மோட்சம் என்பது இறைவனின் அருட் பிரசாதமே !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திருஷ்டி தோஷங்கள்

திருஷ்டியால் வரும் தோஷங்கள்

1. திருஷ்டி என்பது ஒருவருடைய வசதிகள், சொத்து, திறமை, இன்பம் குறித்து, மற்றவர்கள் பேராசைக் கண்களுடன் காணுதல்.

2. தனக்கு நிறைவேறாத ஆசைகள் பிறர்க்கு நிறைவேறுவதைக் கண்டு பொறாமையுறுதல்

3. தனக்கு எவ்விதத் தகுதியுமில்லாது, பிறர் அனுபவிப்பதைக் கண்டு மனதில் புழுங்குதல்

4. நல்ல எண்ணங்களே ஏற்படாது எப்போதும் பிறரை வசைபாடுதல், பிறர் மீது எப்போதும் சினத்தோடும், கெடுதல் விளைவிக்கும் எண்ணங்களோடும்

- இவ்வாறாக திருஷ்டியிலும் பலவகைகள் உண்டு. இவற்றைப் பற்றி ஸ்ரீ அகஸ்திய விஜய இதழில் விளக்கி வந்துள்ளோம். திருஷ்டி என்பது உண்மையே, அவை பகைமை எண்ணங்களுக்குரிய விளைவுகளை அதாவது ஆரோக்கியத்தைக் கெடுக்கும். வியாபார முன்னேற்றத்தைத் தடுக்கும். வெறும் கண் திருஷ்டிக்கே இவ்வளவு எதிர்விளைவுகளென்றால், நாம் வாழ்க்கையில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஒவ்வொரு எண்ணத்திற்கும் சக்தி உண்டு. நல்லதோ, தீயதோ, சமநிலையுடையதோ, உபயோகமற்றதோ எத்தகைய எண்ணத்திற்கும், விதவிதமான சக்திகளுண்டு நம்முடைய பெரும்பாலான புண்ணிய சக்தி கழிவது நம் எண்ணங்களினால் தான். எத்தகைய எண்ணமும் இல்லாது, வெறும் மனதோடு அதாவது. வள்ளலார் சுட்டிக் காட்டிய 'சும்மா இருப்பதே சுகம்'' என்று மனிதனால் இருக்கமுடியுமா! மனிதன் மனதை சத்விஷயங்களில் செலுத்தினாலே போதும், அவன் மகான்கள் கூறிய 'சும்மா இரு' நிலையை அடைந்ததற்கு ஈடாகிவிடும்.
நம்முடைய அன்றாட வளர்ச்சியைப் பற்றி, பிறருடைய பொறாமைக் கண்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு பலவிதமான எளிய வழிமுறைகளைச் சித்புருஷர்கள் அளித்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை நம் முதியோர்கள் கடைப் பிடித்ததேயாகும்.
கண் திருஷ்டியால் ஏற்படும் தீய சக்திகள் நம் இல்லத்தில் சுவர், கதவு போன்ற திடப்பொருட்கள், இல்லத்தினுள் உள்ள வாயு மண்டலம் புழைய பொருட்கள் போன்றவற்றில் எளிதில் படிவதால், வீட்டில் அடிக்கடி சாம்பிராணி தூபம் இட்டு வரவேண்டும். இந்த குங்கலிய தூபத்திற்கு, எத்தகைய கடும் தோஷங்களையும் நீக்கும் தெய்வீக சக்தியுண்டு.
இல்லத்தில் ஏற்படுகின்ற திருஷ்டிகளை நீக்குவதற்கு மிக எளிமையான வகையில் ''பஞ்ச திரவிய திருஷ்டி பரிகார முறை'' அகஸ்தியரால் அளிக்கப்பட்டுள்ளது. வியாபாரத்தில் பிறருடைய கண் படுதல், இல்லத்தில் குழந்தைகள் நோய்வாய்ப் படுதல், படிப்பில் மந்தமாக இருத்தல், புது நகைகளை, ஆடைகளை அணியாதவாறு பல தொந்தரவுகள் ஏற்படுதல் போன்றவற்றிற்கு  திருஷ்டி பரிகாரமாக இம்முறை அமைகிறது. மேலும் பொதுவாக அனைத்து விதமான திருஷ்டிகளைக் களைவதற்கும் இம்முறையை  கடைப் பிடிப்பது நலம்.

பஞ்ச திரவிய திருஷ்டி பரிகாரம்
பசுஞ்சானத்தில் மட்டும் செய்யப்பட்ட ஒரு விரட்டியை எடுத்து அதில் கற்பூரமோ, தேங்காய் நாரோ, குச்சிகளையோ, அடுப்புக்கரியோ வைத்து அக்னியை எழுப்ப வேண்டும். மண்ணெண்ணெய் கொண்டு ஒருபோதும் நெருப்பைப் பற்ற வைக்கக் கூடாது. இதனால் சாபங்களே ஏற்படும்.
காய்ந்த சிவப்பு நிற மிளகாய், உப்பு. மிளகு, வீதியில் நம் கால் பட்ட மண்ணில் சிறிது, வீட்டில் பெருக்கிய குப்பையில் உள்ள மண் ஆகிய ஐந்தையும் வலது உள்ளங் கையில் வைத்துக் கொண்டு, கணவன் மனைவி, பிள்ளைகளை அமர வைத்து, வயதில் மூத்தவர் (பெரியோர்) வலது கையினால், வலது பக்கம் மூன்று முறையும், இடது பக்கம் மூன்று முறையும் சுற்றே வேண்டும். பிறகு கையில் உள்ள 5 திரவியங்களையும், நெருப்பு எழுப்பப்பட்டுள்ள பசு விரட்டியின்மேல் போட்டு விட வேண்டும். இப்போது படபட வென்று வெடிக்கும் சப்தம் கேட்கும். இதுவே 'திருஷ்டி வெடிப்புச் சுழல் ஆகும். பிறகு அந்த விரட்டியை, நெருப்புடன், முச்சந்தியிலோ, நாற்சந்தியிலோ போட்டு விடவேண்டும். ஒரு போதும் வீதியின் நடுவில் இதனைப் போட்டு மற்றவர்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கக் கூடாது.

இந்த பஞ்ச திரவிய திருஷ்டி பரிகார முறையில் பல ஆன்மீக இரகசியங்கள் பொதிந்துள்ளன. மிளகாயில் உள்ள காரம் அக்னியில் சேரும்போது தீவினைகளைப் பொசுக்கும் சக்தி அதற்கு ஏற்படுகின்றது. மிளகின் ஆன்மீக சக்திகளைப் பற்றி நாம் ஏற்கனவே விளக்கியுள்ளபோதிலும் மிளகிற்குத் தீவினைகளை தன்னுள் கிரஹித்து, உறிஞ்சும் தன்மை உண்டு என்பதை இங்கு நாம் அறியவேண்டும்.

பொதுவாக நம்முடைய வாழ்க்கை வசதிகளைக் குறித்தும், முன்னேற்றங்களைப் பற்றியும் பொறாமை கொள்வோர், குரோதம், பகைமை போன்ற உணர்ச்சிகளை உடையோர் நம் இல்லத்திற்கு வந்து சேர்ந்தவுடன் ஊதுபத்தி அல்லது சாம்பிராணி தூபத்தை ஏற்றி, அவர்கள் விட்டுச் செல்கின்ற எதிர் வினை சக்திகளையும், தீவினைப் படிமங்களையும் உடனடியாக அகற்றி விட வேண்டும். இது கருதியே, இல்லத்தில், பெருக்கிய மண்ணின் ஒரு பகுதியும், வீதி மண்ணும் அக்னியில் சேர்க்கப்படுகின்றன.

கண்திருஷ்டிக்கு ஊமத்தைபரிகாரம்
ஊமத்தங்காய், இரண்டு மிளகாய் (குறுக்கே பெருக்கல் குறிபோல் வைத்து), எலுமிச்சை, படிகாரம். இதே வரிசையில் ஒரு நூலில், கீழிருந்து மேலாக வைத்துக் கட்டி, யாருக்கு திருஷ்டி கழிக்க வேண்டுமோ, அவர்களை அமர வைத்துச் சுற்றி தூர எறிந்திட வேண்டும். இது மிகச் சிறந்த திருஷ்டிப் பரிகாரம் ஆகும்.

இதனையே இல்லத்தின் முன், தலைவாசல் நிலைப்படிக்கு மேல்புறத்தில் கட்டுவதால், கண்திருஷ்டியாலான எதிர்வினைகள் வடிகட்டப்படுகின்றன.

முறைகோட்டு உத்திரை சங்கு என்ற ஒருவிதச் சங்கு உண்டு. பொதுவாக இதனை 'உத்தர சங்கு" அல்லது 'உத்திரை சங்கு" என்றழைப்பார்கள். கறுஞ்சனல் கயிற்றினை இந்த உத்திரை சங்கிற்குள் நுழைத்துச் செவ்வாய் கிழமை அன்று காலையில் 6 மணி முதல் 7 மணிக்குள் வீட்டு வாயிலில் கட்டி விட வேண்டும். நன்றாகப் பாடுதல், இசைக் கருவிகள் இசைத்தல், சொற்பொழிவு போன்றவற்றில் திறமை கொண்டவர்கள் கண் திருஷ்டியால் பாதிக்கப்படும்போதும், பால் அருந்தாது குழந்தை அழுது கொண்டே இருக்கும் போதும் இவ்வித பரிகர முறையால் திருஷ்டி கழிக்கப் பட்டு, அனைத்தும் நல்ல விதமாக நடக்கும்.

அடிமை கண்ட ஆனந்தம்

குருமங்கள கந்தர்வா என்றழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் தம் சற்குரு நாதராம் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளிடம், பள்ளிப் பருவத்திலேயே எவருக்கும் கிட்டாத குருகுலவாசத்தை, அதிலும் கலியுகத்தில் ஒரு சித்தரிடம் பெறும் அதிஅற்புத பாக்யத்தை அடைந்தார்.

தமிழகத்தில் கால்நடையாகச் சென்று பெருந் திருத்தலங்களை பாரத கண்டம் முழுதும் தம் சற்குருநாதருடன் பாதயாத்திரையும், பரந்த ஊர்திப் பயணங்களையும், அஷ்டமா சித்திகளால் பெறக்கூடிய சூட்சும சரீர இழைப் பயணங்களையும் மேற்கொண்டு காணுதற்கரிய தரிசனங்களையும் கிடைத்தற்கரிய தெய்வீக அனுபூதிகளையும் பெறற்கரிய இறைசித்திகளையும் பலவிதமான இறைப்பணிகள், யோகத் தவங்கள் மற்றும் பல ஆன்மீக வழிமுறைகள் மூலமாகப் பெற்று இன்று நம்மிடையே ஸ்ரீலஸ்ரீ - வெங்கடராம சுவாமிகளாய்ப் பரிமளிக்கின்றார். அவர்தம் குருகுலவாச அனுபூதிகளே இங்கு "அடிமைகண்ட ஆனந்தமாய்'' மிளிர்கின்றது. சற்குருவின் அடிமையாய் வாழ்ந்தால்தான் நிரந்தரமான, இன்ப, துன்பங்களற்ற, பிறப்பிறப்பற்ற பரமானந்தப் பேரின்ப நிலையை அடைந்திடலாம் என்பதை உணர வைக்கும் உரைபொருள் இதுவே!
அறிந்தும் அறியாதிரு!
... திருஅண்ணாமலை கிரிவலத்தில், அன்றைய தினம் சிறுவனுக்குப் பல புதிய ஆன்மீக அனுபவங்கள் கிட்டின. அஷ்டமா சித்திகளைப் பற்றிய தொடர் விளக்கப் பாடம் அன்று ''லஹிமா'' சித்தியில் தொடங்கியதல்லவா!

''சித்தியெல்லாம் செய்யக் கூடாதுன்னு சொல்வாரே! இப்ப மட்டும் ஏன் உயரப் பறந்தாராம்?'' - சிறுவனின் மனதிற்குள், எவ்வளவுதான் கட்டுப் போட்டாலும் அவனையும் மீறி இந்தக் கேள்வி எழுந்து விட்டது!

'இப்போதெல்லாம் நம்ப கேக்கணும்னே அவசியமே இல்லியே, நெனக்கறதுக்கு முன்னாடியே அவரே பதில் சொல்லிடறாரு! நம்ப வாயைத் திறந்தாத்தான் ஏடாகூடமாய்ப் பேசி மாட்டிக்கிறோம்!''

...இத்தகைய எண்ணங்களில் உழன்றவாறு சிறுவன் பெரியவருடைய பதிலை எதிர்நோக்கி நின்றான்!

எதிர்பார்த்தால் ஏமாற்றம் தானே!

கோவணாண்டிப் பெரியவரோ எதையும் கண்டு கொள்ளாதவராய் ''அடேயப்பா, என்னா வலி! மேல பறந்து பறந்து மூட்டு எலும்பு தேஞ்சு போய்ச்சு போல இருக்குடா, அந்த வாத நாராயண தைலத்தைப் பூசி இழுத்தா சரியாப் போகும்டா!'' - என்று சம்பந்தமில்லாமல் எதையோ சொல்ல ஆரம்பித்தார்!

சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம்! ''லஹிமா சித்தின்னு சொல்லிட்டு மேலதானே பறந்தோம் வாத்யாரே! அப்ப ஏன் உனக்கு கால் வலி வருது? எனக்கு வலி ஒண்ணும் வரலியே!''

பெரியவர் எப்போது என்ன சொல்வார் என்பது எப்போதும் புதிர்தான்! சிறுவனோ கால் வலியைப் பற்றிக் கேட்டிட பெரியவரோ, "ஏண்டா நீ என்ன துரைன்னு உன் மனசுல நெனப்போ, நீங்க நினைப்பீங்க, நாங்க உடனே பதில் சொல்லணும் இந்தக் கிழவன்தான் நெனைச்ச உடனேயே பதில் சொல்றானே, நம்ப எதுக்கு வாய் வலிக்கப் பேசனும்னு புத்தி வந்திடிச்சுல்ல,

உன்ன சும்மா விடக்கூடாதுடா, நல்லா தெண்டனை குடுத்தாத்தான் புத்தி வரும்!''
சிறுவன் "'தண்டனை'' என்று வார்த்தையைக் கேட்டதும் வெலவெத்து விட்டான்.
கண்களில் நீர் பொங்கி விட்டது. தொண்டை கம்மியது!
"எந்த நேரத்தில் என்ன செய்வாரோ, ஏது சொல்வாரோ என்று பயத்திலா ஒவ்வொரு நிமிடத்தையும் கழிப்பது?'' சிறுவன் அஞ்சினான்.
''இதபாருடா ராஜா, பயந்துட்டியா!...'' என்று சொல்லியவாறு சிறுவனைத் தன்னருகில் இழுத்து அணைத்தார் பெரியவர்!
"ஏண்டா, உன்ன விட்டா எனக்கு நாதி ஏதுடா? ஏதோ எனக்குத் தெரிஞ்ச கோயில், குளம், மூலிகைனு சொல்லித் தர்றேன்! நீ வாயைத் திறந்து ஏதாச்சும் கேட்டாத்தாண்டா நாங்க பதில் சொல்லலாம்னு 'மெத்த மேல'' (Upper World) ரூல் போட்ருக்காங்க! நீ ஒண்ணும் கேக்கலைன்னு வச்சுக்கோ நாங்களா சொல்லனும்னு எந்த அவசியமுங் கெடயாது! ஏன்னா நாங்களா சொல்லி நீ எடுத்துச் செய்யற அளவுக்கு உங்கிட்ட அதுக்குத் தேவையான தெய்வ சக்தியில்லையே!'' - பெரியவர் சீரியஸாகப் பேசத் தொடங்கினார்.
அப்போதுதான் ஏதோ 'ப்ளாஷ்’ அடித்தாற்போல் சிறுவனுக்கு பழைய நிகழ்ச்சி ஒன்று ஞாபகத்திற்கு வந்தது!
ஒரு வருடத்திற்கு முன்.... பெரியவருடன் எங்கோ போய்க் கொண்டிருக்கையில்…ஒரு தெருவின் முனையில் பல சிறுவர்கள் 'கோலியும் ஏதேதோ ஆட்டமும் ஆடிக் கொண்டிருந்தார்கள். வசதியான பையன்களும் ஏழைச் சிறுவர்களும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்க...
திடீரென்று ஒரு பையனின் பின் தலையைச் சுற்றிப் பெரிய ஒளிவட்டம் (AURA) தெரிந்தது! அது பெரிதாகிக் கொண்டே வந்திட, சிறுவன் பெரியவரின் கைவிரல்களைப் பிடித்து இழுத்து அதனைச் சுட்டிக் காட்டினான். அவரோ அதனைக் கண்டு கொள்ளாது சிறுவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு மிக விரைவாக அந்த இடத்தைக் கடந்து விட்டார்!
சிறுவனுக்கோ அந்த "பசுமையான முகமும்' தெய்வீக ஒளிவட்டமும் கண்களை விட்டு அகலவில்லை! எத்தனையோ மகான்களின், யோகியர்களின்/சித்புருஷர்களிருக்குமிடத்தைச் சுற்றி வரும் பல ஒளிவட்ட தரிசனங்களைப் பெரியவர் காண்பித்திருக்கின்றார்.
ஆனால் சிறுவனாக முதன் முதலாகக் காண்பது இப்போதுதான்!
Perhaps debutant performance !!!
"ஓஹோ! AURA தெரியற அளவுக்கு அய்யாவுக்குத் தெய்வீக சக்தி வந்திடுச்சே! இதெல்லாம் உனக்கு நாங்க தர்ற டெஸ்டு தான்டா! ஒரு ஒளி வட்டம் (AURA) பாத்ததுக்கே இவ்வளவு ப்ரேக் அடிச்சீன்னாக்க கோடிக் கணக்கா அண்ணாமலைலேயும் பொதிய மலைல, கொல்லி மலைல சித்தருங்க சுத்தறாங்களே, அப்ப நீ என்ன பண்ணுவே? நீ இந்த உடம்ப வச்சுகிட்டு எவ்வளவோ சாதிக்கணுமே, அப்பப்ப அங்கங்க நின்னுட்டா என்னடா செய்யறது! நீ உன்னோட இந்தச் சின்ன வயசுல எவ்வளவோ கோயில்ல திருப்பணி, அன்னதானம், சித்தர்கள் தரிசனம் - இப்படி எத்தனையோ குரு மூலமா கெடச்சிருக்கறதினால் உனக்குத் தானாவே நெறய சித்தி வந்து சேரும். ஆனா உன்ன சோதனை பண்றதுக்காக இன்னிக்கு ஒண்ணே ஒண்ணு தெரியற மாதிரி பண்ணினோம், அதுக்கே தெகைச்சு நின்னுட்டியே!''

'கோலி விளையாடற பையன் யாரு தெரியுமா? அது ஒண்ணுமில்லைடா, ஒரு ரிஷி மேல (Upper World) இருந்தாரு, ஏதோ செவன்த் ப்ளேன்னு (Seventh Plane) இங்கிலீஸ்ல சொல்றாங்களே அந்த மாதிரி பெரிய நிலைல இருந்தாரு! ஒரே ஒரு சின்ன தப்பு பண்ணினாரு, கொஞ்சம் கர்வம் (Ego) வந்ததுனால! அவ்வளவுதான் அடுத்த செகன்டுல கீழே ' ரிவிட்'' (Revert) அடிச்சுட்டாங்க! (பிறவி எடுத்தல் என்று பொருள்!) '' - பெரியவர் பலமாகச் சிரித்தார்!

பெரியவர் தனக்கே உரிய பாணியில் சில ஆங்கில வார்த்தைகளைக் கொட்டுவது வியப்பாக இருக்கும்.
ஆனால் இதன் கருப்பொருள் என்னவெனில், ஒருவர் என்னதான் உத்தம தெய்வீக நிலைகளை அடைந்தாலும் ஒரு சிறிது அகங்காரம், ஆணவம், கர்வம் எழுமாயின் அனைத்தும் விரயமே என்பதே!
"ஏண்டா உனக்கே அந்த ஒளிவட்டம் தெரியுதுன்னா எனக்குத் தெரியாமலா இருக்கும்! உனக்குத் தெரிய வச்சதே நாங்கதான்னு உனக்கு ஏண்டா தெரியமாட் டேங்குது!'' - பெரியவர் தீர்கமாக சிறுவனைப் பார்த்திட.

சிறுவன் தலையைக் குனிந்து கொண்டான்!

"ஏதோ உனக்கு அஷ்டமா சித்தி சொல்லித் தரலாம்னு ஒரு டெஸ்ட்டு வச்சோம். அதுக்கு இன்னும் பக்குவம் வரலை! பார்ப்போம், எப்பதான் உனக்கு அதுக்கான பக்குவம் வருதுன்னு!''
சிறுவன் பழைய நினைவுகளிலிருந்து மீண்டான்!
லஹிமா என்னும் அஷ்டமாசித்திகளில் ஒன்றைப் புகட்டி காக்கை, கிளிபோல் உயரப் பறந்து உத்தமத் தெய்வீக மலையாம் திரு அண்ணாமலை உயர்ந்து உயர்ந்து விரிகின்ற தெய்வீக அற்புதத்தைப் புகட்டினாரே! அப்படி யானால் ஏதேனும் சித்தி பெற்றால்தான் திரு அண்ணாமலையை தெய்வீகமாகப் புரிந்து கொள்ளமுடியுமா?....'' சிறுவன் வழக்கம் போல் ஆத்ம விசாரப் பரிவர்த்தனையில் ஈடுபட்டான்!
'நீ சின்னப் பையன் தாண்டா! சில சப்ஜெக்ட்டெல்லாம் நீ பெரியவனாத்தான் புரியும்! ஆனா, எல்லார்க்குமே ஒன்பது உடம்புங்க இருக்கும்ன்னு சொல்லியிருக்கேன் தானே, அந்த மாதிரி உன்னோட உடம்புல எது நீ பெரியவனாகும் போது மனப்பக்குவத்தோட கஷ்டமான சப்ஜெக்டை ஏத்துக்குமோ அதமட்டும் வெளில கெளப்பி நாங்க அதுக்கு இப்பவே ட்யூஷன் தர்றோம். ஏன்னா நீ தடி தூக்கிக் கெழவனாட்டம் தள்ளாடுற வரைக்கும் நான் உன் கூடச் சுத்த முடியாது!
ஏற்கனவே எங்க குரு சொன்னார்னு ஆயிரக்கணக்கா பாடி (Physical body) அடியேன் எடுத்து லட்சக் கணக்கான வருஷம் பூமில இருந்து ரொம்ப டயர்டாப் போச்சுடா! (கண் களைச் சிமிட்டுகிறார்) போதும் இந்த வாழ்க்கை!' (பலமாகச் சிரிக்கின்றார்.)

(திடீரென்று குரலைத் தாழ்த்திக் கொண்டு)
... இதோ பாருடா, பூமிக்கு வர்றது, வராதது எல்லாம் நம்ப கையில இல்லை, எல்லாம் குருவோட கருணை.... சும்மா வாழ்க்கையைக் கடனுக்கு ஓட்டாம ஏதாச்சும் இறைப்பணி செஞ்சுகிட்டு இருந்தாத் தாண்டா ''மெத்தைல'' (Upper World) மதிப்பாங்க, இல்லாட்டி ஒரு சின்ன, தேவதை கூட ரெண்டு மிதி மிதிச்சுட்டுப் போயிடுச்சான்னா ஜென்மாதி ஜென்மத்துக்கு எந்திரிக்கவே முடியாது.''
சிறுவன் அதிர்ந்து சிரித்தான். 'அப்பப்பா வார்த்தைகளால் அப்படியே புரட்டுகிறாரே!''
"எப்பவோ நீ ஒரு தடவை கேட்டியே, ''அதெப்படி வாத்யாரே பிரம்மாவுக்கு, பெருமாளுக்கு அண்ணாமலை உச்சி தெரியலை, நமக்கு நல்லா அடியும் முடியும் தெரியுதுன்னு?
'நீ சின்ன பையன் ஏதோ கேட்டுட்ட, உன் லெவலுக்கு நான் புரியற மாதிரி சொல்லிடலாம், நாளைக்கு நீ பெரிய மனுஷனாகி லட்சக்கணக்குல மனுஷங்களுக்கு இதைப் புரிய வக்கிற நெலையை ஆண்டவன் உனக்கு நிச்சயமாகக் கொடுப்பான்! அதனாலதான் இந்த மாதிரி முக்யமான தெய்வீக விஷயங்களை, நீ சின்னப் பையனாட்டம் புரிஞ்சுக்க முடியாம இருக்கற சப்ஜெக்டை உன்னோட "சூட்சும் உடம்புல (Spiritual body) நாங்க சேத்துடுவோம். இது எப்ப வேண்டுமானாலும் நெலச்சு நிக்கும்...
"ஏதாச்சும் அணிமா, மஹிமா, லஹிமான்னு சித்தி பண்ணினாத்தான் அண்ணாமலையைக் காட்டமுடியுமான்னு உனக்குத் தோணுதுதானே! அஷ்டமா சித்தி என்னடா, ஆயிரம் கோடி சித்தி தெரிஞ்சாக் கூட அண்ணாமலையைப் புரிஞ்சுக்கறது கஷ்டம்தான்!

ஸ்ரீஆடிப்பூர அம்மன்
பட்டீஸ்வரம்

ஏன்னா அஷ்டமா சித்திய தெய்வீகத்துல எப்படி வச்சுக்கணும் தெரியுமா? இந்த எட்டு சித்திய வெச்சுக்கிட்டு மட்டும் ஒண்ணும் சாதிக்க முடியாதுடா! இதயெல்லாம் நீ கத்துகிட்டு அண்ணாமலை கோயிலுக்குள்ள இதுக்குன்னு இருக்கற சிவலிங்கத்துக் கிட்ட அர்ப்பணம் பண்ணிடனும். அதுக்கப்பறம் உனக்கு அத உபயோகிக்கனும்னு எண்ணமே தோணாது! எப்பப்ப தேவையோ அந்த சித்தியே தானா வெளையாடும்!''
சிறுவன் விழித்தெழுந்தான்!
''அப்பப்பா! என்ன அழகா ஒரு பெரிய விஷயத்தைச் சொல்லி முடிச்சுட்டாரு!''
''ஏன் வாத்யாரே! அப்படீன்னா கொல்லி மலைலேந்து மூலிகை கொண்டாந்து பிழிஞ்ச்சு ஊத்தினதுனாலத்தான் அந்தக் கோழி எடை கொறஞ்சுபோய், நம்ப ரெண்டு பேரும் மேல பறந்தோமே..."
பெரியவர் அர்த்த புஷ்டியுடன் சிரித்தார்!
"ஆமாண்டா! முதல்ல இப்படித்தான் கத்துக்கணும். குரு மூலமா, மூலிகை மூலமா, மந்திர சித்தி மூலமா - அப்படீன்னு அஷ்டமா சித்தி கத்துக்கறதுக்கு நெறய வழியிருக்கு! ' நீ பாத்த கோழியிருக்கே அதுபோன ஜன்மத்துல தேவி உபாசனை செஞ்சு நல்ல சித்திகள் எல்லாங் கெடச்சு, லஹிமா சித்தி பண்ணும்போது கொஞ்சம் கர்வமும் பெருமையும் வந்திடுச்சு, அவ்வளவுதான் உடனே “கீழே கோழி பிறப்பெடுன்னு'' சொல்லி அனுப்பிட்டாங்க!
''இந்த ஜென்மத்துல (கண்களை விஷமாகச் சிமிட்டிக் கொண்டே!) உன் திருக்கரம் பட்டு அதுக்கு விமோசனம் கெடச்சுடிச்சு! வேற ஒண்ணுமில்லைடா, குரு மூலமா அது அவருக்குக் கெடச்சிருந்தா எந்த பிரச்னையும் வந்திருக்காது! தேவியையே குருவானாச்சும் வச்சிருக்கணும். தன்னோட உபாசனைலதான் சித்தி வந்ததுன்னு நெனச்சா கோழி மாதிரி தண்டனைதான் நிச்சயம்!"
"'நீ என்னிக்கோ கேட்ட கேள்விக்கு இப்பத்தான் பதில் கெடச்சதுன்னு நெனைக்காதே! அதுக்கான பக்குவம் உனக்கு இன்னிக்குத்தான் வந்துருக்கு!
"ஏன்னா பூலோகத்துல இன்னிக்கு நெறயப் பேருக்குக் கேள்விதான் கேட்கத் தெரியும்!”
என்னே அர்த்தம் நிறைந்த குருவாய் மொழிகள்!

ஏனில்லை பரிஹாரம் ?
சில சமயங்களில் காஸ் சிலிண்டர், மளிகைக் கடை பாக்கி, சாவி தொலைதல், வண்டி ரிப்பேர், உடல்நோய், குழந்தைகளின் உடல் பாதிப்பு - என்றவாறாக ஏதோ சிறுசிறு பிரச்னைகள் மனதோரத்தில் தொக்கி நின்று சந்தோஷமில்லாது, மன அமைதியை இழந்து சோக நிலையில் இருப்பதுண்டு. ஓரிரு நாட்களில் இவை தீர்வடையுமென்றாலும் அடுக்கடுக்காய் ஏதேனும் ஒரு பிரச்னையாவது மனதில் தொக்கியிருக்கும்! இத்தகைய சமயங்களில் காலையோ, மதியமோ, மாலையோ - நேரம் பாராது - தேங்காயெண்ணை, அகல் விளக்குகள், தீப்பெட்டி, மஞ்சள் பையுடன் கோயிலுக்குச் சென்று அனைத்து சந்நதிகளிலும் உள்ள சிறு சிறு குப்பைகளைப் பையில் போட்டுக் கொண்டு, எல்லா இடங்களிலும் தேங்காய் எண்ணெய் தீபங்களை ஏற்றி வழிபட்டு இல்லத் திரும்பினால் மனச் சுமைகள் தணிவதுடன், எத்தகைய சிறுபிரச்னைக்கும் தீர்வு கிடைப்பதை மனப்பூர்வமாகக் காணலாம்!

பெண்களுக்கான பூஜைகள்

இல்லற பெண்களுக்கான தெய்வீக நெறிகள்
ஆண்களை விட ஏழுமடங்கு மனோதிடத்தைப் பெற்றவர்களாதலின் இறையருளால் பெண்களுக்கு துன்பங்களைச் சகித்துத் தாங்கக் கூடிய மனப் பக்குவம் நிறைய உண்டு, மேலும் இல்லத்தளவில் பல சிறு சிறு துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு அமைதியின் சிகரமாய் விளங்கிக் குடும்பத்திற்காகவே பூஜைகளைக் கண்ணுங் கருத்துமாய்க் கடைபிடிக்கும் வண்ணம் பாரத இல்லறப் பெண்மணி விளங்குகின்றாள்.
இருப்பினும் தற்காலத்தில் நிகழ்கின்ற பிழைகளைச் சுட்டிக் காட்டுகின்றோம். இத்தகைய தவறுகளை இல்லறப் பெண்கள் திருத்திக் கொள்வார்களேயானால் கணவனுக்கு நல் ஆரோக்யமும், நீண்ட ஆயுளும், நற்பண்புகளும் கூடி இல்லறம் சிறந்த நல்லறமாகப் பூத்துக் குலுங்கும் என்பதில் ஐயமில்லை. கடந்த பல வருடங்களாக ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் இவை எடுத்துரைக்கப்பட்டிருப்பினும், ஆயிரக்கணக்கான புதிய வாசகர்கள் சேர்ந்துள்ளமையால் அவர்கள் நலன் கருதியே மீண்டும் இத்தொகுப்பு அமைகின்றது.
1. ஒருபோதும் ஒட்டுப் பொட்டினை (Stickers) நெற்றியில் வைக்காதீர்கள். இது கணவனுடைய ஆரோக்யத்தையும் ஆயுளையும் பாதிக்கும். குங்குமமானது தெய்வீக சக்திகளை ஈர்ப்பதோடு பலவித தோஷங்கள், சாபங்கள், வல்வினைகள், நோய்கள் உடலை அண்டாத வண்ணம், ரட்சையாகக் காப்பதால் குங்குமமோ, சாந்தோ இட்டிடுக! ஒட்டுப்பொட்டினால் (Stickers) ஒரு பயனுமில்லை! மாறாக சாபங்களே வரும்!
2. அழகிற்காக முன்தலை முடியினைக் கத்தரித்துச் சுருள விடாதீர்கள் ! பெண்களுக்குரிய இறைப் பண்புகளில் ஒன்றே பிறப்பிலிருந்து அதே முடியுடன் திகழ்வதே! இதனால் தான் எண்ணற்ற மனோசக்திகள் இல்லறப் பெண்களிடம் குடிகொண்டுள்ளன. நம் பண்பாட்டின்படி அழகாகப் பின்னலிட்டுப் பூச்சூடி தெய்வத்திடம் சரணடைக! பின்னல் என்பது முப்புரிச் சக்கர தத்துவத்தைக் கொண்டது. மன ஓட்டங்கள் சிதறாவண்ணம் நற்பண்புகளுடன் மிளிர தலைப் பின்னல் அருள் வழிகாட்டுகின்றது.
3. ஒருபோதும் காதுகளை மறைத்துத் தலை வாராதீர்கள்! தோடுகள், மூக்குத்தி எளிய நகை, வளையல்கள், மெட்டி இவையனைத்தும் சுப மங்களச் சின்னங்கள் எப்போதும் இவை அணியப்பட வேண்டும். 
4. சேலையின் முந்தானை தொங்குதல் கூடாது. இதன் மூலம் எதிர்வினை சக்திகள் உடலில் குடியேறி விடும்.
5, கணவனே கண்கண்ட தெய்வம் என்பது சத்யவாக்கு! கணவனுக்குப் பாத பூஜை செய்தலால் தாம்பத்ய ஒற்றுமை பெருகி மனவேறுபாடுகள் மறையும். 
6. வாரத்திற்கு ஒரு முறையேனும் குடும்பமாக ஒன்று கூடி கூட்டு தியானம், கூட்டு நாம சங்கீர்த்தனம் போன்ற கூட்டுப் பிரார்த்தனைகளை நிகழ்த்தி வந்திடில் குடும்ப ஒற்றுமை நன்கு விருத்தியாகும்! எவ்வித சச்சரவுகளும் ஏற்படாது.
7. இல்லறப் பெண்கள், தம்முடைய பூப்படைந்த கன்னிப் பெண்கள் நன்முறையில் வளர்ந்து, நல்ல திருமண வாழ்வைப் பெற ஆடிப்பூர அம்மன், துவாரசக்தி அம்பிகை, சுக்ரவார அம்மன், ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகன் சந்நதிகளில் செவ்வாய், வெள்ளிதோறும் மஞ்சளை அரைத்து அம்பிகைக்குச் சாற்றி ஜாதி, பேதமின்றி ஏழைச் சுமங்கலிகளுக்கு மஞ்சள், தாம்பூலம், அளித்து வர வேண்டும்.
8. ஏனைய பல நல் வழிகளை எம்முடைய ஆஸ்ரம வெளியீடுகளான இல்லறப் பெண்களுக்கான/அலுவலகப் பெண்களுக்கான பூஜை, சித்தர்கள் அருளும் இல்லறப் பெண்களுக்கான பூஜை, பூக்கள் தரும் புனிதங்கள் போன்ற புத்தகங்களில் கண்டிடுக!

பொய்க் கடன்கள்

அலுவலக (பொய்)க் கடன்கள்

கோணலிங்க மூர்த்திகள்
சங்கரநாராயணர் ஆலயம்

டி.வி, ரேடியோ, மின்விசிறி வாங்குவதாகச் சொல்லியும் வீடு கட்டுதல், உறவினர் திருமணம் என்றும் மருத்துவச் செலவுகள், உபசரிப்புச் செலவென்றும் அரசுத் துறைகளிலும், வங்கிகளிலும் பல நிறுவனங்களிலும் பலரும் கடன் வாங்குகின்றனர். அந்தந்தக் காரியத்துக்காக என்று வாங்கப்படும் கடன் தொகையானது அதற்கென்று இல்லாது பில்களை/ ரசீதுகளைக் காட்டிப் பணமாகப் பெற்றுக் கொள்வோருமுண்டு. இவையெல்லாம் 'சத்யவாக்கு மீறுதல் ஆதலின் இதனாலும் பெருத்த கர்மவினைகள் சேர்கின்றன. மனிதனுடைய ஒவ்வொரு காரியத்திற்கும் அதன் விளைவுகளுக்கும் அவனே பொறுப்பாளி ஆகின்றான்.
எனவே பொய்கூறிக் கடன் வாங்குவது அலுவலகத்தில் காலம் காலமாக, லட்சக் கணக்கானவர்கள் செய்து வருவதுதானே, இதனால் எவருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படவில்லையே என்று மேலெழுந்தவாரியாகத் தோன்றும்! ஆனால் பொய் கூறுவதும், பொய்ப் பிரமாணம் செய்து கையெழுத்திடுவதும் எவ்வாறு தர்மமாகும்? இதையெல்லாம் பார்த்தால் கலியுக வாழ்க்கை நடக்குமா என்று எண்ணாதீர்கள். இவ்வாறு பெறப்பட்ட கடன்தொகையில் ஏழைகளுக்குப் பொன் மாங்கல்யம் அளித்தல், வறுமையால் வெறும் தாலிச் சரடை அணிந்திருப்போர்க்குப் பொன் மாங்கல்யமாக மாற்றித் தருதல், ஏழை கர்ப்பிணிகளுக்கு மருத்துவ உதவி, பள்ளிகளுக்கு டேபிள், நாற்காலி, அன்னதானம், மின்விசிறி அளித்தல் போன்ற எளிய தானதர்மங்களைச் செய்து இத்தகைய கர்மவினைகளின் பெருக்கத்தைத் தணித்துக் கொள்ளுங்கள். இத்தகைய கோணல்கள் நிறைந்த வாழ்க்கைக்குப் பரிஹாரம் தரும் மூர்த்தியே தஞ்சாவூர் ஸ்ரீ சங்கரநாராயணர் ஆலயத்தில் தீர்த்தக் கிணறு அருகே உள்ள அபூர்வமான கோண லிங்க மூர்த்திகளாகும். இத்தகைய கடன் தொகைகளைப் பெற வேண்டிய நிர்பந்தம் ஏற்படின் இவ்வரிய லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து மேற்கண்ட தானதர்மங்களைச் செய்து வர இவ்வகையான கர்மவினைகளின் சுமைகள் தணியும்!

ஸ்ரீஐயப்ப விரதம்

ஐயப்ப விரதத்தைத் தொடங்குவதற்கான ''மாலை போடும்” முறையில் பல விதிமுறைகள் உள்ளன. துளஸிமணி, தாமரை மணி, ஸ்படிக மணி, ருத்ராட்ச மணி என பலவிதமான மணிமாலை முறைகளில் முதலாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு என ஒவ்வொரு வருடத்திற்கு ஒருவித மாலை அணியும் முறை உள்ளது. ஸ்படிக மணியோ, ருத்ராட்சமோ எதையும் அணியும் முன் அம்மாலைக்குரிய சுத்தி பூஜைகளைச் செய்த பின்னரே அம்மாலையை விரதமாலையாக எடுத்து அணிந்திடலாம். மேலும் விரதம் முடிந்த பின்னர் எந்தக் கிழமையில்/திதியில் சவரம் செய்து கொள்ள வேண்டும்/முடியெடுத்திட வேண்டும் என்பதையும் அறிந்திடுக! ஏனெனில் விரதம் முடிந்த மறுநாளே சினிமா, கேளிக்கைகளுக்குச் செல்தல் முதல் அனைத்து இத்யாதிகளும் தொடர்கதை போல் தொடர்வதால் விரதமிருந்த புண்ய சக்திகளெல்லாம் வீணே விரயமாகின்றனவே!

ஆரியங்காவு திருத்தலம்

பம்பை ஆறு

சபரிமலை யாத்திரை என்பது விரதமிருந்து மட்டும் செல்லக் கூடிய அற்புதமான திருத்தலம். ஒரு முறை உத்தமமாக விரதமிருந்து சபரிமலை சென்று வந்திடில் எத்தனையோ அனுபவப் பாடங்களை இறைவன் உணர்த்துகின்றான். கல்லும் முள்ளும் காலுக்கு உறுத்தலாக இருப்பினும் துணிந்து செல்கின்றோமே, எதற்காக, ஸ்ரீ ஐயப்ப தரிசனம் காணத்தானே! இதைப் போலவே கல்லாய், முள்ளாய் வாழ்க்கையில் துன்பங்களும் துயர்களும் உறுத்தினால் கூட நம் விரதத்தின் லட்சியமே இறைவனை அடைதல் என்று உணர வேண்டும்!
அப்படியானால் ஐயப்ப விரதமிருந்து ஸ்ரீ சாஸ்தாவை தரிசித்து மீண்டும் வாழ்க்கையில்தான் சேர்கின்றோம் என்று கேட்கத் தோன்றுகின்றதல்லவா! நீங்கள் பெற்ற ஐயப்ப அனுபூதியைப் பிறர்க்கு எடுத்துரைக்கும் "குருவாக'' மலர வேண்டும் அல்லவா! அனைவரும் பரப்பிரம்மமாம் ஐயப்பனை அடைந்தால்தானே அவனியே சுபிட்சம் பெறும்! ஜாதி, மத பேதமின்றி அனைவர்க்கும் உரித்தானவனன்றோ ஸ்ரீ ஐயப்பன்!
இவ்வாறாக ஐயப்ப விரதநெறிமுறைகள் பலவற்றை சித்புருஷர்கள் அளித்துள்ளனர், நம்குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் “ஸ்ரீ ஐயப்ப பிரபாவம்” என்னுந் தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன் மிகவும் அற்புதமான தெய்வீக விரதமுறைகளை சித்தர்களின் அருள்மொழிகளாய்த் திரட்டித் தந்துள்ளார்கள். அன்னதானம், இலவச மருத்துவ முகாம், உழவாரத் திருப்பணிகள், ஸ்ரீ அகஸ்திய விஜயம் மாதாந்திர ஆன்மீக இதழ் மற்றும் பலவகை ஆன்மீக நூல் வெளியீடுகள், ஏழைகளின் திருமணங்களுக்குப் பொன் மாங்கல்ய உதவி - இவ்வாறாகப் பல்வேறு தெய்வீகக் கைங்கர்யங்களுக்கிடையில் நிதி நிலைமை, அச்சகப் பிரச்னைகள் காரணமாக “ஸ்ரீ ஐயப்ப பிரபாவம்”ஆன்மீகச் சொற்பொழிவானது ஆண்டுகள் பல கடந்தும் ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளின் எண்ணற்ற தெய்வீக அருள்மொழிகளைப் பலவகை தெய்வீக நூல்களாக மலரவைக்கும் அருட்பணியில் தாமதமடைந்துள்ளது.
அருளாளர்களும் பொருட்செல்வமும் அறிநெறியும் நிறைந்து விளங்குவோரும் முன் வந்திடில் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் கடந்த பல வருடங்களில் அருட்பிரவாகமாய்த் திரண்டளித்துள்ள திவ்யமான குருவாய் - அருள்மொழிகளை எளிய புத்தகங்களாக்கி இதன் அரிய பலன்கள் எவ்வித வேறுபாடுமின்றி யாவர்க்கும் சென்றடையும் வண்ணம் பெறற்கரிய தெய்வீக அருட்பணியை நிறைவேற்றிடலாமன்றோ!

கனவுகளும் சகுனங்களும்

கனவுகள் என்றால் என்ன ?
தற்காலத்தில் விஞ்ஞானத்தில். கனவுகளுக்குப் பல விளக்கங்களை அளிக்கின்றனர். ஒரு மனிதன் ஆழ்நிலைத் தூக்கத்திற்குச் செல்வதற்கு முன் இருக்கக் கூடிய இடைக்கால எண்ண பிம்பங்கள் என்றும், அவன் ஆழ்ந்த துயிலில் இருந்து எழுவதற்கு முன்னும் ஏற்படக் கூடிய மன ஓட்டங்களின் பிரதிபலிப்பு என்றும், அவனுடைய உள்மனதில் பதிந்து கிடக்கும் எண்ணங்களின் கொந்தளிப்பே கனவாக மிளிர்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் கூறுகின்றனர்.
ஆனால் ஆன்மீகத்தில் சித்புருஷர்களும் யோகியரும் கனவுகளைப் பற்றியும், அவற்றின் காரணங்களைப் பற்றியும், அவை காட்டும் சகுனங்கள் மற்றும் அவற்றின் விளைவுகளைப் பற்றியும் கூறும் உண்மையான விளக்கங்கள் பலப்பல.
விஞ்ஞான அறிவிற்கு எட்டியபடி குறுகிய கண்ணோட்டத்தில் நாம் எதையுமே பார்ப்பதால், நாம் உயிரினங்கள் இப்புவியில் மட்டுமே வாழ்வதாக மிகவும் தவறான எண்ணத்தைக் கொண்டுள்ளோம்.
ஒன்றை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்! இப்பேரண்டத்தையும், அதனுள் கோடானு கோடி சூரியப் பிரகாசம் கொண்ட கோடானுகோடி நட்சத்திரங்களையும், எண்ணிலடங்கா கோள்களையும் படைத்த இறைவன் இப்பூலோகத்தில் மட்டுமா உயிரினங்களைப் படைத்திருப்பான்? எத்தனை விதமான லோகங்கள் உள்ளன!

மனிதனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது வெவ்வேறு விதவிதமான ஜீவன்களும் கூட தம்முடைய முக்தி நிலைக்காகவே வாழ்கின்றன என்பது நம் கற்பனைக்கும் எட்டாத தெய்வீக ரகசியமாகும்! இவ்வாறு மெய்ஞ்ஞானம் போதிக்கும் தெய்வீக ரகசியங்கள் எத்தனை எத்தனை ?!

கனவுலகம் - கனவுகளுக்கென்று ஓர் உலகம்

விண்ணிலும் பாதாளத்திலும் உள்ள பல லோகங்களிலும் மனிதனை விட பல விதங்களில் அதிக அற்புதத் திறனும், அற்புத மனோசக்தியும், துரித மிக்க எண்ண ஓட்டங்களும் கொண்ட பலகோடி ஜீவன்கள் உள்ளன. இதேபோன்று எல்லா ஜீவராசிகளுக்கும் கனவுகள் தோன்றுவது உண்டு என்பதும் உண்மையே. மனிதனைப் போலவே பூலோகத்தில் வாழ்கின்ற நாய், மாடு ஆடு போன்ற அனைத்து ஜீவராசிகளும் கனவுலகங்களில் சஞ்சரிக்கத்தான் செய்கின்றன. ஒவ்வொரு ஜீவனின் அன்றைய தூக்கத்தின் பொழுது எழ வேண்டிய கனவு என்ன என்பதை நிர்ணயிப்பதற்காகவே தனியாக ஒரு கனவு உலகமே இயங்கிவருகிறது என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா! ஆனால் அது உண்மையே!

பொதுவாக கனவுகளைப் பற்றி சகுன சாஸ்திரங்களில் வெகு விரிவாக விளக்கப்பட்டுள்ளது. கனவுகளில் நிகழ்கின்ற சம்பவங்களையும் அவற்றில் நாம் காணும் காட்சிகளையும், மற்றும் நிகழும் நேரம் போன்று பல விஷயங்களைக் கொண்டே அவை பறை சாற்றும் எதிர்கால விளக்கங்களை அறியலாம். கனவுகளை வைத்து வருங்காலத்தில் நிகழவிருக்கும் சம்பவங்களையும், நாம் சந்திக்கவிருக்கும் நன்மை தீமைகளையும் மிகத் துல்லியமாகக் கணித்திட முடியும். காரணம் நம் பழவினைகளின், கர்ம வினைகளின் வெளிப்பாடே கனவுகளாகும்! உதாரணத்திற்கு, ஒருவருடைய கனவில் பாம்புகள் தென்பட்டால் அது அவருக்கு இருக்கக்கூடிய எதிரிகளின் நடவடிக்கைகளைக் குறிக்கும். அதே பாம்புகள் கனவில் அவரைத் தீண்டியிருந்தால் அது அவருக்கு வரக் கூடிய பண வரவுகளைக் குறிக்கும் சகுனமாக அமைகிறது.

கனவுலக உடம்பு
நம் கண்களுக்குத் தெரியக் கூடிய ஸ்தூல உடலுக்குரித்தான (Physical Body) ஒன்பது விதமான வெவ்வேறு சூட்சும (சாதாரண கண் களுக்குப் புலப்படாத) உடல்கள் உண்டு என்பதை நாமறிவோம். அவ்வொன்பது உடல்களுள் ஒன்றான ஸ்வரித ஸ்வப்ன அதாவது கனவுலக உடலில் நாம் சஞ்சரிக்கும் பொழுது அவ்வுடல் மூலமாக செய்யும் காரியங்களும் மற்றும் அவ்வுடலுக்கு உரித்தான சூட்சுமக் கண்களால் காணும் காட்சிகளுமே கனவுகளாகின்றன. ஆகவே கனவு என்பது ஒரு சூட்சும சரீரத்தில் பிரவேசித்து, அதில் நாம் சஞ்சாரம் செய்யும் ஓர் உண்மை நிகழ்ச்சியே அன்றி இதில் எந்த விதமான கற்பனையும் இல்லை. எவருடைய மனதிலும் எழும் எண்ணங்களைக் கூடக் கற்பனை என்று சொல்வது தவறு. கற்பனையும் ஒருவித சூட்சும சஞ்சாரமே என்று அறிந்திட வேண்டும். இதிலிருந்து நாம்அறிவது என்னவென்றால்
1. எந்த ஒரு மனிதனும் உண்மையான தூக்கத்தில் ஆழ்வது கிடையாது.
2. தன் ஆழ்ந்த தூக்கத்தில் கூட ஏதோ ஒரு சூட்சும உடலில் சஞ்சரித்துக் கொண்டு எந்நேரமும் கர்மங்களை மனிதர்கள் ஆற்றியே வருகின்றனர்.
3. உண்மையான தூக்கத்தில் அதாவது சமாதி கூடிய சாந்தி நிலையில் திளைப்பவர்கள் யோகியரும், சித்புருஷரும். ஞானியரும் ஆவர்.
4. எந்த ஒரு மனிதனும் தூங்குவதே கிடையாது. ஏனெனில் உறங்குவது எனில் ஒன்பது சரீரங்களும் அடங்குவதாகும்.
5. நாம் தூங்குவதாக எண்ணுவது ஒரு சரீரத்திலிருந்து மற்றொன்றில் பிரவேசிப்பதேயாகும் அல்லது மாறுவதாகும்!

எனவே கனவுகள் மூலம் நாம் வாழ்க்கைமுறையை நன்றாக சீர் அமைத்துக் கொள்ளலாம், அவற்றின் ரகசியங்களை நன்கு அறிந்து கொண்டால்!

கனவுகளிலும் கர்மங்கள்உண்டா? ஆம். நிச்சயமாக உண்டு. நாம் தூங்கிவிட்டால் நம் உடல் மூலம் எவ்விதக் காரியங்களையும் செய்வதில்லையாதலின் அந்த அளவிற்காவது பாவங்களைச் செய்யாமல் இருக்கின்றோமே என்ற நிம்மதி ஏற்படுகின்றதல்லவா! ஆனால் துரதிஷ்டவசமாக இது உண்மை அல்ல! ஏனென்றால் நாம் தூங்கிய உடனேயே நமக்குரித்தான ஸ்வரித ஸ்வப்ன அதாவது கனவுலக சரீரத்தில் பல விதமான காரியங்களைச் செய்வதால் அதற்குரித்தான கர்மங்கள் வந்து சேர்ந்துவிடுகின்றது!

சில சமயங்களில் சாதாரணமாக நாம் உடலால் செய்கின்ற தீவினைகளைவிட ஸ்வரித ஸ்வப்ன தேகத்தில் செய்கின்ற தீவினைகள் மிகவும் மோசமானதாகவும் கொடூரமானதாகவும் இருந்துவிடும். அதாவது நம் சாதாரண உடலால் செய்கின்ற நல்லது கெட்டதுக்கெல்லாம் இதே உடல் மூலமாகத்தான் பயன்களைக் கழிக்கவேண்டும். இதே போல் நம்முடைய கனவுலக உடலான ஸ்வரித ஸ்வப்ன தேஹத்தில் செய்கின்ற காரியங்களுக்கான பயன்களையும் அதே கனவு உலகில்தான் கழித்திட வேண்டும்.

ஆனால் சித்புருஷர்களின், மஹரிஷிகளின் அனுக்கிரஹம் இருப்பின் கனவு உலகில் நாம் செய்கின்ற காரியங்களுக்கான பிராயச் சித்தங்களை இவ்வுலக தேஹத்திற்கு மாற்றிட முடியும். ஆனால் பெரும்பாலான மனிதர்களுக்கு சாதாரண உலகில் வாழ்வதை விட கனவு உலக. வாழ்க்கையில் படுகின்ற துன்பங்கள்தாம் நரக வேதனைகளைத் தருகின்றதாக அமைகின்றது, இதற்குக் காரணம் அவருடைய கனவுலக கர்ம வினைகள் அதிகமாக இருப்பதுதான்!

ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர்
ஜீவாலயம் நெரூர்

அப்படியானால் ஒரு மனிதனுடைய வாழ்வில் கனவுலக, இவ்வுலக வாழ்க்கை என்ற இரண்டு மட்டும்தான் இருக்கின்றதா? இதைப் பற்றி விளக்கப் புகுந்தால் உறக்கத்தைப் பற்றியே பல விளக்கங்களை அளிக்க வேண்டி இருப்பதால் தலைப்பை விட்டு எங்கோ சென்றிடுவோம். ஆதலின் இச்சிறிய விளக்கத்தோடு மட்டுமே நிறுத்திடுவோம். எந்த மனிதனாலும், தான் எப்போது உறங்கப் போகிறோம். எப்போது விழிக்கப்போகிறோம் என்பதைச் சொல்ல முடியாதல்லவா! இதுவே தெய்வத் திருவிளையாடல்! எதையெதையோ பகுத்தறிவால் பிரித்துப் பார்க்கின்ற விஞ்ஞானத்தில் உறக்க நிலை பற்றியும் கனவு நிலை பற்றியும் தக்க விளக்கங்களைத் தர இயலவில்லையே!

“உறங்குவது போலும் சாக்காடு” என்று மிக அழகாக, உறக்கத்தை மரணத்திற்குரிய ஒத்திகையெனத் தமிழில் பெரியவர்கள் அளித்துள்ளனர். எப்போது நம்மால் நம் இப்பூவுலக எண்ணங்களிலிருந்து விடுபட்டு உறங்கச் செல்கின்ற நேரத்தை அறிய முடியவில்லையோ, இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவெனில் நம்முடைய பூத உடலிலிருந்து உறக்கம் வருகின்ற நொடிப் பொழுதில் ஸ்வரித ஸ்வப்ன உடலில் பிரவேசித்து கனவுலகில் உள்ள காரியங்களில் அவரவர் கர்ம வினைக்கேற்ப பங்கெடுத்துக் கொள்கின்றோம். அதே போல் உறக்க முடிவில் ஸ்வப்ன ஸ்வரித கனவுலகில் இருந்து மீண்டு நடப்பு நிலவுலகிற்கு வருகின்றோம். இதுவே உறக்கத்தின் முதலும் முடிவும்! இது தவிர உறக்கம் என்ற ஒன்றில்லை!

இதுதான் நம் வாழ்வில் தினந்தோறும் நடைபெறுகின்றது. ஆனால் ஏதோ ஓய்வெடுக்கின்றோம், தூங்குகின்றோம் என்றே எண்ணி நம் தினசரி வாழ்க்கை காலவேகச் சக்கரமாய் சுழன்று ஓடுகின்றது. ஆனால் உறக்கத்தில் உண்மையில் நடப்பதோ சரீரக்கூடுகளின் மாற்றங்களே ஆகும். மேலும் கனவுலகில் நமக்குள்ள கண்கள் வேறு, இந்தப் பூதவுடலிலுள்ள கண்கள் வேறு. கனவுலகில் உள்ள மனமும் இப்பூதவுடலுக்கான சரீரத்தின் மனமும் நெருங்கிய தொடர்புடையவை ஆதலின் சில கனவுகள் நினைவிற்கு வருகின்றன. அதாவது பூலோக நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட கனவுலக காரியங்கள் மட்டுமே நினைவிற்கு அனுப்பப்படுகின்றன. நினைவிற்கு வராத எத்தனையோ ஆயிரம் நிகழ்ச்சிகள் அனைத்தும் மூளையில் உள்ள கோடிக்கணக்கான செல்களில் பதிவு செய்யப் படுகின்றன.

ஆனால் இவற்றையெல்லாம் மனிதன் எந்தக் காலத்தில் அறிந்து உணர்ந்து தெளிந்து உத்தம நிலையை அடையப் போகின்றான்? இதனைப் படித்த பின்பாவது. இறைப் பாதையில் நாம் ஒரு அங்குல நீளத்தைக் கூடக் கடக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்வோமாக! அந்தந்த நாள், நட்சத்திரம், வளர்பிறை/தேய்பிறைக்கேற்ப கால்கட்டை விரல்களிலும், நாபியிலும், தலையைச் சுற்றி நெற்றிப்பட்டை போலும், உடலைச் சுற்றி யோகப்பட்டை போலும் சிலவிதமான மூலிகைகளைக் கவசமாக அணிந்திடில் கனவுகளின் நிலைமாறுவதுடன் மற்றொருவருடைய கனவில் புகுந்து நற்காரியங்களை நிறைவேற்றுகின்ற வல்லமையும் கிட்டும். இவ்வகையில் தான் யோகியர்களும் மஹரிஷிகளும் மூலிகா பந்தன முறைப்படி பக்தர்களின் கனவில் தோன்றிப் பிராயச்சித்த முறைகளை அளிக்கின்றனர்.

சிவபாத பூஜை

பல சிவாலயங்களில் இரவில் சுவாமியைப் பள்ளியறைக்கு அழைத்துச் செல்லும் வைபவமாக சிவபாத பூஜை மிகச் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. சிவபாத பூஜையைத் தினந்தோறும் முறையாகத் தரிசித்து வந்திடில் நிறைவான தூக்கம் கிட்டுவதோடு கனவுகளின் மூலம் வரக்கூடிய கோரத் துன்பங்களை முன்னரே அறியக் கூடிய மனஆற்றல் கிட்டும். மேலும் மாத சிவராத்திரி, மாசி மஹாசிவராத்திரி, சந்திர கிரஹண காலம், நவராத்திரி தினங்கள் போன்ற நாட்களில் ஏற்படும் கனவுகளுக்குத் தெய்வீக ரீதியில் முக்கியத்துவங்கள் பல உண்டு.

சிவராத்திரி போன்ற விசேஷ தினங்களில் உறங்காது பூஜை செய்தால்தானே சிறப்புடையது என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா! ஆனால் தற்காலத்தில் பெரும்பான்மையோர் சிவராத்திரி பண்டிகையையே அனுஷ்டிப்பதில்லை. எத்தனையோ கோடி ஜன்மங்களாகத் தொடர்ந்து வரும் பாவங்களை முறையான வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி பூஜையில் எளிதில் களைந்து விடலாம் அல்லவா!

கனவுகளில் மேலும் பல இரகஸியங்கள் உண்டு. இந்த ரகசியங்களைத் தக்க சற்குருவை நாடி அறியவும்.

ஸ்ரீபோடா சுவாமிகள்

சென்னை ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் ஜீவ ஆலயம், வடலூர் அருட்பெருஞ்சோதி வள்ளலார் ஆலயம், பூண்டி மஹான், திருஅண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் ஜீவசமாதி, ஸ்ரீரமண மஹரிஷிகளின் ஜீவசமாதி, நேரூர் ஸ்ரீசதாசிவ ப்ரம்மேந்திரரின் ப்ருந்தாவனம், ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகள் ப்ருந்தாவனம், சென்னை பாடகச்சேரி இராமலிங்க ஸ்வாமிகள் ஜீவசமாதி, பட்டினத்தார் ஜீவாலயம், காஞ்சிபுரம் ஸ்ரீபோடா (சிவஸ்வாமி) ஸ்வாமிகள் ஜீவசமாதி போன்ற சித்தர்களின் ஜீவசமாதியில் பௌர்ணமியில், ஜீவசக்தி ரேகைகள் பூரித்துப் பொங்கி எழுவதால் குளுமையான சந்திர கிரணங்களின் மூலம் நாம் தெய்வீக சக்தியை எளிமையாக பெறுகின்றோம்.

அவரவருடைய பிறந்தநாள், திருமணநாள், பெற்றோர்களின் நினைவு நாள் போன்ற விசேஷமான தினங்களில் ஜீவசமாதிகளில் சாம்பிராணி தூபமிட்டு இயன்றளவு அன்னதானம் செய்து பித்ருக்களின் ஆசியை எளிதில் அடையலாம். உண்மையில் எந்த மஹானும், சித்தரும் இறை ஆணையாக தன் பூத உடலைக் கழற்றுகையில் நிகழ்கின்ற விந்தை என்னவெனில், எந்த பஞ்சபூத சக்திகளால் பூத உடல் உருவாயிற்றோ, அந்த சக்திகளெல்லாம் ஜீவசமாதியில் பிரிந்து மீண்டும் தன்நிலையை அடைகின்றன. எஞ்சுகின்ற ஜோதியே பரப்ரம்மத்துடன் ஐக்கியமாகின்றது.

இந்த ஜோதி பிம்பத்தைத் தரிசித்து ஆசி பெறுவதற்காகவே பித்ருக்கள் ஜீவசமாதிக்கு அமாவாசை பெளர்ணமி திதிகளில் ஓடோடி வருகின்றனர். இத்தகைய ஜீவ ஜோதி தரிசனத்தை பூலோகத்தில் ஜீவசமாதிகளில்தான் பெற முடியும். எனவே மாதந்தோறும் ஒரு ஜீவசமாதியையேனும் தரிசிப்பதை மேற்கொண்டிடுக.

கரிநாள் மகிமை

கரிநாள் என்பது சுபகாரியங்களுக்கு ஏற்புடையது அல்ல என்ற கருத்து நிலவுகின்றது. உண்மையில் சில குறித்த வழிபாடுகளுக்கென்று மிகவும் ஏற்புடையதாக அமைவதே கரிநாள்! எனவே இந்நாளில் அனைத்து காரியங்களையும் தவிர்த்து கரிநாளுக்குரிய இறை வழிபாடுகளை மட்டும் நம் முன்னோர்கள் நிகழ்த்தி வந்தார்கள். ராகுகாலத்தில் நற்காரியங்களைத் தவிர்த்தாலும் ராகுகால துர்க்கை பூஜைக்கு மகத்துவம் அதிகமென்பதால் தற்காலத்தில் ராகுகால பூஜைக்கு ஆயிரமாயிரம் மக்கள் ஏனைய காரியங்களைத் தவிர்த்துத் திரண்டு வருகிறார்களல்லவா? இதே போன்று, கரிநாளில் சுபகாரியங்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதைவிட, கரிநாளில் அதற்குரித்தான விசேஷ பூஜைகளைச் செய்து அந்நாளில் மட்டுமே விசேஷமாகக் கிடைக்கின்ற அனுக்கிரஹங்களைப் பெறுவதற்காக, ஏனைய காரியங்களைச் செய்யாமலிருப்பதே உத்தமமானதாகும்.

ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர்
திருஅண்ணாமலை

கரிநாள் என்பது ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் குறித்த நாட்களில் மட்டும் வருவதாகும், கரிநாள் எவ்வாறு அமைகிறது? நாம் கொண்டாடுகின்ற பண்டிகைகள் எல்லாம் பெரும்பாலும் திதி, நட்சத்திரம், பட்சங்களை ஒட்டி அமைந்திருக்க இக்கரிநாட்கள் மட்டும் சில தமிழ் மாதங்களில் அதுவும் குறித்த சில நாட்களில் மட்டும் அமைவதேன்? நம் பெரியோர்கள் காரண காரியமின்றி எதையும், எவ்வித வழிபாட்டையும் ஏற்படுத்துவதில்லை. இவ்வகையில் கரிநாட்கள் அமைகின்ற நாட்களில் இரவு நேரங்கள் மிகவும் சக்தி உள்ளவையாக இருக்கும். இக்கரிநாட்களில் இரவு நேர பூஜைகள் மிகுந்த புண்ணிய சக்திகளைத் தருகின்றன. நாம் சற்றே ஆய்ந்திடில் கரிநாட்களுக்கென உரித்தான நாட்களில் சில விசேஷமான நட்சத்திரங்கள் விண்வெளியில் தோன்றுகின்றன. இந்நாட்களில் கிரஹ சஞ்சார அசைவுகளும் மாறுபடுகின்றன என்று புரிந்துகொள்ளலாம்.

இரவு நேரத்தில் பணிபுரிகின்றவர்கள் (Night Shift), வக்கீல்கள், இரும்புப் பட்டறை வைத்திருப்போர், இரவில் ரயில் பயணம் செய்யக் கூடிய ரயில்துறை அலுவலர்கள், கருப்பு நிறத்தோடு தொடர்புடைய ஊதுபத்தி, இங்க், கார்பன் போன்றவற்றைத் தயாரிப்போர் - இத்தகையோர்க்குக் கரிநாளுக்குரித்தான பூஜைகள் நன்னிலையைத் தரும். இவர்கள் கருப்பண்ணசாமி, மாந்த கருப்பு, கருப்பு, காளி, துர்கா தேவி, கால ருத்ரர், கால பைரவர், அகோர மூர்த்தி, பிரளய காலேஸ்வர், சம்ஹார மூர்த்தி, பாதாள கணபதி, பாதாள மூர்த்திகள், பாதாள லிங்கங்கள், குகை முருகன் போன்ற தெய்வ மூர்த்திகளை கரிநாளன்று வழிபட்டிட வேண்டும்.

கரிநாளின் புராண விளக்கங்கள்

தம் அகங்காரத்தால் மாயையில் சிக்குண்டு கோபத்தால் ஆட்கொள்ளப் பட்டதாலேயே யமதர்ம ராஜாவிற்கும் தமக்கும் சண்டை மூண்டது என்பதை உணர்ந்த ஸ்ரீ சனீஸ்வர பகவான் தம் ஊனத்தை தம் தெய்வீக சக்தியால் சரிசெய்து கொள்ள எண்ணவில்லை. யமதேவரும் தம்முடைய பிழையை உணர்ந்து, இதன் விளைவாய்த் தாம் தண்டத்தை இழக்க வேண்டும் என்பதை அறிந்தார். இறைலீலையாக, தேவலோகத்தில் இச்சம்பவம் நிகழ்ந்த நாளே இந்தப் பூலோகத்தில் கரிநாளாக அமைகின்றது. இந்நாளில் தம் அஹங்காரத்தைக் களைந்து மேலும் பல இறைநிலைகளை அடைந்த ஸ்ரீயமதர்மராஜாவும், ஸ்ரீ சனீஸ்வர பகவானும் மக்களுக்கெனக் கரிநாள் பூஜையென ஓர் அற்புத வரமளித்தனர். அதாவது யாரொருவர் முறையாகக் கரிநாட்களில் பூஜைகளை நிகழ்த்துகின்றார்களோ அவர்கள் அகங்கார மாயையிலிருந்து விடுபட்டுத் தெளிந்த ஞானத்தையும் அறிவையும் பெறுவர் என அருளினர்.

ஸ்ரீஎமதர்மராஜா திருகோடிகா

தாம் இழந்த தண்டத்தைப் பெறவேண்டி யமதர்மர் பல திருத்தலங்களில் தவம் புரிந்து அருணாசல புனித பூமியில் கிரிவலப் பகுதியில் கரிக்கோல மலைப்பகுதியை நோக்கித் தவமிருந்தார். அவருடைய தந்தையான சூரிய பகவானும் பிரபஞ்சத்திற்கே தெய்வீகப் பேரொளியாய் விளங்கும் அருணாசல மலையை இன்றும் குறுக்கே கடக்காமல் சுற்றியே வருகின்றார். தன் புத்திரனின் ஆக்ஞையை நிறைவேற்றுமாறு வேண்டி சூரிய பகவான் தற்போது, சூரியலிங்கமெனப்படும் பாஸ்கர க்ஷேத்ர பதியில் தவமிருந்தார். இவ்வாறு யமதர்மர் தவம் புரிந்த இடமே யமலிங்கமாக அருள்புரிகின்றது. இங்கிருந்து நாம் திருஅருணாசலத்தைத் தரிசித்திட அப்பகுதியில் கிட்டுவதே கரிக்கோல தரிசனமாகும். இப்பகுதியில் தான் இரவில், கரிநாளன்று மட்டும் கண்களுக்குத் தெரிகின்ற பல மூலிகைகள் தென்படுகின்றன. மேலும் சுக்ல, கிருஷ்ண பட்சங்களின், தட்சிணாயன உத்தராயன அயனகதிகளின் நிலைகளுக்கேற்பவும் கரிநாட்கள் அமையும்.

சில விசேஷமான நட்சத்திரங்கள் கரிநாட்களில்தான் இரவில் கண்களுக்குத் தென்படுகின்றன. இவற்றிற்கு நம் உடலில் உள்ள சிலவித தீய சக்திகளைப் பஸ்மமாக்கும் அபூர்வ சக்திகளுண்டு. கண்களுக்கும் தீர்க்கமான பார்வையையும் தரவல்லவை. ஆனால் இப்பலன்களைப் பெறுதற்கு கரிநாளுக்குரித்தான வழிபாடுகளைக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். பொதுவாக மூன்று மணி நேரமாவது வெட்டவெளியில் இருந்தால்தான் இந்நட்சத்திரங்களின் தெய்வீக சக்திகள் நம்மைச் சேருகின்றன. எனவே கரிநாட்களில் திருஅண்ணாமலை, பழநி, சென்னை - திருக்கச்சூர் (சென்னை - சிங்கப்பெருமாள் கோயில் அருகில்) காரைக்குடியருகே குன்றக்குடி, திருத்தனி, காளஹஸ்தி, பர்வதமலை போன்ற இடங்களில் மலைவலத்தை மேற்கொண்டால் இந்நட்சத்திரங்களைக் காணுகின்ற தெய்வீக வாய்ப்பு கிட்டுவதோடு அவற்றின் கிரண மழையில் நனைந்து நாம் அருளாசியையும் பெற்றிடலாம்.

கரிநாளுக்குரிய ஆடைகள்

கரிநாளன்று கருப்புநிற உடைகளை அணிதல் மிகவும் விசேஷமானதாகும். அனைவரும் குறிப்பாக பெண்கள் குறைந்த பட்சம் கருப்பு நிற ரிப்பனையாவது தலைமுடியில் வைத்திட வேண்டும். சபரிமலைக்கு விரதமிருப்போர்கூட கருப்பு நிற அல்லது நீல நிற உடைகளை அணிய வேண்டுமே தவிர ஒருபோதும் காவியை அணிதல் கூடாது. மிக மிக பவித்திரமானதும் உத்தம தெய்வீக நிலைகளைத் தரவல்லதுமான காவியை புனிதத்தின் மொத்த உருவாக விளங்கும் துறவிகள் மட்டுமே அணிந்திட வேண்டும். ஏதோ விரதத்திற்காகக் காவியை அணிந்தோம் என்பது ஒருபோதும் கூடாது. சென்னையில் ஆவடியருகே ஸ்ரீ கரிகிருஷ்ணப் பெருமாள் ஆலயமுள்ளது. கரி நாட்களில் இப்பெருமாளுக்கு அபிஷேகஆராதனைகள் செய்து மண் பானையில் வடித்த சர்க்கரைப் பொங்கலை நிவேதித்துத் தானமளித்து வந்திடில் குடும்பத்தில் பிரிந்தோர் வந்து சேருவர்.

யானைக்குரிய தெய்வீக குணங்கள்

கரிநாளில் நம் கண்களுக்குத் தென்படுகின்ற சில விசேஷமான நட்சத்திரங்களுள், கஜகேசரி யோக நட்சத்திரம் ஒன்றாகும். சந்திர கிரஹமானது இந்நட்சத்திரத்தின் அருகே விரைந்து செல்கையில் பூமியில் பிறப்போர்க்குக் கஜகேசரியோகம் என்ற அற்புதமான யோகம் ஏற்படுகின்றது. இந்த கஜகேசரியோக நட்சத்திர கிரஹ மண்டலத்தில் படைக்கப் பட்டவையே யானைகளாகும். எனவேதான் இந்தக் கரிநாட்களில் யானைகளுக்கு கவள சோற்று, தான்ய உருண்டைகளை அளிப்பது எத்தகைய துன்பங்களையும் எதிர் நோக்குவதற்கான மனோ சக்தியை அளிக்கின்றது என்கின்றனர் பெரியவர்கள்.

பலருக்கும் பலவிதமான ரகஸ்ய உடல் நோய்கள் உடலை வருத்தும். இதற்கும் பரிகாரம் தரும் பூஜையே கரிநாள் பூஜையாகும். பலருடைய பழிவாங்கும் எண்ணங்களையும் தடுத்து நிறுத்தி அவற்றின் விளைவுகளிலிருந்து நம்மைக் காப்பதும் இத்தெய்வீக வழிபாடாகும். சில விநோதமான பிரச்னைகளுக்கு கரிநாள் வழிபாடு வழிவகை செய்கின்றது என்பது மிகவும் ஆச்சரியமானதாகும். எத்தனையோ மனிதர்கள் அறிந்தோ அறியாமலோ தத்தம் கோபத்தினாலோ விரக்தியினாலோ, பொறாமையினாலோ பழிவாங்கும் செயலைச் செய்திருக்கக்கூடும். இதற்குப் பொதுவாக எளிதான பிராயச் சித்தம் கிடையாது. ஆனால் அவர்கள் கடைப்பிடிக்கும் கரிநாள் பூஜையானது, செய்த தவறுகளை உணரச் செய்வதோடு அதனால் ஏற்பட்ட தீய விளைவுகளுக்குப் பிராயச்சித்த முறைகளையும் காட்டுகின்றது. மேலும் குடும்பம், அலுவலகம் சம்பந்தமான பலவித ரகஸ்யங்களை மனதில் தேக்கி வைத்திருந்து சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் ஏதேனும் ஒன்றை வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு பலரும் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளாகியிருக்கக் கூடும். இதற்குரிய பரிகாரத்தையும் தருவது கரிநாள் பூஜையாகும்.

அடியார் : குருதேவா! கரிநாளில் செய்யப்படும் விசேஷமான பூஜைகள் எவ்வளவோ பிராயச் சித்தங்களைத் தரவல்லவை என்பது கேட்பதற்கே வியப்பைத் தருகின்றன. கரிநாள் பூஜை ஏன் அத்தகைய மகத்துவத்தைப் பெற்றுள்ளது?'

சற்குரு : எனதருமைச் சீடர்களே! ஒன்றை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்! மனிதனும் மற்ற ஜீவராசிகளும் உயிர் வாழ்வதற்குரிய ஆத்மசக்தியையும், ஜீவ சக்தியையும் காலை நேரங்களில் சூரிய பகவான் அளிக்கின்றார். அதேபோன்று இரவு நேரங்களில் இச்சக்திகளை அனைத்து உயிரினங்களுக்கும் அளிக்கின்றவையே இரவு நேர தேவதைகளாகும். இவை இரவு நேர சந்திரகாந்தா தேவதைகள் என்று அழைக்கப்படும். இரவில், இருளில் துர்சக்திகள் பலம் பெறுகின்றன என்பது உண்மையானாலும் இரவு நேர தேவதைகள் அனைத்துமே துர் தேவதைகள் என்று நினைப்பது அறியாமையின் விளைவே. இன்னும் சொல்லப் போனால் பல துர்தேவதைகளிடமிருந்து நம்மைக் காத்தருளுவதற்காகவே பற்பல அற்புத சக்திகள் படைத்த நற்குணம் கொண்ட தேவதைகள் இரவில் உலவி வருகின்றன. உதாரணத்திற்கு ஒன்று கூறுகிறேன் கேளுங்கள்! நாம் உறங்கும் போது நம் உடலில் உள்ள காது, மூக்கு, வாய் போன்ற துவாரங்களை மூடியோ அல்லது பாதுகாத்துக் கொண்டா தூங்குகிறோம் ? ஆனால் எவ்விதத் துர்சக்திகளோ, பூச்சிகளோ, வண்டுகளோ இவற்றுள் புகாமல் இருக்க ஒரு வகையான தேவதைக் கூட்டங்கள் நம்மைக் காக்கின்றன. இது மட்டுமா! வேறு சில தேவதைக் கூட்டங்கள், இரவில் நம் உடலில் உணவு செரித்து, சத்துக்கள் உடலுக்குச் சேரவும் கழிவுகள் அகற்றப்படவும் பேருதவி செய்கின்றன. இதேபோன்று இரவில் நமக்குப் பல உன்னத நன்மைகளையும், நம்மைப் பல ஆபத்துகளிலிருந்து கோட்டையைப் போன்று காப்பாற்றும் தேவதைகளின் பட்டியல்கள் எண்ணிலடங்கா. எந்தவித பிரதி உதவியையும் எதிர்பாராது தன்னலமற்றுத் திகழும் இந்தத் தேவதைகளுக்கு நாம் செலுத்தும் வழிபாடே கரிநாள் வழிபாடாகும்.

அடியார் : 'பெறற்கரிய உண்மைகளை அறிந்தோம் குருதேவா தங்கள்அருளால்! மேலும் இப்பூஜைகளின் வழிமுறைகளையும் கூற வேண்டும்!'

சற்குரு : அமாவாசை, சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்று இரவு பூஜைகளுக்கு அதிக பலன்களை அளிக்கக் கூடிய கரிநாட்களில் மேலே குறிப்பிட்டுள்ள கருப்பண்ண சுவாமி, காலசம்ஹார மூர்த்தி (திருக்கருகாவூர்), பாதாள நிலையில் உள்ள ஸ்ரீ விநாயகர் போன்ற மூர்த்திகளுக்கு. அபிஷேக ஆராதனைகள் செய்து கருப்பு நிறக் கனிகளைப் படைக்க வேண்டும். எள்ளுருண்டை, கரும் பழுப்பு நிற அல்லது கறுப்பு நிற உடைகள், பேரீச்சை, குலோப்ஜாமூன் போன்ற உணவுகள், கருப்பு திராட்சை, கருப்பு நிற நாவல்பழம் படைத்து ஏழைகளுக்கு அளித்திட வேண்டும். இதுவே மிக எளிமையான பூஜை! கடினமான விரத பூஜை விதிகளும் உண்டு!

கரிநாளன்று ஸ்ரீகருப்பண்ண ஸ்வாமி வழிபாடு மிகவும் விசேஷமானதாகும். மாலை நேரத்தில் ஒரு மரக் கொப்பறையிலோ, பாத்திரத்திலோ, துருவிய தேங்காயில் சர்க்கரையைச் சேர்த்துத் தலையில் தூக்கிப்பிடித்து தாங்கியவாறே ஸ்ரீ கருப்பண்ண ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்தல் வேண்டும்.

கரிநாளன்று பாதாள லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வது சிறப்புடையது. இன்று சனிபகவானுக்குரிய தலங்களில் கருப்பு நிற உணவு வகைகளையும், கருப்பு நிற ஆடைகளையும் தானம் செய்வதும், ஊனமுற்றோருக்கு உரிய உதவிகளைச் செய்வதும் கரிநாளுக்குரிய சனி பகவானுக்குப் ப்ரீதி தரும் தான தருமங்களாகும்.

கரிநாளுக்குரித்தான பலவிதமான ஆன்மீக விளக்கங்கள் உண்டு, சகோதரர்களான சனீஸ்வரரும், யம தேவரும் இறைத் திருவிளையாடலாய் ஒரு பிணக்கில் ஈடுபட்டிட, இத்தினத்தில் யமதேவர் தம் தண்டத்தால் சனீஸ்வரரைத் துன்புறுத்திட அவரும் ஊனமடைந்தார் என்று அறிவோமல்லவா! வழிபாட்டில் உள்ள ஒரு சனீஸ்வரனுடைய சிலாரூபம் உடைபட்டு பின்னமாயிருந்தாலே அதனைப் பூஜைக்கு உரியதன்று என்று நாம் நிர்ணயித்து விடுகின்றோம்! ஆனால் உண்மையிலேயே ஊனமுற்ற சனீஸ்வர பகவானின் மகத்துவமும் குறைந்ததா? கண்டிப்பாக இல்லை!

எவராலும் எண்ணிப் பார்க்க இயலாத ஈஸ்வரப் பட்டத்தைப் பெற்ற சனீஸ்வர பகவானால் தம் ஊனத்தை ஒரு நொடிப் பொழுதில் சரி செய்து கொண்டு பழைய நிலையை அடைந்திருக்க முடியும். பின்னர் ஏன் அவ்வாறு அவர் செய்து கொள்ளவில்லை என்ற வினா நம் மனதில் எழுகிறதல்லவா? கரிநாளின் மகத்துவம் இதன் பின்னணியில் தான் தெளிவாக அமைந்திருக்கிறது!

எது சரியான வழி ?

தவறான வழியில் செல்லாதிருக்க
ஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகள் தம் குருவருட் கடாட்சத்தால் கலைவாணியின் அருள் பூண்டு உலக அன்னையாம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியின் எல்லையற்ற திருவருளுடன் கூடி அருளியுள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அந்தாதியிலிருந்து ஒளிர்கின்ற முத்தான  துதிப்பாடல் இதோ!

வீற்றிருப்பவளே ஈரேழு உலகெங்கும் விந்தையாய்
தோற்றியிருப்பவளே தோற்றத்து உள்ளிருந்து துலங்குபவளே
போற்றினாயென் உள்ளத்திலிருந்து உன்னையே என்மனம்
மாற்றினாயெங்கும் பரம் பொருளான சுந்தரியே.

கலியுகத்தில் உடல் அவயவங்களால் மனிதன் செய்கின்ற தவறுகள் எத்தனையெத்தனை ? இது மட்டுமா ? மனதாலும் எண்ணங்களாலும் வினாடிக்கு வினாடி அவன் சேர்த்துக் கொள்கின்ற தீவினைகளோ சொல்லி மாளாது. ஆனால் இதைப்பற்றி எல்லாம் ஒரு சிறிதும் கூட கவலைப்படாது, "எத்தனையோ கோயில், குளங்களுக்குச் சென்று வந்தேன், ஆயிரமாயிரமாய் தான தர்மங்கள் செய்தேன், திருப்பதிக்குப் பாதயாத்திரை, சபரிமலைக்கு விரதமென''... சொல்லிச் சொல்லி அங்கலாய்ப்பவர்கள் எவ்வளவு பேர்கள்!

சபரிமலை விரதம் பூண்டு எல்லாம் வல்ல பரம்பொருளான ஸ்ரீ ஐயப்ப சுவாமியைத் தரிசித்து வந்தோமே, இதன் பிறகேனும் வாழ்க்கையில் நல்லொழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டுமல்லவா! உடலுக்கும் உள்ளத்திற்கும் புனிதம் தருவதுதானே ஐயப்ப விரதம்!

தினசரி பூஜையில் ஒன்றையேனும் குறித்த நேரத்தில் முறையாகச் செய்து வந்தால்தான் விரதங்களின் பலன் பரிபூரணமாகும், பாதயாத்திரை, காவடி எடுத்தல் போன்றவை மூலமாக விதவிதமான புனித தெய்வீக சக்தி  கிட்டுகின்றது என்பது உண்மையே! தெரிந்து செய்கின்ற பலவிதமான பாவங்களிலிருந்தும் (லஞ்சம், முறையற்ற காமச் செயல்கள், பழிவாங்குதல், துரோகம் செய்தல், பொய், புரட்டு, ஏமாற்றுதல், கலப்படம் etc,) அதற்குரிய தண்டனைகளிலிருந்தும் நாம் தப்புவதற்கென இப்புனிதமான தெய்வீக சக்தியை விரயம் செய்வதை விட சுயநலமற்ற, நலிந்தோர்க்கு உதவும் இறைத் திருப்பணிகளில் ஈடுபட்டால் இவ்வரிய தெய்வீகசக்தியைப் பன்மடங்காக விருத்தி செய்து கர்ம வினைகளைக் கழித்து இறை உணர்வுடன் எப்போதும் எந்நிலையிலும் வாழலாம் அன்றோ! வடமொழி வேதங்கள், தமிழ் மறைகள் மிகுந்த இறை சக்தியைப் பெற்றவை.

உருப்படியாக ஓரிரண்டு சூக்தங்களையோ அல்லது நாலைந்து தேவார திவ்யப் பிரபந்தப் பாடல்களையோ கூட அறியாது வீண் வாழ்க்கை வாழ்கின்றோர் எத்தனை பேர்! இதற்காகவே சித்புருஷர்களும், யோகியர்களும் தாங்கள் பல்வேறு  யுகங்களில் செய்த ஹோமம், தவம், பூஜைகள், புனித யாத்திரைகள்/நீராடுதல்கள், தான தர்மங்களில் திரண்ட தெய்வீக ஆற்றலை அந்தந்த யுகத்திற்கேற்ப உதாரணமாக கலியுகத்திற்குரிய எளிய வழிபாடாக அளிக்கின்றனர். ஒளவையாரின் வினாயகர் அகவல். பாம்பன் ஸ்வாமிகளின் பகை கடிதல், வள்ளலாரின் திருஅருட்பா, அருணகிரி நாதரின் திருப்புகழ் போன்றவை அனைத்தும் இத்தகைய தெய்வீகப் பேராற்றலின் திரட்சியேயாகும்.

இவ்வாறாக தம் சற் குருநாதராம் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச  ஸ்வாமிகளின் குருவருட் கடாட்சத்தால், தம் பூர்வ ஜென்ம, குருகுலவாச  தவ, பூஜா சக்திகளின் திரண்ட வடிவமாய், பல பீஜாட்சர சக்திகளை எளிய  வார்த்தைகளில் பதித்து நமக்கு அளிக்கப்பட்டதே ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகளின் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அந்தாதியாகும் மனிதன் பிறவிக் கடலைக் கடக்க உதவும் பெரும் தெப்பம் இது ஒவ்வொரு அந்தாதிப் பாடலும் சாதாரண மனிதனுடைய பலவிதமான வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கவல்ல தெய்வீக மாமருந்தாய், அமிர்தமாய்த் திகழ்கின்றது மகான்களின் திருவாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையும் திருப்பாற் கடலிலிருந்து, திருக்கயிலாயத்திலிருந்து, ஸ்ரீசக்ர மண்டலத்திலிருந்து தெளிக்கின்ற அருட்பிரகாச அமிர்த மொழிகளாகும்
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் சேர்க்கின்ற கர்மவினைகள் தவிர, கடந்த பிறவிகளின் வினைகளும் கூடி எதிர்கால வாழ்வில் சேர்க்கவிருக்கின்ற கர்மச் சுழல்களின் பெருக்கினாலும் விண்ணை முட்டும் பல பெரிய கர்ம வினைகளை மலைகளாக அல்லவா சுமக்க வேண்டியுள்ளது என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். ''ஏதோ காலையில் எழுந்தோம், சமைத்தோம், பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பினோம், அலுவலகம் சென்றோம், மாலையில் திரும்பி வந்தோம், T.V. பார்த்தோம், உண்டோம், உறங்கினோம்'' - என்று. கலப்படமில்லாத  சுயநலமான வீண் கதியில் தானே ஓர் இயந்திரம் போல் நம் வாழ்க்கை பயனின்றி ஓடிக் கொண்டிருக்கிறது!

போதும் இந்தப் பொய்யான வாழ்க்கை! ரிடயர் (Retire) ஆனபின் தெய்வீகத்திற்குத் திரும்பலாம் என்றால் உடல் ஒத்துழைக்காது. தனக்கென தனித்தே வாழ்ந்தால், தன்னலமே மிதமிஞ்சி வாழ்க்கையே வீணாகும்! பெறற்கரிய மனிதப் பிறவியைப் பெற்று அதனை வீணடித்ததற்கான தண்டனைகளாய் கோடிக்கணக்கான பிறவிகளாய்ப் பெருகும். இப்போதே M.Sc. ,B.E., MBBSக்கு கூட வேலை கிடைப்பதில்லை. ஒரு வியாபாரத்தில் இறங்கினாலும் கூட ஏகப்பட்ட துன்பங்கள், நஷ்டங்கள், ஏமாற்றங்கள், லஞ்ச லாவண்யங்கள், சட்டதிட்டங்கள், வரிப் பிரச்சினைகள் குறுக்கே நிற்கின்றன. ஒவ்வொரு பிறவியெடுத்து LKG, UKG என்று மீண்டும் ஒரு இயந்திர கதியான வாழ்க்கை தேவை தானா? நாம் லட்சலட்சமாய்ச் செலவழித்து M.A., BE., M.S. எனப் படிக்க வைத்த பிள்ளைகள் புகை, மது, கேளிக்கை என கண்ணெதிரில் அழிகின்றார்களே! வெளிநாட்டில் எங்கோ லட்சலட்சமாய் சம்பாதித்து, இங்கோ இருமினால் கூட தொண்டையை நீவி விடுவதற்கு ஒருவர் கூட அருகில் இல்லாத வயதான வாழ்வும் ஒரு வாழ்வுதானா? தூங்கி எழுந்தால் கூட துன்ப நினைவுகள் தானே தொடர்கின்றன! தூக்கமும் நிம்மதி தருவதில்லையே! இடையிடையே ஓரளவு கோவில் தரிசனங்களும், பூஜைகளும் மனசாந்தியை அளிக்கத்தானே செய்கின்றன: 24 மணிநேரத்தில் 10 நிமிடமே கோயில் தரிசனம் அல்லது பூஜை! அதிலும் இடையிடையே ஆயிரமாயிரம் எண்ணங்கள் அலைபாய்கின்றன. இதில் உண்மையாக தெய்வத்திற்காக செலவிடுகின்ற ஒரே ஒரு நிமிடத்தைச் சற்றே எண்ணிப் பாருங்கள், எனவே தவறான வழிகளில் உடலோ, உள்ளமோ செல்லாதிருக்க பல பீஜாட்சர சக்திகள் நிறைந்த ஸ்ரீ - ல - ஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகளின் அங்காள பரமேஸ்வரி அந்தாதிப் பாடலை மாமருந்தாய் அளிக்கின்றோம்.

தவறான எண்ணங்களின் வழியின் பால் செல்லாதிருக்கவும், காம இச்சை, பேராசை, கேளிக்கை, இன்பம் காரணமாக மனம் மாறினும் இத்துதியை இடைவிடாது ஓதிவந்தால் குற்றங்கள் மறைந்து நல்வழி புலப்படும். தெய்வீகத்தில் உத்வேகம் உண்டாகும்.

விஷ்ணுபதி புண்ணியகாலம்

தமிழ் வருடத்தில் 3 மாதத்திற்கு ஒருமுறை மாதப்பிறப்பை ஒட்டி வருகின்ற மிகமிகப் புனிதமான தினமே விஷ்ணுபதி புண்யகாலமெனப் பெரும் சிறப்புடன் போற்றப்படுகின்றது. பிரதோஷ காலம் போன்று விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் செய்யப்படும் இறை வழிபாடுகள், ஹோமங்கள், தீர்த்த நீராடல் தர்ப்பணங்கள், பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், தான தர்மங்கள் போன்றவற்றிற்கான பலாபலன்கள் பன்மடங்காகப் பெருகி நமக்கு அருள் பாலிக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.

பல்வேறு யுகங்களாக மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய விஷ்ணுபதி புண்ணிய கால பூஜையானது காலப்போக்கில் மறைந்து விட்டது. எவ்வாறு ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமி, ஸ்ரீ சந்தோஷி மாதா விரதம், பிரதோஷ கால பூஜைகள் ஸ்ரீ ஆயுர்தேவி பூஜை - போன்றவை மீண்டும் தெய்வீகப் புத்துணர்ச்சி பெற்றுள்ளனவோ, அதே போன்று விஷ்ணுபதி புண்ய கால பூஜையும் மீண்டும் சிறப்புடன் விளங்க நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ  வெங்கடராமன் ஸ்வாமிகள் இறையருளால் தம் குருவருள் ஆணையின்படி அரும்பாடுபட்டு முயன்று வருகின்றார்கள்.

விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் மகிமையை விளக்க யுகங்கள் போதாது. எத்தனையோ தெய்வ அவதாரங்கள் உற்பவித்த புனித காலமிது! எண்ணற்ற மகரிஷிகளும், யோகியரும் உத்தம இறை பெருநிலையடைந்த தெய்வீக நேரமே விஷ்ணுபதி புண்ணிய காலமாகும். பல தெய்வீகத் தலங்கள் தோன்றிய அல்லது உலகிற்கு எடுத்துக் காட்டப்பட்ட புனித  காலமே விஷ்ணுபதி புண்ணிய காலமாகும்.

குறித்த சில வழிபாடுகளின் மூலம் இத்தகைய இறையருள் சுரக்கும், தெய்வத்தன்மை பெருக்கெடுக்கும், விஷ்ணுபதி கால பூஜைகளினால் கணக்கில் அடங்காத சொல்லொணா பாவங்களுக்குப் பிராயச்சித்தம்  பெற முடியும். எனவே இதன் மகிமையை அனைவருக்கும் உணர்த்தி யாங்கணும், அனைத்து திருத்தலங்களிலும் 12.2.1998 அன்று அமைகின்ற விஷ்ணுபதி புண்ணிய காலத்தை மிகவும் சிறப்புடன் கொண்டாடிட அனைத்து பக்த கோடிகளையும், வைணவப் பெரியோர்களையும், பெருமாள் அடியார்களையும் சிரந்தாழ்த்திப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ராவணன், ஹிரண்யன் போன்ற ராட்சசர்களின், அரக்கர்களின் மனைவியர் உத்தம இறை நிலைகளை அடைந்தவர்களாக இருப்பதைக் காண்கின்றோம்  அல்லவா! மனைவியர் தெய்வீக சக்திகள் நிரம்பப் பெற்றவர்களாயிருப்பினும் அவர்களால் தம் கணவனைத் திருத்த முடியவில்லையா என்ற வினா  எழும். இதைப் போன்றே கலியுகத்தில் இன்றும் கூட, ''இத்தனை மகான்கள், யோகியர்கள் இருந்தும் என்ன பயன்? அவர்கள் வாழும் இடங்களில் கூட மக்கள் கஷ்டப்படத்தானே செய்கின்றார்கள்”, என்று அறியாமையினால்  கேட்கின்ற பரிதாப நிலையைக் காண்கின்றோம். இது ஆண்டாண்டு காலமாக எழுப்பப்பட்டு வரும் கேள்வி தானே தவிர இது ஒன்றும் புதிதல்லவே!

மகான்களின் பிறப்பு ரகசியம் நம்முடைய அறிவிற்கு எட்டாத ஒன்றாகும்.  நமக்குப் பிறப்பு இறப்பற்ற நிலையைத் தரவல்லவர்களாய், என்றுமே  இறைவனுடன் ஐக்கியமாகி இருப்பவர்களுக்கு மனித உலகத் துன்பங்களை  மாய்ப்பது ஒரு பொருட்டல்லவே! ஒன்றே ஒன்றை நன்கு சிந்தித்துப்பாருங்கள்! "'நம் இஷ்டப்படி செய்ய நினைக்கும் அக்கிரமங்களையெல்லாம் செய்திடுவோம்! இக்கொடிய கர்மவினைகளைத் தீர்ப்பதற்குத்தான் அருகில் ஒரு மகான் இருக்கின்றாரே'' என்று ஒவ்வொருவரும் எண்ணிச் செயல்பட  ஆரம்பித்தால் இதனால் விளையும் விபரீதங்களைப் பற்றிச் சற்றே சிந்தித்துப் பாருங்கள்!

நம் எல்லோருடைய தீவினைக் கர்மங்களையும் அள்ளிச் செல்வதற்கு மட்டும் தானா மகான்கள் தோன்றியுள்ளனர்? பின் எப்படித்தான் பிறருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடும் நல்லவர்களையும், தன்னலத்திற்காகப் பிறரை அழிக்கின்றவர்களையும்  பாகுபடுத்த முடியும்? தீயதும் நல்லதும் பிறரால் வருவதல்ல, எல்லாம் தாமே தம் முன்வினைப் பயன்களால் விளைவித்துக் கொண்டவை என்ற உத்தமமான பிறவி நிர்ணய விதியும் என்ன ஆகும்? ஒரு மகான் இருக்குமிடத்தைச் சுற்றியும் இன்பமே பொங்குமென்றால் கோடிக்கணக்கானவர்கள் உடனே அங்கு படையெடுப்பார்களே!? கொடியவர்களும் அங்கு தஞ்சம் புகுவார்களே!

இருக்குமிடத்தில் இருந்து கொண்டு பிரபஞ்சமெங்கும் சாந்தம் எனப்படும் தெய்வீகக் கருணையைப் பொழியவல்ல ஆன்மீக அருவிகளே மகான்களாவர். நம்மைப் போல் கோடானுகோடி பிறவிகளையெடுத்து  அவதியுறும் நிலை அவர்களுக்கு இல்லை! தியாக உணர்வுகளுடன், சுயநலமற்ற இறைச் செம்மல்களாய் விளங்கும் அவர்களே பல கர்மங்களைச் சுமந்து நமக்காக இன்ப துன்பங்களைத் தாங்குவது போல் நடித்து, நம்மிடையே பவனி வந்து, இம்மையிலே இறைநாட்டம் கொண் டுள்ள அன்பர்களுக்குச் சற்குருவாய் அருள் பாலிக்கின்றனர்!

எல்லோரும் கஷ்டப்படுகின்றார்கள் என்று சொல்லுகின்றோமே! அந்தக் கஷ்டங்களெல்லாம் அவரவர் வினையால் விளைவித்துக் கொண்டவைதானே! ஒரு மனிதன் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு, இறைத் திருப்பணிகளில் ஈடுபட்டுப் பிறவிப் பிணியைத் தீர்க்கும் பெருவழியைத் தேடுகையில், இத்தகைய மகான்கள் பெரிதும் உதவுகின்றனர். எனவே இறையைத் தேடுவோர்க்கே அவர் மகானாகின்றார். தன்னலம், தன் குடும்ப நலம் கருதி மட்டுமே செயல்படுவோர்க்கு அம்மகானின் இறைத்தன்மைப் புலப்படாது! எனவே பல கோடி விண்ணுலகங்களில் உள்ள ஜோதி வடிவான ஸ்வயம்  பிரகாச மகான்களும், யோகியரும் பூலோகத்திற்கு மீண்டும் வந்து ஆயிரக் கணக்கானோரை, லட்சக்கணக்கானோரை உய்விக்கவேண்டி தாமே, “இறைவா நற்பிறவி ஒன்று தா”, என்று விரும்பிக் கேட்டு நம் நல்வாழ்விற்கெனப் பூலோகம் வருகின்றனர்.

இதே போன்று பல உத்தம் நிலையடைந்தோர் கூட, 'இறைவா! யாம் பல கொடிய அரக்கர்களிடமிருந்து நன்மக்களைக் காப்பாற்றி அவர்களுக்கு நற்கதி காட்டும் வண்ணம் அசுர பத்தினியாய் பிறப்பெடுக்கின்றோம்' என்று  வரம் கேட்டு பூலோகத்திற்கு வருகின்றனர். இதுவும் மகத்தான தியாகம்தானே! இவ்வகையில் ஹிரண்யனுடைய மனைவி பல சிவ பூஜைகளில் சிறப்பிடம் பெற்று விளங்கியவள். தன்னுடைய கணவனை நல்வழிப்படுத்த முயன்றவள். பல அரக்கர்களும், அசுரர்களும் தெய்வ அவதாரங்களின் திருக்கரங்களால் மாயும் பெரும் பேற்றைப் பெற்றவர்களாக விளங்குகின்றனர். இதற்காக இத்தகைய பத்தினியர் பலவிதமான உடல் வாதனைகளையும், வேதனைகளையும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அரக்கர்களுக்கு எத்தனையோ மனைவியர் இருப்பினும் ஒரு சிலர் மிகச் சிறந்த தெய்வீக வாழ்க்கையைப் பெற்று தன் கணவனுடைய நல்வாழ்விற்கெனத் தம்மை அர்ப்பணித்தனர்.

சில அசுரர்களுடைய பிறப்பின் தெய்வீக ரகசியம் பற்றிய அபூர்வமான விளக்கங்களைக் கடந்த பல 'ஸ்ரீ அகஸ்திய விஜயம்' இதழ்களில் அளித்துள்ளோம். பல கோடி யுக நியதிகளின் விளைவாக ஆங்காங்கே பல கொடிய தீயசக்திகள் பரவி ஜீவன்களைத் துன்புறுத்துகையில் சில ரிஷிகள் கோரமான தவமிருந்து,''இறைவா! தீவினைகள் அனுபவித்தே அழிக்கப்பட வேண்டும் என்பது இறை நியதி. எங்கெங்கோ தீய சக்திகள் சிதறிக் கிடப்பதை விட, அவற்றின் ஒட்டு மொத்த உருவமாக எங்களைக் கொடிய அரக்கர்களாகப் படைத்து விடுங்கள். நாங்களே அவற்றை ஏற்று அவற்றிற்குரியவற்றை அனுபவித்து விடுகின்றோம்" என்று தியாகச் செம்மல்களாய் மாறி அசுர உருப்பெற்று விளங்கினர் என்பது வியப்புக்குரியதல்லவா!

ஹிரண்யனுடைய பூர்வ ஜென்ம வரலாறு புராணங்களில் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது. ஹரியாகிய, ஸ்ரீமன் நாராயணனின் திருநாமத்தைப் பரப்பும் வண்ணமே ஹிரண்யனின் வரலாறு படைக்கப்பெற்றது. அனைத்தும் இறைவன் செயலே. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதை மெய்ப்பிப்பது போல் ஹிரண்யனுடைய வதத்தின் போதுதான் அதாவது பிரதோஷ நேரத்தில் தான் நரசிம்ம அவதாரம் ஏற்பட்டது. இதை ஒட்டியே இன்றைக்கும் சில நரசிம்ம மூர்த்தித் தலங்களில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது. பல விதமான இறை லீலைகளுக்குரிய அற்புதமான விளக்கங்கள் ஹிரண்ய வதத்தின் போதுதான் வெளிப்பட்டன. இவற்றை உலகிற்கு எடுத்துரைத்தவள் ஹிரண்யனின் மனைவியாவாள்.

பல்வேறு யுகங்களிலும் பல விதமான நரசிம்ம மூர்த்திகள் தோன்றியுள்ளனர். ஒவ்வொரு நரசிம்ம அவதாரத்திற்கும் உரிய இறைலீலா அனுபூதிகளும் பல உண்டு. 
ஹிரண்யனின் மனைவியானவள் திருமாலை நிர்குண அம்சமாக வழிபட்ட பதிவிரதையாவாள். எனவேதான் பிரகலாதனைப் பெறும் பாக்கியத்தையும் பெற்றனள். ஹிரண்ய வதத்திற்குப் பின் பிரகலாதனே தன் தந்தைக்கு மன்னிப்புத் தந்தருளுமாறு வேண்டியதாக நாம் காண்கின்றோம். ஆனால் இதற்குள் எத்தனையோ கோடி யுகங்கள் கடந்து விட்டன. காரணம் ஏற்கனவே உக்ர ரூபத்தில் இருந்த ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி ஹிரண்யனை வதைத்து குருதியை உண்டு, அவன் அங்கங்களை மாலையாகத் தரித்தார் என்று காண்கிறோம் அல்லவா! இதன் பொருள் என்ன? கொடியவனின் ஒரு துளி ரத்தம் கீழே சிந்தினால் கூட அதனை இவ்வுலகம் தாங்காது என்பதுதானே!

உண்மையில் வைகுண்டத்தில் துவாரபாலகர்களாய் இருந்து, சனகாதி முனிவர்களை அவமதித்ததால் ஏற்பட்ட விளைவுகளால் தான் ஹிரண்யாட்சன், ஹிரண்யகசிபு என்ற அரக்கர்களாகத் தோன்றினர் என்பதை நாம் அறிவோம். பிரகலாதனின் அன்னை நாரத மகரிஷிக்குப் பணிவிடையும், குரு  சேவையும் செய்யும் பாக்கியத்தைப் பெற்றிருந்தாள். நார்தருடைய வேத மொழிகளையும், ஆத்ம தத்துவங்களையும், யுக தர்மங்களையும் கேட்டுப் பரமானந்த நிலையை அடைந்தவளே பிரகலாதனின் அன்னை ஆவாள், கர்ப்ப வாசத்திலேயே இவற்றை உணர்ந்தமையால், பிரகலாதனுக்கும் ஹரிபக்தி இயற்கையிலேயே அமைந்து விட்டது. கொடிய அரக்கனின் மனைவியாக வாழ்ந்திடினும் சிறந்த பதிவிரதையாக வாழ்ந்தமையால், ஹிரண்ய வதத்திற்குப் பின் ஸ்ரீமந்நாராயணனை வேண்டி, ''சர்வேஸ்வரா! என் புதல்வன் பிரகலாதனின் விருப்பப்படி என் கணவரின் பிழைகளைப் பொறுத்து மன்னித்து அருளினீர்கள்! ஆயிரமாயினும், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் அன்றோ! எனவே என் கணவனை எனக்கு மீட்டுத் தாருங்கள். தங்களுடைய ஸ்ரீநரசிம்ம அவதாரத் திருக்கரங்களால் உய்வடைந்தோருக்கு மரணம் என்ற ஒன்றும்  உளதோ? யான் என் கணவருடன் சேர அருள்பாலிப்பீராக!'' என்று உளமுருகி வேண்டினாள்.

பெருமாளும், "எம்முடைய துவாரபாலகனாக இருந்தவனுக்கு இறப்பும் பிறப்பும் உண்டோ? ஆனால் மகரிஷிகளை அவமதித்தால் இறை நினைவை இழந்து கொடிய, தீய, அசுர குணங்களே தண்டனையாகத் தொற்றிக்  கொள்ளும் என்பதை உணர்த்தவே இந்த இறை லீலையாகும். நீயோ நாரத மகரிஷியால் ஆத்ம தத்துவம் உணர்த்தப் பெற்றவள். நீயே இத்தகைய உருவப் பற்றுதலைக் கொண்டு இருப்பது வியப்பளிக்கிறது. எனினும் உன்னுடைய தவத்தின், இறைவழிபாட்டின் பரிபூரணமாக உன்  கண்ணுக்கு மட்டும் ஹிரண்யகசிபுவே முந்தைய வைகுண்ட துவாரபாலகனாக, ஹரிபக்தனாகத் தெரிகின்ற காட்சியை தெய்வீக  பாக்கியமாக அருளுகின்றோம்'', என்று அருள் பாலித்து அவளுடைய சிறந்த பதிவிரதத் தன்மையை மெச்சி பெறற்கரிய விஷ்ணுபதி அம்சம் கூடிய தெய்வீகப் பெருநிலையைத் தந்தருளினார்.

இது நிகழ்ந்த காலமே அந்த யுகத்தின் விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும்.

இவ்வாறாக பிரகலாதனின் அன்னை விஷ்ணுபதி அம்சம் நிறைந்த உத்தம இறைப் பெருநிலையை, பெறற்கரிய பரம் பொருளின் இறைப்பிரவாகத்தை உய்த்துத் துதித்த காலமே பிறிதொரு யுகத்தில் ஈஸ்வர வருடத்தில் சிசிர  ருதுக்கால விஷ்ணுபதி புண்யகாலமாகும். இவ்வாறாக, பக்தப் பிரகலாதனும், பிரகலாதனின் அன்னையும் தெய்வத் திருவருளை விஷ்ணுபதி புண்யகாலத்தில் பெற்ற திருத்தலமே கடலூருக்கு அருகே உள்ள சிருங்க கிரித் தலமாகும்.

சிருங்க கிரியில் விஷ்ணுபதி புண்யகாலம்
வரும் விஷ்ணுபதி புண்யகாலம் அமைகின்ற 12.2.1998 (வியாழன்) அன்று கடலூர் அருகே சிருங்க கிரியில் உள்ள பெருமாள் கோவிலில் இரவு 1.30 மணிமுதல் பகல் 11 மணி வரை அபிஷேக ஆராதனைகள், ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திர தானத்துடனும் கொண்டாடிட  வேண்டுகின்றோம், விஷ்ணுபதி புண்யகாலத்தில் மூதாதையர்களுக்குத் தர்ப்பணங்கள் இடுவதும், பித்ருஹோமம் செய்வதும் மிகவும் சிறந்ததாகும். எத்தனையோ சிரார்த்த/அமாவாசைத் திதிகளில் அறிந்தோ, அறியாமலோ தர்ப்பணம் செய்யாமல் விடுபட்டதற்குப் பிராயச்சித்தமாகவும் அமையும்.

புகை, மது போன்ற பழக்கத்திற்கு அடிமையானோர் இத்திருத்தலத்திற்கு வந்து விஷ்ணுபதி புண்யகாலத்தில் சந்தனத்துடன் மணம் நிறைந்த சாம்பிராணி தூபக் காப்பிட்டால் இப்பழக்கத்திலிருந்து படிப்படியாக விடுபட முடியும். மேலும் இவ்விஷ்ணுபதி புண்யகாலத்திற்குப் பிறகு, அவர்கள் ஒவ்வொரு புதன்கிழமை மற்றும் சனிக்கிழமையன்றும் அவரவர் ஊரிலோ, இயன்றால் இத்தலத்திற்கு வந்தோ, ஏதேனும் ஒரு பெருமாள் கோவிலில் தூபமிட்டு வரவேண்டும்.
பிரிந்த கணவன், மனைவியர் இத்தலத்தில் விஷ்ணுபதி புண்யகால பூஜை கொண்டாடினால், அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கான நல்வழிகள் அமையும். இவர்கள் இங்கு ஏழைச் சுமங்கலிகட்கு ஜாதி மத பேதமின்றி குங்குமம், மெட்டி, மஞ்சள், மஞ்சள் வஸ்திரம் போன்ற பல மங்களப் பொருட்களை அளித்து வரவேண்டும்.

புகை, மது, போதை போன்ற தீய பழக்கங்களுக்கு ஆட்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள், இத்திருத்தலத்திற்கு வந்து விஷ்ணுபதி பூஜைதனை மேற்குறித்த முறையில் கொண்டாடினால் பிள்ளைகள் திருந்திநல்வழியில் நல்லொழுக்கத்துடன் வாழ்வர்.

பல வருடங்களாக இருந்துவரும் தீராத கோர்ட் வழக்குகள், உறவு பகை, தம்பதியர் பிரிந்திருத்தல் போன்றவற்றால் எத்தனையோ குடும்பங்கள் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகியுள்ளன. இதனால் பணவிரயமும், நஷ்டமும், கால தாமதமும் தொடர்ந்து ஏற்பட்டு துன்பங்களைப் பெருக்குகின்றன. இத்தகைய நெடுநாள் பிரச்சனைக்குத் தீர்வு அளிப்பதே மாசிமக நீராடுதல் ஆகும். பிரபஞ்சத்திலுள் அனைத்து கோடி நதிதேவதைகளும் மகாமகக்குளத்தில் பிரசன்னமாகி நீராடி, தங்கள் புண்யசக்திகளையும், தபோசக்திகளையும் தீர்த்தத்தில் இட்டுச் செல்கின்றனர், மேற்கண்ட துன்பங்களால் அவதியுறுவோர் மாசி மகத்தன்று மகாமகத் திருக்குளத்தில் நீராடி, அருகிலுள்ள ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்து, ஏழைகளுக்கு புளியோதரை அன்னம் அளித்திட நெடுங்கால துன்பங்களுக்குத் தீர்வு கிட்டும்,

நீதித் துறையினருக்கான நீதிகள்

நீதித் துறையில் சிறந்து நிலைக்க
இறைவன் அளித்துள்ள பலவகையான தொழில் முறைகளில் நீதித்துறை தனித்த சிறப்பிடத்தை வகிக்கின்றது. எல்லோருமே தாம் நினைத்தபடி சிறந்த நீதிபதிகளாகவோ, புகழ்பெற்ற வக்கீல்களாகவோ ஆகிவிடுவதில்லை. பூர்வ ஜென்மத்தில் தர்ம தேவதையை உபாசனை செய்தவர்களும், சித்ரகுப்த பூஜையை மேற்கொண்டவர்களும், வாழ்நாள் முழுதும் பொய் பேசாது சத்தியத்தை மதித்து வாழ்ந்தவர்களுமே மிகச் சிறந்த நீதிபதிகளாகவும், பெரும் புகழுடைய வக்கீல்களாகவும் ஆகின்றனர்.
ஆனால், நீதித்துறைக்கு வந்தவுடன் தற்போது பேராசை, பணம், புகழ், அந்தஸ்து காரணமாகவோ, சந்தர்ப்ப சூழ்நிலைகள், மற்றும் சாட்சியங்கள் காரணமாகவோ மனசாட்சிக்கு விரோதமான முறையில் பணியாற்ற வேண்டியவொரு கட்டம் ஏற்பட்டு விடுகின்றது. நீதிபதிகளாக இருப்போர் எவ்விதப் பாகுபாடுமின்றி நியாயமான, நேர்மையான முறையில் தம் பணிகளைப் புனிதத் தன்மையுடன் ஆற்றுவார்களாயின், மிக எளிமையான முறையில் தம் கர்ம வினைகளைக் கழிப்பதோடன்றி, மற்றவர்களுடைய கர்மவினைக் கழிப்பிற்கும் பெரிதும் உதவி புரிந்திடலாம். வாக்குசுத்தி என்பதுசொல்கின்ற வார்த்தைகளிலுள்ள ஆன்மீக சக்தியையும், சப்த ஒலி நாளங்களின் இறையம்சங்களையும் குறிப்பிடுகின்றது.

நீதித் துறையில் இருக்கின்ற பெரிய நீதிபதிகள், மேஜிஸ்டிரேட்டுகள் ஏனைய துறை நீதிபதிகள், அரசு வக்கீல்கள், புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் குறிப்பிட்ட சில தியான, பூஜை முறைகளைக் கடைபிடித்திடில்,
1. வாக்குவன்மை பெருகி, சத்திய வாக்கால் பிறரைக் கவர்கின்ற ஆன்மீக ஆற்றல் கிட்டும்.
2. கிட்டவேண்டிய, உரிய, பதவி உயர்வுகளும், நீதிபதி ஸ்தானங்களும் வீடு தேடி வரும்.
3. தார்மீக ரீதியாகத் தம் தொழிலில் மேன்மை, புகழ், கௌரவம், பரிசுகள் போன்றவற்றைப் பெற்றிடலாம்.
4. கடுமையான வழக்குகளில் மிகவும் தீர்க்க தரிசனத்துடன் அந்த வழக்கின் உண்மையை எளிதில் அறிந்திடலாம்.
5. இத்தகைய அபூர்வ, ஆன்மீக சக்திகளின் மூலம் நிரபராதியை எளிதில் அறிந்து கொண்டு, நீதியை நிலைநாட்டி விண்ணுலகில் அழியாப் பெருநிலையைப் பெற்றிடலாம்.
6. ஒரு நிரபராதி அறிந்தோ, அறியாமலோ தண்டிக்கப்பட்டால் அதனால் விளையும் சாபங்களும், தோஷங்களும் சம்பந்தப்பட்டோரின் குடும்பத்தை மிகவும் பாதிப்பதோடு பல் ஜென்மங்கட்கும் இச்சாபங்களின் விளைவுகள் தொடரும், எனவே நீதித் துறையைச் சார்ந்த அனைவரும் கீழ்க்கண்ட தியான வழிபாட்டு முறையை மேற்கொண்டு அறத்துறையில் நன்கு நிலைபெற்றுப் பிராகாசிக்க வேண்டுகின்றோம். நாட்டில் தர்மம் தழைத்தோங்கிட வேண்டிய துறையாதலின் நீதித்துறையில் உண்மையான உள்ளத்துடன் உழைப்போர்க்கு எளிதில் உதவும் கர்மத் தீர்வு முறைகள் குருவருளால் இங்கு எடுத்துக் காட்டப்படுகின்றன.

ஸ்படிகமணி தியானம்:

ஐம்புலன்களும் எப்போதும் ஆக்கரீதியாக, மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய துறையே நீதித்துறையாதலின், ஸ்படிக மணி தியானம் நீதித் துறையினர் குறிப்பாக நீதிபதிகட்கும் வக்கீல்களுக்கும் வலியுறுத்தப்படுகிறது.

நல்ல ரேகைகளும், நீரோட்டங்களும் கூடிய சுத்தமான, புனித ஸ்படிக மணிகளை மஞ்சள் நூலிலோ அல்லது வெள்ளிக் கம்பியிலோ கோர்த்து ஓர் இரவு முழுவதும் துளசி நீரினுள் அமிழ்த்தி வைத்திட வேண்டும். இதற்குத் துளசிவாசம் என்று பெயர் . இதனால் ஸ்படிக மணியிலுள்ள அசத்திய தோஷங்கள் நீங்குகின்றன. கோபம், குரோதம், பகைமை காரணமாக எழுகின்ற எதிர் வினை சக்திப் படிமங்களைத் துளசி ஜலவாசமே போக்குகின்றது. மேலும் ஸ்படிக மணிக்குச் சத்திய லோகத்திலிருந்து வீசுகின்ற சந்திரஹாஸ கதிர்களைக் கிரகிக்கும் தன்மை உண்டு. அதனால் எப்போதும் நேர்மை, சத்திய நிலைகளிலேயே மனம் ஒருமித்துச் செயல் பட ஸ்படிக மணிகளின் இந்தத் துளஸிவாச நிலை பெரிதும் உதவுகின்றது.

கங்கை, காவிரி, கோதாவரி, கிருஷ்ணா, தாமிரபரணி, வைகை போன்ற புனிதமான ஏழு புண்ணிய நதி தீர்த்தத்திலோ அல்லது இராமேஸ்வரம், காசி, திருவிடைமருதூர், ஸ்ரீ வாஞ்சியம், திருவெள்ளறை, திருப்பைஞ்ஞலி, திருக்கடவூர் போன்ற திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களிலோ ஸ்படிகமணிகளை இடுதல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதனால் ஸ்படிக மணிகளின் தியான ரேகைகள் ஸ்திரப்படுத்தப்பட்டு மேன்மை அடைகின்றன.

திருச்சி உய்யக்கொண்டான் மலையிலுள்ள எண்கோணக் கிணறு தீர்த்தம், திருச்சி - அன்பில் அருகிலுள்ள ஸ்ரீ காயத்ரீ தீர்த்தம், திருவானைக் கோயில் மூலஸ்தானத்தில் பெறுகின்ற தீர்த்தம், மதுரை பழமுதிர்ச்சோலையிலுள்ள ஆகாச கங்கை, திருச்செந்தூரிலுள்ள நாழிக் கிணறு தீர்த்தம் போன்றவற்றையும் சேர்த்தலால் ஸ்படிக மணிகளிலுள்ள கோணங்கள் தீர்க்கம் பெற்று பேராசை மற்றும் பணத்திற்கு அடிமையாகாத நல்ல ஸ்திரமான தியான நிலையையுடைய மனோநிலையைத் தருகின்றன.

இவ்வாறாக,  ஸ்படிகமணி தியான முறையில், ஸ்படிகமணிகளை ஓர் இரவு முழுவதும் துளசி நீரில் வைத்திடல் வேண்டும், துளசி நீரை இரும்புப் பாத்திரத்தில் வைக்கக் கூடாது. மா, பலா, தேக்கு, சந்தனம், சுரைக்குடுவை போன்ற மரப்பாத்திரங்கள் மட்டுமே இதற்குச் சிறப்புடையவை. வசதியுடையோர் பொன் அல்லது நவரத்னங்கள் இழைத்த கிண்ணத்தை வைத்துக் கொள்ளலாம். தங்கம் மற்றும் நவரத்தினக் கற்களுக்குத் தெய்வீக மந்திரங்களைக் கிரகிக்கும் தன்மை அதிகம் என்பதை நாம் பன் முறை விளக்கியுள்ளோம்.

கம்பளிப் பீடம்:
இரண்டாம் நாள் ஸ்படிக மணிகளைத் துளசி நீரிலிருந்து எடுத்துப் புதிய பருத்தி அல்லது கம்பளி ஆடையால் நன்கு துடைத்து, வில்வ இலைகளை ஒரு சிறு கம்பளி ஆடையில் பரப்பி அதன் மேல் ஸ்படிக மணிகளை வைத்திட வேண்டும். பட்டிருப்பின் அதனையும் வைத்திடலாம். இத்தகைய கம்பளிப் பீடத்தின் மேல் ஸ்படிக மணிகளை இரண்டு நாட்கள் தொடர்ந்து வைக்க வேண்டும். நவராத்திரி கொலு பொம்மைகளைப் போல் நாம் இம்மணிகளை அசைக்கவோ, எடுக்கவோ கூடாது.

கடல் தீர்த்த அபிஷேகம்

அகத்தியான்பள்ளி, வேதாரண்யம், இராமேஸ்வரம், கோடிக்கரை, பூரி, சேதுக்கரை, கன்யாகுமரி, பூம்புகார் (காவிரிப்பூம்பட்டினம்) போன்ற புனித மிக்க சமுத்திரத் தலங்களிலிருந்து கடல் நீரை ஒரு மண் குடத்திலோ அல்லது மண் குப்பியிலோ எடுத்து வந்து நான்காம் நாளன்று ஸ்படிக மணிகளுக்குக் கடல் நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். ஸ்ரீஅகஸ்தியரின் தியானத்துடன் சமுத்திர தேவதைகளின் ஆசி வேண்டி ஸ்படிக மணிகளுக்கு ஆறு வேளையும் அபிஷேகம் செய்து, தாம் அறிந்த இறைத் துதிகளை ஓத வேண்டும்.

அதன் பின்னர் ஸ்படிக மணிகளைத் தூய பருத்தித் துணியில் நன்கு துடைத்துப் பூரண கணபதியைத் தியானித்து 1008 முறை ஜபித்து, குலதெய்வம், இஷ்ட தெய்வம், கிராம, எல்லை தெய்வ மூர்த்திகளை நன்கு வேண்டி ஸ்படிக மணிகளை மாலையாக அணிந்திடலாம். இவ்வாறாகப் பல எளிய சித்த ஆகமங்களுக்கு உட்படுத்தப்பட்டு, புனிதமாக்கப்பட்ட ஸ்படிக மணிகளே தியானத்திற்கு மிகவும் ஏற்புடையவை! குறிப்பாக சத்திய, தர்ம பரிபாலனம் நிகழ வேண்டிய நீதித் துறைக்கு இதுவே சித்புருஷர்கள் அளிக்கின்ற பூரண கணபதி ஸ்படிக மணி தியான முறையாகும்.

தினசரி தியானம் :
நீதிபதிகளும், ஏனையோரும் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் நீராடி, தூய உடைகள், குறிப்பாக வெண்ணிற ஆடைகளைப் பஞ்சகச்ச முறையில் அணிந்து ஸ்படிகமணி மாலையை அணிந்து பூரண கணபதி நாமத்தை 1008 முறை ஜபித்திட வேண்டும். மிகவும் கடுமையான, பல சிக்கல்கள் உள்ள வழக்குகளானால், இரவு படுக்கும் முன்னர் ஸ்படிகமணி மாலையை அணிந்து பூரணகணபதியைத் தியானித்து உறங்கிடில் பொழுது விடிந்ததும் வழக்குகட்கு நியாயமான தீர்வு தீர்க்கதரிசனமாகத் தோன்றிடும்.

ஒவ்வொரு முறையும் தியானம் செய்து முடிந்தவுடன் ஸ்படிக மணியை (மாலையை) அவிழ்த்துச் சந்தனப் பெட்டியிலோ அல்லது கம்பளிப் பீடத்திலோ வைக்க வேண்டும். சந்தனப் பெட்டி ஆயின் எப்போதும் மல்லிகை மலர்கள் இருக்குமாறு வைத்திட வேண்டும்.

ஸ்படிக மணி தியான பலன்கள் :

நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் இத்தியான முறை ஆன்மீக முறை பல வழிகளில் உதவுகின்றது.

இவ்விதத் தியானத்திற்குப் பிறகு,

1, எந்த வழக்கை எடுத்துக் கொள்ளலாம் அல்லது விட்டு விடலாம் என்ற தீர்க்கமான முடிவு தோன்றும். ஆனால் பொருளுக்கு ஆசைப்பட்டு எந்த வழக்கையும் மனசாட்சிக்கு விரோதமாக ஏற்கக் கூடாது.

2. இத்தியான முறையைத் தினந்தோறும் குறித்த நேரத்தில் பயின்று வந்தால் நியாயமான, தர்மரீதியான முடிவுகளே நிச்சயமாக நடைமுறைக்கு வரும். 
3. வழக்குகளில் எத்தகு குழப்பங்கள் இருப்பினும் தெளிவான தீர்வு கிட்டும்.

பிற மதத்தினர்கள் அவரவர் மத நம்பிக்கைக்கேற்ப அல்லா, ஏசு, மேரிமாதா, அக்னி பகவான், புத்தர், மஹாவீரர் என எந்தத் தெய்வத்ததையும் இத்தியான முறையில் வழிபட்டிடலாம். இறைவன் ஒருவனே! அவனே அனைத்து வடிவிலும் விளங்குகின்றான். உள்ளும் புறமும் அவனேயாகி ஒளிர்கின்றான்! அவன் படைப்பில் ஜாதி, மதம், குலம், இனம், ஆண், பெண், மனிதர்கள், தாவரங்கள் என்ற பாகுபாடு கிடையாது. அனைத்தும் அவனே!

மகா சிவராத்திரி

திருஅண்ணாமலை மஹாசிவராத்திரி மகிமை
வேண்டுதல் வேண்டாமை வேண்டுமா?
"இறைவா! உன் நினைவோடு வாழ அருள்புரிவாயாக!'' என்றோ ''சர்வேஸ்வரா! அடியேனுக்குச் சற்குருவை அளிப்பாயாக!'' என்றோ உத்தமநிலை வேண்டிடும் பிரார்த்தனைகளுக்கு அருணாசல கிரிவலம் எந்நேரமும் புனிதமுடையதே!
ஆனால் ''எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்!'' 'என் பெண்ணிற்குத் திருமணம் ஆகவேண்டும்'' என்ற லெளகீகமான கிரிவலப் பிரார்த்தனைகளுக்கு, சுயநலம் நிறைந்த வேண்டுதல்களுக்கு அவை நிறைவேறுவதற்கான சில கால நேரங்கள் அளிக்கப்படுகின்றன. காரணம், வேலை கிடைக்காமை, திருமணம் நடைபெறாமை போன்ற பிரச்னைகளுக்குப் பூர்வ ஜென்ம கர்மவினைகளே காரணம் என்பதில் ஐயமில்லை அல்லவா! இவற்றிற்குரிய கர்ம வினைகள் கழிந்தால்தான், அவையவை நிறைவேறுவதற்கான அருள் கிட்டும் என்பதும் இறை நியதிதானே! ஆனால், திருஅண்ணாமலை, திருவிடைமருதூர்,  இராமேஸ்வரம், வாரணாசி போன்ற புனிதத் தலங்களில் கர்மவினைக் கழிப்பிற்கான எளிய தெய்வீக முறைகளும், இறை நியதியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன,
அதாவது சுருங்கச் சொல்லிடில், சில துன்பங்களை அனுபவித்துக் கழித்தால்தான், அதனால் தடைபட்டுள்ள காரியங்கள் நடக்கும் என்ற நிலையில் சில தெய்வீகத் தலங்களின் மஹிமையால், அனுபவித்துக் கழிக்க வேண்டிய துன்பங்களின் அளவு குறைக்கப்படுகின்றது அல்லதுபிராயசித்தம் அளிக்கப்படுகின்றது. இவ்வாறாக, உலக வாழ்க்கையின் அனைத்துத் துன்பங்களையும் தீர்க்கவல்ல அருணாசல கிரிவலத்தில் கர்மவினைக் கழிப்புகள் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன. இறைவனே மலையாக, சுயம்புமலையாக, மிகப் பெரிய சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருப்பதால் விண்ணுலகங்களிலிருந்து கோடானுகோடி சித்தர்களும், மஹரிஷிகளும் எப்போதும் இங்கு  கூடியிருப்பதால் இங்கு காற்று மண்டலமே புனிதமாக விளங்குகின்றது. பூமியின் காந்த சக்தி குறைவாக உள்ள இடங்களில், பளு (Weight=mg) குறைந்து காணப்படுவது போல், புனிதத்தன்மை நிறைந்த திருஅண்ணாமலையில் கர்மவினைகளின் பளுவும் குறைந்து விளங்குவதால், பிராயசித்த அம்சங்கள் நிறைந்த வழிபாடு இங்கு  மிகுந்துள்ளது.

வெறுமனே திருஅண்ணாமலையைச் சுற்றி வலம் (கிரிவலம்) வந்தால் மட்டும் போதுமா? கிரிவலம் எவ்வாறு அற்புதங்களை நிகழ்த்துகின்றது? ''ஸ்ரீஅகஸ்திய விஜயம்'' பிறந்ததே திரு அண்ணாமலையின் கிரிவல மஹிமையை உலகெங்கும் பரப்பத்தானே! எத்தனையோ சித்தர்களும் மஹான்களும் செய்து வருகின்ற இவ்வரிய அறப்பணியை, குருவருளால் இயன்ற அளவு தொடர்கின்றோம்! திருஅண்ணாமலை உங்களுடைய  கண்களுக்கு வெறும் கல் மலையாகத் தோன்றாது,  இப்பிரபஞ்சத்தின் ஆன்மீக ஜோதிமலையாக நீங்கள் ஆத்மார்த்தமாக உணர்ந்திடில்தான் ஸ்ரீ அகஸ்திய விஜயத்தின் இறைப்பணி செம்மையாகும்.
மகா சிவராத்திரி, மாசிமகம், கார்த்திகை தீபம், பெளர்ணமி தினங்கள் போன்ற மிகவும் விசேஷமான தினங்களில் பல கோடி தேவாதி தேவர்களும், காரிய சித்திக்கான நல்தேவதைகளும், தர்ம தேவதைகளும்  பிரசன்னமாகி ஜீவன்களுடைய கர்மவினைகளைத் தம்முள் ஏற்றோ  அல்லது வினைகளின் கடுமையைத் தணித்தோ அருள்பாலிப்பதால், தீவினைகளின் கடுந்தன்மை குறைந்து, கர்மவினை கழிதல் கடுமை  சுலபமாகி, காரியசித்திக்கான தடங்கல்களும் நீங்குவதால் இச்சிறப்பான நாட்களில் கிரிவல மகிமை பெரும் மகத்துவத்தைப் பெற்றுள்ளது.

அபிராமி பட்டரின் இதயபூர்வமான பக்தியை மெச்சி, இறைவன் அமாவாசைத் திதியில் அதி அற்புத ஒளியோடு சந்திரனைப் பிரகாசிக்கச் செய்தான் அல்லவா! இதைப்போல சாதாரண நாட்களில் உளமாற ஆத்ம சுத்தியுடனும், இறைவன் மேல் அன்புப் பெருக்குடனும், கிரிவலத்தை மேற்கொண்டால், இறைவனே மனமுவந்து,  கால வர்த்தமான நேரத்திற்கு அப்பாற்பட்டதாக விண்ணவர்களே போற்றும் வண்ணம் மிகச் சிறந்த பலன்களை நல்குவார்.

மகாசிவராத்திரி மகிமை

தீபாவளிப் பெருவிழாவைப் போன்றே மஹாசிவராத்திரி தோன்றியமைக்கான பல புராண நிகழ்ச்சிகளுண்டு. அதாவது பல்வேறு புராண, தெய்வீக வைபவங்கள் மாசிமாத சிவராத்திரியான மஹா சிவராத்திரியன்று நிகழ்ந்துள்ளன! பராசக்தியாம் ஸ்ரீ பார்வதிதேவி சிவராத்திரி இரவுகளில் கடுந்தவமிருந்து, பூஜைகள் பல செய்து ஆதிசிவனை வழிபட்டுப் பல தெய்வாவதார ரூபங்களைப் பெற்றனள்.

இறைவனின் அடிமுடி காணும் புராண சம்பவத்தில் இறைவனின் சிரசினை தரிசித்ததாக அசத்யம் உரைத்தமையால் ஸ்ரீ பிரம்மாவிற்குத் தனிக்கோயில் அமையாதென சாபம் பெற்றாரல்லவா! இதற்கு இறைவனே அளித்த பிராயசித்தமாக ஸ்ரீ பிரம்மதேவரே மானுடஉருவெடுத்து ஊண், உறக்கமின்றி. கடுந்தவமிருந்து பல இன்னல்களுக்கு ஆட்பட்டும் மனோதைர்யத்தை இழக்காது, பல சிவத்தலங்களிலும் பிரம்மோத்சவங்களை முறையாகக் கடைபிடித்து, கோடிக் கணக்கான புண்ய தீர்த்தங்களில் நீராடி இதன் இறைத் தவப்பலனாய் திருஅண்ணாமலையில், அடிஅண்ணாமலையில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சாப நிவர்த்தி பெற்றார். இதற்காகப் பலகோடி யுகங்கள் சிவராத்திரி விரதங்களை நன்கு கடைபிடித்துப் பலருக்கும் இதன் மஹிமையினை எடுத்துரைத்தார்.

திருக்காட்டுப்பள்ளி திருத்தலம்

இதன் பயனாகத்தான் எப்போதும் எந்நேரமும் ஸ்ரீ லிங்கோத்பவரை தரிசித்து, பூஜித்து வழிபடும் பாக்யத்தைப் பெற்றார். இதன் பிறகே, ஸ்ரீ பிரம்மாவிற்குத் தனிக் கோயில் கிடையாது என்ற நிலை மாறி, வேதமூர்த்தியாக, நான்மறைக் காவலனாக சிவபெருமானுடைய இடக் காதில் சூட்சுமமாக உறையும் பாக்யத்தைப் பெற்றதோடு அனைத்து சிவாலயங்களிலும் ஸ்ரீபிரம்மா கோஷ்ட மூர்த்தியாக, பொதுவாக மூலஸ்தான லிங்க மூர்த்திக்கு இடப்புறம் கோமுகத்தின்மேல் அமையும் பெரும் பாக்கியத்தைப் பெற்றார்.

மூலவரைச் சுற்றியுள்ள மூர்த்திகளுக்கு குறிப்பாக கோஷ்ட மூர்த்திகளுக்கு காரிய சித்தியைத் தரும் தெய்வீக சக்திகள் நிறைந்து விளங்குகின்றமையால் ஸ்ரீ பிரம்மமூர்த்திக்கு இறைப் பரம்பொருள் தாமாகவே இத்தகைய ஸ்தானத்தை அளித்துள்ளார். ஸ்ரீ பிரம்ம மூர்த்தி இத்தகைய பெரும் பாக்கியத்தைப் பெற்ற இடம் தஞ்சாவூர் அருகே உள்ள திருக்காட்டுப்பள்ளி சிவத்தலம் ஆகும். மாத சிவராத்திரி மட்டுமல்லாது பல கோடி யுகங்களாக மாசிமாத மகா சிவராத்திரியின் போதும் இறைவனை முறையோடு வழிபட்டமையால் ஸ்ரீ பிரம்மதேவர் ஸ்ரீ லிங்கோத்பவரின் பரிபூரண தரிசனத்தைப் பெற்ற இடமே திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் சிவத்தலமாகும்.

இங்கு, இன்றும் எந்நேரமும் ஸ்ரீ லிங்கோத்பவரின் தியானத்திலேயே ஆழ்ந்து, ஸ்ரீ பிரம்மமூர்த்தி சூட்சும ரூபத்தில் பூஜிப்பதால் ஈசுவர ஆண்டில் இத்திருத்தலத்தில் மாசிமாத மகா சிவராத்திரியைக் கொண்டாடுவதால் பெறற்கரிய பலன்களைப் பெற்றிடலாம்.

நைசர்கிக பலகிரணங்கள் :

தினந்தோறும் திருஅண்ணாமலையில் பலவிதமான அக்னி கிரணங்களும். ஜோதிப் பரிமாணங்களும் உருவாகின்றன. ஏற்கனவே பன்முறை ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் விளக்கியிருப்பது போல பரவெளியில் உள்ள சூரியன், சந்திரன் மற்றும் அனைத்துக் கோளங்களும் கோடானுகோடி நட்சத்திரங்களும் வெளியிடும் ஒளிக்கும் மூலமாக அமைவதே திருஅண்ணாமலையாகும்.
மகா சிவராத்திரி அன்று திருஅண்ணாமலையின் மலைத் திருமேனியிலிருந்து நைசர்கிக பலகிரணங்கள் எனும் விசேஷமான ஒளிக் கிரணங்கள் வெளிப்படுகின்றன. இவை மிகவும் சக்தி வாய்ந்த ஒளிக்கிரணங்கள் ஆதலின், பலகோடி சூரிய பிரகாசத் தன்மையும் கொண்டவையாம்.

மூலிகையை அறிந்தாலோ...

திருஅண்ணாமலைமேல் எண்ணற்ற அற்புதமான மூலிகைகள் காணப்படுகின்றன. ஆனால் காரண காரியமின்றி, அதிலும் குறிப்பாக தெய்வீகப் பிரார்த்தனை இருந்தாலன்றி இறைவனின் உடலாக விளங்கும் இம்மலைமேல் ஏறுதல் கூடாது என்பது நியதி அல்லவா! அப்படியானால் இம்மூலிகைகளினால் யாது பலன்? கொல்லி மலை, திருநீர் மலை, தங்கால் , பொதியமலை, செஞ்சி மலை போன்ற பல இடங்களில் மூலிகைகள் நிறைந்து காணப்பட்டாலும் அந்தந்த மூலிகைக் குரிய தேவதா மூர்த்திகளை வணங்கி, உரிய கட்டு மந்திரங்களை அவிழ்க்கும் மந்திர உபாயம் அறிந்தால்தான் எந்த மூலிகையையும் நன்கு பயன்படுத்த முடியும்.

கலியுகத்தில் கூட இக்கடுமையான நியதிகள் தொடர்கின்றன. 'கண்ணெதிரே கற்பகத் தருவாய் மூலிகைகள் கிடக்க அவற்றை மனிதர்களால் பயன்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுகின்றதல்லவா! இதனால்தான் வண்டாடி சித்தர்கள், பஞ்சணை சித்தர், பாலூட்டி சித்தர், பாறை ஊதி சித்தர், லிங்கம் சுமந்தான் சுவாமி சித்தர், கழல் மணி சித்தர் போன்ற சித்தர் பெருமான்கள் திருஅண்ணாமலை தலத்தில் உள்ள மூலிகைகளின் சக்தியானது அனைவரையும் சென்றடைய வேண்டி கடுந்தவமிருந்து இறைவனைப் பிரார்த்தித்தார்கள். மூலிகைகளின் அதிபதி நாயகரே ஸ்ரீ அகஸ்திய மஹாபிரபு ஆவார். அனைத்து சித்புருஷர்களும் ஸ்ரீ அகஸ்தியரின் தலைமையில்தான் இயங்குகின்றனர்.

மேற்கண்ட சித்தர்களின் அரிய இறைப்பணி மூலிகைத் துழாய்ப் பரிதி வகையைச் சேர்ந்ததாகும். அதாவது மனிதர்களின் அறிவிற்கெட்டா, வரம்பிற்குட்படா, மூலிகைகளின் அற்புத சக்திகளை சூரிய (பரிதி), சந்திர கிரணங்களின் அருண, அமிர்த சக்திகள் மூலம் காற்றில் கலந்து கிரிவலம் வருகின்ற அடியார்களின் உடலில் படிந்து அருள்பாலிக்கச் செய்வதே மூலிகைத் துழாய்ப் பரிதி அறப்பணியாகும் . இவர்களில் வண்டாடி சித்தர்கள் என்ற வகையினர் அதி அற்புதச் செயல்களை எவ்வகையில் ஆற்றுகின்றார்கள்?

ஈஸ்வர ஆண்டு மஹா சிவராத்திரியன்று வண்டாடி சித்தர்கள் திருஅண்ணாமலையை வலம் வருகின்றனர், எந்த வடிவில் ? வண்டு வடிவிலா? இல்லை, இல்லை, முழு மனித ரூபத்தில், ஜடா முடி, தாடியுடன், ருத்ராட்ச மாலைகளுடன், ஆந்திர பாணியில் பஞ்சகச்ச வேட்டி தரித்து. ஆனால் வடிவமோ வண்டு அளவில்தான்! இவர்கள் வாலகில்யம் என்ற சூர்ய மண்டலத்தைச் சார்ந்த வகையினர். வாலகில்ய மஹரிஷிகள்தாம் சூரிய பகவான் தினமும் சப்தமி ரதத்தில் பவனி வருகையில் தேரில் அமர்ந்த வண்ணம் இறைத் துதிகளை, வேத மந்திரங்களை எப்போதும் ஒலித்து வருகின்றார்க்ள. சூரியனுடைய ஜீவசக்தியால்தான் உலகிலுள்ள அனைத்து ஜீவன்களும் தழைக்கின்றன என்பது நாம் அறிந்ததே. வாலகில்ய மஹரிஷிகள் அனைத்து வேதங்களையும் அறிந்த உத்தம் மஹரிஷிகள் ஆதலின் அவர்களுடைய வேத பாராயணத்தின் சக்தியே சூரிய கிரணங்களில் இழைந்து ஜீவசக்திக்கு ஆன்மசக்தியை அளிக்கின்றது. வண்டாடி சித்தர்களும், சூர்ய வாலகில்ய மண்டலத்தைச் சார்ந்தவர்கள் ஆதலின், இவர்கள் வேத, யந்திர, மந்திர, தந்திர சித்திகளில் சிறந்து விளங்குகின்றனர்.

வண்டு கண்டீரோ......!!

சில ஆண்டுகளுக்கு முன் கார்த்திகை தீப அன்னதானப் பெருவிழாவில் , நம் ஆஸ்ரமம் சார்பாக ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயம் அருகில் அன்னதானம் நடத்துகையில், கோயிலினுள் இடது புற மண்டபத்தின் அருகே, ஸ்ரீ சாமுண்டீஸ்வரி சன்னதி அருகில், ஆயிரக்கணக்கான தேனீக்கள் போன்ற வண்டுகள் திடீரென்று வந்து சுற்று ஆரம்பித்தன. அவற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பயத்தில் பலரும் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டனர், எஞ்சியோர் தங்கள் முகத்தைத் துண்டால் மூடிக் கொண்டு, மெதுவாக நகர்ந்தனர், இந்த எதிர்பாராத சம்பவம் பத்து பதினைந்து நிமிடங்களுக்கே நீடித்தது.
இது பற்றி நம் குருமங்கள கந்தர்வா, ஸ்ரீ - ல - ஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகள் அளித்த விளக்கமாவது : 
திடீரென்று வண்டினங்கள் ஓரிடத்தில் அலை பாய்ந்து மோதுவதற்குப் பலவிதமான விஞ்ஞானக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், திருஅண்ணாமலையார் ஆலயத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்திற்குத் தெய்வீகப் பின்னணி உண்டு. இதுபற்றி அடியேனுடைய சத்குருநாதர் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்த ஸ்வாமிகள் பல விளக்கங்களை அளித்ததுடன் சில சமயங்களில் ஆயிரக்கணக்கான வண்டுகள் மொய்க்கின்ற இடங்களில் அடியேனை மிகவும் தைரியமாக அழைத்துச் சென்று சில அற்புதமான சித்புருஷர்களின் தரிசனங்களைப் பெற்றுத் தந்துள்ளார். நீங்கள் குறித்த சம்பவத்தில் திரு அண்ணாமலையார் ஆலயத்தினுள் வண்டாடி சித்தர்கள் என்னும் பிரசித்தி பெற்ற சித்தர்கள் பிரவேசித்ததையே வண்டினக் கூட்டங்கள் சுட்டிக் காட்டுகின்றன. உண்மையான பக்தியோடு வண்டினங்களைச் சற்றும் இம்சை செய்யாது, பொறுமையுடன் அவற்றைத் தாண்டிச் சென்று பார்த்தீர்களானால், உங்களுக்கு வண்டாடி சித்தர்களின் அற்புதத் தரிசனம் கிடைத்திருக்கும். இதுவே இறைவனின் திருவிளையாடல்!

அடியேன் அடிக்கடி ஒன்றைச் சொல்லி வருவதுண்டு, உலகில் எல்லா நிகழ்ச்சிகளும் காரண காரியங்களோடுதான் நடை பெறுகின்றன, வண்டு கொட்டுவதற்கும், பையிலிருந்து காசு தவறி கீழே விழுவதற்கும், இன்றைக்கு இந்தச் சிறுவன் இப்போது நீல நிறச் சட்டையணிந்து இவ்வாறு கைகளை ஊன்றி அமர்ந்திருப்பதற்கும் கூட தகுந்த காரணங்கள் உண்டு. இதனை நீங்கள் மனதில் ஆழமாக பதித்தால்தான் ஒவ்வொரு வினாடியும், நாம் வாழ்வது இறைவனின் கருணையால்தான் என்பதை உணர்ந்திட முடியும். எனவே இன்று கோயிலில் வண்டுகள் பறப்பதைப் பொருட்படுத்தாது அமைதியுடன் இருந்தோர்க்கு மட்டும் வண்டாடி சித்தர்களின் தரிசனம் நிச்சயமாகக் கிடைத்திருக்கும்.

இத்தகைய வண்டாடி சித்தர்கள் திருஅண்ணாமலைக்கு அடிக்கடி வருகை தந்திடினும், ஈஸ்வர ஆண்டு மஹாசிவராத்திரியின் போது நிச்சயமாக அருணாசலத்தை கிரிவலம் வருவதைச் சித்புருஷர்களின் கிரந்தங்கள் பெரிதும் போற்றி விளக்குகின்றன. பிரளயத்தின் போதே மனுக் காலங்களும், லக்னங்களும், வாரங்களும், நட்சத்திரங்களும், 60 வருடங்களும் படைக்கப்பட்டன. அவற்றில் பல தெய்வாவதார மூர்த்திகள் தோன்றுகின்ற ஈஸ்வர வருடமே வண்டினங்களின் படைப்பிற்கு உகந்ததாக அமைந்தது. மேலும் வண்டு ரூபத்தில் பிருங்கி மாமுனிவருக்குக் கிட்டிய இறை லீலா அனுபூதிகளும் ஈஸ்வர ஆண்டில் தான் கிடைத்ததோடன்றி அன்னவர், அம்மையும் அப்பனுமே பரம்பொருளின் மொத்த உருவமென உய்த்துணர்த்த ஆண்டும் ஈஸ்வர ஆண்டே.

செந்தழல் பூ மஹிமை

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதுபோல வண்டாடி சித்தர்கள் மஹாசிவராத்திரி அன்று திருஅண்ணாமலையில் அக்னி பூர்வமாகத் தோன்றுகின்ற நைசர்கிக பல கிரணங்களின் தெய்வீக சக்தியை உலக ஜீவன்களுக்கு எடுத்தளிக்கும் வண்ணம் இறைப்பணி ஆற்றுவதற்காகவே திருஅண்ணாமலையை வலம்வருகின்றனர். .

 'செந்தழற் பூ' என்ற ஓர் அற்புதமான மூலிகை அருணாசலத்தில் உண்டு. இம்மூலிகைச் செடி பூக்கும் காலமே மாசிமாதம் ஆகும். சிவராத்திரி அன்று செந்தழற் பூக்கள் முழுதுமாக மலர்ந்து நைசர்கிக பலகிரணங்களின் தெய்வீக சக்தியைத் தன்னுள் ஈர்க்கின்றன. இவற்றில், வண்டாடி சித்தர்கள் அதன் புனிதமான சக்தியை பூலோக ஜீவன்களுக்கு ஏற்ற வகையில் வாயு பரிமாணங்களாக மாற்றுகின்றனர். இவ்வரிய கிரணங்கள் பலகோடி சூரியன்களை ஒன்று சேர்த்தாற் போல் மிகுந்த உஷ்ணமுடையவை. எனவே தான் பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமாகிய திருஅருணாசலத்தில் இறைவன் இக்கிரணங்களைத் தோன்றச் செய்கின்றான்.

மேலும் எவ்வாறு பல மலர்கள் சந்திர கிரணங்களை உண்டு மலர்கின்றனவோ, அல்லது சூரிய ஒளியைப் பெற்று பூக்கின்றனவோ, இதேபோல் செந்தழற் பூ மூலிகையானது அதி உஷ்ணக் கதிர்களினால்தான் புஷ்பிக்கின்றது. திருஅண்ணாமலையில் மஹாசிவராத்திரியில் கிரிவலம் வருவோர்க்கு, முன்வினை புண்ணியம் உள்ளோர்க்கு. வண்டு போல் பறக்கின்ற வண்டாடி சித்தர்களின் தரிசனம் நிச்சயமாகக் கிட்டும். பொதுவாக சித்தர்களும், மஹரிஷிகளும் அருணாசலத்தை மனித வடிவில் தான் கிரிவலம் வந்து இறை அனுபவத்தைப் பெற விரும்புகின்றனர் ஆனால் வண்டாடி சித்தர்கள் இதிலிருந்து மாறுபடுவதேன்?!

வண்டாடி சித்தர்கள், வண்டு போல் பறந்து, செந்தழற்பூ மூலிகையில் படிந்துள்ள மிகுந்த தெய்வீக சக்தி நிறைந்த நைசர்கிக பலகிரணங்களின் அற்புத சக்திகளை உறிஞ்சி வாயு மண்டலத்தில் நிரவுகின்றனர். இதுவே கிரிவலம் வருகின்ற அடியார்களின் உடலில் சேர்ந்து மகத்தான பலன் களை அளிக்கின்றனது. மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், சிந்தூரம், திருச்சூர்ணம், நாமம் போன்றவற்றை அவரவர் குடும்ப வழக்கிற்கேற்ப தரித்து, கிரிவலம் வந்திட இவ்வரிய சக்திகளை எளிதில் தேகத்தில்  பெற்றிடலாம்.

ஜீவசமாதிகளில் வண்டாடி சித்தர்கள்
திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையெங்கும் மலையைச்  சுற்றி ஆயிரக் கணக்கான சித்புருஷர்களின் ஜீவசமாதிகள் நிறைந்து  உள்ளன. தற்போது சிலவற்றில் மட்டுமே லிங்கப் பிரதிஷ்டையுடன், ஜீவசமாதி ஆலயங்கள் காணப்படுகின்றன. வண்டாடி சித்தர்கள், ஜீவசூட்சும சமாதி சுவாசக் கலைகளின் தெய்வீக சக்திகளில் பரிபூர்ண நிறைவைப் பெற்றவர்கள். மஹாசிவராத்திரியன்று இவர்கள் இத்தகைய ஜீவ சமாதிகளில் உள்புகுந்து வெளிவருகின்ற சூட்சுமத்தைப் பற்றி சித்த கிரந்தங்கள் பரிபாஷையில் விளக்குகின்றன. குருவருளுடன் அப்பரிபாஷை விளக்கத்தை பெற்று ஆனந்தித்திடுக.

"வண்டாடி சித்தர்கள் சித்தக் கீற்றுக்களின் மூலம் சமாதி கலை பூண்டு, உட்புகுந்து, பூசநிறை பாஷாணத்தால் ஜீவசமாதிக் கட்டுக்களை  அவிழ்த்து எப்போதும் அங்கு ஒளிரும் சித்தஜோதியை வெளிக் கொணர்ந்து, வாயு ரூபமாய்ப் பரவெளியை தழுவி மஹேசன் சேவையைப் புரிகின்றனர்."

எனவே மஹாசிவராத்திரியன்று திரு அண்ணாமலையை கிரிவலம் வருவோர்க்குக் கிடைத்தற்கரிய தெய்வீகப் பேரருள் பக்தர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. ஆழ்ந்த நம்பிக்கையுடன் இதை கடைபிடிப்போர்க்கு பல விசேஷமான பலன்கள் கிட்டுகின்றன.

மஹாசிவராத்திரி திருஅண்ணாமலை கிரிவலப் பலன்கள்

1. நீதித்துறையைச் சேர்ந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் போன்றோர்க்கு நியாயமான பதவி உயர்வுகளையும், சீரான புகழையும் அளிப்பதுடன் தர்மம், சத்யம் தவறாது நடப்போர்க்கு உரிய தார்மீக ரீதியான கீர்த்தியும், விருதுகளும், பதவிகளும் கிட்டும்.

2. ஜீவசமாதிகளிலும் பாவசமாதி,  நிர்விகல்ப தந்த்ர சமாதி, பாலசமாதி, ஜீவாமிருத சமாதி என்றவாறாகப் பலவகைகள் உண்டு. மஹாசிவராத்திரியன்று வண்டாடி சித்தர்களால் ஜீவசமாதியிலிருந்து  வெளிப்படும் சூட்சும அருட்கதிர்களின் தெய்வீக சக்திகள் கிரிவலப்பாதையில் கூடுகின்றன.

3. கல்வித்துறையைச் சார்ந்தவர்க்கும், மின் அணுத் துறையினருக்கும் பல மேன்மைகளைத் தரவல்லதாகும்.

4. பல குடும்பங்களில், கணவன் தன்னுடன் அன்புடன் இருப்பதில்லையே என்று ஏங்குகின்ற மனைவியின் ஏக்கம் நீங்கிட மஹாசிவராத்திரியன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வந்திட கணவனிடம் நல்ல திருப்பத்தைக் கண்டிடலாம்.

5. கொடுத்த கடன்கள் திரும்பி வராததால் நொடித்திருப்போர் பலருண்டு. இதற்குரிய பூர்வ கர்ம வினைகளைப் பற்றி சற்றே அலசுவோமானால்

i). பெண்கள் தங்கள் முடியை அழகுக்காகக் கத்திரித்தல் கூடாது. தற்காலத்தில் ஒப்பனைக்காக முன் தலைமுடியைக் கத்திரிப்பதாலும்

ii). மளிகை வியாபாரத்தில் எண்ணெய்க் கலப்படம் செய்வதாலும்

ii). பிறருடைய சொத்துக்களை அபகரித்தல், அலுவலகப் பொருட்களை இல்லங்களுக்கென பயன்படுத்துதலாலும்.

வேறு பல காரணங்களாலும் கணவனின் ஆயுள் குறைவதுடன், பெரும் கடன் சுமைகளும் வந்து சேரும். கொடுத்த பணமும் திரும்பாது. இதற்கு நிவாரணமாக மஹாசிவராத்தியன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து ஏழைகளுக்கு எண்ணெய் தானமளிக்க வேண்டும்.

வெயிலும் மழையும்

வெயிலும் மழையும் கலந்திடும் அற்புதம்
சில சமயங்களில் மழை பெய்யும் போதே வெயிலும் சேர்கின்ற அதிசயக் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். எதுவும் காரண காரியமின்றி நடப்பதில்லை என்பதை விளக்கி வந்துள்ளோமல்லவா, வெயிலின் ஊடே மழை பெய்தலுக்கும் எத்தனையோ ஆன்மீகக் காரணங்கள் உண்டு.
வெயிலுடன் மழை பொழிகையில் ''அசுருந்தினி' என்ற தேவதைகள் பிறப்பெடுக்கின்றன, வாயு மண்டலத்தில் உருவாகும் இவை, கண்ணுக்குத் தெரியாத தேவதைகளாகும். நெல்லை மூடி வைத்தாலும் கூட எவ்வாறு அதன் புழுக்கத்தின் வெப்பத்தில் பூச்சிகள், வண்டுகள் உருவாகின்றவோ, அதே போல், வெயிலும் மழையும் சேர்கையில் தான் இந்த அசுருந்தினி தேவதைகள் தோன்றுகின்றன. எவர்களெல்லாம் பித்ரு சாந்தியைப் பெறவில்லையோ, அவர்களை இந்த அசுருந்தினி தேவதைகள் தாக்கி, பலவிதமான நோய்களை உருவாக்குகின்றன. இதனால் எடுத்த காரியம் தடைபடுவதோடு எவ்வித சம்பந்தமும் இல்லாத, இடைத் துன்பங்கள் வெவ்வேறு கோணங்களில் தோன்றி, பிரச்னைகளை அதிகப்படுத்துகின்றன.
இதனால்தான் அக்காலத்தில் பெரியோர்கள், வெயிலும், மழையும் சேர்ந்து வருமானால், அதற்குரிய சகுன இலக்கணங்களை ஆராய்ந்தே செயல்படுவார்கள், எனினும் யாரொருவர், அமாவாசைத் தர்ப்பணங்கள், சிரார்த்தம், திவசம் போன்றவற்றை முறையாகச் செய்கின்றார்களோ, அவர்களுக்கு 'அசுருந்தினி' தேவதைகளால் பல புதிய அனுக்ரஹ சக்திகள் ஏற்படுகின்றன. எனவே வெயிலும் மழையும் கூடுவதை நல்லதல்ல என்று எண்ணிடலாகாது. வெயிலும், மழையும் சேர்கையில் தோன்றிய அம்பிகையே "ஸ்ரீ மந்திரிண்யம்பா” தேவியாள்.

ஒருமுறை, பஞ்ச பூதசக்திகளைத் தரவேண்டும் என்று ஸ்ரீ வருண பகவானும், ஸ்ரீ சூர்ய பகவானும் ஸ்ரீ ஆதிபராசக்தியை வேண்டிக் கடுந்தவம் பூண்டனர். அம்பிகையானவள் தன்னை மழையால் வர்ஷித்து அபிஷேகிக்கும் படி வருண பகவானிடமும், ஒளி கிரணங்களால் தன்னை அபிஷேகிக்குமாறு ஸ்ரீ சூரிய பகவானிடம் கூறிட இருவரும் தங்கள் முழு சக்தியுடன் வழிபட, மழையும் வெயிலும் சேர்ந்து அம்பிகையின் திருமேனியில் வெள்ளமாய்ப் பொழியப் பெற்றனர்.

ஒரே சமயத்தில் கடும் உஷ்ணத்தில் கதிரவனின் கதிர்கள் பெய்ந்திட ஸ்ரீ வருண பகவானுடைய பலத்த மழைத் துளிகளும் பொழிந்திட... அம்பிகையின் உருவமே மாறலாயிற்று. சீதளமும், (மித வெப்பம் கலந்த தண்மை) குளுமையும் சேர்ந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்?

ஆங்கே ......

அற்புதமான வடிவெடுத்து அம்பிகை புதுப்பொலிவுடன் ஒரு புது அவதாரத்தை ஈசன் அருளால் பெற்றனள். இதைக் கண்டு ஆனந்தமடைந்த சூரியனும், வருணனும், பலவிதமான பூஜைகளால் வேத மந்திரங்களால், பல வகைகளில் அம்பிகையைப் போற்றித் தொழுதனர். கதிரவனின் உச்ச வெப்ப கிரணங்களால் காளியின் அம்சங்களையும், வருண பகவானின் பெருத்த மழைக் கதிர்களால் பராசக்தி அம்சங்களையும் பெற்ற அம்பிகையை அனைத்து தேவாதி தேவர்களும், மஹரிஷிகளும் பலவிதமான மந்திரங்களால் போற்றித் தொழுதனர். இந்த அம்பிகையே  'ஸ்ரீ மந்த்ரிண்யம்பா’என்ற நாமத்தைப் பெற்றனள்.

ஸ்ரீ மந்த்ரிண்யம்பா தேவியானவள் எவ்வாறு வெயிலும், மழையும் சேர்ந்த காலத்தில் அவதாரம் கொண்டாளோ அதே நிலையில் இன்றும் பல இடங்களில் அருள்பாளிக்கின்றனள். திருச்சி உறையூரில் ஸ்ரீ வெக்காளியம்மன் இன்றும் வெயிலோ, மழையோ எதுவாயினும் சரி, தம் சிரசிற்குமேல் எவ்வித கோபுரமும் இல்லாது, வெட்டவெளியில் தோன்றி அருள்பாலிக்கின்றாள்.

எனவே வெயிலும் மழையும் சேர்கின்ற அபூர்வ சம்யங்களில், ஸ்ரீ மந்த்ரிண்யம்பாவைத் தியானித்து வழிபடுதல் மிகவும் சிறப்புடையதாகும். ஸ்ரீ வெக்காளி அம்மனைப் போன்ற வெயிலோ, மழையோ எதையும் தாங்குகின்ற வகையில் அமைந்துள்ள அம்பிகையர் சக்தியை மிகவும் அதிகமாக வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக, வெயிலும் மழையும் சேர்கின்ற பொழுது இந்த அம்பிகையின் காலடியில் அமர்ந்து எத்தகைய இறைத் துதிகளையும் ஓதி, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவோருக்குக் கிட்டும் பலன்களை எழுத்தில்  வடிக்க இயலா அளவிற்கு மகத்துவம் வாய்ந்ததே இப்பூஜையாகும்.

வெயிலும் மழையும் சேர்கையிலான வழிபாடுகள்

மழை பெய்யும் போதே வெயில் அடிக்குமானால் இந்த அரிய வழிபாடுகளைக் கடைபிடிப்பது சிறந்ததென சித்புருஷர்கள் அருளியுள்ளனர்.
1. இச்சமயத்தில் உடனே நம் மூதாதையர்க்குத் தர்ப்பணங்களைச் செய்திட வேண்டும், அமாவாசையன்று தானே தர்ப்பணம் என்று எண்ணாதீர்கள்! முற்காலத்தில் தினந்தோறும் தர்ப்பணம் செய்கின்ற நற்பழக்கம் இருந்தது. நாளடைவில் இது மாறி விட்டது. ஆனால் இன்றும் தினமும் தர்ப்பணம் செய்வோர் இருக்கின்றனர். மழை நீரை நேராக வானிலிருந்து பெற்றுத் தர்ப்பணமிடுதல் மிகவும் கிடைத்தற்கரிய பாக்யம், அல்லது கங்கை / காவிரி போன்ற புனித நீரில் மழைத்துளிகளையேனும் சேர்க்க வேண்டும். அரைத்த சந்தனத்தை நீரில் கரைத்து இச்சந்தன நீரைக் கொண்டு இச்சமயத்தில் தர்ப்பணம் அளிப்பதால் பித்ரு சாபங்களுக்கு நிவர்த்தி ஏற்பட்டு சந்தான பாக்யம் கிட்டும்.

2. மேலே கூரை இல்லாத மூர்த்திகள் பலர் உண்டு. வெயிலும் மழையும் சேர்கின்ற நேரத்தில் இம்மூர்த்திகளுக்குக் கரும்புச் சாறு அபிஷேகமும் தேன் அபிஷேகமும் சேர்ந்து செய்திட வேண்டும். இதனால் தோல் சம்பந்தமான வியாதிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். கபால சம்பந்தமான நோய்கள், ஒற்றைத் தலைவலிகட்குத் தக்க நிவர்த்தி கிட்டும். இது மிகவும் அற்புதமான வழிபாடாகும்.

மழை எப்போது பெய்யும், வெயில் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்க முடியுமா?  உண்மையிலேயே ஆழ்ந்த நம்பிக்கை உள்ளோரும், பக்தி சிரத்தை உள்ளோரும் மழை பெய்கையில் இதற்குத் தயாராகவே இருப்பார்கள். அதாவது பாக்யம் உள்ளோருக்கு இது தானாகவே அமையும். மழையும் வெயிலும் சேர்கையில் உடனே இல்லத்தில் இருமுக விளக்கேற்றி ஸ்ரீமந்திரிண்யம்பாவைத் தொழுதிட வேண்டும். உதிரிப் பூக்கள் இருக்குமாயின் அவற்றை மழைத் துளிகளில் தோய்த்து ஸ்ரீமந்திரிண்யம்பாவைத் துதித்திடுக!

விடாமுயற்சி இல்லாமையால் பலர் எத்தகைய வேலையில் இருப்பினும் அது தங்குவதில்லை! அல்லது சிலருக்கு எந்த வியாபாரமும் செய்திடினும் நஷ்டமே தங்கும். இவர்கள் வெயிலும் மழையும் சேர்கின்ற தருணத்தில் விடாமுயற்சியுடன் மேற்கண்ட பூஜையைச் செய்திட நிரந்தர வருமானத்திற்கான நல்வழியைக் காணலாம்.

விஷயமறிந்த வேதவித்துகளும் பண்டிதர்களும் மழை பொழிகையில் எப்போது வெயில் வரும் என்று காத்துக் கிடப்பர். குறிப்பாக சாமவேதிகள் அதற்குரிய மந்திரங்களை ஓதுதற்குத் தயாராக இருப்பர். சுக்ல, யஜுர் மந்திரமறிந்தோர் இதற்குரிய பூஜைகள், தர்ப்பணங்களுக்காகக் காத்திருப்பர்.

நாமக்கல் ஆஞ்சநேயர், திருமானூர் (தஞ்சை அருகே) பெருமாள், மற்றும் பல லிங்க மூர்த்திகள், பிள்ளையார் உருவங்கள் வெட்ட வெளியில் அமைந்துள்ளன அல்லவா, இம் மூர்த்திகளையும் வெயில் மழை சேர்ந்த காலத்தில் பூஜிப்பதால் மகத்தான பலன்களைப் பெற்றிடலாம். ஒவ்வொரு மூர்த்திக்கும் உரித்தான பலன்கள் வேறுபடுகின்றன.

மஹாசிவராத்திரியில்அண்ணாமாலைகிரிவலம்

மஹாசிவராத்திரியில்  திருஅண்ணாமலையை எப்போது கிரிவலம் வந்தால் அதிக பலன்கள் கிட்டும்  என்று பலரும் கேட்கின்றனர். நொடிக்கு நொடி திருஅண்ணாமலையில் கிரிவல பலன்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. எந்த நேரத்தில் திருஅண்ணாமலையை  கிரிவலம் வந்தாலும் விஷேஷமானதே. நாள், திதி, நேரம் பாராது எப்போதும் எந்த நேரத்திலும் எவருக்கு எந்த நேரத்தில் திருஅண்ணாமலையை கிரிவலம் என்று விதிக்கபட்டுள்ளதோ அது நிச்சயமாக நிகழ்ந்தே ஆகவேண்டும் என்பது தெய்வ நியதி.
மிகவும் உயர்ந்த தெய்வீக நிலையில் விளக்க வேண்டுமானால் நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் போன்ற கால பாகுபாடுகள் அனைத்தும் ஜீவன்களின் கர்ம வினைகளின் தொகுப்பே ஆகும். காலத்திற்கும், கர்மவினைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதை அறிந்தவனே, பரிபூரணமாக உணர்ந்தவனே காலத்தைக் கடந்தவனாக,  மரணத்தை வென்றவனாக உத்தம இறைநிலையை அடைகின்றான். ஆனால் இதனை உணர்ந்திட ஒரு சத்குருவின் குருவருளைப் பெற்றாக வேண்டும்.

ஸ்ரீகிராதமூர்த்தி
கொறுக்கை கும்பகோணம்

திருவையாறு காட்டும் எளிய சாம்பிராணி தூப ஜப முறை

திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பன் ஆலயத்தில் ஸ்ரீ ஆட்கொண்டார் சன்னதியில் எப்போதும் சாம்பிராணி தூப நறுமணப் புகை இருத்தல் வேண்டும் என்பது இறை நியதி. கலியுகத்தில் எளிதில் காரிய சித்தியைத் தரவல்ல பல அறச் செயல்களில் மிகவும் மேன்மையானதான மிக எளிதில் முக்தியைத்  தரவல்ல தெய்வீகக் காரியங்களில் ஒன்றே,  தினந்தோறும் சாம்பிராணி தூபம் இடுவதாகும்,

மற்றவர்களெல்லாம் கரி, கற்பூரம், தேங்காய் நார், தீப்பெட்டி என்று சற்று சிரமப்பட்டு அக்னியை எழுப்பி சாம்பிராணி தூபம் இட வேண்டியதிருக்க, திருவையாற்றில் வாழ்கின்ற பக்தகோடிகள் மிகவும் பாக்கியம் செய்தவர்களாவர். எவ்வாறெனில் இங்குள்ள ஸ்ரீஆட்கொண்டார் சன்னதியின் எதிரே உள்ள குங்கிலியக் குழியில் எப்போதும் அக்னி இருந்து கொண்டேயிருப்பதால்,  திருவையாறு வாசிகள் இதன் வழியே செல்லும் போதெல்லாம் அல்லது திருவையாற்றில் உள்ள இல்லறவாசிகளாயினும் அரைமணி நேரத்திற்கு ஒரு முறையாயினும் நிறைய சாம்பிராணியை இதில் இட்டு வந்தால் எத்தனையோ நன்மைகளை கார்ய சித்திகளை எளிதில் பெற்றிடலாமே!

கோயிலில் இடும் சாம்பிராணி தூபமானது கோடி கோடியாய்ப் பலன்களைத் தரும். காரணம், சாம்பிராணி தூபமானது கோயிலின் வாயுமண்டலத்தை, பரவெளியைத் தூய்மை செய்வதால் அங்கு ஆண்டு முழுதும் வருகின்றவர்கள், மற்றும் அங்கு ஜீவிக்கின்ற உயிரினங்கள், தாவரங்கள், வாயு மண்டலத்தில் கண்ணுக்குத் தெரியாமல் வாழ்கின்ற மிக நுண்ணிய ஜீவிகள் போன்றவற்றிற்கு சாம்பிராணி தூபப் பலன்கள் சென்றடைவதால் இதன் மகிமை சொல்லவும் பெரிதே.

ஸ்ரீஆட்கொண்டார் சன்னதியில் இடப்படுகின்ற சாம்பிராணி தூபம் எவ்வளவு தூரத்திற்குப் பரவுகின்றதோ, அதன் ஆன்மீக சக்திக் கேற்ப எமவாதனையும், பயமும் தணியும் என்பதில் சற்றும் ஐயமில்லை. ஐயாறப்பன் சன்னதியில் ஐயத்துக்கு இடமேது? எனவே திருவையாற்றில் வாழ்கின்றவர்களே! தினந்தோறும் நிறைய சாம்பிராணியிட்டு தூபத்தை எழுப்புங்கள். இதில் மிகவும் ஆச்சரியகரமான அற்புதம் என்னவென்றால், இத்திருத்தலத்தில் வாழ்பவர்கள் எப்போதும் ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தை ஜபித்து வந்தால் அதனுடைய பலன்களோ எத்தனையோ பாவங்களைத் தீர்த்து நல்வழி காட்டுகின்றன! காரணம், சாம்பிராணி தூபத்திற்கு மந்திரங்களை கிரஹிக்கும் சக்தி நிறைய உண்டு என்பதாலும், ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தின் சக்தியை சாம்பிராணி தூபத்தின் மூலம் பலரும் நுகர்வதாலும் இதன் பலன், ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தை அறியாதோர்க்கும் கிட்டுமாறு செய்வதாலும் திருவையாறில் ஸ்ரீ காயத்ரீ மந்திரம் ஜபிக்கும் பாக்கியத்தைப் பெற்றால் பல உத்தம நிலைகளை எளிதில் அடைந்துவிடலாம்.

சாம்பிராணிக்கு நிறைய செலவாகுமே என்று யோசிக்காதீர்கள். எதற்கும் உதவாத காபி, டீ, சினிமா கேளிக்கைகளுக்காகச் செலவு செய்கின்ற உங்களுடைய செலவினங்களைக் கணக்கிட்டால், இங்கு எப்போதும் சாம்பிராணி தூபப்புகை எழுவதற்காக, நேரம் கிடைக்கும் போதெல்லாம், சாம்பிராணி இடுவதால் ஏற்படுகின்ற செலவு ஒரு பொருட்டல்லவே! எனவே திருவையாற்றுவாசிகள், அக்கம் பக்க ஊர்களில் உள்ள ஆன்மீகச் செல்வர்களும் மக்களும் தங்கள் வாழ்நாளில் கிட்டியுள்ள பெறற்கரிய இந்த அரிய தெய்வீக வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொண்டு எத்தகைய ஜென்மம் எடுத்தாலும், இந்த திருவையாற்றில் பிறப்போம் என்று என்ன நிச்சயம் என்று ஆத்மவிசாரம் செய்து,  இப்பிறவியின் திருவையாறு வாழ்வினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பாள்
திருவையாறு

ஸ்ரீஅதிதிட ரங்க சரபேஸ்வர மூர்த்தி
திருவையாறு

புகைபிடித்தல் ஒரு தீவினையே!

Chain Smokers எனப்படும் இடை விடாது புகைபிடிக்கின்ற பழக்கத்திற்குக் கேவலமாக அடிமையாகியுள்ளோர் தாங்கள் இதிலிருந்து விடுபடமுடியாது என்று எண்ண வேண்டாம். இவர்கள் திருவையாறு தலத்திற்கு வந்து ஸ்ரீ ஆட்கொண்டாரைப் பிரார்த்தித்து, குறைந்தது ஒரு பட்சமேனும் தங்கி தினந்தோறும் எப்போதும் இங்குள்ள குங்கிலியக் குழியில், சாம்பிராணி இட்டு வந்தால் ஒரு தீவிர வைராக்கிய மனோநிலை ஏற்பட்டு இக்கொடிய  பழக்கத்திலிருந்து மீள்வதற்கான நல்ல வழிகிட்டும்.

“புகை பிடிப்பவர்களே, நீங்கள் நன்கு படித்தவராக இருந்தாலும் கூட உங்கள் நுரையீரலுக்கு விஷத்தை ஊட்டுவது தற்கொலைக்குச் சமானமான கொடிய பாவமல்லவா?! இப்பழக்கத்தால் உங்கள் குடும்பத்திலேயே எத்தனை பேருடைய வெறுப்பிற்கு ஆளாகியிருக்கின்றீர்கள்? பத்தாயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் ரூபாயை, புகைவிட்டே எவருக்கும் பயனின்றி அழித்திருக்கின்றீர்களே? நீங்கள் உங்கள் ஆன்மாவைச் சுட்டெரித்தது போதாதென்று, Passive Smokers என்ற வகையில் அருகில் உள்ளோர்க்கு விஷத்தை ஊட்டுகின்றீர்களே? இயற்கையாகக் கடவுள் படைத்த காற்று மண்டலத்தில், விஷத்தைச் செலுத்தி அசுத்தப்படுத்துவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

கோடிக்கணக்கான மைல்களுக்கு விண்வெளியை மாசுபடுத்தும் கொடுமையை உங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டிருப்பீர்களா? எத்தகைய கொடிய தீவினைக் கர்மங்களை உங்கள் பரம்பரைக்கு சம்பாதித்துக் கொடுக்கப் போகிறீர்கள் ? இதற்குரிய நரக வேதனை என்ன தெரியுமா? கேட்கவே பயங்கரமான தண்டனைகள் காத்துக் கிடக்கின்றன? இன்னும் எத்தனை எத்தனையோ!

இத்தீவினைக்கான அற்புதமான பரிஹாரம் இங்கு குங்கிலிய தூபமாய் அளிக்கப்பட்டுள்ளது. எத்தனை ஆயிரம் சிகரெட்டுகளை ஊதி ஊதிப் பரவெளி பாழாக்கப்பட்டதோ அந்த அளவிற்கேனும் சாம்பிராணி தூபத்தை எழுப்பி வாயுமண்டலத்தைத் தூய்மை செய்தாக வேண்டும். இந்த பரிஹாரத்தை இப்போதே மேற்கொண்டால் தான் ஆத்ம சாந்திக்கு வழி காணமுடியும்!

ஸ்ரீதேனுபுரீஸ்வரர்

ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் – அட்டைப்பட விளக்கம்

பல கோயில்களின் ஸ்தல புராணங்களில் பசு தன் பாலைச் சொரிந்து  புற்றுக்கு அபிஷேகம் செய்திட அவ்விடத்தில். ஸ்வயம்பு மூர்த்தி எழுந்தருளியிருப்பதைப் பசு மூலமாக அறிந்ததைக் காண்கின்றோம். பல கோயில் தூண்களிலும் காமதேனு தன் மடிப்பாலால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யும் சிற்பங்களையும் சித்திரங்களையும் கண்டிருப்பீர்கள்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் பசு தன் காதுகளில் கங்கை நீரைக் கொண்டு ஸ்ரீ கோகர்ணேஸ்வரருக்கு (கோ=பசு, கர்ணம் =காது) அபிஷேகம் செய்த அற்புத வரலாற்றையும் அறிகின்றோம். இவ்வகையில் சென்னை - காம்ப்ரோடு - மாடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் பசுங் கொம்பு வடிவத்தில் அமைந்துள்ள சிவலிங்கம் பிரபஞ்சத்திலேயே  காணக் கிடைக்காத காட்சி! கும்பகோணம் அருகே ஸ்ரீ பட்டீஸ்வரத்திலும்  ஸ்ரீ தேனுபுரீஸ்வரராக ஆதிசிவன் அருள் பாலிக்கின்றார். பசுக்களின் தெய்வமூர்த்தியாகிய ஸ்ரீ காமதேனுவின் புத்ரியாம் ஸ்ரீ பட்டி தேவி பூசித்த  திருத்தலமிது!

சுபமங்கள் சகுனமே பசு தரிசனம்!

பட்டீஸ்வரம்

இவ்வாறாக, அனைத்து தெய்வ மூர்த்திகளையும், தேவதைகளையும் தன்னுள் உறையுமாறு அருள் பாலிக்கப் பெற்றுள்ள தெய்வீகப் பசுவானது மிகவும் சுபமங்களகரமானதாக அன்றும் இன்றும் என்றும் விளங்குகின்றது! அக்காலத்தில் கிரஹப் பிரவேசத்தின் போது கன்றுடன் கூடிய பசுவையே இல்லத்தினுள் முதலில் பிரவேசிக்கச் செய்வார்கள். அப்போது கோமேயமோ அல்லது சாணமோ அது இட்டிடில் மிகச் சிறந்த சகுனமாக அமைகின்றது. இன்றும் கூட அமாவாசை, திவச நாட்களில் வாழையிலை நிறைய அனைத்து உணவுகளையும் படைத்துப் பசுவிற்கு இடுவது மிகச் சிறந்த பித்ருப் பீரிதியாக விளங்குகின்றது. பசுஞ்சாணத்தினாலான விரட்டியே ஹோமத்திற்குப் புனிதம் தருகின்றது.
மாசி மகத்தன்று பசு வழிபாடும், ஸ்ரீ தேனுபுரீஸ்வர பூஜையும் மிகவும் சிறப்புடையதாகும், ஏனென்றால் ஊழிக் காலத்திற்குப் பின்னான முதல் சிருஷ்டியின் போது சிவபெருமான் ஸ்ரீ கிராதமூர்த்தியாக வேட அவதாரங் கொண்டு ஜீவ சிருஷ்டியைத் தொடங்கு முன்னர் திருமகளே பசுவாக முன் வர, இதுவே சுபமங்களமாயிற்று. பசுவாய் வந்த திருமகளுக்கு. ஸ்ரீ கிராத மூர்த்தியே அருட்பெருஞ் ஜோதியாய்,  ஸ்வயம்பு மூர்த்தியாய்க் காட்சியளித்தார். எனவேதான் ஸ்ரீ தேனுபுரீஸ்வரராக சிவமூர்த்தி எழுந்தருளியுள்ள தலங்களுக்கு ஐஸ்வர்ய கடாட்ச சக்தி அபரிமிதமாக இருக்கும். அப்பர் பெருமானுக்கு ஐஸ்வர்யமாம் முத்துக் கற்கள் நிரம்பிய பந்தலை ஈஸ்வரன் அளித்த தலம், ஸ்ரீதேனுபுரீஸ்வரர் அருள்கின்ற பட்டீஸ்வரம் அன்றோ!
மாசிமகத்தன்று. மாசி மகத்தன்று கும்பகோணத்தில் ஸ்ரீ மகாமகக் குளத்தில் நீராடி அன்னதானஞ் செய்து வழிபட வேண்டுமல்லவா! ஆனால் அனைவராலும் இதைக் கடைபிடிக்க முடியுமா? திரு அண்ணாமலையில் கார்த்திகை தீப மஹிமையை ஆண்டாண்டு காலமாக எடுத்துரைத்து வந்தும் சில லட்ச மக்களே இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டனரல்லவா! எவருக்குப் பிராப்தம் உள்ளதோ அவருக்கே இத்தகைய அற்புத வழிபாடு கிடைக்கும். எனினும் ஆரோக்யம், வறுமை, பிரயாணம் மற்றும் பல உண்மையான காரணங்களுக்காக கும்பகோணத்தில் மாசிமகப் புனித நீராடலை மேற்கொள்ள இயலாதோர் திரு அண்ணாமலையில் கிரிவலம் வருகையில், தெற்கு கோபுரத்திற்கு எதிரே வீதிமுனையில் வரும் கூட்டு ரோடு அருகே நின்று தரிசித்திட திரு அண்ணாமலையின் ஒரு முகடு கும்பம் போல் தோற்றமளிக்கும். இந்த கும்ப தரிசனத்தை, மஹாமக  தரிசனத்தைக் கண்டு வழிபட்டு அன்னதானம் செய்திடுவீர்களாக!

கும்பகோணத்திற்கோ, திருஅண்ணாமலைக்கோ செல்ல இயலாதோர் என் செய்வது? இதை நம் மூதாதையர்களும் உணர்ந்திருப்பார்கள் அல்லவா! இதற்காகத்தான் மாசி மகத்தன்று பல கோயில்களில் தீர்த்தவாரி நடைபெறுகின்றது! சுவாமி திருக்குளத்தில் புனித நீராடியோ அல்லது வலமோ / புரோட்சணமோ வந்து செய்து பக்தர்களுக்குத் தீர்த்தம் வழங்கப்படும்.

இதுமட்டுமன்றி ஸ்ரீதேனுபுரீஸ்வரர் அருள்கின்ற தலங்களில் மாசி மகத்தன்று ஸ்ரீ தேனுபுரீஸ்வரருக்குப் பசும் பால் அபிஷேகம் செய்து சிறுவர், சிறுமியர்க்குப். பால் தானம் அளிக்க வேண்டும். இதனால் திருமகளின் கடாட்சம் கிட்டுவதோடு வாழ்க்கையும் சுபிட்சகரமாக அமையும். காராம்பசுவின் பால் அபிஷேகம் மிகவும் விசேஷமானது. கறந்த பாலை அதன் இளஞ்சூடு ஆறுவதற்கு முன் அபிஷேகம் செய்தல் கிடைத்தற்கரிய பாக்யமாகும்! பொதுவாக மிகுந்த கடன்களால். அவதிப்படுவோர், வறுமையில் உழல்வோர், வியாபாரத்தில் பெருத்த நஷ்டங்களை அடைந்திருப்போர் மாசிமகத்தன்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் இதனைக் கடைபிடித்து வர பணக்கஷ்டங்கள் தீர்வற்கான நல்வழிகளை அடைவர்.

ஸ்ரீஆட்கொண்ட நாயகர்
திருவையாறு

ஸ்ரீ சாஸ்தா / ஐயப்ப பூஜை
தற்காலத்தில் இலட்சக் கணக்கான மக்கள் ஜாதி, இன, குலபேதமின்றி ஸ்ரீ சபரிமலைக்கு விரதமிருந்து செல்வது கண்டு பேரானந்தமடைகின்றோம். ஆனால் பூஜைக் குற்றங்களும் மலிந்திருக்கின்றன என்பது மிகவும் வேதனைக்குரியது. புகை பிடித்தல், புகையிலை போடுதல், கேளிக்கைகள், மதுபானங்கள், தீய சொற்கள் பேசுதல், கோபம் அறவே கூடாது. இதில் எது இருப்பினும் அது விரதத்திற்கு முரண்பாடானது.
கறுப்பு, நீல நிற ஆடைகளை மட்டுமே தரிக்க வேண்டும். புனிதமான துறவியர் மட்டுமே காவி உடை அணியலாம்,  ஒவ்வொரு விரதத்திற்கும் குறைந்தது ஒரு மண்டல விரதம் (48 நாட்கள்) இருக்க வேண்டும். ஒரு வருடத்தில் நான்கைந்து முறை விரதமிருந்து சென்றாற் கூட அது ஒரு முறை சென்றதாகவே கணக்கிடப்படும். 18 ஆண்டுகள் தொடர்ந்து, பெருவழிப்பாதையில் முறையாகச் சென்று ஜோதி தரிசனத்துடன் தான் பரிபூரணமான 18 ஆண்டுகளாக ஆகுமே தவிர ஒரு வருடத்திற்கு நான்கைந்து முறை சென்று விட்டு நான்கு வருடங்களில் 18 முறை சென்றதாகக் கணக்கிடுவது ஏற்புடையதல்ல! 18 ஆண்டுகளில் 18 ஜோதி தரிசனம் என்பதே முக்யமானது! இவ்வாறாக எத்தனையோ இறைநியதிகள் உள்ளன. ஸ்ரீ ஐய்யப்பனுக்கும், இருமுடிக்கும் இட்ட மாலைகளை வண்டி, கார்களில் மாட்டி அவை சாலையெங்கும் சிதறிப் பலர் கால்களில் மிதிபடுவது, வண்டிச் சக்கரங்களில் நசுங்குவதும் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
குருசாமி எனப்படுபவர் 18 ஆண்டுகளில் 18 ஜோதி தரிசனங்களைப் பெற்றவராக இருத்தல் வேண்டும். தம்முடைய நடைமுறை வாழ்க்கையில் எப்போதும் சீரிய ஒழுக்கத்துடன் வாழ்ந்து வருபவரே குருசாமி ஆகின்றார். குருசாமிக்கு ஜாதி, இன, குல, வேறுபாடு இருத்தல் கூடாது! அவர் இல்லறவாசியாக இருப்பின் விரதத்தின்போது கறுப்பு, நீல நிற உடைகளைத் தான் அணிதல் வேண்டுமே தவிர காவி நிற ஆடையணிதல் கூடாது. ஏனெனில் ஒரு முறை காவி அணிந்திடில் அதனை வாழ்நாள் முழுதும் மாற்றாது, சீரிய நல்ஒழுக்கத்துடன், கடுமையான பிரம்மச்சர்ய நியதிகளுடன், துறவி வாழ்க்கையே வாழ்ந்தாக வேண்டும். விரதத்தின்போது காவியும் பிறகு வேறு நிற ஆடைகள் எனில் காவியின் புனிதத்தை அவமதிப்பது போலாகும். இது பலரும் தற்காலத்தில் செய்து வருகின்ற மிகப் பெருந்தவறாகும். இந்நிலை நீடித்தால் அவரவர் தமக்குரிய சுயநியதிகளை விதித்துக் கொண்டு காவியின் புனிதத்திற்கே மாசு கற்பித்ததாகிவிடும். தெய்வீகப் பெருநாடான பாரதத்தில் அதிலும் கோயில்கள் நிறைந்து இறைமை ததும்பும் தமிழ்நாட்டில் காவியின் புனிதத்தை உரிய முறையில் கட்டிக் காத்துப் பேணுமாறு அனைவரின் தாள் பணிந்து வேண்டுகின்றோம்.

அமுத தாரைகள்

சிருங்க கிரி ஸ்ரீ நரசிம்மர் சேவை
கடலூர் அருகே உள்ள சிருங்க கிரியில் எழுந்தருளியுள்ள 16 புஜங்களையுடைய ஸ்ரீ நரசிம்மர் அதிஅற்புத சக்தி வாய்ந்தவர். கார்ய சித்தியைத் தர வல்ல கண்கண்ட மூர்த்தி! ஹிரண்யனின் மனைவிக்கு அருள்பாலித்த திவ்ய மூர்த்தி! கேட்கும் நல்வரந்தரும் கீர்த்தி மிகுமூர்த்தி! வரும் விஷ்ணுபதி புண்யகாலத்தை இத்திருத்தலத்தில் கொண்டாடி ஆனந்தித்திடும்படி பக்த கோடிகளை வேண்டுகின்றோம்.

எது சரி ?
பல குடும்பங்களில் இறந்தவரின் உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற குழப்பமேற்படும். பொதுவாக எரித்தலே சிறப்புடையதெனினும் இறந்தவரின் விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்வதே உசிதமானது. புதைத்து சமாதி எழுப்புதலோ, எரித்தலோ குறித்த இடத்தில் தகனம் செய்வதோ எதுவாயினும் சரி, இறந்தவரின் விருப்பத்திற்கேற்ப நடத்தி விடுங்கள். சமாதி எழுப்பப்பட்டுள்ள நிலத்தையோ, கட்டிடத்தையோ வேறு எவரும் வாங்குதல் கூடாது.

டாக்டர்கள் புகழ்பெற...
எத்தனையோ டாக்டர்கள் நன்கு படித்திருந்தும் வாய்ப்பு, பணவசதி  இல்லாமையாலும், மேலிடத்துத் தொடர்பு இல்லாமை, அதிர்ஷ்டமின்மையாலும் தம் துறையில் பிரகாசிக்க இயலாமல் மிகுந்த மனக் கவலைகளுக்கு ஆட்படுகின்றனர். ஈஸ்வர ஆண்டு கும்பகோணத்தில் மாசி மக நீராடுதல் வைத்தியர்களுக்கு மிகவும் முக்கியமான தாகும். வரும் மாசி மகத்தன்று டாக்டர்கள் மஹாமகக் குளத்தில் நீராடி “ஓம்” , “சிவ”, “சிவசிவ'' என்ற பீஜாட்சர மந்திரங்களைக் குறைந்தது 10,000 முறை ஓதி ஏழைகளுக்குத் தேன் கலந்த பாலை அமிர்த பிரசாதமாக தானம் அளித்திடல் வேண்டும். சந்தனப் பலகை, தர்பைபுல் பாய், கம்பளி ஆடையாலான பீடம் போன்றவற்றின் மேல் அமர்ந்து மேற்கண்ட பீஜாட்சரங்களை ஜபித்தலே சிறப்புடையதாகும். ஈஸ்வர ஆண்டு மாசி மகம் முதல் அடுத்த வெகுதான்ய ஆண்டு மாசி மகம் வரை மாதம் தோறும் மக நட்சத்திரத்தன்று மேற்கண்ட தானத்தைச் செய்து வருதல் பலாபலன்களைத் துரிதப்படுத்தும்.

தக்க துணை கிடைக்க.
தற்காலத்தில் தனிமை என்பது பலருடைய வாழ்க்கை முழுவதற்குமான கவலையாகவே ஆகியுள்ளது, பிள்ளைகள் வெளியூர், வெளிநாடுகளில் இருக்க, வசதிகள் இருந்தும் தனிமையில் வாழும் பெற்றோர்கள், பிள்ளைப் பேறின்றி எதிர்காலத்தின் பாதுகாப்புக் கவலைகளைச் சுமந்து வாழும் தம்பதியினர், உடன்பிறந்தோர்களால் எவ்விதப் பயனுமின்றி துன்பங்களில் உழல்வோர், வசதிகளிருந்தும் விடுதிகளில் வாழ்கின்ற சூழ்நிலையில் அவதியுறுவோர், தக்க வயதில் திருமணத்தை எடுத்து நடத்த பெரியோர்கள் இல்லாமையால் தனித்து வாழும் ஆண், பெண் - இவ்வாறாகப் பாதுகாப்பு, தனிமை காரணமாக மன ஏக்கங்களுடன் வாழ்கின்றோர் எண்ணற்றோர், இத்தகையோர் திருவாரூர் சிவாலயத்திலுள்ள அக்ஷரபீடத்திற்கு மகாசிவராத்திரியன்று ஆறு காலங்களிலும் பூஜைகள் செய்து பழவகைகளைப் படைத்து, தானமளித்துவர இறையருளால் தக்க துணை கிடைக்கும். இவர்கள் தினந்தோறும் கோயிலில் அர்த்தசாம பூஜை நேரத்தில் நடைபெறும் சிவபாத பூஜையில் பங்குபெறுவதால் தக்க வாழ்க்கைப் பாதுகாப்பினைப் பெறலாம்.

தீராத பழி தீர
பல குடும்பங்களில் பெண்கள் தாங்கள் பழிகளை ஏற்கவேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைந்து விடுகின்றன. உண்மையில் முன்வினைப் பயனாகவே இத்தகைய வினைகள் ஏற்படுகின்றன என உணர வேண்டும். கடந்த ஜன்மங்களில் பிறர் மனதைப் புண்படுத்தும் வகையில் உஷ்ணமான வசை மொழிகளைப் பேசியதன் பலனாக, இந்த ஜன்மத்தில் இத்தகைய  தேவையில்லா பழிகள் ஏற்படுகின்றன. மிளகிற்கு உடைய கார சக்தி  மட்டும் அல்லாது, கொந்தளிப்பான மனதை சாந்தப்படும் ஆன்மீக சக்தியுமுண்டு. ஆஞ்சநேயருக்குரிய மூல நட்சத்திரத்திலும் மிளகுவடை செய்து, ஆஞ்சநேயருக்குப் படைக்கும் வரை ஒருவர், நீர் கூட அருந்தாது  ஆஞ்சநேயரை வழிபட்டு மிளகுவடையை ஏழைக் குழந்தைகளுக்குத் தானமாக அளித்தால் வீண்பழிகள் தீரும்.
சர்வம் சித்தர்கள் மயமே!
அனைத்து மதங்களிலும் சித்தர்கள், யோகியர்கள், மஹான்கள் உண்டு. பாண்டிச்சேரி அருகே சின்னபாபு சமுத்திரத்திலுள்ள படேசாஹிப் மஹான், சென்னை மவுண்ட் ரோடு மற்றும், மதுராந்தகம் அருகே உள்ள இஸ்லாமிய சித்தர்களின் ஜீவசமாதி, எகிப்தில் உள்ள அந்நாட்டு சித்தர்களின் ஜீவசமாதிகள் - இவ்வாறாக அனைத்து நாடுகளிலும், எல்லா மதங்களிலும் இறைத்தூதர்களாக மலர்கின்ற சித்புருஷர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது.
வெள்ளாட்டுப் பாலின் விசேஷம்
வெள்ளாட்டுப் பால் மிகவும் விசேஷமான சக்தியுடையது. மாதந்தோறும் மக நட்சத்திரத்தன்று குறைந்தது ஓர் ஆழாக்கு வெள்ளாட்டுப் பாலில் ஓர் ஆழாக்கு நன்னீர் கலந்து காய்ச்சி பனை  வெல்லத்துடன் சேர்த்து சிவபெருமானுக்குப் படைத்து ஏழைகளுக்கு  தானமாக அளித்து வர கடுமையான நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்! ஆழ்ந்த இறை நம்பிக்கை எதையும் சாதிக்க வல்லதாகும். ஈஸ்வர வருடத்தில் கும்பகோணத்தில் மாசி மகத்தன்று பனை வெல்லம் சேர்ந்த வெள்ளாட்டுப் பாலைத் தானம் செய்திட பலவிதமான  தோஷங்களுடன் குடும்பத்தில் அடிக்கடி நோய்வாய்ப்படுதலாகிய  துன்பங்களும் அற்புதமான முறையில் தீர்வதுடன், நெடுங்கால நோய்களின்  கடுமையும் தணியும்.

கடன்சுமைகள் தணிய...
வியாபாரத்திலும் அலுவலகத்திலும் எக்கச்சக்கமான கடன் சுமைகளால் தினமுமே அஞ்சி வாழ்வோர் பலருண்டு. திரும்பி வராத கடன்களால் நொடித்திருப்போரும் உண்டு. மஹாசிவராத்திரியன்று இவர்கள் திருஅண்ணாமலையை வில்வ தளங்களைத்  தலையில் சுமந்து கிரிவலம் வந்து கோயிலில் ஸ்ரீஅருணாசல மூர்த்திக்கு வில்வ மாலை / தளங்களைச் சாற்றி வழிபட்டிட, கடன் தொல்லைகளால் அவதியுறுவோர்க்கு அதிசயிக்கத்தக்க வகையில் நிவாரணம் கிட்டும். ஒரு செப்புத் தகட்டை கங்கை, காவிரி போன்ற புனித நதி தீர்த்தத்தால் கழுவித் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். மஹாசிவராத்திரியன்று திருஅண்ணாமலையில் நீராடி, விபூதி / குங்குமம்/திருமண் தரித்து, செப்புத்தகட்டிற்குத் தாமே அரைத்த சந்தனத்தையிட்டு அதன்மேல் வில்வ தளங்களை/ மாலையை வைத்துத் தலைமேல் வைத்து கிரிவலம் வருதல் வேண்டும். இருமுடி போல் தலையில் கட்டிக் கொள்ளலாம்.

மஞ்சள் காவடி எடுத்திடுவீர்!
முருகனுக்கு மஞ்சள் காவடி எடுப்பது சிறப்பான வழிபாடாகும். மஞ்சள் கிழங்குச் செடியை, இலைகளுடன் திருவாசியைப் போல் வில்லாக வளைத்து, பங்குனி உத்திரத்தன்று, முருகன் கோயிலுக்குக் கால் நடையாகச் சென்று, மஞ்சள் காவடியை முருகனுக்கு அர்ப்பணித்திட வேண்டும். விரத நியதிகளைக் கடை பிடித்தால் பலன்களும் பன்மடங்காய்ப் பெருகும். தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு, வேதனைக் குள்ளாகியிருப்போர் மஞ்சள் காவடி எடுத்து, கிருத்திகை, விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் நாட்களில் முருகனுக்கு மஞ்சள் காவடி எடுத்து வழிபட்டுவந்தால் , தீய பழக்கங்களிலிருந்து விடுபட்டு நல்வழி காணலாம்.

நித்ய கர்ம நிவாரணம்

1.2.1998 – கன்னிப் பெண்களுக்கு மஞ்சள் நிற தாவணிகள் தானம் – தடைப்பட்டுள்ள பதவி உயர்வு கிட்டும்.

2.2.1998 – முருகன் கோவிலில் பசும்பால் அபிஷேகம், குழந்தைகளுக்குப் பால்தானம் – நீண்ட கால நோய்கள் தணியும்.

3.2.1998 – சூரிய பகவான் பூஜை செய்த தலங்களில் வாகன ஓட்டுனர்கள் அபிஷேக ஆராதனைகள் செய்து ஏழைகளுக்கு வாழைப்பழ தானம் – வருமான விருத்தி (கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரன் கோயில், ஆடுதுறை, பரிதிநியமம், நவக்கிரகக் கோவில், கதிராமங்கலம் கோயில், சென்னை பூந்தமல்லி சிவன் கோயில்.)

பரிதிநியமம்

4.2.1998 – வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் கோவிலில் எள்ளுருண்டைதானம் – பித்ருக்களின் ஆசி கிட்டும்.

5.2.1998 – கோவிலில் இசைக்கருவிகள் வாசிக்கின்ற ஏழைகளுக்கு வஸ்திர தானம் – பயண, அலுவலகத் துன்பங்கள் நீங்கும்.

6.2.1998 – பெருமாள் கோவிலில் சங்காபிஷேகம், சர்க்கரைப் பொங்கல் தானம் – வெளியூர், வெளி நாட்டிலிருந்து நல்ல செய்தி கிட்டும்.

7.2.1998  - பெருமாள் கோவில் – புளியோதரை தானம் – வயிற்று உபாதைகள் நீங்கும்.

8.2.1998 – சதுர பீடம் உள்ள சிவன் கோவிலில் அன்னதானம் – சொத்து வழக்குகள் நன்முறையில் தீர்வு பெறும்.

9.2.1998 – ஸ்ரீராமர் கோவிலில் பானகம், முந்திரி மற்றும் உலர்பழங்கள் தானம் – குழந்தைகளின் படிப்பு விருத்தியடையும்.

10.2.1998 - கூலிவேலை செய்யும் ஏழைகளுக்கு கண் கண்ணாடி தானம் - உயர் அதிகாரிகளால் நேரும் துன்பம் விலகும்.

11.2.1998 – கிரிவலப் பாதைகளில் /புனித யாத்திரை ஸ்தலங்களில் சுமைதாங்கிகள் நிறுவுதல் – செல்வம் பெருகும்.

12.2.1998 – பசுக்களுக்குப் புல், வைக்கோல் தானம் – மூத்த சகோதரிகளின் துன்பம் தீரும்.

13.2.1998 – ஏழைகளுக்கு இளநீர்தானம் – இளைய சகோதரிகளின் துன்பம் தீரும்.

14.2.1998 – இன்று பெண் பார்த்தல் / நிச்சயதார்த்தத்தைத் தவிர்த்திடுக.

15.2.1998 – ஏழைச் சுமங்கலிகளுக்குத் தாம்பூல தானம் – சுபமான செய்தி வரும்.

16.2.1998 – நாய்களுக்கு மொறுமொறுப்பான புரை, ரொட்டி தானம் – எதிரிகளிடமிருந்து காப்பு!

17.2.1998 – மயில்களுக்கு உணவு தானம் – நன்முறையில் பதவி மாற்றம் கிட்டும்.

18.2.1998 – ஏழை மாணாக்கர்கட்குப் பென்சில், சிலேட் தானம் – குழந்தைகளின் அறிவு விருத்தி!

19.2.1998 – வறிய சுமங்கலிகளுக்குப் பூ தானம் – வியாபார விருத்தி

20.2.1998 – குதிரைகளுக்கு அவித்த கொள் அளித்தல் – லேவாதேவி/ பணக்கடன் கஷ்டங்களுக்கு நிவர்த்தி

21.2.1998 – ஏழை டிரைவர்களுக்கு அன்னம், ஆடை தானம் – வாயு சம்பந்தமான் நோய்கள் தீரும்.

22.2.1998 – சகோதர சகோதரிகளுக்கு இயன்ற பொன் ஆபரண தானம் – உறவுப் பிரிவுகள் தீர்ந்து குடும்ப விருத்தி!

23.2.1998 – குருபாத சேவைக்கும், குரு சேவைக்கும் உரித்தான மகத்தான நாள்.

24.2.1998 – ஸ்ரீஅதிகார நந்திக்குக் காப்பரிசி இட்டு, இனிப்பு, ரவை உருண்டை தானம் – உயர் அதிகாரிகளால் வரும் துன்பங்கள் நீங்கும்.

25.2.1998 – நாள் முழுவதும் சிவ பூஜை – அம்பாள் அனுக்கிரகம் கிடைக்கும்.

26.2.1998 – உறவு முறை, உறவு இல்லாத பாட்டிமார்களுக்கு கோவில் குளக்கரையில் தர்ப்பணம் – பித்ரு சாப நிவர்த்தி

27.2.1998 – அம்பாள் சந்நிதியில் ஏழை சுமங்கலிகளுக்கு வெள்ளி மெட்டி தானம் – கணவனின் தோல் சம்பந்தமான நோய் தீரும்.

28.2.1998 – சனீஸ்வரருக்கு புளியோதரைப் படையல் தானம் – வியாபாரத்தில் நல்ல பெருந்திருப்பம்.


பட்டீஸ்வரம் சிவாலயம்

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam