அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

விஷ்ணுபதி

விஷ்ணுபதி – இறை தரிசனம் பெறுதல், முக்தி அடைதல், வைகுண்ட ப்ராப்தி, பிறவா நிலை, சிவலோக பதவி என்று பல்வேறு வகைகளாக இறையருளைப் பரிபூரணமாகப் பெறும் வழிகளை நம் ஆன்றோர்கள் விளக்கியுள்ளனர். குரு பக்தியில் இவையனைத்தும் அடங்கி விடுவதால் சற்குருவைச் சரணடையும் வழிகளைக் கடைபிடிக்க வேண்டும்.

மனதால் வாக்கால்
உடலால் நின்னடி பணிவேன்!

பித்ருக்களின் ஆசி – தர்ப்பணங்கள்
தினசரிப் பிரச்சனைகளுக்கு நிவர்த்தி – நித்ய ஜப, பூஜை , தரிசன வழிபாடுகள்
வியாதி நிவாரணம் – நவக்ரஹ வழிபாடு
சாப, தோஷப் பரிகாரங்கள் – இஷ்ட தெய்வ, குல தெய்வ வழிபாடு
மஹான்களின் ஆசிகள் – தானதர்மங்கள், மூர்த்தி, தீர்த்தம், தலதரிசன ஸ்நான பூஜா முறைகள்
சந்தான ப்ராப்தி – பித்ரு பூஜை, ஸ்ரீசந்தான கோபால விரதம்
செல்வ விருத்தி – ஸ்ரீலட்சுமி, தனாகர்ஷ்ண, சக்கர எந்திர மூலிகா பூஜையுடன் குறித்த தான தர்மங்கள்
வித்யா (கல்வி) – ஸ்ரீஹயக்ரீவ ஜபம், ஸ்ரீசரஸ்வதி பூஜை,
போன்ற பல்வேறு வித வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு மனிதன் பலவிதமான வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஏன் ஒரே (ஏக) மூர்த்தியாம் சர்வேஸ்வரனை வழிபட்டால் போதாதா என்று கூடக் கேட்கலாம். ஆசாபாசங்களுக்கிடையே மனிதன் உழலும் வரையில் மனிதனுக்கு இவையனைத்தும் தேவையே! “அனைத்தும் இறைவன் செயல்!” என்பதை என்று ஒரு மனிதன் பரிபூரணமாக உணர்கின்றானோ (தத்துவ ரீதியாக அல்ல, சரீர அனுபவமாக) அன்றுதான் அவன் மனம் சாந்தமடைந்து பரிசுத்தமாக ஆனந்தத்தை நோக்கி நடைபோடும்! இந்நிலையில் தான் ஏகமூர்த்தி வழிபாடு சிறப்புடையதாகும்.

ஸ்ரீஹயக்ரீவரை திருஓண நட்சத்திரத்தில் குறைந்தது 108 முறை முட்டிப் பிரதட்சிணம் வந்து வணங்கினால், சரியாகப் படிக்காவிட்டாலும் தேர்வில் வெற்றி பெறலாம்.
ஸ்ரீஹயக்ரீவர் ஸ்தோத்திரம் சொல்லியபடியே கணக்குப் போட்டால் நன்றாகப் படிக்கலாம்.
ஸ்ரீவேதாந்த தேசிகர் திருவஹிந்தீயில் ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்.

சற்குருவின் பரிபாலனம்
சற்குருவும் தன்னிடம் அடைக்கலம் புகும் சிஷ்யனுக்கு அவனுடைய கர்ம வினைகள் தீரும் வரைப் பலவிதமான பூஜைகள், தானதர்மங்கள், தரிசனங்கள், பரிகாரங்கள் போன்றவற்றை முறையோடு கடைபிடிக்கும் நல்வழிமுறைகளைத் தந்தருளி உன்னதமான இறைநிலைக்கு இட்டுச் செல்கின்றார். இவற்றுள் பிரதோஷ பூஜை, விஷ்ணுபதியும் அடங்கும். ஸ்ரீதுர்கா (செவ்வாய்) பூஜை, பிரதோஷ பூஜை, ஸ்ரீவிஷ்ணுபதி பூஜை, மார்கழி மாதப் பிராதபூஜை, ஸ்ரீஐயப்ப வழிபாடு, ஸ்ரீஆயுர்தேவி பூஜை போன்றவை கலியுக நவீன பூஜைகள் தானே, வைகானஸம், சாஸ்த்ரீகம், வாமனம், மானுஷ, தைவீக பூஜா விதிமுறைகள், ஆகமம், பாஞ்சராத்ரம், வைதீகம் போன்ற ஆதிபூர்வ வழிபாடுகளில் இவையில்லையே என்று தோன்றும். அந்தந்த யுக நியதிகளின்படி அவ்வப்போது சித்தபுருஷர்களும், மஹான்களும் யோகியரும் ஜீவன்களின் வாழ்க்கை நெறிகளுக்கேற்ப இறைவழிபாடு முறைகளை அளிக்கின்றனர். பூர்வாங்க சந்தியாவந்தன, பித்ரு தர்ப்பண முறைகள் பலயுகங்களுக்கு முன் விரிவாக இருந்தன! தற்போது மிகவும் சுருங்கி இடையில் பல பெரியோர்கள் அளித்த புதிய நியாச முறைகளுடன் தற்போது கடைபிடிக்கப்படுகின்றன. எனவே எதைப் பற்றியும் குழப்பமடையாது சற்குரு எதையளிக்கின்றாரோ அதனைப் பரிபூரணமாக நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். பழைய நெறிமுறைகள் ம(ற)றைந்து போய்விட்டன. இடைச் செருகல்கள் அதிகரித்துள்ளன. புனிதமான ஸ்ரீவித்யா உபாசனை முறைகளில் பல மாறுபாடுகள் வந்து விட்டன. எனவே யுகநியதிக்கேற்ப அவரவருடைய ஆன்மீக வழிகாட்டியின் அருளுரைப்படி நடப்பதே உத்தமமானது! ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (பரமாச்சார்யார்), ஸ்ரீரமண மஹரிஷிகள், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீஅரவிந்தமாதா, ஸ்ரீஷிர்டிசாய் பாபா, ஸ்ரீராமகிருஷ்ணர் போன்ற மஹான்கள் கலியுகத்திற்கேற்பப் பல ஆன்மீக வழிமுறைகளை அருளியுள்ளனர். தற்போதும் பல சித்தபுருஷர்களும் ஞானியரும் யோகியரும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாது ஆங்காங்கே பல சத்சங்கங்களின் மூலம் பல்லாயிரக் கணக்கானோருக்குச் சற்குருமார்களாகவும், ஆச்சார்யார்களாகவும், ஆன்மீக வழிகாட்டிகளாகவும், இறைத் தூதுவர்களாகவும் பல்வேறு ரூபங்களில் அற்புதமான முறையில் இறைப் பணியாற்றி வருகின்றனர். நம் வாழ்நாளில் நம்மோடு இலைமறைகாயாக வாழ்ந்து அருள் பாலிக்கும் அத்தகைய உத்தம இறைப் பண்புடையோரை நாடி, ஆழ்ந்த அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் உள்ளத்தன்புடனும் சரணடைந்து பெறற்கரிய இம்மானிடப் பிறவியில் உண்மையான, புனிதமான வாழ்க்கையை வாழ்வோமாக!

எண்ணங்களுக்கு மூன்று அடி அகலமான இரும்புக் கதவைக் கூடத் தாண்டிச் செல்லும் சக்தி உண்டு. ஆனால் செங்கல், சுண்ணாம்பு சுவரைத் தாண்ட முடியாது. (உதாரணம் – கோயில் மதில் சுவர் )

ஆழ்ந்த உறுதியான நம்பிக்கை இல்லாவிடில் வாழ்க்கையே விரயமாகி விடும். இறை நம்பிக்கையும் குரு நம்பிக்கையும் ஒன்றே! குருவருளின்றேல் திருவருளில்லை! மன்வாதி, சங்கராந்தி, விஷ்ணுபதி, ஷடசீதி, யுகாதி, பிரதோஷம், போன்ற பலவிதமான புனித, புண்ய நேரங்கள் உண்டு. கிருத, திரேதா, துவாபர யுகங்களில் மக்கள் இவற்றைக் குறித்த யாக, வேள்வி, பூஜை, தான, தர்மக் கிரமங்களுடன் கடைபிடித்தனர். தற்போது ஒரு சிலரே இவற்றைச் சீரிய முறையில் நிறைவேற்றி அற்புதமான தெய்வீக அருளைப் பெற்று வருகின்றனர்.! கலியுகத்தில் இத்தகைய இறைவழிபாடு முறைகள் பல சற்குருமார்களால் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வருகின்றன.
“பிரதோஷ மஹிமை” என்னும் அரிய நூல், ஆன்மீக உபந்நியாசங்கள், தெளிவுரை உரையாடல்கள் போன்றவற்றின் மூலம் பிரதோஷப் புண்யகால மஹிமையைப் பரப்பி சீரிய இறைப்பணியாற்றிவரும் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீவெங்கடராம சுவாமிகள், பிரதோஷ பூஜை போன்று ஸ்ரீவிஷ்ணுபதி பூஜையும் பிரசித்தி பெற்று அனைத்து மக்களும் ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்யகாலப் பலன்களை அடையும் வண்ணம் குறித்த நல்வழி முறைகளை தம் சற்குருவின் அருளாணைப்படி அவர்தம் அருள்மொழிகளுக்கேற்ப கடைபிடிக்கச் செய்து வருகின்றார்கள். வரும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலம் 13-2-1996 செவ்வாயன்று விடியற்காலை 2.30 மணி முதல் காலை 10.30 மணி வரை அமைகின்றது. இப்புனிதமான நேரத்தில் செய்யப்படும் பூஜை, யாகம், ஹோமம், அர்ச்சனை, வேள்வி, அபிஷேகம், அன்னதானம் வஸ்திர தானம் போன்ற அனைத்துவிதமான இறைவழிபாடுகளுக்கும் பித்ரு தர்ப்பணங்களுக்கும் அபரிமிதமான, பன்மடங்குப் பலன்கள் உண்டு.

தர்பையை அணிவதால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் தீரும். அன்னதானப் பிரசாதத்தோடு சேர்த்து தானம் செய்வதால், கணவன்மார்களின் மூளையின் செயல்பாடு தெளிவு (brain steady) ஆகின்றது. பிறன்மனை நோக்கும் எண்ணம் அகலும். கூடாநாள் வேதனைகள் தீர்கின்றன. நம் சற்குரு ஆற்றிய முதல் தானம் தர்பை தானமே.

பித்ருக்களுக்கு நாயகரே ஸ்ரீமஹாவிஷ்ணு, இவ்விஷ்ணுபதிப் புண்யகாலத்தில் அனைத்துக் கோடிப் பித்ருலோகங்களில் உள்ள நம்முடைய வசு, ருத்ர, ஆதித்ய மற்றும் ஏனைய பித்ரு தேவர்கள் பித்ரு தேவதைகள், ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி, சனீஸ்வர மண்டல தேவதேவதைகள், பித்ரு மண்டலமாகிய சூர்ய லோக தேவர்கள், மாத்ரு லோகமாகிய சந்திர லோக தேவர்கள் அனைவரும் ஸகல விஷ்ணு ஆலயங்கள், தீர்த்தங்கள , தல விருட்சங்கள், கோயில் கோபுர விமானங்கள் போன்ற இடங்களில் குழுமுகின்றனர். இப்புண்யகாலத்தில் ஸ்ரீவிஷ்ணு ஆலயங்களில் குறித்த முறையில் வழிபடுவோர்க்கு மேற்கண்ட கோடானு கோடி பித்ருதேவர்களின் ஆசியுடன், நவக்ரஹ மூர்த்திகளின் அருளும் கூடி ஸ்ரீமன் நாராயணனின் கருணைக் கடாட்சமும் பரிபூரணமாகக் கிட்டும். இவ்வரிய வாய்ப்பை நழுவவிடலாமா?
ஒவ்வொரு ஏகாதசி, துவாதசி, பஞ்சமிக்கும் விசேஷமான பெயர்கள் இருப்பது போல ஒவ்வொரு பிரதோஷத்திற்கும், விஷ்ணுபதிக்கும் பெயர்கள் உண்டு. ஸ்ரீபீஷ்மர், ஸ்ரீகவேர மஹரிஷி, ஸ்ரீவிஸ்வாமித்ரர், ஸ்ரீவசிஷ்டர், ஸ்ரீநாரதர், ஸ்ரீபரத்வாஜர், ஸ்ரீசுகர் போன்று பல மஹரிஷிகளும் ஒவ்வொரு யுக விஷ்ணுபதியில் ஒவ்வொரு வைணவத் தலத்தில் பெறற்கரிய பேறாகும் விஷ்ணுபதியைப் பெற்றிருக்கின்றனர். விஷ்ணுபதி என்பது சைவ, வைணவ இனபேதமின்றி அனைவரும் பின்பற்ற வேண்டிய அரிய புண்ய காலம். பல தபஸ்விகள் பல கோடி யுகங்கள் தவம் பூண்டு பெற இயலாத அரிய வரங்களை ஸ்ரீவிஷ்ணுபதிப் பூஜை மூலம் எளிதில் பெற்றுள்ளனர். நடக்கும் கலியுக மன்வந்திரத்தில் ஸ்ரீவிஷ்ணுபதிப் பூஜை மிகவும் பிராபல்யமடையும். ஸ்ரீகல்கி அவதார காலத்தில் இது பரிபூரணமடையுமென ஸ்ரீஅகஸ்திய கிரந்த நாடிகள் தெளிவு படுத்துகின்றன.
துரோணரின் செருக்கு
...... இதோ துரோணாச்சாரியார் தன் சிஷ்யன் அர்ஜுனனின் வில்வித்தைத் திறனைப் பற்றி எண்ணி எண்ணி ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றார். அவ்வானந்தமயமான நினைவுகளின் ஊடே.... “யான் வளர்த்த அர்ஜுனன்! பிரபஞ்சத்தில் இவனுக்கு நிகரான வில்வித்தகன் எவரும் கிடையாது!” – என்று மட்டும் அவர் நினைத்திருந்தால் பரவாயில்லை . ஆனால் “என்னால் அல்லவோ அர்ஜுனன் இந்த மேன்மையைப் பெற்றான்! எத்தனையோ குருமார்கள் இருந்தும் இன்னொரு அர்ஜுனனைத் தயார் செய்ய முடியவில்லையே!”
என்று மட்டும் அவர் புளங்காகிதம் அடைந்திருந்தாற்கூடப் பரவாயில்லை. “வில்வித்தையில் எனக்கிணையான சற்குரு எவருமில்லையே! அர்ஜுனனுக்கு நிகராக வந்த ஏகலைவன் கூட என்னைத் தானே மானசீக குருவாக ஏற்றான்! அவனுடைய கட்டை விரலைத்தான் குரு காணிக்கையாகப் பிடுங்கிவிட்டேனே!” – என்றல்லவா செருக்கில் மிகுந்தார்!
நாம் பெற்றவை கொஞ்சமே ..... மஹாபாரதம், ராமாயணத்தில், பீஷ்மர், விதுரன், துரோணர், வசிஷ்டர், விஸ்வாமித்ரர், ஜனகர் போன்ற பாத்திரங்கள் ஒவ்வொன்றும் மனித குலத்திற்குப் பலவிதப் பாடங்களைப் புகட்டுகின்றன. இறையாணையாக இவர்கள் தங்கள் பாத்திரங்களை, நாடகம் போல் செவ்வனே நிறைவேற்றி நமக்கு அற்புதமான விளக்கங்களையும், அறவழி முறைகளையும் நல்குகின்றனர். வியாஸர், வால்மீகி அளித்த மஹாபாரதம், ராமாயணத்தின் முழுப்பகுதிகளையும் நாம் இன்னமும் பெறவில்லை! இவ்விரண்டு மூலப் புராணங்களின் ஒரு சிறு பகுதியையே நாம் இதுவரை பெற்றிருக்கிறோம்.

ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை 108 முறை உச்சரித்தால், ஒரு முறை சொன்னதாகக் கணக்கு எடுத்துக் கொள்கின்றனர். 1008 முறை உச்சரித்தால், 10 முறை சொன்னதாகக் கணக்கு. 10,000 முறை உச்சரித்தால், 108 முறை சொன்னதாகக் கணக்கு.

இருடிகள் ராமாயணம் – இருடிகள் மஹாபாரதம்
இருடிகள் மஹாபாரதம், இருடிகள் ராமாயணம் இரண்டும் சித்தபுருஷர்களால் அளிக்கப்படுள்ள எழுதாக் கிளவியாய் இலங்கும் மறைப் புராணங்களாகும். தக்க சற்குருமார்கள் மூலம் அவ்வப்போது யுகநியதிகளுக்கேற்ப கிரந்த நாடிகள் மூலம் வாக்சக்தியாய் இவை வெளிப்படும். இவ்வாறுதான் பல கோயில்களின் தல புராணங்களைப் பல பெரியோர்களின் மூலம் நாம் பெற்றிருக்கின்றோம். ஒரே கோயிலின் பல தூண்களில் உள்ள சிலாரூபங்கள், சிற்பங்கள் ஒன்றும் ஒவ்வொரு புராணத்தை உள்ளடக்கிக் கொண்டிருக்கும். அதே கோயிலுக்கு இவ்வாறாகப் பல தல புராணங்கள் இருக்கும். காரணம், யுகயுகமாய் இருந்து வரும் அந்தத் தெய்வ (சிலாரூப) மூர்த்தி மூலம் பல்லாயிரம் மஹான்கள், யோகியர், உத்தமர்கள் பெறற்கரிய உன்னத இறைநிலைகளை அடைந்திருப்பர் அன்றோ! எனவே ஒரு மஹான் ஒரு கோயிலுக்குச் சென்றால் ஒவ்வொரு சிற்பமும், தூணும் அவருடன் பேசும்! அவற்றில் எது மக்களுக்கு அக்கால நிலைக்கேற்பத் தேவையோ அதனை மட்டும் அவர் எடுத்துரைப்பார்! இதுவே ஆன்மீக வழிகாட்டிக்கான சான்று!
......... துரோணர் அடக்கம், எளிமையை மறந்தவராய் கர்வத்தின் உச்சியில் களித்திருக்க.... ஜகமே சர்வம் கிருஷ்ணமயமல்லவா! எங்கும் எதிலும் அன்றும் இன்றும் என்றும் பரிபூரணமாக நிரவியிருக்கும் கண்ணன் துவாரகையிலிருந்து துரோணரைக் கவனித்தான்.. “என்ன இது! ஏகலைவன் மூலம் புகட்டிய பாடத்தை துரோணர் அதற்குள் மறந்து விட்டாரே! அடுத்த பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டதே! மாய லீலைகளைப் புரிபவனாயிற்றே, ஸ்ரீகிருஷ்ணன் அடுத்த திருவிளையாடலில் இறங்கலானான்! ..... கர்ணன் ஓரிடத்தில் இளைப்பாறிக் கொண்டிருக்க ஒரு முதியவர் வந்தார்... “கர்ணா! பாத்தாயா நீ பரசுராமரிடம் கற்காத வித்தையையா இந்தப் பார்த்திபனுக்கு துரோணர் கற்றுக் கொடுத்திருக்கிறார்! இன்னும் சொல்லப் போனால் நானே, இந்த தள்ளாத வயதில் அர்ஜுனனைப் “பூ” வென்று ஊதி வீழ்த்தி விடுவேனே!” கர்ணன் வியப்பால் நிமிர்ந்து உட்கார்ந்தான். “கர்ணா! உன்னை நான் நன்கறிவேன்! இந்தக் கிழவனே அர்ஜுனனைப் பொடியாக்கி விடுவேனென்றால் உன்னால் முடியாததா என்ன?”  கர்ணன் முதியவரை உற்றுப் பார்த்தான். அவர் கண்களில் ஆர்வம், அதிசயம் கலந்த வீரம் கொப்புளித்தது. “கர்ணா! ஒன்றுமில்லாத அர்ஜுனனை ஆஹா, ஓஹோ என்று வானவளாவப் புகழ்கிறார்கள், நீ ஏன் சும்மாயிருக்கிறாய்! உனக்குத் துணை இந்த குண்டலமிருக்கும் போது ஏன் தயங்குகிறாய்! உடனே கிளம்பு , நீ போய் அர்ஜுனனை எதிர்த்துக் குரல் கொடு....”.

சர்க்கரை வியாதி தீர திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் எதிரே பொலியும் சிவசக்தி ஐக்கிய ஸ்வரூப தரிசனத்தில் இனிப்பு தானம் செய்வது நலம் பயக்கும்.

கர்ணன் தயக்கத்துடன் எழுந்தான்.. அதுபோதுமே முதியவர் வேடம் பூண்ட ஸ்ரீகிருஷ்ணனுக்கு! கர்ணனிடம் குலாவிப் பேசி அவனுடைய வீரக்களையைத் தூண்டிவிட்டான்!
ஸ்ரீகிருஷ்ணன் நிகழ்த்தும் லீலைகள் பிரபஞ்சத்திலுள்ள ஜீவன்களின் மேம்பாட்டிற்குத்தானே! ... இதோ  களத்தில் கர்ணன் அர்ஜுனனுக்கு எதிராகப் போர்க்குரல் கொடுக்க, ஏற்கனவே பொறாமையால் வெந்திருந்த துரியோதனன் மகிழ்ந்து போய்க் கர்ணனை மன்னாக்கித் தனக்குத் துணை சேர்த்துக்  கொண்டு அர்ஜுனனைப் போட்டிக்கு அழைக்கின்றான். துரோணர் சற்றே கலங்கினார். “என்ன இது! புதிதாக முளைக்கின்றதே! ஒருவேளை ஏகலைவனோ! இல்லையில்லை” – ஏதோ புலம்பியவராய். “கர்ணா! நீயார்? உன் இனம், குலமென்ன? உன் குரு யார்? அவரினம் குலமென்ன?“
துரோணர் சினத்தால் சிவந்து கேள்விக் கணைகளைத் தூவினார். ஏது பேசுகிறோம் என்று எண்ணாது கர்ணனின் குருகுலத்தை ஏசினார்... ஒரு சற்குரு இன்னொரு சற்குருவை எக்காரணம் கொண்டும் பழித்தலாகாது! துரோணர் தர்ம நெறிகளினின்றும் பிறண்டார். கர்ணன் வேதனையுற்றான். “நான் மானுடன், என்னை இகழ்ந்தால் பரவாயில்லை! ஆனால் பெறற்கரிய என் சற்குருவை அவதார புருஷரான பரசுராமரையே இவர் நிந்திக்கிறாரே! ஒரு வீரனின் இன, குல பேதத்தை விசாரிப்பதே தவறு! என் குருவின் ஆதிமூலத்தைக் குடைந்து இழிவு படுத்துகிறாரே... “ மன வேதனையால் நொந்து தவித்தான்.. “குருவை நிந்தை செய்பவரை ஒரு சிஷ்யன் பொறுக்கலாகுமா? விட்டால் இவர்களை ஒருகை பார்த்து விடலாமே! ஆனால் போட்டி விதிகளும், ராஜ்ய நியதிகளும் என் கைகளைக் கட்டி விட்டனவே!” – கர்ணனின் மனத்துயர் ஆறாகப் பெருகியது.
“ஸ்ரீபரசுராமர் என்னைச் சபித்திருக்கலாம், முக்யமான நேரத்தில் அஸ்திர மந்திர மறந்து போகும் என்றல்லவா சபித்தார். எனினும் அவர் எனக்களித்த அஸ்திர மந்திரங்களின் சக்தியை என்னிடமிருந்து அவர் பிரிக்க வில்லையே! என்னுடைய வித்தைகளுக்கு அவர்தானே குரு! என் குருவை நிந்திக்கும் இவர்களை என் செய்வது! என் வீரத்தைக் காட்ட வாய்ப்பே இல்லாமல் தடுக்கின்றார்களே!” கர்ணனின் மனச்சுமை தணியவில்லை! மாறாக உள்ளம் உருக, குருவின் கீர்த்தியை அரங்கேற்ற, உள்ளம் உருகி ஏங்கியழுதான். அவனுடைய நியாயமான மனக் குமுறல்கள் “அஸ்திர தோஷமாக” உருவெடுத்துப் பல்கிப் பெருகி பிரம்மாண்டமாக வளர்ந்து துரோணரைத் தாக்கியது! எவ்வாறாக? அஸ்திர ஹத்தி தோஷமாக! அப்படியென்றால் என்ன?

திருஅண்ணாமலையில் 3 தீபங்கள்
(1) பரணி தீபம் (தரணி வாழ பரணி தீபம்)
(2) விஷ்ணு தீபம் (பன்றி அவதாரம் எடுத்து பெருமாள் அடிமுடி தேடினார்.)
(3) திருஅண்ணாமலையார் தீபம்
இந்த மூன்று தீபங்களையும் தரிசித்தவர்களே சபரி மலை தீபத்தை தரிசிக்கத் தகுதி பெறுகின்றனர்.

பரசுராமாவதார மகிமை
ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் ஸ்ரீபரசுராமர், ஸ்ரீபலராம அவதாரங்களின் மகிமையைப் பற்றி மனித சமுதாயம் இன்னமும் சரிவர உணரவில்லை. பல அற்புதமான தெய்வ மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து பெறற்கரிய தெய்வானுபவங்களை நமக்குத் தந்தருளியுள்ள ஸ்ரீபரசுராமரின் ஒரு கோண விளக்கங்களையே நாம் பெற்றுள்ளோம். தாய் சொல்லை ஏற்று அவர் நடத்திய லீலைகளைத் தாம் நாம் அறிந்துள்ளோம்., இன்றைக்கும் மனித குலத்திற்கு உய்வளிக்கும்  பல அற்புதமான கோயில்களுக்கு மூலாதாரமாய் விளங்கியவர் ஸ்ரீபரசுராமரே என்பதைப் பலர் அறியார். கிடைத்தற்கரிய ஸ்ரீபரசுராம கல்ப சூத்திரங்களில் மகா சக்திவாய்ந்த அஷ்டோத்திரங்கள் எந்திரப் பிரதிஷ்டைகள் எதையும் தரவல்ல பல்கோண சக்கரங்கள் அருளப் பெற்றுள்ளன. மிகவும் பிரசித்தி பெற்ற, அளப்பரிய ஆன்மீக ஆற்றலைத் தரவல்ல பல மந்திரங்கள் காலப் போக்கில் மறைந்து விட்டன. சித்த புருஷர்கள் அருளியுள்ள இருடிகள் மகாபாரதம் இராமாயணம் ஆகியவற்றில் ஸ்ரீபரசுராம அவதாரத்தின் லீலானுபூதிகள் விவரிக்கப் பெற்றுள்ளன. அவதார மூர்த்தியான ஸ்ரீபரசுராமருக்குக் கர்ணனுடைய பூர்வீக வரலாறனைத்தும் தெரியுமன்றோ! அறிந்தும் அறியாதவராய்த் தெரிந்தும் தெரியாதவராய்த் திருவிளையாடல் புரிந்தார்.
ஸ்ரீமன் நாராயண சுவாமியின் அனுகிரகத்தால் தோன்றியவனான கர்ணன் வேத மூர்த்தியான ஸ்ரீமன் சூரியநாராயண சுவாமியின் பரிபூரண கடாட்சத்துடன் குந்திக்கு வாய்த்தவனாதலின் பிறவியிலேயே வேத மறையினைத் துய்த்து உணர்ந்திருந்தான். அதனாலன்றோ அவனுக்கு ஸ்ரீமன் விஷ்ணுவின் அவதார அம்சமான ஸ்ரீபரசுராமரையே சற்குருவாக பெறும் பாக்கியம் கிட்டியது. என்னே அரிய வாய்ப்பு! ஸ்ரீபரசுராமர், கர்ணனின் பூர்வீகத்தை நன்கு அறிந்தவர். ஆனால் யுக நியதிகளுக்கேற்ப கர்ணனின் கண்களுக்கு மட்டுமல்லாது உலத்தார்க்கே எளிய சற்குருவாகவும் பெரிய மகரிஷி போலவுமே அவர் தென்பட்டார். ஸ்ரீகிருஷ்ணனின் திருவிளையாடலாகவே ஸ்ரீபரசுராமர் கர்ணனின் மடியில் தூங்குவதும் வண்டு குடைவதும் அவர் கர்ணனைச் சபிப்பதுமான சம்பவங்கள் நிகழ்ந்தன. ஸ்ரீபரசுராமர் இவற்றை அறியாமலில்லை. அவதார லீலைகளுக்காக தெய்வ மூர்த்திகளே தங்களுடைய நிறைந்த தெய்வாம்சங்களைச் சுருக்கிச் சாதாரணமாக ஜீவன்களோடு ஜீவன்களாக வாழ்ந்து தத்தம் அனுபூதிகளை நிறைவேற்றுகின்றனர்.
கர்ணன் தான் ஸ்ரீபரசுராமருடைய சிஷ்யனென்று எடுத்து கூறியும் கூட துரோணர் கர்ணனை அர்ஜுனனுடன் போரிடும் அளவிற்கு இராஜ தகுதிகள் அடையவில்லை என்பதற்காக அவனை இகழ்ந்ததால் ஸ்ரீபரசுராமர் ஓர் அவதார மூர்த்தி என்பதையறிந்தும் அத்தகைய தெய்வ அவதாரத்தையே சற்குருவாக பூண்ட வனென்று அறிந்த உடனேயே துரோணர் தெளிவு பெற்றிருக்க வேண்டும்.ஆனால், தான் வளர்த்த அர்ஜுனனையே ஒருவன் எதிர்ப்பதா என்ற அகங்காரம் செருக்கு, கர்வம், அவரைப் புடை சூழ்ந்தது. இதுவே, துரோணரை மதியிழக்கச் செய்தது.

கண்ணாடியைப் பார்க்கப் பார்க்க ஆயுள் குறையும். கண்ணாடியைப் பார்க்காமல் பொட்டு வைத்தால் தன்னம்பிக்கை வரும்.
நம் சற்குரு அடியார் ஒருவர் வீட்டிற்கு வருகை தந்தபோது அங்குள்ள குழந்தைகளிடம் கண்ணாடி பார்க்காமல் சரியாக சந்தனம், குங்குமம் வைக்கும் முறையை பயிற்றுவித்தார்.

கர்ணணுடைய மனவேதனைகளைப் பற்றி மேலே அறிந்தோம் அல்லவா? அவையனைத்தும் அஸ்திரஹத்தி தோஷமாக துரோணரைத் தாக்கின. அதன் விளைவுகள் என்ன தெரியுமா? இத்தகைய அபூர்வமான விளக்கங்கள் சித்தர்களுக்கே உரித்தான இருடிகள் இராமாயணம், இருடிகள் மகாபாரதம், இருடிகள் பாகவதம் போன்ற இருடிகளின் புராணங்களில் தான் தெளிவுறப் பெறலாம். ஸ்ரீஇராமானுடைய வாலி வதம், ஸ்ரீஜானகியின் அக்னிப்ரவேசம், ஸ்ரீகைகேயியின் மனோநிலை, ஸ்ரீகர்ணனின் பிறப்பு இரகசியங்கள் சகுனியின் சூதுவாதிற்கான காரணங்கள், பீமன் – துரியோதன யுத்தம் – போன்றவற்றிற்கான அற்புதமான விளக்கங்களை இருடிகளின் புராணங்களே அழகுபட, அறிவுப்பூர்வமாக விளக்குகின்றன.
அஸ்திரஹத்தியின் விளைவுகள்
கர்ணனை அர்ஜுனனுடன் போரிடவிடாமல் தடுத்துக் கர்ணனுடய மனோ பீஷ்டங்களுக்கு காரணகர்த்தாவாக விளங்கிய துரோணர் அவற்றின் விளைவுகளை உடனடியாக ஏற்க வேண்டியதாயிற்று. துரோணருக்கு இப்போது அஸ்த்திர ஹத்தியின் தோஷத்தால் அவசியமான அஸ்திர மந்திரங்கள் மறக்கலாயின. தனுர்வேதத்தில் தலை சிறந்து விளங்கிய துரோணாச்சாரியார் தனுர்வேத மூல மந்திரங்கள , பீஜாட்சரங்களை மறந்து தவிக்கலானார். வெளியில் எவரிடமும் சொல்லயியலா நிலையிது! எவரிடம் தான் இதற்கு நிவாரணம் பெற இயலும். ஆபத்பாந்தவன், அநாதரட்சகன் ஸ்ரீகிருஷ்ணன் தானே! இரவோடிரவாய் துரோணர் துவாரகைக்குப் பறந்தார். அஸ்வமேத (குதிரை) இலட்சணங்கள் கூட அவர் நினைவிற்கு வரவில்லை.
ஆங்கே துவாரகையில்..... ஸ்ரீகிருஷ்ணன் வழக்கம் போல் விஷமமான புன்னகையுடன் துரோணரை வரவேற்றான். ஆனால், துரோணர் இருந்த மனநிலையில் அவரால் எதையும் கிரகிக்கும் உணர்வில் இல்லையே! “அப்பனே, ஸ்ரீகிருஷ்ணா! உன் லீலை எனக்குப் புரிந்து விட்டது. அர்ஜுனனுடைய சிறப்பிற்கு நானே காரணமென்று செருக்கில் மிதந்து சீரழிந்து விட்டேன். எனக்கு நல்ல புத்தியைத் தருவாயாக!” சரணடைந்தால் நிவாரணம் பெறுவது எளிதன்றோ! தன்னால் அத்தகைய அஸ்திரஹத்தி தோஷத்திற்குப் பரிகாரம் மட்டுமே தர இயலும், என்று பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணனே கூறுவானெனில் மற்றொரு சற்குருவை மதியாமையால் விளைந்த அஸ்திர ஹத்தி தோஷத்தின் விளைவுகளை என்னென்று கூறுவது! இப்புராண சம்பவமூலம் கலியுக மக்கள் பெறும் பாடம் என்னவெனில் எக்காரணம் கொண்டும் எந்த சித்த புருஷரையும், மகானையும், ஞானியையும், யோகியையும், உத்தம சற்குருமார்களையும் பரிபூரண இறையருள் கூடிய இறையடியாரையும் இகழ்தலாகாது. ஒரு மகானை மற்றொரு மகானே அறிவார்.
 கருத்து வேறுபாடு, செய்கை வித்தியாசங்கள், வெளியுருவத் தோற்றம், வாழ்க்கை முறை இவற்றைக் கொண்டு எவரையும் பழித்துப் பேசலாகாது. ஒரு மகானுடைய அனுபூதிகளை நன்கு உணரும் அளவிற்கு நாம் பக்குவமடையவில்லை என்று தெளிந்து உணர்தல் வேண்டும். எந்த மகானையும் இழித்து, பழித்து எதிர்த்துத் தூஷித்தால் அது பலவிதமான சாபங்களுக்கு அடிகோலும், அவரே மனமுவந்து மன்னிப்பு அளித்தாலே அன்றி அத்தகைய சாபங்கள் கோடி கோடியாம் ஜென்மங்களுக்கு தொடரும் என்பதைப் பகுத்தறிதல் வேண்டும்.

இடுக்குப் பிள்ளையார் சன்னதி
அண்ணாமலையாரைப் பார்த்தபடியே முன் வழியாகத்தான் உள்ளே நுழைய வேண்டும். இவ்வுலக வாழ்வில் இருந்து நாம் இறைவனை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற பிரார்த்தனையை இது குறிக்கின்றது. பின்வழியாக நுழையக் கூடாது. மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை இது குறிக்கின்றது.

அஸ்திரஹத்தி – பரிகாரம்
ஸ்ரீகிருஷ்ணன் அருளியதாவது :- துரோணரே! ஸ்ரீபரசுராமர் யுகம்யுகமாக வந்து கொண்டிருப்பவர். கிருத யுகத்தில் பல பராசக்தி அம்சங்களை பூலோகம் உட்படப் பல லோகங்களில் பிரதிஷ்டை செய்து கோடிக்கணக்கான ஜீவன்களின் உய்விற்கு வழி வகுத்தவர், த்ரேதா யுகத்தில் ஸ்ரீஇராமனுக்கு அனுக்கிரகம் அளித்தவர். தற்போதைய த்வாபர யுகத்தில் எண்ணற்ற மகரிஷிகட்கு அருள்புரிந்து வருபவர். அத்தகைய தெய்வ அவதார மூர்த்தியின் குருகுல அனுபூதிகளை எண்ணி ஆனந்தம் அடையாது மாசுபடுத்தி விட்டீர்கள். இதற்கு ஸ்ரீபரசுராமரே நிவாரணம் அளிக்க முடியும். அவர் தற்போது ஸ்ரீஅருணாசல திவ்ய க்ஷேத்திரத்தில் (திருஅண்ணாமலை) ஸ்ரீதுர்வாச மகரிஷியின் ஆசிரமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். எனவே, தாங்கள் அங்கு சென்று ஸ்ரீபரசுராமரின் திருவடி தரிசனம் பெற்றுப் பிராயச்சித்தம் அடைவீர்களாக!” துரோணச்சாரியார் திருஅருணாசல க்ஷேத்திரத்தை அடைந்து காமக்காடு தரிசனப் பகுதி அருகேயுள்ள ஸ்ரீதுர்வாச மகரிஷியின் ஆசிரமத்தை அடைந்தார்.
ஆங்கே... பத்தாயிரக்கணக்கான சீடர்களுடன் ஸ்ரீதுர்வாச மகரிஷி ஸ்ரீபரசுராமருக்குப் பாதபூஜை செய்து ஆனந்திப்பது கண்டு பரவசமடைந்தார்.. “அப்பப்பா.., பல்லாயிரக்கணக்கான சீடர்கள், எவ்வாறு சினத்திற்குப் பெயர் பெற்ற ஸ்ரீதுர்வாசரிடம் பேரமைதியுடன் குருகுலவாசத்தை நடத்தித் திண்மையும் ஆன்மீகப் பொலிவும் தெய்வீகச் சக்தியையும் பெறுகின்றனர். உத்தம மகரிஷியான ஸ்ரீதுர்வாசரே தன்னுடைய தபோவலிமைக்காக ஸ்ரீபரசுராமமூர்த்தியின் திருவடியைத் தொழுது பாதபூஜை செய்யும் இறைப்பணியை  மேற்கொள்கிறார் என்றால் ஒரே ஒரு அர்ஜுனனை உருவாக்கிச் செருக்குற்றுத் திரியும் நான் எத்தகைய மாபெரும் தவறைச் செய்து கர்வபங்கத்துடன் அலைகின்றேன்”, என்று எண்ணி வெட்கிய துரோணர், ஸ்ரீபரசுராமரிடம் தன் உள்ளம் திறந்து பேசினார்.
ஸ்ரீபரசுராமர், “துரோணா! அனைத்தையும் தரவல்லது இவ்வருணாசல கிரிவலம்., இதையன்றி வேறு எந்தப் பரிகாரத்தையும் அடியேன் எண்ணவில்லை. நீ உத்தம விரதம் பூண்டு சர்வேஸ்வரனின் திருமேனியாய் விளங்கும் ஸ்ரீஅருணாசல மூர்த்தியை கிரிவலம் வருவாயாக! அவரே அனைத்தையும் தந்தருள்வார்”, பின்னர் ஸ்ரீபரசுராமரே துரோணருக்குக் கிரிவல முறைகளை எடுத்துரைத்தார். அதன்படி துரோணர் பல வருடங்கள் திருஅருணாசலத்தை வலம் வந்தார். மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தன்று நவவ்யாகரண தரிசனப் பகுதியில், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் அசரீரியாக, “துரோணா! ஸ்ரீபரசுராமர் அளித்த கோதண்டத்தைத் தாங்கி மார்கழி மூல நட்சத்திரத்தன்று ஸ்ரீகோதண்ட ராமராய் ஸ்ரீராமர் அனுமனுக்குக் காவேரித் தலம் ஒன்றில் அருள்புரிந்தார். அக்காவிரித் திருத்தலத்தில் உன்னுடைய அஸ்திரஹத்தி தோஷம் விலகும். அங்கு அருள்பாலிக்கும் சாந்தவெளி ஹனுமார். உன்னுடைய தோஷங்களை ஏற்று உனக்கு சாபநிவர்த்தி அளிப்பார். அதைத் தரவல்லதே உத்தம விஷ்ணுபதி புண்யகாலமாகும்.

மனிதனின் நிறைவேறாத ஆசைகளே ஏக்கங்களாக மாறுகின்றன. ஏக்கங்களில் இருந்து பிரார்த்தனை பிறக்கின்றது. பிரார்த்தனைகள் நிறைவேறும்போது அவற்றில் இருந்து கர்மங்கள் உருவாகின்றன.

இன்னொரு சற்குருவை பழிப்பதால் கிட்டும் அஸ்திரஹத்தி தோஷம், பிரம்மஹத்தி தோஷத்தைவிடக் கொடியதாகும். அதையே நிவர்த்தி செய்யும் இப்புனித நாள் விஷ்ணுபதிப் புண்யகாலமெனில் என்னே இதன் மகிமை அதன் மகிமை! சாந்த வெளி ஹனுமார், ஸ்ரீகோதண்டராமரை சேவிக்கும் புண்யத் தலத்தில் ஹோம வேள்வி, யாக பூஜைகளையும் தான தர்மங்களையும் செய்து உன் அஸ்திர ஹத்தி தோஷத்திற்குப் பரிகாரம் தேடுவாயாக! உன் பிழையை மன்னிக்கும் பாங்காக அன்று ஸ்ரீபரசுராமரே இத்திருத்தலத்திற்கு வந்து உன் பாத பூஜையை ஏற்று உரிய பரிகாரம் தந்திடுவார். தெய்வ மூர்த்தியையே சற்குருவாகப் பெற்ற சாந்தவெளி  ஸ்ரீஅனுமனே நீ மற்றொரு சற்குருவைப் பழித்து பெற்ற அஸ்திரஹத்தி தோஷத்திற்குப் பிராயச்சித்தம் தரவல்லவர்” என்று அருளினார்.
துரோணாச்சாரியாரும் அவ்வாறாகவே சாந்தவெளி ஸ்ரீஹனுமார் அருள்பாலிக்கும் திருத்தலத்திற்குச் சென்று சகலவித பூஜைகள் தானதர்மங்களைப் புரிந்து  அங்கே வந்து ஆசிர்வதித்த ஸ்ரீபரசுராமருக்குப் பாதபூஜை செய்துத் தன் அஸ்திரஹத்தி தோஷத்திற்குப் பிராயச்சித்தம் பெற்றார்.
பிரம்மஹத்தி தோஷத்தினும் கொடிய அத்தகைய தோஷத்திற்குப் பரிகாரம் தரவல்ல இவ்விஷ்ணுபதி புண்யகாலமானது வரும் 13.2.1996 அன்று அமைகின்றது. இந்நாளில் மேற்குறித்த இத்திருத்தலத்தில் அபிஷேக ஆராதனைகள், தானதர்மங்கள், தர்ப்பண பூஜைகள், பெரியோர்க்குப் பாதபூஜைகள், ஹோம, யாகங்கள் போன்ற இறைப்பணிகளோடு ஆனந்தமாகக் கொண்டாடிட கீழ்க்கண்ட வாழ்க்கைப் பிரச்னைகட்கு நிவாரணம் கிட்டுமென்று ஸ்ரீபரசுராமர் அருளியுள்ளார்.

கடவுளை அடைய முயற்சி செய்வோரில் ஒன்றரை கோடிப் பேர்களில் 10 பேர் மட்டுமே இறைச் சன்னதியின் நுழைவாயில் வரை செல்கின்றனர். வாயிலைத் தாண்டுவதோ ஐந்து பேர் மட்டுமே. சுவாமியிடம் நெருங்குவோர் இரண்டு பேர். சுவாமி வீற்றிருக்கும் கருவறையினுள் செல்பவர் ஒருவர் மட்டுமே.
அந்த ஒருவரின் நிலை என்ன? அதை இறைவன் மட்டுமே அறிவார். அதைத்தான் “சாமி அறிவாரடி, அதைச் சாமி அறிவாரடி” எனப் பெரியோர் பாடி வைத்தனர்.

1. மஹானை இகழ்தல், பழித்தல், துன்புறுத்துதல், நிந்தித்தல்
2. பொய் கூறிப் பிறரைப் பழிவாங்குதல், வஞ்சித்தல், தன்காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளல்
3. ஜாதி, மதம், இன பேதம் கொள்தல்
4. பெரியோர்களை இகழ்தல்
5. கணவன், மனைவிக்கு இழைத்த துரோகம்
6. மனைவி , கணவனுக்கு இழைத்த துரோகம்
7. பிறரை முன்னுக்கு வரவிடாது இழைத்த கொடுமைகள்
8. தன் வாழ்நாளில் இதுகாறும் மறைத்துள்ள இரகசியத்தை இங்கே அர்ப்பணித்துப் பிராயச்சித்தம் காணுதல்
போன்றவற்றிற்கு ஸ்ரீசாந்தவெளி ஸ்ரீஆஞ்சனேயரை வரும் விஷ்ணுபதிப் புண்யகாலத்தில் தரிசித்து நாமசங்கீர்த்தனம், ஹோமம், அர்ச்சனாராதனைகள், தான தர்மங்களுடன் சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் கண்ட பெரியோர்களுக்குப் பாதபூஜை, தமிழ்-வடமொழி வேத பாராயணம் போன்றவற்றுடன் தரிசித்திட நற்பலன்கள் பன்மடங்காகப் பெருகிப் பரிபூரண இறையருளும் வாழ்வில் கூடும்.
கும்பகோணம் அருகில் வலங்கைமானை அடுத்துள்ள காவிரி ஆற்றங்கரையில் புராதன ஆலமரத்தடியில் ஸ்ரீசாந்தவெளி ஹனுமார் அருள்பாலிக்கின்றார். பஞ்சவிம்ஸத்வடி எனப்படும் 25 ஆலமர விழுதுகளின் கீழ் தோன்றி அருள்பாலிக்கும் தெய்வமூர்த்தி!

ஏகாதசி குருவார விரதம்

வியாழக் கிழமையும் ஏகாதசி திதியும் கூடி வருகின்ற விசேஷ தினத்திற்கு ஏகாதசி குருவார விரதம் அல்லது சாதுர்ய குருவார விரதம் என்று பெயர். சாதுர்மாஸ்ய விரதத்திற்கு ஈடான பலனைத் தரவல்லது. இந்நாளில் ஏகாதசி திதி தேவதை, குருபகவானை நோக்கிப் பல யுகங்கள் கடுமையான விரதமிருந்து திதிகளிலேயே முக்கியத்துவமான இடத்தைப் பெற்றனள். ஸ்ரீகுருபகவான் வீணை ஏந்திய கையுடன் ஏகாதசி திதி தேவதைக்குக் காட்சி தந்தருளிய சிறப்பானத் தினமாகும். ஏகாதசி திதி தேவதையே வீணை ஏந்திய ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடமிருந்து ஞானம் பெற்ற விசேஷ நாளாகும்.

ஸ்ரீவீணாதட்சிணா மூர்த்தி
துடையூர்

எனவே இத்திருநாளில் வீணை ஏந்திய ஸ்ரீதட்சிணா மூர்த்தி எழுந்தருளியிருக்கும் தலங்களில் (லால்குடி, துடையூர், திருப்பாற்றுரை, திருவரங்குளம்)
1. மஞ்சள் வஸ்திரம், மஞ்சள் நிறப் பூக்களுடன் ஸ்ரீதட்சிணா மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை செய்திடல்
2. மஞ்சள் நிற உணவு, ஆடைகளை தானமளித்தல்
3. குரவாஷ்டகம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி துதி, “கல்லாலின் புடையமர்ந்து...” என்ற திருமூலரின் பாடலை ஸ்தோத்திரம் செய்தல்
4. பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான உதவிகளை அளித்தல்
5. வீணைக் கருவியில் ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரங்களை / பாடல்களை இசைத்தல்
6. மகான்களின் ஜீவசமாதியில் ஏழை தம்பதிகட்குப் பொன் மாங்கல்யத்துடன் மங்களகரமான பொருட்களை அளித்தல்.
சாதுர்ய குருவிரதமன்று மேற்கண்ட முறைகளில் வழிபாடுகளையும் தானதர்மங்களையும் நிறைவேற்றிட குழந்தைகளின் மந்தமான படிப்பானது நன்முறையில் விருத்தியாதல், தேவையில்லாத  மனக்குழப்பத்திலிருந்து விடுபட்டுத் தெளிவு பெறுதல் போன்ற நற்பலன்கள் கிட்டும்.
கிரிவல தரிசனம் தரும் பலன்கள்
ஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்திலிருந்து திருஅண்ணாமலையை தரிசித்திடும் போது நாம் பெறும் தரிசனமே சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனம். இவ்வாறாக சுமார் பதினைந்து கி.மீ தூரம் உள்ள திருஅண்ணாமலை கிரிவலச் சுற்றில் நடந்து வருகையில் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு தரிசனத்தைப் பெற ஒரு முறை சிரசைத் தூக்கி மலையை வணங்க வேண்டும்! ஒவ்வொரு தப்படிக்கும் கூட மலையின் அமைப்பு மாறுவது விந்தையிலும் விந்தை! இவ்வாறு நாம் பெறுகின்ற தரிசனங்கள் ஆயிரமாயிரம்! ஒவ்வொரு தப்படியிலும் காண்கின்ற மலை தரிசனத்திற்கு ஒவ்வொரு பெயர் உண்டு! ஒவ்வொரு தரிசனத்திலும் கழிகின்ற வினைகளோ ஏராளம், ஏராளம்.
சேரும் கர்ம வினைகள்
தன் வாழ்நாளின், ஒவ்வொரு தினத்திலும் ஒவ்வொரு மணியின் ஒவ்வொரு நிமிடத்திலும் தான் மனிதன் எத்தகைய, எத்தனையெத்தனை கர்மவினைகளைச் சேர்த்துக் கொள்கிறான்! பொய், திருடு, சூதாட்டம், (சீட்டு, குதிரை, ரேஸ், லாட்டரி டிக்கெட் etc) ஏமாற்றுதல், பிறர் பொருளை அபகரித்தல், இலஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, அதிகார துஷ்பிரயோகம், பிறன்மனை துய்த்தல், விபச்சாரம், கடன் கொடுத்தவர்களை ஏமாற்றுதல், முறையற்ற காமம், கடத்தல் தொழில், தேசதுரோகச் செயல்கள், பெரியோர்களை அவமதித்தல், மஹான்களுக்குத் தீங்கிழைத்தல், தாய் தந்தையை, மனைவி, குழந்தைகளைத் துன்புறுத்தல், போன்ற தீய செயல்களில் ஈடுபட்டவாறு தானே பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கை கழிகின்றது?
தன்னுடைய ஒவ்வொரு கர்மவினைக்கும் பிராயச்சித்தம் செய்வதானால் மனிதனுக்குக் கோடி கோடி ஜென்மங்கள் தேவைப்படும். அனைத்துக் கர்ம வினைகளையும் தீர்க்க வல்லது திருஅண்ணாமலை தரிசனங்களே என்பது நிதர்சன உண்மையே! கொடியவர்கள் இதை அறிந்தால் அனைத்துக் கர்மவினைகளுக்கும் பரிஹாரங்களைத் தேடி மலைச் சுற்றி வந்து விடுவார்களே! ஆனால் கொடியவர்களும் திருந்தினால் தானே சமுதாயம் சாந்தி பெறும். இதைச் செய்ய வல்லது கிரிவலமே! திருஅண்ணாமலையின் ஒவ்வொரு தரிசனத்திற்கு சித்த புருஷர்கள் ஒவ்வொரு பெயரைத் தந்து அதன் தரிசன பலன்களையும் எடுத்துரைத்துள்ளனர்.
மஹான்களின் கிரிவலம் ஏன்?
கோடி கோடியாக சித்தபுருஷர்களும், மஹரிஷிகளும் யோகியரும் ஞானிகளும், முமூட்சுக்களும் உலவும் புனித பூமி திருஅண்ணாமலை! ஒவ்வொருவரும் பலகோடி யுகங்கள் (ஆண்டுகளல்ல) திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து, எண்ணற்ற இறைப் பணிகள் புரிந்து தம்முடைய தபோ, புண்ய தெய்வீக சக்திகளை கிரிவலத்தின் ஒவ்வொரு அடி தூரத்திலும், தரையிலும் விண்வெளியிலும் அருணாசல விருட்சங்களிலும், சூட்சுமமாகப் பதித்துள்ளனர். “யாரொருவர் அறிந்தும் அறியாமலும் கிரிவலத்தின் இப்பகுதியிலிருந்து மலையை தரிசனம் செய்கின்றார்களோ அவர்களுக்கு இன்ன கர்மவினைகள் தீர்வதாக, இன்ன கர்மவினைகள் தீர்வதற்கான நல்வழி அமைவதாக” என்று ஒவ்வொரு மஹரிஷியும் சித்தரும் அந்தந்தப் பகுதியில் ஸங்கல்பம் செய்கின்றனர்.
சில சித்த புருஷர்கள் சில கர்மவினைகளின் கடுமையைப் பொறுத்துச் சில தான, தர்மங்களையும் சில தரிசனப் பகுதிகளில் நிர்ணயிப்பதுண்டு. இவற்றையே சற்குருமார்கள் கலியுகத்தில் சூட்சுமமாக அறிவிக்கின்றனர். கிரிவலத்தின் பல பகுதிகளில் தூர்வாஸர், கௌதமர், பஞ்சமுகரிஷி, சிவராஜ மகரிஷி, சுகமுனி, சாணக்ய மகரிஷி போன்ற மஹரிஷிகளும் இடைக்காட்டு சித்தர், குப்பை சித்தர், இசக்கி சித்தர், சட்டநாத சித்தர், குதம்பைச் சித்தர், போகர், புலிப்பாணி போன்ற சித்த புருஷர்களும், குருநமசிவாயர், ஈசான்ய சித்தர், சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமண மஹரிஷி போன்ற கலியுக ஞானிகளும் பல இடங்களில் ஆஸ்ரமங்கள் அமைத்துத் தங்களுடைய தவசக்தியை அவ்விடத்திலும் விண்வெளியிலும் விரவிப் பரவுமாறு செய்து அவற்றை இறைவனுக்கே அர்ப்பணிக்கின்றனர்.
இவ்விடங்களில் நடந்து நாம் கிரிவலம் வர.... அப்பப்பா.... புனித தேகங்களின் திருப்பாதங்கள் பட்ட புனித பூமியில் நடந்தாலே எண்ணற்ற கர்ம வினைகள் தீருமே! அடியார்கள் பாவங்களைச் சுமந்து மஹான்கள் படுகின்ற வேதனைகள், துயரங்கள் எத்தனை, எத்தனை? மானிடர்களாகிய நாம் இனியேனும் நல்வாழ்க்கை வாழ மாட்டோமா? – என்ற நன்னம்பிக்கையில் தான் சித்தர்களும், மஹான்களும் திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் நம் கர்மவினைகளை ஏற்று அருள்பாலிக்கின்றனர்.

கிரிவலத்தில் கர்மவினைப் பரிபாலனம்
சில கர்மவினைகளை உடனே தீர்த்து விடலாம். பல கர்ம வினைகள் எளிதில் தீர்வதில்லை. காரணம், கர்மவினை எளிதில் தீர்வதும் தீராமல் இருப்பதும் அக்கர்ம வினையின் விளைவுகளைப் பொறுத்ததே! ஒரு சாதாரண நாயைக் கல்லால் அடித்து அதற்குக் கால் ஒடிந்தால் அக்கர்மவினையின் விளைவானது அந்த ஊனமான நாயின் துன்பங்கள் தொடரும் வரை அவையும் தொடரும்.
உதாரணமாக இன்று தருவதாகச் சொல்லி ஒரு ஆயிரம் ரூபாயைக் கடன் வாங்கியிருந்தால் இன்று தராவிட்டாலும் நாளையேனும் வட்டியோடு சேர்த்துக் கொடுக்கலாம். எனினும் இதுவும் (சிறிய) கர்மவினையாகும். இந்த ஒரு நாள் இடைவெளியில் (தராத) ஆயிரம் ரூபாய்க்காக, கடன் தந்தவர் பட்ட கஷ்டங்கள், மன வேதனைகள், நஷ்டங்களை (வட்டியோடு திருப்பிப் பணத்தை அளித்தாலும் கூட) கடன் பெற்றவரும் அதே அளவில் என்றேனும் அனுபவித்தால் தான் இக்கர்ம வினை தீரும்.

பூலோகத்தில் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பிறந்த திருத்தலம் திருமீயச்சூர்.
திருஅண்ணாமலையில் 362 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் கண்படாத தீர்த்தங்கள் 300 உள்ளன.

தீர்ப்பீர் கர்ம வினைகளை :- இக்கர்ம வினை திருஅண்ணாமலை கிரிவலத்தில் எவ்வாறு தீர்கின்றதென்று பார்ப்போம்.
1. கடன் கொடுத்தவர் அந்த ஆயிரம் ரூபாயைக் குறித்த காலத்தில் பெறாததால் அவர் அனுபவித்த துன்பங்களைக் கடன் வாங்கியவரும் அனுபவிக்க வேண்டுமல்லவா?
கிரிவலப் பாதையில் முள் குத்துதல், கால் சுடுதல், வெயிலில் தலை, உடல் தகிப்பு, தாகம், மூட்டுவலி, கால்வலி, தலைவலி போன்ற உடல் உபாதைகளாக அமைந்து அக்கர்ம வினைகள் கழியும்.
2. கிரிவலத்தில் இயன்ற அளவு உணவுப் பண்டங்களை தானமாக அளிக்கையில் அதற்குப் பணம் கொஞ்சம் செலவாகின்றது அல்லவா? ஆயிரம் ரூபாயைக் கடனாகக் கொடுத்தவர் அது திரும்பி (குறித்த காலத்தில்) வராமையால் ஏதேனும் பண இழப்புக்கு ஆளாகியிருந்தால் அக்கர்ம வினையின் விளைவுகள் இத்தான செலவுகளில் ஈடாகிறது. ஆனால் அந்தப் புண்ணியம் கடன் கொடுத்தவருக்கு போய்ச் சேறுகிறது.
3. ஒரு நாள் கடனுக்கு இவ்வளவு கர்மவினைகள் என்றால் ஆயிரமாயிரம் ரூபாயைக் கடன் வாங்கி வருடக்கணக்கில் திருப்பித் தராமலிருந்தால் அளவற்ற கர்மவினைகள் அல்லவா வட்டியும் முதலுமாகச் சேரும் ? எண்ணிப் பாருங்கள், கர்மவினைகளின் கொடுமைகளை!
4 கொடுத்த கடன் வராமையால் ஒரு நாளாக இருந்தாலும் அதை எண்ணி எண்ணியே கடன் கொடுத்தவர் பூஜை, வழிபாடு, கோயில் தரிசனத்தைக் கைவிட்டிருக்கலாம்.இதுவும் கர்மவினைகளாகக் கடன் வாங்கியவரை பாதிக்கும். கிரிவலத்தில் கடன் பெற்றவர் ஜபிக்கின்ற மந்திரம், இறைத் துதிகள், கோயில் தரிசனம் ஆகியவற்றில் ஒரு பங்கு கடன் கொடுத்தவருக்கே சென்று விடும். இதனால் அவர் விட்ட பூஜை, வழிபாடு, கோயில் தரிசனப் புண்ய சக்தி ஈடுசெய்யப்படும்.
5. கடன் கொடுத்தவர் “நாசமாய்ப்போக, பேதி வருவதாக.,” என்று ஏசியிருந்தால் கூட அது கடன் பெற்றவரைத் தாக்கும். இதுவே திருஅண்ணாமலை யாத்திரையில் அல்லது வெளியிலோ ஏற்படும் வயிற்று உபாதைகளாக மாறி விடும். எனவே இவற்றை புனித யாத்திரையில் நமக்குத் துன்பமா? என்று மனம் வருந்தாமல் இவற்றைத் துன்பங்களாக ஏற்காது கர்மவினைக் கழிப்பு என்று ஏற்றால் மனம் சாந்தி பெறும்.
இவை தவிர ஒவ்வொரு கர்மவினையும் பல்வேறு விதங்களில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஓர் ஆயிரம் ரூபாய்க் கடனை ஒரு நாள் தள்ளிக் கொடுத்ததற்கே இவ்வளவு கர்ம வினைகள் என்றால் மனிதன் ஒவ்வொரு விநாடியும் செய்கின்ற செயலினால் எவ்வளவு கர்மவினைகள் உண்டாகின்றன! இவையனைத்திற்கும் ஒட்டு மொத்தமாக திருஅண்ணாமலை கிரிவலம் அமைகின்றதென்றால் அதன் மஹிமை என்னே! எனவே அதிஅற்புதப் பலன்களையும் வரங்களையும் அனுக்ரஹங்களையும் தரவல்ல திருஅண்ணாமலை கிரிவலத்தை வாழ்நாள் முழுதும் இயன்ற போதெல்லாம் மேற்கொண்டு கர்மவினைகளைத் தீர்த்து எமபயம் வென்று உத்தம இறைநிலையை எளிதில் அடைவோமாக!

காயத்ரீ தபஸ்

ஸ்ரீகாயத்ரீ தபஸ் – ஸ்ரீகாயத்ரீ முத்திரைகள் – தொடர் கட்டுரை
ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் முழுப் பயனையும் பெற, உடல், மனம் இரண்டையும் ஐக்யத்துடன் ஒருமுகப்பட்டுச் செயல்பட வைக்கும் ஆன்மீகப் பயிற்சி முறைகளை, ஸ்ரீகாயத்ரீ முத்திரைகளை இத்தொடரில் நம்குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அளித்து வருகின்றார்கள்.
ஆலிங்கன தியானம்
பத்மாசனத்தில் அமர்ந்து உடல் உறுப்புகளை முதலில் நிதானப்படுத்த வேண்டும். தினமும் குறைந்தது பதினைந்து நிமிடங்களேனும் ஸ்ரீகாயத்ரீ தபஸ் (முத்திரைப்) பயிற்சிக்காக ஒதுக்கிடல் வேண்டும். பத்மாசன நிலையில் இரண்டு கைகளையும் முகத்திற்கு எதிரில் ஒன்றாக நீட்டி இடது கையை வலது கை மேல் வைத்து (படத்தில் உள்ளபடி) விரல்களைக் கோர்த்து, கட்டைவிரல்கள் மட்டும் தனித்து நிற்கும்படி “வியூகம்” அமைத்திட வேண்டும். இதுவே ஆலிங்கன வியூகம். ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை மனதினில் ஜபித்தவாறே பார்வைதனை இடது கைவிரல்கள், வலது கை, மணிக்கட்டு இடது கைவிரல்கள், வலதுகை விரல்கள், வலது மணிக்கட்டு, முழங்கை வழியே செலுத்தி வலது தோளில் முடித்திட வேண்டும். முகம் நேர்முகமாக இருக்க, பார்வை மட்டுமே கையின் மேல் பரவிட வேண்டும். மீண்டும் வலது தோளில் பார்வையைத் தொடங்கி வலது முழங்கை, மணிக்கட்டு, வலதுகை விரல்கள், இடக்கை விரல்கள், இடது மணிக்கட்டு, முழங்கை வழியே செலுத்தி இடது தோளை அடைந்திட இந்த ஒரு முழு சுழற்சியே ஆலிங்கன தியானமாகும். மானஸீகமான ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபத்தை மறந்து நிறுத்திடலாகாது! இதனைக் குறைந்தது பத்து நிமிடங்களேனும் பயில வேண்டும்.

ஆலிங்கன தியானம்

பலன்கள்
1. சூரிய கலை (வலதுநாசி) சந்திர கலை (இடதுநாசி)யில் நம் சுவாசம் மாறி மாறிச் செல்வதால்தான் மனக் குழப்பமும் தீர்க்கமாக முடிவு செய்ய இயலா நிலையும் ஏற்படுகிறது. எனினும் ஆண், பெண் இருபாலரும் குறித்த சில காரியங்களை நிறைவேற்ற சூர்ய அல்லது சந்திர கலையில் சுவாசங்களைச் செலுத்திடில் எடுத்த காரியம் ஜயம் பெறும். சுழுமுனையில் (இருநாசி சுவாசம்) பல கார்யங்களைச் செய்திட அவை மங்களகரமாக முடியும். இத்தகைய விளக்கங்களைத் தக்க சற்குருவை நாடிப் பெறுதலே உத்தமமானதாகும்.
பலரும் சுயநலம், அதர்மமான முறையில் செல்வம் சேர்த்தல் போன்று சுயநலத்தின்பால் செயல்படுத்துவதைத் தவிர்க்கவே சுவாச பந்தன முறைகள் ஆன்மீக இரகசியங்களாக வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக சுழுமுனை சுவாச முறையில்தான் தியானம் மேம்படும். சூர்ய, சந்திர சுவாச கலைகள் இதில் ஆலிங்கனமாகிட, எளிய சுழுமுனை சுவாசத்திற்கு வழிவகுப்பதே ஆலிங்கன தியானம்.
2. பொறாமை, குரோதம், பகையுணர்ச்சிகள், எதிர் எண்ணங்கள் இவை கட்கிடையில் தான் நாம் வாழவேண்டியுள்ளது Negative Forces/Vibrations  எனப்படும் பகையுணர்வுகளை எதிர்த்து நிற்கத் தக்க ஆன்மீக சக்தி (spiritual strength) தேவை! இதனைப் பெறுவதற்கு ஆலிங்கன தியானம் உதவுகிறது . அக்காலத்துப் போர்க்களத்தில் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள “வியூகம்” அமைப்பது போல, ஸ்ரீகாயத்ரீ தியானத்துடன் கூடிய ஆலிங்கன காயத்ரீ முத்திரையானது உடல், மனதைச் சுற்றித் தற்காப்புக் கோட்டையை எழுப்பி பகையுணர்வுகளிடமிருந்து நம்மைக் காக்கின்றது.
3. முக்கியமான காரியம், பத்திரங்கள் கையெழுத்திடல், ஒப்பந்தம் (Contract, agreement etc..) வியாபார, தொழில் ரீதியான கார்யங்கள் – போன்றவற்றில் எதிர் உணர்வுகளை தார்மீக ரீதியாக முறியடித்து நற்காரியங்கள் நிறைவுபெற அச்சமயங்களில்/அவ்விடத்தில் இந்த முத்திரையைப் பயின்று சென்றால் தீர்கமான முடிவைப் பெறலாம். ஆனால் சுயநலம், அதர்மம், அசத்யமான கார்யங்களுக்கு இதைப் பயன் படுத்தலாகாது.

எறும்பின் ஆன்மீக சக்திகள்

எறும்புகளின் வாழ்க்கை மனிதனுக்குப் பல போதனைகளைத் தருகின்றது. சத்சங்கக் கூட்டு வாழ்க்கை, சுறுசுறுப்பு, பகிர்ந்து உண்ணுதல் – போன்றவை நாமறிந்ததே! ஆன்மீக ரீதியாக எறும்புகள் மனிதனைவிடப் பல ஆன்மீக இரகசியங்களைக் கொண்டிருக்கின்றன. இன்றைக்குப் பெருகி வரும் கம்ப்யூட்டர் விஞ்ஞானம் எறும்புகளின் புற்றுகளில் என்றோ கடைபிடிக்கப்பட்ட ஒன்றே! கேட்பதற்கு வியப்பாகவோ, கட்டுக் கதையாகவோ இருக்கலாம். ஆனால் எறும்புப் புற்று மண் கூடிய சிலிகோன் (silicon) தான் இன்றைக்கு CHIP- ஆகக்கொடிகட்டிப் பறக்கின்றது. மழை, வெப்ப தட்ப நிலைகளை மனிதனுக்கு முன்னரேயே கச்சிதமாகக் கணிப்பவை எறும்புகளே! எறும்புகளின் புற்றுக்குள் நுழையும் தன்மையை எந்த விஞ்ஞானியாவது பெற்றால், அவற்றின் சமுதாய வாழ்க்கை, மனித குலத்தை விட விஞ்ஞானமானது என்பதை நொடிப் பொழுதில் உணர்ந்திடுவார். இவற்றையெல்லாம் தீர்க தரிசனமாக ஸ்ரீஅகஸ்தியர் நாடிகளிலும், கிரந்தங்களிலும் விவரித்துள்ளனர். ஸ்ரீஅகஸ்தியரின் சிஷ்யராம் போகர் சீன தேசத்தில் பல யுகங்களுக்கு முன்னரேயே விமானத்தில் பறந்ததாக சித்தர்களின் பாடல்கள் விவரிக்கின்றன.
பிரச்சனையைத் தீர்க்கும் எறும்பு பிரச்னம்
சித்தபுருஷர்கள், எறும்புகளின் வாழ்க்கையை பற்றி விளக்கமாக எடுத்துரைத்துள்ளனர். இன்றைக்கும் கேரளத்தில் நாடிப் பிரச்னம் நட்த்துவோர் பச்சரிசிக் கோலமிட்டு எறும்பு எத்திசையிலிருந்து வருகின்றது என்பதை கணித்தே பிரச்னத்தைத் தொடங்குவர். “பிள்ளையார் எறும்பு” எனப்படும் ஒரு வகை எறும்பிற்கு அவர்கள் முக்யத்வம் கொடுக்கின்றனர். ஏனெனில் எதிர்காலத்தை நுணுக்கமாக அறிந்த தீர்க்க தரிசனத்துடன் அறிவிக்கக் கூடிய அற்புதமான டெலிபதி (Telepathy) குணாதிசயங்களைக் கொண்டது பிள்ளையார் எறும்பு.

திருவெறும்பூர் திருத்தலத்தை முழங்கால் இட்டபடியே வலம் வந்து வணங்குவதால் கம்ப்யூட்டர் அறிவு விருத்தியாவது மட்டுமன்றி குரு நம்பிக்கையும் பல்கிப் பெருகும் என்பது உண்மையே. ஆனால், முழங்காலிட்டு வலம்வர முடியாத நிலையில் உடல் வியாதிகளோ, சூழ்நிலைகளோ அமைந்து விட்டால் அத்தகையோர் என் செய்வது என்று ஒரு முறை நம் சற்குருவை வினவியபோது நம் சற்குரு அளித்த பதிலோ, “உண்மையாகவே உன்னால் அவ்வாறு முழங்கால் பிரதட்சிணம் வர முடியாவிட்டால் இங்கு அளித்துள்ள பொருட்களை வறுத்து நன்றாக அரைத்து பொடி செய்து அவற்றை எறும்புகளுக்குத் தீனியாக திருவெறும்பூர் திருத்தலத்தில் இட்டு வருவதும் முழங்கால் பிரதட்சிணத்திற்கு இணையான பலனை அளிக்கக் கூடியதே,” என்று மனமுவந்து அருளினார்கள்.
1. கேழ்வரகு 2. கோதுமை 3. உளுந்தம்பருப்பு 4. துவரம்பருப்பு 5. பொட்டுக்கடலை 6. நிலக்கடலை அல்லது வேர்க்கடலை (நெய்யில் வறுத்து பொடி செய்து சேர்க்கவும்) 7. உப்பு (தேவையான அளவு) 8. சோன்பப்டி என்ற இனிப்பு வகை 9. பால்கோவா (பசும்பாலில் செய்வது சிறப்பே)

ஸ்ரீஎறும்பீஸ்வரர் : திருச்சி திருஎறும்பூரில் (தற்போதைய திருவெறும்பூர்) சிறுகுன்றில் சிவபெருமான், ஓர் எறும்பிற்கு முக்தி தந்து ஸ்ரீஎறும்பீஸ்வராக அருள்பாலிக்கின்றார். எறும்பிற்கு முக்தி கிட்டிய தலமென்றால் எத்தகைய சக்தி வாய்ந்த சிவத்தலம்!
கணவன் எங்குள்ளான் என்று அறியாமல் கலியுகத்தில் வேதனையுடன் வாழ்கின்ற பெண்மணிகள் பலர் உண்டு. இவர்கள் ஸ்ரீஎறும்பீஸ்வரர் ஆலயத்தில் இறை பணிகள் செய்து, எறும்பு போல முட்டிக் கால்களில் தவழ்ந்து ஊர்ந்து ஸ்ரீஎறும்பீஸ்வரரைப் பிரதட்சிணம் செய்தல், ஆலயம் முழுதும் குறிப்பாக மலைப்படிக் கட்டுகளில் பச்சரிசி மாவுக் கோலமிடுதல், இவ்வாலயமெங்கும், பாறைப் பகுதிகளிலும் நவதானியப் பொடி, இரவை, சர்க்கரை கலந்த குறுணையை எறும்புகளுக்கிடுதல் போன்ற நற்காரியங்களைச் செய்துவர அவர்கள் நற்செய்தியைப் பெறுவர். கல் பொடி (மொக்குப் பொடி) மாவினால் கோலம் போடக் கூடாது. இது சாபங்களைப் பெற்றுத் தரும்.
எறும்புகள் பெற்ற வரம்
ஒரு யுகத்தில் ஸ்ரீஎறும்பீஸ்வரரிடம் எறும்புகள் பெற்றன ஒரு வரம்! என்ன வரமோ? “இறைவா! சாதுக்களான எங்கள் எறும்பு குலத்திற்கு மனித குலத்தினால் ஏற்படும் இன்னல்கள் எத்தனை, எத்தனை! மனிதர்களிடம் நாங்கள் படும்பாட்டை என்ன சொல்வது! ஆனால் இதற்காக நாங்கள் மனித குலத்திற்கே ஏதேனும் சாபத்தைப் பெற்றுத்தர விரும்பவில்லை. மாறாக, எங்கள் ஜீவசக்திக்காக நாங்கள் மனித குலத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நியதியிருப்பதால் இறையருள் பெருகும் கோயில், தீர்த்தம், தலங்களில் எங்களுக்கு உணவிடுவோர்க்கு நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு நிமிடம் தவமிருந்து அந்தத் தபோபலனை எங்களுக்கு அன்னமிட்டோர்க்கு அளிக்கின்றோம்” –என்று வேண்டிட ஸ்ரீஎறும்பீஸ்வரரும் அதனை அவ்வாறே எறும்புக் குலத்திற்கு வழங்கி அருள்பாலித்தார். பாருங்கள், எறும்புகள் கூட சுயநலமாக எதையும் இறைவனிடம் கேட்டுப் பெறவில்லை. ஆனால் மனிதர்களோ இறைவனிடம் எதை வேண்டுவது என்ற இலக்கணமே இல்லாமல் சுயநலத்தின் மொத்த உருவாய் எதை எதையோ பலர் வேண்டி மாயச் சுழல்களில் சிக்குகின்றனர்.
திருஎறும்பீஸ்வரர் கோயிலில் ஒரு சுரங்கப் பாதை உள்ளது. இது ஸ்ரீரங்கத்துடன் தொடர்புள்ளதாகும். ஸ்ரீரங்கநாதர் நோக்கும் திக்கில் இம்மலை அமைந்துள்ளது., இதனுள் இன்றைக்கும் ஸ்ரீமுக்தீஸ்வர சித்தர், ரோமச மஹரிஷி போன்ற சித்த புருஷர்களும் மஹான்களும் தவம் புரியும் அற்புதச் சுரங்கம் தினமும் நள்ளிரவில் சித்தர்களும் மஹான்களும் எறும்பு வடிவிலும் அரூபமாகவும் ஸ்ரீஎறும்பீஸ்வரரைப் பூஜிக்கின்றனர். ஸ்ரீமுக்தீஸ்வர சித்தர் தம்முடைய அரிய கிரந்தகளில் எறும்புகளுகு உணவிடும் கையங்கர்யத்தினால், அதன்படி திருஎறும்பூரில் எறும்புக்கு உணவிட்டு முழங்கால் முட்டியில் ஊர்ந்து மூலவரைப் பிரதட்சிணம் செய்து வருவோர்க்கு (விட்டுச் சென்ற) கணவனைப் பற்றிய நற்செய்தி கூடி வரும். ஒருவேளை சாப்பாட்டிற்கும் துணி மணிகளுக்கும் கூட வழியில்லாது தரித்திர நிலையிலிருப்போர் நன்னிலையடைவர். ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையும் மாறாத வைராக்கிய நிலையுமே இதற்கு அஸ்திவாரம், ஸ்ரீஎறும்பீஸ்வரரை பரிபூர்ண நம்பிக்கையுடன் மேற்கண்ட முறையில் வழிபட்டு வாருங்கள்! நற்கதியை எளிதில் பெறலாம்.

மலைக்கோட்டை மகிமை

திருச்சி மலைக்கோட்டை மஹிமை
உத்தமர் கோயிலில்...... சுகன்னாத பட்டரும் குணசமவர்தரும் மூலவரின் சந்நதியில் நைவேத்யத்திற்காக வைத்திருந்த தங்கத் தாம்பாளத்தைக் காணவில்லை என்றதும் அதிர்ச்சி அடைந்தனர். ... “இறைவா! என்ன சோதனை இது! நாங்கள் என்ன தவறு செய்தோம்! பூஜை கிரமங்களில் ஏதேனும் பிழையா! பஞ்சம் என்பதற்காகத்தானே நைவேத்யத்தின் அளவைக் குறைத்தோம், அதுவா குற்றம்...” சுகன்னாதர் புலம்பித் தீர்த்தார். ஆனால் குணசம்வர்தர் சற்றும் மனம் தளரவில்லை. ஐயனார் என்னைக் கைவிடமாட்டார். என்று கூறியவாறே ஸ்ரீஐயனார் சந்நதிக்கு விரைந்தார். அந்த காலையில்..... எங்கெங்கோ அலைந்தும் குணசம்வர்தருக்கு ஸ்ரீஐயனாருக்கு நைவேத்யம் செய்ய எதுவும் கிடைக்கவில்லை. தன் வீட்டிலிருந்த நெல்லும் தீர்ந்து விட்டது. உண்மையில் அக்கம் பக்கத்தவர்களிடமும் சிறிதும் இல்லை. மண், மக்கு, கல், குதும்பைகளுடன் ஏதோ சிறிது நெல் வந்தது. அதை ஸ்ரீஐயனாருக்குப் படைக்க குணசம்வர்தருக்கு விருப்பமில்லை.

ஸ்ரீதாயுமான ஈசர் திருச்சி மலைக்கோட்டை

“பெருமாளிடம் முறையிடுவோம்”. என்று எண்ணி அவர் பெரிய கோயிலுக்கு வந்து சுகன்னாத பட்டரிடம் நிலையை விளக்கினார். பஞ்சத்தின் நடுவில் கோடைகாலம் முழுவதும் வரவேண்டும் என்பதற்காக ஒரு உழக்கு, அரை உழக்குமாய்ப் பெரிய கோயிலில் நித்ய நைவேத்யம்!  அதுவும் திரிசிர மஹராஜா எப்போது அதையும் பிடுங்கி விடுவானோ என்ற அச்சத்தின் நடுவில்! அப்போது, பஞ்சத்தின் காரணமாகப் பல கோயில்களில் நைவேத்யத்திற்காக உணவு படைப்பது நிறுத்தப்பட்டு கிடைக்கின்ற நொய்க் கஞ்சி, கூழ், பழங்கள், உலர்ந்த பழங்கள், கரும்பு, பானகம் போன்றவை படைக்கப்பட்டன். சுகன்னாதர் குணசம்வர்தரிடம், “நீ திருச்சி மலைக்கோட்டைக்குச் சென்று திரிசிர மஹாராஜாவைப் பார்க்க வேண்டியதிருக்கிறதே, இன்று நீ போகாவிடில் திரிசிரனே படையெடுத்து வந்து விடுவான். ஸ்ரீஐயனாரை எக்காரணம் கொண்டும் நான் பட்டினி போட விடமாட்டேன். பெருமாளிடம் வேண்டிக் கொண்டு அவருக்கு இன்று நைவேத்யம் செய்வதையே உன்னிடம் தந்து விடுகிறேன்! அதனையே ஸ்ரீஐயனாருக்கும் நைவேத்யமாகப் படைத்து விடு, பிறகு கடவுள் இஷ்டம்” என்றார். குணசம்வர்தரும் இதனை மனப்பூர்வமாக ஏற்றுச் சம்மதித்தார். வழக்கம் போல் உத்தமர் கோயில் மூர்த்திக்குத் தங்கத் தாம்பாளத்தில் நைவேத்யம் காட்டியவுடன் அதை ஸ்ரீஐயனாருக்கும் எடுத்துச் செல்லலாம் என்று குணசம்வர்தரும் எண்ணியிருந்தார். ஆனால்.... இறைவனின் திருவிளையாடல் வேறாக இருக்கின்றதே தங்கத் தாம்பாளத்தையே காணவில்லையே! கண்களில் நீர்மல்க, துடிதுடிப்புடன் இதோ குணசம்வர்தர் ஸ்ரீஐயனார் சம்வர்தரைக் கூவியழைக்கின்றார். ஆனால் அதெல்லாம் குணசம்வர்தரின் காதுகளில் விழவில்லை.

உத்தமர் கோவில்

நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஸ்ரீஐயனாரைப் பனித்த கண்களுடன் நெஞ்சுருகி வேண்டி நிற்க... எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தாரோ, அவருக்கே தெரியாது! ... அயற்சி நீங்கியவராய் குணசம்வர்தர் கண்களைத் திறந்திட.... ஸ்ரீஐயனாரின் மடியில் தங்கத் தாம்பாளம், ஸ்ரீஐயனாரின் திருமேனி, கைகள், வாய்தனில் சாதப் பருக்கைகள்! ஆமாம், ஸ்ரீஐயனார் நைவேத்யத்தை ஏற்று விட்டார். அதற்குள் நடந்ததை அறிந்து ஊர்மக்கள் கூடி இவ்வற்புதத்தைக் கண்கொள்ளாக் காட்சியாகக் கண்டு உளம் பூரித்து நிற்க....
இறைவனின் திருவுளமோ வேறு! ஸ்ரீஐயனாரே குணசம்வர்தரின் வடிவில் திருச்சிக்குத் திரிசிரனைச் சந்திக்கச் சென்றார். “என்ன இது! உத்தமர் கோயிலிருந்து கப்பத் திரவியங்கள் ஒன்றும் வரவில்லையா?” திரிசிரனின் தலைமை அமைச்சர் வினவினார். குணசம்வர்தரின் வடிவிலிருந்த இறைவன் மறுமொழி ஏதும் கூறாது நின்றார். “உத்தமர் கோயிலில், இறைவனுக்கு மூன்று வேளையும் அரிசிச் சோறு நைவேத்யமாகிறதாமே, அது மட்டும் எப்படி சாத்யமாகிறது” மீண்டும் மௌனம்..“திரிசிர மஹாராஜாவிடம் சொல்ல வேண்டியது என் கடமை! சினம் வந்தால் மனிதர்களையே அவர் விழுங்கி விடுவார் என்பது உனக்குத் தெரியும்! கடைசியாக எச்சரிக்கிறேன், கப்பமே கொண்டு வரவில்லையா?”
மௌனம்! தலைமை அமைச்சர் குழப்பமுற்றவராய்த் திரிசிர மஹாராஜாவிடம் விஷயத்தை விளக்கினார். நாலே பாய்ச்சலில், கோபத்தின் உச்சத்தில் வெளி வந்தான் திரிசிரன். கொஞ்ச காலமாகவே “உத்தமர் கோயில்” என்ற பெயரே அவனுக்கு வேப்பங்காயாகக் கசந்தது. “என்ன தைரியமிருந்தால் மூவுலகையும் ஆட்சி செய்யும் வல்லமை பெற்ற என்னை ஒரு சிறு குறுநில மன்னன் எதிர்ப்பான்! ஒரு வருடத்திற்கும் மேலாயிற்று, ஓர் உழக்கு அரிசி கூட வரவில்லை, எவரும் எட்டிப் பார்க்கவும் இல்லை”
“யாரங்கே...!” பெருத்த குரலுடன் தன் ராட்சஸ உருவத்துடன் பாய்ந்தான் திரிசிரன்! எதிரே... திரிசிரனின் உருவத்துடன் ஒப்பு நோக்குகையில் ஒரு சிறு சுண்டைக் காயாளவில் குணசம்வர்தர் (இறையுருவம்)!
திரிசிரன் திகைத்து நின்று விட்டான்! “ஒரு பொடியனா வெறுமனே நிற்கின்றான்! ‘எங்கே உனது கப்பத் திரவியங்கள்?’ என்றவாறே சினத்தால் சிவந்து விண்ணுக்கும் மண்ணுக்குமாய் இராட்சஸ உருவில் விரிந்து நின்ற திரிசிரனால் இந்தக் கேள்வியைத்தான் கேட்க முடிந்தது! குணசம்வர்தர் (இறைவன்) வாயிலை நோக்கிக் கையைக் காட்டினார்.

நேத்ரமணியை (குண்டுமணி) கையில் வைத்து ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி ஸ்ரீவிநாயகருக்கு அபிஷேகம் செய்தால், கண் சம்பந்தமான நோய்கள் தீரும். குறிப்பாக, மாலைக்கண் நோய் குணமாகும். கண்ணாடி அணிந்தவர்களின் power அதிகரிக்காது.

அங்கே.... ஆயிரக்கணக்கான மாட்டு வண்டிகளில் நெல் மூட்டைகள்! கண்களுக்கு எட்டிய தூரம் வரை மாட்டு வண்டிகள்! திரிசிரன் தன் தலைமை அமைச்சரை நோக்க, அவர் தலைகுனிந்தார்! திரிசிரனாலேயே நம்ப முடியவில்லை! தன் வாழ்நாளில் இவ்வளவு தானிய மூட்டைகளை ஒரே பார்வையில் அவன் பார்த்ததில்லை! “திரிசிரமஹாராஜா! தங்கள் கிடங்குகளில் இவற்றை வைக்க முடியுமா?” திரிசிரன் அதிர்ச்சியடைந்தான். அசுர குணமாயிற்றே விட்டு விடுமா?
“பல லோகங்களிலும் விரவிக் கிடக்கும் என் நிலப்பரப்பிற்கு இவை போதுமா?” அதற்குச் சொல்லவில்லை மஹாராஜா! தங்கள் ஆட்சியில் பஞ்சம் இருப்பதாகக் கேள்விபட்டோம்! இவை அனைத்தும் கப்பம் கட்டுவதற்காக வரவில்லை! எவ்வளவு கப்பம் தேவையோ அதை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள்! பிறகு உங்கள் நாட்டுப் பஞ்சம் குறையத் தேவையானவற்றை எடுத்து நிரப்பிக் கொள்ளுங்கள். எஞ்சியதை நான் எடுத்துச் சென்று விடுகிறேன்”. அனைவரும் திகைத்து நின்றனர்.
திரிசிரனிடம் மறுமொழி பேசும் அளவிற்குச் சக்திவாய்ந்த இந்த மானுடன் யார்? திரிசிர மஹாராஜா அயர்ந்து நின்றான். இருந்தாலும் யுகயுகமாயிருக்கும் தன்னை ஒரு சாதாரண மானுடனா எதிர்த்துப் பேசுவது? வந்ததே கோபம் திரிசிரனுக்கு! தன்னை ராட்சஸ ரூபத்தினுள் வியாபித்துக் கொண்டு கபகபவென்று தானிய மூட்டைகளை விழுங்கலானான். ஆயிரமாயிரம் மூட்டைகளை விழுங்கிய பின் “ஆவ்...” என்று ஏப்பமிட்டவாறே களைத்து அமர்ந்தான்! “திரிசிர மஹாராஜா! என்மேல் உள்ள கோபத்தில் ஆயிரக்கணக்கான மூட்டைகளை விழுங்கி விட்டீர்களே! கோடிக்கணக்கான மனிதர்களுக்கு, கால்நடைகளுக்குப் பல ஆண்டுகள் வரக்கூடிய உணவினை சுயநலமாகத் தாங்கள் ஒருவரே உண்டு விட்டீர்களே, இது நியாயமா? உங்களைப் போன்ற ராட்சஸ மஹாராஜாவிற்கு ஒரு பொருளை அழிக்கத் தெரியுமே தவிர, அதனை ஆக்கத் தெரியாது! ஒரு சிறுநெல் மணியைக் கூட ஆக்க முடியாததால் தான் பஞ்சமே தலைவிரித்தாடுகிறது. ஆனால் ஆண்டவன் அளித்த அரிய தானிய மணிகளை கேவலம், ஒரு சிறுகோபத்திற்கு ஆட்பட்டு அழித்து விட்டீர்களே....”

தற்காலத்தில் மழை பெய்யாமைக்கு மூன்று முக்கிய காரணங்கள்.
1.மது 2. பசு வதை 3. விபச்சாரம்
அரசியல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகள் மழை மேகங்களைத் தடுத்து நிறுத்தி விடுகின்றன.

திரிசிரன் வெட்கித் தலைகுளிந்தான்... “தாங்கள் உண்டதைவிட நான் அதிகம் உண்டால் தங்கள் கஜானாவில், கிடங்குகளில் உள்ள தானியங்களை எனக்குக் கொடுத்து விடுவீர்களா....?
திரிசிரனுக்கு மீண்டும் சினம் பூத்திடத் தலையாட்டினான். அவ்வளவுதான், மூட்டை மூட்டைகளாய் தான்ய மணிகள் மானுடனின் வாயில் புகுந்தன. திரிசிரன் அதிர்ந்து நிலைகுலைந்து நின்றான். அவனுக்கு ஒன்று புரிந்து விட்டது. “தான் மோதி நிற்பது சாதாரண மானுடனல்லன்” அவ்வளவுதான்,, அவன் நெடுஞ்சாண்கிடையாய் மானுடனின் காலடில்யில் வீழ்ந்தான். “மஹா பிரபோ, ஸ்வாமி! தங்கள் அடியேனை மன்னித்தருள வேண்டும். செருக்கு, அகங்காரணம் காரணமாக அசம்பாவிதமாக நான் நடந்து கொண்டேன். இதற்காக என்னைத் தண்டித்து விடுங்கள். ஆனால் என் குடி மக்களைப் பஞ்சத்தினின்றும் காப்பாற்றி அருள்புரிய வேண்டும்!” திரிசிரன் நெக்குருகிப் பிரார்த்தித்தான்., ஸ்ரீஐயனார் பதிசமேதராய்த் தரிசனம் தந்தார். அனைவரும் கை கூப்பித் தொழுது தங்களை மறந்தவராய் நின்றனர். “திரிசிரா! நீ நியாயமுடன் தெய்வ ஸங்கல்பத்துடன் ஆட்சி செய்து வருகின்றாய்! அதை மெச்சி உன்னை உலகிற்கு எடுத்துக் காட்டவே இத்திருவிளையாடல்! உன்னால் அரும்பெரும் தெய்வீக காரியங்கள் இத்திரிசிராப் பள்ளியிலும், இதன் மையமாக நிற்கும் மலைக்கோட்டைத் திருக்குன்றிலும் நிகழ்விருக்கின்றன! இறைப் பணிகள் குறைந்து வருவதை மக்கள் உணரும் பொருட்டே இந்தப் பஞ்சமும் பட்டினியும்! அதை நிவர்த்தி செய்வதற்காகத் தக்க சித்த புருஷர்களும் மஹான்களும் உன்னை வந்தடைவர், கவலையுறாதே!

ஸ்ரீபாதாள ஐயனார் மலைக்கோட்டை

யாம் இதே கோலத்தில் இம்மலைக்கோட்டையில் சென்று அமர்கிறோம். அங்கு எங்கு உத்தமர் கோயிலுக்குரிய தங்கத் தங்கத் தாம்பாளம், நைவேத்யப் பொருளுடன் தென்படுகிறதோ அங்கேயே எம்மைப் பிரதிஷ்டை செய்திடுவாயாக! ஆனால் எனக்கு முன்னரேயே பிரளயகாலத்திலிருந்தே சுயம்புவான பிரம்மாண்டமான சிவலிங்கம் அக்குன்றினுள் உள்ளது. அதனைத் தக்க மஹரிஷி உனக்கு எடுத்துரைப்பார். அப்போது நல்ல சிவாலயம் ஒன்று உன்னால் அங்கு எழுப்பப் பெறும்! அப்போது எம்மை யாம் குறித்த இடத்தில் பிரதிஷ்டை செய்வாயாக!” – ஸ்ரீஐயனார் அருள்புரிந்து மறைந்தார்.
அதன் பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு மஹரிஷியானவர் திரிசிரனுக்கு, மலையில் ஓரிடத்தைக் காட்டி “வாள், உளியின்றிக் கை கொண்டு பிளப்பாயாக” என்று அருள்வழிகாட்டிட, திரிசிரன் அவர் சுட்டிக் காட்டிய இடத்தில் வெறுமனே கைகளால் தட்டிட, பாறையே பிளவு பெற்றது! என்னே அவன் உடல் வலிமை!
பாறைப் பிளவில்.......... ஒரு பிரம்மாண்டமான லிங்கம்! அவரே ஸ்ரீசெவ்வந்தி நாதரெனும் ஸ்ரீதாயுமானவரானார்! இவ்வாறாக திருச்சி மலைக்கோட்டையில் ஆதியிலேயே வந்தவர் ஸ்ரீஐயனார். எனவே அம்பிகையும் “இம்மலையில் அம்மையப்பனுக்கு முன் வந்த ஸ்ரீஐயனாருக்கு முன் யாம் மட்டுவார்குழலியாய் நிற்போம். ஸ்ரீஐயனை வணங்கிய பின்னர் எம்மைத் தொழுபவர்க்குப் பரிபூரண அருள்கிட்டும்” என்று அருளியபடி ஸ்ரீஅம்பிகையைத் தொழுமுன்னர் இன்று பாதாள ஐயனாராக விளங்கும் ஸ்ரீஐயனாரைத் தொழுத பின்னரே ஸ்ரீஅம்பிகையை வணங்க வேண்டும். இவ்வாறாகவே ஸ்ரீதாயுமானவ சுவாமி.... ஸ்ரீமட்டுவார்குழலி தரிசனம் பரிபூரணத்வம் அடையும். ஸ்ரீஐயனார் எவ்வாறு பாதாள ஐயனார் ஆனார் என்பதைப் பின்னர் காண்போம்! ஏனெனில் இதன் பகுதியானது ஸ்ரீதாயுமானஸ்வாமித் திருவரலாற்றில் வருகின்றது.

ஸ்ரீஐயனார் வழிபாடு
ஸ்ரீபாதாள ஐயனார் சந்நதியில் ...
1. விளைச்சலின் புதிய பொருட்களை அர்ப்பணித்தல் (விளைச்சலில் முதல் தேங்காய், மா, பலா, வாழை, காய், கனிகள், நெல், கரும்பு தான்யங்கள் etc….) மூலம் நல்ல விளைச்சல் ஏற்படும். விளைச்சலில் இயன்ற அளவு இங்கு எழைகட்கு உணவாகவோ வேறு விதத்திலோ தானம் செய்திடப் பஞ்சம் ஏற்படாது காத்திடலாம்.
2. ஸ்ரீஐயனாருக்கு இளநீர், சந்தனம், பானகம், கரும்புச் சாறு, தேன் – இவற்றால் அபிஷேகம் செய்து குறைந்தது 1008 பேருக்காவது அன்னதானம் செய்திட மழைப்பொழிவு உண்டாகும்.
3. வெள்ளம் வடிவதற்கு ஸ்ரீஐயனாருக்குச் சந்தனக் காப்பு, கொள்ளுக் காப்பு இட்டு கிழங்குவகை காய்கறிகள் கூடிய உணவினை அன்னதானம் செய்தல் வேண்டும்.
4. வற்றிய கிணறு, குளம், புதிய கிணறு, ஆகியவற்றில் நீரோட்டம் நன்கு பெருகிட, ஸ்ரீபாதாள ஐயனாருக்குப் பிரார்த்தனை செய்து இளநீர், பானகம், பழரசங்கள், நீர் மோர், பாயாஸம் போன்றவற்றை வறியவர்களுக்கு அளிக்க வேண்டும். ஸ்ரீஐயனாருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட விபூதி, குங்குமம், சந்தனம்தனை அவரவர் பூமியில் சேர்த்திட நீர்ப் பொழிவும், நல் விளைச்சலும் ஏற்படும்.

ஸ்ரீசெவ்வந்தி விநாயகர் மலைக்கோட்டை

5. உப்பிஸம், வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக பாதிப்புகள் உள்ளோர் ஸ்ரீபாதாள ஐயனாருக்குப் பிரார்த்தித்து கிழங்குவகைக் காய், கனிகளுடன் அன்னதானம் செய்து ஏழை எளியோர்க்கு இலவச மருந்துகள், டானிக்குகளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி அளித்துவர வேண்டும்.
6. பித்ருசாபங்கள், குழந்தைப் பேறின்மையால் வருந்துவோர் கிராமப் பகுதிகளில் உள்ள ஏதேனும் ஓர் ஐயனார் கோயில் திருப்பணியை முழுமையாக ஏற்று நடத்தி அமாவாசை மற்றும் தங்களுடைய மூதாதையர்களின் (தாய், தந்தையர், பாட்டனார், பாட்டிகள், முப்பாட்டனார்கள்... etc..) திதிகளில், நட்சத்திர தினங்களில் எள் கலந்த உணவு, இனிப்புகளை ஏழைகளுக்கு, குறிப்பாக ஊனமுற்றோர்க்கும், கறுப்பு உடை அணிந்தோர்க்கும் அளித்துவரத் தக்க பரிஹாரம் கிட்டும்.
7. தங்கள் குலதெய்வம் இன்னதென்று அறியாதோர் தக்க சற்குருவை நாடி விளக்கங்கள் பெற வேண்டும். சற்குருவை அடையாதோர், மாதந்தோறும் தங்கள் ஐன்ம நட்சத்திரத்தன்று ஸ்ரீபாதாள ஐயனாருக்கு (வெல்லப்) பொங்கல் படைத்து அன்னதானம் செய்துவர (குறைந்தது மூன்று பெரியபடி) கனவிலோ, யார் மூலமாகவோ, ஏனைய சற்குரு மூலமாகவோ தக்க விளக்கங்களைப் பெறுவர்.
8. தியானம், யோகம், ஆசனங்களைப் பயிற்சி செய்வோர் தக்க வழி காட்டியின்றித் தவிக்கின்றனர். இவர்கள் தம் பயிற்சிகளில் உன்னதம் பெற உத்தமர் கோயிலில் மும்மூர்த்திகளை தரிசித்து பஞ்சக்கூட்டு தீபம் ஏற்றி (தேங்காயெண்ணெய் + நல்லெண்ணெய் + இலுப்பெண்ணெய் + பசுநெய் + விளக்கெண்ணெய் – குறைந்தது 21 தீபங்கள்) உத்தமர் கோயிலிலிருந்து ஸ்ரீஆஞ்சநேய காயத்ரீ, துதிகளைத் தியானித்தவாறே பாத யாத்திரையாக மலைக்கோட்டை வருதல் வேண்டும். இடையில் சாரைப் பருப்பு, முந்திரி, திராட்சை நிறைந்த பாயசம், சர்க்கரைப் பொங்கலை தானம் செய்து வரவேண்டும். முந்திரி, திராட்சை, சாரைப் பருப்பு இவை மூன்றிற்கும் யோக மந்திரங்களை எளிதில் கிரஹிக்கும் ஆன்மீக சக்தி உண்டு.
ஸ்ரீபாதாள ஐயனார் சந்நிதியில் தியானத்தில் அமர்ந்து அபிஷேக ஆராதனைகளுடன் பூஜித்துத் துறவிகளுக்கு லங்கோடு, காவி உடைகளையும், ஏழைக் குழந்தைகளுக்கு சந்தனநிற ஆடைகளையும் தானம் அளித்துவர யோக, ஆசன நிலைகளில் தெளிவு கிட்டும். ஆனால் இந்த நற்பலன்களை வியாபார நோக்கிலோ, சுயநலத்திற்காகவோ எக்காரணங்கொண்டும் பயன்படுத்தலாகாது. வேண்டுமாயின் பிறர்க்கு இலவசமாகக் கற்றுத் தரலாம். அதுவும் அத்துறையில் பூரணம் பெற்ற பின்னரே! இதிலிருந்து என்ன தெரிகின்றது? யோகா, வேத, ஆசன சக்திகளை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும் என்பதை நன்கு உணர வேண்டும்.
எனவே ஸ்ரீபாதாள ஐயனாரின் மஹிமையினை நன்கு அறிந்து ஸ்ரீஐயனாரின் பரிபூர்ண அனுக்ரஹத்தைப் பெறும் நல்வழி முறைகளைக் கடைபிடித்து உத்தம இறைநிலையை அடைதல் வேண்டும்.

அடிமை கண்ட ஆனந்தம்

அடிமை கண்ட ஆனந்தம் (நம் குருமங்கள கந்தர்வாவின் குருகுலவாச அனுபூதிகள்)
அவர் கை காட்டிய பக்கம் தன் பார்வையை ஓடவிட்ட சிறுவன் ஒரு பெரும் பணக்காரர் (பார்வையிலிருந்து கணித்தது தான்) வண்டியிலிருந்து இறங்குவதைக் கண்டான். பெரியவர் பக்கம் திரும்பி ஏதோ கேட்க நினைத்தவன், பெரியவரின் மிகச் சீரியஸான முகத்தினைக் கண்டு பயந்துவிட்டான்! தானும் மௌனமாக வேறு திசையில் பார்க்கலானான்.
வண்டியிலிருந்து இறங்கி வந்த பணக்காரர் அவரின் இருபுறமும் இரண்டு ஆட்கள் பல தட்டுகளில் பழங்களும் மாலையும் ஏந்திவர பட்டுத் துண்டால் உடல் முழுவதும் மூடியபடி வந்து இரண்டு புறமும் பார்த்துவிட்டு பெரியவரின் முன் வந்து நின்றார். திடீரென்று திரும்பிய பெரியவர். “ஆகா! நீயா! வாப்பா! உடம்பு எப்படியிருக்கு?”

புதுத் தொழில் துவங்க
உத்தராயண காலம் குறிப்பாக, தை மாதம் வளர்பிறையில், சித்த யோகம் அல்லது அமிர்த யோகத்தில் துவங்கலாம். சூன்ய திதி மற்றும் கூடா நாட்களில் அறவே கூடாது.

“சுவாமி! நீங்கள் தாம் கருணை செய்யணும்”..
“நா என்னப்பா செய்ய முடியும்? இதோ! பக்கத்திலே குந்திண்டிருக்கானே! இவன் நினைத்தால் உனக்கு, உதவ முடியும், அவனைக் கேட்டுப் பார்.., இவன் தான் எல்லாம் தெரிஞ்சவன்!”
உடனே அவனைத் திரும்பிப் பார்த்த பணக்காரர், “பெரியவர் சொன்னால் சரிதான்” என்று கூறி, “தம்பி! என்னைக் காப்பாற்று” என்று கண்ணீர் சிந்தியவாறே உடனே சிறுவனின் கால்களில் விழுந்தார். சிறுவனோ பயந்துவிட்டான்...”அங்காளி இது என்ன சோதனை! இவ்வளவு வயசுப் பெரியவர் அடியேன் கால்களில் விழுவதா! தவறு. ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியைத் தான் நீங்க கும்பிடணும்” என்று கூறியவாறே ஏக்கமாக பெரியவரைப் பார்த்தான்.. கோவணாண்டிப் பெரியவரோ இந்தப் பக்கமே திரும்புவதாக இல்லை... அதற்கும் மேல் பணக்காரரைத் தூண்டிவிடலானார்.
“இந்தச் சிறுவன் பார்ப்பதற்குத்தான் சிறியவன். ஆனால் கீர்த்தி பெரியது. எனவே விட்டுடாதீங்க... அவன் கிட்ட எப்படியாவது விபூதி வாங்கிங்கங்க..,சரியாயிடும்” என்றார்..., இதுவரை தீனமாகப் பார்த்தவன் இப்போது புரிந்து கொண்டான்.. தன் கையால் அவருக்கு விபூதி அளிக்க வைத்து அவன் கர்மா கழிக்கின்றார். “ஆனால் இவருக்கு என்ன வியாதி என்றே தெரியவில்லையே” என்று பெரியவரை அப்பாவியாகப் பார்த்தான்!
“சந்தேகமே வேண்டாம். இந்தப் பையன் பல பெரிய பூஜையெல்லாம் செய்து நிறைய சக்தி வைச்சிருக்கிறான். அவன் கைல விபூதி வாங்கி உடம்பு பூரா தடவிவிட்டு அங்காளி கோயிலை 108 தடவை சுற்று. தானா பறந்திடும் வியாதி” என்றார் பெரியவர். பணக்காரர் உடனே பையனின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். சிறுவன் யோசித்தான், உடனே பக்கத்தில் தனக்கு வைத்தது போக தட்டில் மீதியிருந்த விபூதி எடுத்து “அங்காளி அங்காளி” என்று அம்பாள் நாமத்தைச் சொல்லிப் பிறகு விபூதியை அள்ளி எடுத்து அவர் கையில் வைத்து “ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அருளால் சரியாயிடும்” என்றான்.

பணக்காரரும் பக்தியுடன் வாங்கி, தன் உடலைப் போர்த்தியிருந்த பட்டுத் துண்டை விலக்கி, தன் உடல் முழுவதும் “அங்காளி அங்காளி” என்று சொல்லியவாறு விபூதியைப் பூசினார். அப்போது தான் கவனித்தான் அவர் உடல் முழுவதும் வெள்ளை வெள்ளையாக இருந்தது. பார்ப்பதற்கு அருவருப்புத் தரும் உடல்! உடல் முழுவதும் பூசிவிட்டு உடனே கோயிலுக்குள் போய்விட்டார். பிரதட்சிணம் சுற்றுவதற்கு! உடன்வந்தவர்களும் தட்டுக்களைச் சிறுவன் முன் வைத்துவிட்டுச் சென்றார்கள்.., சிறுவன், பெரியவரைப் பார்த்து, “வாத்தியாரே! என்ன விளையாட்டு! அந்தப் பணக்காரன் திரும்பி வந்தால் என்ன சொல்வது?” என்றான்.
“உனக்குத் தெரியாதா என்ன? நீதானே விபூதி கொடுத்தே!”
“நான் எதுவும் கொடுக்கலை வாத்யாரே! நீங்கதான் என் மூலமாக கொடுத்தீங்க!”
“ஏண்டா! உன் கையாலே தான் அவர் வாங்கினார். நீதான் கொடுத்தே! சரி! அவர் வர்றவரை இங்கேயே இரு!” என்று கூறிப் பெரியவர் நகர்ந்து விட்டார். எழுந்து ஓடவும் முடியாமல் வருபவரைச் சந்திக்கவும் தைரியம் இல்லாமல் தவித்தான் சிறுவன். ஒருமணி நேரம் இப்படியே ஓடிற்று! சந்நதியிலிருந்து வெளியே வந்த பணக்காரர் இச்சிறுவனை நோக்கி வேகமாக ஓடிவந்தார்.

லட்டுக்கு உரித்தான மந்திரம்
ஸ்ரீமன் நாராயண சரணம் சரணம் ப்ரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நமஹ

“அப்பா! ஸ்ரீஅங்காளி அருளால் இப்பவே உடல் முழுவதும் குணமாகி விட்டது. நீங்கள் தான் என் வாழ்க்கையில் ஒளி காட்டிய தெய்வம். உங்களுக்கு என்ன வேணும், சொல்லுங்கள். நான் நிச்சயம் செய்கிறேன்!” என்று சிறுவனின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அவருடைய மேனியில் வெள்ளைத் தழும்புகளைக் காணவில்லை! அக்கம்பக்கம் எல்லோரும் தன்னைப் பார்ப்பதைக் கண்ட சிறுவன் உடனே, “சரி, சரி!அங்காளியை வணங்குங்க. நீங்க இந்தப் பழம்,பூ எல்லாத்தையும் கோயிலுக்கு வர்ர ஏழைங்க கிட்ட கொடுத்திடுங்க. நாளைக்கு வாங்க சொல்றேன்”, என்று எதைஎதையோ அவசரக் கோலத்தில் உளறினான். அப்போது தான் பெரியவர் அங்கில்லை என்பதை உணர்ந்த அந்தப் பணக்காரரும் நாளை வருவதாகக் கூறிவிட்டு வண்டியில் ஏறப்போனார். பின்னர் திடீரென்று திரும்பி வந்து ஏதோ நினைப்பில் வண்டியிலிருந்த மீதிப் பழங்களையும் பூக்களையும் கோயிலிருந்து  வெளியில் வருபவர்களுக்குக் கொடுத்து விட்டு வண்டியில் ஏறினார். அவர் நகர்ந்ததும் சிறுவனும் ஓட்டம் பிடிக்க எத்தனித்தான்.
ஆனால் அவன் எதிரே பெரியவர் வந்திவிட்டார்.., “பெரிய பெரிய நோய் தீர்க்கும் ரகசியமெல்லாம் வைச்சிருக்கே! சபாஷ்! நீபெரிய டாக்டராகிடலாம்., எல்லோருக்கும் விபூதி கொடு! எல்லார்க்கும் எல்லா நோயும் பறந்துடும்.”
சிறுவன் மௌனமாக நின்றான்!
“நேத்திவரை இல்லாத சக்தி உனக்கு எப்படி திடீர்னு வந்தது. ஏதாவது சிவலிங்கத்துக்கு தண்ணி ஊத்தினியா?”

ஆதிபராசக்தியின் வடிவமே ஸ்ரீகாயத்ரீ மந்திரம். முதன்முதலாக ஸ்ரீசூரிய நாராயண ஸ்வாமி, ஸ்ரீவிஸ்வாமித்ர மகரிஷிக்கு உபதேசிக்க, அவர் அதனை உலகிற்கு அளித்தார்.

‘ஆகா தன் கைக்கு சக்தி வரவேண்டுமென்று முதல் இரண்டு நாட்கள் எங்கோ தன்னை அழைத்துப் போய் ஏதோ ஒரு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய வைத்து, அந்தக் கையால் விபூதி கொடுக்க வைத்து நோயையும் தீர்த்து வைத்து ஏதும் அறியாதவர்போல் காட்சியளிக்கிறாரே! இவர்தானே காரணகர்த்தா!’ – அவரை ஆச்சரியமாகப் பார்த்தான். மேற்கொண்டு அவனை யோசிக்க வைக்க விரும்பாதவர்போல், “போடா! போய் அங்காளிகிட்ட அந்த சக்தியைக் கொடுத்துட்டு வா!” என்றார்.
சிறுவனும் அங்காளியின் கருவறைக்குச் சென்று, “தாயே! அந்த சக்தியெல்லாம் எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக்கோ!”  என்று கூறி வணங்கினான்.
பெரியவர் குரல் கொடுத்தார்! “ஏண்டா! நாளைக்கு அந்த பணக்காரரை வரச்சொன்னியே! என்ன செய்யப்போறே?”
மற்றுமொரு பிரச்னையா? சிறுவன் பரிதாபமாகத் தன் குருவைப் பார்க்க, பெரியவர் “பார்! நாளைக்கு அது இதுன்னு எதையும் சொல்லாதே!” “இந்த அங்காளி கோயிலை நல்லபடியா கட்டிக் கொடுத்துட்டு இங்குவர போற ஏழை ஜனங்களுக்கு சாப்பாடு போடச் சொல்லு” என்றார். மறுநாள் சிறுவன் அதைச் சரியாகச் சொல்லிட அந்த பணக்காரரும் அப்படியே செய்தார். இவனால் இந்த வியாதிக்கு இந்த மருந்து எனத் தெரிந்து அதனைச் செய்வித்து அந்த நோயை நீக்கினார் பெரியவர். அதுபோல் குருமேல் உண்மையான பக்தி கொண்டு இருந்தால் குரு நிச்சயம் காப்பார்.

வழுவுப் பிரதட்சிணம்

வழுவுப் பிரட்டுப் பிரதட்சிணம் (somersault)
யோகியருக்குரித்தான பிரதட்சிண முறையிது. இரண்டு கைகளை மட்டும் தரையில் ஊன்றிப் பக்க வாட்டாக பல்டி அடித்துப் பிரதட்சிணம் செய்வது, பொதுவாக விளையாட்டுத் துறைக்கும், கழைக் கூத்தாடிக்கும் உரித்தானதாகக் கருதப் பெற்றாலும் இதனை வழுவுப் பிரட்டுப் பிரதட்சிணமென சித்தர்களின் அருணாசல கிரிவல மஹிமை கிரந்த நாடிகள் இதனை விளிக்கின்றன. இதில் உள்ள ஆன்மீக இரகசியங்கள் யாவை?
காரைக்கால் அம்மையார், உத்தம சித்த யோகி! 63 நாயன்மார்களிலேயே அமரும் நிலைகொண்ட பாக்யத்தைப் பெற்ற ஒரே சித்த யோகீஸ்வரி! “அடிக்கொரு லிங்கம், அடித்துகள் பட்ட இடமெல்லாம் கோடிகோடி லிங்கங்களாக இருக்கும் அண்ணாமலையில்” தம் திருக்கால்கள் படலாகாது என்பதற்காகத் தலைகீழாகக் கிரிவலம் வந்து தரிசனம் செய்த ஞானியே காரைக்கால் அம்மையார் ! உடையவராம் ஸ்ரீராமானுஜரும், திருப்பதியே வைகுண்டத்தின் ஒரு பகுதி என்பதால் அங்கு தம் பாதங்கள் படக்கூடாது என்பதற்காக தவழ்ந்து தவழ்ந்து மேலேறி, திருமலை மேல் மலஜல மூத்ராதிகளைக் கழித்தலாகாது என்பதற்காகத் தவழ்ந்து வந்து கீழிறங்கி வருவார். என்னே உத்தம இறைப் பெரும் ஞானயோகீஸ்வர சித்தர்கள்! நாம் சாதாரணமாக மேலிருந்து கீழாக, “கேசாதி பாதமாக” மலையைத் தரிசிக்கிறோம். இதே திருஅண்ணாமலையைத் தலைகீழாக நின்று தரிசித்தால்... அதன் அரிய பலாபலன்களை எடுத்துரைக்க நேரமோ நூல்களோ போதாது! இறைவனை “கீழ்நேராக” பாதாதிகேசமாக தரிசிப்பது என்றால் என்னே பாக்யம்! இவ்வாறு இறைவனுடைய முதலும் முடிவுமிலா “சர்வேஸ்வர ரூபத்தை” கீழிருந்து மேலாகத் தரிசிக்கும் ஆன்ம சக்தி பெற்றவர்கள் ஒரு சிலரே! காரைக்காலம்மையாரும் இதிலொருவராம். வழுவுப் பிரட்டுப் பிரதட்சிண முறையில் மலையை நோக்கியவாறே இடப்புறம் சாய்ந்தவாறு “பல்டி” அடித்துக் கொண்டு பிரதட்சிணம் செய்கையில் திருஅண்ணாமலையை, சர்வேஸ்வரனையே தலைகீழாக தரிசனம் செய்யும் அரிய அற்புதமான வாய்ப்பு கிட்டுகின்றதே! இத்தகைய பிரதட்சிண முறை வெறும் “பல்டி” மட்டுமன்று, சீராக இதனைச் செய்கையில் சுவாச பந்தமானது தீர்க வாயு பந்தமாக மாற்றப்படுகிறது.

திருஅண்ணாமலையார் ஆலயம்

திருஅண்ணாமலையை வாயு ரூபமாக கிரிவலம் வரும் வாயு மண்டல மஹரிஷிகளும் தேவதைகளும் உண்டு. அவர்கள் இம்முறையிலான கிரிவலத்தை ஆசீர்வதிக்கின்றனர். சித்தர்களும், யோகியரும் இன்னோரன்ன ஏனைய உத்தமர்களும் அருணாசலத்தை எந்நேரமும் எப்போதும் கிரிவலம் வந்தவாறிருப்பதாலும் ஆங்காங்கே அவர்கள் தவநிலைகளில் அமர்வதாலும் அவர்களுக்கு இடையூறின்றி இருப்பதற்காக மெதுவாக கர்ப்பிணிப் பெண்களைப் போல சாந்தமாக, அமைதியாக கிரிவலம் வரவேண்டும் என்பதே பொதுவான நியதி.. ஆனால் இந்த வழுவூட்டுப் பிரதட்சிண முறையில் வேகமாகவே உடலைப் புரட்டி பல்டி அடிக்க வேண்டியிருப்பதால் இதனை வாயு மண்டல பிரதட்சிண முறையாகவே ஏற்று இறைவன் அருள் பாலிக்கின்றான்.
ஸ்ரீஆஞ்சநேய உபாஸகர்களுக்கு உரிய பிரதட்சிண முறையிது. மேலும்  நல்ல உடல் திடம் உடையோர் கிரிக்கெட், ஹாக்கி, ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுத் துறையில் பேரும் புகழுடன் சிறந்து விளங்க விரும்புபவர்கள் இத்தகைய பிரதட்சிண முறையை மேற்கொள்ளலாம். ஆன்மீகத்தில் இவ்வழுவுப் பிரட்டுப் பிரதட்சிணத்தின் சிறப்பை எவ்வாறு விளக்குகின்றார்கள் என்றால்,
1. பார்க்கக் கூடாத காட்சிகளை, காமம், ஆசை காரணமாகப் பார்த்து முறையற்ற போகங்களை அனுபவித்தவர்கள் (காமமூட்டும் திரைப்படக் காட்சிகள், வெறியூட்டும் வன்முறையைத் தூண்டும் மல்யுத்தக் காட்சிகள், உயிர்ப்பலி வாங்கும் கோழிச் சண்டை, பாம்பு-கீரிச் சண்டை etc..)
2. செய்த சத்தியத்திற்கு நேர்மாறாக நடந்தவர்கள்
3. கையில் அடித்து சத்யம் செய்தல், அக்னி, தெய்வ சாட்சியாக சத்யம் செய்து அதிலிருந்து பிறழ்தல்
4. பிறர் சொத்துக்களை அபரிப்பதற்காகவும் முறையற்ற வழிகளில் செல்வம் சேர்ப்பதற்கும் உயில் தஸ்தாவேஜுகளையும் பத்திரங்களையும் மாற்றியவர்கள்
5. மருத்துவ மனைகளில் அழகு, ஆண் பெண் பாகுபாடு, செல்வம் இவற்றிற்காக குழந்தைகளைத் திருட்டுத்தனமாக மாற்றியவர்கள்
6. பிரேத நிலையில் கிடப்போரிடமிருந்து கையில் மை தடவி உயில் பத்திரங்களில் கையொப்பம் பெறுவோர் (இத்தகைய செயலால் கடுமையான பிரேத சாபம் ஏற்பட்டு சந்ததிகளையும் பாதிக்கும். இதற்குத் தக்க சற்குருவை, மஹானை உடனடியாக நாடிப் பரிஹாரம் தேடவும்.)

ஒவ்வொரு கிழமைக்கும் உகந்த தைலம் பின்வருமாறு...
கிழமை உகந்த தைலம்
ஞாயிறு ---
திங்கள் பசு நெய்
செவ்வாய் முக்கூட்டு எண்ணெய்
புதன் பஞ்சக்கூட்டு எண்ணெய்
வியாழன் தேங்காய் எண்ணெய்
வெள்ளி பசு நெய் அல்லது 6 கூட்டு எண்ணெய்
சனி நல்லெண்ணெய்

போன்றோர் இத்தகைய வழுவுப் பிரட்டு முறையில் குறைந்தது 90 அடி தூரத்திற்கேனும் பிரதட்சிணம் செய்து கழைக் கூத்தாடிகளுக்கு உணவு, உடை, தான தர்மங்களைச் செய்ய வேண்டும். காரைக்கால் அம்மையாரின் தேவாரப் பாடல்களை ஓதியவாறே இத்தகைய பிரதட்சிணத்தைச் செய்தல் சிறப்புடையது. ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் மாந்திரீக/தாந்த்ரீக முறைகள், நாடி பரிஹாரங்கள் செய்தும் தீராத பில்லி, சூன்ய, காத்து, கருப்பு தோஷங்கள் இருப்பின் அவர்கள் இத்தகைய வழுவுப் பிரட்டு முறையில் பிரதட்சிணம் செய்து மேற்கண்ட தான தர்மங்களையும் செய்து வரவேண்டும். இதில் மேலும் சிலவிளக்கங்கள் தேவைப்படும்., தக்க ஆன்மீக வழிகாடியை நாடுங்கள்..
1. இளவயதுடையோர் இதனை ஓரளவு குறைந்தது 90 அடி தூரத்திற்கேனும் செய்து விடலாம். வயதானோர் அல்லது செய்ய இயலாதவர்களும் பெண்களும் என்ன செய்வது?
இவர்கள் இம்முறையில் முயற்சித்துப் பார்க்க வேண்டும். பயிற்சி இல்லாததால் கீழே விழுதலும் உண்டு. ஆனால் இத்தகைய உடல் வருத்தங்களே தீராத கர்மவினைகளையும் தீர்க்கும் என்பதை உணரவேண்டும். முடியாதோர் தக்க மாற்று முறைக்காக சற்குருவை நாடுக!
2. 10 வயதிற்குட்பட்ட தன் குழந்தைகளை சிறுவர்/சிறுமிகளை மட்டும் இவ்வாறு பிரதட்சிணம் செய்ய அதிகாரம் அளிக்கலாம். ஆனால் இதற்குச் சில விதிமுறைகள் உண்டு. எனவே இத்தகைய ஆன்மீக இரகசியங்களை அறிய சற்குருவை நாடவும்.
3. இதற்கு ஓரளவு மாற்றாக மலையைப் பார்த்தவாறு  “குட்டிக்கரணம்” முறையில் பிரதட்சிணம் செய்யலாம்.
4. பெண்கள் ஸர்வாங்க ஸரீர முறையிலோ பஞ்சாங்க ஸரீர முறையிலோ இதனைச் செய்யலாம்.
கிரிவலம் முழுதும் இம்முறையில் பிரதட்சிணம் வருவது உத்தமமான பலன்களைத் தரும். இயலாதோர் குறைந்தது 90 அடி தூரமேனும் செய்வது சிறந்தது. ஏகமுக தரிசனம் (இரமணாஸ்ரம் அருகில்), எமலிங்கம், நிருதிலிங்கம், வாயுலிங்கம், பஞ்சமுக லிங்கம் ஆகிய பகுதிகளில் இத்தகையா வழுவுப் பிரட்டு பிரதட்சிண முறை சிறப்பானதாகும். ஏனெனில் வாயுமண்டல தேவதைகளும், ரிஷிகளும் இப்பகுதிகளில் எப்போதும் வாசம் செய்கின்றனர்.
ஸ்ரீஆஞ்சநேயரின் கிரிவலம்
தினமும் கயிலாயம் சென்று வில்வ தளங்களைப் பெற்றுச் சிவபெருமானைத் தரிசித்து, வைகுண்டம் சென்று துளஸி தளங்களைப் பெற்று ஸ்ரீவிஷ்ணுவைத் தரிசித்து ஸ்ரீராமன் லிங்கப் பிரதிஷ்டை செய்த ஸ்தலங்களில் வில்வ, துளஸி தளங்களால் அர்ச்சித்து, திருஅருணாசலத்தை இராமநாம ஸ்மரணத்துடன் கிரிவலம் வந்து.... அப்பப்பா! ஸ்ரீஆஞ்சநேயரின்  நித்ய பூஜை முறைகளைப் பார்த்தீர்களா! சாட்சாத் சர்வேஸ்வர ஸ்வரூபரான ஸ்ரீஆஞ்சநேயரே தினமும் கடுமையாக பூஜைகள், விரதங்கள், தரிசனங்கள், கிரிவலங்களை மேற்கொள்கின்றார் என்றால்..... சாதாரண மனிதர்களாகிய நாம் எந்த அளவிற்கு இறை வழிபாடுகளையும், சேவைகளையும் மேற்கொள்ள வேண்டும்! ஒரு நிமிட நேரத்தைக்கூட வீணாகக் கழிக்கக் கூடாதே! ஸ்ரீஆஞ்சநேயரின் உலாவானது வாயுவேகம் மனோவேகத்தைவிட துரிதமானது. அவர் திருஅருணாசலத்தை  கிரிவலம் வர 7 1/2 நாழிகைகள் (3 மணி நேரங்கள்) ஆகின்றதென்றால் எத்தணை பரந்ததாக எத்தனை கோடி லோகங்களைக் கொண்டதாக திருஅண்ணாமலை அவருக்குக் காட்சியளிக்கும்? பிரபஞ்சத்தின் ஸர்வ கோடி லோகங்களையும், தன்னுள் கொண்டதாயிற்றே திருஅண்ணாமலை! நம் மானுட சரீரத்திற்கு ஏற்ற வண்ணம் 14 கி.மீ சுற்றளவிற்குத் தன்னைக் குறுக்கிக் கொண்டு கருணைக் கடலாக அல்லவோ காட்சியளிக்கின்றதே திருஅண்ணாமலை! ஸ்ரீஆஞ்சநேயர் தம் தெய்வ மூர்த்திக்கான அம்சங்களுடன் கூடிய தேகத்துடன் பரந்த திருஅண்ணாமலையையே நாம் கிரிவலம் வரமுடியுமா? அதைக் கேட்டாலே நம்ப மறுத்து விடுமே நம் மனம்! நம்பினோர்க்கு நடராஜன்! உள்ளத்தனைய உயர்வு!  இதையெல்லாம் அறிந்து மலைத்து விடாதீர்கள்! திருஅருணாசலத்தைப் பற்றி அதன் மஹிமையைப் பற்றி நாமறிந்தது கொஞ்சம், அறிய வேண்டியது  அளவிலாதது என்பதை மட்டும் உணர்வீர்களாக! தக்க சற்குருவைப் பெற்றால் அவரே வேண்டியவற்றைத் தந்து அருள் புரிவார் என்பதை அறிவு பூர்வமாகவேனும் உணர்ந்திடுக!

வெளியில் செல்லும்போது எப்போதுமே குல தெய்வத்தை வணங்கிச் செல்லவும்.
தனித்து சுவாமியின் திருஉருவப் படம் வைப்பதைவிட, குழந்தை, திருமணக் கோலக் காட்சி போன்ற படமே சிறந்தது.
ராசி உகந்த திக்கு
சிம்மம் கிழக்கு
தனுசு வடக்கு
மிதுனம் தென்கிழக்கு

உடலாசனப் பிரதட்சிணம் :- உட்கார்ந்தவாறே மெதுவாக நகர்ந்து பிரதட்சிணம் செய்வதே உடலாசன பிரதட்சிணம்! ஒருவர் தம் உடலை வருத்திப் பூஜையோ, கிரிவலம் வருவதையோ இறைவன் விரும்புகிறானா என்ற வினா எழும்? இறைவன் எளிமையான, உடலை வருத்தாத பூஜையைத்தான் விரும்புகிறான் என்பது உண்மையே கலியுகத்தில்!
1. எத்தனை கோழி, நண்டு, ஆடு, மீன், பன்றி, மான் போன்ற சாத்வீகமானதை “வரு(று)த்தி” உணவில் சுகம் கண்டிருக்கிறீர்கள்? இந்த “வருத்தம்” தீவினைகளாக மாறி நிற்குமே! கொல்லப்பட்ட அந்த சாதுவான பிராணிகளை உடல் வருத்தங்களில் ஒரு சிலவற்றையேனும் இவ்வுடலில் ஏற்பதற்காகவே கிரிவலம்.
4. அழகு, காமம், இச்சை, ஆசை, செல்வம், புகழ், அதிகாரம், பதவி இவற்றால் எத்தணை பேருடைய உடலை/உடல் அவயங்களை, மனதை வருத்தியிருப்பீர்கள். அதற்கு என்றுதான் பிராயச்சித்தம் தேடுவது?
3. அயல்நாடு வாசம், மறுமணம், பேராசை, மனைவி பேச்சைக் கேட்டல், செல்வாக்கு, வசதிகள் காரணமாக எத்தனையோ பேர்கள் தங்கள் பெற்றோர்கள்/குழந்தைகளை ஆஸ்ரமத்திலும், முதியோர் இல்லங்களிலும், காப்பகங்களிலும் (crèche) தனி வீடுகளிலும் தெருவிலும் விட்டு விடுகின்றனர். எத்தனைதான் வசதிகள் கொடுத்தாலும் அம்முதிய வயதில் தனிமை என்பது எத்தகைய உடல், மன வருத்தங்களைத் தரும்? இதற்கு எப்படிப் பரிகாரம் காண்பது?
4. தற்காலத்தில் தம்பதிகள் அலுவலகம் செல்வதால் சுயநலம், பணவரவு காரணமாக தங்கள் குழந்தைகளைக் காப்பகங்களில் (crèche) விட்டு விட்டுச் செல்கின்றனர். என்ன இருந்தாலும் பெற்றோர்களுடைய அன்பான பராமரிப்பைக் காப்பகங்களில் பெறமுடியுமா? அக்காப்பகங்களில் அக்குழந்தைகள் ஏற்கும் அடி, உதை வசவுகளுக்குப் பெற்றோர்களே பொறுப்பு. அதன் உடலில் உள்ள வேதனைகளை எவ்வாறு கழிப்பது?
5. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து எந்த இடத்திலும்/பதவியிலும் ஒருவரை நிலையாக இருக்கவிடாது துன்புறுத்தல்.

கொன்றையடி விநாயகர்

ஸ்ரீகொன்றையடி விநாயகர் துணை – வெற்றி தரும் கொன்றையடி விநாயகர்
சிந்தூர ரஞ்சித புஷபத்தின் மணம் எங்கும் வியாபித்திருக்கும் திருக்கயிலாயத்தில்! இந்த சிந்தூர ரஞ்சிதப் புஷ்பமானது மணத்திலே மிகச் சிறந்த மணம் கொண்டது! அந்த மணத்தை யார் சுவாசிக்கின்றார்களொ அவர்களுக்குத் தேவதைகளும் தெய்வங்களும் புறக் கண்ணில் நன்றாகத் தெரியும்!
சிந்தூர ரஞ்சித புஷ்பம்
ஆனால் அவ்வளவு எளிதில் பூலோகத்தில் அந்த மணத்தைச் சுவாசிக்க முடியாது. தேவலோகத்தில் மட்டுமே இறைவன் திருவருளால் அந்த மணத்தை சுவாசிக்க பாக்யமாகும். முன் வினைப் பயன் இருந்தால் எந்த பூலோக வாசியும் இந்த மணத்தை சுவாசித்தால் நூறு ஆண்டுகள் என பூலோகக் கணக்கில் அவன் ஆயுள் விருத்தியாகிவிடும். இந்த புஷ்பத்தின் மணத்தை சுவாசிக்கும் பூலோக வாசிக்கே இப்படி என்றால் தேவலோகத்தில் தேவர்கள் அமிர்தம் அருந்தாமலேயே இப்புஷ்பத்தின் மூலம் தங்கள் ஆயுளை விருத்தி செய்து கொள்ள முடியும் அல்லவா?
ஆனால் இந்த மணம் எப்போது வீச வேண்டுமோ அப்போது மட்டுமே வீசும். இத்தகைய மணம் வீசுகின்ற காலத்தை அறிந்து தெரிந்தவர்கள் தேவர்களிலேயே மிகச் சிலரே. எம்பெருமானாகிய சிவபெருமான் விதவிதமான நடனங்களை அளித்து விதவிதமான நேரங்களில் இன்றும், என்றும், தொடர்ந்து அற்புதமாக நடனமாடிக் கொண்டே இருக்கின்றார். அதில் எந்த நடனத்திற்கு இந்த மணம் வீச வேண்டுமோ அந்தச் சமயத்தில் மட்டுமே இந்த சிந்தூர ரஞ்சித புஷ்பத்தின் மணம் வீசும்.. இம்மாதிரியாக இறைவனின் திருநடனத்திற்கு மணம் வீசக்கூடிய பாக்யம் பெற்ற சிந்தூர ரஞ்சித புஷ்பம் –ஆஹா! என்ன தவம் செய்திருக்குமோ! .. மனித குலத்தில் பிறந்த நாமும் அதைப் பற்றி அறிய ஒரு அற்புத சந்தர்ப்பம்! ....

வெகுகாலத்திற்கு முன்னர் கோகர்ணண் என்ற ஆடு மேய்ப்பவன் தினம் தனது ஆடுகளைக் கோயிலருகே மேய்த்து வருவான். ஒருநாள் வழக்கம்போல் அவன் ஆட்டுப் பாலைக் கறக்கும்போது ஒரு ஆடு பால் கறக்கவில்லை. அதுவே தினப் பழக்கமாகிவிட கோகர்ணன் அந்த ஆட்டைப் பலி கொடுக்க எண்ணினான். இப்படியாக இவன் காரணமறியாது , “என்னடா இது,, ஆடு இப்படிச் செய்து விட்டதே...” என்று வருந்தினான். என்ன தவம் செய்ததோ, அந்த ஆடு தினமும் தானாக ஒரு இடத்தில் பால் சுரந்து கொண்டிருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட நாளிலே அவ்வூர் அம்மன் கோயிலிலே பலி கொடுக்க எண்ணி, அந்த ஆட்டைப் புனித மஞ்சளால் நீராட்டிச் சந்தனம், குங்குமம் இட்டுப் புஷ்பாதி அலங்காரங்கள் செய்து பட்டாக் கத்தி கொண்டு வெட்டலானான் வெட்டினானே தவிர என்ன அற்புதமோ! ஆடு வெட்டுப்படவில்லை. எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். மக்கள் வியந்து, அந்த ஆட்டை வெட்டுவதைத் தவிர்த்து, அதனைத் தெய்வசக்தி மிகுந்ததெனக் கருதி கோயிலைச் சுற்றி அந்த ஆட்டை விட்டு விட்டனர்.

ஸ்ரீரோமச மகரிஷி திருக்காட்டுப்பள்ளி

கோகர்ணன் மனம் வியந்து இந்த அற்புதத்தின் காரணம் அறிய வேண்டி தினமும் ஆட்டைப் பின் தொடர்ந்த போது ஒரு லிங்கத்தின் மேல் தானாகவே அதுபால் சுரப்பதைக் கண்டு, அருகே சென்று பார்க்க.... ஆஹா! அங்கே ஓர் அற்புதமான லிங்கம்! என்னே அதிசயம்! அதன் மஹிமை யாதோ! ஆனால் காரணம் ஏதுமறியாமல் சாதாரணமாக நீர், புஷ்பம் கொண்டு அதனை தினம் பூஜிக்கலானான் கோகர்ணன். அந்த லிங்கமோ மஹிமை வாய்ந்த சுயம்பு லிங்கம். ஸ்ரீரோம ரிஷி என்ற அற்புத மஹரிஷியால் பூஜிக்கப்பட்ட சுயம்பு லிங்கம். நாளடைவில், கோகர்ணன் ஒரு மனதுடன் செய்த பூஜையால் மனதில் தெளிவு பெற்று, ஞானம் பெற்றுப் பல ஊர்களுக்கும் சென்று பல திருக்கோயில்களில் சிறப்பான பூஜைகள், தான தர்மங்கள் செய்து திருக்கோயில் திருப்பணிகளில் கிட்டிய புண்ணியத்தையும் பொருளையும் இலவச வைத்யங்களிலும் ஏனைய சேவைகளிலும் அர்ப்பணித்தான். சுயநலப் பிராத்தனைகள் இல்லாது ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபட்டமையால் ஸ்ரீரோம மஹரிஷியே ஓர் ஆட்டு ரூபத்தில் அவ்வப்போது கோகர்ணனுக்குத் தரிசனம் தந்து பல அரிய இறைவழி முறைகளை அருளினார். அவற்றை முறையாகக் கடைபிடித்து ஸ்ரீரோம மஹரிஷியின் பரிபூரண குருவருளைப் பெற்று ஆயிரக்கணக்கான மக்களுக்கு நல்வழி காட்டினார் கோகர்ணன்.
அவர் எங்கு சென்றாலும் ஆயிரக்கணக்கான ஆடுகள் பின் தொடரும். அத்தகைய கடை ஜீவன்களான ஆடுகளுக்கும் மேன்மையளிக்கும் உத்தமப் பெருநிலையை அடைந்தவரே கோகர்ணன். அந்தப் புனிதமன ஆடானது லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த மேன்மையால் இறுதியில் திருநின்றவூர் (சென்னை) ஸ்ரீஹிருதயாலீஸ்வரர் ஆலயத்தில் முக்தி பெற்றது.. இவ்வாலயச் சித்திரத்தில் இன்றும் இந்த ஆட்டின் ரூபத்தைக் கண்டு தரிசித்திடலாம்.
மேலுகத்தில் கோகர்ணருக்கு அளிக்கப்பட்ட நிலை என்ன? என்னே பாக்யம்! ரோமரிஷி லோகத்தில் அவரை ஆசீர்வதித்து ஏற்றுக் கொண்டார்கள். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட பாக்யமோ இன்றும் என்றும் எப்போதும் நிலைத்து நித்யசத்யமாய் இருக்கும் இறைவனின் திருநடனத்திற்கு அற்புத மணம் வீசும் தெய்வீக பாக்யம்.. அந்த கோகர்ணன் தான் இறைவன் திருநடனத்தின் போது என்றும் மணம் வீசும், வாடாத வதங்காத அன்றலர்ந்த மலராகி, அற்புத புஷ்பமாக, தேவர்களுக்கும் ஏன் மனிதர்களுக்கும் ஆயுளை விருத்தி செய்யும் அற்புத மலராக மலர்ந்து சிந்தூர ரஞ்ஜிதப் புஷ்பமாய் மணம் வீசிக் கொண்டே இருக்கின்றார்.
தாள புஷ்ப புதா கரணம்
இந்த சிந்தூர புஷ்பமானது, பலவித கர்ணங்களை ஸ்ரீநடராஜர் ஆடும்போது, மணம் வீசும். குறிப்பாகத் தாள புஷ்பா புதா என்ற கரணம் ஆடுகையில் விசேஷ மணம் வீசும். அப்போது எந்தெந்த தேவர்கள், யோகிகள், மஹான்கள், ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள் இறைவன் திருநடனத்தைக் காணுகின்றார்களோ அவர்களெல்லாம் இந்த புஷ்பத்தின் மணத்தைச் சுவாசித்து தங்களுடைய திருக்கயிலாய வாசத்தின் பாக்யத்தை விருத்தி செய்து கொள்கின்றார்கள். இவ்வாறு எம்பெருமானாகிய ஸ்ரீநடராஜர் தம்முடைய ஒரு திருநடனத்தின்போது தாள புஷ்பா புதா கரணம் ஆடுகையில் சிந்தூர ரஞ்சித புஷ்ப மணத்திலிருந்து  ஒரு ஜோதி தோன்றியது.. அந்த ஜோதியானது பூலோகத்தை நோக்கி வந்தது.

திருமண நேர்த்தி முறை
புதன் கிழமை, திருஆதிரை நட்சத்திரம் சேரும் நாளில், தங்கள் ஊரில் இருந்து நடந்தே கும்பகோணம் அருகே திருமணஞ்சேரி அல்லது சென்னை அருகே திருவிடந்தை சென்று வேண்ட வேண்டும்.

லம்போதரனின் பிறப்பு
பூலோகத்தில் அப்போது திருஅண்ணாமலையார் மீது அளவு கடந்த அன்பு பூண்ட ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுடைய பெயரோ வாசுதேவ நம்பூதிரி – லட்சுமி அம்மாள் என்பதாம். அவர்கள் திருஅண்ணாமலையான் மீது மாறா அன்பு செலுத்தி இரவு பகலாகத் திருஅண்ணாமலையை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு வலம் வருகையில் ஒரு நாள் தசமுக தரிசனம் அருகில் அங்கேயே தங்கிவிட்டார்கள்.. அன்று இரவு அவர்கள் கனவில் திருஅண்ணாமலையான் தோன்றி “உங்களுக்கு ஒரு அற்புத தெய்வக் குழந்தை பிறக்கும். அவன் இந்த உலகத்திற்கும் பல லோகங்களுக்கும் பயன்படும் உத்தமனாய் வாழ்வான். அதோடு மட்டுமல்லாமல் அவன் கணபதி உபாசனையில் சித்தி பெற்றுப் பல இடங்களில் அற்புதங்களை நிகழ்த்தி, அனைத்து வினைகளையும் தீர்க்கின்ற, வெற்றியையும் அருளுகின்ற பல கணபதி விக்ரகங்களைப் பிரதிஷ்டை செய்து மக்கள் எல்லா நலன்களும், வளங்களும் பெறுவதற்கு வழி செய்வான்! எதிர்காலத்தில் நாகமுனிவர் என்ற பெயருடன் உயர்நிலை அடைந்து எம்மை அடைவான்“ என அருளினார்..
கனவு முடிந்து இருவருக்கும் ஒரு சேர விழிப்பு ஏற்பட்டு அற்புதமான கனவை எண்ணி வியந்து பரிமாறிக் கொண்டார்கள். தம் சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கோகர்ணம் வந்தடைந்தனர். சில மாதங்கள் கழித்து திருஅருணாசலத்தின் வாக்குப்படி லக்ஷ்மி அம்மாள் கருவுற்றுக் கார்த்திகை மாதம் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் ஒரு தெய்வீக ஒளி வீசும் ஆண் மகவைப் பெற்றேடுத்தார். அந்த ஜோதியே சிந்தூர ரஞ்சித புஷ்பத்தில் எழுந்த ஜோதியாம்.. அக்குழ்ந்தைதான் பூர்வ ஜென்ம கோகர்ணன்.
ஆஹா! என்ன அழகு! என்ன ஒளி! என்னே தேஜஸ்! எல்லாம் ஒரு சேரப் பிறந்த தெய்வீகக் குழந்தையைப் பார்த்து மகிழ்வுற்றனர் வாசுதேவ நம்பூதிரியும், லக்ஷ்மி அம்மாளும், உற்றமும் சுற்றமும் ஊர்மக்களும், அனைவரும் ஒருசேர அந்தக் குழந்தைக்கு லம்போதரன் என்ற சிறந்த பெயரைச் சூட்டினர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் சீரும் சிறப்புமாகத் தெய்வீக நிலையில் வளர்ந்த அக்குழந்தையைப் பார்த்தவர்கள் பல நலன்களை அடைந்தார்கள். தூக்கியவர்கள் பல கார்யசித்திகளைப் பெற்றனர். இவ்வாறாக அக்குழந்தை மஹா தெய்வீக சக்தி வாய்ந்ததாக விளங்கியது.

பசுநெய் தீபம்
ஆரோக்கியம் வளரும். கோயிலில் பசுநெய் தீபம் ஏற்றினால் பத்து மடங்கு பலன் அதிகம்.

பெற்றோர்கள், குழந்தைக்குக் கர்ண பூஷணம் (காது குத்துதல்) நிகழ்த்தி, தீட்சை (குடுமி) வைத்துக் குருகுல வாசத்திற்கு அனுப்பினர். அங்கே குருநாதர் பாடம் சொல்ல வாய் திறக்குமுன்னரே குழந்தை அப்பாடங்களைச் சொல்ல, குருநாதரோ அக்குழந்தையையே தெய்வம் எனச் சொல்லி வணங்கி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.
தனக்குப் பாடம் சொல்லித் தர தகுதியில்லை என்று குருநாதர் திருப்பி அனுப்பிய குழந்தையைக் கண்டு.... “நீ பாடம் எல்லாம் தானாகச் சொல்கின்றாயாமே! எல்லோரும் உன்னை தெய்வம் எனச் சொல்கிறார்களே!“ என்று பெற்றோர்கள் கேட்டிட,, குழந்தையும் “அப்பா! நான் தெய்வம் அல்லன்! குருவின் முன் சென்ற உடனேயே எல்லாப் பாடங்களும் வந்து விடுகின்றன,” எனக் கூறி வணங்கியது..
ஸ்ரீஅருணாசல அழைப்பு
இறைவனின் திருஉருவத்தைக் காணா விழைந்து, உளம் மகிழ்ந்து, மெய்சிலிர்த்து ஆனந்தம் பொங்க, தனை மறந்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கி, பெற்றோர்களிடம், “அம்மா! அப்பா! என்னை நானே அறிய திருஅருணாசலத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்,” எனக் கேட்டான்.. பெற்றோர்கள் அதிசயித்தனர்.., குழந்தையின் உயர்ந்த தெய்வீக சக்தியை அறிந்து மெய் சிலிர்த்தனர். அப்பா! நாங்கள் தவறு செய்து விட்டோம். திருஅருணாசலத்தின் கருணையை மறந்து விட்டோம். திருஅண்ணாமலையின் திருவருளால் தசமுக தரிசனத்தில், எம் கனவில் அருட்பெருங்கடலாக, தனிப்பெருங்கருணையாக வந்தருள் செய்த எம் இறைவன் திருஅருணாசலத்தினை மறந்ததை நினைவூட்டி அதனையும் அவனே மன்னித்து உன் மூலமாக எம்மை வரச் சொல்லி நன்றி செலுத்த  அழைக்கின்றானோ, ” என இறைவன் கருணையை நினைந்து நினைந்து உருகி அவர்கள் திருஅருணாசலத்தை வந்தடைந்தனர்.

அர்த்த சோம வார விரதம்
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நீர் மட்டுமே அருந்தி, பஞ்சாட்சரம் ஓதி விரதம். மாலையில் சிவன் கோயிலில் இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி, அன்ன தானத்துடன் முடிக்கவும்.

 திருஅண்ணாமலையில் தம்பதிகள். குழந்தையுடன் கிரிவலம் வரலாயினர். தசமுகதரிசனப் பகுதிக்கு வந்தவுடன் தங்களுடன் குழந்தையையும் இறைவனுக்கு நன்றி செலுத்தச் சொன்னார்கள். குழந்தையும் மலையை வணங்கி நமஸ்கரித்தான்.., “அம்மா-அப்பா நாம் இன்று இங்கேயே தங்கிவிடுவோம்” – என்றான். அதுவே அந்தத் தம்பதியினர், குழ்ந்தை பிறப்பதற்கு முன் தங்கிய இடமாகும். பெற்றோர்கள் தெய்வீக சக்தி வாய்ந்த குழந்தையின் சொல்லுக்கு இசைந்து அங்கு அன்றிரவு குழந்தையுடன் தங்கினர். அன்றிரவு கனவில் திருஅண்ணாமலையார் கருணைமிகு வள்ளலாக தம்பதிகளுக்குத் திருவாய் மொழிந்தார் :-
இக்குழந்தையை உம்மை ஒரு கருவியாகக் கொண்டு உலகுக்கு எம்பணிக்காகவே எழுந்தருளச் செய்தோம். ஆகையால் குழந்தையை மட்டும் இங்கே விட்டுச் செல்க” – என அருளிச் செய்தார். சிறிதும் சஞ்சலமில்லாத வாசுதேவன் நம்பூதிரி இறைவன் கருணையை நினைத்து, “ஆஹா! இறைவனின் குழந்தையை ஐந்து வயது வரை வளர்த்ததே யாம் பெற்ற பெரும் பாக்யம்! பிறவிப் பயனை அடைந்தோமே!” என நினைத்து ஆனந்தம் அடைய தாயார் லக்ஷ்மி அம்மாளும் அவ்வாறே எண்ணினள்! என்னே தீர்கமான தம்பதியினர்!! தாய்ப்பாசம் என்றல்லாது இறைவன் கருணையன்றோ என்றே நினைத்தாள். துளிக்கூட வருத்தமோ, ஏன் சிறிது சஞ்சலம் கூட இல்லை! குழந்தையிடம் விஷயத்தைச் சொல்ல இருவரும் யத்தனிக்க, குழ்ந்தையே முந்திக்கொண்டு இறையாணைப்படி தன்னை அங்கேயே விட்டுச் செல்லுமாறு கூறினான். பெற்றோர்கள் குழந்தையை விட்டுவிட்டுக் கிரிவலத்தை முடித்துப் புதுக்கோட்டையை அடைந்தனர்.. குழந்தையும் கிரிவலம் வந்து உச்சிப் பிள்ளையார் திருக்கொலு வீற்றிருக்கும் இடத்தில் தியானத்தில் அமர்ந்து தவத்தில் ஆழ்ந்தான். இன்றும் அச்சன்னதி ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் குதூகல நந்தி அருகில் உள்ளது.

குண்டுமணி
வெள்ளை நிற குண்டுமணியால் பிள்ளையாருக்கு அர்ச்சிப்பதால் சந்திர தோஷங்கள் தீரும்.
ஓம் தத் புருஷாய வித்மஹே
சந்திரசேகராய தீமஹி
தந்நோ சந்திரேஸ்வர ப்ரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தை 18 முறை ஓதுதல் சிறப்பே.
பச்சை நிற குண்டுமணியால் பிள்ளையாருக்கு அர்ச்சிக்க புத பகவான் அனுகிரகம் கிட்டும். அம்பாள் உபாசனைக்கு ஏற்றது. தங்க, வைர வியாபாரிகள் பயன்படுத்தலாம்.

சட்டை முனியிடம் நாக முனியாதல்
குழ்ந்தை லம்போதரன் தன்னுடைய தவத்தைத் தொடங்கினான்.. ஊண், உறக்கம் இன்றி எல்லாவற்றையும் மறந்து தன்னை இழந்து உலகை மறந்த நிலையில் அற்புதமாகத் தவம் புரியலானான். அப்போது சட்டைமுனி என்ற சித்தபுருஷர் கிரிவலம் வந்து கொண்டிருந்தார். தம் ஞான திருஷ்டியால் சிறுவன் தவம் பூண்டு இருப்பதை அறிந்து கிரிவலம் தனை முடித்துத் திருக்கோயிலுக்கு வந்தார். சகல கலைகளையும் கற்ற சர்வ சக்தியையும் கொண்ட சித்தர் “குழந்தாய்” என்று அழைத்தார்.
சிறுவனும் உடனே கண் திறந்து, சித்தரைப் பார்த்த உடனேயே வீழ்ந்து, வணங்கினான். சட்டை முனி சிறுவனைத் தன்னுடைய சிஷ்யனாக ஏற்றுப் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று பல கலைகளையும் கற்பித்தார். முன் ஜென்மத்தில் ஸ்ரீரோமரிஷியிடம் குருகுலவாசம் பயின்றவரே தற்போது சட்டை முனி சித்தரிடம் அருள்வாசம்! இவ்வாறு பல கலைகளையும் பக்தி நிலைகளையும் உய்த்துணர்ந்த சிறுவனும் சட்டை முனி சித்தருடன் வந்து கொண்டிருக்கும் போது மஹாக் கொடிய விஷ் முள்ளதாக நாகம் தீண்டி ஒருவர் இறந்துவிட்டதை அறிகின்றார் சட்டைமுனி சித்தர்... தனது சிஷ்யனிடம் அங்குச் சென்று பார்த்து வரப் பணித்தார்.
அங்கே அச்சிறுவன் பாம்பு கடித்தவரின் தேகத்தின் மேல், மேலிருந்து கீழ் முகமாக ஒரு முறைத் தன்னுடைய பார்வையை ஓட விட்டார். ஆஹா! என்னே தீட்சண்யம்! விஷம் பாய்ந்து இறந்தவர் உடனே பிழைத்து எழுந்தார். மக்களனைவரும் சட்டைமுனி சித்தரிடம் சிறிய முனிவரின் தெய்வச் செயல் என்று பாராட்டி அவருடைய பிரபாவங்களைக் கூறினர். இவ்வாறே பல இடங்களிலும் மக்கள் பேசலாயினர். இவ்வாறாகவே நாக முனி என்ற பெயரைப் பெற்றார் லம்போதரனாகிய அச்சிறுவன்..
சட்டைமுனி,, நாகமுனியுடன் பல இடங்களுக்கும் சென்று அவருடைய, தவ, யோக, தபோ சக்திகளைத் திரட்டிப் பல விதமான கணபதி மூர்த்தங்களை ஆங்காங்கே அமைக்குமாறு அருளிச் சென்றார்., நாகமுனியும் அற்புதமான தம் தெய்வீக சக்திகளைத் திரட்டி அழகான, சக்தி வாய்ந்த, அருள்பொழியும் கணபதி விக்ரகங்களைப் பல ஊர்களில் பிரதிஷ்டை செய்தார். இவையெல்லாம் சட்டைமுனி சித்தர் தாம் தம் சிஷ்யனிடம் விடைபெறும் முன்னர் பூமியிலிருந்து பெற்றுத் தந்த சுயம்பு மூர்த்திகளாம். அவர் இறுதியாகத் தந்த ஒரே ஒரு கணபதியை மட்டும் தன் கையிலேயே எடுத்து வரலானார் நாகமுனி.. இன்று செட்டிநாட்டு பகுதிகளில் அருள்புரியும் பல ஸ்ரீவிநாயக மூர்த்திகள், ஸ்ரீசட்டைமுனி சித்தரால் பூமியிலிருந்து பெற்றெக்கப்பட்ட சுயம்பு மூர்த்திகளாகும்.

அரண்மனைப்பட்டி

பல யுகங்களாக, பலவிதங்களில் பல மஹரிஷிகளால் சிறப்பாகப் பூஜை செய்யபட்ட, சர்வ வல்லமை படைத்த சக்திவாய்ந்த ஒரு கணபதியை மட்டும் தன் கையோடு எடுத்து வந்து கொண்டே, நாகமுனி பல புனித யாத்திரைகளை மேற்கொண்டார். பல இடங்களிலும், அரசு, ஆல், வேம்பு, வன்னி மரங்களின் அடியில் பல கணபதிகளைப் பிரதிஷ்டை செய்து மிஞ்சியது ஒரே ஒரு மூர்த்தமே! அந்தக் கணபதிக்கு நாகமுனி பலவிதமான மூலிகைச் சக்திகளை அளித்திருந்தார். மேலும் பல யந்திர, வேத, மந்திர, தந்திர வசிய சக்திகளைக் கூட்டிப் பன்மடங்கு ஆகர்ஷ்ண சக்திகளையும் தாங்கி ஸ்ரீகணபதி பரிணமித்தார். தனக்குத் தெளிவு கொடுக்குபடி இறைவனை வணங்கிக் கணபதியை எடுத்து வருகிறார். அந்த மஹாசக்தி வாய்ந்த கணபதிக்கு மற்றுமொரு சக்தி! வினோதமான சக்தி! அதைச் சுமந்து வரவர அவருடைய பளு மிகவும் அதிகமாகிக் கொண்டே வரும். நாச்சியார் கோயில் கல்கருடன் போல! சுமக்க முடியாமல் சுமந்தவாறே கணப்தியையும் அருள் புரிய வேண்டிய பிரார்த்தித்து வருகின்றார். அவருடைய சொந்த ஊர்ப் பகுதியான புதுக்கோட்டை அருகே வரும்போது.... அம்மண்ணை நெற்றியிலிட்டு அப்பூமிக்குரிய தேவதையை நினைந்து வணங்குகின்றார். அப்பகுதிக்கு அதிபதியான ஸ்ரீகருப்பண்ண சுவாமியையும் வணங்கி அருள்புரிய வேண்டுகின்றார். பாருங்கள்,, மஹான்களும் அந்தந்த தேவதைகளையும் தெய்வமூர்த்திகளையும் முறையாக வணங்கியே தங்கள் பணிகளைத் தொடர்கின்றனர்.., அப்படியானால் சாதாரண மானுடர்களாகிய நாம் தேவதா பிராத்தனைகளை முறையாக நிறைவேற்றியே ஆக வேண்டுமல்லவா?  ...இறையருளால், ஆஹா! ஸ்ரீகருப்பண்ண சுவாமியுடைய வாள் மேலேழும்பிப் பறக்க ஆரம்பித்தது.. வாள் சென்ற வழியில் நாகமுனி கணபதியைச் சுமந்து செல்லலானார். ஓர் அற்புதமான மரத்தினடியில் அந்த வாள் இறங்கி நின்றது. அந்த வாளே மரமாகியது. அந்த மரமே கொன்றை மரம்.

மூதா கருப்பண்ண ஸ்வாமி எல்லா கருப்பண்ண ஸ்வாமிகளுக்கும் தலைவர். சிவனிடமே ஈஸ்வரப் பட்டம் வாங்கியவர்.

சிவன் செயல் ஸ்வாமியானார்..
இறைவனின் கருணையை நினைந்து நெஞ்சுருகி அந்த இடத்திலேயே, அபூர்வமான கொன்றை மரத்தடியில் பல அற்புதமான சக்திகளுடன், சிறப்பாக, விசேஷமாக பல விதமான தேவபூஜைகளுடன், சித்தர்களுக்குரித்தான பிரதிஷ்டா விதிகளுடன் அந்த கணபதியை அங்கே பிரதிஷ்டை செய்து அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தினார். கம்மென்று அப்பகுதியெங்கும் நறுமணப் புகை சூழ்ந்தது! ஆம் அதுவே சிந்தூர ரஞ்சித புஷ்ப மணம்! அன்று அதை நுகர்ந்த மனிதர்கள், மரங்கள், விலங்குகள் உட்பட அனைத்து ஜீவன்களும் க்ஷணப்பொழுதில் நற்கதி பெற்றன. அதன் பிறகு அங்கு வந்த மக்களுக்கெல்லாம் அற்புதமான முறையில் கர்ம நிவாரணங்கள் அளித்து அருள் புரிந்தார். வந்த மக்களுக்கெல்லாம்... “சிவன் செயல், சிவன் செயல், சிவன் செயல்“ என்றே சொல்லி ஆசிர்வதித்தார். யார் எது கேட்டாலும் அவ்வாறே சொல்லி வந்தார். அவர் லம்போதரன் என்ற பெயரையோ, நாகமுனி என்ற பெயரையோ யாரிடமும் சொல்லவில்லை. அந்த இரண்டு பெயர்களும் இறை நியதியாக மறைந்து சிவன் செயல் சுவாமி என்று காரணப் பெயராக வழங்கலாயிற்று. நாக முனி, நாக மஹரிஷி என்ற சிவன் செயல் ஸ்வாமியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரே கொன்றையடி விநாயகர்!
இடம் : குருந்தம்பாறை, அரண்மனைப்பட்டி, நேமத்தான்பட்டி (போஸ்ட்), திருமயம் தாலுக்கா, புதுக்கோடை மாவட்டம்...
சிவன் செயல் ஸ்வாமிகள் ஜீவசமாதி பூண்ட இடமோ காரைக்குடி!
கொன்றையடி விநாயகருக்கான அபிஷேக பலன்கள் :

தேங்காய் எண்ணெய்

சுகத்தைத் தரும்

பஞ்சகவ்யம்

மன சுத்தி

பஞ்சாம்ருதம்

காரிய சித்தி

நெய்

நற்குணமுள்ள பெண் மனைவியாவாள்

பால்

குணமுள்ள கணவனைத் தரும்

தயிர்

தவறான வழி செல்ல விடாது

கரும்புச்சாறு

மனதிடம் தரும்

தேன்

தெளிந்த அறிவைத் தரும்

பழரசம்

மரண பயம்போக்கும்

இளநீர்

பதவியைத் தக்க வைக்கும்

சந்தனம்

சந்தேகத்தைத் தீர்க்கும்

காவிரி, கங்கை புனித நீர்

வருவாயைப் பெருக்கும்

வஸ்திரம்

மானத்தைக் காக்கும்

1. கொன்றையடி விநாயகருக்கு 21 நாட்களுக்கு செம்பருத்திப் பூமாலை (சாற்றி) அணிவித்து பூஜித்தால் இடமாற்றம் நல்லதாய் அமையும்.
2. வியாழன் அன்று மஞ்சள் நிறச் சாமந்திப் பூமாலை 48 வாரங்கள் தொடர்ந்து சாற்றி வழிபட்டிட மந்த புத்தி உள்ள குழந்தைகளின் மந்தகதி மாறி படிப்பில் முன்னேற்றம் பெறுவர்.. உயர் படிப்பில் வெற்றியைத் தேடித் தரும்.
3. அருகம்புல்லை எடுத்து (கணுக்களுடன்) அவரவரே தொடுத்து 21 சதுர்த்திகள் தொடர்ந்து சாற்றி வழிபட, விரும்பும் வெளிநாட்டுப் பயணங்கள் அனுகூலமாய் அமையும்.
4. 11 புதன் கிழமைகள் வன்னி தளங்களால் சஹஸ்ர நாமாவளி / 1008 போற்றிகள் அர்ச்சித்து வழிபட்டால் கொடுக்கல் வாங்கலில் நல்லதொரு முடிவு ஏற்படும்..
5. 21 சனிக்கிழமைகள் மூலிகை எண்ணெய்க் காப்பிட்டுப் பாலாபிஷேகம் செய்தால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வர்.. (மூலிகை எண்ணெய் விளக்கங்களை குருவை, வழிகாட்டியை நாடி அறியவும்).
6. 21 வெள்ளிக்கிழமைகள் அரைத்த சந்தனத்தை ஸ்வாமிக்கு இட்டுக் குங்குமம் வைத்து ஔவையார் அருளிச் செய்த விநாயகர் அகவலை மூன்று முறை ஓதி வந்திடில் தடங்கல் நீங்கித் திருமணம் கை கூடும்.
7. செவ்வாய்க் கிழமைகளில் மலைவாழை, செவ்வாழை, மொந்தன் பழம், ரஸ்தாளி, நேந்திரம் பழம் – இந்தப் பழங்களால் அபிஷேகம் செய்திட நினைத்த நற்காரியம் பக்தர்களுக்கு (நன்மையாய் இருந்தால்) நிறைவேறும்.
8. கோர்ட் வழக்கு, கடன் தொல்லை, நிலபுல விவகாரங்கள், புதிய மனைபுகுதல், புதிய நிலங்கள் வாங்குதல், விற்றல் – இத்தகைய கார்யங்கள் சித்தியாக விநாயக சதுர்த்தியன்று 1008 கொழுக்கட்டைகள் (பிடி கொழுக்கட்டைகள்) நைவேத்யமாய் வைத்துத் தானம் செய்திடில் இவற்றில் நியாயமான முறையில் ஜயம் ஏற்படும்.
9. 28 ஞாயிற்றுக் கிழமைகள் தேன் அபிஷேகம் செய்து சர்க்கரைப் பொங்கலைப் படைத்து 10, 28. 55. 46. 75 பேருக்காவது தானம் செய்திடில் நல்ல புதிய வாகனங்கள் வாங்குவது, வாகன லாபங்கள் வருவதற்கும் நல்வழி செய்வார் கொன்றையடி விநாயகர்.
10. கரும்புக் கழியால் தொட்டில் கட்டிக் குழந்தையை அதில் படுக்க வைத்து ஆவணி மூல நட்சத்திரத்தன்று கொன்றையடி விநாயகரை 21 முறை அடிப்பிரதட்சிணமாய்ப் புதிதாக மருதாணியிட்ட கால்களுடன் வலம் வர குழந்தைகளுக்கு ஏற்படும் திருஷ்டி, ஏவல்கள் விலகும்.

அமுத தாரைகள்

1. நம் யுகத்திற்கான தெய்வ நாமங்கள்
கோயில்களில் ஸ்ரீதுர்கை, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீசரஸ்வதி போன்ற தெய்வ மூர்த்திகள் பொது நாமங்களில் தான் எழுந்தருளியுள்ளனர். ஆனால் அந்தந்த யுகம், மன்வந்திரத்திற்கேற்ப இம்மூர்த்திகளின் திருநாமங்களும் அளிக்கப்பட்டுள்ளன. கலியுகத்தில் தற்போது நடக்கும் வைவஸ்வத மன்வந்தரத்தில் ஸ்ரீதுர்கை, ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீசரஸ்வதியின் விசேஷ நாமங்களாக சித்த புருஷர்கள் அருள்வதாவது :-
ஸ்ரீதுர்கை – ஸ்ரீபூதுர்காஸினி |
ஸ்ரீலக்ஷ்மி – ஸ்ரீக்ஷீரஸாகரி
ஸ்ரீசரஸ்வதி – ஸ்ரீபூப்ர ஸாதினி
அனைத்து கோயில்களிலும் இந்த நாமத்தில் அந்தந்த அம்பிகையை வழிபட அவர்கள் ஆனந்தத்துடன் பரிபாலிக்கின்றனர்.

புரவிப்பாளைய சித்தர் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தவர். அவர்தம் காலைத் தொட்டு உருவிக் கொடுத்தால் நம் பிரச்னைகள் தீர்ந்து விடும்.

2. நட்சத்திர லிங்க அபிஷேகம்
சென்னை திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி திருக்கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியாக லிங்கங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொருவரும் மாதந்தோறும் அவரவர் ஜன்ம நட்சத்திரத்தன்று குறிப்பிட்ட, நட்சத்திர லிங்கத்துக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து நைவேத்தியம் செய்த உணவை கோயில் வாசலில் உள்ள ஏழை எளியோருக்கு தானமளிக்க வேண்டும். இதனால் அவர்கள் செய்யும் காரியங்கள் மூலம் வீண்பழி ஏது ஏற்படாது. காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறிப் பெரும் புகழ் பெறுவர். மனம் பேதலிக்காது திடமாய் இருக்கும். இறைவனிடம் பக்தியும், இறைத் தொண்டு செய்யும் எண்ணமும் ஏற்படும்.
3. எம பயம் நீங்க....
ஒவ்வொரு மாதமும் வரும் மக நட்சத்திரத்தன்று எருமை மாடுகளுக்கு உணவு படைப்பது மிகவும் விசேஷம். அதிலும் குறிப்பாக, அகத்திய மாமுனிவரிடம் ஆசி பெற்ற அகத்திக் கீரையை மக நட்சத்திரத்தன்று எமதர்மராஜரின் வாகனமான எருமை மாடுகளுக்குக் கொடுத்து முறையாக வணங்கி வந்தால் எம (மரண) பயம் நீங்கும். இறந்தவுடன் ஜோதியாக சிவலோகம் அடையும் நல்வழி கிட்டும். வளர்பிறை நாட்களில் வரும் மக நட்சத்திரத்தன்று எருமை மாடுகளுக்குக் கீழ்க்கண்ட முறையில்

மாமிசம் உண்ட தோஷம் தீர…
வாரம் ஒரு முறை, வியாழக் கிழமை அன்று, அருகம்புல்லைப் புதிதாகப் பறித்துக் கஷாயம் வைத்து அருந்திவர வேண்டும்.

ஞாயிறு – பரங்கிப் பத்தை
திங்கள் – முளைக் கீரை
செவ்வாய் – சிவப்புத் தண்டு கீரை
புதன் – முருங்கைக் கீரை
வியாழன் – பொன்னாங்கண்ணி கீரை
வெள்ளி – பசலைக் கீரை
சனி – நச்சுக்கொட்டைக் கீரை
தேய்பிறை நாட்களில் வரும் மக நட்சத்திரத்தன்று எருமை மாடுகளுக்குக் கீழ்க்கண்ட முறையில் உணவிடுவதன் மூலம் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

2060 ஆண்டுக்கு மேல்
(1) மகான்கள் பூமியில் இருக்க மாட்டார்கள்.
(2) மக்கள் கரியமில வாயுவை (கார்பன்-டை-ஆக்ஸைட்) சுவாசித்து வாழ்வார்கள்.
(3) Air Traffic Jam ஏற்படும்.

ஞாயிறு – பூசனி பத்தை
திங்கள் – அரைக்கீரை
செவ்வாய் – சிறுகீரை
புதன் – ஆராக்கீரை அல்லது பருத்திக்கொட்டை
வியாழன் – கீழாநெல்லிக்கீரை
வெள்ளி – கமார் வெற்றிலை
சனி – மணத் தக்காளிக்கீரை
பொதுவாக மக நட்சத்திரத்தன்று எருமை மாடுகளுக்கு அகத்திக் கீரை கொடுப்பது வழக்கமென்றாலும், நாட்களின் பயனறிந்து செயல்படுவோர் அதிக நன்மை பெறுவர்.
3. எத்தனை தீபம் ஏற்றினால் என்னென்ன பலன்?
விளக்கில் நாம் ஏற்றும் தீபங்களின் எண்ணிக்கையைப் பொறுத்துப் பலனும் மாறுபடுகிறது.
ஒருமுக தீபம் – சாதாரணமாக வீடுகளில் ஒருதிரித் தீபம் ஏற்றக்கூடாது., கோயில்களில் ஒருமுகம் உடைய இரண்டு விளக்குகளை ஏற்றலாம்.

பஞ்சபூத தோஷ நிவர்த்தி காயத்ரீ
ஓம் தத் புருஷாய வித்மஹே
ந ம சி வ ய தேவாய தீமஹி
தந்நோ பஞ்சபூத வஸ்திர தோஷ நிவர்த்தி ப்ரசோதயாத்

இருமுக தீபம் – பிரிந்தவர் கூடுவர்  குடும்ப ஒற்றுமை வளரும்.
மூன்றுமுக தீபம் – குழ்ந்தைகளுக்குப் படிப்பில் ஏற்படும் மறதி குறையும்
நான்குமுக தீபம் – பால் பாக்கியம் கிட்டும். பிருத்வி அருள் கூடி நிலம் வாங்குவர்.
ஐந்துமுக தீபம் – அனைத்து நலனும் நல்கி அம்பிகையின் பூரண அருள் கிட்டும்.
4. தேங்காயை உடைக்கும் முறை
தேங்காயை பூஜைக்கு மட்டுமின்றி எக்காரணத்திற்கு உடைத்தாலும் “ஸ்கந்தபலா க்ஷீரபலா பரசுராம சுபம் சுபம் சுபம்” என்ற எளிய விசேஷமான மந்திரத்தைத் துதித்து உடைக்க வேண்டும். இதனால் தேங்காய் பல தெய்வீக சக்திகளைப் பெறுகிறது.. ஏனெனில் பூலோகத்தில் பல அரிய தெய்வமூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து தேங்காயை பூலோகத்திற்குக் கொண்டு வந்தவரே ஸ்ரீபரசுராம மூர்த்தியாவார். இதைப்பற்றிய விளக்கங்களை ஸ்ரீபரசுராம கல்ப சூத்திரத்தில் காணலாம்.
5. தான எண்ணத்துடன் உண்க
சாப்பிடுவதற்கு முன் இலையின் ஓர் ஓரத்தில் சிறிதளவு உணவை எடுத்து வைத்து விட்டுத்தான் உண்ண வேண்டும். ஏனென்றால் உண்டபின் நாம் எறிந்து விடும் எச்சில் இலைகளை நாடி நாய், பசு, காகம் போன்ற பல ஜீவன்கள் வருகின்றன. அவை நம் இலையைப் பார்த்து ‘உணவில்லையே’ என ஏமாந்து திரும்பிச் சென்றால் நமக்கும் வாழ்வில் உணவு கிடைக்காமல் ஏமாறும் நிலை ஏற்படும். எனவே சாப்பிடுமுன் சிறிதளவு உணவினைப் பிற ஜீவராசிகளுக்காக எடுத்து வைப்பது ஓர் நல்ல பழக்கம். இலை மட்டுமன்றி, தட்டு, டிபன், கேரியரில் உணவு உண்ணுவோரும் வாழ்நாள் முழுதும் எளிமையான இப்பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
6. உண்பதற்கு முன்
அன்றாட வாழ்க்கையில் நாம் உண்ணும் உணவு மூலமாகவே பலவிதமான எண்ணங்களும் நம் உடலுக்குள் சென்று நம் மனதை ஆட்டி அலைக்கழிக்கின்றன. எனவே எங்கு, எந்த உணவை  உண்டாலும், உண்பதற்கு முன்,

ரத்த சோகை தீர தினமும் Ferradol டானிக் மூன்று வேளை மற்றும் கறிவேப்பிலை பொடி சாதம் சாப்பிடவும்.
Low BP குணமாக அஸ்வகந்தா லேகியம் 3 வேளை சாப்பிடவும். காலை பால், மதியம் மோர், இரவு பால் சாப்பிடவும். தினமும் கொத்தமல்லிப் பொடி சாப்பிடவும்.

அன்னபூர்ணே ஸதா பூர்ணே சங்கர ப்ராண வல்லபே
ஞானவைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாந்தேஹி ச பார்ப்வதி
மாதா ச பார்வதிதேவீ, பிதா தேவோ மகேஸ்வர:
பாந்தவா: சிவ பக்தாஸ் ச ஸ்வதேஸோ புவனத்ரயம்
பிக்ஷாந்தேஹி பிக்ஷாந்தேஹி பிக்ஷாந்தேஹி
க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேஸ்வரி||
-என்று துதித்து அன்னபூர்ணேஸ்வரி மாதாவை வணங்கிப் பின்னர் உணவு உட்கொண்டால், அவ்வுணவில் உள்ள தீய எண்ணங்கள் இறைச் சக்தியால் நீக்கப்பட்டு உணவு இறைப் பிரசாதமாக மாறி நம் உடலைச் சேர்கிறது. இந்த எளிய பழக்கம், புறவுலகில் உள்ள தீயசக்தி (negative force) களில் இருந்து நம்மைக் கவசம் போல் நின்று காக்கிறது. அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய எளிய பூஜை இது.
7.கணவன் – மனைவி ஒற்றுமை வளர
பல குடும்பங்களில் கணவன் மனைவியிடையே ஒற்றுமையின்றி எப்போதும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டே இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கிடையே வெறுப்பு வளர்ந்து, வேதனைதான் அதிகரிக்கிறது. இந்தப் பிரச்சனை தீர எளிய வழி ஒன்றுண்டு. ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளியுள்ள கோயில்களில் தேங்காய் எண்ணெயால் தீபமேற்றித் தேங்காய் சாதத்தைத் தொடர்ந்து தானம் செய்து வழிபட்டு வந்தால், வீட்டில் நிலைமை மாறி ஒற்றுமை வளரும். வேதனையும் நீங்கப் பெறுவர்.
8. குழந்தைகளுக்குத் தூளி கட்டும் முறை
குழந்தைகளுக்குத் தூளி கட்ட மர உத்திரம், மரத் தொட்டில் போன்ற மரப்பொருட்களையே பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் இரும்பு வளையங்கள், ஸ்பிரிங், பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. இரும்பில் “பசும்துளிர் மின் சக்தி” என்ற கெடுதலான மின்சக்தி குழந்தைகளின் மனோதிடத்தை பாதித்து இரைச்சல், பீதியில் கதறுதல், வயிறு, உடல் உஷ்ணத்தையும் உண்டாக்கும். இரும்பு வளையங்களில் மரக்கட்டையைச் செருகி அதில் தூளி கட்டலாம். பழைய, ஆகிவந்த மரத் தொட்டில்களே உத்தமமானதாகும்.

கடன் தொல்லை தீர த்ரிணலக்ஷ்மி தூபம் ஏற்றி வைத்து அஷ்டலக்ஷ்மி சக்கரத்தை வழிபட வேண்டும்.
வீட்டை அடகு வைத்து வாங்கிய கடன் தீர மச்சேந்திர சக்கரத்தை வைத்து வழிபடவும்.

9. ஆண்களுக்கான செவ்வாய் தோஷப் பரிகார முறைகள்
செவ்வாய் தோஷம் காரணமாகப் பல ஆண்களுக்கு எளிதில் திருமணம் கூடாமல் தள்ளிக் கொண்டே போவதுண்டு. அத்தகையோர் ஸ்ரீக்ஷிப்ர கணபதியை முறையாக அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு சிவப்பு நிற ஆடைகளை தானம் அளித்திடில் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும். பாண்டிச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகர், திருஅண்ணாமலை சிவலாயத்தில் உள்ள ஆநிறை கணபதியும் சிலாரூபத்தில் உள்ள ஸ்ரீஷிப்ர கணபதியின்  பேரம்சங்களாகும். வேறுபல பொதுவான காரணங்களாலும் ஆண்களுக்குத் திருமணத் தடங்கல்கள் இருப்பின் திண்டுக்கல் அருகே சின்னாளம்பட்டியில் உள்ள அபூர்வமான நான்கு முக முருகப் பெருமானை முறையோடு வணங்கி சிவப்பு நிற ஆடைகள், சர்க்கரைப் பொங்கல், அன்னதானத்துடன் வழிபட்டிட இது செவ்வாய் தோஷ நிவர்த்தியாய் அமையும். இங்கு முறையாக செய்த குங்குமத்தை ஏழை சுமங்கலிகளுக்கு அளிப்பது விசேஷமானதாகும்.
10.  தீய வழிகளில் செல்லும் கணவன், மனைவி திருந்திட
திருச்சி-குளித்தலை மணப்பாறை வழியில் உள்ள ஸ்ரீஐயர் மலையில் கங்கை, காவிரி நீரைச் சுமந்து சென்று பிரதோஷம் தோறும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து உட்பிரகாரத்தில் முருகன் சந்நதிக்கு முன் உள்ள இரட்டை லிங்கங்களை வழிபட்டு இங்கு ஏழைகளுக்கு இரட்டை ஆடைகளை (டிராயர்-சட்டை, வேட்டி-துண்டு, புடவை-ரவிக்கை, பாய்-தலையனை, பாவாடை-தாவணி etc.) தானம் செய்துவர அதிஅற்புதப் பலன்கள் ஏற்படும். தீய செயல்களைச் செய்வோரும் கூடத் தாங்களே இந்த பரிஹாரத்தை மேற்கொண்டிடில் துரிதமான பலன்களைக் கண்கூடாகக் காணலாம்.
11. உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக ஏதேனும் ஒரு வாராந்திர அல்லது நித்ய நற்காரியம் ஒன்றை எடுத்துக் கொண்டு அதை வாழ்நாள் முழுதும் தொடர்ந்து செய்து வாருங்கள். சற்குருவே நேரில் வந்து முக்தி தரும் நல்வழியினைக் காட்டியருள்வார். உதாரணத்திற்குச் சில நற்காரியங்கள்.
தினமும் காக்கை/பசுவிற்கு/எறும்பிற்கு உணவிடுதல்
வியாழன் தோறும் குஷ்டரோகிக்கு உதவியளித்தல்
சனிக்கிழமை தோறும் முடவனுக்கு உதவுதல்
சதுர்த்தி/சதுர்த்தசியன்று பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை /மோதகம்/ நைவேத்யம் செய்து ஏழைக் குழந்தைகளுக்கு அளித்தல்.
வெள்ளி தோறும் ஏழை சுமங்கலிப் பெண்ணிற்குத் தேங்காய் தாம்பூலம் அளித்தல்.

துளசி குருவித்துறை

12. துளசி வழிபாடு
1. ஒவ்வொரு வீட்டிலும் துளசிச் செடி அவசியம் இருக்க வேண்டும். கிருஷ்ண துளசியாக (சிறிது கருப்பாக இருக்கும்) இருந்தால், இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும்.
2. துளசிச் செடியை வீட்டின் முன்புறத்திலோ, முற்றத்திலோ தான் வளர்க்க வேண்டும் வீட்டின் பின்புறம் வைப்பது தவறு.
3. தினமும் செடிக்கு நீரை அப்படியே ஊற்றாமல் இறைநாமம் ஜெபித்து பின்னர் நீரை செடியின் மேல் தேவையான அளவு தெளிக்க வேண்டும். அடியில் அளவோடு ஊற்ற வேண்டும்.
4. துளசி சகுனம் ஒப்பற்ற சகுனம், வெளியே செல்லும்போது துளசியை வணங்கி விட்டுச் சென்றால் வேறு எந்த சகுனமும் ஒன்றும் செய்யாது.
5. அதேபோல், வெளியில் இருந்து வீடு திரும்பியவுடன் கை கால் அலம்பி துளசியை தரிசனம் செய்து பின்னர் வீட்டிற்குள் செல்ல வேண்டும். இதனால், வெளியே நம்மீது படிந்த தீய எண்ணங்களோ, தீய சக்திகளோ நம்மைத் தொடரும் தீய ஆவிகளோ வீட்டிற்குள் புகாமல் தடுத்து துளசிச் செடி நம்மைக் காக்கிறது.
6. பெண்கள் திருமணமாகிப் புகுந்தவீடு செல்கையில் துளசி தேவியிடம் விடை பெற்று செல்ல வேண்டும். திரும்பவும் பிறந்த வீட்டிற்கு வரும்போதெல்லாம் துளசிச்செடிக்கு நீருற்றி வணங்க வேண்டும். துளசி வழிபாடு மிகவும் எளிமையான ஆனால் அற்புதப் பலனளிக்கும் வழிபாடு அனைவரும், குறிப்பாய் பெண்கள் அவசியம் செய்ய வேண்டியதொன்று.
13. காகத்திற்கு உணவிடுவது ஏன்?
மனிதன் உணவேற்கு முன் காகத்திற்கு உணவிடுதல் வேண்டும். ஏனெனில், நம்முடைய முன்னோர்களும், பித்ருக்களும், பித்ரு தேவதைகளுமே காகத்தின் வடிவில் வருகின்றனர். அவர்களுடைய ஆசியால்தான் நாம் இவ்வுலகில் அமைதியாக வாழமுடிகிறது. ஆகவே, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காகத்திற்குத் தினந்தோறும் உணவிடுவது அவசியம். மேலும் காகத்திற்கு உணவிடும் நற்பழக்கத்தால் கணவன்-மனைவியரிடையே ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவ வழி ஏற்படுகிறது. காகத்தை வாகனமாகவுடைய ஸ்ரீசனீஸ்வரபகவானின் திருவருளால்.
14. அஷ்டலக்ஷ்மிகளின் அருள் பெற
ஒவ்வொருவரும் தத்தம் இல்லங்களில் மாலை வேளைகளில் பின்புற வாயிலை மூடிவைத்துப் பின்னர் முன்புற வாயிலில், ஒரு சுமங்கலியின் முன்னிலையில் இரண்டு எண்ணெய் விளக்குகளை ஏற்றி வைத்து உட்சென்று இறைவனுக்குத் தீபமேற்றி வழிபட வேண்டும். (Flat-களில் குடியிருப்போர் பின்புறம் உள்ள சிறு ஜன்னலையாவது மூடிவிட வேண்டும்.  இவ்வாறு தினந்தோறும் தொடர்ந்து செய்து வருவதால், தைர்ய லக்ஷ்மி நமது இல்லங்களில் வாசம் செய்ய நல்வழிவகுப்பதுடன் திருட்டைப் பற்றிய பயமும் பீதியும் இறையருளால் குறையும். மேலும் தைர்ய லக்ஷ்மி வாசம் செய்யுமிடத்தில் தான் அஷ்டலக்ஷ்மிகளின் அருள் கடாட்சம் இயல்பாகவே வந்தமைகிறது.

நவரத்தின அபிஷேகம் 90-100 வயது வாழ்ந்தோருக்குச் செய்யலாம். தலையோடு சேர்த்து நவரத்தின மோதிரத்தைக் கயிறால் கட்டி, கோயில் கும்பாபிஷேகத் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யவும்.

அஷ்டலட்சுமிகள் அருளும்
கருப்பத்தூர் சிவாலயம்

15. மாங்கல்ய பலம் அதிகரிக்க
பெண்களுக்கு மூன்று இடங்களில் ஸ்ரீலக்ஷ்மி தேவி வாசம் செய்கின்றாள். முதல் இடம் நெற்றி, இரண்டாவது இடம் மாங்கல்யம், மூன்றாவது இடம் தலைமுடி வகிடின் ஆரம்பம். பெண்கள் தலையின் மத்தியில், கோணலாக அன்றி மூக்கு நுனிக்கு நேராகத்தான் வகிடு எடுக்க வேண்டும். அதுவே சரியான முறை. தினந்தோறும் இம்மூன்று இடங்களிலும் குங்குமம் வைத்து ஸ்ரீலக்ஷ்மி தேவியை வணங்குவதை ஒவ்வொரு திருமணமான பெண்ணும் தினந்தோறும் அவசியம் செய்ய வேண்டும். இந்த வழிபாடு அவர்களது மாங்கல்ய பலம் அதிகரிக்க வழி செய்கிறது. ஒட்டுப் பொட்டு (stickers) வைத்தால் கணவனின் ஆயுளை அது பாதிக்கும்.
16. புலன்களை அடக்க எளிய வழிமுறை
கோயில் திருப்பணிகள், அன்னதானம், வஸ்திரதானம், முதியோர் சேவை, இலவச மருத்துவ உதவி போன்ற நற்காரியங்களை ஏற்று நடத்தும் சத்சங்கங்களுடன் இணைந்து கொண்டால் குருவருளால் புலனடக்கும் வழி கிட்டும். அவ்வாறு சத்சங்கத் தொடர்பு இல்லாதோர் தங்களால் இயன்ற அளவு அன்னதானத்தைத் தினந்தோறும் கோயில்களில் தொடர்ந்து செய்து வந்தால் இறையருளால் தக்க தருணத்தில் சற்குருவே நாடி வந்து நல்வழி காட்டுவார். உடலும், மனமும் தொடர்ந்து தானதர்ம நற்காரியங்களில் ஈடுபட்டு வரும்போது, மனம் தானாகவே பண்பட்டு நாளடைவில் புலனடக்கம் இயல்பாகவே வந்தமைகிறது.
ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம்
திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் அதிகார நந்தி மண்டபத்திற்கு அருகே ஆடையூரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் மூலம்
1. கார்த்திகை தீபம், மார்கழி முதல் நாள், புத்தாண்டு நாள் மட்டுமன்றி ஒவ்வொரு மாதப் பௌர்ணமியன்றும் அன்னதானம்.
2. ஏழை எளியோர்க்கு உடைகள், துணிமணிகள், காலணிகள், கல்விக்கான வசதிகள், ஏழை தம்பதிகளுக்குப் பொன் மாங்கல்யம் மற்றும் திருமணத்திற்கான உதவிகள்.
3. பார்வையற்றோர், ஊமையர், ஊனமுற்றோர்க்குத் தேவையான உபகரணங்கள் பொருட்கள், கருவிகள்

4. மாதந்தோறும் சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இலவச மருத்துவ உதவி, மற்றும் ஊனமுற்றோர்க்கான செயற்கைக் கால்கள் அளித்தல், அறுவை சிகிச்சைகளுக்கு உதவுதல்
-போன்ற நற்காரியங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றோடு நாம சங்கீர்த்தனம், வடமொழி – தமிழ்மொழி வேத பாராயணம் ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம், அறியாதோர்க்குப் பித்ரு தர்ப்பணங்களைப் பற்றி விளக்குதல், கோயில்களில் உழவாரத் திருப்பணிகள், வறியோரும் பங்கேற்கும் ஹோமங்கள் போன்ற இறைப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” ஆன்மீக மாத இதழின் மூலம் சித்த புருஷர்களின் எளிய இறைநெறி முறைகள் அறிவுறுத்தப்படுகின்றன. இதனுடன் நம்குருமங்கள கந்தர்வா  திருஅண்ணாமலை ஜோதி அலங்காரப் பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள், குருகுலவாசத்தில் தம் குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்தர் (சிவ குருமங்களகந்தர்வா) எடுத்துரைத்த – சித்தர்களுக்கே உரித்தான அரிய, அற்புதமான, எளிமையான இறைப்பணிகளை, ஆன்மீக விளக்கங்களை, தெய்வீக காரியங்களை – உபந்நியாஸங்கள், தெளிவு கூட்டும் உரையாடல்கள், புத்தகங்கள் மூலமாகப் பரப்பி வருகின்றார்கள். கீழ்க்கண்ட ஆன்மீகப் புத்தகங்களை ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம், திருஅண்ணாமலை பெற்றுக் கொள்ளலாம். தபால் செலவுடன் சேர்த்து அனுப்புவோர்க்குப் புத்தகங்கள் தபாலில் அனுப்பப்படும். எனினும் தபாற் செலவு அதிகமாயிருப்பதால், அன்பர்கள் இதற்காகவேனும் திருஅண்ணாமலை திவ்யக்ஷேத்திரத்திற்குப் புனித யாத்திரை மேற்கொண்டு அனைத்துக் கர்மவினைகளையும் போக்கி நல்லன யாவையுந் தந்தருளும் புனிதமான கிரிவலத்தை மேற்கொண்டு கிரிவலப் பாதையில் தசமுக தரிசனம் அருகே ஸ்ரீஅருணாசலேஸ்வரரின் பெருங்கருணையால் நிர்மாணிக்கப்பட்டு வரும் எம்முடைய ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் புத்தகங்களைப் பெற்று ஆஸ்ரம வளர்ச்சிக்குத் தங்கள் கைங்கர்யத்தைச் செய்து உய்வடைய வேண்டுகிறோம்.
ஆஸ்ரமத்தில் கிடைக்கும் புத்தகங்கள்

புத்தகம்

விளக்கம்

1. திருஅண்ணாமலை மஹிமை

திருஅண்ணாமலை கிரிவலமுறை விளக்கம்

2. ஸ்ரீஆயுர்தேவி மஹிமை

ஸ்ரீஆயுர்தேவி அம்பிகை பூஜை

3. ஓங்கார மஹிமை

ஓம்கார விளக்கங்கள்

4. திருப்பணி தரும் திருவருள்

எளிய கோயில் உழவாரத்திருப்பணி முறைகள் பற்றி

5. ஆசான் அனுபவ மொழிகள்

(ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்தரின் )   சற்குருவின் அருளுரை

6. ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அந்தாதி

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துதி

7. அஷ்டதிக்கு பாலகர்

தென்கிழக்கு திசை மஹிமை

8. பெண்கள் சிந்தும் கண்ணீரால் சிறகடித்துப் பறக்கும் வாழ்வு

பெண்கள் ஏன் கண்ணீர் விடலாகாது? – விளக்கம்

9. சுமங்கலிக் காப்பு

சுமங்கலித்வம், குங்குமம் பற்றிய விளக்கம்

10.பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது எப்படி?

பிள்ளைகளை ஆன்மீக முறையில் வளர்க்கும் முறைகள்

11. எளிமையான தியான முறை

எளிய தியான முறைகள்

12. மாங்கல்ய மஹிமை

மாங்கல்ய விளக்கங்கள்

13. திருமணம் ஆகவில்லையா ஏன்?

திருமணத் தடங்கல்கள் தீரவழிகள்

14. எறும்பு வைராக்கியம்

எறும்பிற்கு இடும் உணவு தான விளக்கங்கள்

15. கோமுகநீர் மஹிமை, சிவபாத மஹிமை

கோயிலில் சிவபாத பூஜை, கோமுக நீர் விளக்கங்கள்

16. சாம்பிராணி தூப மஹிமை

தூப விளக்கங்கள்

17.சந்தன மஹிமை

சந்தனம் பற்றிய விளக்கங்கள்

18. இறப்பின் ரகசியம்

 மரணம் பற்றிய விளக்கங்கள்

ஸ்ரீஆயுர்தேவி அம்பிகையின் படங்களும் கிடைக்கும். ஆஸ்ரமத்திலோ அல்லது ஸ்ரீஅகஸ்திய விஜயம் ஆசிரியருக்கோ கடிதம் எழுதி விளக்கம் பெற்றிடுக.

நித்ய கர்ம – நிவாரண சாந்தி - பிப்ரவரி 1996

ஆங்கில தேதி

தமிழ்
தேதி

நித்யவினை வேரறுக்கும் வழி

1.2.1996

தை
18

சதாபிஷேகம் கொண்டாடிய தம்பதியரைச் சேவித்தல் – ஆறு, கடல்கரை நண்டு வளைகளில் அரிசி, கோதுமை இடுதல்  நாய் போல் கடிக்கின்ற அதிகாரிகள் அன்புடன் பழகுவர்.

2.2.1996

19

ராமர் கோயிலில் ரவா, நொய், சர்க்கரை இட்டு உறவினரைப் பார்த்திட அவர்கள் சகாயமாயிருப்பர்.

3.2.1996

20

சேரி மக்களுக்குத் தென்னைக் கீற்றுகள் தானம் – ஹோட்டல் தொழில்காரர்களுக்கு கீர்த்தி

4.2.1996

21

முருகன் கோயிலில் பஞ்சாமிர்த அபிஷேகம் – சுய தொழிலில் வருமானம் பெருகும்.

5.2.1996

22

கணபதிக்கு மாம்பழச்சாறு அபிஷேகம் – காது குத்தாத குழந்தைகளுக்குக் காது குத்த உதவி புரிதல்- நெடுநாட்களாக எதிர்பார்த்த நற்செய்தி தேடி வரும்.

6.2.1996

23

சணல்/கயிறு திரிக்கின்றவர்களுக்கு நாறு வாங்கித் தருதல் – பட்டை தீட்டுபவர்களுக்குச் சுகம் கிட்டும்.

7.2.1996

24

மலையருவி நீரால் ஸ்ரீகருப்பண்ண சுவாமிக்கு அபிஷேகம்/ நைவேத்யம் – அன்னதானப் பொருள் திருடு போவது தடுக்கப்படும்.

8.2.1996

25

குஷ்ட ரோகிகளுக்கு ஆடைதானம், அன்னதானம் – குறிக்கோளில்லாது வாழ்வோர்/அலைவோர் திருந்துவர்.

9.2.1996

26

மனைவி, சகோதரிகளுக்கு தாம்பூல, தட்சணையுடன் வளையல்களை அளித்தல் – நண்பர்கள் ஏமாற்றிடார்.

10.2.1996

27

கறுப்புப் பசுவிற்கு நீராட்டி மஞ்சள் குங்குமமிட்டு கொம்புகளுக்கு நீலவர்ணம் பூசிட –கவனக் குறைவிலான துன்பங்கள் தணியும்.

11.2.1996

28

சூரியனார் கோயிலில் சூரியனுக்குத் திருவெள்ளறைத் திருக்குளத் தீர்த்தத்தால் அபிஷேகம் – 19 பேருக்கு அன்னதானம் – கண் நோய்கள் தணியும். (திருவெள்ளறை திருச்சி அருகே உள்ளது)

12.2.1996

29

முருகனுக்கு எட்டுவித புஷ்பங்களால் அர்ச்சனை – எட்டு ஏழைகளுக்கு அன்னதானம் – உயர்ந்த இடங்களில் வேலை செய்வோர்க்கு ஆபத்து குறையும்.

13.2.1996

மாசி
1

ஒன்பது வித பழங்களால் அனுமாருக்கு மாலை, அபிஷேகம் பழங்கள் தானம்/நம்பியோர் ஒருவரேனும் உதவுவர்.

14.2.1996

2

ஸ்ரீஹயக்ரீவருக்கு பூந்தி நைவேத்யம் தானம் – படிப்புத் தடைகள் தணியும்.

15.2.1996

3

ஏழைகளுக்குப் பாத்திரங்கள், அரிசி, மளிகை தானம்  - லாக் அவுட் ஆன சிறு தொழிற்சாலைகள் திறக்க வழி பிறக்கும்.

16.2.1996

4

வசதியற்ற சிவன் கோயிலில், ப்ரதோஷ மூர்த்தியைத் தாங்கி செல்தல் – நிரந்தர வருமானம் பெற வழி கிட்டும்.

17.2.1996

5

சிவன் கோயிலில், ருத்ர பாராயணம், தமிழ் மறைகள் ஓத ஏற்பாடு செய்தல், புகழ், பொருள் சேரும்.

18.2.1996

6

அஷ்ட (எட்டு) கலச விமானம்/கோபுரம் உள்ள கோயிலில் தகுந்த சேவை – எதிர்பார்க்கும் ஆதாயம் எதிர்பாராத நேரத்தில் வரும்.

19.2.1996

7

தேய்பிறையில் பூப்படைந்த பெண்களுக்கு ப்ரீதியாக 12 விதமான உணவுகளை 12 கோயில்களில் அளித்தல் – பூப்படையும் கால தோஷங்கள் தணியும்.

20.2.1996

8

மாலை சந்திர தரிசனம், பால்சாதம்/தேங்காய் சாதம் பால்பேணி/தேங்காய் இடியாப்பம்/அன்னதானம் – சந்திர அஷ்டோத்திரம், சந்திர காயத்ரீ மந்திரத்தால் பூஜை – பெண்களால் வரும் துனபம் நீங்கும்.

21.2.1996

9

முதலைகளுக்கு உணவிடுதல் – கொடூரமானவரிடமிருந்து தப்பிக்க வழி பிறக்கும்.

22.2.1996

10

நன்கு ஆறிய இடியாப்பம், நூடில்ஸ் (noodles) போன்றவற்றால் கணபதிக்குக் காப்பு – தானம் – சிக்கலான பிரச்சனைகள் தீரும்.

23.2.1996

11

மயிலுக்கு உணவிட உயரதிகாரிகளுக்கு ஆபத்து நீங்கும்.

24.2.1996

12

மாமரத் தலவிருட்சத்திற்குப் பூஜை, சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம், தானம்- மந்த கதி இருப்போர்க்குச் சுறுசுறுப்பு, புத்துணர்ச்சி கிட்டும்.

25.2.1996

13

பஞ்சவர்ணக் கிளிகளுக்கு உணவிடுதல் – பாதாதி கேசதுதி பாராயணம் சிறுவர்களுக்குப் பழங்கள் தானம் – அயல்நாடு விஜயம் கிட்டும்.

26.2.1996

14

சிவனுக்கு ஐந்து வித பூக்களினாலான மாலை – சிவ ஸஹஸ்ரநாம அர்ச்சனை – அன்னதானம் மருத்துவ துறையினருக்குத் திருப்பங்கள் ஏற்படும்.

27.2.1996

15

கறுப்பு நிறமுடையோர்க்குக் காய்கறிகள் தானம்/கனவு பீதிகள் தணியும்.

28.2.1996

16

ஏழை வீணை வித்வான்களுக்கு வீணை நரம்புகள் தானம் – ஏழைகளுக்கு – சிவன் கோயிலில் அன்னதானம் – பிரிந்தவர்கள் திருந்தி வாழ்வர்.

29.2.1996

17

பாம்புப் பிடாரர்களுக்கு அன்னதானம், ஆடைதானம் – பகை பூண்டவர்களால் பகையுணர்ச்சி தணியும்.

பிப்ரவரி 1996 – விசேஷ தினங்கள்
4.2.1996 – தைப்பூசம் (விளக்கம் ஜனவரி 96 இதழில்)
13.2.1996 – விஷ்ணுபதிப் புண்யகாலம்
15.2.1996 – ஏகாதசி குருவார விரதம்
17.2.1996 – மஹாசிவராத்திரி
4.3.1996 – மாசி மகம்
6.3.1996 – வாஸ்து தினம்

உடல் வலி தீர கராவலம்ப ஸ்தோத்திரம் படிக்கவும். நோயாளிக்காக சங்கல்பம் செய்து மற்றவர்களும் படிக்கலாம். அபிராமி அந்தாதி மற்றும் சௌந்தர்ய லஹரியும் படிக்கலாம்.
மிருத்யு தோஷம் தீர திருஞான சம்பந்தர் அருளிய “மந்திரமாவது நீறு” படிக்கவும்.

கூடாத நாட்கள்
16.2.1996 வெள்ளி – காலை 12.00மணி வரை | 25.2.1996 ஞாயிறு – காலை 7.00மணி வரை
மார்ச், ஏப்ரல், மே1996 – மாதங்களில் கூடாநாட்கள் இல்லை . கூடாத நாட்களில் எவ்வித சுபகாரியங்களையும் செய்தல் கூடாது.
பிரபலாரிஷ்ட யோகம் – கூடா(த) நாட்கள் – சில ஆன்மீக விளக்கங்கள்
கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்ற (ஒவ்வொரு) நாளின் பஞ்ச (ஐந்து) அங்கங்களை விளக்குவதே பஞ்சாங்கம். முதலிரண்டும் நாம் நன்கறிந்ததே! நட்சத்திரம், யோகம், கரணம் என்ற முக்கியமான அம்சங்களைத் தற்போது ஜாதக, ஜோதிட விசேஷ தினக் கணிப்புகளில் விட்டு விடுகிறார்கள். உண்மையில் கல்யாண முகூர்த்தம், கிரஹப் பிரவேசம், மஞ்சள் நீராட்டுதல், உபநயனம், சாந்தி முகூர்த்தம், உழவு ஆரம்பம், கிணறு வெட்டுதல், சீமந்தம் போன்ற விசேஷ தினங்களுக்கும் கிழமை, திதி, நட்சத்திரமல்லாது யோகத்தையும், கரணத்தையும் கண்டிப்பாகச் சேர்த்துத்தான் நல்ல நாளை நிர்ணயிக்க வேண்டும்.
அடியார்  : குருதேவா! தற்காலத்தில் நல்ல முகூர்த்த நேரத்தில் நடக்கும் திருமணங்களில் கூட குழந்தைப் பேறின்மை, குடும்பத்தில் எதிர்பாராத நஷ்டங்கள், மரணங்கள் ஏற்பட்டு விடுகின்றனவே!
சற்குரு : முதலில் நல்ல முகூர்த்தம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது பஞ்சாங்கத்தைப் பார்த்து அதில் குறித்துள்ள முகூர்த்த நேரங்களை அப்படியே எடுத்துக் கொண்டு விடுகின்றார்கள். இது நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மாறுபடும். பஞ்சாங்கத்தில் கூட சூன்ய திதிகள், யோகம், கரணம், பிரபலாரிஷ்ட யோகம், லக்ன தியாஜ்யம், நட்சத்திர தியாஜ்யம், நாள் தியாஜ்யம், சந்திராஷ்டமம், தாரா பலன், சந்திரபலன், பஞ்சகம், லக்ன துருவம், கிரஹப்ரீதிகள் போன்ற பல்வேறு அம்சங்களைச் சேர்த்துக் கணித்துத் தருவதில்லை. இவற்றைச் சேர்த்துத் துல்லியமாகக் கணித்துத் தராது வெறும் முகூர்த்த தினம் என்று குறித்தால் அது சரியல்லவே! அஷ்டமி, நவமியையும் சுபதினங்களாகச் சிலர் ஏற்பதுண்டு!
தக்க சற்குருவைப் பெற்றால் அவர் அளிக்கின்ற நேரமே பொன்னான நேரம்! மேற்கண்ட ரீதியில் முகூர்த்த நேரத்தைப் பெறுவதே மிகவும் அபூர்வமாயிருக்க மாதந்தோறும் பல முகூர்த்த தினங்கள் அமைவது வியப்பாகவும் சரியாகக் கணிக்காதிருப்பது வேதனை தருவதாகவும் இருக்கிறது. ஆயிரங்காலத்துப் பயிரான திருமணத்தைத் தக்க சற்குருவிடம் கேட்டு நடத்துவதே நன்று, அரைகுறையாக கணிக்கப் பெற்ற முகூர்த்த நாட்களில் திருமணம் நடப்பின் காலநேர சந்தி விளைவுகளால்  பல துன்பங்கள் ஏற்படத்தான் செய்யும். இத்தகைய குறைபாடுகளை நீக்கவே அக்காலத்தில் ஐந்து நாட்களுக்குத் திருமணத்தை நடத்தி வடமொழி/தமிழ் மொழி வேதபாராயணம், ஹோமம், அன்னதானம், தீபபூஜை, சுமங்கலிபூஜை போன்ற புனிதக் காரியங்களை நிகழ்த்தி பரிஹாரம் கண்டமையால் தான் நம் ஆன்றோர்கள் மன நிறைவுடன் ஆரோக்கியத்துடன் நெடுநாள் வாழ்ந்தனர்.
மஹா சிவராத்திரி
மஹாசிவராத்திரியன்று திருஅண்ணாமலையை நாம சங்கீர்த்தனம், ஹோமம், அன்னதானங்களுடன் கிரிவலம் வருவது மிகவும் சிறப்புடையதாகும். இயலாவிடில் யுவவருட மாசிமாத மஹாசிவராத்திரியை மலஹானிகரேசுவரர் எழுந்தருளியுள்ள திருத்தலத்தில் அபிஷேகம், ஆராதனை, ஹோமம், பஜனை, வஸ்திர தானம், அன்னதானம், போன்றவற்றுடன் கொண்டாடுதல் வேண்டும். பல சித்தபுருஷர்கள் இன்றைக்கும் உலவி வருகின்ற புனித ஸ்தலம்! கர்நாடகாவில் சிருங்கேரி – சிருங்ககிரியில் ஸ்ரீமலஹானிகரேசுவரர் அருள்பாலிக்கின்றார்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam