதங்கள் புனிதமானவை. ஆனால் அப்புனித சக்தியை நல்வாழ்விற்காகப் பயன்படுத்தும் அளவிற்கு மனிதனின் உடலும் மனமும் பக்குவப்படவில்லை. மேலும் மனிதனுக்கு தேவையான பலவிதமான தெய்வீகச் சக்திகளில் பாதங்களின் மூலமாகத்தான் பல உட்செல்கின்றன. பலவிதமான வடமொழி, தமிழ் மொழி மந்திரங்களை ஓதி, பாராயணம் செய்து தயாரிக்கப்படும் அன்னமானது, இப்படிக்கட்டுகளில் வைத்து அளிக்கப்படும்போது அதற்குரிய துவாதச சக்திகளும் சேர்ந்து அன்னம் பெறுவோருக்குப் பலவிதமான அனுகிரஹங்களைத் தருகிறது. எனவேதான் அன்னதானம் பெறும் போது பாதரட்சை இன்றி வெறும் கால்களுடன் வந்து அன்னம் பெறுமாறு வலியுறுத்துகிறோம்.
படிக்கட்டுகளில் வாசம்புரிகின்ற தேவ மூர்த்திகள் பல கோடி. எனவேதான் ஒவ்வொரு வீட்டிலும் தலை நிலை வாசற்படிக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. தலை வாசற்படியும் மா, பலா, தேக்கு போன்ற குறித்த மர வகைகளில்தான் அந்தந்த வீடு நோக்கும் திக்கிற்கு ஏற்ப அமைக்க வேண்டும். வீட்டுப் படிகள் கூட வீட்டுச் சொந்தக்காரரின் நட்சத்திரத்திற்கும் ஜாதக அமைப்பிற்கும் ஏற்ப குறித்த நீள அகல எண்ணிக்கையில் தான் அமைய வேண்டும்.
தற்காலத்தில் பிளாட் சிஸ்டத்தில் வாசலில் நிலைப்படி, அமைக்கப்படுவதில்லை. மற்ற அறைகளிலும் நிலைப்படி அமைக்கப்படுவதில்லை. வீட்டை கூட்டி நீரால் கழுவுவதற்கு வசதியாக, நிலைப்படிகள் வைப்பதில்லை என்று காரணம் சொல்லப்படுகின்றது. இது வாஸ்து சாஸ்திரத்திற்கு புறம்பானது மட்டுமின்றி அந்தந்த திசைக்குரிய நிலைப்படி தேவதைகள் காலை, மதியம், மாலை நேரங்களில் உலா வரும் போது தங்குவதற்கு நிலைப்படிகளையே நாடுகின்றனர் என்பதை நாம் அறிய வேண்டும். அப்போது அந்தந்த நிலையில், அந்தந்த திசைகளில், அதற்குரிய நிலைப் படிகள் இல்லையெனில் படிதேவதைகள் வேதனையுடன் திரும்புவது மட்டுமின்றி பல சாபங்களையும் அளித்திடும். என்வேதான் நம் மூதாதையர்கள், தலை வாசற்படியில் கோலமிட்டு பக்கப்புரங்களில், அரைத்த மஞ்சள் சந்தனம் பூசி குங்குமமிட்டு வந்தனர். நிலைப்படி தேவதா மூர்த்திகள் சங்கராந்தி மண்டலத்தில் உறைவதால் பொங்கல் காலங்களில் காவி பட்டை அடித்து வீட்டை அலங்கரிக்க அத்தேவதா மூர்த்திகள் அங்கு தங்கி, ஆசிசெய்வதற்கு, நாம் ஆசி பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்.
அந்தந்த திசைக்குரிய தேவதா மூர்த்திகளின் நாமங்களை இவ்விதழின் அமிர்ததாரைப் பகுதியில் அளித்துள்ளோம். உங்கள் வீட்டில் தலைவாசல் படிகளுக்கு மட்டும் மாக்கோல மிடுவதோடு நிறுத்தி விடாதீர். சமையலறை, படிப்பு அறை போன்று அனைத்து அறைகளின் வாசற்படியிலும் கோலமிட்டு செவ்வாய் வெள்ளிக் கிழமைகளிலேனும் அரைத்த மஞ்சளைப் பூசி சந்தனம், குங்குமமிட்டு அந்தந்த திசைக்குரிய தேவதைகளை வணங்குதல் வேண்டும். ஏனென்றால் எத்தனையோ துர் எண்ணங்களும் துர் சக்திகளும், நம் வீட்டிற்குள் புகுகின்றன. இதனால்தான் சற்று முன்பு வரை அமைதியாக இருந்த குடும்பச் சூழ்நிலையானது கணவன் மனைவியிரியையே ஒரு சிறு வார்த்தை வித்யாசத்தால் பூகம்பமாய் பெரும் சண்டையாய் வடிவெடுத்து விடுகிறது. ஏன் இத்தகைய சண்டை மூண்டது என்று தெரியாமல் ஒருத்தரை ஒருத்தர் திட்டிக் கொண்டே அந்தநாள் கழியும். இதனாலேயே தெரிந்துகொள்ளலாம் துர்தேவதைகளின் ஆர்ப்பாட்டத்தால் ஏற்பட்டவை அவை என்று. செவ்வாய், வெள்ளிதோறும் இல்லத்தில் சாம்பிராணி தூபம் இட்டுவர வேண்டும் என்ற நியதியை நம் ஆன்றோர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.
அக்காலத்தில் காசி, ராமேஸ்வரம் திருப்பதி போன்ற தலயாத்திரைகளை மேற்கொண்டு திரும்புவோர்க்குப் பாத பூஜைசெய்து தலைவாசற்படியில் ஆரத்தி எடுத்து வரவேற்பர்.
அவர்களும் தலைவாசற்படியில் தங்கள் பாதங்களை பதித்து இல்லத்திற்குள் வருவர். இதன் பொருள்யாதெனில் பாதயாத்திரையின் புனித தெய்வீக சக்திகள் உள்ளங்கால் ரேகைகளில் படிந்து நிலைப்படி தேவதைகளின் அருளாசியினால் இல்லத்திற்குள் பரவுகிறது. மேலும் சபரி மலை, பழநி மற்றும், திருஅண்ணாமலை, திருப்பதி போன்ற தலங்களுக்கு வெயில், மழை, கல், மண், பாராது கமும் பயணத்தை, உடல் தாளாது எனினும் பலர் மேற்கொள்வதைக் காண்கிறோம். இதற்குக் காரணமென்ன? அவரவர் குடும்பத்தைச் சேர்ந்த பித்ரு தேவதா மூர்த்திகள் அவரவர் உடலில் சூட்சுமமாக ஆவாஹனமாகி புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கின்றனர்.

ஐயர்மலை படிக்கட்டுகள்

மேலும் ஒருவர் எத்தகைய கொடிய தீய பழக்கங்களுக்கு ஆளாகியிருந்தாலும், லஞ்சம் பெறுதல், ஏமாற்றுதல், கலப்படம் செய்தல் போன்ற எத்தகைய பாவச் செயல்களை மேற்கொள்வார்களேயானால், “இவன் இந்த இறைப் பயணத்தில் கிட்டும் புண்ய சக்தியால் மனம் திருந்தி, தான் இழைத்த கொடுமைகளுக்காக வருந்தி பிராயச்சித்தம் தேடி, நல்வாழ்வில் காலடி எடுத்து வைக்கமாட்டானா” என்ற நம்பிக்கையில் தான் பித்ருக்கள் தியாக உள்ளத்துடன் அத்தகைய மனிதனுக்கு புனித யாத்திரையை மேற்கொள்ள ஊக்கத்தை அளிக்கின்றனர்.
இத்தகைய காருண்ய உள்ளம் படைத்த பித்ரு தேவர்கள் நம்பிக்கையுடன் முயற்சி எடுத்தும், ஒருவன் திருந்தி வாழவில்லை என்றால், அதே பித்ரு தேவர்கள் பல சாபங்களை அளித்து விடுகின்றார்கள். பித்ரு சாபம் என்பது மிகவும் கடினமானது. அதிலிருந்து மீள்வதே மிகவும் கஷ்டமாகும். அதனால் ஏற்படுகின்ற கஷ்டங்களோ, எத்தனையோ ஜன்மங்களுக்குத் தொடரும். என்னதான் வாழ்க்கை வசதிகள் இருந்தாலும் பித்ரு சாபம் ஏற்பட்டு விட்டால் ஒரு நொடி கூட நிம்மதியாக வாழமுடியாது.
எனவே திருஅண்ணாமலை கிரிவலம், பழநி, திருப்பதி, காசி போன்ற தலங்களுக்கு தெய்வீக பயணத்தை மேற்கொண்டோர், அதனை முழுமையாக நன்கு முடித்து வருகின்றார்கள் எனில், அது அவர்களுடைய மூதாதையர் ஆசியையே குறிக்கின்றது.
இவ்வகையில்தான் கிரிவல அடியாருக்கு உணவிடுவது என்பது ஒரு உத்தம அன்னதானமாகிறது. மேலும் மேற்கண்ட முறையில் தெய்வீக வழிபாடுகளுடன் வேத, மந்திர, யந்திர, வழிமுறைகளில் நம் ஆசிரம படிக்கட்டுகள் அமைந்திருப்பதால் பல தேவதா மூர்த்திகளும் தங்கள் அனுகிரஹங்களைப் பதித்து செல்லும் திருப்படிகளாக அமைந்துள்ளன.
எல்லாவற்றையும் விட முத்தாய்ப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டுமெனில் திருஅண்ணாமலை, கொல்லிமலை, பொதிய மலை, பர்வத மலை போன்ற, சித்தர்கள் நிறைந்திருக்கின்ற தலங்களில் எந்த சித்புருஷரும் எந்த நேரத்திலும் வீட்டு வாசலில் வந்து நிற்கலாம். பொதுவாக சித்தர்கள் உள்ளே வராது சித்தன் போக்கு சிவம் போக்காய் வெளியில் நின்றே விதவிதமான அனுக்ரஹங்களைப் பொழிகின்றனர்.
ஒரு சித்புருஷர், ஒரு சிறு பருக்கையை உண்டு சுவாசித்தாலே பொதும் அக்காற்றின் தெய்வீக தன்மை லட்சக் கணக்கான மக்களுக்கு செல்லும். எனவே, ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகளின் அருட்கட்டளையின்படி ஈஸ்வர ஆண்டில் இறைத் திருப்படிக்கட்டுகளுடன் மகத்தான அன்னதான சேவை, எல்லாம் வல்ல ஸ்ரீ அருணாசலேஸ்வரரின் கிருபையால் நம் ஆஸ்ரமத்தில் நடைபெற்று வருகிறது. இதேபோல் சில கோயில்களில் உள்ள படிக்கட்டுகளிலும் பல தெய்வீக ரகஸ்யங்கள் நிறைந்துள்ளன.

திருவெள்ளறை படிக்கட்டுகள்

ஈரேழு லோகங்களில் காணக் கிடைக்காததே சபரிமலைப் படிக்கட்டு தரிசனம்.
அருள்தரும் அய்யர்மலை படிக்கட்டு
திருச்சி – குளித்தலை அருகேயுள்ள ஐயர் மலையில் உள்ள படிக்கட்டு ஒவ்வொன்றும் மிக அற்புதமான பலன்களைத் தர வல்லது. நற்காரிய சித்திக்கு இங்கு ஒவ்வொரு படிக்கட்டிலும் தீபத் திரியினால் விளக்கேற்ற நற்காரிய சித்தி கிட்டும்.
மலையின் மேல் உள்ள இனிய சுனையின் அருகேயுள்ள குகையில் இன்றும் பல சித்தர்கள் தவம் புரிந்து வருகின்றார்கள். காலம் காலமாக ஸ்ரீ ரத்னகிரீஸ்வரருக்கு காவிரி நீர் அபிஷேகம் நடைபெற்றுவருகின்றது.
திருச்சி அருகே திருவெள்ளரையில் உள்ள பெருமாள் கொயிலில் உள்ள படிகள், வேத மந்திரங்கள் நிறைந்தவை. பீஜாட்சரங்கள் அவைகளில் நிறைந்த ஸ்ரீ காயத்ரி மந்திர படிக்கட்டுகளும் உண்டு. இக்கோயிலிலும் கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி, சக்ரபாணி ஆலயங்களிலும் உத்தராயண படிக்கட்டு, தட்சிணாயன படிக்கட்டு என்று இருவித படிக்கட்டுகள் உண்டு. தை முதல் ஆணி வரை உத்தராயண படிக்கட்டுகளும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனப் படிக்கட்டுகளும் திறக்கப்பட்டிருக்கும்.
காரிய சித்திக்காக உத்திராயண படிகட்டுகளில் ஏறும்போது, ஒரு குறித்த கலையில் (மூச்சு) சுவாசமும் தட்சிணாயனத்தில் மற்றொரு கலை சுவாசமும் ஓடும்படி பிராணாயாமம் செய்தவாரே பெருமாளை தரிசித்திட வேண்டும்.
சுவாசத்திற்கும் காரிய சித்திக்கும் என்ன சம்பந்தம்? பிராணாயாமம் என்பது வெறும் சுவாசக் கலை மட்டுமல்ல, நம்முடைய பலவிதமான கர்ம வினைகளை சுவாச ஓட்ட பஞ்ச பூத தேவதைகளின் ஆசியால் பஸ்மம் செய்து விடலாம். காரிய சித்திக்கு பெரிதும் வழிவகுப்பது கர்மவினையின் கழிப்புதானே!
அதாவது எந்த நற்காரியத்திற்கும் தடங்கல்களாக ஏற்படுகின்ற எதிர்வினைகளை முன்னரே அறிந்து பஸ்மம் செய்துவிட்டால் காரியசித்தி எளிதாகி விடுமல்லவா. பிராணாயாமம் யோக சக்திக்கு முன் கூட்டியே அறியும் ஆற்றலுண்டு. நன்றாக நிமிர்ந்து கால்களை நீட்டிய வண்ணம், முழங்கால்களை மடக்காது வலது கையால் இடதுகால் கட்டை விரலையும் இடது கையால் வலது கால் கட்டை விரலையும், நன்றாகப் பிடித்து ஸ்வாசத்தை நன்றாக இழுத்துத் தேக்கி விடப் பழகினால் ஓர் அற்புதமான, பிராணாயாம யோகாக்னி சக்தி கிட்டுகின்றது. இதனால் நற்காரியங்களுக்கு வரும் தடங்கல்களை எளிதில் வென்றிடலாம்.
ஆனால் அனைவருக்கும் இது சாத்தியமா?
இதற்கு ஈடான சக்தியைத் தரவல்லதே திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்ற அடியார்க்குச் செய்யும் அன்னதானச் சேவையாகும். கால்கட்டை விரலில் எழும்பும் யோகாக்னி சக்தியை கால் கட்டைவிரல் தேய திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்ற அடியார்கட்கு உண்மையான அன்புடன் அன்னதானம் இட்டு எளிதில் பெற்றிடலாம். இவ்வாறாக திருஅண்ணாமலை அன்னதான் மஹிமை எத்தனை எத்தனை!!

காசிக்குச் சென்று திரும்பியவுடன்….
ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் காசி எனப்படும் வாரனாசியில் கங்கை நதியில் நீராடுதல் வேண்டும். பலவிதமான பித்ருக் காரியங்களைச் சரிவர நிறைவேற்றாமைக்கான பிராயச்சித்தங்களைத் தரவல்லதே காசி கங்கை ஸ்நானமாகும். காசிக்கு சென்று திரும்புவோர், கங்கை நீருடன் ஸ்ரீ அன்னபூரணியின் சிறு உருவத்தை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அளித்திடும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. பொதுவாக கட்டைவிரல் அளவிற்கு மேல் உயரம் உள்ள தெய்வ மூர்த்தியின் உலோக உருவத்திற்கு தினசரி நைவேதனமாவது செய்து வருதல் வேண்டும். கட்டைவிரல் அளவிற்க்கும் குறைந்த மூர்த்திகளுக்கு இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் கிடையாது. எந்த உலோக மூர்த்தியிலும் தெய்வீக சக்தி உடனே நிறைந்து விடுவதால் அதனைப் பயன்படுத்தாமல் இருப்பது வாழ்க்கையை வீணாக்குவதாகும்.
காசியாத்திரை சென்றவர்கள் கங்கை நீரை தானமாக அளிப்பது மிகவும் சிறப்பான தானங்களில் ஒன்றாக ஆகிவிடுகிறது. ஆனால் ஸ்ரீ அன்னபூரணியின் சிறிய உலோக மூர்த்தியை பிறருக்கு அளிக்கும் முன் ஒன்றை நன்றாக மனதில் கொள்ளவும். யாருக்கு அந்த சிறிய விக்ரஹத்தை கொடுக்கின்றீரோ அவர்கள் அதனை வெறுமனே வைத்து விடுவார்கள் என்றால் என்ன பயன்? பலருடைய வீடுகளில் சின்னஞ்சிறு பிள்ளையார், முருகன் மூர்த்திகளைப் பூஜையில் அப்படியே வைத்திருப்பர். அழுக்கு, பச்சை படிந்து அவைகளைத் தொட்டுப் பார்த்தே பல வருஷங்கள் ஆகியிடுக்கும். இது முறையாகுமா? இதற்கான சில எளிய வழிபாட்டு முறைகளுண்டு.
காசியிலிருந்து திரும்பியவுடன் தாம் கொண்டு வந்துள்ள கங்கை நீர்க் குடுவைகளையும் ஸ்ரீ அன்னபூரணி உலோக மூர்த்திகளையும் பூஜையில் வைத்து இயன்றால் சமாராதனை என்ற முறையில் பலருக்கும் உணவிட வேண்டும். அல்லது உணவைச் சமைத்து ஸ்ரீ அன்னபூரணி உலோக விக்ரஹங்களுக்குப் படைத்து கோயிலில் அன்னதானமாக இட வேண்டும். மேலும் அன்னத்தால் ஸ்ரீ அன்னபூரணிக்கு அபிஷேகம் செய்து பிறகு அதனை அன்னதானமாக அளிப்பது மிகவும் விசேஷமாகும். இதனால் ஸ்ரீ அன்னபூரணி தேவியின் உலோக பிம்பங்களுக்கு அன்ன ஸ்வேத பிரகாச சக்தி உண்டாகின்றது. இதனுடைய மஹிமையால் யாருக்கெல்லாம் இந்த பிம்பம் அளிக்கப்படுகின்றதோ, அவர்களுக்குத் தினசரி நைவேத்யம் செய்கின்ற மனப்பாங்கும் அன்னதான உணர்வுகளும் பெருகும். இதனால் தெய்வீக சக்திகள் நிறைந்த பிம்பத்தை வெறுமனே வைக்கின்றமையால் ஏற்படும் குறைகள் நீங்கி விடும்.

சந்திராஷ்டமம்

சந்திராஷ்டம தினங்கள்
ஒவ்வொரு ராசியினருக்கும் பொதுவாக மாதத்தில் இரண்டேகால் நாட்கள் சந்திராஷ்டம நாட்களாய் அமையும். அதாவது ராசிச் சக்கிரத்தில் அவர்களுடைய ராசியிலிருந்து எட்டாவது ஸ்தானத்தில் (ராசியில்) சந்திரன் பிரவேசம் செய்யும் போது அந்த ராசிக்காரர்களுக்கு சந்திரனின் இடம் எண் கோண அமைப்பில் அமைவதால் அவ்விரண்டே கால் நாட்கள் சந்திராஷ்டமமாக விளங்குகிறது. சந்திராஷ்டமம் இருக்கும் தினங்களில் அந்தந்த ராசிக்குரித்தோரின் எண்ணவோட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. பொதுவாக கவனக் குறைவினால் தவறுகளும் குழப்பமான மனோ நிலைகளும், கட்டுக் கடங்காத முறையற்ற எண்ண அலைகளும், தேவையற்ற வாய் வார்த்தைகளும் அதனால் ஏற்படும் மனக் கசப்புகளும் சண்டைச் சச்சரவுகளும் (அந்நாட்களில்) அதிகம் ஏற்படும். அதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற நண்பர் உறவினர்களோடு குடித்து சுய உணர்வை இழக்கின்ற நிலை பலருக்கு ஏற்படுகின்றது. சந்திராஷ்டம தினங்களில்தான் எதிர்பாராத விதமாகப் பல நண்பர்கள் குடிப்பதற்கும், சூது ஆடுவதற்கும், பிற மாதர் மீது தேவையற்ற காம எண்ணம் உருவாக்குவதற்கும் தோன்றும். அதோடு மட்டுமல்லாமல் நாட்டிற்கே தீங்கு விளைவிக்கின்ற விபரீத எண்ணங்கள் கூட உருவாகின்றன. பெற்ற தாய், தந்தை, மனைவி மக்களைக் கூட உதாசீனப் படுத்தும் துர்சக்திகளின் ஆளுகைக்கு இந்த மனம் ஆட்படுகின்றது. அதோடு மட்டுமல்லாமல் வியாபார தந்திரங்களில் ஏமாறுகின்ற புத்தி நிலையையும் இந்த சந்திராஷ்டம தினங்கள் உருவாக்கி விடுகின்றன. நேற்றுவரை கொடுத்த உறுதிமொழிகளை மாற்றுகின்ற மன நிலையால் சண்டை சச்சரவுகள், கைகலப்புகள் ஏற்படுகின்ற நிலைவரை இழுத்துச் சென்று சேர்த்து விடும்.
ஆனால் இதில் ஒரு விதிவிலக்கு உண்டு. சந்திரன் நல்ல நிலையில் இருக்கின்றவர்களுக்கும், அம்மன் உபாசகர்களாய் இருக்கின்றவர்களுக்கும் நாடி வர்மக் கலைகளை கூட்டுப்பூ சந்திர வர்மத்தில் பயின்றவர்களாலும், கண்ணோட்ட நேர் பார்வை வடிவு வர்ம தந்திரத்தில் பயின்றவர்களாலும் சந்திராஷ்டமத்தின் நேர் நிழல் வாங்கி அமைதி கொள்ளச் செய்யலாம். ஆனால் இதை மூலிகை ரஸக்கட்டு தெரிந்தவர்களால்தான் செய்யமுடியும்.
சந்திராஷ்டம தினங்களில் சந்திர பகவானுக்குரித்தான உளுந்தாலான உணவினை (வடை, போண்டா etc..) ஸ்ரீ சந்திர பகவானுக்கு கோயிலில் படைத்து பசுவிற்கு அளித்து வருதலால் சந்திராஷ்டம தினங்களில் ஏற்படும் விளைவுகள் தணியும். இத்தினங்களில் ஸ்ரீ சந்திரமௌளீஸ்வரரை அபிஷேகம் ஆராதனைகளுடன் வழிபடுதல் சிறப்பாகும்.
கண் ஒளி சிறக்க….

ஸ்ரீகமலாம்பிகை பழையாறை

வயதாகிக் கண் பார்வை மங்குவது இயல்புதானே! ஆனால் இளவயதிலேயே வறுமை, சக்தியின்மை, நோய், செயற்கைச் சூழ்நிலை, விபத்து, எதிரிகளின் செயல்கள் போன்றவற்றால் கண் பார்வை பாதிக்கப்படுமாயின் அவ்வேதனைகளைத் தீர்ப்பதற்கென ஒரு தெய்வ மூர்த்தி அருள்பாலிக்கின்றார் எனில் அதை அறிய ஆவல் ஏற்படுவது இயற்கைதானே! திருவாருர் – திருத்துறைப் பூண்டி சாலையில் அமைந்திருக்கும் திருகாறயில் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ கண்ணாயிர சிவமூர்த்தியே கண் ஒளியைப் பெருக்கும் கலியுகப் பிரத்யட்ச தெய்வமூர்த்தி! பாடல் பெற்ற உத்தம் சிவத்தலமிது.
சப்த விடங்க நடனத் தலங்களான ஏழு கோயில்களில் ஒன்றாக விளங்கும் ஒப்புயர்வற்ற க்ஷேத்திரமிது! சிவபெருமான் குக்குடாசன நடனமிடும் திவ்யமான கோயில். குக்குடாசனம் என்பது மூலாதார சக்தியைக் கூட்டும் முதன்மையான யோக நிலையைத் தரும் நல்ல ஆசனம். குக்குடாசன யோக நிலையை முறையாகப் பயின்று வந்தால் தீர்க்கமான கண்ணொளி ஏற்பட்டு எதிர்காலத்தை அறியும் தீர்க்க தரிசனம் கிட்டும்.
குக்குடாசன முறையில் காலை, மதியம், மாலை முதலிய வேளைகளில், குறிப்பாக சந்தியா (மாலை) நேரங்களில் குக்குடாசன நடனம் ஆடி இறைவனைப் போற்றி வர ஸ்தூலபாக சித்தி எனும் ஓர் அற்புதமான சித்தி கிட்டுகின்றது. மேலும் பிரதோஷ நேரத்தில் குக்குடாசன யோகமோ, நடனமோ பயின்று வந்தால் இச்சித்தியின் சக்தி பன்மடங்கு பெருகுகின்றது. ஸ்தூலபாக சித்தியின் மகிமை என்னவென்று தெரியுமா? கண்பார்வையின் சக்தி பல்லாயிரம் மடங்காகப் பெருகிப் பகலிலேயே நட்சத்திரங்களைப் பார்க்கும் சக்தி கிட்டும்.
பலவிதமான கண்நோய்களால் அவதியுறுவோர், திருக்காறயில் ஸ்ரீ கண்ணாயிரமூர்த்திக்குப் பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, தேங்காய் எண்ணெய் தைலக் காப்பிட்டு, ஏழைகளுக்குத் தேனில் ஊறிய அத்திப்பழத்தை இறைவனுக்குப் படைத்தபின் அளித்து வருதல் வேண்டும்.
மருத்துவத் துறையில் கண்நோய் நிபுணர்கள் திருக்காறயில் ஸ்ரீ கண்ணாயிரமூர்த்திக்கு அடிக்கடி அபிஷேக ஆராதனைகள் செய்து வருதலால் தம் துறைகளில் முன்னேற்றம் அடைவர்.
மாலைக்கண்நோய், க்ளுக்கோமா போன்ற கண் நோய்களால் பாதிக்கப்பட்டிருப்போர் இம்மூர்த்திக்கு இயன்ற திருப்பணிகளையும் , தானதர்மங்களையும் செய்து வருதல் வெண்டும்.

அமுத தாரைகள்

மனைவியின் மனம் மாறிட…
ஸ்ரீ துர்கை சந்நிதியில் பரணி நட்சத்திரத்திலோ, ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹோரை நேரத்திலோ (காலை 6 -7, மதியம் 1 -2 , இரவு 8 – 9) தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி புன்னாகவராளி ராகத்தில் பாடல்களைப் பாடி சூரிய பகவானுக்குரித்தான கோதுமை உணவினைத் தானம் செய்து வந்தால் கோபத்தால் பிரிந்து சென்ற மனைவி மனம் திருந்தி கணவனுடன் வந்து செருவாள். மூன்று மண்டலமேனும் (3 x 48 நாட்கள்) இவ்வரிய பூஜைகளைச் செய்தல் சிறப்புடையது.
கணவனைக் காத்திட…
ஒவ்வொரு ராகமும் பல பீஜாட்சர சக்திகளை ஆரோஹன அவரோஹன அம்சங்களாகக் கொண்டுள்ளன. இசையால் முக்தி நிலையடைந்த பெரியவர்கள் பலர். சில ராகங்களுக்கு ஆயுளை விருத்தி செய்யும் அற்புத சக்தி உண்டு. கடும்நோயில் வாடும் கணவனின் நல்வாழ்விற்காக மனைவியானவள் பந்துவராளி ராகத்தில் கமலாம்பாள், கமலாம்பிகை போன்ற கமல பெயரை உடைய அம்பிகையை (திருவாரூர்) பாடி வந்திட கணவனுக்கு ஆயுள்விருத்தி கிட்டும்.
அம்பிகையின் முன் பாலில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை (Millk Sweets, ரசகுல்லா etc)படைத்து பந்துவராளி ராகத்தில் பாடி ஏழைக் குழந்தைகளுக்கு அளித்துவர கணவனின் நோய்க் கொடுமைகள் தணிந்து ஆயுள் விருத்தி கிட்டும். பொதுவாக இத்தகைய இராக பூஜையை வளர்பிறை திதியில் தொடங்கி மூன்று மண்டல பூஜையாக மீண்டும் வளர்பிறையில் முடித்தல் மிகவும் சிறப்பானது. பிலஹரி ராகம் பொதுவாகப் பெண்களுக்கு நல்வரங்களைத் தருவதாகும். அம்பிகை உமா மகேஸ்வரியாகப் பலவிதமான ராகங்களில் இறைவனைத் துதித்து அரும்பெரும் அவதாரங்களைக் கொண்டனள். பெண்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ பிலஹரி ராகம் பெரிதும் உதனுகின்றது பெண்ணியல் துறை மருத்துவர்கள் (Gynacologists) மஹேஸ்வரி, உமா மஹேஸ்வரி என்ற பெயர் தாங்கி அருள்பாலிக்கும் அம்பிகையைப் பிலஹரி ராகப் பாடல்களால் இசைத்துத் தொழுதுவர, தம் துறையில் கீர்த்தியுடனும், ஐஸ்வர்யங்களுடனும் பிரகாசிப்பர். பூர்ணக் கொழுக்கட்டைப் படையலும், தானமும் விசேஷமானதாகும்.
மின்சார ஒளிக்கு எம்மந்திரமோ?
அக்னி சக்தியின் ஒரு வகையே தீப ஒளி! இதிலும் பல்வேறு வகையான அடுப்பு அக்னி, மின்னல் ஒளி, ஊதுபத்தி ஒளி, மின்சார விளக்கு ஒளி என தீபத்திலும் பல வகைகள் உண்டு. மின்சார விளக்கும் தீபத்தின் ஒரு வகையே! மின்சார சம்பந்தமான லைட்டுகள், ஜெனரேட்டர், இயந்திரங்கள் போன்றவற்றை இயக்குவதற்கு, மின்சார விளக்கு இணைப்பு சுவிட்சைப் போடும் முன் கீழ்க்கண்ட பாடலைத் துதித்திடுக! இயந்திரங்களில் பணிபுரிவோர், என்ஜினியர்கள், மின்சாரத் துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி இல்லத்தில் எந்த மின்சாரக் கருவியை இயக்கும் முன் அதாவது எந்த சுவிட்சையும் போடுவதற்கு முன் கீழ்க்கண்ட, திருமூலரின் அரிய பீஜாட்சரங்கள் நிறைந்த மந்திரத்தை ஓதுதல் வேண்டும்.
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே
என்ற திருமூலருடைய பாடலை ஓதுதல் வேண்டும். இதனால் எத்தகைய மின்சார இன்னல்களிலிருந்தும் தற்காத்துக் கொள்வதோடு மின்சார ஒளியின் ஆன்மீகத் தன்மையைப் போற்றுவதும் ஆகும். மின்சார விளக்கிற்கும் ஆன்மீகப் பண்புகள் உண்டா? உண்டே! அதனை தனி விளக்கமாகக் காண்க!
ஸ்ரீ ஆதிவிநாயக மூர்த்திக்கு கல்யாண முருங்கை சாற்றுடன் தேன் கலந்து அபிஷேகம் செய்து அப்பிரசாதத்தை நீரில் கலந்து பெண்களுக்கு அளித்து வந்திடில் தெளிவற்ற எண்ண ஓட்டங்களாலும், மன சஞ்சலங்களாலும் ஏற்பட்ட தலைவலி நீங்கி ஆரோக்கியம் பெறும்.
வியாழக்கிழமை தோறும் காலையில் அருகம்புல் சாற்றுடன் தேன் கலந்து ஸ்ரீ ஆதி விநாயகருக்கு நிவேதனம் செய்து பின்னர் அந்த பிரசாதத்தை காலையில் வெறும் வயிற்றில் உண்டு வந்திடில் இருதய சம்மந்தமான நோய்கள் தடுக்கப்படும்.

ஸ்ரீநரமுக விநாயகர் நன்றுடையான்
கோயில் திருச்சி

விருந்தினர் வந்தால்
வீட்டிற்கு விருந்தினர்கள் வருகையில் அவர்களுக்கு உணவைப் பரிமாறும் முன்னர் பூஜை அறையில் தீபத்தை ஏற்றிய பின்னர் விருந்து படைப்பது சிறப்புடையதாகும். ஏனெனில் விருந்தினர்க்குரிய மூதாதையர்களான பித்ரு தேவதைகள் அவ்விளக்கில் ஆவாஹனமாகி இரு குடும்பங்களின் ஒற்றுமைக்காகவும் நல்வாழ்விற்காகவும் பிரார்த்தனை செய்வர்.
இசைக்கு பலவிதமான மருத்துவ தெய்வீக குணங்கள் உண்டு என்பதை நாம் நன்கறிவோம். பூக்கள், நவரத்தினங்கள், பஞ்ச உலோகங்கள் போன்று ராகங்களும் பஞ்சபூத சக்திகளைக் கொண்டவை. எவ்வாறு மணிமந்திர ஔஷதங்கள் மிக எளிமையாக கர்ம வினைகளையும் பாவங்களையும் நோய்களையும் தீர்க்கின்றனவோ அதேபோல் இசைக்கும் இத்தகைய தெய்வீக சக்திகளுண்டு. இசை பாடி இறைவனைக் கண்டு ஆனந்தித்தோர் பலர். ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு குறித்த ராகத்தில் குறித்த நாட்களுக்கு இறைவனை ஆராதித்து வந்தால் அதற்குரித்தான நற்பலன்களை எளிதில் பெற்றிடலாம். எனவே இசையும் ஒருவிதமான தெய்வீக வழிபாடே. இவ்வகையில் கல்யாணி ராகத்திற்குப் பலவிதமான திருமண தோஷங்களையும் தடங்கல்களை நீக்கும் ஆன்மீக சக்தியுண்டு. அம்பிகையின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு கல்யாணி ராகத்தில் அமைந்துள்ள இறைப்பாடல்களால் மூன்று மண்டலங்களுக்கு அம்பிகையை துதித்து வந்திடில் நிச்சயமாக திருமணம் தானே கூடி வரும்.
பெரியசாமி என்று அழைக்கப்படுபவரே ஸ்ரீஆதிவிநாயகர் ஆவார். நரமுக கணபதியென்றும் போற்றப்படுகின்றார். ஸ்ரீஆதிவிநாயகர் தும்பிக்கையின்றி மானுட முகத்துடன் காட்சியளிக்கின்றார். திருவையாறு தஞ்சை பூந்தோட்டம் அருகே உள்ள திலதைப்பதி, சிதம்பரம், திருச்சி மலைக்கோட்டையருகேயுள்ள ஸ்ரீ நன்றுடையார் கோயில் போன்ற இடங்களில் ஸ்ரீ ஆதி விநாயகர் அருள்பாலிக்கின்றார்.

திருவையாறு அருகே திருநின்றியூர் என்ற சிவத்தலத்தில் ஸ்ரீ லட்சுமீசர் என்ற நாமம் தாங்கி சிவலிங்க மூர்த்தி அருள் பாலிக்கின்றார் என்பதை அறிவீர்களா! திரு (ஸ்ரீலட்சுமி) நின்று தவம் புரிந்து சிவனைத் தொழுது அருள்பாலிக்கும் தலமாதலின் திருநின்றியூராயிற்று! ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகள் பல ஆண்டுகளுக்கு முன் தன் அருமை சிஷ்யராம் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளுடன் இத்திருத்தலத்திற்குச் சென்று உழவாரத் திருப்பணி செய்யும் பாக்கியத்தை தம் சிஷ்யனுக்கு அளித்தார். அப்போது தம் சற்குரு நாதரிடமிருந்து “லட்சுமி கடாட்சம்” என்பதற்கான அரிய விளக்கங்களை ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் பெற்றார்.

அம்பிகை ஓடோடி வந்திட....
பாலா என்ற பெயருடையோர் (பாலா, ஸ்ரீபாலா, பாலசுந்தரி etc.,) ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதருடைய நீலாம்பரி ராகத்திலான “அம்ப நீலாயதாக்ஷி” என்ற பாடலை எப்போதும் இசைத்து வந்திடில், இடம், நேரம் பார்க்காது எப்போது துன்பம் வந்திடினும் ஸ்ரீ அம்பிகை உடனே வந்து உதவிடுவாள் என்பது அனுபவப் பூர்வமான உண்மை! தியானத்தில் பலவகைகள் உண்டு. இசை பாடுவதும் ஒருவித தியானமே. ஆனால் அநாகரீகமான பாடலைப் பாடாது, எவ்விதக் கட்டணமும் பெறாமல், எப்போதும் இறைப் பாடலைப் பாடுதல்தான் விசேஷமான “ஸ்வரபூஷண” தியான நிலையை தரும். ஒவ்வொரு ராகமும் ஒவ்வொடு விதமான தியான நிலையை பெற்றுத் தரும். ஸ்ரீ அருணாசலக் கவிராயர், ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் பொன்றோர் இசைக்கெனத் தம்மை அர்ப்பணித்துப் பெறற்கரிய இறை தரிசனத்தைப் பெற்றவர்களாதலின் அவர்களுடைய பாடல்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் இறைதரிசனப் புண்ய சக்தி நிறைந்திருக்கும். இராகம் என்பது சப்தஸ்வர தேவதா மூர்த்திகளின் விதவிதமான ரூபங்களாகும். ஒவ்வொரு ராக தேவதா மூர்த்தியும் ஒவ்வொரு சப்தரூபத்தைத் தாங்கும்போது அம்மூத்தியின் விதவிதமான அனுகிரஹ சக்திகள் பொங்குகின்றன. இவ்வகையில் நீலாம்பரி ராகத்திற்கு என தெய்வீக அனுக்ரக சக்தியுண்டு. இதனை முறையோடு தினமும் இசைப்போர்க்கு எளிய முறையில் இறை தரிசனம், குறிப்பாக அம்பிகையின் கடாட்சம் பல்கிப் பெருகுகின்றன

வியாழக்கிழமைகளில் ஸ்ரீ ஆதிவிநாயகருக்கு மணமுள்ள மஞ்சள்நிறமலர்களால் அர்ச்சனை செய்து எலுமிச்சை சாதம் நைவேதனம் செய்து அதை ஏழைகளுக்கு தானமளித்து வர பெண்களுக்கு நீண்ட காலமாக தடைப்பட்ட/காலதாமதமாகும் திருமணம் கைகூடும். அதாவது பல பேர்களால் பெண்பார்க்கப்பட்டும் திருமணமாகாத கன்னியர்களுக்கு நல்ல வரன் கிட்டும்.

தலைவாசல் என்பது வீட்டின் முதற் நிலைப்படியாகும். வீட்டுத் தலைவர், தலைவியினுடைய நட்சத்திரத்திற்கேற்ப நவரத்தினங்களும், சக்கரங்களும் தலைவாசலில் பதிக்கப்படும். வீட்டில் உள்ள மற்ற அறைகளின் படிகள் நிலைவாசல் படியாகும். எந்த வீடும் தலைவாசல் இல்லாமலும் எந்த அறையும் நிலைவாசல் இல்லாமலும் கட்டப்படக் கூடாது. நகரங்களில் Flatsகளை வாங்குவோர் தலைவாசல் மற்றும் நிலைவாசலை அமைக்கும்படி கட்டாயமாக வற்புறுத்த வேண்டும். Flatகளை விற்போர் தலைவாசல் மற்றும் நிலைவாசல் இல்லாது கட்டினால் அவர்களுக்கு சாபங்கள் விளையும். இதுவரையில் தலைவாசலோ நிலவாசலோ இல்லாதிருப்பின் உடனடியாக அவற்றை அமைத்திட வேண்டும். பல புது வீடுகளுக்கு குடிபோனபின் ஏற்படுகின்ற பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தலைவாசல், நிலைவாசல் முறையாக அமைக்கப்படாததே காரணம் ஆகும்.

ஸ்ரீ ல ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் திருஅண்ணாமலை ஆஸ்ரம சேவைச் செய்திகள்
23.11.1997 – சென்னை – நூம்பல் கிராமத்தில் இலவச மருத்துவ உதவி
30.1.1997 – திருச்சி – தாயனூர் கிராமத்தில் இலவச மருத்துவ உதவி
9.11.1997 – இலவச மருத்துவ முகாம்களில் தகுதிவாய்ந்த ஆங்கில மருத்துவர்களின் ஆலோசனையின்படி ஏழை, எளியோர்க்கு மருந்துகள், டானிக்குகள், ஊசி மருந்துகள் அளிக்கப்பட்டு இதர இலவச மருத்துவப் பரிச்சோதனைகளும் நடத்தப்பட்டன
13.11.1997 – நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் மாதாந்திர பௌர்ணமி அன்னதானம்
குறிப்பு – நம் ஆஸ்ரமத்தின் சார்பில் நடைபெறும் இலவச மருத்துவ முகாம்கள் தெய்வீக ரீதியில் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடதக்கது. அந்தந்த இடத்திற்குரித்தான ஸ்ரீ தன்வந்திரீ மூர்த்தியை வேண்டிப் பிரார்த்தித்தும் வடமொழி/தமிழ் மறை ஓதுதல், தேவார திருவாசகப் பாராயணம், நாம சாங்கீர்த்தனம், சத்சங்கக் கூட்டு வழிபாடுகள், சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ காயத்ரீ மந்திர ஜபம் போன்றவை சற்குருவின் அருளாணையாக நிகழ்த்தப் பெற்று இவற்றின் தெய்வீகப் பலன்களை “நோய் தீர்க்கும் மருந்தாகப்” பயன்பட வேண்டும் என்று சங்கல்பம் செய்யப்பட்டு ஆண்டவனிடம் அர்ப்பணிக்கப்படுகின்றன. ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தின் அதிஅற்புதமான சக்திகளைப் பற்றி அறிந்திராத பாமர மக்களும் ஸ்ரீ காயத்ரீ மந்திர சக்தியை பெற வேண்டி இறைப் பணியாற்ற வேண்டியது நம்முடைய தலையாய கடமைகளுள் ஒன்றல்லவா!

நித்ய கர்ம நிவாரணம்

1.1.1998 – புறாக்களுக்கு கேழ்வரகு தானம் – அனுகூலமான புதிய நட்பு கிட்டும்.

2.1.1998 – V என்று ஆரம்பிக்கும் பெயர் உடையவர்களுக்கு தானம் – தக்க வேலை மாற்றங்கள் கிட்டும்.

3.1.1998 – முருகனுக்குத் தேன் அபிஷேகம் – குழந்தைகளுக்குப் படிப்பறிவு வளரும்.

4.1.1998 – 3 முதல் 4 வயதுள்ள பெண் குழந்தைகளின் கரங்களால் தானம் செய்திடுக – குலதேவதை மகிழ்ந்து ஆசி அளிக்கும்.

5.1.1998 – சந்திரன் என்ற பெயரை உடையவர்களுக்கு தானம் – சரியான சந்தர்ப்பத்தில் பண உதவி கிட்டும். (ராமச்சந்திரன், ரவிச்சந்திரன். Etc..)

6.1.19998 – கறுப்பு நிறம் உடைய அல்லது கறுப்பு நிறம் கலந்த பசுக்களுக்கு புல், தவிடு, பழம் அளித்தல் – புரியாத துன்பங்களில் தெளிவான விடைகிட்டும்.

7.1.1998 – வணிக வரி, வருமானவரி அலுவலர்கள் / பணிபுரிவோர் ( IT, CTO, etc..) குதிரைகளுக்குக் கொள்ளு தானம் அளித்திட துன்பங்கள் விலகும்.

8.1.1998 – பக்தியுடன் பெரிய நாமம் இட்டிருப்பவர்களுக்கு ஆடைதானம் – எதிர்பாராத நண்பர்களால் உதவி.

9.1.1998  - ராமருடைய பெயரைப் பூண்டிருப்பவர்களுக்கு உதவி – நல்ல வரன் அமையும்.

10.1.1998 – ஊனமுற்றோர்க்கு அன்னதானம் – நல்ல செய்தி வரும்.

11.1.1998 – சிவன் கோயிலில் பால்தான்ம் – மன உளைச்சல் உடையோர்க்கு நல்ல தூக்கத்தைத் தரும்.

12.1.1998 – கவனிப்பாரற்று இருக்கும் சிவலிங்கத்திற்கு எண்ணெய்க் காப்பு பொரி உருண்டை நைவேத்யம் – 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தானம் – வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.

13.1.1998 – மாணவர்கள் அமர பெஞ்சுகள் தானம் – இல்ல / வியாபார இடங்களில் உள்ள கோர்ட் (திருச்சி தாயனூர் கிராமப் பள்ளி போன்றவை) பிரச்சனைகள் தீரும்.

14.1.1998 – ஏழை மாணவ மாணவியருக்கு பேனா, புத்தகம் etc..  தானம் – வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும்.

15.1.1998 – “பசுக் கன்றுக்குப் பவித்திரமான பால் தானம்” என்ற தலைப்பில் இவ்விதழில் வந்துள்ள விளக்கம் காண்க..

16.1.1998 – கோயிலில் எறும்புகளுக்கு ரவை சர்க்கரை கலந்து இடுதல் – பணத் தட்டுப்பாடு அகலும்.

17.1.1998 – பசுமாட்டிற்குச் சந்தனப் பொட்டிட்டு வாழைப்பழம் அளித்தல் – பங்காளிச் சண்டைத் துன்பங்கள் விலகும்.

18.1.1998 – குழந்தைகளுக்கு இலவசமாக தண்ணீர்ப்புட்டிகள் (Water bottles) வாங்கித் தருதல் – ஆஸ்துமா நோய்த் துன்பங்களிலிருந்து நிவாரணம்.

19.1.1998 – சிறுவர்களுக்கு தோல் அல்லாத காலணிகள் தானம் – முழங்கால் மூட்டு வலிகள் தீரும்.

20.1.1998 – பார்வைக் குறைவுடைய ஏழைக்குக் கண்பரிசோதனை / கண்ணாடி (Spectacles) அளித்து வருதல் கண்ணாடி தானம் – கடன் படாத வாழ்க்கை அமையும்.

21.1.1998 – முதியோர்க்கு மர நாற்காலி தானம் – குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

22.1.1998 – ஆன்மீகப் புத்தகங்கள் தானம் – கடன் தொல்லை குறையும்.

23.1998 – கிளிகளுக்கு கொவ்வைப் பழம் தானம் – கோள் சொல்பவர்களால் வரும் துன்பம் தீரும்.

24.1.1998  - தாய்க்குப் பாத பூஜை செய்திடில் – மன சஞ்சலம் தீரும்.

25.1.1998 – மனைவி விரும்பிய பொருளை அளித்தல் – மன உளைச்சல்களிலிருந்து மீண்டு நிம்மதி கிட்டும்.

26.1.1998 – மாமனார் மாமியாருடன் வாழ்வோர் அவர்களுக்குப் பாதம்  பூஜை செய்து, வஸ்திரம் அளித்தல் – மூதாதையர்களின் ஆசி கிட்டும்.

27.1.1998 – குடிகாரக் கணவனால் துன்புறுகின்ற ஏழைகட்கு வஸ்திர தானம் - வியாபாரம் பெருகும்.

28.1.1998 – ஏழை உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு விளையாட்டு ஆடைகள் (Sports dress) தானம்  உடல் ஆரோக்கியம் பெருகும், தோல் நோய்கள் தணியும்.

29.1.1998 – பெண் குழந்தைகளின் ஆதரவில் இருக்கின்ற பெற்றோர்களுக்கு தானம் – வேலையில் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும்.

30.1.1998 – காணாமல் போன குழந்தைகளால் வாடுகின்ற பெற்றோருக்குப் பாத பூஜை  - உடலில் ரகசிய நோய்கள் தீரும்.

31.1.1998 – இறை பக்தி நிறைந்த சித்த வைத்யர்களுக்குப் பாத பூஜை, ஏழைகளுக்குக் கீரை, உணவு தான் – பிள்ளைகள் நன்கு படிப்பர்.

விசேஷ தினங்கள்

8.1.1998 – வைகுண்ட ஏகாதசி , 10.1.1998 – சனி பிரதோஷம்

11.1.1998 – பௌர்ணமி – இன்று கிரிவலம் சிறப்புடையது..  திருஅண்ணாமலை கிரிவல நாள்.

13.1.1998 – போகிப் பண்டிகை, 14.1.1998 – பொங்கல் – உத்தராயணப் புண்ணிய (தர்ப்பண நாள் – உத்தராயணத் தொடக்கம். 15.1.1998 – மாட்டுப் பொங்கல் , 25.1.1998 – வாஸ்து நாள் – 27.1.1998 – தை அமாவாசை , பிப்ரவரி 3.2.1998 – இரத சப்தமி


ஸ்ரீவரதராஜ பெருமாள் வல்லம்

ஓம்ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam